பதிக வகை: பேரின்பக் கிளவி - 1. அகன்றணைவு கூறல்
ஒருவழித் தணத்தல் ஒருபதின் மூன்றுஞ்
சிவனது கருணை யருள்தெரி வித்தது.
1. அகன்றணைவு கூறல்
புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினால் லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. 181
கொளு
வழிவேறு படமன்னும், பழிவேறு படுமென்றது. 1
பதிக வகை: 2. கடலொடுவரவு கேட்டல்
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்தார்க்குஞ் செறிகடலே. 182
கொளு
மணந்தவர் ஒருவழித் தணந்ததற் கிரங்கி
மறிதிரை சேரும் எறிகடற் கியம்பியது. 2
பதிக வகை: 3. கடலொடுபுலத்தல்
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. 183
கொளு
செறிவளைச் சின்மொழி எறிகடற் கியம்பியது. 3
பதிக வகை: 4. அன்னமோடாய்தல்
பகன்தா மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்றாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல் லோநம் மகன்றுறையே. 184
கொளு
மின்னிடை மடந்தை, யன்னமோ டாய்ந்தது. 4
பதிக வகை: 5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்
உள்ளு முருகி யுரோமஞ் சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந் தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. 185
கொளு
மீன்றோய் துறைவர் மீளு மளவு
மான்றேர் வழியை யழியே லென்றது. 5
பதிக வகை: 6. கூடலிழைத்தல்
ஆழி திருத்தும் புலியூ ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக் கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி யோவுள்ளம் வள்ளலையே. 186
கொளு
நீடலந் துறையிற், கூடல் இழைத்தது. 6
பதிக வகை: 7. சுடரொடுபுலம்பல்
கார்த்தரங் கந்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந் துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு மாறென்கொ லாழ்சுடரே. 187
கொளு
குணகட லெழுசுடர் குடகடற் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது. 7
பதிக வகை: 8. பொழுதுகண்டு மயங்கல்
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. 188
கொளு
மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது. 8
பதிக வகை: 9. பறவையொடு வருந்தல்
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுள் நோய்
இன்னு மறிகில வாலென்னை பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. 189
கொளு
செறிபிணி கைம்மிகச் சிற்றிடைப் பேதை
பறவைமேல் வைத்துப் பையுளெய் தியது. 9
பதிக வகை: 10. பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்
கருங்கழி காதற்பைங் கானலில் தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென் றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. 190
கொளு
முருகவிழ் கான, லொடுபரி வுற்றது. 10
பதிக வகை: 11 அன்னமோடழிதல்
மூவல் தழீஇய அருண்முத லோன்தில்லைச் செல்வன்முந்தீர்
நாவல் தழீஇயவிந் நானிலந் துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா தளிய களியன்னமே. 191
கொளு
இன்னகையவ ளிரவரு துயரம்
அன்னத்தோ டழிந்துரைத்தது. 11
பதிக வகை: 12. வரவுணர்ந்துரைத்தல்
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை யான்இன் றிரக்கின்றதே. 192
கொளு
சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத் துரைத்தது. 12
பதிக வகை: 13. வருத்தமிகுதிகூறல்
வளருங் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம் பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே. 193
கொளு
நீங்கி யணைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது.
ஒருவழித்தணத்தல் (பதினைந்தாம் அதிகாரம்) முற்றிற்று 13
திருச்சிற்றம்பலம்