[நெடுங்கழி நெடில் என்பது பாவின் பெயர். கழிநெடிலடியினும் நீண்டதாகையால் நெடுங்கழி நெடில் என்று பெயர் உண்டாகியது. திருக்கையில் எழுந்தருளிய இட்டலிங்கத்தின் மீதே இவ்விருத்தப்பாடல்களும் இயற்றப்பெற்றுளன. சிவானந்தத்தின் உயர்வு சைவ அருள்நெறிச் சிறப்பு முதலியன இப்பாடல்களிற் கூறப்படுகின்றன.]
பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பெருகுறு மன்பாற் பூசனை புரிந்த
பிணங்குநூற் சிலம்பிவெவ் வரவம்
பிறைமருப் புரற்கால் யானையென் றிவற்றின்
பிறவியோ விதழ்முறுக் கவிழ்ந்து
முருகுமிழ் நறுமென் மலர்புனைந் துன்னை
முற்றும்வந் தனைபுரி யாமன்
முகிழ்முலை மகளிர் மயலிடை யழுந்து
மூடர்தம் பிறவியோ நல்ல
திரைபொருங் கங்கை யுவட்டெடுத் தொழுகுஞ்
செஞ்சடை மிசையொரு துளிநீர்
தெறித்தவர் தமையு நறவுகொப் பளிக்குஞ்
செழுமலர்க் கற்பக வேந்தும்
எரிபுரை யிதழ்ச்செங் கமலநான் முகனு
மெய்தரும் பதத்தில்வைத் தருள்வோய்
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(1)
1. எப்பிறவி நல்லனவென வினாதற்கணின்ற ஓகாரமிரண்டனுன் முன்னையது அர்ச்சனை புரிந்த சிலம்பி முதலியவைகளினுயர்வும், பின்னையது அது புரியாத மூடரினிழியும் தோன்ற நின்றன. தெறித்தவர் தமையும் வைத்தருள்வோயென இயையும். முருகு-மணம். முகிழ் முலை-மொட்டுப் போன்ற தனம். திரைபொரும்-திரைகள் மோதும். நறவு-தேன்.
கட்டழ கமைந்து காளையம் பருவங்
கடந்திடா துள்வலி யுடைத்துக்
கலங்கல்செய் பிணியின் றியன்றயாக் கையராய்க்
கல்வியங் கடல்கடந் தவராய்
நட்டவர் விரும்பு மாறுநீ செய்ய
நடக்குநா ளுடல்வெறுத் துனையே
நம்பியா ரூரன் முதலியோர் நண்ண
நானுடல் விடுமென வழிவேன்
பட்டிருள் விழுங்க வலர்கதி ரவனும்
பனிமதி யோடுயிர்த் தொகையும்
பார்புனல் சுடுதீ வளிவிசும் பென்னப்
பட்டவைம் பூதமு மாகும்
எட்டுரு வடைந்து முருவமொன் றின்றி
யிற்றென வுணர்வரும் பொருளே
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(2)
மனமெனும் வயமா வென்வயப் படாமன்
மயங்குறு மைம்புல வீதி
மறிபடா தோடு கின்றது முறையோ
மறித்ததை நிறுத்தியென் றனக்கு
நினையல துதவு வாரிலை யதனா
னினைப்பர வுற்றன னதனை
நிறுத்திநீ யிவர்ந்து பின்னர்நீ வேண்டு
நெறிகளிற் சென்றிட விடுவாய்
கனலுறு மெழுகி னெஞ்சநெக் குடைந்து
கரையில்பே ரன்பெனும் வெள்ளங்
கண்வழி புறப்பட் டென்னநீர் வாரக்
காலங்க டொறும்வழு வாமல்
இனமலர் தூவு மடியவ ருள்ளத்
திருள்கெட வெழுந்தபே ரொளியே
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(3)
2. அமைந்து கடந்திடாது இயன்ற யாக்கையெனக் கூட்டுக. இத்தகைய யாக்கை முதலிய உடையராய்த் தோழமை பூண்ட.நம்பியாரூரர் முதலியோர் விரும்பியவாறு செய்யத் தேவரீரே வலிந்து செல்லுங் காலத்தும் அவர் அவ்வரிய யாக்கையையும் வெறுத்துத் தேவரீரையே நண்ண; யான் இவ்விழிவுடல் நீக்கத்திற்கு அழிவேன். இங்ஙனமாயின் எங்ஙன முய்வேன் என்பது. இற்றென-இத்தன்மைத்தென. 3. வயமா-வலிமை பொருந்திய குதிரை. மறித்து-தடுத்து. பரவுற்றனன்-போற்றலானேன். இவர்ந்து-ஏறிச் செலுத்தி. கனல்-தீ.
நிலங்கடந் தவன்முன் னறுமலர் சாத்த
நிகரிலம் மூர்த்திமுன் சந்து
நினக்கணி வுறவாட் டாயர்முன் னிருந்து
நிவேதனம் புரிந்திட் வன்று
நலங்கிளர் கலையர் கலியர்முன் றூப
நல்விளக் களிப்பநின் றன்னை
ஞானசம் பந்தப் பிள்ளைமுன் பாட
நாணிலேன் பூசனை புரிவேன்
விலங்கினுங் கடையர் வளர்த்தசெந் தீயின்
விரைந்தெழும் வாள்வரி வேங்கை
விடுப்பவங் கதுவந் தெதிர்ந்திட விகழ்ந்து
விடாததன் றோலுரித் திருள்கொண்
டிலங்கொளி யிரவி யனையமெய்ப் படுத்த
விறைவனே யநிட்டநின் றகற்றி
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(4)
மூக்கிடை யிரண்டு விழிகளே றுதன்முன்
முடங்குகைக் கோலொரு காலா
முன்னநின் றிருவாய் மலர்ந்தருள் செய்த
முதிர்கலைப் பொருள்படித் தவராய்க்
கார்க்கடன் முகட்டி னிரவிவந் தெழுமுன்
கடிதுசென் றணிமலர் கொய்துன்
கழற்கிடார் பிறப்பி னாய்ப்பிறப் பினிது
கற்றவ ரிகழ்ந்திடா மையினால்
நோக்கற நோக்கு முருவமே நாவா
னுகர்ந்திடா வினியபே ரமுதே
நுதல்விழிக் கனியே கறைமிடற் றரசே
நுவலரு மாயையிற் பிறவா
யாக்கைய துடைய வருட்பெருங் கடலே
யெழுந்தொடுங் காதவான் சுடரே
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(5)
4. உலகையளந்த திருமால் முதலானவர்கள் நறுமலர் சாத்தல் முதலிய ஒவ்வொருதொண்டையே மேற்கொண்டொழுகாநிற்க. அவர்முன் நாணமில்லாமல் அத்தொண்டனைத்தும் ஒருங்குடையதாகிய உமது பூசையைச் செய்கிறேன் என்பது. இறைவரையழிப்பான் வேள்வி செய்து புலி முதலியவைகளை விடுத்தமைபற்றித் தாருகாவன முனிவரை விலங்கினுங்கடையரென்றார். மூர்த்தி-மூர்த்தி நாயனார். வாட்டாயர்-அரிவாட்டாயர். அநிட்டம்-இட்டமின்மை. 5. மூக்கிடை விழிகளேறல்-காட்சி மழுங்கக்கண் சுருங்கல். கார்க்கடல்-கரியகடல். கழல்-திருவடி.
திருக்குறு மழுக்கா றவாவொடு வெகுளி
செற்றமா கியமன வழுக்கைத்
தியானமென் புனலாற் பொய்புறங் கூற
றீச்சொலென் கின்றவா யழுக்கை
அருட்கிளர் நினது துதியெனும் புனலா
லவத்தொழி லென்னுமெய் யழுக்கை
யருச்சனை யென்னும் புனலினாற் கழுவா
வசுத்தனே னுய்யுநா ளுளதோ
விருப்பொடு வெறுப்பிங் கிலாதவ னென்ன
வெண்மதி யோடுவெண் டலையும்
விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்
விருந்துணுங் கொன்றைமென் மலரோ
டெருக்கையு மணிந்து மின்னொளி கடந்த
வீர்ஞ்சடைப் பாந்தணா ணுடையாய்
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(6)
சிவமுட னமூர்த்தி மூர்த்திகர்த் திருவஞ்
செயன்மலி கருமமென் றருநூல்
செப்புதத் துவமுஞ் சதாசிவ னீசன்
றிகழ்தரு பிரமனீ சுரனோ
டுவமையி லீசா னப்பெய ரவனென்
றுரைத்திடு மூர்த்திக டாமும்
உற்றவீ சான முதற்பிர பாவ
முடையநின் றன்னையென் றுணர்வேன்
புவிமுத லனைத்து மாக்குத லளித்தல்
போக்குத லுயிர்வினை யருத்தல்
புதிதுறச் செம்பிற் களிம்பென வறிவைப்
புணர்மல மகற்றுத லென்னும்
இவைபல வியைந்தும் விகாரமொன் றின்றி
யிரவிபோ னின்றகா ரணனே
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(7)
6. திருக்குறும்-மாறுபாட்டைக் கொண்ட. தியானம்-இறைநினைவோடிருத்தல். பாந்தள்-பாம்பு. நாண்-கயிறு.
7. சிவசாதாக்கிய முதலிய ஐந்து சாதாக்கிய தத்துவங்களையும் சதாசிவமூர்த்தி முதலிய ஐந்து தத்துவமூர்த்திகளையும் முறையே உற்றன. ஈசானம், சத்தியோ சாதம், வாமதேவம், அகோரம் தற்புருடம் என்னும் முகங்களாகிய பெருமைகள் எனக் கொள்க. இரவி-கதிரவன்.
தான்பெறு மழலை மொழிமகன் றன்னைத்
தன்கையா லுளங்களித் தரிந்து
சமைத்துல கறிய விடுபெருந் தொண்டன்
றனைச்சிறுத் தொண்டனென் றவன்சேய்
ஊன்பெறு நீயே யிரைத்தனை யென்றா
லுரிமையோர் சற்றுமி லாதேன்
உன்றிருத் தொண்ட னென்றிருப் பதனுக்
குன்னுதல் பெரும்பிழை யன்றோ
தேன்பெறு நளின மலர்களா யிரத்தோர்
செழுமலர் குறைபட விரைந்து
செங்கணொன் றிடந்து குறையற நிரப்பித்
திருமறைச் சிலம்படிக் கணியா
யான்பெறு நிதியே யென்றுல களந்தோ
னேத்திநின் றிறைஞ்சுறு மமுதே
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(8)
நின்புகழ் பாடும் பாணனார் தமக்கு
நிதிதரச் சேரலன் றனக்க
நீமுன முடங்க லொன்றளித் ததுபோ
னிகரிலா வசவநா யகன்றன்
அன்பினி லொருநூ றாயிரங் கூறிட்
டடுத்தகூற் றினிலொரு கூறிங்
களிப்பதற் குனது திருமுக மருளா
லடியனேற் களிக்குநா ளுளதோ
பொன்புரை கடுக்கை மலர்ந்தசெம் பவளப்
புரிசடைப் பேரருட் குன்றே
புணர்முலைக் கயற்கட் பிறைநுதற் கனிவாய்ப்
பொற்றொடி யிடத்துவா ழமுதே
என்பும்வெண் டலையு மணிந்துநான் புனித
னென்றுமென் றிருந்திடு பவனே
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(9)
8., உன்னுதல்- எண்ணுதல். நளினமலர்-தாமரைப்பூ. இடந்து-தோண்டி. 9. சேரலன்-சேரமான் பெருமாள். பாணபத்திரருக்குப் பொன்னளிக்குமாறு சேரமான் பெருமாளுக்கு, “மதிமலிபுரிசை மாடக் கூடல்” என்று தொடங்கும் திருமுகமளித்த செய்தி இங்குக் குறிப்பிடப்படுகிறது. பொன்புரை-பொன்னைப் போன்ற. கடுக்கை-கொன்றைமலர்.
வங்கையர் முத்த சங்கையர் சென்ன
வசவண ரசகணர் வீர
மாச்சையர் பிப்ப பாச்சையர் வள்ள
மல்லையர் கல்லைய ரெங்கள்
சங்கண வசவ ராசையர் சேட
தாசையர் சங்கர தாசர்
சவுண்டைய ரென்றிங் கிவரடிக் கேவ
றலையினாற் செய்யுநா ளுளதோ
பங்கய மலரோ டரிவிழி பரித்த
பதமலர் சிவப்பவே னெடுங்கட்
பரவைதன் மனைக்கட் சுந்தர னேவும்
பணியெலா முனிவற வியற்றி
எங்கணும் விளங்க நம்பியா ரூர
னேவல னெனப்படு மிறையே
இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே.
(10)
10. இதில் கூறப்பட்ட வங்கையர் முத்த சங்கையர்முதலியோருடைய வரலாறுகள் வசவ புராணத்தில் உள்ளன.