logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது

(மஹாவித்வான் திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

காப்பு
3322.
வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
பிரமணிய தேசிகன்பாற் பெட்புற்-றுரமணியி
னாய்ந்துதஞ்ச மாயொருகோட் டண்ண லருட்கிலக்கு
வாய்ந்துநெஞ்சே தூதுசென்று வா.

நூல்
3323
பூமேவு செங்கமலப் பொற்றவிசின் மேயவனு
மாமேவு மார்பினெடு மாயவனு-மோமே    1
வரும்பொருட்பே றெய்து மருண்ஞான சித்தி
தருங்கரும பூமியெனச் சாற்ற-லொருங்குணர்ந்து    2
நால்வேத மோது நகுநீற்றா லைந்துபதத்
தால்வேறு மம்மரையென் றாயாமே-மேல்கீழு    3
மன்னமு மேனமு மாய்ப்பறந் தும்புகுந்து
மின்னமுங் காணா வியல்பினான்-முன்னமே    4
பாசங் கலந்த பசுக்களி லோர்வகைக்கா
நேசங் கலந்த நிகழ்ச்சியால்-வாச    5
மளையு மிதழிமதி யஞ்சடில முன்னா
விளையும் பலவும் விலக்கி-வளையும்    6
பிறைதவழு மாடமலி பேரா வடுதண்
டுறைதவழும் புண்ணியத்தாற் றோற்று-மிறைவ    7
னொருமா னெமக்கொளிக்க வோர்கை யமரு
மொருமா னொளித்த வொருவன்-பெருமான்    8
மதிமறைத்த மாசெக்கு மாற்றி யருள
மதிமறைத்த மாசடையா வள்ள-னிதிய    9
மிருள்கண்ட யாமவ் விருள்காணா வண்ண
மிருள்கண்டங் காட்டா திருப்போன்-பொருள்கண்ட    10
மானிடனே யென்ன மருவி யிருந்தாலு
மானிடனே யென்ன வயங்குவா-னீனவுல    11
காயதரைங் கந்த மறுப்பவரொன் றல்லாமுட்
டேயதரென் பார்பரனா மென்பாருஞ்-சேய்மையிற்கண்    12
டாலுமிரு கைதலைமே லாக்கிமன நெக்குருகிச்
சாலும்வணக் கஞ்செய் தவாச்சிறப்பான்-வேலரசர்    13
தன்னடிநீ ழல்வைகத் தாவாத் திருவரசின்
மன்னடிநீ ழல்வைகு மாதேவன்-றுன்னடியார்    14
நந்தான மென்கயிலை நந்திமுதன் மெய்கண்டான்
சந்தான மோங்கத் தழைத்தருள்வோன்-முந்தான*    15
...... ........ ........ ......... ***
*** (இதற்குப் பின்னுள்ள 4-கண்ணிகளடங்கியபகுதி ஏட்டிற் சிதைந்து
போய்விட்டமையாலும் வேறு பிரதி அகப்படாமையாலும் அவை
இங்கே பதிப்பிக்கப்படவில்லை. )    16-19
எண்ணி யுழலு மிருளகற்ற வெங்கள்பா
னண்ணி யமரு நகுபரிதி-கண்ணிய    20
வாலங் கலந்தசுவை யாரமுத மானாலு
மாலங் கலவாத வாரமுதஞ்-சாலு    21
மறப்புக் குணத்தை மருவியுழ லெங்கள்
பிறப்புத் தபப்பிறந்த பெம்மான்-சிறப்புறலாற்    22
பொன்னை யினிதளித்துப் போகவென்னா தெங்களுக்குத்
தன்னை யினிதளிக்குந் தம்பிரான்-முன்மறைத்த    23
தொன்றேயென் றோதி யொழித்தெம்மை வேறுபடுத்
தொன்றே யருள்புரியு மொன்றானா-னன்றதோர்    24
கற்றார் புரிபிழையுங் கைகுவித்துக் கூப்பிடுத
லற்றார் குணமு மறமறப்பான்-பற்றாச்    25
சுரவடிவி லெங்கண்மனந் தோயாமை யெண்ணி
நரவடிவங் கொண்டுவந்த நம்மான்-விரவுபுழ    26
மென்பயிர் போல விடயத் தரிப்புண்டு
துன்புறுவேங் கட்கோர் துணையானா-னன்பமையு    27
நாதாந்த முத்தியருண் ஞானவினோ தன்றெளிவாம்
வேதாந்தன் பேறொன்றும் வேண்டாதான்-போத    28
நரனென் றிருந்தாலு ஞானமிலா தாரு
மரனென் றறிய வவிர்வா-னுரனுடைய    29
வல்லரக்க னேற்று மலையாத தாய்ப்புரத்தி
னெல்லரக்க வாங்க லியலாதாய்ச்-சொல்லரக்கு    30
மிக்க புகழாழி மேவிச் சுழலாதாய்ப்
பக்க மரியப் படாததாய்த்-தொக்ககய    31
லாழி கரவாதா யான்ற தமிழ்முனிகைப்
பாழியறிந் தஞ்சப் படாததாய்-வாழி    32
பொறையருவி யெஞ்ஞான்றும் போற்றிவறந் தாலு
நிறையும்வள நல்கு நிலைத்தாய்-மறைபுகல    33
வாய்ந்ததரு வைந்தோ டழகியசிந் தாமணியும்
வாய்ந்த பெருங்கருணை மாமலையான்-றோய்ந்தகா    34
ராணவந் தீர்ந்த வறிவாங் குறிஞ்சியெனு
நீணவ மாயநில நின்றெழுந்து-காணவெழு    35
காமமெனும் பாலை கடந்தேறி மாயையெனு
நாமநெடு முல்லை நகப்புகுந்தே-யேமமென    36
வுற்ற பசுக்கவர்ந்தாங் கோங்காய ராயவைவர்
முற்ற வுஞற்றுதொழின் மோதியே-செற்ற    37
வுளமா மருதநிலத் துற்று விடயக்
குளமாய வெல்லாங் குலைத்துத்-தளமாருங்    38
கண்ணாய நெய்தல் கலந்துமலக் கட்டுற்றா
