logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மருதூரந்தாதி

                                                        ஆறுமுக நாவலர் உரையும்

 

marutUrantAti of talaimalaikaNTa tEvar
with notes of Arumuka nAvalar 
In tamil script, unicode/utf-8 format

 

  • Source: 
    மருதூரந்தாதி.
    தலைமலைகண்டதேவர் இயற்றியது
    இஃது நாவலூர் ஆறுமுக நாவலர் செய்த உரையுடன்
    சென்னபட்டணம: களாநிதியச்சுக்கூடத்தில் பதிப்பிக்கபபட்டது.
    விபவ௵ சித்திரை மீ (1928 April)
    Copyright Reserved.
    -----------
     

    மருதூரந்தாதி : மூலமும் உரையும்

    காப்பு

    ஒரு கொம் பிருபத மும்மத நாலவா யொரை நதுகரம்
    பெருகுஞ் செவிசிறு குங்கண புகாமுகம் பெற்றத நதி
    முருகன் றமைய னுமைந்தனை நது முகனமகனமான
    மருகன் றுணை நம் மருதூர நதாதி வருவிக்கவே.

    இதனது பதப்பொருள் ஒரு கொம்பு -ஒரு கோட்டையும்; இரு பதம் - இரண்டு திருவடிகளையும்; மும்மதம் - மூன்று மதங்களையும்; நால வாய் - தூங்குகின்ற வாயையும்; ஓரைந்து கரம் – ஐந்து கரங்களையும்; பெருகும் செவி - பெருத்த காதுகளையும்; சிறுகும கண - சிறுத்த கண்களையும்; புகா முகம் - புறகென்ற நிறத்துடைய முகத்தையும்; பெற்ற தந்தி - பெற்ற யானையும்; முருகன்
    தமையன் - முருகக் கடவுளுடைய தமையனாரும்; உமை மைந்தன் - பார்ப்பதி தேவியாருக்குக் குமாரரும்; ஐந்து முகன மகன் - ஐந்து முகங்களையுடைய சிவபெருமானுக்குப் புதல்வரும்; மால மருகன் - விடடுணுவுககு மருமகனுமாகிய விநாயகக் கடவுள்; நம் மருதூரந்தாதி வருவிக்கத் துணை - நம்முடைய மருதூரந்தாதியைச் செய்தற்குத் துணையாவா என்றவாறு.
    ----------
     

    மருதந்தாதியுரை - நூல்


    திருப்பங்கையத்தநம்மாதுக்களித்தவன்செந்துவர்வாய்த் 
    திருப்பங்கையத்தன்புகூர்மருதூரன்றிரையெழுந்த
    திருப்பங்கையத்தனவாகத்தனான்முகன்றெம்முன்மழுத்
    திருப்பங்கையத்தனிருப்பனென்னெஞ்சிற்றிருக்கறவே.         (1)

    (இ - ள்) திரு அத்தம் பங்கை நம் மாதுக்கு அளித்தவன் - அழகையுடைய பாதியாகிய பாகத்தை நம்முடைய உமாதேவியாருக்குக கொடுத்தவரும்; செம் துவர் வாய்த் திருப் பங்கயத்து அன்பு கூர் மருதூரன் - செம்பவளம்போலும் வாயையுடைய இலக்குமி தாமாரைமலரின் கண் அன்பு மிகுந்திருக்கப் பெற்ற மருதூரையுடையவரும்; திரை எழுந்து அதிர் அம் கயத்து உப்பு ஆன ஆகத்தன் நான்முகன் - அலை எழுந்து ஒலிக்கின்ற நீரையுடைய ஆழமாகிய கடலைப் போன்ற சரீரத்தையுடைய விட்டுணுவுக்கும் பிரமனுக்கும்; தெவ் முன் மழுத் திருப்பு அம் கை அத்தன் - பகைவராயுள்ளார்கட்கு எதிரே மழுப்படையைத் திருப்புகின்ற அழகிய கையையு டைய பிதாவுமாகிய சிவபெருமான்; என் நெஞ்சில் திருக்கு அற இருப்பன் - என் 
    மனசின் கண்ணே குற்றம் நீங்கும் வண்ணம் எழுந்தருளியிருப்பர். எ-று. 
    கயம் - ஆழம், உப்பு - கடல், அன்ன அன என இடைக்குறைந்து நின்றது.
    -----

    திருக்கண்டநம்புமடியார்க்கொட்டாதசிவன்கரிய 
    திருக்கண்டனந்தமருதூரன்வெற்பிணிற்றிங்கள்செங்க 
    திருக்கண்டநந்தினு நந்தார்தவமுஞ்சிதைக்குமிந்தத் 
    திருக்கண்டநண்பனங்கேவந்ததாலறத்தீர்ந்தவனே.         (2)

    (இ - ள்) நம்பும் அடியார்க்குத் திருக்கு அண்ட ஒட்டாத சிவன் - (தம்மை) விரும்பும் அடியவர்கட்குக் குற்றம் அணுக விடாத சிவபிரானும்; கரிய திருக்கண்டின் - கரிய அழகிய கழுத்தையுடையவரும்; நந்தம் மருதூரன் வெற்பினில் - நம்முடைய மருதூரையுடையவருமாகிய கடவுளுடைய மலையின்கண்ணே; திங்கள் செங்கதிர் உக்கு அண்டம் நந்தினும் - சந்திரனும் சூரியனும் உதிர்ந்து அண்டங்கள் கெடினும்; நந்தார் தவமும் சிதைக்கும் இந்தத் திரு - கெடா தாராகிய முனிவருடைய தவத்தையும் கெடுக்கின்ற இந்தப் பெண்ணை; கண்ட நண்பன் அங்கே வந்ததால் அறத் தீர்ந்தவன் - கண்ட சிநேகன் அங்கே வந்தமையால் மிகத் தெளிந்தவன். எ.று. (பாங்கன் தலைவனை வியத்தல்.) 
    ------------ 

    தவனனிலங்கமலராமயன் சந்திரன்மா
    தவனனிலங்கமலமொருகால்வெம்மைத்தன்மைகுன்றா 
    தவனனிலங்கமலனவையாமவன்சாவொண்ணா
    தவனனிலங்கமலன்மருதூரன்சரணமக்கே.         (3)

    (இ - ள்,) தவனன் – சூரியனும்; இலம் கமலமலர் ஆம் அயன் – வீடு தாமரை மலராகப்பெற்ற பிரமனும்; சந்திரன் – சந்திரனும்; மாதவன் – விட்டுணுவும்; நல் நிலம் - நன்மை யாகிய பூமியும்; கமலம் - நீரும்; ஒருகால் வெம்மைத் தன்மை குன்றாதவன் - ஒருகாலத்திலும் வெம்மையாகிய குணம் நசிக்கப்பெறாதவனாகிய அக்கினியும்; அனிலம் – காற்றும்; கம் அலன் - ஆகாயமும் அல்லாதவராயும்; அவை ஆமவன் -அவைகளாவோராயும்; சார ஒண்ணாத வணன் - அடைய வொண்ணாத சுடுகாட்டையுடையவராயும்; இலங்கு அமலன் – விளங்கா நின்ற மலமுத்தராயும்; மருதூரன் - மருதூரையுடையவராயுமுள்ள சிவபெருமான்; நமக்குச் சரண் – நமக்குப் புகலிடம் எ-று. வனம் – சுடுகாடு. (3)
    -------

    நமனத்தியான நஞ்சென்னக்கொதித்தெம்மை நாடிடுமு 
    னமனத்தியான நின்பாற்செல்ல நல்குமுந் நான்குகையா 
    னமனத்தியானனனத்தபத்தர்க்கென்று நல்லவனே 
    நமனத்தியானஞ்செய்வார்மருதூருறை நாயகனே.         (4)

    (இ - ள்) நமன் அத்தி ஆன நஞ்சு என்னக் கொத்த்து எம்மை நாடிடு முன் - இயமன் கடலில் உண்டாகிய விடம்போலக் கோபித்து நம்மைத் தேடுமுன்னா; நம் மனம் தியானம் நின்பால் செல்ல நலகு - நமது மனசினாலே செய்யப்படும் தியானம் உம்மிடத்தே செல்லும்வண்ணம் அருள்செய்யும்; முகநான்கு கை ஆன மன் – பன்னிரண்டு திருக்கரங்கள் (தமக்கு) உண்டாகப்பெற்ற தலைவராகிய முருகக் கடவுளுக்கும்; அத்தி ஆனனன் அத்த - யானையினது முகத்தையுடையவராகிய விநாயகக் கடவுளுக்கும் பிதாவே; பக்தர்க்கு என்றும் நல்லவனே - அன்பர்கட்கு எந்நாளும் நல்லவரே; நம - (உமக்கு) வணக்கம்; நத்து யானம் செய்வார் மருதூர் உறை நாயகனே - சங்குகள் ஊர்தலைச் செய்கின்ற நீரையுடைய மருதூரின்கண் எழுந்தருளியிரா நின்ற தலைவரே, எ-று. யானம் - ஊர்தல், வார - நீர். 
    ------------- 

    அகனகத்தானத்தடி வீழ்ந்தலறவடியொன்றினா 
    யகனகத்தானத்த நாலை நதினானையடர்த்தவன்றூ
    யகனகத்தான்மதில்சூழ்மருதூாரையடையவரே 
    யகனகத்தா நினைத்தைம்புலத்துன்பமறுப்பவரே.         (5)

    (இ -ள்) அகல் நகம் தானத்து அடி வீழ்ந்து அலற - பரந்த (கைலாச) மலையாகிய இடத்தினிது அடியின்கண் விழுந்து கதறும்வண்ணம்; அடி ஒன்றின் நாயகம் நகத்தான் அத்தம் நாலத்தினானை அடர்த்தவன் - ஒருபாதத்திலுள்ள பெருலிரனகத்தினால் இருபது கைகளையுடையவனாகிய இராவணனை வருத்தினவராகிய சிவபெருமானுடைய; தூய கனகத்தான் மதில் சூழ் மருதூரை அடையவரே - சுத்தமாகிய பொன்னினாலே மதில்கள் சூழப்பெற்ற மருதூரைச் சேர்பவரே; அகன் நகத் தாம் நினைத்து - (தம்) மனம் மலரும்வண்ணம் தாம் சிந்தித்து; ஐம்புலம் துன்பம் அறுப்பவர் - ஐம்புலன்களாலாகிய துன்பங்களை ஒழிப்பவர் எ-று, சிவபெருமானுடைய மருதூரையெனக் கூட்டுக. 
    ------------

    அறுகாலனஞ்செறிவார்மருதூரையாழியின்பா 
    லறு காலனஞ்சமாகண்டாரைத்தொண்டரையாள்பவரை
    யறுகாலனஞ்சொரிவேள்வியினால்வணங்கன் பாக்கரு 
    ளறுகாலனஞ்சவருகாலமுமோ ரலைவில்லையே.         (6)

    (இ-ள்) அற கால் அனம் செறிவார் மருதூரரை - வண்டுகளும் அன்னங்களும் நெருங்குகின்ற நீரையுடைய மருதூரையுடையவரும்; ஆழியின்பால் அறு காலன் நஞ்சு அமர் கண்டரை - கடலினிடத்துள்ள சேடனுடைய விடம் பொருந்திய கழுத்தினை-யுடையவரும்; தொண்டரை ஆள்பவரை - அடியார்களை ஆள்பவருமாகிய சிவபெருமானை; அறுகு ஆல் அனம் சொரி வேள்வியினால் வணங்கு அன்பர்க்கு - அறுகையும் ஆலஞ்சமித்தையும் அன்னத்தையும் சொரிகின்ற யாகத்தினால் வணங்குகின்ற பத்தர்களுக்கு ; அருள் அறு காலன் அஞ்ச வரு காலமும் - கருணை அற்ற இயமன் அஞ்சம் வண்ணம் வருகின்ற காலத்திலும்; ஒரலைவு இல்லை –ஒருதுன்பமும் இல்லை. எ-று.
    -------------- 

    அலையம்புயங்கமணிமுடியான்கொன்றையந்தொடைய 
    லலையம்புயன்மருதூர்வைகைநாட்டினிலாலைவிற்பை
    யலையம்புயங்கும்வினைபோய்த்துயருமகல்கைக்குவந்
    தலையம்புயமலர்ப்பான்றொலைப்பானென்றரிவையரே.         (7)

    (இ- ள்) அலை அம் புயங்கம் அணி முடியான்- திரையையுடைய கங்காசலத்தையும் பாம்பையும் அணிந்த முடியை யுடையவரும்; அம் கொன்றைத் தொடையல் அலை அம் புயன் - அழகிய கொன்றைமாலை அசைகின்ற அழகிய புயத்தையுடையவருமாகிய சிவபெருமானுடைய; மருதூர் வைகை நாட்டினில் - மருதூரைத் தன்னிடத்துடைய வைகைநீதி சூழ்ந்த நாட்டின் கண்ணே; ஆலை வில் பையல் ஐயம்பு உயங்கும் வினை போய் - கருப்புவில்லையுடைய சிறுவனாகிய மன்மதன் ஐந்து பாணங்களினால் (என்னை) வருத்துகின்ற தொழில் நீங்கி; துயரும் அகல்கைக்கு - துன்பமும் ஒழிதற்பொருட்டு; அலை அம்புயம் அலர்ப்பான் என்று வந்து தொலைப்பான்- இவ்விரவைத் தாமரைமலரை அலர்த்துவோனாகிய சூரியன் எப்பொழுது வந்து போக்குவான்; அரிவையரே - பெண்களே. எ-று, நான்காமடியில் அல்லையென்பது அலையென இடைக்குறைந்து நின்றது. [இரவினீட்டம்]
    --------------- 

    அரியரவிந்தன்புகழ்மருதூருறையையன்றுய்ய 
    வரியரவிந்தம்புனைவோன்சிலம்பினதர்மனித 
    ரரியரவிந்தமதமாவினையமராகுலத்துக் 
    கரியரவிந்தமுயலூன்றின்றேகுமவதரித்தே.         (8)

    (இ - ள்) அரி அரவிந்தன் புகழ் மருதூர் உறை ஐயன்-விட்டுணுவும் பிரமனும் புகழும் மருதூரின்கண் எழுந்தருளி யிராகின்ற பிதாவும்; துய்ய அரி அரவு இந்து அம்புனைவோன் - சுத்தமாகிய அக்கினியையும் பாம்பையும் சந்திரனையும் தங்காசலத்தையும் அணிபவருமாகிய சிவபெருமானுடையன; சிலம்பின் அதர் - மலையினிடத்ததாகிய வழியின்கண்ணே ; மனிதர் அரியர் - மனிதர்கள் அரியர்கள்; அ விந்தம் மதம் மாவினை அமரா - அந்த விந்தமலைபோலும் மதத்தையுடைய யானைகள் தந்தொழிலின் அடங்காவாம்; குலத்துக்கு அரியர் - குலத்தின்கண்ணே (நாம்) மேலோர்; அவதரித்து அவிந்த முயல் ஊன்தின்று ஏகும் - (நீங்கள் இங்கே) தங்கி வெந்த முயலிறைச்சியை உண்டு ( நாளைப்) போங்கள். எ-று. (விருந்து விலக்கல்).
    ---------------------

    அவதரிக்கும்புகழ்மாமருதூரனென்னைம்புலனா 
    யவதரிக்கும்பகைசெற்றாளரன்வெற்பினாரழலவா 
    யவதரிக்கும்பசுந்தேனுந்தருஞ்சொல்முதொழுகி 
    யவதரிக்கும்பொறுக்கப்படைத்தான் கமலாலையனே.         (9)

    (இ -ள்) அவதரிக்கும் புகழ் மா மருதூரன் - தங்குகின்ற கீர்த்தியையுடைய பெரிய மருதூரையுடையவரும்; என் ஐம்புலன் ஆய் அவதரிக்கும் பகை செற்று ஆள் அரன் - என்னுடைய ஐம்புலன்களாய்ப் பிறக்கும் பகையைக் கெடுத்து ஆண்டருளும் அரனென்னுந் திருநாமத்தை யுடையவருமாகிய சிவபெருமானுடைய; வெற்பின் ஆர் அழல் வாய அதர் - மலையின்கண்ணே நிறைந்த அக்கினியைத் தன்னிடத்துடைத் தாகிய வழியை; இக்கும் பசுங்தேனும் தரும் சொல் அமுது ஒழுகிய அதரிக்கும் - கருப்பஞ்சாற்றையும் பசுங்தேனையும் போலும் சொல்லாகிய அமுதம் ஒழுகப்பெற்ற அதரத்தையுடையவனாகிய பெண்ணுக்கும்; பொறுக்கப் படைத்தான் கமலாலயன் - பொறுக்கும்படி படைத்தனன் பிரமன். எ-று. [பின்சென்ற செவிலி இரங்கல்].
    ----------

    ஆலையனங்கனெய்யாமனெஞ்சே நம்மையன்பர்சிந்தை 
    யாலையனங்கமங்கத்தணிவோன ரனாரமளி 
    யாலையனங்கம்வருந்தியு ந்தேடற்கரியவன்கை 
    யாலையனங்கங்கொண்டோன்மருதூரனடிவணங்கே.         (10)

    (இ - ள்) நெஞ்சே – மனமே; ஆலை அனங்கன் நம்மை எய்யாமல் – கருப்பு வில்லையுடைய மன்மதன் எம்மை எய்யா வண்ணம்; அன்பா சிந்தை ஆலயன் - பக்தர்களுடைய இருதயமாகிய திருக்கோயிலேயுடையவரும்; அங்கம் அக்கத்து அணிவோன் - எலும்பைத் திருமேனியிலே தரிப்பவரும்; அரன் – அரனென்னுந் திருகாமத்தையுடையவரும்; ஆர் அமளி ஆல் ஐயன் அங்கம் வருந்தியும் தேடற்கு அரியவன் - தங்கிய சயனம் ஆலிலையாகக் கொண்ட விட்டுணு சரீரம் வருத்தமுற்றும் தேடிக் காண்டற்கு அரியவரும்; கையால் அயன் அம் கம் கொண்டோன் - திருக்கரத்தினாலே பிரமனுடைய அழகிய தலையை அறுத்துக்கொண்டவரும்; மருதூரன் அடி வணங்கு - மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய திருவடிகளை நீ வணங்குவாயாக. எ-று. எய்யாவண்ணம் சிவபெருமானுடைய திருவடிகளை நீ வணங்குவாயாகவெனக் கூட்டுக. 
    --------------- 

    வணங்கரியார்தமக்கன்பற்றவரன்று வன்றொண்டர்க்கா 
    வணங்கரியார்முன்புகாட்டவல்லார்கையும்வாயுஞ்செய்ய 
    வணங்கரியாரயன் காண்பரியார்மருதூரைங்கை 
    வணங்கரியார்தந்தையாரெந்தையாரெம்மனத்தவரே.         (11)

    (இ-ள்) வணங்கு அரியார்தமக்கு அன்பு அற்றவர்- (தம்மை) வணங்குதல் அரியசாயினாருக்கு அன்பு இல்லாதவரும்; அன்று வன்றொண்டர்க்கு ஆவணம் கரியார் முன்பு காட்ட வல்லார் - அக்காலத்திலே சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடிமையோலையைச் சாக்ஷிகளெதிரே காட்ட வல்லவரும் ; கை வாயும் செய்ய வணம் கரியார் அயன் காண்பு அரியார் - கையும் வாயும் சிவந்தவராய் (உடம்பு ) நிறம் கரியவராயுள்ள விட்டுணுவும் பிரமனும் காண்டற்கு அரியவரும்; மருதூரர் – மருதூரையுடையவரும்; ஐங்கை வள் நம் கரியார் தந்தையார் – ஐந்து திருக்கரங்களையும் கொடையையுமுடைய நம்முடைய யானைமுகக் கடவுளுக்குப் பிதாவும்; எந்தையார் - எமக்குப் பிதாவுமாகிய சிவபெருமான்; எம்மனத்தவர் - நம்
    திருதயத்தின் கணுள்ளவர். எ-று. 
    --------------- 

