logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil

மங்கள வாழ்த்து

பரிபூரணமான சத்தியையுடைய எந்தப் பரம்பொருளினது ஒரு சிறு கூற்றிலே இந்த எல்லாப் பிரபஞ்சங்களும் அடங்கினவெனச் சிவாகமங்களை அறிந்தவர் கூறுகின்றனரோ, அத்தகைய, பச்சினை (தமால விருக்ஷம்) மரத்தின் காந்திபோல் விளங்கும் கழுத்தையுடையவராயும், நாராயணியென்னும் சத்திக்கு நாயகராயுமிருக்கும் சிவபெருமானுக்கு வணக்கம் செய்கிறேன்.

 

நூல்

சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு கலந்த ஆகமமுறையாயும், தனி ஆகமமுறையாயுமிருப்பதால், சைவர்களுக்குச் சைவமுறை (ஆகமமுறை) மிகவும் சிரேஷ்டமானது. அந்தச் சிவபூஜையினுள்ளும் சத்தியின் கலப்பில்லாத சுத்த பூஜையினின்றும், கலப்புடைய சூரியன்முதலிய பூஜைகளினின்றும், சத்தியுடன் கூடிய சிவபூஜையானது போக மோக்ஷங்களைத் தரக்கூடியதாகையால் மிகவும் மேலானது. ஆகையால் அம்பிகையுடன் கூடச் சிவபெருமானைப் பூஜிக்கும் ஆன்மார்த்த சிவபூஜையை எல்லாத் திவ்வியாகமங்களிலிருந்தும் திரட்டிச்சுருக்கமாகக் கூறுகின்றேன்.

ஒவ்வொரு திவ்வியாகமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்து இவ்விடத்தில் திரட்டிக் கூறுதலால் பலவாகமஙகளின் கலப்பென்று சொல்லக்ககூடிய கலப்புத் தோஷம் நேரிடாதோவெனின், பலதிவ்யாகமங்களினுடைய பொருளின் கலப்பு இருப்பினும், ஒரே சிவசாத்திரமென்ற ஒற்றுமைபற்றிக் கலப்புத் தோஷம் நேரிடாதென்க. பாசுபதாகமத்தின் பொருள்களைத் திவ்வியாகமங்களின் பொருள்களுடன் கலந்தாற்றான் அத்தோஷம் நேரும். வேண்டிய விடங்களில் ஒரு திவ்வியாகமத்தைச் சார்ந்து பல திவ்யாகமங்களின் பொருள்களையும் கொள்ளலாமென்னுங் கூற்றும் மனிதரால் பிரதிட்டை செய்யப்பட்ட இலிங்கங்களில் பொருந்துமேயல்லது சுயம்பு முதலிய லிங்கங்களிற்பொருந்தாது.

ஈசுவரனும் ஒரு ஆகமத்தை ஆதாரமாகக்கொண்டு அந்த ஆகமத்தின் பொருள்கள் சுருக்கமாக இருப்பின் விரிவான பாகத்தை வேறு ஆகமங்களினின்றும் எடுத்துக்கொள்ளலாமென்று கூறியுள்ளார். ஒரு திவ்வியாகமப்பொருளும் பிறிதொரு திவ்வியாகமப் பொருளும் ஈசுவரன் கூறினமைபற்றிச் சமமாகவிருப்பினும், பூஜைக்கு அங்கமாக எந்த ஆகமத்தைக் கொண்டிருக்கிறோமோ, அதுதான் கொள்ளத்தகுமல்லது பிறிதொரு திவ்வியாகமம் கொள்ளத்தக்கதன்று. ஆதலால் எல்லாத் திவ்வியாமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்துச் “சிவார்ச்சனா சந்திரிகை” என்னும் நூலைச் செய்யத் தொடங்குகின்றேன்.

 

நூலின் சுருக்கம்

முன்னர் ஆசமனஞ்செய்து, விபூதி உருத்திராக்கங்களால் அலங்கரிக்கப்பெற்ற சரீரத்துடன் சகளீகரணஞ்செய்து, கிரமப்படி சாமான்னிய அருக்கியத்தை அமைத்துகொள்ளல் வேண்டிடும். பின்னர்ச் சிவபூஜைக்குரியவிடத்தைச் சுத்த வித்தியாசொரூபமாகத் தியானஞ்செய்து அந்த இடத்தின் தெற்கு வாயிலில் துவாரபாலர்களை முறைப்படி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர் பூமி, ஆகாசம், சுவர்க்கம் என்னும்மிடங்களிலுண்டான மூன்று விக்கினங்களையும் அந்தந்த முறையில் விலக்கிக்கொண்டு உள்ளே சென்று அஸ்திரம் முதலியவற்றின் பூஜையைச் செய்து சிவபூஜைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையுந் சேகரித்து சமீபத்தில் வைத்துக்கொள்ளல்வேண்டும். பின்னர் ஈசுவரனுக்கு வலது பாகத்திலாவது அக்கினிதிக்கிலாவது வடக்கு முகமாக விதிக்கப்பட்ட ஆசனத்திலமர்ந்து ஐந்து சுத்திகளையுஞ் செய்தல் வேண்டும். இவ்வாறு இந்நூலின் சுருக்கத்தை அறிந்து கொள்க.

