தவறுபெரி துடைத்தே
தவறுபெரி துடைத்தே
வெண்திரைக் கருங்கடல்
மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக்
காழியன் றருளியும்
உலகம் மூன்றும்
ஒருங்குடன் படைத்த
மலரோன் தன்னை
வான்சிரம் அரிந்தும் (5)
கான வேடுவன்
கண்பரிந் தப்ப
வான நாடு
மற்றவற் கருளியும்
கடிபடு பூங்கணைக்
காம னார் உடல்
பொடிபட விழித்தும்
பூதலத் திசைந்த
மானுட னாகிய சண்டியை (10)
வானவன் ஆக்கியும்
மறிகடல் உலகின்
மன்னுயிர் கவரும்
கூற்றுவன் தனக்கோர்
கூற்றுவ னாகியும்
கடல்படு நஞ்சம்
கண்டத் தடக்கியும்
பருவரை சிலையாப்
பாந்தள் நாணாத் (15)
திரிபுரம் எரிய
ஒருகணை துரந்தும்
கற்கொண் டெறிந்த
சாக்கியன் அன்பு
தற்கொண் டின்னருள்
தான்மிக அளித்தும்
கூற்றெனத் தோன்றியுங்
கோளரி போன்றும்
தோற்றிய வாரணத்
தீருரி போர்த்தும் (20)
நெற்றிக் கண்ணும்
நீள்புயம் நான்கும்
நற்றா நந்தீச்
சுவரர்க் கருளியும்
அறிவின் ஓரா
அரக்க னாருடல்
நெறநெற இறுதர
ஒருவிரல் ஊன்றியும்
திருவுரு வத்தொடு
செங்கண் ஏறும் (25)
அரியன திண்திறல்
அசுரனுக் கருளியும்
பல்கதிர் உரவோன்
பற்கெடப் பாய்ந்து
மல்குபிருங் கிருடிக்கு
மாவரம் ஈந்தும்
தக்கன் வேள்வி
தகைகெடச் சிதைத்தும்
மிக்கவரம் நந்தி
மாகாளர்க் கருளியும் (30)
செந்தீக் கடவுள்தன்
கரதலஞ் செற்றும்
பைந்தார் நெடும்படை
பார்த்தற் கருளியும்
கதிர்மதி தனையோர்
காற்பயன் கெடுத்தும்
நிதிபயில் குபேரற்கு
நீள்நகர் ஈந்தும்
சலந்தரன் உடலந்
தான்மிகத் தடிந்தும் (35)
மறைபயில் மார்க்கண்
டேயனுக் கருளியும்
தாருகற் கொல்லமுன்
காளியைப் படைத்தும்
சீர்மலி சிலந்திக்
கின்னர சளித்தும்
கார்மலி உருவக்
கருடனைக் காய்ந்தும்
ஆலின் கீழிருந்
தறநெறி அருளியும் (40)
இன்னவை பிறவும்
எங்கள் ஈசன்
கோபப் பிரசாதங்
கூறுங் காலைக்
கடிமலர் இருந்தோன்
கார்க்கடற் கிடந்தோன்
புடமுறு சோலைப்
பொன்னகர் காப்போன்
உரைப்போ ராகிலும்
ஒண்கடல் மாநீர் (45)
அங்கைகொண் டிறைக்கும்
ஆதர் போன்றுளர்
ஒடுங்காப் பெருமை
உம்பர் கோனை
அடங்கா ஐம்புலத்
தறிவில் சிந்தைக்
கிருமி நாவாற் கிளத்தும்
பரமே, அதாஅன்று
ஒருவகைத் தேவரும்
இருவகைத் திறமும் (50)
மூவகைக் குணமும்
நால்வகை வேதமும்
ஐவகைப் பூதமும்
அறுவகை இரதமும்
எழுவகை ஓசையும்
எண்வகை ஞானமும்
ஒன்பதின் வகையாம்
ஒண்மலர்ச் சிறப்பும்
பத்தின் வகையும்
ஆகிய பரமனை (55)
இன்பனை நினைவோர்க்
கென்னிடை அமுதினைச்
செம்பொனை மணியினைத்
தேனினைப் பாலினைத்
தஞ்சமென் றொழுகுந்
தன்னடி யார்தம்
நெஞ்சம் பிரியா
நிமலனை நீடுயர்
செந்தழற் பவளச்
சேணுறு வரையனை (60)
முக்கட் செல்வனை
முதல்வனை மூர்த்தியைக்
கள்ளங் கைவிட்
டுள்ளம துருகிக்
கலந்து கசிந்துதன்
கழலிணை யவையே
நினைந்திட ஆங்கே
தோன்றும் நிமலனைத்
தேவ தேவனைத்
திகழ்சிவ லோகனைப் (65)
பாவ நாசனைப்
படரொளி உருவனை
வேயார் தோளி
மெல்லியல் கூறனைத்
தாயாய் மன்னுயிர்
தாங்குந் தந்தையைச்
சொல்லும் பொருளும்
ஆகிய சோதியைக்
கல்லுங் கடலும்
ஆகிய கண்டனைத் (70)
தோற்றம் நிலைஈ
றாகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும்
நித்தனை முத்தனை
வாக்கும் மனமும்
இறந்த மறையனைப்
பூக்கமழ் சடையனைப்
புண்ணிய நாதனை
இனைய தன்மையன்
என்றறி வரியவன் (75)
தனைமுன் விட்டுத்
தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம்
கலவர் போலவும்
விளக்கங் கிருப்ப
மின்மினி கவரும்
அளப்பருஞ் சிறப்பில்
ஆதர் போலவும் (80)
கச்சங் கொண்டு
கடுந்தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத்
தேவரென் றெண்ணிப்
பிச்சரைப் போலவோர்
ஆரியப் புத்தகப்
பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர்
மானுடம் போன்று (85)
பெட்டினை உரைப்போர்
பேதையர் நிலத்துன்
தலைமீன் தலைஎண்
பலமென் றால்அதனை
அறுத்து நிறுப்போர்
ஒருத்தர் இன்மையின்
மத்திர மாகுவர்
மாநெறி கிடப்பஓர்
சித்திரம் பேசுவர்
தேவ ராகில் (90)
இன்னோர்க் காய்ந்தனர்
இன்னோர்க் கருளினர்
என்றறிய உலகின்
முன்னே உரைப்ப
தில்லை ஆகிலும்
மாடு போலக்
கூடிநின் றழைத்தும்
மாக்கள் போல
வேட்கையீ டுண்டும் (95)
இப்படி ஞானம்
அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன்
என்றிரு நிலத்து
முன்னே அறியா
மூர்க்க மாக்களை
இன்னேகொண்
டேகாக் கூற்றம்
தவறுபெரி துடைத்தே
தவறுபெரி துடைத்தே. (100) 1
திருச்சிற்றம்பலம்