logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

உறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

(மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

பாயிரம்

காப்பு
விநாயகர்

மாமேவு மேனியஞ் செக்கர்வான் கார்க்கவுண் மதக்கமஞ் சூற்கொண்டலோர்
      வண்கோட் டிளம்பிறை விளங்குபுகர் மீன்செம்மை வாய்ந்த நயனக்கதிரவன்
காமேவு குடிலத் தடித்தொளிர் தரச்சுரர் கணம்புகழ்ந் தேத்தெடுப்பக்
      களிமிக்கு மண்ணுலகம் விண்ணுலக மாகவமர் கடவுளடி முடிசூடுவாந்
தேமேவு கொன்றையணி துன்றுசடை யெந்தையார் சிந்தைத் தடத்துண் மலருஞ்
      செங்குங்கு மத்தாது விழியளி மொழித்தேன் றிகழ்ந்தமுக வம்போருகப்
பூமேவு பொற்கொடியை மற்கெழுமு மளவில்பல புவனப் பரப்பெலாமுன்
      பொறையுயிர்த் தாளைநிறை யுறையூர்ப் பிராட்டியை புகழ்தமிழ்க் கவிதழையவே.    (1)

சிவபெருமான்

தேனொழுகு செழுமலர்ப் பொழில்சுலவு கழுமலச் சிறுகுழவி நாவரசுநற்
      றென்னாவ லூர்நம்பி வாதவூ ரெம்பிரான் றிகழுமிந் நால்வர்தம்வாய்க்
கானொழுகு மமுதமழை கொடுகுளிர்ப் பித்திடக் கண்டுவெண் டுண்டமதியுங்
      கங்கையு மிலைந்தவை தருங்குளிர்க் காற்றான் கடுப்பக் கரத்தினுதலில்
வானொழுகு செந்தழ லிருத்திக் கரித்தோல் வயங்குதிரு மேனிபோர்த்த
      வள்ளலைப் பரசியெம துள்ளலைக் குங்கொடிய மாசறுப் பாஞ்சுடர்த்த
மீனொழுகு மதி தவள மாடத் துரிஞ்சலுடல் விரவுமுய னீத்துமடவார்
      விழைமுக மடுப்பது கடுக்குமுறை யூரம்மை விரிதமிழ்க் கவிதழையவே.    (2)

உமாதேவியார்

வண்ணமதி யிற்கலையு மிரவியிற் சுடருமல ரிற்பொலியு நாற்றமும் போன்
      மறைதுதிசெ யிறைவரொடு பிரியாத தனதியல்பை மாலயன் முதற் சுரர்க்கு
நண்ணரிய தாயவொரு திருமேனி வாமத்தி னன்குறக் காட்டிநிற்கு
      நாயகியை யகிலமு மளித்தபெரு மாட்டிதனை நாத்தழும் பத்துதிப்பாத்
தண்ணமு தசும்பமுயன் மதிநடு வுறச்சுற்று தவளமா ளிகையருகெலாந்
      தாவில்சூற் கொண்டறலை தாங்கித் துகிற்கொடிக டங்குவது பாலொழுகுவா
யண்ணல்பசு மடலோடு நீற்றடியர் நடுநின் றரைப்பாய் நுடங்கிடக்கா
      ரமணரைக் கழுவேற்றி யதுகாட்டு முறையூரெ மம்மைநற் றமிழ்தழையவே.    (3)

விநாயகர்

கண்ணறா நெற்றிப் பிரான்சடை யிடைப்பொற் கடுக்கையந் தாதளாவுங்-
      கலைமதியை யிகல்வென்று கறைகொண்டு வாங்குதன் கைக்கோ டுடன்பொருத்தி,
விண்ணறா வொருகதிர வன்றேற்றல் காட்டியவ் வியன்சடைக் கங்கையாற்றில் -
      வீழ்த்தத்த மனமுந் தெரித்துப்பின் முன்போல் விரைந்தெடுத் துப்பொருத்தித்,
தண்ணறா வொருமுழுத் திங்களுத யங்காட்டு தம்பிரான் றிருவடிக்கே
      சரணடைந் தேமுளரி மலரிதழ்பொன் மூடித் தயங்கலம் மாதுகொழுநன்
புண்ணறா ஞாட்பிற்ற மகிழ்நனை மறைத்தபகை போற்றுதல் கடுக்குமுறையூர்ப்
      புண்ணியம் பூத்தருள் பழுத்தபொற் கொம்பினைப் புகழ்தமிழ்க் கவிதழையவே.    (4)

சுப்பிரமணியர்

கொங்குலவு கோதயயி ராணிதாள் பட்டமரர் கோமான் புயஞ்சிவப்பக்
      கூடித் திளைத்தவள் கருங்கண் சிவப்பக் கொடுந்தொழிற் றகுவர்மடவார்
செங்கையொடு கொங்கைகள் சிவப்பக் கடைக்கண் சிவந்தானை யொருகுறப்பெண்
      சீறடிக் கல்லால் வணங்கா முடிப்பெருஞ் சேவகனை யஞ்சலிப்பாஞ்
சங்கெறி துறைக்கட் குடம்பையோ டொருபூந் தருத்தாழ்ந்து நிற்பவம்பர்த்
      தாமரைக் கொடிநுழைந் தம்மலர் மடுத்தத் தடத்தினுட் பாய்கயலெல்லாம்,
பொங்குமீன் கூடுபி னுறக்குனிந் ததிபத்தர் பொள்ளல்வலை படுமுன்மீனைப்-
      பொற்கையி னெடுத்துவிடன் மானுமுறை யூர்க்கருணை பூத்தா டமிழ்க்கருளவே.    (5)

திருநந்திதேவர்

கருதரிய வுலகெலாங் காக்கும் பிரான்றிருக் கயிலையைப் பொதுமைநீக்கிக்
      காக்குமோ ருரிமைகொண் டெழின்மார்பின் முடியிற்பல் கடவுளர் தரித்தொளிவிடுந்
துருவருங் கவுத்துவ முதற்பல மணித்தொகைக டுகளா யெழப்புடைக்குஞ்
      சூரல்படை யாக்கொண்ட வெந்தைபெரு மானடித் தொண்டரைக் கண்டுபணிவா
மருகுபெரு காற்றுப் புனற்றெளிவின் மூழ்கிடா தள்ளற் கருஞ்சேற்றின்வா -
      யாழ்ந்தே யுழக்கிக் குலைக்கணே றாதுழ லடிப்பிள வுடைப்பன்மேதி
திருவமுறு சைவத் தழுந்தாப் புறச்சமயர் திறமிற் றெனத்தெரிக்குந்
      தென்னுறந் தைப்பதியின்மன்னும் பிராட்டிதன் செந்தமிழ்க் கவிதழையவே.    (6)

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.

பாலொழுகு குமுதவாய்ப் பிள்ளையைக் கள்ளப் படிற்றமணர் கூற்றை நீற்றைப்
      பற்றியவர் பற்றறப் பற்றுமொரு களைகணைப் பாரிக்கு ஞானவொளியை
மாலொழுகு புன்புற மதத்தரும் வியந்துதுதி வாய்பேச வென்பினைப்பெண்
      வடிவாக்கு தூமணியை மாமறைத் தமிழ்பொழி மழைக்கொண்டலைப்பரவுவாஞ்
சேலொழுகு கண்ணிய ரியங்குபொழி லிற்கருஞ் செழுமுகில் விராவொருதருச்
      சினையுறுஞ் செந்தே னிறாலொரு வளாருறச் சென்றுவளி யெறியமோதல்
நீலொழுகு முடலவுண ரைச்சவட் டியவலி நிறுத்தவோர் துரும்பைவளையா
      னெடுமால்பஃ றரமோதல் காட்டுமுறை யூர்க்கண்வளர் நிமலைநற் றமிழ்தழையவே.    (7)

திருநாவுக்கரசுநாயனார்.

கருமுருட் டுப்பறி தலைச்சமண ராழ்துயர்க் கடலிடை யழுந்தவெம்மான் -
      கருணையங் கடலிடை யழுந்திப் பறம்பொடு கருங்கடலின் மிசைமிதந்த,
திருவமுறு செந்தமிழ்க் கடலைத் தழைந்தொளிகொள் சிவஞான தீபத்தைநற் -
      சிவமணங் கமழ்மறைத் தமிழ்பொழியு முகிலைத் தினம்பணிந் தேத்தெடுப்பாம்,
பருவமுகி னித்திலச் சுதைதீற்று மாடப் பரப்பிற் படர்ந்துதுயிறல் -
      பாற்கடலின் மீமிசைக் கண்டுயில்கொள் சக்கரப் படையுடைப் பகவனேய்க்கு,
மொருபெரு வளத்தவுறை யூரிடை யமர்ந்தருளு முமையவளை யிமையம்வந்த -
      வொண்பிடியை யலகெலா முதவிய வொருத்தியை யுரைக்குமின் றமிழ்தழையவே.    (8)

ஸ்ரீசுந்தரமூர்த்திநாயனார்.

முன்னரிய முதுகுன்றர் தந்தபொரு ளாற்றிட்டு முரிதிரைப் பூங்குளத்தின் -
      முன்னெடுத் தவனைவெம் முதலைவாய்ப் பிள்ளைதரு முதல்வனைப் பிறைமுடித்து,
மன்னுமொரு தம்பிரான் றோழனைக் களிகொண்டு மதுவுண்டு வண்டுமூச -
      மணமாலை துயல்வருந் தோளனைப் பரவைமண வாளனைப் பரவிநிற்பா,
மின்னனைய சடையர்முடி காறுமய னாணச்செல் விரிதலைத் தாழைகளெலாம் -
      மெய்யநின் போனீர் தரித்துமுக் கட்பெறுமெ மெய்ச்சினையை யுலகின்மடவார்,
தென்னுலவு கொங்கையொப் பென்பரென வவர்திருச் செவியறி வுறுத்தல்காட்டுஞ் -
      செறிவள மலிந்ததிரு நகரெனு முறந்தையுமை செந்தமிழ்க் கவிதழையவே.    (9)

திருவாதவூரடிகள்.

 திருவார் பெருந்துறையி லொருகுருந் தடியிற் செழுங்கங்கை முடிமிலைந்த -
      சிவபிரா னருளுதலு மழல்வெண்ணெய் கல்லெனச் சிந்தைநெக் குருகியுருகி,
மருவார் மலர்க்கரஞ் சென்னிமீக் கொண்டிருகண் மழைவார வானந்தமே -
      மாறாத சிவபோக நறவுண் டிருந்தவருள் வள்ளல்பொற் றாள்பரசுவாம்,
வெருவா விளஞ்சூற் றகட்டகட் டிளவாளை மிடறிறப் பாய்வதஞ்சி -
      விரிதலைக் கதலியுஞ் செங்காய்ப் பசுங்கமுகும் வேழக் கரும்புமாராய்ந்,
திருவா னளிக்குமக வான்கருணை பெறமே லெழுந்தது கடுப்பவன்னா -
      னெழின்மண்ட பத்தினுக் கழகுதரு முறையூ ரிருந்தா டமிழ்க்குதவவே.    (10)

ஸ்ரீசண்டேசுவரநாயனாரும் மற்றநாயன்மார்களும்.

சிவகருமம் யாவர்கள் சிதைத்திடினு மவர்களைத் தேர்ந்துயிர் தபக்கோறலே -
      சிவதரும மென்பது தெரிந்துயிர்க ளுய்யத் திருத்தாதை தாளெறிந்த,
தவமழ முனித்தலைவர் தாளுமா ரூர்நம்பி சாற்றுமறு பத்துமூவர் -
      தாட்டா மரைப்போது மெப்போது முடிமீத் தரித்துத் துதித்தல்செய்வாந்,
துவரெறி யிளந்தளி ரரும்பிய நறுங்கனிச் சூதம்வா னோங்கிநிற்றல் -
      துருவரிய வினமான வொருமாவை யிளையவன் சுடரயில்கொ டுடல்பிளக்கத்,
திவளொளி முடித்தேவர் செய்தது தெரிந்தத் திருத்தேவ ருலகடர்க்கச் -
      சீறிச் சிவந்தெழுந் ததுசிவணு முறையூர்ச் செழுங்கோதை தமிழ்தழையவே.    (11)

1. காப்புப்பருவம்

திருமால்.

நீர்கொண்ட வேணிப் பிராற்கருள் விருந்தினை நிகர்ப்பமுகிழ் நகைசெய்தோறு
      நிலவெழூஉப் பொங்கித் துளித்துக் கிடப்பது நிகர்ப்பநிரல் படமிலைந்த
வார்கொண்ட மணிவடக் கொங்கையுடை நங்கையைவிண் மங்கையர்க்கரசியைச்சீர்
      மலியகில நிகிலமு முயிர்த்தகரு ணைக்காந்தி மதியம்மை யைப்புரக்க
தார்கொண்ட துளபப் பெருங்கா டலைத்தொழுகு தண்ணறாக் கலுழிபொங்கத்
      தவலறு மொளிக்கவுத் துவமணி சமழ்ப்பவத் தடமார்பு செக்கர்காட்டக்
கூர்கொண்ட வேல்விழிச் செங்கமல மங்கையிரு குங்குமச் சேறளாவுங்
      கொங்கைகண் ஞெமுங்கத் திளைத்துக் களிக்குங் குரூஉச்சுடர்ப் பச்சைமுகிலே.    (1)

வேறு

பஞ்சவர்ணேசுவரர்.

