logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )

திருச்சிற்றம்பலம்

இரட்டைப்புலவர் இயற்றிய

காப்பு

 நேரிசை வெண்பா

சாற்றரிய வாயிரக்கான் மண்டபத்தின் சார்வாக
ஏற்ற முடனே யினிதிருந்து - போற்றும்
விறல்விகட சக்ர விநாயகனை யேத்துந்
திறல்விகட சக்ரா யுதம்.

                                                    கலிவெண்பா

                                  ஏகாம்பரநாதர் இயற்பெருமை

1. நிலம்போற்றும் பைந்துளப நீலப் பொருப்பும்
    பொலம்போற்றும் போதிற் பொருப்பும்:-நலம்போற்றும்

2. மேருப் பொருப்பொருதன் வெள்ளிப் பொருப்பிலிரண்
    டாரப் பொருப்புடைய வன்னமுடன் :- சேர

3. விருந்து மனமகிழ்வுற் றெப்போது மின்பம்
    பொருந்தி யுறைகின்ற போதிற் :- கரந்தையினி(து)

4. தேந்துமுடி யோனுடனே யின்பநகை யாடிவளைக்
    காந்தளிணை கொண்டுதிருக் கண்புதைப்ப:-வாய்ந்த

5. படியும் விசும்பும் பரிதிமதி காணா(து)
    அடையு மிடையிருளே யாகி : நெடிதூழிக்

6. காலஞ் சிறிது பொழுதிற் கழிதலாற்
    சீல முனிவர்க்குந் தேவர்க்குஞ் :- சால

7. மறையவர்க்கும் வேதம் வகுத்த தொழிலெல்லாங்
    குறைவுபட்ட தென்றிறையுட் கொண்டு :- செறியளக

8. ஓவியமே நின்னா லுலக நெறிமுறைமை
    யாவுங் குறைவுபட்ட தீங்கதற்கு :- மேவியநல்

                  “அம்பிகை செய் பூசனை"

9.  வேதா கமத்தில் விதித்தபெரும் பூசைதனைப்
     போதார் குழலாய் புரிகென்ன :- வீதெமக்கு

10. வாய்த்த தெனவிரும்பி வானோரை நஞ்சுண்டு
     காத்தபெருமான் கழலிறைஞ்சி :- யேத்தி

11. மடமாது நின்னை வழிபடுவதற் கான
      விடமாவ தேதருள் செய்கென்ன :- விடையோனுந்

12.  தென்பால தான திசையிற் றிரைவீசு
        நன்பாலித் தண்டகநன் னாட்டகத்து :- முன்பாக

13. வோது திருநகரி யோரேழி னுஞ்சிறந்த
      ஆதி நகர்காஞ்சி யந்நகரிற்  :-   போதநலம்

14.  மன்னி வளர்வதொரு மாவுண்டு) அதன்நிழற்கீழ்க்
      கன்னி யெமையுனக்குக் காணலாஞ் :- சொன்னபடி

15. யாகம பூசை புரியவினி தவ்விடத்துப்
      போகவென வமரர் போற்றிசைப்ப :- வேகிப்

16. பொருப்பரைய னேவலொடு போந்துபல கோடித்
       திருத்தகு மாதருடன் சேர :- விருப்புடனே

17. தென்றிசையிற் சென்று திருவாய் மலர்ந்தவுயர்
       நன்றுதிகழ் காஞ்சி நகரெய்தி :- வென்றியிபம்

18. ஒன்று குறுமுயக் கோடு மிடம்பார்த்து
       நின்றுவிடுங் காஞ்சி நிழல்பார்த்து:- சென்றடைந்தோர்

19. தாம்பிறரைக் காணலாந் தம்மையவர் காணாமல்
      ஆம்பரிசு நல்கு மகம்பார்த்துக் :- காம்பொன்றின்

20. மூன்று முளரி முகிழ்க்குந் தடம்பார்த்துத்
      தோன்றுமலர்த் தீபச் சுடர் பார்த்துத் :- தான்றன்

21. இடத்து நிழனோக்கி யாவருங் காணாப்
      படுத்து மொருகிணறு பார்த்துக் :- குடக்கோடிக்

22. காண வரிதாய்க் கரக்குநதி பார்த்தமரர் 
      பேணுலகத் துய்க்கும் பிலம்பார்த்துக் :- காணரிய

23. செம்பொனிற நல்குஞ் சிலைபார்த்துத் திண்காரி
      வெம்பரியூர் செண்டு வெளிபார்த்துக் :-  கொம்பிற்

24, கடிக்கமலப் போதுங் கழுநீருஞ் சேரப்
      படைக்குமொரு பாடலமும் பார்த்து :- நடுப்புகுந்தோர்

25. தோற்றங் குரங்காக்குந் தொல்லையிடம் பார்த்ததனை
       மாற்றுங் கடவுண் மடுப்பார்த்துக் :- கூற்றால்

26. இறவா இடம்பார்த் திறந்தவர் பின்வந்து
      பிறவா விடம்பார்த்த பின்னர் :- செறிதரங்கக்

27. கம்பை நதியின் கரையணுகிக் காண்டகைய
      பைம்பொழில்சூழ் எம்மருங்கும் பார்த்தருளி:-யெம்பிரான்
 
28. யாமா தரவோ டிருப்போ மெனச்சொன்ன
     தேமா வடிநிழலைச் சேர்ந்தருளிக் :- கோமானை

29. நாமினிது பூசிக்க நல்லவிட மீதென்று
     பூமருவு தெய்வப் புனலாடித் :- தாமாகக் 

30. கம்பை மணலைக் குவித்துக் கசிந்துள்ளம்
       எம்பெரு மாட்டி யினிதிறைஞ்சித் : தம்பழைய

31. சேடியர்க ணிற்பத் திருச்சூ டகக்கையாற்
      றோடவிழ்பூக் கொய்து தொடுத் தணிந்து :- கூட

32. விரவுந் திருவுருவில் வெண்ணீறு நெஞ்சிற்
      றிருவஞ் செழுத்துந் திகழ :- வுரிமையுடன்

33. அந்தமில் பூசையின்மே லாளுடைய நாயகிக்குச்
சிந்தை யொருப்படவே செல்லுநாள் :- இந்துநுதல்


                   “தழுவக்குழைந்த பிரான்"

34. ஆதிக் குலமடந்தை யன்புடைமை முன்புபோற்
      சூதத் திருநிழலோன் சோதிப்ப :- மோதிக்

35. கரைபொருது கம்பைநதி கற்பாந்தந் தன்னில்
      விரிகடல் போற்றரங்கம் வீசி :- யிருசுடரும்

36. விண்ணும் பொலன்சக்ர வெற்புங் குலகிரியு
      மண்ணும் புதையவரப் பண்ணி :- யெண்ணிறந்த

37. வாரிடத்து மெவ்விடத்து மெப்போது முள்ளபிரா
      னோரிடத்துத் தாமு மொளித்திருப்பப்:-பாரிடமு

38. மேனை யமர்நாடு மேகோ தகமாக
      வானபெரும் பெருக்குக் கஞ்சாதே:-வானவர்கோன் 

39. செச்சை நிகருடம்பிற் செம்பாதி யாகியதன்
      பச்சை யுடம்பருமை பாராதே :- யிச்சையுடன்

40. றேசுதரும் பழைய திவ்யா கமப்படியே
      பூசைதனை யொழிந்து போகாதே :- மாசிலா

41. வன்புடைமை தன்னை யகன்றா லரன்மேனி
      யென்படுமோ வென்பதனை எண்ணியோ:-தன்பழைய

42. பெண்மையோ வன்போ பிறப்போ பெருங்காதற்
      றிண்மையோ கற்போ தெரிகிலேம் :- உண்மை

43. மறைபடைத்த மேனி வளையான் முலையாற்
குறிபடுத்தி மார்பு குழைய : நறைபடைத்த

44. தாழ்ந்த புரிகுழலா டானாக வம்மணல்மேல்
     வீழ்ந்து தழுவ வெளிப்பட்டோன் :- சூழந்தமரர்

45. மீளா வடிமை விலையா வணங்கொடுக்குந்
      தாளான் அரிபிரமர் தம்பிரான் :- ஆளாய


                                               "அருளழகன்"

46. தொல்லைத் திருக்குறிப்புத் தொண்டன்றலைமோதக்
       கல்லிற் புறப்பட்ட கையுடையோன் :- வில்லால்

47. வசையின் முடிமேன் மதியாமன் மோத
       விசையனோடு பொருத வீரன் :- பசியாற்

48. பதறியொரு சிறுவன் பால்வேண்டப் பாலின்
       உததி கொடுத்த வுதாரன் :- துதிபெருகத்

49. தேவர் நெருங்குந் திருப்பங் குனித்திருநாண்
       மேவிய வேத விழாவொலியிற் :- றாவிக்

50. குலாவு பலபொற் கொடிவீதி யெங்கும்
       உலாவிவரு நாளி லொருநாள்  :- நிலாவியசீர்

51. எவ்வா னவரு மிறைஞ்சும் பெரும்பூசை
      திவ்யா கமப்படியே செய்ததற்பின் :- மைவானி

52.  லாறு தொடவுயர்ந்த வாயிரக்கான் மண்டபத்தி
      லேறி யருளி யினிதிருந்து :-சீறியெழக்

53. காணுந் தொறுமொருதன் கண்மூன் றினிலிரண்டு
      நாணுந் திருக்காப்பு நாணணிந்து :- சேணுலவு

54. மைவாரி மேகம் வளரும் பிறைபடைத்த
       செவ்வான மீது திகழ்ந்ததென :- வெவ்வாயுந்

55. தோடு விரியிதழிச் சூழறனிற் பல்கோடிப்
      பாட லளிகள் படிந்ததென  :-  நீடுமிரு

56. பாலும் வெயிலுதவு பத்மரா கக்கிரிமே
      னீல வொளிபோய் நிறைந்ததெனக் :- கோலமுடன்

57. அன்றுதிருச் செங்காட் டணிந்ததிருச் சட்டைதனை
        யின்று மணிந்தா ரினிதென்ன :- வொன்றாக

58. வெம்மை யுடையா னிருபா கமுமெங்கள்
      அம்மை திருமேனி யானதெனத் :- தம்மின்

59. முயங்கக் கிரிமான் முலைகுழைத்த மெய்யிற்
       றயங்கத் திருச்சாந்து சாத்தி :- யுயர்ந்த

60. நனைத்தண் டுழாய்மௌலி நாபியில்வா ழன்ன
      மெனைத்து மறியா விடத்தே :-தனக்கடையச்

61. சம்பு குலத்தொருவன் சாத்துகைக்கா மென்றளித்த
      செம்பொன் மணிமகுடஞ் சேர்வித்துத் :- தம்போ

62. னிகரற் றவரிவர் நீங்கா விடத்தே
      மகரக் குழையங்கு வைத்துத் :- திகழமரர்

63. சாத லொழித்தற்குச் சான்றிருக்கு மவ்விடத்தே
     சோதிமணிக் கட்டுவடஞ் சூழ்வித்துப் :- போதப்

64. பதும வளைத்தழும்பு பட்ட விடத்தே
      புதுவயிரக் கேயூரம் பூட்டித் :- திதலை

65. பரந்து வளர்கடவுட் பச்சைக் குரும்பை
      யிரண்டுகுறி யிட்ட விடத்தே :- குனிப்பின்

66. காணிப் பிறைநிலவோ கங்கா நதிப்புனலோ
       வேணிப் புரையிருபால் வீழ்ந்ததெனச் :- சேணிற்

