[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்]
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம். 1.
ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும்
உறவனந் தம்வினையினால்
உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
தோஅனந் தம்பெற்றபேர்
சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற்
றெய்வமும் அனந்தபேதந்
திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான
சிற்சத்தியா லுணர்ந்து
காரனந் தங்கோடி வருஷித்த தென அன்பர்
கண்ணும்விண் ணுந்தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங்
கடவுளைத் துரியவடிவைப்
பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம். 2.
அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை
அருமறைகள் முரசறையவே
அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான
ஆதியை அநாதியேக
தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச்
சாலம்ப ரகிதமான
சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப
சாந்தபத வ்யோமநிலையை
நிர்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை
நிர்விஷய சுத்தமான
நிர்வி காரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்
நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
திவ்யதே சோமயத்தைச்
சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
தேவதையை அஞ்சலிசெய்வாம். 3.
வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன
மனோவாயு நிற்கும்வண்ணம்
வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு
மார்கத்தின் இச்சைபோல
நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த
நினைவையும் மறந்தபோது
நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ
நெஞ்சந் துடித்தயகுவேன்
பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகுதூரமே
பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
பேரின்ப நிட்டை அருள்வாய்
பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள்
பழுத்தொழுகு தேவதருவே
பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 1.
தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன
செயற்கொண் டிருப்பனமுதல்
தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பௌதிகஞ்
சென்மித்த ஆங்கிறக்கும்
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும்
மேற்கொண்ட சேடம் அதுவே
வெறுவெளி நிராலம்ப நிறைசூன்யம் உபசாந்த
வேதவே தாந்தஞானம்
பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள் அருட்
பெற்றோர்கள் பெற்றபெருமை
பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து
பேசாமை யாகுமெனவே
பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே
பரிபாக காலமலவோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 2.
ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐயவொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராமென இருந்தபேரும்
நேராக வொருகோபம் ஒருவேளை வரஅந்த
நிறைவொன்று மில்லாமலே
நெட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன
நிர்வாக ரென்றபேரும்
பூராய மாயோன்று பேசுமிட மோன்றைப்
புலம்புவார் சிவராத்திரிப்
போதுதுயி லோமெனற விரதியரும் அறிதுயில்
போலேயிருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில்நின் செயலல்லவோ
பார்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 3.
அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே
அம்மாயை யில்லாமையே
யாமெனெவும் அறிவுமுண் டப்பாலும் அறிகின்ற
அறிவினனை யறிந்துபார்க்கின்
எண்டிசை விளக்குமொரு தெய்வஅரு ளல்லாமல்
இல்லையெனு நினைவுஉண்டிங்(கு)
யானென தறந்துரிய நிறைவாகி நிற்பதே
இன்பமெனும் அன்பும்உண்டு
கண்டன எலாம்அல்ல என்றுகண் டனைசெய்து
கருவிகர ணங்களோயக்
கண்மூடி யொருகண மிருக்கஎன் றாற்பாழ்த்த
கர்மங்கள் போராடுதே
பண்டையுள கர்மமே கர்த்தா வெனும்பெயர்ப்
பக்ஷ்ம்நான் இச்சிப்பனோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 4.
சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந்
தன்மைநினை யன்றியில்லாத்
தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த
சமரச சுபாவமிதுவே
இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய
இயற்கைதிரு வுளமறியுமே
இன்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை
இதசத்ரு வாகவந்து
சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந்
திரும்புமோ தொடுவழக்காய்ச்
சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது
சிரத்தைஎனும் வாளும்உதவிப்
பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப்
பாதுகாத் தருள்செய்குவாய்
பார்க்குமிட மெங்குமொருநீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 5.
பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர்
பொறிபுலன் அடங்குமிடமே
பொருளென்பர் சிலர்கரண முடிவென்பர் சிலர்குணம்
போனஇட மென்பர்சிலபேர்
நாதவடி வென்பர்சிலர் விந்துமய மென்பர்சிலர்
நட்டநடு வேயிருந்த
நாமென்பர் சிலர்ருவுஉருவ மாமென்பர் சிலர்கருதி
நாடில்அரு வென்பர்சிலபேர்
பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்சிலர்
பேசில்அரு ளென்பர்சிலபேர்
பின்னும்முன் னுங்கெட்டசூனியம தென்பர்சிலர்
பிறவுமே மொழிவர்இவையால்
பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால்
பரமசுக நிட்டை பெறுமோ
பார்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.6 .
அந்தகா ரத்தையோர் அகமாக்கி மின்போல்என்
அறிவைச் சுருக்கினவரார்
அவ்வறிவு தானுமே பற்றினது பற்றாய்
அழுந்தவுந் தலைமீதிலே
சொந்தமா யெழுதப் படித்தார் மெய்ஞ்ஞான
சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் உண்டுண்டு
தூங்கவைத் தவரார்கொலொ
தந்தைதாய் முதலான அகிலப்ர பஞ்சந்
தனைத்தந்த தெனதாசையோ
தன்னையே நோவனொ பிறரையே நோவனோ
தற்கால மதைநோவனோ
பந்தமா னதுதந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.7 .
வாரா தெலாமொழிய வருவன வெலாமெய்த
மனதுசாட் சியதாகவே
மருவநிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த
மரபுசம ரசமாகவே
பூராய மாயுணர வூகமது தந்ததும்
பொய்யுடலை நிலையன்றெனப்
போதநெறி தந்த்துஞ் சாசுவத ஆனந்த
போகமே வீடென்னவே
நீராள மாயுருக வுள்ளன்பு தந்ததும்
நின்னதருள் இன்னும் இன்னும்
நின்னையே துணையென்ற என்னையே காக்கவொரு
நினைவுசற் றுண்டாகிலோ
பாராதி யறியாத மோனமே யிடைவிடாப்
பற்றாக நிற்கஅருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற ந்றைகின்ற
ப்ரிபூர ணானந்தமே.8 .
ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய
ஆலம்அமு தாகவிலையோ
அக்கடலின் மீதுவட அனல்நிற்க வில்லையோ
அந்தரத் தகி¢லகோடி
தாழாமல் நிலைநிற்க வில்யோ மேருவுந்
தனுவாக வளையவிலயோ
சத்தமே கங்களும் வச்ரதர னாணையில்
சஞ்சரித் திடவில்லையோ
வாழாது வாழவே இராமனடி யாற்சிலையும்
மடமங்கை யாகவிலையோ
மணிமந்த்ர மாதியால் வேண்டுசித் திகள்உலக
மார்கத்தில் வைக்கவிலையோ
பாழான என்மனங் குவியஒரு தந்திரம்
பண்ணுவ துனக்கருமையோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 9 .
ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.10 .
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
சிந்தை செய்வாம்.1 .
யாதுமன நினையுமந்த நினைவுக்கு நினைவாகி
யாதநின் பாலும்
பேதமற நின்றுயிக் குராகி அன்பருக்கே
பேரா னந்தக்
கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக்
கொடுத்துக் காட்டுந்
தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச்
சிந்தை செய்வாம். 2 .
பெருவெளியாய் ஐம்பூதம் பிறப்பிடமாய்ப் பேசாத
பெரிய மோனம்
வருமிடமாய் மனமாதிக் கெட்டாத பேரின்ப
மயமாய் ஞானக்
குருவருளாற் காட்டிடவும் அன்பரைக்கோத் தறவிழுங்கிக்
கொண்டப் பாலுந்
தெரிவரிதாய்க் கலந்தெந்தப் பொருள் அந்தப் பொருளினையாஞ்
சிந்தை செய்வாம் .3.
இகபரமும் உயிர்க்குயிரை யானெனதற் றவர்உறவை
எந்த நாளுஞ்
சுகபரிபூ ரணமான நிராலம்ப கோசரத்தைத்
துரிய வாழ்வை
அகமகிழ வருந்தேனை முக்கனியைக் கற்கண்டை
அமிர்தை நாடி
மொகுமொகென இருவிழிநீர் முந்திறைப்பக் கரமலர்கள்
முகிழ்த்து நிற்பாம். 4.
சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
றியக்கஞ் செய்யும்
சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான
துறிய வாழ்வைத்
தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச்
சிந்தை செய்வாம். 5 .
இந்திரசா லங்கனவு கானலின்நீ ரெனவுலகம்
எமக்குத் தோன்றச்
சந்ததமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்தைச்
சார்ந்து வாழ்க
புந்திமகி ழுறநாளுந் தடையறவா னந்தவெள்ளம்
பொலிக என்றே
வந்தருளுங் குருமௌனி மலர்த்தாளை அநுதினமும்
வழுத்தல் செய்வாம். 6
பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப்
போத மாகித்
தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த
செழந்தே னாகி
அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ
னந்த மாகி
இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம்
இறைஞ்சி நிற்பாம் .7 .
.
அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர்மா முனிவர்சித்த
ராதி யானோர்
¦திரிவரிய பூரணமாய்க் காரணங்கற் பனைகடந்த
செல்வ மாகிக்
கருதரிய மலரின்மணம் எள்ளிலெண்ணைய் உடலலுயிர்போற்
கலந்தெந் நாளும்
துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத்
தொழுதல் செய்வாம். 8 .
விண்ணாதி பூதமெல்லாந் தன்னகத்தி லடக்கிவெறு
வெளியாய் ஞானக்
கண்ணாரக் கண்டஅன்பர் கண்ணூடே ஆனந்தக்
கடலாய் வேறொன்
றெண்ணாத படிக்கிரங்கித் தானாகச் செய்தருளும்
இறையே உன்றன்
தண்ணாருஞ் சாந்தஅருள் தனைநினைந்து கரமலர்கள்
தலைமேற் கொள்வாம். 9 .
விண்ணிறைந்த வெளியாய்என் மனவெளியிற் கலந்தறிவாம்
வெளியி னூடுந்
தண்ணிறைந்த பேரமுதாய்ச் சதானந்த மானபெருந்
தகையே நின்பால்
உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி மொழிகுழறி
உவகை யாகிக்
கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னருளைக்
கருத்தில் வைப்பாம். 10 .
வேறு
ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை
அடியைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல
நீதிபெறுங் குருவாகி மனவாக் கெட்டா
நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி
வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி
மௌனத்தோர் பால்வெளியாய் வயங்கா நின்ற
சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர்
சொரியஇரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம். 1 .
அகரவுயி ரெழுத்தனைத்து மாகி வேறாய்
அமர்ந்தென அகிலாண்டம் அனைத்துமாகிப்
பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப்
பரமாகிச் சொல்லரிய பான்மை யாகித்
துகளறுசங் கற்பகவிற் பங்களெல்லாந்
தோயாத அறிவாகிச் சுத்த மாகி
நிகரில்பசு பதியான பொருளை நாடி
கெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம். 2
பன்னிருசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப
அன்பினா லுருகிவிழிநீர்
ஆறாக வாராத முத்தியின தாவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி
தழுதழுத் திடவணங்குஞ்
சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந்
தண்ணருள் கொடுத்தாள்வையோ
துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
தொழுதருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே
சொரூபாநு பூதிகாட்டிச்
செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர்
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.1 .
ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான்
அத்துவித வாஞ்சையாதல்
அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி
ஆகும்அறி வலிழஇன்பந்
தாக்கும்வகை யேதிநாட் சரியைகிரி யாயோக
சாதனம் விடித்ததெல்லாஞ்
சன்மார்க மல்லஇவை நிற்கஎன் மார்கங்கள்
சாராத பேரறிவதாய்
வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து
வாய்க்கும் படிக்குபாயாம்
வருவித் துவட்டாத பேரின்ப மானசுக
வாரியினை வாய்மடுத்துத்
தேக்கித் திளைக்கநீ முன்னிற்ப தென்றுகாண்
சித்தாந்த முத்திமுத்லே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 2 .
ஔவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம்
அடைந்திட் டிருக்கலோபம்
அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல்
ஆசா பிசாபமுதலாம்
வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு
மெய்யன்நீ வீற்றிருக்க
விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர்
விரிக்கிலுரை வேறுமுளதோ
கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால்
கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை
கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே
கதியான பூமிநடுவுட்
செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 3 .
ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள்
அசரசர பேதமான
யாவைவும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை
யாதிநூ லையும்வகுத்துச்
சைவமுத லாம் அளவில் சமயமும் வகுத்துமேற்
சமயங் கடந்தமோன
சமரசம் வகுத்தநீ யுன்னையான் அணுகவுந்
தண்ணருள் வகுக்க இலையோ
பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே
பொய்யிலா மெய்யரறிவில்
போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப்
போக்குவர வற்றபொருளே
தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 4 .
ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்
ஆகின்ற ஆக்கைநீர்மேல்
அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்
அறியாத காலமெல்லாம்
புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே
போந்தநெறி என்றிருன்ந்தேன்
பூராய மாகநின தருள்வந் துணர்த்த இவை
போனவழி தெரியவில்லை
எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்
இறப்பொடு பிறப்பையுள்ளே
எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா
திருவிழியும் இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகான தங்கம் இவை என்கொலோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 5.
காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போற்
கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற்கிசைந்த
பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவிளை யமுதமூட்டிப்
பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்டமைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
டிடருற உறுக்கி இடர்தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்துதுயில் கொண்மின்என்று
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 6.
