logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)

சபாபதி முதலியார் 

(இது அகர முதல் அட்சரங்கள் ஒவ்வொன்றாகத் துவங்கப் பாடப்பெற்றிருப்பதால் அட்சரமாலை எனப் பெயர் பெற்றுள்ளது. இதில் நாயன்மார் புராணங்கள் விரவி வருவது சிறப்புடையது.)

        விநாயக வணக்கம் 

        வெண்பா

மூன்றறிவுந் தோன்றறிவா முப்பொருட்கு முற்பொருளாஞ்
சான்றறிவாம் பூரண சதாசிவத்திற்- றோன்றும்
அருணா சலவக் கரமாலை யோதக்
கருணா கரசுமுகன் காப்பு.

        நூல்
    
    இணைக்குறட்டாழிசை

    நிட்களாங்கம்

    லாலிசந்தம்

அக்கரம னைத்தியக்கும் ஆதிக்க
மிக்கவக ரத்தினாதி
சொக்கசிவ சோதியறிவா யெங்குநிறை
சொக்கரொளி யருணாசலா.          (1)

ஆரணநல் லாகமகலை மீதினமர்
பூரணமெய்ஞ் ஞானவொளியே
பாரணவு மன்பருளமாம் பத்மவணை
சீரணவு மருணாசலா.             (2)

இச்சையெழின் மேனியாகி யெவ்வெவரி
னிச்சையற வெய்துசோதி
பச்சையொரு பாதிமேய பாதிமலர்
செச்சையொளி ரருணாசலா.        (3)

ஈறுநடு வாதியில்லா வீடில்சுகப்
பேறுதவு பேர்வில்சோதி
கூறிலொரு கூறதாகுங் கூர்த்தமதி
நீறுபுனை யருணாசலா.            (4)

உண்மையறி வானந்தமா மோவிலருள்
பெண்மையக லாதமேனி
அண்மியெவ ணுள்ளுமேலு மாடல்புரி
திண்மையெறி யருணாசலா.        (5)

ஊழியுல வாதசோதி யோர்மூன்று
பாழனில வாதசோதி
ஆழியரு ளானசோதி யற்புதநல்
வாழிமிரு மருணாசலா.            (6)

எட்டுகுண மெட்டுவடி வாயெட்டெட்டு
வொட்டுகலை யெட்டுமுடிவாய்
பட்டுமவை யெட்டவரிதாய்ப் பாசமறு
சிட்டர்புக ழருணாசலா.             (7)

ஏகவொளி யாகிநின்றே யெண்ணிலக
னேகவெளி யாவெதிர்ந்தும்
ஏகவெளி யென்றுகண்டா லாங்குசிவ
யோகவெளி யருணாசலா.            (8)

ஐந்துகலை யைந்துபரையா யைந்துபொரு
ளைந்துநிற மைந்துதொழிலா
யைந்துபொறி யைம்புலனுமா யாங்கரிய
விந்தைபெறு மருணாசலா.         (9)

ஒன்றோடி ரண்டதென்னா தோங்கமொளி
யன்றோட தாமதென்னா
நின்றோர்க ளுள்ளமலர்மே னித்தநட
நின்றாடு மருணாசலா.            (10)

ஓசையொளி யூறுகந்த மாதிசுவை
யாசையக லாதகன்ற
பூசைபுரி வார்கடம்மைத் தன்னுளுற
வாசைபுரி யருணாசலா.            (11)

ஒளவியம வித்தவருளோ டார்வமிகு
செவ்வியமெய்ஞ் ஞானவொளியே
எவ்விருளு மென்றுமணுகா வேகரவி
திவ்வியநல் லருணாசலா.             (12)

அஃகேன மிருமைமருவித் தன்னிலையை
அஃகாது காட்டுமரபே
எஃகார்மெய் யறிவையொன்றி யெந்நாளும்
அஃகாதெ ழருணாசலா.            (13)

        சகளாங்கம்

கட்டுமறை யாகமாதி யாவுமள
விட்டுமுண ராதசோதி
மட்டுமலர் பொய்கைகாழி பிள்ளைவிரல்
சுட்டுளன வருணாசலா.            (14)