 நிலவுபொங்கவொரு சிறையொதுங்குமிரு ணிகரவெண்பொடிபொதிந்த மெய்ப்பூச்சொளி
           நிமிரவெங்குமலை கடலெழுந்தகொடு நெடுவிடங்குலவு கண்டனைத்தார்ப்புய
     நெடியவன்பிரம னுணர்வமென்றகில நிகிலமுந்துருவ நின்றமெய்த்தீர்த்தனை
            நிகரில்வெங்கொடிய மகமெழுந்துபொறி நிறைபணங்கெழுமு கங்கணச்சேர்ப்பனை,
விலகிநன்கிரண முமிழ்பொலங்கொண்முடி மிசைவியன்சுரர்க ரங்குவித்தேத்தவும்
            விறல்கொளும்பணியு முழுவையும்பரவி மிளிரவும்புரிபொ னம்பலக்கூத்தனை
     வெருவிலண்டரெழு விடையைவென்றமுழு விடையில்வந்தருளு மைந்தனைக்கார்ப்புயல்
           விரிவிசும்பினிடை விரவுமிந்திரவில் விழையுமைந்துநிற நம்பனைப்போற்றுதும்
மலர்பெரும்புவன முவகைகொண்டுயர வழுவகன்றமறை யந்தமிழ்ப்பாட்டினை
            வளமிகும்புகலி மழலையின்சொலுடை மழமொழிந்தருளு மின்சுவைத்தேக்கமழ்
      மதுரநின்றவமு துதவுகொங்கைமிசை வடபறம்புலவு திங்களைப்போற்சுடர்
            மணிவடங்குலவ வெழுபசுங்கொடியை மலர்மடந்தையர்ம ருங்குகைக்கூப்புட
னிலகுனன்பரெவ ரெவர்செயும்பணிக ளெவன்மொழிந்தருள்வை யென்றெடுத்தேத்திட
           விருகணின்கருணை பொழிபுநின்றவளை யெமதுளங்குடிகொள் பைங்கிளிப்பேட்டினை
     யிமயம்வந்தமட நடையமென்பிடியை யெழிறழைந்துமலர் கொம்பரைச்சூட்டர
      விறைவணங்குநுழை யிடையையம்பிகையை யிசையுறந்தைநகர் மங்கையைக்காக்கவே.    (2)

வேறு

நிருத்தவிநாயகர்.

முப்புரமுருக்குதிற லாளனைப்போற்கொலை
      முற்றுபகைசெற்றவொரு கோடுறத்தூக்கியே
ரப்புசுடர்விட்டெறியொர் கோடுவிற்சேர்த்தெழு
      மற்புதநிருத்தமத வானையைப்போற்றுவாந்
திப்பியமலர்த்தருவின் மேவுபட்பாட்டளி
      தெற்றெழுநறப்பருகி யேமுறப்பூத்துவார்
குப்புறுமிணர்த்தொகைய சூதம்விட்போய்ப்பொலி
      குக்குடநகர்க்கணமர் தேவியைக்காக்கவே.    (3)

வேறு

முருகக்கடவுள்.

வரியளிக்குல முழக்கிடநறப்பொழியு மென்மலர்த் தீர்த்தனன்
            மணிமுடித்தலை சடக்கொலிபடப்புடைசெய் கைம்மலர்க் காய்ப்பனை
      வழுவறக்குறு முனிக்கினியநற்றமிழ்சொ லையனைச் சூற்புயல்
            வளர்வரைக்குறவர் பொற்கொடியடிச்சுவடு மொய்புயக் காட்டனை
விரிகடற்புடவி முற்றுமறையச்சிறைகொண் மஞ்ஞையிற் கார்க்கடல்
            வியன்முகட்டெழு மழப்பரிதியொப்பவரு செம்மலைச் சூர்ப்பிடி
      விழிகளிப்புற நறைத்தருமலர்த்தொடைகொள் செல்வனைக் கூப்புகை
            விதுமுடிப்பரம ருக்கருண்மறைக்குரிய வள்ளலைப் போற்றுதுங்
கரியவுற்பலம் விளர்ப்பவற நெய்த்திருள்செய் பெய்குழற் கேற்பவோர்
            கதிருநித்தில மணிப்பிறையணிச்சுவடு செய்திடச் சூட்டுபு
      கணவர்செக்கர்முடி யிற்றிவள் பிறைச்சுவடு பொன்னடிச் சேர்த்திய
            கவினுடைத்திருவை மிக்கருள்பழுத்தமலை வல்லியைத் தூப்படு
மரியநற்றவ ருளத்துமெமுளத்துமமர் செல்வியைக் கூர்ப்படை
            யலைதரப்பொருது பொற்குமிழ்மிசைக்குதிகொள் கண்ணியைக் கூட்டுணு
      மமுதுபெற்றணி பணிக்கொழுநர்முத்தமிடு கிள்ளையைத் தேக்குறு
            மருமறைக்கினிய குக்குடநகர்க்கண்வள ரம்மையைக் காக்கவே.    (4)

வேறு.

பிரமதேவர்.

பாயிருட் படலங் கிழித்தொழுகு செங்கதிர்ப் பரிதிவா னவன்முடங்கும்
      பைந்திரைக் கார்க்கட லகட்டெழுந் தெனவிரைப் பைந்துளவ னுந்திநாறுஞ்
சேயபொற் றாமரை மலர்த்தவிசி னேறியத் திகரியங் கொண்டல்காக்கச்
      செயிர்தீர் பெரும்புவன முழுதும் படைத்தகைத் தெளிமறைக் கடவுள்காக்க
மாயிரு விசும்புறு முடுக்கணந் தம்மகிழ்நன் வள்ளலார் கொள்ளைவேணி
      மன்னியதை யுன்னியிக் கன்னிதிரு முடியே வயங்கியெக் காலுமழியாக்
கோயிலென வாழ்வது கடுப்பமுத் தணியாற் குலாவிக் கமழ்ந்துநெய்த்த
      கூந்தலிமயப்பிடியை மடநடை யனத்தையொண் கோழிநகர் வாழ்மயிலையே.    (5)

வேறு.

தேவேந்திரன்.

பண்டு சமரிற் புறங்கொடுத்த பறம்பு திறம்பா வெறுழ்படைத்துப்
      பகைத்துப் பொரல்போ லயிராணி பசும்பொ னசும்பு மார்பினிடங்
கொண்டு பணைத்துப் புடைத்தெழுந்த கொம்மை யிளமென் முலைக்கோடு
      குத்திப் பொருத வடுப்பொலியுங் குருமா நிறப்புத் தேள்புரக்க
வண்டுபடுந்தா ராரூரன் மாறாநிதிக்கோ னிருவரையு
      மதியாப்பொருளோ ரிரண்டினுக்கும் வயத்தோ ழமைகொள் பிரானேபோற்
றுண்டு படுவெண் மதிநுதற்பூந் தோகைமாத ரிருவரையுஞ்
      சொலுந்தோ ழமைகொண் டருளுறையூர்ச் சுரும்பார் குழலெம் பிராட்டியையே    (6)

வேறு.

திருமகள்.

வரியளி யுழக்கப் பசந்தே னசும்பூறு மாலைத் துழாய்க்கொண்டறன் -
      மறுமார்ப மறுமாதர் மருவப் பொறாதிதழ் மணத்தபங் கயமிருந்து,
கரியகண் முகிழ்த்திடுத லின்றிக் கடுங்காப் புறுத்தவு மறப்பொதுமையே -
      காட்டுமம் மார்பத் திருந்துரிமை கொண்டுமகிழ் கன்னிகையை யஞ்சலிப்பாந்,
தெரிவரிய வரமுடைத் தக்கனார் புரிதருந் தீத்தொழி லடுத்துநகைபோய்ச் -
      செயிருற்ற செங்கதிர் கடைக்கணருள் பெறுவான் செழுங்கா தடைந்ததேய்ப்பத்,
துரிசறு நிறங்கெழு மணித்தொகை குயிற்றுபொற் றோடுடைக் குயிலையெயிலைச்
      சுற்றுடுத் தோங்குவள முற்றவுறை யூர்க்கணமர் தோகையைக் காக்கவென்றே.    (7)

வேறு.

கலைமகள்.

பல்கும் பொறிச்சிறைப் பண்மிடற் றளியிளம் பைங்குழவி வயிறுவிம்மப் -
      பருமுகை முலைக்கண் டிறந்தொழுகு மின்னறாப் பாலூட்டு பங்கயத்து,
மெல்குந் தகட்டகட் டிதழ்மேயி னான்மறை விரிந்தொளி பழுத்தசெந்நா -
      மேற்றனது வெண்மேனி செம்மேனி யாகவமர் விமலைபொற் றாள்பரசுவா,
மல்குந் துகிர்க்கொடி பழுத்தனைய செஞ்சடை மணாளன் றிருக்கரத்து -
      மறிமான் றழைந்ததன் றிருவுருப் பசுமையொளி வார்ந்தெழக் கண்டுதுளிநீர்,
பில்கும் பசும்புலென வாய்கறிப் பதுகண்டு பெருநகை கொளாவமகிழ்நன் -
      பிணையலறு கூட்டியுறை யூரில்விளை யாடுபெண் பிள்ளையைக் காக்கவென்றே.    (8)

துர்க்கை.

துறைபட்ட மறைபரசு மிறையவ னுதற்சுடர்த் தொகையழலு நகையழலும்வெந் -
      தூமம் படுங்கரச் சிகையழலு மிகையெழூஉச் சுழல்வது கடுப்பவளவாக்,
கறைபட்ட வெந்நுனைய முத்தலைப் படையொன்று கைத்தலையெழுந்து சுழலக் -
      கனல்பொழி விழித்துணை முடங்குளை மடங்கல்வரு கன்னியைப் பரவுவாம்பொற்,
சிறைபட்ட வெள்ளனப் புள்ளேறு நான்முகச் செம்மலும் பொம்மன்முலையந் -
      திருமாது கொண்கனுந் தெரிவரிய பிறைமுடிச் செம்பொன்மலை யைப்புணர்ந்தோர்,
பிறைபட்ட கோடுடைக் கைம்மலையை யீன்றொளி பிறங்குமர கதமலையைமின் -
      பிறழிமய மலைவந்த வுறையூ ரிருக்குமம் பெண்ணமலை யைக்காக்கவே.    (9)

வேறு.

சத்தமாதர்கள்.

சிறைபடுநிலவெழ வனநட வுபுமறை நூலினை விரித்தவள்
      திசைகெட நசைகொடு திரிதரு தரியலர் மூவெயி லெரித்தவள்
செறிகட லழலெழ நெடுவரை குடரிற வோரயி றிரித்தவள்
      திருகிய மனனுடை யுருமுறழ் நிசிசரர் கோன்முடி நெரித்தவ
ளிறையள வெனவறை கடல்வளை புடவியொர் கோடிடை தரித்தவ
      ளிணருறு தருநறை யணிகமழ் தரவரை பாய்சிறை யிரித்தவ
ளெரிதரு திரிதரு திரிதலை யயிலைவி டாதுகை தரித்தவ
      ளெனுமிவ ரெழுவர்கள் செழுமல ரடிமுடி வாழ்தர விருத்துதும்
மிறைநிறை மனனுடை யமரர்க டமருட னோலிட வலைக்கடல்
      வெகுளெழு விடமடை மிடறுடை யடிகளை நாடொறு மயக்கியை
விரிசுட ரெரிவிழு மெழுகென வுருகுவர் பாலுறை திருப்பெணை
      வியனுல ககிலமு முதவிய வயிறுடை யாளைமு ளரைச்செழு
நறைமல ருறையெழி லரிவைய ரிருகர மாமல ரருச்சனை
      நனிசெய முனிவறு பணிவிடை யருளிய நீள்கடை விழிச்சியை
நளிநற விழிபொழின் மருவிய திருவுறை யூரம ரொருத்தியை
      நயமிலெ மொழியையு மினிதென வுவகைகொ டேவியை யளிக்கவே.    (10)

வேறு.