    மனமாறுகைக்கெம்மைவந்தாளு நாதன்வரம்பெறவா 
    மனமாறுகைக்கு ந்திருவாயிற்கோபுரமாமருதூர
    மனமாறுகைக்கொண்டடிக்க நின்றோன் கொன்றைமாமலர்த்தா
    மனமாறுகைக்குஞ்சடையானென வினைமாறுமன்றே.         (12)

    (இ - ள்) மனம் ஆறுகைக்கு வந்த எம்மை ஆளும் நாதன் - (நமது) நெஞ்சம் ஆறுதற்பொருட்டு வந்து நம்மை ஆண்டருளும் தலைவர்; வரம் பெற வாமனம் மால் துகைக்கும் திருவாயில் கோபுரம் மாமருதூர் மன் - வரத்தைப் பெறுதற்குக் குறளுருக்கொண்ட விட்டுணு சஞ்சரிக்கின்ற திருவாயிலையுடைய கோபுரத்தை யுடைய பெரிய மருதூருக்கு அரசர் ; அம் மாறு கைக் கொண்டு அடிக்க நின்றோன் -அழகிய பிரம்பைக் கையிற்கொண்டு (பாண்டியன்) அடிக்க நின்றவர்; மா கொன்றை மலர்த் தாமன் - பெரிய கொன்றைப்பூவினாலே தொடுக்கப்பட்ட மாலையை-யுடையவர்; அம் ஆறு உகைக்கும் சடையான் என - சலத்தையுடிய நதி ஓடா நின்ற சடையையுடையவர் என்று சொல்ல; அன்றே வினை மாறும் - அப்பொழுதே வினைகள் நீங்கிவிடும். எ . று. 
    ----------------

    மாறாமதிக்கமறலியைச்செற்றவன்வஞ்சமென்று
    மாறாமதிக்கபடர்க்கொளிப்பானரன்வண்ணவளை
    மாறாமதிக்கமறுகூடுசென்றவன்மாமருதூர் 
    மாறாமதிக்கநந்தேர்முந்துமாயின்வலவ நன்றே,         (13)

    (இ-ள்) மாறா மதிக்க மறலியைச் செற்றவன் - விரோதமாகத் தருக்குற இயமனைக் கொன்றவரும்; வஞ்சம் என் அம் மாறா மதிக் கபடர்க்கு ஒளிப்பான் - வஞ்சகம் எந்நாளும் நீங்காத புத்தியையுடைய கபடர்களுக்கு ஒளிப்பவரும்; அரன் – அரனென்றுந் திருநாமத்தையுடையவரும்; வண்ணம் வளை மாறா மதிக்க மறுகு ஊடு சென்றவன் . பல நிறங்களையுடைய வளையல்களை விற்றுக்கொண்டு (கண்டவர்) மதிக்கும் வண்ணம் (மதுரை) வீதியினிடத்தே திரிந்தவருமாகிய சிவபெருமானுடைய; மாமருதூர் - பெரிய மருதூரின் கண்ணே; மால் தாமதிக்க நம் தேர் முந்துமாயின் - மேகம் தாழ்க்க நமது தேர் முற்பட்டுச் செல்லுமாயின்; வலவ நன்று - தேர்ப்பாகனே, நல்லது. எ று. [தலைவன் பாகனோடு சொல்லல்]
    -------------- 

    வலவம்படமழுவேந்தியவேந்தவரித்தசித்திர 
    வலவம்படவளருந்தனபாரமலைமகள்கா 
    வலவம்படர்பொழில்சூழ்மருதூரமதன்விரக 
    வலவம்படவரும்போதென்னேயாளவரவல்லையே.         (14)

    (இ-ள்) வலவம் பட மழு ஏந்திய - வேந்த (பகைவருடைய) வலிமை அழியும் பொருட்டு மழுப்படையைத் தாங்கிய இறைவரே; வரித்த சித்திரம் வல் அவம் பட வளரும் தனபாரம் மலைமகள் காவல - எழுதப்பட்ட அழகையுடைய சூதாடு கருவி குற்றத்துட்படும் வண்ணம் வளரா நின்ற தனபாரங்களையுடைய பார்ப்பதி தேவியாருக்கு நாயகரே; வம்பு அடர் பொழில் குழ் மருதூர - மணம் நெருங்கிய சோலை சூழ்ந்த மருதூரை யுடையவரே ; மதன் விரகம் வலம் அம்பு அடி வரும்போது - மன்மதனுடைய காமநோயை விளைக்கும் வெற்றியையுடைய பானங்கள் கொல்ல வரும்பொழுது; என்னை ஆள வல்லை வர - என்னை ஆண்டருளுதற்கு விரைவிலே வருவீராக. எ – று. முதலடியில் வல்லவம வலவமென இடைக்குறைந்து நின்றது. வரவென்பது அகரவீற்று வியங்கோண்முற்று. [பிரிவாற்று நாயகி கூறல்] 
    ----------------

    வலையலைவார்முலைபூங்குழலாக்கொண்டமங்கைபங்கா 
    வலையலைவார்விடவல்லவனே மருதூரவென்க 
    வலையலைவரர்மன நின் பாற்புரிந்தனன்மாயஞ்செய்ய 
    வலையலை வாரையனே செய்யபாத மலர்தரவே.         (15)

    (இ -ள்) வலை அலை வார் முலை பூம் குழல் ஆக் கொண்ட மங்கை பங்கா – சூதாடு கருவியையும் இருளையும் கச்சைய ணிந்த தனமும் பூவை முடித்த கூந்தலுமாகக் கொண்ட உமா தேவியாரைப் பாசத்திலுடையவரே; வலை அலை வார் விட வல்லவனே - வலையைத் திரையினையுடைய கடலின் கண் விடு தற்கு வல்லவரே; மருதூர - மருதூரையுடையவரே; என் கவலை அலைவு ஆர் மனம் நின்பால்
    புரிந்தனன் - என்னுடை ய கவலையும் துன்பமும் சிறைந்த நெஞ்சத்தை உம்மிடத்தே ஆக்கினேன்; மாயம் செய்ய வலை அலை -மாயத்தைச் செய்தற்கு வல்லிரல்லிர்; வார் ஐயனே - நேர்மையையுடைய பிதாவே; செய்ய பாதம் மலர் தர – சிவந்த திருவடித்தாமரை மலர்களைத் தருவீராக. எ- று. முதலடியில் வல்லை அல்லை என்பனவும் நான்காமடியில் வல்லை அல்லை என்பனவும் இடைக்குறைந்து நின்றன.
    ---------------

    மலரம்பையா ரஞ்சொரியாலைவிற்கொண்டுமாரெனெய்யா 
    மலரம்பையாரஞ்சும்வஞ்சிக்கருள்கிலர்மாலையைய 
    மலரம்பையரஞ்செறியாகா பாரத்தற்குவாய்த்தவெற்றி 
    மலரம்பையாரஞ்சடையார்மருதவனத்தவரே.         (16)

    (இ - ள்) மலர் அம்பை ஆரம் சொரி ஆலை விற்கொண்டு மாரன் எய்யாமல் – புட்ப பாணங்களை முத்தினைச் சொரிகின்ற கருப்புவில்லைத்கொண்டு மன்மதன் எய்யா வண்ணம்; அரம்பையார் அஞ்சும் வஞ்சிக்கு மாலையை அருள்கிலர் - தெய்வப் பெண்கள் அஞ்சுகின்ற பெண்ணுக்கு மாலையைக் கொடுக்கின்றிலர்; அமலர் – மலமுத்தரும்; அம் பை ஆரம் செறி ஆகர் - அழகிய படத்தையுடைய (பாம்பாகிய) ஆபரணம் நெருங்கிய திருமேனியையுடையவரும்; பார்த்தக்கு வாய்த்த வெற்றி மலர - அருச்சுனனுக்குப் பொருந்திய வெற்றியையுடைய மல்லரும்; அம்பை ஆர்.அம் சடையார் – கங்கா கலத்தை நிறைத்த அழகிய சடையையுடையவரும்; மருத வனத்தவர் - மருதவனத்தில் எழுந்தருளியிருப்பவருமாகிய சிவ பெருமான், எ-று. நான்காமடியில் மலலர் மலர் என இடைக்குறைந்து நின்றது,
    ----------------

    வனத்தவனம்பன்மலர்க்கஞ்சத்தார்மருதூரன்செய்ய 
    வனத்தவனம்பன்னிருகரத்தானத்தன்மாயமெய்வேம் 
    வனத்தவனம்பனகப்பணியான் சதுர்மாமறைய 
    வனத்தவனம்பனெனச்சொலப்போமும்மலங்களுமே.         (17)

    (இ - ள்) வனத்த அனம் பல் மலர்க்கஞ்சத்து ஆர் மருதூரன் - நீரினிடத்தனவாகிய அன்னங்கள் பலதாமரைப்பூக்களின்மீது தங்கும் மருதூரையுடையவரும் ; செய்ய வனத்தன - செய்ய நிறத்த யுடையவரும்; நம பன்னிருகரத்தான் அத்தின் - நம்முடைய பன்னிரண்டு திருக்கரங்களையுடைய முருகக் கடவுளுக்குப் பிதாவும்; மாயம் மெய் வேம் வனத்தவன் – மாயமாகிய சரீரம் வேகின்ற சுடுகாட்டையுடையவரும்; அம் பனகம் பணியான் – அழகிய சருப்பாபரணத்தை யுடையவரும்; மா சதுர் மறையவன் நத்தவன நம்பன் - பெரிய நான்கு வேதங்களையுடைய பிரமனுக்கும் சங்கையுடைய விட்டுணுவுக்கும் கடவுளுமாகிய சிவபெருமான் ; எனச் சொல - என்று சொல்ல; மும்மலங்களும் போம் – மூன்று மலங்களும் நீங்கிவிடும். எ – று.
    -------------- 

    மலங்குவளைக்கு நடுவேதுயிலும்வயலிறசெங்க 
    மலங்குவளைக்குண்மலாமருதூர நின் மாலைபெறா 
    மலங்குவளைக்குங்கிட்லோசைகேட்டுவருந்திநெஞ்ச 
    மலங்குவளைக்குங்குமப்புயத்தாண்முக்கண்மைக்கண்டனே.         (18)

    (இ - ள்) மலங்கு வளைக்கு நடுவே துயிலும் வயலில் - மலங்குமீன் சங்குகளுக்கு நடுவே கண்வளரா நின்ற வயல்களினிடத்தே; செங்கமலம் குவளைக்குள் மலர் மருதூர - செந்தாமரைகள் குவளைகளுக்கிடையே மலர்கின்ற மருதூரையுடையவரே; நின் மாலை பெறாமல் - உம்முடைய மாலையைப் பெறாது; அம் கு வளைக்கும் கடல் ஓசை கேட்டு வருந்தி நெஞ்சம் மலங்கு உவளை - அழகிய பூமியைச் சுற்றாநின்ற கடலினது ஒலியைக் கேட்கி வருத்தமுற்று மனம் கலங்குகின்ற உந்தப் பெண்ணை; குங்குமம் புயத்து ஆள் – குங்குமத்தை யணிந்த (உம்முடைய) புயங்களினாலே ஆண்டருளும்; முக்கண் மைக் கண்டனே – மூன்று கண்களையும் கரிய கழ்த்தையுருடையவரே. எ - று. [பாங்கி கூறல்.]
    ---------------- 

    கண்டங்களிக்கும்படி நஞ்சமுதுண்டகாரணவ 
    கண்டங்களிக்குமுழுதுங்கண்டாய்கின்றகாமருதூர்க் 
    கண்டங்களிக்குமகிழடியார்க்கவர்காதலன்பு 
    கண்டங்களிக்குங்கருணைதந்தென்தறெனைக்காப்பதுவே.         (19)

    (இ - ள்) கண்டம் களிக்கும்படி, நஞ்சு அமுது உண்ட காரண - கழுத்துச் செருக்குறும்படி விடத்தை அமிர்தமாக உண்டருளிய காரணரே; இக்கு முழுதும் அகண்டங்கள் கண்டாய் – இப்பூமி முழுதையும் (மற்றவைகள்) எல்லாவற்றையும் படைத்தவரே ; கா நின்ற மருதூர் - சோலைகள் நிலை பெற்ற மருதூரினிடத்தே; கண் தங்கு அளிக்கு மகிழ் அடியார்க்கு - (உம்முடைய) கண்களிலே பொருந்திய கருணைக்கு மகிழாகின்ற தொண்டர்களுக்கு; அவர் காதல் அன்பு கண்டு - அவர்களுடைய விருப்பமாகிய அன்பைக் கண்டு; அங்கு அளிக்கும் கருணை தந்து எனக் காப்பது என்று - அங்கே கொடுக்கின்ற திருவருளை (எனக்குந்) தந்து என்னைக் காப்பது எந்நாள்! எ -று.
    ----------------- 

    காப்பரவப்பணியாக்கொள்வர்மாக்கமலாலயங்கொள் 
    காப்பரவப்பணினானீக்கித்தேனைக்கவர்மருதூர் 
    காப்புரவப்பணியானிற்கும்வஞ்சகக்கன்னெஞ்சுரு 
    காப்புரவப்பணியென்னையுமாள்வர்கனற்கண்ணரே.         (20)

    (இ-ள்) காப்பு அரவம் பணியாக் கொள்வர் - கங்கணம் சருப்பாபரணமாகக் கொள்ளுவர்; மா கமலம் ஆலயம் கொள் காப்பு அரவம் பணினால் நீக்கித் தேனைக் கவர் மருதூர் கரப்பர் - வண்டுகள் தாமரை மலராகிய வீடு கொண்ட (இதழாகிய) கதவை ஒசையையுடைய பண்ணினாலே நீக்கித் தேனைக் கவர்கின்ற மருதூரைக் காத்தருளுவர்; அவம் பணியால் நிற்கும் வஞ்சகம் கல் நெஞ்சு உருகாப்பரவப பணி - வீணாகிய தொழிலினாலே நிலைபெற்ற வஞ்சகத்தையுடைய கல்லைப் போலும் மனம் உருகித் துதிக்கும்வண்ணம் செய்து; என்னையும் ஆள்வர் – என்னையும் ஆண்டருளுவர்; கனல் கண்ணர் – அக்கினிக் கண்ணையுடையவராகிய சிவபெருமான். எ-று.
    ------------------ 

    கனகத்தமரவென்சென்னியின் வண்டின் கணங்கள்செங்கோ 
    கனகத்தமரும்புனன்மருதூரன்கரியகண்டன் 
    கனகத்தமருகக்கையானரக்கனைக் காதியதுங் 
    கனகத்தமரவிந்தப்பதம்வைப்பதெக்காலத்திலே,         (21)

    (இ-ள்) கணம் கத்து அமர - மிகுதியாயே (சமயக்} சுத்துக்கள் அடங்கும்வண்ணம்; என் சென்னியின் - என் சிரசின்மீது; வண்டின் கணங்கள் செம் கோகனகத்து அமரும் புனல் மருதூரன் - வண்டினுடைய கூட்டங்கள் செந்தாமரை மலரின்கண் இருக்கும் நீரையுடைய மருதூரையுடையவரும்; கரிய கண்டன் - கரிய கழுத்தையுடையவரும்; கனகம் தமருகம் கையான் -பொன்னிறத்தையுடைய உதிக்கை யேந்திய கையை-யுடையவருமாகிய சிவபெருமான்; அரக்கனைக் காதிய துங்கம் நகத்து அம் அரவிந்தம் பதம் - இராக்க தனாகிய இராவணனை நெரித்த பெரிய நகத்தையுடைய அழகிய செந்தாமரை மலர்போலுந் திருவடியை ; வைப்பது எக் காலத்தில் - வைத்தருள்வது எக்காலத்தில், எ – று. சமயக் சத்துக்கள் அடங்கும் வண்ணம் திருவடியை என்சிரசின்மீது வைத்தருள்வது எக்காலத்திலெனக் கூட்டுக. 
    --------------- 

    காலம்பரம்பையங்காசினியங்கிலங்குமந்த
    காலம்பரம்பையங்காய்த்தென்னையாளகைக்குக்கட்கழுநீர்க் 
    காலம்பரம்பையங்காட்டுக்குப்பாயக்கருகிமள்ளா 
    காலம்பரம்பையங்கூர்மருதூரமுக்கப்பரனே.         (22)

    (இ-ள்) கால் அம்பாம் பயம் காசினி அங்கி கலங்கும் அந்த காலம் - காற்றும் ஆகாயமும் நீரும் பூமியும் அக்கினியும் கலங்கா நின்ற முடிவுகாலத்தின் கண்; பயம் காய்ந்து என்னை ஆள்கைக்குப் பரம் -அச்சத்தை ஒழித்து என்னை ஆளுகிறபொருட்டு (உமக்கே) பாரம்; கள் கழுநீர்க் கால அம்பு-தேனைப் பொருந்திய செங்கழு நீரையுடைய வாய்க்காலிலுள்ள நீர்; அரம்பை அம் காட்டுக்குப் பாயக் கருதி - வாழைச்சோலைக்குப் பாய நினைந்து; மள்ளர் கால் அம் பாம்பை அங்கு ஊர் மருதூர -பள்ளர்கள் தங்கள் காலினுலே அழகிய பரம்புகளை அவ்வாய்க்காலிலே செலுத்துகின்ற மருதூரையுடையவரே; முக்கண் பரனே – மூன்று கண்களையுடைய மேலானவரே. ஏ-று. பாம்பு கழனி திருத்தும் பலகை.
    ------------------ 

    பரமாகவந்தமறப்பூதஞ்குழ்படையாயதளம் 
    பரமாக வந்தமதிச்சடையாய்வையம்பாவகனம் 
    பரமாகவந்தமருத்தாகுவாய்வினைபற்றற நின் 
    பரமாகவந்தவெனைமருது கண்பார்த்தருளே.         (23)

    (இ - ள்) பரமா – மேலானவரே; கவந்தம் மறம் பூதம் சூழ் படையாய் –குறைத்தலைப் பேய்களையும் வலியையுடைய பூதங்களையும் சூழ்ந்த சேனையாகவுடையவரே; அதள் அம்பர - தோலாகிய வஸ்திரத்தை யுடையவரே; மாகம் அந்தம் மதிச் சடையாய் -ஆகாயததில் வருகின்ற அழகிய சந்திரனை யணிந்த சடையையுடையவரே; வையம் பாவகன் அம் பரம் கவநதம் மருத்து ஆகுவாய் - பூமியும் அக்கினியும் ஆகாயமும் பெரிய நீரும் வாயுவும் ஆகுமவரே; வினை பற்று அற நின் பாம் ஆக வந்த எனை (என்னுடைய) வினைகள் சராதல ஒழியும்பொருட்டு உம்முடைய பாரமாக வந்த என்னை; மருதூர கண் பார்த்தருள் - மரு.துரையுடையவரே கண் பார்த்தருளும். எ-று,
    ------------- 

    அருளத்தனை நம்பிறப்பேழு நீக்குமடிக்கமல 
    மருளத்தனை நமக்கண்ணியனாக்குவனாட்பட்டதொண் 
    டருளத்தனைமருதூரானையன்பரவத்தையில்வந் 
    தருளத்தனைமனமேயொழியாமனம்மையனென்றே.         (24)