67. பனித்தா ரகையின் பரிசன்ன முத்தின்
      றனித்தாழ் வடம்விளங்கச் சாத்திக் :- குனிப்பில்

68. தீதிருந்து மபினயமுந் தெய்வத் துடியு
     மிருங்கனலும் வாழு மிடத்தே  :-  பொருந்தப்

69. பிறந்த விளம்பரிதிப் பேரழகு மட்கச்
       சிறந்த கடகஞ் செறித்து   :- நுறுங்கப்

70. பிசைந்துபிசைந் துண்ணவொரு பிள்ளையறுத் தாக்க
       விசைந்துபசி தோன்று மிடத்தே :- விசும்பின்

71. முதிரு மிருளை முனிபதும ராகக்
       கதிருதர பந்தனமுங் கட்டி :- மதுரைப்

72. புரவி திகழிடத்தே பொற்பதும ராகத்
      திருவுடை யாடை திருத்தி : பரதவிதக்

73. குஞ்சிப்பும் நல்லநிலைக் கூத்துந் திகழிடத்தே
       செஞ்சித்ர ரத்னச் சிலம்பணிந்து :- துஞ்சிச்

74. செலவுற்ற வானோர் சிரந்தொடுக்கு மாலை
      யிலகிக் கிடக்கு மிடத்தே :- குலவு

75. மதுமிக்க கல்லார மாலை யுடனே
       யிதழித் திருமாலை யிட்டு :- மதில்பொருத

76. தம்பொற் சிலையைத் தலைக்கொண் டனரென்னச்
      செம்பொற் றிருவா சிகைசேர்த்து :- விம்ப

77. விரவி யிடைதா னிலங்குவதே யென்னப்
      பரவுமணிக் கண்ணாடி பார்த்துச் :- சுருதியினான்
                  
                  “இசைப்பா விருப்பன்"

78. மூவாத பேரன்பின் மூவர் முதலிகளுந்
       தேவாரஞ் செய்த திருப்பாட்டும் :-பாவனையாற்

79. போதவூர் கண்ணீர் புளகத் துடனணிந்த
       வாதவூ ராளிதிரு வாசகமும் :-பாவனையாற்

80. வேட்டென் றெழுதா விருபிறப்போர் கற்கத்தான்
      பாட்டுண்ட நாலு பழங்கவியுங் :-  கேட்டருளி

             “சூழவருந்தெய்வத்தொளி"

81. ஐங்கைப் பவளநிறத் தானைப் பெருமானுஞ்
      செங்கைச் சுடர்வடிவேற் சேவகனு :- மெங்கு

82. நிறைபூதஞ் சூழ நிலமெல்லாங் காப்ப
       மறைஞாளி யேறிவரு வானும் :- நிறையருளாற்

83. றுண்ணெனத்தே வர்க்குச் சுதைபகுத்த மோகினியாம்
       பெண்ணிடத்தில் வந்து பிறந்தோனும் :-பண்ணுமக

84. மங்கும் படிக்கழற்கண் வாய்ந்திலங்குந் தம்முடைய
       திங்கணுதல் வேர்விற் செனித்தோனுந்  :- துங்கமுடி

85. கொண்ட கடவுட் குளிர்கொன்றைத் தாருமுடித்து
       உண்ட பரிகலத்தி லுண்டோனுந்  :- தண்டமிழான்

86. மண்புகழப் பாடி மறையூரி லாண்பனையைப்
      பெண்பனை யாக்கிய பிள்ளையுந் :- திண்பிடித்துப்

87. பாழி யமணரிடும் பாரச் சிலையுடனே
       யாழி தனின்மிதந்த வன்பனுஞ் :- சூழுமிருட்

88. பாதி யிரவிற் பரவைக்குஞ் சங்கிலிக்குந்
       தூது நடப்பித்த தோழனுந் :- தீதில்

89. வழுக்கில் பெருந்துறையில் வாழ்வித்த கோலங்
      கழுக்குன்றிற் கண்ட கவியும் :- வழுத்துநர்க்குப்

90. போத வினியதொரு பொன்வண்ணத் தந்தாதி
      யாதியுலாவோ டமைத் தோனுஞ் :- சோதிமணி

91. மன்றி னருகு மலர்த்துழாய் நாறுமிடங்
      கொன்றை கமழ்வித்த கொற்றவனு :- மென்றும்

92. புடைமருவு தன்னிழலிற் போகாத பேயை
      யிடைமருதி லிட்ட விறையு :- மடையத்

93. துயர்கடந்த தொண்டத் தொகையதனி லேனைச்
      செயல்சிறந்த தொண்டத் திரளுங் :- கயிலைதனிற்

94. றந்தாள் படாமற் றலையால் நடந்துபோ
       யந்தாதி யாற்புகழ்ந்த வம்மையு :-மிந்தநிலங்

95. கோட்டி வளைத்தெடுத்துக் கூட்டிக் குலைத்தடுக்கிக்
      காட்டவல்ல பூத கணவரு :- மீட்டுநல

96. மெண்ணு மொருநாற்பத் தெண்ணா யிரவரெனும்
       புண்ணிய வேடப் புனிதரு :- நண்ணரிய

97. வோரா யிரத்துத் தொளாயிரரென் றூழிமுதற்
      பேரா நிமந்தப் பெருமையருஞ் :- சேர

98. வுரிய விதிமுறையோ டுள்ள முருகிப்
       பொருவரிய வன்புடனே போதச் - கரரைத்


                              "வாசலில் நந்தி"

99. திருவா சலினந்தி செங்கைப் பிரம்பால்
       நிரையாக வெங்கு நிறுத்தி  :- வருவார்

100. கழற்சே வடிபணிந்து கண்களிப்ப முன்னே
        யெழச்சே வியுநீங்க ளென்ன :- முழக்க

101. விருப்பதுவும் வெள்ளிமலை யென்னாமற் செம்பொற்
        பொருப்பினும் மேறினார் போல  :- விருப்பால்

                “திருத்தேரில் மேவினார்"

102. வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லி நாதன்
        கொடுத்த திருத்தேர்மேற் கொண்டு :- முடித்தநதி

103. யாடும் விசையி லலையெழுந்து தன்மீதில்
        நீடும் வகைசுழித்து நின்றதெனக் :- கூட

104. விருகதி ரஞ்ச வெறிக்கு நிலாவின்
        ஒருதனி வெண்குடை யோங்க :- விருபாலுங்

105. கங்கை நதியிற் கரைபுரண்ட சீகரம்போன்
         மங்கையர்கள் வெண்சா மரையிரட்ட:- வெங்களையும்

106. இட்டாலோ பூணாக வென்றுரக மாடுவபோற்
         பட்டால வட்டம் பணிமாற :- விட்ட

107. வெருது மராமரமு மெவ்வேழுஞ் சாயப்
         பொருத விடைக்கொடிமுன் போத :- வருவதொரு

108. மேருக் கிரிதொடரும் வெள்ளிக் கிரியென்ன
        மூரிவிடை யெம்பிரான் முன் போதப் :-பேரிகை


                              "பல்லியம் முழக்கம்"

109. சல்லிகை மத்தளி தண்ணுமை பண்ணமை
         பல்லிய மெங்கும் பரந்தார்ப்ப :- வல்லபடி

110. வாணன் குடமுழா வாசிப்ப மாமதுர
         வீணை யுததி மிகவுயிர்ப்ப :- பேணும்

111. பரிசி றமதுசெவிப் பாண்சேரி பெற்ற
        விருவ ரிசைபாடி யேத்தச் :- சுருதியெழு

112. மின்னரம் பேழு மிசை ததும்ப வெம்மருங்குங்
         கின்னரர் தங்கள் கிளைபாட :- முன்னரிடும்

113. பேரிகை யோசை பிறங்கமிகத் தாரையுடன்
         மூரி வலம்புரி முன்முழங்க :- வாரங்

                       "திருச்சின்னம் முழக்கம்"

114. குளித்தவதி பாரக் கொங்கைத் தழும்பும்
         வளைத்தழும்பும் பெற்றபிரான் வந்தான் :- கிளைத்தசடை

115. யேகாம் பரநாதன் வந்தா னிகல்விடையின்
         பாகாம் பழையபரன் வந்தான் :-மாகத்

116. தெழுமிரண்டு பேரொளியு மெப்போது மஞ்சி
        வழிவிலங்கு மூருடையான் வந்தான் :-சுழிகொண்

117. டலையும் பகீரதிநின் றார்க்கின்ற சென்னி
        மலையன் றிருமருகன் வந்தான் :-கலைதேர்

118. பரிசிலிரு வர்க்கும் பகல்விளக்குங் கண்ணும்
         வரிசையுட னளித்தான் வந்தா :- னொருவயிற்றில்

119. வாரா வுடம்புடையான் வந்தா னெனமறுகிற்
         சீரார் திருச்சின்னஞ் சேவிப்ப :-வேரிமிகத்

              “தேவர் தம் ஊர்திமேல் சூழ வந்தல்"

120. தேங்கு மலரோன் சிறையோதிம மீது
         மோங்கு திருமா லுவணத்துந் :- தாங்குபடை

121. வாசவன் வெள்ளைமத வாரண மீது
         மீசர்பதி னொருவ ரேறிடத்துந் :- தேசுதரு

122. மாறிருவ ரெவ்வே ழடர்புரவித் தேர்மீதும்
        வேறிருவ ரெண்மர் விமானத்துஞ் :- சீறியடுங்

123. கூற்றுக் கடவுள் கொடிய கடாமீதும்
        போற்று மளகேசன் புட்பகத்துங் :- காற்றுறவாம்

124. வேகமிகு தழலோன் வெற்றித் தகர்மீதும்
         வாகை வருணன் மகரத்து :- ஆகமத்தின்

125. நீதி தெரியு நிருதிநர வாகனத்துங்
        காது பனவன் கலைமீதுஞ் :-சோதிதிகழ்

126. சீதமதி முத்தின் றேர்மீது மோரேழு
        வேத முனிவர் விமானத்தும் :-போதவுயர்

127. விஞ்சையர் சாரணர் சித்தர் வியன்கருடர்
       செஞ்சுடிகை நாகருடன் சேவிப்ப :-மஞ்சுகவித்

128.  தாடுங் கொடிக ளருக்கன் பரிதடுக்க
          மாட நெடிய மணிமறுகி :- னீடருளாற்

             “சூழவருந் தெய்வக் குழாங்கள்"

129. பொன்னான சூடகக்கைப் போதன்ன மும்புனலு
         மெந்நாளு மெவ்வுயிர்க்கு மீந்தருளி :- மன்னு

130, மறச்சாலைப் பெண்டி ரருகுவரக் கங்கை
        புறக்காவற் பெண்டிருடன் போதச் :- சிறக்கும்

131. வரையர மாதரும் வாரா கரத்திற்
        றிருவுடன் வந்த திரளுந் :- திருவுங்

132. கலையை யகலாத கன்னிமட மானு
        மலையை யகலா மயிலுங் :- கலைமகளும்

133. பொன்னி னுலகாளும் பூவையரு மாநதிக
        ளென்னு மடவா ரெழுவரு :- மன்னமயில்

134. சீறும் விடைகளிறு சேனங் கடாயாளி
        யேறு மடவா ரெழுவருங் :- கூறுங்

135. குலநாக மாதர் குழாமும் பணிந்து
       பொலமாட வீதி புகுத :- நிலமாதர்


         “திருவுலாக்காணும் திருமகளிர்"


136. தாணு நுதல்விழிமேற் றாவடிபோ கத்திரண்ட
         பாண மலரோன் படையென்னப் :- பூணரவஞ்

137. சூடுந் தரங்கச் சுரநதியிற் றோய்ந்துவிளை
        யாடும் படிதிரண்ட வன்னமெனப் :- பாடலினாற்