ஙப்போலி ருந்தினமெலாங் காசற்ற
மெய்ப்போத மருவுதொண்டைச்
செப்பாது செய்துகாட்டுந் திருவாமூர்
வைப்போது மருணாசலா.            (15)

சத்தாதி தத்துவந்தேர்  முத்தர்களும்
பித்தாகி நிற்பவஞ்சீர்க்
கொத்தாரு வலூரன் கூர்ந்து
பித்தாவெ னருணாசலா.             (16)

ஞமலியெனத் தனையிகழ்ந்து நின்னைநினை
கமலவயல் வாதவூரன்
முமலமற மொய்க்குருந்தின் நிழலமர்
விமலகுரு வருணாசலா.             (17)

டம்பமுத லாவசூயா தீயநெறி
வம்பிலமி ழாததூயார்
உம்பரக லாதமைத்தா யும்பர்வளர்
செம்பொனொளி யருணாசலா.          (18)

இணங்கிளவ னத்தனக்கோங் கேந்திய
நுணங்கிடைய ணங்கலர்ந்து
மணங்கமழ்த லின்றிருந்தாற் கண்டுனை
வணங்கலெவ னருணாசலா.         (19)

தங்களைத் தாமதித்து வாங்கிருவர்
பொங்கமர் புரிந்தவந்தா
ளங்கமெரி யங்கியாகி யனையரக
மங்கவெழு மருணாசலா.             (20)

நந்தைமதி கொன்றைதும்பை நாறியக
ரந்தவனி நாகநல்லா
ரந்தமில்கு ரண்டவாலு மாவலொட
ணிந்தமுடி யருணாசலா.            (21)

பற்றிவிரி மலரைங்கணை பைங்கழையி
னெற்றிவிடு மணிமாரனை
வெற்றிபெற வெகுளாதெழும் வீரவெரி
நெற்றிவிழி யருணாசலா.            (22)

மன்னுபுவி மூன்றினுழலும் வஞ்சவினை
பொன்னுமுதன் மூன்றுபுரிசை
தன்னையொரு வாதெனருள்ளே சாங்கம்புரி
புன்னகையி னருணாசலா.        (23)

யட்சபதி யெந்தைநின்பா நீங்காத
பட்சமதி தோழனன்றோ
பிட்சைபதி யென்னசெவியி லக்குமணி
கட்செவியி னருணாசலா.            (24)

அரவணைய னாதிதேவ ராவியது
கரவணைய வெய்துமாலம்
வரவணைய வாங்கியுண்ட கண்டவெழி
லிரவணையு மருணாசலா.        (25)

இலவங்கனி காத்திரங் கேழைசுக
முலவுஞ்சுக ம்மதென்றும்
பலவங்கனி சுகமிதென்று மருளை
நிலவங்கை யருணாசலா.            (26)

வஞ்சகமிஞ் சிடாதுகஞ் சன்முத
லெஞ்சமர ரஞ்சநானும்
துஞ்சுமவ ரங்கமாலை மார்பினணி
விஞ்சுமொளி யருணாசலா.         (27)

அழகுதிக ழிருடிமாதர் கற்புவளை
கழலவரை துகில்கள்கண்டப்
பொழுதறவ ரழலதோம்பி யேவுசின
வுழுவையுரி யருணாசலா.             (28)

இளமைகழி யாதசெல்வ மெய்தவொரு
வளமைமுனி பாலனார்தம்
வுளமையுற வந்தகால னுயிர்தங்கு
முளரிபத வருணாசலா.             (29)

அறவடிவ மானவிடை மேனன்பரருள் 
பெறவடிவ மாகிவருநீ
மறவடிவ மானமுயன் மேனடனமிடு
திறவடிவெ னருணாசலா.             (30)

அனகமணி கனகவெளியே  யன்பின்மிகு 
பனகமுனி யொடுபாற்கடல் 
தனகமிக மகிழ்வுண்டான் றாதைதொழு
கனகவடி யருணாசலா  .            (31)

