logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்

(மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை)


விநாயகர் வணக்கம்.

 நீர்கொண்ட செஞ்சடைப் பெருமான் வளைக்கவொரு நெடியமால் வரையெடுக்க -
      நிறைசுவைப் பழையமாங் கனிபோல்வ தென்றுள நினைந்தது பறித்துநோக்கிச்,
சீர்கொண்ட வொருபாற் கறுத்துமற் றொருபாற் சிவத்தலான் முற்றும்பழாச் -
      செங்கா யெனப்புறத் தெறியுமொரு குஞ்சரச் செஞ்சரண மஞ்சலிப்பாந்,
தார்கொண்ட விந்திர னுபேந்திர னெனப்புரந் தரன்வளைக் கரன்மரீஇய -
      தன்மைக் கிணங்கமுன் றெய்வயா னைக்குவண் டார்புனைந் திறவுளர்குலத்,
தேர்கொண்ட கோதைக்கொர் கோதைபின் சூட்டியல கின்புற்று மகிழமேவு -
      மிறைநிறை பொழிற்றிரு விடைக்கழிக் குமரேச னின்றமிழ்க்கவி தழையவே.(1)

1. காப்புப்பருவம்.

திருமால்

611    பூமேவு தாமரை முதற்பல விதழ்ச்செழும் போதமரும் வண்டும் வானப் -
      புத்தேளிர் மடமாத ரழகுபொலி திருமுகப் போதமரும் வண்டு மொய்ப்பத்,
தேமேவு நறவக் கடம்பணி தடம்புயச் செம்மலைத் தெம்மலைக்குஞ் -
      செருவிடைக் குழகனரு டிருவிடைக் கழிமருவு சேயைப் பரிந்துகாக்க,
மாமேவு வித்துரும வொண்கொடி யெனக்கமல வண்கொடி நிறுத்தமருவ -
      மற்றுதய விண்மணி யெனக்கவுத் துவநாம வண்மணி கிடந்திமைக்கக்,
காமேவு புன்னையங் காடுசூழ்ந் தென்னக் கருந்துழாய்க் காடுசூழக் -
      கருங்கடற் கிடையிற் பெருங்கடற் படையிற் கலந்தமர் கருங்கொண்டலே.(1)

பாவநாசப் பெருமான்.

612    இளமதிக்குமுது பணிகளுக்குமிக விரிதரக்குடிகொ டானமாகிப்பொலி வேணிக்கருத்தனை -
      யிமயவெற்புதவு மடநடைக்குமரி யினிதிருக்குமொரு பாதிமேனிப்பெரி யானைத்திருத்தனை -
      யிமயவர்க்குமிகு துயர்விளைத்தமதி லினமெரித்தநகை யானைமானைக்கர மேவக்கொளத்தனை -
      யிடியுமுட்கவுல கதிர்தரக்குளிறி யிகல்களிற்றுரிவை மேனியாரப்புனை போர்வைப்பரப்பனை,
வளமைமிக்கவிர ணியசபைக்கணுமை மனமுவப்பவினி தாடுபாதத்தனை வேதச்சிரத்தனை
      வளைகடற்புடவி யொருபதத்தினக மருவைக்குமொரு காளையேறித்திரி வானைச்சமர்த்தனை
      வடவரைச்சிகர மடியுனொற்றமுனம் வளைசெய்வித்தகனை மாயனாடற்கரி யானைத்திரத்தனை
      வழுவில்பத்திமைய ரிருதயத்தளியின் மணிவிளக்கினமர் பாவநாசப்பெரு மானைப்பழிச்சுது,
முளநெகிழ்த்தெமது குடிதழைக்கவரு ளுதவுமற்புதனை வானவாழ்வைச் சதயாகற்களித்தவ
      னுதவுபொற்கொடியை மணமியற்றியுல குவகைமுற்றவஞ ராயதோடப்பொலி தேவைத்தருக்குறு
      முடல்சினச்செறுநர் முடிதுளக்கியுள முலைதரக்குளிறு சீறுகோழிக்கொடி யானைப்புறத்திரு
      ளுலைதரக்கிரியி னுதயமுற்றகதி ருடன்மறைப்பவொளிர் தேசுமேனித்திரு வானைத்தழைத்தெழு,
குளவனைக்கவுரி குமரனைக்கருது குழகனைத்திறல்கொ டேவசேனைக்கொரு கோவைப்புனத்தமர்
      குறவர்பெற்றவொரு மடமயிற்கினிய கொழுநனைப்புலவர் பாடுபாவிற்கினி தாய்மிக்கநட்புறு
      குணவனைச்சுருதி யுணர்வதற்குரிய குரவனைக்கரவி லாரைவாழ்வித்திடு வானைத்தவத்தினர்
      குலவிடைக்கழியின் மகிழ்வனத்திலொரு குரவடிக்கணமர் நீபமாலைப்புய வேளைப்புரக்கவே.    (2)

பராசக்தி.

வேறு.

 முதுபெருங்கருணை மடைதிறந்தனைய முகமலர்ந்தவிழி யம்பலக்கூத்தர்த
      முடிவணங்குதொறு முதிர்பெரும்புலவி முழுதும்விண்டகல வம்புயத் தாட்டுணை
      முறைவணங்குபுனன் மகடிறங்கருதி முகிழமைந்தநகை கொண்டபொற்பாற்பொலி
      முலைசுமந்தொசியு மிடையிளங் கொடியை முனிவர்சிந்தைமலர் தங்கனப்பேட்டினை,
விதுவுறழ்ந்ததிரு முகவனிந்திதைமுன் மிளிர்மடந்தையரொ டுந்திருப்பாற்கடல்
      விலைவரம்பின்மணி யுடனெழுந்ததிரு விளர்நறுங்கமல நங்கையிக்கார்க்கரு
      விரைநறுங்குழலி யருமமர்ந்துபணி விழையநன்றுளமு வந்தகற்பாட்டியை -
      வினைகடிந்தெமையு மடிமைகொண்டுபணி விடைபுரிந்திடெனு மம்பையைப்போற்றுதும்,
பதுமன்வெஞ்சிறையின் முழுகவண்டர்பலர் படுகொடுஞ்சிறை தவிர்ந்தெழப்பார்த்திடு
      பரனையன்புபுரி பவர்பவங்களைசெய் பவன்வணங்கவருண் மைந்தனைச்சூர்ப்பிடி
      பவளம்வென்றவித ழமுதமுண்டுமயல் பரவவெங்குறவர் மங்கைபெட்பாற்புயல்
      பயினகங்குலவு புனமடைந்துபல பலமொழிந்துதிரி பண்பனைப்பூக்கமழ்,
மதுவழிந்திழிய மணமெழுந்துதிரை மலர்கடம்புபுனை நம்பியைச் சீர்ப்பசு
      மயிலிவர்ந்துகட லெழுமிளங்கதிரில் வருநலங்குலவு மும்பனைத்தீத்தொழின்
      மலியவஞ்சநவி லவுணர்தங்கள்குல மடியவென்றியயில் கொண்டகைச்சேப்பனை
      மலர்செறிந்தவொரு குரவுதங்குபெரு மகிழ்வனங்குடிகொள் கந்தனைக்காக்கவே.    (3)

ஐஞ்ஞாற்றுப்பிள்ளையார்.

வேறு..

 எல்லார்க்குமூறு தவிர்த்தினிதாள்விருப் பாற்றிரு
      வில்லார்க்குநேர்கிழி யிற்றிருமேனிபொற் பாக்கொளீஇ
யல்லார்க்குமாறுட லக்கரிசாய்தரத் தீர்த்தொளி
      ரைஞ்ஞூற்றுநாம வருட்களியானையைப் போற்றுது
மொல்லார்க்குமாறு விளைத்திடுவேல்வலக் கூற்றிறை
      யுள்வார்க்குமூற முதச்சுவையாயமெய்ச் சீர்த்தரு
வில்லார்க்குமாட மிசைக்கருமேகநட் பாற்றுயில்
      விண்ணேத்துமேன்மை விடைக்கழிவாழ்வினைக் காக்கவே.    (4)

நான்முகன்.

வேறு.

 நீடுகுண மேன்மைப் பொறைச்சிறப் புற்றென்று நிகழுமொரு மனையாட்டியு
      நிகரறத் தண்ணென்று மெத்தென்று நறுமண நிரம்பொரு படுக்கைவீடு,
நாடுசுவை யார்பதமு நன்னீரும் வேறொன்று நாடாது கொள்ளுமாறு
      நன்குதான் பெறுபாக்கு மும்முகத் தொருவனரு ணான்முகக் கடவுள்காக்க,
வேடுமலி கற்பகத் தருநிழ லிருக்கையு மெழிற்புலோ மசைபோகமு
      மிரவியிற் பொலிமோலி முப்பத்து முக்கோடி யிமையவர் வணங்குவீறு,
மாடுகொடி மேலுருமு தீட்டுமக வானடைய வகிலநிகி லஞ்செழிக்க
      வணிவிடைக் கழியமரு மைம்முகத் தொருவனரு ளறுமுகக்கடவு டனையே.(5)

இந்திரன்.

அங்கையர் தூவிமுப் பத்துமுக் கோடியிமை யார்முக மலர்ந்து நிற்ப
      வழற்கணலர் தூவியறு பத்தாறு கோடிவெவ் வசுரர்முகம் வாடி நிற்பச்,
செங்கையொரு சதகோடி கொண்டுபே ரழகுகொழி திருமுகத் தயிராணிவாய்ச்
      செவ்வாம்பன் மதுவுண்டு வெள்ளாம்பன் மிசையேறு தேவேந்திரன் புரக்க,
கங்கைமக னைக்குகனை வெய்யகட் டகுவர்குல காலனைத் தாலனைத்துங்
      கரையுநா மத்தனைக் கத்தனைச் சுத்தனைக் கற்பனை கடந்துளானை,
மங்கையொரு பங்கருக் காசிரிய னென்பதை வயக்கமற் றவர்பின்மேவ
      மகிழ்வனத் தினிதமரும் வெயிலேறு மணிமோலி மயிலேறு பெருமாளையே.(6)

திருமகள்.

 வரையெறி புரந்தான் முதற்பல்வா னாடருமுண் மகிழமுன மீன்றபொற்றா
      மரையழுக் காறடைய மதியொடும் வரலுணர் மதுக்குமுத முட்களிப்பக்,
கரையெறி தரங்கமலி வெண்ணிறப் பாற்கடற் கட்பிறந் துலகளந்த
      கருநிறத் தொருவனை மணந்துமகிழ் செந்நிறக் கமலைதா ளஞ்சலிப்பாம்,
விரையெறி கருங்குழற் செவ்வாய்க் குறக்கோதை வெண்முறுவல் கொண்டுரைக்கும்
      வெம்மொழிக் கும்புலவர் தம்மொழிக் குங்குழை விருப்பனை யுருப்பனையைநேர்,
தரையெறி புழைக்கைக் களிற்றுமுகன் முற்றகுவர் தானையொடு பொருவிநோதச்
      சமரனைக் குமரனைத் திருவிடைக் கழிமருவு சாமியைக் காக்கவென்றே.    (7)

நாமகள்.

வேறு.

 மின்னும் பளிங்கீர்ந் தெடுத்தென்ன விளக்கஞ் சால்வெண் டிருவுருவும்
      வெள்ளித் தகடுஞ் சமழ்ப்பவிதழ் விரிக்கும் வெண்டா மரைமலரு
மன்னும் படிக வெண்மாலை வடமு முவக்கு மதற்கேற்ப
      மாறா வெள்ளை மதியுடையேம் வாக்கும் புகுந்தாள் பதம்பணிவாந்
துன்னுந் திரைநீர்ப் பெருவாரி சூழ்மண் முழுது முட்கரப்பத்
      துவன்று சிறைசற் றேவிரிக்குந் தோகை மயில்வா கனமேற்கொண்
டுன்னும் பழைய சீரடியா ருளங்கூட் டுண்ண வெதிர்தோன்று
      மும்பர் பெருமான் விடைக்கழிவா ழொருவன் றன்னைக் காக்கவென்றே.(8)

துர்க்கை.