ரண்ணாமே யெவ்விடனு மாய்ப்பெருகி-யெண்ணா    39
நிலமா விசும்பு நிறைந்தென்றும் வற்றா
நலமாமா னந்த நதியான்-புலமாரு    40
முப்பகுதி யாயவுயிர் முத்தி பெறவாழு
முப்பகுதி மாயை முழுநாடன்-செப்பரிய    41
மெய்யாய வன்பர் விடயக் கரவருறல்
செய்யா மனமாந் திருநகரான்-கொய்யா    42
மரைமல ராளி மனச்சாலை நின்றும்
விரையநால் வாயில் வெளிப்பட்-டுரைசிறந்து    43
மண்ணக மெல்லா மருவிப் பரந்தோடி
விண்ணக மெல்லாம் விராய்த்தாவி-யெண்ண    44
வொருநாட்டிற் காடா யுறைகுவதல் லாம
லொருநாட்டில் வெற்பா யுறைந்தும்-பெருநாட்டி    45
லேனையபோல் வெந்புறத்தி லேந்துவதல் லாதுதலை
மேனை யுறாது மிகத்தரித்துஞ் - சோனைக்    46
கடலுலக மீர்த்துக் கடுகி நடக்கு
முடலின் மறைப்பரிமா வுள்ளா - னடல்சேரு    47
மூலமல வேரென்னு மொய்கூர் தறிமுறித்துச்
சால மலமாந் தளையறுத்து - ஞாலமுத    48
லாறாறு தத்துவ மாய படைதுரந்து
மாறாத கன்ம மரஞ்சாய்த்துக் - கூறு    49
மனமாம் பரிமாவை மாய்த்துமத வேள்கைச்
சினமாங் கரும்பொடியச் சீறி - யினமாங்    50
குடருங் கொழுவுங் குருதியு மென்புந்
தொடரு நரம்பொடு தோலு - மிடையிடையே    51
வைத்த தடியும் வழும்பும் வெளித்தோற்ற
மொய்த்த கருந்தோலின் மூட்டொழியக் - கைத்து    52
மடமா தரைமிதித்து வைத்த சமயத்
தடமார் படுகுழிசா ராம - லிடமார்    53
குறையாத வானந்தக் கொள்ளைநீ ராடி
மறையா கமமா மணிக - ணிறைய    54
விருபாலுந் தூங்கி யிரட்ட வெழுந்து
வருபான்மை ஞானமத மாவா - னொருநான்கு    55
சொல்லாய பூவைச் சுவையாய தேனொழுகப்
புல்லா வழுவாய புல்லியெலா -- மில்லாமற்    56
கற்று நிரம்பாக் கவியாங் கவிகளெலா
முற்று வருத்தா வுரவடையா - முற்றுமுண    57
ரான்றோ ரெனச்சொ லளிக்கணங்கண் மொய்த்தளையச்
சான்றோர்சொ லன்பாந் தகுநாரால் - வான்றோயுஞ்    58
செந்நா வெனுங்கரத்தாற் சீர்தொடுத்து வாட்டமொன்று
மன்னா வகையமைபா மாலையான் - பன்னயமார்    59
சித்தாந்த சைவமொன்றே தேற்றமற் றுள்ளவெலாம்
பித்தாந்த மென்றெடுத்துப் பேசுதல்போ - லொத்தபல    60
வண்டாடு மாலையொடு மண்ணின்று வான்கிழித்துக்
கொண்டாடு காவிக் கொடியாளன்-றொண்டர்    61
கடியாத பேரொலியாய்க் கற்றோராற் சொல்லி
முடியாத நாத முரசான் - குடியாகுந்    62
தானமல ராளிமுன்னோர் தங்களைக்கொண் டைந்துதொழி
லானவைநன் காற்றுவிக்கு மாணையான்-ஞான    63
வரமணிய வாவினரே வாஞ்சித் திடுஞ்சுப்
பிரமணிய தேசிகனெம் பெம்மா-னுரமா    64
ரொருநமச்சி வாய னுயர்நமச்சி வாயன்
குருநமச்சி வாயனெங் கோமா-னருள்சான்    65
மகர மதியின் வயங்குமுத னாளி
னிகரிலபி டேகமுத னீடும்-புகரிலா    66
வாரா தனங்கொண் டருளிமறு நாட்பகலி
லேரா ரடியவரெண் ணில்லாரோ-டோருமமு    67
துண்டுளார் யோகசித்தி யுற்றுளார் ஞானசித்தி
கண்டுளா ராவரெனக் கைகுவித்து-மண்டிவரு    68
மான்றவடி யாரோ டறுசுவை யாரமுது
தோன்ற வினிதுகை தொட்டருளிச்-சான்றவரு    69
ணூலை யினிது நுனித்தமதி யார்க்குப்பின்
வோலை முழுதும் விரித்தருளி-மாலைவர    70
மாமுனிவர் தூய்மை மருவுநறு நீராட்டி
யேமுறுமெய் யொற்றாடை யிட்டதற்பின்-காமன்வலி    71
வென்றதிறங் காட்டி விளங்குறுகற் றோயாடை
யொன்ற வரையி லுடுத்தருளி-நன்றமையு    72
மாதனத்து மேவி யருகமரும் வட்டகையின்
மாதனத்தி னாளும் வயங்குவதாய்-மோதும்    73
பசுமலநீ றாக்கியுயர் பண்பே யருளப்
பசுமலநீ றாக்கியமை பண்பாய்-வசுவி    74
னடுத்தவையெல் லாம்புனித மாக்குதிரு வெண்ணீ
றெடுத்தவைய வங்குலவ வேற்றி-விடுத்தசுட    75
ரொன்பான் மணியு மொளிர்தருசிந் தாமணியும்
வன்பார் கவுத்துவ மாமணியு-மன்பி    76
லொருதிரண மாக்கு முருத்திராக் கங்கள்
பொருவில் சிரமுதலாப் பூண்டு-கருது    77
மிருவ ரழுக்கறுப்ப வேற்றசடா மோலி
யிருவரிரு கைகொடுப்ப தேற்றே-யொருவரினி    78
தெங்கண் மணிமோலி யென்னவொளிர் பாதுகைமற்
றங்கணெதிர் வைப்ப வவற்றிவர்ந்து-துங்க    79
முரசு முழவ முருடு திமிலை
