" />
மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப் பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் கட்டிட் டவினை போகக் கருவிலிக் கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. 1
ஞால(ம்)மல்கு மனிதர்காள் நாடொறும் ஏல மாமல ரோடிலை கொண்டுநீர் கால னார்வரு தன்முன் கருவிலிக் கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 2
பங்க மாயின பேசப் பறைந்துநீர் மங்கு மாநினை யாதே மலர்கொடு கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக் கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 3
வாடி நீர்வருந் தாதே மனிதர்காள் வேட னாய்விச யற்கருள் செய்தவெண் காட னாருறை கின்ற கருவிலிக் கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 4
உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர் பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக் கையி னானுறை கின்ற கருவிலிக் கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5
ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர் தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி காற்று மாகிநின் றான்றன் கருவிலிக் கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே. 6
நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப் பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக் கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே. 7
பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே. 8
நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும் எம்பி ரானென் றிமையவ ரேத்துமே கம்ப னாருறை கின்ற கருவிலிக் கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே. 9
பாரு ளீரிது கேண்மின் பருவரை பேரு மாறெடுத் தானை யடர்த்தவன் கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக் கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி : சற்குணேஸ்வரர்; அம்பாள் : சர்வாங்கநாயகி. 10