        சகள நிட்களாங்கம் 

கற்றாரு மறியாநலங்  கல்லாது
பெற்றாரு மதிவள்ளலுக்
குற்றாபு ரிந்துகோலக் காவிலொளிர்
பொற்றாள மருணாசலா.            (32)

கான்றுதழ னீற்றினரையே கஞ்சமுகி
டோன்றுதடமோடுதென்றற்
போன்றுகுளிர் செய்யவம்ப மூர்த்தியினை
யேன்றுகொளு மருணாசலா.         (33)

கிண்ணமுலை வண்ணவொயி லாள்கீதமதி
பண்ணைமுனி தண்ணின் மொழியாள்
பெண்ணினல முண்ணவெண்ணு மாரூர
னண்ணவரு ளருணாசலா.            (34)

கீடவுரு வோடநாடிக் கீதமது 
பாடுகுழ விக்குநேரே 
தோடமற வாதவூரற்  காடல்பல
கூடல்விளை யருணாசலா.             (35)

குருலிங்க சங்கமங்கட் கன்புறுவர் 
திருவங்கம் லிங்கமென்றால் 
சருவங்க டந்தநிற்கே திருவொன்று
வுருவெங்கே யருணாசலா.            (36)

        குருஸ்வரூபம்

கூடனெடு மாறனாரை மூடுமம 
ணீடுமிருள் காடுவடர்
நீடுமரு ணீறதாகி  நேரதற
ஆடுமொளி யருணாசலா.             (37)

கெடிலநதி யதிகைபதி யாற்கன்புபுரி
துடிகொளிடை திலகவதியார்
வடிவையடைந் துரைநல்லரசை  யாண்டவருள்
பொடிவடிவெ மருணாசலா.         (38)

கேட்டவுட னப்பர்நாம மெய்பொருளுந் 
தீட்டுமதி யப்பூதியார்
வாட்டமற வாகீசரை வந்தொன்றி
யாட்டகுரு வருணாசலா.            (39)

கைம்மாறு கருதாச்சிவ ஞானமழை 
பெய்ம்மாது தன்னையேவி
பொய்ம்மாறப் புகலியரசை  யாண்டகுரு
மெய்ம்மார்க்க வருணாசலா.        (40)

கொங்கைமுகிழ் பால்சுரப்ப கூர்ஞான
செங்கதிரு தித்தவன்றே
மங்கையர்க் கரசிபாண்டி மாதேவிக்
கங்கொளிரு மருணாசலா.         (41)

கோளருகவீன விருளைக்  கொள்ளைகொள
மூளுமருண் ஞானவொளியை 
நாளுமதி ஞானநற்கு லச்சிறையை
யாளுமுதி யருணாசலா.            (42)

கௌவினிமை யாழ்மூரி யம்பதிநறை
செவ்விதின ருந்துசெவியான்
திவ்யநெறி பாணனாரை யாண்டவிசை
தெய்வகுரு வருணாசலா.            (43)

சந்தறநி றைந்தவொளி யேசுந்தரர்சு
தந்திரமி லாதுவெளியே
வந்தறநெ றிக்கணிற்பா னோலையளி
தந்திரந லருணாசலா.            (44)

சாத்திரமா தாந்தவுண்மை சம்பந்தர்
காத்திரம டைந்துணர்த்தி
சீர்த்திகண நாதர்தம்மை யாண்டபர
மார்த்தகுரு வருணாசலா.            (45)

சின்மயா னந்தமூலஞ் சீர்நந்தி
நன்மெயா னங்குணர்த்தி
தன்மெயா னந்தமூலன் றனையாண்ட
வின்மெயா னருணாசலா.            (46)

சீறராப் புனையும்வேணி  சோமாசி
மாறனார்க் கருளமேனி
நீற்றாச்சுந் தரனாவாய் நீடருட்
பெற்ற வருணாசலா.            (47)

சுழலைப்பெ றாச்சுரும்பர் சோலைபெரு
மிழலைக்கு றும்பனாரை
மழலைச்சொ ற்பரவைகேள்வன் வாய்ந்தபத
நிழலைச்செ வருணாசலா.         (48)