காட்டுங் கனல்கண் பொழிதருவெங் காலன் கடுக வுகைத்துவரு
      கடிய நெடிய கொடியமுரட் கடாவுங்கதறி யோட்டெடுப்ப
வாட்டுந் தகுவர் குலம்புரக்கும் வளைகோட் டெருமைக் கரும்போத்து
      வாய்நாத் தள்ள வதன்றலைமேல் வைத்தூன் றியபொற் பதக்குமரி
யாட்டுஞ் சமய மாறினுக்கு மாதாரங்க ளாறினுக்கு
      மத்துவாவோ ராறினுக்கு மமையுந் தானே முதலென்று
தீட்டும் படியா வருந்தெளியத் தெளித்தாங் காறு முகந்திகழச்
      செல்வ மலியு மிடைக்கழிவாழ் சேயைப் பரிந்து காக்கவே.(9)

சத்தமாதர்.

வேறு.

சிறையோதி மஞ்சே மயூரநா காசனன் சீயமயி ராவதம்பேய்
      திகழநிர லூர்ந்துவே தம்பினா கஞ்சத்தி திகிரியலம் வச்சிரஞ்சூன்
முறையே சுமந்தடியர் துன்பமு மின்பமு முருக்கிப் பெருக்கியருளுறுபன்
      முழுமாத ராயதிற லெழுமாதரும்புடவி முற்றுமெற் றுந்தரங்க
நிறையோர் கருங்கடல் புரண்டுமூ டியதென்ன நெறியென்று குறியொன்
      னெடியவா னவருமா சங்கையுட் கொண்டுழல நீள்சிறைத் துணைவிரித்து
மறையோர் மயூரத் திவர்ந்தடியர் முன்புவரு வள்ளலைக் கள்ளலைக்கு
      மலர்மகிழ் வனத்திலொரு குரவடியினமுர் வள்ளிமண வாளனைக் காக்கவே.(10)

முப்பத்து முக்கோடி தேவர்.

வேறு.

மனநெகிழ் தரக்கர தலத்துணைமுகிழ்த்துயர்த வத்திற்சிறப்பாய யாவரும் போற்றிட
      மயில்வெரிந்மிசைக்கர தலத்தயிலெடுத்துலவு கொற்றப்பு யத்தானை யாரணங்கூக்குர
லினமிடுபுபற்றிய தொடர்ச்சியினடக்கவுமவைக்கப் புறத்தானை மாறடுங்கூற்றனை
      யெழில்கனிதரப்பொலி குறக்கொடி முலைத்துணைதி ளைத்துக்களிப்பானை வாரணந்தீட்டிய
சினமிகுகொடித்தலை வனைப்பனிவரைக்குமரி யற்பிற்றரப்போது சேயைவண்டார்த்தெழு
      செழுநிறை மலர்த்தவி சிருக்கையயனைத்தலைபு டைத்துப்படைத்தானை வானெழுங்காப்பொலி

கனகமதில்சுற்றிய புகழ்த்திருவிடைக்கழிவி ருப்புற்றிருப்பானை நாடொறுந்தோற்றல்செய்
      கதிரவருருத்திரர் மருத்துவர்வசுக்களெனு முப்பத்துமுக்கோடி தேவருங்காக்கவே.(11)

1 - காப்புப்பருவம் முற்றிற்று

2. செங்கீரைப் பருவம்

 விண்கொண்ட கோதண்ட மூதண்ட மதிர்தர விரைந்தொரு மலர்க்கைவாங்கி -
      மேவமற் றொருகையிற் றாரா கணங்களவ் வில்லுண்டை யென்று கொண்டு,
கண்கொண்ட வானவர் கரஞ்சிரம் புயமுதற் கருதிலக் கிற்றெறித் துங் -
      காகோ தரந்திந் கிருப்பொருவ வாங்கியக் கனகவரை சுற்றியீர்த்து,
மென்கொண்ட பாற்கட றயிர்க்கட றயிர்க்கட லிலங்குபாற் கடனறியநீ -
      ரின்கடலுவர்க்கட லுவர்க்கட னனீர்க்கட லெனக்கூற மொண்டுபெய்துங்,
திண்கொண்ட குழனருகு டிருவிடைக் கழிமுருக செங்கீரை யாடியருளே
      செருவிடைக் குழகனரு டிருவிடைக் கழிமுருக செங்கீரை யாடியருளே.(1)

 மருத்தாய் கதிப்பரித் தேரிரவி விரவிமதி மண்டலத் துறவிடுத்து -
      மதியைவ் வாறிரவி மண்டலம் விடுத்து நெடுவானவ ருளம்புகுந்த,
வெருத்தா யெழாதமைய மாதிரங் குடிகொண்ட வேதண்ட மெட்டுமொருமா -
      மேருவுங் கைக்கொண்டு தம்பியர்கள் பந்தாட வேணவா விற்கொடுத்தும்,
பொருத்தாய் திசைக்கரிக் கையொடுகை தெற்றியொரு பூண்விரற் கொடுசுற்றியும் -
      பூமுடி யராவெடுத் தொளிமணிக் கதிரென்று பொன்வரைத் தலையடித்துந்,
திருத்தாய் மகிழ்ச்சியுட் கொள்ளவிளை யாடுசேய் செங்கீரை யாடியருளே -
      செருவிடைக் குழகனரு டிருவிடைக் கழிமுருக செங்கீரை யாடியருளே.(2)

 மறைப்புற வனப்புமலி வடிவொன்று கொண்டுமொளிர் மறைவிடேமென்றுபற்றி -
      வழியோல மிட்டுத் தொடர்ந்திட நடந்துவயன் மருதமுங்கருதுகலுழித்,
துறைப்புற வமுங்கடந் தொள்ளருவி யிழுமெனத் தூங்குவிண்டடவுகுடுமித் -
      தொல்வரைச் சாரற் றினைப்புனஞ் சென்றுநேர் தோன்றுங் குறக்கோதைதன்,
கறைப்புற மறாக்கடிய வொள்வே லனுக்குங்கருங்கணுஞ் செய்யவாயுங் -
      காமர்மற் தவயவமு மாதரங் குடிகொளக் கண்ணுறவிடுத்துணர்ந்தோர்,
சிறைப்புத மொதுங்கியுள நெங்குருகி நின்றவள் செங்கீரை யாடியருளே -
      செருவிடைக் குழகனரு டிருவிடைக் கழிமுருக செங்கீரை யாடியருளே.(3)

  மீனாறு பேரகழி யேழுமோ ரகழியென மேவநெய்த் தோர்விராவ -
      வேதாள பூதங்க ளாடமண் ணகமுழுது மேதினிப் பெயர்விளங்கக்.
கானாறு கற்பகக் காவும் யாவுங்கவர் கருந்தயித் தியர்குழாம்வெங் -
      களத்தெதிர்ந் தவிதரப் பொருதுமுன் றீராத கண்டூதி சிற்தொழிப்பா,
னூனாறு வெள்வேலு மொள்வாளும் வென்றுமிக் கொளிர்கருங் கட்செய்யவா -
      யொருதெய்வயானை யிருவெம்முலைக்கோடு கொண்டுழுது துழக்குந் தொருந் -
தேனாறு வட்டெழு கடம்பணி தடம்புயன் செங்கீரை யாடியருளே -
      செருவிடைக் குழகனரு டிருவிடைக் கழிமுருக செங்கீரை யாடியருளே.    (4)

நாவலங் கொடுசினந் தெதிர்பகை சவட்டுமொரு நான்முகக் கடவுளின்றோ -
      நமக்கிறுதி நாளென் றயிர்த்துள நடுங்கவொரு நாரணனு மனையனாகப்,
பாவலம் படுசிறை முளைத்தென வரைக்குலம் பார்முழுவ தும்பறக்கப் -
     பரவையேழும் பரந்தெழுந் தார்த்தொன்று பட்டலை யெறிந்துசிதறந்,
கோவலம் படுமுடுக் கணமெலாம் பொறியிற் கொறித்துத் தெறித்தெழுந்து -
      குலவுநீ யாயகதிர் தோன்றுதல் வெளிப்படக் கூவியிரு சிறையடிக்குஞ்,
சேவலங் கொடியுடைக் காவலன் பாவலன் செங்கீரை யாடியருளே -
      செருவிடைக் குழகனரு டிருவிடைக் கழிமுருக செங்கீரை யாடியருளே.(5)

வேறு.

 ஊறு மணத்தநெய் பூசிய முச்சிய துச்சி யமைந்தாட
      வொட்டிய திற்றனி கட்டிய சுட்டிய மொண்ணுதல் வெண்ணீறும்
வீறு நலத்தெழில் சொட்டும் பொட்டும் விளக்க மிகுந்தாட
      விண்ணக மண்ணகம் விற்கவு மமையா வில்லிடு குழையாட
மாறு தவிர்த்தொளி ரைம்படை யுஞ்சுடர் வாய்ந்தவி ரரைஞாணு
      மற்றுடை மணியுஞ் சிறுகிண் கிணியும் வயங்கி யொலித்தாட
வாறு முகத்தொடு பொலியுங் குருபர னாடுக செங்கீரை
      யாய விடைக்கழி நேய முடைக்குக னாடுக செங்கீரை.(6)

 மூரன் முகத்தெழு வேர்வு மணிச்சிறு முத்தி னிசைந்தாட
      முச்சியின் முச்சியி னச்சிய பச்சை முழுப்பணி யும்மாடா
சூர னெருக்கமை கானென முற்றிச் சுற்றிய படையொடுசூர்
      தொலைதர மலைதரு நிலைதரு பன்னிரு தோளு மசைந்தாடச்
சாரல் வரைக்குல மீர னடுக்கத் தகுவலி மார்புடனே
      சந்த மிருந்தவி ருந்தித் தொந்தி சரிந்து சரிந்தாட
வார லருத்திய பாலமு துண்டவ னாடுக செங்கீரை
      யாய விடைக்கழி நேய முடைக்குக னாடுக செங்கீரை.(7)

 உள்ளுந ருககுவ கைக்கடல் விம்ம வுதிக்கு முவாமதியே
      யுழுவற் பேரன் புடையரு ளிருளற வுதய மெழுங்கதிரே
துள்ளு தயித்திய ராய கடற்கொரு சுடுவட கைக்கனலே
      தொழுதகை வானோ ராய பயிர்க்கரு டோன்ற வெழும்புயலே
புள்ளு மலர்ப்பொழி லிமயப் பிடிதரு பொருவரு மழகளிதே
      புண்ணிய நண்ணிய தண்ணிய ரண்ணிய பொங்கமு தச்சுவையே
யள்ளு முகத்த வயிற்கர வாண்டகை யாடுக செங்கீரை
      யாய விடைக்கழி நேய முடைக்குக னாடுக செங்கீரை.(8)

வேறு.

