logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

(மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை)


பாயிரம்

விநாயகக் கடவுள் வணக்கம்.

மாமேவு வான்பிறை முடிப்பிறை யிரண்டென்ன வாய்க்கடைத் தோற்றியவிரு -
மருப்பிரண் டென்னவங் கைக்கோ டிரண்டென்ன மார்பின் முத்தாரமென்னப்,
பாமேவு பேருதர பந்தமென வரைசூழ் படாமெனத்தாளின் முத்தம் -
பதித்தகழ லெனவிரவ மேலோங்கு பேருருப் பண்ணவனை யஞ்சலிப்பா,
மேமேவு ஞானசபை யிறைவர்தம் மேனியி னிணங்குற வெழுப்புலகெலா -
மென்னுமறை யாதியாக் கொண்டவ ருயிர்க்கருளு மியல்பனைத் துந்தெரித்து,
நாமேவு மம்முதலொ டொன்றவினை யுருபுதொக நான்கனடி யாதிசெய்து -
நாற்சீரி னானெறி விளக்கியொளிர் சேக்கிழார் நற்றமிழ்க் கவிதழையவே. (1)

குருவணக்கமும், அவையடக்கமும்.

ஓங்குகயி லாயபரம் பரைநந்தி யடிகட் குறுமரபெட்டாவது*பிற் றோன்றலா யெங்க -
ளுயர்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவற் குற்றபத்தொன் பதாவது**முற் றோன்றலாய்ப் பொலிந்து,
தேங்குசிவப் பிரகாச முதலியவாய் மலர்ந்து திகழுமா பதிசிவனே குன்றையுற மேவித் -
திருந்துமேர் வளங்கொண்டு பெருமையின்மேலாகிச் சிறத்தலாற் செம்மேனிக் குமரவே ளொத்தும்,
பாங்குபெறத் துதிக்கையொடொர் கோட்டத்த னாய பயிற்சியினக் குமரவே டிருத்தமைய னொத்தும் -
பரவுசேக் கிழானெனும்பேர் பரித்தலினக் கணேசப் பண்ணவனை யினிதுயிர்த்த திருத்தாதை யொத்தும்,
வீங்குபுகழ் படைத்தவருண் மொழித்தேவன் புராணம் விரித்துரைத்தா னவனடிதாழ்ந் தென்னறிவிற் கேற்ப -
மேயபிள்ளைத் தமிழெனவொன் றுரைப்பலஃ தறிவான் மிக்கவர்தங் குழாத்தினுக்கு மிக்கநகை தருமே. (2)


* பிற்றோன்றல்: திருநந்திதேவர், சனற்குமாரதேவர், சத்தியஞானதரிசனிகள், பரஞ்சோதிமஹாமுனிவர், மெய்கண்டசிவாசாரியார், அருணந்திசிவாசாரியர், மறைஞானசிவாசாரியர், உமாபதிசிவாசாரியர்.
**முற்றோன்றல்: அருணமச்சிவாயர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாயமூர்த்திகள், மறைஞானதேசிகர், அம்பலவாணதேசிகர், உருத்திரகோடிதேசிகர், வேலப்பதேசிகர், முற்குமாரசாமிதேசிகர், பிற்குமாரசாமிதேசிகர், மாசிலாமணிதேசிகர், இராமலிங்கதேசிகர், முன்வேலப்பதேசிகர், பின்வேலப்பதேசிகர், திருச்சிற்றம்பலதேசிகர், அம்பலவாணதேசிகர், சுப்பிரமணியதேசிகர், அம்பலவாணதேசிகர், சுப்பிரமணியதேசிகர்.

1  காப்புப்பருவம்

* "தில்லைவாழந்தணர்"

கார்கொண்ட சோலைசூ ழாரூர ரோரரைக் கானம்பி யாரூரர்முக் -
காலரைக் காலாக முடிவுசெய் தருண்மாக் கவித்திசையின் வீற்றிருக்கு,
மேர்கொண்ட தில்லைமூ வாயிரர்முன் வழுவரும் மெழுவருந் தழுவருமெம -
திதயந் தழால்கொண் டுறைந்திடச் செய்தவரை யெப்போது மேத்தெடுப்பாம்,
பார்கொண்ட தொண்டர்வர லாறுசொல் புராணமம் பலவாரு ளாலமைந்த -
படிதெரித் திடவுல கெலாமெனுஞ் சுருதிநாப் பண்ணுமீற்றும் பொருத்திப் -
பேர்கொண்ட சைவபரி பாடையறி வரியசம் பிரதாய முதலியாவும் -
பிறங்கத் தெரித்தெம்மை யாண்டகுன் றத்தூர்ப் பிரானைப் புரக்கவென்றே. (1)

"இலைமலிந்தவேனம்பி"

இலைமலி யெனுங்கவியு ளெழுபுவன மும்பரசு மெழுமுனிவ ரேத்தவமர்வா -
ரெழுபுரவி வையமிசை யெழுகதிரும் வட்குமணி யெழுவுருவு முட்குமொளிசான்,
மலைமலி புயத்தரெறி பத்தர்முத லெழுபவமு மாய்த்தவிற லெழுவோரையும் -
வாயார வாழ்த்தித் துதித்தவ ரடிக்கமல மலர்முடிக் கணியாக்குவாங்,
கலைமலி பெரும்புலவர் கைகுவிக் கக்கலைக் கன்னிநின் றேவல்கேட்கக் -
கனகசபை யார்முத லளித்தருள வளவாம கத்துவ மடைந்திருந்து,
மலைமலி சுணங்கனொப் பேனென் றுரைத்தருளி யாம்பெருக் கத்துவேண்டு -
மான்றபணி வெனுமொழிப் பொருடேற்று குன்றைநக ராளியைக் காக்கவென்றே. (2)

"மும்மையாலுலகாண்ட"

மும்மைமறை யும்பரவு மும்மையுல கும்புகழு மும்மையாப் பகரமாதி -
மும்மையுயிர் குறினெடி றனித்துமத சவ்வூர்ந்து முதலமையு நாமமுற்றார்,
செம்மைபெறு மும்மையாம் வருணத் துதித்துச் சிறந்தோங்கு மூர்த்தியார்முற் -
செறியிமிரு மும்மையார் செம்பொற் பதாம்புயஞ் சென்னிவைத் தேத்தெடுப்பா,
நம்மையருள் சிவபாத விருதய ருளத்துவகை நண்ணவொண் பொருளாதலா -
னாடுமுழ வாரவல மியைதலா லியாவோரு நாவலர் பிரானென்னலால்,
வெம்மைதவிர் புகலியார் முதன்மூவ ரும்புகலும் வேதத் தமிழ்க்கணுள்ள -
மெய்மையை விரித்துத் தெரித்தருள்செய் குன்றையூர் வேந்தைப் புரக்கவென்றே. (3)

"திருநின்றசெம்மையே"

திருநின்ற செய்யுள்புக னீற்றறையு ளருகந்தர் சிந்தைவெந் திடவமர்ந்துஞ் -
செறிதுயர்க் கடன்மறக் கல்லொடவ ராழவொர் திரைக்கடற் கன்மிதந்துங்,
கருநின்ற கண்டரருள் வௌிசெய்நா வரசர்முற் கருதுபுக ழெழுவோரையுங் -
கருத்திடை யருத்தியி னிருத்திமற் றவர்பதங் காதலித் துத்துதிப்பாந்,
தருநின்ற செங்கைத் தலங்குவித் திடுமுனந் தையலொரு பாகர் தொண்டர் -
சரித்திர மனைத்துமொரு வாதுற நிரம்பத் தவாமன வறைக்குவிக்க,
வுருநின்ற சீர்கொள்புலி யூர்க்கோட்ட மேயதற் கொப்பவுல கேத்தநாளு -
மோங்குபுலி யூர்க்கோட்ட மேயகுன்றத்தூ ரொருத்தரைக் காக்கவென்றே. (4)

"வம்பறாவரிவண்டு"

வம்பறா யாப்புநவில் வம்பறா முலையொரு மடக்கொடியை வேட்டலின்றி -
வண்பிரம சரியநிலை வைகுநா ளேயொரு மடப்பாவை யைப்பிறப்பித்,
தும்பறா வுந்திற லரிக்குருளை போலெழுந் துவகையார்க் கும்பிறப்பித் -
துலாயவர்மு னைவரைவெ லறுவர்பொற் பாதமல ருச்சிவைத் தேத்தெடுப்பா,
மம்பறா வாழிமுழு துண்டதிரு முனிவிரித் தருளிய தமிழ்க்காக்கமா -
வருண்மூவ ரருண்மறைப் பொருடெரிய முன்னொருவ ரருண்மறைப் பொருள்விளக்கு,
நம்பறா வித்தியா ரணியமுனி வரனுள நயப்பயாப் புறவிரித்த -
நாவலர் பிரானைத் திருக்குன்றை யருண்மொழி நலத்தனைக் காக்கவென்றே. (5)

"வார்கொண்டவனமுலையாள்"

வார்கொண்ட வனமுலை யெனுங்கவியு ளுயர்சைவ மாண்பினர்க டலைவணக்கி -
வாயார வாழ்த்தித் தியானித் திடச்சங்க மங்கைவரு சாக்கியர்முத,
லேர்கொண்ட புகழ்கொடைவை வேலடையு மடையுற்று மெய்தாது மாகிநின்ற -
வினியநக ரடையுமேற் றொளிர்கின்ற வறுவரையு மிறுவரையு மேத்தெடுப்பாங்,
கார்கொண்ட வமணசிந் தாமணியை வளவர்கோன் கங்குல்பக லாராய்தரக் -
கண்டொழித் தாவதிது வேயென்று தொண்டர்தம கத்துவங் கருதவுய்த்துப்,
பார்கொண்ட மன்னரல் லவைநீக்கி நல்லவை பரித்திடச் செயலமைச்சர் -
பண்பென றெரித்தகுன் றத்தூ ருதித்தவெம் பரமனைக் காக்கவென்றே. (6)

"பொய்யடிமையில்லாத"

பொய்யடிமை யில்லாத செய்யுளி னிலக்கியம் புகலிலக் கணமெய்ஞ்ஞான -
போதநூ லாதியா யாவுமரி றபவுணர்பு புரகரனை யேதுதித்து,
மெய்யடிமை வாய்ந்தசங் கப்புலவர் முதலாய வித்தக வொழுக்கமிக்கார் -
விண்மருவு வார்பரவு மெண்மருமெ மிருதயம் விடாதமர வேத்தெடுப்பாஞ்,
செய்யமல ராதன மிருந்துபல சாதியுஞ் சேரப் படைத்ததேவுஞ் -
செப்பரிய வாயவவ் வச்சாதி குறிகுணஞ் செய்கைகுடி கொளுமிலியல்பு,
வெய்யமொழி யுணவுமுன் விரித்தெலா மறியவலர் மெய்யறிஞ ரெனல்விளக்கி -
மேம்பட்ட வேளாண் குலக்கதி ரெனுங்குன்றை விமலனைக் காக்கவென்றே. (7)

"கறைக்கண்டன்கழலடியே"