முப்பத்துமூவர்

மாமத மொழுக்குதவ ளக்கரியு கைத்தலொடு
      செக்கர்க்குருத்தோடு சேர்மலரிருக்கையும்
வாளர வணைத்துயிலு மற்பொடு துதிப்பவர்
      திளைப்பக்கொடுப்பாளை யாரணமுடிக்கரும்
பூமல ரடித்துணை தருக்கினை முருக்கியெ
      முளத்துப்பதிப்பளை நூறினமயக்கறு
பூதியொளி யற்றணியு மக்கமணி விட்டவர்
      கருத்துக்கொளிப்பாளை யாரமுதருத்தியொண்
காமர்கிளி யைத்தனது கைத்தல மிருத்தியெழின்
      முத்திட்டிருப்பாளை யோவில்கவிசெப்பெனக்
காமுறு மியற்றமிழ் மணத்தசொ லெமக்கினி
      தெடுத்துக்கொடுப்பாளை மாமுகிறுயிற்றிடுந்
தோமறு மதிற்பெரிய குக்குட நகர்க்கண்வளர்
      செப்புத்தனத்தாளை நாடொறும் விருப்பொடு
சூரியர் மருத்துவ ருருத்திரர் வசுக்களெனு
      முப்பத்துமுக்கோடி தேவர்கள்புரக்கவே.    (11)

1- காப்புப்பருவம் முற்றிற்று.

2 செங்கீரைப்பருவம்.

 பொன்செய்த செஞ்சடைப் பெருமான் றிருக்கையாற் பொங்காழி யெழுசெங்கதிர்ப் -
      புத்தேட னகையிழந் தாங்கக் கதிர்க்குரிய புண்டரிக மனையாட்டியுங்,
கொன்செய்த நகையிழந் துறுகணீர்சிந்தியுட் கொள்ளும் பயத்தழுந்தக் -
      கோலம் பொலிந்தொளிகொள் செங்கையம் பங்கயங் குப்புற நிமிர்த்துநிலமீ,
மன்செய்த கொங்கையந் திருமகளை யவளுரிய மருமகளை யருளுமென்றாண் -
      மரையொன் றெடுத்தொன்று கோட்டியிருள் வீட்டியொளிர் வள்ளைக் குதம்பையாடத்,
தென்செய்த தமிழ்மணக் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -
      சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே.    (1)

உருவம் பழுத்ததுகி ரொத்தசடை மதியமு துகுக்கவகி விடமுகுக்க -
      வுறுபுனல் பனித்திவலை வீசக் கரத்தினழ லொளிரும் புலிங்கம்வீசப்,
பருவம் பழுத்தநீற் றொளிநிலவு தோன்றவொலி பாய்கழற் பரிதிதோன்றப் -
      பாததாமரையொன் றெடுத்தூன்றி யொன்றுமறை பாடவிரு முனிவர்பரசக்,
கருவம் பழுத்தமுகில் குளிறுத லெனப்பெருங் கருமால்கை முழவதிர்க்கக் -
      கணநாதர் களிகொண்டு நின்றாட மன்றாடு கண்ணுதலை யாட்டுமமுதே,
திருவம் பழுத்தசெங் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -
      சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே.    (2)

கானாறு சூழியக் கொண்டையின் மணிப்பணி கவின்கொள நிறுத்தியதனிற் -
      கட்டிவிடு நித்திலச் சுட்டிவா ணுதலிற் கஞன்றிள நிலாவெறிப்ப,
வானாறு வள்ளையிற் றுள்ளொலி மணித்தோடு மழவிளங் கதிரெறிப்ப -
      மணிமூரலெழநடந் திமயமா தேவிதிரு மடியேறி முத்தளித்துப்,
பானாறு குமுதப் பசுந்தேற லூட்டியவள் பைம்பொற் றனங்கைவருடிப் -
      பாய்சுரப் பெழுசுவைப் பாலுண்டு விளையாடு பைங்கிள்ளை வானுரிஞ்சுந்,
தேனாறு பூம்பொழிற் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -
      சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே.    (3)

வல்லே றுகைப்பவ ரரக்கெறி கொடிச்சடை வதிந்தபய னுற்றேமெனா -
      மந்தா கினிப்பெயர்க் கங்கையுந் திங்களும் மனமகிழ்ந் துவகை தூங்கக்,
கல்லேறு கொண்டதிரு மேனியர் களிப்பெனுங் கடன்மூழ்க நின்னருட்கட் -
      கருங்குவளை செங்குவளை பூப்பநுழை நுண்ணிடை கழிந்தொசிதல் கண்டன்னைநின்,
வில்லேறு புருவங் குனித்திடே னின்னிலென வேண்டியோ லிடல்கடுப்ப -
      விரிபரி புரங்குளிற வக்கொழுநர் முடிமீது மென்றாள் செலுத்தன்னம்வண்,
செல்லேறு மணிமதிற் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -
      சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே.    (4)

மொய்த்தகுடி லத்துவெண் டும்பையும் பாசறுகு முருகுவிரிபொற் கொன்றையு -
      முளைமதியும் வேய்ந்தவையொ டொப்பவெண் டலையுமுடை மூடென்பும் வார்நரம்பும்,
பைத்தபட வரவுந் தரித்தவரொ டொப்பநன் பாடலொடியான்சொலும்புன் -
      பாட்டுநனி கேட்டுமறை சூட்டுமிரு தாட்டுணை பதித்தென் றலைக்கணருளு,
நெய்த்தகரு நீலக் கதுப்பம்மை காழிமழ நிகரறுந் தமிழாரண -
      நெடியாது நொடிதரப் படியிலா ஞானமரு ணித்திலக் கொங்கை மங்கை,
செய்த்தவள வளைகண்முரல் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -
      சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே.    (5)

வேறு.

துருவரு நித்திலம் வைத்த தலைப்பணி சுற்று மிசைந்தாடச்
      சூழிய மொடுநுத றாழக் கட்டிய சுட்டி யசைந்தாடப்
பொருவரு திருமுக முழுமதி யெழுசிறு புன்னகை நிலவாடப்
      பொங்கொளி தங்கு குதம்பை ததும்பப் பொருகட் கயலாடக்
கருகிரு டின்று விளங்கு மிளங்கதிர் கால்பொற் குழையாடக்
      கான்மலர் பெயர்தோ றுங்கிண் கிணிகள் கலின்கலி னென்றாட
வருள்வளர் தருதிரு வுருவமு மாடிட வாடுக செங்கீரை
      யழகிய திருவுறை யூரமர் நாயகி யாடுக செங்கீரை.    (6)

செங்குமு தம்பொதி யூற லெனுஞ்சிறு தேறல் வழிந்தோடச்
      செழுமணி மேகலை தழுவிய நுழைநுண் சிற்றிடை யொசிவெய்தக்
கங்குன் மழுங்க வெழுங்கிர ணம்பொலி காதணி வெயில்வீசக்
      காமர் முகப்பது மக்குமிழ் முத்தங் கஞலொளி நிலவீனத்
துங்க மிகும்புவ னம்பல நந்திய தொந்தி ததும்பியிடத்
      துகளறு சிந்தை யிருந்த சிவந்த துணைத்தா ளணிமுரல
வங்கலுழ் திருவுரு வத்தொளி மொய்த்தெழ வாடுக செங்கீரை
      யழகிய திருவுறை யூரமர் நாயகி யாடுக செங்கீரை.    (7)

வேறு.

எமதுபவப்பிணி யிரியவிரிக்கும ருந்தேயன்பாள
      ரிதயமுளைத்துந லெழிலொடினித்தக ரும்பேவிண்டாழு
மமரர்முடிப்பொலி மணியெனுமத்தர்வி ருந்தீதென்றோதா
      வகமகிழச்சிறு நகைவிரிபொற்பமர் கொம்பேபண்பாடுந்
தமரமிடற்றபல் பமரமுழக்குந றுந்தார்கொண்டாயுந்
      தகரமொழுக்கிய கருநிறமைக்குழ னங்காயிந்தூருஞ்
சிமயமிமைத்தெழு மிமயவரைப்பிடி செங்கோசெங்கீரை
      திகழ்தருகுக்குட நகரிலிருப்பவள் செங்கோசெங்கீரை.    (8)

வேறு.

எறிதிரை யமுதமும் வாழயி ராணித னங்கோபஞ்சீறு
      மிதழ்பொதி யமுதமு மோகைகு லாவநு கர்ந்தேசந்தான
முறிபுனை நறுநிழல் வானவர் குழவி ருந்தேறுங்கோப
      முனையடு புகர்முக மாலயி ராவத முந்தாநந்தாத
செறிதரு களியெனு மாழ்கடன் மூழ்கியு வந்தோர்விண்கோமான்
      றிருவுற வொருசிறு சேயினை மாணொடு தந்தாயெந்தாயே
யறிஞர்க ளறிவுறு மாரண நாயகி செங்கோசெங்கீரை
      யருள்விளை திருவுறை யூரமர் நாயகி செங்கோசெங்கீரை.    (9)

வேறு.

பொங்கு நறைப்பொழி மாமலருங்கா னுஞ்சீர்சால்
      பொன்செ யருக்கனு நீளொளியும்போ லம்போடு
திங்கண் முடித்தபி ரானுறைவெங்கே யங்கேவாழ்
      செங்க னகச்சிலை மானிருகொங்காய் நங்காயேர்
தங்கு வரைக்கிறை யோனருள்கன்றே நன்றாய்வார்
      தங்க ளுளத்தமு தூறுகரும்பே வம்பேகூ
ரெங்கள் குடிக்குமொர் வாழ்முதல் செங்கோ செங்கீரை
      யின்சொல் பெருக்குறை யூர்மயில்செங்கோ செங்கீரை.    (10)

2- செங்கீரைப்பருவம் முற்றிற்று.

3  தாலப்பருவம்.

ஒல்குங் கொடிநுண் ணுசுப்பொசிய வுளருஞ் சுரும்பர் விரும்புமது
      வுண்டி தெவிட்டி யுவட்டெடுப்ப வூற்றும் பசுந்தே னசும்பூறிப்
பில்கு நறுந்தார் குழல்செருகிப் பேதை மாதர் பயின்மறுகு
      பெரும்பொற் றகடு படுத்திருளின் பிழம்பை மழுக்கி யடிக்கினிதே
நல்குங் குணத்தா யினும்புலவி நண்ணு மடவார் சிதறுதல
      நவமா மணிகள் பரந்துகுறு நடையே யெவருங் கொளக்காணு
மல்குஞ் செல்வத் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் கரற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.    (1)

கூட முயருங் குன்றனதங் கொம்மை முலைக்குப் புறங்கொடுத்த
      குருமார் பகத்திற் புயத்தினறுங் குஞ்சித் தலத்தி லஞ்சிறைய
கீடமிரியப் பகன்முழுதுங் கிள்ளை மொழியா ரலத்தகந்தோய்
      கிளர்தாட் சிலம்பி னொலியெழுப்பக் கெழுமு மிரவின் மைந்தர்மலர்ப்
பீட மருவு மம்மடவார் பெருங்கா ழல்குன் மிசைக்கிடந்து
      பிறழ்மே கலையி னொலியெழுப்பிப் பெருகுங் களிப்பிற் றிளைத்துவளர்
மாட மலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் கரற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.    (2)

 பண்ணுங் கனியுங் கனிமொழியார் பயின்மே னிலத்திந் திரநீலம்
      பதித்து விதித்த செய்குன்றப் பரப்பில் வரப்பில் கொழுந்தோடி
நண்ணுஞ் சுடரி லறமுழுகி நாடற் கரிதா யுயிர்க்குயிரா
      நம்மான் றிருக்க ணீபுதைத்த நாளோ வென்று ளயிர்த்துநெடு
விண்ணுந் திசையு மிகமயங்கி விரகா னாடி யாய்தோறும்
      விலகி விலகி வில்லுமிழும் விதத்தா லிஃதிற் றெனத்தெளியும்
வண்ணம் பொலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் கரற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.    (3)

கருமால் யானை யனந்தனுளங் கலங்கக் கலக்கி விளையாடுங்
      கார்க்குண் டகழி கடலெனவக் களிற்றை யினமென் றுளத்துநினைந்
திருமா லெழிலிப் படலமவ ணிழிந்து குழிந்த வகடெடுப்ப
      விரைத்துத் திரைத்த நீர்கொடுவிண் ணேறும் பொழுதவ் விபப்பாகர்
பொருமால் களிறென் றதனெருத்திற் பொள்ளென் றேறிப் பொன்னுலகம்
      புரப்பான் போல்விண் புகுந்துணராப் பொருக்கென் றயற்சோ பானவழி
வருமா ளிகைசூழ் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் கரற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.    (4)

 ஊற்றும் பசுந்தேன் முளரிமுகை யுளர்வண் டடைய முறுக்குடைய
      வோதக் கடலின் முகம்புழுங்க வுதயமெழுந்து சிதையவிருள்
பாற்றுங் கடவுட் கதிர்கடவும் பசுமா வுருளைத் தனிவையம்
      பகைகொண் டிளைஞர் மிகைகடவும் பைம்பொற் கொடிஞ்சித் தேர்முழக்குங்
கூற்றும் வெருவப் பொருங்களிறு பிளிறு மொலியும் குளிறொலிமான்
      குரற்கிண் கிணியி னெழுமொலியுங் குழுமி யெழுமா முகின்முழக்கை
மாற்று மறுகார் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் கரற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.    (5)

வேறு.

