திருச்சிற்றம்பலம்
திருந்தியசீர்ச் செந்தா
மரைத்தடத்துச் சென்றோர்
இருந்தண் இளமேதி
பாயப் - பொருந்திய
புள்ளிரியப் பொங்கு
கயல்வெருவப் பூங்குவளைக்
கள்ளிரியச் செங்கழுநீர்
கால்சிதையத் - துள்ளிக்
குருகிரியக் கூன்இறவம்
பாயக் களிறு
முருகுவிரி பொய்கையின்கண்
மூழ்க -வெருவுற்ற
கோட்டகத்துப் பாய்வாளைக்
கண்டலவன் கூசிப்போய்த்
தோட்டகத்த செந்நெல்
துறையடையச் - சேட்டகத்த
காவி முகமலரக்
கார்நீலம் கண்படுப்ப
வாவிக்கண் நெய்தல்
அலமர - மேவிய 1
அன்னம் துயில்இழப்ப
அஞ்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச்
சூழ்கிடங்கில் - மன்னிய
வள்ளை நகைகாட்ட
வண்குமுதம் வாய்காட்டத்
தெள்ளுபுனற் பங்கயங்கள்
தேன்காட்ட - மெள்ள
நிலவு மலரணையின்
நின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள்
ஈன - உலவிய
மல்லைப் பழனத்து
வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி
ஓடிப்போய்ப் - புல்லிய
பாசடைய செந்நெல்
படரொளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கு
செறுவுகளும் - மாசில்நீர் 2
நித்திலத்தின் சாயும்
நிகழ்மரக தத்தோலும்
தொத்தொளி செம்பொன்
தொழிற்பரிய - மொய்த்த
பவளத்தின் செவ்வியும்
பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கில்
சேர்த்தித் - துவளாமைப்
பட்டாடை கொண்டுடுத்துப்
பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார்
இளங்கமுகும் - விட்டொளிசேர்
கண்கள் அழல்சிதறிக்
காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல்
தறியணைந்து - கொண்ட
கொலைபுரியா நீர்மையவாய்க்
கொம்புவளைத் தேந்தி
மலையு மரவடிவங்
கொண்டாங் - கிலைநெருங்கு 3
சூதத் திரளும்
தொகுகனிக ளால்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின்
வியன்பொழிலும் - போதுற்
றினமொருங்கு செவ்வியவாய்
இன்தேன் ததும்பு
கனிநெருங்கு திண்கதலிக்
காடும் - நனிவிளங்கு
நாற்றத்தால் எண்டிசையும்
வந்து நலஞ்சிறப்ப
ஊற்று மடுத்த
உயர்பலவும் -மாற்றமரும்
மஞ்சள் எழில்வளமும்
மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின்
ஈட்டமும் - எஞ்சாத
கூந்தற் கமுகும்
குளிர்பாட லத்தெழிலும்
வாய்ந்தசீர் சண்பகத்தின்
வண்காடும் - ஏந்தெழிலார் 4
மாதவியும் புன்னையும்
மண்ணும் மலர்க்குரவும்
கேதகையும் எங்கும்
கெழீஇஇப் - போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப
எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின்
மாடே - கிளர்ந்தெங்கும்
ஆலை ஒலியும்
அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும்
சொல்லொலியும் - ஆலும்
அறுபதங்கள் ஆர்ப்பொலியும்
ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை
ஒலிப்ப - வெறிகமழும்
நந்தா வனத்தியல்பும்
நற்றவத்தோர் சார்விடமும்
அந்தமில் சீரார்
அழகினால் - முந்திப் 5
புகழ்வாருந் தன்மையதாய்ப்
பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப
நேரே - திகழ
முளைநிரைத்து மூரிச்
சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ்
போகி - வளர
இரும்பதணஞ் சேர
இருத்திஎழில் நாஞ்சில்
மருங்கனைய அட்டாலை
யிட்டுப் - பொருந்தியசீர்த்
தோமரமும் தொல்லைப்
பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும்
கைகலந்து - மீமருவும்
வெங்கதிரோன் தேர்விலங்க
மிக்குயர்ந்த மேருப்போன்
றங்கனகத் திஞ்சி
அணிபெற்றுப் - பொங்கொளிசேர் 6
மாளிகையும் மன்னியசீர்
மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த
தெற்றிகளும் - வாளொளிய
நாடக சாலையும்
நன்பொற் கபோதஞ்சேர்
பீடமைத்த மாடத்தின்
பெற்றியும் - கேடில்
உருவு பெறவகுத்த
அம்பலமும் ஓங்கு
தெருவும் வகுத்தசெய்
குன்றும் -மருவினிய
சித்திரக் காவும்
செழும்பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு
நிலைக்களமும் - எத்திசையும்
துன்னி எழில்சிறப்பச்
சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும்
வாய்மைத்தாய்ப் - பொன்னும் 7
மரகதமும் நித்திலமும்
மாமணியும் பேணி
இரவலர்கட் கெப்போதும்
ஈந்தும் - கரவாது
கற்பகமும் காருமெனக்
கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்குஞ்
சாயாத - செப்பத்தால்