 சந்துவி ராய தனக்குற மாமயில் பங்கா மங்காத
      தம்பியர் சூழ நடுப்பொலி நாயக கந்தா நந்தாது
கொந்துகு லாவு மலர்த்தரு வானவ ரெந்தாய் வந்தாள்வாய்
      கும்பியின் மேவு சிறைக்கள மோவவெ னும்போ தம்போது
வந்துற வாமடி பற்றுமுன் யாவரு மஞ்சீர் வெஞ்சூரன்
      வன்படை யோடு பற்றுமுன் மடித்திடு வாமென விண்டாய் வண்டார்கட்
செந்துவர் வாயுமை பெற்றரு யேவ செங்கோ செங்கீரை
      தெண்டிரை சூழும் விடைக்கழி மேயவ செங்கோ செங்கீரை.(9)

 நாமலர் பாமொழி தூமொழி யாரிடை நண்பா பண்பாளா
      நான்மறை வேள்வியி னூடெழு மேடமு வந்தே றுந்தேவே
காமலர் தூவிய வாவிவி ராவிய டைந்தார் தந்தாயே
      காமரு கானவர் மாமயி றோள்புணர் கந்தா நந்தாதே
கோமலர் வானவ ரானவர் வாழநி னைந்தாய் மைந்தாயே
      கோமள மேவுமி ராறுபு யாசல துங்கா மங்காதே
தேமலர் மேயகு ராநிழல் வாழ்பவ செங்கோ செங்கீரை
      சேவல்கு லாவுப தாகைம னோகர செங்கோ செங்கீரை.(10)

2. செங்கீரைப்பருவம் முற்றிற்று.

3. தாலப்பருவம்.

காரைத் தடையு மாளிகைமேற் காதன் மடவார் கணவரொடுங்
      கலவார் புலந்து பறித்தெறியுங் கமல ராக மாலையுடுச்
சீரைத் தடையு மணிமாலை செறிந்து கதிரோ னுருட்டுபெருந்
      தேரைத் தடைய வடைய வும்பொன் செய்த வம்மா ளிகைக்கீழ்வாட்
கூரைத் தடையுங் கருங்கணவர் குளிர்வீ தியினெற் கொறிக்கவருங்
      கோழி யெறியுங் குழைசெறிந்து குமரர் களிப்பி னுருட்டுசிறு
தேரைத் தடையும் விடைக்கழிவாழ் செல்வா தாலோ தாலேலோ
      செழுநான் மறையோ லிடுங்கருணைத் தேவா தாலோ தாலேலோ.    (1)

கால்பாய் தடத்தி னகம்படிந்த கயவாய்ச் செங்கட் கருமேதி
      கறித்துப் பலபூக் குதட்டியிளங் கன்றை நினைந்து பொழிதருதீம்
பால்பாய் கழனிப் பரப்பெங்கும் பாட்டுச் சுரும்பு விரும்புநெடும்
      பைந்தாட் செந்தா மரையாதிப் பன்மா மலரும் படுசுவைச்சா
றோல்பாய் கரும்பு மரும்புசெறி யொண்பூங் கொடியு மாங்குயிலு
      மோங்கு மருதப் பூங்கிளியு முறுதற் காற்ப வெழுந்துபல
சேல்பாய் வளமை விடைக்கழிவாழ் செல்வா தாலோ தாலேலோ
      செழுநான் மறையோ லிடுங்கருணைத் தேவா தாலோ தாலேலோ.(2)

 உரைசெ யுருவ முத்தரும்பி யொருங்கு நெருங்கு மரகதங்காய்த்
      தொளிசெய் பவளம் பழுத்துநெடி தோங்குங் கமுகும் வீங்குநறும்
விரைசெய் சுவைமாங் கனிக்குலையும் வெய்ய புலிக்கால் விரற்பைங்காய்
      மிகுகூன் குலைப்பைங் கதலிகளும் விழையுந் தழையுங் கழையுமலி
கரைசெ யொருமுப் புடைப்புடைய காய்த்தெங் குகளு மிந்திரன்செங்
      கனக மணிமண் டபத்தமைபொற் கால்க டொறுஞ்சார்ந் தழகுசெயுந்
திரைசெய் பணைசூ ழிடைக்கழிவாழ் செல்வா தாலோ தாலேலோ
      செழுநான் மறையோ லிடுங்கருணைத் தேவா தாலோ தாலேலோ.    (3)

பொருந்து கடவுண் மறைமுழங்கப் பொல்லா விருள்கெட் டுடைந்தோடப்
      புண்ட ரீக முறுக்குடையப் புட்கள் சிலம்ப வுதயவரை
யிருந்து வெளிக்கொ ளெழுபரித்தே ரென்றூழ் கதிரோ னெனுமொருபே
      ரேற்பக் களம ருழுதுசெதும் பியற்றி நறுநென் முளைவித்தி
மருந்து நிகரின் புனல்பாய்ச்ச வளர்ந்து கிளர்ந்து கான்றகதிர்
      வளைந்து விளைந்து முதிர்ந்துரைத்த மார்த்தாண் டனைமூ டிடுவளமே
திருந்து கழனி விடைக்கழிவாழ் செல்வா தாலோ தாலேலோ
      செழுநான் மறையோ லிடுங்கருணைத் தேவா தாலோ தாலேலோ.    (4)

மாறு கடியும் வெள்ளிலைவேன் மாய்த்துக் கொடுங்கூற் றொடும்பொரவே
      மடங்க லின்றி முடங்கல்விடு மைதோய் கருங்கட் செங்கனிவா
யேறு வளைமிக் கொலிமலர்க்கை யேழை மடவார் கூழைமுத
      லினிய விரையுந் துவருமளா யியையக் குளித்த நறும்பனிநீ
ரூறு நறவ முவட்டெடுக்கு மொண்மா லிகைத்தோட் காளையர்க
      ளொருங்கு நெருங்கிப் பூசிடவாங் கொழிந்து கழிந்த சந்தனச்செஞ்
சேறு கழுவும் விடைக்கழிவாழ் செல்வா தாலோ தாலேலோ
      செழுநான் மறையோ லிடுகருணைத் தேவா தாலோ தாலேலோ.    (5)

வேறு.

 எண்ணிய சத்தி பதிந்தவர் மும்மல விருளற வெழுகதிரே
      யெங்குந் தங்கும் பொங்குஞ் சுடர்விட் டெழுமுழு வோங்கொளியே
கண்ணிய விமையத் தமையும் பெண்மணி காதற் கண்மணியே
      கட்டுக் கெட்டுப் பெட்டமை வாருட் கனியமு தச்சுவையே
மண்ணிய மணியிற் பொலியுங் குறவர் மடப்பிடி புணைகளிறே
      வானவர் கோமக ளாய சகோரம வாவு முவாமதியே
தண்ணிய குரவமர் புண்ணிய குரவா தாலோ தாலேலோ
      தமிழ்தெரி சங்கத் தலைமைப் புலவா தாலோ தாலேலோ.    (6)

  உழையும் பிறகிடு கண்ணும் பண்ணு முவக்குஞ் சுமைமொழியு
      முடையாண் மடவன நடையாள் குறவர்க் கொருமக ளாகியதாய்
குழையுந் தளிர்புரை செங்கையு மிணைதடி கொங்கையு மென்பதமும்
      குளிர்மதி வெளிறுற வொளிர்திரு முகமுங் குலவத் தோய்ந்திடுவான்
மழையுங் கழையும் பொலிதரு மால்வரை மன்னுஞ் சாரலின்வாய்
      வண்டு படாமலர் சாகை தொறுங்கொடு மருவிய வொருதருவே
தழையுங் குரவடி விழையுங் குரவா தாலோ தாலேலோ
      தமிழ்தெரி சங்கத் தலைமைப் புலவா தாலோ தாலேலோ.    (7)

 வீங்குஞ் சுவைபடு மூளை யருந்தி விராவுந் தடியீருண்
      மென்று விழுங்குபு மண்டையின் மொண்டு மிகுஞ்சுடு வல்குடியா
வோங்கும் பசியெழ வாங்கு துணங்கையொ டுந்தி யெழும்பேயோ
      டொண்டலை விண்டு நிவந்த கவந்தமு மொக்க வெழுந்தாடத்
தேங்குந் தகுவர் கருந்தலை மோதுஞ் செங்கள நடுவடுமோர்
      சிங்கக் குருளை யெனப்பொலி வீரச் செல்வ செழும்பாவை
தாங்குங் குரவடி யோங்குங் குரவா தாலோ தாலேலோ
      தமிழ்தெரி சங்கத் தலைமைப் புலவா தாலோ தாலேலோ.(8)

வேறு.

நாத மகத்துவ வாயர தூயா மாயாவா
      னாடர் முடிக்கணி பாதா போதா நீதாவோர்
சூத மடித்தெழு மாலா வேலா சீலாநீ
      டோகை மயிற்பரி மோகா யோகா வேகாமா
மோத வமர்த்தெழு தாரா சோரா லீராதா
      மோதரன் முற்பல ரேறே பேறே வீறேசேர்
மாதவ ருட்பொலி தேவே தாலோ தாலேலோ
      வாவி விடைக்கழி வாழ்வே தாலோ தாலேலோ.    (9)

மந்திர மாயசொ ரூபா தீபா நீபாகா
      மந்தவிர் வார்பவ நாசா வேசா வீசாபோ
தந்திர மேவிய போகா வாகா வாகாவா
      சந்திகழ் தேமலி தாமா வோமா நாமாவா
னிந்திர னாதியர் தேவே காவே பாவேபா
      டென்றெனை யாள்குரு நாதா பூதா வேதாதாழ்
சந்திர சேகரர் பாலா தாலோ தாலேலோ
      தண்குர வார்நிழல் வேலா தாலோ தாலேலோ.    (10)

3- தாலப்பருவம் முற்றிற்று.

4 - சப்பாணிப்பருவம்

 மழைகொண்ட சிகரநெடு நேமிவா ளத்தினொடு வாரிதிக ளேழுடுத்த -
      மண்ணகத் தமர்பலரும் விண்ணகத் தமர்பலரு மாறாப் பவந்தொலைப்பான்,
குழைகொண்ட சுவைநறாப் பொழிமலர் துவன்றுபைங் குரவடி யமர்ந்துகருணை -
      கூர்ந்தருள் புரிந்துவே தாகம புராணமுற் கோதில்பற் பலகலைகளும்,
பிழைகொண்ட வில்லென வுணர்ந்தவொரு நால்வரே பிறவிதீர் வான்றழைந்து -
      பிறங்குகல் லாலடி யமர்ந்தருள் புரிந்தவெண் பிறைமுடிப் பெருமானினுந்,
தழைகொண்ட புகழ்நனி படைத்துமகிழ் குருபரன் சப்பாணி கொட்டியருளே -
      தன்னிகர் விடைக்கழிப் பன்னிரு புயாசலன் சப்பாணி கொட்டியருளே.(1)

 பந்தமிகு தெய்வப் பெருந்திரு மறைச்சிரம் பாடியாடித் தொடரநீள் -
      பங்கய மலர்ப்பதம் பார்மக டிளைக்கப் பரிந்துவழி கொடுநடந்து,
கந்தமிகு தாமரைக் கழனியுந் துழனிக் கருங்கான முங்கடந்து -
      கார்வரைச் சாரற் றினைப்புனம் புக்கெழில் கனிந்தகுற மங்கையாணி,
வந்தமிகு பேரழகு நோக்கிமகிழ் தேக்கிநெடு மாதேவ னஞ்சலித்து -
      வந்திக் கவுந்குவி தராததம் பெருமையை மறந்துவிரை விற்குவிதருஞ்,
சந்தமிகு கைத்தல மலர்த்துணை முகிழ்த்தைய சப்பாணி கொட்டியருளே -
      தன்னிகர் விடைக்கழிப் பன்னிரு புயாசலன் சப்பாணி கொட்டியருளே.(2)

 தீதுபதி யாதகை லாயத் தளிக்குமுற் றிகழ்மணிக் கோபுரத்துட் -
      டிருவாய்தல் வைகியவ் வழியரற் றொழாதேகு திசைமுகனை யருகழைத்தங்,
கேதுபுரி வாயென வினாவப் படைப்பே னியானென்ன மறைவருங்கொ -
      லென்னவரு மெனவிருக் கோதுகென வோதுவா னியையமுற் குடிலையோத,
வோதுகுடிலைப்பொரு ளூரைத்துப்பி னுரையென வொருங்கவன் மயங்கநோக்கி -
      யெ?ள்ளித ழதுக்குபு நடுத்தலை புடைப்பமிக் கூறிப் புறஞ்சிவந்த,
தாதுமலி கைத்தளி ரகத்துஞ் சிவப்பவொரு சப்பாணி கொட்டியருளே -
      தன்னிகர் விடைக்கழிப் பன்னிரு புயாசலன் சப்பாணி கொட்டியருளே.(3)

  மால்வரை மறைக்கும்வெங் கேடகப் பரிகல மறித்துத் திருத்திவிண்ட -
      மண்டைமூ ழையின்மொண்டு மூளைப் பெருஞ்சோறு வாரிப் படைத்துமீது,
பால்படு நிணப்பருப் பிட்டிழுது சொட்டும் பசுந்தடிக் கறிபடைத்துப் -
      பாவுநெய்த் தோர்நெய்யும் வாக்கிப்பல் பெண்பேய் பரிந்துப சரிப்பவாண்பே,
யேல்வகை யருந்தியுடன் முற்றுவயி றாகமு னியற்றில னியற்றினானென் -
      றெள்ளிவை யக்கருந் தகுவர்செறி போர்க்களத் திளவே றெனப்பொலிந்து,
சால்புடைய வெஞ்சிலை வளைத்தகை முகிழ்த்தைய சப்பாணி கொட்டியருளே -
      தன்னிகர் விடைக்கழிப் பன்னிரு புயாசலன் சப்பாணி கொட்டியருளே.(4)

 கோலக் கருங்குழற் செவ்வா யுமாதேவி குளிர்மென் கவானிருந்து -
      கொங்கைக் குடங்கொட்டு பாலுணும் போழ்தினக் கொங்கைத் தடத்தினொளியே,
காலச் சமைந்தசெழு முத்தவட முஞ்சுடர்க் கமலரா கத்தொடையுமொண் -
      கதிர்ப்பவள மாலையு மொன்றொடொன் றளவிக் கலந்திடச் சிக்காற்றியு,
நீலச் செவிக்குழைப் பூட்டுக் கழற்றியு நெற்றியிற் பொட்டழித்து -
      நேயமிகு மலர்மாத ரிருவர்க்கு மொழியா நெடும்பணி திருத்துபணியே,
சாலப் புரிந்திடு தளிர்க்கர தலங்கொண்டார் சப்பாணி கொட்டியருளே -
      தன்னிகர் விடைக்கழிப் பன்னிரு புயாசலன் சப்பாணி கொட்டியருளே.(5)

வேறு.

 தாரமை கொற்ற முடித்தலை வீரர் தடாவலி யிற்சூழத்
      தானையெ? டாகவ பூமியின் மேவிய தாரக னுடல்போழ்ந்தாங்
காரமை சேறு படாவகை நெய்த்தோ ரத்தனை யும்பருகி
      யள்ளூபு மூளை யடங்கலும் வாய்ப்பெய் தலரீ ருளுமென்று
நாரமை புரணி குதட்டி விழுங்கியு நலிபசி தீராமே
      நாற்றிசை நோக்கி யினிச்செயல் யாதென நகுகடை வாய்நக்குங்
கூரமை வெள்வேற் செங்கை முகிழ்த்துக் கொட்டுக சப்பாணி
      கோல விடைக்கழி நீல மயிற்குக கொட்டுக சப்பாணி.(6)

 பிழையற் றவருட் கருளற நின்று பிறங்கும் பேரொளியே
      பேச நினைக்கக் காண வினித்துப் பெருகுஞ் சுவையமுதே
விழையப் படுகவி புனைவா ரெய்ப்பு விடப்பொலி திரவியமே
      வெள்ளி வரைச்சிந் தாமணி யணிமுடி மேற்கொளு முழுமணியே
கழையிற் சுவைபடு தெய்வப் பிடிதன் கலவைச் சாந்தும்விரை
      கமழும் புழுகு மளைந்து மதர்த்தெழு காமரு கொங்கைமனங்
குழையத் தழையத் தழுவுங் கைகொடு கொட்டுக சப்பாணி
      கோல விடைக்கழி நீல மயிற்குக கொட்டுக சப்பாணி.(7)

வேறு.

   வழிவழி யடிமை யெனக்கொள் விருப்ப மனத்து வளர்ப்போயே
      வழுவினு மொழிவற வொட்டி யிழுத்து மயக்க மறுப்போயே
மொழிமுத லியவொரு மித்த தவர்க்கருண் முத்தி கொடுப்போயே
      முகிழ்நகை யிருவர் புணர்ச்சி மகிழ்ச்சியை முற்று முவப்போயே
பொழிசுவை நற்வமு வட்டெழ விட்டொளிர் பொற்ற கடப்போயே
      புனமயி லகவி மயத்து மடப்பிடி பொற்ப வளர்ப்போயே
கொழிதமி ழுணரு முதற்புல மைக்குக கொட்டுக சப்பாணி
      குரவடி யமரும் விடைக்கழி யற்புத கொட்டுக சப்பாணி.(8)

வேறு.

பரவப் படுமெய்த் தவருட் பொலிவாய் சத்திதரித்தோய்நீ
      பவளத் தொடையற் புயவெற் பிறைவா முத்திமுதற்றேவே
யரவத் தணையிற் றுயிலச் சுதனோ துற்றமறைப்பால
      னடியைத் தலையைத் தெரிதற் சரியார் பெற்றவருட்சேயே
கரவத் தகுவக் கலரைத் தடிவாய் வெற்புவிருப்பாளா
      கடவித் தகரைத் திசையிற் றிரிலீ ரத்திறன்மிக்கோயே
குரவத் தடியிற் குலவற் புதவேள் கொட்டுக சப்பாணி
      குருதிக் குடுமிப் பறவைக் கொடியாய் கொட்டுக சப்பாணி.(9)

வேறு.

 மணமலிநீபா வளர்பிரதாபா வித்தகநற்றேவே
      வயமிகுவீரா வடிவகுமாரா பத்பபதக்கோவே
யணவுகர்நேயா வமரர்சகாயா பச்சைமயிற்பாகா
      வழகியருபா வசுரர்கள்கோபா செச்சைநிறத்தேகா
பணவரவாளா பரணவைதோளா முத்தெனவுற்றோயே
      பரிபவமாயா விரிதரவாயா வெற்கருள்சொற்கோவே
குணபரிபாலா குலவனுகூலா கொட்டுக சப்பாணி
      குரவடியோமா தரமுறுநாமா கொட்டுக சப்பாணி.(10)

4 - சப்பாணிப்பருவம் முற்றிற்று

5  முத்தப்பருவம்

சூரன் முளைத்த கான்யாற்றுத் துறையும் பிறையு மிரிமருப்புத்
      தும்பி யுணவு நம்பியழல் சுழல்கண் மடங்க லுழலிடமும்
வேரன் முளைத்த வெண்முத்து மிளிர்செம் மணியும் பதத்துறுத்த
      விரைந்து நடந்து கடந்துநெடு விண்ணந் தடவு குடுமிவரைச்
சாரன் முளைத்த புனம்புகுந்து தையற் குறக்கோ மளக்கோதை
      சமயந் தெரிந்து நேர்சென்று சலாஞ்செய் பொழுது முகங்கொடுக்க
மூரன் முளைத்த செந்துவர்வாய் முத்தந் தருக முத்தமே
      முகைக்குங் குரவு விரவுதிரு முருகா தருக முத்தமே.(1)

வழிந்து கருணை யுவட்டெடுத்து மாநீ ருலகெங் கணும்பரவ
      வடவா னிழற்றென் பான்முகமாய் மருவி யமர்ந்து வெருவிமல
மழிந்து வெரிநிட் டிடைந்துடைந்தோ ரைந்து மகல வொருநால்வர்க்
      கறிவித் தொருமூன் றிரண்டறுமொன் ற்றையா தறைந்த மாதேவ
னிழிந்து வணங்கு முறைவணங்கி யிணங்கி யருள வேண்டுமேன
      விரப்பப் பரப்பு கருணைசுரந் தெல்லா முணரும் படியொருசொன்
மொழிந்து திகழுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
      முகைக்குங் குரவு விரவுதிரு முருகா தருக முத்தமே.(2)

  நிலைப்பா லினியின் றெனத்தகுவர் நிறைபே ரவையி லிருந்தொருசூர்
      நெடுமூச் செறியிந் தொறுமவன்றோ ணிலவு நறுந்தார் புலால்கமழ
வலைப்பான் மடமா னனையவிழி வான நாட்டு மடமாதர்
      வண்ணக் கிண்ண மாமுலையு மலர்க்கூந் தலுநல் லிரைகமழ
விலைப்பான் மலர்ப்பா லொடுவேர்ப்பா லெல்லாங் கமழு நறுங்கூந்த
      லிமய முதவெம் பெருமாட்டி யீர்ஞ்சாந் தொடுமென் புழுகுகமழ்
முலைப்பால் கமழுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
      முகைக்குங் குரவு விரவுதிரு முருகா தருக முத்தமே.(3)

வித்த முவந்த பெயர்த்தகுவ வெய்யோ னுரங்கீண் டெழுமடங்கல்
      வெறிகீண் டெழுந்த முழுமடங்கல் விரும்பி யுயிர்த்த பெரும்பறழே
சுத்த முவந்த பேரவத்தைத் தோலா மேலா மாதவத்தர்
      தூய யோக ராயர்சுகச் சுவையுண் முழுக நவையிலவர்
சித்த முவந்த பேரொளியே தேவர் பெருமா னினிதீன்ற
      சிறிய மருங்குற் பெரியமுலைத் தெய்வ யானை செம்பவள
முத்த முவந்த செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
      முகைக்குங் குரவு விரவுதிரு முருகா தருக முத்தமே.(4)

எழுது புகழ்சால் பெரும்புலவ ரென்பார் பலரும் பின்பாக
      விருந்து பொருந்து கரங்கள்விரித் தென்று வருமென் றேமாறத்
தொழுது வணங்கி முன்பிருத்தித் துதித்துப் பூசித் துறுமுகமன்
      சொற்று முனிவ ரருத்துமவிச் சுவையா ரமுதும் விரும்பாது
கொழுது வரிவண் டுழக்குகுழற் குறப்பெண் பாற்போய்ப் பசிவருத்தங்
      கொடிதென் றோதி யிரந்தவள்கை கொடுக்குந் தேன்கூட் டியதினைமா
முழுது முவந்த செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
      முகைக்குங் குரவு விரவுதிரு முருகா தருக முத்தமே.(5)

வேறு.
 வெண்ணீ ரலைத்திருப் பாற்கடற் கண்டுயில் விறற்சக் கரப்படையினான்
      வியன்மார்பி லணியக் கவுத்துவப் பெயர்மணி விருப்பிற் கொடுத்துளாய்மற்,
றுண்ணீர்மை மிக்கசிந் தாமணியை யிந்திரற் குதவினாய் சூர்தடிந்தன்
      பூற்றெழ வழுத்துநர்க் கின்பவள முழுதுதவு மொப்பிலா னீயல்லையோ,
பண்ணீர் மொழிக்கடைச் சியர்களை களைந்திடப் பண்ணைக் குலைக்கணுலவிப்
      பார்த்துவரு தொழுவரிக் குதவுசா றடுகட்டி பற்பல வெடுத்துடைந்த,