கறைக்கண்டன் யாப்பினைந் ததிகாரி மேலொரதி காரிமலை மங்கையொருபாற் -
கலந்திருக் கவுநிருவி காரிநிர கங்காரி காரியா காரிநாளு,
மறைக்கண் டருஞ்சோதி யோங்காரி யருளேய வாங்காரி முதலமர்ந்த -
வண்கணம் புல்லர்முற் சைவரா மைவரு மகிழ்ச்சியுற வேத்தெடுப்பாம்,
பிறைக்கண்ட மிதுபகலின் முகினுழைவ ததிசயப் பெற்றியென் றாடுவார்கண் -
பெட்பப் பெருக்கெடுத் துவருபா லாற்றலை பிறங்குவளை வீசவஃதத்,
துறைக்கண்ட நிமிர்கந்தி யஞ்சோலை தவழ்தருந் தொண்டைவள நாட்டுநாட்டுந் -
தொல்புகழ்க் குன்றை வருபாலறா வாயர்முற் றொன்றலைக் காக்கவென்றே. (8)

"கடல்சூழ்ந்தவுலகெலாம்"

கடல்சூழ்ந்த யாப்பம ரறஞ்சூழ்ந்த நெஞ்சக் கழற்சிங்க மன்னன்மன்னிக் -
கழியா மடங்கழி யிடங்கழி யருட்கே கருத்துணை செருத்துணையரில்,
விடல்சூழ்ந்த சிந்தையொ ரிகழ்த்துணை பெறாதுற விளங்கும் புகழ்த்துணைவய -
வேட்புலி யெனுந்திருக் கோட்புலியிவ் வைவரையு மேன்மேலு மேத்தெடுப்பா,
மடல்சூழ்ந்த தொண்டர்வர லாற்றுவிரி யுலகெலா மறியத் தெருட்டுகுரவிற் -
கமையப் புனைந்ததுகொல் சாதியடை யாளங்கொ லமையுமெது சொலினுமென்ன,
மடல்சூழ்ந்த செங்குவளை மாலையணி திண்டோள் வலத்தனை நிலத்தனைவரும் -
வாயார வாழ்த்துகுன் றத்தூ ருதித்தபெரு வள்ளலைக் காக்கவென்றே. (9)

"பத்தராய்ப்பணிவார்கள்"

பத்தரா யென்றெடுத் தருடிருக் கவியிலிரு பைங்கோதை யாரைவேட்ட -
பான்மைக் கிணங்கவோ ரிருபுதல்வி யார்தமைப் பயவாம லேபயந்த,
சுத்தராய் வன்றொண்ட ரின்றொண்டர் தழுவித் துதிக்கவைத் தவர்களாய -
தொகையுளா ரென்னுமெழு வகையுளார் பொற்பதந் தொழுதேத் தெடுத்தல்செய்வா -
நித்தராய் மன்றுண்ட நவில்வா ருவக்கும்வெண் ணீற்றொளி நிலாவொளியென -
நினைந்தணைந் தாங்குக்கு வளைபொலிய வின்றே னிரம்பவுண வளியடைந்தாங்,
கத்தராய் கண்மணித் தொடைபொலி தரப்பொலியு மம்புயத் தவனைநம்பு -
மளவா வளந்துன்று குன்றைநகர் மேயவரு ளாளியைக் காக்கவென்றே. (10)

"மன்னியசீர்மறைநாவன்"

மன்னிய திருப்பாட்டி லாகார முதலிய மறந்திராப் பகன்முயன்று -
வையத்து வாழ்வார்க ணோக்காத வண்ணநவ மணியா லயம்புரிந்து,
மின்னிய சடைப்பரமர் பிறதளி மறுத்தடை விதங்கண் டுவந்தபூசல் -
வித்தகர்முன் மேயவெழு வோருமெம் மிதயத்து மேவவைத் தேத்தெடுப்பாம்,
பன்னியதொ கையும்வகையு முதலாத லான்முதற் பகர்சைவ ரேயருளினார் -
பரவுவிரி யிறுதியா தலினிறுதி யாரெனப் படுசைவ ரேயருளினார்,
துன்னிய பொருத்தமிது வென்றுலக மகிழ்தரத் தொண்டர்வர லாறனைத்துந் -
தூவாய் மலர்ந்தவருண் மொழிவான வனையான்ற தோன்றலைக் காக்கவென்றே. (11)

காப்புப்பருவம் முற்றிற்று.


2  செங்கீரைப்பருவம்.
 

ஒண்கொண்ட பொதுவகத் துலகெலா முய்யநா றுலகெலா மென்றதீஞ்சொ -
லுவந்தே டெழுத்தாணி கொண்டெழு திரண்டுகை யும்புவி யுறப்பதித்து,
வண்கொண்ட வொருதாண் மடித்தூன்றி யொருதாள் வயங்குறவெடுத் தூன்றியொண் -
வாய்கவிச் சுவையொழுக் கறிவிப்ப தெனவமுத மாட்சிமை யொழுக்கெடுப்ப,
வெண்கொண்ட நெற்றநீ றிளநிலவு மொண்காதிருங்குழை யிளங்கதிரும்விட் -
டெறிப்பவிள முறுவலுந் தோன்றமலர் திருமுக மெடுத்துவா னளவுநொச்சித்,
திண்கொண்ட குன்றையம் பதியருண் மொழித்தேவ செங்கீரை யாடியருளே -
திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக செங்கீரை யாடியருளே. (1)

பொருவரிய தொண்டர்கள் புராணத்து ளிறையருட் பொலிவானிரம்பு சொற்கள் -
போற்றிடு விருப்பநீர் நம்மைமழ வாக்கிவாய் புகல்குதலை மழலையென்ன,
மருவுமொழி யாசையுற் றீர்பய னாறுதென்ன வள்ளான் மறுத்துரைத்தால் -
வார்த்தைப் பயன்கொள வலேந்தக்க சான்றுநீ வாய்மலர் புராணநின்று,
மொருவரிய தாஞ்செப்ப லுற்றபொரு ளென்றகவி யோதவேண்டுவ தினியெவ -
னுனதுசொற் பயனுணர்த லிலமென்னின் மழவா வுவப்பதும் பொய்ம்மையாமே,
திருவமிகு குன்றையம் பதியருண் மொழித்தேவ செங்கீரை யாடியருளே -
திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக செங்கீரை யாடியருளே. (2)

ஒப்பரிய தொண்டர்தம் மருமையும் பெருமையு முவக்குமவ ரவர்செய்கையு -
முவமையில் லாச்செய்கை நுட்பமுந் திட்பமும் மும்பர்கோ னருடட்பமுந்,
தப்பரிய செந்தமிழ்த் தொடைநடையு மடையுந் தவாப்பொரு ளணிச்சிறப்புந் -
தமிழ்மறை யடங்குபல மந்தணமும் வெள்ளிடைத் தவிரும்வெற் பெனவிளங்க,
வெப்பரிய முழுமதிக் குடைநிழற் றனபாயன் மேயவவை யகநயந்து -
வியந்துமெய்ப் பாட்டினொடு பாராட்டி மகிழமேன் மேல்விரித் தருளியபிரான்,
செப்பரிய குன்றையம் பதியருண் மொழித்தேவ செங்கீரை யாடியருளே -
திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக செங்கீரை யாடியருளே. (3)

தாயவொளி யிருடபுபொன் மாளிகைத் தில்லைச் சபாநடன நாதர்பெத்தான்
சாம்பானை யுய்த்தனம் நிருவாண தீக்கையாற் றகுமுத்தி யடைவியென்றே
யாயதிரு முகமுய்த் திடப்பெற்ற கைலாய வம்பரம் பரையிலளவா
வருளுருவ மாயவ தரித்திட்ட மெய்ஞ்ஞான வற்புத வுமாபதிசிவ
னேயமிக விம்மைக்கு மறுமைக்கு மாதார நிலயதீ தென்றுணர்ந்து
நினதுவர லாறருமை பாராட்டி யருள்செய நிரம்புமான் மியமடைந்தாய்
தேயநிகழ் குன்றையம் பதியருண் மொழித்தேவ செங்கீரை யாடியருளே -
திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக செங்கீரை யாடியருளே. (4)

பொருந்துமா யிரமுகக் கங்கைமர பிற்கதிர்கள் பொலியுமா யிரமுள்ளவன் -
போற்றோன்றி யாயிர மறைக்குமெட் டாச்சென்னி பொற்பவா யிரமுடையகோன்,
மருந்துநே ரருள்பெற்ற மைக்கேற்ப வாயிரம் வயங்கு பொற்கானிறீஇய -
மண்டப மிவர்ந்தா யிரந்தொண்டர் வரலாறு வாய்மலர்ந் தவவாவிவா,
யிருந்துசூழ் கொழுவுண்டு புண்டரீ கத்தின்வா யியைபுல வறத்துவட்டி -
யிருஞ்சங்க னம்பே டெனத்தழுவி நாணமுற் றியல்பேடு மற்றென்றுனுஞ்,
செருந்துசூழ் குன்றையம் பதியருண் மொழித்தேவ செங்கீரை யாடியருளே -
திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக செங்கீரை யாடியருளே. (5)

வேறு.

தோம்பல வுடையேம் பிறவியை யஞ்சேஞ் சுடர்நின் சினகரமுற்
றூகே மெழுகே மிரவும் பகலுந் துதியே மாயிடினு
நாம்பல தேவரை நண்ணே மெண்ணே நயவேம் வியவேமா
னாண்மலர் பலகொடு நின்னடி யேத்தி நயத்தலை மேற்கொண்டு
கூம்பல்செய் கையே மெய்யே மிதனிற் கோமா னீயருளுங்
கூலி யெவன்கோ லவாயது நல்கிற் குலாவு முவப்புறுவே
மாம்ப லவாவுதன் மேய புயாசல வாடுக செங்கீரை
யாரரு ளாகர சேவையர் காவல வாடுக செங்கீரை. (6)

புண்ணிய முதலே பொங்கொளி மணியே பொய்யாப் பெருவாழ்வே
பொள்ளலின் முத்தே கள்ளமில் வித்தே புரையில் சுவைப்பாகே
தண்ணிய வமுதே மண்ணியன் மதியே தமிழ்நா வலரேறே
சத்துவ நிதியே பொத்திய மலநோய் சாடு பெரும்பகையே
யெண்ணிய வன்ப ருளத்தமு தூற வினிக்கு நறுந்தேனே
யென்றும் பத்தி ரசங்கனி கனியே யெந்நா ளினுமெங்கட்
கண்ணிய பொருளே யாய்பவர் தெருளே யாடுக செங்கீரை
யாரரு ளாகர சேவையர் காவல வாடுக செங்கீரை. (7)

சூழிய மேவிய கொண்டை விளங்கத் தொட்டுக் கட்டியபொற்
சுட்டி யிலங்கப் புண்டர நீறு துதைந்து நிலாக்கால
வாழிய கனிவா யூறற் றேறன் மார்பின் வழிந்தோட
வடிகா திற்புனை குழையிற் செவ்விய மணியிள வெயில்வீச
வீழிய வாவிய வாயிள முறுவல் விளங்க வரைப்பொன்னாண்
மின்னுக் காலப் பேரெழி னோக்குநர் விழிகள் விருந்துசெய
வாழிய வன்ப ரகத்தமர் செஞ்சுட ராடுக செங்கீரை
யாரரு ளாகர சேவையர் காவல வாடுக செங்கீரை. (8)

இவர்சரி யையரிவர் கிரியையர் யோகத் தினரிவ ரிவர்ஞான
வியல்பின ரிவரி லறத்து வழாதவ ரிவர்துற வறநின்றார்
கவர்மன மொழியிவர் பிரமச ரியநிலை கைக்கொண் டோரிவரே
கண்குளிர் வேடம் பொருளென நம்பினர் கருதரு மிவராதித்
தவர்நிலை யுணரா வருளின னிறைவன் றக்கன வுலகறியச்
சாற்றின னலனவ னேயுல கறியச் சாற்றிய படியென்ன
வவரவர் செயன்முத லருளிய வல்லவ வாடுக செங்கீரை
யாரரு ளாகர சேவையர் காவல வாடுக செங்கீரை. (9)

நந்தி வரைத்தலை யொருமுனி சுரபி நயக்கப் பொழிதீம்பா
னதியா யங்கங் கோடுபு கூப நயங்கிள ரேரிகுள
முந்தி யெழுங்கா லோடை தடாக முதற்பல வுந்நிறையா
முழுத்த சுவைப்பா லாக்குபு பின்னும் மூரிக் கடல்புக்குப்
புந்தி யவாவ நிரம்பலின் மாயோன் புரிகண் டுயிலுமிடம்
புகலிது வோவது வோவென வாயப் பொலிதண் டகநாட
வந்தி மதிச்சடை யண்ணற் கினியவ வாடுக செங்கீரை
யாரரு ளாகர சேவையர் காவல வாடுக செங்கீரை. (10)

செங்கீரைப்பருவம் முற்றிற்று.


