பதிக வகை: தலைவன் புகழ்
திருமாலும் நான்முகனுந்
தேர்ந்துணரா தன்றங்
கருமால் உறஅழலாய்
நின்ற - பெருமான்
பிறவாதே தோன்றினான்
காணாதே காண்பான்
துறவாதே யாக்கை
துறந்தான் - முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான்
அகலா தகலியான்
ஊழால் உயராதே
ஓங்கினான் - சூழொளிநூல்
ஓதா துணர்ந்தான்
நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகா தணுகியான் - ஆதி
அரியாகிக் காப்பான்
அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனும்
தானே – பரனாய
தேவர் அறியாத
தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே
விதித்தமைத்தான் - ஓவாதே
எவ்வுருவில் யாரொருவர்
உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி
அருள்கொடுப்பான் - எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான்
தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குங் காண்பரிய
எம்பெருமான் - ஆனாத
சீரார் சிவலோகந்
தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயில்
உள்ளிருப்ப - ஆராய்ந்து
செங்கண் அமரர் புறங்கடைக்கட்
சென் றீண்டி
எங்கட்குக் காட்சியருள்
என்றிரப்ப - அங்கொருநாள் (10) 1
பதிக வகை: இறைவன் கோலம் கொள்ளல்
பூமங்கை பொய்தீர்
தரணி புகழ்மங்கை
நாமங்கை என்றிவர்கள்
நன்கமைத்த - சேமங்கொள்
ஞானக் கொழுந்து
நகராசன் தன்மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின்மேற்
சித்திரிப்ப - ஊனமில்சீர்
நந்தா வனமலரும்
மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ
றாயிரத்தால் - நொந்தா
வயந்தன் தொடுத்தமைத்த
வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக்
கூட்டிப் - பயன்கொள்
குலமகளிர் செய்த
கொழுஞ்சாந்தம் கொண்டு
நலமலிய ஆகந்
தழீஇக் - கலைமலிந்த (15)
கற்பகம் ஈன்ற
கமழ்பட் டினைஉடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற்
பொலிவித்து - விற்பகரும்
சூளா மணிசேர்
முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம்
மன்னுவித்துத் - தோளா
மணிமகர குண்டலங்கள்
காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை
பொன்னாண் - பணிபெரிய
ஆரம் அவைபூண்
டணிதிக ழுஞ்சன்ன
வீரந் திருமார்பில்
வில்லிலக - ஏருடைய
எண்டோட்கும் கேயூரம்
பெய்துதர பந்தனமும்
கண்டோர் மனமகிழக்
கட்டுறீஇக் - கொண்டு (20)
கடிசூத் திரம்புனைந்து
கங்கணங்கைப் பெய்து
வடிவுடைய கோலம்
புனைந்தாங் - கடிநிலை மேல் 2
பதிக வகை: இறைவன் புறப்பாடு
நந்திமா காளர்
கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள்
இருக்குரைப்ப - அந்தமில்சீர்
எண்ணருங் கீர்த்தி
எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள்
தாமுணர்த்த - ஒண்ணிறத்த
பன்னிருவர் ஆதித்தர்
பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் அகத்தியன்* யாழ்
வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம்
ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால்
வாழ்த்துரைப்பச் - செங்கண் (25)
நிருதி முதலோர்
நிழற்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந்
தாங்கத் -தெருவெலாம்
வாயு நனிவிளக்க
மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன்
குடையெடுப்ப - மேவியசீர்
ஈசானன் வந் தடைப்பை
கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால்
வாழ்த்துரைப்பத் - தூய
உருத்திரர்கள் தோத்திரங்கள்
சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ்
சிந்தக் - கருத்தமைந்த
கங்கா நதியமுனை
உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி
புரையிரட்டத் - தங்கிய (30)
பைந்நாகம் எட்டும்
சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும்
கழல்வணங்க - மெய்ந்நாக
மேகம் விதானமாய்
மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மேகத் துருமு
முரசறையப் - போகஞ்சேர்
தும்புரு நாரதர்கள்
பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார்
கூத்தாட - எம்பெருமான்