138. றம்பெருமை பாடுந் தமிழோன் றனக்களித்த
        வெம்பகலிற் சேர்ந்த விளக்கென்ன :- நம்பருறை

139. சூதத் தெழுந்த துணர்ப்பல் லவப்படலங்
        கோதத் திரண்ட குயிலென்னத் :- தீதற்ற

140. வெந்தைபெரு மான்கரத்தி னேந்துமிள மான்கண்டு
         வந்து திரண்டசில மானென்னச் :- செந்தமிழின்

141. பாட்டுக் குழல்வோன் பசும்பாதி யின்வார்த்தை
        கேட்டுத்திரண்ட கிளியென்னக் :- கூட்டகிலார்

142. தாழ்ந்த சடைமுடியோன் றன்னுடம்பைக் காரென்று
        வாழ்ந்து திரண்ட மயிலென்னச் :- சூழ்ந்தரன்பால்

143. நன்புதிய தூதுக்கு செல்வேனான் செல்வேன்
         என்பனபோன் மென்குழல்வண் டெங்குமெழ :- நின்புயமேல்

144. எங்கள் தழும்பணிந்தா லென்செய்யு மென்பனபோற்
        செங்கை வளைகள் சிறந்தார்ப்பச் :- சங்கரன்மேற்

145. றள்ள வரியகுறித் தாமுமிடத் தாயங்
       கொள்வனபோற் கொங்கைக் குவடசைய :- வுள்ளமகிழ்

146. செம்பதுமைக் கேள்வன் றிருமல்லி நாதனுயர்
         சம்புபதி நல்குந் தடந்தேர்போல் :- கம்பரே

147. யித்தேருங் கண்டாலோ வென்பனபோ லல்குலெனு
         மத்தேரின் மேகலைக ளார்ப்பரிப்ப - வித்தெருவிற்

148. சீற்ற விடையோனைச் சேவிக்கப் பெற்றபதம்
        போற்றுவபோற் பொன்னூ புரஞ்சிலம்ப :- மேற்ககன

149. கூடம் வெளியடைத்த கோபுரத்துங் குன்றனைய
         மாட நெடுமத்த வாரணத்து :- மோடுகதிர்

150. விஞ்சு கொடிதடுக்கு மேனிலா முற்றத்து
        மஞ்சுதவழ் கங்கைகொண்டான்மண்டபத்தும் :- வெஞ்சமரிற்

151. றத்துபரி பல்லவன் சம்பு குலப்பெருமான்
         வைத்த துலாபார மண்டபத்துஞ் :- சித்ரமணிச்

152. சூளிகையின் மீதுஞ் சுறைநிலா முற்றத்து
         மாளிகையின் மீதும் மறுகிடத்தும் :- யாளி

153. செறியுமணித் தெற்றியினுஞ் செய்குன் றிடத்து
         நிறைய எவரு நெருங்க :- இறையவனை


                          "திருக்காட்சியும் காண்மகளிர் காதலும்"


154. வந்து வணங்கி மதிக்கொழுந்துஞ் செஞ்சடையுஞ்
        சிந்தைகவர் கண்மலருஞ் செவ்வாயு :- மெந்தைபிரான்

155. தெய்வப் புரிநூலுந் திண்டோளு மார்பகமுஞ்
         சைவத் திருவான தாழ்வடமு :- மெய்வழியக்

156. கொண்ட திருநீறுங் குழைதுரந்த செங்கழுநீர்
         மண்டு திருக்கொன்றை மாலையு :- மெண்டிசையுந்

157. தாவில் சுருதித் தமருகமுந் தம்முடைய
       தேவி யறியுந் திருக்கூத்தும் :- யாவையுந்தம்

158. உள்ளத்தே கொள்ளா வுருக்காப் பெருகின்ப
        வெள்ளத்தே வீழா மிகவுயிராத் :- தள்ளியுறை

159. விட்டவாள் போல்விழியீர் மென்சுணங்கின் பொன்முலைமேற்
        பட்டவா பாரீர் பசப்பென்பார் :- கட்டழகன்

160. கோதை யகன்மார்பங் குழைவிக்க மாட்டாதால்
         ஏது படிலென் இவையென்பார் :- போத

161. நெருக்கி யரிதிட்ட நிரைவளைக ளெல்லா
        மிருக்கை யரிது கரத்தென்பார் :- நிருத்தன்

162. பரிக்குந் தழும்பு படுத்தா வளைகள்
        இருக்கிலென் போகிலென் என்பார் :- திருக்கண்கள்

163. வையார்நம் மேலென்பார் வைப்பா ரவர்கருணை
        மெய்யானவ ளொருத்திமே லென்பார் : ஐயோ

164. வருள்படைக்க வேண்டி யருமந்த கண்ட
         மிருள்படைத்த தேனிங்ங னென்பார்:- இருள்படைத்த

165. தின்றாகில் வானோ ரெனுஞ்சாதி யத்தனையும்
         பொன்றாதோ வென்று புகலுவார் :- வென்றிமதன்

166. ஏவானோ மேலென்பார் ஏவினால் இன்னமுந்தான்
        போவானோ போய்த்தோ விழியென்பார் - மேவனிலம்

167. செல்லாதோ மீதென்பார் சென்றால் வரவிடுமோ
         நல்லார் திருக்காப்பு நாணென்பார் : புல்லத்

168. திருக்கொன்றை மாலைபெறிற் சிந்தை குடியேறி
        யிருக்கின்ற மாலொழியு மென்பா :- ரொருத்திகுறி

169. யிட்டதிவர் மார்புபிற ரெய்துவதின் மாலுழன்று
         பட்டதமையும் படவென்பார் :- மட்டவிழும்

170. அம்பதுமப் போதி னயன்மா லறியாத
        வும்ப ரறியா வொருகிரியைச் :- செம்பவளப்

171. பாதி யுடம்பு பசப்பித்தாள் பைங்களபக்
        கோதை முலையாற் குழைவித்தா - ளாதலா

172. லுண்மை தனக்கிந்த வுமையாள் பிறந்ததற்பின்
        பெண்மைதனக் கேற்றம் பெரிதென்பார்:- பெண்மைக்கு

173. இறையா ளிவளன்றோ வென்பார்மற் றிங்ஙன்
         மறுகி லெதிர்வந்த மாத :- ரறுசமய

174. அண்டருக்குந் தாயா ரறச்சாலை யிப்படிபெற்
         றுண்டிருக்கு மூதூ ருடையானே:- கொண்டவிருட்

175. காவி விழியொருத்தி கட்டிக் குறியிட்டு
        மாவடியில் வைத்த வயிரமே :- தேவிமுகஞ்

176. செவ்வி பெருகத் திருச்சூ டகக்கையாற்
         றவ்வி பிடித்துச் சமைத்தன்ன :- மெவ்வுயிர்க்கு

177. மாரச் சொரிதருநெல் ஆட்டைக் கிருநாழி
        சேரப் படியளக்குஞ் சீமானே : மார்புபோற்

178. கண்ணுஞ் சிலர்படைத்த காணியோ காமவேள்
         பண்ணுந் துயர்தீரப் பார்த்தருளீர்:- வெண்ணிலவோடு

179. ஈரும் மிளந்தென்றல் ஈராமல் உம்முடைய
        வாரம் பசிதணித்தா லாகாதோ :- வாரவுளம்

180. வேவக் கறங்கும் விடைமணியை யும்முடைய
         சேவுக் கினிதளித்தாற் றீதாமோ :- மேவியவிக்

181. கொக்கி னிறகுடனே கூவுங் குயிற்சிறகை
         யொக்க வணியவுமக் கொண்ணாதோ :- மிக்க

182. வறஞ்செய்யு மூருடையீர் ஆகாது காணு
          மறஞ்செயல் என்று மயங்கா :- நிறந்திகழும்

183. விண்ட குவளைக்கும் விள்ளாத தாமரைக்குந்
         தண்டரள மும்பொன்னுஞ் சாத்துவா:-ரொண்டொடியீர்

184. பாகம் பிரியாத பச்சைமயில் காணாமல்
         ஏகம்பர் பார்த்தா ரெமையென்பார் :- ஆகமதன்

185. காதன் மலர்சொறிந்து கைசலிப்ப விவ்வண்ண
         மாதர் பலர்மயங்க மற்றொருத்தி :- பேதை


                                              பேதை


186. திரையுதவு பேரமுதின் சிற்றரும்பு முற்றி
         வருமுகைய தானதொரு வல்லி :- சுருதியளி

187. யூத மலரா வொருதா மரைமுகிளங்
        காத லுதவாத காமசரம் :- வேதத்

188. துழையா னகலா துறைகின்ற சூதங்
         குழையாத தென்றற் கொழுந்து :- பழைதாகக்

189. கம்ப ருறையுங் கடவுளிளஞ் சூதத்தின்
        கொம்பி லுறையாக் குயிற்பிள்ளை :- யின்ப

190. வலையா ரமுதத்தின் ஆரம்ப வித்து
         தொலையாத காமத்தின் றோற்றம் :- உலகிற்

191. சிறந்தபிரா னல்லாத தேவர்களைப் போல
        விறந்து பிறக்குமெயிற்றாள் நிறைந்துமைப்போல்

192. முத்தாரம் பூண முலையெனக்குச் சூட்டுமென்று
         கைத்தாயர் முன்னின்று கண்பிசைவாள்:- சுத்த

193. வியல்பு தனையொழிய வேதும் பிறழாக்
         கயலை யனையவிரு கண்ணாள் :- புயல்வரினு

194. மாடாத தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதுங்
        கூடாது மான குழலினாள் : நீடிமிக

195. வோங்கி வளர்தன் னுரியபரி ணாமமெல்லாந்
         தாங்கியவித் தன்ன தனத்தினாள் :- நீங்காத

196. வேகம்ப மென்னீ ரிமவான் மகள்தழுவ
         வாகங் குழைந்த வரனென்னீர் :- மாகம்பை

197. யாறென்னீ ரம்மை யறச்சாலை யென்னீர்நம்
        பேரென்னீ ரென்றுதமைப் பேசுவித்த :- வாறெல்லாம்

198. பாவைக் குரைத்தந்தப் பாவைபக ராததெல்லாம்
        பூவைக் கழுது புகலுவாள் :- மேவுபல

199. தீவிற் பிறந்த செழுமணியுந் தம்மூரின்
         வாவி பிறந்த மணிமுத்துங் :- காவிவிழி

200. யம்மை முதனா ளரனாரைப் பூசித்த
        கம்பை மணலுங் கலந்தெடுத்துக் :- கொம்பனையா

201. ளொண்டொடி மாத ருடனே கரஞ்சிவப்ப
        வண்ட லிழைத்து மகிழ்போதிற் :- பண்டொருநாள்

202. தெண்டிரையிற் பெற்ற திருவமுதச் செவ்வாயும்
         பண்டுகிராற் கொண்ட பரிகலமு :- மண்டுமெரி

203. தாழுஞ் சினத்துழுவை தான்கொடுத்த வுட்சாத்தும்
         வேழங் கொடுத்ததொரு மேற்சாத்துஞ்:- சூழ்பனியின்


204. ஓங்கல் கொடுத்த வொருபா கமுமுடையார்
         தாங்கு மணிமறுகு சாருதலு  :- மாங்கவளும்

205. வண்ட தனையொழிந்து வந்தணுகிச் செந்துவர்வா
         யொண்டொடி மாத ருடனிறைஞ்சி :- யண்டருறை

206. நாகஞ் சிலையாக நண்ணார் புரமெரித்த
         ஏகம்பர் தம்பெருமை யெண்ணாதே :- கோகநக

207. வுந்திக் கணையோ னொருபாக முஞ்சடையு
        மந்தப் புரமென் றறியாதே  :- யிந்தப்

208. பெருத்த மணக்கோலப் பிள்ளையுடன் றேர்மேல்
          இருத்து மெனைக்கொடுபோ யென்ன:- வொருத்தியிவர்

209. பூணத் தவரிருவர் பொன்முடியுஞ் சேவடியுங்
         காணக் கிடையாத கம்பர்காண்  :-  வாணுதலாய்

210. பாய வுலகம் பதினாலையும் பரந்தொன்
         றாய பெருமா னருகிருக்கத்  :-  தோயுமகிற்

211. பச்சைக் கிரியாற் பவளத் திருமார்பி
         லச்சிட்ட வர்க்கொழிந்துண் டாகுமோ :- வச்சமுடன்

212. மீதெடுத்துக் கம்பை மிகுபெருக்குக் கஞ்சாத
         மாதவத்தாட் கன்றியிது வாய்க்குமோ :- மூதண்ட

213. மெல்லாம் பெறநெல் லிருநாழியால் வளர்க்க
         வல்லாள் தனக்கன்றி வாய்க்குமோ : சொல்லாய்

214. குறைவின் மடமயிலே கூசாதே யாமே
         யிறைவரரு கேறி யிருப்போம் :- மறவிதனை

215. யென்ன இளையா ளிருகண்கள் முத்தரும்ப
        வன்னையர்தங் கையா லணைத்தாற்றி:- மின்னேபோ

216.  தென்று பகர்வதன்முன் ஏகம்பர் தேருடனே
         தென்றலந் தேருந் தெரிவித்து :- வென்றி

217. மதன்கை வரிசாபம் வாங்காமல் வாசம்
        பொதிந்தகணை பூட்டாமற் போந்தான் :- பெதும்பை


                                            பெதும்பை

218. யிவண்மற் றொருத்தி யெவர்க்குந் தெரியாப்
         பவளத் தமுதுதரும் பாவை :- தவளத்

219. திருப்பாற் கடற்பிறந்து செந்தா மரைமேல்
        இருப்பார்க்கு நேரே யிளையாள்:-விருப்புடனே

220. ஆர்க்கும் அளிகள் அவிழ்பத மீதென்று
          பார்க்குமுகை போலும் பருவத்தாள்:-ஆக்கமுடன்

221. போராக்கு மாமதனன் போதும் பவனிக்குத்
        தேராக்க வெண்ணுஞ் செழுந்தென்றல் :- வேரிநறு

222. போது புனைவதற்கும் பூணாரம் பூண்பதற்கும்
        ஆதரவு வைக்கு மளவினாள் :- ஆதிமதன்

223. பேறும் மடநாணும் பெண்மைப் பெருமிதமும்
        வீறுஞ் சிறிதரும்பு மெய்யினாள்  :- சீறியெரி

224. யூட்ட மதின்மூன் றுழிநிகழ்ந்த வண்ணம்போற்
         கூட்டி முடிக்குங் குழலினாள் :- வேட்டவர்தம்

225. புந்திகவர் வஞ்சனையும் பொய்யுங்கொலையுமிடம்
         வந்துவந்து பார்க்கு மதர்விழியாண் :- மைந்தர்

226. உகமை யழகோடே யுள்ளரும்புங் கஞ்ச
       முகையின் முகைபோல் முலையாள் :-இகுளையர்தம்

227. மீளாத காதல் விழைவுரைக்கும் போததனைக்
        கேளா தவர்போலக் கேட்டிருப்பாள் :- கேளாய

228. மாதரு மானு மயிலும் பசுங்கிளியும்
         ஓதிமஞ் சூழ வுடன்போத :- மாதவிப்பூம்

229. பந்தரிட்ட நீழற் பளிக்குச் சிலாதனத்து
        வந்திருப்ப வெற்றி மடமாதர் :- உந்திக்

230. குவளை மலரிருகண் கொங்கைக் குறியிட்ட
         பவள மலையினையும் பாடித் :- தவளநகை

231. யன்னை யறஞ்செய் அறச்சா லையும்பாடிக்
        கன்னி யினிதாடுங் கழங்கென்னக் :- கன்னிதனக்

232. காழி தருமுத்த மாகாதென் றவ்வூரில்
         ஏழுநதி முத்த மினிதெடுத்துச் :- சூழ்தேரிற்

233. றட்டு நிகரல்குற் சங்கிலிபாற் றூதுதமை
         விட்டவர்பாற் பெற்ற விழியொன்றும் :- வட்டித்துப்

234. பாத மலர்துதித்த பட்டவா ணன்றனக்குக்
        காத லுடனளித்த கையிரண்டும் :- பூதத்து

235. இகலொழிய நின்று மிருந்துங் கிடந்து
        முகிலுறையுந் தானங்கண் மூன்று :- நகிலால்

236. இலங்கு வரிவளையா லிவ்விரண் டாய்த்தம்மேல்
        நலங்கொள் தழும்பொரு நான்குந் :- துலங்க

237. வுமைக்கமைத்த பொற்கோயி லூழி முதல்நாள்
       அமைத்தன கோணங்கள் ஐந்தும் :- அமைத்தோள்

238. இளைக்கு மருங்குல் ருநாழி நெற்கொண்
        டளிக்குஞ் சமயங்க ளாறுங் :- குளிப்பார்

239. செறியும் பவக்கடலைச் சிந்தித் திரையால்
        எறியும் புனிதநதி யேழும் :- பிறைநுதலாள்

240. அன்பொடுபா டிக்கழங்கை யாடுகின்ற வெல்லைக்கண்
         என்பொருபெண் ணான வெழினகரும்:- அன்பனுளம்

241. அன்றொருத்திக் குண்மை யறிவித்துத் தாமகிழ்க்கீழ்ச்
         சென்றொளித்து நின்ற திருநகருஞ் :- சென்று

242. முதுககன கோளத்து முற்பட்ட கூத்தின்
         பதும மலர்ந்த பதியுங் :- கதிராழிக்

243. காவித் திருநிறத்தோன் கைகுவித்து நின்றெதிரே
         சேவித்து நிற்குந் திருப்பதியுந் :- தாவுபரி

244. மல்லற் றொடைத்தொண்டை மான்கடவுந் தேரையொரு
        முல்லைக் கொடிதடுத்த மூதூரு :- நெல்விலைக்குச்

245, சற்றளந்த நாட்புகலிச் சைவப் புலவனுக்குக்
        கொற்றளந்த மாடக் கொடிநகரும் :- பெற்றதொரு

246. தாயுமிலை யென்னுந் தமது குறையையொரு
       தூய கழைதவிர்த்த தொன்னகரும் :- வாய்கலசம்

247. ஆட்டி யினிமை யறிந்தவூ னெச்சிறனை
         யூட்டிய வேட னுறைபதியுஞ் :- நாட்டிலுள

248. வெண்ணி லமணரெலா மேறக் கழுவிலொரு
        பெண்ணை யியலறிந்த பேரூரும் :- விண்ணவர்தஞ்

249. சாத லுறைநாளுஞ் சாகாத புள்ளிரண்டுந்
        தீதகல வாழுந் திருமலையுந் :- தூதுதமை

250. யோட்டுந் திருநாவ லூராற் கிரந்திட்டுப்
         பாட்டுண்ட வூரும் படைத்துடையான் :- சூட்டு

251. வெருவும் வரியரவும் வெண்டலையு மாறு
        மருவு முடிக்கம்ப வாணன் :- ஒருபுத்தன்

252. செங்கல் லெறிக்குச் சிவலோக மீந்தபிரான்
        றுங்க மணிமறுகு தோன்றுதலும் :- பைங்கொடியும்

253. ஆடுங் கழங்குதவிர்த் தாயத் துடன்கனக
         மாட நெடுவீதி வந்தணுகிக் :- கூடப்

254. பணிந்து பரவிப் பகுவா யரவ
        மணிந்த திருத்தோ ளழகு :- மணங்கமழும்

255. பொன்னான மார்பும் புனையும் புரிநூலு
        மன்னான காதல் வரநோக்கி :- மின்னுந்

256. திருந்திழையீ ரிந்தத் திருமேனி தன்னில்
         இருந்ததழும் பென்னதழும் பென்றாள் :- புரிந்தவரும்

257. மின்னே கிளியே விளங்கிழையே யன்னமே
         யன்னே யிதனை யறியாயோ :- தன்னருளாற்

258. பாராட்டி வையம் பதினாலையும் வளர்க்கும்
        பேராட்டி மாதவத்தின் பேறுகாண் :- வாரிதிசூழ்

259. வைய முழுதறிய வாங்குஞ் சிலைமாரன்
         எய்யுங் கணைபடைத்த வேற்றங்காண் :- துய்யகுழற்

260. பண்பிறந்த சொல்லாய் பலசொல்லி யேனிந்தப்
         பெண்பிறந்தார்க் கெல்லாம் பெருமைகாண்:-மண்பரவி

261. யேத்து மிறையா ளிருகொங்கை யால்வளையாற்
          சாத்திய கோலத் தழும்புகாண் :- பார்த்தருளாய்

262. என்னு மளவி லிலங்குமனத் துட்காதல்
         பொன்னனைய மெய்யிற் புறம்பொசியக்:-கன்னிவெயில்

263. தீண்ட மலர்வதொரு செந்தா மரைமுகைபோற்
        காண்டகைய செவ்விக் கவின்படைத்தாண்:-மீண்டரனுங்

264. கோல மயிலைக் குறிப்பாற் கடைக்கணித்தாற்
         போல முறுவலுடன் போயகன்றான் :- மாலைமதன்

265. செங்கை வரிசிலையைச் சேரத் தொடைமடக்கி
         யெங்கள் பெருமானோ டேகினான் :- மங்கை

                                                           மங்கை

266. புடையோத ஞாலமெலாம் போர்மதனன் வேதக்
         கிடையோதி விக்குமொரு கிள்ளை :- விடமும்

267. வளருங் கொடுங்கொலையும் வஞ்சனையும் பொய்யுங்
        களவுங் குடிபுகுதுங் கண்ணாள் :- தெளிதேனுஞ்

268. சீல வுததி யமுதுஞ் செழும்பாகும்
         பாலு முதவும் பனிமொழியாள் :- மாலுதவு

269. மிக்க திருவழகின் வெள்ளத் தெழுந்தவிரு
        மொக்கு ளனைய முலையினாள் :- மைக்குழலிற்

270. பூவின் மிகுபொறையாள் பூணார மென்முலையாள்
         நோவ வடியிட்ட நுண்ணிடையாள் :- ஆவிபெற

271. வார்வ முளதாக வாடவர்தன் மேல்வைத்த
         பார்வை யறியும் பருவத்தாள் :- சேரச்

272. சுடருற்ற பூவளைக்கைத் தோழியருந் தானு
         நெடுமத்த வாரணத்தி னின்று :- விடையோன்பால்

273. அன்னத்தைத் தூதுவிடவங்கையிற் கொண்டனள்போற்
          பன்னித் திலநிரைத்த பந்தேந்தி :- யன்னதுதான்

274. பாவை யொருபாகன் பாலணுக மாட்டாமற்
         போவதுவு மீள்வதுவும் போற்றோன்ற :- மேவி

275. நெறிந்திருள் கொண்டை நெகிழ்ந்து ததும்ப
         நறும்புழு கின்கண் நனைந்து :-  செறிந்து

276. சுரும்பி னினங்கள் சுழன்று சுழன்று
        நரம்பென வெங்கு நணுங்க   :-  விரும்பி