    (இ-ள்) அத்தனை நம் பிறப்பு ஏழும் நீக்கும் அடிக் கடிலம் அருள - அவ்வளவினவாகிய நம்முடைய எழுவகைப் பிறப்பையும் போக்குகின்ற திருவடித்தாமரை மலரை ( நமக்குத்) தரும்பொருட்டு; தனை நமக்கு அண்ணியன் ஆக்குவன் - தம்மை நமக்குச் சமீபித்தவராக்குவர்; ஆட்பட்ட தொண்டர் உளத்தனை - அடிமைப்பட்ட அடியாருடைய இருதயத்துள்ளவரும்; மருதூரானை – மருதூரை யுடையவரும்; அன்பர் அவத்தையில் வந்து அருள் அத்தனை - பக்தர்களுடைய அவத்தையின்கண் வந்து (அவர்களைக்) காக்கும் பிதாவுமாகிய சிவபெருமான; மனமே ஒழியாமல் நம் ஐயன் என்றே அருள் - நெஞ்சே இடையறாது நங்கடவுளென்றே (நீ) சொல் வாயாக எ-று. சொல்வாயாயின், தம்மை நமக்குச் சமீபித்தரலராக்குவர்ர் எனக் கூட்டுக. [பூட்டுவிற்பொருள்கோள்.]
    ---------

    ஐயம்பலருந்தாச்சென்றிரந்தவனாதவனா 
    ரையம்பலரும்பொடிபடச்செற்றவரனமருதூ
    ரையம்பலருஞ்சடையானருளிலையேலகங்க 
    னையம்பலருங்கனஞ்சேர்குழலிக்கரும்பகையே.         (25)

    (இ-ள்.) ஐயம் பலரும் தரச் சென்று இரந்தவன் – பிக்ஷையைப் பலரும் இடப் போய் யாசித்தவரும்; ஆதவனாரை அம் பல் அரும் பொடி படச் செற்ற அரன் - சூரியனை அழகிய பற்கள் அரிய துகள் படும்வண்ணம் கோபித்த அ ரனென்னுந் திருநாமத்தை யுடையவரும்; மருதூர் ஐ - மருதூரையுடைய கடவுளும்; அம்பு அலரும் சடையான் அருள் இலேயேல் - கங்கை நீர் விரிந்த சடையையுடையவருமாகிய சிவபெருமானுடைய கருணை இல்லையாயின்; அநங்கன் ஐயம்பு அலரும் - மன்மதனுடைய ஐந்து புஷ்பபாணங்களும்; கனம் சேர்குழலிக்கு அரும் பகை - 
    மேகத்தைப்போலும் கூ ந்தலையுடைய தலைமகளுக்குப் பெரும்பகை, எ.று. [பாங்கி கூறல்.]
    --------------- 

    அரும்பரவைக்கடுக்கண்டர்வன்றொண்டரையாள்கையிலை 
    பரும்பரவைக்குறவாக்குத்திருவருளார்மருது 
    ரரும்பாவைக்கண்டரையரைவைப்பவரன்று நஞ்ச 
    மரும்பாவைக்கஞ்சன்வஞ்சமெனறட்டவற்கப்புறமே,         (26)

    (இ-ள்) அரும் பாவைக் கடுக் கண்டர் - பெருமையாகிய கடலினெழுந்த நஞ்சையடக்கிய கழுத்தையுடையவரு ம்; வன்றொண்டரை ஆள்கையில் அயரும் பரவைக்கு உறவு ஆக்கும் திரு அருளார் – சந்தரமூர்த்தி நாயனாரை அடிமைக் கொண்டமையால் (அவரை ஊடலினாலே) தளரா நின்ற பரவையாரோடும் உறவு செய்தருளிய திருவருளை யுடையவரும்; மருதூரர் - மருதூரையுடையவருமாகிய சிவபெருமான் ; ஆண் தரையரை (தம்மைச்) சார்ந்த பூவுலகத்தாரை; உம்பர் அவைக்கு வைப்பவர் அன்று - தேவர்களுடைய கூட்டத்தின்கண் வைப்பவரல்லர்; நஞ்சம் அரும்பு அரவைக் கஞ்சன் வஞ்சம் என்று அட்டவற்கு அப்புறம் – விடந்தோன்றுகின்ற பாம்பைக் கஞ்சனுடைய வஞ்சகமென்று கொன்றவராகிய விட்டுணுவினுடைய பதத்துக்கு மேலாகிய பதத்தின்கண் (வைப்பவர்) (எ-று.)
    ---------------

    அப்புக்கரக்குஞ்சடைமருதூரரொன்னாரை மண்மே 
    லப்புக்கரக்குமணியணிவோர்வெற்பிணண்ணலெய்த 
    வப்புக்கரக்குஞ்சரங்கண்டிவ்வாறிங்கதரத்தின 
    யப்புக்கரக்குங்கறுக்குங்கொடி நின்றதாலிகொண்டே.         (27)

    (இ - ள்) அப்புக் கரக்கும் சடை மருதூரர் – கங்கை நீரை அடக்கிய சடையையுடைய மருதூரினரும்; ஒன்னாரை மண்மேல் அப்பு உக்கர் - பகைவர்களாகிய அசுரர்களை பூமியின்மேலே மோதிய அக்கினியையுடையவரும்; அக்கு மணி அணிவோர் வெற்பின் - எலும்புமணியைத் தரிப்பவருமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; அண்ணல் எய்த அப்புக் கரம் குஞ்சரம் கண்டு - தலைமகன் விடுத்த அம்பைப் புழைக்கையையுடைய யானையினிடத்தே கண்டு; அதரத்தின் நயப்புக்கு அரக்கும் கறுக்கும் கொடி - அதரத்தினது அழகுக்கு அரக்கும் கறுக்கின்ற கொடிபோலுந் தலைமகள்; இவ்வாறு இங்கு ஆவி கொண்டு நின்றது - இங்ஙனம் இங்கே பிராணனைக்கொண்டு நின்றனள். எ-று. உக்கர் என்பதற்கு இடபத்தையுடையவரெனப் பொருள்கூறினடிமையும். உக்கம் - அக்கினி, இடபம், மூன்றாமடியில் அம்பு அப்பு என வலித்தல் விகாரம் பெற்று நின்றது. [பின் சென்ற செவிலி இரங்கல்.]
    -------------- 

    ஆவிக்கனங்களங்கார்வண்டணிதந்தமர்மருதூ 
    ராவிக்கனங்களந்தொண்டர்க்கடாமைச்சென்றாண்டருளை 
    யாவிக்கனங்களங்காட்டமெய்வேர்க்குமவத்தையில்வந் 
    தாகிக்கனங்களருத்துமுன்னாண்டருளஞ்சலென்றே,         (28)

    (இ -ள்) ஆவிக்கு அனம் கள் அங்கு ஆர் வண்டு அணி தந்து அமர் மருதூரா - வாலிகளுக்கு அன்னங்களும் தேனை அங்கே உண்ணும், வண்டுகளும் அழகு செய்து கொண்டு இருக்கின்ற மருதூரையுடையவரே; விக்கனங்கள் அம் தொண்டர்க்கு அடாமைச் சென்று ஆண்டருள் ஐயா - இடையூறுகள் அழகிய அடியார்களுக்கு அணுகாவண்ணம் போய் ஆண்டருளும் ஐயரே; விக்கல் நம் களம் காட்ட - விக்கலை நம்முடைய கழுத்துத் தோற்றுவிக்க ; மெய் வேர்க்கும் அவத்தையில் - சரீரம் வேர்க்கின்ற அவத்தையின்கண்; ஆவிக்கு அனங்கள் அருத்தமுன் - பிராணனுக்குச் சோறுகளை ஊட்டுமுன்; வந்து அஞ்சல் என்று ஆண்டருள் – எழுந்தருளி வந்து அஞ்சாதொழியென்று ஆண்டிருளும். எ-று. 
    --------------- 

    அஞ்சக்கரத்தை நினைவோர்க்கு நாச்செவியங்கமென்றுண் 
    டஞ்சக்கரத்தையணைவேற்கண்ணார்வசமாகவொட்டா 
    ரஞ்சக்கரத்தையரிக்களித்தார்மருதூரரங்கி 
    யஞ்சக்கரத்தையறுத்தாரென்பார்க்கில்லையச்சங்களே.         (29)

    (இ-ள்) அஞ்சு அக்கரத்தை நினைவோர்க்கு- பஞ்சாக்ஷரத்தைச் சிந்திப்பவர்களுக்கு; நாச் செவி அங்கம் மெல் தண்டம் சக்கு - நாக்கும் காதும் காயமும் மென்மையாகிய மூக்கும் கண்ணும்; அரத்தை அணை வேல் கண்ணார் வசம் ஆக ஒட்டார் - அரத்தைப் புணர்ந்த வேல்போலும் கண்களையுடைய பெண்களது வயத்தனவாக விடாதவர்; அம் சக்கரத்தை அரிக்கு அளித்தார் - அழகிய சக்கராயுதத்தை விட்டுணுவுக்குக் கொடுத்தவர்; மருதூரர் – மருதூரையுடையவர்; அங்கி அஞ்சக் கரத்தை அறுத்தார் என்பார்க்கு - அக்கினி அஞ்சும் வண்ணம் கையைச் சேதித்தவா என்று துதிப்பவர்களுக்கு; அச்சங்கள் இல்லை - பயங்கள் இல்லை, எ-று.
    ------------ 

    அச்சங்கரிக்குறயான்றுயர்நீங்கவொரண்ணலெய்த 
    வச்சங்கரிக்குமரிது கண்டிர்மதனங்கமெரி 
    யச்சங்கரிக்குமரனுழவோர்பறியானமுத்தமீ 
    னச்சங்கரிக்கும்வயனமருதூரனணிவரைக்கே,         (30)

    (இ-ள்) கரிக்கு அச்சம் உற - யானைக்குப் பயம் பொருந்தவும்; யான் துயர் நீங்க - நான் துன்பத்தினின்றும் நீங்கவும்; ஒரண்ணல எய்த அச்சு - ஒப்பில்லாத தலைமகன் எய்த அச்சு; அங்கு அரிக்கும் அசிது கண்டீர் - அங்கே விட்டுணுவுக்கும் அரியது கண்டீர்; மதன் அங்கம் எரியச் சங்கரிக்கும் அரன் - மன்மதனுடைய சரீரம் எரியும்வண்ணம் கொன்றருளிய அரனெனனுந் திருநாமத்தையுடையவரும்; உழவோர் பறியால் முத்தம் மீன் அச்சங்கு அரிக்கும் வயல் மருதூரன் – உழவர்கள் பறியினாலே முத்துக்களைக்கும் மீன்களையும் அந்தச் சங்குகளையும் அரிக்கின்ற வயல்களினாலே சூழப்பட்ட மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய ; அணிவரைக்கு - அழகிய மலையின் கண்ணே. எ.று. [மனம் விலக்கு]
    -----------------

    வரையரம்பாய்கதிர்வைவேன்முருகர்வழுவைமுக 
    வரையரம்பாசிலைக்கஞ்சப்புனன்மருதூரர்வெள்ளி 
    வரையரம்பாய்சடையாரிசையேழும்வரவமைத்த 
    வரையரம்பாய்வரக்கண்டோர்மலரடிவந்திப்பனே.         (31)

    (இ-ள்) வரை அரம் பாய் கதிர்வை வேல் முருகர் - வரையப்பட்ட அாத்தினால் அராவப்பட்ட ஒளியையுடைய கூர்மையாகிய வேலாயுதத்தையுடைய முருகக் கடவுளுக்கும்; வழுவை முகவர் ஐயர் - யானையினது முகத்தையுடை யவராகிய விநாயகக்கடவுளுக்கும் பிதாவும்; அம் பசு இலைக் கஞ்சம் புனல் மருதூரர் - அழகிய பசிய இலைகளையுடைய தாமரையையுடைய நீரினாலே சூழப்பட்ட மருதூரை யுடயவரும்; வெள்ளி வரையர் - வெள்ளிமலையையுடையவரு ம்; அம் பாய் சடையார் – கங்கைநீர் பாய்கின்ற சடையையுடையவரும்; இசை ஏழும் வர அமைத்த வரையர் அம்பு ஆய் வரக் கண்டோர் - ஏழிசைகளையும் வரும்படி அமைத்த வேய்ங்குழலை யுடையவராகிய விட்டுணு பாணமாய் வரச்செய்த வருமாகிய சிவபெருமானுடைய; மலர் அடி வந்திப்பன் – செந்தாமரை மலர்போலும் திருவடிகளை (யான்) வழிபடுவேன். எ-று.
    --------------- 

    வந்தியங்கரமலைகுட்டங்களைபித்தம்வாத நம்மேல் 
    வந்தியங்காமலையானனநாதனைவான்றனைச்செவ் 
    வந்தியத்தாமலைமாமருதூரனைவாழ்த்திநெஞ்சே 
    வந்தியங்காமலைசூடும்பிரானை வந்தினையே.         (32)

    (இ-ள்) அம் வந்தி காமலை குட்டங்கள் ஐபித்தம் வாதம் நம்மேல் வந்து இயங்காமல் -நீரிழிவும் காமாலையும் வெண்குட்டம் கருங்குட்டங்களும் சிலேட்டுமமும் பித்தமும்
    வாதமும் நம்மேல் வந்து தங்காவண்ணம்; ஐயானனம் நாதனை – ஐந்து முகங்களையுடைய தலைவரும்; வான் தனைச் செவ்வந்தி அம் காமலை மா மருதூரனை - ஆகாயத்தைச் செவ்வந்தியையுடைய அழகிய சோலைகள் பொருகின்ற பெரிய மருதூரையுடையவரும்; அங்கு அலை ஆம் சூடும் பிரானை - அங்கே திரையையுடைய கங்கைநீரைத் தரித்த கடவுளும்; வரதனை - வரத்தைக் கொடுப்பவருமாகிய சிவபெருமானை; நெஞ்சே வாழ்த்தி வந்தி - மனமே துதித்து வழிபடுவாயாக. எ-று.
    ------------- 

    வரம்பலவாயன்பர்க்கீவாய்ககனம்வருங்கதிர 
    வரம்பலவாய்விட்டகலச்செற்றாய்தவர்மாதர்கற்பின் 
    வரம்பலவாய்விடவேடங்கொண்டாய்மருதூரபொன்னி
    வரம்பலவாயமதண்டத்தென்மேலன்புவைத்தருளே.         (33)

    (இ-ள்) பல வரம் ஆய் அன்பர்க்கு ஈவாய் - பலவரங்களை (உம்மை) ஆராய்ந்தறியும் பக்தர்களுக்குக் கொடுப்பவரே; ககனம் வரும் கதிரவர் அம் பல் அவாய் விட்டு அகலச் செற்றாய் - ஆகாயத்தின்கண் வருகின்ற ஆதித்தருடைய அழகிய பற்கள் அவ்வாயை விட்டு நீங்கும்வண்ணம் உதிர்த்த வரே; தவர் மாதர் கற்பின் வரம்பு அல ஆய் விட வேடம் கொண்டாய் - முனிவர்களுடைய பன்னியர்களது கற்பினது எல்லை அல்லனவாய் விடும்வண்ணம் (பிக்ஷாடன) வேடங்கொண்டவரே; மருதூர – மருதூரையுடையவரே; நிவர் பொன்னம்பலவா- உயர்ந்த கனகசபையை யுடையவரே; யமன் தண்டித்து என்மேல் அன்பு வைத்தருள் -இயமனுடைய தண்டத்தின்கண் என்மேல் அன்பு வைத்தருளும், எ-று.
    --------------

    வையம்பரவமருதூருதையும்வரதிர்செந்தீ . 
    வையம்பரவமதித்தார்க்கரியவர்வாய்த்தவது 
    வையம்பரவமகட்சூட்டுவார்கழல்வாழ்த்தியுன்பு 
    வையம்பரவமுடியார் நெஞ்சே நல்லாந்தரவே,         (34)

    (இ -ள்.) வையம் பரவ மருதூர் உறையும் வரதர் - பூமியின்கணுள்ளார் ஆதிக்கும்படி மருதூரின்கண் எழுந்தருளியிருக்கும் வரத்தைக் கொடுப்பவரும்; செம் தீ வை அம்பர் - சிவந்த அக்கினியாகிய கூர்மையையுடைய பானத்தையுடைய வரும்; அவமதித்தார்க்கு அரியவர் - (தம்மை) அவமதித்தவர்களுக்கு அரியவரும்; வாய்த்த வதுவை அம் பரவ மகள் சூட்டுவரா கழல் - பொருந்திய மணமாலையை அழகிய வலைஞர் மகளுக்குச் சூட்டினவருமாகிய சிவபெருமானுடைய திருவடிகளை; வாழ்த்தி அன்பு வை -துதித்து அன்பை வைப்பாயாக; அம்பு அரவம் முடியார் - (கங்கை) நீரையும் பாம்பையு மணிந்த முடியையுடையவராகிய அக்கடவுள்; நெஞ்சே நல் வரம் தர - மனமே நன்மையாகிய வரத்தைத் தரும்பொருட்டு. எ-று. 
    ---------------- 

    தரவாகமஞ்சன்னமெய்க்கூற்றென்மேல் வருந்தண்டத்தினா 
    தரவாகமங்கைபங்கோடுவிளங்கத்தலங்கண நா 
    தரவாகமங்கணின்றேத் துஞ்செந்தாமரைத்தாளெனக்குத் 
    தரவாதமந்தொலையாமருதூருறைசங்கரனே,         (35)

    (இ - ள்) தரம் ஆகம் மஞ்சு அன்ன மெய்க் கூற்று என் மேல் வரும் தண்டத்தின் -மலையைப் போன்ற மார்பையும் மேகத்தைப் போன்ற சரீரத்தையுமுடைய இயமன் என்மேல் இத்தி செய்யும் தண்டத்தின் கண்; ஆதரவு ஆக மங்கை பங்கோடு விளங்க - விருப்பம் பொருத்த உமாதேவியார் ஒரு பாகத்தின் கண் விளங்கும்வண்ணம்; தலம் கணநாதர் அல் ஆகமங்கள் நின்று ஏத்தும் செந்தாமரைத்தாள் எனக்குத் தரவா - பூவுலகத்தாரும் கணநாதர்களும் அச்சிவாகமங்களும் நின்று துதிக்கின்ற செந்தாமரைமலர் போலுந் திருவடிகளை எனக்குத் தரும்பொருட்டு வந்தருளும்; கமம் தொலையா மருதூர் உறை சங்கரனே - (பொருள்களினது) நிறைவு நீங்காத மருதூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற சுகஞ்செய்பவரே. எ-று,
    ------------------ 

    சங்கரவீரமதியாபரணதமிழ்மருதூர்ச் 
    சங்கரவீரமழுவேந்துநாதசரணெனக்கஞ் 
    சங்கரவீரமிட்டேத்தன்பர்போற்றுன்பந்தானறவச் 
    சங்கரவீரமுன்வந்துநிற்பாய்கொன்றைத்தாரவனே.         (36)

    (இ - ள்) சங்கு அரவு ஈரம் மதி ஆபரண - சங்கும் பாம்பும் குளிர்ச்சியையுடைய சந்திரனுமாகிய ஆபரணங்களை யுடையவரே; தமிழ் மருதூர்ச் சங்கர - தமிழையுடைய மருதூரின் கண் எழுந்தருளியிரா நின்ற சுகஞ்செய்பவரே; வீரம் மழு எந்து நாத - வீரத்தையுடைய மழுப்படையைத் தாங்கிய தலைவரே; சரண் எனக் கஞ்சம் கரவீரம் இட்டு ஏத்து அன்பர்போல் - புகலிடமென்று தாமரை மலரையும் அலரி மலரையும் இட்டுத் துதிக்கின்ற பக்தர்களுக்குப்போல; துன்பம் அற அச்சம் கரவு ஈர – துன்பம் நீங்கும் வண்ணம் பயத்தையும் வஞ்சகத்தையும் அரியும் பொருட்டு; முன் வந்து நிற்பாய் - எனக்குமுன் எழுந்தருளிவந்து நின்றருளும்; கொன்றைத் தாரவனே –கொன்றை மாலையுடையவரே. எ-று.
    --------------