        சிவலிங்கஸ்வருபம்

சூக்கமுணர் தில்லைவா ழுமந்தணர்கள்
பூக்கண்முதல் கொண்டுநாளும்
ஊக்கமுள பூசைகொண்டாங் காடல்புரி
சூக்கவடி, வருணாசலா.             (49)

செப்போதி ளங்கொங்கை யேயோர்பாலி
ருப்பாய மேனிதன்னை
முப்போது தீண்டாருந் தீண்டுமழல்
வெற்பாகு மருணாசலா.            (50)

சேமவரு ளுள்ளசீலக் கண்ணப்பர்
நேமமறி வானினைந்தே
சோமரவி சோதிவிழியே சோரிசொரி
காமர்வடி வருணாசலா.            (51)

சைவமுணர் சண்டேசனார் தாதையடி
கொய்துமது பாதகமெனா
தெய்வதரு ளீசனடியார்க் கேயிறைமை
செய்தவரு ளருணாசலா.            (52)

சொக்கவெளி நீறுபூசுஞ் சோதிசிவ
அக்கமணி மாலைபூணும்
மிக்கசிவ நேசநெஞ்சார் திருநீல
நக்கர்பணி யருணாசலா.            (53)

சோராச்சி வானுபூதி தோன்றியுளம்
நேராத்தெ ரிந்தோர்புத்தர்
சோராதெ றிந்தகல்லே தூமலரி
னேராக்கொ ளருணாசலா.            (54)

        கோயில்

சௌனகா னகமுனிவருஞ் சாற்றரிய
மௌனவா னிலைவாயிலார்
கௌனவா னிலைபூசலார் புரிகோயி
லிவனவா வருணாசலா.            (55)

தத்தைமொழி பத்மவதி யாளின்றனை
ரத்தவிழி யுற்றவளவன்
பத்திவழி நாவலடி யிற்பூசைபுரி
சுத்தமுத லருணாசலா.             (56)

நாவில்பொரு ள்கோவையோதித் தமிழ்மன்னர்
மூவர்தரு பொருள்கொடன்பின்
ஆவலொடு காரியடிகள் செய்கோயில்
மேவிவள ரருணாசலா.            (57)

        குளம்

திண்டிறற் றண்டியடிகள் செய்பொய்கை
கண்டழுக் காறுகொண்ட
மிண்டுநெஞ் சமணர்வெரு தண்டிக்குக்
கண்டருந லருணாசலா.            (58)

        அபிடேகம்

தீயபுரி கோள்வலிந்து சேணெடிது
காயபசி யான்மெலிந்த
தூயசீர்புகழ்த்துணைசெய் அபிடேக
நேயநீ ரருணாசலா.             (59)

துரியவெளி போவனாளை யென்றவொரு
பெரியகுல நந்தனாரை
யெரியிலவ னாடுவித்தங் கேன்றபெருங்
கரியவெளி யருணாசலா.            (60)

        புட்பம்

தூம்பணிகை யென்னவண்டேன் றுளிதுள்ளித்
தேம்பணிசெய் மாலைசெய்து
பாம்பணிகள் பாறவணியா முருகவடி
தாம்பணிசெ யருணாசலா.        (61)

        தூபம்

தெங்குதிரள் சோலைகடவூர் திகழையர்
மங்கிலிய மாறிக்கொணர்
குங்கிலிய தூபமுரல்பு திருமேனி
யங்கனிமி ரருணாசலா.            (62)

        தீபம்

தேசுருவ மானநிற்கே திருவொற்றி
வாசர்தன வணிகருதிரம்
பேசுதிரு வகலிலூற்றித் தீபமிட
வீசுமொளி யருணாசலா.            (63)

தையலோர் பாகநின்னை வாதபுரி
ஐயர்நீ ருறுதீயெனும்
மெய்யவா சகம்விளக்க நமிநந்தி
ஐயர்தொண் டருணாசலா.            (64)