277. யிடுங்குழை யஞ்ச வெறிந்திரு கண்கள்
        நெடுங்குமி ழின்க ணெருங்க :- வடங்கொள்

278. மனங்கமழ் குங்கும வண்ட லணிந்து
        கணங்கணி கொங்கை துளங்க :- வணங்கி

279. மருங்கு தளர்ந்து வருந்த வருந்த
         இருங்கலை கொஞ்சி யிரங்க :- நிரம்பி

280. யிலங்கு பதங்க ளிடுந்தொறு நின்று
         சிலம்பு சதங்கை சிலம்ப  :- நலந்திகழும்

281. வல்லியினி தாட மடவா ரணைந்துமலர்
         வில்லி புரிவித்த மெய்த்தவமே :- நல்லமட

282. மானே கலாப மயிலே மலர்பொதியாத்
         தேனே திரையளித்த தெய்வமே :- கானேயுங்

283. கோதை யிதழ்வாய்க் கொடியே நமக்கிந்தப்
          பாவியிடை செய்த பகையுண்டோ :- மேவியுடன்

284. மன்னுஞ் சிறையன்றின் மன்றிற் பனைமடன்மே
        லின்னஞ் சிலநா ளிருந்தாலோ :- முன்னமே

285. வென்றே யிருக்கும் விழியுடனே யுள்ளபகை
         யின்றே மதன்முடிக்க வெண்ணமோ:-வென்றிமதன்

286. சேரும் வளைமலராற் றீண்டப் பெறும்வாழ்வில்
        ஆரமணிப் பந்துக் கமையாதோ :- பாருலகில்

287. தாவில் தகைமைத் தபோதனர்தங் காலத்தே
         யாவி யுடனிருந்தா லாகாதோ :- பாவா

288. யமையும் மையுமெனு மவ்வளவிற் றேர்மே
         லுமையொரு பாக முடையோன் :- சமரமுக

289. வீரனுக்கு மெய்யன்பான் மேவுந் திருநீற்றுச்
        சேரனுக்குஞ் சோழனுக்குந் தென்னனுக்கும்:-ஊரனுக்கும்

290. ஆரணற்கும் வாசவற்கு மல்லாத தேவருக்கு
         நாரணற்கும் மேனோர்க்கும் நாதனார் :- போர்முகத்தி


291. லாமநாட் கொண்டதலை யாட்டுத் தலையாக
         மாமனார்க் கீந்த மருகனார் :-  தாமாக

292. விங்கெமையாட் கொள்ள வெழுந்தருளப் பெற்றோமென்
        றங்குளமின் னார்கண் டகமகிழச் :- செங்கேழ்

293.  வயங்கு மணிமாட மாமறுகிற் றோன்ற
          வியந்தமணி பந்தாடல் விட்டு :- நயந்தணுகித்

294. திண்டோளு மார்புந் திருநீல கண்டமுங்
        கண்டோரை வாழ்விக்குங் கண்மலருங்:-கண்டிறைஞ்சித்

295. தூய பவளந் துவளுற்றா டோழியருந்
        தாயரு நிற்கத் தலைப்பட்டாள் :- தீய

296. வெறியு மழுவுடையா ரிம்மாதின் காதல்
         சிறிது முணரார்போற் செல்லக் :- குறைவில்

297. மறை புகலும் பூசை மனுவா லயத்தி
         லுறைதிரு வேகம்ப முடையீர் :- செறியிருளிற்

298. பந்தணுகுஞ் செங்கைப் பரவைபாற் சங்கிலிபால்
         வந்துழலுந் தூது மறந்தீரோ :- நொந்தொசியுஞ்

299. சிற்றிடை புல்லத் திருமார் பகங்குழைந்தீர்
          நெற்றி விழியுடையீர் நீரன்றோ :- வொற்றியூர்ப்

300. பெண்ணோ வறிவார்தம் பேரின்று தொட்டுமக்கு
        விண்ணோர் பெருமானே வேண்டாவோ:-வண்ணம்

301. அமைந்தாரார் காதலினா லார்தலையிற் பெண்ணைச்
         சுமந்தாரார் மற்றுமைபோற் சொல்லீ :- ரமைந்து

302. துகைத்து மதுகரத்தாற் றோடுழுதார் தந்து
        நகைத்துமுகம் பார்த்து நடவீர் :- முகத்திலிவை

303. கண்ணன்றோ வெப்படியுங் காதலித்தா டானுமொரு
        பெண்ணன்றோ கச்சிப் பெருமானே :- யெண்ணில்

304. இருக்கிலறஞ் சொன்னீ ரெனுமாதை விட்டுத்
        திருக்கடைக்கண் வைத்தவர்போற் செல்ல:-வொருக்காலு

305.  மேவுண் டறிகிலளென் றெண்ணாதே யேவுண்டால்
         ஆவி படுவ தறியாதே :- பாவி

306. விறல்வேள் சிலையம்பு விட்டான்றன் னம்பின்
          மறல்வேல் விழியாண் மனத்தே :- பிறைமுடியார்

307. பாதி கருகப் படுபஞ்ச பாணமதிங்
        கேது படுத்தா திளையாளைக் :- காதலுக்குச்

308. சங்கம் விழுமென்றுந் தாழ்கலைநில் லாதென்றும்
        அங்கம் பசலைநிற மாமென்றுந் :- திங்கணிலா

309. ஈரஞ் சுடுமென்று மேழிசைவேய் தீயென்று
         மாரஞ் சுடுமென்று மன்றறிந்தாள் :- சோர்வுற்

310. றடங்கு மறிவினளா யன்னையர்தந் தோண்மேற்
         றடங்கண் மயிறளர்ந்து சாய்ந்தாள் :- மடந்தை


                                                         மடந்தை


311.  இளையார் மனம்வளைய வெய்யுமதன் செங்கோல்
         வளையா வகையசையும் வல்லி :- யளகநறை

312. தேங்கு கருமுகிலுஞ் செவ்வாய் முருக்குமொளி
          தாங்குபுரு வத்திந்த்ர சாபமு :- மாங்கழையும்

313. வாய்ந்த மொழிக்குயிலு மைக்கட் கருவிளையும்
          பூந்தரளஞ் சேர்கழுத்துப் பூங்கமுகு :- ஏய்ந்தநகை

314. முல்லை நகையு முலைக்கோங்குங் கைக்காந்தள்
         மல்லல் மலரும் வரிச்சுணங்கா :- மல்லிமல

315. வேங்கையுஞ் சாயல் மயிலும் வியனழகுந்
         தாங்கு திருநிறத்த சண்பகமும் :-  வாங்குமிடை

316. மின்னும் பதச்சூத மென்குழையுங்கொண்டொன்றாய்
         மன்னியகார் வேனிலுடன் வந்ததென:-மின்னுசுதை

317. பக்க நிலவெறிக்கப் பத்மரா கத்துவெயின்
         மிக்க வரங்கத்து மேனின்று :- முக்கணனைத்

318. தேவர் நெருங்குந் திருமயா னம்பார்த்துத்
          தாவில் திருமேற் றளிபார்த்து :- மேவி

319. யரன்விடா தாளு மனேகதங்கா பார்த்துப்
         பரவுங்கா ரைக்காடு பார்த்துப்:-பெரிதிறைஞ்சிக்

320. கங்கைகொண்டான் மண்டபமுங் கண்டு மனமகிழந்து
        மங்கைகொண்டான் வாழு மனைபார்த்துத் :-திங்கண்

321. முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன்
         படைத்துலா மண்டபமும் பார்த்து:-விடைக்கொடியோன்

322. கச்சா லையும்பார்த்துக் கம்பர்தம் பாடியெனும்
        பொற்சா லையும்பார்த்துப் பூவைமொழிப் :- பச்சைநிறச் 

323. சைவ முதல்வி தவஞ்செய்யப் பெற்றதொரு
          தெய்வவுல காணித் திருக்குளமுந் :- துய்ய

324. வறச்சாலை யும்பார்த் தறுசமயம் வாழும்
          புறச்சாலை யும்பார்த்துப் பூவை :- சிறப்புடைய

325. விந்நகர்போ லெந்நகரு மில்லையிமை யோர்பதியு
         முன்ன வரிதிதனுக் கொப்பென்ன :- வன்னநடை

326. மானே யிதன்பெருமை வல்லவரார் சொல்லுகைக்குத்
        தானே யுவமை தனக்கல்லான் :- மானார்கட்

327. பொற்றொடியாள் கண்ணுதலைப் பூசித் தறஞ்செய்யப்
         பெற்ற திதுபோற் பிறிதுண்டோ :- மற்றிவளுக்

328. கந்தமுத லில்லாத வாதியொரு மாவடிக்கீழ்
        வந்துவெளிப் பட்டநகர் மற்றுண்டோ :- நந்தா

329. மருக்காவின் மூன்று மணிவிளக்கு மன்னி
         யொருக்காலு நீங்கா துறையுந் :- திருக்காமக்

330. கோட்ட மெனிலிங்கே குலவுங் கனகமழை
         யீட்ட முகில்பொழிந்த திவ்விடத்தே :- கூட்டியபே

331. ராசையுடன் மால்பத் தவதாரந் தம்மிலும்வந்
        தீசனைப் பூசித்த திவ்விடத்தே :- பேசுநல

332. மொன்று புரிந்த தொருகோடி யாகுமிதில்
          என்று மொழிகின்ற வெல்லைக்கண் :- மன்றற்

333. றிருக்கொன்றை மாலையளி செவ்விமண முண்டு
         தருக்கிய நாதந் ததும்ப :- வெருக்கமலர்

334. பாயுஞ் சடாடவிமேற் பாகீ ரதிமுகங்க
          ளாயிரமும் வீசி யலையெடுப்ப :- வோயா  (து)

335. அருகிலிரு பாலு மருமறைக ணான்கும்
         பரிகலமு மாலையுடன் பாட :- வொருதன்

336. றிருக்கைத் தமருகத்துத் தெய்வச் சுருதி
        பெருக்கத் திசைமுகத்திற் பெய்ய :-விருப்பொடரி

337. தேடுந் திருவடியிற் செம்பொற் சிலம்போசை
          யூடுங் ககனத் துலாய்நிமிர :- நீடு

338. நடஞ்செய் தருள்காக்கு நாயகரும் வானந்
         தொடும்பொன் மணித்தேருந் தோன்ற:-கொடுங்குழையாள்

339. கோதை யசையக் குழலசையக் கோல்வளைக்கை
         மாதர் பலருடனே வந்திறைஞ்சிச் :- சோதி

340. மிகக்கருணை யெப்போதும் வீற்றிருந்த செவ்வி
        முகத்தழகைக் கண்ணால் முகந்தாள் :- நிகர்ப்பில்

341. தவளத் திருநீறுஞ் சந்தனமுந் தோய்ந்த
         பவளத் திருத்தோள்கள் பார்த்தா :-  ளிவளும்

342. மலர்மார்பி லாசையெலாம் வைத்தாள்மைக் கண்ணீர்
         புலராம னெஞ்சம் புலர்ந்தா :- ளுலகுண்ட

343. திண்பால் விடையீர் திருத்தோ ணலங்கண்ட
         பெண்பாவி யாவி பெறுமாறு :- கண்பாரீர்

344. என்றபொழு திற்கச்சி யேகம்ப ரேகுதலு
          மன்றன் மலர்சொரிய மாரவேள் :-  நின்றயர்ந்த

345. தத்தை மொழிக்குயிலைத் தாய ரெடுத்தணைத்துச்
        சித்ரமணி மண்டபத்திற் சேர்வித்து :- முத்தினொரு