    அவனித்தலத்தன்பர்துன்பந்துடைப்பவனம்புயன்மா 
    லவனித்தலத்தனென்றேத்தும்பிரானத்தளித்தவெண்டூ
    யவனித்தலத்தண்வயன்மருதூரனையார்விழிக்கேற் 
    பவனித்தலத்தண்டைத்தாள்செல்லன்மீட்டென்னையாற்றியதே.         (37)

    (இ - ள்) அவனித் தலத்து அன்பர் துன்பம் துடைப் பவன் – பூமியின் கண்ணே பக்தர்களுடைய துன்பத்தை ஒழிப்பவராயும்; அம்புயன் மாலவன் நித்தல் அத்தின் என்று ஏத்தும் பிரான் - பிரமனும் விட்டுணுவும் நித்தமும் பிதாவென்று துதிக்கின்ற கடவுளாயுமுள்ள சிவபெருமானுடைய; நத்து அளித்த வெள் தூய வல் நித்தலம் தண் வயல் - சங்குகள் தந்த வெள்ளிய சுத்தமாகிய வலிய முத்துக்களையுடைய குளிர்மையாகிய வயல்களினாலே குழப்பட்ட; மருதூர் அனையார் -மருதூரைப் போல்வாராகிய இம்மங்கையருடைய; விழிக்கு ஏற்ப வனித்தல் அத்தண்டைத் தாள் செல்லல் மீட்டு என்னை ஆற்றியது - கண்ணுக்கு இயையப் புகழ்தலைப் பொருந்திய அந்தத் தண்டையையணிந்த கால் (பூமியிலே தோய்தலால்) என் வருத்தத்தை மாற்றி என்னை ஆற்றியது. எ – று. [தெளிதல்] 
    ---------------

    ஆற்றலைத்தண்டரும்போரிலைமாலுக்கரியவனே 
    யாற்றலைத்தண்டரு நீர்முடியாய்மருதூராசே 
    யாற்றலைத்தண்டருக்கூற்றாள் கொண்டேகிடுமன்றெனக்கோ 
    ராற்றலைத்தண்டருக்காணத்தந்தாண்டருளஞ்சலென்றே.         (38)

    {இ - ள்) ஆல் தலைத் தண்டு அரும்பு ஒரிலை மாலுக்கு அரியவனே - ஆலமரத்தினது தலைச்கொம்பில் அரும்பிய ஒரிலையின் கண்ணே நித்தரை செய்கின்ற விட்டுணுவுக்கு அரியவரே; ஆறு அலை தண் தரும் நீர் முடியாய் - நதியினது திரையினாலே குளிர்மையைத் தருகின்ற நீர்மையைப்பொருந்திய முடியையுடையவரே; மருதூர் 
    அரசே - மருதூருக்கு நாயகரே; ஆறு அலைத்து அண்ட அரும் கூற்று ஆள் கொண்டு ஏகிடும் அன்று - வழியின்கண் வருத்திக் கிட்டுதற்கரிய இயமனுடைய தூதர்கள் என்னைக் கொண்டுசெல்லும் அந்நாளிலே; எனக்கு ஒராற்றலைத் தண்டரும் காணத் தந்து அஞ்சல் என்று ஆண்டருள் - எனச்கு ஒருவலிமையைத் தண்டஞ் செய்வோரும் காணும்படி தந்து அஞ்சாதொழியென்று ஆண்டருளும் எ – று.
    -------------- 

    அஞ்சுகமாகமஞ்சொன்மருதூரரரக்கனையீ 
    ரஞ்சுகமாகமங்கச்செற்றுனையுமடர்த்தபங்க 
    யஞ்சுகமாகமனத்துள்வைப்பேனையடர்கைக்குச்சற் 
    றஞ்சுகமாகமழைமுகில்போனிறத்தந்தகனே.         (39)

    (இ - ள்) அம் சுகம் ஆகமம் சொல் மருதூரர் - அழகிய கிளிகள் சிவாகமங்களைச் சொல்லா நின்ற மருதூரின் கண் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய; அர்க்கனை ஈ ரஞ்சுகம் ஆசம் மங்கச் செற்று - இராக்கதனாகிய இராவணனைப் பத்தாகிய தலைகளும் மார்பும் நெரியும்படி ஊன்றி ; உனையும் அடர்த்த பங்கயம் - உன்னையும் உதைத்தருளிய திருவடித் தாமாரை மலரை; சுகம் ஆக மனத்துள் வைப்பேனை - இன்பம் உதிக்கும் வண்ணம் என்னெஞ்சத்துள் இருத்தித் தியானிக்குமென்னை; அடர்கைக்குச் சற்று அஞ்சுக - நெருங்குதற்குச் சிறிது அஞ்சுடவாய்; மாகம் மழை முகில் போல் நிறத்து அந்தகனே – ஆகாயத்தின் கண்ணதாகிய மழையைப் பொழியும் மேகத்தைப்போலும் நிறத்தையுடைய இயமனே. எ –று. சிவபெருமானுடைய திருவடித்தாமரை மலரை எனக்கூட்டுக.
    --------------- 

    அந்தத்தலைவரையாக்கையர்தென்மருதூரரன்பர்க் 
    கந்தத்தலைவரைமாத்திரையிற்செறுமத்தர்வெற்பி 
    ன நதத்தலைவரைபோல்கரிகொல்லுமுனஞ்சலென்ற 
    வந்தத்தலைவரையன்றியென்னார்ப்பதணிமுரசே.         (40)

    (இ - ள். அந்தம் தலை வரையாக் கையர் - அழகையுடைய பிரமகபாலத்தை நீக்காது கொண்ட கையினையுடையவரும்; தென் மருதூரர் – அழகிய மருதூரை யுடையவரும் ; அன்பர்க்கு அந்தத்து அலைவு அரை மாத்திரையில் செறும் அத்தர் வெற்பின் - பத்தர்களுக்கு முடிவுகாலத்திலுள்ள துன்பச்தை அரைமாத்திரையினுள்ளே போக்குகின்ற பிதாவுமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; அம் ததது அலைவரைபோல் கரி கொல்லுமுன் – மத நீர் பாய்கின்ற நடைமலை போலும் யானை (நம்மைக்) கொல்லுமுன் ; அஞ்சல் என்ற அந்தத் தலைவரை அன்றி –பயப்படாதே யென்று சொல்லிய அந்த நாயகருக்கக்லது; அணி முரசு ஆரப்பது என் - அழகையுடைய முரசம் ஆரவாரிப்பது என்னை, எ-ற்.. [மணம் விலக்கு.]
    -------------- 

    அணியவனந்திமருதூரனென்றிறைஞ்சன்பர்க்குப்பாம் 
    பணியவனநதி வணங்கொண்டமேனியனான நதனா 
    ரணியவனந்திகழீமத்துளாடியருள்புரிந்தா
    ரணியவனந்திவரத்தன்பதத்திலமர்ந்தவனே.         (41)

    (இ-ள்) நந்தி மருதூரன் என்று – நந்தியென்னுந் திரு நாமத்தையுடையவர் மருதூரின் கணெழுந்தருளிலிருப்பவர் என்று சொல்லி; இறைஞ்சு அன்பர்க்கு அணியவன் - வணங்குகின்ற பக்தர்களுக்குச் சமீபித்தவர்; பாம்பு அணியவன் - சருப்பமாகிய ஆபரணத்தை யுடையவரும்; அந்தி வணம் கொண்ட மேரியன் - செவ்வானம்போலும் நிறந்தைப்பெற்ற திருமேனியையுடையவரும்; ஆனந்தன் – சுகரூபியும்; நாரணியவன் -உமாதேவியை யுடையவரும் ; நந்து இகழ் ஈமத்துள் ஆடி – கெடா நின்ற இகழப்படும் சுடுகாட்டின்கண் நிருத்தஞ்செய்பவரும்; அருள் புரிந்து ஆர் அணியவன் - கருணையை (அடியார்களுக்குச்) செய்து திருவாத்தி மாலையை அணிதலையுடையவரும்; நந்தி வரத்தன் - இடபத்தின்மேல் வருதலையுடையவரும்; பதத்தில் அமர்ந்தவன் -(அடியார்களது) பக்குவத்திற் பொருந்தினவருமாகிய சிவபெருமான், எ-று.
    ----------------- 

    அம்பரவம்புனைவேணியபாணியினங்கியவை 
    யம்பரவம்புனைகுழ்மருதூருறையையதிசை 
    யம்பரவம்புனைநெற்றிக்கனல்விழியாயென்பதை 
    யம்பரவம்புநைகொங்கையைவீழ்ப்பதறிந்திலையே.         (42)

    (இ - ள்) அம்பு அரவம் புனை வேணிய - (கங்கை) நீரையும் பாம்பையும் அணிந்த சடையையுடையவரே; பாணியின் அங்கிய - கையிலே தரிக்கப்பட்ட அக்கினியையுடையவரே; வையம் பரவு அம் புனை சூழ் மருதூர் உறை ஐய -பூமியிலுள்ளோர் துதிக்கின்ற அழகிய புன்னைமரங்கள் சூழ்ந்த மருதூரின்கண் எழுத்தருளியிரா நின்ற பிதாவே; திசை அம்பர திக்காகிய வஸ்திரத்தையுடையவரே; உனை நெற்றிக் கனல் விழியாய் என்பது வம்பு – உம்மை நெற்றியின்கண் அக்கினிக்கண்ணையுடையீரென்று சொல்வது வம்பு; ஐயம்பர் அ வம்பு நை கொங்கையை வீழ்ப்பது அறிந்திலை – ஐந்து பாணங்களையுடையவனாகிய மன்மதன் அந்தக் கச்சை வருத்துகின்ற தனத்தையுடையவளைக் கொல்வதை அறிந்திலீர் (ஆதலால்) எ.று., [பாங்கி கூறல்]
    ------------- 

    இலையையிலங்கையர்தங்தையர்தென்மருதூரரெண்க 
    யிலையையிலங்கையர்வீழவுதைத்தவரென்றஞ்சம்வே 
    றிலையையிலங்கையராவென்று பாலொழுக்கெல்லைமெய்யா
    மிலையையிலங்கையராவுயிர்நீங்குமுனென்னெஞ்சமே.         (43)

    (இ-ள்) இலை அயில் அம் கையர் தந்தையர் - இலைத் தொழிலையுடைய வேற்படையை ஏந்திய அழகிய கையினையுடையவராகிய முருகக் கடவுளுக்குப் பிதா; தென் மருதூரர் - அழகிய மருதூரையுடையவர்; எண் கயிலை ஐ - மதிக்கப்படும் திருக்கைலாசமலையின்கண் எழுந்தருளிலிரா நின்ற கடவுள் ; இலங்கையர் வீழ உதைத்தவர் என் – இலங்கையை யுடையவனாகிய இராவணன் விழும்வண்ணம் ஊன்றினவர் என்று சொல்வாயாக; தஞ்சம் வேறு இலை - ( நமக்குத்) துணை வேறில்லை; ஐ இலங்கு ஐயர் ஆ என்று பால் ஒழுக்கு எல்லை - அழகு விளங்குகின்ற மூத்தோர்கள் ஆவென்று பாலை வார்க்கின்ற முடிவின்கண்; மெய் ஆம் இலை ஐயில் அங்கு அயரா உயிர் நீங்குமுன்; சரீரமாகிய வீட்டைச் சிலேட்டும மேலிடும்பொழுது அங்கே மறந்து ஆன்மா நீங்குமுன் ; என் நெஞ்சமே -என் மனமே; எ-ற். என்மனமே ஆன்மா நீங்குமுன் பிதா மருதூரையுடையவர் கடவுள் ஊன்றினவர் என்று சொல்வாயாகவெனக் கூட்டுக. 
    ---------------

    என்றலைக்குன்றிருத்தாடாவென்பாருய்கைக்கெண்கயிலை 
    யென்றலைக்குன்றினிருந்தருள்செய்யுமிறைமருதூ 
    ரென்றலைச்குன்றிநிறங்கவர்மேனிகொண்டீடழிக்கைக் 
    கென்றலைக்குன்றிவிடாதகல்வானத்தெழுவதுவே.         (44)

    (இ - ள்) என் தலைக்கு உன் திருத்தாள் தா என்பார் உய்கைக்கு - என்னுடைய தலைக்கு உம்முடைய திருவடிகளைத் தந்தருளுமென்று சொல்வோர்கள் உய்தற்பொருட்டு; எண் கயிலை என் தலைக் குன்றின் இருந்து அருள் செய்யும் இறை மருதூர் - மதிக்கப்படுகின்ற கைலாசமெனப்படும் முதன்மையாகிய மலையின் கண் எழுத்தருளியிருக் கருணையைச் செய்யா நின்ற சிவபெருமானுடைய மருதூரின் கண்ணே; என்று அலைக் குன்றி நிறம் கவா மேனி கொண்டு ஈடு அழிக்கைக்கு -சூரியன் இராத்திரியைக் குன்றிமணியினது நிறத்தைக் கவர்கின்ற சரீரத்தைக்கொண்டு வலியழித்தற்கு; என்று ஆலைக் குன்றிவிடாது அகல் வானத்து எழுவது - எப்பொழுது கடலினுள்ளே நசித்து விடாது பரந்த ஆகாயத்தின்கண் எழும்புவது. எ.று. [இரவினீட்டம்.]
    ------------------ 

    எழுதாரணிபுகழ்மாமருதூருறையீசர்வெற்பி 
    லெழுதாரணிதிகழ்தோளண்ணலேயிந்தரத்தமன்ற 
    லெழுதாரணிகுழலாட்கெங்ஙனாந்தொய்யிலேந்துகொங்கைச் 
    கெழுதாரணியமடவாரிடையினிறுதிகண்டே.         (45)

    (இ - ள்) எழு தாரணி புகழ் மா மருதூர் உறை ஈசர் வெற்பில் - ஏழுலகமும் புகழ்கின்ற பெரிய மருதூரின்கண் எழுந்தருளியிரா நின்ற சிவபெருமானுடைய மலையின் கண்ணே; எழு தாரணி திகழ் தோள் அண்ணலே – எழுவையும் மலையையும்போல விளங்குகின்ற புயங்களையுடைய தலைமகனே; இந்த முத்தம் மன்றல எழு தார் அணி குழலாட்கு எங்கன் ஆம் - (நீ கையுறையாகக் கொண்டுவந்த} இந்த முத்து மாலை மணமெழுகின்ற மாலையை யணிந்த கூந்தலையுடைய தலைமகளுக்கு எப்படி ஆகும்; அணிய மடவார் - அடுத்த பெண்கள்; இடையின் இறுதி கண்டு - இடையினது இறந்துபடுதலைக் கண்டு; ஏந்து கொங்கைக்குத் தொய்யில எழுதார் - கனத்த தனங்களுக்குத் தொய்யிலை எழுதார்கள் (ஆதலால்.) எ . று. [பாங்கி கையுறை மறுத்தல்.]
    ------------ 

    கண்டனையாரழலாக்கொண்டதேவைக்கரியதிருக் 
    கண்டனையாரவயன்மருதூர்தனிற் கண்களிக்கக் 
    கண்டனையார்வயிற்றிற்கருத்தாழ்வுங்கடந்துசொற்றேன் 
    கண்டனையாரயிற்கண்ணாம்வலையுங்கடந்தனமே.         (46)

    {இ- ள்) கண் தனை ஆர் அழல் ஆக் கொண்ட தேவை - கண்ணை நிறைந்த அக்கினியாகக் கொண்டருளிய தேவரும்; கரிய திருக்கண்டனை - கரிய அழகிய கழுத்தையுடையவருமாகிய சிவபெருமானை; ஆரம் வயல் மருதூர்தனில் கண் களிக்கக் கண்டு - முத்துக்களையுடைய வயல்களினாலே சூழப்பட்ட மருதூரினிடத்தே கண்கள் களிக்கும் வண்ணம் தரிசித்து; அனையார் வயிற்றின் கருத் தாழ்வும் கடந்து - தாயர்களுடைய வயிற்றினுள்ள கருவின்கண்ணே தங்குதலையும் நீங்கி; சொல் தேன் கண்டு அனையார் அயில் கண் ஆம் வலையும் கடந்தனம் - (தஞ்) சொற்கள் தேனையும் கற்கண்டையும் போலாகப்பெற்ற பெண்களுடைய வேல் போலும் கண்ணாகிய வலையையும் கடந்தேம். எ-று.
    ---------------

    கடனந்திரும்பவந்தீர்கைக்குவைகைக்கவரின்வந்து 
    கடனந்தினம்படிவார்மருதூரன் கடுவுண்டவி 
    கடனந்திநம்பன் கடுங்காலகாலன்கங்காளன்கன்ம 
    கடனந்தினநதொறும்புல்லும்பிரானங்கருத்தினனே.         (47)

    (இ - ள்) கடன் நந்தி நம் பவம் தீர்கைக்கு - (முற்பிறப்புக்களிலுள்ள வினைக்) கடன் கெட்டு நம்முடைய பிறப்பு ஒழிதற்பொருட்டு; வைகைக் கவரின் வந்த கடல் கந்து இனம் படி வார் மருதூரன் - வைகையாற்றினது பகுதியாகிய கால்கடோறும் வந்து கடலிலுள்ள சங்குகளினது கூட்டங்கள் படிகின்ற சலத்தையுடைய மருதூரின்கண் எழுந்தருளியிருப்பவரும்; கடு உண்ட விகடன் - நஞ்சையுண்டஅஞ்சற் பாலரும்; நந்தி நம்பன் - நந்தி நம்பன் என்னுந் திருநாமங்களையுடையவரும்; கடும் காலகாலன் - கடுமையாகிய காலகாலரும்; கங்காளன் – முழுவெலும்பை யணிந்தவரும்; கல் மகள் தனம் தினந்தொறும் புல்லும் பிரான் – (இமைய) மலையினது புதல்வியாராகிய உமாதேவியாருடைய தனங்களை நாடோறுந்தழுவுகின்ற கடவுளுமாகிய சிவபெருமான்; நம் கருத்தினன் - நங்கருத்தினுளர். எ.று. 
    ------------ 

    கருமங்குலத்திறந்தற்சங்கைவிட்டுக்கசிந்துபவக்
    கருமங்குலத்துமெய்யன்பர்க்குவீதிகமலங்கணி 
    கருமங்குலத்திருக்கைம்மங்கைபங்கன் கமுகுசென்று 
    கருமங்குலத்தனையும்மருதூரன் கழலினையே.         (48)

    (இ - ள்) கருமம் குலத்திறம் தற்சங்கை விட்டுக் கசிந்து - வினையையும் குலமேன்மையையும் தற்போதத்தையும் ஒழித்து (மன) நெகிழ்ந்து; பவம் கரு மங்க உலத்து மெய் அன்பர்க்கு வீடு - பிறப்புக்கு மூலமாகிய கரு நசிக்கும்வண்ணம் கெடுக்கின்ற மெய்ப்பக்தர்களுக்கு முத்தியாவது; கமலங்கள் நிகரும் அங்குலம் திருக்கை மங்கை பங்கன் - செந்தாமரை மலர்களைப்போலும் விரல்களையுடைய அழகிய கைகளையுடைய உமாதேவியாரைப் பாகத்திலுடையவரும்; கமுகு சென்று கரு மங்குலத்து அனையும் மருதூரன் - கமுக மரங்கள் போய்க் கருமையாகிய மேகங்களை அளாவா நின்ற மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய; கழல் இணையே - இரண்டு திருவடியுமே. எ-று. இரண்டாமடியில் மங்க என்பதன் ஈற்றகரம் விகாரத்தாற்றொக்கது. நான்காமடியில் அத்து சாரியை, மெய்ப்பக்தர்களுக்கு முத்தியாவது சிவபெருமானுடைய இரண்டு திருவடியுமேயெனக் கூட்டுக.
    ------------- 

