naTarAca catakam of
citamparanAta munivar
In tamil script, unicode/utf-8 format
Source:
நடராச சதகம்
ஆசிரியர் :
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பரநாத முனிவர்
இது இவ்வாதீன இருபத்தைந்தாவது மகாசந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீபூ சுப்பிரமணியதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய
சுவாமிகள் அவர்கள் ஆணையின்படி வெளியிடப்பெற்றது.
தருமபுர ஆதீனம், 1946,
வெளியீடு எண் 111, பிரதிகள் 500
தருமபுர ஆதீனம் ஞானசம்பந்தம் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
--------
திருச்சிற்றம்பலம் -குருபாதம்
முகவுரை
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிகோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத் துஞ் செல்வம் செல்வமே.
நடராச சதகம் என்பது சிதாகாசமாகிய தில்லை நகரிலெழுந்தருளியிருககும் ஆனந்தக்கூத்தரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு எழுந்த ஒரு பிரபந்தம். 103 பாட்டுக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'சிவசிதம்பரவாச சிவகாமி யுமைநேச செகதீச நடராசனே' என்ற மகுடம் பெற்று விளங்குவது. அதிலும் "தில்லை மூவாயிரவர்தொழும்" எனத் தில்லை வாழந்தணர்கள் ஆகம விதிப்படி வழிபாடு செய்வதை மிகப் பாராட்டிச் செல்லுகிறது. "பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து தாயுண்டாங்கு" ஆனந்தக்கூத்தன் அருட்பெருக்கை ஏற்று ஆன்மாக்களது பக்குவநிலைக்கேற்பப் பாலித்தருளும் பராசத்தியாகிய சிவகாமியம்மைக்கு மூவகையான்மாக்களு முய்ய மூலாகம உபாகமங்களை விதிமுறை நடக்க மொழிந்ததாகக் கூறுவது. ஆசிரியவிருத்தத்தானமைந்தது.
சதகமென்பது ஒருபொருள்பற்றி எழுந்த நுாறு பாக்களை யுடையது. தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றானது. ஆனால் இதனைப்பற்றிய இலக்கணம் பன்னிருபாட்டியல் முதலிய பழைய இலக்கண நூல்களிற் கூறப்படவில்லை. பிற்காலத்து ஐந்திலக்கணங் கூறும் செந்தமிழ் நூலாகிய இலக்கண விளக்கப் பாட்டியலில் ’விளையு மொருபொருண் மேலொரு நூறு, தழைய வுரைத்தல் சதகமென்ப’ என்று இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது. இதற்குரையெழுதிய சதாசிவ நாவலர் 'கற்று வல்லோரால் விரும்பும் அகப்பொருளொன்றின் மேலாதல், புறப்பொருளொன்றின் மேலாதல் கற்பித்து நூறுகவி பாடுதல் சதகமாம்' என்று பொருள் கண்டார். ஆகவே இச்சிறுநூல் அகப்பொருளைளேயும் புறப்பொருளையும் பொருளாகக்கொண்டு எழுந்ததென்பது துணிபு.
இச்சதகத்தின் தந்தையாராக முதற்கண் விளங்குபவர்கள் அறிவாற் சிவனேயாய அமைச்சராம் வாதவூ ரடிகளேயாவர். தனிநூலாக அவர்கள் செய்யாவிடினும் திருவாசகத்துத் திருச்சதகம் என்ற பகுப்பு அமைந்திருத்தல் ஆராய்தற்குரியது. ஆனால் அது கட்டளைக்கலித்துறை யானமைந்தது, பிற்காலத்து நாட்டு வரலாறுணர்த்தும் நூறு பாடல்களிலடங்கிய சதகங்கள் எழுந்தன, அவை தொண்டைமண்டல சதகம், சோழமண்டல சதகம், பாண்டி மண்டல சதகம் முதலிய பலவாம். இவ்வாறு சதகச் செய்யுட்கள் பொருட்டொடர்பாலும் தண்ணென்ற செய்யுணடையாலும் எல்லார் மனத்தும எளிதிற்பதியத் தொடங்கவே கவிஞர் பெருமக்கள் இப்பிரபந்தத்தின் வாயிலாக அன்றாட வாழ்வுக்கு இன்றியமையாத அருங்கருத்துக்களையும் நீதிகளையும் உலகியலறிவையும் ஊட்டத் தொடங்கினார்கள். அதன் விளைவாக எழுந்தனவே தண்டலையார் சதகம், குமரேச சதகம், அறப்பளிச்சர சதகம் முதலியனவாம். அவை பொதுவாகக் கடவுள் உணர்ச்சியையும், கடமைகளையும் உணர்த்துவனவேயன்றி, சிறப்பாக உணர்த்துவனவல்ல. அந்தக் குறையை நீக்க எழுந்ததே இந்த நடராச சதகமென்னலாம்.