346. பந்தரு மிட்டார் பனிநீ ரையுஞ்சொரிந்தார்
        செந்தளிரின் பாயலின்மேற் சேர்த்தினார் :- சந்தனமும்

347. பூசினார் கொண்டமயல் போமோவென் றாயிரமும்
        பேசினார் தாயார் பெரிதிருந்து :- கூசாதே

348. தண்ணென் கழுநீருஞ் சாத்தினார் பார்த்தயலார்
        எண்ண முமக்கொன்று மில்லையோ :- வொண்ணுதலீர்

349. முத்தினொரு பந்தன் முழுநிலா வீசுநிழல்
         நித்தருறை தேமா நிழலாமோ :- பித்துளதோ

350, வாசப் பனிநீர் மணலை யவராகப்
         பூசித்த வாற்றின் புனலாமோ :- பாசிழைக்குப்

351. பாயல் குளிரி படுத்தாலப் பாய்விடையோன்
        கோயிலிள மாவின் கொழுந்தாமோ :- நேயமுள

352. பொற்றொடி நல்லீர் புனைசந் தனச்சேறு
        நெற்றி விழியவர்த னீறாமோ :- கற்றறிவி

353. னூற்றா யிரநீர் நொடித்தா லவையிவளுக்
        கேற்றார் திருவஞ் செழுத்தாமோ :- மேற்றான்

354. பிணைந்த வணிகழுநீர் பெய்வளைக்குக் கம்ப
         ரணிந்த திருக்கொன்றை யாமோ:-வணங்கனையீ

355. ரென்று மொழிய இவையவை யாயினபோல்
         நின்றதிவ ளாவி நீங்காம :- லன்றே

356. தெரியவே யாவர்க்குஞ் சிந்தா குலமு
          முரையுந் தெளிவுதர லுற்றாள் :- அரிவை


                                                        அரிவை


357. கமல மலர்சுமந்தாள் கட்டழகு மேனாள்
         அமுதமுடன் வந்தா ளழகுஞ் :- சிமயமிசைக்

358. கூசி மழைதவழுங் கொல்லிக் கிரிபடைத்தாள்
        பேச வரியதொரு பேரழகும் :- வீசுமிளந்

359. தென்றலும் வென்றிச் சிலைமாரன் னைங்கணையு
         மன்றலுமொன் றான வடிவினாள்:-பொன்றுமொரு

360. காலமும் பர்த்துக் கயிறும் பிடித்தொருவன்
         சூலமு மேந்திச் சுழலாமன் :- மால்செய்(து)

361. உலவா நகையா வொசியா வசையா
        குலவா வுயிருண்ணுங் கூற்று:-தலைவிக்கைங்

362. கோணம் பெறவகுத்த கோயில்போல் யாவரையுங்
         காணுந் தொருமயக்குங் காட்சியாள் :- பேணி

363. மகிழ்வுற்ற வாயமுடன் வண்டரள மாலை
         திகழ்சித்ர மண்டபத்திற் சேர்ந்து :- மகர

364. விடந்தோய் விழியங் கெழுதி யவையெல்லாம்
         நெடும்போது பார்த்தகலா நிற்ப:-வடைந்தெவரு

365. மின்ன திதுவிதுவென் றெங்களுக்குக் காட்டியரு
        ளன்ன நடையா யடைவிலென :- மின்னிடையீர்

366. வெள்ளிமலை நீங்கி விண்ணோரு மண்ணோரு
         முள்ளும் பிரானை யுமையாள்போ :- யுள்ளமிகத்

367. தாங்காத பூசைக்குத் தக்கவிட மீதென்று
         நீங்காது நின்ற நிலைபாரீர் :- தேங்கமழும்

368. காவி புடைசூழ்ந்த கம்பா நதிப்புனலிற்
        பாவை படியும் படிபாரீர் :- கோவையிதழ்

369. ஓசை யளிக ளுலவம்பி காவனத்தில்
         வாசமலர் கொய்யும் வகைபாரீர் :- பேசரிய

370. வாதி யமர ரறியா வவராக
         மாதுகுவித்த மணல் பாரீர் :- கோதை

371. யணியு மிருளோதி யன்பொடு பூசித்துப்
        பணியும் வழிபாடு பாரீர்:- இணையிலிமுன்

372. மேவு புளகமுடன் வெண்ணீறு மெய்க்கணிந்து
        தேவி யிருந்த செயல்பாரீர் :- பூவிற்

373. கரந்து மழைபொழியாக் காலத்தே கம்பை
         பரந்து வரும்பெருக்கைப் பாரீர் :- விரிந்தபுனல்

374. மாகம் புதைய வரப்பண்ணித் தம்மையொளித்
        தேகம்பர் நின்ற விடம்பாரீர் :- தோகை

375. யரும்புனல்கண் டஞ்சியவ ராகமுறச் சென்று
        பரிந்து தழுவியது பாரீர் :- புரிந்து

376. மலைக்கு மகடன் வழிபாடு வந்து
         பலித்த பெரும்பேறு பாரீர் :- கலப்பொற்

377. றெரிவையுட னிந்தத் தேமா னிழலிற்
          பரம னிருந்தவிடம் பாரீர் :- பொருவில்

378. றிருக்கைவளை யான்முலையாற் றிண்டோளு மார்பும்
         பரித்த திருத்தழும்பு பாரீர் :- விரித்தசடை

379. யண்ணல் வெளிப்பட் டருள்வரங்கள் பாரீரென்
         றெண்ணும் புதுமை யிவையெல்லா:- மொண்ணுதலாள்

380. காட்ட வவருங் களிகூர் பொழுதிலொரு
        தேட்ட முளதாய சிந்தையளாய்க் :- கூட்டி

                                                     
                                            கிளியிடம் வேண்டினாள்


381. இருங்கரத் தேந்தி இருந்த கிளியை
          வருந்திவினை யேன்பெற்ற வாழ்வே :- யருந்தவமே

382. தேமென் குதலைதருந் தெள்ளமுதே கம்பரணி
         தாமந் தருவாய் தவிருவா :- யாமெல்லாஞ்

383. சூழு நிலவிற் சுதைநிலா முன்றிலின்யான்
         வாழும் படிநினைக்க மாட்டாயோ :- வேழந்

384. திகழும் வரிசிலையான் சேவகங்கள் காட்டும்
        பகழி நறும் பூவாகப்பண்ணா :- யிகழ்வார்முன்

385. என்னன்னை யேது மிரங்கா ளிரவுபகல்
         உன் அன்னை யுன்னை யொறுக்குமோ :- தென்னன்

386. பொருப்பிற் பிறந்து புகையாக வீசு
          நெருப்பு குளிர நினையாய் :- நிரைத்தளரத்

387. தாருங் கழுநீருஞ் சந்தனமுந் தோய்ந்தபனி
         நீருங் குளிர நினைத்திடாய்:- பேரரவச்

388. சேவின் மணிவருத்தந் தீர்த்தருளா யென்றிருந்து
         பூவை யினிதுரைக்கும் போதின்கண் :- டேவருய்ய

389. ஆலமினிய வமுதாக வுண்ட பிரான்
         கோல மறுகு குறுகுதலு :- நீலவிழி

390. தூதுவிடக் கிள்ளைக்குச் சொல்லுவதெல் லாமறந்து
         காதலுடன் வந்தவனைக் கைதொழுது :- நீதிபுரி

                               
                                             ஏகம்பரை வேண்டுகின்றாள்


391. யிந்தமலைப் பாவை யிடப்பாகங் கொண்டுமக்குத்
          தந்தவலப் பாகந் தரலாமோ :- வெந்தைபிரான்

392. கங்கைத் திருமுடிமேற் கண்ணியலால் வெண்ணீறு
         தங்குபுயக் கொன்றை தரலாமோ :- சங்கரா

393. வெம்பாக நீரணைந்தா லிவ்வுடம்பிற் பச்சென்ற
         செம்பாகம் வந்து சிவக்குமோ :- நம்பாநின்

394. சோதி மணிமுடிமேற் சோமப் பனிக்கொழுந்தை
         மோது முதுதரங்க மோதாதோ :- வோதாயென்

395. றாதியுடன் சொல்ல வறம்வளர்க்கு மூருடையா
         னேது முரையா னெழுந்தருள :- மாத

396. ரறிந்து மகவை யளித்தவர்க ளாக்கிச்
         சொரிந்த கறியமுதுஞ் சோறு :- மருந்தா

397. விருப்பினொடு செங்காட்டில் வேண்டும் பொழுதோ
         திருப்பவளச் செவ்வாய் திறப்பீர் :- விருப்பால்

398. வளைந்த திரிபுரத்தை மாள்விக்கும் போதே
         குளிர்ந்த திருமுறுவல் கொள்வீர் :- துளங்குநில

399. முத்த வரிசிலையான் மொய்ம்பூங் கணைபுகுந்து
         தைத்தபொழு தோதிருக்கண் சாத்துவீர் :- மெய்த்தக்

400. கொடிய விடஞ்சுரரைக் கொல்லும் பொழுதோ
         வடைய வருளுடையீ ராவீர் :- மடமாத

401. ருற்றதுயர் கேட்பதற்கொன் றோதாது போகின்றீர்
        கற்றதிது வோகள்ளக் கம்பரே :- பெற்றவர்தாள்

402. வீசுமழு வாற்றுணிய வெட்டுமவர்க் கல்லாது
         வாசமலர்க் கொன்றை வழங்கீரோ :- பூசித்து

403. வல்லபங்கள் செய்து வழிபடுவார்க் கல்லாது
         புல்ல வொருவர் பொருந்தீரோ :- சொல்லீர்

404. ஒருவா சகமென்ன வோராது போலப்
         பொருமா ரனைநிறுத்திப் போனார்  :-
 தெரிவை


                                                 தெரிவை


405. யொருத்தி தவக்குறும்பை யோட்டியுல கெல்லாந்
         திருத்தி மதனடத்துஞ் செங்கோ :- னிருத்தனார்

406. தூதுவிடச் சங்கிலிபாற் றோழனுக்குத் தாமுழன்ற
         போதிதுவென் றெண்ணும் புரிகுழலாள்:-ஆதிரையான்

407. வெண்டிரைநீர் வேணிக்கு வேறுமொரு திங்கணமக்
         குண்டெனவென் றெண்ணு மொளிநுதலாள்:-துண்டமதி

408. வேணி யுடையோன் மிடற்றி லடக்குதற்கும்
          பாணி மிசையசையப் பண்ணுதற்கும் :- பாணந்

409. தொடுப்பதற்கும் பார்ப்பதற்குஞ் சூழ்கழற் காலன்மேல்
          விடுப்பதற்கு மெண்னும் விழியாள் :- விடைக்கொடியோ

410. ராய பிறப்பை யணுகா தவருடைய
          தூய பிறப்புணர்த்துந் தோளினாள் :- நாயனார்

411. சேமச் சிலையுஞ் சிலையு மிவையென்று
          தாமுட் குறிக்குந் தனத்தினாள் :- மாமழுவோன்

412. தென்றல் படக்குழைந்த தேமாவின் கொம்பரிது
         வென்று திருவுள்ளத் தினிதெண்ண :- வொன்றாகத்

413. துய்யவளைக் கையுந் துவர்வாயுஞ் சோதிதிகழ்
         மெய்யு நிறமும் விளங்குவான் :- மொய்யமரிற்

414. றாவும் விடையுடையான் றன்மேன் மலர்வாளி
         யேவுமதனை யெரித்த நாண் :- மேவுற்

415. றெழும்புகையும் வானமு மென்ன வுரோம
         வொழுங்கு மிடையு முடையாள் :- தொழுஞ்சுரரைக்

416. காக்கு மிடற்றார்க்குக் கச்சாதல் காப்பாதல்
        ஆக்க நினையுமக லல்குலாள் :- நோக்கிதய

417. தூவி மயிலனையார் சூழ வொருகமல
         வாவி யருகு மகிழ்ந்திருப்ப :- மேவியயில்

418. உண்கண் விறலி யொருத்தி செழுங்களபக்
         கொங்கை யிணைப் படைத்த கூற்றமே:- யெங்குமளி

419. நின்றோ லிடுகின்ற நீள்வனசக் கோயிறனக்
         கின்றோ குடிபுகுத விட்டநாள் :- ஒன்றாக

420. விஞ்ச வழகுடையார் வீற்றிருப்ப தல்லாது
         கஞ்ச மலரொருத்தி காணியோ :- வஞ்சாதே

421. யிந்த வழகல்லா லேந்துமோ கஞ்சமலர்
        தந்த வழகு தனையென்று :- செந்திருமுன்

422. சென்று பணியத் திருவால வாயுமணி
         மன்றுமொரு கடவுண் மாநிழலும் :- என்றும்

423. விரும்பி யுறைமழுவாள் வீரன் றசாங்கம்
         இருந்து விறலிபா டென்னத் :- தெரிந்தபெரும்

424. பாகுபல வுடையான் பாட்டுக் கொருவடிவான்
        றியாக முதவுந் திருமலையு :- மாகம்

425. பெருக்கு மறுகும் பிறைக்கொழுந்தும் பாம்பும்
         எருக்கு முடித்தமண லியாறும் :- விருப்பொடர

426. னந்தண் பெருந்துறையி லாளுடையா ரம்மணலில்
         வந்து சிறந்த வளநாடுஞ் :-  சந்தும்

427. வடங்கொ ளிளமுலையால் வானோ ரறியா
         வுடம்பு குறிபெற்ற வூரும்  :-  தொடர்ந்தவரி

428. நீலம்போற் கண்ணார் நிறமெல்லாந் தன்னுடைய
         கோலம்போ லாக்குங் குளிர்தாரும்  :-  ஆலிலையிற்

429. சேக்கைப் புயலின் றிருநாபி யிற்பனவன்
          வாக்கிற் பிறந்த வயப்பரியு  :-  நோக்கித்

430. திரண்டா யிரங்கயிலை செல்வதெனத் தோன்று
         மிரண்டா யிரங்கோட் டிபமும்  :-  நெருங்கு

431. கடிக்கற் பகவனத்தைக் காசினிமே லாயர்
         கொடிக்குக் கொடுத்த கொடியுங் :- துடிக்கண்

432. தழங்கு சதியுடையான் றாண்டவத்துக் கேற்ப
         முழங்கு திருக்கை முரசுந் :- தொழும்பா

433. லடுத்து சுரர்பரவ வண்டாண்ட மெல்லாம்
        படுத்ததிரு வாணையுமே பாடத் :- துடிக்கவிதழ்

434. நெஞ்சு தளர்ந்து நெறிமயங்கி நீடுயிர்த்து
         வஞ்சி யறிவழிந்து மாலாகி :- யஞ்சாதே

435. ஆகம் பிரியா வவளை யறியாமல்
         ஏகம்பர் தாமேவந் தெய்திலேம் :- மோகங்கொண்

436. டார மருவி யகன்மார்பி லென்னையவர்
        சேர வரவணைக்கத் தேடிலேம் :- பாரடையத்

437. தாவும் விடையுடையோன் றன்மேற் றனத்தழும்பு
          மேவுங் கலவி விளைக்கிலேம் :- பூவின்றும்

438. பாகி லணுநலம் பாராட்டி யென்னையவர்
        ஆராய புலவி யகற்றிலேம் :- நேயமுடன்

439. போக வுததியினிற் புக்கழுந்தி நெக்குருகி
       யாக மிருவருமொன் றாகிலேம் :- ஆகத்

440. தணைத்த தறிய வவரணிந்த நீறென்
         பணைத்த முலைமேற் படிலேம் :- மணிக்களத்தா

441. ரின்று மணந்தபடிக் கென்னுடம்பு சான்றாகக்
         கொன்றை மணநாறக் கூடிலேம் :- என்றிருந்து

442. வாழும் படிதன் மனத்திற் பிறந்ததெல்லாந்
         தோழி யுடனிருந்து சொல்லுங்காற் :- சூழு

443. நெருக்கார மாலை நெடுநிலா வீசுந்
          திருக்காவண நிழலிற் சேயுந் :- திருத்தாள்சேர்

444.  சீலம் படைத்துத் திருநீ றிடவயிற்றிற்
          சூலை கொடுத்தாண்ட தொண்டனும் :- ஓலையுடன்

445. சென்று தடுத்து திருவெண்ணெய் நல்லூரி
         லன்று படைத்த வடியானுங் :- கொன்றை நறுந்

446. தேன்பாய் முடிமேற் றிருச்சேய்ஞலூர் தன்னி
          லான்பால் சொரிந்தாட்டு மந்தணனுந்  :- தேன்போலத்

447. தித்திக்கு மாறு திருவா சகஞ்சொன்ன
         பத்திப் பெரும்பெருக்குப் பாலனு :- மெத்திசையுஞ்

448. செல்ல வரிய சிவதத் துவமல்லா
         தில்லையென வெழுதி விட்டோனு :- நல்லதவஞ்

449. சூழ்வாருஞ் சூழ்ந்துவரச் சூதத் திருநிழலின்
         வாழ்வோன் மணிமறுகில் வந்தணுகத் :- தாழ்குழலு

450. முற்ற நினைந்தவெல்லாம் முன்வந்து கைபுகுதப்
         பெற்றவள்போல் வந்து பெரிதிறைஞ்சி:-பொற்றொடியாள்

451. துய்ய புரிநூலும் தோளும் திருமார்பும்
         மையல் பெருக வரநோக்கித் :- தையலாள்

452. ஈசன்தன் மார்புநல் எண்தோளும் நீங்காத
         வாச நறுங்கொன்றை மாலையே :- பாசறையில்

453. வீசு பனிநீரும் மிக்க அகில் சந்தனமும்
        பூச உனக்குப் பொறுக்குமே :- வீசிவரும்

454. போதாரும் தென்றல் புகுதுகைக்கு மாளிகையின்
          வாதா யணந்திறந்து வைப்பையே :- நாதம்

455. அளவே அளவேயென்(று) ஆயரிரா ஏதும்
         துளைவேய் உனக்குச் சுடாதே :- குளிர

456. அடுத்த செழுங்கரீ ராலே படுத்த
         படுக்கை சருகு படாதே - கடக்கவரி (து)

457. ஆயவிரி கங்குல் அடல்மா மதன்சொரியும்
         சாயகங்கள் உன்மீது தையாவே :- மாய இரா

458. வெண்ணிலா ஊழி எரித்தாலும் இங்குனக்குத்
         தண்ணிலா ஏதுந் தழலாதே :- நண்ணுமயல்

459. அய்ய விடையாரும் அன்னையரும் தாமொறுக்கும்
         வெய்ய உரைகேட்க வேண்டாவே :- பையவரும்

460. சேவின் மணியிசைக்கும் தீரா அலைகடற்கும்
         கூவும் குயிலுக்கும் கூசாயே :- மேவியநின்

461. முன்றில் உயர்பனையின் மூரி மடற்குடம்பை
         அன்றில் அரிக்குரற்கும் அஞ்சாயே :- என்றாலும்

462. வெய்ய பசலை விளைவானேன் மேனியெங்கும்
         துய்யமலர்க் கண்ணீர் சொரிவானேன் :- செய்யவங்கை

463. வண்டு விழுவானேன் மற்றெனக்குச் சொல்லென்று
         கெண்டை விழிமாது கேட்பளவில் :- திண்டிறல்வேள்

464. காவி ஒழிந்த கணைசொரிந்தான் அவ்வளவில்
         தேவர்கள் நாதன் தெருவகன்றான் :- பாவைமேல்

465. ஆர வடமும் அணிந்தார் குளிர்ந்தபனி
         நீரும் மடவார் நிரப்பினார் :- பேரிளம்பெண்

                                  
                                            பேரிளம்பெண்

466. திண்மை மதனன் செலுத்துகின்ற பேராண்மை
         பெண்மை யழகின் பெரும்பெருக்குத் :- தண்மலரோன்

467. நாவுமளவிறந்த ஞானத்தாற் பேரழகாற்
         பூவுமரசாளப் போதுவாள் :- தேவர்

468. அரச னிமையாத வாயிரங்கண் சூழத்
         தருநிழலில் வாழத் தகுவாள் :- விரவி

469. யினிய கலவி நலமெல்லா மதனன்
         மனைவியையுங் கற்பிக்க வல்லாள் :- கனைகடல்சூழ்

470. பாரைப் பெரிதுழைக்கப் பண்ணிப் பழையசுர
          ரூரைப் பெரிதுழைக்க வொட்டாமல் :- வாரிட்டுக்

471. கட்டுண் டனமென்று நாணிக் கவிழ்ந்துதலை
        யிட்டனபோற் சாய்ந்த விளமுலையால் :- கிட்டரிய

472. சைவப் பெருமை தமிழ் நாடறிவித்த
         தெய்வப்புலவன் றிருமுறையுஞ் :- வெவ்வமணர்

473. ஈருமத யானைக் கிடும்போது மஞ்செழுத்தைத்
         தேருமரசன் றிருமுறையுஞ் : சேரனுடன்

474. அன்று கயிலைக் கதிமதவெள் ளானையின்மேற்
         சென்றபெருமான் றிருமுறையுந் :- தென்றிசையின்

475. மாடப் பெருந்துறையில் வந்த வருட்கோலந்
         தேடித் திரிந்தோன் றிருமுறையுங் :- கூடவினி

476. தோதி யவர்கரு வுள்ளக் கருத்தினுள
         கோதி னிலைமையெல்லாங் கும்பிட்டுச் :- சோதிதிகழ்

477. அஞ்செழுத்தும் ஏகம்ப ராடுந் திருக்கூத்து
         நெஞ்சழுத்தி வைக்கு நிலைமையாள் :- மஞ்சு

478. பொருந்துமணி மாளிகையிற் பூங்கவரி வீசு
          விரும்புமணி யாசனத்தின் மீதே :- யிருந்தெவரும்

479. பேச வரிய பிரானார் திருவார்த்தை
         யாசையுடன் கேட்புழிவந் தாங்கொருத்தி :- வாசலின்க

480. நின்றா னொருமறையோ நீறணிந்த கோலமுடன்
         என்றாள் வரவிடுவை யென்றுரைத்துச் :- சென்றெதிர்கொண்

481. டங்கை குவித்தோ ரரியா சனத்தில்வைத் (து)
        எங்கடவம் வந்தவா ரென்றுரைசெய்து :- அங்கமுடன்

482. முன்னை மறைநூல் முதலாய வெக்கலையு
          நின்னி லறிவார் நிலத்தில்லை :- மின்னுசடை

483. மீச னிலைமைக்கு மேனையிமை யோர்நிலைக்கும்
         வாசி யுரைதெளியும் வாறென்னப் :- பூசுரனும்

484. என்னிலைமை சோதிக்க வென்றோ விதுசொன்னாய்
         நன்னுதலே யென்று நகைசெய்யா :- வுன்னி

485. யிதனை யிதனுடனே யெண்ணலா மென்னு
          மதனை வினவுதலே யன்றி :- மதியதனில்

486. எண்ணமிலா தார்போல வெல்லா மினிதுணர்ந்த
         பெண்ணமுதே கேட்கப் பெறுதியோ :- மண்ணுலகிற்

487. குன்றி தனையொருபொற் குன்ற முடனிகரும்
          என்று திரிவாரை யென்செயலாந்  :- துன்றிருள்போம்

488. விஞ்சு சுடருடைத்தாய் மின்மினியே வந்துதிக்குஞ்
         செஞ்சுடரி னென்பாரைச் செய்யுமதென்  :- றஞ்சமென

489. கல்லா னிழலிருந்த கண்ணுதலார் தம்முடனே
         எல்லா ரையுந்தேவ ரென்றுரைத்த   :- னல்லாயொப்(பு)

490. ஏதும் நிகரா விரும்பினையும் பொன்னினையுந்
         தாது வெனவுரைக்குந் தன்மைகாண் :- மீதுலவு

491. நீடு சுடராழி நிலத்தேரி லீரிரண்டு
         பாடு சுருதிப் பரிபூட்டித்  :-  தோடார்

492. நளினத்துப் பாக னடத்த வெரிவாய்த்
         துளவப் பகழி தொடுத்துக் :- கொளுவியநாண்

493. மூரி யரவாக மூதண்ட முந்தாங்கு
         மேரு வெனுஞ்சயிலம் வில்லாக :- வார்வமுள

494. மூவ ருயிர்வாழ முப்புரமு நீறாக
         யாவர் பொருதா ரிமையோரிற் :- றேவர்

495. பழித்த பெருவேள்வி பழாக வாள்விட்
          டழித்த விமையவர்வே றார்தான் :- இழைத்து

496. வதைப்பான் வருங்கூற்றை மார்க்கண்டர்க் காக
         வுதைத்தா ரிவரல்லா துண்டோ :- வெதிர்த்த

497. கழற்கான் மதன்மாளக் கண்மலரால் வெய்ய
        வழற்றானை யேவினா ரார்தான் :- நிழற்பொற்

498. கலையா னிடந்திட்ட கண்ணுக்கோ ராழி
         விலையாக நல்கினார் வேறார் :- நிலையாகத்

499. துன்னு மொருசிலந்தி சோணாடுங் காவிரியு
         மன்னி யரசாள வைத்தவரார் :- பன்னெடுநாள்

500. தேடி யிருவர் திரியத் தெரியாமல்
         நீடு சுடர்வடிவாய் நின்றவரார் :- ஆடலென

501. வுங்காரஞ் செய்தே யுலகுண்ட மாலயனைச்
          சங்காரஞ் செய்துபின்னுந் தந்தவரார் :- பங்கயன்மால்

502. வீந்த சுடலை விபூதி தரித்திருவர்
         ஆர்ந்ததலை மாலை யணிந்தவரார் :- மாய்ந்திடவே

503. நாரா யணருடலு நாலுமுக னாருடலுங்
         கூராய சூலமிசைக் கொண்டவரார் :- சேர

504. வெரிந்த பிறையெயிற்றி னீரைந்து வாயும்
          பரந்து செழுங்குருதி பாய :- நெரிந்தொருவன்

505. மான்று கிடக்க மலையான் மகளுடனே
         யூன்று விரலொன் றுடையவரார் :- தோன்றியடல்

506. ஓத விடமுன் டுபயநிறத் தாமரைமேற்
          கோதையர்க்குத் தாலி கொடுத்தவரார் :- மாதவனைக்

507. கூடி யயனைக் கொடுத்தவரார் மோகினிபால்
         நாடுமெழிற் சாத்தனைமு னல்கினரார் :- பாடார்ந்த

508. புத்தேளி ரென்பைப் புனைந்தவரா ரல்லினுமை
         கைத்தாளங் கொட்டநடங் காண்பவரார் :- மத்தமுறும்

509. ஆதிநெடு மாலுதிர மத்தனையுங் கைக்கலத்திற்
          பாதிதனி லேநிறையப் பண்ணினரார் :- வேதமுடன்

510. றுண்ணெனவே யாழிபுகுஞ் சோமுகனைச் செற்றிடுமீன்
         கண்ணை யுகிறாற் களைந்தவரார் :- கண்ணனார்

511. ராமைவடி வந்தனிலு மாதிவரா கந்தனிலு
          மாமுதுகோட் டைக்கரத்தால் வாங்கினரார்:- தூமறையும்

512. பேசரிய சிம்புளாய்ப் பேரா டகனையடுங்
          கேசரியை வள்ளுகிறால் கீண்டவரார் : கூசா(து)

513. தடருஞ் சலந்தரனை யன்றாழி சூட்டி
          யுடலம் பிளந்தவர்வே றுண்டோ :- படிவிண்

514. முழுதளந்த மாயன் முதுகெலும்பைச் செந்நீ
          ரொழுகவே வாங்கினர்வே றுண்டோ:- பழுதென்

515. தடமலரோ னுச்சித் தலையை யுகிரால்
         உடனே குறைத்தவர்வே றுண்டோ :- நெடுவிசும்பு

516. முற்றும் புதைத்தலையான் மோதுஞ் சுரநதியைச்
         சுற்றுஞ் சடையிற் சுவறுவித்து :- மற்றும்

517. பகீரதனின் றூழிநாட் பாதமலர் போற்ற
          மகீதலத்தே போதுவித்தார் மற்றார் :- புகழைச்

518. செலுத்தச் சிறுத்தொண்டர் தேவியறுத் தாக்கிக்
         கலத்திற் படைத்த கறியைத் :- தலைக்கிட்ட

519. சுட்டியு மாலைச் சுரிகுஞ் சியுமுத்துங்
         கட்டியை நல்குங் கனிவாயு :- மிட்டதொரு

520. வாளியுங் காது மருங்கும் மணிவடமுந்
        தாளிணையஞ் செம்பொற் சதங்கையுமாய் :- மீளப்

521. பிறப்பித் தவர்தம் பெரும்பிறப்பை யெல்லா
          மறுப்பிக்க வல்லவர்தா மற்றார் :- நறைக்கொன்றை

522. யாதி தனையொழிய வாறாறு தத்துவத்தின்
         மீது மகிழ்ந்திருக்கும் விண்ணவரார் :- மாதிற்

523. பொருந்தி விடையாகப் பூந்துழாய் மாலை
          விரும்பு நடத்தினார் வேறார் :- அரன்பெருமை

524. யின்னம் பலகோடி யில்லையோ யாமிருந்து
         சொன்ன பொழுதே தொலையுமோ :- வுன்னரிய

525. மூவா முதலா முதல்வனையு மூவுலகிற்
         சாவார் பிறப்பார்கள் தங்களையுந் :-  தேவாக

526. வொக்க நினைவாருக் கல்லவோ வோரேழு
         மிக்க நரகம் விதித்ததுகாண் :- மைக்கண்

527. மருவார் குழலியென மற்றவளு மந்தப்
        பெருவாழ் வுடைய பிரானைப் :- பரவியவர்

528. தெய்வ வெழுத்தைந்து மோதித் திருநீறு
        மெய்யி லணிய விதியற்று :- மையறரும்

529. எட்டெழுத்தை யோதி யிடுவார்மண் ணெப்பொழுதுங்
         கட்டுரைக்க வென்னக் கவுதமனா :- ரிட்டபெருஞ்

530. சாபத் தியல்பு தருமா மறையோர்செய்
        பாபக் கலிகாலப் பண்புகாண் :- கோபவிதழ்

531. மின்னே யெனச்சிறந்தும் வேதியரா கிப்பிறந்தும்
        என்னே பெருமை யிருந்தவா :- முன்னை

532. மறையினெழுத் தைந்தும் வாயார வோதி
         நிறைய வணிந்துதிரு நீறும் :- பிறவிதனை

533. வாட்ட வறியாமல் வாளாப் பிறவிதனை
         யீட்டுவதே பாவ மெனவுரைத்து :- வேட்டவெலா

534. மொண்டொடியும் வேதியனுக் குள்ள மகிழ்ந்தளித்து
         வண்டணையும் பூவணைமேல் வந்திருப்ப :- பண்டுவிட

535. முண்ட பிரான் பாகத்தொருத்தி முலைத்தழும்பு
         கொண்ட பிரானாடக் குழுவெல்லாந் :- தண்டகமா

536. நன்னாட்டுத் தேவர்க ணாயகனார் சோணாட்டின்
          முன்னாட்டு மன்றின் முதலியார் :- தென்னாட்டிற்

537. சூடு மபிடேகச் சொக்கனார் துங்கமணி
         மாட நெடுவீதி வந்தணுக :- வாடகப்பூஞ்

538. சோதிச் சிலம்புக்குஞ் சூழ்பா டகத்துக்கும்
         பாதத் தழகைப் பகிராதே :- மோதிளநீர்

539. ஆன முலையழகை யாரவிள வண்டலுக்கும்
          நானநறுந் தொய்யலுக்கு நல்காதே :- வானநிலா

540. ஆர மணித்தோ ளழகைக் கரும்புக்கும்
         ஈரமிலா வல்லிக்கு மீயாதே :- தாரைப்

541. பலவுநிரைத் தன்னதொடைப் பாளைக் களகம்
         குலவு மழகைக் கொடாதே :- கலவிநலம்

542. கொண்டதிரு மார்புங் குளிர்ந்த திருச்சாந்தும்
          வண்டணியுங் கொன்றை மலர்த்தாரும்:- தொண்டருள

543. அந்தா மரைமலரை யானந்தத் தாண்டவஞ்செய்
         செந்தா மரையுந் திருச்சிலம்பும்   :- சிந்தை

544. மகிழ மகிழ வணங்கிவளை யெல்லாம்
         நெகிழ நெகிழவெதிர் நின்று  :- சகமேற்

545. பிறவாம லெண்ணிறந்த பேரண்டம் மாய்ந்தும்
         இறவாத மேனி யிறைவா :- உறவாய்ச்

546. சிரித்து முகம் பார்த்துத் திருக்கொன்றை மாலை
         தரித்ததிருத் தோளழகைத் தாரீர் :- ஒருத்திகுறி

547. ஆக மிசையில்லை யாமாகி லிப்பொழுதே
         ஏக வுமைவிட் டிருப்பேனா :- ஆகிலுநான்

548. கட்டி யிறுகக் கலந்துருகி ஒன்றாகி
          இட்ட குறியழித்தால் யார்தவிப்பார் :- பட்டதுபண்டு

549. ஆவல்கெடப் புல்லி அகலாமல் யான்வளைத்தால்
          ஏவரெனைத் தள்ளியுமை ஏகுவிப்பார் :- மேவியெனைப்

550. புல்லி ஒருக்காலும் போகா வகைபிணித்து
          வல்ல படிகாண மாட்டேனோ :- நல்லமட

551. நாண்கொண்ட தாருவன நங்கையரைப் போலமனம்
         வீண்கொண்டு போக விடுவேனோ :- மாண்கொண்டு

552. பூத்ததிரு நீறும் புயமும் திருமார்பும்
         ஏத்து மவர்க்கருளீர் என்னென்று :- வாய்த்தசொலால்

553. ஆவதெல்லாம் பார்த்தால் அவளும் தழுவுகைக்கங்(கு)
         ஆவதெல்லாம் பார்த்தால் லவைவருமோ :- ஆவி

554. உருகும் வகைகாதத் துண்டாக நோக்கி
        விரவுநகை கொண்டேகி விட்டார் :- தரளம்

555. இடையும் நகையார் வரெழுவர் ரிங்ஙன்
        கொடிய பெருங்காதல் கொள்ள :- முடிமேல்

556. நிலாவுடையான் தேமா நிழலுடையான் சேரன்
         உலாவுடையான் போந்தா னுலா.


                                                          முற்றும்.

Related Content