திருச்சிற்றம்பலம்
காப்பு
நேரிசை வெண்பா
சாற்றரிய வாயிரக்கான் மண்டபத்தின் சார்வாக
ஏற்ற முடனே யினிதிருந்து - போற்றும்
விறல்விகட சக்ர விநாயகனை யேத்துந்
திறல்விகட சக்ரா யுதம்.
கலிவெண்பா
1. நிலம்போற்றும் பைந்துளப நீலப் பொருப்பும்
பொலம்போற்றும் போதிற் பொருப்பும்:-நலம்போற்றும்
2. மேருப் பொருப்பொருதன் வெள்ளிப் பொருப்பிலிரண்
டாரப் பொருப்புடைய வன்னமுடன் :- சேர
3. விருந்து மனமகிழ்வுற் றெப்போது மின்பம்
பொருந்தி யுறைகின்ற போதிற் :- கரந்தையினி(து)
4. தேந்துமுடி யோனுடனே யின்பநகை யாடிவளைக்
காந்தளிணை கொண்டுதிருக் கண்புதைப்ப:-வாய்ந்த
5. படியும் விசும்பும் பரிதிமதி காணா(து)
அடையு மிடையிருளே யாகி : நெடிதூழிக்
6. காலஞ் சிறிது பொழுதிற் கழிதலாற்
சீல முனிவர்க்குந் தேவர்க்குஞ் :- சால
7. மறையவர்க்கும் வேதம் வகுத்த தொழிலெல்லாங்
குறைவுபட்ட தென்றிறையுட் கொண்டு :- செறியளக
8. ஓவியமே நின்னா லுலக நெறிமுறைமை
யாவுங் குறைவுபட்ட தீங்கதற்கு :- மேவியநல்
9. வேதா கமத்தில் விதித்தபெரும் பூசைதனைப்
போதார் குழலாய் புரிகென்ன :- வீதெமக்கு
10. வாய்த்த தெனவிரும்பி வானோரை நஞ்சுண்டு
காத்தபெருமான் கழலிறைஞ்சி :- யேத்தி
11. மடமாது நின்னை வழிபடுவதற் கான
விடமாவ தேதருள் செய்கென்ன :- விடையோனுந்
12. தென்பால தான திசையிற் றிரைவீசு
நன்பாலித் தண்டகநன் னாட்டகத்து :- முன்பாக
13. வோது திருநகரி யோரேழி னுஞ்சிறந்த
ஆதி நகர்காஞ்சி யந்நகரிற் :- போதநலம்
14. மன்னி வளர்வதொரு மாவுண்டு) அதன்நிழற்கீழ்க்
கன்னி யெமையுனக்குக் காணலாஞ் :- சொன்னபடி
15. யாகம பூசை புரியவினி தவ்விடத்துப்
போகவென வமரர் போற்றிசைப்ப :- வேகிப்
16. பொருப்பரைய னேவலொடு போந்துபல கோடித்
திருத்தகு மாதருடன் சேர :- விருப்புடனே
17. தென்றிசையிற் சென்று திருவாய் மலர்ந்தவுயர்
நன்றுதிகழ் காஞ்சி நகரெய்தி :- வென்றியிபம்
18. ஒன்று குறுமுயக் கோடு மிடம்பார்த்து
நின்றுவிடுங் காஞ்சி நிழல்பார்த்து:- சென்றடைந்தோர்
19. தாம்பிறரைக் காணலாந் தம்மையவர் காணாமல்
ஆம்பரிசு நல்கு மகம்பார்த்துக் :- காம்பொன்றின்
20. மூன்று முளரி முகிழ்க்குந் தடம்பார்த்துத்
தோன்றுமலர்த் தீபச் சுடர் பார்த்துத் :- தான்றன்
21. இடத்து நிழனோக்கி யாவருங் காணாப்
படுத்து மொருகிணறு பார்த்துக் :- குடக்கோடிக்
22. காண வரிதாய்க் கரக்குநதி பார்த்தமரர்
பேணுலகத் துய்க்கும் பிலம்பார்த்துக் :- காணரிய
23. செம்பொனிற நல்குஞ் சிலைபார்த்துத் திண்காரி
வெம்பரியூர் செண்டு வெளிபார்த்துக் :- கொம்பிற்
24, கடிக்கமலப் போதுங் கழுநீருஞ் சேரப்
படைக்குமொரு பாடலமும் பார்த்து :- நடுப்புகுந்தோர்
25. தோற்றங் குரங்காக்குந் தொல்லையிடம் பார்த்ததனை
மாற்றுங் கடவுண் மடுப்பார்த்துக் :- கூற்றால்
26. இறவா இடம்பார்த் திறந்தவர் பின்வந்து
பிறவா விடம்பார்த்த பின்னர் :- செறிதரங்கக்
27. கம்பை நதியின் கரையணுகிக் காண்டகைய
பைம்பொழில்சூழ் எம்மருங்கும் பார்த்தருளி:-யெம்பிரான்
28. யாமா தரவோ டிருப்போ மெனச்சொன்ன
தேமா வடிநிழலைச் சேர்ந்தருளிக் :- கோமானை
29. நாமினிது பூசிக்க நல்லவிட மீதென்று
பூமருவு தெய்வப் புனலாடித் :- தாமாகக்
30. கம்பை மணலைக் குவித்துக் கசிந்துள்ளம்
எம்பெரு மாட்டி யினிதிறைஞ்சித் : தம்பழைய
31. சேடியர்க ணிற்பத் திருச்சூ டகக்கையாற்
றோடவிழ்பூக் கொய்து தொடுத் தணிந்து :- கூட
32. விரவுந் திருவுருவில் வெண்ணீறு நெஞ்சிற்
றிருவஞ் செழுத்துந் திகழ :- வுரிமையுடன்
33. அந்தமில் பூசையின்மே லாளுடைய நாயகிக்குச்
சிந்தை யொருப்படவே செல்லுநாள் :- இந்துநுதல்
34. ஆதிக் குலமடந்தை யன்புடைமை முன்புபோற்
சூதத் திருநிழலோன் சோதிப்ப :- மோதிக்
35. கரைபொருது கம்பைநதி கற்பாந்தந் தன்னில்
விரிகடல் போற்றரங்கம் வீசி :- யிருசுடரும்
36. விண்ணும் பொலன்சக்ர வெற்புங் குலகிரியு
மண்ணும் புதையவரப் பண்ணி :- யெண்ணிறந்த
37. வாரிடத்து மெவ்விடத்து மெப்போது முள்ளபிரா
னோரிடத்துத் தாமு மொளித்திருப்பப்:-பாரிடமு
38. மேனை யமர்நாடு மேகோ தகமாக
வானபெரும் பெருக்குக் கஞ்சாதே:-வானவர்கோன்
39. செச்சை நிகருடம்பிற் செம்பாதி யாகியதன்
பச்சை யுடம்பருமை பாராதே :- யிச்சையுடன்
40. றேசுதரும் பழைய திவ்யா கமப்படியே
பூசைதனை யொழிந்து போகாதே :- மாசிலா
41. வன்புடைமை தன்னை யகன்றா லரன்மேனி
யென்படுமோ வென்பதனை எண்ணியோ:-தன்பழைய
42. பெண்மையோ வன்போ பிறப்போ பெருங்காதற்
றிண்மையோ கற்போ தெரிகிலேம் :- உண்மை
43. மறைபடைத்த மேனி வளையான் முலையாற்
குறிபடுத்தி மார்பு குழைய : நறைபடைத்த
44. தாழ்ந்த புரிகுழலா டானாக வம்மணல்மேல்
வீழ்ந்து தழுவ வெளிப்பட்டோன் :- சூழந்தமரர்
45. மீளா வடிமை விலையா வணங்கொடுக்குந்
தாளான் அரிபிரமர் தம்பிரான் :- ஆளாய
46. தொல்லைத் திருக்குறிப்புத் தொண்டன்றலைமோதக்
கல்லிற் புறப்பட்ட கையுடையோன் :- வில்லால்
47. வசையின் முடிமேன் மதியாமன் மோத
விசையனோடு பொருத வீரன் :- பசியாற்
48. பதறியொரு சிறுவன் பால்வேண்டப் பாலின்
உததி கொடுத்த வுதாரன் :- துதிபெருகத்
49. தேவர் நெருங்குந் திருப்பங் குனித்திருநாண்
மேவிய வேத விழாவொலியிற் :- றாவிக்
50. குலாவு பலபொற் கொடிவீதி யெங்கும்
உலாவிவரு நாளி லொருநாள் :- நிலாவியசீர்
51. எவ்வா னவரு மிறைஞ்சும் பெரும்பூசை
திவ்யா கமப்படியே செய்ததற்பின் :- மைவானி
52. லாறு தொடவுயர்ந்த வாயிரக்கான் மண்டபத்தி
லேறி யருளி யினிதிருந்து :-சீறியெழக்
53. காணுந் தொறுமொருதன் கண்மூன் றினிலிரண்டு
நாணுந் திருக்காப்பு நாணணிந்து :- சேணுலவு
54. மைவாரி மேகம் வளரும் பிறைபடைத்த
செவ்வான மீது திகழ்ந்ததென :- வெவ்வாயுந்
55. தோடு விரியிதழிச் சூழறனிற் பல்கோடிப்
பாட லளிகள் படிந்ததென :- நீடுமிரு
56. பாலும் வெயிலுதவு பத்மரா கக்கிரிமே
னீல வொளிபோய் நிறைந்ததெனக் :- கோலமுடன்
57. அன்றுதிருச் செங்காட் டணிந்ததிருச் சட்டைதனை
யின்று மணிந்தா ரினிதென்ன :- வொன்றாக
58. வெம்மை யுடையா னிருபா கமுமெங்கள்
அம்மை திருமேனி யானதெனத் :- தம்மின்
59. முயங்கக் கிரிமான் முலைகுழைத்த மெய்யிற்
றயங்கத் திருச்சாந்து சாத்தி :- யுயர்ந்த
60. நனைத்தண் டுழாய்மௌலி நாபியில்வா ழன்ன
மெனைத்து மறியா விடத்தே :-தனக்கடையச்
61. சம்பு குலத்தொருவன் சாத்துகைக்கா மென்றளித்த
செம்பொன் மணிமகுடஞ் சேர்வித்துத் :- தம்போ
62. னிகரற் றவரிவர் நீங்கா விடத்தே
மகரக் குழையங்கு வைத்துத் :- திகழமரர்
63. சாத லொழித்தற்குச் சான்றிருக்கு மவ்விடத்தே
சோதிமணிக் கட்டுவடஞ் சூழ்வித்துப் :- போதப்
64. பதும வளைத்தழும்பு பட்ட விடத்தே
புதுவயிரக் கேயூரம் பூட்டித் :- திதலை
65. பரந்து வளர்கடவுட் பச்சைக் குரும்பை
யிரண்டுகுறி யிட்ட விடத்தே :- குனிப்பின்
66. காணிப் பிறைநிலவோ கங்கா நதிப்புனலோ
வேணிப் புரையிருபால் வீழ்ந்ததெனச் :- சேணிற்
67. பனித்தா ரகையின் பரிசன்ன முத்தின்
றனித்தாழ் வடம்விளங்கச் சாத்திக் :- குனிப்பில்
68. தீதிருந்து மபினயமுந் தெய்வத் துடியு
மிருங்கனலும் வாழு மிடத்தே :- பொருந்தப்
69. பிறந்த விளம்பரிதிப் பேரழகு மட்கச்
சிறந்த கடகஞ் செறித்து :- நுறுங்கப்
70. பிசைந்துபிசைந் துண்ணவொரு பிள்ளையறுத் தாக்க
விசைந்துபசி தோன்று மிடத்தே :- விசும்பின்
71. முதிரு மிருளை முனிபதும ராகக்
கதிருதர பந்தனமுங் கட்டி :- மதுரைப்
72. புரவி திகழிடத்தே பொற்பதும ராகத்
திருவுடை யாடை திருத்தி : பரதவிதக்
73. குஞ்சிப்பும் நல்லநிலைக் கூத்துந் திகழிடத்தே
செஞ்சித்ர ரத்னச் சிலம்பணிந்து :- துஞ்சிச்
74. செலவுற்ற வானோர் சிரந்தொடுக்கு மாலை
யிலகிக் கிடக்கு மிடத்தே :- குலவு
75. மதுமிக்க கல்லார மாலை யுடனே
யிதழித் திருமாலை யிட்டு :- மதில்பொருத
76. தம்பொற் சிலையைத் தலைக்கொண் டனரென்னச்
செம்பொற் றிருவா சிகைசேர்த்து :- விம்ப
78. மூவாத பேரன்பின் மூவர் முதலிகளுந்
தேவாரஞ் செய்த திருப்பாட்டும் :-பாவனையாற்
79. போதவூர் கண்ணீர் புளகத் துடனணிந்த
வாதவூ ராளிதிரு வாசகமும் :-பாவனையாற்
80. வேட்டென் றெழுதா விருபிறப்போர் கற்கத்தான்
பாட்டுண்ட நாலு பழங்கவியுங் :- கேட்டருளி
81. ஐங்கைப் பவளநிறத் தானைப் பெருமானுஞ்
செங்கைச் சுடர்வடிவேற் சேவகனு :- மெங்கு
82. நிறைபூதஞ் சூழ நிலமெல்லாங் காப்ப
மறைஞாளி யேறிவரு வானும் :- நிறையருளாற்
83. றுண்ணெனத்தே வர்க்குச் சுதைபகுத்த மோகினியாம்
பெண்ணிடத்தில் வந்து பிறந்தோனும் :-பண்ணுமக
84. மங்கும் படிக்கழற்கண் வாய்ந்திலங்குந் தம்முடைய
திங்கணுதல் வேர்விற் செனித்தோனுந் :- துங்கமுடி
85. கொண்ட கடவுட் குளிர்கொன்றைத் தாருமுடித்து
உண்ட பரிகலத்தி லுண்டோனுந் :- தண்டமிழான்
86. மண்புகழப் பாடி மறையூரி லாண்பனையைப்
பெண்பனை யாக்கிய பிள்ளையுந் :- திண்பிடித்துப்
87. பாழி யமணரிடும் பாரச் சிலையுடனே
யாழி தனின்மிதந்த வன்பனுஞ் :- சூழுமிருட்
88. பாதி யிரவிற் பரவைக்குஞ் சங்கிலிக்குந்
தூது நடப்பித்த தோழனுந் :- தீதில்
89. வழுக்கில் பெருந்துறையில் வாழ்வித்த கோலங்
கழுக்குன்றிற் கண்ட கவியும் :- வழுத்துநர்க்குப்
90. போத வினியதொரு பொன்வண்ணத் தந்தாதி
யாதியுலாவோ டமைத் தோனுஞ் :- சோதிமணி
91. மன்றி னருகு மலர்த்துழாய் நாறுமிடங்
கொன்றை கமழ்வித்த கொற்றவனு :- மென்றும்
92. புடைமருவு தன்னிழலிற் போகாத பேயை
யிடைமருதி லிட்ட விறையு :- மடையத்
93. துயர்கடந்த தொண்டத் தொகையதனி லேனைச்
செயல்சிறந்த தொண்டத் திரளுங் :- கயிலைதனிற்
94. றந்தாள் படாமற் றலையால் நடந்துபோ
யந்தாதி யாற்புகழ்ந்த வம்மையு :-மிந்தநிலங்
95. கோட்டி வளைத்தெடுத்துக் கூட்டிக் குலைத்தடுக்கிக்
காட்டவல்ல பூத கணவரு :- மீட்டுநல
96. மெண்ணு மொருநாற்பத் தெண்ணா யிரவரெனும்
புண்ணிய வேடப் புனிதரு :- நண்ணரிய
97. வோரா யிரத்துத் தொளாயிரரென் றூழிமுதற்
பேரா நிமந்தப் பெருமையருஞ் :- சேர
98. வுரிய விதிமுறையோ டுள்ள முருகிப்
பொருவரிய வன்புடனே போதச் - கரரைத்
99. திருவா சலினந்தி செங்கைப் பிரம்பால்
நிரையாக வெங்கு நிறுத்தி :- வருவார்
100. கழற்சே வடிபணிந்து கண்களிப்ப முன்னே
யெழச்சே வியுநீங்க ளென்ன :- முழக்க
101. விருப்பதுவும் வெள்ளிமலை யென்னாமற் செம்பொற்
பொருப்பினும் மேறினார் போல :- விருப்பால்
102. வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லி நாதன்
கொடுத்த திருத்தேர்மேற் கொண்டு :- முடித்தநதி
103. யாடும் விசையி லலையெழுந்து தன்மீதில்
நீடும் வகைசுழித்து நின்றதெனக் :- கூட
104. விருகதி ரஞ்ச வெறிக்கு நிலாவின்
ஒருதனி வெண்குடை யோங்க :- விருபாலுங்
105. கங்கை நதியிற் கரைபுரண்ட சீகரம்போன்
மங்கையர்கள் வெண்சா மரையிரட்ட:- வெங்களையும்
106. இட்டாலோ பூணாக வென்றுரக மாடுவபோற்
பட்டால வட்டம் பணிமாற :- விட்ட
107. வெருது மராமரமு மெவ்வேழுஞ் சாயப்
பொருத விடைக்கொடிமுன் போத :- வருவதொரு
108. மேருக் கிரிதொடரும் வெள்ளிக் கிரியென்ன
மூரிவிடை யெம்பிரான் முன் போதப் :-பேரிகை
109. சல்லிகை மத்தளி தண்ணுமை பண்ணமை
பல்லிய மெங்கும் பரந்தார்ப்ப :- வல்லபடி
110. வாணன் குடமுழா வாசிப்ப மாமதுர
வீணை யுததி மிகவுயிர்ப்ப :- பேணும்
111. பரிசி றமதுசெவிப் பாண்சேரி பெற்ற
விருவ ரிசைபாடி யேத்தச் :- சுருதியெழு
112. மின்னரம் பேழு மிசை ததும்ப வெம்மருங்குங்
கின்னரர் தங்கள் கிளைபாட :- முன்னரிடும்
113. பேரிகை யோசை பிறங்கமிகத் தாரையுடன்
மூரி வலம்புரி முன்முழங்க :- வாரங்
114. குளித்தவதி பாரக் கொங்கைத் தழும்பும்
வளைத்தழும்பும் பெற்றபிரான் வந்தான் :- கிளைத்தசடை
115. யேகாம் பரநாதன் வந்தா னிகல்விடையின்
பாகாம் பழையபரன் வந்தான் :-மாகத்
116. தெழுமிரண்டு பேரொளியு மெப்போது மஞ்சி
வழிவிலங்கு மூருடையான் வந்தான் :-சுழிகொண்
117. டலையும் பகீரதிநின் றார்க்கின்ற சென்னி
மலையன் றிருமருகன் வந்தான் :-கலைதேர்
118. பரிசிலிரு வர்க்கும் பகல்விளக்குங் கண்ணும்
வரிசையுட னளித்தான் வந்தா :- னொருவயிற்றில்
119. வாரா வுடம்புடையான் வந்தா னெனமறுகிற்
சீரார் திருச்சின்னஞ் சேவிப்ப :-வேரிமிகத்
120. தேங்கு மலரோன் சிறையோதிம மீது
மோங்கு திருமா லுவணத்துந் :- தாங்குபடை
121. வாசவன் வெள்ளைமத வாரண மீது
மீசர்பதி னொருவ ரேறிடத்துந் :- தேசுதரு
122. மாறிருவ ரெவ்வே ழடர்புரவித் தேர்மீதும்
வேறிருவ ரெண்மர் விமானத்துஞ் :- சீறியடுங்
123. கூற்றுக் கடவுள் கொடிய கடாமீதும்
போற்று மளகேசன் புட்பகத்துங் :- காற்றுறவாம்
124. வேகமிகு தழலோன் வெற்றித் தகர்மீதும்
வாகை வருணன் மகரத்து :- ஆகமத்தின்
125. நீதி தெரியு நிருதிநர வாகனத்துங்
காது பனவன் கலைமீதுஞ் :-சோதிதிகழ்
126. சீதமதி முத்தின் றேர்மீது மோரேழு
வேத முனிவர் விமானத்தும் :-போதவுயர்
127. விஞ்சையர் சாரணர் சித்தர் வியன்கருடர்
செஞ்சுடிகை நாகருடன் சேவிப்ப :-மஞ்சுகவித்
128. தாடுங் கொடிக ளருக்கன் பரிதடுக்க
மாட நெடிய மணிமறுகி :- னீடருளாற்
129. பொன்னான சூடகக்கைப் போதன்ன மும்புனலு
மெந்நாளு மெவ்வுயிர்க்கு மீந்தருளி :- மன்னு
130, மறச்சாலைப் பெண்டி ரருகுவரக் கங்கை
புறக்காவற் பெண்டிருடன் போதச் :- சிறக்கும்
131. வரையர மாதரும் வாரா கரத்திற்
றிருவுடன் வந்த திரளுந் :- திருவுங்
132. கலையை யகலாத கன்னிமட மானு
மலையை யகலா மயிலுங் :- கலைமகளும்
133. பொன்னி னுலகாளும் பூவையரு மாநதிக
ளென்னு மடவா ரெழுவரு :- மன்னமயில்
134. சீறும் விடைகளிறு சேனங் கடாயாளி
யேறு மடவா ரெழுவருங் :- கூறுங்
135. குலநாக மாதர் குழாமும் பணிந்து
பொலமாட வீதி புகுத :- நிலமாதர்
136. தாணு நுதல்விழிமேற் றாவடிபோ கத்திரண்ட
பாண மலரோன் படையென்னப் :- பூணரவஞ்
137. சூடுந் தரங்கச் சுரநதியிற் றோய்ந்துவிளை
யாடும் படிதிரண்ட வன்னமெனப் :- பாடலினாற்
138. றம்பெருமை பாடுந் தமிழோன் றனக்களித்த
வெம்பகலிற் சேர்ந்த விளக்கென்ன :- நம்பருறை
139. சூதத் தெழுந்த துணர்ப்பல் லவப்படலங்
கோதத் திரண்ட குயிலென்னத் :- தீதற்ற
140. வெந்தைபெரு மான்கரத்தி னேந்துமிள மான்கண்டு
வந்து திரண்டசில மானென்னச் :- செந்தமிழின்
141. பாட்டுக் குழல்வோன் பசும்பாதி யின்வார்த்தை
கேட்டுத்திரண்ட கிளியென்னக் :- கூட்டகிலார்
142. தாழ்ந்த சடைமுடியோன் றன்னுடம்பைக் காரென்று
வாழ்ந்து திரண்ட மயிலென்னச் :- சூழ்ந்தரன்பால்
143. நன்புதிய தூதுக்கு செல்வேனான் செல்வேன்
என்பனபோன் மென்குழல்வண் டெங்குமெழ :- நின்புயமேல்
144. எங்கள் தழும்பணிந்தா லென்செய்யு மென்பனபோற்
செங்கை வளைகள் சிறந்தார்ப்பச் :- சங்கரன்மேற்
145. றள்ள வரியகுறித் தாமுமிடத் தாயங்
கொள்வனபோற் கொங்கைக் குவடசைய :- வுள்ளமகிழ்
146. செம்பதுமைக் கேள்வன் றிருமல்லி நாதனுயர்
சம்புபதி நல்குந் தடந்தேர்போல் :- கம்பரே
147. யித்தேருங் கண்டாலோ வென்பனபோ லல்குலெனு
மத்தேரின் மேகலைக ளார்ப்பரிப்ப - வித்தெருவிற்
148. சீற்ற விடையோனைச் சேவிக்கப் பெற்றபதம்
போற்றுவபோற் பொன்னூ புரஞ்சிலம்ப :- மேற்ககன
149. கூடம் வெளியடைத்த கோபுரத்துங் குன்றனைய
மாட நெடுமத்த வாரணத்து :- மோடுகதிர்
150. விஞ்சு கொடிதடுக்கு மேனிலா முற்றத்து
மஞ்சுதவழ் கங்கைகொண்டான்மண்டபத்தும் :- வெஞ்சமரிற்
151. றத்துபரி பல்லவன் சம்பு குலப்பெருமான்
வைத்த துலாபார மண்டபத்துஞ் :- சித்ரமணிச்
152. சூளிகையின் மீதுஞ் சுறைநிலா முற்றத்து
மாளிகையின் மீதும் மறுகிடத்தும் :- யாளி
153. செறியுமணித் தெற்றியினுஞ் செய்குன் றிடத்து
நிறைய எவரு நெருங்க :- இறையவனை
154. வந்து வணங்கி மதிக்கொழுந்துஞ் செஞ்சடையுஞ்
சிந்தைகவர் கண்மலருஞ் செவ்வாயு :- மெந்தைபிரான்
155. தெய்வப் புரிநூலுந் திண்டோளு மார்பகமுஞ்
சைவத் திருவான தாழ்வடமு :- மெய்வழியக்
156. கொண்ட திருநீறுங் குழைதுரந்த செங்கழுநீர்
மண்டு திருக்கொன்றை மாலையு :- மெண்டிசையுந்
157. தாவில் சுருதித் தமருகமுந் தம்முடைய
தேவி யறியுந் திருக்கூத்தும் :- யாவையுந்தம்
158. உள்ளத்தே கொள்ளா வுருக்காப் பெருகின்ப
வெள்ளத்தே வீழா மிகவுயிராத் :- தள்ளியுறை
159. விட்டவாள் போல்விழியீர் மென்சுணங்கின் பொன்முலைமேற்
பட்டவா பாரீர் பசப்பென்பார் :- கட்டழகன்
160. கோதை யகன்மார்பங் குழைவிக்க மாட்டாதால்
ஏது படிலென் இவையென்பார் :- போத
161. நெருக்கி யரிதிட்ட நிரைவளைக ளெல்லா
மிருக்கை யரிது கரத்தென்பார் :- நிருத்தன்
162. பரிக்குந் தழும்பு படுத்தா வளைகள்
இருக்கிலென் போகிலென் என்பார் :- திருக்கண்கள்
163. வையார்நம் மேலென்பார் வைப்பா ரவர்கருணை
மெய்யானவ ளொருத்திமே லென்பார் : ஐயோ
164. வருள்படைக்க வேண்டி யருமந்த கண்ட
மிருள்படைத்த தேனிங்ங னென்பார்:- இருள்படைத்த
165. தின்றாகில் வானோ ரெனுஞ்சாதி யத்தனையும்
பொன்றாதோ வென்று புகலுவார் :- வென்றிமதன்
166. ஏவானோ மேலென்பார் ஏவினால் இன்னமுந்தான்
போவானோ போய்த்தோ விழியென்பார் - மேவனிலம்
167. செல்லாதோ மீதென்பார் சென்றால் வரவிடுமோ
நல்லார் திருக்காப்பு நாணென்பார் : புல்லத்
168. திருக்கொன்றை மாலைபெறிற் சிந்தை குடியேறி
யிருக்கின்ற மாலொழியு மென்பா :- ரொருத்திகுறி
169. யிட்டதிவர் மார்புபிற ரெய்துவதின் மாலுழன்று
பட்டதமையும் படவென்பார் :- மட்டவிழும்
170. அம்பதுமப் போதி னயன்மா லறியாத
வும்ப ரறியா வொருகிரியைச் :- செம்பவளப்
171. பாதி யுடம்பு பசப்பித்தாள் பைங்களபக்
கோதை முலையாற் குழைவித்தா - ளாதலா
172. லுண்மை தனக்கிந்த வுமையாள் பிறந்ததற்பின்
பெண்மைதனக் கேற்றம் பெரிதென்பார்:- பெண்மைக்கு
173. இறையா ளிவளன்றோ வென்பார்மற் றிங்ஙன்
மறுகி லெதிர்வந்த மாத :- ரறுசமய
174. அண்டருக்குந் தாயா ரறச்சாலை யிப்படிபெற்
றுண்டிருக்கு மூதூ ருடையானே:- கொண்டவிருட்
175. காவி விழியொருத்தி கட்டிக் குறியிட்டு
மாவடியில் வைத்த வயிரமே :- தேவிமுகஞ்
176. செவ்வி பெருகத் திருச்சூ டகக்கையாற்
றவ்வி பிடித்துச் சமைத்தன்ன :- மெவ்வுயிர்க்கு
177. மாரச் சொரிதருநெல் ஆட்டைக் கிருநாழி
சேரப் படியளக்குஞ் சீமானே : மார்புபோற்
178. கண்ணுஞ் சிலர்படைத்த காணியோ காமவேள்
பண்ணுந் துயர்தீரப் பார்த்தருளீர்:- வெண்ணிலவோடு
179. ஈரும் மிளந்தென்றல் ஈராமல் உம்முடைய
வாரம் பசிதணித்தா லாகாதோ :- வாரவுளம்
180. வேவக் கறங்கும் விடைமணியை யும்முடைய
சேவுக் கினிதளித்தாற் றீதாமோ :- மேவியவிக்
181. கொக்கி னிறகுடனே கூவுங் குயிற்சிறகை
யொக்க வணியவுமக் கொண்ணாதோ :- மிக்க
182. வறஞ்செய்யு மூருடையீர் ஆகாது காணு
மறஞ்செயல் என்று மயங்கா :- நிறந்திகழும்
183. விண்ட குவளைக்கும் விள்ளாத தாமரைக்குந்
தண்டரள மும்பொன்னுஞ் சாத்துவா:-ரொண்டொடியீர்
184. பாகம் பிரியாத பச்சைமயில் காணாமல்
ஏகம்பர் பார்த்தா ரெமையென்பார் :- ஆகமதன்
185. காதன் மலர்சொறிந்து கைசலிப்ப விவ்வண்ண
மாதர் பலர்மயங்க மற்றொருத்தி :- பேதை
186. திரையுதவு பேரமுதின் சிற்றரும்பு முற்றி
வருமுகைய தானதொரு வல்லி :- சுருதியளி
187. யூத மலரா வொருதா மரைமுகிளங்
காத லுதவாத காமசரம் :- வேதத்
188. துழையா னகலா துறைகின்ற சூதங்
குழையாத தென்றற் கொழுந்து :- பழைதாகக்
189. கம்ப ருறையுங் கடவுளிளஞ் சூதத்தின்
கொம்பி லுறையாக் குயிற்பிள்ளை :- யின்ப
190. வலையா ரமுதத்தின் ஆரம்ப வித்து
தொலையாத காமத்தின் றோற்றம் :- உலகிற்
191. சிறந்தபிரா னல்லாத தேவர்களைப் போல
விறந்து பிறக்குமெயிற்றாள் நிறைந்துமைப்போல்
192. முத்தாரம் பூண முலையெனக்குச் சூட்டுமென்று
கைத்தாயர் முன்னின்று கண்பிசைவாள்:- சுத்த
193. வியல்பு தனையொழிய வேதும் பிறழாக்
கயலை யனையவிரு கண்ணாள் :- புயல்வரினு
194. மாடாத தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதுங்
கூடாது மான குழலினாள் : நீடிமிக
195. வோங்கி வளர்தன் னுரியபரி ணாமமெல்லாந்
தாங்கியவித் தன்ன தனத்தினாள் :- நீங்காத
196. வேகம்ப மென்னீ ரிமவான் மகள்தழுவ
வாகங் குழைந்த வரனென்னீர் :- மாகம்பை
197. யாறென்னீ ரம்மை யறச்சாலை யென்னீர்நம்
பேரென்னீ ரென்றுதமைப் பேசுவித்த :- வாறெல்லாம்
198. பாவைக் குரைத்தந்தப் பாவைபக ராததெல்லாம்
பூவைக் கழுது புகலுவாள் :- மேவுபல
199. தீவிற் பிறந்த செழுமணியுந் தம்மூரின்
வாவி பிறந்த மணிமுத்துங் :- காவிவிழி
200. யம்மை முதனா ளரனாரைப் பூசித்த
கம்பை மணலுங் கலந்தெடுத்துக் :- கொம்பனையா
201. ளொண்டொடி மாத ருடனே கரஞ்சிவப்ப
வண்ட லிழைத்து மகிழ்போதிற் :- பண்டொருநாள்
202. தெண்டிரையிற் பெற்ற திருவமுதச் செவ்வாயும்
பண்டுகிராற் கொண்ட பரிகலமு :- மண்டுமெரி
203. தாழுஞ் சினத்துழுவை தான்கொடுத்த வுட்சாத்தும்
வேழங் கொடுத்ததொரு மேற்சாத்துஞ்:- சூழ்பனியின்
204. ஓங்கல் கொடுத்த வொருபா கமுமுடையார்
தாங்கு மணிமறுகு சாருதலு :- மாங்கவளும்
205. வண்ட தனையொழிந்து வந்தணுகிச் செந்துவர்வா
யொண்டொடி மாத ருடனிறைஞ்சி :- யண்டருறை
206. நாகஞ் சிலையாக நண்ணார் புரமெரித்த
ஏகம்பர் தம்பெருமை யெண்ணாதே :- கோகநக
207. வுந்திக் கணையோ னொருபாக முஞ்சடையு
மந்தப் புரமென் றறியாதே :- யிந்தப்
208. பெருத்த மணக்கோலப் பிள்ளையுடன் றேர்மேல்
இருத்து மெனைக்கொடுபோ யென்ன:- வொருத்தியிவர்
209. பூணத் தவரிருவர் பொன்முடியுஞ் சேவடியுங்
காணக் கிடையாத கம்பர்காண் :- வாணுதலாய்
