logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை

பரஞ்சோதி முனிவர் அருளிய

(திருவாலவாய் மான்மியம்)

 

திருச்சிற்றம்பலம்

 

முதலாவது - மதுரை காண்டம்

(இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் முதல்
வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை)

14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்

 
1053 
மின் அவிர் மணப்பூண் மார்பன் வேலையை வேலால் வென்று  
பொன் அவிர் வாகை வேய்ந்த புகழ் உரை செய்தேம் நாக  
நல் நகர் ஆளி செம் பொன் கை முடி சிதற வந்த  
மன்னவன் வளை கொண்டு ஓச்சி வென்றதும் வகுத்துச் சொல்வாம். 
1054 
கோமகன் நிகழும் நாளில்கோள் நிலை பிழைத்துக் கொண்மூ  
மா மழை மறுப்பப் பைங்கூழ் வறந்து புல் தலைகள் தீந்து  
காமரு நாடு மூன்றும் கை அறவு எய்த மன்னர்  
தாம் அது தீர்வு நோக்கித் தமிழ் முனி இருக்கை சார்ந்தார். 
1055 
முனிவனை அடைந்து வேந்தர் மூவரும் தங்கள் நாட்டில்  
பனிவரு மாரி இன்றி வறந்தமை பகர மேருக்  
குனி வரு சிலையார்க்கு அன்பன் கோள் நிலை குறித்து நோக்கி  
இனி வரு மாரி இல்லை ஆதினால் என்னில் கேண்மின். 
 
1056 
காய் சின வெய்யோன் சேயோன் முன் செலக் கதிர்கால் வெள்ளித்  
தேசிகன் பின்பு சென்று நடக்கும் இச் செயலான் முந்நீர்  
தூசின உலகில் பன்னீராண்டு வான் சுருங்கும் என்று  
பேசின நூல்கள் மாரி பெய்விப் போன் சென்று கேண்மின். 
1057 
என்றவன் எதிர் யாம் எவ்வாறு ஏகுது என்றார் ஐந்தும்  
வென்றவன் சோம வார விரதம் நீர் நோற்று வெள்ளி  
மன்றவன் அருளைப் பெற்று வான் வழிச் செல்மின் என்ற அக்  
குன்றவன் சிலையா நோன்பின் விதியினைக் கூறு கின்றான். 
1058 
உத்தம வானோர் தம்முள் உத்தமன் ஆகும் ஈசன்  
உத்தம சத்தி மருள் உத்தமி உருத்திராணி  
உத்தம விரதம் தம்முள் உத்தமம் திங்கள் நோன்பு என்று  
உத்தம மறை நூல் ஆதி உரைக்கும் இச் சோம வாரம். 
1059 
மந்தரம் காசி ஆதிப் பதிகளில் வதிந்து நோற்கத்  
தந்திடும் பயனில் கோடி தழைத்திடும் மதுரை தன்னில்  
இந்த நல் விரதம் நோற்போர் அதிகம் யாது என்னில் சோம  
சுந்தரன் உரிய வாரம் ஆதலால் சோம வாரம். 
1060 
அங்கு அதின் அதிகப் பேறு உண்டு அருக்கனின் மதி தோய்ந்து ஒன்றித்  
தங்கிய திங்கள் நோன்பு தகுதியின் நோற்க வல்லார்க்கு  
இங்கு அதின் அதிக நீதி ஈட்டிய பொருள் கொண்டு ஆற்றும்  
மங்கல விரதப் பேர் ஒன்று அனந்தமாய் வளரும் அன்றே. 
1061 
நலம் மலி விரதம் நோற்பத் தொடங்குநாள் நவில்வாம் தேளிற்  
சிலையினில் ஆதல் இன்றி இரட்டியது எரிசம் சேர்ந்து  
மல மதி ஒழித்து மற்றை மதியிலும் முந்தை பக்கத்து  
அலர் கதிர் வாரத்து அல் ஊண் அயின்றிடாது அயலில் துஞ்சா. 
1062 
வை கறை எழுந்து சேல் கண் மணாளனை உள்கி அற்றைச்  
செய்கடன் நிறீஇக் காமாதி சிந்தை நீத்து அலர் பொன் கஞ்சப்  
பொய்கையை அடைந்து கையில் பவித்திரம் புனைந்து வாக்கு  
மெய் கருத்து ஒருப்பாடு எய்தச் சங்கற்பம் விதந்து கூறி. 
1063 
கடம்பு அடி முளைத்த முக்கண் கருப்பினை நினைந்து ஞாலத்து  
திடம் படு தீர்த்தம் எல்லாம் ஆடிய பயனை ஈண்டுத்  
திடம் படத் தருதி என்னாத் திரைத் தடம் படிந்து வெண் நீறு  
உடம்பு அணிந்து தக்க மாலை ஒளி பெற விதியால் தாங்கி. 
1064 
வெள்ளை மந்தாரம் முல்லை மல்லிகை வெடி வாய் சாதி  
கள் அவிழ் மயிலை ஆதி வெண்மலர் கவர்ந்து வேழப்  
பிள்ளையை முந்தப் பூசித்து இரந்து சங்கற்பம் பேசி  
உள் அணைந்து உச்சி மேல் பன்னிரு விரல் உயர்ச்சிக்கு உம்பர். 
1065 
சத்திய ஞான ஆனந்த தத்துவம் தன்னை உள்கி  
வைத்த தன் வடிவம் கொண்டு மண் முதல் சிவம் ஈறு ஆன  
அத்துவ லிங்கம் தன்னை ஆசன மூர்த்தி மூல  
வித்தை மற்று நாலு நூலின் விதியினால் பூசை செய்க. 
 
1066  
ஐந்து அமுது ஆவின் ஐந்து நறும் கனி ஐந்து செம்தேன்  
சந்தன தோயம் புட்பத் தண் புனல் மணி நீராட்டிச்  
சுந்தர வெண் பட்டு ஆடை கருப்புரம் சுண்ணம் சாந்தம்  
கந்த மல்லிகை முன் ஆன வெண் மலர்க் கண்ணி சாத்தி. 
 
1067 
காசணி பொலம் பூண் சாத்திக் கனைகழல் ஆதி அங்க  
பூசனை செய்து சேல் கண் பூரண பரையை அவ்வாறு  
ஈசன் ஐந்து எழுத்தைப் பெண் பால் இசைய உச்சரித்துப் பூசித்து  
தாசறு சுரபித் தீம்பால் அட்ட இன் அமுதினோடும். 
1068 
பண்ணிய வகை பானீய நிவேதனம் பண்ணி வாசம்  
நண்ணிய அடைக்காய் நல்கி நறு விரைத் தூபம் தீபம்  
எண்ணிய வகையால் கோட்டிக் கண்ணடி ஏனை மற்றும்  
புண்ணியன் திரு முன் காட்டி வில்வத்தால் பூசை செய்தல். 
1069 
புரகரன் இச்சா ஞானக் கிரியை ஆய்ப் போந்த வில்வ  
மர முதல் அடைந்து மூன்று வைகல் ஊண் உறக்கம் இன்றி  
அரகர முழக்கம் செய்வோர் ஐம் பெரும் பாதகங்கள்  
விரகில் செய் கொலைகள் தீரும் ஆதலால் விசேடம் வில்வம். 
1070 
மடங்கி இதழ் சுருங்கல் வாடி உலர்ந்தது மயிர் சிக்கு உண்டல்  
முடங்கு கால் சிலம்பிக் கூடு புழுக் கடி முதல் ஆம் குற்றம்  
அடங்கினும் குற்றம் இல்லை உத்தமம் ஆகும் வில்வம்  
தடம் கை கொண்டு ஈசன் நாமம் ஆயிரம் சாற்றிச் சாத்தல். 
1071 
அடியனேன் செய்யும் குற்றம் அற்றைக்கு அன்று அனந்தம் ஆகும்  
கொடிய நஞ்சு அமுதாக் கொண்டாய் குற்றமும் குணம் ஆக் கொண்டு  
படி எழுத அரிய நங்கை பங்கனே காத்தி என்று  
முடி உற அடியில் வீழ்ந்து மும் முறை வலம் செய்து ஏத்தி. 
1072 
வன் மனம் கரை நின்று வேண்டிய வரங்கள் வேண்ட  
நன் மணப் பேறு மக்கள் பெறுதல் வாக்குக் கல்வி  
பொன் மனக் இனிய போகம் தெவ்வரைப் புறகு காண்டல்  
இம்மையில் அரசு மற்று எண்ணியாங்கு எய்தும் மன்னோ. 
1073 
ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத  
வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து  
ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்  
சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை செய்தல். 
1074 
பொருவில் இவ் விரதம் ஐ வகைத்து உச்சிப் போதில் ஊண் இரவில் ஊண் இரண்டும்  
ஒருவுதல் உறங்காது இருத்தல் அர்ச்சனை நால் யாமமும் உஞற்றுதல் என்னக்  
கருதின் இவ் ஐந்தும் ஒன்றினுக்கு ஒன்று கழியவும் ஐகமாம் நோற்கும்  
வருடம் ஒன்று இரண்டு மூன்று பன்னிரண்டு வருடம் வாழ்நாள் அளவில் இவற்றுள். 
1075 
உடலளவு எண்ணி நோற்பவர் முந்த உத்தியாபனம் செய்து நோற்கக்  
கடவர் அவ் வருடக் கட்டளைக்கு இறுதி கழிப்பதுத் தாபன விதிதான்  
மடல் அவிழ் மாலை மண்டபம் குண்டம் மண்டலம் வகுத்து மா பதியைப்  
படர் ஒளி வெள்ளி முப்பது கழஞ்சில் படிமையான் நிருமிதம் செய்து. 
1076 
காலையில் ஆசான் சொல்வழி நித்தக் கடன் முடித்து உச்சி தொட்டு அந்தி  
மாலையின் அளவும் புராண நூல் கேட்டு மாலை தொட்டு யாமம் ஒர் நான்கும்  
சேல் அன கண்ணாள் பங்கனைப் பூசை செய்க அப் பூசனை முடிவின்  
மூல மந்திரம் நூற்று எட்டு நூற்று எட்டு முறையினால் ஆகுதி முடித்தல். 
1077 
வில்லம் ஆயிரம் கொண்டு ஆயிரம் நாமம் விளம்பி  நால் யாமமும் சாத்தல்  
நல்ல ஐந்து எழுத்தால் ஐந்து எழுத்து உருவின் நாதனுக்கு அருக்கியம் கொடுத்தல்  
எல்லை இல் மூல மந்திரத்தாலும் ஏனை மந்திரங்களினாலும்  
வில் அழல் ஓம்பிப் பூரண ஆகுதி செய்து ஈறு இலான் வேள்வியை முடித்தல். 
1078 
புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்  
நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி  
அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்  
கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து. 
1079 
காது அணி கலனும் கை அணி கலனும் கவின் பெற அளித்தனர் ஆக  
ஆதரம் பெருக நினைந்து அருச்சனை செய்து அரிய தக்கிணை யொடும் பாதப்  
போதணி காப்பு விசிறி தண் கவிகை பூந்துகில் முதல் பல உடனே  
மேதகு தானம் செய்து பின் குருவைக் கற்பு உடை மின் இடை யோடும். 
1080 
ஆசனத்து இருத்திப் பொலந்துகில் காதுக்கு அணிகள் கைக்கு அணிகளும் அணிந்து  
வாச நல் மலர் இட்டு அருச்சனை செய்து மலைமகள் தலைவனை வரைந்து  
பூசனை செய்த படிமையோடு அம் பொன் பூதலம் பதாதிகள் பிறவும்  
தூசு அலர் மாலை கோட்டணி புனைந்த சுரபிமா தானமும் செய்து. 
1081 
இனையவாறு உத்தாபனம் முடித்து ஆசான் ஏவலால் சிவன் அடிக்கு அன்பர்  
தனைய ரோடு ஒக்கலுடன் அமுது அருந்த தகுதி  இவ்விரத முன் கண்ணன்  
அனைய தாமரை யோன் இந்திரன் முதல் வான் நாடவர்  மூவறு கணத்தோர்  
அனைவரும் நோற்றார் மனிதரும் அனுட்டித்து அரும் பெறல் போகம் வீடு அடைந்தார். 
1082 
ஈது நோற்பவர் வெம் பகை மனத்துயர் தீர்ந்து ஆயிரம் பிறவியில் இயற்றும்  
திது சேர் வினை தீர்ந்து எடுத்த யாக்கையினில் சிவகதி அடைவர் இவ் விரதம்  
ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்கள் ஒக்கலோடு இனிது வாழ்ந்து உம்பர்  
மேதகு பதினாலு இந்திரன் பதத்தில் வீற்று இனிது இருப்பர் என்று அறவோன். 
1083 
சொல்லிய நெறியால் சோம சுந்தரன் விரதம் நோற்பான்  
வில் இடு மணிப் பூண் வேந்தர் முனிவனை விடைகொண்டு ஏகி  
அல்லி அம் கனக கஞ்சத்து ஆடி அம் கயல் கண் வல்லி  
புல்லிய பாகன் தன்னை வழிபடீஇ போற்றி நோற்றார். 
1084 
சுந்தரன் தன்னைப் பூசைத் தொழில் செய்து வரம் பெற்று ஏகி  
அந்தரத்து ஆறு செல்வார் அ•து அறிந்து அமரர் வேந்தன்  
வந்தவர் இருக்க வேறு மடங்கல் மான் தவிசு மூன்று  
தந்திடப் பணித்தான் இட்டார் தனது அரியணையில் தாழ. 
1085 
வான் வழி வந்த மூன்று மன்னரும் பொன் நாடு எய்தி  
ஊன் வழி குலிச வைவேல் உம்பர் கோன் மருங்கில் புக்கார்  
தேன் வழி போந்தின் கண்ணிச் சேரனு ஆர்த்தார் வேந்தும்  
கான் வழி தாரு நாடன் காட்டிய தவிசின் வைக. 
1086 
மைக் கடல் வறப்ப வென்ற வாகை வேல் செழியன் மௌலிச்  
செக்கர் மா மணி வில் காலத் தேவர் கோன் தவிசில் ஏறி  
ஒக்க வீற்று இருந்தான் ஆக உம்பர் கோன் அழுக்காறு எய்திப்  
பக்கமே இருந்த ஏனைப் பார்த்திவர் முகத்தைப் பாரா. 
1087 
முகமன் நன்கு இயம்பி நீவிர் வந்தது என் மொழிமின் என்ன  
மகபதி எங்கள் நாட்டின் மழை மறுத்து அடைந்தேம் என்றார்  
அகம் மலர்ந்து அனையார் நாட்டின் அளவும் வான் சுரக்க நல்கி  
நகை மணிக் கலன் பொன் ஆடை நல்கி நீர் போமின் என்றான். 
1088 
அன்னவர் அகன்ற பின்னை அமரர் கோன் கன்னி நாடன்  
தன் அரி அணை மேல் ஒக்கத் தருக்கினோடு இருக்கு மாறும்  
பின்னரும் மாரி வேண்டாப் பெருமித வீறும் நோக்கி  
இன்னது புலப் படாமை இனையது ஓர் வினயம் உன்னா. 
1089 
பொற்பு உற வரிசை செய்வான் போல் அளவு இறந்தோர் தாங்கி  
வெற்பு உறழ் திணி தோள் ஆற்றல் மெலிவது ஓர் ஆரம் தன்னை  
அற்புற அளித்தான் வாங்கி அலர் மதுத் தார் போல் ஈசன்  
கற்பு உடை உமையாள் மைந்தன் கதும் என கழுத்தில் இட்டான். 
1090 
கண்டனன் கடவுள் நாதன் கழியவும் இறும் பூது  உள்ளம்  
கொண்டனன் இன்று தொட்டுக் குரை அளி துழாவு  நிம்பத்  
தண் தழை மார்ப ஆரம் தாங்கும் பாண்டியன் என்று உன்னை  
மண்டலம் மதிக்க என்றான் வான நாடு உடைய மன்னன். 
1091 
அன்னது சிறிதும் எண்ணாது அங்கு நின்று இழிந்து தென்னன்  
தன் நகர் அடைந்தான் இப்பால் சத மகன் ஆணையால் அம்  
மன்னவர் இருவர் நாடும் மழை வளம் பெருகப் பெய்த  
தென்னவன் நாடு பண்டைச் செயல் அதாய் இருந்தது அன்றே. 
1092 
ஆயது ஓர் வைகல் வேட்டை ஆடுவான் அண்ணல் விண்ணந்து  
ஆயது ஓர் பொதியக் குன்றில் சந்தனச் சாரல் நண்ணி  
மேயதோர் அரிமான் ஏனம் வேங்கை எண்கு இரலை இன்ன  
தீயதோர் விலங்கு வேட்டம் செய்து உயிர் செகுக்கும் எல்லை. 
1093 
பொன்றத்து மருவிக் குன்றில் புட்கலா வருத்தம் ஆதி  
மின்றத்து மேகம் நான்கும் வீழ்ந்தன மேயக் கண்டு  
குன்றத்தின் நெடிய திண் தோள் கொற்றவன் அவற்றைப் பற்றிக்  
கன்றத் திண் களிறு போலக் கடும் தளை சிக்க யாத்தான். 
1094 
வேட்டத்தில் பட்ட செம்கண் வேழம்போல் கொண்டு போகிக்  
கோட்டத்தில் இட்டான் ஆக குன்று இறகு அரிந்த வென்றி  
நாட்டத்துப் படிவத்து அண்ட நாடன் மற்று அதனைக் கேட்டுக்  
காட்டத்துக் கனல் போல் சீறிக் கடும் சமர் குறித்துச் செல்வான். 
1095 
வாங்கு நீர் வறப்ப வேலை விடுத்ததும் வலிய வாரம்  
தாங்கிய செருக்கும் காரைத் தளை இடு தருக்கு நோக்கி  
ஈங்கு ஒரு மனித யாக்கைக் இத்துணை வலியாது என்னா  
வீங்கியம் ஆன மூக்க மீனவன் மதுரை சூழ்ந்தான். 
1096 
ஓடினர் ஒற்றர் போய்ச் செழிய ஒண் கழல்  
சூடினார் நகர்ப்புறம் சுரர்கள் சேனைகள்  
மூடின என்னலும் முனிவும் மானமும்  
நீடினன் அரியணை இழிந்து நீங்குவான். 
1097 
பண்ணுக தேர் பரி பகடு வீரர் முன்  
நண்ணுக கடிது என நடத்தி யாவர் என்று  
எண்ணலன் மத மலை எருத்த மேல் கொடு  
கண்ணகன் கடி நகர்க் காப்பு நீங்கு முன். 
1098 
அடுத்தனர் வானவர் ஆர்த்துப் பல் படை  
எடுத்தனர் வீசினர் சிலையில் எய்கணை  
தொடுத்தனர் இறுதி நாள் சொரியும் மாரிபோல்  
விடுத்தனர் மதிக்குல வீரன் சேனை மேல். 
1099 
ஆர்த்தனர் மலய வெற்பு அரையன் சேனையோர்  
பார்த்தனர் வேறு பல் படைக்கலக் குவை  
தூர்த்தனர் குனிசிலை தொடுத்து வாளியால்  
போர்த்தனர் அமரர் மெய் புதைத்த என்பவே. 
1100 
தறிந்தன தாள் சிரம் தகர்ந்த தோள் கரம்  
பறிந்தன குருதி நீர் கடலில் பாய்ந்தன  
செறிந்தன பாரிடம் சேனம் கூளிகள்  
முறிந்தன் வானவர் முதல்வன் சேனையே. 
1101 
ஆடின குறைத்தலை அவிந்த போர்க்களம்  
பாடின பாரிடம் விந்தைப் பாவை தாள்  
சூடின கூளிகள் சோரி சோரப் பார்  
மூடின பிணக் குவை அண்டம் முட்டவே. 
1102 
வெஞ்சின வலாரிதன் வீரச் சேனைகள்  
துஞ்சின கண்டு எரி சொரியும் கண்ணன் ஆய்ப்  
பஞ்சின் முன் எரி எனப் பதைத்து தெய்வத  
வஞ்சினப் படைகளான் மலைவது உன்னினான். 
1103 
வெம் கதிர்ப் படை விட்டு ஆர்த்தான் விண்ணவன் அதனைத் திங்கள்  
பைங் கதிர்ப் படை தொட்டு ஓச்சி அவித்தனன் பார் ஆள் வேந்தன்  
சிங்க வெம் படை விட்டு ஆர்த்தான் தேவர் கோன் அதனைச் சிம்புட்  
புங்கவன் படை தொட்டு ஓச்சி அடக்கினான் புணரி வென்றோன். 
1104 
தானவர் பகைவன் மோக சரம் தொடுத்து எறிந்தானாக  
மீனவன் அதனை ஞான வாளியால் விளித்து மாய்ந்து  
போனபின் மற்போர் ஆற்றிப் புக்கனர் புக்கார் தம்மில்  
வானவன் மண்ணினான் மேல் வச்சிரம் வீசி ஆர்த்தான். 
1105 
காய்சின மடங்கல் அன்னான் கை வளை சுழற்றி வல்லே  
வீசினான் குலிசம் தன்னை வீழ்த்தது விடுத்தான் சென்னித்  
தேசினன் மகுடம் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடும்  
கூசினன் அஞ்சிப் போனான் குன்று இற கரிந்த வீரன். 
1106 
இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த  
மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி  
சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம  
சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா. 
1107 
போரினுக்கு ஆற்றாது ஓடிப் பொன் நகர் புகுந்த வென்றித்  
தாரினுக்கு இசைந்த கூர் வேல் சதமகன் பின்பு நின் நாட்டு  
ஊரினுக்கு எல்லாம் மாரி உதவுவேன் இகள நீக்கிக்  
காரினைத் தருக என்னாக் கவுரியற்கு ஓலை விட்டான். 
1108 
முடங்கல் கொண்டு அணைந்த தூதன் முடி கெழு வேந்தன் பாதத்து  
ஓடுங்கி நின்று ஓலை நீட்ட உழை உளான் ஒருவன் வாங்கி  
மடங்கல் ஏறு அனையான் முன்னர் வாசித்துக் காட்டக் கேட்டு  
விடம் கலுழ் வேலான் விண்ணோர் வேந்து உரை தேறான் ஆகி. 
1109 
இட்ட வன் சிறையை நீக்கி எழிலியை விடாது மாறு  
பட்ட சிந்தையனே ஆகப் பாக சாதனனுக்கு என்று  
நட்டவன் ஒரு வேளாளன் ஆன் பிணை என்று தாழ்ந்தான்  
மட்டு அவிழ்ந்து ஒழுகு நிம்ப மாலிகை மார்பினானும். 
1110 
இடுக்கண் வந்து உயிர்க்கு மூற்றம் எய்தினும் வாய்மை காத்து  
வடுக்களைந்து ஒழுகு நாலா மரபினான் உரையை ஆத்தன்  
எடுத்து உரை மறை போல் சூழ்ந்து சிறைக் களத்து இட்ட யாப்பு  
விடுத்தனன் பகடு போல மீண்டன மேகம் எல்லாம். 
1111 
தேவர் கோன் ஏவலாலே திங்கள் மும் மாரி பெய்து  
வாவியும் குளனும் ஆறு மடுக்களும் அடுத்துக் கள்வாய்க்  
காவி சூழ் வயலும் செய்யும் செந் நெலும் கன்னல் காடும்  
பூ விரி பொழிலும் காவும் பொலிந்தது கன்னிநாடு. 
 
இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் சுபம்  
 

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

 
 
1112 
அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்  
வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்  
கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்  
செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு செப்புவாம். 
1113 
மன்னவன் தனக்கு முன்னர் மலய வெற்பின் முனிவர் கோன்  
சொன்ன திங்கள் விரதம் அன்று தொட்டு நோற்று வரலும் அந்  
நன்னலம் செய் பேறு போல நங்கை காந்தி மதி வயிற்று  
உன்னரும் சயம் கொள் மைந்தன் ஒருவன் வந்து தோன்றினான். 
1114 
வயந்தனை பயந்தது என்ன மைந்தனைப் பயந்த போது  
இயந்து வைத்து நகர் களிப்ப இனிது இருந்த புரவலன்  
சயம் தழைக்க இந்திரன் சயந்தனைப் பயந்த நாள்  
வியந்து அகத்து அடைந்த இன்பம் விளை மகிழ்ச்சி எய்தினான். 
1115 
தென்னர் ஏறு சாதகாதி செய்து வீர பாண்டியன்  
என்ன நாம வினை நிரப்பி எழுத ஓணாத கலை முதல்  
பன்னு கேள்வி கரிகள் தேர்கள் பரி படை கலம பயின்று  
அன்ன காதலான் விளங்க அகம்மகிழ்ச்சி அடையும நாள். 
1116 
மல்கு மாறுஇல் கோள் திரிந்து மழை சுருங்கி நதியும் நீர்  
ஒல்கு மாறு பருவம் மாறி உணவு மாறி உயிர் எலாம்  
மெல்குமாறு பசி உழந்து வேந்தனுக்கு விளைபொருள்  
நல்கு மாறி இலமை இன்னல் நலிய வந்த நாடு எலாம். 
1117 
மழை வறந்தது என் கொல் என்று வழுதிகூற முழுது உணர்ந்து  
அழிவு இலாத பிரம கற்பம் அளவு எல்லை கண்ட நூல்  
உழவர் கோள்கள் இரவி தன்னை உற்று நோக்கி நிற்றலால்  
தழையும் மாரி வருடியாது ஓர் வருடம் என்று சாற்றினார். 
1118 
மகவு உறு நோயை நோக்கி வருந்து உறு தாய்போல் மன்னன்  
பக உறு மதியம் சூடும் பரம் சுடர் முன் போய் தாழ்ந்து  
மிக உறு பசியால் வையம் மெலிவதை ஐய என்னாத்  
தகவு உற இரங்கி கண்ணீர் ததும்ப நின்று இரந்து வேண்ட. 
1119 
திரைக்கடல் விடம் சேர் கண்டர் காலத்தின் செவ்விநோக்கி  
இரக்கம் இல்லாதவர் போல் வாளா இருத்தலும் மருத்தார் மார்பன்  
கரைக்கு அரிது ஆய துன்பக் கடலில் வீழ்ந்து இருக்கைபுக்கான்  
அரக்கர் போல் கடலில் நீந்தி அருக்கன் நீர்க் கடலில் வீழ்ந்தான். 
1120 
வள்ளல் தன் குடைக் கீழ் தங்கும் உயிர்ப்பசி வருத்தம் வருத்தம் எல்லாம்  
கொள்ளை கொண்டு இருந்த நெஞ்சில் குளிர் முகச் செவ்விகுன்றத்  
தள் உரும் துயரின் மூழ்கித் தரை இடைத் துயின்றான் ஆக  
வெள்ளி மன்று உடையார் சித்த வேடராய்க் கனவில் வந்தார். 
1121 
அடல் கதிர் வேலோய் மாரி அரிதி இப்போது அதனை வேண்டி  
இடப் படல் வரைக்கு வேந்தாய் இருக்கின்ற எரி பொன் மேருத்  
தடப் பெரு வரையின் மாடு ஓர் தனிப் பெரு முழையில் இட்டுக்  
கிடப்பது ஒர் எல்லை இல்லாக் கேடு இலாச் சேம வைப்பு. 
1122 
கிடைத்து மற்று அனைய மேரு கிரி செருக்கு அடங்கச் செண்டால்  
புடைத்து நின் ஆணைத் தாக்கிப் பொன் அறை பொதிந்த பாறை  
உடைத்து நீ வேண்டும் காறும் தொட்டு எடுத்து அதனை மீள  
அடைத்து நின் குறி இட்டு ஐய வருதி என்று அடிகள் கூற. 
1123 
விழித்தன எழு மான் தேரோன் விழிக்கும் முன் கடன்கள் எல்லாம்  
கழித்தனன் மீன நோக்கி கணவனை வலமாப் போந்து  
கழித்து எறி கடல் அனீகத் தொகை புறம் சூழக் கொண்டல்  
கிழித்து எழு வாயின் நீங்கிக் கீழ்த் திசை நோக்கிச் செல்வான். 
1124 
அதிர்ந்தன முரசம் சங்கம் அதிர்ந்தன வியங்கள் அண்டம்  
பிதிர்ந்தன என்ன ஆர்ப்பப் பெயர்ந்து வெண் கவரி துள்ள  
முதிர்ந்த நான் மறையோர் ஆசி மொழிய நா வல்லோர் ஏத்தப்  
பதிந்து பார் கிழியத் திண்தேர் பாகுமுன் செலுத்த ஊர்ந்தான். 
1125 
பவளக்கால் பிச்சம் பொன் கால் பல் மனிக் கவிகை முத்தக்  
தவளக்கால் பதாகைக் காதும் தான வான் அருவி தூங்கும்  
கவளக்கால் பொருப்பும் பாய்மாக் கடலும் மண் மடந்தை ஆகம்  
துவளக் கால் வயவர் மான் தேர் தொகுதியும் சூழல் போக. 
1126 
கோழ் இணர் ஞாழல் அன்ன கோட்டு உகிர்ப் புலவுப் பேழ் வாய்த்  
தாழ்சின உழுவை ஒற்றைத் தனிப் பெரும் கொடியும் கூனல்  
காழ் சிலைக் கொடியும் சூழக் கயல் கொடி நிலம் துழாங்கை  
ஏழ் உயர் வரை மேல் தோன்றி இரும் விசும்பு அகடுகீற. 
1127 
தென் கடல் வடபால் நோக்கிச் செல்வது போலத் தென்னன்  
தன் கடல் அணிகம் கன்னித் தண் தமிழ் நாடு நீந்தி  
வன் கட நெறிக் கொண்டு ஏகி வளவர் கோன் எதிர் கொண்டு ஆற்றும்  
நன் கடன் முகமன் ஏற்று நளிர் புனல் நாடு நீந்தி. 
1128 
தண்டக நாடு தள்ளித் தெலுங்க நாடு அகன்று சாய் தாள்  
கண்டகக் கைதை வேலிக் கரு நடம் கடந்து காடும்  
தொண்டகம் துவைக்கும் குன்று நதிகளும் துறந்து கள்வாய்  
வண்டக மலர்க்கா வேலி மாளவ தேசம் நண்ணி. 
1129 
அங்கு நின்று எழுந்து தீவா அரும் சுர நெறிப் பட்டு ஏகி  
அங்கு நின்று அதிரும் செம்பொன் மாட நீள் விராட நண்ணிக்  
கொங்கு நின்று அவிழும் கானம் குன்று ஒரீஇ வாளை  பாயத்  
தெங்கு நின்று இளநிர் சிந்து மத்திய தேயத்து எய்தி. 
1130 
அங்கு நின்று எழுந்து தீவா அரும் சுர நெறிப் பட்டு  ஏகி  
அங்கு நின்று அதிரும் செம்பொன் மாட நீள் விராட  நண்ணிக்  
கொங்கு நின்று அவிழும் கானம் குன்று ஒரீஇ வாளை  பாயத்  
தெங்கு நின்று இளநிர் சிந்து மத்திய தேயத்து எய்தி. 
1131 
மடம்கல் மா நாகம் யாளி வழங்கலான் மனிதர் செல்லா  
இடம் கடந்தாக வைஞ்நூற்று இரட்டி யோசனைத்தாம் எல்லைக்  
கடம் கெழு குமரி கண்டம் கடந்து மற்று அது போல் எட்டுத்  
தடம் கெழு கண்டம் கொண்ட பாரத வருடம் தள்ளி. 
1132 
யாவையும் ஈன்றாள் தன்னை ஈன்ற பொன் இமயம் தன்னைத்  
தாவி அப் புறம் போய்ப் போகம் ததும்பு கிம்புருடக் கண்டம்  
மேவி அங்கு அது நீத்து ஏம வெற்பு அடைந்து அது பின் ஆக  
ஓவியப் புறத்துத் தோன்றும் அரி வருடத்தை உற்று. 
1133 
உற்றது கழிந்து அப்பால் போய் நிடத வெற்பு ஒழிந்து சம்புப்  
பொன் தருக் கனி கால் யாறு போகி இளா விருத கண்டத்து  
உற்றனன் கண்டான் மூன்று ஊர் ஒருங்கடு ஞான்று கூனி  
வெற்றி வெஞ் சிலையாய் நின்ற வெற்பினை மலய வெற்பன். 
1134 
வெம் படை மறவர் சேனை வெள்ளம் நீத்து ஏகித் தென்பால்  
சம்புவின் கனியின் சாறு வலம் படத் தழுவி ஓடும்  
அம் பொன் ஈர் ஆறு ஆற்றின் அருகு பொன் மயமாய் நிற்கும்  
பைம்புனம் கானம் நோக்கி வளைந்து தென்பால் வந்து எய்தா. 
1135 
அவ் வரை அரசை நோக்கி வரைகளுக்கு அரசே எந்தை  
கைவரி சிலையே பாரின் களைகணே அளவில் வானம்  
தை வரு சுடரும் கோளும் நான்களும் தழுவிச் சூழும்  
தெய்வத வரையே மேலைத் தேவர் ஆலயமே என்னா. 
1136 
மாணிக்கம் இமைக்கும் பூணான் விளித்தலும் வரைக்கு வேந்தன்  
பாணித்து வரவு தாழ்ப்பப் பாக சாதனனை வென்றோன்  
நாணித் தன் சினமும் மேரு நகை வரைச் செருக்கு மாறச்  
சேண் உற்ற சிகரம் தன்னில் செண்டினால் அடித்து நின்றான். 
1137 
அடித்தலும் அசையா மேரு அசைந்து பொன் பந்து போலத்  
துடித்தது சிகர பந்தி சுரர் பயில் மாடப் பந்தி  
வெடித்தன தருண பானு மண்டலம் விண்டு தூளாய்ப்  
படித்தலை தெறித்தால் என்னப் பல் மணி உதிர்ந்த அன்றே. 
1138 
புடை வரைக் குலங்கள் எட்டும் புறம் தழீஇக் கிடக்கும் செம் பொன்  
அடைகல் ஓர் நான்கு கிடங்கரும் மலர்ந்த நான்கு  
தட மலர்ப் பொழிலும் நான்கு தருக்களும் சலித்த அம்மா  
உடையவன் இடையூறு உற்றால் அடுத்த வர்க்கு உவகை உண்டோ. 
1139 
புடைத்த பின் மேருத் தெய்வம் புடைக்குல வரை எட்டு என்னப்  
படைத்த எண் தோளும் நான்கு முடியும் மேல் படு வெண் சோதி  
உடைத் தனிக் குடையும் கொண்ட உருவினோடு எழுந்து நாணிக்  
கிடைத்தது கருணை வேந்தன் கிளர் சினம் தணிந்து நோக்கா. 
1140 
இத்தனை வரவு தாழ்த்தது என் என மேருத் தெய்வம்  
வித்தக நம்பி கேட்டி மீனெடும் கண்ணியோடும்  
பைத்தலை அரவம் பூண்டபரனை இப் படிவம் கொண்டு  
நித்தலும் போகிப் போகி வழிபடு நியமம் பூண்டேன். 
1141 
இன்று கேட்டிலையோ ஐயா ஏந்திழை ஒருத்தி காமம்  
துன்று மா கடலின் மோகச் சுழித்தலைப் பட்டு வெள்ளி  
மன்றுள் ஆடிய பொன் பாதம் வழிபடல் மறந்து தாழ்ந்து  
நின்றுளேன் இனைய தீங்கின் இமித்தினால் அடியும் பட்டேன். 
1142 
திருவடி பிழைத்த தீங்கு தீர்த்தனை இதனில் ஐயன்  
தருவது ஓர் உறுதி தானும் தக்கது ஒர் கைம்மாறு என்னால்  
வருவது உண்டாம் கொல்லோ மற்று அது நிற்க மன்றல்  
பருவரை மார்ப வந்த பரிசு என் கொல் பகர்தி என்ன. 
1143 
மன்னவன் வெறுக்கை வேண்டி வந்தனன் என்றான் ஐய  
உன்னது புலத்து ஓர்க் ஏற்ப உரைபடு மாற்றது ஆய  
பொன் அவிர் தேமா நீழல் புதை படக் கிடக்கும் செம் பொன்  
என்ன அம் கையால் சுட்டிக் காட்டிய தெரி பொன குன்றம். 
1144 
மின் நகு வேலான் முந்நீர் வேலையை வணக்கம் கண்டோன்  
பொன்னறை மருங்கில் போகிப் பொத்திய பாறை நீக்கித்  
தன் அவா அளவிற்று ஆய தபனிய முகந்து மூடிப்  
பின்னதும் தன்னது ஆகப் பெயர் இலச்சனையும் தீட்டா. 
1145 
மின் திகழ் மணிப் பூண் மார்பன் மீண்டு தன் தானை யோடும்  
தென் திசை நோக்கிப் பாகன் செலுத்த மான் தடம்தேர் ஊர்ந்து  
பொன் திகழ் வரையும் போக பூமியும் பிறவும் நீத்து  
நன்றி கொள் மனிதர் வைப்பின் நண்ணுவான் நண்ணும் எல்லை. 
1146 
மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்  
பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித்  
தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்யத்  
தார்த் திரு மார்பன் கன்னித் தண் தமிழ் நாடு சார்ந்தான். 
1147 
கன்னிப் பொன் எயில் சூழ் செம் பொன் கடி நகர்க்கு அணியன் ஆகிப்  
பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக் கண்டு தாழ  
உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து  
வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான். 
1148 
அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்  
புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்  
நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள முத்தின்  
நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில் புக்கான். 
1149 
கொங்கு அலர் கோதை மாதர் குங்குமம் பனிப்பச் சிந்தும்  
மங்கல மறுகின் ஏகி மறைகள் சூழ் கோயில் எய்தித்  
தங்கள் நாயகனைச் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து ஏத்திப் போந்து  
திங்கள் சூழ் குடுமிச் செல்வத் திருமணிக் கோயில் புக்கான். 
1150 
பொன் மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த  
நல் மலை மானக் கூப்பி நல்கிப்பல் குடியும் ஓம்பித்  
தென்மலைக் கிழவன் தெய்வம் தென் புல வாணர் ஒக்கல்  
தன் மனை விருந்து காத்துத் தருக்கினான் இருக்கும் நாளில்.  
1151 
ஐ வினை நடாத்தும் ஈசன் ஆணையால் நடக்கும் கோளும்  
செய்வினைத் திரிவும் மாறத் தென்னன் நாடு எங்கும் மாரி  
பெய் வினை உடையது ஆகிப் பெருவளம் பகிர்ந்து நல்க  
உய் வினை உடைய ஆகி உயிர் எலாம் தழைத்த அன்றே. 
1152 
புவனி இம் முறையால் புரந்து அளித்து ஆரம்பூண்ட பாண்டியன் திரு மகனுக்கு  
அவனி ஏழ் அறிய வீரபாண்டியன் என்று அணிமுடி கவித்து அரசளித்து  
நவ நிரதிசய பூரண இன்ப ஞான நோக்கு அருளிய மதுரைச்  
சிவனடி நிழலில் பிளப்பு அற பழைய தேசு ஒடு நிறைந்து வீற்று இருந்தான். 
 
மேருவைச் செண்டால்அடித்த படலம் சுபம்  
 

16. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்

 
 
1153 
உலம் பொரு தடம் தோள் உக்கிரச் செழியன் உயரிய மேரு மால் வரையைப்  
பொலம் புரி செண்டால் புடைத்து வைப் பெடுத்துப் பேந்துஅருள் அடைந்த வா புகன்றும்  
வலம் படு திணிதோள் வீரபாண்டியன் கோல் வழங்கும் நாள் மதுரை எம் பெருமான்  
புலம் பொரு முனிவர் தேற நால் வேதப் பொருள் உணர்த்திய திறம் புகல்வாம். 
1154 
ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால்  
உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது ஓர் ஊழி வந்து எய்தச்  
செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும்  
வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ. 
1155 
பண்டுபோல் பின்னும் முத் தொழில் நடாத்தப் பரா பரஞ்சுடர் திரு உள்ளம்  
கொண்டு போர்த் திகிரி வலவனைத் தாவிக் குரி சிறன் நாபி முண்டகத்தில்  
வண்டு போல் பிரமன் உதித்து மூ உலகும் வரன் முறை படைக்கும் நாள் நஞ்சம்  
உண்டு போற்றிய வானவர்க்கு உயிர் அளித்த உம்பர் நாயகன் திருவாக்கில 
1156 
பிரணவம் உதித்தது அதன் இடை வேதம் பிறந்தன நைமி சாரணியத்து  
அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் அதிகரித்து அவற்றின்  
பொருள் நிலை தெரியாது உள்ளமும் முகமும் புலர்ந்தனர் இருப்பவர் போதத்  
இருள் மல வலி வென்றவன் அரபத்தன் என்று ஒரு வேதியன் வந்தான். 
1157 
வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து இறைஞ்சி வேறு இருக்கை  
தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம் நோக்கி ஈது உரைப்பான்  
பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன் ஆயினிர் நீவிர்  
சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி யாது என அவர் சொல்வார். 
1158 
மருள் படு மாயை கழிந்தவன் மொழிந்த மறை பயின்று உரை செய்தே சிகனன்  
இருள் படு மனத்தேம் இருத்து மாலைய யாது சூழ் இதற்கு எனக் கேட்ட  
தெருள் படு மனத்தோன் செப்புவான் வேதம் செப்பிய சிவபரம் சுடரே  
அருள் படி எடுத்துப் பொருளையும் உணர்த்தும் அல்லது சூழ்ச்சி யாது அறைவீர். 
1159 
பண்ணிய தவத்தால் அன்றி யாதானும் படுபொருள் பிறிது இலை தவமும்  
புண்ணிய தவத்தின் அல்லது பலியா புண்ணிய தவத்தினும் விழுப்பம்  
நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் அச் சிவ தலங்களினும்  
எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் இரும் தவம் எளிது உடன் பயக்கும். 
1160 
அத்தகு தலம் மற்று யாது எனில் உலக அகிலமும் தன் உடம்பு ஆன  
வித்தகன் சென்னிப் பன்னிரு விரல் மேல் விளங்கிய தலம் அது சீவன்  
முத்தராய் எண்ணில் வானவர் முனிவோர் முயன்று மா தவப் பயன் அடைந்து  
சித்தம் மாசு அகன்று வதிவது என்று அற நூல் செப்பிய மதுரை அந் நகரில். 
1161 
தௌ¤ தரு விசும்பின் இழிந்தது ஓர் விமான சிகாமணி அருகு தென் மருங்கின்  
முனிதரு பராரை வட நிழல் பிரியா முழுமுதல் வழி படும் அறவோர்க்கு  
களிதரு கருணை முகம் மலர்ந்து அளவா வரும் கலை அனைத்தையும் தௌ¤வித்து  
ஒளிதரும் அனைய மூர்த்தியே நுங்கட்கு ஓதிய மறைப் பொருள் உணர்த்தும். 
1162 
அங்கு அவன் திருமுன் அரும் தவ விரதம் ஆற்றுவான் செல்லுமின் என அப்  
புங்கவன் அருள் போல் வந்த மாதவன் பின் புனித மா முனிவரும் நங்கை  
பங்கவன் மதுரைப் பதி புகுந்து அம் பொன் பல் மணிக் கோயில் புக்கு ஆழிச்  
சங்கவன் கை போல் வளை செறி செம் பொன் தாமரைத் தடாக நீர் ஆடி. 
1163 
கரை கடந்து உள்ளம் கடந்த அன்பு உந்தக் கடிது போய் நான்கு இரு வெள்ளி  
வரை கள் தம் பிடரில் கிடந்த ஓர் மேரு வரை புரை விமானம் மேல் காணா  
உகைகள் தம் பொருளைக் கண்களால் கண்டு ஆங்கு உம்பர் தம் பிரானை நேர்கண்டு  
திரை கடந்திடும் பேர் இன்ப வாரியிலும் சேண் நிலத்திலும் விழுந்து எழுந்தார். 
1164 
கை தலை முகிழ்த்துக் கரசரணங்கள் கம்பிதம் செய்து கண் அருவி  
பெய் தலை வெள்ளத்து ஆழ்ந்து வாய் குழறிப் பிரமன் மால் இன்னமும் தேறா  
மை தழை கண்ட வெள்ளி மன்று ஆடும் வானவர் நாயக வானோர்  
உய்தர விடம் உண்டு அமுது அருள் புரிந்த உத்தம போற்றி என்று ஏத்தா. 
1165 
மறை பொருள் காணா உள்ளம் மால் உழந்து வாதிய எமக்கு நீயே அந்  
நிறை பொருளாகி நின்றனை அதற்கு நீ அலால் பொருள் பிறிதி யாது என்று  
இறைவனை இறைவன் பங்கில் அம் கயல் கண் இறைவியை அம் முறை ஏத்தி  
முறைவலம் செய்து வடநிழல் அமர்ந்த மூர்த்தி முன் எய்தினார் முனி வோர். 
1166 
சீதளப் பளிக்கு மேனியும் பளிக்குச் செழுமலை பதித்துப் பன்ன  
பாதமும் செவ்வாய் மலரும் முக்கண்ணும் பங்கயச் செம் கரம் நான்கும்  
வேத புத்தகமும் அமுத கும்பமும் தன் விழி மணி வடமும் மெய்ஞ்ஞான  
போதமும் திரையும் தரித்தது ஓர் தனிமைப் போதன் முன் தாழ்ந்து எழுந்து ஏத்தா. 
1167 
வடநிழல் அமர்ந்த மறை முதல் மேதா மனு எழுத்து இருபதும் இரண்டும்  
திடம் உற வரபத்தன் தன்னால் தௌ¤ந்து தேள் நிறை மதி முதல் அடைவில்  
படுமதி அளவும் தருப்பணம் ஓமம் பார்ப்பன உண்டி முப் போதும்  
அடைவுற நுவன்று நோற்கும் மாதவர் முன் அரு மறைப் பொருள் வெளிவரும் ஆல். 
1168 
மான முனிவோர் அதிசயிப்ப வட நீழல்  
மோன வடிவு ஆகிய முதல் குரவன் எண் நான்கு  
ஊனம் இல் இலக்கண உறுப்பு அகவை நான் நான்  
கான ஒரு காளை மறையோன் வடிவம் ஆகி. 
1169 
நீண்ட திரிமுண்டம் அழல் நெற்றி விழி பொத்தக்  
காண் தகைய கண்டிகை வளைந்து ஒழுகு காதில்  
பூண்ட குழை கௌவிய பொலன் செய் பல காசு  
சேண் தவழ் இளம் கதிர் சிரித்து அருள் சிதைப்ப. 
1170 
உத்தரிய வெண் படம் வலம் பட ஒதுங்க  
முத்த வள நூலினொடு முத்தம் இடை இட்டு  
வைத்து அணியும் அக்க வடம் மாலை எறி வாளால்  
பத்தரை மறைத்த மல பந்த இருள் சிந்த. 
1171 
கண்டிகை தொடுத்து இரு கரத்தினொடு வாகு  
தண்டின் இடு மாலை விட வாள் அரவு தள்ள  
வெண் துகிலின் ஆன விரி கோவண மருங்கில்  
தண்டரிய பட்டிகை வளைந்து ஒளி தழைப்ப. 
1172 
வண்டு வரி பாடுவன போல மலர் பாத  
புண்டரிக மேல் உழல் சிலம்புகள் புலம்பத்  
தொண்டர் அக மாசு இருள் துணித்து முடி சூட்டும்  
முண்டக மலர்ப்புறம் விறல் கழல் முழங்க. 
1173 
ஏதம் இல் பவித்திரம் வலக்கரன் இமைப்பப்  
போதம் வரை புத்தகம் இடக்கையது பொற்ப  
ஒதி உணராதல் அறி ஓலம் இடும் வேதம்  
பாது கைகள் ஆகி இரு பாத மலர் சூட. 
1174 
கன்ன முளரிக் குள் முரல் கானை அறு கால  
புள் ஒலியின் நாவும் இதமும் புடை பெயர்ந்து  
துள்ள எழு வேத ஒலி தொண்டர் செவி ஆற்றால்  
உள்ள வயல்புக்கு வகை ஒண் பயிர் வளர்ப்ப. 
1175 
சீதமணி மூரல் திரு வாய் சிறிது அரும்ப  
மாதவர்கள் காண வெளி வந்து வெளி நின்றான்  
நாத முடிவாய் அளவினான் மறையின் அந்த  
போத வடிவாகி நிறை பூரண புராணன். 
1176 
வட்ட வாண்மதி கண்டு ஆர்க்கும் மூவாக் கடல் மான மாண்ட  
சிட்டர் ஆம் முனிவர் காளைத் தேசிக வடிவம் நோக்கி  
ஒட்டு அறா உவகை வெள்ளம் மேற் கொள உருத்த கூற்றை  
அட்டதாமரை தம் சென்னிக்கு அணி மலர் ஆகத் தாழ்ந்தார். 
1177 
அள வறு கலைகட்கு எல்லாம் உறைவிடம் ஆகி வேத  
விளை பொருள் ஆகி நின்ற வேதிய சரணம் என்ற  
வளை உறு மனத்தினாரைத் தேசிக வள்ளல் நோக்கிப்  
பளகறு தவத்தீர் வேட்கை யாது எனப் பணிந்து சொல்வார். 
1178 
அடியரே உய்யும் ஆறு உலகு எலாம் அளிக்கும் ஆறும்  
படியிலா வரத்த வேதப் பயன் அருள் செய்தி என்னக்  
கொடிய மா பாசம் தீர்ப்பான் குரவன் நம் முனிவரோடு  
முடிவுஇலா இலிங்கம் முன்போய் மறைப் பொருள் மொழிவது ஆனான். 
1179 
அந்தணிர் கேண்மின் சால அருமறைப் பொருள்கள் எல்லாம்  
மந்தணம் ஆகும் இந்த மறைப் பொருள் அறிதல் தானே  
நந்தல் இல்லாத போகப் பயனுக்கு நலியும் பாச  
பந்தனை கழிக்கும் வீட்டின் பயனுக்கும் கருவி ஆகும். 
1180 
உத்தம சயம்புக்கு உள்ளும் உத்தம தரமாய் மேலாம்  
தத்துவம் ஆகும் இந்த சுந்தர சயம்பு லிங்கம்  
நித்தம் ஆய் மறைகட்கு எல்லாம் நிதானம் ஆம் பொருளாய் உண்மைச்  
சுத்த அத்து விதம் ஆன சுயம் பிரகாசம் ஆகும். 
1181 
நிறை பாரற் பரம் விஞ்ஞான நிராமயம் என்று நூல்கள்  
அறை பரம் பிரமம் ஆகும் இதன் உரு ஆகும் ஏக  
மறை இதன் பொருளே இந்தச் சுந்தர வடிவாய் இங்ஙன்  
உறைசிவ லிங்கம் ஒன்றெ என்பர் நூல் உணர்ந்த நல்லோர். 
1182 
ஆகையால் மறையும் ஒன்றே அருமறைப் பெருளும் ஒன்றே  
சாகையால் அந்தம் ஆகித் தழைத்த அச் சாகை எல்லாம்  
ஓகையால் இவனை ஏத்தும் உலகு தாயாதிக்கு ஈந்த  
ஏகன் ஆணையின் ஆன் மூன்று மூர்த்தியாய் இருந்தான் அன்றே.                                
1183 
மலர் மகனாகி மூன்று வையமும் படைத்து மாலாய்  
அலைவற நிறுத்தி முக்கண் ஆதியாய் ஆழித்தம் மூவர்  
தலைவனாய் பரமாகாச சரீரியாய் முதல் ஈறு இன்றித்  
தொலை வரும் சோதி ஆம் இச் சுந்தர இலிங்கம் தன்னில். 
1184 
ஆதி இலான் மதத்துவம் ஆன அலர் மகன் பாகமும் நடுவில்  
நீதியில் விச்சா தத்துவம் ஆன நெடியவன் பாகமும் முடிவில்  
ஓதிய சிவத் தத்துவம் எனலாம் ஆன உருத்திர பாகமும் உதிக்கும்  
பேதி இம் முன்றில் எண்ணில் தத்துவங்கள் பிறக்கும் இம் மூன்றினும் முறையால். 
1185 
ஓத அரும் அகார உகாரமே மகாரம் உதித்திடும் பிரணவம் விந்து  
நாதமோடு உதிக்கும் வியத்த தாரகத்தின் அல்ல காயத்திரி மூன்று  
பேதம் ஆம் பதத்தால் பிறக்கும் இக் காயத்திரி இருபேதம் ஆம் பேதம்  
யாது எனில் சமட்டி வியட்டி என்று இரண்டும் ஏது ஆம் வேட்டவை எல்லாம். 
1186 
இன்னவை இரண்டும் இவன் அருள் வலியால் ஈன்ற நான் மறையை அந் நான்கும்  
பின்னவன் அருளால் அளவு இல ஆன பிரணவம் ஆதி மந்திரமும்  
அன்னவாறு ஆன தாரகத் தகாரம் ஆதி அக்கரங்களும் உதித்த  
சொன்ன அக் கரத்தில் சிவாகம நூல் இச் சுரவன் நடுமுகத்தில் உதித்த. 
1187 
கீட்டிசை முகத்து ஒன்று அடுத்த நால் ஐந்தில் கிளைத்தது ஆல் இருக்க அது தென்பால்  
ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது வடதிசை முகத்தில்  
நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை முகத்தில்  
நாட்டிய ஒன்பது உருவொடு கிளைத்து நடந்தது நான்கு அதாம் மறையே. 
1188 
அருமறை நால் வேறு ஆகையால் வருண ஆச்சிரமங்களும் நான்காம்  
தருமம் ஆகதி கருமமும் மறையின் தோன்றின மறையும்  
கரும நூல் ஞான நூல் என இரண்டாம் கரும நூல் இவன் அருச்சனைக்கு  
வரும் வினை உணர்த்து ஞான நூல் இவன் தன் வடிவு இலா வடிவினை உணர்த்தும். 
1189 
முதல் நுகர் நீரால் சினை குழைத் தாங்கி இம் முழு முதல் கருத்து நல் அவியின்  
பதம் இவன் வடிவப் பண்ணவர் பிறர்க்கும் திருத்தி யாம் பரன் இவன் முகத்தின்  
விதம்உறு நித்தம் ஆதி மூவினைக்கும் வேண்டி ஆங்கு உலகவர் போகம்  
கதி பெற இயற்றும் சிவார்ச்சனை வினைக்கும் காரணம் இச் சிவ கோசம். 
1190 
மறைபல முகம் கொண்ட அறிவாய் இளைத்து மயங்க வேறு அகண்ட பூரணமாய்  
நிறை பரம் பிரமம் ஆகும் இக் குறியைக் கரும நன்னெறி வழாப் பூசை  
முறையினும் ஞான நெறி இனிப் பொருளை அருளினான் முயக்குஅற முயங்கும்  
அறி வினும் தௌ¤வது உமக்கு நாம் உரைத்த அருமறைப் பொருள் பிறர்க்கு அரிது ஆல். 
1191 
கருமத்தான் ஞானம் உண்டாம் கருமத்தைச் சித்த சுத்தி  
தருமத்தால் இகந்த சித்த சுத்தியைத் தருமம் நல்கும்  
அருமைத்து ஆம் தருமத்தாலே சாந்தி உண்டகும் ஆண்ட  
பெருமைத்து ஆம் சாந்தியாலே பிறப்பது அட்டாங்க யோகம். 
1192 
கிரியையான் ஞானம் தன்னால் கிளர் சிவ பத்தி பூசை  
தரிசனம் சைவ லிங்க தாபனம் செய்தல் ஈசற்கு  
உரிய மெய் அன்பர் பூசை உருத்திர சின்னம் தாங்கல்  
அரிய தேசிகன் பால் பத்தி அனைத்தையும் தெரியல் ஆகும். 
1193 
மறைவழி மதங்கட்கு எல்லாம் மறை பிரமாணம் பின்சென்ற  
அறைதரு மிருதி எல்லாம் அவைக்கனு குணம் ஆம் இன்ன  
முறையின் ஆன் மார்த்தம் என்று மொழிவ தம்மார்த்தம் சேர்ந்த  
துறைகள் வைதிகம் ஆம் ஏலாச் சொல்வது இச் சுத்த மார்க்கம். 
1194 
தெருள் பெறு போகம் வீடு காரணமாய் சிவமயம் ஆம் மறைப் பொருளை  
இருள்கெட உரைத்தேம் இப் பொருட்கு அதிகம் இல்லை இப் பொருள் எலாம் உமக்கு  
மருள் கெடத் தெளிவதாக என வினைய வழி வழா மாதவர் புறத்தை  
அருள் கையால் தடவி இலிங்கத்துள் புகுந்தான் அருள் பழுத்தன்ன தேசிகனே. 
 
வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் சுபம் 
 

17. மாணிக்கம் விற்ற படலம்

 
 
1195 
சுகந்த வார் பொழில் மதுரை எம் பிரான் தனது துணைத்தாள்  
உகந்த வாவறு கண்ணுவ முனி முதல் ஓதும்  
அகந்த வாத பேர் அன்பருக்கு அருமறைப் பொருளைப்  
பகர்ந்த வாறு இது மாணிக்கம் பகர்ந்த வா பகர்வாம். 
 
1196 
அன்ன நாள் வயின் வீரபாண்டியற்கு அணங்கு அனைய  
மின் அனார் உளைம் போகமும் விளைநிலம் அனைய  
பொன் அனார் பெறு காளையர் ஐங்கணைப் புத்தேள்  
என்ன வீறினார் வான் பயிர்க்கு எழுகளை என்ன. 
1197 
பின்னரும் பெறல் குமரனைப் பெறுவது கருதி  
மன்னனும் குலத்தேவியும் கயல் கணி மணாளன்  
தன்னை நோக்கி அட்டமி சதுர்த்தசி மதிவாரம்  
இன்ன நோன்பு நோற்று ஒழுகுவார் இறை வனின் அருளால். 
1198 
சிறிது நாள் கழிந்து அகன்ற பின் கங்கையில் சிறந்த  
மறுவிலா வடமீன் புரை கற்பினாள் வயிற்றில்  
குறிய ஆல வித்து அங்குரம் போன்று ஒரு குமரன்  
நிறையும் நீர் உலகு உருட்டு குடை நிழற்ற வந்து உதித்தான். 
1199 
அத்தன் இச்சிறு குமரனுக்கு அகம் களி சிறப்ப  
மெய்த்த நூல் முறை சாதக வினை முதல் வினையும்  
வைத்த நான் பொலிவுஎய்து நாள் மன்னவன் ஊழ் வந்து  
ஒத்த நாள் வர வேட்டைபுக்கு உழுவை கோள் பட்டாள். 
1200 
வேங்கை வயப்பட்டு மீனவன் விண் விருந்து ஆக  
வாங்குநூல் மருங்கு இறக்கரம் மார்பு எறிந்து ஆரம்  
தாங்கு கொங்கை சாந்து அழிந்திட தடம் கண் முத்து இறைப்ப  
ஏங்க மாதர் பொன் நகர் உளார் யாவரும் இரங்க. 
1201 
மற்ற வேலைக் காமக் கிழத்தியர் பெறு மைந்தர்  
அற்றம் நோக்கி ஈது அமயம் என்று ஆனை மா ஆதி  
உற்ற பல் பிற பொருள் நிதி ஒண் கலனோடும்  
கொற்ற மோலியும் கவர்ந்தனர் கொண்டு போய் மறைந்தார். 
1202 
மன்னன் ஆணை ஆறு ஒழுகிய மந்திரக் கிழவர்  
மின்னு வேல் இளம் குமரனைக் கொண்டு விண் அடைந்த  
தென்னர் கோமகற்கு இறுதியில் செய்வினை நிரப்பி  
அன்ன காதலற்கு அணி முடி சூட்டுவான் அமைந்தார். 
1203 
நாடிப் பொன் அறை திறந்தனர் நவமணி மகுடம்  
தேடிக் கண்டிலர் நிதி சில கண்டிலர் திகைத்து  
வாடிச் சிந்தை நோய் உழந்து இது மாற்றலர் கூட்டு உண்டு  
ஓடிப் போயினது ஆகும் என்று உணர்ந்து இது நினைவார். 
1204 
வேறு மா முடி செய்தும் ஆல் என்னினோ விலை மிக்கு  
ஏறுமா மணி இலை அரசு இருக்கையின்றி இன்றேல்  
ஏறு நீர் உல கலையும் என் செய்தது இங்கு என்னா  
ஆறு சேர் சடையார் அருள் காண்டும் என்று அமைச்சர்.                                   
 
1205 
கரை செயாப் பெரும் கவலை சூழ் மனத்தராய்க் கறங்கும்  
முரசு கண் படாக் கடிமனை முற்ற நீத்து அருமை  
அரசு இளம் தனிக் கொழுந்தினைக் கொண்டு போய் அம்பொன்  
வரை செய் கோபுர வாயின் முன் வருகுவார் வருமுன். 
 
1206 
எற்ற தும்பு கோவண உடை இடம்படக் பிறங்கத்து  
உற்ற பல் கதிர் மணிப் பொதி சுவன் மிசைத் தூங்க  
மல் தடம் புய வரை மிசை வரம்பு இலா விலைகள்  
பெற்ற வங்க தம் பரிதியில் பேர்ந்து பேர்ந்து இமைப்ப 
1207 
மந்திரப் புரி நூலது வலம்படப் பிறழ  
இந்திரத் திரு வில் என ஆரம் மார்பு இலங்கச்  
சுந்தரக்குழை குண்டலம் தோள் புரண்டு ஆடத்  
தந்திரம் தரு மறை கழி தாள் நிலம் தோய. 
1208 
பொன் அவிர்ந்து இலங்கு கோபுரம் முன் போதுவார்  
முன்னவர் துனிவு கூர் முன்ன நீக்கிய  
தென்னவர் குலப் பெரும் தெய்வம் ஆகிய  
மன்னவர் வணிகராய் வந்து தோன்றினார். 
1209 
வந்தவர் எதிர்வருவாரை மம்மர் கொள்  
சிந்தையர் ஆய் வரு செய்தி யாது என  
முந்தை இல் விளைவு எலாம் முறையில் கூறினார்க்கு  
எந்தை ஆம் வணிகர் ஈது இயம்புவார் அரோ. 
1210 
என் படர் எய்து கின்றீர்கள் என் வயின்  
ஒன்பது மணிகளும் உள்ள ஆல் அவை  
பொன் பதினாயிரம் கோடி போன என்று  
அன்புற மணி எலாம் அடைவில் காட்டுவார். 
1211 
இருந்தனர் கீழ்த்திசை நோக்கி இட்டது ஓர்  
கரும் துகின் நடுவும் இந்திராதி காவலர்  
அரும் திசை எட்டினும் அடைவு இல் செம்மணி  
பெரும் தண் முத்து ஆதி எண் மணியும் பெய்தரோ. 
1212 
இம் மணி வலன் உடல் சின்னம் என்ன அக்  
கைம் மறி கரந்தவர் கூறக் கற்றநூல்  
செம் மதி அமைச்சர் அச் செம்மல் யார் அவன்  
மெய்ம் மணி ஆயது என் விளம்புக என்னவே. 
1213 
மேவரும் வலன் எனும் அவுணன் மேலை நாள்  
மூவரின் விளங்கிய முக்கண் மூர்த்தி செம்  
சேவடி அருச்சனைத் தவத்தின் செய்தி ஆல்  
ஆவது வேண்டும் என்று இறைவன் கூறலும். 
1214 
தாழ்ந்து நின்று இயம்பும் யான் சமரில் யாரினும்  
போழ்ந்து இறவா வரம் புரிதி ஊழ்வினை  
சூழ்ந்து இறந்தால் என் மெய் துறந்த மாந்தரும்  
வீழ்ந்திட நவமணி ஆதல் வேண்டும் ஆல். 
1215 
என்று வேண்டலும் வரம் ஈசன் நல்கினான்  
அன்று போய் அமர் குறித்து அமரர் கோனொடு  
சென்று போர் ஆற்றலும் தேவர் கோன் எதிர்  
நின்று போர் ஆற்றலன் நீங்கிப் போயினான். 
1216 
தோற்று வான் நாடவன் மீண்டு சூழ்ந்து அமர்  
ஆற்றினும் வெல்லரி அழிவு இலா வரம்  
ஏற்றவன் ஆதலால் இவனைச் சூழ்ச்சியால்  
கூற்றின் ஊர் ஏற்றுதல் குறிப்பு என்று உன்னியே. 
1217 
விடம் கலுழ் படைக்கலன் இன்றி விண்ணவர்  
அடங்கலும் தழீஇக் கொள அடுத்துத் தானவ  
மடங்கலை வருக என நோக்கி வானவக்  
கடம் கலுழ் யானை போல் கரைந்து கூறுவான். 
1218 
விசைய நின் தோள் வலி வென்றி வீக்கம் எத்  
திசையினும் பரந்த அச்சீர்த்தி நோக்கி உண்  
நசை அறா மகிழ்ச்சியால் நல்குவேன் உனக்கு  
இசைய வேண்டிய வரம் யாது கேள் என. 
1219 
கடிபடு கற்பக நாடு காவலோன்  
நொடி உரை செவித்துளை நுழைத் தானவன்  
நெடிய கை புடைத்து உடன் நிமிர்ந்து கார்படும்  
இடி என நகைத்து இகழ்ந்து இனைய கூறுவான். 
1220 
நன்று இது மொழிந்தார் யாரும் நகைக்க நீ எனை வெம் கண்ட  
வென்றியும் அதனால் பெற்ற புகழும் நின் வீறு பாடும்  
இன்று நின் போரில் காணப்பட்ட வேய் இசை போய் எங்கும்  
நின்றதே இது போல் நின்கை வண்மையும் நிற்பது அன்றோ. 
1221 
ஈறு இலான் அளித்த நல்ல வரம் எனக்கு இருக்க நின்பால்  
வேறு நான் பெறுவது உண்டோ வேண்டுவது உனக்குயாது என்பால்  
கூறு நீ அதனை இன்னே கொடுக்கலேன் ஆகி நின் போல்  
பாறு வீழ் கனத்தில் தோற்ற பழிப்புகழ் பெறுவன் என்றான். 
1222 
மாதண்ட அவுணன் மாற்றம் மகபதி கேட்டு வந்து  
கோதண்ட மேருக் கோட்டிக் கொடும் புரம் பொடித்தான் வெள்ளி  
வேதண்டம் எய்தி ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் நீ அப்போது  
அண்டர்க் கூட்ட வா வாய்ப் போது வாய் வல்லை என்றான். 
1223 
அன்று ஒரு தவத்தோன் என்பு வச்சிரம் ஒன்றெ ஆக  
ஒன்றிய கொடையால் பெற்ற புகழ் உடம்பு ஒன்றெ என்போல்  
வென்றியினாலும் ஈயா மெய் எலாம் மணிகள் ஆகப்  
பொன்றிய கொடையினாலும் புகழ் உடம்பு இரண்டு உண்டாமே. 
1224 
மேலவன் அல்லை நீயே நட்டவன் மேலை வானோர்  
யாவரும் அருந்தும் ஆற்றால் அறம் புகழ் எனக்கே ஆக  
ஆ உரு ஆதி என்றாய் அன்னதே செய்வேன் என்றான்  
ஈவதே பெருமை அன்றி இரக்கின்றது இழிபே அன்றோ. 
1225 
அதற்கு இசைந்து அவுணர் வேந்தன் அமரர் வேந்து அதனை முன்போக்கி  
மதர்க் கடும் குருதிச் செம்கண் மைந்தனுக்கு இறைமை ஈந்து  
முதல் பெரும் கலை ஆம் வேத மொழி மரபு அமைந்த வானாய்ப்  
புதர்க்கடு வேள்விச் சாலை புறத்து வந்து இறுத்து நின்றான். 
1226 
வாய்மையான் மாண்ட நின்போல் வள்ளல் யார் என்று தேவர்  
கோமகன் வியந்து கூறத் தருக்கு மேல் கொண்டு மேரு  
நேமியோடு இகலும் இந்த வரை என நிமிர்ந்து வேள்விக்கு  
ஆம் எனை யூபத்தோடும் யாம் இன்று எடுத்து நின்றான். 
1227 
யாத்தனர் தருப்பைத் தாம்பால் ஊர்ணையால் யாத்த சிங்கப்  
போத்து என நின்றான் வாயைப் புதைத்து உயிர்ப்பு அடங்க வீட்டி  
மாய்த்தனர் மாய்ந்த வள்ளல் வலனும் மந்தார மாரி  
தூர்த்திட விமானம் ஏறித் தொல் விதி உலகம் சேர்ந்தான்.                                    
1228 
மணித்தலை மலையின் பக்கம் மாய்த்தவன் வயிர வேலால்  
பிணித்து உயிர் செகுத்த வள்ளல் பெரும் தகை ஆவாய் வேதம்  
பணித்திடும் வபையை வாங்கிப் படர் எரி சுவை முன் பார்க்கக்  
குணித்த வான் நாடார் கூட்டிக் கோது இலா வேள்வி செய்தான். 
1229 
அத்தகை ஆவின் சோரி மாணிக்கம் ஆம் பல் முத்தம்  
பித்தை வைடூயம் என்பு வச்சிரம் பித்தம் பச்சை  
நெய்த்த வெண் நிணம் கோமேதந் தசை துகிர் நெடும் கண் நீலம்  
எய்த்தவை புருடராகம் இவை நவ மணியின் தோற்றம். 
1230 
இவ் வடிவு எடுத்துத் தோன்றி இருள் முகம் பிளப்பக் காந்தி  
தைவரு மணி ஒன்பானும் சார்விட நிறங்கள் சாதி  
தெய்வத ஒளி மாசு எண்ணி சோதனை செய்து தேசும்  
மெய்வர அணிவோர் எய்தும் பயன் இவை விதியால் கேண்மின். 
1231 
வாள் அவர் மாணிக்கம் கிரேத உகம் நான்கும் வழியே மக்கம்  
காளபுரம் தும்புரம் சிங்களம் இந் நான்கு இடைப் படும் அக்கமல ராகம்  
ஆளுநிற ஒன்பது அரவிந்த மாதுளம் பூ இத் தழல் கல் ஆரம்  
கோள் அரிய அச் சோத நரந்த நறும் பலம் தீபம் கோபம் என்ன. 
1232 
இந்நிறத்த பொது வாய மாணிக்கம் மறையவர் முன்னிய நால் சாதி  
தன் இயல்பால் சாதரங்கம் குருவிந்தம் சௌகந்தி கங்கோ வாங்கம்  
என்னும் இவற்றால் சிறந்து நான்கு ஆகும் இவ் அடைவே இந் நான்கிற்கும்  
சொன்ன ஒளி பத்து இரு நான்கு இரு முன்று நான்கு அவையும் சொல்லக் கேண்மின். 
1233 
சாதரங்க நிறம் கமலம் கரு நெய்தல் இரவி ஒளி தழல் அச் சோதம்  
மாதுளம் போது அதன் வித்துக் கார் விளக்குக் கோபம் என வகுத்த பத்தும்  
மேதகைய குருவிந்த நிறம் குன்றி முயல் குருதி வெள்ளம் ஓத்தம்  
போது பலா சலர் திலகம் செவ் அரத்தம் விதார மெரி பொன் போல் எட்டு. 
 
1234 
களி தரு சௌகந்திகத்தின் இற இலவம் போது குயில் கண் அசோகம்  
தளிர் அவிர் பொன் செம்பஞ்சியை வண்ணம் என ஆறு தகுதோ வாங்க  
ஒளி குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி என ஒருநான்கு அந்த  
மிளிர் பதும ராகத்தைப் பொதுமையினால் சோதிக்க  வேண்டும் எல்லை. 
1235 
திண்ணிய தாய் மேல் கீழ் சூழ் பக்கம் உற ஒளிவிடுதல் செய்தால் செவ்வே  
அண்ணிய உத்தமம் முதல் மூன்று ஆம் என்பர் சாதரங்கம் அணிவோர் விச்சை  
புண்ணியவான் கன்னி அறுசுவை அன்ன முதலான புனித தானம்  
பண்ணியதும் பரிமேத யாகம் முதல் மகம் புரிந்த பயனும் சேர்வர். 
1236 
குருவிந்தம் தரிப்பவர் பார் முழுதும் ஒரு குடை நிழலில் குளிப்ப ஆண்டு  
திருவிந்தை உடன் இருப்பர் சௌகந்திகம் தரிப்போர் செல்வம் கீர்த்தி  
மருவிந்தப் பயன் அடைவர் கோவங்கம் தரிப்போர் தம் மனையில் பாலும்  
பெரு விந்தம் எனச் சாலி முதல் பண்டம் உடன் செல்வப் பெருக்கும் உண்டாம். 
1237 
எள்ளி இடும் குற்றம் எலாம் இகந்து குணன் ஏற்று ஒளிவிட்டு இருள் கால் சீத்துத்  
தள்ளிய இச் செம்பது மராகம் அது புனை தக்கோர் தம்பால் ஏனைத்  
தௌ¢ளிய முத்து உள்ளிட்ட பன் மணியும் வந்து ஓங்கும் செய்யா ளோடும்  
ஒள்ளிய நல் செல்வம் அதற்கு ஒப்ப நெடு பால் கடலின் ஓங்கும் மாலோ. 
1238 
பிற நிறச் சார்பு உள்ளி புள்ளடி பிறங்கு கீற்று  
மறு அறு தராசம் என்ன வகுத்த ஐம் குற்றம் தள்ளி  
அறை தரு பண்பு சான்ற அரதன மணியும் வேந்தன்  
செறுநர் வாள் ஊற்றம் இன்றிச் செரு மகட்கு அன்பன் ஆவான். 
1239 
குறுநிலக் கிழவனேனும் அவன் பெரும் குடைக்கீழ்த் தங்கி  
மறுகுநீர் ஞாலம் எல்லாம் வாழும் மற்று அவனைப் பாம்பு  
தெறு விலங்கு அலகை பூதம் சிறு தெய்வம் வறுமை நோய் தீக்  
கருவு கொள் கூற்றச் சீற்றம் கலங்கிட ஆதி ஆவாம். 
1240 
முன்னவர் என்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம்  
மன்னவர் என்ப துப்பு மாணிக்கம் வணிகர் என்ப  
மின் அவிர் புருடராகம் வயிடூரியம் வெயில் கோ மேதம்  
பின்னவர் என்ப நீல மரகதம் பெற்ற சாதி. 
1241 
பார்த்திபர் மதிக்கும் முத்தம் பளிங்கு அன்றி பச்சை தானும்  
சாத்திகம் துகிர் மாணிக்கம் கோமேதம் தாமே அன்றி  
மாத் திகழ் புருடராகம் வயிடூயம் வயிரம் தாமும்  
ஏத்திரா சதமா நீலம் தாமதம் என்பர் ஆய்ந்தோர். 
1242 
இனையவை அளந்து கண்டு மதிக்கும் நாள் எழு மான் பொன்தேர்  
முனைவ நாள் முதல் ஏழின் முறையினால் பதுமராகம்  
கனை கதிர் முத்தம் துப்புக் காருடம் புருடராகம்  
புனை ஒளி வயிரம் நீலம் என் மனார் புலமை சான்றோர். 
1243 
வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கும் ஆகும்  
மையறு திங்கள் தானே வயிடூரிய மணிக்கும் ஆகும்  
ஐயற இவை ஒன்பானும் ஆய்பவர் அகம் புறம்பு  
துய்யராய் அறவோராய் முன் சொன்ன நாள் அடைவே ஆய்வர். 
1244 
அல்லி அம் பதுமம் சாதி அரத்தவாய் ஆம்பல் கோடல்  
வல்லி சேர் மௌவல் போது நூற்று இதழ் மரை கால் ஏயம்  
மெல் இதழ்க் கழுநீர் பேழ்வாய் வெள்ளை மந்தாரம் இன்ன  
சொல்லிய முறையால் வண்டு சூழத்தன் முடிமேல் சூடி. 
1245 
தலத்தினைச் சுத்தி செய்து தவிசினை இட்டுத் தூய  
நலத்துகில் விரித்துத் தெய்வ மாணிக்கம் நடுவே வைத்துக்  
குலத்த முத்து ஆதி எட்டும் குணதிசை முதல் எண் திக்கும்  
வலப்பட முறையே பானு மண்டலம் ஆக வைத்து. 
1246 
அன்பு உறு பதுமராகம் ஆதி ஆம் அரதனங்கள்  
ஒன்பதும் கதிரோன் ஆதி ஒன்பது கோளும் ஏற்றி  
முன்புரை கமலப் போது முதல் ஒன்பான் மலரும் சாத்தி  
இன்புற நினைந்து பூசை இயல் முறை வழாது செய்தல். 
 
1247 
தக்க முத்து இரண்டு வேறு தலசமே சலசம் என்ன  
இக் கதிர் முத்தம் தோன்றும் இடம் பதின் மூன்று சங்கம்  
மைக் கரு முகில் வேய் பாம்பின் மத்தகம் பன்றிக்கோடு  
மிக்க வெண் சாலி இப்பி மீன் தலை வேழக் கன்னல். 
 
1248 
கரி மருப்பு பைவாய் மான்கை கற்பு உடை மடவார கண்டம்  
இரு சிறைக் கொக்கின் கண்டம் எனக் கடை கிடந்த மூன்றும்  
அரியன ஆதிப்பத்து நிறங்களும் அணங்கும் தங்கட்கு  
உரியன நிறுத்தவாறே ஏனவும் உரைப்பக் கேண்மின். 
 
1249 
மாட வெண் புறவின் முட்டை வடிவு எனத் திரண்ட பேழ் வாய்  
கோடு கான் முத்தம் வெள்ளை நிறத்தன கொண்மூ முத்தம்  
நீடு செம் பரிதி அன்ன நிறத்தது கிளை முத்து ஆலிப்  
பீடு சால் நிறத்த அராவின் பெரு முத்தம் நீலத்து ஆம் ஆல். 
1250 
ஏனமா வாரம் சோரி ஈர்ஞ் சுவை சாலி முத்தம்  
ஆனது பசுமைத்து ஆகும் பாதிரி அனையது ஆகும்  
மீனது தரளம் வேழம் இரண்டினும் விளையும் முத்தம்  
தான் அது பொன்னின் சோதி தெய்வதம் சாற்றக் கேண்மின். 
1251 
பால் முத்தம் வருணன் முத்தம் பகன் முத்தம் பகலோன் முத்தம்  
மான் முத்தம் நீல முத்தம் மாசு அறுகுருதி முத்தம்  
கான் முத்தம் பசிய முத்தம் காலன்தன் முத்தம் தேவர்  
கோன் முத்தம் பொன் போல் முத்தம் குணங்களும் பயனும் சொல்வாம். 
1252 
உடுத்திரள் அனைய காட்சி உருட்சி மாசு இன்மை கையால்  
எடுத்திடில் திண்மை பார்வைக்கு இன்புறல் புடிதம் என்ன  
அடுத்திடு குணம் ஆறு இன்ன அணியின் மூது அணங்கோடு இன்மை  
விடுத்திடும் திருவந்து எய்தும் விளைந்திடும் செல்வம் வாழ்நாள். 
1253 
மாசு அறு தவத்தோன் என்பும் வலாசுரன் என்பும் வீழ்ந்த  
கோசலம் ஆதி நாட்டில் பட்டது குணத்தான் மாண்ட  
தேசதாய் இலேசது ஆகித் தௌ¢ளிதாய் அளக்கின் எல்லை  
வீசிய விலையது ஆகி மேம்படு வயிரம் தன்னை. 
1254 
குறுநிலத்து அரசும் தாங்கில் குறைவுதிர் செல்வம் எய்தி  
உறுபகை எறிந்து தம் கோன் முழுது உலகு ஓச்சிக் காக்கும்  
வருமை நோய் விலங்கு சாரா வரைந்த நாள் அன்றிச் செல்லும்  
கறுவு கொள் குற்றம் பூதம் கணங்களும் அணங்கும் செய்யா. 
1255 
மா மணி மரபுக்கு எல்லாம் வயிரமே முதன்மைச் சாதி  
ஆம் என உரைப்பர் நூலோர் அதிகம் யாது என்னின் ஏனைக்  
காமரு மணிகட்கு எல்லாம் தமர் இடு கருவி ஆம் அத்  
தூமணி தனக்குத் தானே துளை இடும் கருவி ஆகும். 
1256 
மரகதத் தோற்றம் கேண்மின் வலாசுரன் பித்தம் தன்னை  
இரை தமக்கு ஆகக் கௌவிப் பறந்தபுள் ஈர்ந்த தண் டில்லித்  
தரை தனில் சிதற வீழ்ந்த தங்கிய தோற்றம் ஆகும்  
உரைதரு தோற்றம் இன்னும் வேறு வேறு உள்ள கேண்மின். 
1257 
விதித்த வேல் அனைய வாள்கண் வினதை மாது அருணச் செல்வன்  
உதித்தவான் முட்டை ஓட்டை உவண வேல் தரையில் யாப்பக்  
கதிர்த்தவோடு அரையில் தப்பி வீழ்ந்து ஒரு கடல் சூழ் வைப்பில்  
உதித்தவாறு ஆகும் இன்னும் உண்டு ஒரு வகையால் தோற்றம். 
1258 
முள்ளரை முளரிக் கண்ணன் மோகினி அணங்காய் ஓட  
வள்ளரை மதியம் சூடி மந்தர வரை மட்டாகத்  
துள் இள அரி ஏறு போலத் தொடர்ந்து ஒரு விளையாட்டாலே  
எள் அரிதாய செந்தி இந்தியக் கலனம் செய்தன். 
1259 
அப் பொழுது அமலன் வித்தில் அரிகரகுமரன் கான  
வைப்புரை தெய்வத் தோடும் வந்தனன் அந்த விந்து  
துப்புரு கருடன் கௌவிக் கடலினும் துருக்க நாட்டும்  
பப்புற விடுத்தவாறே பட்டது கலுழப் பச்சை. 
1260 
காடமே சுப்பிரமே காளம் எனக் குணம் மூன்றாம் கருடப் பச்சைக்  
கீட அறுகின் இதழ் நிறத்த காடம் அது சாதியினால் இரு வேறு ஆகும்  
சாடரிய சகுணம் எனச் சதோடம் என அவை இரண்டில் சகுணம் ஆறாம்  
பீடுபெறு காடமொடு முல்ல சிதம் பேசல் அம்பித் தகமே முத்தம். 
1261 
புல்லரிய பிதுகம் என இவை ஆறில் காடமது புல்லின் வண்ணம்  
உல்லசித மெலிதாகும் பேசலமே குளச் செந்நெல் ஒண்தரளம் போலும்  
அல் அடரும் பித்தகாம பசுங்கிளியின் சிறை நிறத்தது ஆகும் முத்தம்  
குல்லை நிறம் பிதுகம் மரை இலையின் நிறம் சதோடத்தின் குணன் ஐந்தாகும். 
1262 
தோடலே சாஞ்சிதமே துட்டமே தோட மூர்ச்சிதமே சிதமே வெய்ய  
தோடலே சத்தினொடு சூழ் மந்த தோடம் எனத் தொகுத்த ஐந்தில்  
தோடலே சாஞ்சி தஞ்சம் பிரவிலையா மலரி இலை துட்ட நீலத்  
தோடதாம் புல்லின் நிறம் தோட மூர்ச்சித முளரி தோடலேசம். 
1263 
மந்த தோடம் கலப மயில் இறகின் நிறமாம் இவ் வகுத்த தோடம்  
சிந்த வான் ஆதகுண மணி அணிவோர் நால் கருவிச் சேனைவாழ்நாள்  
உந்த வாழ் ஆர்வலன் கண் நீலம் இரண்டு அரன் கண்டத்து ஒளிவிட்டு ஓங்கும்  
இந்திர நீலம் தான் மா நீலம் என வேறு இரண்டு  உண்டு இன் நீலம். 
1264 
முந்தியவிந்திர நீலம் விச்சுவ ரூபனை மகவான் முடித்த நாளின்  
நந்தி அடு பழி தவிர்ப்பான் புரியும் மகப் பரிமகத்தின் அறிய தூமம்  
உந்தி அரும் பரி இமையா நாட்ட நுழைந்து அளி சேற்றின் ஒழுகும் பீளை  
சிந்திய ஆற்றிடைப் படும் ஒன்றி இந்திர வில் நிலம் எனத் திகழும் நீலம். 
1265 
சஞ்சை ஆம் பகல் கடவுள் மனைவி அவள் கனல் உடலம் தழுவல் ஆற்றா  
அஞ்சுவாள் தன் நிழலைத் தன் உருவா நிறுவி வனம் அடைந்து நோற்க  
விஞ்சையால் அறிந்து இரவி பின்தொடர மாப் பரியா மின்னைத் தானும்  
செஞ்செவே வயப்பரியாய் மையல் பொறாது இந்தியத்தைச் சிந்தினானே. 
1266 
அவை சிதறும் புலம்தோன்று நீலமா நீலம் இவை அணிவோர் வானோர்  
நவை அறு சீர் மானவர் இந் நகை நீலம் சாதியில் நால் வேறு அந்தக்  
கவல் அரிய வெள்ளை சிவப்பு எரி பொன்மை கலந்து இருக்கில் அரிதாய் முற்றும்  
தவலரிதாய் இருக்கில் இரு பிறப்பாளர் முதல் முதல் நால் சாதிக்கு ஆகும். 
1267 
இலங்கு ஒளிய இந் நீலம் மெய்ப் படுப்போர் மங்கலம் சேர்ந்து இருப்பர் ஏனை  
அலங்கு கதிர் நீலத்தில் பெருவிலை ஆயிரப் பத்தின் அளவைத்து ஆகித்  
துலங்குவதான் பால் கடத்தின் நூறு குணச்சிறப்பு அடைந்து தோற்றும் சோதி  
கலங்கு கடல் உடைவைப்பில் அரிது இந்த இந்திரன் பேர்க் கரிய நீலம். 
1268 
மைந்துறு செம் மணி முத்து வாள் வயிரம் பச்சை ஒளி வழங்கும் நீலம்  
ஐந்து இவை மேல் கோமேதக முதல் பவளம் ஈறாக வறைந்த நான்கும்  
நந்து ஒளிய வேனும் அவை சிறு வேட்கை பயப் பவழ நகு செம் குஞ்சி  
வெம் தறுகண் வலன் நிணங்கள் சிதறும் இடைப் படுவன கோ மேதம் என்ப. 
1269 
உருக்கு நறு நெய்த் துளி தேன் துளி நல் ஆன் புண்ணிய நீர் ஒத்துச் சேந்து  
செருக்கு பசும் பொன் நிறமும் பெற்று மெலிதாய்த் தூய்தாய்த் திண்ணிதாகி  
இருக்கும் அது தரிக்கின் இருள் பாவம் போம் பரிசுத்தி எய்தும் வென்றித்  
தருக்கு வலன் கபம் விழுந்த விடைப் புருடராகம் ஒளி தழையத் தோன்றும். 
1270 
தாழ்ந்த பிலத்து இழிந்து எரிபொன் கண் அவுணன் உயிர் குடிக்கும் தறுகண் பன்றி  
போழ்ந்த முழை வாய் திறந்து திசை செவிடு பட நகைத்துப் பொன் போல் கக்கி  
வீழ்ந்த கபம் படுதவில் படும் உச்சி வட்டமாய் மெலிதாய்ப் பொன் போல்  
சூழ்ந்து ஒளி விட்டு அவிர் தழல் போல் தௌ¤வு எய்தி மனம் கவர்ந்து தோற்றம் செய்யும். 
 
1271 
இந்த மணி பாரியாத் திரகிரியில் கொடு முடியாய் இலங்கும் தெய்வ  
மந்தர மால் வரைப் புறம் சூழ் மேகலையாம் மயன்  இந்த மணியினாலே  
அந்தர நாடவன் நகரும் அரசு இருப்பும் மண்டபமும் அமைத்தான் இந்தச்  
சந்த மணி தரிப்பவரே தரியார் வெந் நிட வாகை தரிக்க வல்லார். 
 
1272 
வலன் மயிராம் வயிடூரியம் இளாவிருத கண்டத்தில் வந்து தோன்றிப்  
பலர் புகழும் கோரக்க மகதம் சிங்களம் மலயம் பாரசீகம்  
இலகு திரி கூடாதி தேயங்கள் பிற தீபம் எங்கும் தோற்றும்  
அலை கடலும் படும் இறுதிக் கார் இடிக்கும் போது நிறம் அதற்குயாது என்னில். 
1273 
கழை இலை கார் மயில் எருத்தம் வெருகின் கண் நிறத்தது ஆய்க் கனத்தது ஆகி  
விழைவு தரு தௌ¤தாகித் திண்ணிதாய் மெலிதாகி விளங்கும் ஈதில்  
அழகு பெற வலம் இடம் மேல் கீழ் ஒளி விட்டன முறையோர் அறவோர் ஆதித்  
தழை உறு நால் சாதி களாம் தினம் இதனைப் பூசித்துத் தரிக்க சான்றோர். 
1274 
வலத்து அவுணன் தசை வீழ்ந்த வழிபடுதுப்பு அயன் சந்தி வடிவ மாத்து என்  
புலத்தவரை விதிக்கும் இடத்தவனுடன் மாசி இழிபுலத்தும் புயல் போல் வண்ணள்  
வலத்த மது கைடவரைக் குறை குருதி வழிநிலத்தும் மகவான் வெற்பின்  
குலத்தை இற கரி சோரி சிதறிடத்தும் வந்து குடி கொண்டு தோன்றும். 
1275 
அவ் வழியில் பகு பவள முருக்கம் பூ பசுங்கிளி மூங்கு அலர்ந்த செவ்வி  
செவ்வரத்த மலர் கொவ்வைக் கனி போலும் குணம்குற்றம் திருகிக் கோடல்  
எவ்வம் உறப் புழு அரித்தல் தன் முகம் ஒடிதல் பெரும் பாலும் இப் பூண் ஏந்தல்  
பெய் வளையார் தமக்கே ஆம் தரிக்கின் மகப்பேறு முதல் பேறு உண்டாகும். 
1276 
இரவி எதிர் எரி இறைக்கும் கல்லும் மதி எதிர் செழு நிர் இறைக்கும் கல்லும்  
உரை இடு ஒன்பதில் ஒன்றில் உள் கிடையாய்க் கிடக்கும் என ஒன்பான் வேறு  
மரபு உரைத்து வணிகர் ஏறு ஆகிய வானவர் ஏறு வடபால் நோக்கி  
பரவி இருந்து அருச்சித்து மணிக் கைக் கொண்டு எதிர் மதுரை பரனை நோக்கா. 
1277 
அஞ்சலி செய்து அக நோக்கால் இக்கு மரற்கு அளவிறந்த ஆயுள் செல்வம்  
விஞ்சுக என்று அளித்து அருள் இறை மகனும் விண் இழிந்த விமானம் நோக்கிச்  
செம் சரணம் பணிந்து இருக்கைத் தாமரையும் விரித்து ஏற்றான் செல்வ நாய்கர்  
மஞ்சனையும் புடைநின்ற அமைச்சரையும் நோக்கி முகம் மலர்ந்து சொல்வார். 
1278 
இம் மணியால் இழைத்து நவ முடி சூட்டி இச் சிங்க இள ஏறு அன்ன  
செம் மறனை அபிடேக பாண்டியன் என்று இயம்பும்  எனச் செம் பொன் தூக்கிக்  
கைம் மறியில் வணிகருக்கு விலை கொடுப்பான் வருவார் முன் கருணை நாட்டாம்  
அம் மகன் மேல் நிரப்பி இள நகை அரும்பி நின்றாரை அங்குக் காணார். 
1279 
ஓர் உருவாய் தேர் நின்ற வணி கேசர் விடையின் மேல் உமையா ளோடும்  
ஈர் உருவாய் முக்கண்ணும் நால்கரமும் அஞ்சாமல் இறவாவாறு  
கார் உருவாய் எழு மிடரும் காட்டித் தம் கோயில் புகக் கண்டார் இன்று  
பார் உருவாய் நின்ற அணி கேசவர் எனவே பின் பற்றிப் போவார். 
1280 
தேன் செய்த கொன்றை நெடும் சடையார் முன் தாழ்ந்து எழுந்து செம் கை கூப்பி  
யான் செய்யும் கைம் மாறாய் எம்பிராற்கு ஒன்று உண்டோ யானும் என்ன  
ஊன் செய் உடலும் பொருளும் உயிரும் எனின் அவையாவும் உனவே ஐயா  
வான் செய்யும் நன்றிக்கு வையகத்தோர் செய்யும்  கைம்மாறு உண்டேயோ. 
1281 
என்னா முன் வழுத்தல் உறும் விறன் மாறன் கோக கொழுந்தை இகல் வேல் விந்தை  
மன் ஆகும் இவற்கு மனம் வாக்கு இறந்த பூரணமாம் மதுரை நாதன்  
பொன்னாரு மணி மகுடம் சூட மணி நல்குதலால் புவியநேகம்  
பன்னாளும் முறை புரியத் தக்கது என வாழ்த்தினார் பல் சான் றோரும். 
1282 
ஏத்தி வலம் கொண்டு நான்கு இபம் தழுவப் பெற்று ஓங்கி இருக்கும் அட்ட  
மூர்த்தி விடை அருள் பெற்று மூவ நன் மலையாகி முனிவர் கூறப்  
பார்த்திவன் தன் பொலன் மாட மனைபுகுந்தான் இறை  மணிப் பண் பயும் கேள்விச்  
சத்திரரும் மந்திரரும் மணி நோக்கி வியப்பு அடைந்தார் சங்கை கூர்ந்தார். 
1283 
வேள் என வந்த நாய்கர் சுந்தர விடங்கர் ஆனால்  
நாள்களும் கோளும் பற்றி நவமணி ஆக்கினாரோ  
தாள்களும் தோளும் மார்பும் தரித்த நீள் நாகம் ஈன்ற  
வாள் விடு மணியோ ஈந்தார் யாது என மதிக்கற் பாலேம். 
1284 
இந்திரக் கடவுள் நாட்கும் இம் மணி அரிய என்னா  
மந்திரக் கிழவர் நல்கி மயனினு மாண்ட கேள்வித்  
தந்திரக் கனகக் கொல்லர்க்கு உவப்பன ததும்ப வீசிச்  
செம் திரு மார்பினார்க்கு திருமணி மகுடம் செய்தார். 
1285 
மங்கல மரபன் மாலை மணி முடி சூட்டி நாமம்  
செம்கண் ஏறு உயர்த்த நாய்கர் செப்பிய முறையால் வேத  
புங்கவர் இசைப்ப வீதி வலம் செய்து புனிதன் பாத  
பங்கயம் இறைஞ்சி வேந்தன் பன் மணிக் கோயில் எய்தா. 
1286 
போர் மகள் உறையுள் ஆன புயத்து அபிடேகத் தென்னன்  
தேர் முதல் கருவித் தானைத் தெவ்வர் நீள் முடி எலாம் தன்  
வார் கழல் கமலம் சூட மனு முறை பைம் கூழ் காக்கும்  
கார் எனக் கருணை பெய்து வையகம் காக்கும் நாளில். 
1287 
தந்தை தன் காமக் கிழத்தியர் ஈன்ற தனயராய் தனக்கு முன்னவராய்  
முந்தை நாள் அரசன் பொன்னறை முரித்து முடி முதல் பொருள் கவர்ந்து உட்கும்  
சிந்தையர் ஆகி மறு புலத்து ஒளித்த தெவ்வரைச் சிலர் கொடு விடுப்ப  
வந்தவர் கவர்ந்த தனம் எலாம் மீள வாங்கினார் ஈர்ங்கதிர் மருமான். 
 
மாணிக்கம் விற்ற படலம் சுபம்   
 

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

 
 
1288. 
காழ் கெழு கண்டத்து அண்ணல் கௌரியன் மகுடம் சூட  
வீழ்கதிர் மணிகள் ஈந்த வியப்பு இது விடையோன் சென்னி  
வாழ் கரு முகிலைப் போக்கி மதுரை மேல் வருணன் விட்ட  
ஆழ் கடல் வறப்பக் கண்ட ஆடலைப் பாடல் செய்வாம். 
 
1289 
 
சித்திரை மதியில் சேர்ந்த சித்திரை நாளில் தென்னன்  
மைத்திரள் மிடற்று வெள்ளி மன்று உளாற்கு களவு மாண்ட  
பத்திமை விதியில் பண்டம் பலபல சிறப்ப நல்கிப்  
புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்தல் உற்றான். 
 
1290 
 
நறிய நெய் ஆதி ஆர நறும் குழம்பு ஈறா ஆட்டி  
வெறிய கர்ப்புர நீர் ஆட்டி அற்புத வெள்ளம் பொங்க  
இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான் எறிநீர் வைகை  
துறைவ நீ என் கர்ப்பூர சுந்தரனேயோ என்றான். 
 
1291 
 
பூசனை புரியும் எல்லைப் பொன் நகர்க்கு இறைமை பூண்ட  
வாசவன் வருடம் தோறும் பூசித்து வருவான் அன்ன  
காசறு மனத்தான் பூசை கழி உறும் அளவும் தாழத்துத்  
தேசு அமை சிறப்பார் பூசை செய்து தன் நாடு புக்கான். 
 
1292 
அன்று நீர்க் கடவுள் வேள்வி நாயகன் அவையத்து எய்தி  
நின்றவன் தன் நோய் தீரும் செவ்வியின் இகழ்ச்சி தோன்றக்  
குன்ற வன் சிறகு ஈர்ந்த கொற்றவன் முகத்தை நோக்கி  
இன்று நீ சிறிது தேம்பி இருத்தியால் என் கொல் என்றான். 
 
1293 
சிலைப்படு முகில் ஊர் அண்ணல் செப்புவான் இருள் தீர் அன்பின்  
வலைப்படு பெருமான் எம்மான் மதுரை எம் பிரானை அன்பு  
தலைப்படு பூசை செய்யத் தாழ்த்தது இன்று அதனால் இப்போது  
அலைப்பட சிறிது என் உள்ளம் ஆகுலம் அடைந்தது உண்டால். 
 
1294 
 
என்ன அவன் இலிங்கம் தான் மாஇலிங்கமோ என்று முந்நீர்  
மன்னவன் வினவலோடு மகபதி மொழிவான் முன்பு என்  
தன்னரும் பழியும் வேழச் சாபமும் தொலைத்தது அன்றோ  
அன்னதை அறிந்திலாய் கொல் என்ன நீர் அண்ணால் கூறும். 
 
1295 
 
அற்று அது ஆகில் தெய்வ மருத்துவராலும் தீரச்  
செற்றிட அரிதா என்னைத் தெறும் பெரு வயிற்று நோயை  
அற்றிடு மாறு தீர்க்கும் கொல் என வலாரி ஐயம்  
உற்று நீ வினாயது என் என்று உள் நகை அரும்பிச் சொல்வான். 
 
1296 
அரி அயரலும் தீராப் பிறவி நோய் அறுக்க வல்ல  
பெரியவன் இந்த யாக்கைப் பெரும் பிணி பிறவும தீர்த்தற்கு  
அரியனோ ஐயன் செய்யும் திருவிளையாட்டை இன்னே  
தெரிய நீ சோதி என்னத் தெண் கடல் சேர்ப்பன் சொல்வான 
                                    
1297 
கல் இறகு அரிந்தோய் இங்கு நான் வரும் காலை வேட்டார்க்கு  
எல்லை இல் காம நல்கும் சுரபியும் இன்பால் சோரப்  
புல்லிய கன்று மாற்றுப் பட்ட அப்போது கண்ட  
நல்ல சோபனத்தால் இந்த நல் மொழி கேட்டேன் என்னா. 
1298 
வருணனும் ஏகி வெள்ளி மன்று உடை அடிகள் செய்யும்  
திருவிளையாடல் கண்டு வயிற்று நோய் தீர்ப்பான் எண்ணி  
முரசு அதிர் மதுரை மூதூர் முற்றும் நீ அழித்தி என்னாக்  
குரை கடல் தன்னை வல்லே கூவினான் ஏவினானே 
1299 
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்  
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்  
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்  
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல். 
1300 
கந்த மலர்த் தனிக் கடவுள் கற்பத்தும் அழியாத  
இந்தவளம் பதிக்கு இடையூறு எய்திய எம் பதிக்கும் இனி  
வந்தது எனச் சுந்தரனை வந்து இறைஞ்சி வானவரும்  
சிந்தை கலங் கினர் வருணன் செய்த செயல் தௌஞ்யாதார். 
1301 
சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின்  
சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ  
ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்  
காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த. 
1302 
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல் வருநீத்தம்  
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி  
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்  
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா.   
 
1303 
ஆலம் எழுந்து இமையவர் மேல் அடர்க்க வரும் பொழுது அஞ்சும்  
மால் எனவும் தன் உயிர் மேல் மறலி வரும் பொழுது அஞ்சும்  
பாலன் எனவும் கலங்கிப் பசுபதி சேவடியில் விழுந்து  
ஓலம் என முறை இட்டான் உலகுபுக முறை இட்டான். 
 
 
1304 
முறை இட்ட செழியன் எதிர் முறுவலித்து அஞ்சலை என்னாக்  
கறை இட்டு விண் புரந்த கந்தர சுந்தரக் கடவுள்  
துறை இட்டு வருகடலைச் சுவறப் போய்ப் பருகும் எனப்  
பிறை இட்ட திருச் சடையில் பெயல் நான்கும் வர விடுத்தான். 
 
1305 
நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு  
உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்  
சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத் தௌஞ்ந்தோர் ஏழு  
பவப் பெரும் பௌவம் போலப் பசை அற வறந்த அன்றெ. 
 
1306 
அந் நிலை நகர் உளாகும் வானவர் ஆதி யோரும்  
தென்னவர் பிரானும் எந்தை திருவிளை யாடல் நோக்கிப்  
பன்னரு மகிழ்ச்சி பொங்கப் பன் முறை புகழ்ந்து பாடி  
இன்னல் தீர் மனத்தர் ஆகி ஈறு இலா இன்பத்து ஆழ்ந்தார். 
 
வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் சுபம் 
 

இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.

Please send your comments and corrections

Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page

Related Content

Discovery of the god to mortals

Thiruvilaiyadal puranam - The sacred sports of Siva

Thiruvilaiyatar puranam

தல புராணங்கள்

திருவிளையாடற் புராணம்