 

நூலின் விரிவின் ஆரம்பம்

 

வைகறைத் தியானம்

சூரியோதயத்திற்கு முன் இரண்டு முகூர்த்தம் அஃதாவது, ஐந்து நாழிகையிருக்கும்பொழுதே எழுந்து கைகால்களைக் கழுவிக்கொண்டு விபூதி தரித்து சமயதீக்ஷையுடையவர்கள் இருதயத்திலும், விசேட தீக்ஷையுடையவன் விந்துத்தானமான லலாடத்திலும், நிருவாணதீக்ஷையுடையவன் சிரசிலும், போதகாசிரியரும் ஆசாரியாபிஷேகம் பெற்றுக்கொண்டவரும் துவாதசாந்தத்திலும் பரமேசுவரனைத் தியானிக்க வேண்டும். பின்னர் மனத்திற்கு இனிமையைத் தரும் சிவபிரானுடைய நாமங்களையும் சரித்திரங்களையும் சங்கீர்த்தனஞ்* செய்க. ( *சங்கீர்த்தனம் - நன்றாய்ச் சொல்லுதல். )

 

மலசலம் கழிக்குமுறை

உரியதான இடத்தையடைந்து சலநிவிர்த்தி மலநிவிர்த்திகள் செய்யவேண்டும். பகற்காலங்களிலும் சந்திகளிலும் வடக்குமுகமாகவும், இராக்காலங்களில் தெற்குமுகமாகவும் ஈருந்துகொண்டுதான் மலசல நிவிர்த்திகள் செய்யவேண்டும். அல்லது காலையில் கிழக்குமுகமாகவம், மாலையில் மேற்குமுகமாகவும், நடுப்பகலில் வடக்குமுகமாகவும், இரவில் தெற்குமுகமாகவும் இருந்துகொண்டு மலசல நிவிர்த்திகள் செய்யலாம். செய்யுங்காலத்தில் வெறும் வெளியிலிருந்துகொண்டாவது, மலசலங்களின் முன்னரிந்துகொண்டாவது, ஒரு திக்கைப்பார்த்துக்கொண்டாவது, சந்திரன், சூரியன், நக்ஷத்திரங்கள், அக்கினி என்னும் இவைகளினுடைய பார்வையிலிருந்துகொண்டாவது, தேவர்கள், பசுக்கள், முனிவர், வேதியர், பெண்கள் என்னும் இவர்களுக்கெதிர் முகமாகவிருந்துகொண்டாவது, செய்தலாகாது. செய்தபின் யாகத்திற்கு உபயோகப்படாத புல்விசேடங்களையாவது ஓடு முதலியவற்றையாவது கொண்டு, குதத்தைத்துடைத்தல் வேண்டும். நல்ல புட்பங்களாலும், இலைகளாலும், குச்சுகளாலும், பழங்களாலும், குதத்தைத் துடைத்தல் கூடாது. கையால் குறியைப் பிடித்துக்கொண்டு கீழ் நோக்கிய பார்வையுடையனாய்ச் சென்று நீரின் சமீபத்தையடைந்து மண்ணுடன் கூடின நீரால் சௌசம் செய்தல் வேண்டும். மண்ணோடுகூடிய நீரால் சுத்தஞ்செய்யும்பொழுது, குறியில் ஒருமுறை மண்ணாலும், குதத்தில் ஐந்துமுறை மண்ணாலும், இடதுகையில் பத்துமுறை மண்ணாலும், புறங்கையிலும் உள்ளங்கையிலும் ஆறுமுறை மண்ணாலும், இருகைகளில் ஏழுமுறை மண்ணாலும் சுத்தஞ் செய்யவேண்டும். புற்றுக்களிலும், மரஙகளின் அடிகளிலும், வீடு, வழி, நீர்நடு, கானற் பூமி, எலிப்பொந்து, பசுநிற்குமிடம், ஆலயம் என்னும் இவைகளிலும், நடைவாய்க்கால், கிணறு, தடாகம் என்னும் இவைகளின் கரைகளிலும், மணலுள்ள இடம், வீதி, மயானம் என்னுமிவற்றிலும், புழு, எலும்பு, உமி, அக்கினி என்னுமிவிற்றால் கேடுபெற்றவிடங்களிலும், புழுதியானவிடத்திலும், அன்னியர் சௌசஞ் செய்துள்ள விடங்களிலும், கலப்பைகளால் உழப்பெற்றவிடங்களிலும், சேறானவிடங்களிலும், சுக்கான்பாறைகளிலும், மண்ணெடுக்கலாகாது. சுத்தமான பூமியில் மேல்மணலை நீக்கிவிட்டு அதனுள்ளிருக்கும் மண்ணைத்தான் எடுக்கவேண்டும். இவ்வாறெடுக்கப்பட்ட மண்ணால், எவ்விதமாகச் சௌசசுத்தி போதுமானதாகத் தோன்றுமோ அவ்விதமாகக் குறைவின்றிச் சௌசசுத்தி செய்துகொள்ளல் வேண்டும். முன்னர் அரைப்பிடி மண்ணால் குதத்தைச் சுத்திசெய்யவேண்டும். பின்னர் அதிலும் பாதியளவான மண்ணால் சுத்தஞ் செய்யவேண்டும். அதன்பின்னர் அதிலும் பாதியளவான மண்ணால் சுத்தஞ்செய்யவேண்டும். மூத்திர சுத்தி செய்யவேண்டுமாயின் ஈரநெல்லிக்காயளவான மணணையெடுத்துச் சுத்திசெய்து கொள்ள வேண்டும். இரவில்தானறியாமல் சுக்கிலம்கலிதமாயின் இரண்டு பச்சை நெல்லிக்காயளவான மண்ணால் சுத்திசெய்து கொள்ளல்வேண்டும். மனைவியின் சம்பவத்திற்குப்பின் மூன்று நெல்லிக்காயளவான மண்ணால் சுத்திசெய்யதுகொள்ளல் வேண்டும்.

இந்தச் சௌசமானது இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்டது. அந்தக்கரணங்களின் சுத்தியின்பொருட்டு முன்னர்க்கூறப்பட்டவற்றைவிட பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி என்னுமிவர்களுக்கு முறையே இரண்டு மூன்று நான்கு மடங்கு அளவு அதிகமாக விதிக்கப் பட்டிருக்கிறது. எவனுக்குப் பகலில் எவ்வளவு சௌசம் விதிக்கப்பட்டிருக்கின்றதோ அதிற்பாதிசௌசமே இராக்காலங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றது. இராக்காலங்களில் விதிக்கப்பட்ட சௌசங்களில் பாதிதான் நோயால் துன்புற்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பாதிதான் காட்டுவழிச் செல்வோருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. கால்களின் பக்கங்களிலிருக்கிற கணுவரையும், கைகளில் மணிக்கட்டு வரையும் முன்னர்ச் சுத்திசெய்துகொண்டு பின்னர் முழங்கால் வரையும்முழங்கை வரையுஞ் சுத்திசெய்யவேண்டும். சௌசத்தினால் சுத்தியை விரும்பும் மனிதர்கள் நீர் நிலைகளிலும் நீரோட்டங்களிலும் சம்பந்தித்துச் செய்தல்கூடாது. உள்ளங்கையால் நீரையெடுத்துச் சுத்தி செய்யவேண்டும். சௌசஞ்செய்து கொள்ளுவதற்கு முன்னரே மண், நீர் என்னுமிவற்றைக் கொண்டுதருதற்கு வேலைக்காரரை நியமித்துக்கொள்ளல் வேண்டும். அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்ணை வலதுகையால் எடுத்து இடதுகையில் வைத்துகொள்ளல் வேண்டும். மலநிவிர்த்தி செய்தால் பன்னிமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். சலநிவிர்த்தி செய்தால் நான்குமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். அன்னம் உண்டபின் பதினாறுமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். கிழக்குமுகமாக இருந்துகொண்டு கால்களையும் வடக்குமுகமாக இருந்துகொண்டு கைகளையும் முகத்தையும் சுத்திசெய்துகொள்ளல் வேண்டும். பின்னர் வடக்குமுகமாகவேனும் கிழக்குமுகமாகவேனும் இருந்துகொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும்.

 

தந்த சுத்தி

பின்னர் இருதயமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு தோலுடன் கூடிய குச்சியை எடுத்துக்கொள்ளல்வேண்டும். கணுவின் நுனிக்குச் சமீபமாகக் குச்சியை ஒடிக்கலாகாது. குற்றியின் முனையில் நுனியிருக்கவேண்டும். கடைவிரலுக்குச் சமமான பருமனாகவேனும், அல்லது பல்லிற்குத் தக்கபடி சிறிதாகவேனுமிருக்க வேண்டும். இவ்வித இலக்கணம் வாய்ந்த குச்சியானது, நைட்டிகர்களுக்கு எட்டங்குல அளவாகவும், போகிகளுக்குப் பன்னிரண்டங்குல அளவாகவும், பிரமசாரிகளுக்கு பத்து அல்லது எட்டு அல்லது ஏழு அங்குல அளவாகவும், சன்னியாசிகளுக்கு ஆறு அங்குல அளவாகவும், பெண்களுக்கு நாலங்குல அளவாகவும் நீளமாயிருக்க வேண்டும்.