210. பாய வுலகம் பதினாலையும் பரந்தொன்
றாய பெருமா னருகிருக்கத் :- தோயுமகிற்
211. பச்சைக் கிரியாற் பவளத் திருமார்பி
லச்சிட்ட வர்க்கொழிந்துண் டாகுமோ :- வச்சமுடன்
212. மீதெடுத்துக் கம்பை மிகுபெருக்குக் கஞ்சாத
மாதவத்தாட் கன்றியிது வாய்க்குமோ :- மூதண்ட
213. மெல்லாம் பெறநெல் லிருநாழியால் வளர்க்க
வல்லாள் தனக்கன்றி வாய்க்குமோ : சொல்லாய்
214. குறைவின் மடமயிலே கூசாதே யாமே
யிறைவரரு கேறி யிருப்போம் :- மறவிதனை
215. யென்ன இளையா ளிருகண்கள் முத்தரும்ப
வன்னையர்தங் கையா லணைத்தாற்றி:- மின்னேபோ
216. தென்று பகர்வதன்முன் ஏகம்பர் தேருடனே
தென்றலந் தேருந் தெரிவித்து :- வென்றி
217. மதன்கை வரிசாபம் வாங்காமல் வாசம்
பொதிந்தகணை பூட்டாமற் போந்தான் :- பெதும்பை
218. யிவண்மற் றொருத்தி யெவர்க்குந் தெரியாப்
பவளத் தமுதுதரும் பாவை :- தவளத்
219. திருப்பாற் கடற்பிறந்து செந்தா மரைமேல்
இருப்பார்க்கு நேரே யிளையாள்:-விருப்புடனே
220. ஆர்க்கும் அளிகள் அவிழ்பத மீதென்று
பார்க்குமுகை போலும் பருவத்தாள்:-ஆக்கமுடன்
221. போராக்கு மாமதனன் போதும் பவனிக்குத்
தேராக்க வெண்ணுஞ் செழுந்தென்றல் :- வேரிநறு
222. போது புனைவதற்கும் பூணாரம் பூண்பதற்கும்
ஆதரவு வைக்கு மளவினாள் :- ஆதிமதன்
223. பேறும் மடநாணும் பெண்மைப் பெருமிதமும்
வீறுஞ் சிறிதரும்பு மெய்யினாள் :- சீறியெரி
224. யூட்ட மதின்மூன் றுழிநிகழ்ந்த வண்ணம்போற்
கூட்டி முடிக்குங் குழலினாள் :- வேட்டவர்தம்
225. புந்திகவர் வஞ்சனையும் பொய்யுங்கொலையுமிடம்
வந்துவந்து பார்க்கு மதர்விழியாண் :- மைந்தர்
226. உகமை யழகோடே யுள்ளரும்புங் கஞ்ச
முகையின் முகைபோல் முலையாள் :-இகுளையர்தம்
227. மீளாத காதல் விழைவுரைக்கும் போததனைக்
கேளா தவர்போலக் கேட்டிருப்பாள் :- கேளாய
228. மாதரு மானு மயிலும் பசுங்கிளியும்
ஓதிமஞ் சூழ வுடன்போத :- மாதவிப்பூம்
229. பந்தரிட்ட நீழற் பளிக்குச் சிலாதனத்து
வந்திருப்ப வெற்றி மடமாதர் :- உந்திக்
230. குவளை மலரிருகண் கொங்கைக் குறியிட்ட
பவள மலையினையும் பாடித் :- தவளநகை
231. யன்னை யறஞ்செய் அறச்சா லையும்பாடிக்
கன்னி யினிதாடுங் கழங்கென்னக் :- கன்னிதனக்
232. காழி தருமுத்த மாகாதென் றவ்வூரில்
ஏழுநதி முத்த மினிதெடுத்துச் :- சூழ்தேரிற்
233. றட்டு நிகரல்குற் சங்கிலிபாற் றூதுதமை
விட்டவர்பாற் பெற்ற விழியொன்றும் :- வட்டித்துப்
234. பாத மலர்துதித்த பட்டவா ணன்றனக்குக்
காத லுடனளித்த கையிரண்டும் :- பூதத்து
235. இகலொழிய நின்று மிருந்துங் கிடந்து
முகிலுறையுந் தானங்கண் மூன்று :- நகிலால்
236. இலங்கு வரிவளையா லிவ்விரண் டாய்த்தம்மேல்
நலங்கொள் தழும்பொரு நான்குந் :- துலங்க
237. வுமைக்கமைத்த பொற்கோயி லூழி முதல்நாள்
அமைத்தன கோணங்கள் ஐந்தும் :- அமைத்தோள்
238. இளைக்கு மருங்குல் ருநாழி நெற்கொண்
டளிக்குஞ் சமயங்க ளாறுங் :- குளிப்பார்
239. செறியும் பவக்கடலைச் சிந்தித் திரையால்
எறியும் புனிதநதி யேழும் :- பிறைநுதலாள்
240. அன்பொடுபா டிக்கழங்கை யாடுகின்ற வெல்லைக்கண்
என்பொருபெண் ணான வெழினகரும்:- அன்பனுளம்
241. அன்றொருத்திக் குண்மை யறிவித்துத் தாமகிழ்க்கீழ்ச்
சென்றொளித்து நின்ற திருநகருஞ் :- சென்று
242. முதுககன கோளத்து முற்பட்ட கூத்தின்
பதும மலர்ந்த பதியுங் :- கதிராழிக்
243. காவித் திருநிறத்தோன் கைகுவித்து நின்றெதிரே
சேவித்து நிற்குந் திருப்பதியுந் :- தாவுபரி
244. மல்லற் றொடைத்தொண்டை மான்கடவுந் தேரையொரு
முல்லைக் கொடிதடுத்த மூதூரு :- நெல்விலைக்குச்
245, சற்றளந்த நாட்புகலிச் சைவப் புலவனுக்குக்
கொற்றளந்த மாடக் கொடிநகரும் :- பெற்றதொரு
246. தாயுமிலை யென்னுந் தமது குறையையொரு
தூய கழைதவிர்த்த தொன்னகரும் :- வாய்கலசம்
247. ஆட்டி யினிமை யறிந்தவூ னெச்சிறனை
யூட்டிய வேட னுறைபதியுஞ் :- நாட்டிலுள
248. வெண்ணி லமணரெலா மேறக் கழுவிலொரு
பெண்ணை யியலறிந்த பேரூரும் :- விண்ணவர்தஞ்
249. சாத லுறைநாளுஞ் சாகாத புள்ளிரண்டுந்
தீதகல வாழுந் திருமலையுந் :- தூதுதமை
250. யோட்டுந் திருநாவ லூராற் கிரந்திட்டுப்
பாட்டுண்ட வூரும் படைத்துடையான் :- சூட்டு
251. வெருவும் வரியரவும் வெண்டலையு மாறு
மருவு முடிக்கம்ப வாணன் :- ஒருபுத்தன்
252. செங்கல் லெறிக்குச் சிவலோக மீந்தபிரான்
றுங்க மணிமறுகு தோன்றுதலும் :- பைங்கொடியும்
253. ஆடுங் கழங்குதவிர்த் தாயத் துடன்கனக
மாட நெடுவீதி வந்தணுகிக் :- கூடப்
254. பணிந்து பரவிப் பகுவா யரவ
மணிந்த திருத்தோ ளழகு :- மணங்கமழும்
255. பொன்னான மார்பும் புனையும் புரிநூலு
மன்னான காதல் வரநோக்கி :- மின்னுந்
256. திருந்திழையீ ரிந்தத் திருமேனி தன்னில்
இருந்ததழும் பென்னதழும் பென்றாள் :- புரிந்தவரும்
257. மின்னே கிளியே விளங்கிழையே யன்னமே
யன்னே யிதனை யறியாயோ :- தன்னருளாற்
258. பாராட்டி வையம் பதினாலையும் வளர்க்கும்
பேராட்டி மாதவத்தின் பேறுகாண் :- வாரிதிசூழ்
259. வைய முழுதறிய வாங்குஞ் சிலைமாரன்
எய்யுங் கணைபடைத்த வேற்றங்காண் :- துய்யகுழற்
260. பண்பிறந்த சொல்லாய் பலசொல்லி யேனிந்தப்
பெண்பிறந்தார்க் கெல்லாம் பெருமைகாண்:-மண்பரவி
261. யேத்து மிறையா ளிருகொங்கை யால்வளையாற்
சாத்திய கோலத் தழும்புகாண் :- பார்த்தருளாய்
262. என்னு மளவி லிலங்குமனத் துட்காதல்
பொன்னனைய மெய்யிற் புறம்பொசியக்:-கன்னிவெயில்
263. தீண்ட மலர்வதொரு செந்தா மரைமுகைபோற்
காண்டகைய செவ்விக் கவின்படைத்தாண்:-மீண்டரனுங்
264. கோல மயிலைக் குறிப்பாற் கடைக்கணித்தாற்
போல முறுவலுடன் போயகன்றான் :- மாலைமதன்
265. செங்கை வரிசிலையைச் சேரத் தொடைமடக்கி
யெங்கள் பெருமானோ டேகினான் :- மங்கை
266. புடையோத ஞாலமெலாம் போர்மதனன் வேதக்
கிடையோதி விக்குமொரு கிள்ளை :- விடமும்
267. வளருங் கொடுங்கொலையும் வஞ்சனையும் பொய்யுங்
களவுங் குடிபுகுதுங் கண்ணாள் :- தெளிதேனுஞ்
268. சீல வுததி யமுதுஞ் செழும்பாகும்
பாலு முதவும் பனிமொழியாள் :- மாலுதவு
269. மிக்க திருவழகின் வெள்ளத் தெழுந்தவிரு
மொக்கு ளனைய முலையினாள் :- மைக்குழலிற்
270. பூவின் மிகுபொறையாள் பூணார மென்முலையாள்
நோவ வடியிட்ட நுண்ணிடையாள் :- ஆவிபெற
271. வார்வ முளதாக வாடவர்தன் மேல்வைத்த
பார்வை யறியும் பருவத்தாள் :- சேரச்
272. சுடருற்ற பூவளைக்கைத் தோழியருந் தானு
நெடுமத்த வாரணத்தி னின்று :- விடையோன்பால்
273. அன்னத்தைத் தூதுவிடவங்கையிற் கொண்டனள்போற்
பன்னித் திலநிரைத்த பந்தேந்தி :- யன்னதுதான்
274. பாவை யொருபாகன் பாலணுக மாட்டாமற்
போவதுவு மீள்வதுவும் போற்றோன்ற :- மேவி
275. நெறிந்திருள் கொண்டை நெகிழ்ந்து ததும்ப
நறும்புழு கின்கண் நனைந்து :- செறிந்து
276. சுரும்பி னினங்கள் சுழன்று சுழன்று
நரம்பென வெங்கு நணுங்க :- விரும்பி
277. யிடுங்குழை யஞ்ச வெறிந்திரு கண்கள்
நெடுங்குமி ழின்க ணெருங்க :- வடங்கொள்
278. மனங்கமழ் குங்கும வண்ட லணிந்து
கணங்கணி கொங்கை துளங்க :- வணங்கி
279. மருங்கு தளர்ந்து வருந்த வருந்த
இருங்கலை கொஞ்சி யிரங்க :- நிரம்பி
280. யிலங்கு பதங்க ளிடுந்தொறு நின்று
சிலம்பு சதங்கை சிலம்ப :- நலந்திகழும்
281. வல்லியினி தாட மடவா ரணைந்துமலர்
வில்லி புரிவித்த மெய்த்தவமே :- நல்லமட
282. மானே கலாப மயிலே மலர்பொதியாத்
தேனே திரையளித்த தெய்வமே :- கானேயுங்
283. கோதை யிதழ்வாய்க் கொடியே நமக்கிந்தப்
பாவியிடை செய்த பகையுண்டோ :- மேவியுடன்
284. மன்னுஞ் சிறையன்றின் மன்றிற் பனைமடன்மே
லின்னஞ் சிலநா ளிருந்தாலோ :- முன்னமே
285. வென்றே யிருக்கும் விழியுடனே யுள்ளபகை
யின்றே மதன்முடிக்க வெண்ணமோ:-வென்றிமதன்
286. சேரும் வளைமலராற் றீண்டப் பெறும்வாழ்வில்
ஆரமணிப் பந்துக் கமையாதோ :- பாருலகில்
287. தாவில் தகைமைத் தபோதனர்தங் காலத்தே
யாவி யுடனிருந்தா லாகாதோ :- பாவா
288. யமையும் மையுமெனு மவ்வளவிற் றேர்மே
லுமையொரு பாக முடையோன் :- சமரமுக
289. வீரனுக்கு மெய்யன்பான் மேவுந் திருநீற்றுச்
சேரனுக்குஞ் சோழனுக்குந் தென்னனுக்கும்:-ஊரனுக்கும்
290. ஆரணற்கும் வாசவற்கு மல்லாத தேவருக்கு
நாரணற்கும் மேனோர்க்கும் நாதனார் :- போர்முகத்தி
291. லாமநாட் கொண்டதலை யாட்டுத் தலையாக
மாமனார்க் கீந்த மருகனார் :- தாமாக
292. விங்கெமையாட் கொள்ள வெழுந்தருளப் பெற்றோமென்
றங்குளமின் னார்கண் டகமகிழச் :- செங்கேழ்
293. வயங்கு மணிமாட மாமறுகிற் றோன்ற
வியந்தமணி பந்தாடல் விட்டு :- நயந்தணுகித்
294. திண்டோளு மார்புந் திருநீல கண்டமுங்
கண்டோரை வாழ்விக்குங் கண்மலருங்:-கண்டிறைஞ்சித்
295. தூய பவளந் துவளுற்றா டோழியருந்
தாயரு நிற்கத் தலைப்பட்டாள் :- தீய
296. வெறியு மழுவுடையா ரிம்மாதின் காதல்
சிறிது முணரார்போற் செல்லக் :- குறைவில்
297. மறை புகலும் பூசை மனுவா லயத்தி
லுறைதிரு வேகம்ப முடையீர் :- செறியிருளிற்
298. பந்தணுகுஞ் செங்கைப் பரவைபாற் சங்கிலிபால்
வந்துழலுந் தூது மறந்தீரோ :- நொந்தொசியுஞ்
299. சிற்றிடை புல்லத் திருமார் பகங்குழைந்தீர்
நெற்றி விழியுடையீர் நீரன்றோ :- வொற்றியூர்ப்
300. பெண்ணோ வறிவார்தம் பேரின்று தொட்டுமக்கு
விண்ணோர் பெருமானே வேண்டாவோ:-வண்ணம்
301. அமைந்தாரார் காதலினா லார்தலையிற் பெண்ணைச்
சுமந்தாரார் மற்றுமைபோற் சொல்லீ :- ரமைந்து
302. துகைத்து மதுகரத்தாற் றோடுழுதார் தந்து
நகைத்துமுகம் பார்த்து நடவீர் :- முகத்திலிவை
303. கண்ணன்றோ வெப்படியுங் காதலித்தா டானுமொரு
பெண்ணன்றோ கச்சிப் பெருமானே :- யெண்ணில்
304. இருக்கிலறஞ் சொன்னீ ரெனுமாதை விட்டுத்
திருக்கடைக்கண் வைத்தவர்போற் செல்ல:-வொருக்காலு
305. மேவுண் டறிகிலளென் றெண்ணாதே யேவுண்டால்
ஆவி படுவ தறியாதே :- பாவி
306. விறல்வேள் சிலையம்பு விட்டான்றன் னம்பின்
மறல்வேல் விழியாண் மனத்தே :- பிறைமுடியார்
307. பாதி கருகப் படுபஞ்ச பாணமதிங்
கேது படுத்தா திளையாளைக் :- காதலுக்குச்
308. சங்கம் விழுமென்றுந் தாழ்கலைநில் லாதென்றும்
அங்கம் பசலைநிற மாமென்றுந் :- திங்கணிலா
309. ஈரஞ் சுடுமென்று மேழிசைவேய் தீயென்று
மாரஞ் சுடுமென்று மன்றறிந்தாள் :- சோர்வுற்
310. றடங்கு மறிவினளா யன்னையர்தந் தோண்மேற்
றடங்கண் மயிறளர்ந்து சாய்ந்தாள் :- மடந்தை
311. இளையார் மனம்வளைய வெய்யுமதன் செங்கோல்
வளையா வகையசையும் வல்லி :- யளகநறை
312. தேங்கு கருமுகிலுஞ் செவ்வாய் முருக்குமொளி
தாங்குபுரு வத்திந்த்ர சாபமு :- மாங்கழையும்
313. வாய்ந்த மொழிக்குயிலு மைக்கட் கருவிளையும்
பூந்தரளஞ் சேர்கழுத்துப் பூங்கமுகு :- ஏய்ந்தநகை
314. முல்லை நகையு முலைக்கோங்குங் கைக்காந்தள்
மல்லல் மலரும் வரிச்சுணங்கா :- மல்லிமல
315. வேங்கையுஞ் சாயல் மயிலும் வியனழகுந்
தாங்கு திருநிறத்த சண்பகமும் :- வாங்குமிடை
316. மின்னும் பதச்சூத மென்குழையுங்கொண்டொன்றாய்
மன்னியகார் வேனிலுடன் வந்ததென:-மின்னுசுதை
317. பக்க நிலவெறிக்கப் பத்மரா கத்துவெயின்
மிக்க வரங்கத்து மேனின்று :- முக்கணனைத்
318. தேவர் நெருங்குந் திருமயா னம்பார்த்துத்
தாவில் திருமேற் றளிபார்த்து :- மேவி
319. யரன்விடா தாளு மனேகதங்கா பார்த்துப்
பரவுங்கா ரைக்காடு பார்த்துப்:-பெரிதிறைஞ்சிக்
320. கங்கைகொண்டான் மண்டபமுங் கண்டு மனமகிழந்து
மங்கைகொண்டான் வாழு மனைபார்த்துத் :-திங்கண்
321. முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன்
படைத்துலா மண்டபமும் பார்த்து:-விடைக்கொடியோன்
322. கச்சா லையும்பார்த்துக் கம்பர்தம் பாடியெனும்
பொற்சா லையும்பார்த்துப் பூவைமொழிப் :- பச்சைநிறச்
323. சைவ முதல்வி தவஞ்செய்யப் பெற்றதொரு
தெய்வவுல காணித் திருக்குளமுந் :- துய்ய
324. வறச்சாலை யும்பார்த் தறுசமயம் வாழும்
புறச்சாலை யும்பார்த்துப் பூவை :- சிறப்புடைய
325. விந்நகர்போ லெந்நகரு மில்லையிமை யோர்பதியு
முன்ன வரிதிதனுக் கொப்பென்ன :- வன்னநடை
326. மானே யிதன்பெருமை வல்லவரார் சொல்லுகைக்குத்
தானே யுவமை தனக்கல்லான் :- மானார்கட்
327. பொற்றொடியாள் கண்ணுதலைப் பூசித் தறஞ்செய்யப்
பெற்ற திதுபோற் பிறிதுண்டோ :- மற்றிவளுக்
328. கந்தமுத லில்லாத வாதியொரு மாவடிக்கீழ்
வந்துவெளிப் பட்டநகர் மற்றுண்டோ :- நந்தா
329. மருக்காவின் மூன்று மணிவிளக்கு மன்னி
யொருக்காலு நீங்கா துறையுந் :- திருக்காமக்
330. கோட்ட மெனிலிங்கே குலவுங் கனகமழை
யீட்ட முகில்பொழிந்த திவ்விடத்தே :- கூட்டியபே
331. ராசையுடன் மால்பத் தவதாரந் தம்மிலும்வந்
தீசனைப் பூசித்த திவ்விடத்தே :- பேசுநல
332. மொன்று புரிந்த தொருகோடி யாகுமிதில்
என்று மொழிகின்ற வெல்லைக்கண் :- மன்றற்
333. றிருக்கொன்றை மாலையளி செவ்விமண முண்டு
தருக்கிய நாதந் ததும்ப :- வெருக்கமலர்
334. பாயுஞ் சடாடவிமேற் பாகீ ரதிமுகங்க
ளாயிரமும் வீசி யலையெடுப்ப :- வோயா (து)
335. அருகிலிரு பாலு மருமறைக ணான்கும்
பரிகலமு மாலையுடன் பாட :- வொருதன்
336. றிருக்கைத் தமருகத்துத் தெய்வச் சுருதி
பெருக்கத் திசைமுகத்திற் பெய்ய :-விருப்பொடரி
337. தேடுந் திருவடியிற் செம்பொற் சிலம்போசை
யூடுங் ககனத் துலாய்நிமிர :- நீடு
338. நடஞ்செய் தருள்காக்கு நாயகரும் வானந்
தொடும்பொன் மணித்தேருந் தோன்ற:-கொடுங்குழையாள்
339. கோதை யசையக் குழலசையக் கோல்வளைக்கை
மாதர் பலருடனே வந்திறைஞ்சிச் :- சோதி
340. மிகக்கருணை யெப்போதும் வீற்றிருந்த செவ்வி
முகத்தழகைக் கண்ணால் முகந்தாள் :- நிகர்ப்பில்
341. தவளத் திருநீறுஞ் சந்தனமுந் தோய்ந்த
பவளத் திருத்தோள்கள் பார்த்தா :- ளிவளும்
342. மலர்மார்பி லாசையெலாம் வைத்தாள்மைக் கண்ணீர்
புலராம னெஞ்சம் புலர்ந்தா :- ளுலகுண்ட
343. திண்பால் விடையீர் திருத்தோ ணலங்கண்ட
பெண்பாவி யாவி பெறுமாறு :- கண்பாரீர்
344. என்றபொழு திற்கச்சி யேகம்ப ரேகுதலு
மன்றன் மலர்சொரிய மாரவேள் :- நின்றயர்ந்த
345. தத்தை மொழிக்குயிலைத் தாய ரெடுத்தணைத்துச்
சித்ரமணி மண்டபத்திற் சேர்வித்து :- முத்தினொரு
346. பந்தரு மிட்டார் பனிநீ ரையுஞ்சொரிந்தார்
செந்தளிரின் பாயலின்மேற் சேர்த்தினார் :- சந்தனமும்
347. பூசினார் கொண்டமயல் போமோவென் றாயிரமும்