கருமருவு குகையனைய காயத்தின் நடுவுள்
களிம்புதோய் செம்பனையயான்
காண்டக இருக்கநீ ஞான அனல் மூட்டியே
கனிவுபெற உள்ளுருக்கிப்
பருவம தறிந்துநின் னருளான குளிகைகொடு
பரிசித்து வேதிசெய்து
பத்துமாற் றுத்தஙக மாக்கியே பணிகொண்ட
பக்ஷத்தை என்சொல்லுகேன்
அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம்
ஆதியாம் அந்தமீதும்
அத்துவித நிலையராய் என்னையாண் டுன்னடிமை
யான வர்க ளறிவினூடுந்
திருமருவு கல்லா லடிக்கீழும் வளர்கின்ற
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 7.
கூடுத லுடன்பிரித லற்றுநிர்த் தொந்தமாய்க்
குவிதலுடன் விரிதலற்றுக்
குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான
குறியற்று மலமுமற்று
நாடுதலு மற்றுமேல் கீழ்நடுப் பக்கமென
நண்ணுதலு மற்றுவிந்து
நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று
ஞாதுருவின் ஞானமற்று
வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிறண்டற்று
வாக்கற்று மனமுமற்று
மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே
வாய்மடுத் துண்டவசமாய்த்
தேடுதலு மற்றவிட நிலையென்ற மெளனியே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 8.
தாராத அருளெலாந் தந்தருள மெளனியாய்த்
தாயனைய கருணைகாட்டித்
தாளிணையென் முடிசூட்டி அறிவிற் சமாதியே
சாசுவத சம்ப்ரதாயம்
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை
ஒன்றோ டிரண்டெனாமல்
ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும் நாதமாம்
ஒலியெனவும் உணர்வறாமல்
பாராது பார்ப்பதே ஏதுசா தனமற்ற
பரமஅநு பூதிவாய்க்கும்
பண்பென் றுணர்த்தியது பாராம லந்நிலை
பதிந்தநின் பழவடியாதஞ்
சீரா யிருக்கநின தருள் வேண்டும் ஐயனே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 9.
போதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப்
புனிதமாய் அவிகாரமாய்ப்
போக்குவர வில்லாத இன்பமாய் நின்றநின்
பூரணம் புகலிடமதா
ஆதரவு வையாமல் அறிவினை மறைப்பதுநின்
அருள்பின்னும் அறிவின்மைதீர்த்
தறிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியனேற்
கறிவாவ தேதறிவிலா
ஏதம்வரு வகையேது வினையேது வினைதனக்
கீடான காயமேதென்
இச்சா சுதந்தரஞ் சிறிதுமிலை இகபரம்
இரண்டினுள் மலைவுதீரத்
தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 10.
பத்திநெறி நிலைநின்றும் நவகண்ட பூமிப்
பரப்பைவல மாகவந்தும்
பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும்
பசிதாக மின்றியெழுநா
மத்தியிடை நின்றும்உதிர் சருகுபுனல் வாயுவினை
வன்பசி தனக்கடைத்து
மெனத் திருந்தும்உயர் மலைநுழைவு புக்கியும்
மன்னுதச நாடிமுற்றுஞ்
சுத்திசெய் தும்மூல ப்ராணனோ டங்கியைச்
சோமவட் டத்தடைத்துஞ்
சொல்லரிய அமுதுண்டும் அற்பவுடல் கற்பங்கள்
தோறும்நிலை நிற்கவீறு
சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 11.
ஆசைநிக ளத்தினை நிர்த்தூளி படவுதறி
ஆங்கார முளையைஎற்றி
அத்துவித மதமாகி மதம்ஆறும் ஆறாக
அங்கையின் விலாழியாக்கிப்
பாசஇருள் தன்னிழ லெனச்சுளித் தார்த்துமேல்
பார்த்துப் பரந்தமனதைப்
பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக
படாமன்ன மாயைநூறித்
தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச்
செங்கைக் குளேயடக்கிச்
சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின்
திருவருட் பூர்த்தியான
வாசமுறு சற்சார மீதென்னை யொருஞான
மத்தகச மெனவளர்த்தாய்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 1.
ஐந்துவகை யாகின்ற பூதமுதல் நாதமும்
அடங்கவெளி யாகவெளிசெய்
தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள்
அறிவாக நின்றநிலையில்
சிந்தையற நில்லென்று சும்மா இருத்திமேல்
சின்மயா னந்தவெள்ளந்
தேக்கித் திளைத்துநான் அதுவா யிருக்கநீ
செய்சித்ர மிகநன்றுகாண்
எந்தைவட வாற்பரம குருவாழ்க வாழஅரு
ளியநந்தி மரபுவாழ்க
என்றடியர் மனமகிழ வேதாக மத்துணி
பிரண்டில்லை யொன்றென்னவே
வந்தகுரு வேவீறு சிவஞான சித்திநெறி
மௌனோப தேசகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 2.
ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கென்
அறிவன்றி யிடமில்லையோ
அந்தரப் புட்பமுங் கானலின் நீருமோர்
அவசரத் துபயோகமோ
போதித்த நிலையையும் மயக்குதே அபயம்நான்
புக்கஅருள் தோற்றிடாமல்
பொய்யான வுலகத்தை மெய்யா நிறுத்தியென்
புந்திக்குள் இந்த்ரசாலஞ்
சாதிக்கு தேயிதனை வெல்லவும் உபாயம்நீ
தந்தருள்வ தென்றுபுகல்வாய்
சண்மத ஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த
சமரசநிர் வாகநிலையும்
மாதிக்கொ டண்டப் பரப்பெலாம் அறியவே
வந்தருளு ஞானகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 3.
மின்னனைய பொய்யுடலை நிலையென்றும் மையிலகு
விழிகொண்டு மையல்பூட்டும்
மின்னார்க ளின்பமே மெய்யெம்றும் வளர்மாட
மேல்வீடு சொர்க்கமென்றும்
பொன்னையழி யாதுவளர் பொருளென்று போற்றிஇப்
பொய்வேட மிகுதிகாட்டிப்
பொறையறிவு துறவீதல் ஆதிநற் குணமெலாம்
போக்கிலே போகவிட்டுத்
தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திடத்
தரணிமிசை லோகாயதன்
சமயநடை சாராமல் வேதாந்த சித்தாந்த
சமரச சிவாநுபூதி
மன்னவொரு சொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பின்
வாழ்வித்த ஞானகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 4.
போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ
புசித்தற் கிருக்குமதுபோல்
புருடர்பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம்
புகலுமதி னாலாம்பயன்
ஞானநெறி முக்யநெறி காட்சியனு மானமுதல்
நானாவி தங்கள் தேர்ந்து
நான்நான் எனக்குளறு படைபுடை பெயர்ந்திடவும்
நான்குசா தனமும்ஓர்ந்திட்
டானநெறி யாஞ்சரியை யாதிசோ பானமுற்
றணுபஷ சம்புபஷம்
ஆமிரு விகற்பமும் மாயாதி சேவையும்
அறிந்திரண் டொன்றென்னுமோர்
மானத விகற்பமற வென்றுநிர் பதுநமது
மரபென்ற பரமகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 5.
கல்லாத அறிவுமேற் கேளாத கேளாத கேள்வியுங்
கருணைசிறி தேதுமில்லாக்
காட்சியும் கொலைகளவு கட்காமம் மாட்சியாக்
காதலித் திடுநெஞ்சமும்
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள்
பொருந்துகுணம் ஏதும்அறியேன்
புருடர்வடி வானதே யல்லாது கனவிலும்
புருடார்த்தம் ஏதுமில்லேன்
எல்லா மறிந்தநீ யறியாத தன்றெனக்
கெவ்வண்ணம் உய்வண்ணமோ
இருளையிரு ளென்றவ்ர்க் கொளிதா ரகம்பெறும்
எனக்குநின் னருள்தாரகம்
வல்லா னெனும்பெய ருனக்குள்ள தேயிந்த
வஞ்சகனை யாளநினையாய்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 6.
கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின்
கண்காண மதயானைநீ
கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய
கட்டைமிக ஏந்திவருமே
போனகம் அமைந்ததென அக்காம தேனுநின்
பொன்னடியில் நின்றுசொலுமே
புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப்
போற்றிசய போற்றிஎன்பார்
ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே
நவநாத சித்தர்களும்உன்
நட்பினை விரும்புவார் சுகர்வாம தேவர்முதல்
ஞானிகளும் உனைமெச்சுவார்
வானகமும் மண்ணகமும் வந்தெதிர் வணங்கிடும்உன்
மகிமையது சொல்லஎளிதோ
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 7.
சருகுசல பட்சணிக ளருகோடி யல்லால்
சகோரபட் சிகள்போலவே
தவளநில வொழுகமிர்த தாரையுண் டழியாத
தன்மைய ரனந்தகோடி
இருவினைக ளற்றிரவு பகலென்ப தறியாத
ஏகாந்த மோனஞான
இன்பநிட் டையர்கோடி மணிமந்த்ர சித்திநிலை
எய்தினர்கள் கோடிசூழக்
குருமணி யிழைத்திட்ட சிங்கா தனத்தின்மிசை
கொலுவீற் றிருக்கும்நின்னை
கும்பிட் டனந்தமுறை தெண்டனிட் டென்மனக்
குறையெலாந் தீரும்வண்ணம்
மதுமல ரெடுத்துனிரு தாளையர்ச் கிக்கவெனை
வாவென் றழைப்பதெந்நாள்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 8.
ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
ஆணவத் தினும்வலிதுகாண்
அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
யாதொன்று தொடினும் அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
தம்மொடு சமானமென்னுந்
தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
திராவணா காரமாகி
இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
திருக்கும்இத னொடெந்நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
மௌனோப தேசகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 9.
பற்றுவெகு விதமாகி யொன்றைவிட் டொன்றனைப்
பற்றியுழல் கிருமிபோலப்
பாழ்ஞ்சிந்தை பெற்றநான் வெளியாக நின்னருள்
பகர்ந்துமறி யேன்துவிதமோ
சிற்றறிவ தன்றியும் எவரேனும் ஒருமொழி
திடுக்கென் றுரைத்தபோது
சிந்தைசெவி யாகவே பறையறைய வுதரவெந்
தீநெஞ்சம் அளவளாவ
உற்றுணர உண்ர்வற்றுன் மத்தவெறி யினர்போல
உளறுவேன் முத்திமார்க்கம்
உணர்வதெப் படியின்ப துன்பஞ் சமானமாய்
உறுவதெப் படியாயினும்
மற்றெனக் கையநீ சொன்னவொரு வார்த்தையினை
மலையிலக் கெனநம்பினேன்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 10.
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
நிர்விடய கைவல்யமா
நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன
நிர்த்தொந்த நித்தமுக்த
தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண
சதானந்த ஞானபகவ
சம்புசிவ சங்கர சர்வேச என்றுநான்
சர்வகா லமும்நினைவனோ
அற்புத அகோசர நிவிர்த்திபெறும் அன்பருக்
கானந்த பூர்த்தியான
அத்துவித நிச்சய சொரூபசாட் சாத்கார
அநுபூதி யநுசூதமுங்
கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற்
கண்ணூ டிருந்தகுருவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 1.
மண்ணாதி ஐந்தொடு புறத்திலுள கருவியும்
வாக்காதி சுரோத்ராதியும்
வளர்கின்ற சப்தாதி மனமாதி கலையாதி
மன்னுசுத் தாதியுடனே
தொண்ணூற்றொ டாறுமற் றுள்ளனவும் மௌனியாய்ச்
சொன்னவொரு சொற்கொண்டதே
தூவெளிய தாயகண் டானந்த சுகவாரி
தோற்றுமதை என்சொல்லுவேன்
பண்ணாரும் இசையினொடு பாடிப் படித்தருட்
பான்மைநெறி நின்றுதவறாப்
பக்குவ விசேடராய் நெக்குநெக் குருகிப்
பணிந்தெழுந் திருகைகூப்பிக்
கண்ணாறு கரைபுரள நின்றஅன் பரையெலாங்
கைவிடாக் காட்சியுறவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 2.
எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
எல்லாமுன் னுடையசெயலே
எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென்
றிருக்காதி வேதமெல்லாஞ்
சொல்லான் முழக்கியது மிக்கவுப காரமாச்
சொல்லிறந் தவரும்விண்டு
சொன்னவையு மிவைநல்ல குருவான பேருந்
தொகுத்தநெறி தானுமிவையே
அல்லாம லில்லையென நன்றா அறிந்தேன்
அறிந்தபடி நின்றுசுகநான்
ஆகாத வண்ணமே இவ்வண்ண மாயினேன்
அதுவுநின தருளென்னவே
கல்லாத அறிஞனுக் குள்ளே யுணர்த்தினை
கதிக்குவகை யேதுபுகலாய்
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 3.
பட்டப் பகற்பொழுதை இருளென்ற மருளர்தம்
பட்சமோ எனதுபட்சம்
பார்த்தவிட மெங்கணுங் கோத்தநிலை குலையாது
பரமவெளி யாகவொருசொல்
திட்டமுடன் மௌனியா யருள்செய் திருக்கவுஞ்
சேராமல் ஆராகநான்
சிறுவீடு கட்டியதின் அடுசோற்றை யுண்டுண்டு
தேக்குசிறி யார்கள்போல
நட்டனைய தாக்கற்ற கல்வியும் விவேகமும்
நன்னிலய மாகவுன்னி
நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே
நடுவே முளைத்தமனதைக்
கட்டஅறி யாமலே வாடினே னெப்போது
கருணைக் குரித்தாவனோ
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 4.