விண்ணோர் பணிய
உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணோர் மழவிடையை
மேற்கொண்டாங் - கெண்ணார்
கருத்துடைய பாரிடங்கள்
காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கழிந்த
போதில் - செருக்குடைய (35)
சேனா பதிமயில்மேல்
முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன்
பின்படர - ஆனாத
அன்னத்தே ஏறி
அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலுந் திண்டோட்
கருடன்மேல் – மன்னிய
மால்இடப்பாற் செல்ல
மலரார் கணைஐந்து
மேலிடப்பால் மென்கருப்பு
வில்லிடப்பால் - ஏல்வுடைய
சங்கணையும் முன்கைத் தடமுலையார்
மேல் எய்வான்
கொங்கணையும் பூவாளி
கோத்தமைத்த - ஐங்கணையான்
காமன் கொடிப்படைமுன்
போதக் கதக்காரி
வாமன் புரவிமேல்
வந்தணைய - நாமஞ்சேர் (40)
வேழ முகத்து
விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை
ஒண்கண் - தாழ்கூந்தல்
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின்
மேற்செல்லத் - தங்கிய
விச்சா தரர்இயக்கர்
கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க
ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந்
தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல
வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ்
சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி
கரதாளம் - கொட்டும் (45)
குடமுழவம் கொக்கரை
வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி
படகம் - இடவிய
மத்தளந் துந்துபி
வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும்
எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார்
வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங்
கிலுகிலுப்பத் - தங்கிய
ஆறாம் இருதுவும்
யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும்
மந்திரமும் - ஈறார்ந்த
காலங்கள் மூன்றுங்
கணமுங் குணங்களும்
வால கிலியரும்
வந்தீண்டி - மேலை (50)
இமையோர் பெருமானே
போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா
போற்றி - எமையாளும்
தீயாடி போற்றி
சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய்
இறைபோற்றி - தூயசீர்ச்
சங்கரனே போற்றி
சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங்
கழல்போற்றி - அங்கொருநாள்
ஆய விழுப்போர்
அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த
பதம்போற்றி - தூய
மலைமேலாய் போற்றி
மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள்
போற்றி - நிலைபோற்றி (55)
போற்றியெனப் பூமாரி
பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும்
நலம்பெருக - ஏற்றுக்
கொடியும் பதாகையும்
கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ்
சூழக் -கடிகமழும்
பூமாண் கருங்குழலார்
உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே
மன்னும் மகதியன் என்றும் பாடம்
( மகதி எனும் வீணையை வாசிக்கும் நாரதர் என்பது பொருள்) 3
பதிக வகை: மகளிர் குழாங்கள்
வாமான ஈசன்
மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம்
கேட்டலுமே -தூமாண்பில்
வானநீர் தாங்கி
மறையோம்பி வான்பிறையோ
டூனமில் சூலம்
உடையவாய் - ஈனமிலா (60)
வெள்ளை அணிதலால்
வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும்
வடிவுடைய - ஒள்ளிய
மாட நடுவில்
மலரார் அமளியே
கூடிய போர்க்கள
மாக்குறித்துக் - கேடில்
சிலம்பு பறையாகச்
சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம்
வில்லா - நலந்திகழும்
கூழைபின் தாழ
வளையார்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாந்
தேருந்திச் - சூழொளிய
கொங்கைமாப் பொங்கக்
கொழுநர் மனங்கவர
அங்கம் பொருதசைந்த
ஆயிழையார் - செங்கேழற் (65)
பொற்கலசத் துள்ளால்
மணிநீர் முகஞ்சேர்த்தி
நற்பெருங் கோலம்
மிகப்புனைந்து - பொற்புடைய
பேதை முதலாகப்
பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சேர
மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்
சூளிகையுஞ் சூட்டுஞ்
சுளிகையுஞ் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும்
மின்விலக - மாளிகையின்
மேல்ஏறி நின்று
தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று
மயங்குவார் - நூல்ஏறு
தாமமே தந்து
சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை
அடுமென்பார் - காமவேள் (70)
ஆமென்பார் அன்றென்பார்
ஐயுறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு
சங்கிழப்பார் - பூமன்னும்
பொன்னரி மாலையைப்
பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச்
சூட்டுவார் - முன்னம்
ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித்
தெருவம் புகுவார்
திகைப்பார் - அருகிருந்த
கண்ணாடி மேற்பஞ்சு
பெய்வார் கிளிஎன்று
பண்ணாடிச் சொற்பந்துக்
குற்றுரைப்பார் - அண்ணல்மேற்
கண்ணென்னும் மாசாலங்
கோலிக் கருங்குழலார்
திண்ண நிறைத்தாழ்
திறந்திட்டார் - ஒண்ணிறத்த (75) 4
பதிக வகை: பேதை
பேதைப் பருவம்
பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ
றடுதொழிலாள் - தீதில்
இடையாலும் ஏக்கழுத்த
மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்ளுருக்க
கில்லாள் - நடையாலும்
கெளவைநோய் காளையரைச்
செய்யாள் கதிர்முலைகள்
எவ்வநோய் செய்யுந்
தொழில்பூணாள் - செவ்வனேர்
நோக்கிலும் நோய்நோக்கம்
நோக்காள்தன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை
வஞ்சியாள் - பூக்குழலும்
பாடவந் தோன்ற
முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை
அயர்வுசெய்யாள் - நாடொறும் (80)
ஒன்றுரைத் தொன்றுன்னி
ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினளாஞ்
சேயிழையாள் - நன்றாகத்
தாலி கழுத்தணிந்து
சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை
விரித்துடுத்துக் - கோலஞ்சேர்
பந்தரிற் பாவை
கொண்டாடும்இப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி
தான்வினவ - அந்தமில்சீர்
ஈசன் எரியாடி
என்ன அவனையோர்
காய்சின மால்விடைமேற்
கண்ணுற்றுத் - தாய்சொன்ன
இக்கணக்கு நோக்காள்
இவள்போல்வாள் காமன்நூல்
நற்கணக்கின் மேற்சிறிதே
நாட்செய்தாள் - பொற்புடைய (85) 5
பதிக வகை: பெதும்பை
பேரொளிசேர் காட்சிப்
பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக்
கவின்இயலாள் - சீரொளிய
தாமரை ஒன்றின்
இரண்டு குழையிரண்டு
காமருவு கெண்டையோர்
செந்தொண்டை - தூமருவு
முத்த முரிவெஞ்
சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும்
மதிமுகத்தாள் - ஒத்தமைந்த
கங்கணஞ் சேர்ந்திலங்கு
கையாள் கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த
திருந்தடியாள் - ஒண்கேழல்
அந்துகில் சூழ்ந்தசைந்த
அல்குலாள் ஆய்பொதியிற்
சந்தனந் தோய்ந்த
தடந்தோளாள் - வந்து (90)
திடரிட்ட திண்வரைக்கண்
செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம்
அன்னாள் - மடல்பட்ட
மாலை வளாய
குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல்
தூமொழியாள் - சாலவும்
வஞ்சனை செய்து
மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை இட்டங்
கழகாக்கி - எஞ்சா
மணியாரம் பூண்டாழி
மெல்விரலிற் சேர்த்தி
அணியார் வளைதோள்மேல்
மின்ன - மணியார்த்த
தூவெண் மணற்கொண்டு
தோழியருந் தானுமாய்க்
காமன் உருவம்
வரஎழுதிக் - காமன் (95)
கருப்புச் சிலையும்
மலரம்புந் தேரும்
ஒருப்பட் டுடன் எழுதும்
போழ்தில் - விருப்பூரும்
தேனமருங் கொன்றையந்தார்த்
தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல்
வந்தணையத் - தானமர
நன்றறிவார் சொன்ன
நலந்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று
நிறைதோற்று - நன்றாகக்
கைவண்டுங் கண்வண்டும்
ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள்
நின்றொழிந்தாள் - மொய்கொண்ட 6
பதிக வகை: மங்கை
மங்கை யிடங்கடவா
மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய
உந்தியாள் - தங்கிய (100)
அங்கை கமலம்
அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம்
முகங்கமலம் - பொங்கெழிலார்
இட்டிடையும் வஞ்சி
இரும்பணைத்தோள் வேயெழிலார்
பட்டுடைய அல்குலுந்
தேர்த்தட்டு - மட்டுவிரி
கூந்தல் அறல்பவளம்
செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணி முறுவல்
இன்முத்தம் - வாய்ந்தசீர்
வண்டு வளாய
வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற்
கவின்சேர்த்திக் - குண்டலங்கள்
காதுக் கணிந்து
கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ்
சித்திரித்து - மாதராள் (105)
பொற்கூட்டிற் பூவையை
வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த
ஏல்வைக்கண் - நற்கோட்டு
வெள்ளி விலங்கல்மேல்
வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை
மேல்கொண்டு - தெள்ளியநீர்
தாழுஞ் சடையான்
சடாமகுடந் தோன்றுதலும்
வாழுமே மம்மர்
மனத்தளாய்ச் - சூழொளியான்
தார்நோக்குந் தன்தாரும்
நோக்கும் அவனுடைய
ஏர்நோக்குந் தன்ன தெழில்
நோக்கும் - பேரருளான்
தோள்நோக்குந் தன்தோளும்
நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து
நெடிதுயிர்த்து - நாண் நோக்கா (110)
துள்ளம் உருக
ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி
வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய 7
பதிக வகை: மடந்தை
தீந்தமிழின் தெய்வ
வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப்
பிராயத்தாள் - ஏய்ந்தசீர்
ஈசன் சிலையும்
எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலுந்
திரள்முத்தும் - பாசிலைய
வஞ்சியும் வேயும்
வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல்
மண்டலமும் - எஞ்சாப்
புருவமுஞ் செவ்வாயும்
கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென்
தோளும் - மருவினிய (115)
கொங்கையும் வாண்முகமு
மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய
சேவடியாள் - ஒண்கேழல்
வாழைத்தண் டன்ன
குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய
அல்குலாள் - ஊழித்
திருமதியம் மற்றொன்றாம்
என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந்
தாற்போல் - பெருகொளிய
முத்தாரங் கண்டத்
தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்
பெருகி -வித்தகத்தால்
கள்ளுங் கடாமுங்
கலவையுங் கைபோந்திட்
டுள்ளும் புறமுஞ்
செறிவமைத்துத் - தெள்ளொளிய (120)
காளிங்கஞ் சோதி
கிடப்பத் தொடுத்தமைத்த
தாளிம்பத் தாமம்
நுதல்சேர்த்தித் - தோளெங்கும்
தண்ணறுஞ் சந்தனம்
கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே
மட்டித்தாங் - கொண்ணுதலாள்
தன்னமர் தோழியர்கள்
சூழத் தவிசேறிப்
பின்னுமோர் காமரம் யாழ்
அமைத்து - மன்னும்
விடவண்ணக் கண்டத்து
வேதியன் மேல்இட்ட
மடல்வண்ணம் பாடும்
பொழுதீண் - டடல்வல்ல
வேல்வல்லான் வில்வல்லான்
மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற
மால்விடையின் - கோல (125)
மணியேறு கேட்டாங்கு
நோக்குவாள் சால
அணியேறு தோளானைக்
கண்டாங் - கணிஆர்ந்த
கோட்டி ஒழிய
எழுந்து குழைமுகத்தைக்
கோட்டி நுதல்சிவப்ப
வாய்துலக்கி - நாட்டார்கள்
எல்லாருங் கண்டார் எனக்
கடவுள் இங்காயம்
நல்லாய் படுமேற்
படுமென்று -மெல்லவே
செல்ல லுறுஞ்சரணம்
கம்பிக்குந் தன்னுறுநோய்
சொல்லலுறுஞ் சொல்லி
உடைசெறிக்கும் - நல்லாகம்
காண லுறுங்கண்கள்
நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம்
ஒட்டாது - பூணாகம் (130)
புல்லலுறும் அண்ணல்கை
வாரான்என் றிவ்வகையே
அல்லலுறும் அழுந்தும்
ஆழ்துயரால் - மெல்லியலாள்
தன்னுருவம் பூங்கொன்றைத்
தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்னுருவங் கொண்டு
புலம்புற்றாள் - பின்னொருத்தி 8
பதிக வகை: அரிவை
செங்கேழல் தாமரைபோல்
சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப்
பிராயத்தாள் -ஒண்கேழல்
திங்களுந் தாரகையும்
வில்லுஞ் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும்
உண்மையாற் - பொங்கொளிசேர்
மின்னார்வான் காட்டும்