    கழலாதவஞ்செய்துபோற்றிடுகைக்கென்கருத்தைவிட்டுக் 
    கழலாதவன் புதருவாய்விடுதளக்கன்னியர்கைக் 
    கழலாதவன் பதந்தோய்மருதூரகருணைநின்பு 
    கழலாதவன்சொற்கதற்றும்பிதற்றுடைக்கள்வனுக்கே.         (49)

    (இ - ள்) கழலா – வீரக்கழலை யணிந்தவரே; தவம் செய்து போற்றிடுகைக்கு - தவத்தைச் செய்து (உம்மைத்) துதித்தற்கு; என் கருத்தை விட்டுக் கழலாத அன்பு தருவாய் - என்னெஞ்சத்தை விட்டு நீங்காத அன்பைத் தந்தருளும்; தளம் கன்னியர் கை விடு கழல் ஆதவன் பதம் தோய் மருதூர - உபரிகைகளினுள்ள பெண்கள் கைகளினால் எறிகின்ற கழங்கு சூரியனுடைய பதத்தை அணைகின்ற மருதூரையுடையவரே; கருணை நின் புகழ் அலாத வல் சொல் கதற்றும், பிதற்று உடைக் கள்வனுக்கு – திருவருளையுடைய உம்முடைய கீர்த்தியல்லாத கடிய சொற்களைக் கத்துகின்ற புலம்பு தலையுடைய கள்வனுக்கு எ-று. கள்வனுக்குத் தந்தருளுமெனக் கூட்டுக.
    ---------------

    களங்கந்தரமனையாய்மூலமாயைகருமமென்னுங் 
    களங்கந்தரங்கெடநீர்சொரியாநிற்பக் கண்புளகங் 
    களங்கந்தரவென்னையாண்டருள்வாயென்று காவொழுக்குங் 
    களங்கந்தரமழைபோன்மருதூர்நகர் காவலனே.         (50)

    (இ – ள்) களம் கந்தரம் அனையாய் - கழுத்து மேகத்தை ஒப்பாகப் பெற்றவரே; மூலம் மாயை கருமம் என்னும் களங்கம் தரம் கெட - ஆணவமும் மாயையும் கருமமும் எனப்படும் (மும்) மலங்களும் வலிமை கெடும் பொருட்டு; கண் நீர் சொரியா நிற்ப அங்கம் புளகங்கள் தர – கண்கள் நீரைப் பொழியவும் சரீரம் உரோமஞ் சிலிர்த்தலைத் தரவும் ; என்னை என்று ஆண்டருள்வாய் - என்னை எங்காள் ஆண்டருள் வீர்; கா ஒழுக்கும் கள் அங்கு அந்தரம் மழை போல் மரு தூர் நகர் காவலனே - சோலைகள் ஒழுக்குகின்ற தேன் அங்கே ஆகாயத்தினின்றும் பொழிகின்ற மழையை நிகர்க்கின்ற மருதூரென்னும் திருப்பதியைக் காத்தலையுடையவரே. எ-று.
    ------------- 

    காவலராவரும்பர்க்கிறையாகுவர்கங்குன்மதிற் 
    காவலராவருங்கோற்கள்ளராயினுக்காலுகுக்குங் 
    காவலராவருந்தும்மருதூரரைக்கன்னிதன்பங் 
    காவலராவருந்தாரணிவாயென்றுகைதொழவே.         (51) 

    (இ. ள்) காவலர் ஆவர் – அரசராவர்; உம்பர்க்கு இறை ஆகுவர் - தேவர்களுக்கு நாயகனுகிய இந்திரனாவர்; கங்குல் மதில் காவல் அராவரும் கோல் கள்ளர் ஆயினும் - இராத்திரியிலே மதிற்காவல் அராவுகின்ற கன்னக்கோலையுடைய திருடராயினும்; கால் உகுக்கும் கா அலர் ஆ அருந்தும் மருதூரரை - காற்றுதிர்க்கின்ற சோலையிலுள்ள பூக்களைப் பசுக்கள் உண்கின்ற மருதூரின்கண் எழுந்தருளியிரா நின்ற சிவபெருமானை; கன்னிதன் பங்கர - உமாதேவியாருடைய பக்கத்தையுடையவரே; வல் அரா அரும் தார் அணி வாய் - வலிய பாம்பாகிய அரிய மாலையை அணிபவரே; என் அறுகை தொழ - என்று சொல்லிக் கையிஞலே கும்பிட. எ-று, சிவபெருமானேக் கும்பிடத் திருடராயினும் அரசராவர் இந்திரனாவர் எனக் கூட்டுக.
    -------------- 

    கையுடையானையதளங்கியானைக்கதம்பெறுவேங் 
    கையுடையானை மருதூானைக்கருதராகள்வன்ப 
    கையுடையானைத்தொழுதிலில்வேடன்கடுங்கணையாக் 
    கையுடையானைமடவாருயிர்க்கென்கரைவதுவே.         (52)

    (இ - ள்) கை உடை யானை அதள் அங்கியானை - புழைக்கையையுடைய யானையினது தோலாகிய சட்டையை யுடையவரும்; சதம் பெறு வேங்கை உடையானை - கோபத்தைப் பெற்ற புலித்தோலாகிய வஸ்திரத்தை யுடையவரும்; மருதூரானே – மருதூரையுடையவரும்; கருதார்கள் வல்ப கை உடையானை - (தம்மைச்) சிந்தியாதவர்களுடைய வலிய பகையாகிய மலத்தைக் கெடுக்காதவருமாகிய சிவபெருமானை; தொழுது – வணங்கி; வில் வேள் தன் கடும் சுணை யாக்கையுள் தையா நை மடவார் - வில்லையுடைய மன்மதனுடைய கடுமையாகிய பாணங்கள் சரீரத்திலே தைத்து வருந்துகின்ற மங்கையர்; உயிர்க்குக் கரைவது என் - உயிர்ப் பொருட்டு இரங்குவது என்னை. எ-று. யாக்கையுட்டையா எனற்பாலது யாக்கையுடையா எனக் குறைந்து நின்றது, [பாக்கி வெறுத்திக் கூறல்.] 
    -----------------

    கரைவானகங்குழைமெய்யடியார்க்குக்கலங்கவரக் 
    கரைவானகங்கொண்டடர்க்கும்பிரான்புரக்கள்ளவஞ்ச 
    கரைவான கங்தைகெடத்தகனஞ்செய்கடவுள்பொய்கைக் 
    கரைவானகந்தொடுமாமருதூானெங்கட்கிறையே.         (53)

    (இ - ள்) அகம் குழை மெய் அடியார்க்குக் கரைவான் - மனநெகிழ்கின்ற மெய்த்தொண்டர்களுக்கு இரங்கு வோரும்; கலங்க அரக்கரை வால் நகம் கொண்டு அடர்க்கும் பிரான் - கலக்கும்படி இராக்கதனாகிய இராவணனை வெண்மையாகிய நகத்தைக்கொண்டு நெரித்த எப்பொருட்கு மிறைவரும்; புரம் கள்ளம் வஞ்சகரை வான் அகந்தை கெடத் தகனம் செய் கடவுள் - முப்புரங்களிலுள்ள கள்ளத்தையும் வஞ்சகத்தையுமுடைய அசுரர்களைப் பெரிய செருக்கு அழியும்படி எரித்திலைச் செய்த கடவுளும்; பொய்கைக் கரை வானகம் தொடும் மா மருதூரன் - வாலிக்கரை ஆகாயத்தை அளாவா நின்ற பெரிய மருதூரையுடையவருமாகிய சிவபெருமானே; எங்கட்கு இறை - எங்களுக்கு நாயகர். எ-று.
    ---------------- 

    கட்டாமாரையரமரர்க்குவேந்தர்கமலந்துழாய்க் கட்டாமரையாமருதூரிறைவர்கறையராவக் 
    கட்டாமரையர்மனமேயிருவினைக்கட்டற நங்
    கட்டாமரையரென்றாட்கொண்டருள்கைக்குக்கற்பனையே.         (54)

    (இ-ள்) கள் தாமரையர் - தேனையுடைத்தாகிய தாமரை மலரையுடையவராகிய பிரமாவுக்கும்; அமரர்ச்கு வேந்தர் -தேவர்களுக்கு அரசனுகிய இந்திரனுக்கும்; கமலம் துழாய் கண் தாமர் ஐயா - செந்தாமரை மலரையும் துளசியையும் கண்ணும் மாலையுமாக உடையவராகிய விட்டுணுவுக்கும் பிதாவும்; மருதூர் இறைவர் - மருதாரின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவரும்; கறை அரவம் கட்டு ஆம் அரையர் – விடம் பொருந்திய பாம்பாலாகிய கட்டுப்பொருந்திய அரையையுடையவருமாகிய சிவபெருமான்; மனமே - நெஞ்சமே ; இரு வினைக் கட்டு அற - இருவினைப்பந்தம் அறும் பொருட்டு; நங்கண் தாம் அரையர் என்று ஆட்கொண்டருள் கைக்குக் கற்பனை - நம்மிடத்தே தாம் நாயகரென்று அடிமைக்கொண்டருளுதற்கு விதியேயாம். எ-று. 
    -------------- 

    கற்பனையத்தனையாயினு நின்புகழ் கற்பது நான் 
    கற்பனையத்தனைகாணச்சரவணப்பொய்கைவந்தோன் 
    கற்பனையத்தனையாமருதூருறை காரணவக் 
    கற்பனையத்தனைபத்தாகுற்றத்தைக்கடிபவனே.         (55)

    (இ-ள்) நான் நின் புகழ் கற்பது அத்தனை கற்பனை ஆயினும் - நான் உமது கீர்த்தியைப் படிப்பது அவ்வளலும் பொய்யாமாயினும்; கற்ப நயத்தனை - படிப்பவைகளை விரும்பினீர்; அச் சரவணம் பொய்கை வந்தோன் – அந்தச் சரவணப்பொய்கையின் கண்ணே திருவவதரஞ் செய்தருளினவராகிய முருகக்கடவுளுக்கும்; கல் பனை அத்தன் ஐயா - (மாணிக்க) ரத்தினத்தாலாகிய பனைபோன்ற கையையுடையவராகிய விநாயகக் கடவுளுக்கும் பிதாவே; மருதூர் உறை காரண - மருதூரின்கண் எழுந்தருளிலிருக்கின்ற காரணரே: அக் கற்பு அனை அத்த – அந்தக் கற்பையுடைய மாதாவாகிய உமாதேவியாரைப் பாதியாக வுடையவரே; நை பத்தர் குற்றத்தைக் கடிபவனே - வருந்துகின்ற அன்பர்களுடைய குற்றத்தை யொழிப்பவரே, எ-று. காண் அசை.
    -------------

    கடியவம்போடிகல்கண்ணியைக்கண்டுகலங்கி நெஞ்சிற் 
    கடியவம்போய்நின்றழிந்தனன்காண்குற்றங்கண்டெனைநீ
    கடியவம்போதமுன்கண்டதுண்டோவண்டின்காலணையக் 
    கடியதும்போருகங்கான் மருதூரரன் கல்வரைக்கே.         (56)

    (இ-ள்.) கடிய அம்போடு இகல் கண்ணியைக் கண்டு கலங்கி - கூர்மையையுடைய பாணத்தோடு பகைக்கின்ற கண்ணையுடையவளாகிய பெண்ணைக் கண்டு மயங்கி; நெஞ்சில கடி அவம் போய் நின்று அழிந்தனன் - மனசின்கணுள்ள காவல் வீண் போய் கின்று வருந்தினேன்; குற்றம் கண்டு எனை நீ கடிய அம்போதம் முன் கண்டது உண்டோ - குற்றத்தைக் கண்டு என்னை நீ கோபிக்க அழகிய அறிவை முன்னே நானறிந்ததுண்டோ; வண்டின் கால் அணையக் கடி அ அம்போருகம் கால் மருதூர் அரன் கல் வரைக்கு - வண்டினுடைய கால்கள் பொருந்த மணத்தை அந்தத் தாமரை மலர்கள் கால்கின்ற மருதூரின்கணெழுந்தருளியிருக்கும் சிவபெருமானது கல்லாகிய மலையினிடத்து. எ-று. காண் அசை. [தலைவன் பாங்கனுக்கு உற்றதுரைத்தல்]
    ------------ 

    கல்லாரமாலைமென கூந்தற்கைக்காந்தட்கவுரிபங்கன் 
    கல்லாரமாலைத்திகழ்மருதூரிற்பொய்கைக்குண்மண்ணைக் 
    கல்லாரமாலையங்கையாற்றெழார்சைவகாவியங்கள் 
    கல்லாரமாலையன்காணாப்பதமெங்ஙன் காண்குவரே.         (57)

    (இ-ள்) கல்லாரம் மாலை மெல் கூந்தல் கைக் காந்தள் கெளரி பங்கன் –செங்கழுநீர் மாலையையணிந்த மெல்லிய அளகத்தையும் கைகளாகிய காந்தட் பூக்களையுமுடைய உ மாதேவியாருடைய பாகராகிய சிவபெருமானுடைய; கல் ஆரம் மாலைத் திகழ் மருதூரில் - இரத்தினங்களும் முத்துக்களும் மாலைக் காலத்தின் கண்ணே விளங்குகின்ற மருதுரினி டத்ததாகிய; பொய்கைக்குள் மண்ணைக் கல்லார் - வாலியினுள்ள மண்ணைத் தோண்டார்கள்; அம் ஆலயம் கையால் தொழார் - அழகிய திருக்கோயிலைக் கைகளினாலே கும்பிடார்கள்; சைவ காவியங்கள் கல்லார் – சைவ காவியங்களைப் படியார்கள்; அ மால் அயன் காணாப் பதம் எங்ஙன் காண்குவர் – அந்த விட்டுணுவும் பிரமாவும் காணாத திருவடிகளை எப்படி (இவர்கள்) தரிசிப்பார்கள்! எ-று. 
    ----------------- 

    குவலயங்கற்பக நாடரவப்பதிரும்பிடுஞ்செங் 
    குவலயங்கட்பொழிவார்மருதூரிறைகூரயிலா 
    குவலயங்கற்பொடியாகத்தொடுங்கந்தர்கோக்கொற்றவா 
    குவலயங்கட்செவியாகக்கொள்வாரெங்குலதெய்வமே.         (58)

    (இ - ள்) குவலயம் கற்பகம் நாடு அரவம் பதி கும்பிடும் - பூமியும் கற்பக தருவையுடைய தேவலோகமும் நாக லோகமும் கும்பிடுகின்ற; செங்குவலயம் கள் பொழிவார் மருதூர் இறை – செங்குவளை மலர்கள் தேனைப் பொழிகின்ற நீரினாலே சூழப்பட்ட மருதூரின் கணெழுந்தருளியிருக்கும் நாயகரும்; கூர் அயில் ஆகு வலயம் கல் பொடி, ஆகத் தொடும் கந்தர் கோ - கூரிய வேலாகிய வல்லயத்தைக் கிரௌஞ்சமலை துகளாகும் வண்ணம் தொடுத்த முருகக் கடவுளுக்குத் தலைவரும்; கொற்றம் வாகுவலயம் கட்செவி ஆகக் கொள்வார் - வெற்றியையுடைய தோளணி பாம்பாகக் கொள்வோருமாகிய சிவபெருமான்; எம் குலதெய்வம் - எம்முடைய குலதெய்வம். எ-று.
    ----------- 

    குலஞ்சுகந்தாதிகள்விட்டுத்தவவுருக்கொண்டுநெஞ்சா 
    குலஞ்சுகந்தாகம்பொய்மோகந்தவிர்த்துகுணத்திரயங்
    குலஞ்சுகந்தாட்படமாட்டாவெனைப்பிணிகொண்டதென்கோ 
    குலஞ்சுகந்தாதுகொய்காமருதூர்க்குன்றக்கோதண்டனே.         (59)

    (இ- ள்) குலம் சுகந்த ஆதிகள் விட்டு - குலத்தையும் சுகந்த முதலியவற்றையும் விடுத்து; தவம் உருக் கொண்டு - தவவேடத்தைப் பூண்கி; நெஞ்சு ஆகுலம் சுகம் தாகம் பொய் மோகம் தவிர்ந்து - மனசினுள்ள வருத்தத்தையும் சுகத்தையும் தாகத்தையும் பொய்யையும் மோகத்தையும் நீங்கி; குணத்திரயம் குலஞ்சு உகந்து ஆட்படமாட்டா எனை - முக்குணங்களுங் குலைந்து மகிழ்ந்து அடிமைப்பட மாட்டாத என்னை; பணி கொண்டது என் – அடிமைக்கொண்டதென்னை; கோகுலம் சுகம் தாது கொய் கா மருதூர்க் குன்றம் கோதண்டனே- குயில்களும் கிளிகளும் பூந்தாதைக் கொய்யாகின்ற சோலேகளினாலே சூழப்பட்ட மருதூரின் கணெழுந்தருளியிருக்கும் மகாமேரு மலையாகிய வில்லையுடையவரே. எ-று. கோகிலம் கோகுலம் எனமருவிற்று.
    -------------- 

    தண்டலைநாகங்கள் பூகங்கள்சூழுந்தடஞ்சுனையிற் 
    றண்டலை நாகங்கணைகழு நீரமுகை சற்றுவிண்ட 
    தண்டலை நாகக்கொலென்றஞ்சிமாறெனத்தன்னிழன்மேற் 
    றண்டலை நாகந்தவிர்மருதூரனென்றாபரமே.         (60)

    (இ-ள்) தண்டலை நாகங்கள் யூகங்கள் சூழும் தடம் சுனையில் -சோலைகளினுள்ள புன்னை மரங்களும் கமுக மரங்களும் சூழா நின்ற பெரிய சுரையினிடத்தே; தண் தலை நாகு அங்கு அணை கழுநீர் முகை சற்று விண் தண்டு – குளிர்மையையுடைய பெரிய சங்குகள் அங்கே சேர்ந்த கழுசீர் முகை சிறிது அலர்ந்த தண்டை; அலை நாகம் கொல் என்று அஞ்சி - அசைகின்ற பாம்போவென்று பயந்து; மாறு எனத்தன் நிழன்மேல் தண்டலை நாகம் தவிர் மருதூரன் - தன்பகை யென்று தனது நிழலின் மேலே எதிர்த்தலை யானை நீங்குகின்ற மருதூரையுடையவராகிய சிவபெருமான் ; என் தாபரம் - என்னுடைய துணை. எ.று.
    --------------

    தாபரசங்கமொராறுக்கும்போற்றுஞ்சதுர்மறைக்குந் 
    தாபரசங்கவயன்மருதூர்நகர்தங்கியநா
    தாபரசங்கமர்சாடக்கொண்டாய்சுந்தரற்குச்செஃறூ
    தாபரசங்கரவல்வினையேற்குன்சரணங்களே,         (61)

    (இ - ள்) பரிசு அங்கம் ஒராறுக்கும் போற்றும் சதுர் மறைக்கும் தாபர - துதிக்கப்படும் ஆறு வேதாங்கங்களுக்கும் (உம்மைத்) துதிக்கும் நான்கு வேதங்களுக்கும் நிலையாயுள்ளவரே; சங்கம் வயல் மருதூர் நகர் தங்கிய நாதா - சங்குகளையுடைய வயல்களினாலே சூழப்பட்ட மருதூரென்னும் திருப்பதியின்கண் எழுத்தருளியிருந்த தலைவரே; பரசு அங்கு அமர் சாடக் கொண்டாய் - மழுவை அங்கே போரின் கண்ணே (பகைவரைக்) கொல்லும் பொருட்கித் தாங்கினவரே; சுந்தரற்குச் செல் தூதா – சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுச்சென்ற தூதரே; பர மேலானவரே –சங்கர சுகத்தைச் செய்பவரே; வல் வினையேற்கு உன் சரணங்கள் தா - வலிய வினையையுடையேனுக்கு உம்முடைய திருவடிகளைத் தந்தருளும், எ-று. [பூட்டுவிற்பொருள்கோள்.]
    ------- 