மெய்விடா நாவுள்ள மெய்யரு ளிருந்துநீ
மெய்யான மெய்யைஎல்லாம்
மெய்யென வுணர்த்தியது மெய்யிதற் கையமிலை
மெய்யேதும் அறியாவெறும்
பொய்விடாப் பொய்யினேன் உள்ளத் திருந்துதான்
பொய்யான பொய்யைஎல்லாம்
பொய்யெனா வண்ணமே புகலமைத் தாயெனில்
புன்மையேன் என்செய்குவேன்
மைவிடா செழுநீல கண்டகுரு வேவிட்ணு
வடிவான ஞானகுருவே
மலர்மேவி மறையோது நான்முகக் குருவே
மதங்கள்தொறும் நின்றகுருவே
கைவிடா தேயென்ற அன்பருக் கன்பாய்க்
கருத்தூ டுணர்த்துகுருவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 5.
பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்சஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் னுளம்நிற்றிநீ
நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல் முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேஅ வித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 6.
சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது
தான்வந்து முற்றுமெனலால்
சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பது
சதாநிட்டர் நினைவதில்லை
சிந்தையறி யார்க்கீது டோதிப்ப தல்லவே
செப்பினும் வெகுதர்க்கமாம்
திவ்யகுண மார்க்கண்டர் சுகராதி முனிவோர்கள்
சித்தாந்த நித்யரலரோ
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர்
இருக்காதி வேதமுனிவர்
எண்ணரிய கணநாதர் நவநாத சித்தர்கள்
இ¢ரவிமதி யாதியோர்கள்
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங்
கைகுவித் திடுதெய்வமே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 7.
துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம
துட்டதே வதைகளில்லை
துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே
தொழும்பன்அன் பபிடேகநீர்
உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன்
ஓங்குமதி தூபதீபம்
ஒருசால மன்றிது சதாகால பூசையா
ஒப்புவித் தேன்கருணைகூர்
தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே
தெளிந்ததே னேசீனியே
திவ்யரச மியாவுந் திரண்டொழுகு பாகே
தெவிட்டாத ஆனந்தமே
கள்ளன் அறி வூடுமே மெள்ளமெள வெளியாய்க்
கலக்கவரு நல்லஉறவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 8.
உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள்
ஊற்றென வெதும்பியூற்ற
ஊசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே
ஓருறவும் உன்னியுன்னிப்
படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்
பாடியா டிக்குதித்துப்
பனிமதி முகத்திலே நிலவனைய புன்னகை
பரப்பியார்த் தார்த்தெழுந்து
மடலவிழு மலரனைய கைவிரித் துக்கூப்பி
வானேயவ் வானிலின்ப
மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி
வாழியென வாழ்த்தியேத்துங்
கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை
கன்னெஞ்ச னுக்கெளியையோ
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 9.
இங்கற்ற படியங்கு மெனவறியு நல்லறிஞர்
எக்காலமும் உதவுவார்
இன்சொல்தவ றார்பொய்மை யாமிழுக் குரையார்
இரங்குவார் கொலைகள்பயிலார்
சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை
சாட்சிநீ யிகபரத்துஞ்
சந்தான கற்பகத் தேவா யிருந்தே
சமத்தஇன் பமும்உதவுவாய்
சிங்கத்தை யொத்தென்னைப் பாயவரு வினையினைச்
சேதிக்க வருசிம்புளே
சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுவே
தீனனேன் கரையேறவே
கங்கற்ற பேராசை வெள்ளத்தின் வளரருட்
ககனவட் டக்கப்பலே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 10.
திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே
சென்றோடி யாடிவருவீர்
செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே
திகழ்துருவம் அளவளாவி
உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில்
உழுந்தமிழும் ஆசமனமா
வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன்
உலகும்அயி ராவதமுமே
கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர்
ககனவட் டத்தையெல்லாம்
கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும்
காட்டுவீர் மேலும்மேலும்
மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன்
விளங்குவரு சித்திஇலிரோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 1.
பாட்டளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப்
பாரினிடை வரவழைப்பீர்
பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
பணிசெய்யுந் தொழிலாளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
கேட்டுப் பிழைப்போரையுங்
கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு
கேணியிடை குறுகவைப்பீர்
ஓட்டினை எடுத்தா யிரத்தெட்டு மாற்றாக
ஒளிவிடும் பொன்னாக்குவீர்
உரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே
உலகுசுமை யாகவருளால்
மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனல்
மெழுகாக்கி வைப்பதரிதோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 2.
பாரொடுநன் னீராதி யொன்றொடொன் றாகவே
பற்றிலய மாகுபோழ்து
பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம்
பரந்திடி னதற்குமீதே
நீரிலுறை வண்டாய்த் துவண்டுசிவ யோகநிலை
நிற்பீர் விகற்பமாகி
நெடியமுகி லேழும்பரந்துவரு டிக்கிலோ
நிலவுமதி மண்டலமதே
ஊரென விளங்குவீர் பிரமாதி முடிவில்விடை
ஊர்தியரு ளாலுலவுவீர்
உலகங்கள் கீழ்மேல வாகப் பெருங்காற்
றுலாவின்நல் தாரணையினால்
மேருவென அசையாமல் நிற்கவல் லீருமது
மேதக்க சித்திஎளிதோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 3.
எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்
யாதினும் அரிதரிதுகாண்
இப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ
ஏதுவருமோ அறிகிலேன்
கண்ணகல் நிலத்துநான் உள்ளபொழு தேஅருட்
ககனவட் டத்தில்நின்று
காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு
கலந்துமதி யவசமுறவே
பண்ணுவது நன்மைஇந் நிலைபதியு மட்டுமே
பதியா யிருந்ததேகப்
பவுரிகுலை யாமலே கௌரிகுண் டலியாயி
பண்ணவிதன் அருளினாலே
விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே
வேண்டுவே னுமதடிமைநான்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 4.
பொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன்
பொழுதுபோக் கேதென்னிலோ
பொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல்
புசித்தபின் கண்ணுறங்கல்
கைதவ மலாமலிது செய்தவம தல்லவே
கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க்
கண்டதிது விண்டிதைக் கண்டித்து நிற்றலெக்
காலமோ அதையறிகிலேன்
மைதிகழு முகிலினங் குடைநிழற் றிடவட்ட
வரையினொடு செம்பொன்மேரு
மால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல்
வரைந்துசய விருதுகாட்டி
மெய்திகழும் அட்டாங்க யொசபூ மிக்குள்வளர்
வேந்தரே குணசாந்தரே
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 5.
கெசதுரக முதலான சதுரங்க மனவாதி
கேள்வியி னிசைந்துநிற்பக்
கெடிகொண்ட தலமாறு மும்மண்ட லத்திலுங்
கிள்ளாக்குச் செல்லமிக்க
தெசவிதம தாய்நின்ற நாதங்க ளோலிடச்
சிங்காச னாதிபர்களாய்த்
திக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை
திகழ்ந்திட வசந்தகாலம்
இசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம்
இதயமேற் கொள்ளும்வண்ணம்
என்றைக்கு மழியாத சிவராச யோகராய்
இந்தராதி தேவர்களெலாம்
விசயசய சயவென்ன ஆசிசொல வேகொலு
இருக்குநும் பெருமைஎளிதோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 6.
ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை
அகிலத்தின் மிசையுள்ளதோ
ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை
அடக்கியொரு கணமேனும்யான்
காணிலேன் திருவருளை யல்லாது மௌனியாய்க்
கண்மூடி யோடுமூச்சைக்
கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங்
கனலினை எழுப்பநினைவும்
பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும்
போக்கிலே போகவிட்டுப்
பொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான
புன்மையேன் இன்னம் இன்னம்
வீணிலே யலையாமல் மலையிலக் காகநீர்
வெளிப்படத் தோற்றல் வேண்டும்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 7.
கன்னலமு தெனவுமுக் கனியெனவும் வாயூறு
கண்டெனவும் அடியெடுத்துக்
கடவுளர்கள் தந்ததல அழுதழுது பேய்போல்
கருத்திலெழு கின்றவெல்லாம்
என்னதறி யாமையறி வென்னுமிரு பகுதியால்
ஈட்டுதமி ழென் தமிழினுக்
கின்னல்பக ராதுலகம் ஆராமை மேலிட்
டிருத்தலால் இத்தமிழையே
சொன்னவ னியாவனவன் முத்திசித் திகளெலாந்
தோய்ந்த நெறியேபடித்தீர்
சொல்லுமென அவர்நீங்கள் சொன்னஅவை யிற்சிறிது
தோய்ந்தகுண சாந்தனெனவே
மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம்
விகசிப்ப தெந்தநாளோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 8.
பொற்பினொடு கைகாலில் வள்ளுகிர் படைத்தலால்
போந்திடை யொடுக்கமுறலால்
பொலிவான வெண்ணீறு பூசியே அருள்கொண்டு
பூரித்த வெண்ணீர்மையால்
எற்பட விளங்குகக னத்திலிமை யாவிழி
இசைந்துமேல் நோக்கம்உறலால்
இரவுபக லிருளான கனதந்தி படநூறி
இதயங் களித்திடுதலால்
பற்பல விதங்கொண்ட புலிகலையி னுரியது
படைத்துப்ர தாபமுறலால்
பனிவெயில்கள் புகுதாமல் நெடியவான் தொடர்நெடிய
பருமர வனங்களாரும்
வெற்பினிடை யுறைதலால் தவராச சிங்கமென
மிக்கோ ருமைப்புகழ்வர்காண்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 9
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றும்அறி வில்லாதஎன்
கர்மத்தை யென்சொல்கேன்மதியையென் சொல்லுகேன்
கைவல்ய ஞானநீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக்கியமென்று
நவிலுவேன் வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன்
வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி
வசனங்கள் சிறிதுபுகல்வேன்
வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 10.
கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக்
குணமொன்றும் ஒன்றிலேன்பால்
கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன்
குணங்களெத் தனைகொடியபாழ்ங்
கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
கள்ளமெத் தனையுள்ளசற்
காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை
கதிக்கென் றமைத்தஅருளில்
செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ
செல்வதெத் தனைமுயற்சி
சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற
தேகத்தில் வாஞ்சைமுதலாய்
அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை
யானேன் இவைக்கும் ஆளோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 1.
தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
சேர்ந்துவளர் சித்தாகிஅச்
சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
திரமாகி நானாவிதப்
பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
புலனுமாய் ஐம்பூதமாய்ப்
புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
போக்கொடு வரத்துமாகி
இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
இன்றாகி நாளையாகி
என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
இவையல்ல வாயநின்னை
அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர்
அறிவதற் கெளிதாகுமோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 2.
மாறுபடு தர்க்கந் தொடுக்கஅறி வார்சாண்
வயிற்றின் பொருட்டதாக
மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனதுழல
மாலாகி நிற்கஅறிவார்
வேறுபடு வேடங்கள் கொள்ளஅறி வாரொன்றை
மெணமெணென் றகம்வேறதாம்
வித்தையறி வார்எமைப் போலவே சந்தைபோல்
மெய்ந்நூல் விரிக்கஅறிவார்
சீறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி
செக்கச் சிவக்கஅறிவார்
திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்
செய்கைகொடும் உளற அறிவார்
ஆறுசம யங்கடொறும் வேறுவே றாகிவிளை
யாடுமுனை யாவரறிவார்
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 3.
காயிலை யுதிர்ந்தகனி சருகுபுனல் மண்டிய
கடும்பசி தனக்கடைத்துங்
கார்வரையின் முழையிற் கருங்கல்போ லசையாது
கண்மூடி நெடிதிருந்தும்
தீயினிடை வைகியுந் தோயமதில் மூழ்கியுந்
தேகங்கள் என்பெலும்பாய்த்
தெரியநின் றுஞ்சென்னி மயிர்கள்கூ டாக்குருவி
தெற்றவெயி லூடிருந்தும்
வாயுவை யடக்கியு மனதினை யடக்கியு
மௌனத்தி லேயிருந்தும்
மதிமண்ட லத்திலே கனல்செல்ல அமுதுண்டு
வனமூடி ருந்தும் அறிஞர்
ஆயுமறை முடிவான அருள்நாடி னாரடிமை
அகிலத்தை நாடல்முறையோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 4.
சுத்தமும் அசுத்தமும் துக்கசுக பேதமுந்
தொந்தமுடன் நிர்த்தொந்தமும்
ஸ்தூலமொடு சூட்சமமும் ஆசையும் நிராசையுஞ்
சொல்லுமொரு சொல்லின் முடிவும்
பெத்தமொடு முத்தியும் பாவமொ டபாவமும்
பேதமொ டபேதநிலையும்
பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும்
பெண்ணினுடன் ஆணும்மற்றும்
நித்தமும் அநித்தமும் அஞ்சனநி ரஞ்சனமும்
நிட்களமும் நிகழ்சகளமும்
நீதியும் அநீதியும் ஆதியோ டநாதியும்
நிர்விடய விடயவடிவும்
அத்தனையும் நீயலதெள் அத்தனையும் இல்லையெனில்
யாங்களுனை யன்றியுண்டோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 5.
காராரும் ஆணவக் காட்டைக் களைந்தறக்
கண்டகங் காரமென்னுங்
கல்லைப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி
காணத் திருத்திமேன்மேல்
பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
பதித்தன்பு நீராகவே
பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன்
பறவையணு காதவண்ணம்
நேராக நின்றுவிளை போகம் புசித்துய்ந்த
நின்னன்பர் கூட்டமெய்த
நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே
நின்னருட் பாரமென்றும்
ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி
யாகின்ற துரியமயமே
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 6.