3. தாலப்பருவம்.

வெண்ணந் துரறி வயிறுளைந்து வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
வெண்ணித் திலத்தை யரித்தெடுத்து வெள்வாய்க் களமர் கரைகுவிக்க
வண்ணந் துவரென் றுவமிக்கும் வாயோ திமநீர் குடைந்தெழுந்து
மற்றக் குவியன்மே லிவர்ந்து மருவி முதிரா வெயில்காயக்
கண்ணந் துறவுண் டெழுதருமக் களமர் மராள முட்டையினைக்
கதிர்நித் திலமென் றுறக்குவித்தோங் கடையே மயங்கி யெனநாணுந்
தண்ணந் துறைசேர் குன்றத்தூர்த் தலைவா தாலோ தாலேலோ
சகலா கம்பண் டிததெய்வச் சைவா தாலோ தாலேலோ. (1)

நண்பா லெவரு முறத்தரிக்கு நலங்கூர்நீற்றின் வெள்ளொளியா
னாவா லெவரு மரமுழக்க நாளுந் செயவாம் பேரொலியா
லெண்பாற் புலவ ரமுதுகொளற் கெந்த விடத்து நெருங்குதலா
லேர்சா லரம்பை யெழுதலினா லியனா கேசன் வைகுதலாற்
கண்பாற் கரிதோய் திருமடந்தை காமுற் றிடலான் மாளிகைமேற்
கருமால் கிடந்து கண்டுயிலுங் காட்சித் திறனாற் பொங்கியெழுந்
தண்பாற் கடனேர் குன்றத்தூர்த் தலைவா தாலோ தாலேலோ
சகலா கம்பண் டிததெய்வச் சைவா தாலோ தாலேலோ. (2)

முந்தவெழுமாற் றுயர்பொன்னான் முழுச்செம் மணியான் மாளிகையு
முதுசூ ளிகையுந் தெற்றிகளு முகப்பும் பிறவு மமைதலினா
லிந்த நகரம் பொன்னகரத் தினுமிக் கிமைத்தல் விதியுளத்தி
லெண்ணி யாடூஉ மகடூஉவா மெல்லா வுயிரும் விழியிமைத்த
னந்த வருட்சம் பந்தர்மண நண்ணி யவர்க்குங் கதிகொடுத்த
நலம்போ லிதுசார் புவியகத்து நகர்க்கொ லாஞ்செய் தனனென்று
சந்தத் தவர்சொல் குன்றத்தூர்த் தலைவா தாலோ தாலேலோ
சகலா கம்பண் டிததெய்வச் சைவா தாலோ தாலேலோ. (3)

முரிவில் வயிரங் கால்யாத்த முழுமா ளிகைபாற் கடல்கடையா
முன்னந் திருமா லுருவொத்து முயங்கு மெனவு மதற்கருகே
பிரிவில் கருநீ லங்குயிற்று பெருமா ளிகையக் கடல்கடைந்த
பின்ன ரன்னா னுருவொத்துப் பிறங்கு மெனவு மதற்கருகே
யெரிவி லிடுசெந் துகிர்மாட மெயில்சூழ் காஞ்சி யடைந்தன்னா
னெய்து முருவொத் தஃதென்று மெந்நா வலருங் கொண்டாடச்
சரிவில் வளஞ்சால் குன்றத்தூர்த் தலைவா தாலோ தாலேலோ
சகலா கம்பண் டிததெய்வச் சைவா தாலோ தாலேலோ. (4)

சோறு மணக்கு மடங்களெலாந் தூய்மை மணக்குஞ் சிந்தையெலாஞ்
சுவண மணக்கு மாடையெலாந் தொங்கன் மணக்குந் தோள்களெலாஞ்
சேறு மணக்குங் கழனியெலாஞ் செல்வ மணக்கு மாடமெலாந்
தென்றன் மணக்கு மேடையெலாந் தெய்வமணக்குஞ் செய்யுளெலா
நீறு மணக்கு நெற்றியெலா நெய்யே மணக்குங் கறிகளெலா
நெருப்பு மணக்குங் குண்டமெலா நேய மணக்கும் வீதியெலாஞ்
சாறு மணக்குங் குன்றத்தூர்த் தலைவா தாலோ தாலேலோ
சகலா கம்பண் டிததெய்வச் சைவா தாலோ தாலேலோ. (5)

வேறு.

துங்க மிகுந்த வருந்தவ மேவிய தோலா நாத்திரண
தூமாக் கினியரு டொல்காப் பியமே தோன்று மிலக்கணமாப்
பங்க மிலாச்சம யாதி யடைந்து பராஞ்சிவ சின்னமுறும்
பாக மரூஉம்பக் குவரே கேட்கப் படுமதி காரிகளா
வங்க மெடுத்துழ றுன்ப மொழிந்தின் படைவது வேபயனா
வற்புத மேவிய தொண்டர் புராணம தருள்கரு ணைக்கடலே
சங்க மரீஇயமர் குன்றைத் திருமுனி தாலோ தாலேலோ
சைவப் பயிர்தழை யத்தழை யும்புய றாலோ தாலேலோ. (6)

அடியார் பெருமையு மருமையு நாளு மறியம் பலவாண
ரவர்வர லாறு விரித்துரை செய்பவ ராரென வுட்கருதிக்
கடியார் மற்றவ ரன்பத் தனையுங் கண்காண் படிசெய்து
காமரு முதலு மெடுத்தரு ளினரிக் கடல்சூழ் புவியிடையிப்
படியார் பெற்றார் தமிழ்மான் மியமெப் பாடைக ளுக்குளதிப்
பாக்கிய நந்தவ மென்று பலோரும் பகரப் படுபவதீந்
தடியார் தடிசூழ் குன்றைத் திருமுனி தாலோ தாலேலோ
சைவப் பயிர்தழை யத்தழை யும்புய றாலோ தாலேலோ. (7)

பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ
பயனில தாகுஞ் சிந்தா மணிவழி படர்த லெனப்போதித்
துத்திச் சுமையொரு தோள்வைத் திடுபு லுயர்த்தோன் மனமடியா
ருறுசெய னாடப் புரிமதி வலவ வொலாவரு கந்தர்திற
முத்தித் திறமல வென்றள விலர்பான் முற்றிச் சிவமடைய
முயல்செயல் வலவ வயற்கண் மடைச்செறி முத்த மனைத்தினையுந்
தத்திப் புனல்பாய் குன்றைத் திருமுனி தாலோ தாலேலோ
சைவப் பயிர்தழை யத்தழை யும்புய றாலோ தாலேலோ. (8)

ஈற்றுத் தலையொரு மவுலி புனைந்தா லென்னச் சொல்லணியொன்
றெய்திப் பொலியப் பொருளணி யாயின வெவ்விட னும்வீற்று
வீற்றுக் கிடையிறை பட்டன வமைய விளம்பு வனப்பினொடு
மேய முதற்பொரு ளாதிய மூன்றும் வேண்டுமி டத்தெய்த
வாற்றுப் புனனா மப்பொருள் கோண்முத லறைமற் றுள்ளனவு
மமையத் தொண்டர் புராண நவின்றவ வடருபு சூழ்ந்தபசுந்
தாற்றுக் கதலிக் குன்றைத் திருமுனி தாலோ தாலேலோ
சைவப் பயிர்தழை யத்தழை யும்புய றாலோ தாலேலோ. (9)

மண்டலை வேலைப் புவியிற் பத்திசெய் மார்க்க மறிந்தவரார்
வண்சுவை யமுத வொழுக்கென வார்த்தை வழங்கத் தெரிகுநரார்
கொண்டலை நேர்பக டூர்தரு கூற்றங் குதித்துய்ந் திடவலரியார்
கொற்றக் கைலைக் கணநாதர் களொடு கூடுபுமகிழ் பவரார்
விண்டலை யாரும் பெறலரு மின்பம் விராவுந் திறலினரார்
விமலா நீயவ தாரஞ் செய்யா விடினென மேயவபைந்
தண்டலை சூழுங் குன்றைத் திருமுனி தாலோ தாலேலோ
சைவப் பயிர்தழை யத்தழை யும்புய றாலோ தாலேலோ. (10)

தாலப்பருவம் முற்றிற்று.

4  சப்பாணிப்பருவம்.

விழையற முதற்கல்வி யறியுநுண் ணறிவுமம் மேதைக் கிணங்கொழுக்கு -
மேயவிவை யுடையார்த் தழீஇயவர்சொ லினிதேற்கு மேம்பாடு மாறுகருதா,
மழைநிகர் கொடைத்திறனு நனிவரு தினியீட்டு மாண்புமாற் றலரையஞ்சா -
வன்மையு மிடங்கால முதலறித லுங்கடிய மாற்றநவி லாதகுணமு,
முழையரும் விருப்பமறி யாதடக் குதலுநல னோங்குகாட் சிக்கௌிமையு -
முடையனிவ னுலகுவத் தற்குரிய னென்றுளத் துன்னியிறை புனையமணிக,
டழையுமுடி தொட்டுக் கொடுத்தருண் மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்க் குன்றையாங் குன்றுதித் தெழுபானு சப்பாணி கொட்டியருளே. (1)

கார்க்கோல மாலோன் புரந்தருள்வ னெனுமொழிமு கமனுண்மை வேளாண்மையைக் -
கருதவபி தானங்கொள் குலமே யெனப்பனூல் கற்றவரியம்ப மறையோர்,
போர்க்கோல மன்னரெட் டியர்மூவர் புறமெனப் புகன்மூவர் பசிவருத்தம் -
போக்கின மெனக்களிப் புறவிலே கருமது புகன்றுமகிழ் தலைசிறப்ப,
வார்க்கோல முலைமங்கை பங்கர்தளி முற்பலவும் வண்பூசை யொடுசிறப்பு -
மாறாது பொலியமழை வளனுஞ் சிறப்பவள வாப்பெருமை வாய்ந்த மேழி,
தார்க்கோ லொடுந்தொடுஞ் செங்கைத் தலங்கொண்டொர் சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்க் குன்றையாங் குன்றுதித் தெழுபானு சப்பாணி கொட்டியருளே. (2)