பொய்ம்மை கடிந்து
புகழ்பரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து
மேதக்கும் - உண்மை
மறைபயில்வார் மன்னு
வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல்
பயில்வார் - முறைமையால்
ஆகமங்கள் கேட்பார்
அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப்
பொருள்துய்ப்பார் - சோகமின்றி 8
நீதி நிலைஉணர்வார்
நீள்நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள்
காமுறுவார் - ஆதி
அருங்கலைநூல் ஓதுவார்
ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ
குப்பார் - ஒருங்கிருந்து
காமநூல் கேட்பார்
கலைஞானம் காதலிப்பார்
ஓமநூல் ஓதுவார்
உத்தரிப்பார் - பூமன்னும்
நான்முகனே அன்னசீர்
நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாழும்
தகைமைத்தாய் - நாமன்னும்
ஆரணங்கும் மற்றை
அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத்
தினிதிருந்து - சீரணங்கு 9
வீணை பயிற்றுவார்
யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார்
பயன்உறுவார் - பேணியசீர்ப்
பூவைக்குப் பாட்டுரைப்பார்
பொற்கிளிக்குச் சொற்பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து
பண்புறுவார் - ஆய்எங்கும்
மங்கையர்கள் கூட்டமும்
மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம்
பொலிவடையத் - தங்கிய
வேத ஒலியும்
விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும்
கிளர்ந்தோங்கும் - மாதரார்
பாவை ஒலியும்
பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும்
வியன்நகரம் - காவலர்கள் 10
பம்பைத் துடிஒலியும்
பெளவப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும்
கைகலந்து - நம்பிய
கார்முழக்கும் மற்றைக்
கடல்முழக்கும் போற்கலந்த
சீர்முழக்கம் எங்கும்
செவிடுபடப் - பார்விளங்கு
செல்வம் நிறைந்தஊர்
சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை
மன்னும்ஊர் - சொல்லினிய
ஞாலத்து மிக்கஊர்
நானூற் றுவர்கள்ஊர்
வேலொத்த கண்ணார்
விளங்கும்ஊர் - ஆலித்து
மன்னிருகால் வேலை
வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில்
மிதந்தவூர் - மன்னும் 11
பிரமனூர் வேணுபுரம்
பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி
அம்பொற் - சிரபுரம்
பூந்தராய்க் கொச்சைவயம்
வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணி
புரம்மறையோர் - ஏய்ந்த
புகலி கழுமலம்
பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற
தாகித் - திகழ்கின்ற
மல்லைச் செழுநகரம்
மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில்
உலக்கவும் - எல்லையிலா
மாதவத்தோர் வாழவும்
வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர்
வியப்பவும் - ஆதியாம் 12
வென்றிக் கலிகெடவும்
வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார்
ஓங்கவும் - துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா
றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு
வாய்ப்பவும் - முன்னிய
சிந்தனையாற் சீரார்
கவுணியர்க்கோர் சேயென்ன
வந்தங் கவதரித்த
வள்ளலை - அந்தமில்சீர்
ஞானச் சுடர்விளக்கை
நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறையவற்றின்
வான்பொருளை - ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச்
சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு
விடலையை - முத்தமிழின் 13
செஞ்சொற் பொருள்பயந்த
சிங்கத்தைத் தெவ்வர்உயிர்
அஞ்சத் திகழ்ந்த
அடல்உருமை - எஞ்சாமை
ஆதிச் சிவனருளால்
அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர்
குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்
காலத் தொகுதியும்
நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும்
முழுதுணர்ந்த - சீலத்
திருஞான சம்பந்தன்
என்றுலகம் சேர்ந்த
ஒருநாமத் தால் உயர்ந்த
கோவை - வருபெருநீர்ப்
பொன்னிவள நாடனைப்
பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும்
மாமணியை - முன்னே 14
நிலவு முருகர்க்கும்
நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண்