வானாதி பூதமாய் அகிலாண்ட கோடியாய்
மலையாகி வளைகடலுமாய்
மதியாகி இரவியாய் மற்றுள எலாமாகி
வான்கருணை வெள்ளமாகி
நானாகி நின்றவனு நீயாகி நின்றிடவு
நானென்ப தற்றிடாதே
நான்நான் எனக்குளறி நானா விகாரியாய்
நானறிந் தறியாமையாய்ப்
போனால் அதிட்டவலி வெல்லஎளி தோபகல்
பொழுதுபுகு முன்கண்மூடிப்
பொய்த்துகில்கொள் வான்தனை எழுப்பவச மோஇனிப்
போதிப்ப தெந்தநெறியை
ஆனாலும் என்கொடுமை அநியாயம் அநியாயம்
ஆர்பால் எடுத்துமொழிவேன்
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 7.
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின்னருள்
புலப்பட அறிந்துநிலையாப்
புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல்
பொருளலாப் பொருளைநாடும்
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன்
வினையினேன் என்றென்னைநீ
விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது
வேறுகதி யேதுபுகலாய்
துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான
துணைவனே யிணையொன்றிலாத்
துரியனே துரியமுங் காணா அதீதனே
சுருதிமுடி மீதிருந்த
ஐயனே அப்பனே எனும்அறிஞர் அறிவைவிட்
டகலாத கருணைவடிவே
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 8.
எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என்
இதயமும் ஒடுங்கவில்லை
யானெனும் அகந்தைதான் எள்ளளவு மாறவிலை
யாதினும் அபிமானம்என்
சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென்
சென்மத்து நானறிகிலேன்
சீலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினுந்
தெரிசனங் கண்டும்அறியேன்
பொய்த்தமொழி யல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி
புகன்றிடேன் பிறர்கேட்கவே
போதிப்ப தல்லாது சும்மா இருந்தருள்
பொருந்திடாப் பேதைநானே
அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா
அவனிமிசை யுண்டோசொலாய்
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 9.
எக்கால முந்தனக் கென்னவொரு செயலிலா
ஏழைநீ என்றிருந்திட்
டெனதாவி யுடல்பொருளும் மௌனியாய் வந்துகை
ஏற்றுநம தென்றஅன்றே
பொய்க்கால தேசமும் பொய்ப்பொருளில் வாஞ்சையும்
பொய்யுடலை மெய்யென்னலும்
பொய்யுறவு பற்றலும் பொய்யாகு நானென்னல்
பொய்யினும் பொய்யாகையால்
மைக்கா லிருட்டனைய இருளில்லை இருவினைகள்
வந்தேற வழியுமில்லை
மனமில்லை யம்மனத் தினமில்லை வேறுமொரு
வரவில்லை போக்குமில்லை
அக்காலம் இக்கால மென்பதிலை எல்லாம்
அதீதமய மானதன்றோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 10.
இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்
எனருசித் திடவலியவந்
தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர்
இடையறா துருகிநாடி
உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும்
ஓய்ந்துயர்ந் தவசமாகி
உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே
உணர்வார்கள் உள்ளபடிகாண்
கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங்
கைக்கொள்வள் பக்குவத்தில்
கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக்
கருதிநகை யாவளதுபோல்
சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
தோற்றிற் சுகாரம்பமாஞ்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 1.
அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை
அறியாத ப்க்குவத்தே
ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான்
அற்றேன் அலந்தேன்என
என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய்
இரங்கியொரு வழியாயினும்
இன்பவெள மாகவந் துள்ளங் களிக்கவே
எனைநீ கலந்ததுண்டோ
தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு
தண்முகை தனக்குமுண்டோ
தமியனேற் கிவ்வணந் திருவுள மிரங்காத
தன்மையால் தனியிருந்து
துன்பமுறி னெங்ஙனே யழியாத நின்னன்பர்
சுகம்வந்து வாய்க்கும்உரையாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 2.
கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென்
கல்நெஞ்சம் உருகவிலையே
கருணைக் கிணங்காத வன்மையையும் நான்முகன்
கற்பிக்க வொருகடவுளோ
வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு
வழக்குக் கிழுக்குமுண்டோ
வானமாய் நின்றின்ப மழையா யிறங்கிஎனை
வாழ்விப்ப துன்பரங்காண்
பொல்லாத சேயெனில் தாய்தள்ளல் நீதமோ
புகலிடம் பிறிதுமுண்டோ
பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்ப்
புன்மையே னாவனந்தோ
சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மௌனியாய்ச்
சும்மா இருக்கஅருளாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 3.
என்பெலாம் நெக்குடைய ரோமஞ் சிலிர்ப்பஉடல்
இளகமன தழலின்மெழுகாய்
இடையறா துருகவரு மழைபோ லிரங்கியே
இருவிழிகள் நீரிறைப்ப
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக் கங்ஙனே
அமிர்தசஞ் சீவிபோல்வந்
தானந்த மழைபொழிவை உள்ளின்பி லாதஎனை
யார்க்காக அடிமைகொண்டாய்
புன்புலால் மயிர்தோல் நரம்பென்பு மொய்த்திடு
புலைக்குடிலில் அருவருப்புப்
பொய்யல்ல வேஇதனை மெய்யென்று நம்பிஎன்
புந்திசெலு மோபாழிலே
துன்பமா யலையவோ உலகநடை ஐயவொரு
சொற்பனத் திலும்வேண்டிலேன்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 4.
வெந்நீர் பொறாதென்உடல் காலில்முள் தைக்கவும்
வெடுக்கென் றசைத்தெடுத்தால்
விழிஇமைத் தங்ஙனே தண்ணருளை நாடுவேன்
வேறொன்றை யொருவர்கொல்லின்
அந்நேரம் ஐயோஎன் முகம்வாடி நிற்பதுவும்
ஐயநின் னருள் அறியுமே
ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான்என்னை
ஆண்டநீ கைவிடாதே
இந்நேர மென்றிலை உடற்சுமைய தாகவும்
எடுத்தா லிறக்கஎன்றே
எங்கெங்கு மொருதீர்வை யாயமுண் டாயினும்
இறைஞ்சுசுக ராதியான
தொன்னீர்மை யாளர்க்கு மானுடன் வகுத்தஅருள்
துணையென்று நம்புகின்றேன்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 5.
பற்றுவன அற்றிடு நிராசையென் றொருபூமி
பற்றிப் பிடிக்கும்யோகப்
பாங்கிற் பிராணலயம் என்னுமொரு பூமிஇவை
பற்றின்மன மறும்என்னவே
கற்றையஞ் சடைமௌனி தானே கனிந்தகனி
கனிவிக்க வந்தகனிபோல்
கண்டதிந் நெறியெனத் திருவுளக் கனிவினொடு
கனிவாய் திறந்தும் ஒன்றைப்
பெற்றவனு மல்லேன் பெறாதவனு மல்லேன்
பெருக்கத் தவித்துளறியே
பெண்ணீர்மை என்னஇரு கண்ணீ ரிறைத்துநான்
பேய்போ லிருக்கஉலகஞ்
சுற்றிநகை செய்யவே யுலையவிட் டாயெனில்
சொல்லஇனி வாயுமுண்டோ
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 6.
அரும்பொனே மணியேஎன் அன்பேஎன் அன்பான
அறிவேஎன் அறிவிலூறும்
ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்
ஆடினேன் நாடிநாடி
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன்
மெய்சிலிர்த் திருகைகூப்பி
விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே
வேசற றயர்ந்தேனியான்
இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை
இடைவிட்டு நின்றதுண்டோ
என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ
யாதேனும் அறியாவெறுந்
துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டுகண்டாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 7.
பாராதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற
பரவெளியி நுண்மைகாட்டிப்
பற்றுமன வெளிகாட்டி மனவெளியி னில்தோய்ந்த
பாவியேன் பரிசுகாட்டித்
தாராள மாய்நிற்க நிர்ச்சந்தை காட்டிச்
சதாகால நிட்டைஎனவே
சகநிலை காட்டினை சுகாதீத நிலயந்
தனைக்காட்ட நாள்செல்லுமோ
காரார எண்ணரும் அனந்தகோ டிகள்நின்று
காலூன்றி மழைபொழிதல்போல்
கால்வீசி மின்னிப் படர்ந்துபர வெளியெலாங்
கம்மியா னந்தவெள்ளஞ்
சோராது பொழியவே கருணையின் முழங்கியே
தொண்டரைக் கூவுமுகிலே
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 8.
பேதித்த சமயமோ ஒன்றுசொன படியொன்று
பேசாது துறவாகியே
பேசாத பெரியோர்கள் நிருவிகற் பத்தினால்
பேசார்கள் பரமகுருவாய்ப்
போதிக்கும் முக்கண்இறை நேர்மையாய்க் கைக்கொண்டு
போதிப்ப தாச்சறிவிலே
போக்குவர வறஇன்ப நீக்கமற வசனமாப்
போதிப்ப தெவரையனே
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமதென்று
சங்கிப்ப ராதலாலே
தன்னிலே தானா யயர்ந்துவிடு வோமெனத்
தனியிருந் திடினங்ஙனே
சோதிக்க மனமாயை தனைஏவி னாலடிமை
சுகமாவ தெப்படிசொலாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 9.
அண்டமுடி தன்னிலோ பகிரண்ட மதனிலோ
அலரிமண் டலநடுவிலோ
அனல்நடுவி லோஅமிர்த மதநடுவி லோஅன்பர்
அகமுருகி மலர்கள்தூவித்
தெண்டமிட வருமூர்த்தி நிலையிலோ திக்குத்
திகந்தத்தி லோவெளியிலோ
திகழ்விந்து நாசநிலை தன்னிலோ வேதாந்த
சித்தாந்த நிலைதன்னிலோ
கண்டபல பொருளிலோ காணாத நிலையெனக்
கண்டசூ னியமதனிலோ
காலமொரு மூன்றிலோ பிறவிநிலை தன்னிலோ
கருவிகர ணங்களோய்ந்த
தொண்டர்க ளிடத்திலோ நீவீற் றிருப்பது
தொழும்பனேற் குளவுபுகலாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 10.
எந்தநாள் கருணைக் குரித்தாகு நாளெனவும்
என்னிதயம் எனைவாட்டுதே
ஏதென்று சொல்லுவேன் முன்னொடுபின் மலைவறவும்
இற்றைவரை யாதுபெற்றேன்
பந்தமா னதிலிட்ட மெழுகாகி உள்ளம்
பதைத்துப் பதைத்துருகவோ
பரமசுக மானது பொருப்பரிய துயரமாய்ப்
பலகாலு மூர்ச்சிப்பதோ
சிந்தையா னதுமறிவை என்னறிவி லறிவான
தெய்வம்நீ யன்றியுளதோ
தேகநிலை யல்லவே உடைகப்பல் கப்பலாய்த்
திரையாழி யூடுசெலுமோ
சொந்தமா யாண்டநீ அறியார்கள் போலவே
துன்பத்தி லாழ்த்தல்முறையோ
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 11.
எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல்
இருக்கவிலை யோமனதெனும்
யானுமென் நட்பாம் பிராணனும் எமைச்சடம
தென்றுனைச் சித்தென்றுமே
அந்நாளி லெவனோ பிரித்தான் அதைக்கேட்ட
அன்றுமுதல் இன்றுவரையும்
அநியாய மாயெமை யடக்கிக் குறுக்கே
அடர்ந்தரசு பண்ணிஎங்கள்
முன்னாக நீஎன்ன கோட்டைகொண் டாயென்று
மூடமன மிகவும்ஏச
மூண்டெரியும் அனலிட்ட மெழுகா யுளங்கருகல்
முறைமையோ பதினாயிரஞ்
சொன்னாலும் நின்னரு ளிரங்கவிலை யேஇனிச்
சுகம்வருவ தெப்படிசொலாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 12.
அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
வாயாய்ப் பிதற்றுமவரார்
மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
வன்மையொ டிரக்கமெங்கே
புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
பூதபே தங்களெவிடம்
பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
பொறைபொறா மையுமெவ்விடம்
எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
யாதுமுனை யன்றியுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.1.
அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நின்னையே
ஐயாஐயா என்னவே
அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல
அலறியே யொன்றும் இலவாய்ப்
பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப்
பிதற்றிடுஞ் சிலசமயமேல்
பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி
பிறவுமே நிலயமென்றுந்
தன்னே ரிலாததோ ரணுவென்றும் மூவிதத்
தன்மையாங் காலமென்றுஞ்
சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச்
சதாஞான ஆனந்தமாய்
என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா
றெம்மனோர் புகலஎளிதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.2.
வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
வேறுமுள கலைகளெல்லாம்
மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
விரிவா யெடுத்துரைக்கும்
ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
உண்டுபணு ஞானமாகும்
ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ
துபயவா திகள்சம்மதம்
ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும்
யாதொன்று பாவிக்கநான்
அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்கமுறலாம்
ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய்
எந்தைநீ குறையுமுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.3.
சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத்
தொட்டில்வைத் தாட்டிஆட்டித்
தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில்
தொடுக்குந் தொடுத்தழிக்கும்
பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை
போந்துதலை சுற்றியாடும்
புருஷனி லடங்காத பூவைபோல் தானே
புறம்போந்து சஞ்சரிக்கும்
கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங்
காணாது கேட்ட எல்லாங்
கண்டதாக காட்டியே அணுவாச் சுருக்கிடுங்
கபடநா டகசாலமோ
எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம்
என்னா லடக்கவசமோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.4.
கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத
கள்ளனே னானாலுமோ
கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே
கண்பனித் தாரைகாட்டி
அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை
யானெனவு மேலெழுந்த
அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை
அகிலமுஞ் சிறிதறியுமேல்
தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே
சற்றேனும் இனிதிரங்கிச்
சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே
சகநிலை தந்துவேறொன்
றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே
ஏழையேற் கருள்செய்கண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.5.
காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு
கல்லின்முன் னெதிர்நிற்குமோ
கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
கருணைப்ர வாகஅருளைத்
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
தமியனேற் கருள்தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
சங்கேத மாய்க்கூடியே
தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
சேராமல் யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என்
சிந்தைக்கும் வெகுதூரம்நான்
ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.6.
ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில்
ஒருவன்நான் வந்திருக்கின்
உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென
ஓயுமோ இடமில்லையோ
அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ
அலதுகிர்த் தியகர்த்தராய்
அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர்
அடாதென்பரோ அகன்ற
பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள்
பேய்க்கோல மாய்விதண்டை
பேசுமோ அலதுதான் பரிபாக காலம்
பிறக்கவிலை யோதொல்லையாம்
இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ
ஏதுளவு சிறிதுபுகலாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.7.
நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை
நின்றிடவும் மௌனியாகி
நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை
நின்றனுட் டிக்க என்றால்
கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக்
காணவிலை யாகையாலே
கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன்
காட்சியிலிருந்து கொண்டு
வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட
மாதவர்க் கேவல்செய்து
மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம்
வாய்க்குமொரு மனுவெனக்கிங்
கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே
இப்போ திரங்குகண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.8.
மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர்
வனசருகு வாயில்வந்தால்
வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால்
வருந்தியு மூலஅனலைச்
சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந்
தேகநம தல்லவென்று
சிற்சுக அபேஷையாய் நின்னன்பர் யோகஞ்
செலுத்தினார் யாம்பாவியேம்
விரவும்அறு சுவையினோடு வேண்டுவ புசித்தரையில்
வேண்டுவ எலாமுடுத்து
மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே
வேறொரு வருத்தமின்றி
இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்
எப்படிப் பிழைப்பதுரையாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.9.
முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும்
முகத்திலகு பசுமஞ்சளும்
மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப
முலையின்மணி மாலைநால
வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே
மாயா விலாசமோக
வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை
மடந்தையர்கள் சிற்றின்பமோ
புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
பொன்னாட்டும் வந்ததென்றால்
போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப்
பூமியி லிருந்துகாண
எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி
இவ்வுலகம் அறியாததோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.10.
உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந்
துளறிடும் அவத்தையாகி
உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்
டொளிக்கின்ற இருளென்னவே
தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால்
தாவுசுக துக்கவேலை
தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால்
தடித்தகில பேதமான
முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய்
மூதறிவு மேலுதிப்ப
முன்பினொடு கீழ்மேல் நடுப்பாக்கம் என்னாமல்
முற்றுமா னந்தநிறைவே
என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்
எந்நாளும் வாழிவாழி
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.11.
பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று
படர்வெளிய தாகிஎழுநாப்
பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட
பகிரண்ட உயிரெவைக்கும்
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய்
நித்தமாய் நிர்த்தொந்தமாய்
நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத
நிர்மலா னந்தமயமாய்ப்
பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான்
பேரின்ப மெய்திடாமல்
பேய்மனதை ய்ண்டியே தாயிலாப் பிள்ளைபோல்
பித்தாக வோமனதைநான்
சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ்
சாசுவத நிட்டைஅருளாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.1.
குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு
கொள்ளல்போல் ஐந்துபூதங்
கூடஞ் சுருங்கிலைச் சாலேகம் ஒன்பது
குலாவுநடை மனையைநாறும்
வடக்கயிறு வெள்நரம் பாஎன்பு தசையினால்
மதவேள் விழாநடத்த
வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர்செந் நீர்கணீர்
மலநீர்புண் நீரிறைக்கும்
விடக்குத் துருத்தியைக் கருமருந்துக் கூட்டை
வெட்டவெட் டத்தளிர்க்கும்
வேட்கைமரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே
மெய்போ லிருந்துபொய்யாஞ்
சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயந்
தானாகி நிற்பதென்றோ
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.2.
பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ
பத்திநெறி யில்லைவேத
பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது
பகரவோ இசையுமில்லை
யோகத்தி லேசிறிது முயலவென் றால்தேகம்
ஒவ்வாதி வூண்வெறுத்தால்
உயிர்வெறுத் திடலொக்கும் அல்லாது கிரியைகள்
உபாயத்தி னாற்செய்யவோ
மோகத்தி லேசிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான
மோனத்தில் நிற்கஎன்றால்
முற்றாது பரிபாக சத்திக ளனேகநின்
மூதறிவி லேஎழுந்த
தாகத்தி லேவாய்க்கும் அமிர்தப் பிரவாகமே
தன்னந் தனிப்பெருமையே
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.3.
இமையளவு போதையொரு கற்பகா லம்பண்ணும்
இவ்வுலகம் எவ்வுலகமோ
என்றெண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ
என்னில்மக மேருவாக்கிச்
சுமையெடுமி னென்றுதான் சும்மாடு மாயெமைச்
சுமையாளு மாக்கிநாளுந்
துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாவையுஞ்
சூறையிட் டிந்த்ரசாலம்
அமையவொரு கூத்துஞ் சமைந்தாடு மனமாயை
அம்மம்ம வெல்லலெளிதோ
அருள்பெற்ற பேர்க்கெலாம் ஒளிபெற்று நிற்குமீ
தருளோ அலாதுமருளோ
சமயநெறி காணாத சாட்சிநீ சூட்சுமமாத்
தமியனேற் குளவு புகலாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.4.
இனியே தெமக்குனருள் வருமோ வெனக்கருதி
ஏங்குதே நெஞ்சம்ஐயோ
இன்றைக் கிருந்தாரை நாளைக்கி ருப்பரென்
றெண்ணவோ திடமில்லையே
அனியாய மாயிந்த வுடலைநான் என்றுவரும்
அந்தகற் காளாகவோ
ஆடித் திரிந்துநான் கற்றதுங் கேட்டதும்
அவலமாய்ப் போதல்நன்றோ
கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு
கந்தமூ லங்களேனும்
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான்
கண்மூடி மௌனியாகித்
தனியே இருப்பதற் கெண்ணினேன் எண்ணமிது
சாமிநீ அறியாததோ
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.5.
மத்தமத கரிமுகிற் குலமென்ன நின்றிலகு
வாயிலுடன் மதிஅகடுதோய்
மாடகூ டச்சிகர மொய்த்தசந் திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்தநகை யார்களடு
முத்துமுத் தாய்க்குலாவி
மோகத் திருந்துமென் யோகத்தின் நிலைநின்று
மூச்சைப் பிடித்தடைத்துக்
கைத்தல நகப்படை விரித்தபுலி சிங்கமொடு
கரடிநுழை நூழைகொண்ட
கானமலை யுச்சியிற் குகையூ டிருந்துமென்
கரதலா மலகமென்னச்
சத்தமற மோனநிலை பெற்றவர்க ளுய்வர்காண்
சனகாதி துணிவிதன்றோ
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.6.
கைத்தலம் விளங்குமொரு நெல்லியங் கனியெனக்
கண்டவே தாகமத்தின்
காட்சிபுரு டார்த்தமதில் மாட்சிபெறு முத்தியது
கருதின் அனு மானமாதி
உத்திபல வாநிரு விகற்பமே லில்லையால்
ஒன்றோ டிரண்டென்னவோ
உரையுமிலை நீயுமிலை நானுமிலை என்பதும்
உபாயம்நீ யுண்டுநானுஞ்
சித்தம்உளன் நான்இல்லை எனும்வசனம் நீயறிவை
தெரியார்கள் தெரியவசமோ
செப்புகே வலநீதி யொப்புவமை யல்லவே
சின்முத்தி ராங்கமரபில்
சத்தமற எனையாண்ட குருமௌனி கையினால்
தமியனேற் குதவுபொருளே
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.7.
காயாத மரமீது கல்லேறு செல்லுமோ
கடவுள்நீ யாங்களடியேங்
கர்மபந் தத்தினாற் சன்மபந் தம்பெறக்
கற்பித்த துன்னதருளே
வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர்
வைவதுவும் எங்களுலக
வாய்பாடு நிற்கநின் வைதிக ஒழுங்குநினை
வாழ்த்தினாற் பெறுபேறுதான்
ஓயாது பெறுவரென முறையிட்ட தாற்பின்னர்
உளறுவது கருமமன்றாம்
உபயநெறி யீதென்னின் உசிதநெறி எந்தநெறி
உலகிலே பிழைபொருக்குந்
தாயான கருணையும் உனக்குண் டெனக்கினிச்
சஞ்சலங் கெடஅருள்செய்வாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.8.
இன்னம் பிறப்பதற் கிடமென்னில் இவ்வுடலம்
இறவா திருப்பமூலத்
தெழுமங்கி யமிர்தொழுகு மதிமண் டலத்திலுற
என்னம்மை குண்டலினிபால்
பின்னம் பிறக்காது சேயென வளர்த்திடப்
பேயேனை நல்கவேண்டும்
பிறவாத நெறியெனக் குண்டென்னின் இம்மையே
பேசுகர்ப் பூரதீபம்
மின்னும் படிக்ககண் டாகார அன்னைபால்
வினையேனை யொப்புவித்து
வீட்டுநெறி கூட்டிடுதல் மிகவுநன் றிவையன்றி
விவகார முண்டென்னிலோ
தன்னந் தனிச்சிறியன் ஆற்றிலேன் போற்றிவளர்
சன்மார்க்க முத்திமுதலே
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.9.
வேதாவை இவ்வணம் விதித்ததே தென்னின்உன்
வினைப்பகுதி என்பன்அந்த
வினைபேச அறியாது நிற்கஇவை மனதால்
விளைந்ததால் மனதைநாடில்
போதமே நிற்கும்அப் போதத்தை நாடிலோ
போதமும் நினால்விளக்கம்
பொய்யன்று தெய்வமறை யாவுமே நீயென்று
போக்குவர வறநிகழ்த்தும்
ஆதார ஆதேயம் முழுதுநீ யாதலால்
அகிலமீ தென்னைஆட்டி
ஆடல்கண் டவனுநீ ஆடுகின் றவனுநீ
அருளுநீ மௌனஞான
தாதாவு நீபெற்ற தாய்தந்தை தாமுநீ
தமருநீ யாவுநீகாண்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.10.
கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
குளிர்தீம் புனற்கைஅள்ளிக்
கொள்ளுகினும் அந்நீ ரிடைத்திளைத் தாடினுங்
குளிர்சந்த வாடைமடவார்
வந்துலவு கின்றதென மூன்றிலிடை யுலவவே
வசதிபெறு போதும்வெள்ளை
வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர
மகிழ்போதும் வேலையமுதம்
விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும்
வேளையிலும் மாலைகந்தம்
வெள்ளிலை அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம்
விளையாடி விழிதுயிலினுஞ்
சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து
தமியேனை ரட்சைபுரிவாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.11.
மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி
மன்னுமுனி வர்க்கேவலமாய்
மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம்
மார்க்கத்தில் நின்றுகொண்டு
கருமருவு காயத்தை நிர்மலம தாகவே
கமலாச னாதிசேர்த்துக்
காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக்
கலைமதியி னூடுதாக்கி
உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல்
உணர்வான விழியைநாடி
ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம்
உற்றிடஎன் மனதின் வண்ணந்
திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 1.
இப்பிறவி என்னுமோர் இருட்கடலில் மூழ்கிநான்
என்னுமொரு மகரவாய்ப்பட்
டிருவினை எனுந்திரையின் எற்றுண்டு புற்புதம்
எனக்கொங்கை வரிசைகாட்டுந்
துப்பிதழ் மடந்தையர் மயற்சண்ட மாருதச்
சுழல்வந்து வந்தடிப்பச்
சோராத ஆசையாங் கானாறு வான்நதி
சுரந்ததென மேலும்ஆர்ப்பக்
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமுங்
கைவிட்டு மதிமயங்கிக்
கள்ளவங் கக்காலர் வருவரென் றஞ்சியே
கண்ணருவி காட்டும்எளியேன்
செப்பரிய முத்தியாங் கரைசேர வுங்கருணை
செய்வையோ சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 2.
தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்
சந்தையிற் கூட்டம் இதிலோ
சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை
சதுரங்க சேனையுடனே
வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்
வஞ்சனை பொறாமைலோபம்
வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ
வஞ்சனையி லாதகனவே
எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
இரவுபக லில்லாவிடத்
தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே
யானென்ப தறவுமூழ்கிச்
சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 3.
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை
அடங்கி மனம்வீழநேரே
அறியாமை யாகின்ற இருளகல இருளளியும்
அல்லா திருந்தவெளிபோல்
கோடா தெனைக்கண் டெனக்குள்நிறை சாந்தவெளி
கூடிஇன் பாதீதமுங்
கூடினே னோசரியை கிரியையில் முயன்றுநெறி
கூடினே னோஅல்லன்யான்
ஈடாக வேயாறு வீட்டினில் நிரம்பியே
இலகிவளர் பிராணனென்னும்
இருநிதி யினைக்கட்டி யோகபர னாகாமல்
ஏழைக் குடும்பனாகித்
தேடா தழிக்கவொரு மதிவந்த தென்கோலோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 4.