    சரக்கன்றுகந்தமலரோற்குமேற்பதந்தண்கழு நீர்ச் 
    சரக்கன்றுகந்தர்ப்பனையெரித்தோரிருதாட்கடக்குஞ் 
    சரக்கன்றுகந்தன்றனக்கையர்பொய்யர்தமக்ககலீ
    சரக்கன்றுகந்தவர்தென்மருதாரர்தமர்களுக்கே.         (62)

    (இ-ள்) கந்தம் மலரோற்கு மேல் பதம் சரக்கு அன்று - மணத்தையுடைய தாமரை மலரிலிருக்கும் பிரமனுக்கு மேலாகிய பதமும் ஒருபொருளன்று; தண் கழுநீர்ச் சரம் கன்று கந்தர்ப்பனை எரித்தோர் - குளிர்மையையுடைய கழுநீர் மலராகிய அம்பையுடைய கோபிக்கின்ற மன்மதனை எரித்தவரும் ; இருதாள் கடம் குஞ்சரம் கன்று கந்தன் தனக்கு ஐயர் – இரண்டு பாதங்களையும் மதத்தையுமுடைய யானைக்கன்றாகிய விநாயகக் கடவுளுக்கும் முருகக் கடவுளுக்கும் பிதாவும் ; பொய்யர் தமக்கு அகல் ஈசர் - பொய்யர்களுக்கு அகன்ற தலைவரும்; அக்கு அன்று உகந்தவர் எலும்புமணியை அந்நாளிலே மகிழ்ந்தணிந்தவரும்; தென் மருதூரர் தமர்களுக்கு - அழகிய மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய அடியார்களுக்கு, எ-று.
    -------------- 

    தமரவரிக்களிவண்டுதன்றுக்கொன்றைத்தாமரன்பர் 
    தமரவரிக்குவயன்மருதூரர்பொற்றாளுயிரார்ந் 
    தமரவரிக்கிறையார்க்கரிதானுந்தமைவணங்குத் 
    தமரவரிக்குமிதயத்தியானந்தனக்கெளிதே.         (63)

    (இ-ள்) தமரம் வரிக் களி வண்டு துன்றும் கொன்றைத் தாமர் - இசையையுடைய புள்ளியைப் பொருத்திய களிப்பையுடைய வண்டுகள் நெருங்குகின்ற கொன்றை மாலையையுடையவரும்; அன்பர் தமரவர் - பத்தர்களுக்கு உறவினரும்; இக்கு வயல் மருதூரர் - கரும்புகளையுடைய வயல்களினாலே குழப்பட்ட மருதூரை-யுடையவருமாகிய சிவபெருமானுடைய; பெரன் தாள் – பொன்போலுந் திருவடிகள்; உயிர் ஆர்ந்தமரம் அரிக்கு இறையார்க்கு அரிதானும்- உயிரைப்போன்ற மரத்திலே சஞ்சரிக்கின்ற அனுமாருக்கு இறைவராகிய விட்டுணுவுக்கு அரியனவாயினும்; தமை வணங்கு உத்தமர வரிக்கும் இதயம் தியானம் தனக்கு எளிது - தம்மை வணங்குகின்ற மேலேரர்களுடைய விரும்புகின்ற இருதயத்திலே செயப்படும் தியானத்துக்கு எளியனவாம். எ-று..
    -------------- 

    தனக்கடங்காநெஞ்சனென்றெனைக்கொண்டுதருமன்செல்வி 
    தனக்கடங்காவனின்றாண்மருதூர நற்சந்திரவ 
    தனக்கடங்கால்கும்பத்தும்பிக்கொம்பென்னச்சமைந்தவிரு 
    தனக்கடங்காம்பலஞ்செங்கனிவாய்மங்கைதனபங்கனே.         (64)

    (இ - ள்) தனக்கு அடங்கா நெஞ்சன் என்று - தனக்கடங்காத மனத்தை யுடையவனென்று; எனைக் கொண்டு தருமன் செல் விதனம் கடம் - என்னைக்கொண்டு இயமன் செல்லாநின்ற வேதனையையுடைய அருநெறியிலே; காவல் நின் அறு ஆள் - காவலாக நின்று ஆண்டருளும்; மருதூர – மருதூரையுடையவரே; நல் சந்திரன் வதனம் - நன்மையாகிய சந்திரனைப்போலும் முகத்தையும்; கடம் கால் கும்பம் தும்பிக் கொம்பு என்னச் சமைந்த இரு தனம் - மதத்தைச் சொரிகின்ற மத்தகத்தையுடைய யானையினது கோடுபோல அமைந்த இரண்டு முலைகளையும்; கள் தங்கு ஆம்பல் அம் செம் கனி வாய் - தேன் பொருந்திய செவ்வாம்பன் மலர்போலும் அழகிய சிவந்த கனிந்த வாயையுமுடைய; மங்கை தன் பங்கனே - உமாதேவியாருடைய பாகரே. எ-று.
    ---------- 

    பங்கமுகந்தலைமோதக்கயலினம்பாய்ந்துபைந்தட் 
    பங்கமுகந்தலைசேர்மருதூரபருப்பதத்தாள் 
    பங்கமுகந்தலைதேய்ந்திடவெண்டிங்கள்பட்டுபெரும் 
    பங்கமுகந்ததலைவநின்பாதம்பரமெனக்கே.         (65)

    (இ- ள்) பங்கம் முகந்து அலை மோத - சேற்றை முகந்து திசைகள் (கரையிலே) மோத; கயல் இனம் பாய்ந்து பைம் தட்பம் கமுகு அம் தலை சேர் மருதூர - கயற்கூட்டங்கள் பாய்ந்து பசிய குளிரமையையுடைய கமுக மரங்களினது தலையிலே சேர்கின்ற மருதூரையுடையவரே; பருப்பதத்தாள் பங்க – பார்ப்பதி தேவியாருடைய பாகாரே; முகம் தலை தேய் நதிட வெள் திங்கள் பட்ட பெரும் பங்கம் உகந்த தலைவ –முக முந்தலையுந்தேய வெண்மையாகிய சந்திரன் அனுபவித்த பெருந்தோல்வியை மகிழ்ந்தருளிய நாயகரே; நின் பாதம் எனக்குப் பரம் - உம்முடைய திருவடிகள் எனக்குச் தஞ்சம், எ-று. 
    ---------------- 

    பரவாதிருக்கைமருவாகமத்தைப்பழித்துப்பண்ணிற 
    பரவாதிருக்கைதிருவுளமோவலைபண்டெடுத்த 
    பரவாதிருக்கைமழுநாததேவர்பணிமருதூர்ப் 
    பரவாதிருக்கையறுத்தென்னேயாளும்பதநதரவே.         (66)

    (இ - ள்) பரவாதி - (உம்மை} வணங்காமலும்; இருக்கை மருவு ஆகமத்தைப் பழித்துப் பண்ணில் பரவாது - வேதங்களையும் பொருந்திய சைவாகமங்களையும் நிந்தித்து இசையோடு துதியாமலும்; இருக்கை திருவுளமோ - இருத்தல் திருவுள்ளமா!; வலை பண்டு எடுத்த பரவா - வலையை முன்னாளிலேயெடுத்த பரவருருக்கொண்டவரே; திருக்கை மழுநாத - அழகிய கையிலே தாங்கப்பட்ட மழுவையுடைய தலைவரே; தேவர் பணி மருதூர்ப்பர - தேவர்கள் வணங்குகின்ற மருதூரின் கணெழுத்தருளி-யிருக்கும் மேலானவரே; வா – வந்தருளும்; திருக்கை அறுத்து என்னை ஆளும் பதம் தர - குற்றத்தையொழித்து என்ன ஆண்டருள்கின்ற திருவடிகளைத் தரும்பொருட்டு. எ-று. 
    ----------------- 

    பதங்கடந்தானிரைத்தன்னபன்மாதர்கள்பற்றறநற் 
    பதங்கடந்தாலென்னகைம்மாறுசெய்வன்பகைத்தபருப் 
    பதங்கடந்தான்பட்டகைம்மாவுத்தபரமன்மறைப் 
    பதங்கடந்தான்புகழ்மாமருதூர்மங்கைபங்கினனே.         (67)

    (இ -ள்) பதங்கள் தந்தால் நிரைத்து அன்ன பல் மாதர்கள் பற்று அற - சோறுகளை நூலினாலே நிரைத்தாற்போன்ற பற்களையுடைய பெண்களிடத்ததாகிய ஆசை நீங்கும்பொருட்டு; நல் பதங்கள் தந்தால் - நன்மையாகிய திருவடிகளைத் தந்தருளினால்; என்ன கைம்மாறு செய்வன் - என்ன பிரதியுபகாரத்தைச் செய்வேன்; பகைத்த பருப்பதம் கடந்தான் பட்ட கைம் மா உரித்த பரமன் - பகைத்த மலைபோலும் மதந்தான் பட்ட யானையையுரித்த மேலானவரும்; மறைப் பதம் கடந்தான்-வேதத்தினது சொல்லைக் கடந்தவரும்; புகழ்மா மருதூர் மங்கை பங்கினன் - கீர்த்தியையுடைய பெரிய மருதூரில் எழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாருடைய பாகருமாகிய சிவபெருமான், எ-று, சிவபெருமான் திருவடிகளேத் தந்தருளினால் எனக் கூட்டுக. 
    ------------ 

    பங்கையவாவியனையாட்களித்தபரமன்மன்றற் 
    பங்கையவாவிமருதூரிலோரிறைபாரவல்லி 
    பங்கையவாவியிவண்மேலிடுமப்பகையடுமின் 
    பங்கையவாவிம்மணமுமினிதல்லபாவையரே.         (68)

    (இ-ள்) பங்கை அவ் ஆவி அனையாட்கு அளித்த பரமன் – (தமது) பாகத்தை அவ்வுயிர்போலும் உமாதேவியாருக்குக் கொடுத்தருளிய சிவபெருமானுடைய; மன்றல் பங்கயம் வாவி மருதூரில் - மணத்தையுடைய தாமரை வாவிகளாலே சூழப்பட்ட மருதூரின்கண்ணே; ஒரிறை – ஒருதலை மகன்; பாரம் வல் இபம் கை அவாலி இவள் மேலிடும் அப்பகை - பாரமாகிய வலிய யானை புழைக்கையினாலே அவாவி இவளை மேலிட்ட அந்தப்பகையை; அடும் இன்பம் கயவா - விலக்கிய இன்பம் வெறுக்கப்படாது; இம் மணமும் இனிது அல்ல – இந்த மனமும் இனியதன்று; பாவையரே - பெண்களே. எ-று. [மணம் விலக்கு]
    ------------ 

    பாவகனஞ்சக்கரந்துணித்தாய்பதமாறு நடப் 
    பாவக நஞ்சக்கறைமிடற்றாய்மருதூாப்பரம 
    பாவகனஞ்சத்திகுன்ற நின்றாளைப்பரந்தமலம் 
    பாவக நஞ்சர்ச்சனைபுரிந்தென்றுபணிவதுவே.         (69)

    (இ-ள்) பாவகன் அஞ்சக் கரம் துணித்தாய் - அக்கினிதேவன் அஞ்சும் வண்ணம் கையை வெட்டினவரே; பதம் மாது நடம் பாவக - பரதம் மாறிய நிருத்தத்தினது பாவகத்தையுடையவரே; நஞ்சம் கறை மிடற்றாய் - விடத்தையுடைய கருமையாகிய கழுத்தையுடையவரே; மருதூர்ப் பரம - மருதூரின் கணெழுத்தருளியிருக்கும் மேலானவரே; பாவம் கனம் சத்தி குன்ற - பாவத்தினது மிகுதியாகிய வலிமை குன்றும்பொருட்டு; நின் தாளை -உம்முடைய திருவடிகளை; பரந்த மலம் பாவு அகம் நைஞ்சு விரித்த மலம் பரவிய மனம் நைந்து - அர்ச்சனை புரிந்து பணிவது என்று - பூசைசெய்து வணங்குவது எந்நாள்! எ-று,
    ---------------

    பணியாதவர்க்கத்தொடர்ச்சிக்கும்பத்திரபத்தர்சித்தப்
    பணியாதவர்க்கருள்செய்மருதூரபடவரவப்
    பணியாதவர்க்குன்றவென்றவின்றாட்செம்பதும நெஞ்சே 
    பணியாதவர்க்குமதிக்குமப்பாலைப்பதந்தரவே.         (70)

    (இ-ள்) பணியாது - (உனக்குத்) தொழில் யாது!; அவர்க்கத்தொகி அர்ச்சிக்கும் பத்திரம் பக்தர் சித்தம் பணி யா - அந்த உபகரணங்களோடு பூசிக்கின்ற பத்திரங்களையுடைய அன்பர்களது சித்தத்திலுள்ள தொண்டையுடையவரே; தவர்க்கு அருள் செய் மருதூர் - முனிவர்களுக்குக் கருணையைச் செய்கின்ற மருதூரையுடையவரே; படம் அர வம் பணியா - படத்தையுடைய பாம்பாகிய ஆபரணத்தையுடையவரே; தவர்க் குன்ற என்று - வில்லாயுள்ள மலையையு டையவரே என்று சொல்லி; அவன் தாள் செம் பதுமம் - அவருடைய திருவடிகளாகிய செந்தாமரை மலர்களை; நெஞ்சே பணி - மனமே நீ வணங்குவாயாக; ஆதவர்க்கும் மதிக்கும் அப்பால் பதம் தர - சூரியனுக்கும்
    சந்திரனுக்கும் அப்பாலுள்ள பதத்தைத் தரும்பொருட்டு. எ-று, அப்பாலை என் பதன் ஐ சாரியை.
    -------------- 

    வேலைக்கையலைக்கவர்விழியார்வசம்வீழ்ந்தினது 
    வேலைக்கையலைக்கண்டும்முயலேன்புக்கவேளையுண்டோய் 
    வேலைக்கையலைத்துவருங்கொல்கூற்றைவெறுத்துயிர்போம் 
    வேலைக்கையலைப்புனன்மருதூர்முக்கண்மெய்ப்பயனே.         (71)

    (இ- ள்) வேலைக் கயலைக் கவர் விழியார் வசம் வீழ்ந்து - கடலையும் கயன்மீனையும் கவர்கின்ற கண்களையுடைய பெண்களது வசத்தில் அழுந்தி; உனது வேலைக்கு அயலக் கண்டும் முயலேன் – உம்முடைய தொண்டுக்கு அயலரைக் கண்டும் முயல்கின்றிலேன்; புக்க வேளை உண்டோய் - புகுந்த மன்மதனக் கொன்றவரே; வேலைக்கை அலைத்து வரும் கொல் கூற்றை வெறுத்து உயிர் போம் வேலைக் கை
    - வேலாயுதத்தக் கையினாலே அசைத்து வருகின்ற கொல்கின்ற இயமனை வெறுத்து ஆன்மாப் போகின்றபொழுது கோபித்தருளும்; அலைப் புனல் மருதூர் முக்கண் மெய்ப் பயனே.- திரையையுடைய நீரினாலே குழப்பட்ட மருதூரின் கணெழுந்-தருளியிருக்கின்ற மூன்றுகண்களையுடைய மெய்ப்பயனா யுள்ளவரே. எ-று.
    --------- 

    பயநந்த நாகமலரிற்துயிலப்படு மருதூர்ப் 
    பயன நதனாகப்பகலைக்கண்டோன்பத்தர்சித்தத்துள்ளான் 
    பயன நதனாகமணிவோன கழலை நும்பலபிறவிப் 
    பயநந்த நாகந்துதிக்கவணங்கப்பரிந்திருமே.         (72)

    (இ - ள்) பயம் நந்து அம் காகம மலரின் துயிலப்படும் மருதூர்ப் பயன் - நீரிலுள்ள சங்குகள் அழகிய புன்னைப் பூவின்கண்ணே நித்திரை செய்கின்ற மருதூரின்-கணெழுந்தருளியிராகின்ற பயனுயுள்ளவரும்; அந்தன ஆகப் பகலைக் கண்டோன் - குருடனாகும் பொருட்டுச் சூரியனச் செய்தவரும் ; பத்தர் சித்தத்து உள்ளான் - அன்பர்களுடைய இருதயத்தின்கண் உள்ளவரும்; பை அனந்தன் ஆகம் அணிவோன் கழலை - படத்தையுடைய அனந்தனைத் திருமார்பின்கண்ணே அணிபவருமாகிய சிவபெருமானுடைய திருவடிகளை; நும் பல் பிறவிப் பயம் நந்த - உங்களுடைய பலவாகிய பிறப்புக்களினுள்ள அச்சங்கெடும் பொருட்டு; நா துதிக்கக் கம் வணங்கப் பரிந்து இரும் - நாக்குத் துதிக்கத் தலை வணங்க அன்புகூர்ந்து இருங்கள். எ-று.
    ----------- 

    இரும்பலவின்செய்மருதூரென்னார்தமிதயங்கள்போ 
    லிரும்பலவின்னலதுதீரவேண்டிடினிவிவ்வுலகுள்
    ளிரும்பலவின்பமிலையாயினுமஞ்செழுத்தையுன்னி 
    யிரும்பலவின்சொலொடும்புகழ்ந்தேத்தியிரந்துகொண்டே.         (73)

    (இ- ள்) இரும் பலவின் செய் மருதூர் என்னார் தம் இதயங்கள் போல் இரும்பு அல - பெரிய பலாமரங்களையுடைய வயல்களாலே சூழப்பட்ட மருதூர் என்று சொல்லாதவர்களுடைய நெஞ்சங்களைப்போல (உங்கள் நெஞ்சங்களும்) இரும்பல்ல; இன்னலுது தீர வேண்டிடின் - துன்பம் நீங்க வேண்டின்; இவ் உலகு உள்ளிர் - இவ்வுலகத்தின்கண் உள்ளவர்களே; உம்பல இன்பம் இலை ஆயினும் – யானையுடைய இன்பம் இல்லையாயிலும் ; அஞ்சு எழுத்தை உன்னி இரும் - பஞ்சாக்ஷரத்தைச் சிந்தித்திருங்கள்; பல இன் சொல்லொடும் புகழ்ந்து ஏந்தி இரந்துகொண்டு - பலவாகிய இனிய சொற்களோடும் புகழ்ந்து துதித்து யாசித்துக்கொண்டு. எ-று.
    ------------ 

    இரவித நந்தும்பரவையைச்சுந்தரரெய்தச்சென்றோ 
    னிரவிதனஞ்சயன்றிங்களங்கண்ணனெழிற்கரும்பு 
    யிரவிதனம்புணரும்மருதூரனிணையடியை 
    யிரவிதனங்களறுத்துயிர்வாழுகைக்கென்னெஞ்சமே.         (74)