இச்சதகத்துள் பல ஆகமங்களில் பலகாற் பயின்று, நினைவுவன்மையோடு அரிதின் முயன்று அறிந்து கொள்ளப்படும் அருங்கருத்துக்கள் பலவும் அடைவே மிளிர்கின் றன. சைவசமயத் தொடர்புடைய பல நுணுக்கங்கள் ஒருசேர உணர்த்தப்படுகின்றன. இக்கருத்தை, பஞ்ச பூதஸ்தலங்கள், ஆறுகாசி, அட்டவீரட்டம், இருபத்தைந்து மாகேசுவர வடிவங்கள். இவை முதலானவைகளைத் தொகுத்துணர்த்தும் பகுதிகள் நன்கு வலியுறுப்பனவாம். சிவபூசை, அதற்கேற்ற உபகரணங்கள், சிவலிங்கவகைகள், அவற்றை வழிபடுதற்குரியார், வழிபடுமுறை, மாத வருட விசேட அபிடேகங்கள், அபிடேக திரவியங்களைப் பற்றிய அருங்கருத்துக்கள், பயன்கள், அருச்சனைக்குரிய பத்திர புட்பங்கள், முதலியவைகளை நன்கு விளக்கிச் செல்கின்றது. ஒரு சைவசமயி மேற்கொள்ளவேண்டிய சாதனங்களாகிய விபூதிருத்திராட்சங்களி னிலக்கணங்கள், அணியுமுறை, பயன் இவைகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லாமாக இந்நூல் சைவப்பெருமக்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருத்தல் இன்றியமையாதது.
இந்நூலின் பாடல் கரும்பின் கட்டி யென இனிய சொல்லொழுக்கால் இயங்குகின்றது. சில ஆகமங்களை உணர்ந்தார்களுள்ளத்தை இக்கவிபோக்குத் தட்டிஎழுப்பி இப்பாடற்பகுதி இன்ன ஆகமசுலோகத்தின் கருத்து என்ற ஒப்புமை உணர்ச்சியை யுண்டாக்கிச் செல்வதாய் முதல்வன் நூல்வழி வந்த முதனூல் என்ற எண்ணத்தை உண்டாக்குவது. வடமொழிச் சொற்களைத் தமிழ் மொழிக்கு ஏற்ப மாற்றியும் எதுகைமோனைகட்கு இடர்ப் பாடுண்டாயின் ஆரிய மொழியினமைதிப்படியே எடுத்து இணைத்தும் செல்கின்றது. பதியியல்பு கூறும்பாடல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்நூலை ஆக்கியவர்கள் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் பத்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞானதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடத்தில் உபதேசம்பெற்ற சிதம்பரநாத முனிவர் அவர்கள் ஆவார்கள். இதனை யறிவிப்பது இந் நூல் "தருமை யாதீனமிகப் பருதிமதி யுன்ளனவும் வாழி, சிவஞானர் அருளும் வாழி' என்ற பாடற் பகுதிகளாம். இவர்களுடைய ஆகம அறிவிற்கு - வடமொழிவன்மைக்கு - கவிதையின் கவினுக்கு எடுத்துக்காட்டாயிலங்குவன இவர்களியற்றிய நித்திய கன்மநெறிக்குறளும் இந்நூலுமே.
இந்நூல் ஆதீனத்துக் கலைமகள் நிலையமாகிய புத்தகசாலையில் ஏட்டுப்பிரதியிலிருந்தது. இவ்வாதீன ஏட்டுப்பிரதிகளை ஆராயநேர்ந்த காலத்து இதன் கவி யருமையினையும், கருத்து மேம்பாட்டினையும், சைவம் விளக்கும் தனிமாட்சியினையும், இவ்வாதீனத்து இருபத்தைந்தாம் குருமகா சந்கிதானமாக எழுந்தருளிக் கல்விப் பணியும், சமயப்பணியும் செய்துகளிக்கும் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களிடம் விண்ணப்பித்துக் கொண்டேன். அவர்கள் இதுபோல வெளிவராத நூல்கள் பலவற்றையும் விரைவில் வெளியிட்டு எட்டில் மறைந்துகிடக்கும் எண்ணரிய புலவர் புகழை - எண்ணத்தை எல்லோரும் அறிந்து இன்பம் நுகரச்செய்யவேண்டும் - தமிழ் பரவவேண்டும் சைவம் தழைக்க வேண்டும் என்ற அருளானயைத் தந்தார்கள். தமது குருமூர்த்திகளாக இருந்து, தமக்கு ஞானச் செல்வத்தையும் தானச்செல்வத்தையும் தந்தருளி முத்திநிலை யெய்திய 34-வது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கட்குப் புதிதாகக் கோயில் எடுப்பிக்கவும் அப்பொழுது இந்நூலை வெளியிடவும் திருவுளங்கொண்டார்கள். அவ்வண்ணமே விய ஆண்டு வைகாசித்திங்கள் 26-ம் நாள் நடைபெறும் ஆலய மகாகும்பாபிடேக நினைவுமலராக வெளிவருகிறது.
இந்நூலாராய்ச்சிக்குத் தருமையாதீனப் பிரதியோடு மற்றும் இரண்டு பிரதிகள் கிடைத்தன. அதனாலாகிய திருத்தங்களும் சில. ஆயினும் பாடல்களின் ஒசைப் போக்கிலும், சீரமைப்பிலும் சிதைவுற்ற இடங்களுமுள. இப்பதிப்பில் நூலாசிரியராகிய சிதம்பரநாத முனிவர் வரலாறும், இம்மலரைத் தாங்கும் எழிற் குரவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முகதேசிகர் வரலாறும் சுருக்கமாகச் சேர்க்கப் பெற்றுள்ளன. இத்தகைய பணிகளே இயற்றிவரும் பரமாசாரிய சுவாமிகளுன்டய துறவரசாட்சி நீடுவாழ்க என் ஆலவாய்ப்பெருமான் அடியிணை இறைஞ்சுகின்றேன்.
அமிழ்தனைய வாக்கால் அடியேனை என்றும்
தமிழடிய னாக்குங் தகையான் - இமிழுலகை
தன்சீர்த்தி யான்மறைத்துச் சைவ மணம்பரப்பு
மன்சுப்ர மண்ய குரு.
இவர்களுடைய இளமைவரலாறு அறியப்பெறவில்லை. பத்தாவது அருட்குருமூர்த்திகளாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞான தேசிகசுவாமிகள் தலயாத்திரையாகச் சென்று திருவாரூரில் எருந்தருளியிருக்குங் காலத்தில் இவர்கள் சென்று வணங்கி குருமூர்த்திகள் திருவடிக்குத் திருப்பதிகம் என்ற ஒர் பாமாலை சாத்தினர். சில நாள் கழித்துக் குருமூர்த்திகளிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டார்கள். பின் சிவஞானங் கைவந்தவர்களாய்த் தருமையம்பதியில் அடியார்களுடன் வசித்துவரு நாளில் இவ்வாதீனத்துக்குச் சொந்தமான திருக்கடவூர் ஸ்ரீஅமிர்த கடேசுவர சுவாமி கோயில் கட்டளை விசாரணையாக எழுந்தருளியிருந்த பஞ்சாக்கரமுனிவர் கேட்டுக் கொண்டபடி சிவாகம சாரமான நித்திய கன்மநெறியைக் குறள் வெண்பாவால் நித்தியகன்மநெறி என்னும் பெயருடன் அருளிச்செய்தனர். ‘அத்தனரு ளாகமத்தி னாராய்ந்து அவாவினிற்செய், நித்திய கன்ம நெறி தனக்கு" என்பது இக்கருத்தை வலியுறுத்தும் அந்நாலின் காப்புச் செய்யுட் பகுதியாகும்.
இவர்கள் ஆகமசாஸ்திரத்தில் நல்ல பயிர்ச்சியுடை யவர்களாயிருந்தமையின், சிவபூஜைக்கு இன்றியமையாத ஆகமக் கருத்துக்களையெல்லாம் திரட்டி நடராச தோத்திர நூலாகிய நடராச சதகம் என்ற இந்தப் பிரபந்தத்தை யியற்றினார்கள்.
தக்கன் இறைவனை மதியாது செய்யப் புகுந்தயாகத்தை - ஸ்ரீ வீரபத்திரக்கடவுள் அழித்து, உதவிபுரியவந்த தேவர்களை யெல்லாம் வென்று, அவனது தலையையும் தடிந்த வரலாற்றைப் பொருளாக அமைத்து ஒட்டக்கூத்தரா லியற்றப்பட்ட தக்கயாகப் பரணிக்கு உரைவகுத்தவர் இம்முனிவர் பெருமானெனக் கருதப்படுகிறது.
பிறகு குருவாணைப்படி சீகாழி ஆலய நிர்வாகப் பணியை ஏற்று நடத்தி வந்தார்கள். இவர்களோடு பூர்வாசிரமத்தில் உடன் கல்வி கற்றவர் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர். அவர் ஒருபோது வியாபார நிமித்தமாகப் புதுச்சேரிக்குப்போகும் வழியில் சீகாழிக்கு வர அங்கே கட்டளை விசாரணையில் சுவாமிகள் இருப்பது அறிந்து பார்க்கச் சென்று அளவளாவினர் சுவாமிகள் தாம் சீகாழிக்கு ஒரு பள்ளுப் பிரபந்தம் பாடத் தொடங்கியிருப்பதையும், அதனை முடிக்க அவகாசமின்மையையும் உணர்த்தி 'இதனை இருந்து முடித்துச்செல்க' என்று கூறினார்கள். சுவாமிகளது அன்புரையை எதிரேயே மறுத்துச்செல்லும் மனவாற்றலில்லாதவரான கவிராயர் பிரபந்தத்தைப் பாடி முடித்து அங்கிருந்து மறுநாள் இரவு அப்பிரபந்தத்தை மற்றொருவர் கையிற் கொடுத்துச் சுவாமிகளிடம் சேர்ப்பிக்கச்செய்துவிட்டு தாம் புதுவைக்குச் சென்றார்.
முனிவர்பிரான் கவிராயர் சென்றுவிட்டார் என்பதைக் காலையி லறிந்துகொண்டு எவ்வாற்றானும் இங்கேயே இருத்திவிடவேண்டும் எனத் திருவுளங் கொண்டு கவிராயர் அழைப்பதுபோலக் கடிதம் அனுப்பி அவர்கள் குடும்பத்தாரை வரவழைத்துச் சீகாழியில் வீடொன்றுவாங்கி அதில் இருக்கச் செய்தார்கள். சில நாளில் கவிராயர் மீண்டுவந்தனர். சுவாமிகளைத் தெரிசித்துச் சின்னாளுடனிருந்தனர். ஒருநாள் சுவாமிகள் வீதிவலம் வருவோம்' என்று கூறி உடனழைத்து வருங்கால் வடக்குவீதி அடைந்ததும் தம் குடும்பம் ஒரு வீட்டில் இருப்பதை அறிந்து ஆச்சரிய மடைந்தார் கவிராயர். சுவாமிகள் 'உம்மை உடனிருத்துவதற்காகவே இக்காரியம் நம்மால் செய்யப்பெற்றது' என்று அறிவித்தார்கள். கவிராயர், கல்வியை நுகரும் சுவாமிகள் கருத்தை
மெச்சிச் சீகாழியிலே வசிப்பா ராயினர். அதுமுதல் அப்புலவர் தில்லையாடி அருணாசலக் கவிராயர் என்ற பட்டம் நீங்கிச் சீகாழி அருணாசலக் கவிராயர் என வழங்கப்பெற்றார். சீகாழியில் இருக்கும்போது முனிவரானைப்படி சீகாழிக்குத் தல புராணமுஞ் செய்தனர். இதனை விளக்குவது 'இனைய காதை மீண்டியம்பவும் வல்லனோ' என்னும் சீகாழித் தலபுராணத்துக் கடவுள் வாழ்த்து இருபத்தைந்தாம் பாடலாகும்.
