logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

(மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை)


பாயிரம்

விநாயகர்துதி

சீர்கொண்ட தகுதியிற் றிரிகுணமு நிறுவிய திறத்தடிக் கருமூடிகந் -
      திகழ்நடுச் செம்மணி யொளிப்பணி முடிச்சிதச் சிறுபிறை வயக்கிடுதலாற்,
றார்கொண்ட மலர்செறி கிழக்குமேக் கொடுபகை தவிர்ந்துதாய் நாப்பணட்டுத் -
      தாப்பிசைப் பொருள்கோளின் மேவவமர் கயமுகத் தம்பிரான் றாள்பரசுவாம்,
பார்கொண்ட தன்பொதுப் பெயரெழுத் தின்றொகைப் படிகொண்ட வாவடுதுறைப் -
      பதிகொண்டு துதிசிறப் புப்பெயரு மத்தொகைப் படிகொண்டு பரவுயிர்கள்பாற்,
கூர்கொண்ட வத்தொகை யதன்றொழி லறக்கருணை குலவியத் தொகையபாசங் -
      கூடா தளிக்குமம் பலவாண தேசிகன் கொழிதமிழ்க் கவிதழையவே.(1)

 வழிபடுதே வுளுங்கொலைதீர் தெய்வதங்காப்புரைக்கவென
      வகுத்த வான்றோர்,
மொழியுணர்ந்து மவ்வழிச்சென் றிலர்முன்னோ
      ரிரும்புகழ்க்கோ முத்தியெங்கள்,
பொழிகருணைச் சின்மயனம் பலவாண
      தேசிகன்மேற் புகலப்புக்க,
கழிமகிழ்யா மவ்வழிச்சென் றனஞ்சிறக்கு
      மிப்பிள்ளைக் கவியுந் தானே.    (2)

1. காப்புப்பருவம்.

திருநந்திதேவர்.

 பூமேவு வேதா கமப்பொரு ளடங்கலும் பொங்கொளிக் கைலைப்பிரான் -
      பொற்பத் தெருட்டத் தெருண்டுஞா னக்குரவு பூண்டுமா லயனாதியோர்,
தாமேவு மணிமுடித் தலைவணங் குந்தொறுந் தாங்குந் தொறுந்தழும்பு -
      தாட்புற மகங்கொண்டு பொலிநந்தி நாயகன் றன்பெரும் புகழ்பரசுவாம்,
பாமேவு பேருலகர் கருமவள விற்கருவி பற்றியோ ருழியெய்தலே -
      பாங்கென வுணர்ந்திடத் தொழிலொன்று கோடலிற் பகருநான் முகமொழித்துத்,
தேமேவு முகமொன்று தழுவியா வடுதுறை செழிக்கவதில் வீற்றிருக்குஞ் -
      செல்வனைக் குரவர்தங் கோனையம் பலவாண தேவனைக் காக்கவென்றே.(1)

சனற்குமாரமுனிவர்

வேறு.

எங்கள் பொதியத் திருமுனிவற் கியைந்த பழங்காப் பியக்குடியோ
      னென்னக் கருணைச் சயிலாதிக் கியைந்து பிரமன் மான்முதலோர்
தங்க ளுணர்விற் கப்பலாய்த் தனித்தா ருணர்விற் குள்ளொளியாஞ்
      சனற்கு மார முனிவர்பிரான் சரணாம் புயங்க டலைக்கணிவா
மங்கள் வழியு மாமலர்த்தா ளகத்துப் போகட் டுறத்தேய்த்த
      வதனை முடிக்கொண் டனனெனமண் ணறையா வாறு திருமுடிமேற்
றிங்க ளொழித்து வளர்செல்வத் திருவா வடுதண் டுறைமருவித்
      திகழுங் குருவம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.(2)

சத்தியஞானதரிசனிகள்

வேறு.

 பொய்யாத வேதச் சிரப்பொருளை யாரும் புறங்காண வானநின்றும் -
      பொலிதரு தியாகமணி கொடுவந்த மன்னனும் புந்திநாண் கொளவவித்தை,
தையாத சருவசங் கப்பரித் தியாகமணி தண்பெருங் கைலைநின்றுந் -
      தவாதெங்கு நோக்கக் கொணர்ந்தசத் தியஞான தரிசனிக டாள்பரசுவா,
மெய்யாத மாமலங் கழுநீ ரெனற்கியைய வினியகழு நீருமாயை -
      யெழினிநூ றித்தற்றெரிக்குங்கண் மணியெனற் கியைக்கண் மணியுநீக்கஞ்,
செய்யாத வினைநீறு செயுமெனற் கியையத் திருந்தும்வெண் ணீறுமேனி -
      திகழவா வடுதுறையின் மருவுமம் பலவாண தேவனைக் காக்கவென்றே.(3)

பரஞ்சோதிமாமுனிவர்

வேறு.

அந்த மரூஉஞ்சீர் முசுகுந்த னன்பிற் றந்த மணியேற்ற
      வான்ற நகரங் களுடசிறந்த வாரூ ரெனச்சத் தியஞானி
தந்த மணிகைக் கொண்டுயர்ந்த தக்கோர் பல்லோ ருளுஞ்சிறந்த
      தலைவ னாய பரஞ்சோதி தாட்டா மரைக டலைக்கணிவா
மிந்த வுலகிற் பரிபாக மெய்தார் பேத மபேதமென
      விசைத்துப் பிணங்கா தெய்துவித்தே யியில்பு விளக்க வுருக்கொண்டு
வந்த கருணைப் பெருஞ்செல்வன் வான்றோய் பொழில்சூழ் திருத்துறைசை
      மருவுங் குருவம் பலவாண வள்ள றனைக்காத் தருள்கவென்றே.(4)

மெய்கண்டசிவாசாரியர்.

போந்து புறத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே
      பொங்கி யகத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே
யேந்து புடவி யிடத்தெனப்பன்னிரு சூத்திரஞ்செவ் வாய்மலர்ந்த
      விணையில் வெண்ணெய் மெய்கண்டா னிணைத்தா மரைத்தா ளிறைஞ்சுவாம்
வாய்நத வடபா லாலவனம் வயங்கு தென்பாற் குருந்தவன
      மருவு வாரு மருள்பெறுவான மன்னு நடுப்பா லரசவனத்
தாய்ந்த சிங்க நோக்கமென வமர்ந்து நோக்குங் குருசிங்க
      மருள்கூர் திருவம் பலவாண வடிக டமைக்காத் தருள்கவென்றே.(5)

அருணந்திசிவாசாரியர்.

 போத நவின்ற பெருங்குரவன் பொற்பார் சித்தி கேட்டுமகிழ்
      பூத்துச் சிறப்புப் பாயிரமாப் பொலிய முதலா சிரியன்பேர்
சாத நினக்குத் தகுமென்று சார்த்தச் சிறந்த திருத்துறையூர்த்
      தலைமை யாள னருணந்தி தாட்டா மரைக டலைக்கணிவா
நாத மகன்ற பெருநிலையை நாடு முயிர்கட் கருள்புரிந்து
      நாளும் பசுத்து வந்தீர்ப்போ நாமென் றதனுக் கறிகுறியாச்
சீத மலியும் புனற்றடஞ்சூழ் திருவா வடுதண் டுமறைமருவுஞ்
      செல்வ னருளம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.(6)

மறைஞானசம்பந்த சிவாசாரியர்

வேறு.

அரியபுக ழாசிரியர் பலருமுடை யவரே
      யாயினும்பங் கயம்போலத் தலைமைதரு வழக்காற்
பிரியமிகு மறைஞான சம்பந்த னெனும்பேர்
      பெற்றுவிளங் கியகடந்தைப் பெரியோனைத் தொழுவாங்
கரியமலப் பிணிகழலக் கழல்சூட்டி யடியேங்
      கன்மனத்தும் வன்மனத்தர் கருதாத கனகப்
பரியமதிற் றுறைசையகத் துங்கழலா தமரம்
      பலவாண தேசிகனைக் காத்தருள்க வென்றே.(7)

உமாபதிசிவாசாரியர்.

 விரும்புசிவப் பிரகாசந் தவப்பிரகா சமிலா
      வெய்யயாங் களுமடையச் சிவப்பிரகா சத்தோ
டரும்புபல நூலருளிச் செய்தவருஞ் குரவ
      னண்ணலுமா பதிசிவனை யஞ்சலித்துத் துதிப்பாம்
பெரும்புலவர் பெரியோனென் றறிந்தேத்தப் பட்ட
      பின்னருமம் பலவாணப் பெயர்புனைந்த கள்வன்
கரும்புகமு கெனவோங்கும் வயன்மலிதண் டுறைசைக்
      கண்ணமரண் ணலைநாளுங் காத்தருள்க வென்றே.(8)

அருணமச்சிவாயர்.

 இருண்மலமு மாயையுமற் றிருவினையுங் கழிந்தின்
      பெய்திடவெய் திடுமுயிர்கட் கினிதருளுந் திறத்தா
லருணமச்சி வாயனெனக் காரணப்பேர் புனைந்த
      வண்ணலடித் தாமரைக ணண்ணல்குறித் திடுவாம்
பொருண்மலிசெங் கொன்றையொடு வெள்ளெருக்கு மொப்பப்
      பொறுத்தபழங் காரணத்தா னலவர்துதி யொடுமித்
தெருண்மலியா வெந்துதியுங் கொண்டுதுறை சையில்வாழ்
      தேசிகனம் பலவாணன் றனைக்காக்க வென்றே.(9)

சித்தர் சிவப்பிரகாசர்.