மேவாத பாயுடீஇத் தலைமயிர் பறித்துழறன் மேயசம யப்பாழ்ங்குழி -
வீழ்ந்தவர்மு னச்சமய கண்டனம் பேசியது விடவாற்று திருவாயினின்,
றோவாத பிரதாப மொருகதி ரெனத்தோன்றி யுள்ளகோ கனகமெல்லா -
முறமலர்த் திடவவைகை யொப்பாயி னோமென் றுறப்பொலித றேறுபன்னா,
ராவாதமியமெனவ பயநல்கி யுண்மைநிலை யருளுங்கை நின்றெழுபுக-
ழாலோ னெனத்தோன்றி யெல்லாங் குவித்ததென் றன்றோ ரெடுத்துரைக்குந்,
தாவாத வொளிகிளர்நி னங்கைத் தலங்கொண்டொர் சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்க் குன்றையாங் குன்றுதித் தெழுபானு சப்பாணி கொட்டியருளே. (3)

துருமமலர் கொய்துநீ ராடிநீ றிட்டுநனி தூயக ணிருந்துநேரே -
துலங்குமொரு குறியிலா வாகனமெ ணுதலோடு தோன்றிடச் செய்வதன்று,
பெருமவடி யேங்களைப் புரவென்று தாழ்பவர் பெருஞ்செல்வ மெய்தியைய -
பிறங்குநா ராயணவு பநிடத முரைத்தபடி பெற்றருடி யிவர்வணக்கங்,
கருமமுத லெம்மலமு நீத்தின்ப மெய்தக் கடைக்கணித் திடுதியென்று -
கனிந்துவேண்டுவதன்று சிறுவருத் தமுமிலாக் காரிய மவாவிநின்றேந்,
தருமசின கரமாங் கரங்குவித் தையவொரு சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்க் குன்றையாங் குன்றுதித் தெழுபானு சப்பாணி கொட்டியருளே.  (4)

எண்ணியவை யெண்ணிய படிக்கடி யவர்க்கருளு மீசனருளா லருளுறா -
வீனசமயத்தொடக் கெல்லா மொழித்தன மெனக்கைதட் டுதலு மோவாத்,
திண்ணிய மலர்செருக் கெல்லா மொழித்தனந் தீர்ந்தவ் வாதை யென்று -
செப்பிக்கை தட்டுதலு மிந்திரன் மலர்க்கணான் றேந்துழா யவன்வாழ்க்கையு,
நண்ணிய வெழுங்கருத் துந்தவிர்ந் தனமென்று நாடிக்கை தட்டுதலு நேர் -
நவிலநம் பரமகுரு சாமியென் றியாவரு நயக்கவவ தாரஞ்செய்தாய்,
தண்ணிய மலர்க்கைத் தலங்குவித் தையவொரு சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்க்குன்றையாங் குன்றுதித்தெழுபானு சப்பாணி கொட்டியருளே.  (5)

வம்பிட் டொளிர்முலை மாதுமை காண மணிப்பொது நடனஞ்செய்
வார்முன மனநைந் துருகிட நிற்றன் மதித்தவர் முதனல்க
நம்பிட் டருமறை யோர்கை குவித்து நயந்து வியந்துடனே
நறுவிரை நல்கி யலங்கல் புனைந்து நகும்பரி வட்டமெடுத்
தம்பிட் டொளிர்சடை யவரே யிவரென் றைய மறத்தௌியா
யாத்திடு முன்னர் நன்னர் விபூதிய தள்ளுபு கொள்ளுகெனக்
கும்பிட் டேற்ற திருக்கை குவித்துக் கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி,  (6)

உண்ட லுடுத்தன் மணத்தன் முதற்பல வுன்னுப நன்னயமா
ருத்தம வென்றடை யாதுல ரெண்ண மொருங்கு தெரிந்தனையார்
தண்ட லிலாமகிழ் பூப்ப மலர்க்கைத் தலம்விரி யாதுகுவி
தருமொர் பழக்கமு னுள்ளதி யாங்கள்செய் தவம்வறி தாங்கொல்லோ
கண்டல் செறிந்த கருங்கடல் வண்ணன் கலிகெழு பாற்கடன்மேற்
கண்டுயில் வதுபொர வெண்சுதை தீற்றிய காமரு மாளிகைமேற்
கொண்ட லுறங்குங் குன்றத்தூரன் கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி.  (7)

படியிடை யொருபை திரவரு ணனைபுரி பாவல ரைந்திணையும்
பகுத்தொரு முப்பொரு ளோடும் விரித்துப் பயனா கத்தெய்வங்
கடிதலில் சினகர முள்ளன வோதக் கற்பித் தவநெஞ்சங்
கனியக் கனியக் கண்ணீர் வாரக் கவிபா டியவிறைவ
வொடிவரி தாமிரு பன்னிரு கோட்டத் துள்ளொரு கோட்டமலா
தொருகோட் டமுமுற லில்லாய் நல்லா யுலவா வளமைப்பல்
குடிக ணெருங்குங் குன்றத் தூரன் கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி. (8)

நாடிய விரிநூல் சொற்றிடு திறனா னன்னூ லாசிரிய
னகுபா சுரமுத லுரைசெய் தலினா னவிலுரை யாசிரிய
னீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய்
நிலையாற் போத காசிரி யன்னிவை நிகழ்தொறு நிகழ்தோறு
மாடிய ஞானத் திறனுற லான்ஞா னாசிரி யனுநீயென்
றான்றோர் பலரும் புகழப் படுபவ வகில மெலாஞ்சென்று
கூடிய புகழ்சால் குன்றத் தூரன் கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி. (9)

நிலவிய நாகே சுரரினி தமர்தலி னிகழ்நா கேசுரமாய்
நீன்மணி மாட நிலாவலி னிந்திர நீல பருப்பதமாய்க்
கலவிய செம்மணி மாடத் தாலொளி காலா தனகிரியாய்க்
கருடப் பச்சை யிலாலியா வோருங் காண்மர கதமலையா
யுலவிய வெண்சுதை தீற்று மிலாலோங் கொருகை லைக்கிரியா
யுத்தம மார்பல வேதுவி னாலினு முரைதரு பற்பலவாய்க்
குலவிய வளமார் குன்றத் தூரன் கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி. (10)

சப்பாணிப்பருவம் முற்றிற்று.

5.  முத்தப்பருவம்.

திருப்பஞ் சாதி மறையுணர்மட் டேவ ராதி நால்வர்களுஞ்
செறிந்த மற்றை மூவர்களுந் தீரா விருவல் வினைத்தொடர்பா
லுருப்பஞ் சாரும் பிறந்தைமரீஇ யுறமேற் போயுங் கீழிழிந்து
முழற லாய பெருந்தாக மொருங்கு மாய்த்தின் பொருங்கடைய
விருப்பஞ் சாரு மெய்யடியார் மிக்க தொகையா ரொன்பதின்மர்
மேய தனியா ரறுபதின்மர் மேலு மூவர் சரித்திரமாங்
கருப்பஞ் சாறு பொழிமதுரக் கனிவாய் முத்தந் தருகவே
கனகக் குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தந் தருகவே. (1)

எண்ணிற் பொலிபல் புலவர்குழாத் தெய்தி நும்மோ டியாமொருவே
மென்று கூறி யெம்பெருமா னிருந்தாய் தருநன் னயமுடைத்தாய்
மண்ணிற் பொலிபு கயிலாய வரைக்க ணிவர்ந்தம் மாதேவன்
வடிகா தகம்புக் குள்ளுருக்கும் வளமை யுடைத்தாய் வளத்தருவாழ்
விண்ணிற் பொலிவார் களும்வியப்ப வெள்ளென் பழத்திற் குயிரருளி
வெங்க ராக்கொண் டதுமீட்கு மிக்க விறலிற் றாயெங்கள்
கண்ணிற் பொலிசெந் தமிழ்மணக்குங் கனிவாய் முத்தந் தருகவே
கனக குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தந் தருகவே. (2)

சொல்லும் பொருளு நனிசிறப்பச் சுருங்கச் சொல்லன் முதலாய
தோட்டி யமைய வமங்கலமாஞ் சொற்கள் புணரா தறக்களைந்து
வெல்லுந் தகைய முரண்காட்டி விலக்கு விலக விதிதழுவி
விரும்பு மூல விலக்கியமே வேறா காதென் றுலகேத்த
வல்லும் பகலு மம்பலவ ரருடற் காய வரும்பணிசெய்
தருள்பெற் றுய்ந்த வடியார்த மருமை பெருமை பாராட்டிக்
கல்லுங் கரையக் கவிபாடுங் கனிவாய் முத்தந் தருகவே
கனகக் குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தந் தருகவே. (3)

எண்ணி யிதுசெய் திடினிதனா லெய்தப் படுவ திஃதெய்தா
திரியப் படுவ திஃதுண்மை யெய்தப் படலாற் பயனின்றே
நண்ணி யவதை மறந்தொழிக நள்ளார் முனைமே லிப்பொழுது
நயந்து படர்ந்து பொருவமே னமதே யாகு நகுவர்கை
தண்ணி மயம்போற் புகழ்ப்போர்வை தாங்கற் காய கருமமிது
தப்பா தாற்றப் பொருள்வருவாய் தவாதுண் டாமென் றிவைமுதலார்ங்
கண்ணி வளவற் குரைத்தருள்செய் கனிவாய் முத்தந் தருகவே
கனக குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தந் தருகவே. (4)

நிலஞ்சார் தெய்வக் கற்பகமே நிமல ஞான வாரிதியே
நீடுஞ் சைவப் பெருவாழ்வே நிலவா நின்ற குணக்குன்றே
வலஞ்சார் பெருநா வலரேறே மாறா வருட்சிந் தாமணியே
மதிப்பார் மதியு ளெழுஞ்சுடரே வாழ்த்து வார்தம் பெரும்பேறே
புலஞ்சார் பத்தி விளைநிலமே போக்கு வரவில் பூரணமே
புந்திக் கினிக்குஞ் சுவையமுதே போற்றி யினிமே லொருதாயர்
கலஞ்சார் முலைப்பா லருந்தாத கனிவாய் முத்தந் தருகவே
கனகக் குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தந் தருகவே. (5)

வேறு

நூலாறு தேர்ந்தவ ருஞற்றுமக் குண்டங்க ணோக்கியழல் பாயமேய
நுவல்புலவ ருதரகுண் டத்திற் சருப்பாய நோன்மைசான் மேகமெல்லாஞ்
சாலாறு பாயவலை யெறியுததி பாயத் தவாதருவி வரைகள் பாயத்
தையலார் குரிசிலார் மேற்சம்ப ராரிபொழி சரமெலாம் பாயமலரிற்
காலாறு பாயவம் மலர்மதுப் பாயக் கமழ்ந்தபட் டத்தினின்றுங்
கற்பங் கழுத்தொடிய வாளைபா யப்பொய்கை கருமேதி பாயமிக்குப்
பாலாறு காலாறு பாய்தொண்டை நன்னாட பவளவாய் முத்தமருளே
பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான் பவளவாய் முத்தமருளே.  (6)