தொண்டைவாய்க் கெண்டைவிழி யாளோர்பாதி
பிண்டவன் மதியினானோ
தொண்டவா மண்டலானே புற்றீபம்
கொண்டைவா னருணாசலா.         (65)

    நெய்வேத்தியம்

தோடமது தற்கொலையெனா மறையாதி
பாடவது செய்ததாயர்க்
கீடவணி லாதிலங்கு மின்பமொரு
வீடருளு மருணாசலா.             (66)

தௌவைமக வாதிசுற்றஞ் சிவசொத்தை
வௌவுமப ராதநீப்பான்
வௌவியவ ராவிவாட்கீ கோட்புலியென்
செவ்வடிக ளருணாசலா.             (67)

நல்லோசை ருத்ரபா ராயணமதனை
யல்லோடுப கலுமாறா
தெல்லோரும கிழவோதும் பசுபதி
நல்லோசை யருணாசலா.            (68)

நாடவர்கண் மகிழமைந்தன் முடிசூடி
பீடுபெற வரசுநல்கி
பாடறல மாலைசெய் தாரையடிகள்
காடவர்கோ னருணாசலா.         (69)

நித்தியவ நித்தியந்தேர் வதுவுற்ற
சத்தியநற் சேரர்பெருமான்
பத்திபெறு மாலைதமிழுக் கருடந்த
வுத்தமா வருணாசலா.            (70)

        இசை

நீதானெனா தெவுயிரும் போதமயந்
தானாய்த்த னித்துநிற்ப
வானாதவே ணூதுவா ரைந்தெழுத்
தானாய ரருணாசலா.             (71)

        சிவாக்கினி

நுண்ணியமெய்ஞ் ஞானவிழி யானோக்கரிய
திண்ணியசி வானலம்வளர்
புண்ணியசி றப்புலியார் பரற்போகமருள்
தண்ணியந லருணாசலா.            (72)

        சிவபத்தி

நூன்முறை யறிந்தசீல னோர்மும்மை
யான்மதுரை யாண்ட கோவன்
தேன்மொழிய ராசையமிழா மூர்த்தியடி
யான்மருவு மருணாசலா.            (73)

நெற்றிவிழி யுற்றபெருமான் குஞ்சிதப
தத்தைமுடி வைத்துமுடியாய்
மற்றுலக ளித்தபெருமான் கூற்றுவரென்
நற்றவர்கொ ளருணாசலா.        (74)

நேர்பெறநீ லாவுசோதி நீள்வாரி
யேர்பெறமு தற்படுத்த
பேர்பெறுபொன் மீனைநிற்கீந் ததிபத்தர்
சீர்பெறுவ ரருணாசலா.            (75)

        வயிராக்கியம்

நைந்துருகு சிந்தையவனா மேயர்குடி
வந்தவத ரித்தநேயன்
நொந்துமன மாழ்கபெண் பாற்றூதுசெல
லந்தமது வருணாசலா.            (76)

நொச்சியறு குச்சிபுனைவர யெச்சவிடை
கச்சுமுலை மச்சவிழியாள்
கைச்சிதை செருத்துணையனார் தம்மைமிக
மெச்சியரு ளருணாசலா.            (77)

நோன்பெனல்கொ லாமையன்றோ வதுசெய்த
வூன்படையெ றிபத்தனார்
வான்படரம ராதியோர்கள் வாழ்த்துபதந்
தான்பெறநல் கருணாசலா.        (78)

பங்கயன்சி ரமரிந்தாய் அதுகண்டோ
விங்கொருபெண் மூக்கரிந்தார்
தெங்குகார் திகழுமாரூர்ச் சீர்கழற்
சிங்கர்கா ணருணாசலா.             (79)

மாடறம டந்தைபசுமெய்த் தீண்டாது
வீடறந டாத்துமொருவர்
நாடறியக் கூடவருநின் வேடவித
ஆடலதெ னருணாசலா.             (80)

பிறர்மனைபு காமையதனின் மிக்கதொரு
லறமதிலை யென்றதாரே
மதமறுகி யற்பகைமனை  கைப்பற்று
மறவரா ரருணாசலா.             (81)

