பதிக வகை: 2. மகட்பேச்சுரைத்தல்
பேரின்பக் கிளவி உடன்போக் கைம்பதோ டாறு துறையும் அருளுயிர்க் கருமை யறிய வுணர்த்தலும் ஆனந் தத்திடை அழுத்திற் றிரோதை பரைவழி யாக பண்புணர்த் தியது. 1. பருவங்கூறல் ஓராக மிரண்டெழி லாயொளிர் வோன்தில்லை யொண்ணுதலங் கராகம் பயின்றமிழ் தம்பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின் பராகஞ் சிதர்ந்த பயோதர மிப்பரி சேபணத்த இராகங்கண் டால்வள்ள லேயில்லை யேயெம ரெண்ணுவதே. 194 கொளு உருவது கண்டவள் அருமை யுரைத்தது. 1
பதிக வகை: 3. பொன்னணிவுரைத்தல்
மணியக் கணியும் அரன்நஞ்ச மஞ்சி மறுகிவிண்ணோர் பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத் துணியக் கருதுவ தின்றே துணிதுறை வாநிறைபொன் அணியக் கருதுநின் றார்பலர் மேன்மே லயலவரே. 195 கொளு படைத்துமொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி அடற்கதிர் வேலோற் கறிய வுரைத்தது. 2
பதிக வகை: 4. அருவிலையுரைத்தல்
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற் காப்பணிந் தார்பொன் னணிவா ரினிக்கமழ் பூந்துறைவ கோப்பணிவான் றோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசே. 196 கொளு பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை நன்னுதற் பாங்கி பொன்னணிவ ரென்றது. 3
பதிக வகை: 5. அருமைகேட்டழிதல்
எலும்பா லணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர் நலம்பா வியமுற்றும் நல்கினுங் கல்வரை நாடரம்ம சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பலொட்டார் கலம்பா வியமுலை யின்விலை யென்நீ கருதுவதே. 197 கொளு பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது. 4
பதிக வகை: 6. தளர்வறிந்துரைத்தல்
விசும்புற்ற திங்கட் கழும்மழப் போன்றினி விம்மிவிம்மி அசும்புற்ற கண்ணோ டலறாய் கிடந்தரன்! தில்லையன்னாள் குயம்புற் றரவிடைகூ ரெயிற் றூறல் குழல்மொழியின் நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. 198 கொளு பெருமை நாட்டத்தவள், அருமைகேட்டழிந்தது. 5
பதிக வகை: 7. குறிப்புரைத்தல்
மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங் கைதையங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப் பொய்தயங் குந்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள் பைதயங் கும்மர வம்புரை யும்மல்குற் பைந்தொடியே. 199 கொளு தண்டுறைவன் தளர்வறிந்து கொண்டுநீங்கெனக் குறித்துரைத்தது. 6
பதிக வகை: 8. அருமையுரைத்தல்
மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற் கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறி யேன் பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளென்னைப் புல்லிக்கொண்டு பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளின்றென் பைந்தொடியே. 200 கொளு நறைக்குழலி, குறிப்புரைத்தது. 7
பதிக வகை: 9. ஆதரங்கூறல்
மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக் கல்லியல் வெம்மைக் கடங்கடுந் தீக்கற்று வானமெல்லாஞ் சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங் கண்ணித்தொல் லோன்புலியூர் அல்லியங் கோதைநல் லாயெல்லை சேய்த்தெம் அகல்நகரே. 201 கொளு கானின் கடுமையும் மானின் மென்மையும் பதியின் சேட்சியும் இதுவென வுரைத்தது. 8
பதிக வகை: 10. இறந்துபாடுரைத்தல்
பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே இணையும் அளவுமில் லாஇறை யோனுறை தில்லைத்தண்பூம் பணையுந் தடமுமன் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே. 202 கொளு அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும் நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது. 9
பதிக வகை: 11. கற்புநலனுரைத்தல்
இங்கய லென்னீ பணிக்கின்ற தேந்தல் இணைப்பதில்லாக் கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத லண்ணல் கடிகொள்தில்லைப் பங்கயப் பாசடைப் பாய்தடம் நீயப் படர்தடத்துச் செங்கய லன்றே கருங்கயற் கண்ணித் திருநுதலே. 203 கொளு கார்த் தடமுங் கயலும் போன்றீர் வார்த்தட முலையு மன்னனு மென்றது. 10
பதிக வகை: 12. துணிந்தமைகூறல்
தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங் கோயிற் சிறந்துசிற் றம்பலத் தாடும்எங் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே. 204 கொளு பொய்யொத்தவிடை போக்குத்துணிய வையத்திடை வழக்குரைத்தது. 11
பதிக வகை: 13. துணிவொடுவினாவல்
குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய் நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர் மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே. 205 கொளு பொருவே லண்ணல் போக்குத் துணிந்தமை செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது. 12
பதிக வகை: 14. போக்கறிவித்தல்
நிழற்றலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும் அழற்றலை வெம்பரற் றென்பரென் னோதில்லை யம்பலத்தான் கழற்றலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போற் குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப் பாகும்நங் கொற்றவர்க்கே. 206 கொளு சிலம்பன் றுணிவொடு செல்சுரம் நினைந்து கலம்புனை கொம்பர் கலக்க முற்றது. 13
பதிக வகை: 15. நாணிழந்து வருந்தல்
காயமும் ஆவியும் நீங்கள்சிற் றம்பல வன்கயிலைச் சீயமும் மாவும் வெரீஇவர லென்பல் செறிதிரைநீர்த் தேயமும் யாவும் பெறினுங் கொடார்நமர் இன்னசெப்பில் தோயமும் நாடுமில் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே. 207 கொளு பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை அரிவைக் கவள் அறிய வுரைத்தது. 14
பதிக வகை: 16. துணிவெடுத்துரைத்தல்
மற்பாய் விடையோன் மகிழ்புலி யூரென் னொடும்வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. 208 கொளு கற்பு நாணினு முற்சிறந் தமையிற் சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது. 15
பதிக வகை: 17. குறியிடங்கூறல்
கம்பஞ் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுர மாகுநம்பா அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்டரி சிந்துகண்ணாள் செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. 209 கொளு செல்வ மாதர் செல்லத் துணிந்தமை தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது. 16
பதிக வகை: 18. அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல்
முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த் துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அரு ளாசையினாற் பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. 210 கொளு மன்னிய இருளில் துன்னிய குறியிற் கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது. 17
பதிக வகை: 19. கொண்டுசென்றுய்த்தல்
பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர் அனிச்சந் திகழுமஞ் சீறடி யாவ அழல்பழுத்த கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால் இனிச்சந்த மேகலை யாட்கொன்கொ லாம்புகுந் தெய்துவதே. 211 கொளு நெறியுறு குழலியடு நீங்கத் துணிந்த உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது. 18
பதிக வகை: 20. ஒம்படுத்துரைத்தல்
வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளலுள்ளந் தெய்வந் தருமிருள் தூங்கு முழுதுஞ் செழுமிடற்றின் மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர்போல் மொய்வந்த வாவி தெளியுந் துயிலுமிம் மூதெயிலே. 212 கொளு வண்டமர் குழலியைக், கண்டுகொள் கென்றது. 19
பதிக வகை: 21. வழிப்படுத்துரைத்தல்
பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா அறம்திருந் துன்னரு ளும்பிறி தாயின் அருமறையின் திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே. 213 கொளு தேம்படு கோதையை, யோம்ப டுத்தது. 20
பதிக வகை: 22 மெல்லக்கொண்டேகல்
ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த் தாண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின் றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன் சிற்றம்பலம் நிலவு சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. 214 கொளு மதிநுதலியை வழிப்படுத்துப் பதிவயிற் பெயரும் பாங்கிபகர்ந்தது. 21
பதிக வகை: 23. அடலெடுத்துரைத்தல்
பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம் பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும் மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்குங் காணத் திருத்திய போலும்முன் னாமன்னு கானங்களே. 215 கொளு பஞ்சிமெல்லடிப் பணைத்தோளியை வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது. 22
பதிக வகை: 24. அயர்வகற்றல்