மேயபல வாரியர் குழாத்தினுட் பூரியர் விராயதென வாயதூய -
வெள்ளோதி மக்குழா நிலைகுலைய மேதிகால் விசைத்தெழீஇப் பாயவாங்க,
ணாயவெடி வாளையேர் பருகிலாங் கலிமோத வதினுதிர் பழத்தின்வெருவி -
யம்மேதி கரையேற வதுகண்ட வவ்வாளை யாயவா லாமைதீரத்,
தூயநெடு வானீர் துளைந்தாடி மீளிற் றொடக்குநீங் காமையெண்ணிச் -
சோதிமதி மண்டலங் கீண்ட முத்தாரையொடு துனையக் கிழக்கிறங்கும்,
பாயதட மலியுந் திருத்தொண்டை நன்னாட பவளவாய் முத்தமருளே -
பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான் பவளவாய் முத்தமருளே. (7)

மிக்குவரு வெள்ளத் தெதிர்ந்தேறு பருவரால் வேகத் துருண்டு போதும் -
வேழத்தைமுட்டுபு வெகுண்டுவெடி கொண்டுதாய் விண்ணந்துளைத் துவிரைவிற்,
புக்குமகிழ் மழவிளங் கன்றது தெறித்தெழீஇப் போயதெங் கென்றுநாடும் -
புந்திப் பெருங்காம தேனுவின் மடித்தலப் பொம்மல்குழை வெய்தமுட்டத்,
திக்குநிக ழப்பசுப் பொழிகின்ற பால்வரால் செய்தபுழை யூடிறங்கித் -
திரைகரை யெறிந்துவரு குடிஞைக்கு முன்புதான் செய்தபெய ரைப்புதுக்கும்,
பக்குநவி லருவளம் படுதொண்டை நன்னாட பவளவாய் முத்தமருளே -
பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான் பவளவாய் முத்தமருளே. (8)

வீங்குகரு மேதிபிணர் படுதட மருப்பினால் விடுபடாக் கடுவேலிவாய் -
விடநீக்கி யுட்புகூஉ மென்கரும் பினைமென்று மென்றுதின் றிடவழிதரா,
வாங்குநிகழ் சாறப் படப்பையை நிரப்பிமே லரம்பையந் துடவைமோதி -
யாறாகி நெற்போ ரடங்கச் சுமந்துசென் றலையாழி யிற்கலந்து,
தேங்குதிடர் செய்துவரு மாற்றியந் தமிழ்வாய்ச் செறிந்துவர லாலினிமையாய்த் -
திகழ்கின்ற தென்றெண்ணி யாடுநர்களுண்டுமகிழ் தேக்கவெந் நாளுஞ்செயும்,
பாங்குபடு செல்வமென் பாற்றொண்டை நன்னாட பவளவாய் முத்தமருளே -
பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான் பவளவாய் முத்தமருளே. (9)

நீளைநேர் மாதரொடு காளைநேர் மைந்தர்க ணெருங்கிவிளை யாடுபாலி -
நெடுவெள்ள முவராழி யுட்புக வனார்குழீஇ நிறைமலர்கொய் பொழில்வாவிவாய்,
வாளைதா யெழவிடபம் வைகுதேத் தடைகீற மடையுடைந் தென்னவழியு -
மதுவெள்ள மும்புகக் களமர்கள் கருப்பாலை வழிசாற்று வெள்ளமுமெழீஇ,
யாளைமோ தும்படி புகக்கண்ட வறிஞரே ழாழியு மிதன்கணாய -
வான்றநுண் ணறிவினா ராயினென் றோதவமை யாப்பெரு வளங்குலாவும் -
பாளைவாய் கந்திமென் பாற்றொண்டை நன்னாட பவளவாய் முத்தமருளே -
பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான் பவளவாய் முத்தமருளே. (10)

முத்தப்பருவம் முற்றிற்று.

6. வாரானைப்பருவம்.

மண்டல மதிக்குமணி யாத்தவுச் சிப்பூவும் வண்பட்ட முஞ்சுட்டியும் -
வாகுவல யமுமதா ணியுமுதய வெயில்செய மகத்துவத் தொண்டர்சீர்த்தி,
விண்டல மதிக்கவெழு செய்யவாய்ப் புகழெழுதல் விழையவெழு குறுமுறுவலும் -
வெண்ணீறு முத்தமா லிகையுமிள நிலவுசெய வெய்யே மனத்தடத்துந்,
தண்டலமை யாதலர் சரோருகப் பதமேற் சதங்கையுந் தண்டையுமொளி -
தவாஞெகிழி யும்படீஇக் கலகல விரட்டவுயர் சைவநிலை யெங்குநிகழக்,
கொண்டலமர் கொடைகொண்ட கரதலச் சேவையார் குலசிகாமணி வருகவே -
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு குன்றைப்பிரான் வருகவே. (1)

நிலவுவிரி மதியுமொண் பனியுமுவ வாவெனினு நெஞ்சமெப் பொழுதுநெக்கு -
நெக்குருகு வார்மதியு மத்தகையர் கட்பனியு நேரேயு வத்தல்செய்வ,
கலவுசெம் மையுமணமு முடைமைக் கிணங்கவெவர் கடையினவை யுள்ளவேனுங் -
காமுறுவ வளிவிரா வுறமலர்வ வாயகோ கனகநறு மலரிரண்டு,
முலவுதலி லன்புசெறி யுந்தலைப் பெயராமை யுள்ளவே னும்பெயர்த்தே -
யுவகை யெங் கட்குவர மறுசமய ருக்கெலா முட்குவர முறுவலித்துக்,
குலவுபுக ழேபோர்வை யாக்கொண்ட சேவையார் குலசிகாமணி வருகவே -
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு குன்றைப்பிரான் வருகவே. (2)

நீடுமின் பரிவையர் புணர்ப்பென்ம ரும்மைந்து நிகழ்கந்த முங்கெடுதலே -
நிலவுமின் பென்மருங் குணமூன்று மொழிதலே நிரம்பலுறு மின்பென்மரு,
நாடுமின் பிருவினைக் கேடென்மரும்மல நசித்தலே யின்பென்மரு -
நவில்விக்கி ரகநித்த மின்பென்ம ருந்தோன்று ஞானமே யின்பென்மரும்,
பாடுமின் புயிர்கெடுத லென்மரும் பகுதிமேற் கெடுதலே யின்பென்மரும் -
படுசித்தி யின்பென்ம ரும்பிறரும் வாதம் படர்ந்துவரு திறனறவளங்,
கூடுசெந் தமிழருமை யறிபெருஞ் சேவையார் குலசிகாமணி வருகவே -
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு குன்றைப்பிரான் வருகவே. (3)

செற்றசெங் கன்னல்படு தரளமுங் கந்திச் செழுஞ்சோலை படுதரளமுந் -
திண்மருப் புக்கடாக் களிறுமறை யப்போய செஞ்சாலி படுதரளமுந்,
துற்றபைங் கதலியிற் படுதரள மும்பாலி துறைதொறு மெடுத்துவீசுஞ் -
சுடர்மணிக ளுங்கரும நடவுவோர் வாருபு சுமந்துகொடு வந்துதூய,
முற்றமெங் கணுநிறை தரக்குவித் திடல்கண்டு மோகமுற் றோடியாடி -
முகந்திடறி யெற்றியொன் றாக்கிவிளை யாடுசிறு முண்டகத் தாள்பெயர்த்துக்,
கொற்றவன் றருமுதன்மை கொண்டுமிளிர் சேவையார் குலசிகாமணி வருகவே -
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு குன்றைப்பிரான் வருகவே. (4)

மாயா மலங்கரும மலமிவைக் கேதுவா மலம்வே ரொடுங்கழன்று -
வலியதன் சத்திகெடு மாறுதிரு வருள்பதிய வந்துபதி செம்மலர்த்தா,
ளாயாத வெம்மனமு மகலாத தாளடிய ரவிர்புதல்வர் தோழர்தாங்க -
ளடைந்தமார்க் கம்பொலிய வெண்ணுந் திருத்தா ளராவுரி நிகர்த்ததூசு,
காயாத கானீத்த மலரொடு விரித்தவிக் கடையிற் பெயர்த்துவைத்துக் -
கருங்கொண்டல் போல்வானு மிகையெனக் கடல்சூழ்ந்த காசினியுளாரை யெல்லாங்,
கூயா தரிக்குங் குணந்தழுவு சேவையார் குலசிகாமணி வருகவே -
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு குன்றைப்பிரான் வருகவே. (5)

நலத்தி னுயரும் பழையனூர் நாளும் பொலியு மவையகத்து
நலிவு புரிநீ லியைக்கண்டு நடுங்கா நின்ற வணிகனுக்கு
நிலத்தி லியனின் னுயிர்க்கிறுதி நேரு மாயி னியாமெல்லா
நெருப்பின் முழுகி யுயிர்துறப்போ நீயோ ருதியென் றுரைத்தபடி
வலத்தி னுயரச் சொற்றவறா வண்ண மெழுநாக் குழிமுழுகி
வடவா ரணியத் தாடொருவர் மலர்த்தா ளடைந்த வெழுபதின்மர்
குலத்தி னுதித்தா ரருண்மழைபெய் கொண்டல் வருக வருகவே
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக் கோமான் வருக வருகவே. (6)

அண்ட மளவும் வரைநாட்டி லரசர் கலக மாகலினா
லாங்காங் கொருவி வணிகரெலா மயனாட் டகம்புக் கினிதமர்ந்து
விண்ட கலகத் திறந்தெரிந்து மேய தத்த மிடம்புக்க
விதமுள் ளுணர்ந்து தஞ்சரணா மேவி யிருந்த மடக்கொடியை
மண்ட வழைத்துக் கொடுசென்றிம் மடமா தினைக்கொள் ளுதிரென்ன
மயங்கல் கண்டு தங்கையெனும் வாய்மை கொடுமைத் துனக்கேண்மை
கொண்ட குலத்தி லுதித்தருள்பெய் கொண்டல் வருக வருகவே.
குன்றைப் பொருமா ளிகைக் குன்றைக் கோமான் வருக வருகவே. (7)

விற்றங் கியவி பூதியினால் விளர்ப்புற் றன்பின் வழியியங்கி
வேறு வேறாம் பரசமய வெய்ய கோடை முழுதொழியச்
சிற்றம் பலநா யகர்கருணைத் திரைவா ரிதியிற் படிந்துண்டு
திசையெங் கணுந்தோற் றிடமின்னித்தீய வொழுக்கந் தபக்கறுத்துக்
கற்றங் கமையார் மலத்துன்பங் கழல வரமா முழக்கெழுப்பிக்
கருதா நின்ற திருத்தொண்டர் காமர் வாய்ந்த சரித்திரமாங்
கொற்றம் பொலியு மழைபொழிந்த கொண்டல் வருக வருகவே
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக் கோமான் வருக வருகவே. (8)

விள்ளு மலரா தனத்தானும் வெய்ய சுதரி சனத்தானும்
விரும்பு மதிகா ரக்கதையா விளம்பா நின்ற கோல்கொள்ள
நள்ளும் பிரம சரியரெலா நாடும் பலாசக் கோல்கொள்ள
நான்கா மாச்சி ரமத்தமைந்தார் நயத்து முந்தூழ்க் கோள்கொள்ளத்
தெள்ளும் வணிகர் குலமெல்லாந் தேற்றுந் துலாக்கோ லதுகொள்ளச்
செம்பொன் மோலி யரசரெலாஞ் செங்கோல் கொள்ளச் சிறுகோல்கைக்
கொள்ளுங் குலத்தி லுதித்தவருட் கொண்டல் வருக வருகவே
குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக் கோமான் வருக வருகவே. (9)

எள்ளுந் திறத்துப் பரசமய ரேறு வருக தேறுதலி
லெங்க ளுணர்வின் கணுமதுரித் தினிக்கு மிருங்கோற் றேன் வருக
தெள்ளும் புலத்தர் பெறுகாம தேனு வருக வருகந்தர்
சிந்தா மணியைப் பொருட்படுத்தாச் செல்வச் சிந்தா மணிவருக.
வுள்ளு மவருக் கெய்ப்பிடைவைப் பொத்துள் ளெழுமொள் ளொளிவருக
வொழியாப் பத்திக் கடல்வருக வுலவா தமைந்த சிவபோகங்
கொள்ளுஞ் சைவப் பயிர்வளர்க்குங் கொண்டல் வருக வருகவே
குன்றைப் பொருமா ளிகைக்குன்றை கோமான் வருக வருகவே. (10)

வாரானைப்பருவம் முற்றிற்று.