தம்மடியர்க் கிருக்குமிடம் வரையறுத்துத் தெரித்துத்
      தமக்கிருக்கு மிடங்குறியா தெவ்விடத்தும் பயிலுஞ்
செம்மனத்தா ராயினுமெஞ் சித்தத்து மமர்ந்த
      சித்தர்சிவப் பிரகாசர் சேவடிக டொழுவாஞ்
செம்மலரும் வெண்மலரு மெடுத்தடியர் தூற்றச்
      சேவடிமேல் வீழ்தலிரு தேசிகரும் பலகா
லம்மவணங் குதல்பொருவக் கோகழிவீற் றிருக்கு
      மம்பலவா ணனைநாள்க டொறுங்காக்க வென்றே.(10)

நமச்சிவாயமூர்த்திகண் முதலிய பதினால்வர்.

வேறு.

 புரவு மிகுவள் ளுவர்குறளுட் புணர்பத் தினுமுள் பொருளிதெனப்
      புகலு மொன்றிற் குருமூர்த்தம் புகல்பத் திலுமுள் பொருளிதென்று
பரவு முலக முணர்ந்தேத்தப் படிவங் கொண்டு வெளிவந்த
      பண்பார் நமச்சி வாயர்முதற் பதினால் வரையுந் தொழுதெழுவாங்
குரவு புனையா வருமிருகை கூப்பப் பொலியு மரசென நூல்
      குறியா வுணர்ச்சி யாளருமுட் கொண்டு தெளிதற் கறிகுறியா
விரவு மரச வனத்தமர்ந்து விளங்கா நின்ற சின்மயனை
      மிக்க புகழம் பலவாண மேலோன் றனைக்காத் தருள்கவென்றே.(10)

1. - காப்புப் பருவம் முற்றிற்று

2. - செங்கீரைப்பருவம்

நீர்பூத்த தாமரை சமழ்ப்புறப் பொலியும்விழி நெடியமா லுபமன்னியர் -
      நின்னா கமத்தின்வழி புரிதீக்கை பெற்றநா ணீக்கின னெனப்புழுங்குந்,
தார்பூத்த கூந்தற் புவிக்கோதை யதுபெறத் தண்ணீரி லசைவிலாது -
      தானின் றருந்தவஞ் செய்வள்களை யாவுடைத் தன்மையளு மாதலாலப்,
பார்பூத்த நாற்றமுட் குறியாம லுட்கொண்ட பருவமொன்றே குறித்துப் -
      பங்கயச் செங்கைதலை மேல்வைத் தெடுத்தொரு பதஞ்சூட்டி முகமலர்ந்து,
சீர்பூத்த பேரருட் டிருமேனி கொண்டவன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (1)

முந்தைமறை யாவையு முணர்ந்தநான் முகமுனிவன் முன்னின்று தாளமொத்த -
      முருகுவிரி பைந்துழாய் மாலைதுயல் வருபுய முகுந்தனெடு முழவதிர்க்க,
வந்தைதவி ராகாவு மூகூவு மேழிசை யமைத்தமிர்த தாரைவாக்க-
      வரகர வெனக்கணங் களிகொண்டு துளிகொண்ட வங்கணர்க ளாகியேத்த,
நிந்தைதவி ரிருமுனிவர் புடைநிற்க வேண்டுமென நினையாதி நினைவையாயி -
      னின்பழைய வுருவமொடு நேர்நிற்றி யாலென நிகழ்த்துதற் கஞ்சமாட்டேஞ் ,
சிந்தைகளி கூரவருள் வடிவாகி நின்றவன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (2)

மும்மையுல கும்புகழும் வேதா கமம்பகர் முழுக்குறி குணங் கடந்து -
      மொழிகின்ற பரநாத பரவிந்து வுங்கழன் முழுத்தபே ரொளியாகிய,
நம்மையொரு மழவிளங் குழவியென வுட்கொடு நயந்துபா ராட்டுமறிவு -
      நன்றா யிருந்த· தெனக்கருதி யையநீ நகையற்க நகைசெய்வையே,
வெம்மையறி யாமையுடை யாரிவர்க ளென்றுநீ யின்றுதான் கண்டனைகொலா -
      மென்றுநினை மென்றுநினையாங்களு நகைத்திடுவ மன்பினர்த மெய்ப்பில்வைப் பாயமுதல்வா,
செம்மை நெறி யாரையு நிறுத்தவெழு கருணையோய் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (3)

ஐயசற் றிதுதிரு வுளஞ்செய்து கேட்கவய னரியையெண் ணாதயாங்க -
      ளமைதர நினக்குவழி வழியடிமை யுண்மையென் றாவணம் வரைந்துதவுவோம்,
பொய்யமை தராதுபக லிரவுநின் குற்றேவல் போற்றுவ மதாஅன்று துதியும் -
      புதிதுபுதி தாகப் புரிந்திடுவ மிவைகளும் போதா வெனத்தெரிந்து,
வெய்யவுட லும்பொருளு மாவியு மடங்கா விருப்பிற் கொடுத்துவிடுவே -
      மேலுமினியென் செய்து மிதனின்மேற் செய்பவர்கள் விண்ணுமிலையிது மொழிதலுஞ்,
செய்யதன் றினிநீ செயற்பால தென்கொலோ செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (4)

காமரு மதிப்பிறையு மறிதிரைக் கங்கையுங் கங்காள மும்பிரமன்மால் -
      கழிதலைத் தொடையலுங் காகோ தரங்களுங் காடுபடு பொற்கொன்றையு,
மாமரு விருஞ்சடையு மாகிய பெருஞ்சுமை யகன்றுயிர்ப் புற்றதிலனா -
      லையநின் றிருமுடி யசைத்திட வருத்தமின் றடன்மிருக மோடுபரசுந் -
தாமரு விலாமையாற் செங்கைநில மூன்றத் தடுக்குமிடை யூறுமின்று,
      தாங்குகுஞ் சிதமின்மை யாலடி பதித்திடத் தடையெவன் புடைவிராலித்,
தேமரு வுறுங்காவி சூடிய புயாசலன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (5)

வேறு.

பிறைபடு பற்குற ளுடனெளி யப்பிணர் பெறுவெரிந் மிசையொருதாள்
      பெயர்வற வூன்றுபு மற்றொரு பொற்றாள் பேண வெடுத்தொளியே
நிறைதரு குஞ்சித மாக்குத லன்று நெடுங்க னடந்தவ
      நிலவொரு பாத மெடுத்து நிமிர்ந்து நிகழ்த்தலு மன்றுபெருங்
கறையடி யானை யுரித்துரி மேனி கலப்புற மூடியொரு
      காலை முடக்கி மடக்குத லன்று கரும்பிர சம்பொழிறோ
றறைதரு மாவடு தண்டுறை நாத னாடுக செங்கீரை
      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (6)

துங்கப் பெருமறை யந்தண ராதியர் சூழ்ந்தனர் கொண்டாடத்
      தோலா வாகம முற்றுஞ் சென்னி துளக்கி யெழுந்தாடச்
சங்கத் தமிழெனு மொருதே வுவகை தழைத்துல கத்தாடத்
      தளர்வுறு பரசம யப்பே யஞ்சுபு தலைசுற் றினவாடச்
சிங்கக் குருளை யெதிர்ப்படும் யானைத் திரளென வெங்கண்மலத்
      திரள்குடி வாங்கி நினைக்கரு தாருட் சென்று பதிந்தாட
வங்கத் துறைகெழு மாவடு துறையிறை யாடுக செங்கீரை
      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (7)

ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே
      யுற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால்
வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே
      மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப்
புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே
      பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில்
அள்ளிய வாவிய வம்பல வாண னாடுக செங்கீரை யறிவுரு வாகிய
      வம்பல வாண னாடுக செங்கீரை.

பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதிவியே
      பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே
விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே
      மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே
வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான்
      மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே
யரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை யறிவுரு
      வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை.

வேறு.

நாவடுவொன்றநி னாமநவின்றிடு மொண்சீல நாடியவெங்களை
      நீயயலென்றுநி னைந்தாய்கொல்
லோவடுவொன்றிய காளிதமென்பது விண்டேநின்
      னோடுறலென்றுதச் யாநிதியென்றெவ ரும்பேச
மாவடுவென்றகண் மாதரொடுந்திகழ் பைந்தூவி
      வாலெகினம்பல வாவிதொறுங்களி கொண்டாடு
மாவடுதண்டுறை மேவுமிளங்கதிர் செங்கீரை
      யாரருளம்பல வாணசவுந்தர செங்கீரை.(10)

2. செங்கீரைப்பருவம் முற்றிற்று

3 தாலப்பருவம்.

முருந்து முறுவ லிளமாதர் முன்னியாடும் பெருந்தடத்து
      மூழ்கிச் சிறகர் வெள்ளெகின முற்றும் பாசி போர்த்தெழுந்து
பொருந்துங் கரையி லிருந்துதறிப் பொலியும் பழைய
      நிறமடைந்து பொலித லொருங்கு வெண்முகில்கள் புணரி
தோய்ந்து கறுத்தெழுந்து வருந்து திறத்தின் வரையிவர்ந்து மன்னும் பயந்தீர்
      தாவுதறி வயங்கும் பழைய நிறமுறுதன் மானுங் கழனி யுடுத்துவளந்
திருந்து திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ.(1)


 வான்றோ யடுக்கு மாளிகைமேல் வைகு மாமை மடநல்லார்
      வயங்கு பவனக் குடங்கரைவெள் வாய்வாள் விழியி னுறநோக்கி
யூன்றோய் குலிசப் படைவேந்த னுடைய வமிர்த கடமென்று
      மொருநந் திருமா ளிகைத்தேவ ருயர்த்த வமிர்த கடமென்று
மான்றோய் நின்னை யடையாதா ரபேதம் பேத மெனப்பிணங்கு
      மதுபோற் பிணங்கிப் பெயரநினை யடைந்தார் போலத் தெளியும்வளத்
தேன்றோய் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (2)

 ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதன
      னுயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி
வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல்
      வேந்தன் சுதன்மை கிழித்தெழிந்து மேவ விரைவி னாண்டளப்பா னாங்கு நோக்கி நடுநடுங்கி யந்தோ சாரு வாகநூ
      லறைந்தா மரசன் வினவிலெவ னறைவா மெனவுட் டுயரமகிழ்
தேங்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (3)

 கூருங் கருணை நின்காவிக் கொடிமீப் போய்க்கற் பகக்கிளையிற்
      கூட நறுஞ்செந் தளிர்கொய்வான் குறித்த தேவ குருவாங்கண்
யாருங் குறுக வடைந்த வன்மற் றிதனை மயங்கித் தீண்டுதலு
      மின்ன தசைய வெழுங்காற்றா லிணர்த்துப் பாங்கர் நின்றசைந்து
தேருங் கவுளி னுறப்புடைத்துச் சிந்தை வெருவி மெய்ந்நடுங்கித்
      தெளியா வனையா னோட்டெடுப்பச் செய்யா நின்ற திருவரசு
சேருந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (4)

அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி
      யடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக்
கொழிக்குங் கரிய காஞ்சிகளும் கொடியால் வளைந்த பலகரும்புங்
      கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும்
விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளு
      மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி
செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (5)

வேறு.

உரைதரு தன்மையில் செல்வ மயக்க முறாது பிழைத்தவரு
      மொள்ளிய வேல்விழி மங்கையர் கொங்கை யுவத்த லொழிந்தவரும்
கரையரு கல்வி முயன்று பயின்ற களிப்பி னகன்றவருங்
      காமரு சைவ மலாத மதங்கள் கலத்தல் கழிந்தவரு
மிரைதரு கின்ற தருக்க மகம்பர மென்ப திரித்தவரு
      மென்று நமக்கரு ளுங்கொ லெனப்புடை யெண்ணிலர் சூழ்ந்தேத்தத்
தரையில் விளங்கும் பேரரு ளாளா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.(6)

 முளைமதி நாளும் வளர்ந்திருள் சீத்தலின் முன்னு பெருங்கருணை
      மொய்த்தப லுயிர்க ளிடத்தும் வளர்ந்து முருக்க மலக்கருளை
விளைகதிர் ஞாயி றெனச்சுடர் தோற்றி வெளிப்படு மேன்மையனே
      மேவிய கேவல நிலைமலர் பைந்தரு விட்டக லாத்தழலும்
வளைதரு சகல நிலைக்கட் கற்பொலி வன்றழ லுஞ்சுத்தம்
      வாய்ந்த நிலைக்க ணயத்தழ லும்பொர மன்னி வயங்கிடுவோய்
தளையவிழ் செங்குவ ளைத்தொடை யாளா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.(7)

நின்னை யிளங்குழ விப்பரு வத்து நிகழ்ச்சி யுறத்துதிசெய்
      நீர்மையி னெங்களை யையுற லைய நிலாவிய செங்காட்டின்
முன்னை யடைந்தது போலடை வாயெனின் முன்னிய தெய்தாய்நீ
      முற்றிய வெங்களை யேநனி நல்குது மொழிவது மொன்றுளதாற்
பின்னை யெனாதுரை செய்குது நின்னைப் பெட்பொடு பாராட்டும்
      பெற்றி யுணர்ந்தனை மற்றொ ரிடத்தப் பெற்றிகொ டடையற்க
தன்னை யிழப்பின் விரைந்தருள் குரவா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.(8)

 புண்ணிய வேத முடிப்பொரு டெளியப் புகறலி னிகரிலதாய்ப்
      பொங்கொளி வெண்குடை நீழலின் வைகப் புவன நடாத்துதலி
னெண்ணிய வெங்களை வாங்கி யுனைத்தந் திடுதலி னெங்களுயி
      ரென்னு நிலத்துணர் வென்புனல் பாய்த்தி யிறாதெழு பேரின்ப
நண்ணிய போகம் விளைத்தலி னொத்தனை நால்வரு மென்பதலா
      னகுவரு ணாதி யொழிந்தொளி ருண்மை நலந்திளி யேமெளியேந்
தண்ணிய மேலவர் கண்ணிய முதல்வா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.(9)

நகைதிக ழாகம வன்றொடர் பூட்டி நலங்கிளர் மாமறையே
      நாடிய தொட்டி லெனச்செறி வித்து நவின்றப லுபநிடத
வகையணை மீமிசை வைகுறும் யாமிம் மடவைசெய் தொட்டிலினும்
      வைகுவ தோவென் றெண்ணலை யெண்ணிடின் வையை யடைத்திடுநாண்
முகைசெறி யோர்தரு நிழலினும் வைகினை முதுமறை யாதிகளு
      முற்றிய வோலவ ணென்றிடின் யாது மொழிந்திடு வாயளவாத்
தகைபடு சுகுணமெய்ஞ் ஞான வினோதா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.(10)

3. தாலப்பருவம் முற்றிற்று.

4. சப்பாணிப்பருவம்

உரைசெயப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்கடக்கவேலை -
      யொன்றினி தியற்றுதற் கெண்ணா ரதன்றியு முரைக்குமுன் செயவும்வல்லார்
கரைசெயிறு நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழறமருகள் -
      காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்றுமென்னில்
விரைசெய்மலர் செற்றுபொழில் கூற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டியங்கம் -
      வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநலில வேண்டுமென் போமென்செய்வாய்
தரைசெய்பய னாய்வ்ந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.(1)

புண்ணிய மலிந்தநின் றிருவார்த்தை யென்னப் பொலிந்தபே ராகமத்திற் -
      போற்றுபெரு நடவைபிற் சமயமும் விசேடமும் பொற்பப் புரிந்துபின்ன,
ரண்ணிய சிரத்தின்மேற் றங்கிமனு முதலாய வத்தவடி வங்களாரு -
      மமைதர்ச் சோதனை புரிந்தபின் விரும்பிநவில பிடேக மாதிகொண்டு,
கண்ணிய நறுந்தா மரைத்திரு வடித்தலங் கருதுமச் சென்னியேறக் -
      கண்டபின் யாவருங் காணநீ றுத்லியெங் கைம்மீது மேறி மிளிருந்.
தண்ணிய மலர்க்கைகொடு ஞானவடி வாயினோன் சப்பாணி கொட்டியருளே-
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.(2)

நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனா -
      நெடியசிவ ஞானமுனி யாலுண்ர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே,
யன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற் -
      கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ,
பின்னைமற் றொன்றெண்ணி யகலநினை வாயெனிற் பெரிதுமகிழ் செய்தல்பாட்டே -
      பேணுகென வனறொண்டார் பாற்பேசி னானெவன் பேசெணி னெவன் பேசுவாய்,
தன்னையொப் பாய்கருணை யுருவாய சின்மயன் சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.(3)

 தூயதிரு வாதவூ ரடிகளின் னுங்கோவை சொற்றிடுத லின்று நன்று -
      சூழுமொரு மூர்த்தியின் னுங்கண்முன் கைமூளை சொரிதர்த் தேய்ப்பதின்று,
மேயவொரு கண்ணப்ப ரின்னுங்க ணப்புவான் விழியிடந் திடுதலின்று -
      மெய்க்குறிப் புத்தொண்ட ரினுமுத்த மாங்கங்கன் மீதுமோ துதலுமின்று,
பாயதிரி புரநீறு பட்டமையின் மாமேரு பற்றிவாங் குதலுமாயப் -
      பகழிகோறாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே,
தாயனைய சிற்பரன் றாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.(4)

எள்ளருங் கைலாய வரைவீற் றிருந்தநா ளிங்கனம் பாராட்டுதற்
      கேற்புடைய வடிவமென் றென்றுனை விடுத்தன மிருந்தவ்ர்க ணாலவரேத்த,
விள்ளருந் தளிரால நன்னிழலு மொருகுந்த மென்னிழலு மொருவரேத்த -
      வீற்றினி திருந்தநாள் சிலவன்றி யிலையன விடுத்தனம் பல்லோர்தொழு,
வுள்ளரும் பேரருளி னிவ்விடத் துறையுநா ளூழியினு மேலுமேலு -
      முள்ளவென வோர்ந்திது துணிந்தன மகிழ்ச்சியெளி யோங்கட்கு மேன்மேலுறத்,
தள்ளருஞ் சுத்தமேற் சித்தாந்த சைவமணி சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (5)

வேறு.

 விண்டல ருந்திற மின்றி யெழுந்து விளங்குறு தானவனை
      வெய்யவ னாகிய தங்கொழு நன்புடை மேவு தொறும்பற்றித்
தண்ட லிலாதிடி செய்து பொடித்துத் தாமரை மலரள்ளித்
      தானெறி தரனே ராமென வெள்ளிய தண்ணிய நீறள்ளி
யண்டல்செய் தொண்டர் தமக்கருள் கையா லருணோ தயமெழுவா
      யறுசிறு பொழுது மெருத்துரி போர்த்தி யமைந்தவள் வார்முரசக்
கொண்டன் முழங்குங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (6)

பாலம் பொலிதரு செங்க ணநங்கன் படரா னமர்புரியும்
      பான்மை குறித்தென வோவி யெழுந்தருள் பண்ணாவ நின்னாம
ஞாலம் பொலிதரு குரவர்கள் யாவரு நன்கு நவிற்றலலா
      னாடி வரைந்து விடுத்திடு மாற்ற னமக்கிலை யென்றயரச்
சீலம் பொலிதரு பக்குவ ரஞ்செவி செப்பி விடுத்தலொடுந்
      திசைதிசை செல்ல வரைந்தும் விடுத்திடல் செய்யு மலர்க்கையினாற்
கோலம் பொலிதரு கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (7)

 நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு
      நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து
நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியு
      நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியு
மோடி யவிந்திட வுண்கல சேடம துதவு திருக்கையினா
      லுறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபங்
கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (8)

பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்தமுனைப்
      பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல
வுருவாய் மையுந லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனு
      முண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று
திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய
      தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால்
குருவாய் மாடக் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (9)

 சேர்ந்தறி யாநங் கைம்மல ரென்றுன் றிருவாய் மலருதியேற்
      றெளியா யாங்க டெளிந்திடு மாறு சிறப்ப நினைப்பூசை
யார்ந்துமு னீயினி தாற்றிய துண்டே யன்று குவித்துளையா
      லன்ன தயர்த்தனை கொல்லோ வின்று மப்பரி சேநினையா
வோர்ந்து முணர்ச்சி யிலாப்பர சமய ருரைத்திடு வார்த்தைகளு
      ளொன்றும் பொருளல வென்றுகை தட்டுத லொப்ப வுவந்தறிவு
கூர்ந்தவர் வாழுங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (10)

4. சப்பாணிப்பருவம் முற்றிற்று.

5. முத்தப்பருவம்.

கருகு மூல மலத்தினுயிர் கலப்புற் றதுவே யகப்பந்தங்
      கவற்று மாயை கன்மமொடு கலந்த பந்த மகப்புறமாம்
பெருகு புறமாந் தனுகரணம் பெற்ற பந்தம் புறப்புறமாம்
      பிறங்கு புவன போகத்திற் பிணைந்த பந்த மெனவிரித்தே
யுருகு மடியர்க் கிரங்கியவை யொழியு மாறு மின்பநிலை
      யுதிக்கு மாறு முண்மையினொன் றுபதே சிக்குந் திருவாயான்
முருகு மலியும் பொழிற்றுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (1)

தங்கு பருவ மதம்பாகஞ் சத்தி பதிதல் வினையொப்புச்
      சார்ந்து மலக்கட் டற்றுயிர்சு த்ததிற் றசஞ்செய் தத்துவிதத்
தெங்கு நிறைநம் மொடுங்கலத்த லிதுவே யகச்சம் பந்தமரு
      ளிடத்து நிற்ற லகப்புறமவ் விலகு மருளி னுபகாரம்
பொங்கு மருடீர் தரக்காண்டல் புறநாம் பிரம மென்றல்புறப்
      புறமா மிவற்றுண் முன்னையதே பொலியா நின்ற தென்றதனுண்
முங்கும் வகைசெய் தருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (2)

 நாடு நிலமுன் னிருபத்து நான்கு நாளம் வித்தையெட்டு
      நறிய விதழ்க ணாலெட்டு நாலெட் டாய கேசரங்க
ணீடு மீசர் சதாசிவரே நிகழுஞ் சத்தி கேசரத்து
      ணிலவும் பொகுட்டு வடிவுசிவ நிலைய வனைய பொகுட்டகத்துட்
கூடு மைம்பத் தொருபீசங் குலாய விதய பங்கயத்திற்
      குறிக்கு நந்தா ணிலையென்று கொண்டா டெங்கட் கருள்வாயான்
மூடும் பொழில்சால் வளத்துறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (3)

உற்ற விதய பங்கயத்தி லோரைந் தெழுத்தா கியவடிவி
      லுனைக்கொல் லாமை முதலெண்பூ வுறவம் மநுவா லருச்சித்தும்
பொற்ற வுந்தித் தலத்தழலைப் பொலிய வெழுப்பி விந்துவகம்
      புணராச் சியத்தை யிருநாடி பொய்தீர் தரக்கொண் டோமித்துஞ்
செற்ற புருவ நடுச்சிவய திகழு மூன்று பதப்பொருளாந்
      திறமை நோக்கி யதனாலே சிவாக மேபா வனைசெய்ய
முற்ற வுணர்ந்தார்க் கருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (4)

 நகைசெ யுயிர்க ணசிக்குமெனி னசித்த லாலொன் றுவவில்லை
      நசியா வென்னி லிரண்டுபட்டு நம்மை யொன்று வனவல்ல
வுகைசெ யருத்தா பத்தியா லுப்புத் தனது கண்டிப்பை
      யொழிந்து புனலி னொன்றாமா றொப்பத் தமது சகசமலப்
பகைசெ யாற்றல் கெட்டொழியப் பண்பி னொன்றி நங்கழற்குப்
      பகருஞ் சேட மாமென்று பரிவுற் றெங்கட் கருள்வாயான்
முகைசெய் பொழில்சூழ் தருதுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (5)

வேறு.

உண்ணீர்மை யுயிருணர்ந் துய்யவே தாகம மொருங்கெடுத் துப்புகன்று -
      மோலமென் றபயமிடு நெடியமான் முதலமர ருய்யநஞ் சமிர்தமுண்டும்,
புண்ணீர்மை யாயஞ ரழுந்துலக முய்யமுப் புரநீறு படநகைத்தும் -
      புலவரொடு வழுதியு மயக்கந் தெளிந்துயப் பொருண்மரபு முழுதுரைத்து,
மெண்ணீர்மை யார்க்குமதி மலிகொங்கு தேரெனு மியற்றமிழ்க் கவிபாடியு -
      மிரும்புகழ் படைத்தநின் செய்யாவா யாங்களுய விதுசெயிற் பழியாகுமோ,
தெண்ணிருடைப்பொன்னி சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (6)

  மிக்கதுவர் வாய்ந்தநம் மிதழ்முன் பொருத்திப்பின் மேவக் குவிக்குமாறோர் -
      வேலைவந் ததுகொலென நின்றிரு வுளங்கோளேல் விமலநீ கொள்வாயெனிற்,
றொக்கநின் போதுநாம மாமைந் தெழுத்தினுஞ் சுடருஞ் சிறப்புநாமத் -
      தொகையைந் தெழுத்தினுமொ ரைந்தெழுத் தென்னநவில் சூக்குமத் தினுநினடியார்க்,
கொக்கமுத லயலா மிரண்டா மெழுத்தினை யொழித்தருளு வாய்கொலோசற் -
      றுரையொழித் தருள்வமெனின் முற்றுமுடி யாதிதனை யோர்ந்துபல மாளிகைதொறுஞ்,
செக்கர்மணி யிருள்பருகி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (7)

 ஒளிவார் திருப்பனந் தாளின்முன் னாளிலுள் ளுருகிநி னடிப்பூசையாற் -
      றொருமாது சூட்டுபூ மாலையை விரும்பிநின் னுருவமிக வுங்குனிந்தா,
யளிவார் மனத்தினெம் பாமாலை வேண்டுமே லவ்வளவு குனியல்வேண்டா -
      வையசற் றேகுனிந் தெண்ணியதை யன்புடனளித்தருள வேண்டுமின்னும்,
வளிவார் பெரும்புவி தெரிக்கவவ் வணநிற்கின் மாண்புடைக் கலயனாரை
      மற்றெங் கியாஞ்சென்று தேடுவே மாதலால் வளமிக்க கழகந்தொறுந்
தெளிவார் குழாங்குழுமி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (8)

 முன்னைநா ணின்னால் வெலப்பட்ட கரிவன்றி முதுமீன முதவுமுத்து -
      முண்டக மலர்த்தாளி லரைபட்ட வெண்மதிய முத்துநஞ் சுணவுதந்த,
புன்னைவாய் நெய்தற் கடற்றோன்று மிப்பிவளை பொறையுயிர்த் திட்டமுத்தும் -
      பொருதிக லழிந்தகொக் குதவுமுத் துங்கொண்டு பூணுத னினக்கேகட,
னென்னையோ துந்திற மெனிற்சின்ன மேற்றதா ரிந்நாளி லில்லையென்னி -
      லிலகுகண் மணிமாலை யிடையிடைக் கோத்திடுக வெண்ணில பழுத்தபாக,
றென்னைமா வாதிபல சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.(9)

பல்காலு நின்னைத் துதித்துநின் பதமுட் பதித்துவாழ் வேங்களுக்குப் -
      பயனாக வொருதர மெனுந்தந் திடாயெனிற் பல்வளப் பூவணத்தி,
லல்காத மாமைநிறை பொன்னனையண் முன்னைநா ளள்ளிமுத் தங்கொள்ளுமா -
      றளவளாய் மேயதை வெளிப்பட வுரைத்திடுவ மதனினு மிரங்காயெனி,
னொல்காத மற்றவ ளுகிர்க்குறி கபோலத்தி லுற்றது முரைத்துலிடுவோ -
      மொண்கதிர்ச் செல்வன்மதி யோனெனத் தண்ணென் றுடம்புகூ னிக்கடந்து,
செல்காறும் வளைபொழி லுயர்ந்தவா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.(10)

4. முத்தப்பருவம் முற்றிற்று.

6. வாரானைப்பருவம்

 உறந்தகதிர் மண்டிலத் துறைவது தெரிப்பதென வொண்மேனி சேயொளிசெய -
      வோங்குமதி மண்டிலத் துறைவது தெரிப்பதென வொளிர்நீறு வெள்ளொளிசெய,
வறந்தலை யெடுப்பவொளி ரிவ்வொளிக ணோக்குதொறு மடியர்மல பந்தமுழுது -
      மடலற வழித்தழி லிலாதபே ரின்பநிலை யருளிற் கொடுத்திடுதலாற்,
பிறந்தபிர தாபமும் புகழுமே யென்றறிஞர் பேசிமகிழ் தூங்கவளவை -
      பேசிய துணர்ந்துநகை செய்தென முகத்துப் பிறங்குபுன் மூரறோன்றச்,
சிறந்ததிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப்பிரான் வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.(1)


உற்றபெரு மாதவ முஞற்றுநர்க் கல்லா துஞ்ற்றுதவ மொன்றுமில்லா -
      வுவர்வருக வென்றழைத் திடநா மடைந்திடுத லுரிமையன் றென்றுநினையல்,
பொற்றமதி நிலவுநக ரன்றிவெங் காட்டிலும் புணரிவா யுண்டெழுந்த -
      புயன்மழை செழும்பணை நிலத்தன்றி யுவர்பற்று புவியகத் தும்பொழியுமே,
துற்றமலர் தளிர்மெத் தெனப்பரப் பினமுளத் தூயர்கை கொடுக்கநின்றார் -
      தோலாத விருதுகளு மெதிரெடுத் தேநின் றுணைத்தாள் பெயர்த்துவளமே,
செற்றதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.(1)


வருந்துத லிலாதுநின் றாள்பெயர்க் குந்தோறும் வயக்கொடுங் கூற்றமுன்போன் -
      மார்பிடைத் தாக்குங்கொ லென்றஞ்ச நந்தலையில் வைக்குநந் தலையில்வைக்கும்,
பொருந்துவித மென்றுசில ருண்மகிழ் தரச்சிலர் பொருந்து மென் பூத்தூவவப் -
      பூவினை மிதித்தலவேள் கணையடிக் கீழ்ப்படப் போகட் டடர்த்தலேய்ப்பக்,
குருந்துநிழ லாளிவந் தானருட் சயிலாதி குலமணி நமச்சி வாய -
      குரவன்வந் தானென்று சின்னங்க ணின்பெயர் குறித்தூத வளவிலறமே,
திருந்துதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான் வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.(3)


பாங்குபெற வீரடி நடந்துநா லடியெனப் படிறுரைத் தனைதக்கதோ -
      பார்முழுது நின்விடைக் கோரடி யெனப்பகர்தல் பட்டாங்கு நீயுமுணர்வா,
யோங்குமகிழ் வெய்தவினு மோரடிநடந்திடுக வுள்ளடிகள் கன்றுமென்னி -
      லொருநாவ லூர்நம்பி வாட்டந் தவிர்ப்பதற் கோரிராப் பொழுதினாப்பண்,
வீங்கு மிள முலையுடைப் பரவையார் மாளிகை விழைந்துதிரு வாரூர்ப்பெரு -
      வீதியிற் பலகா லுழன்றதறி யேங்கொலோ வேதா கமத்துநெறியே,
தேங்குதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
      செம்மைதிகழ் சிவ ஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.(4)


கள்ளுமண மும்பரவு மென்மலரில் வைக்கவுங் கன்றுநம் மடிகளென்னிற் -
      கல்லுமுரு டும்பொருவு மெங்கடலை வைத்திடல் கருத்திற் பொருத்திலாயென்,
றுள்ளுதொறும் வெய்துயிர்ப் போங்குமது தீர்பொருட் டுன்னடிபெயர்த்துவைக்க -
      வோரடி யெடுத்துவைத் திடுவமெனி லெங்களுக் குதுபோது மிரு திறத்துந்,
துள்ளுமகிழ் கொண்டியா மீரடி முதற்பலடி தொக்கபா மாலையோடு -
      தோன்றவோ ரடியெனு மிலாதபூ மாலையுஞ் சூட்டுவேந் துறைகொள்பலநூ,
றெள்ளுதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.(5)

வேறு.

 ஒருவா ஞானங் கிரியையென்று முடங்கு மறைக்குந் திரோதான
      முவப்பப் பொலியு மனுக்கிரக வுண்மை யென்று மிவ்விரண்டா
மருவா நிறைநின் றிருவடியை வகுப்பர் யாமு மிவ்விரண்டா
      வருக வருக வெனவடுக்கி மகிழ்ந்து விளிப்போ மாமேதி
பெருவாய் பாய விளவாளை பிறங்கு கமுகிற் பாயவதிற்
      பெயர்ந்து கருவா னரமெழுந்து பெருங்கற் பகமேற் பாயவொளிர்
திருவா வடுதண் டுறையமருஞ் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே(6)

  ஒன்று நிறுவி யொன்றெடுத்தே யூழி பலகண் டம்பலத்து
      ளொருவா தொருநீ நின்றமையி னுற்ற வருத்தஞ் சிறிதுயிர்ப்பா
னன்று புகறு மடிகள் சற்று நடத்தல் வேண்டு மதின்வருத்த
      நண்ணிற் றாயிற் றடையின்றி நாயே முள்ளத் திருந்திடலாந்
துன்று கதிரோன் றேர்ப்பரிக டுனைந்து படர்வான் மணிமாடந்
      தொறுநின் றிலகு துகிற்கொடிக டுளக்கும் வளியி னசைந்தசைந்து
சென்று புடைக்குந் துறைசையமர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே(7)

 நல்லார் புகழுந் திருநாவ னல்லூ ரகத்தி லவதரித்த
      நம்பி யியற்று திருமணத்தி னாடி நின்னை யழைத்தவரா
ரல்லார் கண்ட மறைத்தெழுந்தா யழையா திருக்க வடைந்தமையா
      லாங்கு நிகழ்ந்த பெருஞ்சிறப்பு மடியோ மறைய வேண்டுவதோ
வல்லா ராய யாம்பலகால் வருந்தி யழைக்க வாராமை
      வழக்கோ வழைத்த படிவந்தால் வாழ்த்தே பெறலா மையமிலை
செல்லார் பொழில்சூழ் துறைசைவளர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே(8)

தந்தைக் கொலைசெய் திட்டவர்க்குந் தாயைக் கொலைசெய் திட்டவர்க்குந்
      தாரக் கொலைசெய் திட்டவர்க்குந் தனயற் கொலைசெய் திட்டவர்க்கு
முந்தைத் தொடர்பி னுறுங்கடும்பு முழுதுங் கொலைசெய் திட்டவர்க்கு
      முந்தி முந்திச் செல்வையெம்பான் முந்தி வருதற் கென்செய்தோங்
கந்தைக் கறுத்த காடமதக் களிற்றீ ருரியுண் மறைந்துகருங்
      கடலுண் மறைந்த கதிர்கடுக்குங் காட்சி கரந்து வெளிவந்து
சிந்தைக் களிப்பார் துறைசையமர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே(9)

முத்தன் வருக யாவருக்கு முன்னோன் வருக முப்புவன
      முதல்வன் வருக முன்னாரை முன்னான் வருக மறைமுடிவி
லத்தன் வருக வகரவுயி ரனையன் வருக நமவொழிக்கு
      மையன் வருக வகரமளித் தருள்வான் வருக வாகமநூற்
கத்தன் வருக கருதுநர்தங் கருத்தன் வருக கலப்புணர்த்துங்
      கையன் வருக வருளுருவக் காளைவருக கவின்றுபொலி
சித்தன் வருக கோமுத்திச் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே(10)

6. வாரானைப்பருவம் முற்றிற்று

7.  அம்புலிப் பருவம்

 கலையமைதி கொடுகடுங் காரிருள் கடிந்துபைங் கழுநீ ருவந்திடுதலாற்
      காகோ தரத்துதர பந்தங் கழிந்துகதிர் காலுரு வமைந்திடுதலா
லிலையமக றண்ணளி யமைந்தெவரு மாலோ னெனப்பொலி தருந்திறத்தா
      லெழிம்பு யங்கவிழ் தரக்கரந் தலைவைத் திலங்குயிர்ப் பயிரருடலான்
மலைவரு கதிர்ப்பருதி மண்டிலத் தெய்தலான் மதியோ னெனப்பொலிதலான்
      மானேந்தி யாகலா னெங்கள்குரு சாமிதனை மானுவா யாதலாலே
யலைவிலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே.(1)

வண்ணமா மேருவை வளைத்தலாற் பன்னாளு மகிழப் பொலிந்திடுதலால்
      வான்புலவர் பலர்சூழ் தரப்புது விருந்தாக வாய்ச்சுவை மருந்துதவலா
லெண்ணலா காதசத் துவகுணப் பிரதான னென்னத் திகழ்ந்திடுதலா
      லெக்காலு மிவருரிமை யாயவெறுழ் மிக்கவிமி லேறுபுகர் கொளவிடுதலான்
மண்ணலால் வானகமு மேத்தவுய ரரசுநிழல் வைகலா லெங்கள்குரவன்
      வானகத் துலவுநினை நமையொப்ப னென்றாட வருகவென் றானாதலா
லண்ணலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.(2)