கொடித்தேர் மறவர் குழாம்வெங் கரிநிரை கூடினென்கை வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத வாமன்னு மம்பலத்தோன் அடித்தே ரலரென்ன அஞ்சுவன் நின்ஐய ரென்னின்மன்னுங் கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ் விண்தோய் கனவரையே. 216 கொளு வரிசிலையவர் வருகுவரெனப் புரிதரு குழலிக் கருளவனுரைத்தது. 23
பதிக வகை: 25. நெறிவிலக்கிக்கூறல்
முன்னோ னருள்முன்னும் உன்னா வினையின் முனகர்துன்னும் இன்னாக் கடறிதிப் போழ்தே கடந்தின்று காண்டுஞ்சென்று பொன்னா ரணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார் தென்னா வெனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. 217 கொளு இன்னல் வெங்கடத் தெறி வேலவன் அன்ன மன்னவள் அயர்வ கற்றியது. 24
பதிக வகை: 26. கண்டவர் மகிழ்தல்
விடலையுற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ மடலையுற் றார்குழல் வாடினள் மன்றுசிற் றம்பலவர்க் கடலையுற் றாரின் எறிப்பொழிந் தாங்கருக் கன்சுருக்கிக் கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே. 218 கொளு சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு சரத்தணி வில்லோய் தங்கு கென்றது. 25
பதிக வகை: 27. வழிவிளையாடல்
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்றன் பின்பணைத் தோளி வருமிப் பெருஞ்சுரஞ் செல்வதன்று பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல் நன்பணைத் தண்ணற வுண்அளி போன்றொளிர் நாடகமே. 219 கொளு மண்டழற் கடத்துக், கண்டவ ருரைத்தது. 26
பதிக வகை: 28. நகரணிமைகூறல்
கண்கடம் மாற்பயன் கொண்டனங் கண்டினிக் காரிகைநின் பண்கட மென்மொழி ஆரப்பருக வருக இன்னே விண்கட நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கனெங்கோன் தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகந் தண்ணெனவே. 220 கொளு வன்தழற் கடத்து வடிவே லண்ணல் மின்றங் கிடையொடு விளையா டியது. 27
பதிக வகை: 29. நகர்காட்டல்
மின்றங் கிடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர் குன்றங் கடந்துசென் றால்நின்று தோன்றுங் குரூஉக்கமலந் துன்றங் கிடங்குங் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார் சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே. 221 கொளு வண்டமர் குழலியொடு, கண்டவ ருரைத்தது. 28
பதிக வகை: 30. பதிபரிசுரைத்தல்
மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப் பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர் மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய் நின்போல் நடையன்னந் துன்னிமுன் தோன்றும்நன் னீணகரே. 222 கொளு கொடுங்கடங் கடந்த குழைமுக மாதர்க்குத் தடங்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது. 29
பதிக வகை: 31. செவிலிதேடல்
செய்குன் றுவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற திங்களெய்ப் பாறும் பொழிலவை ஞாங்கரெங்கும் பொய்குன்ற வேதிய ரோதிடம் உந்திடம் இந்திடமும் எய்குன்ற வார்சிலை யம்பல வற்கிடம் ஏந்திழையே. 223 கொளு கண்ணிவர் வளநகர் கண்டுசென்றடைந்து பண்ணிவர் மொழிக்குப் பதிபரி சுரைத்தது. 30
பதிக வகை: 32. அறத்தொடுநிற்றல்
மயிலெனப் பேர்ந்திள வல்லியி னொல்கிமென் மான்விழித்துக் குயிலெனப் பேசுமெங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய் அயிலெனப் பேருங்கண் ணாயென் கொலாமின் றயர்கின்றதே. 224 கொளு கவலை யுற்ற காதற் றோழியைச் செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது. 31
பதிக வகை: 33. கற்புநிலைக்கிரங்கல்
ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை யாவருக் கும்மெளிதாந் தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேற் கோளரிக் குந்நிக ரன்னா ரொருவர் குரூஉமலர்த்தார் வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட லாயத்தெம் வாணுதலே. 225 கொளு சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியிற் சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது. 32
பதிக வகை: 34. கவன்றுரைத்தல்
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக் கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளர மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற் றெடுத்தாற் கினியன வேயினி யாவன எம்மனைக்கே. 226 கொளு விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக் கோடா யுள்ளநீடா யழுங்கியது. 33
பதிக வகை: 35. அடிநினைந்திரங்கல்
முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச் சிறுவலக் காரங்கள் செய்தவெல் லாம்முழு துஞ்சிதையத் தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார் உறுவலக் கானகந் தான்படர் வானா மொளியிழையே. 227 கொளு அவள்நிலை நினைந்து, செவிலி கவன்றது. 34
பதிக வகை: 36. நற்றாய்க்குரைத்தல்
தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப் பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்கும்நங் காய்எரியுந் தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படியாய் ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே. 228 கொளு வெஞ்சுர முமவள் பஞ்சுமெல் லடியுஞ் செவிலி நினைந்து கவலை யுற்றது. 35
பதிக வகை: 37. நற்றாய்வருந்தல்
தழுவின கையிறை சோரின் தமியமென் றேதளர்வுற் றழுவினை செய்யுநை யாவஞ்சொற் பேதை யறிவுவிண்ணோர் குழுவினை உய்யநஞ் சுண்டம் பலத்துக் குனிக்கும்பிரான் செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே. 229 கொளு முகிழ்முலை மடந்தைக்கு முன்னியதறியத் திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது. 36
பதிக வகை: 38. கிளிமொழிக்கிரங்கல்
யாழியன் மென்மொழி வன்மனப் பேதையொ ரேதிலன்பின் தோழியை நீத்தென்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே வாழியிம் மூதூர் மறுகச்சென் றாளன்று மால்வணங்க ஆழிதந் தானம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. 230 கொளு கோடாய்கூற, நீடாய் வாடியது. 37
பதிக வகை: 39. சுடரோடிரத்தல்
கொன்னுனை வேல்அம் பலவற் றொழாரிற்குன் றங்கொடியோள் என்னணஞ் சென்றன ளென்னணஞ் சேருமென அயரா என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென் றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்க்கின்றதே. 231 கொளு மெய்த்தகை மாது வெஞ்சுரஞ் செல்லத் தத்தையை நோக்கித் தாய்புலம் பியது. 38
பதிக வகை: 40. பருவநினைந்துகவறல்
பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு நற்றேன் மொழியழற் கான்நடந் தாள்முகம் நானணுகப் பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு மற்றேன் மலரின் மலர்த்திரந் தேன்சுடர் வானவனே. 232 கொளு வெஞ்சுரந் தணிக்கெனச் செஞ்சுடரவற்கு வேயமர் தோளி தாயர் பராயது. 39
பதிக வகை: 41. நாடத்துணிதல்
வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற் றேவல்மற்றென் மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாந்தில்லை யான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென் றெண்ணித்துண் ணென்றொளித்துக் கைம்மல ரால்கண் புதைத்துப் பதைக்குமெங் கார்மயிலே. 233 கொளு முற்றா முலைக்கு, நற்றாய் கவன்றது. 40
பதிக வகை: 42. கொடிக்குறி பார்த்தல்
வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத் தீயின தாற்றல் சிரங்கண் ணிழந்து திசைதிசைதாம் போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே. 234 கொளு கோடாய் மடந்தையை, நாடத் துணிந்தது. 41
பதிக வகை: 43. சோதிடங்கேட்டல்
பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் தில்லையன்ன மணங்கொளஞ் சாயலும் மன்னனும் இன்னே வரக்கரைந்தால் உணங்கலஞ் சாதுண்ண லாமொள் நிணப்பலி யோக்குவல்மாக் குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே. 235 கொளு நற்றாய் நயந்து, சொற்புட் பராயது. 42
பதிக வகை: 44. சுவடு கண்டறிதல்
முன்னுங் கடுவிட முண்டதென் தில்லைமுன் னோனருளால் இன்னுங் கடியிக் கடிமனைக் கேமற் றியாமயர மன்னுங் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறுமுண்டேல் உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள் நான்மறை யுத்தமரே. 236 கொளு சித்தந் தளர்ந்து தேடுங் கோடாய் உய்த்துணர் வோரைஉரைமி னென்றது. 43
பதிக வகை: 45. சுவடுகண்டிரங்கல்
தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலஞ்சிந்தி யாரினஞ்சேர் முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேனெடுத்த ஒள்வன் படைக்கண்ணி சீறடி யிங்கிவை யுங்குவையக் கள்வன் பகட்டுர வோனடி யென்று கருதுவனே. 237 கொளு சுவடுபடு கடத்துச் செவிலிகண்டறிந்தது. 44
பதிக வகை: 46. வேட்டமாதரைக் கேட்டல்
பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க் கோலத் தவிசின் மிதிக்கிற் பதைத்தடி கொப்புள்கொள்ளும் வேலொத்த வெம்பரற் கானத்தின் நின்றொர் விடலைபின்போங் காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே. 238 கொளு கடத்திடைக் காரிகை அடித்தலங்கண்டு மன்னருட் கோடாயின்னலெய்தியது. 45