7. அம்புலிப்பருவம்.

பாடுமதி யோனெனப் படுதலால் வாய்விண்டு பதினா யிரஞ்சுரும்பர்
பண்பாட வின்னறவு வீசுகழு நீர்மாலை பாங்குற வுவந்திடுதலா
னீடுசுடர் படுசம்பு வொடுகூட லாற்கலை நிரம்பத்தழைத் திடுதலா
னெடியவம் பரவையல றத்தோன்ற லாலென்று நிகழ்சாந்த மேயுடைமையால்
வாடுதலில் சேக்கிழா னாகலா னகுமேர் வளந்தழுவ லாலெமையன்
மானுத றெரிந்துவரு கென்றழைத் தான்மழைபெய் வானங் கிழித்துமேற்போ
யாடுகொடி மாளிகைக் குன்றைநக ராளியுட னம்புலீ யாடவாவே
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (1)

மேயவம் போருக மெலாங்குவி கரத்தினை விராமனை யடங்கவளவா -
வியன்சாலி யொடுபொலிய மகிழ்வையா லோரறவர் விழியின்வௌி வந்தொளிருவை,
பாயபர மன்சடா டவியமரும் வரநதிப் பந்தமுளை நந்தமர்கரப் -
பண்ணவனு மிகையெனப் பல்லுயிரு மோம்பிடப் படுகருவி யாய்நின்றனை,
நேயமிகு மிவையாதி யாலெங்கள் பெருமானை நிகரா திராயடுக்கு -
நிலையேழு கொண்டமையி னுலகேழு மேயென நிரம்புபா வலர்புகழுதற்,
காயமணி மாளிகைக் குன்றைநக ராளியுட னம்புலீ யாடவாவே
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (2)

இரவோ னெனத்திரிவை நீமகாப் பிரபுவென வெங்களை யன்பொலிகுவ -
னிகழ்ச்சிசால் கள்வனை யுவப்பைநீ யுவவாம லிவன்வெறுப் பானெஞான்று,
முரவோனெம் வள்ளலே நல்லோ னெடுத்தினி யுரைப்பதெவ னீயல்லோனே -
யுயர்வினா லெமன்வான வன்கா ணுரைப்பா ருனக்குமொரு தானவப்பேர்,
பரவோன லாதவ னெனல்குறித் தல்லவோ பாதிகொண் டானின்னையெம் -
பண்ணவனை முழுமையுங் கொண்டனன் காண்மணிப் பணியெனத் தோள்புனைந்த,
வரவோ னுணர்ந்திடுதி குன்றைநக ராளியுட னம்புலீ யாடவாவே
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனு டனம்புலீ யாடவாவே. (3)

சாறுசால் வீதித் திருத்தில்லை யம்பலந் தன்னிலெஞ் ஞான்று நின்று -
தாண்டவ நவிற்றியுல குய்யச் செயும்பரம சற்குரவ னினிதுசெய்யும்,
பேறுமே வியவனுக் கிரகமுழு தும்பெற்ற பெரியோ னிவற்கு வானோர் -
பேணுகுர வன்பாங்கர் நிக்கிரக மேபெற்ற பேதைநீ மாற்றுயர்ந்து,
வீறுசெம் பொன்னோ டிரும்பொத்த போதினும் மேவொப் புறாமை மண்ணும் -
விண்ணுமுண ருங்கருணை நினையழைத் தஃதிந்த விதமோர்ந்து கொடியோடும்வா
னாறுதோய் சூளிகைக் குன்றைநக ராளியுட னம்புலீ யாடவாவே -
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (4)

எம்மையினி தாள்பவன் செம்மைமதி யோனீயியற்கையே வெண்மை மதியோ -
னெற்றைக்கு மிகுதண்மை யுடையரோ டுறவுகொளு மியல்பினா னெங்களையன்,
வெம்மையுடை யவர்களொடு மதிதொறும் மதிதொறும் விராயுறவு கொள்ளுவோனீ-
வியக்குமொரு தன்மையோ னெங்கள்கிரு பாமூர்த்தி மெய்ம்மையொரு கால்வளருவாய்,
மும்மையுல கறியவொரு காற்றேய்கு வாயிவை முயங்காதொர் காலொழிகுவாய் -
மொழியுநீயிவையோர்ந்து மாடவா வென்றது முழுக்கருணை காணெஞ்ஞான்று,
மம்மையனை யார்மருவு குன்றைநக ராளியுட னம்புலீ யாடவாவே -
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீயாடவாவே. (5)

குறையுடைய பாம்பொன் றெடுத்துண் டுமிழ்ந்திடக் குலைகுலைந் துழல்வை யெங்கள் -
கோமான் பெருங்கல்வி யாட்சியை யுணர்ந்துசெங் குருமணிச் சூட்டுமோட்டு,
நிறைவுகெழு துத்திப் பணாடவிப் பாம்பொன்று நேரடைய மன்றுணாணு -
நினையீன்ற தொருபரவை யிலகுவே பாரமென நென்னுனைத்தனையு மெண்ணேன்,
முறையினொரு சிறுதூக்கி னெழுபரவை யும்புக முடித்துற நிறுத்தானிவன் -
மொழியெங்க டம்பிரான் வல்லப முணர்ந்திலைகொன் முத்தமா ளிகைவானயாற்,
றறைமணித் திடராய குன்றைநக ராளியுடனம்புலீ யாடவாவே -
யருளருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (6)

செறிதமிழ்ச் சங்கத்து முதன்மையோ னன்பினைந் திணையென நவின்ற நூலிற் -
செப்பிய விதிப்படிக் கரிகுழைத் தெழுதுகட் செய்யவாய் வெண்ணகைநலார்,
முறிவற வணங்குதோ றெருவிடுத லால்வளரு மொய்ம்பு பெற்றனையெநாளு -
மொய்த்தவெரு விடுதலத னால்வளர்த லுழவுதொழின் முயலிவன் காட்டுதொழிலே,
மறிவரிய விந்நன்றி யுள்ளுணர்ந் தனையென்னின் வாரா திருப்பை கொல்லோ -
மதியோ னெனும்பெயர் குறிப்புறா மற்கவிக மகன்வாதி வாக்கியாய,
வறிவர்கழ கம்பரவு குன்றைநக ராளியுட னம்புலீயாடவாவே -
யருளருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (7)

பெருநாவ லோவெனு முழக்கறா மென்பாற் பிறங்குபயிர் கொடி செடியெலாம் -
பேணுங் கருக்கொள்ள நீயுப கரித்தலுட் பேணா திருத்தானலன்,
திருநாவ லூர்சீ காழியார் கூனறத் திருவாய் மலர்ந்த தொப்பச் -
செயிர் கொணின் கூனொழிப் பான்வாய் மலர்ந்துகூன் செய்யுளினு முறவைத்திலா,
னொருநாவ லொடுபெயர் பெறும்பொலத் தினுமருமை யுறநவில்புராணத்தினோ -
ரொப்பிலா வெங்கள்பெரு மானட்பு மதிநிற் குயிர்க்குறுதி செய்வதாகு,
மருநாவ லோர்பரவு குன்றைநக ராளியுட னம்புலீ யாடவாவே -
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (8)

தலைமயிர்க் பறித்துமரை யிற்பா யுடுத்துந் தழைத்திரள்கை வைத்து முழலுஞ்
சழக்கர்மத மாங்களங் கம்பரவ நீக்கியுயர் சைவநிலை யெங்குமாக்கு,
நிலையுடைய தம்பிரா னின்களங் கம்போக்கி நிகழ்புனித மேயாக்குவா -
னீடுமிதன் மேலுறுதி யென்னைகொ னினக்கின்னு நேரளப் பரயசான்றோர்,
கலைபலவு மோருருக் கொண்டனைய ரருணோக்கு காதலார் நிற்கவுநினைக் -
கடைக்கணித் தாடவா வென்றழைத் ததுபெருங் கருணையே கங்கை யினுமிக்,
கலைமருவு புனல்வளக் குன்றைநக ராளியுட னம்புலி யாடவாவே -
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (9)

காதலொடு வாவென் றழைத்தவுடன் வந்திலான் கருதியதெனென்று சற்றே -
கறுக்கச் சிவத்தல்கூ டாதுநாண் பூண்டான் களங்கத் திறத்தினென்று,
போதலுற யாம்புகன் றேமினி முனிந்திடிற் போக்குவே றில்லையாகும் -
புன்மையா னிவனென்றோர் கவிகூறின் முக்கட் புராதனனு முனைவெறுப்பன்,
வீதலுற லேயன்றி வேறொன்று முள்ளதுகொல் விளைகுவ தனைத்துமோர்ந்து -
மேயினேன் மேயினே னென்றடையி னலமுண்டு மேலுலக வாழ்க்கையோர்மிக்,
காதலுற விழைதருங் குன்றைநக ராளியுட னம்புலி யாடவாவே -
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட னம்புலீ யாடவாவே. (10)

அம்புலிப்பருவம் முற்றிற்று.

8. சிற்றிற்பருவம்.