பேசினார் தாயார் பெரிதிருந்து :- கூசாதே
348. தண்ணென் கழுநீருஞ் சாத்தினார் பார்த்தயலார்
எண்ண முமக்கொன்று மில்லையோ :- வொண்ணுதலீர்
349. முத்தினொரு பந்தன் முழுநிலா வீசுநிழல்
நித்தருறை தேமா நிழலாமோ :- பித்துளதோ
350, வாசப் பனிநீர் மணலை யவராகப்
பூசித்த வாற்றின் புனலாமோ :- பாசிழைக்குப்
351. பாயல் குளிரி படுத்தாலப் பாய்விடையோன்
கோயிலிள மாவின் கொழுந்தாமோ :- நேயமுள
352. பொற்றொடி நல்லீர் புனைசந் தனச்சேறு
நெற்றி விழியவர்த னீறாமோ :- கற்றறிவி
353. னூற்றா யிரநீர் நொடித்தா லவையிவளுக்
கேற்றார் திருவஞ் செழுத்தாமோ :- மேற்றான்
354. பிணைந்த வணிகழுநீர் பெய்வளைக்குக் கம்ப
ரணிந்த திருக்கொன்றை யாமோ:-வணங்கனையீ
355. ரென்று மொழிய இவையவை யாயினபோல்
நின்றதிவ ளாவி நீங்காம :- லன்றே
356. தெரியவே யாவர்க்குஞ் சிந்தா குலமு
முரையுந் தெளிவுதர லுற்றாள் :- அரிவை
357. கமல மலர்சுமந்தாள் கட்டழகு மேனாள்
அமுதமுடன் வந்தா ளழகுஞ் :- சிமயமிசைக்
358. கூசி மழைதவழுங் கொல்லிக் கிரிபடைத்தாள்
பேச வரியதொரு பேரழகும் :- வீசுமிளந்
359. தென்றலும் வென்றிச் சிலைமாரன் னைங்கணையு
மன்றலுமொன் றான வடிவினாள்:-பொன்றுமொரு
360. காலமும் பர்த்துக் கயிறும் பிடித்தொருவன்
சூலமு மேந்திச் சுழலாமன் :- மால்செய்(து)
361. உலவா நகையா வொசியா வசையா
குலவா வுயிருண்ணுங் கூற்று:-தலைவிக்கைங்
362. கோணம் பெறவகுத்த கோயில்போல் யாவரையுங்
காணுந் தொருமயக்குங் காட்சியாள் :- பேணி
363. மகிழ்வுற்ற வாயமுடன் வண்டரள மாலை
திகழ்சித்ர மண்டபத்திற் சேர்ந்து :- மகர
364. விடந்தோய் விழியங் கெழுதி யவையெல்லாம்
நெடும்போது பார்த்தகலா நிற்ப:-வடைந்தெவரு
365. மின்ன திதுவிதுவென் றெங்களுக்குக் காட்டியரு
ளன்ன நடையா யடைவிலென :- மின்னிடையீர்
366. வெள்ளிமலை நீங்கி விண்ணோரு மண்ணோரு
முள்ளும் பிரானை யுமையாள்போ :- யுள்ளமிகத்
367. தாங்காத பூசைக்குத் தக்கவிட மீதென்று
நீங்காது நின்ற நிலைபாரீர் :- தேங்கமழும்
368. காவி புடைசூழ்ந்த கம்பா நதிப்புனலிற்
பாவை படியும் படிபாரீர் :- கோவையிதழ்
369. ஓசை யளிக ளுலவம்பி காவனத்தில்
வாசமலர் கொய்யும் வகைபாரீர் :- பேசரிய
370. வாதி யமர ரறியா வவராக
மாதுகுவித்த மணல் பாரீர் :- கோதை
371. யணியு மிருளோதி யன்பொடு பூசித்துப்
பணியும் வழிபாடு பாரீர்:- இணையிலிமுன்
372. மேவு புளகமுடன் வெண்ணீறு மெய்க்கணிந்து
தேவி யிருந்த செயல்பாரீர் :- பூவிற்
373. கரந்து மழைபொழியாக் காலத்தே கம்பை
பரந்து வரும்பெருக்கைப் பாரீர் :- விரிந்தபுனல்
374. மாகம் புதைய வரப்பண்ணித் தம்மையொளித்
தேகம்பர் நின்ற விடம்பாரீர் :- தோகை
375. யரும்புனல்கண் டஞ்சியவ ராகமுறச் சென்று
பரிந்து தழுவியது பாரீர் :- புரிந்து
376. மலைக்கு மகடன் வழிபாடு வந்து
பலித்த பெரும்பேறு பாரீர் :- கலப்பொற்
377. றெரிவையுட னிந்தத் தேமா னிழலிற்
பரம னிருந்தவிடம் பாரீர் :- பொருவில்
378. றிருக்கைவளை யான்முலையாற் றிண்டோளு மார்பும்
பரித்த திருத்தழும்பு பாரீர் :- விரித்தசடை
379. யண்ணல் வெளிப்பட் டருள்வரங்கள் பாரீரென்
றெண்ணும் புதுமை யிவையெல்லா:- மொண்ணுதலாள்
380. காட்ட வவருங் களிகூர் பொழுதிலொரு
தேட்ட முளதாய சிந்தையளாய்க் :- கூட்டி
381. இருங்கரத் தேந்தி இருந்த கிளியை
வருந்திவினை யேன்பெற்ற வாழ்வே :- யருந்தவமே
382. தேமென் குதலைதருந் தெள்ளமுதே கம்பரணி
தாமந் தருவாய் தவிருவா :- யாமெல்லாஞ்
383. சூழு நிலவிற் சுதைநிலா முன்றிலின்யான்
வாழும் படிநினைக்க மாட்டாயோ :- வேழந்
384. திகழும் வரிசிலையான் சேவகங்கள் காட்டும்
பகழி நறும் பூவாகப்பண்ணா :- யிகழ்வார்முன்
385. என்னன்னை யேது மிரங்கா ளிரவுபகல்
உன் அன்னை யுன்னை யொறுக்குமோ :- தென்னன்
386. பொருப்பிற் பிறந்து புகையாக வீசு
நெருப்பு குளிர நினையாய் :- நிரைத்தளரத்
387. தாருங் கழுநீருஞ் சந்தனமுந் தோய்ந்தபனி
நீருங் குளிர நினைத்திடாய்:- பேரரவச்
388. சேவின் மணிவருத்தந் தீர்த்தருளா யென்றிருந்து
பூவை யினிதுரைக்கும் போதின்கண் :- டேவருய்ய
389. ஆலமினிய வமுதாக வுண்ட பிரான்
கோல மறுகு குறுகுதலு :- நீலவிழி
390. தூதுவிடக் கிள்ளைக்குச் சொல்லுவதெல் லாமறந்து
காதலுடன் வந்தவனைக் கைதொழுது :- நீதிபுரி
391. யிந்தமலைப் பாவை யிடப்பாகங் கொண்டுமக்குத்
தந்தவலப் பாகந் தரலாமோ :- வெந்தைபிரான்
392. கங்கைத் திருமுடிமேற் கண்ணியலால் வெண்ணீறு
தங்குபுயக் கொன்றை தரலாமோ :- சங்கரா
393. வெம்பாக நீரணைந்தா லிவ்வுடம்பிற் பச்சென்ற
செம்பாகம் வந்து சிவக்குமோ :- நம்பாநின்
394. சோதி மணிமுடிமேற் சோமப் பனிக்கொழுந்தை
மோது முதுதரங்க மோதாதோ :- வோதாயென்
395. றாதியுடன் சொல்ல வறம்வளர்க்கு மூருடையா
னேது முரையா னெழுந்தருள :- மாத
396. ரறிந்து மகவை யளித்தவர்க ளாக்கிச்
சொரிந்த கறியமுதுஞ் சோறு :- மருந்தா
397. விருப்பினொடு செங்காட்டில் வேண்டும் பொழுதோ
திருப்பவளச் செவ்வாய் திறப்பீர் :- விருப்பால்
398. வளைந்த திரிபுரத்தை மாள்விக்கும் போதே
குளிர்ந்த திருமுறுவல் கொள்வீர் :- துளங்குநில
399. முத்த வரிசிலையான் மொய்ம்பூங் கணைபுகுந்து
தைத்தபொழு தோதிருக்கண் சாத்துவீர் :- மெய்த்தக்
400. கொடிய விடஞ்சுரரைக் கொல்லும் பொழுதோ
வடைய வருளுடையீ ராவீர் :- மடமாத
401. ருற்றதுயர் கேட்பதற்கொன் றோதாது போகின்றீர்
கற்றதிது வோகள்ளக் கம்பரே :- பெற்றவர்தாள்
402. வீசுமழு வாற்றுணிய வெட்டுமவர்க் கல்லாது
வாசமலர்க் கொன்றை வழங்கீரோ :- பூசித்து
403. வல்லபங்கள் செய்து வழிபடுவார்க் கல்லாது
புல்ல வொருவர் பொருந்தீரோ :- சொல்லீர்
404. ஒருவா சகமென்ன வோராது போலப்
பொருமா ரனைநிறுத்திப் போனார் :-
தெரிவை
405. யொருத்தி தவக்குறும்பை யோட்டியுல கெல்லாந்
திருத்தி மதனடத்துஞ் செங்கோ :- னிருத்தனார்
406. தூதுவிடச் சங்கிலிபாற் றோழனுக்குத் தாமுழன்ற
போதிதுவென் றெண்ணும் புரிகுழலாள்:-ஆதிரையான்
407. வெண்டிரைநீர் வேணிக்கு வேறுமொரு திங்கணமக்
குண்டெனவென் றெண்ணு மொளிநுதலாள்:-துண்டமதி
408. வேணி யுடையோன் மிடற்றி லடக்குதற்கும்
பாணி மிசையசையப் பண்ணுதற்கும் :- பாணந்
409. தொடுப்பதற்கும் பார்ப்பதற்குஞ் சூழ்கழற் காலன்மேல்
விடுப்பதற்கு மெண்னும் விழியாள் :- விடைக்கொடியோ
410. ராய பிறப்பை யணுகா தவருடைய
தூய பிறப்புணர்த்துந் தோளினாள் :- நாயனார்
411. சேமச் சிலையுஞ் சிலையு மிவையென்று
தாமுட் குறிக்குந் தனத்தினாள் :- மாமழுவோன்
412. தென்றல் படக்குழைந்த தேமாவின் கொம்பரிது
வென்று திருவுள்ளத் தினிதெண்ண :- வொன்றாகத்
413. துய்யவளைக் கையுந் துவர்வாயுஞ் சோதிதிகழ்
மெய்யு நிறமும் விளங்குவான் :- மொய்யமரிற்
414. றாவும் விடையுடையான் றன்மேன் மலர்வாளி
யேவுமதனை யெரித்த நாண் :- மேவுற்
415. றெழும்புகையும் வானமு மென்ன வுரோம
வொழுங்கு மிடையு முடையாள் :- தொழுஞ்சுரரைக்
416. காக்கு மிடற்றார்க்குக் கச்சாதல் காப்பாதல்
ஆக்க நினையுமக லல்குலாள் :- நோக்கிதய
417. தூவி மயிலனையார் சூழ வொருகமல