பரசு தடாரி படகம்-விரசு    80
பலவு மெழுந்து பரம்பி முழங்க
நிலவு பிறவு நிகழக்-குலவு    81
திருவா வடுதுறைவாழ் செல்வன்வந்தா னெம்மு
ளொருவா வொருவன்வந்தா னுற்றார்-மருவு    82
பிறப்பு முழுதொழிக்கும் பேராளன் வந்தான்
சிறப்பருள் செம்மல்வந்தான் றிண்பா-ருறப்புகுந்த    83
துங்க மலிஞான சூரியன்வந் தானுயிரின்
பங்க மறுக்கும் பரன்வந்தா-னெங்கள்    84
குருசாமி வந்தான் குணக்குன்று வந்தா
னருண்ஞான மூர்த்திவந்தா னன்பர்-பெருவாழ்வாந்    85
தம்பிரான் வந்தான் றழைசுப் பிரமணிய
நம்பிரான் வந்தா னலமாரு-மெம்பிரான்    86
வந்தான்வந் தானென்று மாண்பார் திருச்சின்ன
நந்தா வொலியெழுப்பி நன்குவர-முந்தா    87
தரம்பெருக வாலவட்டந் தாலவட்டம் பற்றி
வரம்பெருக வோர்பான் மலிய-நிரம்பு    88
முழுமதிய மேலமர்வான் முந்திமுயன் றென்ன
வெழுகவிகை செய்யுநிழ லேய்ப்பத்-தழுவு    89
பெரும்புகழ்வெவ் வேறாய்ப் பெயர்ந்து பெயர்ந்து
விரும்பலுறத் துள்ளும் விதம்போ-லரும்பு    90
பவளக்காற் சாமரைகள் பற்பலவு மொய்த்துத்
திவளத் தலைபனிப்புச் செய்ய-விவளவெனாக்    91
கோணாத தண்டமொடு கோணலுறு தண்டமு
நாணாளு நீங்கா நலங்காட்டப்-பேணா    92
வலர்மகர தோரணங்க ளாயு மொலியல்
பலவு நெருங்கிப் பரம்பக்-குலவுதிற    93
லோதுவார் பல்லோ ரொருங்குதே வாரங்க
ளோதுவா ராய்த்தாள மொத்தலொடு-போதவெளி    94
வந்து மணிச்சிவிகை வாயோர் களங்கமிலா
விந்துநிறைந் தென்ன வெழுந்தருளி-முந்து    95
மனைதுறந்தார் செஞ்சடிலம் வைத்தாரஃ தின்றி
நினையு மழித்தலுற்ற நீரார்-புனையுமரைக்    96
கீளொடு கோவணத்தார் கேடில்கர பாத்திரத்தா
ராளொடுவாழ் வாமில் லறத்தமர்ந்தார்-நாளுஞ்    97
சரியை கிரியை தவயோக ஞானம்
விரியவனுட் டிக்கும் விருப்போர்-தெரிய    98
வுலகம் பழியா துறுவேடம் பூண்டா
ருலகம் பழிக்க வுவப்பா-ரிலகு    99
திரிபுண் டரத்தார் திகழ்கண் மணியார்
விரிதரவுத் தூளனமே மேயார்-பரியு    100
மரனடியார் தொண்டி னமைந்தா ரளவாச்
சுரர்புகழ்கோ யிற்பணியே சூழ்வார்-விரவு    101
மடியாருக் கன்னமுத லாதரித்து நல்கு
நெடியார் தியான நிறைந்தார்-கடியார்    102
மலர்தொடுப்பார் தீபம் வயக்குவார் மற்றும்
பலர்புகழுஞ் சாத்திரங்கள் பார்ப்பார்-நிலவுபொரு    103
ளாய்வார் வினவுவா ரங்கைகொட்டி நட்டமிட்டுத்
தோய்வாரா னந்தத் தொடுகடலில்-வாய்வார்    104
துதியா ரயன்முதலாச் சொல்லும் பிறரை
மதியா ரருளே மதிப்பார் - கதியா    105
ரிவர்மு னனைவோரு மேத்திக்கை கூப்பிக்
கவரடையா நெஞ்சங் கரைந்து - சிவசிவவென்    106
றார்ப்பாரோர் சில்லோ ரரகரவென் றானந்தம்
போர்ப்பாரோர் சில்லோர் புடைநெருங்க - வேர்ச்சிவிகை    107
செம்மையுறு காட்சிச் சிவிகை கொடுத்தடைந்தார்
தம்மை யியக்குவார் தாங்கிவர - வெம்மைக்    108
கதிர்பன் னிருகோடி காணவெளிப் பட்ட
முதிர்விற் பெருந்தீப மொய்ப்ப - வதிர்சிலம்பிற்    109
பொன்னங்கொம் பன்னார் புகுந்துநீ ராசனஞ்செய்
தன்னம் பெயர்ந்தாங் கயலொதுங்க - முன்னம்    110
விரைமலர்கள் சிந்தி விரைச்சாந்தம் வாரிப்
புரையறப்பெய் வாரும் பொலிய - வுரைசிறந்த    111
மெய்கண்டான் சந்ததிக்கு மேன்மேல் விளக்கமுறப்
பெய்கண்டா னாய பெருமானே - வையம்    112
புகழ வருங்குரவர் போரேறே ஞானந்
திகழ வவதரித்த தேவே - யிகழ்வில்    113
வரமணியே யெங்கள்பெரு வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகனே பெட்பி-னுரமணிய    114
முன்னமே செய்தோ முயங்கு தவத்தையினி
யென்ன குறையுடையோ மென்பாருஞ்-சொன்னகதிர்    115
முன்னமிரு ணின்றாலு முற்று முணர்ந்தோய்நின்
முன்னமிரு ணில்லாது முற்றுமென்பார்-நன்னயமார்    116
சித்தாந்த சைவமன்றிச் சேரமற் றுள்ளவெல்லாம்
பித்தாந்த மேலும் பிறப்பென்பா-ரித்தரணி    117
பெற்றபே றுண்டோ பெருவானி னீபயில
லுற்றநா ளாதி யுரையென்பார்-கற்ற    118
குருமணிநீ யாரையுமாட் கொண்டு புரக்க
வருமணியோ வென்று வகுப்பார்-பெருகொளிசால்    119