வாருந் திருவீ தியினொருசார் வண்ணித் திலங்கள் கொடுமுயன்று
வகுக்குந் திறத்தே யறிவுசெலு மாண்பா னினது வரவுணரா
தாருமிருக்கை யெழாதிருந்தோ மறிந்து தருக்கி யிருந்திலமா
லண்ண லஃதுட் கொண்டுபகை யமையப் பாராட் டுதலழகோ
வோரும் புகழ்க்கற் பகத்தளிக ளொருங்கு மொய்ப்ப தெவனென்றே
யும்பர் நடுங்கி நிலைகுலைய வொருவேற் றுமையு முணர்வரிதாச்
சேரும் பொழிற்றண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (1)

ஒழிக்குந் திறத்தி னருகந்த னுறையாநின்ற பாழிகொலவ்
வுறுவ ரமரும் பள்ளிகொன்மற் றுள்ளா ராய பரசமயர்
பழிக்கும் படிவா ழிருக்கைகொல்யாம் பாங்கிற் புரியிச் சிறுவீடு
பதத்திற் சிதைத்தால் வருகின்ற பயன்புண் ணியமோ புகழ்கொல்லோ
சுழிக்குஞ் செலவிற் பாலிநதி சுரந்து பாய மாலியானைத்
தொண்டை யெடுப்பு மறையும்விதந் துவன்றி வளர்ந்து வினைசெந்நெல்
செழிக்கும் வயற்றண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (2)

வெய்ய வமையும் பரசமய விருப்பஞ் சுமந்த திருவில்லார்
வினையைச் சிதைத்தி யவர்மாயை வீயச் சிதைத்தி யாணவமு
நையச்சிதைத்தி யிவைசிதைத்தா னாடும் புகழ்புண் ணியமிரண்டு
நாளு நினக்கு மேன்மேலா நகையா மெங்கள் செயல்சிதைத்தல் 
வையம் வியக்குஞ் செங்கரும்பும் வாழைக் குலையும் பசுங்கமுகும்
வயங்கு மிளநீ ரிலாங்கலியு மகவா னவைக்கோ ரலங்காரஞ்
செய்ய வுயர்தண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (3)

பொருந்து நிலத்தே ராலுழுதல் புகழாம் விதியு மதுவாகும்
பொருந்தா நிலங்கா லாலுழுதல் புகன்ற விரண்டு ளொன்றாமோ
வருந்து மரிய திருவடியு மண்டு புழுதி யடையுநறு
மலர்தோய் பவைமற் றிதுதோய்தல் வழக்கோ கண்டார் சகிப்பாரோ
முருந்து முறுவன் மடமாதர் முயங்கும் பொழில்வாய்க் கருஞ்சுரும்பர்
முரலா நின்ற பண்கேட்டு முகந்து கொடுக்கும் பொற்காசிற்
செருந்து மலர்தண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (4)

உற்றார் சகியார் புனலாட்ட லுரியார் பலரு மடிக்கடியிவ்
வொல்லாப் புழுதி தோய்வெவனென் றுரைப்பார் தவஞ்செய் தருமருந்திற்
பெற்றார் செவியோ ரினும்பதைப்பார் பிறங்கக் காணி லென்படுவார்
பேசா வருமை பாராட்டிப் பேணி யெடுப்பா ரையுஞ்சினப்பார்
கற்றா ரரிய நூல்பலவுங் கண்டார் விளங்க நூலினுரை
கரைந்தார் வரைந்து சிவனடியிற் கலந்தார் கடிந்து பரசமயஞ்
செற்றார் செறிதண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (5)

தாங்கும் வளவ னனபாயன் றன்கண் மணியா யவனமைச்சர்
தங்கள் சூளா மணியாயுத் தமச்சோ ழப்பல் லவனெனும்பே
ரோங்கும் படிகொள் விண்மணியா யுவக்கு மடியார் சரித்திரமுற்
றுரைசெய் தருள்சிந் தாமணியா யுயர்வு பூணி னிளம்பருவ
வாங்கும் பிறைநன் னுதலார்செய் வண்டல் சிதைக்க வேண்டுவதோ
வாழைக் குருத்து மதிநடுப்போய் மாரன் குடைக்கோர் காம்பாகித்
தேங்குந் திருத்தண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (6)

ஏத மகல வளவன்முன மேற்று குடிக ளொருநாற்பத்
தெண்ணா யிரத்து ளொருகுடியென் றியம்பே மபய னமாத்தியருட்
போத மருவு மொருவ னெனப் புகலேம் புராணஞ் செய்தாருட்
பொலியு மொருவ னெனநவிலேம் புகலின் மூவ ருளுமொருவ
னாத மகன்ற பரமனென நவிலி னடைவ தடையுமென
னன்று தெரிந்தே மெங்கள்செய னயவா திருக்குந் திறமென்னே
சீத வளத்தண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (7)

பொன்னஞ் சிலம்பு புலம்படிமண் பொருந்தித் துளையும் விழைவடையிற்
பொலியும் பற்ப லுபநிடதம் புகறல் கேட்டு நீறொருவு
முன்னங் கொள்சிற் சிலர்நுதலின் முயங்கிப் படிந்த மண்டோய்ந்து
முருங்கத் துளைதல் கூடிடினம் மோக மவர்நீத் துய்வாரே
கன்னங் கரிய கடாப்பாய்ந்து காமர் பொய்கை நீர்கலக்கல்
கழிந்தோட் டெடுக்க வராலெழுந்து கடுக மோதப் பலவுதிருந்
தென்னம் பழத்தண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (8)

மாறு படுமன் னவரெனினும் வளவன் கழற்கா றொழினவர்வாழ்
மணிமா ளிகைகண் மிக்குயரு மாறு விடுப்பாய் மறையோர்முற்
கூறு படுநம் பரனடியார் குறிப்புள் ளுணர்ந்து நெடுவானுங்
குறுக நிமிர்மா டங்கள்பல குயிற்றிக் கொடுத்துக் குடியமைப்பாய்
வேறு படுமா றியாம்வகுத்த வீட்டை விடுத்துச் செலின்வரலென்
வேழக் கரும்பின் சாறோடி விரிந்த கரம்பும் பாய்ந்துகுழை
சேறு படுதண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (9)

அலைக்கும் புனல்சூ ழம்பலத்தி லாடும் பெருமா னருள்பெற்றா
லவன்செய் தொழிலோ ரைந்துண்டு வமைந்த தொழிலோ மேற்கோட
னிலைக்குங் கடையென் றொழித்தனையோ நினையா நிற்கு மனுக்கிரக
நீயே யதுசெய் யாவிடினெந் நிரப்பு நீக்கு பவரியாரே
மலைக்கும் பிறவிப் பிணிமருந்தே வாழ்த்து வார்சிந் தாமணியே
வயங்குஞ் சைவப் பெருவாழ்வே மாறாக் கருணை மாக்கடலே
சிலைக்குந் தமிழ்த்தண் டகநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா சிற்றில் சிதையேலே. (10)

சிற்றிற்பருவம் முற்றிற்று.

9.  சிறுபறைப்பருவம்.

ஆயபர சமயக் கருங்கடா யானைக் கரிக்குருளை வாய்முழக்கு -
மரும்புகழ்ச் சைவப் பசும்பயிர்க் குலகுசூ ழாழியுண் புயன்முழக்கும்,
பாயமிடி யாளருக் களவில்பொன் செறிசெய்த பண்டார வாய்திறந்து -
பலவுங் கவர்ந்திடுமி னெனறெரித் திடுகொடைப் பயன்முரசி னெழுமுழக்கு,
நேயமிகு வளவர்பெரு மாற்காக வப்பாரி னேர்ந்ததன் படையெழுப்பு -
நிலாம்பணை முழக்குமா கக்குணின் மலர்க்கைகொடு நிகழ்பாலி வளனுணர்ந்து,
தேயமுழு தும்பரவு துண்டீர வளநாட சிறுபறை முழக்கி யருளே -
தென்றலங் கன்றுலவு மன்றவொண் குன்றைமுனி சிறுபறை முழக்கியருளே. (1)

ஓங்குமுனி வரரிருவர் கைகுவித் தரமுழக் குறவெழுப் பிக்களிக்க -
வுலகமுழு தீன்றசிவ காமவல் லித்தா யுலோசனம் விடுத்துநிற்கப்,
பாங்குபுனை செம்பொனம் பலநடன நவிலும் பரஞ்சோதி மதுவொழுக்கும் -
பச்சைத் துழாயண்ணன் மத்தள முழக்கினும் பரவுபே ருவகை பூப்ப,
வாங்குதிரை யாற்பாலி வீசுசெம் மணியும்வெள் வயிரமுங் கரைவிராவ -
வண்படுகர் மேயும்வளை கோட்டெருமை யதுகண்டு வாய்வேரீஇ யோட்டெடுக்குந்,
தேங்குதிரு வம்பரவு துண்டீர வளநாட சிறுபறை முழக்கி யருளே -
தென்றலங் கன்றுலவு மன்றவொண் குன்றைமுனி சிறுபறை முழக்கியருளே. (2)

புகழ்சரியை கிரியையை யனுட்டித்து வருகின்ற புண்ணியப் பேற்றினார்க்குப் -
புலரியிற் சிவபிரான் றளியெழுஞ் சங்கமுற் போதரு முழக்காகவு,
மிகழ்வில்சிவ யோகசா தனமரீஇ யம்முறை யியங்குதிற லாளருக்காங் -
கெழுகின்ற சங்கபட கம்பேரி யாதியி னிசைப்பெரு முழக்காகவு,
மகழ்கின்ற பாலியாற் றலையெழீஇக் கற்பக மலைத்தோட வதனடிக்க -
ணவாய்நின்ற காமதே னுவை நோக்கி நின்னா லமைந்ததிப் படரெனநனி,
திகழ்கின்ற செல்வமுயர் துண்டீர வளநாட சிறுபறை முழக்கி யருளே -
தென்றலங் கன்றுலவு மன்றவொண் குன்றைமுனி சிறுபறை முழக்கியருளே. (3)

ஆன்றசிவ புண்ணிய முழக்கமும் பற்பலவ ராயவடி யவர்தம்வரலா -
றாகிய சரித்திர முழக்கமுந் தெய்வமண மகலாத தமிழ்முழக்கு,
மேன்றபல் வரமுழக் கமுமிணை யிலாதாய வினியதிரு வருண்முழக்கு -
மெய்துதற் கரிதாஞ் சிவானுபோ கப்பே ரிரும்பெரு முழக்குமான,
மான்றபைங் கமுகம் பொழிற்றலைத் தவிர்செய்ய மதுவநிறை தேத்தடைக்கண் -
வான்பிறைக் கோடுதற் கவரின னெனக்கீள வாவிகுள மோடை யெங்குந்,
தேன்றவழ வதுவிழுந் துண்டீர வளநாட சிறுபறை முழக்கி யருளே -
தென்றலங் கன்றுலவு மன்றவொண் குன்றைமுனி சிறுபறை முழக்கியருளே. (4)

வில்லூரு மணிமோலி வளவர்பெரு மான்பொனடி வீழாத மருவலர்க்கும் -
வெண்ணீறு கண்மணி புனைந்தைந் தெழுத்தெணா வீணராஞ் சமயருக்கு,
மெல்லூரு மொண்சிவ மணங்கமழ்த லில்லா தியைந்தசந் தாமணிமுத -
லெந்நூற்கு நெய்தலம் பறைமுழக் கேயாக வெல்லொளி மழுக்குமேனிச்,
சொல்லூரு மெம்பிரான் பெருமதம் பொழிமண் டுழாங்கைமா லியானைதந்த -
தோற்போர்வை போர்த்தெனத் தென்றல்வந் துலவவழ றோற்றுதேமாஞ் சோலைமேற்,
செல்லூரு மேன்மையமை துண்டீர வளநாட சிறுபறை முழக்கி யருளே -
தென்றலங் கன்றுலவு மன்றவொண் குன்றைமுனி சிறுபறை முழக்கியருளே. (5)

வேறு.

பிதிருந் தரமற வின்பா லளவிப் பிழிசுவை மதுவிரவிப்
பிறங்கிய புல்ல கண்ட நிறீஇச்சுவை பெறுங்கண் டுங்கூட்டி
யெதிரும் பொருளில் பாலக்கனி மாங்கனி யிவைவா ழைக்கனிமு
னியையு முழுக்கனி முந்திரி கைக்கனி யிவ்விர தமுநாட்டி
யதிருங் கடலமிர் தமுமு ளுறுத்தி யவாங்குழல் வீணையிசை
யத்தனை யும்புக வைத்துச் சிவமண மகலா தேகமழ
முதிரு மருட்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே
முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே. (6)

அத்தி தருங்கவி யென்மரு நன்றா வறைகுதி ரம்மட்டோ
வவாவிய புத்தி தருங்கவி யென்மரு மதுமட் டோவின்னுஞ்
சித்தி தருங்கவி யென்மரு மெல்லாத் தீர்த்தங் களுமுறுமா
செய்யாச் சுத்தி தருங்கவி யென்மருஞ் செப்பிய வம்மட்டோ
பத்தி தருங்கவி யென்மரு மாகிப் பாரிற் புலவரெலாம்
பல்லா ரோதுபு பாராட் டக்கதி பற்றிய பல்லோர்க்கு
முத்தி தருங்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே
முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே. (7)

கனிவி லெமைப்பொரு வார்களு நெஞ்சு கரைந்துருகக்
காமரு பத்தியும் வயிராக் கியமும் கவினக் குதிகொள்ளத்
தனிவில் பொன்மேரு வெனக்கொடு திரிபுர தகனம் புரிபெருமான்
றயங்குபொ னம்பல நின்றுபல் லோரஞ் சலிசெய நடநவில
நனிவி லிடும்புகழ் மிகுசம் பந்தரு நாவுக் கிறையவரு
நாவலர் கோவுஞ் சிரகர கம்பித நன்கு புரிந்தருள
முனிவி றமிழ்க்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே
முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே. (8)

நந்து புராணமெவ் வளவா யிற்றென நாடுறு மனபாய
னகைமகிழ் பூப்ப மணிக்கா லாயிர நண்ணிய மண்டபவாய்
வந்து விராவு மிடத்தி னமர்ந்து வயங்குறு கையேட்டின்
மாண்பார் கண்டங் கொண்டங் கெழுதுநர் மாறா தேயெழுதப்
பிந்து வரைந்த வெழுத்தினு ளொன்றும் பெயரா தக்கரமாம்
பெயர்ப்பொரு டேற்றுபு நிலைபெற யார்க்கும் பெட்கும் விருப்பமெழ
முந்து தமிழ்க்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே
முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே. (9)

தங்கு தமக்கெதிர் நின்றுள முருகத் தரிசித் திடுவளவன்
றன்செவி பரிசன ரஞ்செவி மறையவர் தஞ்செவி யுங்கேட்க
வெங்கு மளாம்புக ழிச்சே வையர்கோன் யாமே முதனல்க
வெம்மடி யார்வர லாறு முழுக்க வினிக்கப் பாடினனாற்
பொங்கு விருப்பிற் கேட்குக வென்னாப் பொன்னம் பலவாணர்
பொலிதிரு வாக்கடி ஞெகிழியி னொலியொடு பொற்ப வெழுப்பவருண்
முங்கு தமிழ்க்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே
முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே. (10)

சிறுபறைப்பருவம் முற்றிற்று.

10. சிறுதேர்ப்பருவம்.

மருவாய் நறுந்தா தகித்தொங்கல் வளவர்கோ மகனுடனிவர்ந்திரு கையு -
மணிக்கவரி வாங்கிவீ சக்கற் பகப்பூ மகிழ்ந்து வானாடர் தூற்றப்,
பெருவாய் திறந்துபட கம்பேரி முதலாம் பெரும்பணை யெலாமுழங்கப் -
பிறங்குமூ வாயிரவர் முதலியோர் மறையொலி பிறங்கத் தொடர்ந்து போதக்,
கருவா யுறாமற்றை யாருந் தலைக்குமேற் கைகுவித் தேத்தி மேவக் -
கருதும் புராணமுடி விற்குஞ்ச ரத்தில கடத்திவர்ந் தோங்குதில்லைத்,
தெருவா யுலாப்போது சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டியருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (1)

முறியுமல ரும்பொருவு திருமேனி யுமையம்மை மூவுல குயத்தழுவுபு -
மூரிப் புனற்கம்பை யெம்பிரான் றிருமேனி முற்றுங் குழைத்தஞான்றி,
லறியும்வகை யறமெலாம் பொலியவிரு நாழிநெல் லளந்தப் பிரான்கொடுக்க -
வனையமா தேவியேற் றேற்றகை யுயிர்த்தமக ளாலுயிர்த் தோர்களேநன்,
னெறியுநல னும்பெருக வுளரெனல் குறித்தவர்கை நீட்டப் பணிந்து வாங்கி -
நீடுங் கொழுக்கொடுதம் மனையுதவி யானனி நிரம்பப் பெருக்கு குடியுட்,
செறியுமொரு குடியாய சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டியருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (2)

வெருவப் பகைக்கடல் சுவற்றழ லரும்புகண் விரைத்தாத கித்தொடையலான் -
வீசவீ சப்பெற்று வாம்பரி யுகைத்துமிளிர் வெங்கடாக் களிறுகைத்து,
முருவக் கதிர்த்தரள மாலைகால் யாத்திட்ட வொள்ளொளிய யானமூர்ந்து -
மொருநம்பி யாரூரனைப்புகலி யாண்டகையை யொப்பா யினாயதான்று,
மருவப் பொலிந்த மட்டேரூரின் முதலடி மரீஇயவிரு வருளொருவரு -
மானுவாய் வையக மெடுத்தேத்த நிறைபுனல் வயங்குமூ ருணிநிகர்த்த,
திருவப்பெருக்கினமை சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டியருளே -
சிறுகோ லெடுத்தாத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (3)

வசைதவிர் வினைத்திட்பம் வாய்ந்தாக வப்பாரின் மாற்றல ரெதிர்ந்த காலை -
மழைமதக் களியானை வாம்பரி சயந்தனமுன் மற்றுள வரூதினியெலா,
மசைவில்பல் படைக்கலங் கொடுநூழி லாட்டுபுப லாறா வெழுந்த நெய்த்தோ -
ரவ்வனிக வழனிழுத் தோடியுவ ராழிபுக் களவிறிடர் செய்யநோக்கி,
யிசைமல ரலங்கலொடு வாகையுஞ் சூடியா ரெய்தப் புனைந்த பெருமா -
னிரும்புலியை மேருமுடி யேற்றிப் பெருந்தே ரிணங்குற வுருட்டிநேமி,
திசைதிசை யுருட்டச்செய் சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டியருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (4)

சாதகப் பறவைக் கிரும்புயற் றுளியுஞ் சகோரத் தினுக்குதிக்குஞ் -
சந்திரன் விடுங்கரமு மம்புயத் திற்கேழு தாம்பரித் தேரிரவியு,
மேதக வுறுந்தவத் திற்கருளு மவ்வருள் விளக்கத் தினுக்குழுவலு -
மேவருங் கல்விக்கு நுண்ணறிவு நுண்ணறிவு வீக்கத் தினுக்கொழுக்கு,
நோதக விலாதமைந் தாங்கருள் வழிச்செலீஇ நோய்ப்பிறவி போக்குவார்க்கு -
நோற்றவர் புராணமில் லாத மைதராதா நுவன்றெம்மை யாண்டபெம்மான்,
றீதக மதித்திடாச் சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டியருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (5)

எய்குன்ற வார்சிலைப் பெருமா னுளத்துவகை யெய்தமறை யோர்கள் குழுமி -
யியையவுப கரணமெல் லாந்தகச் சேர்த்தினிய தென்னுமொரு தேத்தமர்ந்து,
பொய்குன்ற யாககுண் டத்தழ லெழுப்பமேற் போயபூம் புகைவானொடு -
பொலியுமுச் சைச்சிரவ மயிராவ தந்தான் பொறுத்தநிறமேவச்செயா,
மெய்குன்ற வந்தவா றென்னெனக் கற்பகம் வெதும்பப் புரிந்து பின்னும் -
விண்ணாடடங்கவு நண்ணா வரம்பையர் விழித்துணை யொருங்கி மைப்பச்,
செய்குன்றை யம்பதிச் சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டியருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (6)

புழுங்குங் கதிர்ப்பரிதி யெழமுறுக் குடைமுகப் புண்டரீகத் தடத்துப் -
பொலிதரச் சூழ்ந்துநிற் கின்றதரு விடபமலர் பொழிமது முழுக்க வீழ்ந்தே,
யெழுங்குங் குமத்தோ ளிணைந்தமுலை யார்கள்கன விரதமன் றென்றுநீங்க -
வெறிதிரை கொளுங்காலை யளவிலோ திமமாங்க ணெய்திப் படிந்து துளையா,
வழுங்குந் தரத்தவாய் மேலெழமுன் னீங்கியோ ராகமுழு வதுநனைந்தே -
யருமைவெண் முகில்செய்ய தேன்பொழித லெனவியந் தாகாய நோக்கிநிற்குஞ்,
செழுங்குன்றை யம்பதிச் சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டியருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (7)

வெங்கடிய வாணவ மலக்குருட் டிருளுளம் வெரீஇப் பதறியோட் டெடுக்கும் -
வெண்ணீறு சாதனம் விழைந்தவர்த முககமல மேவுற் றொருங்கு மலரும்,
பங்கமுற மேவு பரசமயர்வா யாம்பல்பல வுந்துயர மைந்து குவியும் -
பரவுவே தாகம புராணமெனு மங்கலப் பணைமிக் கெழுந்தொலிக்கு,
மங்கலுழு மாதரா ரூடலி னெறிந்த குழையன்றித் தடுப்பாரில -
ரவைகளையு மகலுற வகற்றினே மண்ணகத் தமையவெழு கின்றதாய,
செங்கதி ரெனச்சொலச் சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டி யருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (8)

சுவையமையு மோதகங் கனிபலவு மற்றவுந் தும்பிமுக வற்குநல்கித் -
தொழுவமுது செய்தலா லூறென் பதிந்தநகர் சூழ்நக ரினும்புகாது,
நவைய தடை யாதென்னி னச்சுமுதல் வலியவே நவிலவேண் டுவதினியெவ -
னன்னுதற் றிருநீறு நிலவெறிக் கக்குழை நலங்கொண்மனி வெயிலெறிக்க,
வவையகம் வியக்குமுப் புலவரருண் முக்கனி யருந்தமிழ்ச் சுவையனைத்து -
மாராய்ந் தெடுத்துப்பல் செய்யுண்முக மாவறிய வறிவித்த பெருநாவலன்,
சிவையுதவு சொற்கொண்ட சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டி யருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (9)

பண்புகெழு நின்சரித் திரமினிய பாவாற் பரப்பிய திருக்கைலாய -
பரம்புரை யுமாபதி சிவன்புகழு மவன்முனோர் பைம்புகழு மவன்வழிவரு,
நண்புபுனை தவர்புகழு மினிமேலும் வருபவர் நயப்புகழு நீடுவாழ -
நாடுவித நீசெய்த மாபுரா ணத்தமரு நாயன்மார் பெருமைவாழ,
விண்புகழு நால்வர்திரு வாய்மலர்ந் தருடிரா விடவேத மென்றும் வாழ -
மெய்யன் பினின்னா லயப்பணி முதற்புரி விருப்பமிக் கார்கள்வாழத்,
திண்புவி யெடுத்தேத்து சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டி யருளே -
சிறுகோ லெடுத்தரசு செங்கோ னிறுத்தினோன் சிறுதே ருருட்டியருளே. (10)

சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
 

Related Content

உறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

திருக்குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்

திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்