முகவொளியாள் மெய்ம்மையே
தன்னாவார் இல்லாத்
தகைமையாள் - எந்நாளும் (135)
இல்லாரை எல்லாரும்
எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர்
சிறப்பென்னும் - சொல்லாலே
அல்குற்கு மேகலையைச்
சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு
பூண்புனைந்து - நல்கூர்
இடையிடையே உள்ளுருகக்
கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை
வென்றாள் - அடியிணைமேற்
பாடகங் கொண்டு
பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை
தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்
பொன்னரி மாலை
தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னுங் கழுத்தை
மகிழ்வித்தாள் - பொன்னனாள் (140)
இன்னிசை வீணையை
வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தானிட்ட
ஆசையால் - முன்னமே
பாடல் தொடங்கும்
பொழுதிற் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல்
தோன்றுதலும் - கூடிய
இன்னிசையும் இப்பிறப்பும்
பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையுங்
கைவிட்டுப் -பொன்னனையீர்
இன்றன்றே காண்ப தெழில்
நலம் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை
நமக்கென்று - சென்றவன்தன்
ஒண்களபம் ஆடும்
ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல்
கட்டுரைத்தும் - ஒண்கேழற் (145)
கூந்தல் அவிழ்க்கும்
முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தந் திமிரும்
முலைஆர்க்கும் - பூந்துகிலைச்
சூழும் அவிழ்க்கும் தொழும்
அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும்
அயாவுயிர்க்கும் – சூழொளிய
அங்கை வளைதொழுது
காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும்
நலந்தோற்றாள் - அங்கொருத்தி 9
பதிக வகை: தெரிவை
ஆரா அமுதம்
அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப்
பிராயத்தாள் - ஓரா
மருளோசை இன்மழலை
வாய்ச்சொலால் என்றும்
இருள்தீர் புலரியே
ஒப்பாள் - அருளாலே (150)
வெப்பம் இளையவர்கட்
காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும்
உருவத்தாள் - வெப்பந்தீர்ந்து
அந்தளிர்போல் சேவடியும்
அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும்
அழகினாள் - அந்தமில்
சீரார் முகம்மதியம்
ஆதலாற் சேயிழையாள்
ஏரார் இரவின்
எழில்கொண்டாள் - சீராரும்
கண்ணார் பயோதரமும்
நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின்
சவிகொண்டாள் -வண்ணஞ்சேர்
மாந்தளிர் மேனி
முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில்
வண்மையாள் - மாந்தர் (155)
அறிவுடையீர் நின்மின்கள்
அல்லார்போம் என்று
பறையறைவ போலுஞ்
சிலம்பு - முறைமையால்
சீரார் திருந்தடிமேற்
சேர்த்தினாள் தேரல்குல்
ஓரா தகலல்
உறாதென்று - சீராலே
அந்துகிலும் மேகலையும்
சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும்
என்பதனால் - முந்துறவே
பூங்கச்சி னால்அடையப்
பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக்
காப்பேவி - வாய்ந்தசீர்
நற்கழுத்தை நல்லாரத்
தால்மறைத்துக் காதுக்கு
விற்பகருங் குண்டலங்கள்
மேவுவித்து - மைப்பகரும் (160)
காவியங் கண்ணைக்
கதந்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை
முன்னூட்டி - யாவரையும்
ஆகுலம் ஆக்கும்
அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும்
குணத்தினாள் - ஆகிப்
பலகருதிக் கட்டிக்
கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய
ஆகிக் - கலைகரந்து
உள்யாதும் இன்றிப்
புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து
கள்ளாவி நாறுங்
கருங்குழலாள் - தெள்ளொளிய
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச்
செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம்
நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் (165)
பொற்கவற்றின் வெள்ளிப்
பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப்
பொரும்பொழுதில் - விற்பகிரும்