விண்மணியே ஞான விளக்கே யடியேங்கள்
கண்மணியே யென்று கரைதருவா-ரெண்ணுமுழு    120
மாயப் பெருஞ்சாரு வாகன்முத லோருமரு
ளேயப் பொலிவா ரினியென்பார்-தோயும்    121
பகுதி யளவே பகரைந் திரவோர்
தகுதிவெண்ணீ றென்றணியச் சார்ந்தார்-மிகுதி    122
யுனியா மெடுத்திங் குரைப்பதெவ னெல்லா
மினிமாறில் சைவமே யென்பார்-நனிபுரியும்    123
வேலையொழிந் தான்பிரமன் வெய்ய நரகிலிடும்
வேலையொழிந் தானியமன் மேன்மேலுஞ்-சாலவருள்    124
வீசி யனைத்துயிர்க்கு மெய்ச்சுப் பிரமணிய
தேசிகன் செய்யுந் திறத்தென்பார்-மாசி    125
றிருவா வடுதுறையே திக்கனைத்தும் போற்றப்
பொருவாத தென்று புகல்வா-ரருள்சான்மா    126
சில்லா மணியேமற் றிச்சுப் பிரமணியீ
தல்லா துரைப்பதுள தாங்கொலென்பார்-வல்லபிரா    127
னெற்றிக்க ணீத்தமரு நேய மெவனென்பார்
பற்றிக் கரும்புகொடு பையவந்து-முற்றி    128
யொருவே ளுடற்றாமை யேர்ந்தென்பா ரம்மை
யிருவாள் விழியுமிரு கையாற்-பெருகப்    129
புதையாமை தேர்ந்தென்பார் பொங்குதலை மாலை
யதையே னொழித்ததென்பா ராவா-கதைமாலும்    130
பங்கயனு முன்போற் பரனாம் பரனாமென்
சங்கையடை யாமையாற் றானென்பார்-பொங்கு    131
மதியொழித்த தென்னென்பார் மாசிலா ருக்கே
கதியருளற் கென்று கரைவார்-பொதியு    132
மிதழிமணந் தோளிலுறா தென்னென்பார் செவ்வா
யதுகமழ்த லாலென் றறைவார்-முதுமானொன்    133
றோட்டிவிட்ட தென்னென்பா ரோட்டிவிடா னேலுயிர்கள்
வீட்டி லுறலெவ் விதமென்பா-ரீட்டமுறு    134
மாசடையா னென்னும் வழக்கில்லையென் பாரென்று
மாசடையா னென்னல் வழக்கென்பார்-பேசுமொரு    135
தோகையிடப் பாலனெனச் சொல்லாமென் பாரரைசூழ்
தோகையிடப் பாலனெனச் சொல்லுமென்பார்-வாகை    136
பரசுகைக்கொள் ளாத படியெவனென் பார்நம்
பரசுகைக்கொள் ளும்பரனே யென்பார்-விரசு    137
மருள்விடங்கண் டங்கழித்த வாறென்னோ வென்பா
ரருளமுதங் காணென் றறைவார்-தெருளு    138
மடிநிலந் தோய்குவதென் னாமென்பார் தோயா
விடினியமன் றண்டநம் மெய்யின்-முடியப்    139
படுமே யஃதுணர்ந்து பாரீரோ வென்பா
ரிடுமாறு சென்னிவைம்மி னென்பார்-வடுவரிய    140
னென்பதெவ னென்பார்மெய் யேகம ருள்ளிருந்
தன்பி னமுதுசெய்த தாலென்பா-ரின்பமிகு    141
மிந்தவிதம் யாரு மியம்பித் துதித்துவரப்
பந்த மகற்றும் பவனிவந்தா-னந்தப்    142
பொழுதொருநன் னெஞ்சமே போதுவா ரோடு
தொழுதுவரு மாறு துணிந்தே-யெழுதுமெழில்    143
வீதியிடைப் போந்தேன் விசயன் குனிசிலையான்
மோதி யிடுவதுள முன்னானா-யோதிப்    144
பனிமலர்கள் சாத்தியிரு பங்கயக்கை கூப்பி
முனிவுதவிர்ந் தேத்து முடியுங்-கனியு    145
நெருப்பைக் கரந்திருந்து நீறுகர வாது
விருப்பைச்செய் கின்ற விதத்தா-லொருப்படு    146
காரணத்தைக் காட்டாது காரியத்தைக் காட்டுமெனத்
தாரணியோ ரோதத் தகுநுதலும்-வார்புனற்பூ    147
வொன்றை மலர்த்துபுமற் றொன்றைக் குவித்தல்செயா
தென்று மலர்த்து மிருவிழியு-நன்றுமையாள்    148
கூந்தன் மணத்தினொடு கொள்ளா தடியரன்பாஞ்
சாந்த மணங்கொ டனிமூக்கும்-போந்தோ    149
ரியற்பகையார் பான்மனையை யீதியெமக் கென்ற
தயர்த்ததிரு வாயு மமையப்-பெயர்த்துமிழும்    150
வேடரெச்சி லூனடங்க மெல்லுந் திறந்தீர்ந்தும்
வாடலற்றுத் தோன்று மணிநகையுங்-கூடுபுர    151
மூன்று மவிய முகிழ்க்குந் திறமயர்த்துத்
தோன்றுஞ் சிரிப்புந் துணிபமைய-வான்றர    152
வொருத்தி பதித்த வுகிர்க்குறிகாட் டாது
திருத்தியக போலமுமான் சீறிப்-பொருத்தும்ர    153
பரவொலி யேலாது பற்றா வடியேம்
பரவொலியேற் குஞ்செவியும் பண்டே-விரவுறுமைர    154
வண்ண வடிவொழித்து வாட்டந் தவிர்த்தருளோர்
வண்ணவடி வோடமரு மாமுகமும்-பண்ணமையும்ர    155
பூணின்ப லொத்ததெனப் போற்றற் கிடங்கொடா
தேணி னமைந்த வெழிற்கழுத்து-நாணின்றிர    156
யேமாலை யென்ன வெலும்பணியா தெங்கள்வாய்ப்
பாமாலை சூடும் பணைத்தோளுங்-காமருமால்ர    157
கண்காணி னாணாக் கலங்கொள்விர லுண்மைநிலை