இவர்கள் பத்தாவது குருமூர்த்திகளிடம் உடதேசம் பெற்றார்கள் ஆதலாலும், சீகாழி அருணாசலக் கவிராயரோடு உடன் பயின்றவர்களாக வரலாறு அறிவிப்பதாலும் அவ்விருவர் காலமே இவர்களுடைய காலமும் என அறியப்பெறுகின்றது. 10-வது குருமூர்த்திகட்கு, தஞ்சை துளசா மகாராஜா பரிபாலன காலத்தில் சீகாழிச் சீமை முகாசு ஸ்ரீ மல்லாசிகாடேராயரவர்கள் தாம் அநுக்கிரகம் பெற்ற அருமைக்காக வேளூர் தேவஸ்தானத் திருப்பணிகள் செய்வித்ததாக எழுதப்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் சாலிசகம் 1669 என்றும், கலியுகசகம் 4868 என்றும் குறிக்கின்றன. ஆதலால் இவர்கள் இற்றைக்கு 205 ஆண்டுகளுக்கு முன் இருந்தார்கள் என்பது துணிபு.
----------
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் உச-வது மகா சங்கிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,
இவர்கள் அவதார ஸ்தலம் நன்னிலம். மரபு சைவாசாரிய மரபு. இவர்கள் இளமைப் பருவம் இலக்கண இலக்கிய ஆராய்ச்சியிலும் திருமுறைப் பாராயணத்திலுமாக முதுமை எய்திற்று, உங-வது குருமூர்த்திகள் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடத்தில் சைவ சந்நியாசமும் தீக்ஷையும் பெற்றார்கள். குருமூர்த்தியின் பெருங் கருணைக்கு இலக்காக இவர்கள் வாழ்ந்துவந்தமையால் குமாரசாமித் தம்பிரான் என்ற திருநாமத்தோடு ஒடுக் கத்து இருந்தார்கள். அப்பொழுது குருவானயைச் சிர மேற்றாங்சிச் சிவபோகசார முதலிய நூல்களை அச்சிடு வித்தார்கள். இவர்களது வருங்கால சமயப்பணியும், தமிழ்ப்பணியும் அப்பொழுதே விளங்குவதாயிற்று.
பின்பு 1938-ம் ஆண்டு ஜூன் மீ 26ம் நாள் பீடாதி பத்தியத்தை ஏற்றார்கள். அதுமுதல் அவர்கள் செய்த அறப்பணிகள் மிகப்பல. சமயசாத்திரங்களையும் சம்பிரதாய நூல்களையும் அச்சிட்டு வழங்கினார்கள். ஆதீன மடாலயத்தை ஞானநூற்பதிப்பகமாக நலம்பெறுவித்தார்கள்; கலைமகள் கவினும் இடமாக - திருமகள் திகழும் திருக்கோயிலாகச் செய்வித்தார்கள். ஆதீன முகப்பைப் புத்தகசாலையாக ஆக்கி அறிவு வழங்கச்செய்தார்கள். ஆகம தேவார பாடசாலைகளை நிறுவித் திருக்கோயிலையும் சைவவுலகையும் அன்புமயமாக - தமிழ்மயமாகச் செய்தார்கள். ஆரம்பப் பாடசாலை அமைத்து அனைவர்க்கும் அறிவுக் கண்ணைத் திறப்பித்தார்கள். சிவஞானபோத மகாநாடுபோன்ற பல மகா நாடுகளைக் கூட்டிச் சித்தாந்தத் தேனைச் செகத்துயாவரும் சுவைக்கச் செய்தார்கள். “ஞான சம்பந்தம்” என்னும் திங்கள் வெளியீட்டினால் சைவமும் தமிழும் தழைக்கச் செய்தார்கள். அதற்காக "ஞான சம்பந்தம்' என்னும் பதிப்பகத்தையும் நிறுவினர்கள். இவ்வளவும் இவர்கள் செய்த சமயக்கல்வித் தொண்டுகள்.
தருமபுர நகரத்தை ஒருமாதிரிக் கிராமமாக அறிவாளிகளும் அரசியலாளர்களும் மதிக்கச்செய்தது இவர்களுடைய அருமுயற்சியே யாகும். திருப்பணி செய்யும் இவர்களது தனித்திறத்தை ஆட்சியிலுள்ள ஆலயங்கள் அனைத்திலும் நேரிற் காணலாம். நிர்வாகத் துறையில் காரியஸ்த அதிகார வரையறை, வருஷத் திட்டம், மாதக் கணக்கு, திட்ட ஜாப்தா முதலிய பல ஒழுங்குகள் இவர்களால் ஏற்படுத்தப்பெற்றன.
வளர்ச்சித்துறையில் பலகாலும் பயன்தரு மரங்கள் பல வைக்கப்பெற்றன. விவசாயத்துறையில் பல முன்னேற்ற முறைகள் கையாளப் பெற்றன. தேவஸ்தானங்களுடையவும் மடாலயத்தினுடையவும் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பல வழிகள் வகுக்கப்பெற்றன. இவர்களுடைய ஆட்சித்திறத்தினை அறிந்த அறிவாளிகள் பலரும், அரசியல் பின்னப்புடையார் பலரும் பத்தாண்டு ஆட்சியினை ஒரு பெருவிழாவாக 5-9-1943-ல் கொண்டாடினார்கள். அவ்விழாவில் ஆட்சித்திறத்தை விளக்கும் மலர் வெளிவந்து தமிழ் நாடெங்கும் மணம் தந்து நிற்கின்றது. இவ்விழாவின் ஞாபகார்த்த தருமமாகவே மாயூரநகரில் பெண் மருத்துவசாலை கட்ட அஸ்திவாரம் போடப்பட்டது. இம்மருத்துவசாலைக்குச் சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் துரையவர்கள் விசயஞ்செய்து அஸ்தி வாரக்கல் அமைத்தார்கள்.
இவ்வாறு பன்னிரண்டாண்டுகள் அருட்செங்கோல் செலுத்திய இவர்கள் எல்லாவகையிலும் தன் வழிபற்றி நடப்பவர்களும், ஞானசம்பந்தம் பத்திராதிபராயிருந்து உலகியலறிவும், ஒடுக்கத்திலிருந்து வைதிக நெறியும்பெற்று விளங்குபவர்களும் ஆகிய ஒடுக்கம் ஸ்ரீமத் சிவகுருநாதத் தம்பிரான் சுவாமிகளை 7-5-45- ல் ஞானபீடத்திலமர்த்தி ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் எனத் தீக்ஷாநாமந்தந்து, அருட் செங்கோலோச்சிவர அருள்பாலித்து 20-5-45-ல் சிவாத்துவித முத்திநிலை எய்தினார்கள்.
என் வடிவ நின்வடிவாக் கொண்டா யெளியேற்குன்
றன் வடிவ கல்கத் தகுங்கண்டாய் மன்வடிவால்
வெம்பந்த நீக்கும் விமலகீ மெய்ஞ்ஞான
சம்பந்த னென்பதனாற் றான்.
------------