ஒன்று முதலாக நூறளவும்
ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர்
உயிரையுண் - டொன்றும்
மதியாத கூற்றுதைத்த
சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால். 1
மாலை ஒருபால்
மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால்
முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை
உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம். 2
உளமால்கொண் டோடி
ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தவா
றுண்டே - உளம்மாசற்
றங்கமலம் இல்லா
அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி. 3
அடியார்தம் ஆருயிரை
அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச்
செற்றான் - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி
அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர். 4
அலராளுங் கொன்றை
அணியலா ரூரற்
கலராகி யானும்
அணிவன் - அலராகி
ஓதத்தான் ஒட்டினேன்
ஓதுவன்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர். 5
ஊரும தொற்றியூர்
உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன்
றுடைதோலே - ஊரும்
படநாகம் மட்டார்
பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு. 6
பரியானை ஊராது
பைங்கணே றூரும்
பரியானைப் பாவிக்க
லாகா - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக்
கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு. 7
கண்டங் கரியன்
உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன்
கரிகாடன் - கண்டங்கள்
பாடியாட் டாடும்
பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி. 8
பதியார் பழிதீராப்
பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள்
இரக்கப் - பதியாய
அம்மானார் கையார்
வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம். 9
அறமானம் நோக்கா
தநங்கனையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட
அமுதன் - அறமான
ஓதியாள் பாகம்
அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி. 10
ஒளியார் சுடர்மூன்றுங்
கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம்
ஏத்தற் - கொளியாய
கள்ளேற்றான் கொன்றையான்
காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது. 11
கடியரவர் அக்கர்
கரிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர்
சூலம் - கடியரவர்
ஆனேற்றார்க் காட்பட்ட
நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம். 12
யாமான நோக்கா
தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங்
கலர்தந்தார் - யாமாவா
ஆவூரா ஊரும்
அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம். 13
யானென்றங் கண்ணா
மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும்
குன்றுவித்து - யானென்றங்
கார்த்தானே யாயிடினும்
அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது. 14
அரியாரும் பூம்பொழில் சூழ்
ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத்
தமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை
மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து. 15
வியந்தாழி நன்னெஞ்சே
மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய
வேண்டா - வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா
பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன். 16
கடனாகம் ஊராத
காரணமுங் கங்கை
கடனாக நீகவர்ந்த
வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப்
பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி. 17
பணியாய் மடநெஞ்சே
பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ்
சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல்
நம்மை அமரர்கோ
னாகத்தான் செய்யும் அரன். 18
அரன்காய நைவேற்
கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியும்மற்
றந்தோ - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி
வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது. 19
வெறியானை ஊர்வேந்தர்
பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரான்
விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும்
அருமருந்தாம் ஆருர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன். 20
அயமால்ஊண் ஆடரவம்
நாண்அதள தாடை
அயமாவ தானேறூர்
ஆரூர் - அயமாய
என்னக்கன் தாழ்சடையன்
நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள். 21
ஆழும் இவளையும்
கையகல ஆற்றேனென்
றாழும் இவளை
அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே
சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருளும் தார். 22
தாராய தண்கொன்றை
யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கம்
சரிவித்தான் - தாராவல்
ஆனைமேல் வைகும்
அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
ஆனையும் வானோர்க் கரசு. 23
அரசுமாய் ஆள்விக்கும்
ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்று
மாலுக் - கரசுமான்
ஊர்தி எரித்தான்
உணருஞ் செவிக்கின்பன்
ஊர்தி எரித்தான் உறா. 24
உறாவேயென் சொற்கள்
ஒளிவளைநின் உள்ளத்
துறாவேதீ உற்றனகள்
எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து
கைசோர்ந்து மெய்மறந்தாள்
காவாலி தாநின் கலை. 25
கலைகாமின் ஏர்காமின்
கைவளைகள் காமின்
கலைசேர் நுதலீர்நாண்
காமின் - கலையாய
பான்மதியன் பண்டரங்கன்