யெண்காணக் கொண்ட வெழிற்கரமு-மண்கார    158
ணொருகுறியு மில்லென் றிருகுறி யுற்று
வருதிறங்காட் டாதவகன் மார்பு-மொருவர்ர    159
மழவையரிந் தூட்டவெழும் வன்பசி தோற்றா
வழகின் வயிறு மமையப்-பழகதளுந்ர    160
திக்கும் பிணங்கத் திகழுங்கற் றோயாடை
நக்கு விளங்கு நலத்தரையும்-பக்குமலம்    161
விண்டொழியக் கூற்றுவன்போல் வெவ்வா ளரக்கன்போற்
றண்டுதல்செய் தோவாத் தளிரடியுங்-கண்டுநனி    162
யாசைப்பட் டேனெஞ்சே யந்தோவக் காரணத்தா
லாசைப்பட் டேனெனநா னாயினேன்-றேசுறமு    163
னன்னங்கா ணானைக்கண் டாரா மயக்கம்பூண்
டன் னங்கா ணாதவளே யாயினேன்-முன்னமொரு    164
கோலங்கா ணானைக் குறுகியிரு கைதொழுது
கோலங்கா ணாமை குற்றுகினேன்-சால    165
வளையாழி மாற்கீந்த வள்ளலைக் கண்டு
வளையாழி தோற்றுமனை வந்தேன்-விளையுமொரு    166
தாய்வெறுக்கப் பட்ட தகையானைக் கண்டடைந்து
தாய்வெறுக்கப் பட்ட தகையானே-னாயுந்    167
தனியானைக் கண்டு தனியாயி னேனென்
றுணிதீர நெஞ்சே சொலக்கேண்-முனியாமன்    168
முன்னு மவனை முயங்கும்வகை நீபுரிவாய்
மன்னுமுனைப் போன்றதுணை வாய்க்குமோ-பன்னுபல    169
வேதாக மங்கள் விதித்த விதியனைத்து
மேதாகு நீயியைவ தில்லையெனின்-மீதாரும்    170
யோக மிருநான்கு முன்னை வயப்படுத்தற்
காக முயலுவன வல்லவோ-போகமுறு<    171
தன்மைக்குஞ் செய்யுந் தவத்திற்குங் கற்றுணரு
நன்மைக்குங் கொள்ளுமொரு நட்பிற்கும்-வன்மைக்கு    172
மீகைக்கு மோர்த னியல்புணர்ந்து முத்திபுண
ரோகைக்கு நீயே யுறுதுணைகா-ணாகையுறு    173
மில்லறத்தா ரைத்துறவி லேற்றுவிப்பாய் மெய்த்துறவா
நல்லறத்தா ரைக்கீழ் நணுகுவிப்பாய்-சொல்லு    174
மறத்தைமற மாக வமைப்பாய் கொடிய
மறத்தையற மாக்குதற்கும் வல்லாய்-சிறப்பி    175
னொடுக்குதலே முத்தி யுனைப்பொறிவா யோட
விடுக்குதலே பந்தவினை மேலு-நடுக்குதலற்    176
றுன்னா லுயர்ந்தவரை யுன்னா விழிந்தவரை
யென்னா வளவிடுதற் கேயுமோ-பன்னாளு    177
மெம்மேனி யேனு மெடுத்தந்தி வானநிகர்
செம்மேனி யாளிவரச் செய்குவா-யம்மாநற்    178
றில்லைவா ழந்தணர்மா தேவ னொடுங்கலவ
வொல்லை யுயர்ந்ததுவு முண்மைநெறி-வல்லபெருங்    179
கோளாளர் நீலகண்டர் கோதை யொருத்திபுகல்
சூளா லிளமை துறந்ததுவும்-வாளா    180
ரியற்பகையார் தம்மனையை யீயேனென் னாது
மயற்பகையை நீத்துயர்ந்த வாறு-மயர்ப்பி    181
விளையான் குடிமாற ரெய்தி யிருளின்
முளைவாரி யன்னமிட்ட மொய்ம்புங் - கிளையோ    182
டமர்மெய்ப் பொருளா ரடாதந்தோ தத்தா
நமரென் றிடைவிலக்கு நண்புஞ் - சமர்செய்விறன்    183
மிண்ட ரடியாரை மேவாது போகியவன்
றொண்டர்புறம் பென்னச் சொலுந்துணிபு - மண்டர்பிரா    184
னேரேயோர் தட்டிலமர் நீதியார் பல்பொருளோ
டாராய வேறி யமர்ந்ததுவும் - பாரா    185
வெறிபத்தர் சீறி யிபமாதி மாய்த்து
மறிவற் றுயர்ந்தபெரு மாண்புங் - குறிபெற்ற    186
வேனாதி நாத ரிரும்பகைவ னெற்றியினீ
றானாமை கண்டுருகி யஞ்சியதும் - வானார்    187
கலைமலிந்த கண்ணப்பர் கண்ணிடந் தப்பு
நிலைமலிந்து பெற்ற நிலையு - முலைவில்    188
கலையர்மனை மங்கலப்பொன் கைக்கொடுநெற் கொள்ளார்
மலைவி றுணிபுற்ற மாண்பு - நிலைவளங்கூர்    189
கஞ்சாறர் மாவிரதர் கையின் மகள்கூந்த
லெஞ்சா தரிந்தெடுத் தீந்ததுவும் - வஞ்சவரி    190
வாள்கொண்டு தாயனார் வண்கழுத்து வேறாக்குங்
கோள்கொண்டு நின்ற குணச்செயலுந் - தாள்கொண்ட    191
வானாயர் கொன்றை யணைந்துருகி யஞ்செழுத்துந்
தானாய வோசைசெவி சார்த்தியது - மானாத    192
சீர்த்திபெறு மூன்றே சிறப்பத் தழீஇக்கொண்டு
மூர்த்தியுல காண்ட முறைமையு - மார்த்தி    193
முருகர்திரு மாலையான் முன்னோ னருளுக்
கருகரா யுற்ற வறனும் -பெருகிப்    194
பரவுருத்தி ரப்பேர்ப் பசுபதியார் நீரில்
விரவுதவஞ் செய்த விதமு - முரவிற்    195
றிருநாளைப் போவார் திருத்தில்லை மன்றுள்
வருநாட்போய்ச் சேவித்த வாறு - மருவு    196
திருக்குறிப்புத் தொண்டர் சிலாவணத்திற் சென்னி