பொங்கும் பாற்கடன் முழுதுங் கொழுவு புழைக்கை யடக்கியெழூஉப்
      பூமக ணான்முகன் மால்சிவ னேயுயிர் போயின மெனமுறையிட்
டெங்குஞ் சிதறி விழப்பின் விடுத்தலை யெறிதரு மக்கடல்விட்
      டேனைக் கடலு முழக்கிக் குலவரை யெட்டையு முட்டிநிறந்
தங்குங் குலவொரு கோட்டாற் குத்திச் சாய்த்துப் பிலநுழையாத்
      தாதை யெனப்பணி பூண்டு வருஞ்சிறு தந்திக் கன்றருளுஞ்
செங்குங் குமநிறை கொங்கை சுமந்தெழு சிறுபிடி தாலேலோ
      செல்வத் திருவுறை யூரில் விளங்கு செழுங்குயில் தாலேலோ.    (6)

வேறு.

உதைய மெழுங்கதி ரெதிரெழு செங்கே ழொழுகொளி முழுமணியே
      யொண்பவ ளத்திரு வோங்கலை நீங்கலி லோங்கொளி மரகதமே
இதைய நெகிழ்ந்துரு குங்களி யன்பின ரெய்ப்பகல் கற்பகமே
      யெம்முள மூடிரு ளோடி மலங்க விலங்கும் விளக்கொளியே
குதைவரி விற்புரு வத்தர மகளிர்கள் கும்பிடு கோமளமே
      குழைபொரு கட்கரு ணைப்பெரு வெள்ளக் கொள்ளைப் பேராறே
ததையு மலங்கன் மிலைந்த குழற்கொடி தாலோ தாலேலோ
      தருமம் பொலிதிரு வுறையூ ருறைபவள் தாலோ தாலேலோ.    (7)

வேறு.

தருவிற் பொலிமலர் மாமுடி மேல்விழ வானோரேனோருந்
      தகைபொற் சிகைமலர் தாள்விழ மீளவிண் ணாள்வார்வாழ் வாரே
யுருவிற் பறவைகள் பூமக ணாமகள் சேர்வாரூர்வாரே
      யொருவிற் குமரனை நீயுத வாவிடின் மாதாவேயோவென்
றிருவிற் புவனமெ லாமலர் போலடி மீதேதாழ்தோறு
      மினிதுற் றருள்வர தாபய மேவுகை யாயேயோயாதே
கருவிற் படுமெனை யாளுடை நாயகி தாலோ தாலேலோ
      கழகத் திருவுறை யூரமர் மாமயில் தாலோ தாலேலோ.    (8)

வேறு.

குருமருவுசெம்பொன் வரைவில்கைசுமந்து கூடாரூர்தீயே
      குடிபுகமுனிந்த சிவபரனைவென்றி டாதேயேகேன்யான்
மருமருவுதொங்கன் முடியமரர்வந்து பாரீர்போய்மோதா
      வருவலெனவந்த வொருமதனனங்கம் வேவாநீறாக
வுருமருவுவெம்பு மழல்விழிதிறந்த கோமான்மாமோக
      வுததியிலழுந்த விளநகையெழுஞ்செ வாய்மானேதேனே
திருமருவுகொண்ட றிகழவருதங்கை தாலோதாலேலோ
      செழிதமிழுறந்தை தழைதருகரும்பு தாலோதாலேலோ.    (9)

வேறு.

தெளிதருமறைய னைத்தையுமெழுதி டாதேயோதாமே
      தெறுகழுவொருகு லச்சிறைநிறுவி வீணேபோகாமே
யளியறுபறித லைச்சமணிருளி லேபார்மூழ்காமே
      யழலுருவிறைய வர்க்குடல்குளிரு மூண்வேறாகாமே
வளியெறிபொதியி னற்றவர்களிய லாவாறேகாமே
      மடரறையுளமு நெக்கிடமுலையின் வாய்வார்தேனார்பால்
குளிர்தருபுகலி யர்க்கினிதுதவு தாயேதாலேலோ
      கொழிதமிழ்கெழிய குக்குடநகரின் வாழ்வேதாலேலோ.    (10)

3 - தாலப்பருவம் முற்றிற்று.

4  சப்பாணிப்பருவம்.

எண்கொண்ட தலையிரண் டிட்டமுப் பஃதற மிருக்குமா லயமென்றும்வா -
      னெம்பிரா னாயவொரு தம்பிரான் கைக்கமல மேந்துசெங் காந்தளென்றுங்,
கண்கொண்ட விருசுட ரடங்கித் தடைப்படு கடுஞ்சிறைக் கூடமென்றுங் -
      காமரயி ராணிமங் கலநா ணளித்தசேய் கண்படைகொள் பள்ளியென்றும்,
பண்கொண்ட வஞ்சொற் கிளிக்குஞ்சு துஞ்சுதல்செய் பஞ்சரம தென்றுமறைகள் -
      பாடித் துதித்துவகை தூங்கவெஞ் ஞான்றும் பரிந்துபா ராட்டுசீர்த்தித்,
தண்கொண்ட தாமரை முகிழ்த்தொளி ததும்பவொரு சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணியவுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.    (1)

காயா நிறத்தவன் சுதரிசன மொடுமரைக் கண்ணனெண் றொருபெயருமுக் -
      கண்ணவ னிடம்பெறச் செய்தபே ருதவியைக் கைவிட் டிருட்பகையைமுன்,
னாயாது ஞாட்பிடை மறைத்ததை யறிந்துமவ னமுதைப் பரித்தல்செயுமே -
      யம்மைநின் னொருகையை யிருகைகொடு தாங்குவ தறிந்தலை கடற்றோன்றுமத்,
தூயாடவத்தளென நறுமுளரி யென்றுஞ் சுமக்குமா லென்றுகூறிச் -
      சூராமடந்தையர்கள் பாராட்டு கையொளி துளும்பவெளி யேங்களுக்குத்,
தாயா யிருப்பதுமெ யானான் மகிழ்ந்தின்றோர் சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.    (2)

பாராட்டு நின்சிறு சிலம்பிற் சிலம்பினப் பார்ப்புநா லைந்துதருவேம் -
      பயில்குதலை நினதுவாய்ப் பவளமுத் தங்கொளப் பைங்கிளிக் குஞ்சுதருவேங்,
காராட்டு கந்தரத் தெம்மா னிடத்திருக் கைமானு மினிது தருவேங் -
      கவினுடைப் பாவையைக் கைபுனையும் வண்ணமுங் கற்கப் பயிற்றிவிடுவேஞ்,
சீராட் டுடன்குலவு வண்டற் பிணாக்களுஞ் சேர்ப்பே மிதன்றியாமென் -
      செய்யினுங் கைம்மா றெனக்கருத லகவிதழ்ச் செங்கையொளி பொங்கநறவத்,
தாராட்டு கூந்தலெம தெய்ப்பாற விப்போழ்தொர் சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.    (3)

ஆனநெய் தெளித்துநறு நானமு மளாய்ச்சூழி யணிபெற முடித்து மொளிசே -
      ரரிக்குரற் கிண்கிணியொ டம்பொற் சிலம்புநி னடித்தளிர் திருத்தியும்பாய்,
மீனநெடுநோக்கினுக் கஞ்சனந் தீட்டியும் விளங்குபுண் டரநுதற்கண் -
      விலகிவில் லுமிழ்மணிச் சுட்டியது கட்டியும் வியன்கதிர் விழும்பொழுதுபொற்,
கானநிறை தொட்டிலிற் கண்வளரு மாறுபல கண்ணேறு போக்கியுமுளங் -
      களிகொள்ளும் யாமுவகை மீக்கூர வன்பிற் கணக்கில்புவ னங்கணோக்கத்,
தானமருள் கைத்தலனை நோக்கிநிற் கின்றேமொர் சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.    (4)

 சிலையெடுத் தன்னநின் றிருநுதலி னுண்டுளி செறிந்திடா மற்செறிந்த -
      செழுநிறக் குருகுக ணெரிந்திடா மற்றளிர்ச் செங்கரங் கன்றிடாமன்,
முலையெடுத் துயர்மார்பி னமுதூற்று திருவாய் முகிழ்த்தநகை நிலவுகொட்ட -
      முனிவின்றி நின்கரங் கண்ணொத்தி முத்திட்டு மோந்துயா முவகைகொட்ட,
அலையெடுத் துயர்கங்கை மங்கைதன் நெஞ்சகமு மஞ்சித் தடாரிகொட்ட -
      வம்மவிம் மிதமுறீஇ யவிர்முடி துளக்கிநம் மம்மான் குடங்கைகொட்டத்,
தலையெடுத் துயரறமு மாவலங் கொட்டவொரு சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.    (5)

வேறு.

கருநிற வெழிலி முழக்கென வெம்மான் கயிலையின் மயிலாலக்
      காயு மடங்கன் முழக்கென மகவான் களிறும் பிளிறியிட
வுருமின் முழக்கென வரவிறை யுள்ள முளைந்திட வரமாத
      ரூடல் வெறுத்து வெரீஇத்தம் மகிழ்ந ருரங்குழை யத்தழுவத்
திருமறு மார்பன் றுண்ணென வளர்துயி றீர்ந்தெவ னெனவினவத்
      திகழண் டங்கள் குலுங்கக் குணில்பொரு செழுமுர சொலிகெழுமுங்
குருமணி வெயின்மறு காருறை யூர்மயில் கொட்டுக சப்பாணி
      குழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி.    (6)

பூணைப் பொருமுலை மங்கையர் பயிலும் பொங்கொளி வெண்மாடம்
      புதுநில வொழுகொளி முழுகியு மெழுகழல் போகட் டதுபோற்கற்
றூணைப் பொருமுட் டிருகரு முருகத் தோன்றுழு வற்பிரியத்
      தூயோ ருருவத் திருவப் பேரொளி தோய்ந்துங் கழைசுளியா
மாணைப் பெறுமிரு வெள்வே ழத்தினை வாயிரு பாலுநிறீஇ
      மதமால் யானைகள் கற்பக் குளகுகொள் வண்கோ டொருநால்வெண்
கோணைக் களிறென வருமுறை யூர்மயில் கொட்டுக சப்பாணி
      குழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி.    (7)

வேறு.

மடலவிழ்நறுமுட் டாழையில் வாழையின் மணமலிபிரசக் காவியில்
            வாவியின் மதிகதிர்தவழ்பொற் சோலையின் மாலையி னச்சுவடிப்பார்வை -
      வரிவளையவர்நெய்த் தோதியில் வீதியி லகவிதழ்வனசப் பூவினின்
            மாவினில் வடிவுடையலரிக் கூடையி லோடையின் மற்பசுமைப்பூக,
மிடறருளிளநற் பாளையில் வாளையில் வினைஞர்கள்சிகையிற் பூவிரி
            காவிரி வியலியல்குலையிற் சாலியின்வேலியின் மைக்கவரிப்பால்பாய் -
      விரிதருகுளனிற் கூவலி லோவலில் வளனருள் புறவப் பாரினில் வேரினில்
            விழைமதுநுகரப் போயுறவாயுற மொய்த்தசுரும்பேபோ,
லடலிளைஞர்கள்பட் டாடையி லோடையி லறவளைதனுவிற் றூணியினாணியி
            லவிர்கரமலரிற் றோளினில் வாளினில் விற்பொலிமுத்தாரத் -
      தகலமதனின்மெய்ச் சேயினில் வாயினி லொழுகொளிமுகினிற் றாழ்குழை
            வாழ்குழை வமர்தருசெவியிற் றேரினி லேரினில் வைத்தமுடிப்பூணிற்,
றொடர்படுபொருணட் பால்விலை மாதர்க ளரிமதர்நயனக் காரளி
            போய்விழு துரிசறுவளமைக் கோழியில் வாழ்மயில் கொட்டுகசப்பாணி -
      துயல்வருமிதழித் தாமம் விராவிய புயமுதலவருக்கோர்துணை யாயவ
            டுகளறுகருணைக் கோயிலின் மேயவள் கொட்டுகசப்பாணி.    (8)

வேறு.

 பரவு நெடும்புவ னந்தரு மைந்தன் விரித்தபடப்பாயற்
      பகவன் மதம்பொழி வெண்கரி வந்தருள் கட்படி வத்தேவ
னுரக ரருந்தவ ரெண்டிசை நின்றவர் முப்பது முக்கோடி
      யுறுதொகை யண்டர்கள் செங்கதிர் வெண்கதிர் சித்தகணத்தோர்கள்
கரமுடி கொண்டொரு நந்தி பிரம்படி பட்டும் விருப்பாகிக்
      கவின வணங்க வுகுத்த மிகுத்த முடிப்பொன் மணித்தூள்பா
யரவொலி பொங்கு முறந்தை யிருந்தவள் கொட்டுக சப்பாணி
      யழகமர் கொங்கை சுமந்த விளங்கொடி கொட்டுக சப்பாணி.    (9)

வேறு.