பதிக வகை: 47. புறவொடுபுலத்தல்
பேதைப் பருவம் பின்சென்றதுமுன்றி லெனைப்பிரிந்தால் ஊதைக் கலமரும் வல்லியொப் பாள்முத்தன் தில்லையன்னாள் ஏதிற் சுரத்தய லானொடின் றேகினள் கண்டனையே போதிற் பொலியுந் தொழிற்புலிப் பல்குரற் பொற்றொடியே. 239 கொளு மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப் பின்வரும் செவிலி பெற்றி வினாயது. 46
பதிக வகை: 48. குரவொடு வருந்தல்
புயலன் றலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி பயலன் றலைப்பணி யாதவர் போல்மிகு பாவஞ்செய்தேற் கயலன் தமியன்அஞ் சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே. 240 கொளு காட்டுப்புறவொடு, வாட்ட முரைத்தது. 47
பதிக வகை: 49. விரதியரை வினாவல்
பாயும் விடையோன் புலியூ ரனையவென் பாவைமுன்னே காயுங் கடத்திடை யாடிக் கடப்பவுங் கண்டுநின்று வாயுந் திறவாய் குழையெழில் வீசவண் டோலுறுத்த நீயும்நின் பாவையும்நின்று நிலாவிடும் நீள்குரவே. 241 கொளு தேடிச் சென்ற செவிலித் தாயர் ஆடற் குரவொடு வாடி யுரைத்தது. 48
பதிக வகை: 50. வேதியரை வினாவல்
சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண் பொத்திய கோலத்தி னீர்புலி யூரம் பலவர்க்குற்ற பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர் பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே. 242 கொளு வழிவரு கின்ற மாவிரதியரை மொழிமின்க ளென்றுமுன்னி மொழிந்தது. 49
பதிக வகை: 51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
வெதிரேய் கரத்துமென் தோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ அதிரேய் மறையினிவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக் கதிரேய் சடையோன் கரமான் எனவொரு மான்மயில்போல் எதிரே வருமே சுரமே வெறுப்பவொ ரேந்தலொடே. 243 கொளு மாதின்பின் வருஞ்செவிலி வேதியரை விரும்பிவினாவியது. 50
பதிக வகை: 52. வியந்துரைத்தல்
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே பூண்டா ரிருவர்முன் போயின ரேபுலி யூரெனைநின் றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேனயலே தூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை சொல்லியதே. 244 கொளு புணர்ந்துடன்வரும் புரவலனொருபால் அணங்கமர்கோதையை யாராய்ந்தது. 51
பதிக வகை: 53. இயைபெடுத்துரைத்தல்
பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத் தீங்கை இலாச்சிறி யாள்நின்ற திவ்விடஞ் சென்றெதிர்ந்த வேங்கையின் வாயின் வியன்கைம் மடுத்துக் கிடந்தலற ஆங்கயி லாற்பணி கொண்டது திண்டிற லாண்டகையே. 245 கொளு வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும் நாடா வருங்கோடாய் கூறியது. 52
பதிக வகை: 54. மீளவுரைத்தல்
மின்றொத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன ஒன்றொத் திடவுடை யாளொடொன் றாம்புலி யூரனென்றே நன்றொத் தெழிலைத் தொழவுற் றனமென்ன தோர்நன்மைதான் குன்றத் திடைக்கண் டனமன்னை நீசொன்ன கொள்கையரே. 246 கொளு சேயிழை யோடு செம்மல் போதர ஆயிழை பங்கனென் றயிர்த்தே மென்றது. 53
பதிக வகை: 55. உலகியல்புரைத்தல்
மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத் தக்கடமாக் கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன நீள்வது செய்தகண் ணாளிந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை ஆள்வது செய்தவன் தில்லையினெல்லை யணுகுவரே. 247 கொளு கடுங்கடங் கடந்தமை கைத்தாய்க் குரைத்து நடுங்கன்மின் மீண்டும் நடமி னென்றது. 54
பதிக வகை: 56. அழுங்குதாய்க்குரைத்தல்
சுரும்பிவர் சந்துந் தொடுகடல் முத்தும்வெண் சங்குமெங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி யாம்வியன் கங்கையென்னும் பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலமனைய கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே. 248 கொளு செவிலியது கவலை தீர மன்னிய உலகியன் முன்னியுரைத்தது. 55
ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவ ரல்குவர்போய்த் தீண்டி லெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த் தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து பாண்டி லெடுத்த பஃறாமரை கீழும் பழனங்களே. 249 கொளு செழும்பணை யணைந்தமை அழுங்குதாய்க் குரைத்தது. உடன்போக்கு (பதினாறாம் அதிகாரம்) முற்றிற்று 56