அரவம் அரைக்கசைத்த
அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும்
மின்னி - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி
அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்கும் கார். 1
மையார் மணிமிடறு
போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக்
காட்டிற்றே - ஐவாய்
அழலரவம் பூண்டான்
அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார். 2
ஆலமர் கண்டத்
தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும்
கொல்லேறும் - போல
இருண்டொன்று மின்தோன்றி
அம்பொனவ் வானம்
கருண்டொன்று கூடுதலிற் கார். 3
இருள்கொண்ட கண்டத்
திறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைபோல்
மின்னிச் - சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப்
படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோள்ஈயக் கார். 4
கோடரவங் கோடல்
அரும்பக் குருமணிகான்
றாடரவம் எல்லாம்
அளையடைய - நீடரவப்
பொற்பகலம் பூண்டான்
புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார். 5
பாரும் பனிவிசும்பும்
பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு
மின்விலகி - ஊரும்
அரவஞ் செலவஞ்சும்
அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார். 6
செழுந்தழல் வண்ணன்
செழுஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல்
உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை
அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார். 7
காந்தள் மலரக்
கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப்
புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட
ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார். 8
திருச்சிற்றம்பலம்