பீடைகொடு வாடுமிளையான் குடிமாறன்
வீடுநடு யாமமடையா
நீடுபசியென் றுமுளைநெல் லமுதுண்ட
வாடலதெ னருணாசலா.             (82)

புன்புலியதென் றுமறியார் புனிதமுறு
நன்புலியபெ ற்றமறியார்
மன்பொலியும்மெய்ப் பொருளெனா வந்திட்ட
தென்பொலிவெ மருணாசலா.        (83)

பூண்டசிவ வேடர்த்தொழாச் சுந்தரனு
மாண்டசிவ னும்புறகெனுக்
காண்டல்புரி மிண்டனாரை யன்பினொடு
மாண்டதெவ னருணாசலா.        (84)

பெண்டினொடு பிள்ளையாதி பிறவுமுள
பண்டமெவை யும்பறித்தாய்
துண்டமுறு கோவணவு டைக்கமர்நீதித்
தொண்டரிட மருணாசலா.            (85)

பேதவித மறியாதநல் லேனாதி
நாதர்தமை யாளவெளிவந்
தேதமுறுமே திலவர்போ லெதிர்நின்ற
போதமதெ னருணாசலா.            (86)

பையரா வையொழித்தீர் மாவிரத
சைவவே டந்தரித்தீர்
தையலைம் பாலறுத்தீர் கஞ்சாற
மெய்யர்பா லருணாசலா.             (87)

பொன்றாத்தி ருக்குறிப்பே பொருளென்று
நின்றாத றஞ்செய்வண்ணார்
கன்றாத றஞ்செயங்கை மலர்பாறை
யின்றோன்று மருணாசலா.         (88)

போய்த்தலைஇ யானடந்து கைலைமலை
மேய்ப்பரமே சநிற்கண்
டாய்புகழ்பா டுமம்மைக் கொளிமங்கு
பேய்வடிவே னருணாசலா.            (89)

பெளவமலி யுலகிலுனது ஆடல்விளை
திவ்யநக ரங்கடோறும்
எவ்வமற வெய்துமூர்க்கர் சூதாட
லொவ்வுமது  வருணாசலா.        (90)

மனமொத்த தந்தைதாயர் கறிசெய்து
பினமற்ற மகவையூட்ட
அனமொத்த வமுழுசெய்ய வாவுற்ற
தெனமெத்த வருணாசலா.         (91)

மாற்றலர்த லைக்குவைக்கு ளொன்றுசடை
தோற்றொருத லைக்கணுற்று
போற்றெரிபு குந்துநிற்சேர் புகழ்ச்சோழ
ராற்றலென வருணாசலா.            (92)

மித்தையுல கத்தைமதி யாமிளிர்சைவ
முத்தனர சிங்கமுனையன்
சுத்தரிகழ் பொய்த்தவர்க்கே யிருபங்க
ளித்தலெவ னருணாசலா.            (93)

மீனவிழி பங்கனடி யாரடிபூசை
மானமற வாற்றமனைவி
யீனமுறு கைதரித்தார் கலிக்கம்பர்
ஞானமதெ னருணாசலா.             (94)

முத்தியரு ளீசனடியார் தம்மையிகழ்
புத்தியுறு  நீசர்நுனிநா
கத்திகொட ரிவரிஞ்சை நகர்வாழுஞ்
சத்தியடி யருணாசலா.            (95)

மூட்டமர முனைகடந்து முனையற்று
வாட்டமுற வந்தவரவர்
வாட்டமற வாங்கிபகைதீர் முனையடுவர்
நீட்டுபுக ழருணாசலா.            (96)

மெச்சுபண்டா ரமிவரே யாமென்று
வைச்சநெற் கவருவார்க்கே
மிக்கபொன்னீ ய்ந்தசீரி டங்கழியர்
எச்சமன் னருணாசலா.            (97)

மேதினியி லாடைபல நெய்தாதரவி
னீதல்புரி நேசவடிகள்
பாதமலர் பரவுமவரை மெய்ஞ்ஞான
போதமுறு மருணாசலா.            (98)