விருப்பறமோ துற்ற விதமுங் - கருப்பறிக்குந்    197
தண்டீசர் தந்தையிரு தாடுணிய வீசுமழுக்
கொண்டீசர் சார்பிற் குறுகியது - மண்டர்புகழ்    198
நாவரசு நீற்றறையு ணண்ணியிருந் தாலமுண்டு
மேவுகட னீந்திய வித்தகமும் - பாவு    199
குலச்சிறையார் யாரையுங்கை கூப்பிப் பணியு
நலச்சிறைசார் புற்றசிவ நண்பும் - வலத்த    200
மிழலைக் குறும்பர் வியப்புறுமெண் சித்தி
யழகிற் பயின்ற வடைவுங் - குழகமைந்த    201
மாதுருவ நீத்து வருகாரைக் காலம்மை
பேதுருவங் கொண்ட பெருங்கோளுந் - தீதுதீ    202
ரப்பூதி யன்ப ரரசரடிக் கன்புசெய்து
செப்பூதி யங்கவர்ந்த சீர்மையுந் - தப்பாத    203
நீலநக்கர் தம்மனையை நீத்திட் டரனருள்பெற்
றேலவழைத் தின்புற் றிருந்ததுவுஞ் - சாலநமி    204
நந்தி யடிக ணகுகுளத்து நீர்மொண்டு
முந்தி விளக்கெரித்த மொய்வலியுஞ் - சந்த    205
வருண்ஞான சம்பந்த ரங்கமா தாகத்
தெருண்ஞான வாய்மலர்ந்த சீரும் - பொருவில்கவிக்    206
காமர் வயிற்றிற் கருவி கொடுகுத்தி
யேமவருள் பெற்ற விருந்திறனும் - பாமருவு    207
மூல ருடம்பொழிய மூவா யிரவருடங்
கோலவர சின்கீழ்க் குலாவியதுஞ் - சாலவுயர்    208
தண்டி யடிக டவாக்குளத்தி னீர்முழுகி
யண்டி விழிபெற் றமர்திறனுந் - தொண்டினியன்    209
மூர்க்கனார் சூது முயன்றாடி மெய்யடியார்
யார்க்கு முவகை யருண்மாண்பும் - பார்க்குளுயர்    210
சோமாசி மாறர்வன் றொண்டர்க்கே யாளாகித்
தாமாறி லின்பந் ததைந்ததுவும் - போமாறொன்    211
றில்லா சாக்கியனா ரெண்ணியெண்ணி நாடோறுங்
கல்லா லெறிந்து களித்ததுவும் - வல்ல    212
சிறப்புலியா ரன்புடையார்ச் சேர்ந்துபணிந் தேத்தி
மறப்பிலமு தூட்டும் வகையு - மறப்பான்மை    213
விள்ளாச் சிறுத்தொண்டர் வேண்டு மகவரிந்து
தள்ளாக் கறிசமைத்த தன்மையு - மெள்ளா    214
வருளிற் கழறிற் றறிவார்மா வூர்ந்து
தெருளிற் கயிலைசென்ற சீரு - மருளில்    215
கணநாத ரன்பிற் கரிசில்பணி யாற்றிக்
கணநாத ராய்ப்பொலிந்த கற்பும் - புணர்பெருமைக்    216
கூற்றுவனார் மோலிய்யெனக் கொய்மலர்த்தாள் கூற்றினுக்கோர்
கூற்றுவனார் சூட்டக் குலவியதுந் - தேற்றுபுகழ்ச்    217
சோழர் சடிலமுடி தோன்றக்கண் டாரழலி
னாழங் குளிர வழுந்தியதும்- வாழுநர    218
சிங்க முனையரையர் சேரவிகழ்ந் தாற்கிரட்டித்
தங்க மளித்த தவாப்புகழுந் - துங்கவதி    219
பத்தர் வறுமை பரந்தகா லத்துமொரு
மித்தங் கொருமீன் விடுத்ததுவு - மொத்தகலிக்    220
கம்ப ரடிமை கலந்தடிய ரோடுவர
நம்புமனை கைதடிந்த நன்மையும் - வம்பில்    221
கலியர் விளக்கெரிக்குங் காட்சி குறையா
தொலிமிடற்று வாள்பூட் டுரவும் - வலியதிறற்    222
சத்தியா ரீசர்கழல் சார்ந்தார் தமையிகழும்
புத்தியார் நாவரிதல் போற்றியது - மெத்திசையுங்    223
கண்டேத்து மையடிகள் காடவர்கோன் வெண்பாவைக்
கொண்டேத்து மேன்மை குலவியதும் - பண்டுகணம்    224
புல்லர் விளக்கிட்டுப் போற்றுதற்கு முட்டுவர
நல்ல முடிகொளுத்து நன்மையுஞ் - சொல்லவரு    225
காரியா ரெங்குங் கவிபாடி யண்ணலருள்
வாரியா ரப்பெற்ற வன்மையு - மூரி    226
நெடுமாறர் நீறணிந்து நெல்வேலி வென்று
தடுமா றிலாதிருந்த சார்பும் - விடுமாறில்    227
வாயிலார் தூய மனக்கோயிற் பூசித்துத்
தாயிலார் பாதநிழல் சார்ந்ததுவு - மேயும்    228
முனையடுவார் மாற்றார் முனையடுசெம் பொன்னால்
வினையடுவா ராய விதமும் - வனைகழற்    229
சிங்கர் மனைவி திருமலர்கை தொட்டதென்று
பங்க மறத்தடிந்த பான்மையுந் - துங்க    230
விடங்கழியார் சோரரென வெய்தினார் தம்மைத்
திடங்கழியா தோர்ந்துவிட்ட சீரு - மடங்காச்    231
செருத்துணையா ரோர்மன்னர் தேவியார் மூக்கின்
பொருத்துணையா தீர்ந்த புகழுந் - திருத்து    232
புகழ்த்துணையா ரென்பார் புனித னருள
நிகழ்த்துமொவ்வோர் காசுபெற்ற நீரு - மிகழ்ச்சிதவிர்    233
கோட்புலியார் பாலுண் குழவுங்கூ டாதென்று