பாடாது பாடிப் படித்தளவில் சமயமும்
பஞ்சுபடு சொல்லன்இவனைப்
பார்மினோ பார்மினோ என்றுசபை கூடவும்
பரமார்த்தம் இதுஎன்னவே
ஆடாதும் ஆடிநெஞ் சுருகிநெக் காடவே
அமலமே ஏகமேஎம்
ஆதியே சோதியே எங்குநிறை கடவுளே
அரசே எனக்கூவிநான்
வாடாது வாடுமென் முக வாட்டமுங்கண்டு
வாடா எனக்கருணைநீ
வைத்திடா வண்ணமே சங்கேத மாவிந்த
வன்மையை வளர்ப்பித்ததார்
தேடாது தேடுவோர் தேட்டற்ற தேட்டமே
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 5.
பிரியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து
பேசரிய வாசியாலே
பேரின்ப உண்மையை அளித்தனைஎன் மனதறப்
பேரம்ப லக்கடவுளாய்
அறிவா யிருந்திடும் நாதவொலி காட்டியே
அமிர்தப்ர வாகசித்தி
அருளினைய லாதுதிரு அம்பலமு மாகிஎனை
ஆண்டனைபின் எய்திநெறியாய்க்
குறிதா னளித்தனைநன் மரவுரிகொ ளந்தணக்
கோலமாய் அசபாநலங்
கூறினபின் மௌனியாய்ச் சும்மா இருக்கநெறி
கூட்டினை எலாமிருக்கச்
சிறியேன் மயங்கிமிக அறிவின்மை யாவனோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 6.
ஆரா ரெனக்கென்ன போதித்தும் என்னஎன்
அறிவினை மயக்கவசமோ
அண்டகோ டிகளெலாங் கருப்பஅறை போலவும்
அடுக்கடுக் காஅமைத்துப்
பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி
பிறங்குவத லாதொன்றினும்
பின்னமுற மருவாது நன்னயத் தாலினிப்
பேரின்ப முத்திநிலையுந்
தாராது தள்ளவும் போகாது னாலது
தள்ளினும் போகேனியான்
தடையேது மில்லையாண் டவனடிமை யென்னுமிரு
தன்மையிலும் என்வழக்குத்
தீராது விடுவதிலை நடுவான கடவுளே
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 7.
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்
கரடிவெம் புலிவாயையுங்
கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல்கொளலாஞ்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி னும்புகுதலாஞ்
சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறமரிது சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 8.
எல்லாம் அறிந்தவரும் ஏதுமறி யாதவரும்
இல்லையெனு மிவ்வுலகமீ
தேதுமறி யாதவ னெனப்பெயர் தரித்துமிக
ஏழைக்குள் ஏழையாகிக்
கல்லாத அறிவிற் கடைப்பட்ட நான்அன்று
கையினால் உண்மைஞானங்
கற்பித்த நின்னருளி னுக்கென்ன கைம்மாறு
காட்டுவேன் குற்றேவல்நான்
அல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறைஎயிற்
றாபாச வடிவமான
அந்தகா நீயொரு பகட்டாற் பகட்டுவ
தடாதடா காசுநம்பால்
செல்லா தடாஎன்று பேசுவா யதுதந்த
செல்வமே சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 9.
மின்போலும் இடையொடியும் ஒடியுமென மொழிதல்போல்
மெனசிலம் பொலிகளார்ப்ப
வீங்கிப் புடைத்துவிழ சுமையன்ன கொங்கைமட
மின்னார்கள் பின்ஆவலால்
என்போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள்
இருவர்களில் ஒருவருண்டோ
என்செய்கேன் அம்மம்ம என்பாவம் என்கொடுமை
ஏதென் றெடுத்துமொழிவேன்
அன்பால் வியந்துருகி அடியற்ற மரமென்ன
அடியிலே வீழ்ந்துவீழ்ந்தெம்
அடிகளே யுமதடிமை யாங்களெனு நால்வருக்
கறமாதி பொருளுரைப்பத்
தென்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ற
செல்வமே சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 10.
புத்தமிர்த போகமுங் கற்பகநன் னீழலில்
பொலிவுற இருக்குமியல்பும்
பொன்னுலகி லயிரா வதத்தேறு வரிசையும்
பூமண்ட லாதிக்கமும்
மத்தவெறி யினர்வேண்டும் மாலென்று தள்ளவும்எம்
மாலுமொரு சுட்டும் அறவே
வைக்கின்ற வைப்பாளன் மௌனதே சிகனென்ன
வந்தநின் னருள்வழிகாண்
சுத்தபரி பூரண அகண்டமே ஏகமே
சுருதிமுடி வானபொருளே
சொல்லரிய வுயிரினிடை யங்கங்கு நின்றருள்
சுரந்துபொரு கருணைமுகிலே
சித்திநிலை முத்திநிலை விளைகின்ற பூமியே
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 11.
13. சிற்சுகோதய விலாசம்
காக மோடுகழு கலகை நாய்நரிகள்
சுற்று சோறிடு துருத்தியைக்
காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர்
காமவேள் நடன சாலையை
போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும்
மலமி குந்தொழுகு கேணியை
மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை
முடங்க லார்கிடை சரக்கினை
மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக
வேதம் ஓதியகு லாலனார்
வனைய வெய்யதடி கார னானயமன்
வந்த டிக்குமொரு மட்கலத்
தேக மானபொயை மெய்யெ னக்கருதி
ஐய வையமிசை வாடவோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 1
குறிக ளோடுகுண மேது மின்றியனல்
ஒழுக நின்றிடும் இரும்பனல்
கூட லின்றியது வாயி ருந்தபடி
கொடிய ஆணவ அறைக்குளே
அறிவ தேதும்அற அறிவி லாமைமய
மாயி ருக்குமெனை அருளினால்
அளவி லாததனு கரண மாதியை
அளித்த போதுனை அறிந்துநான்
பிறவி லாதவண நின்றி டாதபடி
பலநி றங்கவரு முபலமாய்ப்
பெரிய மாயையி லழுந்தி நின்னது
ப்ரசாத நல்லருள் மறந்திடுஞ்
சிறிய னேனுமுனை வந்த ணைந்துசுக
மாயி ருப்பதினி என்றுகாண்
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 2
ஐந்து பூதமொரு கானல் நீரென
அடங்க வந்தபெரு வானமே
ஆதி யந்தநடு வேது மின்றியரு
ளாய்நிறைந் திலகு சோதியே
தொந்த ரூபமுடன் அரூப மாதிகுறி
குணமி றந்துவளர் வத்துவே
துரிய மேதுரிய உயிரி னுக்குணர்வு
தோன்ற நின்றருள் சுபாவமே
எந்த நாளுநடு வாகி நின்றொளிரும்
ஆதியே கருணை நீதியே
எந்தை யேஎன இடைந்திடைந் துருகும்
எளிய னேன்கவலை தீரவுஞ்
சிந்தை யானதை யறிந்து நீயுனருள்
செய்ய நானுமினி யுய்வனோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 3
ஐவ ரென்றபுல வேடர் கொட்டம
தடங்க ம்ர்க்கடவன் முட்டியாய்
அடவி நின்றுமலை யருகில் நின்றுசரு
காதி தின்றுபனி வெயிலினால்
மெய்வ ருந்துதவ மில்லைநற் சரியை
கிரியை யோகமெனும் மூன்றதாய்
மேவு கின்றசவு பான நன்னெறி
விரும்ப வில்லையுல கத்திலே
பொய்மு டங்குதொழில் யாத தற்குநல
சார தித்தொழில் நடத்திடும்
புத்தி யூகமறி வற்ற மூகமிவை
பொருளெ னக்கருதும் மருளன்யான்
தெய்வ நல்லருள் படைத்த அன்பரொடு
சேர வுங்கருணை கூர்வையோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 4
ஏகமானவுரு வான நீயருளி
னால னேகவுரு வாகியே
எந்த நாளகில கோடி சிர்ட்டிசெய
இசையு நாள்வரை யநாள்முதல்
ஆக நாளது வரைக்கு முன்னடிமை
கூடவே சனன மானதோ
அநந்த முண்டுநல சனன மீதிதனுள்
அறிய வேண்டுவன அறியலாம்
மோக மாதிதரு பாச மானதை
அறிந்து விட்டுனையும் எனையுமே
முழுது ணர்ந்துபர மான இன்பவெள
மூழ்க வேண்டும் இதுஇன்றியே
தேக மேநழுவி நானுமோ நழுவின்
பின்னை உய்யும்வகை உள்ளதோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 5
நியம லட்சணமும் இயம லட்சணமும்
ஆச னாதிவித பேதமும்
நெடிது ணர்ந்திதய பத்ம பீடமிசை
நின்றி லங்குமச பாநலத்
தியல றிந்துவளர் மூல குண்டலியை
இனிதி றைஞ்சியவ ளருளினால்
எல்லை யற்றுவளர் சோதி மூலஅனல்
எங்கள் மோனமனு முறையிலே
வயமி குந்துவரும் அமிர்த மண்டல
மதிக்கு ளேமதியை வைத்துநான்
வாய்ம டுத்தமிர்த வாரி யைப்பருகி
மன்னு மாரமிர்த வடிவமாய்ச்
செயமி குந்துவரு சித்த யோகநிலை
பெற்று ஞானநெறி அடைவனோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 6
எறிதி ரைக்கடல் நிகர்த்த செல்வமிக
அல்ல லென்றொருவர் பின்செலா
தில்லை யென்னுமுரை பேசி டாதுலகில்
எவரு மாமெனம திக்கவே
நெறியின் வைகிவளர் செல்வ மும்உதவி
நோய்க ளற்றசுக வாழ்க்கையாய்
நியம மாதிநிலை நின்று ஞானநெறி
நிட்டை கூடவுமெந் நாளுமே
அறிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும்
அன்றி மோனகுரு வாகியே
அகில மீதுவர வந்த சீரருளை
ஐய ஐயஇனி என்சொல்கேன்
சிறிய னேழைநம தடிமை யென்றுனது
திருவு ளத்தினிலி ருந்ததோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 7
எவ்வு யிர்த்திரளும் உலகி லென்னுயிர்
எனக்கு ழைந்துருகி நன்மையாம்
இதமு ரைப்பஎன தென்ற யாவையும்
எடுத்தெ றிந்துமத யானைபோல்
கவ்வை யற்றநடை பயில அன்பரடி
கண்டதே அருளின் வடிவமாக்
கண்ட யாவையும் அகண்ட மென்னஇரு
கைகுவித்து மலர் தூவியே
பவ்வ வெண்திரை கொழித்த தண்தரளம்
விழியு திர்ப்பமொழி குளறியே
பாடி யாடியு ளுடைந்து டைந்தெழுது
பாவையொத் தசைத லின்றியே
திவ்ய அன்புருவ மாகி அன்பரொடும்
இன்ப வீட்டினி லிருப்பனோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 8
மத்தர் பேயரொடு பாலர் தன்மையது
மருவியே துரிய வடிவமாய்
மன்னு தேசமொடு கால மாதியை
மறந்து நின்னடிய ரடியிலே
பத்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு
மையல் தந்தகில மாயையைப்
பாரு பாரென நடத்த வந்ததென்
பார தத்தினுமி துள்ளதோ
சுத்த நித்தவியல் பாகு மோவுனது
விசுவ மாயை நடுவாகவே
சொல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை
சொல்லு மாயையினு மில்லைஎன்
சித்த மிப்படி மயங்கு மோஅருளை
நம்பி னோர்கள்பெறு பேறிதோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 9
பன்மு கச்சமய நெறிப டைத்தவரும்
யாங்க ளேகடவு ளென்றிடும்
பாத கத்தவரும் வாத தர்க்கமிடு
படிற ருந்தலை வணங்கிடத்
தன்மு சத்திலுயிர் வரவழைக்கும்எம
தரும னும்பகடு மேய்க்கியாய்த்
தனியி ருப்பவட நீழ லூடுவளர்
சனக னாதிமுனி வோர்கள்தஞ்
சொன்ம யக்கமது தீர அங்கைகொடு
மோன ஞானம துணர்த்தியே
சுத்த நித்தஅரு ளியல்ப தாகவுள
சோம சேகரகிர் பாளுவாய்த்
தென்மு கத்தின்முக மாயி ருந்தகொலு
எம்மு கத்தினும் வணங்குவேன்
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே - 10
ஆகார புவனமின் பாகார மாக
அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார
யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக்
குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே
வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன
மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல்
தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே
திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1.
அனந்தபத உயிர்கள்தொரும் உயிரா யென்றும்
ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத்
தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச்
சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே
இனம்பிரிந்த மான்போல்நான் இடையா வண்ணம்
இன்பமுற அன்பர்பக்க லிருத்தி வைத்துக்
கனந்தருமா கனமேதண் அருளில் தானே
கனிபலித்த ஆனந்தக் கட்டிப் பேறே. 2.
பேறனைத்தும் அணுவெனவே உதறித் தள்ளப்
பேரின்ப மாகவந்த பெருக்கே பேசா
வீறனைத்தும் இந்நெறிக்கே என்ன என்னை
மேவென்ற வரத்தேபாழ் வெய்ய மாயைக்
கூறனைத்துங் கடந்தஎல்லைச் சேட மாகிக்
குறைவறநின் றிடுநிறைவே குலவா நின்ற
ஆறனைத்தும் புகுங்கடல்போல் சமயகோடி
அத்தனையுந் தொடர்ந்துபுகும் ஆதி நட்பே. 3.
