சிவமயம்
காப்பு - வெண்பா
பாண்டரங்கங் கண்டுதில்லை பாதிநெல்லை பாதிசொல்லி
வேண்டலெய்தத் தூண்டல் விநாயகனும் - நீண்டவடி
வேலோனும் ஆனி விழாச்சேவை வேண்டிவரும்
மேலோர் பதத்துகளு மே.
நூல்
வெண்பா
பூதலமும் மீதலமும் போதின்மறைப் புங்கவனும்
சீதரனும் போற்றுதிருத் தில்லையே - நாதனிடம்
கோடிநலம் நீடுதென்றற் குன்றுதவு செந்தமிழால்
ஈடில்வள மார்ந்தநெல்லை யே (1)
பத்தர்களும் முத்தர்களும் பாவலரும் காவலரும்
சித்தர்களும் நத்துதிருத் தில்லையே - அத்தனிடம்
பஞ்சா யுதனேர் பலர்வாழும் பான்மையினால்
எஞ்சாத சீர்கொள்நெல்லை யே (2)
நீதி மறையோர் நெருங்குதலால் நித்தநித்தம்
தீதிலறம் ஓங்குதிருத் தில்லையே - ஆதியிடம்
செந்நா வலரும் திருவேடத் தொண்டர்களும்
எந்நாளும் மன்னுநெல்லை யே (3)
வாசவனும் வேதியனும் மாயவனும் மற்றனைய
தேசர் எவருமெச்சும் தில்லையே - ஈசனிடம்
கானவர்போற் பல்லுயிர்கள் காதிஅவற் றூன்அருந்தும்
ஈனருக்கா காதநெல்லை யே (4)
பையரவத் தாள்முனியும் பாய்புலிக்கால் மாதவனும்
செய்யகதி பெற்றுயர்ந்த தில்லையே - ஐயனிடம்
தாம்பிரமன் றாடும் சரணமே தஞ்சமென்று
யாம்பிறந்த தாயநெல்லை யே (5)
அல்லல் வினையைவென்றிட் (டு) ஆனந்த வீட்டினிடம்
செல்லவிழை வார்புகழும் தில்லையே - நல்லனிடம்
விண்ணும் மண்ணும் நொந்து வெறுப்பனசெய் வாரைவெல்சீர்
எண்ணுமவர் வாழுநெல்லை யே (6)
கீர்த்தி அறம்பெருமை கேடில்முத்தி என்பவற்றைச்
சேர்த்திகத்தில் நல்கவல்ல தில்லையே - மூர்த்தியிடம்
செந்திருவும் வெண்திருவும் சேர்ந்துவிளை யாடுகையால்
இந்திரனூர் ஒல்குநெல்லை யே (7)
பாரணங்கு வாழும் பரிசே நனிவிழைவார்
தீரர்வந்து போற்றிசைக்கும் தில்லையே - வீரனிடம்
காரார் பொதியைக் கலசமுனி வன்தவம் போன் (று)
ஏரார் பொருநைநெல்லை யே (8)
புத்தர்முத லோர்வரினும் புண்ணியவெண் ணீறணியும்
சித்தமுண்டா கத்திகழும் தில்லையே - அத்தனிடம்
பொங்காழி யன்ன புனிதத் தவத்தோரை
இங்கா தரிக்குநெல்லை யே (9)
சுத்தபர ஞானச் சுகமடைந்த தூயோர்கள்
சித்தனந்தம் செய்ததிருத் தில்லையே - நித்தனிடம்
கண்டிகையும் நீறும் கவினப் புனைவார்க்கே
எண்திருவும் நல்குநெல்லை யே (10)
பக்கலுறை வார்களொடு பல்கோடி ருத்திரரும்
செக்கரெனக் கூத்தாடும் தில்லையே - நக்கனிடம்
கண்ணிஅறி யாராய்க் கருமமே தெய்வமென்றன்(று)
எண்ணினரைக் காய்ந்தநெல்லை யே (11)
மாற்றரிய பொற்பணியும் மாமணியும் மான்மதச்செஞ்
சேற்றமிழும் வீதியுடைத் தில்லையே - ஆற்றலது
கூற்றனைக்கொன்(று) அன்றோர் குழவியினைக் காத்தபிரான்
ஏற்றருந்தச் செய்தநெல்லை யே (12)
வல்ல புலவோரும் மாதவரும் வந்துவந்து