தோளான் நிலைபேறு
தோற்றங்கே டாய்நின்ற
தாளான் சடாமகுடம்
தோன்றுதலும் - கேளாய
நாணார் நடக்க
நலத்தார்க் கிடைஇல்லை
ஏணார் ஒழிக
எழில்ஒழிக - பேணும்
குலத்தார் அகன்றிடுக
குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமினீர்
என்று - சொலற்கரிய
தேவாதி தேவன்
சிவனாயில் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல்
அருளாது - போவானேல் (170)
கண்டால் அறிவன்
எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை
வளந்தோற்றாள் - ஒண்டாய 10
பதிக வகை: பேரிளம்பெண்
பெண்ணரசாய்த் தோன்றிய
பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொல்
பணிமொழியாள் - மண்ணின்மேல்
கண்டுகேட் டுண்டுயிர்த்
துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே
உளவென்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள்
கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர்
மெல்விரலாள் - கட்டரவம்
அஞ்சப் பரந்தகன்ற
அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக்கொடி நுடங்கும்
நுண்ணிடையாள் - எஞ்சாத (175)
பொற்செப் பிரண்டு
முகடு மணியழுத்தி
வைத்தன போல
வளர்ந்தேந்தி - ஒத்துச்
சுணங்கும் திதலையுஞ்
சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த்
தோன்றி - இணங்கொத்த
கொங்கையாள் கோலங்கட்
கெல்லாமோர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த்
தோளினாள் - அங்கையாற்
காந்தட் குலம்பழித்தாள்
காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும்
அகலத்தாள் - வாய்ந்துடனே
ஏய்ந்து குவிந்து
திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்த
செழும்பவளம் -காய்த்திலங்கி (180)
முத்தமுந் தேனும்
பொதிந்து முனிவரையும்
சித்தந் திறைகொள்ளும்
செவ்வாயாள் - ஒத்து
வரிகிடந் தஞ்சனம்
ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய
வாகிப் - பெருகிய
தண்ணங் கயலும்
சலஞ்சலமுந் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய
வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த
குண்டலஞ்சேர் காதினாள்
கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும்
மதிமுகத்தாள் - வண்டலம்ப
யோசனை நாறு
குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு
வடிவமைத்தாள் - மாசில்சீர்ப் (185)
பாதாதி கேசம்
பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன்
மெய்புகைத்தாள் - மாதார்ந்த
பண்கவரும் சொல்லார்பல்
லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத்
திடையிருந்து - ஒண்கேழற்
கண்ணவனை அல்லாது
காணா செவிஅவன
தெண்ணருஞ்சீர் அல்ல
திசைகொள்ளா - அண்ணல்
கழலடி அல்லது
கைதொழா அஃதான்று
அழலங்கைக் கொண்டான்மாட்
டன்பென் - றெழிலுடைய
வெண்பா விரித்துரைக்கும்
போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக்
கறைக்கண்டன் - விண்பால் (190)
அரிஅரணஞ் செற்றாங்
கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த
புராணன் - எரிஇரவில்
ஆடும் இறைவன்
அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில்
வரக்கண்டு - கேடில்சீர்
வண்ணச் சிலம்படி
மாதரார் தாமுண்ட
கண்ணெச்சில் எம்மையே
ஊட்டுவான் - அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய்
மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ
தகவென்று - நொந்தாள்போற்
கட்டுரைத்துக் கைசோர்ந்
தகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை
மால்கொண்டாள் - கொட்டிமைசேர் (195)
பண்ணாரும் இன்சொற்
பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ணார வாரம்
பெரிதன்றே - விண்ஓங்கி
மஞ்சடையும் நீள்குடுமி
வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு. 11
பதிக வகை: காப்பு
பெண்ணீர்மை காமின்
பெருந்தோள் இணைகாமின்
உண்ணீர்மை மேகலையும்
உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க்
காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா. 12
திருச்சிற்றம்பலம்