வாட்புலியார்க் கீந்த வளத்திறனும் - வேட்குமொரு    234
பூசலார் மிக்க பொருடேடி யாலயஞ்செய்
தேசலா ராதிருந்த வின்றிறனு - மாசகலு    235
நீற்றின் பெருமை நினைமங்கை யர்க்கரசி
போற்றி யமைந்த புகழ்ப்பேறுஞ் - சாற்றரிய    236
நேசனா ரன்பர்பா னேசனார் கோவணந்தந்
தீசனார் பேரருண்மிக் கெய்தியதும் - பாசமகல்    237
செங்கட்சோ ழப்பெருமான் செம்பொற் றளிபலசெய்
தங்கட்டீ ராவன் பமைந்ததுவுந் - துங்கத்    238
திருநீல கண்டர் செழும்பலகை யேற
வொருநீல கண்ட ருவப்பும் - பொருவில்    239
சடையரிசை ஞானியார் தாவாப் பெரும்பே
றடைய வமைந்த வருளும் - விடையுடையா    240
ராணைமேற் றாங்கி யருணாவ லூரர்வெள்ளைக்
கோணை மதமாமேற் கொண்டதுவும் - வீணை    241
யுறாநெஞ்சே மற்றனைத்து முன்னாலே யன்றோ
மறாநின்சீர் யாவர் வகுப்பார் - வெறாதவருட்    242
டாயே யணையாய் தவறுறுமோ நங்கரும
நீயேதூ தாக நிகழுங்கான் - மாயமன்றே    243
முன்ன முயன்று முடிகா ணரிதாய
வன்ன முகமுன் னணையுமோ - முன்னமொரு    244
பச்சை மயிலையொரு பாலடக்கி பாங்கரின்றோர்
பச்சைமயில் சென்றாற் பயன்படுமோ - வச்சை    245
மதனைச் சுமத்தலினால் வாகையிலாக் கிள்ளை
யிதனைச் செயற்குவலி யாதே - சுதமகல    246
வன்றுசடைக் காட்டி லடங்கிக் கிடக்குமுகி
லின்று புரிவ தெதுகண்டாய் - துன்றுபொருட்    247
பாவை யடியர் பகரவேற் குஞ்செவிகள்
பூவை குழறுமொழி போற்றுமோ - பாவையெனுந்    248
தோழி யுரிமை துணிந்தனுப்பி னாற்றிருமுன்
வாழி யடைய வலியளோ - பாழிமதன்    249
சின்னமா யெங்குந் திரிந்துகூ வுங்குயிலம்
முன்னவன்பாற் சேறன் முடியாதே-மன்னு    250
மரவா பரணனென்பா ரம்மொழிகேட் டங்கு
விரவாதே தென்றல் விடுத்தா-லுரவாரு    251
முன்னைப்போல் வேறுதுணை யுண்டோ குரவர்பிரான்
றன்னைப்போல் வேறொருவர் தாமுளரோ-வன்னை    252
யனைய குரவர்பிரா னான்ற மரபு
நினைய வகுத்துரைப்ப னீகேள் - புனையவரு    253
காமர் கயிலையிற்சீ கண்ட வுருத்திரன்பா
லேமவருள் பெற்றநந்தி யெம்பெருமான் - றோமில்    254
வழியே வருசனற்கு மார முனிவர்
பழியேது மில்லாத பண்பிற் - கொழியருள்சால்    255
சத்திய ஞான தரிசனிகள் யாவோருந்
துத்தியஞ் செய்பரஞ் சோதியார் - நித்தியமார்    256
மெய்கண்ட தேவர் விளங்குமரு ணந்தியார்
பொய்கண்ட யாரும் புணரருஞ்சீர் - மொய்கடந்    257
தைவாழ் மறைஞான சம்பந்தர் தாளின்மதி
கைவா ழுமாபதியார் காட்சிமிகு - செய்ய    258
வருணமச்சி வாய ரமைசித்த ராய
கருளில் சிவப்பிர காசர் - தெருள்செய்    259
குருநமச்சி வாயர் குலவுமறை ஞானர்
திருவம் பலவாண தேவர் - மருவு    260
முருத்திர கோடியா ரொப்பில்வே லப்பர்
திருத்தி யினிதருளச் செய்து - பொருத்து    261
மிருகுமர சாமிகண்மா சில்லா மணியா
ரருமை யிராமலிங்க ரன்பார் - பெருமையிரு    262
வேலப்ப ரென்று மிளிர்திருச்சிற் றம்பலவர்
பாலக்க ணில்லம் பலவாணர் - சால    263
வருள்சுப் பிரமணிய ரம்பல வாணர்
தெருள்சுப் பிரமணிய தேவர் - பொருள்சான்    264
மரபு நிலையிதுவால் வார்த்தைநீ பேசப்
பரவு சமயம் பகர்வேன் - விரவுநெஞ்சே    265
பூதநான் கின்பம் புரிகுழலார் போகமெனுங்
கோதவுல காய்தரைக்கூடாதே - யேதமிகு    266
கந்தமைந்துங் கெட்டாற் கனமுத்தி யென்றுழலும்
பந்தப் பவுத்தர்முகம் பாராதே - முந்தத்    267
தலைபறித்துப் பாயுடுத்தித் தாந்தவமே பேசிக்
கொலைசெ யமணரைக்கூ டாதே - யலைபுரியுங்    268
கள்ளைக் குடித்துக் களித்துழலும் வாமமதக்
கொள்ளைச் செருக்கருரை கொள்ளாதே - தள்ளாக்    269
கருமமன்றி வேறு கருத்தனிலை யென்று
தெருமருவார் கூட்டஞ்சே ராதே - பொருவினெஞ்சே    270
நின்னையணு வென்று நியாயம் புகன்றுழல்வான்
றன்னை யொருஞான்றுஞ் சாராதே - சொன்ன    271
பகவனுக் குண்டு பரிணாம மென்னுந்
தகவிலைந்தி ராவினர்ச்சா ராதே - யிகவரிய    272
முத்திநிலை யான்மா முதல்வனோ டொக்குமெனும்
புத்தி படைத்தவர்பாற் போகாதே - மெத்துமொளிப்    273
பாலவிழி யாற்குப் பரிணாமஞ் சொற்றுழலு
மாலமைந்தார் கூட்ட மருவாதே- ஞாலமிசைத்    274
தாம்பிரம மாகாமை தஞ்செயலி னாலுணரார்
நாம்பிரம மென்பாரை நாடாதே - யோம்பு    275
திருவா வடுதுறையைச் சேர்ந்து வளங்க
ளொருவாத் திருவீதி யுற்றுப் - பொருவாத    276
தென்முகப்பின் வாயில்வழிச் சென்றுகொலு மண்டபத்தின்
பொன்முகப்பி னுள்ளே புகலுற்று - நன்முகத்திற்    277
சாத்திரங்க ளோதித் தனியமர்வார் சிந்திப்பா
ரேத்திரங்கும் வண்ண மெடுத்திசைப்பார் - பாத்துச்    278
சடைகாய வைத்துத் தனியமர்வா ரன்னோர்
புடையாரை யும்வணங்கிப் போற்றி-விடையா    279
நலமா ரதிகார நாடுதிருச் சிற்றம்
பலமா முனியைப் பணிந்து - பலமியாவுஞ்    280
சேர்தரவுள் ளாற்போய்த் திருமாளி கைத்தேவர்
வார்கழல் போற்றி வணங்கியே - யோருங்    281
குரவர்பிரான் மூல குருநமச்சி வாயன்
பரவுகழல் போற்றிப் பணிந்து - விரவு    282
மிரண்டா மொடுக்க மெனப்புகல்பொற் கோயி
லரண்டா னெனவமரு வானைத் - திரண்ட    283
கலைஞான வாழ்வைக் கருதுவார் பேற்றைத்
தொலையாப் புலவர்குழாஞ் சூழ-வுலையா    284
வினாவிடை பேசி வியப்புற் றமரு
மனாதியுரு வாய வமுதை-யினாதகுண    286
மெல்லாரு நீங்க வினிதுபோ தித்தமரு
நல்லா தரவு நயப்பானைச்-சொல்லு    286
மொருநமச்சி வாயனென வோதப் பொலிந்து
வருநமச்சி வாயனடி வாழ்த்திப்-பொருவாக்    287
குருசாமி கோயில்வலங் கொண்டுபடி யேறிக்
குருசாமி பூசைமுனங் கூடி-யுருகாமெய்    288
யன்பின் வணங்கி யடியா ரமுதுகொள
வன்பி னமர்கோயில் வந்தித்தே-யின்ப    289
விதமார் முதலொடுக்க மென்றிசைபொற் கோயிற்
புதவொர்பான் மெல்லப் புகுந்து-கதமோவி    290
யாங்குநிற்பார் தம்மை யடுத்துச் சமயம்வினாய்ப்
பாங்குபெற வுள்ளாற் பயப்புகுந்து-தேங்குதிரு    291
முன்னஞ்சே வித்து முனிவர்முத லோர்போற்ற
நன்னர்நீ றள்ளியள்ளி நல்கியம-ரன்ன    292
பொழுதுரையா தேபல் புலவர்கவி பாடும்
பொழுது முரையாதே போற்றி-யெழுதுமடல்    293
வாசித்து நிற்பாரை மானிக்கு மப்பொழுது
நேசிக்குந் தன்மை நிறைந்தாராய்ப்-பூசிக்குந்    294
தொண்ட ருவக்கச் சுருதிப் பொருள்புகறல்
கொண்ட சமயத்துங் கூறாதே-மண்டவரு    295
மன்னர் முதலோர் வணங்க வவர்க்குவப்பு
நன்னரியற் றும்பொழுது நாடாதே-சொன்ன    296
மறையோர் பலரிரக்கும் வார்த்தைசெவி யேற்றுக்
குறைதவிர்க்கும் போதினுங்கூ றாதே-மறைசொல்    297
சிதம்பரமுன் னாய திருக்கோயிற் கெல்லாம்
பதம்பரவு நித்தியமுற் பண்பி-னிதம்பரவ    298
நன்றுவிசா ரித்து நயவாக் குறைதவிர்த்துத்
துன்று பொழுதுமிதைச் சொல்லாதே-சென்று    299
பணிசிறா ரைக்கற்கும் பாடம் வினாவத்
துணியுங்கா லத்துஞ்சொல் லாதே-வணிதருமா    300
னந்தக் களிப்பா னகச்சிலர்வந் தேத்தெடுக்கு
மந்தப் பொழுது மறையாதே - சந்த    301
வுவளகத்து மேவு மொருசமய நோக்கித்
திவளநெஞ்சே நீகூடச் சென்று - தவளப்    302
பொடியணியு மேனியெங்கள் பூரணன்பொற் றாளிற்
படிமிசை வீழ்ந்து பணிந்து - நெடியகுணக்    303
குன்றேமெய்ஞ் ஞானக் கொழுந்தே யருட்கடலே
நன்றே யுயிர்க்கருளு நாயகமே - யன்றே    304
யடுத்தமல பந்த மகற்றவுருக் கொண்டு
மடுத்த பெருங்கருணை வாழ்வே - படுத்தமைந்த    305
மைம்மாறு சிந்தை வயங்கு மடியார்பாற்
கைம்மாறு வேண்டாத கற்பகமே - பொய்ம்மாறெம்    306
பேறேயா னந்தப் பெருக்கேஞா னக்கருப்பஞ்
சாறேமெய் யன்பர் தவப்பயனே - நாறுமருட்    307
சிந்தா மணியே செழுங்காம தேனுவே
சந்தாபந் தீர்க்குந் தனிச்சுடரே - நந்தா    308
வரமணியே கோமுத்தி வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகப்பெம் மானே - பரவு    309
குருநமச்சி வாயவென்று கொண்டாடி யேத்திப்
பெருகருளுண் டாகநனி பேசி - யொருவரிய    310
பாலை யுணர்த்திப் பசியநறுஞ் செங்கழுநீர்
மாலை கொடுவிரைந்து வா.    311

ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் நெஞ்சுவிடுதூது முற்றிற்று.

Related Content

திருவானைக்கா அகிலாண்டநாயகிமாலை