    (இ- ள்) இரவு இதம் நந்தம் பரவையைச் சுந்தார் எய்தச் சென்றோன் - இராத்திரியிலே அன்புமிகுகின்ற பரவையாரைச் சுந்தரமூர்த்திநாயனார் அடையும்பொருட்டுத் தூது போனவராயும்; இரவி தனஞ்சயன் திங்கள் அம் கண்ணன் - சூரியனும் அக்கினியும் சந்திரனுமாகிய அழகிய கண்களையுடையவராயும்; எழில் கரும் பயிரவி தனம் புணரும் மருதூரன் - அழகையுடைய கரிய உமாதேவியாருடைய முலைகளைப் புணர்கின்ற மருதூரையுடையுவராயுமுள்ள சிவபெருமானுடைய; இணை அடியை இர – இரண்டு திருவடிகளேயும் இரப்பாயாக; விதனங்கள் அறுத்து உயிர் வாழுகைக்கு – துயரங்களை யொழித்து உயிர் வாழ்தற்பொருட்டு; என் நெஞ்சமே- என் மனமே, எ-று.
    ----------- 

    என்னாவரு நதக்கழுநீர்க்கிடங்கெங்குமீன்கறவை 
    யென்னாவருந்துமலர்மருதூருறையீசர்ம 
    வென்னாவருந்தமிழாற்றுதிப்பேன் பயனெய்துவதில் 
    கென்னாவருந்தன்மைவல்லியமாவுனக்கென்னிடத்தே.         (75)

    (இ-ள்) என் நா வருந்த - என்னுடைய நாக்கு வருந்தும்படி; கழுநீர்க் கிடங்கு எங்கும் ஈன் கறவை என் ஆ அருந்தும் மலர் மருதூர் உறை ஈச நம என்னா – செங்கழு நீரையுடைய குளமெங்கும் ஈன்ற கதவையெனப்படும் பசுக்கள் உண்கின்ற பூக்களையுடைய மருதாரின்கண் எழுந்தருளியிராகின்ற சிவபெருமானே வணக்கம் என்று; அரும் தமிழால் துதிப்பேன் - அருமையாகிய தமிழினாலே துதிப்பேன்; ஆவல் இயமா - ஆவலிய இயமனே; என்னிடத்து வருந்தன்மை உனக்கு இங்கு எய்துவது பயன் என் - என்னிடத்து வருந்தன்மையினாலே உனக்கு இங்கே வருவதாகிய பயன் யாது! எ-று. 
    ------------- 

    இடத்தேயுமையைவைத்தோன்மருதூருறையெந்தைவன்ம 
    யிடத்தேயுமைவண்ணனையுதைத்தோன்வெற்பினிங்கனெங்க
    ளிடத்தேயுமைவரப்பெற்றதுநன்றியின்றேந்தியமுத் 
    திடத்தேயுமையவிடையதிபாரவிளமுலைக்கே.         (76)

    (இ-ள்) இடத்தே உமையை வைத்தோன் - இடப்பாகத்திலே உமாதேவியாரை வைத்தவரும்; மருதூர் உறை எந்தை - மருதூரின்கண் எழுந்தருளிருக்கின்ற எமது பிதாவும்; வல் மயிடத்து ஏயும் மை வண்ணனை உதைத்தோன் வெற்யின் - வலிய எருமைக்கடாவின்மேலே பொருந்திய கரு நிறத்தையுடையவனுகிய இயமனை உதைத்தவருமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; இங்ஙன் எங்களிடத்தே உமை வரப் பெற்றது நன்றி - இப்படி எங்களிடத்தே உம்மை வரும்வண்ணம் பெற்றது நன்மையாம்; இனறு ஏந்திய முத்தி அதிபாரம் இளமுலைக்கு இட - இப்பொழுது ( நீர் கையுறையாகத்) தாங்கிய முத்துமாலையை அதிக பாரத்தையுடைய இளமையாகிய தனங்களினிடத்து அணிய; ஐயம் இடை தேயும் (உண்டோ இன்றோ என்னும்) ஐயத்தையுடைய இடையானது தேய்ந்துவிடும். எ-று. [பாங்கி கையுறை மறுத்தல்]
    --------- 

    முலையம்புலவிறைபங்கர்கங்காளர்முதன்மருதூர் 
    முலையம்புலகங்கொளினுங்குன்றாமன்றன்மொய்குழனின் 
    முலையம்புலவிகெடத்தழுவேமதன்மூன்றம்பெய்தான் 
    முலையம்புலவுமினியாவிநீலமுடித்திடுமே.         (77)

    {இ – ள்) முலை அம் புலம் இறை பங்கர் - முல்லை நிலத்துக்குத் தலைவராகிய விட்டுணுவைப் பாகத்திலுடையவரு ம்; கங்காளர் – முழுவெலும்பை யணித்தவருமாகிய சிவ பெருமானுடைய; முதல் மருதூர் - முதன்மையாகிய மருதூரின்கண்ணே; முலை அம்பு உலகம் கொளிலும் குன்றா மன்றல் மொய குழல் - கற்பானது சமுத்திரசலம் உலகத்தைக் கொள்ளினும் அழிப்பெறாத மணத்தையுடைய நெருங்கிய அளகந்தையுடைய பெண்ணே; நின் முலை அம் புலவி கெடத் தழுவேம் - உன்னுடைய தனங்களை அழகிய புலவி நீங்கும்வண்ணம் அணைகின்றிலேம்; மதன் மூன்று அம்பு எ ய்தான் - மன்மதன் (தாமரை சூதம் அசோகமென்னும் முதன்) மூன்று, பாணங்களைத் தொடுத்தான்; முலை அம்பு உலவும் - முல்லையாகிய (நான்காம்) பரிணம் (வந்து) உலவுகின்றது; இனி நீலம் ஆவி முடித்திடும் - இனி நீலோற்பலமாகிய ஐந்தாம்பாணம் உயிரைக் கொன்றுவிடும், எ-று. [தலைவன் தலைவிக்குத் தன் வருத்தங் கூறல்.]
    ---------- 

    முடியப்படுவலைவீசும்பரவவெம்முப்புரவர் 
    முடியப்படுகணைதொட்டவனே மருதூரமுன்னோய்
    முடியப்படுபலித்தோலரைமேவுமுதல்வவென்னை 
    முடியப்படுபிறவிக்கடல்வீழமுனிந்தனேயே.         (78)

    (இ-ள்) முடியப்பகி வலை வீசும் பரவ - முடியப்பட்ட வலையை வீசுகின்ற பரவரே; வெம் முப்புரவர் முடியப் படு கணை தொட்டவனே - கொடுமையாகிய முப்புரங்களை யுடையவசுரர் இறக்கும்பொருட்கிக் கொல்கின்ற அம்பை எய்தவரே; மருதூர் – மருதூரையுடையவரே; முன்னோய் – அநாதியாயுள்ளவரே; அப்பு முடி அடு புலித் தோல் அரை மேவு முதல்வ - கங்கைநீர் முடியிலும் கொல்கின்ற புலித்தோல் அரையிலும் பொருந்திய முதல்வரே; என்னை முடியப் படு பிறவிக் கடல் வீழ முனிந்தனை- என்னை முழுமையும் அழுந்துகின்ற பிறவிக்கடலிலே விழும்வண்ணம் கோபித்தீர். எ-று.
    ------------- 

    முனியாயமானுடர்க்காவந்த கனைமுனிந்தவனே 
    முனியாயமானதமிழ்மருதூருறைமுக்கண நின் 
    முனியாயமாலையனென்றேத்துகைசகன்புமுற்றுவித்து 
    முனியாயமாநிலத்திற்பிறவாமை நம்முன்வினையே.         (79)

    (இ-ள்) முன் நியாயம் மானுடர்க்கு ஆ அந்தகனை முனிந்தவனே - முன்னே நியாயத்தையுடைய மனிதருக்காக இயமனைக் கோபித்தவரே; முனி ஆயம் ஆன தமிழ் மருதூர் உறை முக்கண – அகத்திய முனிவரது பேறாகிய தமிழையுடைய மருதூரின் கண் எழுந்தருளியிருக்கின்ற மூன்று கண்களையுடையவரே; நின் முனி யாய் அ மால் ஐயன் என்று ஏத்துகைக்கு - உம்மைச் சிந்தித்து மாதாவே அந்த விட்டுணுவுக்குப் பிதாவே என்று துதிக்கும்பொருட்டு; அன்பு முற்று வித்து - அன்பை முதிர்வித்து; அம் மாநிலத்தில் பிறவாமை - அழகிய பெரிய பூமியின்கண்ணே (அடியேங்கள் இனிப்) பிறவாமைப்பொருட்கி; நம் முன் வினை முனியாய் - நமது முன்னை வினையைக் கோபித்தருளும், எ-று. 
    -------------- 

    வினையகல்வித்தென்னையாண்டிடவேண்டும்விரைமலர்க்கா
    வினையகல்வித்தகக்கண்ணியங்காக நடமெய்ப்பயில 
    வினையகல்வித்தனமாதர்க்குமோகம்விளைத்தருள்க 
    வினயகல்வித்தலைவாமருதூர்மைம்மிடற்றவனே.         (80)

    (இ - ள்) வினை அகல்வித்து என்னை ஆண்டிடவேண்டும் – வினைகளை யொழிவித்து என்னை ஆண்டருளவேண்டும்; விரைக் காவி மலர் நை அகல் வித்தகம் கண்ணி பங்கா - மணத்தையுடைய கருங்கு வளைமலர் தளரப்பெற்ற அகன்ற சதிரப் பாட்டையுடைய கண்களையுடைய உமாதேவியாருடைய பாகரே; நடம் மெய் பயில் அவிநய - கூத்தின் கண்ணே திருமேனியிலே பயிலா நின்ற அபிநயங்களையுடையவரே; கல்வி தனம் மாதர்க்கு மோகம் விளைத்தருள் கவின் ஐய - மலையைப்போலும் பருமையாகிய முலைகளையுடைய பெண்களுக்கு மோசத்தை வினைவித்தருளிய அழகையுடைய ஐயரே; கல்வித் தலைவா - கல்விக்குத் தலைவரே; மருதூர் மை மிடற்றவனே - மருதூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற கரிய கழுத்தையுடையவரே, எ-று. 
    ---------------- 

    அவனியம்பாரழல்கால்விசும்பாயெங்குமானவனே 
    யவனியம்பான்முப்புரமெரித்தாய்தென்னணிமருது
    ரவனியம்பாவித்தெனைவாவெனவடர்த்தநதகனா 
    மவனியம்பாமுனருள்புரியாயுனனடைக்கிலமே.         (81) 

    (இ - ள்) அவனி அம்பு ஆர் அழல் கால் விசும்பு ஆய் எங்கும் ஆனவனே - பூமியும் நீரும் நிறைந்த அக்கினியும் காற்றும் ஆகாயமுமாய் எங்குமாயவரே; அ வனி அம்பால் முப்புரம் எரித்தாய் – அந்த அக்கினியாகிய அம்பினாலே முப்புரங்களையும் எரித்தவரே; தென் அணி மருதூர - அழகிய அலங்காரத்தையுடைய மருதுரையுடையவரே; அந்தகன் ஆம் அவன் என அணியம் பாவித்து அடர்த்து வா என இயம்பாமுன் அருள் புரியாய் - இயமனாகிய அவன் என்னை வேறாகப் பாவித்துப் பொருதி வாவென்று சொல்லாமுன் அருள் செய்யும்; உன் அடைக்கலம் -உமக்கிடைக்கலம். எ-று.
    -------------- 

    கலங்காமனந்தந்து கூற்றுவன்றோற்றிடுங்காலத்தடைக் 
    கலங்காமனந்த நதருமருதூரையகஞ்சத்தன்ப 
    கலங்காமனந்தமுராரிதொழுஞ்சிவகாமமெனுங் 
    கலங்காமனந்தவிழித்தவனேகறைக்கந்தரனே.         (82)

    (இ - ள்) கூற்றுவன் தோற்றிடும் காலத்து அடைக்கலம் - இயமன்றோன்றும்பொழுது (உமக்கு) அடைக்கலம்; கலங்கா மனம் தந்தி கா - அஞ்சாத மனத்தைத் தந்து காத்தருளும்; மன் நந்து அம் தரு மருதூர் ஜய - நிலைபெற்ற சங்குகளை நீர் தருகின்ற மருதூரின் கணெழுந்தருளியிருக்கின்ற பிதாவே; கஞ்சத்தன பகல் அம் கா மன் நந்தம் மு ராரி தொழும் சிவ - பிரமனும் சூரியனும் அழகிய கற்பகக்காவுக்கரசனாகிய இந்திரனும் நம்முடைய விட்டுணுவும் வணங்குகின்ற சிவனே; காமம் எனும் கலம் காமன் நந்த விழித்தவனே - காமமெனப்படும் ஆபரணத்தையுடைய மன்மதன் கெடும் வண்ணம் விழித்தவரே; கறைக் கந்தானே - கரிய கழுத்தையுடையவரே. எ -று.
    ------------- 

    கந்தரவையன்யன்மாலென்றிந்திகணபதிவேற் 
    கந்தரவையன்புகழ்மருதூரகரியதிருக் 
    கந்தரவையம்புகுந்தவனே மதன்காயங்கன 
    கந்தரவையம்பெய்தாலுய்யுமோவென்றன்காதலியே,         (83)

    (இ - ள்) கந்தரம் வையன் - மேகமாகிய வாகனத்தையுடைய இந்திரனும்; அயன் மால் - பிரமலும் விட்டுணுவும் ; என்று இந்து - சூரியனும் சந்திரனும்; கணபதி வேல் கந்தா அவ் ஐயன் புகழ் மருதூர - விநாயகக்கடவுளும் வேலாயுதத்தையுடைய முருகக் கடவுளும் அவ்வையனாரும் புகழ்கின்ற மருதூரையுடையவரே; கரிய திருக் கந்தர - கரிய அழகிய கழுத்தையுடையவரே; ஐயம் புகுந்தவனே – பிஷை புகுந்தவரே; மதன் காயம் கனகம் தா ஐயம்பு எய்தால் - மன்மதன் உடம்பு பொன்போலுந்தேமலைத் தரும் வண்ணம் ஐந்து பானங்களையுந் தொடுத்தால்; என்தன் காதலி உய்யுமோ - என்னுடைய தலைவி உய்வாளா! எ-று. [தலைவன் முன்னிலையாகப் பாங்கி கூறல்]
    --------------- 

    காதலையானின்னடியேவணங்கக்கருதுகின்ற
    காதலையானின்னந்தீர்கிலன்காணினிக்காலனென்மேற்
    காதலையானின்புறத்தோற்றிமாற்றிக்கரையரம்பைக் 
    காதலையா நிறகுந்தெனமருதூரவெனகண்மணியே. (84)

    (இ. ள்.) கா - காத்தருளும்; தலையால் நின அடியே வணங்கக் கருதுகின்ற காதலை யான் இன்னம் தீரகிலன் - தலையினாலே உம்முடைய திருவடிகளையே வணங்கும் பொருட் டு நினைக்கின்ற ஆசையை நான் இன்னமும நீங்குகின்றிலேன்; இனிக் காலன் என்மேல் காதலை - இனி இயமன் என்மீது பொருதிலை; ஆனின் புறம் தோற்றி மாற்று - இடபததின் முதுகிலே தோன்றி நீக்கியருளும் ; இக்கு அரை அரமரைபக் காதலையா நிற்கும் தென் மருதூர – கரும்புகளை யுரிஞ்சுகின்ற வாழைகளையுடைய சோலைகள் முதன்மையாய் நிற்கின்ற அழகிய மருதூரையுடையவரே; என் கண்மணியே - என்னுடைய கண்மணியே. எ -று, காண அசை. 
    -------------- 

    கண்டீரவ ந்தங்குகாட்டிருவீருங்கதிர்மறைவுங் 
    கண்டீரவந்தனிபோவதிங்கேதங்கிக்காலையிற்போங்
    கண்டீரவந்தமொழிபங்கனைத்தென்னங்காமருதூரக 
    கண்டீவந்தனைசெயதூரபுகுமின்கல்லையற்றே.         (85)

    (இ . ள்) கண்டீசவம தங்கு காட்டு - சிங்கம் இருக்கின்ற காட்டிலே; இருவீரும கதிர் மறைவும் கண்டீர் – நீங்களிருவரும் சூரியனுடைய ஆஸ்தமயனத்தையும் கண்டீர்; தனி போவது அவம - தனியே போதல் வீணாகும்; இங்கே தங்கிக் காலையில் போம் - இவ்விடத்தே இருந்து காலையிலே போங்கள்; கண்டு ஈர வந்த மொழி பங்கனை- கற்கணடை வெல்லும் வண்ணம் தோன்றிய சொல்லையுடைய உ மாதேவியாருடைய பாகராகிய சிவபெருமானே; தென்னங்கா மருதூர்க்கண் - தென்னஞ்சோலைகளினாலே சூழப்பட்ட மருதூரினிடத்தே; தீர வந்தனை செய்து - (வருந்தக்) தீர, வழிபாடு செய்து; கவலை அற்று ஊர் புகுமின் - கவலை நீங்கி ஊருக்குப் போங்கள். எ-று. [விருந்து விலக்கல்]
    ---------------- 

    வலையம்பரிக்குங்கடற்றுறைவாகறைவாளரவ 
    வலையம்பரிக்கும்புயத்திற்கொண்டாய்மருதூரரசே 
    வலையம்பரிக்குமிசையேயசையமதுரைவந்தாய் 
    வலையம்பரிக்குவில்வாங்கினுண்டோவேன்மகட்குயிரே.         (86)

    (இ - ள்) வலை அம்பு அரிக்கும் கடற்றுறைவா - வலையினாலே சலத்திலே (மீனை) அரிக்கின்ற பரவவுருக்கொண் டவரே; கறை வாள் அரவம் வலயம் பரிக்கும் புயத்தில் கொண்டாய் - நஞ்சையுடைய ஒளிபொருந்திய பாம்பாகிய வாகுவலயத்தைத் தாங்காகின்ற புயத்திலே கொண்டவரே; மருதூர் அரசே - மருதூருக்கு நாயகரே; வலயம் பரிக்கு மிசையே அசைய மதுரை வந்தாய் - வல்லயம் குதிரையின்மீது அசையும் வண்ணம் மதுரையின்கண் எழுந்தருளி வந்தவரே; வல் ஐயம்பர் இக்கு வில் வாங்கின் - வலிய ஐந்து பாணங்களையுடைய மன்மதன் கருப்புவில்லை வளைக்கின்; என் மகட்கு உயிர் உண்டோ - என்னுடைய மகளுக்கு உயிருண்டோ, எ-று, [செவிலியிரங்கிக் கூறல்]
    ------------- 

    மகவானரம்பையர்சந்திரசூரியர்மாமுனிவோர்
    மகவானரம்புவிபோற்றுங்கவுரிமருவியவா 
    மகவானரம்புயன்மாயோனெருங்கமருங்கிற்கொண்ட 
    மகவானரம்பையங்காமருதூர்க்கொன்றைமாலையரே.         (87)

    (இ-ள்) மகவான்- இந்திரனும்; அரம்பையர் – தேவமகளிர்களும்; சந்திர சூரியர் – சந்திர சூரியர்களும் ; மாமுனிவோர் - பெரிய முனிவர்களும்; மகம வானா - யாகத்தின் விருப்பையுடைய தேவர்களும்; அம்புவி போற்றும் -பூமியிலுள்ளவர்களும் ஆதிக்கின்ற; கவுரி மருவிய வாமம க வானா - உமாதேவியார் பொருந்திய இடத்தொடையை-யுடையவா; அம்பயன மாயோன் நெருங்க மருங்கில கொண்ட மகவான - பிரமாவையும் விட்டுணுவையும் நெருங்கும் வண்ணம் இரண்டு பக்கத்தினும் கொண்டருளிய ஒளியையுடையவர்; -அரம்பை அம கா மருதூரக கொன்றை மாலையா - வாழைச்சோலைகளினாலே சூழப்பட்ட மருதூரின்கண் ணெந்தருளியிருக்கிளற கொன்றை மாலையையுடையவராகிய சிவபெருமான் எ - று. 
    --------------- 