 ஒலிகட லமுதன மூவர்கள் வாயரு மைத்தமிழ் நற்பாட
      லுடலுறு பிடகரை மோதிய சோதிவி ரித்தசு வைப்பாடல்
பொலிதரு சமையநன் னூலியல் யாவும யக்கமறத்தேறிப்
      புறமத மறமெறி நூல்களு மோதியு ணர்ச்சிமிகுத்தோவா
வலியுறு பதிபசு பாசமு மீதிதெ னத்தெளிவுற்றாராய்
      மயலறு விழிமணி வாள்வட நீறையெ ழுத்துமதித்தோகை
மலிதர வொளிருவர் சேருறை யூர்மயில் கொட்டுகசப்பாணி
      மலர்தலை யுலகமெ லாமரு ணாயகி கொட்டுகசப்பாணி.    (10)

4- சப்பாணிப்பருவம் முற்றிற்று.

5 முத்தப்பருவம்

வாரா ரூசல் வடமலைப்ப மாறா தேறி யுடனலைந்தவ்
      வடநா ணறக்கீழ் விழுவானை வல்லை நிலத்தாங் குவதேய்ப்பப்
போரார் பஞ்சப் புலக்கயிறு பொருக்கென் றறத்தஞ் செயல்யாவும்
      போக்கிக் கிடக்கும் பசுக்கடமைப் புகன்று தாங்கு மருட்கொடியே
நீரார் நிழலந் நிலந்தோற்றா நீர்மை போல வுயிர்க்குயிராய்
      நிற்பா ரோடு குணகுணியாய் நிற்பாய் பொற்பா ரடியார்க்கே
சீரார் திருவந் தருவாய்நின் றிருவாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே.    (1)

வாடுங்குழவிக் கிரங்கியிவண் வதித லெனக்கண் டிடக்கூட்டா
      மாதா முலைப்பா லுருக்கொண்டு வரல்போ லிருகண் மழைவார
நேடுமுயிர்கட் கிரங்கியரு ணிலைப்பே ருருவங் கொடுதோன்று
      நிமலத் தருவி னிடம்பிரியா நிறைப்பூங் கொடியே விரைந்தடியேஞ்
சாடும் புலக்கோ டறக்கருணைத் தனிமண் டொடுகூர்ங் கருவிகொடு
      சாய்த்துட் புனலை நின்னிருதாட் சலதி மடுக்கப் பாய்ச்சிமகிழ்
சேடு பெறவுஞ் செய்வாய்நின் செவ்வாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே.    (2)

கானார் கொன்றை முடிக்கணிந்த கடவுட் பெருமான் றிருவுள்ளக்
      கமல மலர வரமடவார் கடகக் கரமுண் டகங்குவிய
வானார் சகோரப் பறவைமுக மதியி னிலவென் றோடிவர
      வளைக்கை யிருந்த சுகம்பவள வள்ளத் தமுதென் றங்காப்ப
மீனார் தடங்கட் கலைமகடன் மேனி கருமைத் தெனநாண
      விரும்பும் பணியிற் பாதிகொள்வாள் விழைவை யறிந்து திருமகிழத்
தேனா ரிளவெண் மூரலெழுந் திருவாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே.    (3)

அருந்த வொருவெங் குருமழவுக் களிக்கு முலைப்பா லன்றியிவ
      ளமுதத் திருவாய் மொழியுமுயி ரளிக்கும் வெளிற்றென் பினுக்கென்றோ
பொருந்த விரைநா றுவளகத்திற் புல்லப் பொருந்தா தெனநினைந்தோ
      பொதியவ் வணியை நீத்துறுநின் புலவி தணித்துன் முகநோக்குங்
கருந்தண் கடனஞ் சருந்துபிரான் கழியன் பொருநால் வர்கடமிழ்க்குக்
      காணி கொடுத்த திருச்செவிகள் களிதூங் கிடமென் மழலைமொழி
திருந்து விருந்தூட் டிடுங்குமுதச் செவ்வாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந் தருகவே.    (4)

ஓங்குஞ் சிகரப் பொருப்பிறைவ னுயிரே யனைய திருத்தேவி
      யுவந்து கொங்கை நெரித்தூட்ட வுண்ட நறும்பான் மணநாற
வாங்கும் புணரிப் படைநெடுஞ்சூர் மாட்டுங் குழவிக் கூட்டியநின்
      மணிக்கண் முலைப்பா லக்குழவி வாய்முத் துவப்ப தானாறத்
தாங்குஞ் சிறைப்பைங் கிளிக்கருத்துந் தடித்த செருத்தற் சுரபியின்பாற்
      சலதி நாற் வெம்மான்வாய்த் தண்ணென் பவள நாறமதுத்
தேங்குங் குமுத மலர்நாறுஞ் செவ்வாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந் தருகவே.    (5)

வேறு.

 வெண்ணிறக் கோடுபடு முத்தமான் மட்சுவைய மிச்சிலி னழுந்துமுகளு -
      மீனமுத் தம்புலால் கமழும்வேய் முத்தமதன் விரிகொடுந் தழலின்முழுகு,
மொண்ணிறச் செஞ்சாலி முத்தங் கவைக்கா லொருத்தல்க ளுழக்கநெரியு -
      மூற்றங் கடாக்கரி மருப்புவிளை முத்தமிக லொன்னார் கறைக்கணளை யுந்,
தண்ணிறக் கந்திபடு முத்தம் பசப்புறுந் தறுகட் பொருஞ்சூகரத் -
      தாளுலவை முத்தமண் ணுழுதலிற் றேயுமிவை தரினுமெளி யேம்விரும்பேந்,
தெண்ணிறக் கொங்கையங் கும்பவள வல்லியொரு செம்பவள முத்தமருளே -
      திருவுறந் தையின்மருவு மொருபெருந் திருநினது செம்பவள முத்தமருளே.    (6)

அலைகொண்ட விப்பிவிளை முத்தமுவர் மூழ்குநற வம்போ ருகத்துமுத்த -
      மம்மைநின் சேடிய ரடித்துவைப் புண்ணுமிக் கவிர்முத்தம் வேள்குழைப்ப,
நிலைகொண்ட வுருவமுடை பட்டுதிரு மகளிர்கள நேர்முத்த மகிழ்நர் தங்கை -
      நீட்டியிறு கத்தழு விடுந்தொறு மதுக்குணுமிந் நீர்முத்த மெமதெமதெனா,
விலைகொண்ட பைந்துழாய்க் கொண்டன்முத லிமையோ ரெடுத்துரைப் பாரதன்றி -
      யிடைபடுப் புண்ணுங் கரட்டோ டிரட்டைபடு மிவைசற்றும் யாங்கொளேம்போற்,
சிலைகொண்ட கைத்தலத் தெம்பர னுவந்தநின் செம்பவள முத்தமருளே -
      திருவுறந் தையின்மருவு மொருபெருந் திருநினது செம்பவள முத்தமருளே.    (7)

வேறு.

பொன்னியல் புரிசடை மாணிக் கத்தொரு புறம்வளர் மரகதமே
      பொங்குங் கொங்கைக் கங்கைத் திருமகள் போற்றும் பொற்கொடியே
துன்னிய புவன மனைத்து முயிர்த்த சுடர்த்த விளங்கொடியே
      தொண்ட ருளத்தமு தூறிட வூறுஞ் சுவைமுதிர் தெள்ளமுதே
மன்னிய கருணா நிதியே மறைமுடி வளரும் பைங்கிளியே
      மடநடை பயிலும் வெள்ளன மேயொரு மாத்திரை நினைவார்க்கு
முன்னிய யாவுந் தருவாய் திருவாய் முத்த மளித்தருளே
      மூவுல கேத்து முறந்தை யிருந்தபெண் முத்த மளித்தருளே.    (8)

வேறு.

 சிவந்த தழலிடை விழுந்த மெழுகென நெக்குரு கிக்கனிவார்
      தெளிந்த வுளமுற நலஞ்செ யிருபத பத்ம நிறுத்திடுவாய்
நிவந்த சடையிடை வளைந்த மதியுர கத்தை முடித்திடுவார்
      நிறஞ்நெய் திருவுடல் பகிர்ந்து மகிழும தர்த்தகடைக்கண்மினே
தவந்த னளவில புரிந்தொர் மலையிறை பெற்றமடப்பிடியே
      தடங்கொ ளிருமுலை சுமந்து வருமொர்ப சுத்தவெழிற்கொடியே
யுவந்தென் மனனிலு முறைந்த களிமயில் முத்தமளித்தருளே
      யுறந்தை நகர்குடி யிருந்த திருமகள் முத்த மளித்தருளே.    (9)

வேறு.

தகர மொழுகு குழலு நுதலு மொழுகு மருளி னக்கமுந்
      தவள நிலவு குலவு நகையு மிலகு மிருசு வர்க்கமும்
பகர வரிய மலர்மெ லடியு மனனு ளெழுதி நித்தலும்
      பரவி யுருகு மடிய ரிடமு நெடிய புகழ்கொள் குக்குட
நகரி னிடமு மெனது ளகமு மருவி யுறையு முத்தமி
      நறவு குதிகொள் பொழிலி னளிகள் விளரி யிசைமி ழற்றிட
வொகர மகவு மிமய முதவு புதல்வி தருக முத்தமே
      யொளிசெ யுலக முழுது முதவு முதல்வி தருக முத்தமே.    (10)

5- முத்தப்பருவம் முற்றிற்று.

6  வாரானைப்பருவம்.

துண்டமதி வாணுதலி லிட்டபொட் டுங்கட்டு சுட்டியும் பட்டமும்பொற் -
      சூழ்சுடர் மணித்தோடு மிளஞாயி றுதயஞ் சுரப்பவிள நகைநிலவெழக்,
கண்டன நறுங்குதலை யரமாத ரோதியங் கற்பமலர் பொற்பவீழ்த்தக் -
      கான்மல ரடித்துணை யலம்புஞ் சிலம்புகள் கலின்கலி னெனக்களிப்போ,
டண்டர்பெரு மான்முடியை யின்னமுங் காணாத வன்னமும் பன்னுமறையு -
      மடியேங்க ளுள்ளமுந் தொடரநுண் ணிடைகிடந் தசையுமே கலையொலிப்ப,
வண்டடை கிடக்குமலர் தாழ்பொழிற் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.    (1)

அலகில்பல புவனப் பரப்பிற்கு மருளுதவு மம்மையுயர் வொப்பிகந்த -
      வப்பனார் மேனியிற் செம்பாதி கொண்டஞான் றவர்முடிக் கழகுசெய்யு,
நிலவுபொழி மதியினும் பாதிகொண் டெனமுடியி னித்திலப் பிறையிலங்க -
      நிகரறுஞ் சீறடியி லரமாதர் முடியணி நிழற்பிறைக் காடுமொய்ப்ப,
வுலவுநின் வதனமதி கண்டவெளி யேங்கட்கு முவகையம் பாவைபொங்க -
      வுறுகளி யனங்கணடை கற்குமா தொடரவடி யொண்டளிர் பையப்பெயர்த்து,
மலர்பொலங் கேழிஞ்சி சூழிருங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.    (2)

பாயிருட் குவைபொரிய வில்லிடுஞ் செம்மணிப் பாலுமோ லிகளுரிஞ்சப் -
      பட்டுதிரு மம்பொற் பராகமும் போக்கிநுண் பட்டாடை பலவிரித்தங்,
காய்தருஞ் செந்தளி ரடுக்கிமலர் தூயினி தமைத்தமெல் லணையம்மைநின் -
      னடியா ருளத்தினுந் தண்ணென்று மெத்தென்று னடிமலர்க் கருமைசெய்யுந்,
தேய்தரு நுழைச்சிற் றிடைக்கிரங் கியதெனச் செழுமணிக் காஞ்சியலறச் -
      சீறடி பயப்பெய ரெனக்கழறல் போலொளி சிறந்தநூ புரமலம்ப,
மாயிரும் புவனம் பழிச்சிருங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.    (3)

நறைவா யனிச்சமு நச்சுநம் மாலரு ணலங்கிள ரிரண்டுதிருவி -
      னயமதுர வெண்மக ளிருக்குமிட மேலெனவு நளிநற வருந்திமூசிச்,
சிறைவா யளிக்குல முழக்குங் குழற்றிருச் செம்மக ளிருக்குமிடமோ -
      தேற்றமது கீழெனவு மறிவிப்ப தேய்ப்பநின் சீறடியின் மேற்சிறந்த,
பிறைவா யுகிர்க்கண் டழைத்தோங்கும் வெண்மையொளி பெருகவத் தளிர்நறுந்தாள் -
      பெயர்க்குந் தொறுங்கீ ழலத்தகச் சேயொளி பிறங்கவெங் கண்களிப்ப,
மறைவாய் முழக்கறா வாழியொண் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.    (4)

திணிகொண்ட கணிமலர்த் தேனருவி பம்பவளர் செம்பொன்வரை யும்பர்குழுவிற் -
      சிவனென நகங்களுட் டலைபெற் றிருந்துநின் சீறடி பெறாமையாலுட்,
பிணிகொண் டழுங்கியெவர் நண்புறக் கொண்டியாம் பெறுவ மென் றாய்ந்துமுக்கட் -
      பெருமான் றிருக்கைநண் புற்றுக் குழைந்தொளி பிறங்கிநிற் பக்குலாவு,
மணிகொண்ட திருமணப் பந்தரிற் சுந்தரத் தம்மியிற் கற்சாதியோ -
      ரறிவெனற் கேற்புறப் பரிசித்து நின்றநின் னடிமலர் பயப்பெயர்த்து,
மணிகொண்ட மாளிகை மலிந்தசெங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.    (5)

வேறு.

திருவார் முளரி முகைகீளத் தேமாங் கனிக ளுகுத்துயர்ந்து
      செருக்கும் வருக்கைப் பழஞ்சிதறத் தென்னம் பழங்கள் விழமோதிக்
கருவார் கொண்டற் கணம்பிளிறக் கலக்கி மதியத் துடல்போழ்ந்து
      கவின்றாழ் மலர்க்கற் பகக்கோடுங் கடந்தா ழயிரா வதநால்வெண்
குருவார் கோடு முறியவண்ட கோள முகடு நாளமுறக்
      குழவுப் பகட்டு வாளைகுதி கொண்டு வெடிபோஞ் செழும்பழன
மருவார் மருதத் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.    (6)

பிஞ்சு மதிய முடிக்கணிந்த பெருமான் கயிலைப் பொருப்பில்வரம்
      பெறுவான் விரும்பி வணங்கியொளி பிறங்கக் கிடக்கு நெடுமால்போல்
விஞ்சு குருச்செம் மணிகுயிற்றி விண்ணத் துலவும் பனித்துண்ட
      மிலையப் புரிசெய் குன்றோங்க வெண்ணித் திலத்தின் சுதைதீற்றி
நஞ்சு பழுத்த நயனியர்வெண் ணகைமா றொருகோ சிகனியற்று
      நலங்கொ ளொளிபோ லண்டதச்ச னன்கு சமைத்த மாளிகையில்
மஞ்சு துயிலுந் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.    (7)

ஒருகா ரணன்ற னடிமுடிகண் டுயர்வான் புகுந்த துழாய்க்கேழ
      லொப்ப வவனி யகழ்ந்துமறை யோது மனம்போல் விண்போழ்ந்து
குருகார் பொய்கைத் தோணிபுரக் குரிசி லேயென் றுய்திறத்தார்
      கூறு மதற்குத் தகவடியார் கூட்டஞ் சுலவ விருந்துமிகப்
பெருகா றேற வம்பிவிடும் பிள்ளை போல விமானமுடன்
      பெருவெண் மதிய முலவமுழுப் பிறங்க லுருட்டிப் பெருக்கெடுத்து
வருகா விரிசேர் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.    (8)

 கள்ளை யருந்தி யுவட்டெடுத்துக் கண்டந் திறந்து பாண்மிழற்றிக்
      காளைச் சுரும்ப ரடைகிடக்குங் கருந்தா ரளகக் கற்பகமே
வெள்ளை மயிற்குஞ் செம்மயிற்கு மேலாய் விளங்கும் பசுமயிலே
      மெய்யே யுணரு முளத்தின்பம் விளக்குங் கனியே மடவன்னப்
பிள்ளை நடைக்கும் வழுவுநிறீஇப் பிடியி னடக்கும் பெண்ணமுதே
      பேரா னந்தப் பெருங்கடலே பிறங்க வறங்கொண் மனைதோறும்
வள்ளை மலியுந் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.    (9)

என்றே புரையு மணிப்பணிபூண் டெழும்பூங் கொம்பே வருகநினைந்
      தேத்து மடியார் பிழையைமறந் தேனோர் குணமு மிகந்தவிளங்
கன்றே வருக மெய்ஞ்ஞானக் கனியே வருக வானந்தக்
      கரும்பே வருக நரிப்பகன்று கடையே னுயவாட் கொண்டகுணக்
குன்றே வருக வருள்பழுத்த கொடியே வருக முடிவின்மறைக்
      கொழுந்தே வருக செழுந்தண்மதி கூடுங் குவட்டுப் பொலங்கிரிபோன்
மன்றேர் நிலவு திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.    (10)

6. வாரானைப்பருவம் முற்றிற்று.

7. அம்புலிப்பருவம்.

மறைமேவு மத்திரி தவத்திலோங் கும்பரவை மகிழ்வுகொண் டார்ப்பவந்து
      வாய்ப்பவள நகைநிலவு தோற்றியிர வலர்முக மலர்த்தியொண் கங்கைதாங்கி
யுறைமேவு மிந்திரவி னேர்வா னிடங்கலந் தொருபுலவ னைத்தந்துவந்
      தொண்பரிதி மறையவங் குழையொடு விளங்கிவண் டுறுபங்க யங்கள்குவிய
நிறைமேவு கலையுடைக் காந்திமதி யென்றுபெயர் நிறுவிநின் றாயாதலா
      னிகரென வறிந்தம்மை வம்மென வழைத்தனள்வெண் ணித்திலச் சங்கமெங்கு
மறைமேவு துறையூ ருறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்ட ரண்டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (1)

மணிகிளர் நெடும்பாற் கடற்றாயை நேயமொடு மந்தரத் தந்தை புணர
      வந்துமலை மகவெனப் பெற்றாய் விளங்குமெம் மானிடக் கண்ணாயினாய்
திணிகிளர் தரச்சிவந் தெழுமாவை யத்துவரல் செயுமாத வன்பின்வந்தாய்
      திகழ்பசுங் கதிர்தழைந் தெழுபுகலி யம்புலவர் தெள்ளமுது கொள்ளநின்றாய்
பணிகிளர் முடித்தலை பரிக்குமுல கத்தளவில பல்லுயிர்ப் பயிரளித்துப்
      பரிவினின் றாய்தெரியி னின்னுநின் பண்பம்மை பண்பினுக் கொக்குமாமிக்
கணிகிள ரறந்திக ழுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (2)

 சேருமுய லொன்றினை வளர்ப்பைநீ பரசமய சிங்கத்தை யிவள்வளர்த்தாள்
      சிறுமானை யுடையைநீ யிவளுயிர்க் குயிராய்த் திகழ்ந்தபெரு மானையுடையாள்
சாருங் களங்கனீ யிவளெக் களங்கமுஞ் சாரா வியற்கையுடைய
      தன்மையள் பிறப்பிறப் பென்னுங் களங்கமுந் தன்னடிய ருக்கொழிப்பா
ளோருமறி வுடையவல் லுநரும்வல் லாருநீ யொவ்வாயெனத் தெரிவர்கா
      ணுளத்திது மறைத்திவ ளுனைக்கடி தழைத்திட வுஞற்றுமுன் றவமென்கொலோ
வாருமமு தப்பணை யுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (3)

மகவா யுனைப்பெற்ற பாற்கடலை யிவடந்தை மரபிலொரு வரையுழக்கி
      மகிழுநின் மனைவியரை யிவணகரி லொருசேவல் வல்லைபொறி போற் கொறிக்குந்,
தகவாக நீகுடையும் வானதியை யிவடிருத் தாளொன்று மேகலக்குந் -
      தாரணியொடு நீயுமொளி வட்கிட வியற்றவிவ டங்கையொன் றேயமையுமான்,
மிகவான் மிசைத்துருவன் விடுசூத் திரப்பிணிப் புண்டுமெலி கின்றதிங்காள் -
      வேண்டுமிவ டுணைநினக் கிஃதெண்ணி வருவையேன் மெய்யருள் பெற்றுய்யலா,
மகவாவி சூழ்தரு முறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (4)

ஏரணவு பாற்புணரி வடவா னலத்தொடு மியைந்துபன் னாட்பயின்றங் -
      கிமையவர் மதித்திட விடத்தொடு மெழுந்தனை யிருங்ககன முகடுசென்று,
காரணவு பாந்தளங் காந்துற விழுங்கிக் கடித்துக் குதட்டியுமிழக் -
      கறையூறு முடல்பட்டு நின்றனை யுனக்குற்ற கயமையா வுந்தெரிந்துஞ்,
சீரணவு மணிமுடிப் பல்லா யிரங்கோடி தேவர்சூழ் நிற்பநின்மேற் -
      றிருக்கடைக் கண்பார்வை செய்துவா வென்றம்மை திருவாய் மலர்ந்ததருள்கா,
ணாரணவு வாட்கண் ணுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (5)

 நறமலி கடுக்கையணி யெம்பிரான் யோகுபுரி ஞான்றுமல ரொன்றிட்டவே -
      ணம்பியுடல் சுவைகண்ட கனலிகால் வழியெழீஇ நடுவுடல் சுடக்கறுத்த,
நிறமருவு மதுபுகல நாணிமறு வென்றுபெயர் நிறுவியிர வின்கண்வருவாய் -
      நிறைதவக் குரவற் பிழைத்துக் கொடும்பாவ நீணில நகைக்கவேற்றாய்,
மறமருவு வீரனாற் றேய்ப்புண்டு காய்ப்புண்டு மாய்ப்புண்ட நீயம்மைபால் -
      வரிலக் களங்கமும் பாவமுந் தேய்வுநொடி மாற்றிநன் குறவாழலா,
மறமகள் சிறந்தரு ளுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (6)

ஒளிபாய் நிறத்திருச் சேடியர்க ளாலய மொருங்கடைப் பதுவுமெம்மா -
      னுறுசடைக் கங்கையொ டுறைந்ததுவு மெண்ணினிவ ளுனைவா வெனத்தகாதாற்,
களிபாய் மனத்தோ டழைத்துநின் றதுபெருங் கருணையென மன்றவுணராய் -
      கதிரவப் பகைவரவு கண்டிவ ணகர்ச்சேவல் காட்டுமுப காரமுணராய்,
வளிபாய் விசும்பலையு மெய்ப்பாற விவணகர் மலர்ச்சோலை புரிவதுணராய் -
      மதிக்கடவு ளென்றுபெயர் வறிதுகொண் டாய்நறவு வழியூற் றெழுந்துபாய,
வளிபாய் கருங்குழ லுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (7)

காயப் பரப்பிலுனை விக்கிட விழுங்குங் கடுங்கொடிய தீயவரவங்
      கருணைப் பிராட்டிபெறு குழகன்மயில் காணூஉக் கலங்கியிவண் வரவஞ்சிடு
நேயத் துடன்குலவி யொருகுஞ் சரத்தோன்ற னெடிதிடுந் தன்சாபமு
      நீக்கிக் களங்கமும் போக்கித் துளங்குமா நெடியாது செய்வன்மெய்யே
பாயப் பிருஞ்சடைத் தம்பிரான் றரணியொடு பாரித்த வாழியாக்கிப்
      படருநின் வட்டவுட றேயா தளிக்குமிவள் பாததா மரையடைந்தா
லாயத் துடன்குல வுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.    (8)

நெடியவனு நெடியநான் முடியவனு மிந்திரனு நிமிரிவர் முதற்பல்சுரரு
      நிலவாக மத்தின்வழி பூசித்து நேசித்து நிறைபேறு பெற்றுயர்ந்த
வடிவுடைய விப்பெருந் தலமான் மியம்பேசின் மாசிலார் நச்சுவிச்சு
      வப்பிரா னுறைகின்ற காசிக்கும் வாசியென வாசிக்கு மறைகள்கண்டாய்
தடியுடை முகிற்குலம் பயில்வா னொரீஇயம்மை சன்னிதா னத்துவந்து
      தாழ்ந்துபின் சூழ்ந்துவினை போழ்ந்துமிக வாழ்ந்துநீ தண்ணளிக் குரிமை பெறலா
மடியவருளம்புகு முறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.(9)

பாணித்து நீநிற்ப தறியா ளறிந்திடிற் பாட்டளிக் கூட்டம்வீழப்
      பாயுங் கடாங்கவிழ்க் குங்கவுட் குஞ்சரப் பகவனை விடுப்பளவனோ
வாணித் திலஞ்சிதற நினையொருகை பற்றிநால் வாய்க்கவள மாக்கிவிடுமால்
      மற்றிளவ லுக்குரை செயிற்கொடிய வேல்விடுவன் வல்லையோ வதுதாங்கநீ
நாணித் திரிந்துழல வுன்னைமுன் றேய்த்தவலி நந்துதாள் வீரனுமுள
      னாடியிவை முழுதுமா ராய்ந்துவரி னுய்குவை நலம்பெறுவை யாதலாலோங்
காணிப்பொன் மாளிகை யுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (10)

அம்புலிப்பருவம் முற்றிற்று.

8. அம்மானைப்பருவம்.

 நிறைதரு முழுக்கலை மதிக்கடவுள் வாவென்ன நெடியாது வரவெடுத்து
      நெடியசெங் குழைபாய் கருங்கண் களிப்புற நிமிர்ந்தபே ரழகுநோக்கி
மிறைதரு மனத்தொடுன் றமர்நாடு வார்யாம் விளித்தபோ திங்குவரலாம்
      விண்ணகத் தொல்லெனச் செல்லென வெடுத்துமீ மிசையெறிவ தேய்ப்பவாய்ப்ப
வுறைதரு பசும்பொற் றசும்பொளி யசும்பூற வோங்குபொன் மாடத்தினொள்
      ளொளிபாய வெண்டிசையி லருவிபாய் வரைமுழுது மொழுகொளிய மேருவேய்க்கு
மறைதரு முறந்தைப்பெண் முத்திட் டழைத்ததிரு வம்மானை யாடியருளே
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே. (1)

நளியெறி செழும்பொற் றகட்டுநெட் டேட்டுநறு நளினமனை யாட்டிபாலின்
      னசையுறத் தழுவித் திளைத்தெழீஇ மீச்செல்லு நாயகப் பரிதியேய்ப்ப
வளியெறி முறச்செவி மறம்பாவு நாற்கோட்டு மால்யானை குளகுகொள்ள
      வானாறு தேனோ றெனப்பொலிய வூற்றுதேன் மடைதிறந் தோடியெங்குங்
களியெறி மனத்தர மடந்தையர் பயின்றிடுங் கனகநகர் மறுகுபாய்ந்து
      கால்வைத் திருந்தொறு மிசுப்புற விசும்பிடை யசும்பொளிப் பொங்கர்காணு
மளியெறி யுறந்தைப்பெ ணவிர்பதும ராகப்பொன் னம்மானை யாடியருளே
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே. (2)

பாயொளிய செங்கையம் பங்கயத் தமரிளம் பைஞ்சிறை மடக்கிள்ளைமீப் -
      பற்பல தரம்பறந் துன்கையின் மீட்டும் பரிந்துவந் துறல்கடுப்ப,
மேயதிரை சூழக லிடப்பொறை பரிக்குமொரு விறலாமை முதுகுளுக்க -
      விரிதரும் பஃறலை யனந்தன் படங்கிழிய வெற்றித் திசைக்களிறெலாங்,
காய்சின முகுத்துப் பிடர்த்தலை கவிழ்த்தடற் காத்திர மடித்துநிற்பக் -
      கடலள றெழப்பரிய கனகாச லம்பொருவு கதிர்மணித் தேர்செல்வீதி,
யாய்தமி ழுறந்தைப்பெண் முழுமரக தக்கோல வம்மானை யாடியருளே -
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.    (3)

செந்நிற விதழ்க்கமல மலரின்மே னின்றுபொறி செறிவண்ட ரெழுவ தேய்ப்பச் -
      செந்நெற் படப்பைச் செழும்பழன நின்றெழுஞ் சினைவரால் விண்ணகத்துப்,
பொன்னிறக் காமதே னுவின்மடித் தலமுட்டு போதுகன் றென்றிரங்கிப் -
      பொழிநறும் பால்வெள்ள மடையுடைத் தோடியலை பொங்கிநறு நாற்றம்வீசி,
மின்னிற மருப்புப் பொருப்புக ணெடுந்தொண்டை மீமிசை யெடுத்துநீந்த -
      மிளிர்பொற் கொடிஞ்சியந் தேர்தெப்ப மாகநெடு வீதியிற் புக்குலாவு,
மந்நிற வுறந்தைப்பெ ணவிருமுழு நீலப்பொ னம்மானை யாடியருளே -
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.    (4)

விரிமல ரிருந்தவர் முதற்றுணைச் சேடியர்கள் வீசுமம் மனைகைபற்ற -
      வேண்டிவல மோடியு மிடத்தோடி யுந்திரிய மேவுமம் மனைசெல் வழிநின்,
வரிமதர் மழைக்கண் டொடர்ந்தோட விருசெவி வதிந்தபொற் குழைவில்வீச -
      வண்கைவளை யோலிட் டரற்றக் கருங்குழலில் வரியளிக் குலமுமார்ப்பக்,
கரியமுது மேதிக ளுழக்கச் சினந்தெழுங் காமரிள வாளையெழில்சேர் -
      கற்பகக் காவின் கழுத்தொடி தரப்பாய் கருங்கழனி புடையுடுத்த,
வரிலறு முறந்தைப்பெ ணாணிப்பொ னம்பவள வம்மானை யாடியருளே -
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.    (5)

வேறு.

வெதிர்படு தோளிணை மங்கையர் நம்பால் வீணாள் படுமென்று
      மென்பெடை யைத்தழு விக்குயில் புணரும் விதம்பா ரீரென்று
மெதிர்படு வேனிற் பருவமி தெற்றுக் கெய்திய தோவென்று
      மிளமென் கொம்பர்த் தழுவியு நகைசெய் தெழிலுட றிருகல்செய்துங்
கதிர்படு கொங்கை திறந்துந் தங்கள் கருத்தை யுணர்த்தமரீஇக்
      காதல ரொன்று செயப்பொங் கோதைக் கவின்மே கலையொடுவண்
டதிர்படு பொழில்சூழ் கோழியில் வாழ்மயி லாடுக வம்மனையே
      யகிலமு நிகிலமு முதவிய திருமக ளாடுக வம்மனையே.    (6)

பற்பல மணிகள் குயிற்றிய செம்பொற் படரொளி யடரூசற்
      பருநித் திலமணி நீள்வட முயரிய பைங்கமு கிற்புனையா
விற்பொலி நுதலிய ரோடிள மைந்தர்கள் மிகுமுவ கையினேறி
      மெல்ல வசைத்தலு மக்கமு கசையா விண்ணுல கத்தமருங்
கற்பக நற்கொம் பிற்புனை யூசல் கலித்தா டிடவிரைவிற்
      கவின வசைப்ப விறும்பூ துற்றுக் கடவுண்மி னார்மகிழு
மற்புத வளமலி கோழியில் வாழ்மயி லாடுக வம்மனையே
      யகிலமு நிகிலமு முதவிய திருமக ளாடுக வம்மனையே.    (7)

வேறு.

பாருந் துளைத்துக் கீழ்போகிப் படர்வான் முகடு திறந்துமிசைப்
      பாய்ந்து பொலியுங் கோபுரத்திற் பசும்பொற் றகட்டிற் பதித்தநிறஞ்
சேரு முழுச்செம் மணிப்பிரபை திகழத் திரண்டு தழைப்பதனாற்
      செழுந்தண் டுளபச் சூகரமுந் திறம்பா மறைக ளொருநான்கு
மோரு மனமுந் தெரிவரிய வொருவ ருருவ மிஃதெனவே
      யும்பர் முதலோர் கரங்கூப்பி யுருகித் துதிக்கு மரவொலியே
யாரு முறந்தைப் பெண்ணரசி யாடியருள்க வம்மனையே
      யடியா ருளத்துக் குடியானா யாடியருள்க வம்மனையே.    (8)

தெருள்சே ருள்ளத் தொருமூவர் திருவாய் மலர்ந்த திருப்பாடல்
      திகழ்வெண் சுதைமா ளிகைமீது தீபம் பொலிய வதன்முனுறீஇக்
கருள்சே ரிம்மை வினையொழிப்பார் கருதி யுருவேற் றிடக்கண்டு
      கயிலைப் பொருப்பி லெழுந்தருளிக் கழறிற் றறிவார் செம்மேனிப்
பொருள்சேர் பெருமாற் கினியவுலாப் புறங்கேட் பித்த துறழுமெனப்
      புலவர் மகிழ்ந்து கொண்டாடப் பொங்குஞ் சைவத் தன்புதழைத்
தருள்சே ருறந்தைப் பெண்ணரசி யாடியருள்க வம்மனையே
      யடியா ருளத்துக் குடியானா யாடியருள்க வம்மனையே.    (9)

மாடு மயில்க ணடமாட மாதர் குழலில் வண்டாட
      மனைக டொறும்வெண் கொடியாட மலர்ச்செங் கொடியு முவந்தாட
நீடு துறைக டொறுங்களிறு நிலவும் பிடியு நீராட
      நீறு புதைத்த முழுமேனி நிகரி லவருங் கூத்தாடக்
காடு புரிமென் குழல்சுமந்த கருங்கண் மடவார் குனித்தாடக்
      கண்டோர் மனமுஞ் சுழன்றாடக் கவின்செ யிவைகண் டியர்வருங்கொண்
டாடு முறந்தைப் பெண்ணரசி யாடி யருள்க வம்மனையே
      யடியா ருளத்துக் குடியானா யாடி யருள்க வம்மனையே.    (10)

8 - அம்மானைப்பருவம் முற்றிற்று.

9  நீராடற்பருவம்.

அங்கட் பிசைந்தகட் டெழுபசித் தழன்முழுகி யழுபுலிக் குருளையுண்ண -
      வன்பினின் சுவைநனி பழுத்துவட் டெறியுமமு தனையபால் வெள்ளமருளுந்,
திங்கட் கொழுந்தணி பிரானெனப் பரசமைய சிங்கப் பறழ்க்குவயிறு -
      தேக்கியெதிர் கொள்ளவின் பாலருளு மம்மைநின் சேடியர்கள் சூழநின்று,
வெங்கட் கடுங்கொலைய வேழக் குழாத்தையிகல் வெற்புக் குழாத்தொடுங்கீழ் -
      மேலுற வுருட்டித் திரைக்கைகொடு பொன்னுமழன் மின்னுமணி யுந்தரளமும்,
பொங்கக் கொழித்துச் செழித்துச் சுழித்துவரு பொன்னிநீ ராடியருளே -
      பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே.    (1)

 முற்றுங் கயற்றொகுதி கட்குடைந் திரியுமிள மோட்டாமை புறவடிக்கு -
      முன்னிலா தோடும்வியல் வால்வளை களங்கண்டு முரிதரும் வராலலவனு,
மற்றுங்கணைக்கான் முழந்தா ளினைக்கண்டு மறுகுமென் றுரைசெய்தமர -
      மாதர்கொண் டாடவவர் தொகுதிநடு நின்றுநல மருவுமலை யரையன்மகணீ,
பற்றுங் குலைக்கண்வளர் கந்திகள் கழுத்திறப் பாகற் பழங்கள்கிழியப் -
      பந்திவளர் தேமாங் கனிக்குலை முறிந்திடப் பரிதிமணி வயிரமுத்தம்,
பொற்றிரைக் கையாலெடுத்தெறிந் தார்த்துவரு பொன்னிநீ ராடியருளே -
      பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே.    (2)

திருமலர்க் கார்க்குழ லவிழ்ந்துசை வலமெனத் திகழ்தரக் குழையடர்ந்து -
      செறிகட் கருங்குவளை செங்குவளை பூப்பநகை செய்யொளியின் முழுகியாங்குக்,
குருமலர் முருக்கிதழ் விளர்ப்பநுழை நுண்ணிடைக் கொடிதுவண் டொசியவமரர் -
      கோற்றொடி மடந்தைமார் மொய்ப்பவடி யாருளங் குடிகொண் டிருக்குமம்மே,
வெருவவரு வெம்புலியை யம்புலியின் மோதியுகண் மீனையம் மீனின்மோதி -
      வெள்ளைக் களிற்றொடு கருங்களிறு முட்டவியன் விண்ணத் தெடுத்தெறிந்து,
பொருகட லகட்டைக் கிழித்துச் சுழித்துச்செல் பொன்னிநீ ராடியருளே -
      பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே.    (3)

 தண்ணற வொழுக்கிமக ரந்தஞ் சிதர்ந்தசெந் தாமரை மலர்க்கானினுட் -
      டாவில்பொற் புடைநடைக் கன்னியன் னப்பெடை தயங்குவது போலுமெழில்சே,
ரொண்ணிற வுடுக்கண நடுப்பொலியும் வெண்ணில வுடுத்தெழுந் திங்கள்போலு -
      முறுதுணைச் சேடியர்கள் சூழநடு நின்றிமய வுயர்வரைத் தோன்றுபிடியே,
மண்ணிறை யிரப்பவொரு முனிவாய் நுழைந்துசெவி வருகங்கை போலாதுவிண் -
      வளரிறை யிரப்பவொரு முனிகமண் டலநின்று வார்ந்தளவி லுயிர்வளர்த்துப்,
புண்ணியம் பூத்துலகி லெஞ்ஞான்று மன்னிச்செல் பொன்னிநீ ராடியருளே -
      பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே.    (4)

 கயல்பாய் கருங்கட் டுணைச்சேடி மார்களிரு கைமருங் குறநின்றுசெங் -
      கமலக்கை யானினது திருமேனி வருடவொளி காட்டரிச னப்பொடியுமெல்,
லியல்பாய் நறுங்குங்கு மப்பொடியு நானமு மிழுக்குதக ரமுநனியளைஇ -
      யேர்பெறக் குடைதோறு மம்மணமு மம்மைநின் னியற்கைமண முந்தழைப்ப,
முயல்பாய் பனித்துண்ட மாலைப் பிராற்கிகலி முன்வந்த தென்றுவெங்கண் -
      மூரித் தடக்கைமத வானையை யுருட்டிவிட மூண்டெழத் தந்ததென்று,
புயல்பாய் நெடுங்கடலை மோதியதி லிட்டுமகிழ் பொன்னிநீ ராடியருளே -
      பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே.    (5)

வேறு.