 கூடுநாண் முப்பத்து மூவருக் கமுதுதவு கொள்கையுடை யவனீயிவன் -
      குலவுபல நாள்கடொறு மெண்ணிலார்க் கமுதுதவு கொள்கையுடையவ னிதுவலான்,
மூடுபுற விருடபச் சிறிதுசிறி தாச்சில முருக்கிவரு வாய்நீயிவன் -
      மொய்த்தவக விருள்வலி யொருங்குகெட் டொழிதர முருக்கிவரு பவனுடலிலா,
நாடுமொரு பணிகொளப் பட்டுழல்வை நீயளவி னகுவலிப் பாம்புபூண்டு -
      நவையிலா னிவனிவனை நீயொப்ப தெங்ஙனமதி னட்டகொடி வானளாவி,
யாடுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே -
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலீ யாடவாவே.(3)

  துன்னவரு மடவார் குழர்த்தனீ யிவனளவி றூயமா தவர்குழாத்தன் -
      றொக்கவொரு வருணமுடை யவனீ யிவன்கருணை சூழுமை வருணமுடையா,
னன்னரீ ரெண்கலைய னீயிவனொ ரறுபத்து நான்குகலை யுடையனீயோர் -
      நகுமுய லுளாயிவன் விருதுமுதல் யாவையினு நண்ணுபல சிங்கமுடையான்,
முன்னவுங் கூடாக் களங்கனீ யெவருளமு முன்னுமக ளங்கனிவனான் -
      முத்தனிவ னுக்குநினை யொப்பென மொழிந்திடார் மூடருஞ் சிவலோகமே,
யன்னவா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.(4)

 துலங்குபே ரருள்கொளுவி மலமாயை கன்மந் தொலைத்தள விலாதவின்ப -
      சுகவாரி யெவ்வுயிரு மூழ்கச் செயுங்குரவர் சூளா மணிக்குநாளுங்,
கலங்குநிலை யுடையையாய்க் குரவனில் விழைந்துபழி கைக்கொண்ட பாவியாய -
      காமுகா நின்னையொப் பென்றவெம் வாய்க்குமொரு கழுவா யியற்றல்வேண்டு,
மிலங்குநெடு மாதவர்கள் பல்லா யிரங்கோடி யென்னவய னிற்கநின்னை -
      யிவன்வருக வென்றுகட் டளையிட்ட னன்கருதி னெத்தவ மியற்றினாய்மு,
னலங்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.(5)

 செய்யநங் குருநாத னினையாட வாவென்று திருவாய் மலர்ந்த பொழுதே
      திருந்தக் குடந்தமுற் றடியனேன் வந்தனென் றிருவுள மெவன் கொலென்று,
நையவுளம் விரையவந் தான்றதிரு வடிபணியி னகுகருணை பூத்துநீறு -
      நளினத் திருக்கரத் தள்ளியுன் னுதலிடுவ னாடுமப் பெரியபேற்றால்,
வெய்யநின் கயரோக மும்பழியு மாறியுயர் மேன்மையும் பெறுவைமுன்போன் -
      மேவமுடி வைத்திடினும் வைக்கும் பெருங்கருணை விள்ளத் தெரிந்தவர்கள்யா,
ரையனா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.(6)

 போற்றுநாம் வருகென் றழைத்தபொழு தெய்திலான் புகலிவனெனத்திருக்கண் -
      போதச் சிவந்துழிக் குரவற்பிழைத்ததன் புகரெண்ணி யிருவினைகளுங்,
காற்றுதிரு முன்னர்வர வஞ்சினா னென்றருகு கவினமே வுற்றவனையான் -
      கண்மணியை யனையசுப் பிரமணிய தேவனக் கண்சிவப் பாற்றுவித்தான்,
மாற்றுவா னின்னமு மெனத்தா மதிப்பையேன் மற்றவனு மனையனாவன் -
      வாழ்வகை நினக்குமப் பாலுமுண் டோசெம்பொன் மாடமுடி மேலண்டம்வைத்,
தாற்றுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.(7)

 தீட்டுமா புகழுடைச் சின்மய னிவன்கலச் சேடமுகி லினுமுன்னைநாட் -
      சேர்ந்துநீ ருவரகற் றியபழங் கதையமரர் செப்பத் தெரிந்திலாயோ,
கூட்டுமிப் போதுமச் சேடமணு வத்தனை கொடுத்திடப் பெற்றாயெனிற் -
      கொடியகய நோயொழிவ தற்கைய மில்லையிக் கூற்றுண்மை யென்றுணர்தியா,
லீட்டுமா பாதகமும் வேறிடம் பார்க்குமினி யாஞ்சொன்ன வழிவருதியே -
      லெய்தாத மேன்மையிலை மாடத் துகிற்கொடி யெழுந்தசைந் தைந்தருவையு,
மாட்டுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.(8)

 எங்கணா யகன்வருதி யென்றபடி வாரா திருத்தியேல் வெய்யசாப -
      மிடுவனச் சாபநின் குரவனிடு சாபமென் றெண்ணாதி யதுவாழ்த்ததால்,
வெங்கணா டரலிவ னணிந்தவைகள் பலவுண்டு வெய்துயிர்த் தொன்றைநோக்கின் -
      விரையவந் துன்னைப் பிடித்துக் கடித்துடன் விழுங்கியிடு மீளாமலே,
திங்கணா யகயா முரைப்பதுவும் வேண்டுமோ சிறுவிதி மகச்சாலையிற் -
      றேய்ப்புண்ட தத்தனையு மின்றயர்த் தாய்கொலோ செங்கண்மால் கைகுவிக்கு,
மங்கணா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே.(9)

 வார்க்குங்கு மக்கொங்கை யுமையாள் பசுக்கோல மாற்றிமுற் கோலமுதவு -
      மாத்தல மிதன்கணொளிர் குருதரிச னங்கருது வார்க்குமள வாதவின்பம்,
போர்க்குமொரு சிவலிங்க தரிசன மருட்பெருமை பூண்டசங் கமதரிசனம்,
      பொற்பக் கிடைக்குமித் தலமனைய தலமெவண் போய்ப்பெறுவ தோதுமதியே,
சீர்க்குமொரு நவகோடி சித்தபுர மென்பதுந் தேர்ந்திலாய் தேருமாறு -
      செப்பவுந் தேர்கிலா யிதுநன்மை யன்றெழு திரைக்கட லெனப்பன்முரச,
மார்க்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.(10)

7. அம்புலிப்பருவம் முற்றிற்று.

8. சிற்றிற்பருவம்.

உருவார் மதிய மிளங்காலை யுதிப்ப தெவனென் றுன்னிமயங்
      குற்றுக் கணப்போ திருந்தனம்பி னுணர்ந்தோம் வேடப் பொலிவதன்பின்
மருவா ராத்த மாலைதுயல் வருதோ ளொருநீ யெனத்தெளிந்தோ
      மற்றப் பொழுதே விரைந்தெழுந்து மகிழ்ந்து பணிந்தோ நீறளித்தாய்
வெருவார் கண்ட வுடனெழுதன் மேவா ரென்று திருவுளத்து
      மிக்க சினங்கொண் டிதுசெய்தன் மேலாம் பெருமைக் கழகேயோ
திருவார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(1)

 ஒளிசா னினது வருகையுளத் துவந்தோம் யாங்கள் வகுத்தவறை
      யொன்று ளிருத்தி யெனமுகம னுரைத்தோ மதனுக் கெங்கள்சித்த
ரளிசா லருளின் வகுத்தவறை யன்றென் றொழித்தா யடுமணற்சோ
      றைய வுண்க வெனநமக்கிங் காகா தாநம் விடைக்கென்றாய்
களிசால் யாங்க ளினிச்செய்யக் கடவதொன்று மிலையடிகள்
      கருத்தி லென்னோ நினைந்தீது கருதின் யாங்கள் செயலென்னே
தெளிசா றுறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(2)

ஆரும் புழுதி யறப்புனல்கொண் டாட்டித் திருவொற் றாடையிடற்
      கடியார் பலரு ளாரெனின்வே றளைந்து சென்றா லாகாதோ
பேருங் சிறியோ மியற்றுவது பேணாச் சிறுவீ டாதலினாற்
      பெரியோ யொருநீ யியற்றுவது பேணும் பெருவீ டாகியதா
லோரு மிதுவு நின்னடிம ணுரிš மதனாற் கன்றுவது
      மொருங்கி யாங்கள் வருந்துவது முணரா திருத்த லருளன்றே
தேருந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(3)

அருந்து பதம்பார்த் தோருவேட னமைத்துக் கொடுத்த வூனெச்சி
      லடங்க நுகர்ந்து முடியிலவ னடிசூட் டிடவு மமைதரவேற்
றிருந்த துரையா தினையவனுண் டிட்ட சேட மெடுத்துதவி
      யெல்லார் முடிக்கு மடிசூட்டு மென்று புகன்றோ மிதுபிழையோ
வருந்து மெமது விண்ணப்ப மறாம லேற்க வேலாயேன்
      மன்னு மருளி லானெனநின் மாணாக் கருக்கெல் லாமுரைப்போந்
திருந்து துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(4)

ஐய முன்னைப் பழக்கநினைந் தழிப்பே னென்னி லுலகுயிர்கட்
      கமைந்த மலமா தியமூன்று மடங்க வழித்தி யடுகாமம்
வெய்ய குரோத முதலாறும் வீட வழித்தி நினையன்றி
      வேறும் பொருளுண் டென்றுரைக்கும் வீணர் மதமு மறவழித்தி -
வைய முவக்கு மிவையன்றி மதியா யாங்க ளாடிடத்து
      வந்து வகுப்ப தழித்தனையேல் வருவ தறமோ மாப்புகழோ
செய்ய துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(5)

எல்லார் தமக்கு மனுக்கிரக மியற்று லோமென் றொருபெயரிட்
      டிங்கு மேவி யெங்களிடத் தென்னோ வழித்தற் றெழில்பூண்டாய்
வல்லா ரெதுசெய் யினுஞ்செயலா மறுப்பா ரொருவ ரின்மையினால்
      வல்லார் லாளா விருப்பதலால் வாய்பே சுதற்கும் வழக்குண்டோ
வில்லார் மணிமா ளிகைகடொறும் விளங்கா நின்ற நலநோக்கி
      விண்ணோர் கண்ணே றுறாவண்ணம் விரித்துப் பொருத்து முறையே போற்
செல்லார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(6)

  கூறு முலகர் விரும்புபெருங் குரவர் பெருமா னீயென்னிற்
      குலவ நினைக்காண் டொறும்யாங்கள் கும்பிட் டிடுவோ மதுவன்றி
வேறு தனித்து மொழிந்திடினும் விரும்பிக் கேட்போ மினிதியற்றும்
      வீட்டை யழிப்பான் றொடங்கினையேல் விதியா காது பொறுத்திருத்த
னாறு மலர்ப்பைம் பொழிறோறு நகுபைங் கிளியா கமங்கூற
      நச்சு பூவை யுணர்ந்துகற்ப நண்ணுங் குயில்கட் கினிதோதத்
தேறுந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(7)

 கோணார் பிறையுங் கழிதலையுங் கொன்றைத் தொடையும் புலித்தோலுங்
      குலவு நுதற்க ணொடுபிறவுங் கூடா தொழித்துச் சுவேச்சையினோ
ரேணா ருருக்கொண் டிங்கடைந்த திறைஞ்சு மவர்கட் கருள்வதற்கோ
      வெங்கள் சிறுவீ டழிப்பதற்கோ வியம்பல் வேண்டு மிறையோனே
பூணார் முலைநன் மடமாதர் புணர்மா ளிகையிற் சூளிகையிற்
      பொருத்து மணிச்செங் கதிரெழுந்து போய்வெங் கதிர்க்கு மாறாகச்
சேணார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(8)

 மாலா ரிளைய மகனாய மதவே ளுடம்போ கற்பகஞ்சால்
      வான்கூட் டுண்ணுந் திறலவுணர் வாழ்ந்த கொடிய முப்புரமோ
பாலா ரயன்மா லொடுங்கவரும் படர்பே ரூழிப் புவனமோ
      பரவு மடிகள் பொருளாகப் பற்றி யழித்தல் செய்வதற்குக்
கோலார் வளைக்கை மடவார்யாங் குழுமி யியற்று மிதுகுளிர்பூங்
      கோலப் பொழில்சூழ் வாவியினுங் குளிரோ டையினுந் தாயெழுந்து
சேலார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(9)

வீங்கும் விருப்பின் யாங்களணி வீதி யிடத்தி லியற்றுமிதின்
      மேவுஞ் சுவரச் சிறுவிதிசெய் வேள்விக் களமே கலையன்று
தாங்கு மிதனுட் செம்மணிக டயங்கு மதனுட் டழலன்று
      தழையா நின்ற வெங்குழுவத் தக்கன் மகத்திற் குழுவன்றே
பாங்கு பெறவா லடிக்குரவு பயின்றாற் போல வடுதொழில்யாம்
      பயில்வோ நினையாந் தடுத்திலமிப் பண்பு தகவோ பலவளமுந்
தேங்குத் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.(10)

8. சிற்றிற்பருவம் முற்றிற்று.

9. சிறுபறைப்பருவம்.

 விரைவீசு தாமரைப் பூவொத்த செங்கரம் விளங்குமொரு தமருகத்தை -
      மேவத் திரித்துவடி வொடுநிறமு மொத்தலான் மேதினி யெலாம்பரந்து,
நுரைவீசு கங்கையொடு நட்புற் றுறும்பிறையை நோன்மையரு ளிற்றிரித்து -
      நுவலுமிப் பறைகுணி லெனக்கொண் டுளாய்கொலென நோக்கியுல கேத்தெடுப்ப,
வரைவீசு வெள்ளொளிய வயிரமும் பாசொளிய மரகதமும் வாரிவாரி -
      வண்குலைப் படுகரிடை மேயும்வளை கோட்டெருமை வாய்வெரீஇ யோட்டெடுப்பத்,
திரைவீசு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.(1)


அறிவிலே மிந்திரிய மாவேட்ட மாடுதற் கமைகுறிஞ் சிப்பறையுமா -
      யடங்காத மனமென்னு மிமிலேறு கோடற் கடுத்தமுல் லைப்பறையுமாய்,
முறிவிலுடல் பொருளாவி கொள்ளைகோ டற்குற முழக்குபா லைப்பறையுமாய் -
      மூதுணர் வெனும்புன லறாதுற வொழுக்கற்கு மொய்த்தமரு தப்பறையுமாய்,
மறிவிலெம ரொடுமாறு கொண்டபர சமயர்கோண் மாய்க்குநெய் தற்பறையுமாய்,
      மாறாது பொலியவரை நின்றிழிந் தெஞ்ஞான்றும் வற்றுத லிலாதுவெப்பச்,
செறிவிலுயர் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.(2)

  ஓங்குபல புவனத் திளைப்பாற்று முன்னி· தொலிப்பதெவ னென்றுகருதி -
      யுணர்வுடைய ருண்மயங் கினுமயங் குகபின் புணர்ந்தி· தெனத்தெளிவரால்,
வீங்குபே ரறிவுடைப் பாணினியு முன்போல் வியாகரண வாஞ்சையுற்று -
      மேவிடினு மவனுமி· திற்றெனத் தேர்குவன் விளங்குகுணில் கைப்பற்றியே,
வாங்குதிரை மால்யானை பற்பல வெடுத்துநால் வாயரற் றிடவெறிந்து
      வரைபல வுருட்டிக் கடுத்துப் புகுந்துவரு மறிதிரைக் கடல்கலக்கித்,
தேங்குநீர்ப் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.(3)

    இருளின்விழி போற்கேவ லத்திற் கிடந்தநுமை யின்னருளி னுடல்விளக்க -
      மேய்ப்பவது வாய்வினை வயிற்படர்ந் தீர்பின்னு மெய்த்துமெய் யாதுநாளும்,
பொருளற முஞற்றப் புரிந்திரு தளைச்செறிவு பூணாது கீழ்ப்படுத்தப் -
      புகறத்து வத்துருக் காட்சிசுத் தியுமுறப் பொலிதரு நுமைக்கண்டுநீர்,
மருளமை செருக்குறுதன் மாற்றவரு ணோக்கிவினை மற்றைந்தி னெழுதறவிர -
      மன்னுமருண் முதலெனக் கண்டொன் றுறாதொன்ற வம்மினென் றறிவித்தல்போற்,
றெருள்விரவு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.(4)

   மதிசெயுஞ் சித்தாந்த சைவவசு ணங்கட்கு வரியாழ் முழக்கமெனவும் -
      வளமருவு சுத்தசை வப்பயிர் களுக்குநெடு மாமழை முழக்கமெனவும்,
விதிசெயுங் கிரியா குருக்களர வங்கட்கு விழைமயின் முழக்கமெனவும் -
      வெய்யபர சமயப் பருத்திப் பொதிக்கழலும் வெவ்வழன் முழக்கமெனவு,
நிதிசெயு மணிக்குவை களுஞ்சந் தனக்குறடு நீளகிற் றுணியும்யானை -
      நிகரில்வெண் கோடுகளும் வரைநின்று வாருபு நிலந்தொறு மெறிந்தியாரையுந்,
திதிசெயும் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.(5)

வேறு.

   புத்தமு தோவென மெய்த்துதி பாடிப் புந்தி விரும்புநரும்
      புகரற வோரறு காலமு மெண்ணிப் போற்றி வணங்கநரும்
சித்த மிருத்தி விடாம லருச்சனை செய்து மதிப்பவருஞ்
      செங்கை குவித்தரு கெய்தி யடிப்பணி செய்யும் விருப்பினரும்
மத்த வருட்கண் வழங்கென நின்றெதி ராடி வழுத்துநரு
      மாகிய பற்பல செந்தா மரைக ளலர்த்து மிளங்கதிரே
முத்தமிழ் தேர்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.(6)

   மருவிய வாசைப் பேயை யொழித்திட மந்திர வாதியுமாய்
      மாறாப் புண்ணிய மகவு வளர்த்திட வாய்ப்புறு மன்னையுமாய்ப்
பொருவி லிடும்பைச் சேறு புலர்த்தப் பொலிதரு பருதியுமாய்ப்
      போர்த்திடு பரசம யக்களி றொழியப் போதரு சிங்கமுமாய்
வெருவரு வெய்ய வினைக்கா டொழிதர வெய்தெழு வன்னியுமாய்
      விடாத பவக்கட் செவியொழி யப்புள் வேந்தனு மாய்ப்பொலிவாய்
முருகலர் நீர்த்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.(7)

   மன்னிய நாமே பரசிவ மென்றும் வயங்கும் மடியாரை
      வழிபடு மதுவே நம்மடி யடைதரு வழியென் றுங்கருணை
துன்னிய நந்திரு நாமம தேயரு டொகுமந் திரமென்றுந்
      துயரம் வருத்து மவாமுத லடலே தோலா வலியென்றும்
பின்னிய நந்திரு வருளர னம்மொடு பெயரா தொன்றுதலே
      பேரின் பென்று மெமக்கரு ளிப்பணி பேணிக் கொண்டருள்வோய்
முன்னிய வண்டுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.(8)

   பெய்வள மாரி யெழுங்குமி ழிக்கிணை பெற்ற வுடற்கணறாப்
      பெட்பினர் வெய்ய சினக்கனல் பொங்கப் பெறுகொடு மனமுருடர்
பொய்வள நாடுபு செந்நில நீரிற் போர்த்த மயக்கமுளார்
      பொல்லா ரிவர்தமை யாளுத லாலாம் புகழென வுட்கொண்டு
மெய்வள மார்கரு ணைத்திறம் யாரும் வெளிப்படை யாலுணர்வான்
      வெய்யே மையுமினி தாண்டருள் குரவா மேலோர் பலர்சூழு
மொய்வள மார்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.(9)

   வாரி யுடுத்த புலிக்கண் விபூதி வயக்குத லிலராயு
      மன்னிய புண்ணிய மேய்க்குங் கண்மணி வாஞ்சை யுறாராயுஞ்
சீரிய வக்கர மைந்து நவிற்றுத றேறா தொழிவாருந்
      திகழ்தரு நின்னடி யார்த மடிப்பணி செய்யா தகல்வாரு
மாரியர் கோவென நின்னடி சார்ந்துநி னருண்முக மேலாரு
      மாகிய முருடர் கவுட்புடை யொப்ப வலங்குபொ னாலாய
மூரி மதிற்றுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.(10)

9. சிறுபறைப்பருவம் முற்றிற்று.

10. சிறுதேர்ப்பருவம்.

 பருந்துபல சூழப் புலால்கமழும் வெம்படைப் பருவலித் தகுவர்மூவர் -
      பற்றியமர் சூக்கும வுடம்பனைய திரிபுரப் பாழிமுற் றுங்கெடுப்பான்,
பொருந்துவட மேருவில் வளைத்தரவு நாண்கொளீஇப் பொருகடல் சுவற்றுவாளிப் -
      பொருகணை கரங்கொண்டு நான்மறைப் பரிமலர்ப் புத்தேள் கடாவிநிற்ப,
மருந்துபடு மதியமும் பருதியுஞ் சகடாய் வயங்கக் கொடிஞ்சிமுதலா -
      மற்றுள வுறுப்புமற் றுளதேவ ராகநெடு வாழ்த்துமல் குறவிவர்ந்து,
திருந்துபுவி யாகிய பெருந்தே ருருட்டினோன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(1)

 வெய்யவெங் கானந் திரிந்துழன் றுங்கரு விழிச்செய்ய வாய்த்
      .... .... ..... ......
வையமிது வெள்ளனக் கட்டுண்டு முட்டுண்டு மத்தின்மொத் துண்டுவண்டு
      வார்திரை யெடுத்தெறியு மார்களி னோடி வெளி வான நோக்காது வீழ்ந்தே,
யெய்யவவ ணின்றின்னு நீங்கா துறங்குமோ ரெருதேறி யதுவன்றியு -
      மென்சொல்வ லதுவுண்ட மண்ணாய தேரேறி யென்னுமோர் சிறுமைதீரச்,
செய்யபொன் செய்துபல மணிவைத் திழைத்திட்ட சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(2)

  உருகுமன முடையராய்ப் பல்லோர் நடாத்துவதி னுறுமழகு நோக்கநின்றா -
      ருற்றவவர் கட்குமெங் கட்குமகிழ் பூப்பநீ யொள்ளிதி னடாத்தல்வேண்டும்,
பெருகுமெழி லோடிவர்ந் தினிநடத் தோமெனிற் பேசுபல் வடங்கழற்றிப் -
      பெருந்தேர் நடாத்தியரு டிருமாளி கைத்தேவர் பேணுசந் நிதியடைந்தே,
யருகுசில விண்ணப்பம் யாங்கள்செய் வோமென்னி லவர்தா நடாத்துதற்கோ -
      ரையமிலை யாமே நடத்தின மெனும்புக ழடைந்திடுவை சொற்றபடிகே,
டிருகுதவிர் பவருளத் தறிவுருவின் மேவுவோன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(3)

    துணைவந்த குஞ்சரமு மழகிய வுவாவுந் துலங்குமிந் நகரிடத்துத் -
      துண்ணெனமு னச்சிறுத் திட்டகளி றிலையது துணிந்திங்கு வருவதுமிலைப்,
பணைவந்த கைத்தலத் ததுவந்து மேவினும் பனிமல ரிறைத்தெண்முதலாப் -
      பலவுற்ற சுவையமோ தகமாதி வீசிப் பணிந்துவச மாக்கிவிடுவோ,
மிணைவந்த பொருளென்று நீயுப சரிப்பதொன் றில்லாமல் யாமாதலா -
      லிடையூறு வேறின்று சிறுவீ டியற்றுமத னினமாகு மாதர்விலகத்,
திணைவந்த வளமல்கு சோணாடளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(4)

 வானாடு மேவும் புறத்தொண்டர் சொற்றபடி வையமு நடாத்தினாயிம் -
      மண்ணாடு மேவிய வகத்தொண்ட ரேம்யாம் வகுத்தபடி கேளாமையென்,
கானாடு மதுசொற்ற படிநடத் தோமெனிற் கைகுவித் தெய்திநினது -
      கண்மணியை யனையசுப் பிரமணிய தேவன்முன் கரைவோங் கரைந்தபொழுதே,
பானாடு மனையனின் பால்வந் துரைக்கினெப் படிமறுத் திடுவையனைய -
      பக்கநீ தவிர்தே யிலையாத லால்யாம் பகர்ந்தபடி கேட்டல்வேண்டுந்,
தேனாடு பூம்பொழிற் சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(5)

  முதையாய வெங்கண்மன மாம்புலத் திற்காம முதலாய பெருமரங்கண் -
      முழுதுமற வருளாய தழல்கொளுவி யைந்தென முழங்குமக் கரமனுவெனு,
மதையா யலப்படை யெனக்கொண் டுழச்செயா வன்பெனும் வித்துவித்தி -
      யார்வநீர் பாய்த்தியன் னியசமய மாக்களட ராதுபொறை வேலிகோலிப்,
பதையாத தவமெனும் பைம்பயிர் வளர்ந்துபொய் படாதசிவ போகம்விளையாப் -
      பண்பினுகர் காறும்விட யக்கரவர் கவருதல் படாதுகாத் தருள்சின்மயன்,
சிதையாத வளமல்கு சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(6)

  முந்தைமறை யாகம நவினறணு ணினிக்கியா முந்துபு நடத்தல் செய்யே -
      முந்துபு நடப்பவர் நடந்திடுக விதுகாறு முந்துபு நடத்தாலாலே,
யந்தைபடு பிறவித் துயர்க்கட லழுந்தின மதாஅன்றுபுற முதன்மையேபோ -
      லையவக முதன்மையு நினக்காக நல்குவா னடியே மமைந்துநின்றே,
நிந்தையறு மெங்கள்செய லிற்றாக லாற்பின்பு நேயத் தொடுந்தொடருவே -
      நிறைகருணை பூத்தியா வருமன மகிழ்ச்சியுற நிகழ்காம மாதிதீர்ந்த,
சிந்தைகுடி கொண்டு சுடர் விட்டோங்கு சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(7)

  அணிகொண்ட முன்னா ணடாத்தியது பொன்னிற மமைந்ததிது முழுமையும்பொ -
      னாழிநின் கைகா லடர்ப்புண்ட விதனின்மரு வாழியத் தகையவலவான்,
மணிகொண்ட வச்சுமுறி பட்டதது விதுவன்மை மாறாத தென்றுமத்தேர் -
      வண்மையிற் றாகவு முளஞ்செருக் கிக்கடினம் வாய்ந்தன மெனப்பொலியுமாற்,
பணிகொண்ட வதனுட் செருக்ககலும் வழியெனப் பகருமதன் மார்புகீண்டு -
      படரும்வெளி யாகவிது நோக்கிமகிழ் தருமெங்கள் பாழிமல மாயைகன்மத்,
திணிகொண்ட மும்மதிலு நீறெழச் சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(8)

  ஒருநாம மும்பெறுவ தில்லைநா மென்றுமு னுரைத்தனை யதற்குமாறா -
      வுலவாப் பெருங்கருணை வெள்ளமலை யெறிதலா லுணர்விலெளி யேமுமுய்வான்,
றருநாம நந்தியங் குமரர்சத் தியஞான தரிசனி பரஞ்சோதியார் -
      தழைதருமெய் கண்டவர்ந லருணந்தி மறைஞான சம்பந்தர் கொற்றவனெனும்,
பெருநாம நல்லூ ருமாபதி சிவன்கருணை பெருகரு ணமச்சிவாயர் -
      பிரகாச ரைந்தெழுத் திறைமுனிரு பத்தைந்து பெயர்கொண்ட தன்றியின்னுந்,
திருநாம மெண்ணில புனைந்துவரு சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(9)

 ஆவாழ்க மாமறைக் குலம்வாழ்க நலமாரு மாகமத் திரள்கள்வாழ்க -
      வருண்மல்கு சித்தாந்த சைவநலம் வாழ்கநினை யன்பிற் புகழ்ந்துபாடு,
நாவாழ்க நின்றிரு வடிப்பணி புரிந்திடு நன்மலர்க் கைகள்வாழ்க -
      நண்புற விராப்பக னினைக்குமனம் வாழ்கவிறை நடவுசெங் கோலும்வாழ்க,
மாவாழ்க வெவ்விடனு மேவிமதி தோறுமும் மழைபொழிய மேகம்வாழ்க -
      மன்னுபைங் கூழ்வாழ்க வெவ்வுயிரும் வாழ்கநின் வயங்கூர்தி யாயதருமச்,
சேவாழ்க சைலாதி சந்தானம் வாழ்கநீ சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.(10)

10. சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.

அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.

Related Content