logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

   [இட்டலிங்கமாவது தாம் எப்பொழுதும் உடனிருத்தி வழிபட்டுவரும் இலிங்கமாகும். இத்தகைய இலிங்கத்தை வீர சைவர்கள் மார்பில் அணிந்திருப்பர். அத்தகைய இலிங்கத்திற்குத் திருமுழுக்குச் செய்தபோது அடிகளார் இம்மாலையைப் பாடியருளினார். இம்மாலை பத்துச் செய்யுட்களால் அமைந்தது. சிறந்த தத்துவப் பொருளைத் தன்னகத்தே கொண்டது.]

பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

   பந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு
       பதினொருவர் மிளிர்பீடமேற்
   படியிலை யைவைகைப் படுமீசர் தாநிதம்
       பத்திலெண் வித்தையிறைவர்
சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா
       தாக்கியம் மூர்த்திவதனந்
   தட்டற்ற வட்டத்தி லொட்டற்ற சிற்சத்தி
       தாளுற்ற நாளத்திலே
நந்தலற வருகோள கந்திகழ் சிதம்பர
       நற்சிகையி னிற்சூனிய
   நட்டமற வமைகின்ற விட்டவடி வொடுநின்ற
       ஞானமய மோனநடுவோ
டந்தமற முந்துபர மானந்த நீநந்த
       வபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (1)
   1. சிவலிங்கமே எவ்வகை மூர்த்திகளுக்கும் மூலமென்கிறது இச் செய்யுள்.
   
   நாடரிய சத்தியோ சாதத்தும் வாமத்து
       நன்றா மகோரத்தினு
   நவையற்ற புருடத்து மாகமமொ ரைவ்வைந்து
       நல்கியீ சானத்திலே
பீடுதரு மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல்
       பெருமைபெறு மருமைவிதியிற்
   பேசரிய பூசைசிவ கோசரியெ னப்புரிதல்
       பெற்றிலேன் மற்றடியனேன்
வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன்
       வேட்டொருவர் மாட்டருளினான்
   மீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின்
       வேண்டல்வேண் டாமையிலையால்
ஆடுநின் பால்வேறு பாடொன்றி லாமையா
       லபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (2)

   நவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ
       நடுவுபிர மப்புழையெனு
   நல்லிடத் தகராதி கிரியாதி மனமுதல
       நண்ணியு மைம்மூவகை
இவற்றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர்
       வின்றிச்சி வாகாரமா
   எதிருநன வுஞ்சோக மென்றுபா வித்தலுறு
       மென்கனவு ஞாதுருவொடே
உவப்பறிவு ஞேயமென வுற்றனுப வித்திடு
       மொண்சுழுத் தியுஞானமே
   ஒளிர்துரிய முந்திளைத் துயர்சிவா னந்தநுகர்
       வுறுமதீ தமுமாகுநல்
அவத்தைகள் கடந்தவற் றப்புறப் படுமமல
       னபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (3)
   2. ஆகமோற்பவ வகைகளும் அவற்றில் விதிக்கப்படும் விதிமார்க்கம் பத்திமார்க்கம் இரண்டானும் முத்தியுண்டாமென்பதையும்இச்செய்யுள் விளக்குகிறது. சிவகோசரியார்-திருக்காளத்தியில் கண்ணப்ப நாயனார் காலத்தில் வாழ்ந்திருந்தவர். வேடுவர் குலத் தலைவன்-கண்ணப்ப நாயனார். 3. நின்மல பஞ்சாவத்தை யினியல்பையும், சிவம் அவற்றிற்கும் அதீதப்பட்டதென்பதையும் இச்செய்யுள் கூறுகிறது.

   ஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந்
       தோகைபெறு மன்றியுடைமை
   உதவுறா வமையத்தி லுதவினுந் தன்னிடத்
       துள்ளதிற் பெரிதளிக்கும்
பொருளதா யினுமதனி னினியதா யினுமவன்
       புந்திமகிழ் வுற்றிடுவனால்
   புனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு
       புண்ணியத் தெய்வநதிதான்
மருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை
       மற்றென்முடி யிற்றெறிப்பின்
   வைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுநினை
       மக்கணினை வுற்றுய்ந்திட
அருளினான் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந்
       தபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (4)

   கருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர்
       களம்வாழ்வு மேவவணிவாய்
   கடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி
       கதிர்போல வேயுநெடுமால்
ஒருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற
       முடையார்மு னோடிவருவாய்
   உலகத்தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை
       யுமைகாலா வாடல்புரிவாய்
மருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குதொழ
       மணவாள னாவியுதவா
   மயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ ழுந்துவர
       வருவாயெ னாமுனழையா
அருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவர
       னபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (5)
   4. பெருமானுக்கு ஒன்றினும் விழைவில்லையாகவும் ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு ஆகமங்களில் ஆராதனை விதித்ததை இச்செய்யுள் கூறுகிறது. ஓகை-உவகை. 5. சிவபிரானின் அநுக்கிரக நிக்கிரகத்தன்மை இச்செய்யுளிற் கூறப்படுகிறது. கடு-நஞ்சு. களம்-கழுத்து. வேயும்-அணியும். மன்றினிடை-அம்பலத்தில். மருகல்-திருமருகல். மயிலைக்கண்-திருமயிலாப்பூரில். என்பினுயிர்-பூம்பாவையினுடைய உயிர். அணங்கு-வருத்தம். முருகர்க்கு-முருகன் கூறான திருஞானசம்பந்தருக்கு.