வாவி யருகு மகிழ்ந்திருப்ப :- மேவியயில்
418. உண்கண் விறலி யொருத்தி செழுங்களபக்
கொங்கை யிணைப் படைத்த கூற்றமே:- யெங்குமளி
419. நின்றோ லிடுகின்ற நீள்வனசக் கோயிறனக்
கின்றோ குடிபுகுத விட்டநாள் :- ஒன்றாக
420. விஞ்ச வழகுடையார் வீற்றிருப்ப தல்லாது
கஞ்ச மலரொருத்தி காணியோ :- வஞ்சாதே
421. யிந்த வழகல்லா லேந்துமோ கஞ்சமலர்
தந்த வழகு தனையென்று :- செந்திருமுன்
422. சென்று பணியத் திருவால வாயுமணி
மன்றுமொரு கடவுண் மாநிழலும் :- என்றும்
423. விரும்பி யுறைமழுவாள் வீரன் றசாங்கம்
இருந்து விறலிபா டென்னத் :- தெரிந்தபெரும்
424. பாகுபல வுடையான் பாட்டுக் கொருவடிவான்
றியாக முதவுந் திருமலையு :- மாகம்
425. பெருக்கு மறுகும் பிறைக்கொழுந்தும் பாம்பும்
எருக்கு முடித்தமண லியாறும் :- விருப்பொடர
426. னந்தண் பெருந்துறையி லாளுடையா ரம்மணலில்
வந்து சிறந்த வளநாடுஞ் :- சந்தும்
427. வடங்கொ ளிளமுலையால் வானோ ரறியா
வுடம்பு குறிபெற்ற வூரும் :- தொடர்ந்தவரி
428. நீலம்போற் கண்ணார் நிறமெல்லாந் தன்னுடைய
கோலம்போ லாக்குங் குளிர்தாரும் :- ஆலிலையிற்
429. சேக்கைப் புயலின் றிருநாபி யிற்பனவன்
வாக்கிற் பிறந்த வயப்பரியு :- நோக்கித்
430. திரண்டா யிரங்கயிலை செல்வதெனத் தோன்று
மிரண்டா யிரங்கோட் டிபமும் :- நெருங்கு
431. கடிக்கற் பகவனத்தைக் காசினிமே லாயர்
கொடிக்குக் கொடுத்த கொடியுங் :- துடிக்கண்
432. தழங்கு சதியுடையான் றாண்டவத்துக் கேற்ப
முழங்கு திருக்கை முரசுந் :- தொழும்பா
433. லடுத்து சுரர்பரவ வண்டாண்ட மெல்லாம்
படுத்ததிரு வாணையுமே பாடத் :- துடிக்கவிதழ்
434. நெஞ்சு தளர்ந்து நெறிமயங்கி நீடுயிர்த்து
வஞ்சி யறிவழிந்து மாலாகி :- யஞ்சாதே
435. ஆகம் பிரியா வவளை யறியாமல்
ஏகம்பர் தாமேவந் தெய்திலேம் :- மோகங்கொண்
436. டார மருவி யகன்மார்பி லென்னையவர்
சேர வரவணைக்கத் தேடிலேம் :- பாரடையத்
437. தாவும் விடையுடையோன் றன்மேற் றனத்தழும்பு
மேவுங் கலவி விளைக்கிலேம் :- பூவின்றும்
438. பாகி லணுநலம் பாராட்டி யென்னையவர்
ஆராய புலவி யகற்றிலேம் :- நேயமுடன்
439. போக வுததியினிற் புக்கழுந்தி நெக்குருகி
யாக மிருவருமொன் றாகிலேம் :- ஆகத்
440. தணைத்த தறிய வவரணிந்த நீறென்
பணைத்த முலைமேற் படிலேம் :- மணிக்களத்தா
441. ரின்று மணந்தபடிக் கென்னுடம்பு சான்றாகக்
கொன்றை மணநாறக் கூடிலேம் :- என்றிருந்து
442. வாழும் படிதன் மனத்திற் பிறந்ததெல்லாந்
தோழி யுடனிருந்து சொல்லுங்காற் :- சூழு
443. நெருக்கார மாலை நெடுநிலா வீசுந்
திருக்காவண நிழலிற் சேயுந் :- திருத்தாள்சேர்
444. சீலம் படைத்துத் திருநீ றிடவயிற்றிற்
சூலை கொடுத்தாண்ட தொண்டனும் :- ஓலையுடன்
445. சென்று தடுத்து திருவெண்ணெய் நல்லூரி
லன்று படைத்த வடியானுங் :- கொன்றை நறுந்
446. தேன்பாய் முடிமேற் றிருச்சேய்ஞலூர் தன்னி
லான்பால் சொரிந்தாட்டு மந்தணனுந் :- தேன்போலத்
447. தித்திக்கு மாறு திருவா சகஞ்சொன்ன
பத்திப் பெரும்பெருக்குப் பாலனு :- மெத்திசையுஞ்
448. செல்ல வரிய சிவதத் துவமல்லா
தில்லையென வெழுதி விட்டோனு :- நல்லதவஞ்
449. சூழ்வாருஞ் சூழ்ந்துவரச் சூதத் திருநிழலின்
வாழ்வோன் மணிமறுகில் வந்தணுகத் :- தாழ்குழலு
450. முற்ற நினைந்தவெல்லாம் முன்வந்து கைபுகுதப்
பெற்றவள்போல் வந்து பெரிதிறைஞ்சி:-பொற்றொடியாள்
451. துய்ய புரிநூலும் தோளும் திருமார்பும்
மையல் பெருக வரநோக்கித் :- தையலாள்
452. ஈசன்தன் மார்புநல் எண்தோளும் நீங்காத
வாச நறுங்கொன்றை மாலையே :- பாசறையில்
453. வீசு பனிநீரும் மிக்க அகில் சந்தனமும்
பூச உனக்குப் பொறுக்குமே :- வீசிவரும்
454. போதாரும் தென்றல் புகுதுகைக்கு மாளிகையின்
வாதா யணந்திறந்து வைப்பையே :- நாதம்
455. அளவே அளவேயென்(று) ஆயரிரா ஏதும்
துளைவேய் உனக்குச் சுடாதே :- குளிர
456. அடுத்த செழுங்கரீ ராலே படுத்த
படுக்கை சருகு படாதே - கடக்கவரி (து)
457. ஆயவிரி கங்குல் அடல்மா மதன்சொரியும்
சாயகங்கள் உன்மீது தையாவே :- மாய இரா
458. வெண்ணிலா ஊழி எரித்தாலும் இங்குனக்குத்
தண்ணிலா ஏதுந் தழலாதே :- நண்ணுமயல்
459. அய்ய விடையாரும் அன்னையரும் தாமொறுக்கும்
வெய்ய உரைகேட்க வேண்டாவே :- பையவரும்
460. சேவின் மணியிசைக்கும் தீரா அலைகடற்கும்
கூவும் குயிலுக்கும் கூசாயே :- மேவியநின்
461. முன்றில் உயர்பனையின் மூரி மடற்குடம்பை
அன்றில் அரிக்குரற்கும் அஞ்சாயே :- என்றாலும்
462. வெய்ய பசலை விளைவானேன் மேனியெங்கும்
துய்யமலர்க் கண்ணீர் சொரிவானேன் :- செய்யவங்கை
463. வண்டு விழுவானேன் மற்றெனக்குச் சொல்லென்று
கெண்டை விழிமாது கேட்பளவில் :- திண்டிறல்வேள்
464. காவி ஒழிந்த கணைசொரிந்தான் அவ்வளவில்
தேவர்கள் நாதன் தெருவகன்றான் :- பாவைமேல்
465. ஆர வடமும் அணிந்தார் குளிர்ந்தபனி
நீரும் மடவார் நிரப்பினார் :- பேரிளம்பெண்
466. திண்மை மதனன் செலுத்துகின்ற பேராண்மை
பெண்மை யழகின் பெரும்பெருக்குத் :- தண்மலரோன்
467. நாவுமளவிறந்த ஞானத்தாற் பேரழகாற்
பூவுமரசாளப் போதுவாள் :- தேவர்
468. அரச னிமையாத வாயிரங்கண் சூழத்
தருநிழலில் வாழத் தகுவாள் :- விரவி
469. யினிய கலவி நலமெல்லா மதனன்
மனைவியையுங் கற்பிக்க வல்லாள் :- கனைகடல்சூழ்
470. பாரைப் பெரிதுழைக்கப் பண்ணிப் பழையசுர
ரூரைப் பெரிதுழைக்க வொட்டாமல் :- வாரிட்டுக்
471. கட்டுண் டனமென்று நாணிக் கவிழ்ந்துதலை
யிட்டனபோற் சாய்ந்த விளமுலையால் :- கிட்டரிய
472. சைவப் பெருமை தமிழ் நாடறிவித்த
தெய்வப்புலவன் றிருமுறையுஞ் :- வெவ்வமணர்
473. ஈருமத யானைக் கிடும்போது மஞ்செழுத்தைத்
தேருமரசன் றிருமுறையுஞ் : சேரனுடன்
474. அன்று கயிலைக் கதிமதவெள் ளானையின்மேற்
சென்றபெருமான் றிருமுறையுந் :- தென்றிசையின்
475. மாடப் பெருந்துறையில் வந்த வருட்கோலந்
தேடித் திரிந்தோன் றிருமுறையுங் :- கூடவினி
476. தோதி யவர்கரு வுள்ளக் கருத்தினுள
கோதி னிலைமையெல்லாங் கும்பிட்டுச் :- சோதிதிகழ்
477. அஞ்செழுத்தும் ஏகம்ப ராடுந் திருக்கூத்து
நெஞ்சழுத்தி வைக்கு நிலைமையாள் :- மஞ்சு
478. பொருந்துமணி மாளிகையிற் பூங்கவரி வீசு
விரும்புமணி யாசனத்தின் மீதே :- யிருந்தெவரும்
479. பேச வரிய பிரானார் திருவார்த்தை
யாசையுடன் கேட்புழிவந் தாங்கொருத்தி :- வாசலின்க
480. நின்றா னொருமறையோ நீறணிந்த கோலமுடன்
என்றாள் வரவிடுவை யென்றுரைத்துச் :- சென்றெதிர்கொண்
481. டங்கை குவித்தோ ரரியா சனத்தில்வைத் (து)
எங்கடவம் வந்தவா ரென்றுரைசெய்து :- அங்கமுடன்
482. முன்னை மறைநூல் முதலாய வெக்கலையு
நின்னி லறிவார் நிலத்தில்லை :- மின்னுசடை
483. மீச னிலைமைக்கு மேனையிமை யோர்நிலைக்கும்
வாசி யுரைதெளியும் வாறென்னப் :- பூசுரனும்
484. என்னிலைமை சோதிக்க வென்றோ விதுசொன்னாய்
நன்னுதலே யென்று நகைசெய்யா :- வுன்னி
485. யிதனை யிதனுடனே யெண்ணலா மென்னு
மதனை வினவுதலே யன்றி :- மதியதனில்
486. எண்ணமிலா தார்போல வெல்லா மினிதுணர்ந்த
பெண்ணமுதே கேட்கப் பெறுதியோ :- மண்ணுலகிற்
487. குன்றி தனையொருபொற் குன்ற முடனிகரும்
என்று திரிவாரை யென்செயலாந் :- துன்றிருள்போம்
488. விஞ்சு சுடருடைத்தாய் மின்மினியே வந்துதிக்குஞ்
செஞ்சுடரி னென்பாரைச் செய்யுமதென் :- றஞ்சமென
489. கல்லா னிழலிருந்த கண்ணுதலார் தம்முடனே
எல்லா ரையுந்தேவ ரென்றுரைத்த :- னல்லாயொப்(பு)
490. ஏதும் நிகரா விரும்பினையும் பொன்னினையுந்
தாது வெனவுரைக்குந் தன்மைகாண் :- மீதுலவு
491. நீடு சுடராழி நிலத்தேரி லீரிரண்டு
பாடு சுருதிப் பரிபூட்டித் :- தோடார்
492. நளினத்துப் பாக னடத்த வெரிவாய்த்
துளவப் பகழி தொடுத்துக் :- கொளுவியநாண்
493. மூரி யரவாக மூதண்ட முந்தாங்கு
மேரு வெனுஞ்சயிலம் வில்லாக :- வார்வமுள
494. மூவ ருயிர்வாழ முப்புரமு நீறாக
யாவர் பொருதா ரிமையோரிற் :- றேவர்
495. பழித்த பெருவேள்வி பழாக வாள்விட்
டழித்த விமையவர்வே றார்தான் :- இழைத்து
496. வதைப்பான் வருங்கூற்றை மார்க்கண்டர்க் காக
வுதைத்தா ரிவரல்லா துண்டோ :- வெதிர்த்த
497. கழற்கான் மதன்மாளக் கண்மலரால் வெய்ய
வழற்றானை யேவினா ரார்தான் :- நிழற்பொற்
498. கலையா னிடந்திட்ட கண்ணுக்கோ ராழி
விலையாக நல்கினார் வேறார் :- நிலையாகத்
499. துன்னு மொருசிலந்தி சோணாடுங் காவிரியு
மன்னி யரசாள வைத்தவரார் :- பன்னெடுநாள்
500. தேடி யிருவர் திரியத் தெரியாமல்
நீடு சுடர்வடிவாய் நின்றவரார் :- ஆடலென
501. வுங்காரஞ் செய்தே யுலகுண்ட மாலயனைச்
சங்காரஞ் செய்துபின்னுந் தந்தவரார் :- பங்கயன்மால்
502. வீந்த சுடலை விபூதி தரித்திருவர்
ஆர்ந்ததலை மாலை யணிந்தவரார் :- மாய்ந்திடவே
503. நாரா யணருடலு நாலுமுக னாருடலுங்
கூராய சூலமிசைக் கொண்டவரார் :- சேர
504. வெரிந்த பிறையெயிற்றி னீரைந்து வாயும்
பரந்து செழுங்குருதி பாய :- நெரிந்தொருவன்
505. மான்று கிடக்க மலையான் மகளுடனே
யூன்று விரலொன் றுடையவரார் :- தோன்றியடல்
506. ஓத விடமுன் டுபயநிறத் தாமரைமேற்
கோதையர்க்குத் தாலி கொடுத்தவரார் :- மாதவனைக்
507. கூடி யயனைக் கொடுத்தவரார் மோகினிபால்
நாடுமெழிற் சாத்தனைமு னல்கினரார் :- பாடார்ந்த
508. புத்தேளி ரென்பைப் புனைந்தவரா ரல்லினுமை
கைத்தாளங் கொட்டநடங் காண்பவரார் :- மத்தமுறும்
509. ஆதிநெடு மாலுதிர மத்தனையுங் கைக்கலத்திற்
பாதிதனி லேநிறையப் பண்ணினரார் :- வேதமுடன்
510. றுண்ணெனவே யாழிபுகுஞ் சோமுகனைச் செற்றிடுமீன்
கண்ணை யுகிறாற் களைந்தவரார் :- கண்ணனார்
511. ராமைவடி வந்தனிலு மாதிவரா கந்தனிலு
மாமுதுகோட் டைக்கரத்தால் வாங்கினரார்:- தூமறையும்
512. பேசரிய சிம்புளாய்ப் பேரா டகனையடுங்
கேசரியை வள்ளுகிறால் கீண்டவரார் : கூசா(து)
513. தடருஞ் சலந்தரனை யன்றாழி சூட்டி
யுடலம் பிளந்தவர்வே றுண்டோ :- படிவிண்
514. முழுதளந்த மாயன் முதுகெலும்பைச் செந்நீ
ரொழுகவே வாங்கினர்வே றுண்டோ:- பழுதென்
515. தடமலரோ னுச்சித் தலையை யுகிரால்
உடனே குறைத்தவர்வே றுண்டோ :- நெடுவிசும்பு
516. முற்றும் புதைத்தலையான் மோதுஞ் சுரநதியைச்
சுற்றுஞ் சடையிற் சுவறுவித்து :- மற்றும்
517. பகீரதனின் றூழிநாட் பாதமலர் போற்ற
மகீதலத்தே போதுவித்தார் மற்றார் :- புகழைச்
518. செலுத்தச் சிறுத்தொண்டர் தேவியறுத் தாக்கிக்
கலத்திற் படைத்த கறியைத் :- தலைக்கிட்ட
519. சுட்டியு மாலைச் சுரிகுஞ் சியுமுத்துங்
கட்டியை நல்குங் கனிவாயு :- மிட்டதொரு
520. வாளியுங் காது மருங்கும் மணிவடமுந்
தாளிணையஞ் செம்பொற் சதங்கையுமாய் :- மீளப்
521. பிறப்பித் தவர்தம் பெரும்பிறப்பை யெல்லா
மறுப்பிக்க வல்லவர்தா மற்றார் :- நறைக்கொன்றை
522. யாதி தனையொழிய வாறாறு தத்துவத்தின்
மீது மகிழ்ந்திருக்கும் விண்ணவரார் :- மாதிற்
523. பொருந்தி விடையாகப் பூந்துழாய் மாலை
விரும்பு நடத்தினார் வேறார் :- அரன்பெருமை
524. யின்னம் பலகோடி யில்லையோ யாமிருந்து
சொன்ன பொழுதே தொலையுமோ :- வுன்னரிய
525. மூவா முதலா முதல்வனையு மூவுலகிற்
சாவார் பிறப்பார்கள் தங்களையுந் :- தேவாக
526. வொக்க நினைவாருக் கல்லவோ வோரேழு
மிக்க நரகம் விதித்ததுகாண் :- மைக்கண்
527. மருவார் குழலியென மற்றவளு மந்தப்
பெருவாழ் வுடைய பிரானைப் :- பரவியவர்
528. தெய்வ வெழுத்தைந்து மோதித் திருநீறு
மெய்யி லணிய விதியற்று :- மையறரும்
529. எட்டெழுத்தை யோதி யிடுவார்மண் ணெப்பொழுதுங்
கட்டுரைக்க வென்னக் கவுதமனா :- ரிட்டபெருஞ்
530. சாபத் தியல்பு தருமா மறையோர்செய்
பாபக் கலிகாலப் பண்புகாண் :- கோபவிதழ்
531. மின்னே யெனச்சிறந்தும் வேதியரா கிப்பிறந்தும்
என்னே பெருமை யிருந்தவா :- முன்னை
532. மறையினெழுத் தைந்தும் வாயார வோதி
நிறைய வணிந்துதிரு நீறும் :- பிறவிதனை
533. வாட்ட வறியாமல் வாளாப் பிறவிதனை
யீட்டுவதே பாவ மெனவுரைத்து :- வேட்டவெலா
534. மொண்டொடியும் வேதியனுக் குள்ள மகிழ்ந்தளித்து
வண்டணையும் பூவணைமேல் வந்திருப்ப :- பண்டுவிட
535. முண்ட பிரான் பாகத்தொருத்தி முலைத்தழும்பு
கொண்ட பிரானாடக் குழுவெல்லாந் :- தண்டகமா
536. நன்னாட்டுத் தேவர்க ணாயகனார் சோணாட்டின்
முன்னாட்டு மன்றின் முதலியார் :- தென்னாட்டிற்
537. சூடு மபிடேகச் சொக்கனார் துங்கமணி
மாட நெடுவீதி வந்தணுக :- வாடகப்பூஞ்
538. சோதிச் சிலம்புக்குஞ் சூழ்பா டகத்துக்கும்
பாதத் தழகைப் பகிராதே :- மோதிளநீர்
539. ஆன முலையழகை யாரவிள வண்டலுக்கும்
நானநறுந் தொய்யலுக்கு நல்காதே :- வானநிலா
540. ஆர மணித்தோ ளழகைக் கரும்புக்கும்
ஈரமிலா வல்லிக்கு மீயாதே :- தாரைப்
541. பலவுநிரைத் தன்னதொடைப் பாளைக் களகம்
குலவு மழகைக் கொடாதே :- கலவிநலம்
542. கொண்டதிரு மார்புங் குளிர்ந்த திருச்சாந்தும்
வண்டணியுங் கொன்றை மலர்த்தாரும்:- தொண்டருள
543. அந்தா மரைமலரை யானந்தத் தாண்டவஞ்செய்
செந்தா மரையுந் திருச்சிலம்பும் :- சிந்தை
544. மகிழ மகிழ வணங்கிவளை யெல்லாம்
நெகிழ நெகிழவெதிர் நின்று :- சகமேற்
545. பிறவாம லெண்ணிறந்த பேரண்டம் மாய்ந்தும்
இறவாத மேனி யிறைவா :- உறவாய்ச்
546. சிரித்து முகம் பார்த்துத் திருக்கொன்றை மாலை
தரித்ததிருத் தோளழகைத் தாரீர் :- ஒருத்திகுறி
547. ஆக மிசையில்லை யாமாகி லிப்பொழுதே
ஏக வுமைவிட் டிருப்பேனா :- ஆகிலுநான்
548. கட்டி யிறுகக் கலந்துருகி ஒன்றாகி
இட்ட குறியழித்தால் யார்தவிப்பார் :- பட்டதுபண்டு
549. ஆவல்கெடப் புல்லி அகலாமல் யான்வளைத்தால்
ஏவரெனைத் தள்ளியுமை ஏகுவிப்பார் :- மேவியெனைப்
550. புல்லி ஒருக்காலும் போகா வகைபிணித்து
வல்ல படிகாண மாட்டேனோ :- நல்லமட
551. நாண்கொண்ட தாருவன நங்கையரைப் போலமனம்
வீண்கொண்டு போக விடுவேனோ :- மாண்கொண்டு
552. பூத்ததிரு நீறும் புயமும் திருமார்பும்
ஏத்து மவர்க்கருளீர் என்னென்று :- வாய்த்தசொலால்
553. ஆவதெல்லாம் பார்த்தால் அவளும் தழுவுகைக்கங்(கு)
ஆவதெல்லாம் பார்த்தால் லவைவருமோ :- ஆவி
554. உருகும் வகைகாதத் துண்டாக நோக்கி
விரவுநகை கொண்டேகி விட்டார் :- தரளம்
555. இடையும் நகையார் வரெழுவர் ரிங்ஙன்
கொடிய பெருங்காதல் கொள்ள :- முடிமேல்
556. நிலாவுடையான் தேமா நிழலுடையான் சேரன்
உலாவுடையான் போந்தா னுலா.
முற்றும்.