பாரோம்பு நான்மறையன்
பான்மதியன் போந்தான் பலிக்கு. 26
பலிக்குத் தலையேந்திப்
பாரிடங்கன் சூழப்
பலிக்கு மனைப்புகுந்து
பாவாய் - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக்
கையம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து. 27
ஆயம் அழிய
அலர்கொன்றைத் தார்வேண்டி
ஆயம் அழிய
அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும்
தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து. 28
தேரோன் கதிரென்னுஞ்
செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ்
செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி
குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர். 29
கூரால மேயாக்
குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க்
கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற்
பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து. 30
பாயும் விடையூர்தி
பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை
முலைமேல் - பாயிலனற்
கொன்றாய் குளிர்சடையாற்
கென்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம். 31
குணக்கோடி கோடாக்
குளிர்சடையான் வில்லின்
குணக்கோடி குன்றஞ்சூழ்
போகிக் - குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற்
காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம். 32
திறங்காட்டுஞ் சேயாள்
சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன்
என்னும் - திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ
டென்னை உடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து. 33
உடையோடு காடாடி
ஊர்ஐயம் உண்ணி
உடையாடை தோல்பொடிசந்
தென்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல்
உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய். 34
உய்யாதென் ஆவி
ஒளிவளையும் மேகலையும்
உய்யா துடம்பழிக்கும்
ஒண்திதலை - உய்யாம்
இறையானே ஈசனே
எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று. 35
இன்றியாம் உற்ற
இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும்
எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றாஅன்
காமரு வெண்காட்டான்
காட்டான்அஞ் சேற்றான் கலந்து. 36
கலம்பெரியார்க் காஞ்சிரங்காய்
வின்மேரு என்னும்
கலம்பெரிய ஆற்கீழ்
இருக்கை - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார்
கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை. 37
கையா றவாவெகுளி
அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான்
காப்பென்னும் - கையாறு
மற்றிரண்ட தோளானைச்
சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை. 38
மனையாய் பலிக்கென்று
வந்தான்வண் காமன்
மனையா சறச்செற்ற
வானோன் - மனையாய
என்பாவாய் என்றேனுக்
கியானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை. 39
இறையாய வெண்சங்
கிவைதருவேன் என்னும்
இறையாகம் இன்றருளாய்
என்னும் - இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே
நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது. 40
மாதரங்கந் தன்னரங்கஞ்
சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர்
மன்னுவித்து - மாதரங்கத்
தேரானை யூரான்
சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர். 41
தெருளிலார் என்னாவார்
காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங்
கோமான் - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான்
சேவடியே யாம்பரவிச்
செல்லும்எழில் நெஞ்சே தெளி. 42
தெளியாய் மடநெஞ்சே
செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கட்
செல்வர் - தெளியாய
பூவார் சடைமுடியான்
பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து. 43
புனைகடற்குப் பொன்கொடுக்கும்
பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப்
புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும்
நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு. 44
நக்கரை சாளும்
நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம்
நாமென்ன - நக்குரையாம்
வண்டாழங் கொன்றையான்
மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டான் மதி. 45
மதியால் அடுகின்ற
தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரப்பர்
என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும்
மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வம் கொண்ட வனப்பு. 46
வனப்பார் நிறமும்
வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான்
கொள்ள - வனப்பாற்
கடற்றிரையு மீருமிக்
கங்குல்வா யான்கட்
கடற்றிரையு மீருங் கனன்று. 47
கனன்றாழி நன்னெஞ்சே
கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால்
காட்டக் - கனன்றோர்
உடம்பட்ட நாட்டத்தர்
என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு. 48
உருவியலுஞ் செம்பவளம்
ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம்
உடையன் - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும்
மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற் கீதோ வடிவு. 49
வடிவார் அறப்பொங்கி
வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும்
பொல்லா - வடிவார்மேல்
முக்கூடல் அம்மா
முருகமருங் கொன்றையந்தார்
முக்கூட மாட்டா முலை. 50
முலைநலஞ்சேர் கானப்பேர்
முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான்
என்னும் -முலைநலஞ்சேர்
மாதேவா என்று
வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை. 51
வளையாழி யோடகல
மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே
காணில் - வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர்
வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில். 52
வரிநீல வண்டலம்பு
மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண்
டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு. 53
அக்காரம் ஆடரவம்
நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரம் தீர்ந்தேன்
அடியேற்கு -வக்காரம்
பண்டரங்கன் எந்தை
படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன். 54
பவனடிபார் விண்நீர்
பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம்
பெண்ஆண் -பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
காலங்கை ஏந்தினான் காண். 55
காணங்கை இன்மை
கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது
நன்னெஞ்சே - காணங்கை
பாவனையாய் நின்றான்
பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம். 56
பதங்க வரையுயர்ந்தான்
பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு
பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும்
ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு. 57
ஆக்கூர் பனிவாடா
ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான்
அழகிதா - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து
மாமறையோ நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து. 58
வந்தியான் சீறினும்
ஆழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து
வைத்திராய் -வந்தியாய்
நம்பரனை யாடும்
நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு. 59
நட்டமா கின்றன
வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை
வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி
எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம். 60
இலமலரஞ் சேவடியார்
ஏகப் பெறாரே
இலமலரே ஆயினும்
ஆக - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்
காடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள். 61
ஆளானம் சேர்களிறும்
தேரும் அடல்மாவும்
ஆளானார் ஊரத்தான்
ஏறூரும் - தாளான்பொய்
நாடகங்க ளாட்டயரும்
நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து. 62
நயந்தநாள் யானிரப்ப
நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை
வாட - நயந்தநாள்
அம்பகலஞ் செற்றான்
அருளான் அநங்கவேள்
அம்பகலம் பாயும் அலர்ந்து. 63
அலங்காரம் ஆடரவம்
என்புதோல் ஆடை
அலங்கார வண்ணற்
கழகார் - அலங்காரம்
மெய்காட்டு வார்குழலார்
என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து. 64
விரையார் புனற்கங்கை
சேர்சடையான் பொன்னார்
விரையார் பொழிலுறந்தை
மேயான் - விரையாநீ
றென்பணிந்தான் ஈசன்
இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு. 65
எனக்குவளை நில்லா
எழில்இழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய்
செய்தான் - இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன்
காரோணத் தெம்மானைக்
கண்டத்தான் நெஞ்சேகாக் கை. 66
காக்கைவளை என்பார்ப்பார்க்
கன்பாப்பா னையாதே
காக்கைவளை யென்பார்ப்பான்
ஊன்குரக்குக் - காக்கைவளை
ஆடானை ஈருரியன்
ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான தமைவு. 67
அமையாமென் தோள்மெலிவித்
தம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான்
அணங்கே - எமையாளும்
சாமத்த கண்டன்
சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான். 68
தானக்கன் நக்க பிறையன்
பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன்
தண்பழனன் - தானத்
தரையன் அரவரையன்
ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள். 69
அருள்நம்பாற் செஞ்சடையன்
ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும்
அமுதன் - அருள்நம்பால்
ஓராழித் தேரான்
எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ. 70
உவவா நறுமலர்கொண்
டுத்தமனை உள்கி
உவவா மனமகிழும்
வேட்கை - உவவா
றெழுமதிபோல் வாண்முகத்
தீசனார்க் கென்னே
எழுமதிபோல் ஈசன் இடம். 71
இடமால் வலமாலை
வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ்
சேர்த்தி -இடமாய
மூளா மதிபுரையும்
முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி. 72
முனிவன்மால் செஞ்சடையான்
முக்கணான் என்னும்
முனிவன்மால் செய்துமுன்
நிற்கும் - முனிவன்மால்
போற்றார் புரமெரித்த
புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து. 73
புலர்ந்தால்யான் ஆற்றேன்
புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான்
என்னும் - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான்
அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம். 74
மனமாய நோய்செய்தான்
வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார
வாரான் -மனமாயப்
பொன்மாலை சேரப்
புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து. 75
போந்தார் புகஅணைந்தார்
பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார்
புரமெரித்தார் - போந்தார்
இலங்கோல வாள்முகத்
தீசனாற் கெல்லே
இலங்கோலந் தோற்ப தினி. 76
இனியாரும் ஆளாக
எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ் சூணிருக்கைக்
குள்ளான் - இனியானைத்
தாளங்கை யாற்பாடித்
தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம். 77
தாமரைசேர் நான்முகற்கும்
மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர்
சடாமகுடர் - தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர்
பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார். 78
பார்கால்வான் நீர்தீப்
பகலோன் பனிமதியோன்
பார்கோல மேனிப்
பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக்
கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ. 79
கோப்பாடி ஓடாதே நெஞ்சம்
மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங்
குற்றாலம் -கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றார்க்
கிடங்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர். 80
பேரானை ஈருரிவை
போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம்
பெற்றானைப் - பேராநஞ்
சுண்டானை உத்தமனை
உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர். 81
உயிராய மூன்றொடுக்கி
ஐந்தடக்கி உள்ளத்
துயிராய ஒண்மலர்த்தாள்
ஊடே - உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன்
பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கட் பட்டு. 82
பட்டாரண் பட்டரங்கன்
அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும்
பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன்
என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு. 83
கூற்றும் பொருளும்போற்
காட்டியென் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற
குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற
சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய். 84
செய்யான் கருமிடற்றான்
செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான்
மூவுலகும் - செய்யாமுன்
நாட்டுணாய் நின்றானை
நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டுணாய் நின்றானை நாம். 85
நாவாய் அகத்துளதே
நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண்
உய்க்குமே - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக்
கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது. 86
சூதொன் றுனக்கறியச்
சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய
சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக்
குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு. 87
குருகிளவேய்த் தோள்மெலியக்
கொங்கைமார் புல்கிக்
குருகிளையார் கோடு
கொடாமே - குருகிளரும்
போதார் கழனிப்
புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது. 88
போதரங்க வார்குழலார்
என்னாவார் நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த
புண்ணியனைப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே
கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல். 89
கற்றான்அஞ் சாடுகா
வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத
நாளெல்லாம் - கற்றான்
அமரர்க் கமரர்
அரர்க்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார். 90
ஆவா மனிதர்
அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி
அழிகின்றார் - ஆஆ
பகல்நாடிப் பாடிப்
படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து. 91
பகனாட்டம் பாட்டயரும்
பாட்டோ டாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும்
உச்சி - பகனாட்டம்
தாங்கால் தொழுதெழுவார்
தாழ்சடையார் தம்முடைய
தாங்கால் தொழுதல் தலை. 92
தலையாலங் காட்டிற்
பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம்
என்னும் -தலையாய
பாகீ ரதிவளரும்
பல்சடையீர் வல்விடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு. 93
பண்பாய நான்மறையான்
சென்னிப் பலிதேர்ந்தான்
பண்பாய பைங்கொன்றைத்
தார்அருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்
கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன். 94
சிவன்மாட் டுகவெழுதும்
நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர்
என்னும் -சிவன்மாட்டங்
காலிங் கனம்நினையும்
ஆயிழையீர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு. 95
ஆறாவெங் கூற்றுதைத்
தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க்
கமையாதே - ஆறாத
ஆனினித்தார் தாந்தம்
அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு. 96
ஆட்டும் அரவர் அழிந்தார்
எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண்
டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான்
போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம். 97
புறந்தாழ் குழலார்
புறனுரைஅஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள்
ஆடி - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான்
வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய். 98
மெய்யன் பகலாத
வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க்
கெஞ்ஞான்றும் -வெய்ய
துணையகலா நோக்ககலா
போற்றகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு. 99
நூறான் பயன்ஆட்டி
நூறு மலர்சொரிந்து
நூறா நொடிஅதனின்
மிக்கதே - நூறா
உடையான் பரித்தஎரி
உத்தமனை வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று. 100
திருச்சிற்றம்பலம்