logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்

கணபதி துணை.

திருச்சிற்றம்பலம்.

[* இந்நூல் வெளிப்படையாயிருத்தலின் பொழிப்புரையாக எழுதப்பட்டது. பதப்பொருள் முதலிய விரித்துக்கொள்க. இதிற்காட்டப்படும் மேற்கோள்கள் ஒவ்வவற்றினும் பஞ்சாக்கரமான்மியத்தும் சிவநாம மான்மியத்துமுள்ளன.]

 

கலிவிருத்தம்.

 

      வேத மாகமம் வேறும் பலப்பல

       வோதி நாளு முளந்தடு மாறன்மின்

       சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்

       தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே.                         1

 

(பொழிப்புரை) (உலகீர்!) வேதாகமாதிகலை யுணர்ச்சியால் தொலைதற்கரிய தீங்குமுற்றும் (சூரியனைக்கண்ட இருளிற்றொலையுமாகலின்) சிவசிவ வென்னுமந்திரத்தையே உச்சரிப்பீராக.

      இதனை, “மறையொரு நான்கும் வல்லோர் மாசிலஞ் செழுத்தை வல்லோர்நெறியிலாப் பதித ரேனு நிகழ்த்துமஞ் செழுத்தை யோதிலுறைதரு பாவ நீங்க வுயர்த்தி சேர்வ ரென்னாக்கறைமிடற் றிறைவன் றேவி தன்னொடுங் கழறி னான”" என்ன்னும் வாயுசங்கிதையானுமுணர்க. சோதிசூரியன்.

      விரிந்தும் ஒன்றினுள் ஒன்று அடங்கியும் நிற்கப்பெறுதலின், பஞ்சாக்கரத்தின் பேதமாகிய எட்டெழுத்து ஆறெழுத்து நாலெழுத்து மூவெழுத்து ஈரெழுத்து முதலியவும் பஞ்சாக்கர மெனப்படுமென்பது ஆன்றோர் கொள்கை. இதுபற்றியன்றே, திருமந்திநூலாசிரியரும் சிவன் அருள் ஆன்மா திரோதம் மலமென்பவற்றை முறையேயுணர்த்தும் சூக்குமபஞ்சாக்கரத்தின் பாற்படும் என்பது தோன்றச் சிவசிவ்வென்னும் மந்திரத்தைச் சூக்குமபஞ்சாக்கரத்து அடக்கியதூஉமென்க.                                                 (1)

      புல்ல ராயினும் போதக ராயினும்

       சொல்லி னாவிற் சுருதி விதித்திடு

       நல்ல லாகு நவையென் றகற்றிய

       செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே.                        2

(பொழிப்புரை) உயர்ந்தோரேனும் தாழ்ந்தோரேனும் நாவினுச்சரிக்கின் சுருதிவிதித்திடும் நல்லனசித்திக்கும், தீயன விலகுமாகலின் சிவசிவ என்றுச்சரிப்பீராக. -று.

      இதனை, “உவமையிலா வப்பெயரை நினைக்கிற கேட்கிலோ திடிற்பா வப்பகைக ளெல்லா மோட்டித்தவமுதல்வ னாகுமா திக்க நல்குஞ் சாற்றரிய பேரின்பந் தரும்என்னும் சிவரகசியத்தானுமுணர்க. செல்லலைத்தருவனவற்றைச் செல்ல்லென்றது காரியவாகு பெயர். என்மின்முன்னிலைப்பன்மை வினைமுற்று.                                                       (2)

      நாக்கி னானு நயனங்க ளானுமிவ்

       வாக்கை யானு மருஞ்செவி யானுநம்

       மூக்கி னானு முயங்கிய தீவினை

       தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே.                        3

 

      (பொழிப்புரை) ஐம்பொறிகளானும் வரும் தீவினைகளைத் தீர்க்கலாகுமாதலின் சிவசிவ என்றுச்சரிப்பீராக. -று.

      இதனை, “இனைய மந்திரத் தியல்புணர்ந் தோர்பொழு திசைப்போரனையர் தம்முழைப் புண்ணியம் யாவையு மடங்கும்வினையு நீங்குவர் மேதினி புரந்தினி தளிப்பார்புனையு மேற்பதம் புகுவர்முத் தேவரிற் பொலிவார்என்னும் உபதேசகாண்டத்தானுமுணர்க.                                           (3)

      சாந்தி ராயண மாதி தவத்தினான்

       வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்

       போந்த பாதக மேனும் பொருக்கெனத்

       தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே.                        4

 

       (பொழிப்புரை) சாந்திராயண முதலிய தவச்செயல்களால் சரீரத்தை வாட்டியக்காலும் அழியாது தொடரும் பாதகமும் சிவநாமோச்சாரணத்தால் விலகுமாகலின் சிவசிவ என்றுச்சரிப்பீராக. -று.

      இதனை, “மூவுலகுஞ் சிவநாமந் தனக்கு நேரா மொழிவதனுக் கொன்றுண்டோ வரையின் சாரன்மேவியிருந் தருந்தங்கள் புரியும் பேறு மிக்கவிதற் கிணையாக விளம்ப லாமோ” “சம்புலின்றன் பெயராகு மிரண்டெ ழுத்து மொருதரஞ்சாற்றிடிற்கோடி பவந்தா நீங்கி, யும்பருஞ்சேர் வரியமுத்தி சேர்வர்என்னும் சிவரகசியத்தானும் சாந்திராயண முதலியவற்றைச் சிவதருமோத்தரம் பரிகாரவியலானுமுணர்க.                                                  (4)

 

       வில்லி தென்ன விளங்குந் திருநுதல்

       வல்லி பங்கன் மலரடி காணிய

       கல்வி நல்குங் கருத்து மகிழ்வுறுஞ்

       செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே.                      5

 

       (பொழிப்புரை) பார்வதிசமேதராகிய பரசிவனது திருவடி காண்டற்கு ஏதுவாகிய சாஸ்திரவுணர்ச்சியையும் உவத்தற் கேதுவாகிய ஐசுவரியங்களைந் தருமாதலின் சிவசிவ என்றுச்சரிப்பீராக. -று.   

      இதனை, “விரவிசிவ பதம்விரும்புஞ் செல்வ மெல்லா மேவுகின்ற விடமாகு முயிரா னந்தந்தருமிடமா மேலான முத்தி வீடு தாமிருக்கு மிடமெனவுஞ் சாற்ற லாமேஎன்னும் சிவரகசியத்தானுமுணர்க.                                (5)

       தீய நாளொடு கோவின் செயிர்தபு

       நோய கன்றிடு நூறெனக் கூறிய

       வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்

       தீய தீருஞ் சிவசிவ வென்மினே.                            6

 

       (பொழிப்புரை) தீமையுடைவனவாகிய நக்ஷத்திரங்களோடு நவக்கிரகங்களின் தீங்கலும், பிறவியாதிய எத்தகையநோயும் விலகும், ஆயுசும் விர்த்திக்கும், தருமமும் பெருகும், மற்றைக் கொடுமை விளைப்பனபலவும் விலகுமாதலால் சிவசிவ என்றுச் சரிப்பீராக. -று.

      இதனை, “நமவென்னு நாமத்தை நாவி லொடுக்கிச்சிவ்வென்னு நாமத்தைச் சிந்தையுள் ளேற்றிற்பவமது தீரும் பரிசுமதற்றாலவமதி தீரு மறும்பிறப் பன்றேஎன்னும் திருமந்திர்த்தானுமுணர்க.                   (6)

       வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை

       பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே

       விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்

       றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே.                      7

 

       (பொழிப்புரை) மிகமுயன்று உண்டாக்கி வளர்த்த கதிர்களைத்தலையிற் கொண்ட பயிரை அகலாது காக்கும் வறியவர் போலச் சிவபெருமான் (அவாவிப்) பின்றிரிந்து காத்தருளுவராதலால் சிவசிவ என்றுச்சரிப்பீராக. -று.

      இதனை, “பண்ணவனுருவாம் பஞ்சப் பிரமங்கள் பழுதொன்றில்லாவண்ணலஞ் செழுத்தின் மன்னி யடைவினி லமருமந்தநண்ணுமஞ் செழுத்துக் கூறு நம்பனே வினைக ளெல்லாங்கண்ணறக் களைந்து மாற்றிக் கனிந்தருள் புரிவ னன்றேஎன்னும் வாயசங்கிதையானு முணர்க. வளர்த்த பயிரென இயையும். வெண்மதிசூடிவினைக்குறிப்புப் பெயர்.                           (7)

       முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென

       நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்

       வந்த தீவினை மாற்றுவ னதலாற்

       சிந்தை யோடு சிவசிவ வென்மினே.                        8

 

       (பொழிப்புரை) முன்னர்ச் சிவனென்னுநாமத்தையுச்சரித்துப் பின்னர் அச்சிவபெருமானையிகழினும் அந்நாமத்திற்குரிய அப்பெருமான் உச்சரித்தவனது தீவினையையொழித்தருளுவர்; அது அத்தகைய மேன்மையுடையதாகலின் மனவொற்றுமையோடு சிவசிவவென்று அதனையே உச்சரிப்பீராக. -று.

      சிவநிந்தைகூறியோர்சிரசைக் கொய்வதேயல்லது அவர்வாய்க்கு வேறுபரிகாரம் இன்றென்பது நூற்றுணிபாயினும், சிவநாமோச்சாரணம் அத்தகையபாவத்தையும் முற்றுமொழித்து முத்தியும் பாலிக்க வல்லதாதல்பற்றி, அந்நாமத்திற்குரிய பெருமான் தம்மையிகழ்ந்த தவறையும் நோக்காது அதனாலெய்திய தீவினையும் மாற்றாநிற்பரென்பது கருத்து. இதனை, “விரியும் வேதத்தின் சாரமாய் விரித்தெடுத் துரைத்தற்கரிய வுட்பொருளுடையவா யழிவிலா முத்திபரிவின் றாகநன் களிக்குமைந் தெழுத்தினைப் பகர்தற், குரிய நாவினர் முத்திவீ டுறா தொழி குவரோஎன்னும் இலிங்கபுராணத்தானுமுணர்க.(8)

 

       நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்லா

       னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்

       நீச ரேயென் றியம்புறு நின்றுப்

       தேச நூல்கள் சிவசிவ வென்மினே.                         9

 

       (பொழிப்புரை) சிவநாமத்தை யுச்சரிப்போர் புலையராயிருப்பினும் தேவாதிபராவர், உச்சரியார் தேவாதிபராயிருப்பினும் புலையரேயாவர் என்னாநிற்கும், உண்மைப்பொருளை உபதேசிக்கும் நூல்களாகலின், சிவசிவ என்றுச்சரிப்பீராக. -று.

      இதனை, “சிவசிவ வென்கிலர் தீவினை யாளர்சிவசிவ வென்றிடத் தீவினை மாளுஞ்சிவசிவ வென்றிடத் தேவரு மாவர்சிவசிவ வென்னச் சிவகதி தானேஎன்னும் திருமந்திரத்தானுமுணர்க.                         (9)

       எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்

       வண்ண மென்பதங் 0கிட்டி வணங்கவு

       முண்ண டுங்குவ னெண்டிறற் கூற்றுவன்

       றிண்ண மீது சிவசிவ வென்மினே.                          10

 

      (பொழிப்புரை) சிவநாமோச்சாரணமுடையவர் திருவடிகளை அணுகிவணங்குதற்கும் இயமன் மனநடுங்காநிற்பன், இது சத்தியமாகலின் சிவசிவ என்றுச்சரிபீராக. -று.

      இதனை, “பஞ்ச பாதக ராயினும் பாவமேதஞ்ச மாகச் சரிப்பவ ராயினுநஞ்ச யின்றவ னாம முரைப்பரேலஞ்சு மஞ்சு மென் னெஞ்சக மஞ்சுமால்என இங்ஙனம் இயமன் காலனுக் குணர்த்தியிருப்பது உபதேசகாண்டத்தானு முணர்க. (10)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

      இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங் கொலைவேட னெனினும் பொல்லாப், பழிமருவு பதகனெனி னும்பதித னெனினுமிகப் பகரா நின்ற, மொழியவற்று ளவசனாய்ச் சிவசிவ்வென்றொருமுறைதான் மொழியி லன்னோன், செழியநறு மலரடியின் றுகளன்றோ வெங்கள் குல தெய்வ மென்ப.

(பொழிப்புரை) எத்தகைய இழிஞராயினும் தாம்கூறும் வாக்கியங்கள்ளே தம்வசமிலராய் ஒருதரம் சிவசிவ எனக்கூறின், அன்னோர் திருவடித்துகள்களே எமது குலதெய்வ மென்பர் அவர் தகைமையுணர்ந்த அறிஞர். -று.

சிவசிவவென்பது இரக்கக்குறிப்பின்கண்ணும் வருமாகலின் அங்ஙனம் அபுத்திபூர்வமாக மொழியினுமென்பார்பகராநின்ற மொழியவற்றுள் அவசனாய் மொழியினும்என்றார். “உன்னை யான் சிவனெனவே பாவிக் கின்றே னுனக்கிணையா வுலகத்திலொருவ ரில்லைப்பன்னுமனத் தினிற்றோன்றும் படிபா வங்கள் பண்ணியதல் லாற்றருமஞ் செய்தி லாயேயிந்நிலையுற் றனையிறக்குங் காலந் தன்னி னிறைவர்சிவ நாமங்கா துறப்பெற்றாயாலன்னதனாற் செயும்பாவ மெல்லாநீங்கி யம்புவியிற் சீவன் முத்த னெனவுற் றாயேஎன விந்தநாட்டவதரித்த சூத்திரகுலத்தரொருவரைத் திருமால் வியந்திருப்பது சிவரகசியத்தானுமுணர்க. என்ப வென்பதை எனப்படுவன வெனக்கொண்டு நூலாசிரியர் கூற்றாக்கலும் ஒன்று. அதிபாதகராயினோரும் சிவநாமோச்சாரணத்தால் அப்பாதகங்களினீங்கிச் சிவகதியெய்தினமைபற்றிச் சிவரகசியம் உபதேசகாண்டம் இலிங்கபுராணம் வாயுசங்கிதை முதலியவற்றுள்ளும் தலபுராணங்களுள்ளும் பற்பல சரித்திரமுள்ளன; உய்த்துணர்க: விரிக்கிற்பெருகும்.  

சிவநாமமகிமையுரை முற்றிற்று.

 

Related Content