ஆதியந்தம் எனும்எழுவா யீறற் றோங்கி
அருமறைஇன் னமுங்காணா தரற்ற நானா
பேதமதங் களுமலைய மலைபோல் வந்தப்
பெற்றியரும் வாய்வாதப் பேய ராகச்
சாதகமோ னத்திலென்ன வடவால் நீழல்
தண்ணருட்சந் திரமௌலி தடக்கைக் கேற்க
வேதகசின் மாத்திரமா யெம்ம னோர்க்கும்
வெளியாக வந்தவொன்றே விமல வாழ்வே. 4.
விமலமுதற் குணமாகி நூற்றெட் டாதி
வேதமெடுத் தெடுத்துரைத்த விருத்திக் கேற்க
அமையுமிலக் கணவடிவா யதுவும் போதா
தப்பாலுக் கப்பாலாய் அருட்கண் ணாகிச்
சமமுமுடன் கலப்புமவிழ் தலும்யாங் காணத்
தண்ணருள்தந் தெமைக்காக்குஞ் சாட்சிப் பேறே
இமையளவும் உபகார மல்லால் வேறொன்
றியக்காநிர்க் குணக்கடலா யிருந்த ஒன்றே. 5.
ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட
ஒளியாகி வெளியாகி உருவு மாகி
நன்றாகித் தீதாகி மற்று மாகி
நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி
இன்றாகி நாளையுமாய் மேலு மான
எந்தையே எம்மானே என்றென் றேங்கிக்
கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே. 6.
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
ஆரமிர்தே என்கண்ணே அரிய வான
பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்
பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி
இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்
விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே. 7.
விண்ணவரிந் திரன்முதலோர் நார தாதி
விளங்குசப்த ரிடிகள்கன வீணை வல்லோர்
எண்ணரிய சித்தர்மனு வாதி வேந்தர்
இருக்காதி மறைமுனிவர் எல்லா மிந்தக்
கண்ணகல்ஞா லம்மதிக்கத் தானே உள்ளங்
கையில்நெல்லிக் கனிபோலக் காட்சி யாகத்
திண்ணியநல் லறிவாலிச் சமயத் தன்றோ
செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும். 8.
செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்
தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான
அப்பரிசா ளரும·தே பிடித்தா லிப்பால்
அடுத்ததந்நூல் களும்விரித்தே அனுமா னாதி
ஒப்பவிரித் துரைப்பரிங்ஙன் பொய்மெய் என்ன
ஒன்றிலைஒன் றென்ப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்
இப்பரிசாஞ் சமயமுமாய் அல்ல வாகி
யாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி. 9.
இயல்பென்றுந் திரியாமல் இயம மாதி
எண்குணமுங் காட்டியன்பால் இன்ப மாகிப்
பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப்
பண்புறவுஞ் சௌபான பட்சங் காட்டி
மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி
மற்றங்க நூல்வணங்க மௌன மோலி
அயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தில்
அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ. 10.
அந்தோஈ ததிசயமிச் சமயம் போலின்
றறிஞரெல்லாம் நடுஅறிய அணிமா ஆதி
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும்
இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லை
சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத்
தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம். 11.
சன்மார்க்கம் ஞானமதின் பொருளும் வீறு
சமயசங்கே தப்பொருளுந் தானென் றாகப்
பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை
பகர்வரிய தில்லைமன்றுள் பார்த்த போதங்
கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன
எச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர்
கன்மார்க்க நெஞ்சமுள எனக்குந் தானே
கண்டவுடன் ஆனந்தங் காண்ட லாகும். 12.
காண்டல்பெறப் புறத்தினுள்ள படியே உள்ளுங்
காட்சிமெய்ந்நூல் சொலும்பதியாங் கடவு ளேநீ
நீண்டநெடு மையுமகலக் குறுக்குங் காட்டா
நிறைபரிபூ ரணஅறிவாய் நித்த மாகி
வேண்டுவிருப் பொடுவெறுப்புச் சமீபந் தூரம்
விலகலணு குதல்முதலாம் விவகா ரங்கள்
பூண்டஅள வைகள்மனவாக் காதி யெல்லாம்
பொருந்தாம லகம்புறமும் புணர்க்கை யாகி. 13.
ஆகியசற் காரியவூ கத்துக் கேற்ற
அமலமாய் நடுவாகி அனந்த சத்தி
யோகமுறும் ஆனந்த மயம தாகி
உயிர்க்குயிரா யெந்நாளும் ஓங்கா நிற்ப
மோகஇருள் மாயைவினை உயிர்கட் கெல்லாம்
மொய்த்ததென்கொல் உபகார முயற்சி யாகப்
பாகமிக அருளஒரு சத்தி வந்து
பதித்ததென்கொல் நானெனுமப் பான்மை என்கொல். 14.
நானென்னும் ஓரகந்தை எவர்க்கும் வந்து
நலிந்தவுடன் சகமாயை நானா வாகித்
தான்வந்து தொடருமித்தால் வளருந் துன்பச்
சாகரத்தின் பெருமைஎவர் சாற்ற வல்லார்
ஊனென்றும் உடலென்றுங் கரண மென்றும்
உள்ளென்றும் புறமென்றும் ஒழியா நின்ற
வானென்றுங் காலென்றுந் தீநீ ரென்றும்
மண்ணென்றும் மலையென்றும் வனம தென்றும். 15.
மலைமலையாங் காட்சிகண்கா ணாமை யாதி
மறப்பென்றும் நினைப்பென்றும் மாயா வாரி
அலையலையா யடிக்குமின்ப துன்ப மென்றும்
அதைவிளைக்கும் வினைகளென்றும் அதனைத் தீர்க்கத்
தலைபலவாஞ் சமயமென்றுந் தெய்வ மென்றுஞ்
சாதகரென் றும்மதற்குச் சாட்சி யாகக்
கலைபலவா நெறியென்றுந் தர்க்க மென்றுங்
கடலுறுநுண் மணலெண்ணிக் காணும் போதும். 16.
காணரிய அல்லலெல்லாந் தானே கட்டுக்
கட்டாக விளையுமதைக் கட்டோ டேதான்
வீணினிற்கர்ப் பூரமலை படுதீப் பட்ட
விந்தையெனக் காணவொரு விவேகங் காட்ட
ஊணுறக்கம் இன்பதுன்பம் பேரூ ராதி
ஒவ்விடவும் எனைப்போல உருவங் காட்டிக்
கோணறவோர் மான்காட்டி மானை ஈர்க்குங்
கொள்கையென அருள்மௌன குருவாய் வந்து. 17.
வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி
அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை
யாதொன்று பற்றின்அதன் இயல்பாய் நின்று
பந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன்
பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம். 18.
அறிவாகி ஆனந்த மயமா யென்றும்
அழியாத நிலையாகி யாதின் பாலும்
பிறியாமல் தண்ணருளே கோயி லான
பெரியபரம் பதியதனைப் பேறவே வேண்டில்
நெறியாகக் கூறுவன்கேள் எந்த நாளும்
நிர்க்குணநிற்(கு) உளம்வாய்த்து நீடு வாழ்க
செறிவான அறியாமை எல்லாம் நீங்க
சிற்சுகம்பெற் றிடுகபந்தந் தீர்க வென்றே. 19.
பந்தமறும் மெஞ்ஞான மான மோனப்
பண்பொன்றை அருளியந்தப் பண்புக் கேதான்
சிந்தையில்லை நானென்னும் பான்மை யில்லை
தேசமில்லை காலமில்லை திக்கு மில்லை
தொந்தமில்லை நீக்கமில்லை பிரிவு மில்லை
சொல்லுமில்லை இராப்பகலாந் தோற்ற மில்லை
அந்தமில்லை ஆதியில்லை நடுவு மில்லை
அகமுமில்லை புறமில்லை அனைத்து மில்லை. 20.
இல்லைஇல்லை யென்னினொன்று மில்லா தல்ல
இயல்பாகி என்றுமுள்ள இயற்கை யாகிச்
சொல்லரிய தன்மையதா யான்றா னென்னத்
தோன்றாதெல் லாம்விழுங்குஞ் சொரூப மாகி
அல்லையுண்ட பகல்போல அவித்தை யெல்லாம்
அடையவுண்டு தடையறவுன் அறிவைத் தானே
வெல்லவுண்டிங் குன்னையுந்தா னாகக் கொண்டு
வேதகமாய்ப் பேசாமை விளக்குந் தானே. 21.
தானான தன்மயமே யல்லால் ஒன்றைத்
தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே
போனாலுங் கர்ப்பூர தீபம் போலப்
போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம்
ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற
ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்
ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார்
அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும். 22.
அதுவென்றால் எதுவெனவொன் றடுக்குஞ் சங்கை
ஆதலினால் அதுவெனலும் அறவே விட்டு
மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி
மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும்
பதியிந்த நிலையெனவும் என்னை யாண்ட
படிக்குநிரு விகற்பத்தாற் பரமா னந்த
கதிகண்டு கொள்ளவும்நின் னருள்கூ ரிந்தக்
கதியன்றி யுறங்கேன்மேற் கருமம் பாரேன். 23.
பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை
பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு
பூராய மாமேலொன் றறியா வண்ணம்
புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன். 24.
ஆயுமறி வாகியுன்னைப் பிரியா வண்ணம்
அணைந்துசுகம் பெற்றவன்பர் ஐயோ வென்னத்
தீயகொலைச் சமயத்துஞ் செல்லச் சிந்தை
தெளிந்திடவுஞ் சமாதானஞ் செய்வேன் வாழ்வான்
காயிலைபுன் சருகாதி யருந்தக் கானங்
கடல்மலைஎங் கேஎனவுங் கவலை யாவேன்
வாயில் கும்பம் போற்கிடந்து புரள்வேன் வானின்
மதிகதிரை முன்னிலையா வைத்து நேரே. 25.
நேரேதான் இரவுபகல் கோடா வண்ணம்
நித்தம்வர வுங்களைஇந் நிலைக்கே வைத்தார்
ஆரேயங் கவர்பெருமை என்னே என்பேன்
அடிக்கின்ற காற்றேநீ யாரா லேதான்
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து
பெய்கின்ற முகில்காள்எம் பெருமான் நும்போல்
தாராள மாக்கருணை பொழியச் செய்யுஞ்
சாதகமென் னேகருதிச் சாற்று மென்பேன். 26.
கருதரிய விண்ணேநீ எங்கு மாகிக்
கலந்தனையே யுன்முடிவின் காட்சி யாக
வருபொருளெப் படியிருக்குஞ் சொல்லா யென்பேன்
மண்ணேயுன் முடிவிலெது வயங்கு மாங்கே
துரியஅறி வுடைச்சேடன் ஈற்றின் உண்மை
சொல்லானோ சொல்லென்பேன் சுருதி யேநீ
ஒருவரைப்போல் அனைவருக்கும் உண்மை யாமுன்
உரையன்றோ உன்முடிவை உரைநீ என்பேன். 27.
உரையிறந்து பெருமை பெற்றுத் திரைக்கை நீட்டி
ஒலிக்கின்ற கடலேஇவ் வுலகஞ் சூழக்
கரையுமின்றி யுன்னைவைத்தார் யாரே என்பென்
கானகத்திற் பைங்கிளிகாள் கமல மேவும்
வரிசிறைவண் டினங்காள்ஓ திமங்காள் தூது
மார்க்கமன்றோ நீங்களிது வரையி லேயும்
பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு
பேசியதுண் டோவொருகாற் பேசு மென்பேன். 28.
ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை
ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை
மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்
வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
அருளுடைய பரமென்றோ அன்று தானே
யானுளனென் றும்மனக்கே ஆணவாதி
பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்
பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே. 29.
அன்றுமுதல் இன்றைவரைச் சனன கோடி
அடைந்தடைந்திங் கியாதனையால் அழிந்த தல்லால்
இன்றைவரை முக்தியின்றே எடுத்த தேகம்
எப்போதோ தெரியாதே இப்போ தேதான்
துன்றுமனக் கவலைகெடப் புலைநா யேனைத்
தொழும்புகொளச் சீகாழித் துரையே தூது
சென்றிடவே பொருளைவைத்த நாவ லோய்நஞ்
சிவனப்பா என்ற அருட் செல்வத் தேவே. 30.
தேவர் தொழும் வாதவூர்த் தேவே என்பேன்
திருமூலத் தேவேஇச் சகத்தோர் முத்திக்
காவலுறச் சிவவென்வாக் குடனே வந்த
அரசேசும் மாவிருந்துன் அருளைச் சாரப்
பூவுலகில் வளரருணை கிரியே மற்றைப்
புண்ணியர்கா ளோவென்பேன் புரையொன் றில்லா
ஓவியம்போல் அசைவறவுந் தானே நிற்பேன்
ஓதரிய துயர்கெடவே யுரைக்கு முன்னே. 31.
ஓதரிய சுகர்போல ஏன்ஏன் என்ன
ஒருவரிலை யோஎனவும் உரைப்பேன் தானே
பேதம்அபே தங்கெடவும் ஒருபே சாமை
பிறவாதோ ஆலடியிற் பெரிய மோன
நாதனொரு தரமுலகம் பார்க்க இச்சை
நண்ணானோ என்றென்றே நானா வாகிக்
காதல்மிகு மணியிழையா ரெனவா டுற்றேன்
கருத்தறிந்து புரப்பதுன்மேற் கடன்முக் காலும். 32.