    மாலையம்போருக நோக்குங்கண்ணானைமதியங்கொன்றை
    மாலையம்போருக நதோறு நதரித்துமன்றாடியைபடின் 
    மாலையம்போருக நதந்நாளிரணியனமாரபகழங்க
    மாலையமபோருகஞ்சூழமருதூரனை வந்திப்பனே.         (88)

    (இ - ள்) மால ஐயம்போ உக நோக்கும் கண்ணானை - மயக்கத்தைச் செய்கின்ற ஐந்து பாணங்களையுடைய மனமதன பொடியாகும் வண்ணம் பார்த்தருளிய கண்ணையுடையவரும்; மதியம் கொன்றை மால் அம்பு ஒருகந்தோறும தரித்து மன்று ஆடியை – சந்திரனையும் கொன்றை மாலையையும கங்கை நீரையும் ஓரோருகங்தோறும் அணிந்து கனகசபையின் கண்ணே நிருத்தஞ்செய்பவரும்; புல் மாலை அம் போர் உக்கது அந்நாள் இரணியன் மார்பு அகழ்ந்த மால் ஐ- புல்லிய மாலைப் பொழுதின்கண் அழகிய போரை மகிழந்து அந்நாளிலே இரணியனுடைய மார்பைப் பிளந்த விட்டுணுவுக்குக் கடவுளும்; அம்போருகம் சூழ் மருதூரன் –தாமரை மலர்கள் சூழ்ந்த மருதூரையுடையவருமாகிய சிவபெருமானை; வந்திப்பன் - (யான்) வழிபடுவேன். எ.று.
    ------------ 

    வந்திக்குமாதர்பத்தர்சித்தத்தன்மனமகிழ்ச்து 
    வந்திக்குமாதரமாவதிதொழுமன்னனெல்லு 
    வந்திக்குமாதரக்கன் றருந்தும்மருதூரனமன் 
    வந்திக்குமாதரப்போதணுகாதென்னுள்வைகுவனே.         (89)

    (இ- ள்) வந்திக்கும் ஆதரம் பத்தர் சித்தத்தன் - வழிபடுகின்ற விருப்பத்தையுடைய அன்பர்களது சித்தத்திலுள்ளவரும்; மனம் மகிழ்ந்து வந்து இக்கு மாதர் அமராவதி தொழும் மன்னன் - நெஞ்சம் உவந்து வந்து இப்பூமியின் கண்ணே அழகையுடைய அமராவதியிலுள்ளவர்கள் வணங்குகின்ற நாயகரும்; நெல் இக்கும் உவந்து ஆதரம் கன்று அருந்தும் மருதூரன் - நெல்லையும் கரும்பையும் மகிழ்ந்து பசுக்களும் கூட்டமாகிய கன்றுகளும் உண்கின்ற மருதூரை யுடையவருமாகிய சிவபெருமான்; நமன் விந்திக்கும் மா தரம் போது அணுகாது - இயமன் நோய் செய்கின்ற பெரிய அச்சத்தையுடைய காலத்தின்கண் அணுகாத வண்ணம்; என்னுள் வைகுவன் - என்னுள்ளே எழுந்தருளியிருப்பா. எ-று.
    ------------ 

    வையம்புரந்தரமாலங்கிலின்மலைமாசுண் நான்
    வையம்பரந்தரர்வானவர்பாகயன்மாமறையி 
    வையம்புரந்தரமாறப்படைத்தனர்மாமதுரை 
    வையம்புரந்தாசாண்மருதூரர்தம்வல்லவமே,         (90)

    (இ-ள்) வை அம்பு அங்கி உரம் தான் மால் - கூர்மையும் பாணமும் (முறையே) அக்கினியும் வலிமையைத் தரித்தவராகிய விட்டுணுவுமாம்; வில் மலை -வில் மேருமலையாம்; நாண் மாசுனம் - நாணி பரம்பரம்; வையம்பாந்தார் வானவர் - தேர் இந்திரரும் தேவருமாம்; பாகு அயன் - சாரதி பிரமனும்; மா மறை - குதிரைகள் வேதங்களாம்; இவை அம்புரம் தரம் மாறப் படைத்தனர்- இவைகளை அழகிய முப்புரங்களும் வலிமை நீங்கும் பொருட்டுப் படைத்தருளினார்; மா மதுரை வையம் புரத்து அரசாள் மருதூார்தம் வல்ல வம் - பெரிய மதுரையின் கணெழுந்தருளியிருந்து பூமியைக் காத்து அரசாண்டருளிய மருதூரையுடைய சிவபெருமானது வல்லவம் இது. எ-று. 
    ---------------

    வல்லியமாமனதளுடையான்மருதூரன் வள்ளி 
    வல்லியமாமன்முருகன்பிதாமும்மலங்களென்றும் 
    வல்லியமாமனெகிழ்த்தென்னையாளுமென்மாட்டினிநீ
    வல்லியமrமனத்துண்ணினையாய்கொல்வரத்தினையே.         (91)

    (இ - ள்) வல்லியம் மா மன் அதள் உடையான் - புலியினது பெரிய நிலைபெற்ற தோலாகிய உடையையுடையவரும்; மருதூரன் – மருதுரையுடையவரும்; வள்ளி வல்லி அம் மாமன் - வள்ளியென்னும் பெயரையுடைய கொடிபோல்வாளுக்கு அழகிய மாமனாரும்; முருகன் பிதா - முருகக் கடவுளுக்குத் தங்தையாருமாகிய சிவபெருமான்; மும்மலங்கள் என்னும் வல்லி அம்மாமல் நெகிழ்த்து – மூன்று மலங்களெனப்படும் விலங்குகள் அமுக்காவண்ணம் பிரித்து; என்னை ஆளும் - என்னை ஆண்டருளுவர்; வல் இயமா இனி நீ என் மாட்டு வரத்தினை மனத்துள் நினையாய்கொல் - வலிய இயமனே இனி நீ என்னிடத்து வருதலை உன்னெஞ்சிலே நினையாய்போலும். எ-று. 
    --------- 

    வரப்புடைக்குஞ்சிச்சடையான்குவளைமதுவொழுகி 
    வரப்புடைக்குஞ்செறுமா மருதூர்வெற்பமங்கைதன்பால்
    வரப்புடைக்குஞ்சிங்கங்கங்குலின்வாரலைவல்லெழிலி 
    வரப்புடைக்குங்கொங்கையாதலின்வேண்டும்வரைவினியே.         (92)

    (இ - ள்) வரம் அப்பு உடைக் குஞ்சியான் -மேலாகிய நீரையுடைய குஞ்சிச் சடையையுடைய சிவபெருமானது; குவளை மது ஒழுகி வரப்பு உடைக்கும் செறு மா மருதூர் வெற்ப – குவளை மலரினின்றும் தேனொழுகி வரம்புகளை யுடைக்கின்ற வயல்களினாலே சூழப்பட்ட பெரிய மருதூரிலுள்ள மலையையுடைய தலைமகனே; மங்கை தன் பால் வரச் சிங்கம் புடைக்கும் - தலைமகளிடத்து நீ வரச் சிங்கங் கொல்லும்; கங்குலின் வரலை - இரவிலே வராதொழி; வல் எழில் இவரக் கொங்கை புடைக்கும் - சூதாடுகருவியினது அழகு செறியும்வண்ணம் தனம் வீங்கும்; ஆதலின் இனி வரைவு வேண்டும் - ஆதலால் இனி விவாகம் வேண்டும். எ-று. [பாங்கி வரைவு முடுக்கம்] 
    ------------- 

    இனியமனச்சுதலில்லைநெஞ்சேமன்றலீர்க்கமலத் 
    தினியமனச்சுதன்போற்றும்பிரான்மருதூரிறையா 
    மினியமனச்சுதம்போந்திடுங்கண்டனிலங்குபொற்றா 
    ளினியமனச்சுருதிப்பொருளோடுமிறைஞ்சவனே.         (93)

    (இ-ள்) இனி யமன் நச்சுதல் இல்லை - இனி இயமன் விரும்புதலில்லை; நெஞ்சே – மனமே; மன்றல் ஈர்ம் கமலத்தின் நியமன் அச்சுதன் போற்றும் பிரான் - மணத்தையுடைய குளிர்ந்த தாமரை மலராகிய கோயிலையுடைய பிரமாவும் விட்டுணுவுந் துதிக்கின்ற கடவுளாயும்; மருதூர் இறை ஆ ம் இனிய மன் - மருதூருக்கு நாயகராகிய இனிய தலைவரும்; நச்சு உதம் போந்திடும் கண்டன் – நஞ்சாகிய நீர் தங்குகின்ற கழுத்தையுடையவருமாகிய சிவபெருமானுடைய ; இலங்கு பொன் தாளின் - விளங்குகின்ற பொன்போலுந் திருவடிகளிலே; இயம் மன் அச் சுருதிப் பொருளோடும் இறைஞ்சுவன் - ஒலி பொருந்திய அந்தவேதத்தினது பொருளுடனே வணங்குவேன். எ-று.
    -------------- 

    இறையாமலகங்கையான்மருதூரனினையடியை 
    யிறையாமலகமெனக்கண்டிறைஞ்சுவனென்கவிபாழ்க் 
    கிறையாமலகமகிழ்வுறப்பாடுவனிங்கியமற் 
    கிறையாமலகண்டித்தென்மேல்வருவதியல்பல்லவே.         (94)

    (இ -ள்) இறை – கடவுளும்; ஆமலம் கங்கையான் - பரிசுத்தமாகிய கங்கையை யுடையவரும்; மருதூரன் - மருதூரையுடையவருமாகிய சிவபெருமானுடைய; இணை அடியை – இரண்டு திருவடிகளையும்; இறை ஆமலகம் எனக் கண்டு இறைஞ்சுவன் - கையிலுள்ள நெல்லிக்கனிபோலத் தரிசித்து வணங்குவேன்; என் கவி பாழ்க்கு இறையாமல் - என்னுடைய பாட்டுக்களை வீணுக்கிறைக்காது; அகம் மகிழ்வு உ றப் பாடுவன் - மனம் மகிழ்ச்சியடையும் வண்ணம் பாடுவேன்; இங்கு இயமற்கு இறை யாம் அல - இங்கே இயமனுக்குச் சிறுமையுடையேம் நாமல்ல; கண்டித்து என்மேல் வருவது இயல்பு அல்ல - கண்டித்து என்மீது வருதல் (அவனுக்கு) முறையன்று. எ-று.
    ------------ 

    இயலுமிசையும்பயின்மருதூரிறைபின்னருளா 
    லியலுமிசையும்பரிசநின்றேங்கிடலெய்தவிவ
    ணியலுமிசையுமிதுமுடிப்பாயிங்குப்போலவெங்க 
    ளியலுமிசையும்பர்தம்பதியு நீயுமிருந்திடவே.         (95)

    (இ - ள்) இயலும் இசையும் பயில் மருதூர் இன் அருளால் - இயற்றமிழும் இசைத்தமிழும் பயிலாகின்ற மருதூரின்கண் ணெயுந்தருளியிருக்கினற சிவபெருமானது இனிய கருணையினாலே; இசையும் பரிசம இயலும் - (நீ) உடன் படும் பரிசம் பொருந்தும் ; நின்று ஏங்கிடல் - நின்று இரங்காதே; இவண் இயலும் இசையும் எய்த - 
    இவ்வுலகத்திலே ஒழுக்கமும் கீர்த்தியும் அடையும்பொருட்டும் ; இங்குப் போல எங்கள் இயலும் நீயும் மிசை உம்பர்தம் பதி இருந்திட - இங்கேபோல எங்கள் பெண்ணும் நீயும் மேலுள்ள தேவருலகத்திலும் வாழும் பொருட்டும்; இது முடிப்பாய் - இவ்விவாகத்தை முடிக்கக்கடவாய். எ-று [வரைவெதில்கோடல்]
    ----------------- 

    இருவரும்பன்னமலர்வாவியிற்செலினீர்ங்கழுநீ
    ரிருவரும்பனனநின்கணகண்டுவாடுமிருளெனக்கு 
    ளிரிருவரும்பன்னநெருங்கியகாவிலியான்செல்வனீ
    யிருவரும்பன்னகப்பூண்மருதூரனெழில்வரைக்கே.         (96)

    (இ- ள்) இருவரும் மலர் பன்ன வாவியில் செலின் - நாமிருவரும் பூக்களைச் கொய்யும்பொருட்டு வாவியிலே போவாமாயின்; ஈர்ம் கழுநீர் இரு அரும்பு அன்ன நின கண் கண்டு வாடும் - குளிர்மையாகிய குவளையினது பெரிய அரும்புகள் (தம்மைப்) போன்ற உன்னுடைய கண்களைக் கண்டு வாடும்; இருள் எனக் குளிரு இரும் பன்னம் நெருங்கிய காவில் யான் செல்வன் - இருளென்று சொல்லும்வண்ணம் குளிர்மை வருகின்ற இலைகள் நெருங்கிய சோலையிலே நான் போவேன்; நீ இரு – நீ (இங்கே) இரு; அரும் பன்னகம் பூண் மருதூரன் எழில் வரைக்கு – அரிய பாம்பாகிய ஆபரணத்தை யணிந்த மருதூரையுடைய சிவபெருமானது அழகையுடைய மலையிடத்து. எ-று. [ பாங்கி தலைவியைக் குறியிடத்துயத்து நீங்கல்.] 
    --------------

    வரைவிலங்கையன்றனதஞ்செழுத்துமறந்திருந்த 
    வரைவிலங்கையன் மருதூரன் வெற்பின்வடிவிதென்ன 
    வரைவிலங்கையர்தருஞ்சிற்றிடைச்சிக்குமன்னற்குமிவ் 
    வரைவிலங்கையன்றஉர்த்தானுந்தேவியுமானினவே.         (97)

    (இ - ள்) வரை வில் அம் கையன் - (மேரு) மலையாகிய வில்லையேந்திய அழகிய கையையுடையவரும்; தனது அஞ்சு எழுத்து மறந்து இருந்தவரை விலங்கு ஐயன் - தம்முடைய பஞ்சாக்ஷாத்தை மறந்திருந்தவர்களை விலகுகின்ற கடவுளும்; மருதூரன் வெற்பின் – மருதூரையுடைய வருமாகிய சிவபெருமானுடைய மலையின் கண்ணே; இது என்ன வடிவு - இது என்ன அழகு; வரைவு இல் – பிரிவில்லை; அங்கு ஐயம் தரும் சிறு இடைச்சிக்கும் மன்னற்கும் - அங்கே ஐயத்தைத் தருகின்ற சிறிய இடையையுடைய தலைமகளுக்கும் தலைமகனுக்கும்; இவ்வரைவு இலங்கை அன்று அடர்த தானும் தேவியும் மானின - இம்மணம் இலங்கையை அந்நாளிலே பொருதவனாகிய இராமனையும் (அவன் மனைவியாகிய) சீதையையும் போன்றன. எ- று. [செவிலி நற்றாய்க்கிருவர் காதலையுமறிவித்தல்.]
    ---------- 

    மானத்தரையரைவன்புலித்தோலரைவட்டறுத்த 
    மானத்தரையரைத்தென்மருதூரரை மாமலரோன் 
    மானத்தரையரை வாழ்த்திவணங்குமின்வானத்தரு 
    மானத்தரையரை வைப்பரப்பாற்சிவமண்டலத்தே         (98)

    (இ - ள்) மான் அத்தரை - மானேயேந்திய கையை யுடையவரும்; அரை வல் புலித்தோலை - அரையின்கண்ணே வலிய புலித்தோலையுடையவரும்; வட்டறுத்த மான் அத்து அரையரை - (தடிக்கு இவ்வளலென்று) வரையறுத்த உமாதேவியார் பொருந்திய சிவப்பாகிய பாதியையுடையவரும் ; தென் மருதூரரை -தென் மருதூரையுடையவரும்; மா மலரோன் மா நத்தர் ஐயரை - பெரிய தாமரை மலரிலிருக்கும் பிரமனுக்கும் பெரிய சங்கையுடைய விட்டுணுவுக்கும் தந்தை யாருமாகிய சிவபெருமான்; வாழ்த்தி வணங்குமின் - துதித்து வணங்குங்கள்; வானத்தரும் மானத் தரையரை அப்பால் சிவமண்டலத்து வைப்பர் - தேவர்களும் நாணும் வண்ணம் பூமியினுள்ளோரை அப்பாலுள்ள சிவலோகத்தின்கண் இருத்தியருளுவர். எ.று.
    ------------ 

    மண்டலமுண்டவன்கண்டறியாதவன்வண்டமிழ்க்க 
    மண்டலமுண்டமுனிமுதனால்வர்வணங்குமையன் 
    மண்டலமுண்டகக்காடுழக்கும்மருதூரன்முக 
    மண்டலமுண்டன்புசெய்நெஞ்சமேயஞ்சன்மாவினைக்கே.         (99)

    (இ. ள்) மண்டலம் உண்டவன் கண்டு அறியாதவன் – பூமியை யுண்டவராகிய விட்டுணுவும் கண்டறியாதவராயும் ; வள் தமிழ் கமண்டலம் முண்டம் முனி முதல் நால்வர் வணங்கும் ஐயன் - வளம் பொருந்திய தமிழை வளர்த்த கமண்டலத்தையுடைய திரிபுண்டத்தைத் தரித்த அகத்தியர் முதிலாகிய நான்கு முனிவர்கள் வணங்குகின்ற கடவுளாயும்; மண்டு அலம் முண்டகம் காடு உழக்கும் மருதூரன் - நெருங்கிய கலப்பை தாமரைக்காட்டை உழக்குகின்ற மருதூரையுடையவராயுமுள்ள சிவபெருதானது; முகம் மண்டலம் உ ண்டு - திருமுகமண்டலம் உண்டு; அன்பு செய் நெஞ்சமே; அன்பு செய்வாயாக மனமே; மா வினைக்கு அஞ்சல் - பெரிய வினைகளுக்கு அஞ்சாதொழி. எ-று.
    --------------

    மாவினலங்ககலச்செற்றமாறங்குவாமபங்கர்
    மாலினலங்கனிநீர்செந்நெற்பாய்மருதூரர்மலை
    மாவினலங்கவளைத்தவர்பாதம்வணங்கினர்க்கு
    மாவினலங்கலங்கற்றோளில்வாழுமலர்த்திருவே,         (100)

    (இ - ள்) மா இனல் அங்கு அகலச் செற்ற மால் தங்கு வாமம் பங்கர் - யானையினுடைய துன்பம் அங்கே ஒழியும் பொருட்டு (முதலையைக்) கொன்ற விட்டுணு தங்குகின்ற இடப் பாகத்தையுடையவரும்; மாவின் நல் அம் கனி நீர் செந் நெல் பாய் மருதூரர்-மாமரத்தினுடைய நல்ல அழகிய பழத்தினது சாறு செங்நெற்பயிர்களுக்குப் பாய்கின்ற மருதூரை யுடையவரும்; மலை மா வில் நலங்க வளைத்தவர் (மேரு) மலை யாகிய பெரியவில்லை முடங்கும்வண்ணம் வளைத்தவருமாகிய சிவபெருமானுடைய ; பாதம் வணங்கினர்க்கு - திருவடிகளை வணங்கினவர்களுக்கு; மாவின் அலங்கு அலங்கல் தோளில் - வண்டுகளையுடைய விளங்குகின்ற மாலையை அணிந்த புயத்தின் கண்ணே; மலர்த் திரு வாழும் – தாமரை மலரிலிருக்கின்ற இலக்குமி வாழுவள். எ-று. 

    மருதூரந்தாதியுரை முற்றுப்பெற்றது 

  •  

This file was last updated on 3 June 2017. 
Feel free to send corrections to the webmaster. 

 

Related Content