ஓடுகின்ற நீர்மை
ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங்
குறுகிற்று -நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே
நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர். 1
கடுவடுத்த நீர்கொடுவா
காடிதா என்று
நடுநடுத்து நாவடங்கா
முன்னம் - பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன்
பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட. 2
குந்தி நடந்து
குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி
நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு
பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை. 3
காளை வடிவொழிந்து
கையுறவோ டையுறவாய்
நாளும் அணுகி
நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை
ஆருரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை. 4
வஞ்சியன நுண்ணிடையார்
வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற்
கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா
என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர். 5
காலைக் கலையிழையாற்
கட்டித்தன் கையார்த்து
மாலை தலைக்கணிந்து
மையெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப்
பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று. 6
மாண்டுவாய் அங்காவா
முன்னம் மடநெஞ்சே
வேண்டுவாய் ஆகி
விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்னிடைவாய் மேய
சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை. 7
தொட்டுத் தடவித்
துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று
பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன்
ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. 8
அழுகு திரிகுரம்பை
ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய
ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன்
காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு. 9
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப்
பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து
மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச்
சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி உண்ப துறும். 10
குழீஇயிருந்த சுற்றம்
குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள்
எல்லாம் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா
இதுதகா தென்னாமுன்
தென்னானைக்கா அடைநீ சென்று. 11
குயிலொத் திருள்குஞ்சி
கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம்
நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல்
சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து. 12
காளையர்கள் ஈளையர்க
ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப்
பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன்
நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து. 13
இல்லும் பொருளும்
இருந்த மனையளவே
சொல்லும் அயலார்
துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே
கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. 14
அஞ்சனஞ்சேர் கண்ணார்
அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங்
கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப்
புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து. 15
இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்
சட்டஒரு முட்டைநெய்
தான்கலந் - தட்ட
அருவாச்சா றென்றங்
கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர். 16
கழிந்தது நென்னற்றுக்
கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா
வண்ணம் - அழிந்த
திராமலையா கொண்டுபோ
என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர். 17
இழவாடிச் சுற்றத்தார்
எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா
முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை
அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை. 18
உள்ளிடத்தான் வல்லையே
நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து
கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான்
தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள். 19
என்னெஞ்சே உன்னை
இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற்
காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத் தானை
உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு. 20
கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக்
கால்குலைய மற்றோர்
மரம்ஊன்றி வாய்குதட்டா
முன்னம் - புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான்
திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து. 21
தஞ்சாக மூவுலகும்
ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும்
யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம்
ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின். 22
நூற்றனைத்தோர் பல்லூழி
நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம்
விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா
அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவங் கேட்ட பகல். 23
உய்யும் மருந்திதனை
உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே
காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன்
என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர். 24
திருச்சிற்றம்பலம்