12. இட்டலிங்க அபிடேக மாலை
   ஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு
       முயர்புரா தனசரிதமோ
   டொக்குநடை வருவிக்கு முவமையுந் தன்மகனை
       யொண்சுவத் திகமேற்றுபு
சோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு
       சுவத்திகா ரோகணமுநூல்
   சொல்லிய விடங்களிற் றூயநீ றணிதருந்
       தொல்விபூ திப்பட்டமும்
மாகலச நீராட்டு கலசாபி டேகமு
       மருவுசிவ நோக்குவிக்கும்
   வயங்குலிங் காயதமு மன்னுசிவ லிங்கமுரு
       வனைசுவா யதமுமெனுமேழ்
ஆகுநெறி தான்மருவி யாகமிசை யிலகுமர
       னபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (6)
   6. வீர சாமானியர்க்குத் தூலதனுவிற் செய்யப்படும் இட்டலிங்க எழுவகைத் தீக்கைகளைக் கூறுவதிப்பாட்டு. ஓகை-உவகை. புராதன சரிதம்-பழைய வரலாறு.    

   போயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும்
       பொன்றுலகம் விட்டமலனார்
   பூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய
       பொன்பெண்மண் ணாசைநெறியில்
பாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப்
       பத்தாறு தத்துவமறப்
   பகுதியொடு ணர்த்துதத் துவமுமிறை யஞ்சனீ
       பாரென்னு மான்மிகமுமே
மேயசடு லிங்கமுட னாறங்க மாகமொரு
       மெய்யனுக் கிரகநிலையும்
   விமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு
       மிக்கசத் தியசுத்தமும்
ஆயவெழு வகைநெறியி னாவியிடை யிலகுமர
       னபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (7)

  கிடைத்தசிவ லிங்கமன் றுணராத வேகாக்
       கிரசித்த மென்னும்விரதங்
   கெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குதவு
       கின்றவிந் திரியார்ப்பிதம்
உடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ
       னுண்மைகொ ளிலிங்கநிசமே
   உயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி
       லொன்றாகி நின்றுபேதம்
விடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு
       மிக்ககுரு வருள்புரியவே
   மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும்
       வேதமுடி யாவுமுணரா
தடுத்தமன மொழியுடற் கப்புறப் படுமமல
       னபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (8)
   7. வீர விசேடருக்குச் சூக்கம தனுவிற் செய்யப்படும் பிராணலிங்க எழுவகைத் தீக்கை இச்செய்யுளில் கூறப்படுகிறது. பாயமனம்-பல பொருள்களிலும் பாய்ந்து செல்லும் மனம். அஞ்சல்-அஞ்சாதே. 8. வீரநிராபரருக்குக் காரணதனுவிற் செய்யப்படும் பாவலிங்க எழுவகைத் தீக்கை. ஏகாக்கிரசித்தம்-ஒருவழிப் பட்ட மனம். உடற்றி-செய்து. அகிம்சை-பிறவுயிரை வருத்தாமை.    

   நல்லதில நெய்யாடி யானிடத் தைந்தாடி
       நவையிலை யமுதமாடி
   நல்குகா ரணகாரி யம்முறையி னன்றியே
       நறுநெய்பா றயிராடியே
மெல்லமலர் மதுவாடி யின்கழைச் சாறாடி
       மென்பழச் சாறாடியே
   விழையுமிள நீராடி யாரக்கு ழம்பாடி
       விதியினமை நபனமாடி
ஒல்லைநகு வெண்டலைப் புழையினிடை யோடிநல்
       லுத்திகொடு பைத்ததலைய
   வுரகநுழை வுறவிளங் குழவிமதி யொருபுடை
       யொதுங்கவிட மின்றியசைய
அல்லலற நிறைகங்கை யசையாது நிற்பைநீ
       யபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (9)

   நரர்கடமி னரசரவர் தமினினிய திவவியாழ்
       நண்ணுநர கந்தருவர்தா
   நவிலுமவர் தமினமர கந்தருவ ரவர்தம்மி
       னாடரிய தேவரவரில்
சுரரதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன்
       சொன்முறையி னூறுமடிமேற்
   றுன்னுசுக மொருதிவலை யளவுமின் றாகமிக
       சுகவேலை புகலீகுவாய்
தரைமுதற் பூதங்கள் புத்திகுண தத்துவந்
       தகுதிபெறு பகுதிபுருட
   தத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலறு
       சமயரென வெமைவிடாமல்
அருளினினை யடைதலுறு மரியபவ மருளுமவ
       னபிடேக மாடியருளே
   அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
       யபிடேக மாடியருளே. (10)
   9. இச்செய்யுளில் அபிடேகங்கொள்ளு முறைமை கூறப்படுகிறது. திலநெய்-நல்லெண்ணெய். ஆன்-பசு. நவை-குற்றம். இல்-இல்லாத. ஐயமுதம்-பஞ்சாமிர்தம். மலர்மது-தேன். கழைச்சாறு-கரும்புச் சாறு. ஆரக்குழம்பு-சந்தனக் குழம்பு. நபனமாடி-நீராடி. உரகம்-பாம்பு. 10. சிவானந்தத்தின் உயர்வும் சைவ ஆணெறிச் சிறப்பும் இச்செய்யுளிற் கூறப்படுகிறது. நரர்கள்-மனிதர்கள். திவலை-துளி. வேலை-கடல்.
 

Related Content

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

கைத்தலமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்

சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு