logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பேரூர்க் கலம்பகம்

ஆசிரியர்: கவியரசு கு. நடேச கவுண்டர்

திருப்பேரூர்க் கலம்பகம் 
ஆசிரியர் - கு. நடேச கவுண்டர்


 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

நேரிசை வெண்பா

காப்பு

பாட்டுக் களிக்குஞ்சீர்ப் பட்டிப் பெருமான்பால்
வேட்டுக் கலம்பகம்சொல் மேன்மைதரும் - கூட்டும்
அழகமரின் சொற்பொருள் ஐங்கரங்கொள் பட்டி
மழகளிறென் னுள்ளத்தே வந்து.

(பாட்டுக்கு அளிக்கும் சீர் - பாடும் பாட்டுக்குப் பரிசில் வழங்கும்; பாட்டுக்குப் பெருமை சேர்க்கும். வேட்டு - விரும்பி. களிறு உள்ளத்தே வந்து அழகமர் இன்சொல் பொருள் கூட்டும் எனமுடிக்க.) 

கட்டளைக் கலித்துறை 
ஆளுடைய பிள்ளையார் வணக்கம்

வரும்பொரு ளின்ப மறம்பிர மன்றிரு மான்முதலாம்
பெரும்பெயர்த் தேவர் பதமுமொன் றோவெனும் பீடுமெளி
தரும்பெறன் ஞானங் குழைத்தம்மை பாலுட னார்ந்துதமிழ்ப்
பெரும்பெயல் பெய்முகிற் சம்பந்தன் மெய்ப்புகழ் பேசுநர்க்கே.

(சம்பந்தன் மெய்ப்புகழ் பேசுநர்க்கு அறம்பொருள் இன்பம் வரும், திருமால் முதலானோர் பதம் ஒரு பொருட்டோ எனும் பெருமை எளிதில் கிட்டும். “அயன்திருமால் செல்வமும் ஒன்றோ என்னச் செய்யும் தேவே" சிவஞான சித்தியார்- காப்பு)

நூல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு
தெண்ணிலவு நறும்புனலிற் றிளைத்தாட முடிக்கொண்டு
பண்ணிலவு மிசைபயில்கந் திருவர்பயில் செவித்தாகிக்
கடகரியுங் கொடுவரியு மரிமானுங் கலைமானும்
படவரவு மேற்கொண்டுன் படிவமொடு படிநிமிரும்
பனிவெள்ளி வரைக்கயலே பரவுபுனற் காஞ்சியின்வாய்க்
கனிகொள்ளும் பொழிற்பேரூர் கனிந்தமருங் கண்ணுதலே. 

தாழிசை

ஆறாறு தத்துவங்கட் கப்பாலா யிப்பால்வெண்
ணீறேறு திருமேனி தரித்துலகம் நிகழ்த்தினையே. (1)

அரிபிரமற் கறிவரிய அடிமுடியை யாயிடினும்
சுரிகுழலப் பரவைமனைத் தூதாகி நடந்தனையே. (2)

ஒண்கிரணத் தண்சூளா மணிபுனைந்த சடைக்குலந்தார்
வெண்டலையும் வெள்ளெருக்கும் கொண்டணிய விரும்பினையே (3)

அமரர்குழாம் அமுதுண்டா ருயிர்வாழ வருள்புரிந்தே
குமுறுகடல் விடமுண்டுன் கண்டத்தே கொண்டனையே. (4)

மருப்பீரா யிரமுடைய மதயானை வறிதிருப்பப்
பொருப்பனைய மால்விடையே பொருந்தியுள. மகிழ்ந்தனையே. (5)

அராகம்

கறைபடு துளையெயி றரவணி கலனென
நிறைசுட ருருவினி னிலவுற வனைந்தனை (1)

மலைமகள் கனதன வரைபொரு முரமிசை
அலைதுயில் கமடமும் மனவொடும் அணிந்தனை (2)

தாழிசை

நால்வேதம் அமரர்களுக் கந்தணனீ யெனநவிலச்
சேல்சேருங் கழனியுழு கடையனுருச் சேர்ந்தனையே (1)

ஈசனென மறைகளெலாம் இசைப்பவும்நீ இதமொழிகள்
பேசிமறை யவர்கள்மனைப் பிச்சைக்கு நச்சினையே (2)

எஞ்சாமை யுலகமெலாம் முடித்தருளும் இறையவன்நீ
பஞ்சவரிற் பார்த்தன்கை வில்லடியும் பட்டனையே. (3)

ஞானமறை முனிவர்புரி பூசையினும் நலமறியாக்
கானவர்தம் இறைபூசை கண்டுநனி யுவந்தனையே (4)

முச்சீரடி அம்போதரங்கம்

முன்னவற்றின் முன்னவன் நீ
பின்னவற்றின் பின்னவன் நீ
முனிவோர்க்கு முனிவோன் நீ
இனியோர்க்குள் இனியோன் நீ

இருசீரடி அம்போதரங்கம்

மண்ணுநீ விண்ணுநீ வாளுநீ கோளுநீ
பண்ணுநீ பாட்டுநீ பழமுநீ சுவையுநீ
அதனால் (தனிச்சொல்)

சுரிதகம்

நன்மையும் தீமையும் ஒப்ப நாடலால்
விருப்பும் வெறுப்புநீ மேவிலை யென்றே
மற்றை யாரையும் மனத்துட் கருதா
துற்றுன் புகழே யுளத்துட் கொண்டு
புன்மொழி தொடுக்க என்மனந் துணிந்தேன்
முக்கனிச் சுவையினும் மிக்கசீர் மூவர்
பாடல் கேட்ட தோடுடைச் செவிகட்

கறிவிலேன் வறுஞ்சொலுங் கோடல்
முறைமை யாகும் முழுமுத லோய்க்கே. (1)

(தரவு: உன் படிவமொடு படி நிமிரும் - வெள்ளிமலை சிவசொரூபமாகப் பூமியில் உயர்ந்தது. பேரூர் கனிந்து அமருங் கண்ணுதல் - உடல் எங்கும் பரவியிருந்தாலும் பசுவின் மடியிற் பால் சுரத்தல்போல, சிவபரம்பொருள் பிரபஞ்சம் எங்கும் பரவி இருந்தாலும் பேரூரை விரும்பித் தங்கியுள்ளது.
தாழிசை: இறைவன் யாவரினும் உயர்ந்தவனாகியும் யாவரினும் தாழ்ந்தவனாகவும் , உயர்ந்தவற்றைக் கொண்டான் தாழ்ந்தவற்றில் மிகத்தாழ்ந்தவற்றையும் கொண்டும் உள்ளான். இது அவனுடைய எளிவந்த தன்மை.
1. நீறு - புழுதி .உலகுநிகழ்த்தினையே - பள்ளனாய் உழவு தொழில் நிகழ்த்தினையே. (திருக்குறள் 1031) தாழிசை 2: ஈசன் - ஐசுவரியம் உடையவன், செல்வன்.
கண்ணுதலே! நீ , உயர்ந்தது இழிந்தது, நன்மைதீமை எனும் வேறுபாடின்றி ஒப்ப கருதுபவன், உயர்ந்தது என்ற விருப்போ தாழ்ந்தது என்ற வெறுப்போ நீ கொள்வ்தில்லை. அதனால் மூவர் பாடல் கேட்ட செவிக்கு என் வறுஞ்சொல் கொள்ளுவதும் முறைமையாகும். தோடு - அம்பிகையின் செவியைக் குறிக்கும். குதலை மொழி தாயின் செவிக்குகுழலிசை யாழிசையினும் இனிமை பயத்தல் வியப்பன்றே)

நேரிசை வெண்பா

ஓயாத ஆனந்தம் உண்டென்றுந் துன்பில்லை
சாயாத அன்புண்டு தாழ்வில்லை - மாயாத
வீடுண் டளறில்லை மீகொங்கிற் பேரூரைப்
பாடும் பணிசேர் பவர்க்கு. (2)

(மாயாத வீடு - நிலையான முத்திப் பேறு. அளறு - சேறு; நரகைக் குறித்தது)

கட்டளைக் கலித்துறை

குழகா குழகாம தேனுக் குளப்புக் குறிதலைசேர்
அழகா வழகானை யூறும் பிரான்திரு வான்பட்டியான்
பழகா பழகாப் படைக்குந் திறம்படைத் தாய்பயிலு
மழகா மழலை மொழியென ஏற்றேன்சொன் மாலையுமே (3)

(குழகன் - குழையை அணிந்தவன்; ஞான மகரகுண்டலம் தரித்தவன்.; இளையவன். குழ காமதேனு - இளமையான காமதேனு. குறி - இலிங்கம். அழகானை - அழகிய ஆனேற்றினை 2ஆம் வேற்றுமை ஏற்ற பெயர். ஆன்பட்டி - திருப்பேருர். பழகா - பழகு ஆ, நட்புற்ற காமதேனு. நிலைமொழிக் குற்றியலுகர ஈறு உயிரேறி முடிந்தது. பழகா - பழகி . செய்யா என்னும் வினையெச்சம், 'நிலங் கிளையா நாணிநின்றோள்' என்றாற்போல வினைமுதலைக் கொண்டு முடிந்தது. படைக்கும் திறம் படைத்தாய் - உலகினைப் படைக்கும் ஆற்றலை அளித்தாய்.)

பதினான்குசீகழிநெடில் ஆசிரிய விருத்தம்
இரங்கல்
தோழி கூற்று

மேரு வன்ன மாட மீதி லரமியத் தலத்திலே
      மின்னை யன்ன நுண்மருங்கு லார்கள் பாடல் பாடவே
ஈர மென்ம லர்த்த டந்தி ளைத்த தென்றல் வீசவே
      யினிய தண்ணி லாவெறிப்ப வென்க ணன்ன பேதையாள்
காரை யன்ன குழல்சரிந்து கலைய விழ்ந்து சோரவே
      காதில் வேல்புகுந் துடம்பி லூசி பாய்வ தையகோ
யாரு மில்லை யோவென் மேனி யழல்பிடித்த தென்பணீர்
      அருள்செ யவிடிற் பிழைப்ப தரிது பேரை யத்தரே. (4)

(தோழி, திருப்பேருர் ஈசர் இடத்து காதல் கொண்ட தலைவியின் நிலையைக் கூறி அவளுக்கு அருள வேண்டுதல்)
கட்டளைக் கலிப்பா
மடக்கு

அத்தங் கொண்ட தரிமா னுடுக்கையே
      அரையிற் கொண்ட துரிமா னுடுக்கையே
வைத்த தொண்களம் வாரிக் கடுக்கையே
      மாலை கண்ணியும் வேரிக் கடுக்கையே
அத்தர் கொண்ட தரச வனத்தையே
      அடியர்க் கீந்த தரசவ னத்தையே
பித்த ராமிவர் பேரூரென் றில்லையே
      பேரூ ரேயென் பிறப்பிங்கொன் றில்லையே (5)

( மடக்கு அல்லது யமகம் என்பது வந்த சொல்லே வரும் ஒருவகைச் சொல்லணி. எழுத்துக்களது தொகுதி, பிறவெழுத்தானும் சொல்லானும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறு பொருளை விளைப்பது மடக்கெனும் அலங்காரமாம். (தண்டியலங்காரம், சொல்லணியியல், சூ93. இது சொல் முற்று மடக்கு. அத்தம் - ஹஸ்தம்; கை. கையில் கொண்டது அரிமானும் உடுக்கையும். அரை - இடை. மான் உரி உடுக்கை.; மான்தோல் உடை. ஒண் களம் - ஒளியுடைய கண்டம். வாரி - கடல். கடுக்கை - நஞ்சு. கண்ணி- தலைமாலை. மாலையும் கண்ணியும் தேன் சொரியும் கொன்றை. கடுக்கை - கொன்றை. அரசவனம் - திருப்பேரூர். அடியர்க்கு ஈந்தது அரச அனம் அனம் - அன்னம்.; -சோறு , வீடு பேறு. பேரும் ஊரும் உடைய பிறப்பு இனி இல்லை.) 

கலிவிருத்தம்
இல்லைப் பொருளை யிடத்தை யெண்ணியே
தொல்லைப் பிறப்பிற் சுழல்கை யின்றியே
ஒல்லைச் சிறியேற் குறுதி யீவையோ
மல்லைப் பேரையில் வாழும் வள்ளலே. (6)

( இல்லை - மனையை, குடும்பத்தை. தொல்லைப் பிறப்பு - மிகப்பழங்காலந்தொட்டு வருகின்ற பிறப்பு; 'தொல்லையிரும் பிறவி' என்பது காண்க. சுழல்கை - பிரப்பு இரப்பு எனச் சுழல்கை. ஒல்லை - விரைவில். உறுதி - வீடு. மல்லல் - வளம்) 

வஞ்சித்துறை

வள்ள லரசவனம் - உள்ள வினையொழியும்
சள்ளை யவைதவிரும் - எள்ள லிதுமனனே. (7)

(உள்ள - தியானிக்க. சள்ளை - துன்பம்; பேச்சுவழக்கு. எள்ளல் - 'அல்'ஈற்று எதிர்மறை வியங்கோள். அலட்சியப்படுத்தாதே என்பது பொருள்.)

கட்டளைக் கலித்துறை

மனனே யுனக்கொன்று கேண்மதி வாழ்வெனு மையல்விட்டுச்
சினனே யவாவழுக் காறகற் றிச்சிவ னேசிவனே
இனனே புரைதிரு மேனியெம் பேரை இறைவவெனத்
தினனே நினைசிவ லோக மெளிதினிற் சித்திக்குமே. (8)

(மனன் - மனம். 'மகர இறுதி அஃறிணைப் பெயரின், னகரமோ டுறழா நடப்பன உளவே' (நன்சூ122). சினனே- ஏகாரம் எண்ணிடைச்சொல். இனன் - சூரியன். புரை- உவம உருபு)

சந்தக்கவி
தத்த தத்தனன தத்தன தத்தன தத்தன தத்தனனா

சித்தி யெட்டினையு முற்றவர் கற்றவர் சித்தமொ ருக்கினபேர்
மத்த கக்கரிய டற்புலி சொற்படி வைத்துந டத்தியபேர்
கத்த ருத்தவந டத்தும கத்துவ ரைக்கரு திப்பணியேம்
அத்தர் பட்டியினி லற்புதர் பொற்கழ லிற்கனி வற்றவரேல். (9)

(கத்தருத்தவம் - கர்த்தருத்தவம், செயல் தலைமையும் செயல் திறமும்)

அறுசீரடி யாசிரிய விருத்தம்
இரவுக்குறி விலக்கியது
தோழி கூற்று

வரைவளைத்தொ ரரவிணைத்துக் கரியவனொ 
      ரம்பாமும் மதில்க ளெய்த
புரைவறுவெற் றியையுடைய போதிவனத் 
      திறைவெள்ளிப் பொருப்பி னூடே
யிரைவிருப்பி னரிமுழக்கங் கேட்டகளிற் 
      றினமறையின் மறையி லேங்கும்
விரவிருட்டி னொளிவேலே துணையாகத் 
      தனிவாரல் வெற்ப நீயே (10)

(வரை - மலை. கரியவன் - மால். புரை - குற்றம். அறையின் மறை- பாறைகளின் மறைவில். விரவு இருட்டு - பரவியுள்ள இருட்டு. தலைவன் இரவில் வரும் வழியின் ஏதத்தைக் குறித்த தலைவியின் அச்சத்தைக் கூறியது)

நேரிசை யாசிரியப்பா
குலமுறை கிளத்தியது
தோழி கூற்று

நீயே,
நெடுவா னன்ன நிறைபுனற் கயத்துப் படர்புய லென்னப் பாசடை மிடைந்தே
உடுக்க ளென்ன விடைச்செறி யரும்பர்
நடுவண் மதியென மலர்ந்தவெண் ணளின
நாண்மலர் சொரிகள் நசையாச் சுரும்பர்
குறவ ரொளித்த குடவரைத் தேனின் 
மணத்துக் குழலும் வளநாட் டிறைமகன்
அவளே,
முதலை யுண்ட மதலையை யழைத்த
பொய்யாப் புலவன் பொருளா றலைத்துக்
கவர்சிவ வேடக் கள்வ ரிருந்த
மங்கலில் தொல்சீர்க் கொங்கு நாட்டில்
சீரூர் மேன்மைப் பேரூ ரிறைவர்
வெள்ளி வெற்பிற் கொள்ளைகொண் டுண்ணும்
குறவர் மடமக ளைய
அறவே பொருந்தா தவளைவேண் டுதலே. (11)

(தோழி, தலைவியை விரும்பி வந்த தலைமகனிடம் அவன் பிறந்த குலத்தின் உயர்வையும் தலைவியது குலத்தின் தாழ்வையும் எடுத்துக் காட்டி இருவருக்கும் வாழ்க்கை ஒவ்வாது என்று கூறி அவனை அவளிடமிருந்து சேய்மைப் படுத்துதல். இஃது இருவரையும் பிரிப்பது நோக்கமன்று. தலைவியை அருமையுடையளாக்கி அவள்மீது அவனுக்கு வரைதல் வேட்கையைப் பெருக்குவதே நோக்கமாம்.

ஆகாயம் போலப் பரந்த குளம். அதில் படர்ந்த மேகக்கூட்டம் போலப் பசிய தாமரைஇலைகள். விண்மீன்கள் என இடையே செறிந்துள்ள அரும்புகள். அவற்றின் நடுவில் மதியமென மலர்ந்த வெண்டாமரை மலர். அந்தப் பெரிய, அன்று மலர்ந்த தாமரைமலர் நிறைந்து சொரிந்த தேனினை விரும்பாதவண்டு , குறவர் மறைத்து வைத்த மலைத்தேனின் மணத்தை விரும்பி உழலும் . அத்தகைய வள நாட்டுக்கு இறைவன் நீ. இவ்வாறு தலைவன் நாட்டின் வளத்தைக் கூறியதால், எப்படி, வண்டு பெரிய தாமரை மலர் சொரிந்த எளிதில் தான் பெறத்தக்க மிகுதியான தேனை விட்டுக் குறவர் மறைத்து வைத்த தேனை விரும்பி உழலுகின்றதோ அவ்வாறே உயர்குடிப் பிறப்பினனான நீ, உனக்கேற்ற குலத்திற் பிறந்ததொரு பெண்ணை எளிதில் வரைந்து இன்பந் துய்க்காமல், குறவர் இற்செறித்து வைத்திருக்கும் தலைவியின் உறவை விரும்பித் துன்பப்படுகின்றாய் என்று கூறி தோழி சேட்படுத்தியது. தலைவியை மலைத் தேன் என்றதால் அவளின் சிறப்பும், குறவர் ஒளித்த மலைத்தேன் என்றதால் குறவர்களுக்கு அவளின் அருமையைத் தோழி தலைவனுக்கு உணர்த்தியவாறு. பொருளாறலைத்து - உலகியல் பொருள்களைத் தேடும் வழியை நீக்கி; சிவவேடக் கள்வர் - சிவவேடத்தால் உள்ளங்கவர் கள்வர். கொள்ளை கொண்டுண்ணும் - பேரூரிறைவரின் திருவருளை முழுமையாக அனுபவித்துக் கொண்டு இருக்கும் என்னும் பொருளையும் தருதல் காண்க.. சிற்றின்பம் வேட்கும் உனக்கும் பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் அவள் குலத்துக்கும் ஒத்து வராது என்றாள் என்க.)

கட்டளைக் கலித்துறை
யமகம்

தலைமாலை பாம்பாமை யோடணி சாந்தம்வெண் சாம்பல்பொன்ம
தலைமாலை யார்க்கெருக் கூமத்தை மாலைதாய் தந்தையின்மோ
தலைமாலை வாரிநஞ் சூணுரி யாடையர் தாமனிதறி
தலைமாலை யுற்றனள் பேதையந் தோவென் றவத் தையலே. (12)

(பேருர் இறைவன் மீது காதல் மயக்கம் கொண்ட தலைவியின் நிலை கண்ட செவிலி கூற்று. தலைமாலை பாம்பு; மார்பணி ஆமையோடு; பூசியுள்ள சாந்துவெண்சாம்பல்; பொன்மதலை - பொன்னிறமான கொன்றை ; மாலை ஆர்க்கு எருக்கு ஊமத்தை ; தாய் தந்தை இல் - பெற்றோரில்லை;மோதுஅலை மாலை வாரி -அலை மோதுதலைத் தன் இயல்பாக உடைய கடல் ; நஞ்சு ஊண் - நஞ்சு உணவு; உரி - தோல்; தாம் மன் அறிதலை - தம்மோடு பொருந்தி இத்தகையவரை அறிதலை; மாலை உற்றனள் - மயக்கம் கொண்டனள். தவத் தையல் - தவத்தால் பெற்ற தையல்)

நேரிசை வெண்பா
வெறிவிலக்கல்
தோழி கூற்று

தையலுக்கம் மாற்பாணன் தந்தருளி னுய்யலாம்
ஐய வொருவ ருடையழித்தென் - பையுறுநோய்
நீக்க விரும்புதிரே னீவிர்பே ரூரிறைவன்
தேக்கமழுங் கொன்றைகொணர் திர். (13)

(தலைவன் மீது காதல்மயக்குக் கொண்ட தலைவியது நிலையைக் கண்ட தாய் அது தெய்வம் அணங்கியதால் விளைந்தது என்று ஐயுற்று, வெறியாடலுக்கு ஆயத்தம் செய்கின்றாள். முருகன் சாமியாடியகிய வேலன் மீது வந்து ஆடுவதுதான் வெறியாட்டு. வேலன் வெறியாட்டில் ஆடு பலி கொடுப்பது வழக்கம். இந்நிலையில் செவிலி அறியும்படியாகத் தோழி வேலன் வெறியாட்டத்தை விலக்கும் முகமாக, மறைமொழியாகத் தலைவியின் காதலை வெளிப்படுத்துவாள். இதுவே வெறி விலக்கல்.வெறி விலக்கலின் பயன் தலைவியின் காதலைத் தாய்க்கு உணர்த்துதல்.

தையலுக்கு அம் மாற்பாணன் தந்தருளின் உய்யலாம் - நம் மகளுக்குத் திருமாலை அம்பாகக் கொண்ட பேரூரான் தன்னுடைய கொன்றை மாலையைத் தந்தருளினால் உய்யலாம். ஐய - வெறியாடுகின்ற வேலனே; ஒரு வருடை அழித்தென் - ஒரு ஆட்டைப் பலியிடுவதால் என்ன பயன்?. மிக்க வருத்தத்தைத் தருகின்ற தலைவியின் நோயை நீர் போக்க விரும்பினால், பேரூரிறைவனுடைய தேன்கமழும் கொன்றைமாலையைக் கொண்டுவந்து அவளுக்குச் சாத்துங்கள். பேரூர் இறைவனுக்குச் சாத்திய கொன்றை மலையை இவளுக்கு அணிவித்தால் நோய் தணிவாள் என்று தோழி நோய்க்கு உண்மைக் காரணமும் பரிகாரமும் மறைமொழியாக உரைத்த சிறப்புக் காண்க.

தையலுக்கு உடையை அழித்து என்னபயன் என்பதொரு நயம்) 

கட்டளைக் கலிப்பா
சித்து

கொன்றை வேணிப்பட்டிசர்க்குப் பித்தளை
     கோதில் பொன்னென்று மையிட்டுக் காட்டினேம்
அன்றை மாலுக் கிரும்பையு மாடகம்
     ஆக்கினோமக னாகம்பொன் னாக்கினோம்
இன்று கஞ்சத்திற் பொன்னையு மாக்குவேம்
     இரதங் கூட்டிச் செப்பிலுரை யேற்ருவோம்
ஒன்று சொன்னத்தை வேறாக மாற்றுவேம்
     உணவுதாரு முமக்கென்ன வேண்டும். (14)

(சித்து என்னும் கலம்பக உறுப்பு இரசவாத சித்தர்களின் போலித்தனத்தை எள்ளி நகையாடுவதாகும். எளியபொருளைப் பயக்கும் அவர்களுடைய சொல்லாடல் மிக உயர்ந்த பொருளைப் பயப்பது போலத் தோற்றம் அளிக்கும்.
கொன்றைவேணிப் பட்டிசர் - கொன்றையை அணிந்த சடையை உடைய பட்டீசர். பித்தளை - பட்டீசர் மீது பித்துக் கொண்டவளை, பித்தளை உலோகத்தை. கோதில் பொன்னென்று - குற்றமற்ற அழகியள் என்று, குற்றமற்ற தங்கம் என்று. மையிட்டு - கண்ணுக்கு மையிட்டு, இரசவாதை மை இட்டு. அன்றை - அன்று+ ஐ. ஐ சாரியை. மாலுக்கு - திருமாலுக்கு. இரும்பை - கரிய நச்சுப் பையை உடைய பாம்பை,காளிங்கன் என்னும் பாம்பை, இரும்பு ஆகிய உலோகத்தை. ஆடகம் - கூத்தாடும் இடம், உயர்ந்த வகைப் பொன். மகன் - திருமாலின் மகன்,பிரமன். ஆகம் - உடம்பு. பொன் ஆக்கினேம்-பொன்னிறம் ஆக்கினேம். பொன்னாக ஆக்கினோம். இன்று - இப்பொழுது. கஞ்சம் - தாமரை, உலோபம். பொன்னையும் ஆக்குவோம் - இல்க்குமியை இருக்கச் செய்வோம், ப்ன்னாம மாற்றுவோம். இரதங்கூட்டிச்செப்பில் உரை ஏற்றுவோம் - சொல்லிற் சுவை கூட்டிப் பேசுவோம், இரசவாதம் செய்து பொன்னுக்கு மாற்று அதிகரிக்கச் செய்வோம். சொன்னத்தை - ஸ்வர்ணத்தை, தங்கத்தை, சொன்ன சொல்லை.
தனக்கு உணவையும் இரந்து பெறும் இரசவாதி உமக்கு என்ன வேண்டும் எனக் கொடையாளியைப்போலக் கேட்பது ஒரு நயம்) 

எண்சீரடியாசிரிய விருத்தம்

வேண்டத் தக்கன யாவையு மறிந்தே
வேண்டு மன்பர்கட் கருளுமெம் மான்என்
றாண்ட கைத்திரு வாதவூ ரடிகள்
அருளிச் செய்ததை யறிந்துமீ தென்னே
ஈண்ட லைப்படு துரும்பென மனனே
யின்பதுன் பத்தி னிடைச்சுழல் வதுதான்
நீண்ட சோலைசூழ் பட்டிநா யகன்றாள்
நினைந்தெ மக்கெனென் றிருவிது சுகமே. (15)

( 'வேண்டத் தத்தக்க தறிவோய்நீ' என்ற திருவாசக குழைத்தபத்துப் பாடலின் கருத்தை நினைவுபடுத்தியது.)

கட்டளைக் கலித்துறை
யமகம்

சுகமென்று பீறற் குடிலிதைப் பேணிமென் தோகையர்கிஞ்
சுகமென்று நாறெச்சி லுண்டு சுழலுந் துரிசொழிந்தே
சுகமென் றமிழ்தே ரரசம் பலவ துகளறுசிற்
சுகமென்று சேர்வது நின்னடி யாரடித் தொண்டு பட்டே. (16)

(பீறற் குடில் - ஓட்டைக் குடிசை. நவ துவாரங்களை உடைய உடல். கிஞ்சுகம் - கிளி போன்ற மகளிர். சுழலும் - மயங்கி அலையும். துரிசு - குற்றம். அமிழ்தம் ஏசுகம் என்றே தேர் - தேவாமிர்தம் இழிந்தது எனத் தெளிந்து. சிற்சுகம் - அறிவானந்தம். அம்பலவ! சிற்சுகம் என்று தொண்டு பட்டு தேர் அமிர்தம் ஏசுகம் என்று கூட்டுக.)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

பட்டுந் துகிலும் உடுத்தாலும் 
பைம்பொற் பணிக டொடுத்தாலும்
இட்டங் கொளவறு சுவையடிசி 
லிருபோ தயிலினு மொருநாளைச்
சுட்டுண் டழிவது தவறாதே 
துணையோ வுடலிது பேரூரில்
நட்டம் பயில்சிவ பெருமானை 
நாடா துழல்மதி கேடீரே. (17)

(உடலைப் பழித்தது. நாளை - 'ஐ' அசை. மதிகேடர் - அறிவு அற்றவர்கள்.)

கொச்சகக் கலிப்பா

கேடுதரு வினைகெடுக்கும் கிளர்சிவஞா னங்கொடுக்கும்
பீடுதரு கல்விதரும் பெருஞ்செல்வந் தருந்தருவிண்
நாடுதரும் வீடுதரும் நளிரரசம் பலநடுவே
ஆடுதரு மவ்விடைய னடித்தொண்ட ரடித்துகளே. (18)

( இடையன் - மன்றாடி. நடு நிற்பவன். அம்பலத்தாடுவான் தொண்டர்களின் அடித் துகள் சிறப்புக் கூறப்பட்டது. ஆடு திருடும் இடையன் என்பது ஒர் நயம்)

நேரிசை வெண்பா
திரிபு
அடிப்பட்டி யான்முனிவர்க் காடுமருளாளா
மிடிப்பட்டி யான்மெலிந்து வீணே - செடிப்பட்டி 
மானிடரைப் பாடாத வண்ணம் பணியடிய
னேனிடரைப் பாட்டையொழித் தேல். (19)

(அடிப்பட்டு - அடிமைப் பட்டு. ஆன் முனிவர் - பட்டிமுனி. மிடிப்பட்டு - வறுமைப்பட்டு. அடிப்பட்டி யன்முனி, மிடிப்பட்டி யான் - 'உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும், யவ்வரின் இய்யாம்- (நன்164) என்னும் விதிப்படிக் கொள்க. செடி - வஞ்சனை இடர்பாடு - துன்பம். ஏல் - தாங்கிக் கொள்.

எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
ஊசல்

ஏலநறுங் குழலாட மாலை யாட
இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்
சாலவடி காதாடக் குழைக ளாடத்
தளர்ந்துகொடி யிடையாட வளைக லாடக்
கோலமட மயிலனையீ ராடி ரூசல்
குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்
பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்
பட்டீச பேர்பாடி யாடீ ரூசல். (20)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஊச லாடுமிவ் வுடலுயி ரொடுபொரு 
ளுன்கை யிலொப் பித்தேன்
தேச மார்திரு நீறணிந் 
தேன்திருநா மமேசெபித் திட்டேன்
வாச மாமல ரிட்டுன தடிமலர் 
நாடொ றும்வழி பட்டேன்
ஈச னேயர சம்பல வாண
னேயினி நமற்கிளை யேனே. (21)

எண்சீராசிரிய விருத்தம்
இரங்கல் - மடக்கு
செவிலி கூற்று

இளையாண்மத னிளையான்விடு கணையான்மெயி ளைத்தாள்
      எய்யாதரு கமரேழையர் செய்கைக்குள மெய்த்தாள்
விளையாவனல் சுடுவேயிசை முடையாயர்வி ளைத்தார்
      மெல்லாதக ரும்பொத்தவள் பொல்லாதவ மென்றாள்
தளையானவை தவிர்வேடுவர் தருமூன தளைந்தாள்
      தனதென்றொரு பேரூரிலன் பேரூருளன் தாமம்
திளையாவிடி லுயிர்வாழ்வது மிலையென்றுதி கைத்தாள்
      சிவனார்திரு வுளமெப்படி யென்றேதெரி கிலமே. (22)

(பட்டிசரைக் கண்டு காதல் கொண்ட பெண்ணின் நிலை கண்டு செவிலி அல்லது தோழி இரங்கிக் கூறுவது. இளையாள் - இளம்பெண். மதன் - மன்மதன். இளையான் - சிறுபையன். கணையான் மெய் இளைத்தாள் - மன்மதன் விடும் பூங்கணையால் உடம்பு இளைத்தாள். விளையா அனல் -விளைவிக்காத அனல், . சுடு வேய் இசை - சுடுகின்ற குழல் இசை. முடை ஆயர் - முடை நாற்றம் உடைய ஆயர்கள். முடை நாற்றம் கொண்ட ஆயர்கள் விளையா அனல் எழுந்து சுடுமாறு வேய் இசை விளைத்தார்கள். இனிமையில் கரும்பொத்தவள். ஆயினும் அந்தக் கரும்பு மென்று சுவைக்க இனிமை தருவது. இவள் மெல்லாத கரும்பு. ஊனது - 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. இதற்குத் தனிப் பொருள் இல்லை. அளைந்தாள் - உண்ணாமல் கையால் புரட்டிக் கொண்டே இருந்தாள். பேரூருளன் - பேரூரில் உள்ளவன். தாமம் - மாலை. அவன் அணிந்திருந்த மாலையை அணிவித்தால் அவனோடு திளைத்த இன்பம் அடைவாள் என்பது கருத்து.)

கட்டளைக் கலித்துறை
ஆன்பட்டியான்

மேம்படு மண்டர் தலைவன்மன் றாடியொர் வெள்விடையான்
காம்படு தோட்சிற் றிடைச்சி மகிழ்கயி லாயனின்ப
மாம்படி யாட்டிடை யன்றில்லைக் கோன்திரு வான்பட்டியான்
ஓம்பிடு வான்பசு யாவு மிடுக்க ணுறாவகையே (23)

(அண்டர் தலைவன் - தேவர்களின் தலைவன், தேவாதிதேவன்; இடையர்களின் தலைவன். மன்றாடி - அம்பலத்தில் ஆடுபவன்; இடையர் தலைவனின் பட்டம். இருவரும் பசுக்களைக் காப்பவர் ஆனதால் மன்றாடி எனப்பட்டனர். வெள்விடையான் - தருமவிடையை உடையவன், வெண்ணிறக் காளையை உடையவன். காம்படு தோள் - மூங்கிலை ஒத்த தோள். சிற்றிடைச்சி - சிறிய இடையை உடைய பச்சைநாயகி.; சிறிய இடைக்குலப்பெண். பசு - உயிர்கள், பசுக்கூட்டம். இப்பாட்டில் அண்டர், மன்றாடி, இடையன், ஆயன், இடைச்சி, கோன், பட்டியான் எனும் இடைக்குலப் பெயர்கள் வந்துள்ளன).

எண்சீர் ஆசிரியவிருத்தம்
சம்பிரதம்

கையகத்து வரையடக்கிக் காட்டு வோமேழ்
      கடலையுண்போம் கதிர்களையுங் கையில் வைப்போம்
வெய்யகடுங் காற்றுகளைத் தூசி னாலே
      விலக்கிடுவோம் கனலைமென்று விழுங்க வல்லோம்
வையகத்தை யோரிமைப்பின் மறைப்போ மிந்த
      மண்மீது வானகத்தை வைகச் செய்வோம்
பொய்யிலவர்க் கருள்பட்டிப் பெருமான் போலப்
      போற்றுபவர்க் கருள்பவரும் காட்டு வோமே. (24)

(சம்பிரதம் - மாயவித்தை. மாயவித்தையில் வல்லவன் தன் ஆற்றலைத் தானே சிறப்பித்துப் பேசுதலாம். செய்வதற்கு எளிய செயல்களையே செய்வதற்கு அரிய செயல்கள் எனப் பொருள் தோன்றுமாறு பேசும் பேச்சுத் திறம் சம்பிரதன் ஆகும்.

கையகத்து வரையடக்கிக் காட்டுவோம் - கைக்குள் மலையை அடக்கிக் காட்டுவோம், கைக்குள் துவரையை அடக்கிக் காட்டுவோம். ஏழ் கடலை உண்போம் - கடல்கள் ஏழையும் குடிப்போம், ஏழு கடலைப் பருப்பை உண்போம். கடுங்காற்றுகளை - சூறாவளிக் காற்றுகளை, கால்துகளை - காலில் ஒட்டும் தூசுகளை. தூசினாலே - துகள் களினாலே, துணியினாலே. இமைப்பு - இமைப்பொழுது, கண்ணின் இமை. கண் இமை மூடினால் வையகம் மறைந்துதானே போகும். மண் மீது தேவலோகத்தைக் கொண்டுவந்து காட்டுவோம் . வானம் மண் மீது தானே உள்ளது?)

தரவு கொச்சக்கக் கலிப்பா
(ஓரடி மிக்கு வந்த கொச்சக ஒருபோகு)
அம்மானை
காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்
நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை
நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோ ரீங்கிவனை
வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன வம்மானை
வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை. (25)

(விகிர்தன் - வேறுபட்டவன். உலகியலுக்கு அப்பாற்பட்டவன். வேட்டுவனாகவும் வலைவாணனாகவும் பள்ளனாகவும் தோன்றினாலும் அவன் அவர்களின் வேறு பட்டு வீட்டுக்கு உரியனாகவும் உள்ளான். )

மேலது

ஐயர் திருப்பேரூ ரம்பலவர் யாவர்க்கும்
மெய்யே பொதுவில் விளங்குகின்றா ரம்மானை
மெய்யே பொதுவில் விளங்குகின்றா ராமாயின்
தையா லிவரென்ன சாதிகாணம்மானை
சங்கரர்க்கு மோர்சாதி சாற்றுவரோ வம்மானை. (26)

(சங்கரர் - இன்பம் செய்பவர், கலப்பினத்தவர்)

மடக்கு
மானிருந்த விடக்கையார் அடியார் வருந்தி விடக்கையார்
      மதிமலிந்தசெஞ் சடையினார் களங் கொதியிருந்த நஞ்சடையினார்
தேனிருந்தநல் லிதழியார் ஒரு பாலிருந்த மெல்லிதழியார்
      செங்கை கொட்டிட வாடுவார் அவள் சங்கை பட்டிட வாடுவார்
ஆனிருந்திடு பட்டியார் எம தூனிருந்திடு பட்டியார்
      அமரர்விஞ் சையர்தானவர் முத லானவர்க் கரிதானவர்
யானிருந்தணி புன்சொலுங் கொலுமோ பவந்தணி யன்பரே
      அடியனேனையு மாளுமோ வினை நொடியிலே இனி மாளுமோ. (27)

(இடக் கையார் - இடக்கையை உடையவர். விடக்கையார் - கசந்து கைவிடமாட்டார். செஞ்சடையை உடையவர். கண்டத்தில் வெப்பமான நஞ்சை அடைத்தவர். இதழியார் - கொன்றையணிந்தவர், மென்மையான வாயிதழ் கொண்ட உமையை ஒருபாலுடையார். உமையின் கைக்கொட்டுக்கு ஆடுவார், அவள் ஊட உள்ளம் வாடுவார். ஆன்பட்டியிலிருப்பவர், யான் அறியாமலேயே என்னுள் தங்கியிருக்கும் வஞ்சகர். தானவர் - அரக்கர்.)      
நேரிசை வெண்பா

மாளாத மாலான்மேன் மால்போற்ற வந்தனையான்
மாளாத மாலும்மான் மானுற்றாள் - ஆளாயோ
தேரூர் நெடுவீதித் தென்றலுலா முன்றில்பயில்
பேரூர்ப் பெருமானே பேசு. (28)

(மாளாத மால் ஆன் - இறவாத பெரிய விடை.இது தருமவிடையைக் குறிக்கும். மால் போற்ற - திருமால் போற்றி செய்ய; வந்தனை. ஆல், முன்னிலை அசை. என்னுடைய மான் போன்ற மகளும் ஒழியாத காதல் மயக்கம் கொண்டாள். பேரூர்ப் பெருமானே, நீ அவளை ஆட்கொள்ள மாட்டாயோ? சொல்லு) 

எண்சீர் ஆசிரியவிருத்தம்

பேச்சுமனங் கடந்தபட்டிப் பெருமா னேநீ
      பேணிவலிந் தாண்டமறைப் பெருமாளுக்கே
ஏச்சுற்றமுன் ஒளித்தனையிங் கென்று காட்டும்
      ஏற்றினையு முனிந்தனையென் றறிந்து மேழை
நாச்சிறிது நாணாமே யருடா வென்னும்
      நயனமுனைக் காணவிழை தரும்பே ராசைப்
பேய்ச்சிறியேன் நாய்க்குணத்தேன் பித்த னேனென்
      பிழைபொறுத்திங் காள்வாயோ பிணங்கு வாயோ (29)

( பேச்சு - வாக்கு. மறைப்பெருமாள் - சிவவேதியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகல். அருள் +தா = அருடா. "லள வேற்றுமையிற் றடவும் அல்வழி, அவற்ரோடு உறழ்வும் வலிவரின் ஆம்" நூற்பா. 227 நன்னூல்)

கட்டளைக் கலித்துறை
தலைவி கூற்று

பிணங்கி யவர்பாற் பிழையே கணிக்குமென் பேதைமனம்
மணங்கிளர் கொன்றையந் தார்ப்பட்டிலிங்கர் மலரடிக்கே
வணங்கிய சென்னியெ மன்பர்வந் தால்வல் விரைந்தணைய
இணங்கி யறைபோ மிதுவென் னறிந்தில னேந்திழையே. (30)

(பிணங்கி - ஊடல்கொண்டு; அறை போதல் - நம்பிக்கைத் துரோகம் செய்தல்)

தரவு கொச்சகக் கலிப்பா

இழைகொண்ட இடையுமைசே ரிடப்பாலும் இளமதியும்
மழைகொண்ட மணிக்களனும் மலர்முகமும் மலைத்தோளும்
பிழைகொண்டு தொண்டர்கள்பாற் பிணங்காத பேரூரான்
தழைகொண்டு தயைபுரிபூந் தாளுமுளந் தரித்தேனே (31)

(இழை கொண்ட - மணிமேகலை முதலிய அணிகள் கொண்ட இடையை உடைய உமை; மழைகொண்ட - கார்மேகத்தின் நிறம் கொண்ட நீலகண்டமும்; பிழை கொண்டு - பிழையைக் காரணமாகக் கொண்டு; பிணங்காத குணமும் உடைய பேரூரானின் இடப்பாலையும் மதியையும் களனையும் தோளையும் அடியேன் இடுந்தழையும் ஏற்றுக்கொண்டு தயை புரிந்து ஆளும் திருத்தாளையும் உளத்தில் தரித்தேன்.) 

சந்தவிருத்தம்
புயவகுப்பு

தனனதன - தனனதன - தனனதன - தனனதன
தனனதன - தனனதன - தானாதனந்தன

தரியலர்கள் திரியுமெயி லெரிமுழுக நெடியகணை
சயிலமெனும் வளைசிலையி னோடே நிமிர்ந்தன
சதுமறைகள் தெரியுமலர் உறுபிரம னெறிதவறு
தருணமவ னுயர்தலையை மேனாள் தடிந்தன
சகமுழுது முதவுமொரு முதல்வனிலை யெனுமுனிவர்
தழலில்வரு முழுவையுரி மேலே கவிந்தன
தருவினிழ லமரமரர் மடவியர்கள் குவளைநிகர்
தடவிழிகள் பெரியமய லோடே துளைந்தன

கரியமுகி லனநெடிய குழலிமைய மயிலினிரு
கனவரைக ளனமுலைக ளாலே குழைந்தன
கவுணியர்கள் குலமதலை யரசுமுத லியபெரியர்
கனிவுமிகு தொடைவிழைவி னாலே புனைந்தன
கடிகமழும் அமரரிடு மலரினொடு மெனையனையர்
கருதியிடு மெளியதழை நீரா னனைந்தன
கரடதட விகடமத கரிமுகவ ரொடுமுருகர்
கமலசர ணுறவுவகை யாலே வளர்ந்தன 

பிரியமுட னினியவிசை புகலுமிரு குழைகளொளி
பெருகவமர் தலினொளிகள் சேர்மேரு வென்றன
பெரியபண முடையதலை பலவுடைய பணிகள்பல
பெருகொளிய பணிகளென வேவாழ் வமைந்தன
பிரணவசொ ருபமுடைய நறுமதலை யுதிர்பொடிகள்
பிதிர்கனக மெனவொளிர வேரா னிறைந்தன
பிழைபடுத லரியகணை விசையனொடு வழுதியடி
பிரியமுட னமையவழ கோடே யமைந்தன

அரியதென விரவலர்கள் விழையுமெவை களையுமவர்
அருகைறு குதலிலர்கள் வாழ்வான கொங்கினில்
அளிகள்தெனை கமுகுசுர புனைகுரவு மகிழ்பிடவம்
அலரிமுத லியமலரி லேதே னருந்திவி
லரிசெவழி பயில்புறவொ டனவயல்கள் புடைதழுவு
மரியபல புதுமைமிகு பேரூ ரிலும்பர்கள்
அடியவர்கள் அடிபரவ வுயிர்கள்பர கதியடைய
அரசவையி லமர்பரமர் வாகார் புயங்களே. (32)

(பாட்டுடைத்தலைவனின் திருப்புயங்களின் சிறப்பை விரித்துப் பாடுவது. அடிதோறும் 32 சீர்கள் கொண்ட சந்த விருத்தம். இவ்வகை யாப்பில் புயவகுப்பு என்னும் இக் கலம்பக உறுப்புப் பாடுதல் மரபு

(1.1 தரியலர்கள் - திருவடியைத் தரிக்காதவர்கள், பகைவர். திரியும் எயில் - திரிகின்ற முப்புரங்கள். நெடிய கணை- திருமால். மாபலிபால் மூவடி மண்கேட்டு விண்ணளவு நீண்டமையால் நெடிய கணை என்றார். சயிலம் - மலை. வளைசிலை- வளைத்த வில். மலையை வில்லாக வளைத்தமையால் தோள்கள் நிமிர்ந்தன.

(1.2 சதுமறைகள் தெரியும் - நான்கு வேதங்களையும் தெரிந்த. மலர் உறு பிரமன் - மலரில் இருக்கும் பிரமன் . உயர்தலை - அகந்தையால் நிமிர்ந்த தலை. நிறைந்த கல்வியின் அடையாளம் அடக்கம். பிரமனுக்கு வேதம் தெரியும். ஆனால் கற்ற வேதத்தின் பயன் அறியான். ஆதலால், அவன் தலை நிமிர்ந்தது. படித்தவன் தவறுசெய்தால் தண்டனை பெரிதாம்.

(1.3 சகம் முழுதும் உதவும் - உலகம் முழுதையும் படைத்துக் காக்கும் முழுமுதற்கடவுள். இலை - இல்லை, இடைக்குறை. முனிவர் - தாருகாவனத்து முனிவர்கள். தழலில் வரும் உழுவை - அபிசாரவேள்வியில் தோன்றி எழுந்த வேங்கை. உரி - தோல்.

(1.4 தரு - கற்பகமரம். மடவியர் - இளம் தேவ மகளிர். தேவமகளிரின் காதல் மிக்க நோக்கம் எனும் கணைகளால் துளைக்கப்பட்டன.

(2.1 இமையமயில் - பார்வதி. கன வரைகள் அன - பெரிய மலைகள் போன்ற. மலையையும் வில்லாக வளைத்த வரைபோன்ற புயங்களும் அம்மையின் வரைபோன்ற முலைகளுக்குக் குழைந்தன.

(2.2 கவுணியர் குலமதலை- கவுணியகுலக் குழந்தையான திரிஞானசம்பந்தர். அரசு - திருநாவுக்கரசு சுவாமிகள். விழைவினாலே - விருப்பத்துடன்.

(2.3 கடி - மணம். எனை அனையர் - என்னைப்போன்ற எளியர்கள். எளிய தழை நீர்- 'குடங்கை நீரும் பச்சிலையு மிடுவார்க்கு இமையாக் குஞ்சரமும், படங்கொள் பாயும் பூவணையும் தருவாய் மதுரைப்பரமேட்டி' இசைவாது.34 திருவிளையாடற்புராணம்)

(2.4 கரடம் - மதம். கரிமுகவர் - விநாயகர். 'மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்'

(3.1 புகலும் - விரும்பும். கந்தருவர் இருவர் இரு குழைகளாகச் செவியிலிருந்து பொழியும் இன்னிசையை விரும்பும். குழியொளியால் மின்னொளி சேர்ந்த மேருமலையை வென்றன.

(3.2 பணம் - படச்ம்.பணிகல் - பாம்புகள். பெருகொளிய பணிகள் - ஒளிமிக்க அணிகலன்கள். 

(3.3 நறுமதலை - கொன்றை. கொன்றைப்பூ பிரணவசொரூபமானது. ஏர் - அழகு.

(3.4 விசயனின் வில்லடியும் மாறனின் பிரம்படியும் பட்ட வடுவை செளப்பியத்தால் அழகுடன் ஏற்றன.

(4.1 அருக - இல்லாமற்போக. இறுகுதல் - இல்லையென்று மறைத்தல். இல்லையென்று கரத்தலை 'இறுக்கி வைத்துக்கொண்டான்' என்பது கொங்கு நாட்டு வழக்கு. கொங்கில் இல்லையென்போர் இல்லை.
4.2 அளிகள் - வண்டுகள். தெனை - தென்னை. )

நேரிசை வெண்பா
தோழி கூற்று

புயங்கா புயங்கவெனப் போற்றினாள் சிந்தை
தியங்கா வுழையர்ச் சினந்தாள் - முயங்கு
வரங்கா தலித்தாள் வடகயிலா யத்தாய்
இரங்காத தென்னோ விவட்கு. (33)

(புயங்கனே என்னுடைப் புயங்களைக் கா - பாம்புகளைப் பூணாக அணிந்தவனே என்னுடைய தோள்கள் காதலால் இளையாமற் கா. தியங்கா - தியங்கி , 'செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சிந்தை தியங்கி - சிந்தை கலங்கி. )

கட்டளைக் கலித்துறை
தோழி கூற்று
விருந்து கண்டொளித்த ஊடல்

இவளைப் புகழ்வதிங் கென்சொல்லி யேந்தல்செய் இன்னலெலாம்
தவளப் பொடியணி யன்பரொ டேயவர் சார்தல் கண்டு
தவலுற்ற கட்செங் கமலங் குவளைத் தகையுற்றவே
பவளத் தடவரை நேர்பட்டி லிங்கர் பதியகத்தே (34)

(தவல் - சுருக்கம். ஊடலால் சுருங்கி சிவந்து செங்கமலம் போன்றிருந்த கண்கள், தலைவன் விருந்துடன் வரக் கண்டு, இல்லறத்தின் பயனாகிய விருந்தோம்புதலின் பொருட்டுக் கருங்குவளைபோலத் தண்மையுடையதான தகைமையைக்கண்டு தோழி வியந்து கூறியது.)

பன்னிருசீர் விருத்தம்
பதியென்று நிதியென்று மனையென்று மகவென்று
        பாசத் தழுந்தி யேயெட்
    பகவென்று மிரவலர்க் கீயாத புரவலர்கள்
        பாலென்று மேகி யேகிக்
கதியென்று நீரெமக் கென்றுபொய் நினைந்துபுன்
        கவிபாடி யமைய நாடிக்
    காலென்றும் நோவதல் லாமலே செல்லாத
        காசொன்று பெற்ற துண்டோ
துதியென்று வசைபேசி னாலுமேற் கும்சுயஞ்
        சோதியை யாதி தன்னைத்
    தொண்டர்பிழை பாராத பெருமானை நஞ்சந்
        துலங்குங் கறைக்கண்டனை
அதிதுங்க விடையேறி வருகோவை மீகொங்கில்
        அணிகாஞ்சி வாய்ப்பேரையில்
    அழகுமிகு மரசவையி லருணடன மிடுமிறையை
        அடைமினிரு மையும டைவீரே. (35)

எழுசீர் ஆசிரிய விருத்தம் 
தோழி கூற்று
சுனைவியந்துரைத்தல்

அடையார் புரங்கள் சுடுமாறு செங்க 
      ணழலேவு மெங்க ளிறையார் 
விடையா ரிருந்த பதியான கொங்கின் 
      மிகுபே ரையின்கண் மடவாய் 
குடைவோர் கருங்கு ழலின்மே லணிந்து 
      விடுமோ குளிர்ந்த தொடையே 
படைநேரு முன்கண் செவிதாக் கிடுங்கொல் 
      படுவேர் தருங்கொல் சுனையே. (36) 

எண்சீர் ஆசிரிய விருத்தம்
தோழிகூற்று
தோழி அறியாள் போன்று குறியாள் கூறல்

சுனைமலர் கொய்திடுவார் சுரிகுழல் பெய்திடுவார் 
      தோகையொ டாடிடுவார் ஓகையொ டோடிடுவார் 
கனைகுர லருவியொடே கானமு ழக்கிடுவார்
      காசுக லன்கலென வூசலு கைத்திடுவார்
அனைநிகர் தயையுடையார் அரசவை யுறையிறையார்
      ஆதிபுரிக் கிணையாம் ஆயிர மாதருளார்
நினைமயல் செய்தவளெப் புனையிழை யெனமொழிவாய்
      நேய மிகுந்துவருங் காயிலை வேலவனே. (37)

கட்டளைக் கலித்துறை
களிறு வினாதல் 
தலைவன் கூற்று

வேலனுங் கும்விழி யீரெங் கடுங்கணை மெய்யுறலாற்
கோலனுங் கொங்கையொக் குந்திரட் கொம்பின் கொலைக்களிறு
காலனுங் குங்கடுப் போடிப் புனம்வரக் கண்டதுண்டோ
மாலனுங் கும்பிடு பட்டீசர் வெள்ளி வரையகத்தே. (38)

தரவு கொச்சகக் கலிப்பா 
(ஓரடி மிக்குவந்த கொச்சக ஒருபோகு)
குயில்விடு தூது
தலைவி கூற்று

தேமாவின் பானாறும் செந்தளிர்க ளவைகோதிக்
கோமாரன் காகளமாய்க் கூவுமிளங் கோகிலமே
ஆமாறு தொழுமடியார்க் கருளுமர சம்பலத்தெங்
கோமானிங் கெழுந்தருள மகிழ்ந்தொருகாற் கூவாயே
குளிர்பொழில்சூழ் பேரூரான் குறுகவெனக் கூவாயே. (39)

எண்சீர் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
காலம்
தலைவி கூற்று
வாய்திறந்து பெருங்கொண்டல் முழங்குகின்ற காலம்
      வள்ளூசி போற்றுளிகள் வழங்குகின்ற காலம்
ஓய்தலின்றி முல்லைசிரித் தலர்தூற்றுங் காலம்
      ஒறுத்துமதன் றுணைப்பிரிந்தா ருயிர்காற்றுங் காலம்
சேய்நடுவிற் பொலியுமர கதவல்லி யுடனே
      சேவேறி வரும்பட்டிப் பெருமான்சே வடிக்கே
நேயர்நமைப் பிரிந்துபொருள் தேடுகின்ற காலம்
      நிறையழிந்தெம் முடலிடைபோல் வருந்துகின்ற காலம். (40)

வஞ்சி விருத்தம்

அம்மா அரசம் பலவன்
அம்மா லயனுக் கரியான்
இம்மா லடியார்க் கெளியான் 
பெம்மான் அருளோ பெரிதே (41)


பதினான்குசீர் கழிநெடிலாசிரிய விருத்தம் 
மறம்

பெரியவாய்ம தங்கள்பேசி வந்ததூத கேளடா
      பிளிறுவேழ முழுவைசிங்க மானவல் விலங்குகொன்
றுரிவைகொண்டு பேரைமேவி யுறையும்வேட ருறவினேம்
      உறுதியற்ற வரசரோடு முறவுகொள்ள விசைவமோ
கரியினோடு சிங்கமுங்க டந்தொரத்தி மீதிலே
      ககனமேவு கொக்கினைக்க டிந்தவேட னுக்குமுன்
அரியவீர மெண்ணியாம்வ ளர்த்தபெண்ணை யீந்தனம்
      அரிதினீன்ற பெண்ணையுங்க ளரசினுக்கு மீவமோ. (42)

எண்சீர்க்கழிநெடில் ஆசிரிய விருத்தம்

வம்பு பேசிய நம்பியா ரூரன்
      மணத்தி லாவணங் காட்டிவந் தாண்டீர்
நம்பு தொண்டனேன் வலியவாட் செயினும்
      நவின்றி லீரொரு நல்லுரை யேனும்
கொம்ப னாளொடுங் கொடுமழு வேந்திக்
      குலவு பேரையி லரசவை நின்றீர்
நம்ப ரேநடு விகந்திரந் துண்டீர்
      நக்க ராயினீர் நாணிழந் தீரே. (43)

நேரிசை வெண்பா

ஈர மதிக்கின்றா னெம்முடலை யம்மதவேள்
ஈர மதிக்கண்ணி யீர்மதியீர் - ஈரைந்து
கையீர் புரமடுந கையீர்பே ரூரிலிருக்
கையீர்க யீர்கடன்காக் கை. (44)

(மதவேள் எம் உடலை ஈர்க்க மதிக்கின்றான். ஈர்க்க - அறுக்க. மதிக்கின்றான் - நினைக்கின்றன். மதியீர் - பிறையைத் தரித்தவரெ, அறிவுடையீரே. கையீர் - கைகளை உடையீர். இருக்கையீர்- வாழ்தலை உடையீர். கையீர் - கசந்துவிடாமல்)

கட்டளைக் கலிப்பா

கைகளுண்டு தொழவலஞ் செய்திடக்
      கால்களுண்டு கனிந்து நினைந்திடப்
பொய்யிலாத நெஞ்சுண்டு புகழ்ந்திடப்
      புனித நாவுண்டு புன்மை யொன்றில்லையே
பெய்யுந்தேனுண்டு வண்டுறங் கும்பொழிற்
      பேரைமேய பிரானுண் டருள்செய
ஐயமுண்டு கொலோநமனா ரைவென்
      றடைவதற்கழியா வின்ப முத்தியே. (45)

சந்தப்பா
தத்தனத் தனத்த தந்த தத்தனத் தனத்த தந்த
தத்தனத் தனத்த தந்த - தனதானனா

முத்தினைப் பதித்த பந்த மற்றிடப் புடைத்தெ ழுந்து
முக்கடக் களிற்றை வென்ற - முலைமாதரார்
முக்கனிச் சுவைக்கு மெஞ்ச லிற்சருக் கரைக்கு மொஞ்சல்
முற்றிடச் செய்விக்கு மின்ப - மொழிபேசுவார்
சத்தியத்தி யத்திவந்து நத்தரைக் கறுத்தெழுந்து
சட்டநிற் களத்த டங்கு - விடநேர்கணார்
தத்துமிக்க பொய்த்த வின்ப முற்றிடக் கணித்த லைந்த
சத்திலிக் கருட்செய் தன்பு - தரநேர்வையோ
பைத்தலைத் தொழுக்கிடந்தொ ருத்தரக் கிரிக்கணின்று
பத்தர்புத்தி யிற்செல் கின்ற - விடைவாகனா
பச்சிலைக் கடுக்கை தும்பை நொச்சியுட் கெருக்கணிந்து
பற்பனுக் கொளித்து யர்ந்த - முடியாளனே
சித்திபுத்தி முத்தி யின்ப முற்றவர்க் களிக்க வென்று
செப்பிடற் கிலக்க மின்றி - யுருவானவா
செக்கரொத்த சொக்க வெங்கு மொப்பறக் குடக்கி லங்கு
சிற்சபைக்கு ணிற்கு மெங்கள் _ நடராசனே. (46)

(மொஞ்சல் -பால்.)

வஞ்சித்துறை

நடராச னடி நாடு -குடதில்லை நகர் கூடு
விடலாகும் வினை கேடு -தொடராது துனும் வீடே. (47)

(துனும் - துன்னும், கிடைக்கும்)

பதினான்குசீர் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
களி

வீட வாவிய முனிவர் மாதவ மேவிடிற்களி கொள்ளுவார்
      மிக்க நூல்பயில் புலவர்மேதை விரும்புவார்மறை நெறியினார்
கோட லெள்ளுவரோவின் சாதியொர் குறைசொல் வாரெவர் சாலியை
      கொங்கி லுங்குறை யுண்டு கொல்குடி வாழ்க்கை நேரறங் கூறுவீர்
பாடல் சால்புகழ்ப் பட்டிலிங்கர் பதத்தி லென்னே யொழுக்குநேர்
      பத்தி யாலரு நீப்ப ரோகுளிர் பான முண்டவ ரேயதன்
ஈட றுஞ்சுக மோர்வர் மெய்யநு பூதியெய்தின ரேயலால்
      இன்ன வாறென வோர்த லுஞ்சொல வல்ல ராவது மில்லையே (48)

தரவு கொச்சகக் கலிப்பா
(ஓரடி மிக்கு வந்த கொச்சகஒருபோகு) 
பெயர்கேட்க விரும்பல்
தலைவி கூற்று

இலகியசெந் துகிரனைய வெழில்வாய பைங்கிளியே
நலமிகுபா னறவுகனி நயந்துண்ண நான்றருவேன்
அலகிலிரு வினையழித்துள் ளானந்தத் தேன்சொரியும்
இலகியசே வடிப்பெருமான் திருநாம மியம்பாயே
ஏராரும் பேரூரான் சீரொருகா லியம்பாயே. (49)

மூவருமாய முழுமுதல்

தானன தத்தன தானன தத்தன தானன தத்தனனா

பாயக லைத்திரள் யாவும ளித்தருள் பானிற வுத்தமியாள்
      பாரதி யைத்திரு நாவினில் வைத்துல கானப டைத்தவனும்
சேயநி றத்திரு மாதுக வுத்துவ மேயவு ரத்தனுதா
      சீனம றப்புவி யாவும ளித்தொரு நாளவை துய்ப்பவனும்
தூயப ரைக்கொரு பாகம ளித்துல கியாவு நொடித்திமையோர்
      சோதியு டற்பொடி மேனித ரித்தருள் சோதியு முய்த்துணர்வீர்
ஆயென வெய்த்திடு வோரைய ளித்திடும் ஆறையி னிற்றவமே
      வான்வழி பட்டிடு போதிவ னப்பிற வானெறி யுத்தமனே. (50)

(ஆறை - ஆறை நாடு. கொங்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்று. ஆறைநாட்டுப் பேருர் ன்றுகல்வெட்டுக்களில் வழங்கும். ஆயென- தாய்போல் அளித்திடும்) 

கட்டளைக் கலித்துறை 

போதிவ னத்தயில் காயெனத் தாய்சொலப் போந்தவனும் 
போதிவ னத்தல மென்னும் பிரமனும் போற்றிசைப்பப் 
போதிவ னத்தமர் சோதியைப் போற்றுதும் புன்மையறப் 
போதிவ னத்திருத் தொண்டரைக் கூடுதும் போதமிதே (51) 

(போது இவனத்து அயில்காய் - இங்கு போந்து இந்தப் பாலை உண்க. இவ்வாறு அழைக்கப்பட்டவன் திருமால். 'எந்தை வருக - முலை உண்க வருக என கோசலை' (தொந்திசரிய, திருப்புகழ்,திருச்செந்தூர்) போது - மலர், அனத்தலம் - அன்னப்பறவைக்கு இருப்பிடம். போதிவனத்து அமர் சோதி - அரசம்பலத்தில் இருக்கும் பட்டிப்பெருமான். புன்மையறப் போதி - சிறுமை நீங்குமாறு , அறியாமை நீங்குமாறு போதிக்கின்ற. வனத் திருத்தொண்டர் - அழகிய திருத்தொண்டர்கள். போதம் இதே - அறிவு இஃதே.) 

கட்டளைக்கலிப்பா 

தமருந் தந்தையும் தாயும் தமையனும்
தமிழும் சைவமும் தந்த தயாளனௌம்
எமனை யும்பிர மாவையு மஞ்சிடா
தின்ன ருள்தரு மெங்குல தெய்வமும்
குமரன் தாதை மரகத வல்லியோர்
கூறனேற மருங்குனக் குன்றுவிண்
அமரர் கோமுனி பட்டி முனிக்குமுன்
அரச வைக்கணின் றாடு மமுதனே. (52)

வேற்றொலி வெண்டுறை

ஆடுகின்ற சேவடியா னரியதனு கரணமொடு புவன போகம்
கூடும்வகை யுயிர்க்களித்துக் கூத்தாட்டு மரசவையெங் கோமான் தாள்கள்
அணிமா மலர்கொடு தாழ்பவர்
அயிரா வதமிசை யேறுவர்
அனமே றுவர்மயி லூருவர்
அடலார் கருடன்வெந் மேவுவர்
அழகார் விடையை நடாவுவர்
அமரோர் தொழநனி வாழ்வரே. (53)

(இந்திரபதவி, பிரமபதவி, சுப்பிரமனிய சாரூபம், திருமால் பதவி, சிவசாரூபம் பெறுவர். வெந் - வெரிந்,இடைக்குறை, முதுகு)

அறுசீர் ஆசிரிய விருத்தம்
தோழி வன்புறை
வாழும்வகை யெமதுயிர்தங் கையுடைய
      வள்ளல்மொழி மாறு மாயின்
வீழுமவர் சடைப்பட்டிப் பெருமான்மெய்த்
      தொண்டர்தமை வீட்டக் காலன்
சூழுமடி ஞானத்தால் துரியநிலை
      கடந்தவர்தம் தூய சிந்தை
தாழுமல மாயையினில் தளருமிடை 
      வளருமுலைச் சயில மானே. (54)

சந்தக்கவி
தனன தனதன தனன தனதன
தனன தனதன - தனதனா

சையில மிருபிறை தவழ வருவதோர்
தகைய கரியினை யுரிசெய்தாய்
சையில மடமகள் வளரு மிருதன
சையில முழுபுய சையிலனே
சையில வளைசிலை யுடையை யிரசித
சையில மிசையிலை யுருவனே
சையில நிகருமு பரிகை மலியர
சவனமுறைசிவ வடியரேம்

சையில நடலைகொ டுமைக ளிலமொரு
      தளர்வுமிலமட மகளிரா
சையில நிலநசை யிலமொர் பொருணசை
      யிலம்வினைகளி னசைவமோ
சையில முடியர ணுறையு மவர்தமை
      நலிவ துகொல்கிரி டியினினம்
சையில மெனநிலை பெறுவ மெனுமொரு
      தயிரி யமடைய அருள்வையே. (55)

பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்
கொற்றியார்

வையா நசையா ரெந்நாளும் மாலார் பஞ்ச ராத்திரியார்
      வருந்து ளவத்தார் குறைதீர வண்மை நீரான் மண்ணிடுவார்
மெய்யா மன்பாற் சங்கரிதன் விளங்கு நாமம் விளம்பிடுவார்
      மேவும் பேரை நகரினிலே வீதி தோறும் திரிந்தேநீர்
பொய்யா மிடையால் கனதனத்தாற் புதிய திருவாய் மொழியினால்
      புதுக்கி மாலார் நெறிவளர்க்கப் புறப்பட் டீரே கொற்றீரே
உய்யா ரிந்த வூரார்நீ ருவந்து திருக்கண் ணமுதளித்தும்
      உரத்த சடகோ பமுங்கரத்தி லுதவா விடின்வீழ்ந் தொழிவாரே. (56)

(பிச்சைக்கு வரும் வைணவப் பெண்ணொருத்தியைக் கண்ட காமுகன் கூறுவது கொற்றியார் என்னும் உறுப்பாகும். இவ்வுறுப்புடைய பாடலில் வைணவம் மத சம்பிரதாயச் சொற்கள் சமற்காரமாகப் பயன்படுத்தப்படும். வையா நசையார் - பழிப்பிலா ஆசையுடையார், வைகானசம் என்னும் ஆகமம் உடையார். மாலார் - திருமால் சமயத்தினர், மயக்குபவர். பஞ்சர்—ஏழையர், வறியர்.ராத்திரியர் - இரவுநேரத்தில் அலைபவர். உடையவர், பாஞ்சராத்திரம் என்னும் ஆகமத்தினர். வருந்துளவத்தார் - வருந்தும் உளத்தவர், துளவத்தவர் - துளசி அணிந்தவர். நீரான் மண்ணிடுவார் - நீரில் குளிப்பார், திருமண்(நாமம்) இடும் இயல்பினர். சங்கரி தன் நாமம் விளம்பிடுவார் - உமையின் நாமத்தை விளம்பிடுவார், சங்கு(பாஞ்சசன்னியம்), அரி தன் நாமம் கூறிடுவார். திருவாய்மொழி - இங்கிதப் பேச்சு, நம்மாவார் பாசுரங்கள். மாலார் நெறி - காமுகர்களை மயக்கும் நெறி, திருமால் நெறி. திருக்கண்ணமுது - அன்பான பார்வை, பாயசம். சடகோபம் - திருமால் கோவில்களில் பத்தர்களின் முடிமேல் வைக்கப்படும் திருவடி, கொங்கை)

கொற்றியார்
எண்சீர் ஆசிரிய விருத்தம்

ஒழியாமலி ராமானுச மென்றேமொழி கின்றீர்
      உம்மாணையி ராமானுச மென்றேமொழி கின்றேன்
வழிதேன்மிகு துளவந்தனை மார்மீதுத ரித்தீர்
      மாலேமிகு துளவந்தனை மார்பூடுத ரித்தேன்
அழியாவினை யதிரிந்திரு மண்ணங்கம ணிந்தீர்
      அழகீரடி யுந்திரு மண்ணங்கம ணிந்தேன்
பழியீரினி யானுந்திரு மாலின்னடி யானே
      பட்டிப்பதி வாழ்கொற்றியீர் நட்புற்றணை வீரே. (57)

(இரா மானுசம் - மனித இனமே இராது. துளவம் - துளசி. மாலே மிகுது- மயக்கமே மிகுகின்றது. உள வந்தனை மார்பூடு தரித்தேன். மனமார்ந்த வந்தனையை என்மார்பூடு தரித்தேன். திருமண் அங்கம் அணிந்தீர், உம் காலடியில் உதிரும் புழுதியை என்னுடலில் அணிந்தேன்.)

அறுசீர் ஆசிரிய விருத்தம் 
காமமிக்க கழிபடர் கிளவி

அணைமீதி லமையாமற் புரள்கின்றா
      யலைகின்றா யரற்று கின்றாய்
துணையார மோடுவளை களையெறிந்து
      கண்ணீருஞ் சொரியா நின்றாய்
இணையாரு மில்லாத பேரூர
      னடிக்கன்ப ரிச்சை யாலோ
உளையாநின் றாய்கடலே பெரியோரும்
      ஊழ்வினையை ஒதுக்கல் ஆமோ. (58)

கட்டளைக் கலித்துறை

ஆமோ தமியன்புன் சொல்லர சம்பலத் தாரமுதே
தாமோ தரய னாதிவிண் ணோர்சொலும் சார்வரிதே
யாமோ தரியதென் றேமறை யோதியி ளைத்திடுமே
நாமோத நஞ்சுண் டமுதிமை யோர்க்கு நயந்தவனே. (59)

(தமியேன் புன்சொல் ஆமோ. நாம் ஓத நஞ்சு. நாம் - அச்சம் ஓதம் - கடல்)

அறுசீர் ஆசிரியவிருத்தம் 
விடைமுழக்கம்

நயந்துவிடை முழங்கமழை யிடியென்று
      கொன்றைநகும் நவ்வி யஞ்சி
உயர்ந்தசடைக் காடுபுகத் தாவுமுரத்
      துமைமுலைகள் உற்ற புற்றில்
புயந்தழுவும் பாம்பினங்கள் பயந்துபுகும்
      கங்கைபொங்கும் பொழில்க டோறும்
வயந்தனிளந் தேருலவும் பேரைநக
      ரரசவைவாழ் வள்ள லாரே. (60)

எழுசீர் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
வலைச்சியார்
ஆரல் கெண்டைவ ரால்கெ ளுந்திநெ 
      யயிரை யாதிய மீனினம்
வாரி வந்துசெ வாய்தி றந்துப 
      கர்ந்தி யங்குவ லைச்சியீர்
வேரல் பம்பிய காஞ்சி யின்கரை 
      மேய பேரையின் விடர்களும்
மூரல் முத்தமிழ் தழைத்து கிர்க்குமு 
      லைக்கு மாவியை விற்பரே (61)

(மீன் விற்கும் வலைச்சி மீது காமுற்றவன் கூற்று.)

நேரிசை வெண்பா
வலைச்சியார்
ஆவியா மீன்பிடிக்கு மாரணங்கே பேரையிலெம்
ஆவியா மீனுமதி யாமுகத்திற் - காவி
விழிவலையில் வீழ்ந்து விடுபடா தேங்கும்
பழிவலைநீ வீழ்தல் பழுது. (62)

எண்சீர் ஆசிரிய விருத்தம்

பழுதகன்ற மதுரமிஞ்சு பனுவலொன்று புனைகிலேன்
      பரிவொடுங் கண்மல ரணிந்துன் னடிகணெஞ்சி னினைகிலேன்
இழுதுவிஞ்சு கறியொடும்ப லமுதமன்பர் நுகருமா
      றிடுகிலன்செய் திலனொர் தொண்டு மெளியனன்பு பெறுவனோ
இழுதையென்கை விடிலழிந்து விடுவல் பின்பு கருணையோ
      டெவர்வி ரைந்துகுறை களைந்து கதிதருஞ்செய் கையில்வலார்
தொழுதுநின்ற கரவிடும்பை யொழியவின்பு தரவலாய்
      சுரபிதந்த குழவிகொம்பு குரமழுந்து சுவடனே. (63)

பன்னிருசீர்க்கழிநெடில் ஆசிரிய விருத்தம்
குறம்

அன்னே மருத மலைக்குறவ னப்பன் வெள்ளி மலைக்குறவன்
      ஆத்தாள் பச்சை மலைக்குறத்தி யவர்க ளெல்லா மெமக்குறவர்
சொன்னேன் குறியும் பொய்யாமோ தோகா யுன்ற னுளங்கவர்ந்த
      தோன்றல் இயல்பை யாதென்று சொல்வேன் யார்க்குஞ் சொலற்கரிய
கன்னா ருரிக்கும் வல்லாளன் கனக மலைசேர் வில்லாளன்
      கலந்தும் பிரிந்தும் காணரியான் கடியார் பொழில்சூழ் பேரூரன்
முன்னான் பின்னான் பேரில்லான் மோசம் புரியா னேசர்தமை
      முயங்குங் கடிதி லுனைமானே முடிய வின்ப முன்னாமே. (64)

வெண்பா

முன்னு முனக்கடிமை முன்னினேன் மோழையேன்
பின்னு முனையன்றிப் பின்செல்லேன் - அன்னை
அனையபிற வாநெறிவா ழப்பனே யொப்பேன்
எனையபிற வாநெறியு மே. (65)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஏறுளதா லுழுவதனுக் கிருவருளர்
      சிறுவரதை மேய்க்கக் கங்கை
யாறுளது பாயமனை யாட்டியுளள்
      பானைபிடித் தாக்கக் கோடி
தேறுதொண்டர் குற்றேவல் செய்யவிருக்
      கின்றனரூழ்த் திறமோ எங்கள்
பேறுதருந் திருப்பேரூர்ப் பெருமானே
      யெடுப்பதென்னீ பிச்சை தானே. (66)

அறுசீர் ஆசிரிய விருத்தம் 
பிச்சியார்

பிச்சியார் கரியகுழற் பச்சைநா யகியிடத்திற் பிரியா வேத
உச்சியார் பேரூரி லையம்பெய் யென்றுதெரு வுலாவு கின்ற
பிச்சியா ரேமார னையம்பெய் தானுமெழிற் பெருக்கை நோக்கி
யிச்சியார் யாரேயெம் முயிர்க்கையம் பெய்கின்றீ ரிதுத காதே. (67)

(பிச்சியார்- பிச்சை கொள்ளும் சிவவேடங் கொண்ட பெண். பிச்சியார்மேற் காமுற்றவன் கூற்று. பிச்சியார் கரிய குழல் -பிச்சிப்பூ நிறந்த கருங்கூந்தல். ஐயம்பெய் - பிச்சையிடு. மாரன் ஐயம்பு எய்தான். எம் உயிர்க்கு ஐயம் பெய்கின்றீர் ) 
கட்டளைக்கலித்துறை 
வண்டோச்சி மருங்கணைதல்

தகுமோ தரியலர் மும்மதி லன்று தழன்முழுக
நகுமோ தரிய புகழ்ப்பட்டி நாதரை நாடலர்போல்
இகுமோ தரிப்பரி தேமுலைப் பார மிடையிடுக்கண்
மிகுமோ தரியினங் காளினி யீர்ங்குழன் மேவன்மினே (68)

(மேவல் தகுமோ? தழல் முழுக நகும் ஓதரிய பட்டிநாதன். இகும்- இற்றுவிழும். தரிப்பு அரிதே. தரித்தல் - தாங்குதல். மோதும் அரியினங்காள். அரியினம் - வண்டுக்கூட்டம்) 

நேரிசை வெண்பா
மேகவிடுதூது

மேவினீ ராயிற்றண் மேகங்காள் பேரூரில்
ஓவியமே ஒக்கு முருவத்தெம் - மாவியினைக்
கண்டுனன்ப னின்றுவந்து காணுமெனி னானிலமேல்
உண்டு புணியங்க ளுமக்கு. (69)

(புணியங்கள் - புண்ணியங்கள்.தொகுத்தல் விகாரம்) 

கட்டளைக்கலிப்பா
தகையணங்குறுத்தல்
தோழி கூற்று

உமைகலந்து பசந்தசெம் மேனியா
      ரோங்கு பேரையிற் றீம்புன லாடியே
இமைகலந்திடு முன்வருவாளெம
      தின்னு யிர்த்துணை மின்னிடைப் பேதையாள்
கமைகலந்தமைக் கண்சிவப் புந்துகிர்க்
      கடிகையன்ன விதழ்வெளுப் பும்மலால்
அமைகலந் தெமென்தோ ளணங்கேநுமில்
      அரிது வேற்றுமை யார்க்கு மறிதலே. (70)

எண்சீராசிரிய விருத்தம்

அரியபல கலைகளெலா மறிவா ரேனு
      மைந்தடக்கித் தீயினிடை நோற்பா ரேனும்
பெரியபல சித்தியெல்லாம் வல்லா ரேனும்
      பெரியரென நினைவதனுக் குரிய ரோதான்
கரியமுகி னெடியசிலை யொடுவந் தன்ன
      காலத்திக் கண்ணப்ப னெச்சி லுண்ட
பெரியபொரு ளானதிருப் பேரூ ரீசன்
      பெருந்தொண்டர் தமையறியாப் பேதை யாரே. (71)

வெண்பா

பேதைமையால் வாய்மதங்கள் பேசிநாள் போக்குவிரேல்
வாதைமையால் வன்மறலி வந்தக்கால் - ஏதுசெய்வீர்
நிச்சமிலை யேனுமிட்டு நின்மலன்பே ரூர்நினைமின்
அச்சமிலை யச்சமிலை யாம். (72)

எண்சீர்ஆசிரியவிருத்தம்

இலைமலிந்த வேனம்பி யிடையே மேவ
      இடப்பாற்சிற் றிடைப்பச்சை வல்லி மேவ
அலைமலிந்த புனற்கங்கை யாடுந் திங்கள்
      அமுதநில வெறிந்துமுடிக் கணியாய் மேவ
மலைமலிந்த திண்டோண்மேற் கொன்றை மேவ
      மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே
குலைமலிந்த தேமாவின் பொழில்க டோறும்
      குயினுழையுந் திருப்பேரூர்க் கோயிலானே. (73)

பதினான்கு சீராசிரிய விருத்தம்
கூடல்

கோயி லாக நீடு போதி நீழன் மேவு குழகனார்
      கோதி லாத பேரை யாளு நீதி யாள ரருளைநேர்
பாய வாரி வாரி யுண்டு தீயை வீசி மின்னியே
      பருவ மேக நிரைக ளாவி பருகு மாறு வருமுனே
வாயு வேக மான தேரி லேறி யென்றன் னாவியே
      மானு நேய ரெனைநி னைந்து வந்து கூட லருமையே
நீயி நாளின் வரைபு ரிந்த வாறு செய்தி டாமலே
      நேயமோ டெனாவி வாழு மாறு கூடு கூடலே. (74)

கட்டளைக்கலித்துறை

கூடும் படிக்கருள் செய்வார்கொலோ தொண்டர் கூட்டமன்றி 
வாடும் படிக்கு விடுவார் கொலோகொடு மாயையினில்
நீடும் படிக்கணி யாமர சம்பல நின்மலனார்
பாடும் படிக்கவுணிக் கமுதீந் தபரஞ் சுடரே. (75)

அறுசீராசிரிய விருத்தம்

சுடரனைய வமரர்மணி முடிதோய்ந்து னடிமலர்கள் சிவந்த வேயோ
படரொளிய வடிமலர்கள் படவமரர் முடிகளொளி படைத்த வேயோ
வடவரையி லழகியதென் கயிலைவளர் சாரலிலே வளஞ்சார் பேரூர்
தடவரையி லுயர்கோயி லடியர்குடி தழையவருள் தழைந்த தேவே. (76)

பன்னிருசீர் ஆசிரியவிருத்தம்
மதங்கியார்

தேவ ரசைவு கண்டுவிடந் திருவா யமுது செய்தளித்தார்
      செகங்க ளசையத் தாமசையுந் திருவா ரரசம் பலவாணர்
பாவும்புகழ்கள் பலபாடிப் பரதம் பயிலும் மாதங்கி
      பணைத்த முலைக ளசையின்மதன் பரிய முடியு மசையுமிடைத்
தாவு மரிமா னசையின்வலித் தருண ருள்ளக் கரியசையும்
      தாள்க ளசையின் முனிவருள்ளக் கோள்க ளசையு மிதழசையின்
காவல் புரியு மரசரையும் கண்ணாம் வேல்க ளசைந்திடிலோ
      கால னசையு மெமதுமனக் கலக்க மிசைக்க வொண்ணாதே. (77)

(மதங்கர் என்போர் இசைக்கும் கூத்துக்கும் உரிய சாதியார். அச்சாதிப் பெண்மீது காமுற்ற இளைஞன் கூற்று இக்கலம்பக உறுப்பு. தேவர் அசைவு - தேவர்களின் நடுக்கம். அசைவு - நடுக்கம். இறைவர் அம்பலத்தே ஆடும் கூத்தால் உலகம் இயங்குகின்றது. அதுபோல மதங்கி ஆடும் கூத்தால் அசைகின்ற அவள் உடலுறுப்பால் அசைவனவற்றைக் கூறுகின்றது இப்பாடல். மகளிர் நகில் மன்மதன் முடியாகக் கூறப்படும். அரிமான் - சிங்கம். சின்கத்தின் இடை மகளிரின் இடைக்கு உவமையாகக் கூறப்படும். தருணர் - இளைஞர். கோள்கள் - கிரகங்கள், பிரமசரியம், பெண்டிரை நோக்காமை முதலிய கொள்கைகள். இவைகள் எல்லாம் அசையும்போது என் மனம் கலக்கம் அடைவதைச் சொல்லத்தான் வேண்டுமோ என்றவாறு ) 

கட்டளைக்கலித்துறை

ஒண்ணாது வெள்விடை யேவிரைந் தோடுவ தோர்கணமெங்
கண்ணாரக் காண்பதற் கிங்குநில் லாய்கரி கால்வளவன்
எண்ணா வரும்பழி தீர்த்தநற் பட்டிலிங் கேசனைமென்
பெண்ணார்க் கிடர்விளைப் பாரோ வறத்திற் பெரியவரே (78)

(மென் பெண்ணார்- மெல்லியராகிய பெண்டிர். இறைவன் ஏறும் விடை தருமவிடையாகலின் அறத்திற் பெரியவர் என்றாள்.)

வெண்பா

பேரழகன் பட்டிப் பெருமா னெழில்கண்டால்
யார்பசப்புற் றுள்ளம் இளகாதார் - நாரணனுந்
தங்கையும்தம் மேனி தழுவித் தணிந்தாரோ
பைங்கொடியீர் மேனிப் பசப்பு. (79)

அறுசீராசிரிய விருத்தம்

பசக்குமே தளிர்போன் மேனி பாலொடு தேனும் வேம்பாய்க்
கசக்குமே கலைநீங் கும்மே கைவளை கழன்று போமே
இசைக்குமே பட்டி பட்டி யென்றுகண் ணீர்மல் கும்மே
வசைக்குமே தேனு மஞ்சாள் மடந்தைதன் செயலீ தென்னே. (80)

பன்னிருசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் 
மடல் விலக்கு
தோழிகூற்று
செயலையந் தளிருந் திகழுமென் கொடியுந்
       தெங்கிளங் குரும்பையு மடியும்
   சிறியநுண் ணிடையு முலையுமென் றெழுதிற்
       செவ்வன நடக்குமோ நுடங்கிப்
புயமலை யழுந்திக் குழையுமோ பவளம்
       பொருகயல் மதியிதழ் விழிகள்
   பொலிமுக மெனநீ யெழுதிடில் அமுதம்
       பொழியுமோ மிளிருமோ நாண்மோ
புயலென முழவ மதிர்தர மந்தி
       பொதும்பர்புக் கொளித்திடும் பேரைப்
   புண்ணிய னடிகள் நண்ணிடா தவர்போற்
       புன்றொழிற் செய்யவுந் துணிந்தாய்
அயலவர் பழிப்புக் கஞ்சிடாய் பறவை
       யலமரற் கிரங்கிடாய் மடன்மா
   அழைத்துநீள் வீதி வருவல்நாண் டுறந்தென்
       றறைந்திடு மடல்கொள்வே லவனே. (81)

(காமம் மிக்க இளைஞர் தம் அன்புக்கு உரியரைப் பெறாதவிடத்து மடலேறுவதாகக்கூறுவர். மடல்- பனங்கருக்கு.தான் காதலித்த தலைவியைப் பெறாதவிடத்துத் தலைவன் பனங்கருக்காற் குதிரைபோர்செய்த ஊர்தியின்மேல் ஆடையின்றி எருக்கம்பூமாலை சூடிக் கொண்டு, தலைவியின் உருவம் வரைந்த கிழியைக் கையில் ஏந்திக் கொண்டு ஏறுதல் மடலேறுதல் எனப்படும். ஊர்ச்சிறார் அக்குதிரையைப் பற்றி தலைவி வாழும் தெருவழியே இழுத்துக் கொண்டுவருவர். தலைவனின் உருதியைக் கண்ட ஊரார் தலைவியைத் தலைவ்னுக்கு மணமுடிப்பர். இது புலவர் அகப்பொருளில் நாடகச் சுவை கருதி நாட்டிக் கொண்ட புலனெறி வழக்கு. மடலேற எடுக்கும் கிழியில் நீ அசோகந்தளிர் கொடி தெங்கிளங் குரும்பை ஆகியன எழுதித் தலைவியின் சீறடி, இடை, முலை எனக் காட்டலாம். ஆனால், அசோகந்தளிர் நட்க்குமோ, கொடு நுடங்குமோ, தெங்கிலங்குரும்பை தலைவனின் தோள்மலையைக் குழைவிக்குமோ. இதழ் எனப் பவளத்தையும் கண்ணெனக் கயலையும் முகம் என மதியையும் எழுதலாம். அவை இதழ் போலஅமுதம் பொழியுமோ, முகம்போலமிளிருமோ, கண் போல நாணுமோ? மேலும் பறவைகள் கலங்கிடுமாறு பனையை அழித்து மடல்மா செய்து வருவல் என பேரூர்ப் புண்ணியனை அடையாத பாவிகள் போலப் பாவத்தைச் செய்யத் துணிந்தாயே, எனத் தோழி மடல் விலக்கியது) 

கட்டளைக்கலித்துறை
புணர்ந்துடன் வருவோர்ப் பொருந்தி வினாதல்
தலைவன் கூற்று

வேலைப் பழித்த விழியாளு மன்பனு மேவிடப்
பாலை வனத்திடைப் பார்த்ததுண் டோபட்டி நாயகர்சேய்
போலைப் படைத்தவற் கண்டேனிவ் வன்னை புகல்பிறிதென்
னூலைப் பழித்த விடைத்தே மொழியாய் நுவலுகவே (82) 

(பட்டி நாயகர் சேய் போல் ஐ படைத் படைத்தவற் கண்டேன், 'ஐ' - அழகு, தலைமை.)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

நுவலருஞ்சீர்ச் சொல்வேந்த னல்லேன் ஞானம்
     நுகர்ந்தமறைப் பிள்ளையல்லேன் நம்பியல்லேன்
உவமமிலாத் திருவாத வூர்த்தே வல்லேன்
     ஓங்குதிரு வருள்வடலூர் வள்ள லல்லேன்
அவர்மொழிகூட் டுண்டதிருச் செவிகட் கந்தோ
     வடிநாயேன் புன்மொழிக ளாமோ விண்ணோர்
நவவமுதுண் டவர்க்கேழை புன்கூழ் வார்த்தல்
     நயப்பாமோ திருப்பேரூர் நயந்த தேவே. (83)

எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
தேவ தேவநிற் பித்தனென் றிகழேன்
     செம்ம லர்ப்பதம் சுமந்திட முனியேன்
ஓவி லாதுபொன் றருகென வளையேன்
     ஊடு மாதற்பாற் றூதென விடுக்கேன்
ஆவ லான்வலிந் தடிமைசெய் கின்றேன்
     ஐய னேயெனக் கொளித்திட லழகோ
பாவகாரிகட் கரியவான் பட்டிப்
     பச்சை வல்லிசேர் பவளமால் வரையே. (84)

(பித்தன் என்று இகழ்ந்ததும், திருப்பாதத்தை முனிந்ததும், பொன் தருக என வளைத்ததும், மாதர்பால் தூது விடுத்ததும் நம்பியாரூரர்.) 

எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

வரையனைய வின்முறிய மாட்டி னேனோ
     மண்சுமக்க வைத்தேனோ வழக்கிட் டேனோ
புரைநெறியிற் புகுந்தேனோ கல்லா லுன்னைப்
     போட்டேனோ வுதைத்தேனோ செருப்புக் காலால்
விரைமலரார் முடிமீதி லுமிழ்ந்திட் டேனோ
     மிகவிரந்து மிரங்காத வினையா தெந்தாய்
சுரையருந்திக் கொலைபயின்று திரிந்த பொல்லாச்
     சுமதிதனக் கருள்பேரூர்ச் சுரர்தங் கோவே. (85)

(வில் முறிய மாட்டினது, அருச்சுனன். மண்சுமக்க வைத்தது, வந்தி. வழக்கிட்டது, நம்பியாரூரர். புரை நெறியிர் புகுந்தது, திருநாவுக்கரையர். கல்லால் போட்டது, சாக்கிய நாயனார். உதைத்தது, கண்ணப்பர். உமிழ்ந்தது, திருநீலநக்கர் மனைவியார். சுரை - மது)

அறுசீர் ஆசிரிய விருத்தம்
இடைச்சியார்

கோவின்பால் வெப்பொழித்துக் கூடலின்பா
     லருள்புரிந்த குழந்தை ஞானப்
பாவின்பா லானாத பற்றுடையான்
     பசுபதியான் பட்டி யூரில்
ஆவின்பால் பகருமெழி லாய்ச்சியரே
     நும்மைம்பா லணையின் மேவிப்
பூவின்பா லூறலருந் திடநேயம்
     புரிவீரேற் புகழ்கொள் வீரே. (86)

(பால் விற்கும் இடைக்குலப் பெண்மீது காமுற்றவன் அவளிடம் கூறியது. இப்பாடலில் 'பால்' என்னும் சொல் பயின்றுள்ள சிறப்பை நோக்குக) 

கட்டளைக்கலித்துறை
செவிலியிரங்கல்
கொள்ளார் நிரைகவர் வேடர் துடிக்குளங் கொட்குங்கொலோ
முள்ளார் பரன்முரம் பத்தடிபாவ முசியுங்கொலோ
கள்ளார் தொடைக்கரி காலன் பழியொழி கண்ணுதல்சீர்
உள்ளா ருறுங்கொடும் பாலையில் வாடுங்கொ லொண்டொடியே (87)

எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
ஆடுதிருடன்

ஒண்டொடிச்சிற் றிடைச்சியுள முருகமய லூட்டி
     உமைக்காத்த வண்டர்விழித் திருக்க வயலோட்டிக்
கொண்டனிறக் கோபாலக் கோன்வாய்மண் போட்டுக்
     குளிர்சோலைப் பேரூரிற் பட்டியினிற் குனித்தே
கண்டவர்க ளதிசயிப்ப வாட்டையெடுத் தெமது
     கண்ணிலகப் பட்டபெருங் கள்வரே யுமக்குத்
தெண்டமிடு வோமலர்தூற் றிடுவோம்தா ளிணைகள்
     சிக்கெனவே பிடித்தொடுக்கச் சிறையிலிடு வோமே. (88)

(அண்டர் - தேவர்கள், இடையர்கள். கோபாலக் கோன் - கோபாலனாகிய திருமால், கோன் என்ப்து இடையர்களின் பட்டங்களில் ஒன்றாகிய கோனார் என்பதின் சுருக்கம். குனித்தல் - ஆடுதல். ஆட்டை எடுத்து - ஆட்டினைத் தூக்கிக் கொண்டு, ஆடலைச் செய்து. தெண்டமிடுவோம் - அபராதம் போடுவோம், வனங்குவோம். அலர் தூற்றிடுவோம் - மலர்தூவி வணங்குவோம், பழிதூற்றுவோம். சிறையிலிடுவோம் - மனச்சிறையில் வைத்துத் தியானிப்போம். 

எழுசீர்கழிநெடிலாசிரிய விருத்தம்

ஓமிகு மறையை யிடையற லின்றி
     யுணர்வினி னவின்றெனை யலைக்கும்
தோமிகு புலனு முள்ளமு மொடுங்கத்
     துலையினா வெனவசை வின்றி
நாமிரு வரும்வே றறப்புண ரின்ப
     ஞானநன் னிலையெனக் கருள்வாய்
காமிகு பேரூ ரரசவை நடுவோர்
     காலெடுத் தாடுகற் பகமே. (89)

வெண்பா

கற்போலுந் திண்மை கழிந்து நிமிர்ந்தவுடல்
விற்போலு முன்னமே மேவுகவே - அற்போலும் 
கண்டத்தா னண்டத்தர் காவலான் வெண்டிங்கட்
டுண்டத்தான் பேரூரான் தொண்டு. (90)

ஆசிரியப்பா
தலைவன் வரைவொடு வரக்கண்ட தோழி கூற்று

தொண்டர் பெருங்குழுக் கொண்டுகு லாவி
ஒருவர் நெஞ்சணிநீ றொருவர்பின் படியத்
தாய்வரக் காத்தநற் சேய்போ னிற்ப
வெள்ளியங் கிரியிற் றுள்ளிவீ ழருவி
முழக்கென முழவு முழங்க வின்னியம்
தேனிக ரிசைநெடு வானகம் பரப்ப 
அந்தண ரருமறைச் சந்தங் கரைய
முந்திய மூவர் செந்தமிழ் செவிவழிச்
சிந்தைபாய்ந் தின்பந் தேக்கச் சிவசிவ
அரகர வெனுமொழி கடலென முழங்கச்
சீரார் பங்குனி யுத்திரத் திருநாள்
ஆரா வமுதன் ஆன்பட்டி நாதன்
பாரோர் பரவப் பச்சைக் கொடியொடு
கோயில் வாயிற் குறுகிடக் கண்டோர்
எல்லார் சிந்தையு மெய்துபே ரின்ப
மனைத்துந் திரண்டென் னகம்புகுந் ததுபோ
லாயிற் றம்ம தாய்கொடுஞ் சொல்லும்
வம்ப மாதர்வா யம்பலு மலரும்
மூளாத் தீபோ லுள்ளே கனற்றும்
மாளாக் காம நோயும் வீய
வாளை வாயிற் பாளை வாய்த்தேன்
துளிக்கும் பழனக் கழனி யூரன்
சான்றோர் முன்னுறப் பொன்னொடெம்
மீன்றோர் பால்வரை வென்னவந் ததுவே. (91)

எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
தோழி கூற்று
வந்து வந்தருள் தந்தி டாரெனி னும்பு லந்திட வல்லனோ
நொந்து நொந்து நினைந்தி டுங்குறை தம்மை யேவரி னொய்தினின்
முந்து முந்தென நூக்கு முள்ள நலங்க ளேமு னுணர்த்தியே
இந்தி ருந்த முகத்தி பேரையி லீச ரன்புறு நேசரே. (92)

(தலைவனைக் காணாத போது புலந்த நெஞ்சம், கண்டபொழுது அவனை நோக்கு இந்தியது. அதனால் புலக்க வல்லமோ எனத் தலைவி கூறினள். இந்து இருந்த முகத்தி - மதி வதனி, தலைவி). 

தோழி தலைவனை நகுதல்
கட்டளைக்கலித்துறை

சரணம் புகுந்தவர்த் தானாக்கு மான்பட்டிச் சங்கரன்றாள் 
அரணம் புகுந்தவெம் மையரெய் யுங்கணை மொய்களிற்றின்
முரணம் புகர்முகந் தைத்தூ டுருவிப்பின் மண்முழுகும்
இரணம் புல்வாய்ப்படைத் தோடவெய் தீர்வின்மை யென்னென்பதே. (93)

(கையில் தழை ஏந்தி, 'என்னால் அம்பு தைக்கப்பட்ட களிற்றினைக் கண்டீரோ' எனவினவி வந்த தலைவனைத் தோழி நகுதல். எம் ஐயர் - எம்முடைய தலைவன். இரணம் - புண். எம் ஐயர் ஏந்திவந்த அம்பு(தழை)அவர் எய்த களிற்றின் முகத்தை ஊடுருவிப்பின் மண் முழுகும்; மானின் வாயில் இரணம்(புண்) படுக்கும். தலைவரின் வில்லாண்மை (வின்மை) என்னென்பது எனக் கூறிச் சிரித்தது)
வெண்பா

என்னஞ்ச னெஞ்சே யியமன் றனக்காழி
வன்னஞ்ச முண்ட மணிகண்டன் - பொன்னஞ்ச
மாலிக்குஞ் சோலைப்பே ரூருக்குள் ளானின்பம்
பாலிக்குங் காலுண்டு பற்று . (94)

(என் நெஞ்சே இயமன் தனக்கு அஞ்சல். ஆழி - கடல். பொனஞ்சம் - அழகிய ஹம்சம், அன்னப்பறவை. ஆலிக்கும் - ஒலிக்கும். இன்பம் பாலிக்கும் கால் பேரூருக்குள் உண்டு அதனைப் பற்று)

எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

பற்றாதார் புரமெறிந்த பவள வண்ணா
     பட்டீசா மரகதப்பெண் பாகா சென்னிக்
கற்றாவின் கோடுழுத தழும்பு மார்பிற்
     காரிகையாள் முலைத்தழும்பு மேனி யெல்லாம்
முற்றாத னெறிந்தசிலைத் தழும்பும் பாண்டி
     முடிமன்னன் னடித்தழும்பும் முதுகின் மீதும்
பெற்றாலுந் திருவடிக்கோர் தழும்பின் றென்னும்
     பெருங்குறையென் னுளத்திருத்தப் போகுங் காணே. (95)

அறுசீர் ஆசிரிய விருத்தம்
பருவமன்றெனப் புகறல்
தோழி கூற்று

கண்டின் மொழியா யஞ்சற்க கனிவாய் வெள்ளி மலையில்வார்
அண்டம் பரவ வெடுத்தவர கரவென் னார்ப்பா மடுபுகையாம்
விண்டின் னெழுந்த வெரிக்கொழுந்தாம் மெய்யே காரன் றவர்மறவார்
அண்டி னவரைக் கைவிடுத லறியார் பேரைக் குரியாரே. (96)

(கார் காலத்தில் மீண்டுவருவேன் என்று வற்புறுத்தித் தலைவன் பிரிந்தான். கரிய மேகத்தினைக் கண்ட தலைவி கார்காலம் வந்துந் தலைவன் வரவில்லையே என வருந்தினாள். இஃது கார்காலம் அல்ல , வேறு காரனங்களால் கார்காலம் போலத் தோற்றம் அளிக்கின்றது, பேரூரனின் அன்புக்குரியவர் பொய் சொல்லார் எனத் தோழி தலைவிக்குக் கூறியது).


கலிநிலைத்துறை

யாரென்று குலமென்ன நலமென்ன வென்றொன்று மறியாமலே
சீரென்று முளபேரை மன்றன்ற னடியார்த மிற்சேரல்போல்
காரென்று மீனென்று குழலொன்று பூவொன்று களிமஞ்ஞையாம்
நாரென்று முளதாக வுளமன்றி யுயிரொன்றி னாமின் றையே. (97)
.
கட்டளைக் கலித்துறை
கையடை
தோழி கூற்று

இன்றைக்குப் பொன்னனை யாணிற் கடைக்கல மேந்துமிரு
குன்றைப் பொருமுலை நான்முலை யாயினும் கொங்கரச
மன்றற் குயிர்கள்தம் மாட்டருள் போன்றிவள் மாட்டுனருள்
என்றைக்கு மன்னுதல் வேண்டுஞ் சுடர்வே லிறையவனே. (98)

(இஃது தோழி கூற்று. பொன் அனையால் நிற்கு அடிக்கலம். நாலுதல் - தொங்குதல். அரச மன்றற்கு - அரசவனத்து இறைவருக்கு) 

வேற்றொலி வெண்டுறை

இறைவரெனச் சமயர்தொழு குலமாகி யிருந்தும் பேரூர்
இறைவர்வய லுழுகடைஞ னெனெவருளி னெய்தினரா லுலகீ ரன்னோர்
உயர்ந்ததி லுயர்ந்தவ ரிழிந்ததி லிழிந்தவர்
வியந்திடு பெருங்குண ரறிந்து மகிழ்வீர். (99)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

மகிழ்நர்நமை மறந்ததனுக் குளந்தளர்ந்தேன் 
     அல்லேன்கை வளைக ளெல்லாம்
நெகிழவுடல் தளரவரும் சிறுகாலான் 
     நைந்தேனோ வல்லேன் நின்னை
எகினவிளம் பெடையனையாய் மறவேனென
      விசைத்தகொடுஞ் சூளை யெண்ணி
முகிழ்முலையாய் பேரூரன் முனிவுறுமோ 
     எனநினைந்து முள்குற் றேனே. (100)

கட்டளைக் கலித்துறை

ஏனைமின் னார்க்குவ மானமின் னாள்மருங் கெய்தினம்பூங்
கானைமன் னுங்கவர்ந் தீர்ந்தென்றல் வீச கடன்முழங்க
தேனைமன் னும்மிசை பொங்குக பேரூர்ச் சிவன்புகழ்போல்
வானைமன் னும்மதி யெங்கும் பரப்புக வாணிலவே. (101)

வாழ்த்து
வெண்பா வாழி திருப்பேரூர் வாழி மரகதப்பெண்
வாழியர சம்பலவன் மன்பதைகள் - வாழியவன்
அஞ்செழுத்தை யோதி யடியர்பணி செய்தரன்றாள்
நெஞ்சழுத்தி வாழ்க நிதம்.

திருச்சிற்றம்பலம்
சிவஞான சம்பந்த தேசிகன் திருவடி வாழ்க

 

Related Content