தெண்ணீர் மடைக்கிடும் விடைக்கழி புரப்பவன் செம்பவள முத்தமருளே
      தேவர்க்கு மூவர்க்கும் யாவர்க்கு நாயகன் செம்பவள முத்தமருளே.(6)

 வெங்கட் கடுங்கொலைத் தகுவரொடு பொருதநாள் வெற்றிவேல் புக்குழக்க -
      வீறழிந் ததுவேலை மற்றத னொடும்புணர்வன் மீனமீ னிப்பிவளைகார்,
திங்கட் செழுங்கலையு மன்னவொண் கன்னலுஞ் செந்நெலுஞ் செழுவாழையுஞ் -
      செந்தா மரைக்குலமு மற்றுமப் பரவைநீர் தேக்கியுயிர் வாழுமைய,
வங்கட் புவிக்கணிவை யீனுமுத் தங்கொளே மாயிர முகக்கங்கைசா -
      லவிமுத்த முங்கொளேங் குவிமுத்த மாமுலைய ராடுநீர் பாயவிண்மேற்,
செங்கட்க ரும்பெழும் விடைக்கழி புரப்பவன் செம்பவள முத்தமருளே -
      தேவர்க்கு மூவர்க்கும் யாவர்க்கு நாயகன் செம்பவள முத்தமருளே.(7)

தோணாறு தொங்கற் பெருந்தேவர் மோலித் தொகைக்குமேற் பட்டொளிவிடுந் -
      தூயவேய் முத்தமு மவாவியது முன்னமுன் றொண்டைவாய் முத்தமொன்றே,
வாணாறு கண்ணியர் மணிக்குழை யசைந்தாட மாமுலை யணிந்த முத்த -
      வடமாட நுண்ணிடை தளாடவிள மைந்தர்த மனத்தோடு மூசலாடுங்,
கோணாறு பொங்கரிற் பாணாறு காலுழக் குலமல ருகுத்ததாது -
      குரைகடற் சேதுவிற் பொங்கியிரு கரைமேற் குதித்துநீ ரோடநாப்பட்,
சேணா றடைத்திடும் விடைக்கழி புரப்பவன் செம்பவள முத்தமருளே -
      தேவர்க்கு மூவர்க்கும் யாவர்க்கு நாயகன் செம்பவள முத்தமருளே.(8)

வேறு.
எழுதரும் வடிவழ குடையவ விடையவ னிச்சைசெய் புத்திரனே
      யிமையவர் மடவியர் விழியளி குடையுமி ணர்த்தக டப்பணிவோய்
பழுதக னெறிபுகு மவருள நிறுவிய பற்பப தத்திறைவா
      பலதலை யரவுயி ருலைதர வுலவுப சுத்தமயிற்பரியா
யெழுகொளி மரகத முழுமணி வடிவவு மைக்கொளிர் கட்டுணையூ
      டொளிர்மணி யெனவழி படுமடி யவருளு வக்கு முயிர்த்துணையே
முழுதுல கமுநவில் சரவண பவகுக முத்த மளித்தருளே
      முனிவரர் தொழுகுர வடியமர் குருபர முத்த மளித்தருளே.(9)

வேறு.

 மதியு நதியு மணியு மொருவர் மகிழ நிகழு மத்தனே
      வலிய குறவர் பொலிய வுதவு வடிவ மகள்வ சத்தனே
நிதிய மெனவு ணினையு மடியர் நிறைய வருளு மத்தனே
      நிமலை யிருகண் மணியெ? டுலவி நிலவு மறுமு கத்தனே
கதிய மயிலொண் முதுகி லுதய கதிரி னமர்ச மத்தனே
      கமழு நறிய புழுகி னளறு கலவி யெ?ளிர்பு யத்தனே
முதிய கருணை பொதிய வளரு முதல்வ தருக முத்தமே
      முகைய தகைய குரவு விரவு முருக தருக முத்தமே.(10)

5. முத்தப்பருவம் முற்றிற்று.

6  வாராவனப்பருவம்.

ஏர்கொண்ட நெற்றியிற் சுட்டியும் பட்டமு மெழில்சொட்டவிட்ட பொட்டு -
      மெட்டுத் திசைக்குமொளி விட்டுப் பரப்பும்விலை யில்லா மணிக்குழைகளுந்,
தார்கொண்ட வைம்படையு மொய்ம்படையும் வலயமுஞ் சாற்றுமுன் கைக்கடகமுந் -
      தாவாம தாணியு மிளங்கதிர் விளங்கவொளி தழைமூர னிலவெறிப்பப்,
பார்கொண்ட சிற்றடி புலம்புஞ் சிலம்பும் பரூஉமணிப் பொற்றண்டையும் -
      பரவுஞ் சதங்கையுங் கிண்கிணியு மண்குளிர் படைப்பக் கலின்கலினெனச்,
சீர்கொண்ட மறைமுழுமை யுந்தொடர்ந் தோலிடச் சிவபிரான்மகன் வருகவே -
      செந்தமிழ் மணந்தழை நடைக்கழி விடைக்கழித் தெய்வநா யகன்வருகவே.(1)

 நாவடி மறைக்குமுத லோதியத னுட்பொரு ணயந்துணர் வுறாதபிழையா -
      னான்முகன் முடித்தலை நடுங்கப் புடைத்துக்கை நகுகாய்ப் படைந்ததன்றிப்,
பூவடி யருந்திவண் டடைகிடக் குங்குழற் பூரண விமாதேவியார்,
      பொலிதரு மடித்தல மிருந்திளங் கொங்கையிற் பொங்குபா லுண்டிடும்போ -
தூவடி முனைச்சூல பாணியார் திருமார்பி லுற்றமுன் சொற்றபிரம -
      னொண்டலைப் பெருமாலை சிக்குண்டு புரளா வுருண்டிட வுதைந்துதைந்து,
சேவடி யினுங்காய்ப் புறக்கொண்ட திண்டிறற் செல்வப் பிரான்வருகவே -
      செந்தமிழ் மணந்தழை நடைக்கழி விடைக்கழித் தெய்வநா யகன்வருகவே.(2)

ஆராத காதலி னணைக்குமொரு தம்பிரா னங்கைத் தழற்கொழுந்தி -
      னவிர்சடை மதிப்பிறைக் கோணலை நிமிர்த்திடற் காய்ந்துட னெடுத்துவாட்டச்,
சோராத மற்றதுமெய் சோர்ந்தமுத முற்றவுஞ் சொட்டவிட வதுபடிந்த -
      தூவரை யுடைப்புலித் தோலுயி ரடைந்தெழீஇத் தோகைகொடு மண்புடைக்க,
வேராத மெய்நடு நடுங்கிக்கை நின்றுகீழ் வீழ்ந்தெழுந் தோடுமானை -
      மேவிப் பிடித்தொருகை யேந்திவர லோர்ந்துநீ மேவுநா னேயென்றவன்,
றீராத பேருவகை தேக்கச்செய் மழவிளஞ் சிறுகுறும் பன்வருகவே -
      செந்தமிழ் மணந்தழை நடைக்கழி விடைக்கழித் தெய்வநா யகன்வருகவே.(3)

 கந்தையடு கரடக் களிற்றுரிவை போர்த்தமுக் கட்பெரும் பரமனாரங் -
      கைத்தலத் தமர்மா துளங்கனி பறித்துளங் கனியக் கழுத்துநீட்டுந்,
தந்தையுறழ் சிற்றிடைத் தாயார் திருக்கைத் தனிக்கிளி தனக்குதவியுந் -
      தாயார் திருக்கைத் தடஞ்சிலையின் மேற்பொலி தழைத்தோகை கொய்தெடுத்து,
முந்தைமறை நாடரியா தந்தையார் கைக்கணமர் முதுமா னுணக்கொடுத்து -
      முறையினித் தகையபல செய்தெய்து தற்கரிய முதுகுரவ ரிருவருக்குஞ்,
சிந்தைமகிழ் பூப்பவெதிர் நின்றுவிளை யாடுமொரு செல்வப் பிரான்வருகவே -
      செந்தமிழ் மணந்தழை நடைக்கழி விடைக்கழித் தெய்வநா யகன்வருகவே.(4)

வெவ்வாய் முடைத்தகுவர் மேவுங் களத்திலவர் மேனிநெய்த் தோர்பரந்து -
      மீதலை யெறிந்திட வெருக்கொண்டு மற்றவர் விடக்குநிண மீருள் பலவுங்,
கவ்வா யிரம்பெரும் பேய்களச் செம்புனல் கடப்பதற்கெண்ணி யனையார் -
      கைவிட்ட கேடக மறித்துக் கிடத்திக் கலந்ததி லிவர்ந்துமாண்ட,
வவ்வாய் கரிப்பிணங் குடர்கொடு பிணித்துமற் றதன்மே லிவர்ந்துமன்னா -
      ரங்கைக் கழுக்கடை யெடுத்துந்தி யிதுமிதவை யதுபரிசு காணுமென்னச்,
செவ்வாயின் வெண்ணகை யரும்பப் பெரும்போர்செய் சிறுகுமா ரன்வருகவே -
      செந்தமிழ் மணந்தழை நடைக்கழி விடைக்கழித் தெய்வநா யகன்வருகவே.(5)

வேறு.

நூலைக் கதிர்நுண் மதிகொண்டு நுனித்துள் ளுணர்தற் கருள்சாலா
      நோலா வினையேம் பவக்கடலு நூனங் கடந்த வுவர்க்கடலு
மாலைக் கதிரி னுடைகழைபோ லண்ட முடைக்கும் பெருமலையு
      மடியேம் பாசக் கருமலையு மடியுற் றொழியக் கடியுற்ற
மாலைக் கதிர்வேல் வலங்கொண்ட வள்ளா லுள்ளால் விடங்கரந்த
      வைவாட் டுளைப்ப லவரனுக்கு மயில்வா கனத்தின் மீமிசைப்பல்
காலைக் கதிரிற் றோன்றுமிளங் காளாய் வருக வருகவே
      கழியா வளங்கள் பொழியும்விடைக் கழியாய் வருக வருகவே.(6)

 பணியா வழுத்தும் பேரன்பர் பவசா கரத்திற் கொருவடவை
      பற்றற் றவரே பற்றகலப் பற்றும் பிரம முற்றுகுணங்
குணியா வையுமா யல்லவுமாங் கோதின் முதலென் றெடுத்துமறை
      குலவ வுனையே நாணாளுங் கூறு மதுவுங் குறியாய்போற்
றணியா மோகந் தலைக்கொண்டு சாரற் புனத்து வேரலுகு
      தரளப் பரல்கா லுறுத்தவுறீஇத் தையற் குறவர் கொடியின்பங்
கணியா முளைத்துத் திளைத்தவிளங் காளாய் வருக வருகவே
      கழியா வளங்கள் பொழியும்விடைக் கழியாய் வருக வருகவே.(7)

 தோட்டுக் கமலத் தவிசுறையுந் தோன்றற் கியற்றமுடியாத
      தோலா வனப்புச் சுமந்தகுறத் தோகை துணைத்தோ டோய்ந்திடுவான்
வேட்டுப் புகுந்த வொருபொழுது வேடர் பெருமான் வேட்டைவினை
      விழைந்தாங் கடையப் பயந்தாய்போல் விருத்த வுருவந் தரித்துமொரு
கோட்டுக் காடக் களிற்றையிரு கோட்டுக் களிறா வரப்புரிந்துங்
      குலவு பாயா வேங்கையுருக் கொண்டு மின்னும் பலசெய்து
காட்டுப் புனத்து மகிழ்ந்தவிளங் காளாய் வருக வருகவே
      கழியா வளங்கள் பொழியும்விடைக் கழியாய் வருக வருகவே.(8)

விண்ணே வளியே யொளியழலே விரியும் புனலே மேதினியே
      வெளிய மதியே செங்கதிரே மேய வுயிரே யுமிர்க்குயிரே
பண்ணே பண்ணி னுடனமையும் பாட்டே பாட்டி னுட்பொருளே
      பகரா றாறுக் கப்பாலாம் பரமே பரவு வார்வரமே
யெண்ணே யெண்ணின் மறைக்கொழுந்தே யெண்ணி யெழுதற் கரியபுக
      ழேறே யிமையோர் பேறேநன் கிமய முயிர்த்த பெருமாட்டி
கண்ணே கண்ணுக் கினியவிளங் காளாய் வருக வருகவே
      கழியா வளங்கள் பொழியும்விடைக் கழியாய் வருக வருகவே.(9)

மணியே மணியி னுள்ளொளியே மலரே மலரி னுண்மணமே
      மதியே மதியி னுட்கலையே மாணப் பொலியு முதுகுரவர்க்
கணியே யெங்க ளாருயிரே யாரா வின்பப் பெருக்காறே
      யாறா றினுக்கு மப்பாலே யப்பான் மையினின் றொளிர்முதலே
பணியே யமையப் பணிபவர்தம் பானின் றகலாப் பரம்பொருளே
      பரமா னந்தப் பெருவாழ்வே பற்றிக் கொடிச்சி தழூஉந்தெய்வந்
கனியே யழகு கனிந்தவிளங் காளாய் வருக வருகவே
      கழியா வளங்கள் பொழியும்விடைக் கழியாய் வருகவே வருகவே.(10)

6. வாரானைப்பருவம் முற்றிற்று.