தில்லனைத்தும் பெற்றுவக்கும் தில்லையே - நல்லதலம்
தோணான் கினராகித் தும்பியொன்றைக் கொன்றுரித்த
ஏணார் மருவுநெல்லை யே (13)
பொன்னை விழையாதார் புந்திநலம் போல்வளரும்
தென்னையொடு வாழைமலி தில்லையே - முன்னையிடம்
மூங்கி லொடுகரும்பு முத்துகுக்கக் கண்டு விண்ணோர்
ஏங்கியசீர் ஓங்குநெல்லை யே (14)
கந்தை முறிக்கும் கடகளிறூர் காவலவர்
சிந்தை யொல்க நீடுசெல்வத் தில்லையே - நிந்தையில்லூர்
பந்தைநிகர் கொங்கையுமை பார்க்கப் பரதமுயன்(று)
எந்தைவளர் கின்றநெல்லை யே (15)
கற்றணுகும் பாவலரைக் காசினியும் காணநுகர்
சிற்றம் பலம்குலவுந் தில்லையே - நற்றகைய (து)
ஆனந்தச் செப்புமன்றில் ஐம்முகத்தான் ஆடுதலால்
ஈனந் தவிர்ந்தநெல்லை யே (16)
பன்முறையும் கூடிப் பலவாப் பயப்படுத்தும்
சென்மவினை தீர்க்குமெழில் தில்லையே - நன்மையது
போயத்தம் கூப்பினர்க்குப் போராழி யான்புகழ்சீர்
ஈயத் தகுந்தநெல்லை யே (17)
ஆரியரும் விண்ணோர் அனைவோரும் அன்றுவப்பத்
தேரிழுத்த பாட்டணியும் தில்லையே - சீரியது
விண்டோய் தருக்குலங்கள் வெட்கவளர் வேய்அடிவாழ்
எண்டோட் பரமர்நெல்லை யே (18)
சந்திரனும் சூரியனும் தக்கன்மகத் தூ(டு)உதிரம்
சிந்தியழ வென்றபிரான் தில்லையே - முந்தியது
வேறிணையொன் றின்றிஎதிர் வெய்யமுயல் மீதிலரன்
ஏறிநடம் ஆடுநெல்லை யே (19)
நன்னாக ரீகமெய்தி நாய்நரிபோன்(று) ஊன்எலும்பு
தின்னாதார் வேண்டுமெழிற் றில்லையே - என்னாசை
எட்டு வகைப்பொருளும் ஈசனே என்றறிந்தார்க்(கு)
இட்டுவப்பார் வாழுநெல்லை யே (20)
நாரணனும் நான்முகனும் நந்துகின்ற நாள்வரினும்
சீரணமெய் தாததிருத் தில்லையே- காரணனூர்
தாயார் வயிற்றிலின்னம் சந்ததியா கும்துயரம்
ஏயார் பிறக்குநெல்லை யே (21)
மோகாந்த காரம்வந்து மூடா தொழியும்வண்ணம்
தேகாபி மானம்விட்டார் தில்லையே - சாகானூர்
பந்தாடு மாதர் பனைவேர் அரும்பு நுதல்
இந்தா விளங்குநெல்லை யே (22)
வந்த படிபாடும் வாயுடைய மாதவர்தம்
செந்தகைய பாடல்மலி தில்லையே- நந்தலில்லூர்
ஆதி முனிக்கோன் அடியார்க்(கு) அடிமைசெய்யா
ஏதிலார்போற் றாதநெல்லை யே (23)
கள்ளமின்றி வானிற் கரைந்தார் கனிதமிழாம்
தெள்ளமுதச் சீர்மணக்கும் தில்லையே - வள்ளல்கொள்ளூர்
தென்னர்களிற் கூனிமிர்ந்த சீரியன்தான் செய்தபணி
இன்னம் இலகுநெல்லை யே (24)
திங்கணிகர் சங்கத் திரளுலவும் வாவிதொறும்
செங்கமலம் பூத்ததிருத் தில்லையே - சங்கரனூர்
முத்தாரம் காட்டும் முகிழ்முலையார் மோகமிஞ்சி
எய்த்தாரும் ஏத்தும்நெல்லை யே (25)
மக்கள் உருவ மரையனையார் இன்றிஎந்தத்
திக்கவரும் போற்றுமணித் தில்லையே - மிக்கதலம்
பாற்றுணவு கொள்வார் பகையாய பத்தர்நெஞ்சில்
ஏற்றுலவும் ஈசன்நெல்லை யே (26)
மங்களமும் நல்ல மணமும் மகத்துவமும்
திங்கள்தொறும் காட்டுகின்ற தில்லையே - அங்கணர்ஊர்
தங்கமொல்கும் அக்கும் தவளமுழு நீறுமணி
எங்கள்அபி மானநெல்லை யே (27)
பார்த்தன் அடித்ததற்குப் பாசுபதம் ஈந்துமகிழ்
தீர்த்தர் மருவுதிருத் தில்லையே - சீர்த்ததாம்
வெட்டும் இடையனுக்கு மேலுலகில் மேவுமெய்ச்சீர்
இட்டுவப்பார் உற்றநெல்லை யே (28)
அங்கடைந்த ஆனந்தத் தால்அவ மாகிஎன்றும்
செங்கண்நெடு மால்கிடக்கும் தில்லையே - புங்கவரூர்
வண்ணஇதழ்க் காந்தி மதித்தாய் வழங்கறத்தால்
எண்ணருஞ்சீர் தோய்ந்தநெல்லை யே (29)
பல்வரமும் வேண்டியவா பத்தருக்கெல் லாம்கொடுக்கும்
செல்வச் சிவகாமி தில்லையே - நல்வளத்தூர்
அள்ளல்விட முண்ட அனவரதத் தான்அரன்பால்
எள்ளரும்சீர் எய்துநெல்லை யே (30)
பாலாழி யிற்றுயிலும் பச்சைநிற மோகினிநேர்
சேலார்கண் ணார்மலியும் தில்லையே - மேலாமூர்
மாட்டு மனைவியொடும் மைந்தனொடும் ஏறுமவர்
ஈட்டுபுகழ் காட்டுநெல்லை யே (31)
அட்டவித மூர்த்திகளை அஞ்செழுத்தை நிந்தைசெய்யாச்
சிட்டர் பலர்வாழும் தில்லையே - கட்டழகூர்
கொல்லா விரதியர்தம் கூட்டமிக நீடுதலால்
எல்லாரும் மெச்சுநெல்லை யே (32)
மிக்கழகார் சோலைஎங்கும் வீதியெங்கும் வீடெங்கும்
சிக்க மயிலாடும் தில்லையே - முக்கணனூர்
கல்லைநிகர் நெஞ்சறியார் காதும் தொழிலறியார்
இல்லைஎன்னார் வாழுநெல்லை யே (33)
நாற்றகைய பேற்றில் நலந்தீ(து) அறியாரைத்
தேற்றவல்லார் பற்பலர்வாழ் தில்லையே - கூற்றனஞ்சூர்
அன்பர்க்(கு) எளியாராய் அந்தரத்தோர் ஆதியர்வெள்
என்பணிந்தார் ஆளுநெல்லை யே (34)
வீட்டுக்(கு) அலந்துதொண்டு வேணமட்டும் செய்வார்க்(கு) ஓர்
சீட்டுக் கிடைக்குமெழிற் றில்லையே - பாட்டுயரூர்
கும்ப முனிவன் குறித்தபெரு வாழ்வதனை
இம்பரிற்பெற் றுய்ந்தநெல்லை யே (35)
பொய்த்துளநூல் நம்பிப் புழுங்குநர்க்கும் பொற்சபையிற்
சித்துருவம் காட்டுகின்ற தில்லையே - தத்துவனூர்
செச்சையொடு பச்சைபுணர் சீருருவம் நாடுமவர்க்(கு)
இச்சைமுற்றும் நல்குநெல்லை யே (36)
சந்தா கரச்செந் தமிழ்பாடத் தக்கவர்க்குச்
சிந்தா குலம்தவிர்க்கும் தில்லையே - நந்தாவூர்
தக்கவயற் றோறும் தரளம்உகும் நெற்பயிர்சீர்
இக்கனைய ஆகுநெல்லை யே (37)
வெங்கட் கொலைப்புலையர் வேரறுக்கும் வீரர்புகழ்
திங்கட் சடைப்பெருமான் தில்லையே - எங்களூர்
பண்டை வினையழியப் பாடுபடும் பத்தர்கட்கும்
இண்டையணி ஈசன்நெல்லை யே (38)
மாதமெல்லாம் மும்மாரி வந்துவந்து பெய்வதனாற்
சீத மிகப்பொலியும் தில்லையே - கோதறுமூர்
காமாதி நல்கும் கழைமதனன் தன்னைஎரித்(து)
ஏமாக்கும் எந்தைநெல்லை யே (39)
நன்றைஅதன் ஏனையினை நாடிநைந்த நாவலவர்
சென்றையம் தீர்க்கும்நல்ல தில்லையே - கொன்றையனூர்
மைக்காலன் தன்பகட்டு வாகனத்தின் வன்மனமும்
எக்காலும் அஞ்சுநெல்லை யே (40)
தாமாகச் சந்தத் தமிழ்ப்புலவர் தம்கவிபோல்
தேமாங் கனிஉதிரும் தில்லையே - கோமானூர்
மாற்றரும்சீர்த் தென்பொதியை மாமுனிவன் ஆதியரால்
ஏற்ற மலியுநெல்லை யே (41)
நாற்றுக் கழனி நடுக்கும் குமப்புரையும்
சேற்றுக் கயலுகளும் தில்லையே - போற்றுநல்லூர்
கூற்றுக் (கு) எமனாக் கொலை முயல்வார்க்(கு) இன்னுயிராம்
ஏற்றுப் பதாகைநெல்லை யே (42)
பூத்தார் அணிகுழலார் பொற்புநடை கண்டுகண்டு
சேத்தாள் அனம்பயிலும் தில்லையே - கூத்தானூர்
பன்னரிய செந்தமிழாற் பாடிப் பணியுமன்பர்
இன்னல்முற்றும் தீர்க்குநெல்லை யே (43)
அன்னம்விண்ணூர் தன்னைவிடுத் (து) அம்புயப்பூங் கொட்டையினைத்
தின்ன வரும்வளமைத் தில்லையே - முன்னவனூர்
பொல்லாங்கு நோய்வறுமை போலும் அவைசிறிதும்
இல்லார் மருவுநெல்லை யே (44)
விம்மு கனியும் விரிமலர்ப்பைந் தாதும்மிகச்
செம்மு பொழிலணையும் தில்லையே - ஐம்முகனூர்
துன்பம் தணந்து தொலைவரிய தாகியபேர்
இன்பம் கொடுக்குநெல்லை யே (45)
சொல்புலவர் சேகரனாம் சுந்தரர்க்காத் தூதுமன்று
செல்புனிதர் மேவுதிருத் தில்லையே - தொல்புகழூர்
அன்னைஎழிற் காந்திமதி அம்புயத்தாள் போற்றொருவற் (கு)
என்னைமக வாச்செய்நெல்லை யே (46)
தூயதமிழும் துகள்தீர் மறையும் மெச்சும்
சேயபுகழ் ஓங்குதிருத் தில்லையே - நாயகனூர்
பெண்ணாளும் பாகப் பெருங்கோல மன்றிமற்றொன்(று)
எண்ணாதார் வாழுநெல்லை யே (47)
அம்புயத்தோன் சொன்னாலும் அஞ்செழுத்தை யன்றிநம்பாத்
தெம்புடையார் மன்னுதிருத் தில்லையே - சிம்புள்மல்கூர்
சேரத்தா னான சிவனே பரமெனச்சொல்
ஈரத்தார் மேவுநெல்லை யே (48)
விண்குறித்த தேவர்களும் வேதியரும் மாதவரும்
திண்குறளும் போற்றிசைக்கும் தில்லையே - எண்குணனூர்
பாகைநிகர் முத்தமிழும் பாடும் பணிபுரிவார்க்(கு)
ஈகை மலியுநெல்லை யே (49)
அக்கினியி னோ(டு) உடுக்கை அங்கையனல் ஏந்தியரன்
தெக்கினிற்கால் வீசிநிற்கும் தில்லையே - முக்கியவூர்
பாவி கருமம் பரமென்று பல்பகையை
ஏவிரும் வாழ்ந்தநெல்லை யே (50)
மேலார் அவாவியணி வேண்டலெய்தும் வீறுடைத்தாய்ச்
சேலார வாவியணித் தில்லையே - பாலானூர்
வேதங் களையும் வியன்கிளியும் மிக்குரைத்திட்(டு)
ஏதங் களையுநெல்லை யே (51)
முற்றிற்று
நூற்பயன்
பத்தி மலிந்துதில்லை பாதிநெல்லை பாதிஎன
நத்தியஐம்பத் தோர்கவியும் நன்குரைத்தாற் - புத்திதரும்
சித்திதரும் அப்பாற் றிரும்பாது சொல்லுமுண்மை
முத்திதரும் மெய்என் மொழி.