டற்கும் - குலவிய
தோழமையாய்த் தொல்லைப்
பிறப்பறுத்த சுந்தரனை
மாழையொண்கண் மாதர்
மதனனைச் - சூழொளிய
கோதைவேல் தென்னன்தன்
கூடல் குலநகரில்
வாதில் அமணர்
வலிதொலையக் - காதலால்
புண்கெழுவு செம்புனலா
றோடப் பொருதவரை
வண்கழுவில் தைத்த
மறையோனை - ஒண்கெழுவு
ஞாலத் தினர்அறிய
மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்தல்
ஆக்கியும் - காலத்து 15
நீரெதிர்ந்து சென்று
நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பல்விடங்கள்
தீர்த்துமுன் - நேரெழுந்த
யாழை முரித்தும்
இருங்கதவம் தான்அடைத்தும்
சூழ்புனலில் ஓடத்
தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய்
பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை
தொகுமிழலை - அங்கதனில்
நித்தன் செழுங்காசு
கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை
முதற்கொண்டும் - அத்தகுசீர்
மாயிரு ஞாலத்து
மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொன்
அதுகொண்டும் - மாய்வரிய 16
மாண்புதிகழ் எம்பெருமான்
மன்னுதிரு வோத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள்
ஆக்கியும் - பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா
ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டு
தராதலத்துள் - எப்பொழுதும்
நீக்கரிய இன்பத்
திராகம்இருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம்பல்
பத்தோடும் - ஆக்கரிய
யாழ்முரி சக்கரமாற்
றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர்
தாம்உய்ய - ஊழி
உரைப்பமரும் பல்புகழால்
ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல
சேயை – விருப்போடு 17
நண்ணு புகழ்மறையோர்
நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணில் முனிவரர்
ஈட்டத்துப் - பண்ணமரும்
ஓலக்கத் துள்ளிருப்ப
ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக்
கும்பிட்டாங் - காலும்
புகலி வளநகருள்
பூசுரர் புக்காங்
கிகலில் புகழ்பரவி
யேத்திப் - புகலிசேர்
வீதி எழுந்தருள
வேண்டுமென விண்ணப்பம்
ஆதரத்தாற் செய்ய
அவர்க்கருளி - நீதியால்
கேதகையும் சண்பகமும்
நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை
மருங்கணைத்துக் - கோதில் 18
இருவேலி தன்னை
இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை
வைத்தாங் - கருகே
கருமுகையைக் கைகலக்க
வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே
பெய்து - முருகியலும்
புன்னாகந் தன்னைப்
புணர இருவாச்சி
தன்அயலே முல்லை
தலையெடுப்ப - மன்னிய
வண்செருந்தி வாய்நெகிழ்ப்ப
மெளவல் அலர்படைப்பத்
தண்குருந்தம் மாடே
தலையிறக்க - ஒண்கமலத்
தாதடுத்த கண்ணியால்
தண்ணறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம்
புனைவித்துக் - காதிற் 19
கனவயிர குண்டலங்கள்
சேர்த்திக் கழுத்தின்
இனமணியின் ஆரம்
இலகப் - புனைகனகத்
தொத்தடுத்த பூஞ்சுரிகைச்
சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண்
டிகைபூண்டு - முத்தடுத்த
கேயூரம் தோள்மேற்
கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல்
வலந்திகழ - வேயும்
தமனியத்தின் தாழ்வடமும்
தண்டரளக் கோப்பும்
சிமைய வரைமார்பிற்
சேர்த்தி - அமைவுற்ற
வெண்ணீற்றின் ஒண்களபம்
மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம்
உடல்புனைந்து - திண்ணோக்கிற் 20
காற்றுருமோ குன்றோ
கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக்
கொதித்தெழுந்து - சீற்றத்
தழல்விழித்து நின்றெதிர்ந்து
தாலவட்டம் வீசிப்
புழைத்தடக்கை கொண்டெறிந்து
பொங்கி - மழை மதத்தாற்
பூத்த கடதடத்துக்
போகம் மிகப்பொலிந்த
காத்திரத்த தாகிக்
கலித்தெங்கும் - கோத்த
கொடுநிகளம் போக்கிநிமிர்
கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை யிட்டுக்
கலித்து - முடுகி
நெடுநிலத்தைத் தான்உழக்கி
நின்று நிகர்நீத்
திடிபெயரத் தாளந்
திலுப்பி - அடுசினத்தால் 21
கன்ற முகம்பருகிக்
கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ
வெய்துயிர்த் - தொன்றிய
கூடம் அரணழித்துக்
கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை
நிகரழித் - தோடிப்
பணப்பா கரைப்பரிந்து
குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பின்
வீசி - அணைப்பரிய
ஓடைக் கருங்களிற்றை
ஒண்பரிக்கா ரர்கள்தாம்
மாடணையக் கொண்டு
வருதலுமே - கூடி
நயந்து குரற்கொடுத்து
நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம்
தணிந்தாங் - குயர்ந்த 22
உடற்றூய வாசிதனைப்
பற்றிமேல் கொண்டாங்
கடற்கூடற் சந்தி
யணுகி - அடுத்த
பயில்பலவும் பேசிப்
படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்துத்
தட்டி - உயர்வுதரு
தண்டுபே ரோசையின்கண்
தாள்கோத்துச் சீர்ச்சிறுத்
தொண்டர் பிறகணையத்
தோன்றுதலும் - எண்டிசையும்
பல்சனமும் மாவும்
படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு
கடல்கிளர - மல்லல்
பரித்தூரங் கொட்டப்
படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர்
பாட - விரித்த 23
குடைபலவும் சாமரையும்
தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம்
படைப்பக் - கடைபடு
வீதி அணுகுதலும்
வெள்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக்
கலந்தெங்கும் - சோதிசேர்
ஆடரங்கின் மேலும்
அணிமா ளிகைகளிலும்
சேடரங்கும் நீள்மறுகும்
தெற்றியிலும் - பீடுடைய
பேரிளம் பெண் ஈறாகப்
பேதை முதலாக
வாரிளங் கொங்கை
மடநல்லார் - சீர்விளங்கப்
பேணும் சிலம்பும்
பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப்
புறப்பட்டுச் - சேண்மறுகில் 24
காண்டகைய வென்றிக்
கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்
நிழற்கீழ்க் -காண்டலுமே
கைதொழுவார் நின்று
கலைசரிவார் மால்கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள்
போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப்
பூம்பயலை கொள்வார்
புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள்
கவின்கழிவார் - தாம்பயந்து
வென்றிவேற் சேயென்ன
வேனில்வேட் கோவென்ன
அன்றென்ன ஆமென்ன
ஐயுற்றுச் - சென்றணுகிக்
காழிக் குலமதலை
என்றுதங் கைசோர்ந்து
வாழி வளைசரிய
நின்றயர்வார் - பாழிமையால் 25
உள்ளம் நிலைதளர்ந்த
ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நடவென்று
வேண்டுவார் - கள்ளலங்கல்
தாராமை அன்றியும் தையல்நல்
லார் முகத்தைப்
பாராமை சாலப் பயன்
என்பார் - நேராக
என்னையே நோக்கினான்
ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண்
டெனநயப்பார் - கைம்மையால்
ஒண்கலையும் நாணும்
உடைதுகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து
கோடுமெனப் - பண்பின்
வடிக்கண் மலர்வாளி
வார்புருவ வில்மேல்
தொடுத்ததரந் தொண்டை
துடிப்பப் - பொடித்தமுலைக் 26
காசைக் கருங்குழலார்
காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து
புறப்படுவார் - வாசச்
செழுமலர்த்தார் இன்றெனக்கு
நல்காதே சீரார்
கழுமலர்த்தார் கோவே
கழல்கள் - தொழுவார்கள்
அங்கோல் வளையிழக்கப்
போவது நின்னுடைய
செங்கோன்மை யோவென்று
செப்புவார்-நங்கைமீர்
இன்றிவன் நல்குமேல்
எண்பெருங் குன்றத்தில்
அன்றமணர் கூட்டத்தை
ஆசழித்துப் - பொன்ற
உரைகெழுவு செந்தமிழ்ப்பா
ஒன்றினால் வென்றி
நிரைகழுமேல் உய்த்தானை
நேர்ந்து - விரைமலர்த்தார் 27
பெற்றிடலாம் என்றிருந்த
நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ என்று
வகுத்துரைப்பார் - மற்றிவனே
பெண்ணிரக்கம் அன்றே
பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவிடத்தால்
நாட்சென்று - விண்ணுற்ற
ஆருயிரை மீட்டன்
றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த
தெனஉரைப்பார் - பேரிடரால்
ஏசுவார் தாம்உற்ற
ஏசறவைத் தோழியர்முன்
பேசுவார் நின்றுதம்
பீடழிவார் - ஆசையால்
நைவார் நலன்அழிவார்
நாணோடு பூண்இழப்பார்
மெய்வாடு வார்வெகுள்வார்
வெய்துயிர்ப்பார் - தையலார்
பூந்துகிலைப் பூமாலை
என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் எனமெய்யில்
தைவருவார் - வாய்ந்த
கிளியென்று பாவைக்குச்
சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலையென்
றுடுப்பார் -அளிமேவு
பூங்குழலார் மையலாய்க்
கைதொழமுன் போதந்தான்
ஓங்கொலிசேர் வீதி யுலா. 28
திருச்சிற்றம்பலம்