மைத்தமணி கண்டனடியே மறவாது
பத்தராய்ப் பணிவருடனும்
நித்தமன் பொடுபாடுவா ரொடுநின்று
நிர்த்தமிடு வருணாசலா.            (99)

மொழிமனநி றைந்தவொளி பாற்சித்தத்தை
யொழிவறவ மர்த்திநின்றார்
அழிவிற்றிரு வாரூர்பிறந் தாரோடு
மொழிவறநி லருணாசலா.            (100)

மோகவிரு ளேகவொளி கால்வெண்ணீறு
ஆகமுழு தாகவணிவார்
ஏகசிவ போகமுறு வாரப்பாற்சி
வோகரெம தருணாசலா.             (101)

மௌனமக டனைமருவு வாரிசைஞானி
தவமகட னைமருவுவார்
நவநவசி வாநுபவராஞ் சடையடிகள்
சிவமுறுவ ரருணாசலா.            (102)

வந்துனைம னத்தில்வைத் தாளாலால
சுந்தரனைவ யிற்றிலுற்றாள்
சந்திரனை முகத்திலொத்தா ளிசைஞானி
செந்தளிர்மெய் யருணாசலா.         (103)

வாக்குலகெ லாமென்றுசீ ரம்பலவர்
தூக்கியரு ளப்பெரியசீர்
தேக்கியபு ராணமறைவார் செங்குன்றை
பாக்கியரெ மருணாசலா.            (104)

விண்டவர்கள் கண்டதிலையாம் மிளிர்ஞானங்
கண்டவர்கள் விண்டதிலையாம்
அண்டவெளி யுள்ளுநிலையாம் பாதமலர்
புண்டரிக மருணாசலா.            (105)

வீடுவிட வீடுவருமென் றருமறைகள்
பாடமுக மதுபலகொடு
நாடவொரு தரநினைத்தா னாசமில
வீடருள்வை யருணாசலா.            (106)

உற்றதை யுரைக்கிலுடனே யுடனின்றும்
அற்றதுறு மென்றவுரைநேர்
பற்றறுசு ரூபசுகராய் வந்தென்னி
னுற்றதரு ளருணாசலா.            (107)

ஊர்பிறவி தெவ்வரொழிய வோமாதி
தேர்புரவி கவசமருள்வான்
நேர்பரவ ணாமலைத்தே வெழின்மேனி
யார்பெறுவ ரருணாசலா.            (108)

வெண்ணையம் பதியுதித்தார் மெய்கண்ட
கண்ணையெங் குந்தரித்தார்
மண்ணையு மோசையும்போ லத்துவித
வண்ணமென் றருணாசலா.        (109)

வேணுபுர ஞானவள்ளல் வேறுபுரி
ஆணவம றாதவரையும்
பேணிநிரு வாணமருளுங் காருண்ய
மாணுருவ ரருணாசலா.             (110)

வையமொடு வானமுதலா மற்றுளவுந்
தெய்வமெனல் சைவநெறியென்
றையமறவோ திப்புகலூர்ச் சிவலிங்க
மெய்யுறவ ரருணாசலா.            (111)

ஒண்டெலைக் கூருமரவ மொளிர்திங்கள்
வெண்டலைஇ மாலையணிவோய்
அண்டரேற் றாரூரனை யானைமிசை
கொண்டருணை யருணாசலா.        (112)

ஓங்காரவுட் பொருள் வைத்தேறிப்
பாங்காநின் னோடொன்றினார்
நீங்காதநெ றிவாசகர் நின்னருளி
னாங்காணு மருணாசலா.            (113)

ஒளதார்ய வருளும்வாழி யானந்த
ஒளதார்ய வடியர்வாழி
ஒளதார்ய வருணைவாழி சந்ததமும்
ஒளதார்ய வருணாசலா.            (114)


            முற்றும்.


 
 

Related Content

அருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)

சிவ கீர்த்தனைகள் - பலர் பாடிய சிவ கீர்த்தனங்கள் தொகுப்பு