அம்ம வடுக்கற் பொறையாற்றா தம்ம வோவென் றரற்றுமிடை
      யயில்வே லனுக்கி யம்பலைக்கு மங்கண் மடவார் பயில்பொழிற்கண்
விம்மு கருக்கொள் குயினதிர்ந்து விரியுஞ் சினையை மடக்கியதன்
      மீது தவழ்த லைந்தருக்கள் விதிர்ப்ப வடர்ப்ப தாலுமெரி
தும்மு நுதிவாட் பகையுடன்மேற் றோற்ற முடைய தாலுநெடுஞ்
      சுரர்கோ னூர்தி தனைநிறுவித் துனிசெய் யாமற் றகைதல் பொரூஉம்
பொம்மல் வளஞ்சே ருறந்தைநகர்ப் பொன்னே புதுநீ ராடுகவே
      புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே.    (6)

களிமிக் குடன்று வீரமணங் கல்லிற் கமழ வினனுடலக்
      கடறு புகுந்து திறல்வானங் கலந்து சூர்மெல் லியர்ப்புணரு
மொளிமிக் கவர்போல் வாளைதம்மி லுடன்று நடுமண் டபத்தூணத்
      துலவாப் புலவு மணநாற வுரிஞி யெழுந்து குலைக்கமுகி
லளிமொய்த் தொளிர்தே னடைகீறி யதன்வாய்ப் புகுந்து வான்யாற்றை
      யணுகிப் பன்மீ னொடுகலவி யன்பிற் புணர்ந்து விளையாடும்
புளினத் தடஞ்சேர் திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே
      புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே.    (7)

வருந்தி யுயிர்த்த வேற்றைநனி வருத்தம் புரியும் படையைநெடு
      மாலோர் பிறப்பி லாதரித்த வலிய பகைகண் டவன்முன்னோ
னிருந்த திணையிற் புகுந்துபகை யியற்றல் போலம் மான்மனையா
      ளில்லைக் கறித்துக் குதட்டிமக னெடுக்கும் படைக்கா டுழக்கியுயி
ரருந்து நமனை யடர்த்தவரு ளறிந்தெம் மான்பொற் சடைக்கடுக்கை
      யமருந் திணையுட் புகாதுகவை யடிய பிணர்க்கோட் டிணைமேதி
பொருந்து மருதத் திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே
      புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே.    (8)

உலகத் துயிர்கட் குணவாக்கி யுணவு மாகு மிதிற்கந்த
      முறாதென் பார்முன் தோன்றியசேய்க் கொருபேர் கந்த னெனலறியார்
பலரு மஃது நிற்கநமைப் பரிக்குங் குணத்தான் மிகுகந்தம்
      பரப்ப லாமென் றுனிக்குமுதம் பங்கே ருகமே முதன்மலரா
வலர்முத் தரும்பி மரகதங்காய்த் தடர்செம் பவளம் பழுத்துமிழு
      மந்தண் கந்திப் பொழினடுவ ணாவிப் புனற்கு மிக்கமணம்
புலர்தற் கரிதாய்ச் செயுமுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே
      புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே.    (9)

அங்கண் வருக்கைக் கனிவிரலா லகழ வகழக் குழிந்தாழ்ந்த
      வதுகண் டுட்சென் றொருகடுவ னவிருஞ் சுளைகொண் டெழும்வேலை
தெங்கிற் கவியொன் றுகுத்தபழஞ் செறிந்தவ் வழிமாற் றிடக்குருகுச்
      சிலம்போ வெனவுட் டிகைத்தனைத் தெளிந்து நீக்கி வெளிவந்து
தங்கு பிலத்து ணின்றுவழி தகைகற் சிதறி வந்திளைய
      தம்பி யொடும்போர் பொருதான்போற் றாயக் கடுவ னொடும்பொருஞ்சீர்ப்
பொங்கர் மலிந்த திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே
      புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே.    (10)

9. நீராடற்பருவம் முற்றிற்று.

10  பொன்னூசற் பருவம்

கதிர்விரவு வயிரக் கொழுங்கா னிறீஇப்பிரபை கஞல்பவள விட்டமிட்டுக்
      கங்குலை மழுக்குநித் திலவடம் பூட்டிக் கதிர்த்துலகம் யாவும்விற்க,
வதியுமா ணிக்கச் செழும்பலகை சேர்த்துநறு மலர்பெய்து மறையின்முடியை -
      மானப் புனைந்தமைத் தினிதினர மாதர்கள் வணங்கிநிற் கின்றனர்களால்,
மதிபக வெழுங்கவி ழிணர்ச்சூதம் வென்றுமருண் மாயச் சிலம்புகொன்று -
      மாமயி னாடவிவரு மைந்தரோ ரிருவரை மகிழ்ந்தெடீஇ வேறுவேறு,
புதியபொற் றொட்டிலிட் டாட்டும் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (1)

 வதிவுற்ற வெண்பனி துவன்றியொரு வெள்ளிமால் வரையென விளங்குமிமய -
      வரைவா யரிந்தெடுக் கும்பளிங் கனையநீர் வாய்ந்ததண் சுனையகத்து,
நிதியொத்த பூந்துணர்க் கொன்றையஞ் சிறுகாய் நிகர்த்தவரு வார்க்கருப்பை -
      நேரிணை யெயிற்றுமுட் டாட்டா மரைத்தொட்டி னிலையசைந் தாடலேய்ப்ப,
மதிசத்தி யாய்விந்து வாய்மனோன் மனியாய் மகேசையா யுமையாய்த்திரு -
      மகளாய்நல் வாணியா யின்னும்வே றாயிறை வருக்கியைய நின்றுயிர்க்குப்,
பொதிவுற்ற மலவிரு ளொளித்தின்ப மருள்புனிதை பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (2)

சீதமா மலர்வதியு மிகுளைமா ரிருவருஞ் சேர்ந்துபொன் னூசலாடித்
      திகழ்வதென நின்றிருக் கண்கள்பொற் றேடுறு செழுங்கா தளாவியாடத்
தாதளா வியநறுந் தாமரை யிருக்குநின் றன்னெழில் விளக்கியாங்குத்
      தளிர்புரை நின்கர தலங்குடி புகுந்தவேர் தரும்பசுங் கிள்ளையாட
வேதன்மா லறியாத நாதனார் வாமத்து வீற்றிருக் கின்றதாலவ்
      வித்தகர் முடிக்கொன்றை யீன்றகனி யொருபால் விளங்கிக் கிடத்தலொத்துப்
போதளாய் நிறைகருங் கூந்தற் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (3)

செங்கேழ் மணிப்பலகை நடுவணீவதிதன்முன் றிருவால வாய்ச்செழியர் கோன் -
      றீதற வுஞற்றுசெந் தீநடு வெழுந்தவத் திருவந் தெரித்துநிற்பச்,
சங்காழி தங்கிய குடங்கையா னெடுநறுஞ் சததள மலர்ப்பொகுட்டிற் -
      றங்குவோ னிற்றைவரை நாடியுங் காணரிய தம்பிரான் கழிதலை யெடீஇக்,
கொங்கார் கதுப்பினர்கள் பாலிரந் தானெனுங் கூற்றினுக் கையமெய்தக் -
      குலவுமொரு முப்பத் திரண்டறமு மோங்கவருள் கூர்ந்துகரை கொன்றிரைத்துப்,
பொங்கோத வேலையுல குய்யப் புரிந்தபெண் பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (4)

ஓங்கொளிநம் மகிழ்நனார் தாமரை யிருக்கைகொண் டியோகத் திருந்தவந்நா -
      ளுற்றபல் லுயிரெலா முறுபோக மில்லா துணங்குத லறிந்துவானோர்,
வீங்குமயல் புரிதரத் தூண்டவந் தானைநுதல் வெந்தழலி னாற்கனற்றி -
      மேவுமரு ளாற்பின்பு நம்மைப் புணர்ந்தின்ப மிகுமுயிர்க் கருளினாரால்,
நீங்கியிஃ தின்னுமொரு காலக் குணங்கொள்ளி னீடின் புயிர்க்கருளவே -
      ணினைவுஞ் செயானியா மேமயல் புரிந்திடுவ நேர்ந்தெனக் கொண்டதொப்பப்,
பூங்கணை கருப்புவிற் றாங்கியகை யம்பிகை பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (5)

எண்ணுதற் கரியபல புவனப் பரப்பெலா மினிதுதரம் வைத்துயிர்த்து -
      மிளமுலைகள் சரியாது கண்கள்குழி யாதுமல ரேந்துகூந் தலும்விளர்ப்பை,
யண்ணுத லுறாதிளமை நீங்காது கன்னியே யாகியெஞ் ஞான்று முண்ணெக் -
      கள்ளூறு மன்புடைய வடியருக் கமுதூறி யானந்த மாகுமம்மே,
கண்ணுத லுடைப்பரம யோகியுழை யொன்றுசெங் கைக்கொண் டிருத்தல்போலக் -
      கதிர்விரவு கோற்றொடி புனைந்துதளிர் வென்றழகு காட்டுமங் கைத்தலத்திற்,
புண்ணியக் கிளியொன்று கொண்டபரி பூரணீ பொன்னூச லாடியருளே -
பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (6)

ஒருவார் பெருந்தூ ணகட்டைக் கிழித்துரறி யோங்கிரணி யப்பெயரினோ -
      னுடல்வகிர்ந் தெழுநர மடங்கல்வலி செற்றெழுந் துலவுபிர ணவகளிறும்விண்,
டருவாளி வேண்டமுனி குண்டிகை கவிழ்த்துநதி தந்தவொரு கோட்டுமோட்டுத் -
      தவழ்கடாக் களிறுங்கை வளருங் கரும்பினைத் தக்கவுண வாம்வழக்கால்,
வெருவாது கவரவரு மென்றுமஃ தன்றியும் வேழமென் பெயர்பெற்றதால் -
      வெகுளுமென வெண்ணியு மவைகூட் டுணுங்கால் விலக்கத் தரித்ததேபோற்,
பொருபாச மங்குசங் கொண்டபரி பூரணீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (7)

தேங்கொளிய வெள்ளித் தசும்புடைந் தாலெனத் திகழ்முகை யுடைந்துமலருஞ் -
      செறிவெள் ளிதழ்த்தா மரைப்பனுவ லாட்டிபொற் றிருவூசல் பாடியாட,
வாங்குகழை விற்குமர னைத்திரு குளநடு வயங்குகட் டாமரையினான் -
      மாட்டிய பிரான்றுகிர் பழுத்தனைய சடைமுடி வயங்கத் துளக்கியாட,
வோங்குவரை மீதுநரல் வேயுகுத் திடுமுத்த மொளிர்தல்போற் பொம்மன்முலைமே -
      லொழுகெழிற் றோள்புனைந் தவிர்முத்த மாலைதாழ்ந் துலவிவில் வீசியாடப்,
பூங்கொடி மருட்டுநுண் ணிடையாட வம்மைநீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (8)

 பேழ்வாய்த் தரக்கரவு பயிறலா லுடைதலை பெருந்தழ லிருத்தலாற்றேன் -
      பெய்யிதழி யுழையுறைத லாற்கமட மோடறல் பிறங்கலாற் சுரிவளைவிடம்,
வாழ்வாய தாற்குறிஞ் சித்திணைமு னைந்திணையு மன்னுதன் னுட லமைத்த -
      மகிழ்நனே போலிடை மடங்கறோள் வேய்கற்பு வாரழல் முலைக்கோங்குமை,
சூழ்வார் குழற்கான் றிருக்குமான் பொற்கவுட் டூயநீர் நிலைவில்வேழஞ் -
      சுடர்படைச் சங்குநகை முத்தமிவை முதலாத் தொகுத்துரு வமைத்தவம்மே,
போழ்வாய்ந்த மாவடுக் கண்ணெம் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (9)

தாவிலொளி மீனுமணி நூபுரம் விராவுபொற் றாமரைத் தாளுமருணன் -
      றன்னிளங் கதிரொத்த செம்பட் டுடுத்தித் தயங்குமே கலைநுணிடையு,
மாவிய னறுந்தளிர் மருட்டிவர தாபயம் வழங்குசெங் கையுமெய்ஞான -
      மடைதிறந் தொழுகுமிரு கொங்கையு மிலங்குதிரு மங்கலச் சங்கமிடறுங்,
காவிநிகர் கருணைபொழி விழியுமுத் தணிகவின் காட்டுநா சியும்வள்ளைநேர் -
      கதிர்மணித் தோடுடைக் காதுமிள மூரலுங் கமலமுக மும்பொலிதரப்,
பூவின்மட வார்பரவு காந்திமதி யம்மைநீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.    (10)

10  பொன்னூசற்பருவம் முற்றிற்று.
* ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று.

Related Content

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

திருக்குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்

திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்