7. அம்புலிப்பருவம்.

 புற்புத வலைக்கடல் கலங்கியோ லிடவெழூஉப் பொலிசத்தி யுடைமையானும் -
      புண்ணியக் கலைபல விரித்துநீர்க் குவலயம் பொலிதர மலர்த்தலானுங்,
கற்புதவு வண்ணமனை யாகவொளிர் தாரா கணப்பா லுவத்தலானுங் -
      காமனழ குக்குடை கொளப்பெரு கிராமங் கலந்துன்ன வெழுதலானும்,
வெற்புதவு மங்கைகான் முளையெனப் பரமர்முடி மேற்கொளத் தோன்றலானு-
      மேதகு தனக்குநிக ராயினா னென்றுனை விளித்தன னளித்தவர்கள்சூ,
ழற்புத விடைக் கழியுடைக்குமா நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(1)

 வில்லடு நுதற்றிருச் செய்யதா மரையாள் விழைந்தகோ லங்கெடுத்தும் -
      வெய்யவன் செயல்யாவும் வீழ்ந்தொழிய வேலைமே விக்கரங் கொண்டெழுந்து,

மல்லடு வலத்தம் பயங்குழைய வாம்பலை மணந்துதழு விப்புணர்ந்தும் -
      வானகங் குடிகொண்டு தண்ணளி 
புல்லடு முடைப்பரம னார்நயன மலரப் பொலிந்துவெளி வந்துமெங்கள் -
      புண்ணியத் தெய்வக் கொழுந்தினை நிகர்த்துளாய் பொன்மாட மணியுலகுசூ,
ழல்லடும் விடைக்கழி யுடைக்குமர நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(2)

நாடுபதி னாறுகலை யுடையனீ யறுபத்து நான்குகலை யுடையனிவனே -
      நண்ணுசிறு மானேந்தி நீயிவ னிளங்கோக்க ணாருபெரு மானேந்திகாண்,
கூடுமுய லொன்றுடைய னீயிவ னளாவிளங் கோளரிக பொன்பதுடையான் -
      கொண்டாடு பறவையொன் றுடையனீ யிவனவனி கொண்டா டிரண்டுடையனாற்,
பாடுமொரு குண்டலம் பொலியவரு வாய்நீ பரந்துபனி ரண்டுபொலியும் -
      படிவருவ னிவனிவனை நீயொப்பை யென்றெப் படிப்பகர லாமுர்வலென்,
றாடுநொள் விடைக்கழி யுடைக்குமர நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(3)

வருணமொன் றுடையைநீ யாறுடைய னிவனோடி மறைவைநீ மறையானிவன் -
      மாறாத வெண்மதிக் கடவுளே நீசெம் மதிக்கடவு ளேயிவன்றா,
னிருணயந் தெழுவைநீ யொளிநயந் தெழுவனிவ னியலுநீ பலதன்மையா -
      னெற்றைக்கு மொருதன்மை யானிவன் கயரோகி யேநீ நிராமயனிவன்,
றெருணல மளித்திடாய் நீயடைந் தார்நலஞ் சேர்தர வளிப்பானிவன் -
      றெளிதர நினக்கதிக னெங்கள்பெரு மானெனச் செப்பவேண் டுங்கொலோவா,
வருதணய விடைக்கழி யுடைக்குமர நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(4)

 பாராய் தரப்பொலியும் வேதாக மங்கணனி பகர்குறி குணங்கடந்து -
      பாநாத பரவிந்து வுங்கடந் தோங்கொளி பரப்பியொளிர் பரமயோகி,
சீராய் முடித்தலை வணங்கமெய்ஞ் ஞானோப தேசமுன் செய்தசைவத் -
      தெய்வஞா னாசாரி யன்கா ணிவன்பெருஞ் சீர்மைக்கு வழிவருவசற்,
றோராய் பெருங்குரவன் மனையைப் புணர்ந்துபழி யுற்றவிட னாயநின்சீ -
      ரொக்குமென லெங்கள்பெரு மடமையல் லாதுவே றுண்டுகொ லொருங்குலகமுற்,
றாராய் விடைக்கழி யுடைக்குமா நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(5)

வளியார் பெருங்ககன நடுவட் பொலிந்துநீ வருபொழுது கழுதுமஞ்சும் -
      வல்லிருள் விழுங்கிய தெனக்கரும் பாம்பொன்று வந்துனை விழுங்குமப்போ,
தொளியா ருனைப்பறி கொடுத்திழந் தோமென் றொருங்குலக நீருண்முழுகி -
      யுறுபசியின் வாடுநீ யுற்றதுய ருன்னோ டொழிந்ததிலை நன்குணர்தியாற்,
களியார் செருக்கர வொருங்கஞ்சு மயில்வா கனப்பிரா னருகடைந்தாற் -
      கருதுனக் கெத்துன்ப முண்டுபுக லின்பமெது கலவாது புலவாதுபே,
ரளியார் விடைக்கழி யுடைக்குமா நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(6)

ஏடுறு மலர்க்கணை தொடுத்தகரு வேளுட லெரிக்குணவு செய்த பெருமா -
      னெழினுதற் றனிவிழி வனப்பனை யழித்தனை யெனப்புவி யுரைக்கும் வசையொன்,
றோடுறு விதம்பெரு நலம்பொழி தரத்தா வுதித்தசெவ் வேளிவன்கா -
      ணுருவிழந் தவனுரைக் கும்பணி யவாகிநிழ லுதவுகுடை யாயினாய்நீ,
வாடுறு வருத்தமுல குக்கொழிக் குங்கருணை வள்ளல்வா வென்றழைக்கின் -
      வாரா திருக்கவிதி யுண்டுகொன் மணிக்கோயில் வாரணக் கொடிவான்கிழித்,
தாடுறும் விடைக்கழி யுடைக்குமா நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(7)

தடையா வலிப்பரமர் திருமுகக் கண்ணாய்த் தலைப்பெருங் கலமாய்நலந் -
      தழைமேனி யெட்டுளொன் றாயவர் நடாத்துந் தனித்தேர்ப் பதத்துளொன்றா,
யுடையா மகிழ்ச்சியி னமர்ந்துநீ பெற்றபே றுள்ளன வெலாமிவன்பா -
      லுற்றொரு கணப்பொழுது கூடிவிளை யாடலா லுண்டாகி யுலகுகுறுக,
மிடையா வரும்பேற்றி லாயிரங் கூற்றில் விரும்புமோர் கூறொவாதான் -
      மெய்மையிது காணிந்த மந்தண முணர்ந்துலி¢தி லீதரும் போதுமிறுதி,
யடையா விடைக்கழி யுடைக்குமா நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(8)

பொருள்சால் பொகுட்டிதழ் மலர்த்தவிசி னான்முகப் புத்தேண் முதற்புலவரும் -
      பொறிபுல னடக்கியொரு நெறியுறு வசிட்டன்முற் புண்ணியத் திருமுனிவரும்,
வெருள்சான் முனைத்தலைய வேற்கைமுசு குந்தனெடு வேந்தன்முற் பலவரசரு -
      மேவிப் பணிந்துளத் தெண்ணிய தடைந்தவிம் மேதகு
தலத்தடைந்தாற், கருள்சால் களங்கமு முளங்கவலு மாதக் கனாரிட்ட சாபமுந்தண் -
      கடவுண்மா குரவர்க் கியற்றுபா தகமுங் கழித்துய்யும் வழியுண்டுகா,
ணருள்சால் விடைக்கழி யுடைக்குமா நாயகனா டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(9)

மணியார் கடற்கணெழு நின்னையொரு பொருள்செய்து வருதியென் றெம்பிரான்செவ் -
      வாய்மலர்ந் தருளவு மென்கொல்பா ணித்துநீ வாரா திருந்தளைபெருங்,
கணியார் பொருப்பைக் கலக்கிய முனைத்தலைக் காலவேல் கையுண்டுகாண் -
      கருதுமதன் வலிநீ யுணர்ந்திலா யேனும்விண் கரைவது முணர்ந்திலாயோ,
பணியார் முடித்தலை துளங்குமவ் வேலெதிர்ப் படவுநீ யொருபொருள்கொலோ -
      பரமகுரு சாமியிவன் முனியினுனை யாதரிப் பாரெவர் பசும்பொனுலகி,
னணியார் விடைக்கழி யுடைக்குமா நாயகனொ டம்புலீ யாடவாவே -
      யாரணம் புகல்புவன காரணன் காணிவனொ டம்புலீ யாடவாவே.(10)

7. அம்புலிப்பருவம் முற்றிற்று

8. சிற்றிற் பருவம்

 மறையோ மறையி னொருமுடிவோ வான்றோய் குடுமி வரையுதித்த
      மங்கை யுமையான் மடித்தலமோ மாறா வன்பர் மனக்குளிர்பூந்
துறையோ சிறியேம் விளையாடத் தொகுதே மடிக மருவடிக
      டோயப் புரிந்த தெத்தவமோ தோற்ற முவந்தேங் கூற்றமுறழ்
கறையோ வரிய வடிவேற்¨குக் காளா யசுரர் குலகலகா
      கருணாநிதியே காமருதேங் கமலப் பொருட்டிற் கலைமகள்போற்
சிறையோ திமஞ்சேர் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளுற்முதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(1)

 கோலம் பொலிய நீராட்டிக் குலவ நுதல்வெண் ணீரணிந்து
      குளிர்நெய் தடவி நறுங்குஞ்சி கோதி முடித்து மையொடுபொட்
டேலம் பொலியுங் குழலுமையா ளிட்டுப் பலபூ ணணிந்துகனி
      யெழிற்க போலங் கிள்ளுபுமுத் திட்டுப் பெட்டு வெளிவிடுத்த
தோலம் பொலியு மணிவீதி யொருசா ராடு மெளியேங்கட்
      குறுபே ரிடுக்கண் புரிவதற்கோ னுவது பெருமைக் கிதுதகுமோ
சீலம் பொலியும் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளுற்முதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(2)