காலமொடு தேசவர்த்த மான மாதி
கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி
மாலறவுஞ் சைவமுதல் மதங்க ளாகி
மதாதீத மானஅருள் மரபு வாழி
சாலமிகும் எளியேனிவ் வழக்குப் பேசத்
தயவுவைத்து வளர்த்தஅருள் தன்மைவாழி
ஆலடியிற் பரமகுரு வாழி வாழி
அகண்டிதா காரஅரு ளடியார் வாழி. 33.
தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும்
நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை
கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ
வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1.
வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக்
காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால்
ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே
ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2.
கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக் கண்ணே
கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி அத்தால்
பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன மாயை யோடே
வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன். 3.
விளங்கவெண் ணீறுபூசி விரிசடைக் கங்கை தாங்கித்
துளங்குநன் னுதற்கண் தோன்றச் சுழல்வளி நெடுமூச் சாகக்
களங்கமி லுருவந் தானே ககனமாய்ப் பொலியப் பூமி
வளர்ந்ததா ளென்ன உள்ள மன்றென மறையொன் றின்றி. 4.
மறைமுழக் கொலிப்பத் தானே வரதமோ டபயக் கைகள்
முறைமையின் ஓங்க நாதம் முரசெனக் கறங்க எங்கும்
குறைவிலா வணநி றைந்து கோதிலா நடனஞ் செய்வான்
இறையவன் எனலாம் யார்க்கும் இதயசம் மதமீ தல்லால். 5.
அல்லலாந் தொழில்ப டைத்தே அடிக்கடி உருவெ டுத்தே
மல்லல்மா ஞாலங் காக்க வருபவர் கடவு ளென்னில்
தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திட திருள்நீங் காது
நல்லது மாயை தானும் நானென வந்து நிற்கும். 6.
நானென நிற்கு ஞானம் ஞானமன் றந்த ஞானம்
மோனமா யிருக்க வொட்டா மோனமின் றாக வேதான்
தேனென ருசிக்கும் அன்பாற் சிந்தைநைந் துருகும் வண்ணம்
வானென நிறைந்தா னந்த மாகடல் வளைவ தின்றே. 7.
இன்றென இருப்பே மென்னின் என்றுஞ்சூ னியமா முத்தி
நன்றொடு தீது மன்றி நாமுன்னே பெறும்அ வித்தை
நின்றது பெத்தந் தானே நிரந்தர முத்தி யென்னின்
ஒன்றொரு வரைநான் கேட்க உணர்வில்லை குருவுமில்லை. 8.
இல்லையென் றிடினிப்பூமி இருந்தவா றிருப்போ மென்னில்
நல்லவன் சாரு வாகன் நான்சொலும் நெறிக்கு வீணில்
தொல்லையேன் ஆகமாதி தொடுப்பதேன் மயக்க மேதிங்
கொல்லைவந் திருமி னென்ன வுறவுசெய் திடுவ னந்தோ. 9.
அந்தணர் நால்வர் காண அருட்குரு வாகி வந்த
எந்தையே எல்லாந் தானென் றியம்பினன் எமைப்ப டைத்த
தந்தைநீ எம்மைக் காக்குந் தலைவனே நுந்தை யன்றோ
பந்தமில் சித்தி முத்தி படைக்கநின் அருள்பா லிப்பாய். 10.
பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர்
பாமாலைக் கேநீதான் பட்ச மென்று
நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர்
நலமறிந்து கல்லாத நானுஞ் சொன்னேன்
சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத்
தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன்
என்மாலை யறிந்திங்கே வாவா என்றே
எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே. 1.
கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன்
கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க
ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும்
ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ
இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும்
இடர்செயுமைம் புலனுங்கா மாதி யாறும்
வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான
மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே. 2.
வடிவனைத்துந் தந்தவடி வில்லாச் சுத்த
வான்பொருளே எளியனேன் மனமா மாயைக்
குடிகெடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மோன
குருவேஎன் தெய்வமே கோதி லாத
படியெனக்கா னந்தவெள்ளம் வந்து தேக்கும்
படியெனக்குன் திருக்கருணை ப்ற்று மாறே
அடியெடுத்தென் முடியிலின்னம் வைக்க வேண்டும்
அடிமுடியொன் றில்லாத அகண்ட வாழ்வே. 3.
வாழ்வனைத்தும் மயக்கமெனத் தேர்ந்தேன் தேர்ந்த
வாறேநான் அப்பாலோர் வழிபா ராமல்
தாழ்வுபெற்றிங் கிருந்தேன்ஈ தென்ன மாயந்
தடையுற்றால் மேற்கதியுந் தடைய தாமே
ஊழ்வலியோ அல்லதுன்றன் திருக்கூத் தோஇங்
கொருதமியேன் மேற்குறையோ வுணர்த்தா யின்னம்
பாழ் அவதிப் படஎனக்கு முடியா தெல்லாம்
படைத்தளித்துத் துடைக்கவல்ல பரிசி னானே. 4.
நானானிங் கெனுமகந்தை எனக்கேன் வைத்தாய்
நல்வினைதீ வினைஎனவே நடுவே நாட்டி
ஊனாரும் உடற்சுமைஎன் மீதேன் வைத்தாய்
உயிரெனவு மென்னையொன்றா வுள்ளேன் வைத்தாய்
ஆனாமை யாயகில நிகில பேதம்
அனைத்தினுள்ளுந் தானாகி அறிவா னந்தத்
தேனாகிப் பாலாகிக் கனியாய்க் கன்னல்
செழும்பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த வொன்றே. 5.
ஒன்றியொன்றி நின்றுநின்றும் என்னை என்னை
உன்னியுன்னும் பொருளலைநீ உன்பால் அன்பால்
நின்றதன்மைக் கிரங்கும்வயி ராக்கிய னல்லேன்
நிவர்த்தியவை வேண்டுமிந்த நீல னுக்கே
என்றுமென்றும் இந்நெறியோர் குணமு மில்லை
இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ
கன்றுமனத் துடனஆடு தழைதின் றாற்போல்
கல்வியுங்கேள் வியுமாகிக் கலக்குற் றேனே. 6.
உற்றதுணை நீயல்லாற் பற்று வேறொன்
றுன்னேன்பன் னாள்உலகத் தோடி யாடிக்
கற்றதுங்கேட் டதுமிதனுக் கேது வாகுங்
கற்பதுங்கேட் பதுமமையுங் காணா நீத
நற்றுணையே அருள்தாயே இன்ப மான
நாதாந்த பரம்பொருளே நார ணாதி
சுற்றமுமாய் நல்லன்பர் தமைச்சே யாகத்
தொழும்புகொளுங் கனாகனமே சோதிக் குன்றே. 7.
குன்றாத மூவருவாய் அருவாய் ஞானக்
கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி
நின்றாயே மாயைஎனுந் திரையை நீக்கி
நின்னையா ரறியவல்லார் நினைப்போர் நெஞ்சம்
மன்றாக இன்பக்கூத் தாட வல்ல
மணியேஎன் கண்ணேமா மருந்தே நால்வர்க்
கன்றாலின் கீழிருந்து மோன ஞானம்
அமைத்தசின்முத் திரைக்கடலே அமர ரேறே. 8.
திரையில்லாக் கடல்போலச் சலனந் தீர்ந்து
தெளிந்துருகும் பொன்போலச் செகத்தை எல்லாங்
கரையவே கனிந்துருக்கும் முகத்தி லேநீ
கனிந்தபர மானந்தக் கட்டி இந்நாள்
வரையிலே வரக்காணேன் என்னாற் கட்டி
வார்த்தைசொன்னாற் சுகம்வருமோ வஞ்ச னேனை
இரையிலே யிருத்திநிரு விகற்ப மான
இன்பநிட்டை கொடுப்பதையா எந்த நாளோ. 9.
எந்தநா ளுனக்கடிமை யாகு நாளோ
எந்நாளோ கதிவருநாள் எளிய னேன்றன்
சிந்தைநா ளதுவரைக்கும் மயங்கிற் றல்லால்
தெளிந்ததுண்டோ மௌனியாய்த் தெளிய ஓர்சொல்
தந்தநாள் முதலின்பக் கால்சற் றல்லால்
தடையறஆ னந்தவெள்ளந் தானே பொங்கி
வந்தநா ளில்லைமெத்த அலைந்தே னுன்னை
மறவாவின் பத்தாலே வாழ்கின் றேனே. 10.
நினைவொன்று நினையாமல் நிற்கின் அகம் என்பார்
நிற்குமிட மேயருளாம் நிட்டையரு ளட்டுந்
தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா னதுமேல்
தட்டியெழுந் திருக்குமின்பந் தன்மயமே யதுவாம்
பினையொன்று மிலையந்த இன்பமெனும் நிலயம்
பெற்றாரே பிறவாமை பெற்றார்மற் றுந்தான்
மனையென்றும் மகனென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த
வாதனையாம் ஆசைமொழி மன்னொருசொற் கொண்டே. 1.
ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த
குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்
கருமொழியிங் குனக்கில்லை மொழிக்குமொழி ருசிக்கக்
கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங்கண்டனைமேல்
தருமொழியிங் குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்
தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே. 2.
நில்லாத ஆக்கைநிலை யன்றனவே கண்டாய்
நேயஅருள் மெய்யன்றோ நிலயமதா நிற்கக்
கல்லாதே ஏன் படித்தாய் கற்றதெல்லாம் மூடங்
கற்றதெல்லாம் மூடமென்றே கண்டனையும் அன்று
சொல்லாலே பயனில்லை சொல்முடிவைத் தானே
தொடர்ந்துபிடி மர்க்கடம்போல் தொட்டதுபற் றாநில்
எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறைகொண் டடிநீ
இராப்பகலில் லாவிடமே எமக்கிடமென் றறிந்தே. 3.
இடம்பொருளே வலைக்குறித்து மடம்புகுநா யெனவே
எங்கேநீ யகப்பட்டா யிங்கேநீ வாடா
மடம்பெறுபாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை
மன்னிடமே இடம்அந்த மாநிலத்தே பொருளுந்
திடம்பெறவே நிற்கினெல்லா உலகமும்வந் தேவல்
செய்யுமிந்த நிலைநின்றோர் சனகன்முதல் முனிவர்
கடம்பெறுமா மதயானை என்னவுநீ பாசக்
கட்டான நிகளபந்தக் கட்டவிழப் பாரே. 4.
பாராதி யண்டமெலாம் படர்கானற் சலம்போல்
பார்த்தனையே முடிவில்நின்று பாரெதுதான் நின்ற
தாராலும் அறியாத சத்தன்றோ அதுவாய்
அங்கிருநீ எங்கிருந்தும் அதுவாவை கண்டாய்
பூராய மாகவுநீ மற்றொன்றை விரித்துப்
புலம்பாதே சஞ்சலமாப் புத்தியைநாட் டாதே
ஓராதே ஒன்றையுநீ முன்னிலைவை யாதே
உள்ளபடி முடியுமெலாம் உள்ளபடி காணே. 5.
உள்ளபடி யென்னவுநீ மற்றொன்றைத் தொடர்ந்திட்
டுளங்கருத வேண்டாநிட் களங்கமதி யாகிக்
கள்ளமனத் துறவைவிட்டெல் லாந்துறந்த துறவோர்
கற்பித்த மொழிப்படியே கங்குல்பக லற்ற
வெள்ளவெளிக் கடல்மூழ்கி யின்பமயப் பொருளாய்
விரவியெடுத் தெடுத்தெடுத்து விள்ளவும்வா யின்றிக்
கொள்ளைகொண்ட கண்ணீருங் கம்பலையு மாகிக்
கும்பிட்டுச் சகம்பொயெனத் தம்பட்ட மடியே. 6.
அடிமுடியும் நடுவுமற்ற பரவெளிமேற் கொண்டால்
அத்துவித ஆனந்த சித்தமுண்டாம் நமது
குடிமுழுதும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்த
கோலமெல்லாம் நன்றாகுங் குறைவுநிறை வறவே
விடியுமுத யம்போல அருளுதயம் பெற்ற
வித்தகரோ டுங்கூடி விளையாட லாகும்
படிமுழுதும் விண்முழுதுந் தந்தாலுங் களியாப்
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் வருமே. 7.
வரும்போமென் பனவுமின்றி யென்றுமொரு படித்தாய்
வானாதி தத்துவத்தை வளைந்தருந்தி வெளியாம்
இரும்போகல் லோமரமோ என்னும்நெஞ்சைக் கனல்மேல்
இட்டமெழு காவுருக்கும் இன்பவெள்ள மாகிக்
கரும்போகண் டோசீனி சருக்கரையோ தேனோ
கனியமிர்தோ எனருசிக்குங் கருத்தவிழ்ந்தோ ருணர்வார்
அரும்போநன் மணங்காட்டுங் காமரசங் கன்னி
அறிவாளோ அபக்குவர்க்கோ அந்நலந்தான் விளங்கும். 8.
தானேயும் இவ்வுலகம் ஒருமுதலு மாகத்
தன்மையினாற் படைத்தளிக்குந் தலைமையது வான
கோனாக வொருமுதலிங் குண்டெனவும் யூகங்
கூட்டியதுஞ் சகமுடிவிற் குலவுறுமெய்ஞ் ஞான
வானாக அம்முதலே நிற்குநிலை நம்மால்
மதிப்பரிதாம் எனமோனம் வைத்ததும்உன் மனமே
ஆனாலும் மனஞ்சடமென் றழுங்காதே யுண்மை
அறிவித்த இடங்குருவாம் அருளிலதொன் றிலையே. 9.