எங்க ளூமையா ளருமருந்தே யென்று விளித்துப் புனைந்துநினை
      யெய்த வெளியில் விடுத்தனளிவ் வெளியார்க் கிடுக்கண் புரியென்றோ,
வங்கள் வழிதார்க் கருங்கூந்த லனையா னினது திருமேனி
      யடங்கப் புழுதி படிந்ததுகண் டாற்று வாள்கொ லொருநான்கு,
கங்க ளுடையான் முதற்றேவர் கண்ணு முகமு மணிமுடியுங்
      கையும் புழுதி படும·துட் கருதி விலக்கி லேமதின்மேற்
றிங்க டவழும் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளுற்முதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(3)

 அழிக்குந் தொழினந் தந்தைதொழி லதனு லியானு மதுபுரித
      லறனே யெனின்மற் றொருநான்கு மார்செய் தொழிலெங் களுக்குரைத்தி
கழிக்கு மதுவு மிளைப்பாற்று கருணை யென்பா ரதற்குமறை
      கரிநீ யியற்றுந் தொழிறானெங் களுக்கு மிகவு மிளைப்பேற்றுங்
கொழிக்குங் கருணைப் பெருக்காறே கோதி லாத குணக்குன்றே
      குலவு மமரர் குலக்கொழுந்தே குரவ நிழலி னொளிர்குருந்தே
செழிக்கும் வளமை விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளுற்முதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(4)

   மேவியுலக முழுதழிக்கும் விமலன் மகன்யா னென்றெளி§ம்
      விரும்பி வருந்தி யியற்றுசிறு வீட்டை யழிப்பா யனையபிராற்
காவி யனைய பெருமாட்டி யண்ட முழுதுஞ் சிறுவீடென்
      றாக்கி மகிழ்வா ளவண்மகனீ யலையோ வனையாண் மகனென்று
பாவி யேங்கள் சிறுவீட்டைப் படைக்கு மாறே பணித்தேகிற்
      பழியுண் டாமோ பொழிசுவைத்தேம் பங்கே ருகமென் மலர்மேற்சீ
தேவி மகிழும் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(5)

கண்ணீர் பெருக வுருகியுளங் கசிநின் னடியார் மலமாயா
      கன்ம முழுதுஞ் சிதையவர்முற் கடிய வினையைச் சிதையவர்த
மெண்ணீர் பிறவிக் கணக்கெழுது மேட்டைச் சிதைநீ யேபரமென்
      றெண்ணா திழுதை யுறுமுனக ரெண்ணஞ் சிதைமற் றிவைதவிர்ந்து
புண்ணீர் கவரும் வடிவேற்கைப் புலவா புலவர் போரேறே
      பொறியி லேஞ்சிற் றிலஞ்சிதைத்தல் புகழோ வலது புண்ணியமோ
தெண்ணீர் வளங்கூர் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(6)

 சொன்மா மறைக்கும் பெருந்தேவர் தொகைக்கு நறுங்கற் பகத்தாமஞ்
      சூடு முடிவா னாடனுக்குஞ் சூட்டோ திமமூர் பிரமனுக்கும்
பன்மா முரல நறவிறைக்கும் பசுந்துழாய்ப் பூந் தாமனுக்கும்
      பன்மா தவர்க்கு மற்றையர்க்கும் பற்றற் கரிய சிற்றடிகள்
பொன்மா மணியும் வெண்முத்தும் போற்றி யாங்க ளாடிடத்துப்
      புழுதி பற்றற் கெளியன வாய்ப் போந்த திறும்பூ தோபிறிதோ
சென்மா மதில்சூழ் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(7)

அன்று கயிலைப் பருப்பதத்தி லழகோ லக்கத் தினிதமர்ந்த
      வருள் சானுந்தை யிருசரணு மடைந்து பிரமன் மான்முதலோர்
நன்று வரம்வேண் டியதமரர் நாடு கெடுத்த சூர்முதலோர்
      நல்லார் விரும்பு பெருவீடு நலிதற் கொருசே யுதவென்றோ
நன்று செறிகை யிளநல்லார் கருதி விரும்பு சிறுவீடு
      கழியப் புரிசே யுதவென்றோ கரையாய் வரையாள் கண்மணியே
சென்று பலர்சூழ் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(8)

 நையா நின்ற சிறுமருங்கு னங்கை யுமையாள் பரமனொடு
      நறுநீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் நண்ணி முகமா றினுக்கேற்பக்
கையா றிரண்டு புரிந்ததுபோற் காலா றிரண்டு செய்யாது
      கருதி யிரண்டே செய்தனண்முற் கடையேஞ் செய்த நல்வினையான்
மெய்யா விரண்டா யிருந்துமவை விளைக்குங் குறும்பு பொறுக்கரிதாய்
      விளைந்த தினியாஞ் செயலென்னே வீடு தோறும் விடாதமர்ந்து
செய்யாண மகிழும் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.(9)

ஆர்வார் புனல்வெண் பிறையரவ மணிந்த சடைமா தேவனுக்கு
      மகில மீன்ற வுமையவட்கு மருமை மகனீ யருவினைக
ளீர்வார் விரும்பு நின்வரவிங் கெய்தப் பெற்றே மெளிதாக
      வெளியே மதற்குக் கைம்மாறொன் றியற்ற நினைந்தேம் வேறுணரேம்
பார்வார் மணற்சோ றொளித்தினிது படைப்பே மடிகட் கதுகுறவர்
      பாவை படைத்த மாவாமோ பன்னூல் களுமுக் குற்றமறத்
தேர்வார் செறியும் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையலே
      சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையலே.(10)

8. சிற்றிற் பருவம் முற்றிற்று.

9. சிறுபறைப்பருவம்

 கந்தமிழ வாதபூ மேற்றேவர் புரிமகக் கனலெழுந் துறமுழங்கக்-
      காலாதி யுண்டுபொறி கட்டமர் தவர்வாய் கலந்தவா சிகண்முழங்க,
விந்தமிழ் தராதெழும் போதுகடல் போலற மெழுந்துமேன் மேன்முழங்க-
      விடியுண்ட வாளாலி னேங்கிமற முழுதுமினி யென்செய்து மெனமுழங்க,
நந்தமிழ் திருக்குமிட மாயவம ராவதியி னன்மணப் பறைமுழங்க-
      நாடுமருண் முதறீர் மகேந்திர புரத்துவகை நலிபிணப் பறைமுழங்கச்,
செந்தமிழ் முழக்கடை விடைக்கழி யுடைக்குகன் சிறுபறை முழக்கியருளே-
      தெய்வமறை யாகிய பெரும்பறை முழக்கினோன் சிறுபறை முழக்கியருளே.(1)

 மலைநா ணுடற்கொடுங் கூற்றமென வொருபான் மயக்கமிரு ளென்ன வொருபால்-
      வடமேரு வென்னவொரு பாலலை யெறிந்துகரை மாய்க்குமுவ ரென்னவொருபா,
லுலைநாண் மறக்கனலி யென்னவொரு பாலெங்கு முழலும்வளி யென்னவொருபா-
      லோங்குங் குறட்பூத மென்னவொரு பாற்கொலை யுவந்தகடி யென்னவொருபாற்,
கலைநாண் மதிச்சடைக் காபாலிகண்டக் கருங்காள மென்னவொருபாற்-
      கலந்தெங்கு மாய்ப்போர் புரிந்தவெஞ் சூர்முழக் கந்தபக் கையில்வாங்குஞ்,
சிலைநாண் முழக்கிய விடைக்கழி யுடைக்குகன் சிறுபறை முழக்கியருளே-
      தெய்வமறை யாகிய பெரும்பறை முழக்கினோன் சிறுபறை முழக்கியருளே.(2)

பண்ணீர் மொழிக்கருங் கட்செய்ய வாய்மலைப் பாவைக்கொர் பங்களித்த-
      பாலலோ சனநா யகன்கரத் தமருகப் பறையனைத் தும்படைக்குங்,
கண்ணீர் பிலிற்றுங் கடம்பணி தடம்புயக் காளைவே ளைப்பழிக்குங்-
      காமருரு வத்தினம் பிள்ளைப் பிரான்றிருக் கைப்பறை யெலாந்துடைக்கும்,
புண்ணீர் மணத்தவடி வாட்படைச் சூரன் பொரும்படைப் பறைமுழக்கம்-
      போயொழிந் ததுவெனப் புத்தேளிர் பலரும் புகழ்ந்துரை முழக்கமோங்கத்,
தெண்ணீர் முழக்குடை விடைக்கழி யுடைக்குகன் முழக்கியருளே -
      தெய்வமறை யாகிய பெரும்பறை முழக்கினோன் சிறுபறை முழக்கியருளே.(3)

 வான்முழக் கஞ்செயும் புத்தேளி ராகிய மயூரங் களுக்கு நிறைசூன்-
      மழைமுழக் காகவுந் தகுவரா கியகொடிய வல்லிட வராக்களுக்கு,
மான்முழக் கஞ்செயும் சனிமுழக் காகவு மதிக்குமுது குரவராய-
      வயங்குமசு ணங்கட்கி யாழ்முழக் காகவும் வையகம் வளைந்துமேன்மேற்,
சேன்முழக் கஞ்செயு மலைப்புணரி யாகிய செழுங்காட்டி னுக்குவெய்ய-
      தீமுழக் காகவு மெழந்துற முழங்கச் செழுந்தளிர்ச் சோலைதோறுந்,
தேன்முழக் கஞ்செயும் விடைக்கழி யுடைக்குகன் முழக்கியருளே -
      தெய்வமறை யாகிய பெரும்பறை முழக்கினோன் சிறுபறை முழக்கியருளே.(4)

பொருவிடைக் கொடியுடைப் புண்ணிய னலாதபிற புத்தேளிரும்பரந்து-
      புவியகத் தமருநற் றவருமற் றெவருமிப் போதுவம் மின்கள் வந்தாற்,
கருவிடைப் புகுதறவி ரின்பமுதல் யாவுங் கருத்தின் படிக்கெய்தலாங்-
      காணுமென் றவர்வர விளிக்கும் பெரும்பறை கடுப்பப் பகுத்தநூலே,
யுருவிடைக் கொடியிமை கருங்குழலி னீமுன்ன முற்றது கடுப்பவானத்-
      தோங்கிளஞ் சோலையிற் பொறிவண்ட ருற்றுமது வுண்டுவிண் டிசைமுழக்குந்,
திருவிடைக் கழியெனு *மிடைக்கழி யுடைக்குகன் சிறுபறை முழக்கியருளே -
      தெய்வமறை யாகிய பெரும்பறை முழக்கினோன் சிறுபறை முழக்கியருளே.(5)

வேறு.

எந்தை பிரானொரு கைக்கட் டமருக மிதுபறை குணின்மேய
      தெவ்விட மென்று சடாடவி தெடி யிலங்கு மிளம்பிறையை
நிந்தை யிலாக்குணி லென்றுகை கொண்டு நெடும்புவ னம்பலவு
      நெஞ்சு துணுக்கென வெற்றி முழக்க நிகழ்த்து நிகழ்ச்சியனே
சிந்தை விரும்பிய வெங்கண் மனங்களி தேக்கி யுவட்டெறியச்
      சிறுகட கச்செங் கைக்கிசை யுங்குணில் சேரக் கொடுமோதி
முந்தை மறைப்பொரு ளாகிய செல்வன் முழக்குக சிறுபறையே
      முகைமகிழ் முகமலர் குரவமர் குரவன் முழக்குக சிறுபறையே.(6)

 மின்னு வளம்பொலி மேக மிவர்ந்தொளிர் வித்தக மாதேவன்
      விழைதர மழைதரு மகிழ்மயி லகல்வெரிந் திசையி னிவர்ந்தொளிர்வாய்
பன்னுப லண்ட மகண்டமு முண்டு படைக்க வமைந்தவிறற்
      பன்மலர் மாலை புனைந்தொளிர் சத்தி பரித்த கரத்திறைவா
பின்னு திரைக்கடல் பொங்கி யெழுந்து பெயர்ந்தலை யக்கூவிப்
      பேருஞ் சிறைவலி வாரணநின்று பிறங்குகொ டித்தருவே
முன்னுந ருள்ள முளைத்தெழு சோதி முழக்குக சிறுபறையே
      முகைமகிழ் முகமலர் குரவமர் குரவன் முழக்குக சிறுபறையே.(7)

 பந்திய மைந்த பலாச்சுளை விண்ட பசுந்தேன் மதகளிறு
      படுபுழை யொருகர மேற்கொடு நீந்தப் பரவிப் பெருகுவள
நந்திய வங்கண் விலங்க லடங்க நகும்பல குகைதோறு
      ஞான முவப்ப மடங்கற் குருளையி னாளு மமர்ந்தருள்வா
யுந்தி யெழுந்தவன் முற்பல தேவ ரொருங்கு மிடைந்தொருநின்
      னொளிர்கைத் தொழிலிப் பறையினும் வன்ன முணர்ந்திட மொய்த்தனரான்
முந்தி யெழுந்தொளிர் சந்தன கந்தன் முழக்குக சிறுபறையே
      முகைமகிழ் முகமலர் குரவமர் குரவன் முழக்குக சிறுபறையே.(8)

 செக்கட் பணியுமிழ் செம்மணி யுங்கடி சேருங் காரகிலுஞ்
      செறிகழை யுமிழ்குளிர் வெண்மணி யுங்கரு டேங்குங் கருமணியுந்
தொக்கட் டெழவரி யேறெழு போதுந் துண்ணென லடையாத
      தும்பிக் கொம்பு மயிற்பீ லியுமஞ் சுவணத் தொடும்வாரி
சக்கட் கருமுகில் காக்குங் கானத் தரைமுத லெந்நிலனுந்
      தழைய வெடுத்தெதிர் வீசு தரங்கத் தண்கா விரிநாடா
முக்கட் கனிதரு மாமறை வித்து முழக்குக சிறுபறையே
      முகைமகிழ் முகமலர் குரவமர் குரவன் முழக்குக சிறுபறையே.(9)

கற்று விளங்கு நலத்தினர் யாருங் கரையக் கரைகாணாக்
      கரையில் வளம்படு கரையிரு பாலுங் கமலக் கையேற்ப
வுற்று விளங்கிய பலவகை மணியு மொருங்கொளிர் செம்பொன்னு
      மோங்கியெழுந்து விழுந்து புரண்டுக ளுண்டவர் போனிகழும்
பற்று முடங்கு திரைக்கை யெடுத்துப் பார்முழு துங்கண்டு
      பங்கே ருகநிதி யென்று வியப்பப் பலவெறி யுந்தகைசான்
முற்று முழங்குங் காவிரி நாடன் முழக்குக சிறுபறையே
      முகைமகிழ் முகமலர் குரவமர் குரவன் முழக்குக சிறுபறையே.(10)

* இடைக்கழியென்றும் இத்தலத்திற்கு ஒருபெயருண்டு.

9. சிறுபறைப்பருவம் முற்றிற்று.

10. சிறுதேர்ப்பருவம்

தண்டே ருடைக்குந் தடாவலி நெடும்புயத் தானவர் கருந்தலையெலாந் -
      தடிபடுஞ் செங்களத் தெதிரெதி ரிருந்துவகை தழைபெரும் பேயுருட்ட,
வண்டே ருடைத்தொங்க லனையர்கைச் சக்கர மகிழ்ந்துசிறு பேயுருட்ட -
      வாய்க்கினிய மூளையுள திதுவதுகொ லென்றனையர் மண்டைமுது பேயுருட்டப்,
புண்டேர் முடைப்பல்வா யவருடல் சுழன்றோடு புதியசெந் நீருருட்டப் -
      போரிடைப் பட்டவிவை நோக்கியவா மங்கையர் புவித்தங்க டலையுருட்டத்,
திண்டே ருருட்டிய விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(1)

அலையுடைக் கடலுடை யகன்புவியு மெண்டிசையு மாழிமால் வரையும் வான்றோ -
      யம்பொன்மால் வரையுமதி கதிர்முதற் கோள்பல வமைந்தபெரு மண்டலமும்வெம்,
முலையுடைக் கொடியர மடந்தைய ரொடுஞ்சுரர் முயங்குமம ராவதியுநான் -
      முதுமறைக் கிழவனுல கமுமிலகு சுதரிசன மொய்ம்பனமர் வைகுந்தமு,
நிலையுடைக் கதிர்மணிக் கட்செவிப் பாதலமு நீடுமுற் றெங்குமாகி -
      நிறைந்தவெஞ் சூர்ப்படைக் கோடையற வம்புமழை நேர்பொழியு மேகமாய,
சிலையுடைச் சேவக விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(2)

 கூர்கொண்ட கோட்டுக் கொலைக்களிற் றாருயிர் குடித்தவொரு கோட்டைவானங் -
      குடிகொள வெறிந்தெங் குலாவுமொரு வெண்பிறைக் கோட்டினை யெடுத்ததற்கு,
நேர்கொண்ட தாலென வமைத்துமள வாதமுந் நீர்கொண்ட பரவைமுழுது -
      நெடும்புழைக் கையுற வடக்கியும் மனையகட னிறையமத நீர் விடுத்தும்,
பார்கொண்ட முடியர வணிந்தும் பிலம்புகூஉப் பார்துதிக் கைநிறுவியும் -
      பலவிவை நிகர்ப்பனசெய் தாடுங் களிற்றிளவல் படர்பெருங் கழகந்தொறுஞ்,
சீர்கொண்ட தமிழ்சால் விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(3)

ஆக்கும் பெருந்தொழி லமைந்தவொரு தமருக மவாவுபறை யென்றுளங்கொண் -
      டன்னதை யடித்திடக் கைக்கொளுங் குணிறேடி யருகுவிளை யாடிநின்ற,
தாக்குந் திறற்களிற் றொருகர தலக்கோடு தனையுறப் பற்றியீர்க்கத் -
      தவாவலிகொ ளக்களிறு மெதிர்பற்றி யீர்க்கத் தழைந்திடு கலாமுணர்ந்து,
வாக்குஞ் சுவைத்தேறன் மாலைக் குழற்றாய் வயங்குற நடுப்புகுந்து -
      மறையோதி மந்தேடு வேணிப் பிறைக்குணில் வயங்கக் கொடுக்கவுவகை,
தேக்குந் திறற்குக விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(4)

தருமல்கு மால்வரைச் சந்தனக் குறடுந் தவாவிரை யகிற்றுண்டமுந்
      தறுகட் கடாககளிற் றொண்கோடு நீடுந் தழைப்பசுந் தோகையிறகுங்
குருமல்கு பன்மணியும் வாரியிரு கோட்டுங் கொழித்துச் சுழித்திரைத்துக்
      குலவுபல மதகும் புகுந்துலா யோடிக் குணாதுவா ரிதிகலக்கு
மருமலகு பன்மலர்க் காவிரிப் புனல்பாய வாழையுந் தாழையுங்காய்
      மன்னுபைங் கந்தியுங் கன்னலுஞ் செந்நெலும் வானளவு மோங்கிமிளிருந்
திருமலகு சோணாட் டிடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(5)

பொன்செய்த மெல்லிதழ்த் தாமரை யரக்காம்பல் பூத்துநனி பொலிவாவியிற் -
      பொம்மற் செருத்தற் கொடும்பிணர்க் கோட்டெருமை பொள்ளெனப் பாயவெருவி,
மின்செய்த செங்கட் டகட்டகட் டிளவாளை மீமிசையெழுந்து பாய்ந்து -
      மேவும் பெருங்குலைக் கட்பொலி யிலாங்கலி வியன்குலையை மோதவ·து,
கொன்செய்த காய்பல வுதிர்க்கவவை யத்தடங் கொளவிழ வதற்கஞ்சியக் -
      கோட்டெருமை யோடவது கண்டனைய வாளையக் குளிர்தடம் புக்குமகிழுந்,
தென்செய்த மென்பால் விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(6)

 கரையெறியும் வெள்ளப் பெருக்கிற் றருக்குடைக் காவிரி யொழுக்கின்வந்த -
      காமரு கமஞ்சூற் பெருஞ்சங்க மொருபெருங் கான்மதகு காலவெளியோர்,
விரையெறியு மொண்மலர்க் கொடியிற் கழைக்கூத்தர் விழையத் தவழ்ந்தேறியோர் -
      விரிதலைக் கமுகிருந் தொண்முத் துகுப்பவவை வீழ்தலைக் கண்டநீல,
வரையெறியு மைந்துடைத் தோளுழ வரிற்சிலர் வளக்கமு கரும்புகுக்கும் -
      வறிதெனச் சிலர்வான மீனுகுவ தென்னையென மாறா வளங்கள்பெருகித்,
திரையெறியு மென்பால் விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(7)

எழுந்தோகை குடிகொள வறந்தலை யெடுத்தெங்கு மேறமறை யாயதூய -
      விலதையந் தணர்நா வெனுங்கொம்பு பற்றிமே லேறவேள் விச்சாலையி,
னழுந்தோகை தீர்ந்துகிளர் வேதியுங் குண்டமு மலங்குமே கலையுநோக்கி -
      யரணியு தரத்தெழுந் தழலேற வழலேற வாவுமவி யெங்குமேறத்,
தழுந்தோகை மார்கருங் குழலினறு மாலையுந் தடமுலையி னொழுகு புழுகுஞ் -
      சாந்துமே றத்தேவ ரமரா வதிக்கட் டழைந்துகுடி யேறநாளுஞ்,
செழுந்தோகை மயிலே றிடைக் கழியுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(8)

 சுடர்செயும் பன்மணித் தொடைமாதர் மைந்தரொடு தொக்குவிளை யாடநீடு -
      சோலையி னளிக்குல முழக்கியுண் டுமிழவீழ் சுதைநறுந் தேறல்வெயிலான்,
விடர்செயும் புவியுட் புகுந்துபா தலமுழுதும் வெள்ளமே யெனநிரப்பி -
      மீதுபெரு கிப்பசுங் கன்னலுங் கதலியும் வேரொடு பறித்தெழுந்து,
படர்செயும் போதெதிர்ப் பட்டவான் முட்டவெழு பசியநெற் போரனைத்தும் -
      பார்பொறை யுயிர்த்திட வெடுத்துக் கடுத்தகழ்ப் பௌவத் தெறிந்த தனைவான்,
றிடர்செயும் பெருவள விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(9)

தாமலி கொடுந்தொழிற் கருமலைக் குந்திவலை தருமலைக் குங்காலவான் -
      றருமகட் குங்குறவர் திருமகட் குங்கொழுந சாரலுகு வேரன்முத்தங்,
காமலி பொருப்புதவு மங்கைக்கு மெறிதிரைக் கங்கைக்கு மொருபுதல்வமா -
      கடவுளார் மூவர்க்கும் யாவர்க்கு நாயக கருத்தைத் திருத்துமினிய,
மாமலி பெரும்புகழ்த் தென்கலைக் குந்தெய்வ வடகலைக் குந்தலைவநுண் -
      மதிக்குந் துதிக்குந் திதிக்குங் கதிக்குமுண் மதிக்குநா யகமுகிலளாந்,
தேமலி செழும்பொழில் விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே -
      திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.(10)

10. சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.

திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ் முற்றுப்பெற்றது.

Related Content