நாவல், மா, மருது, அசோகம், விளா, மகிழம், இத்தி, அத்தி, சிறுசண்பகம், சங்கம், குருக்கத்தி, கடம்பம், நாயுருவி என்னும் இந்தமரங்களின் குச்சிகளை போகிகள் உபயோகிக்கலாம்.

வாகையும், புங்கமும், நெல்லியும், தேவதாரு, நொச்சி, தாரை என்னும் மூன்றும், கருங்காலிமரம் போலக்குணத்தைச் செய்யுமாதலால் இவையும், தானிக்காய் சீரகமென்று சொல்லக்கூடியபழ முண்ணிப்பாலைமரமும், ஆமணம், ஆலும், அரசும், மருங்கையும், நறுவிலியும், வஞ்சியும், நெல்லிவிசேஷ, அத்தியும், ஈச்சையும், தென்னையும், பலாசமும், பொரசமும், பனையும் என்னும் இவற்றின் குச்சிகளை உபயோகித்தல் கூடாது. திருணபர்ணர், பிசாசவிருக்ஷம் என்னுமிவற்றின் குச்சிகளையும், செல்கல்லையும், தணல்களினின்றுண்டான சாம்பல்களையும், வெங்ககைகளையும், சுசர்ண முதலியவற்றால் செய்யப்பெற்ற தூள்களையும் உபயோகித்தல் கூடாது.

பிரதமை, நவமி, சஷ்டி, துவாதசி, ஐந்து பர்வதினங்கள், உபவாசதினங்கள், ஜன்மம், அனுஜன்மம், திரிஜன்மம் என்னும் மூன்றுதினங்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வியதீபாதம், கிரகணதினம், சிரார்த்ததினம் என்னுமிவற்றிலும், சூரியோதயத்திற்குப் பின்னரும் பல்துலக்குதல் கூடாது.

விலக்கப்பட்ட தினங்களிலும், விதிக்கப்பட்ட குச்சிகள் கிடையாத காலத்தும் பன்னிருமுறை வாய்கொப்பளிக்க. அல்லது இலைகளால் சுத்திசெய்க. நாவின் அசுத்தத்தை நீக்கக்கூடிய திரவியங்களால் நாவையுஞ்சுத்திசெய்துகொள்க. நெற்றி, கண், காது, மூக்கு, முகம் என்னுமிவற்றிலுள்ள அசுத்தங்களையும், சுக்கிலம், மலம் மூத்திரங்களாலுண்டான அசுத்தங்களையும், கை, கால் முதலியவற்றிலுள்ள அசுத்தங்களையும், இவைபோன்ற எல்லா அசுத்தங்களையும் சுத்திசெய்துகொள்க. மூக்கும், காதும், கண்ணுமாகிய இவைகள் கழுவுவதால் சுத்தி யடைகின்றன. நகம், தலை மயிர் என்னுமிவை மண்ணினாலும், நெல்லிக்காய் முதலியவற்றாலும் சுத்தியடைகின்றன. இவ்வாறு அசுத்தங்களைச் சுத்திசெய்த பின்னர்த் தீயசொப்பனங்களை நாசஞ் செய்வதாயும், எல்லா அசுத்தங்களையும் போக்குவதாயுமுள்ள வாருணஸ்நானத்தைச் செய்ய வேண்டும். வாருணம் - நீர்.

 

மலஸ்நான விதி

முறைப்படி ஆசமனம் கரநியாசம் செய்துகொண்டு, பிராணாயாமஞ்செய்து, கைகளில் தருப்பைகளைத் தரித்துக்கொண்டு சூரியன் எந்த அயனத்திலிருகின்றானோ அந்த அயனத்தையும், மாதத்தையும், திதியையும், வாரத்தையும், ஸ்நானஞ்செய்யும் நதியின் பெயரையும் சொல்லிக்கொண்டு ஹே ஈசா! உம்மைப் பூசிப்பதற்காக நான் ஸ்நானஞ் செய்யப்போகின்றேன்; தேவரீரருள் செய்யவேண்டுமென்று ஈசுவரனைப் பிரார்த்தித்துச் சுத்தமான பூமியை எட்டங்குலம்வரையும் ஹும்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் தோண்டி, அதேமந்திரத்தால் மண்ணையெழுப்பி, எழுப்பின மண்ணில் மூலமந்திரத்தாலாவது, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தாலாவது மண்ணையெடுத்து, முதலாவது எழுப்பின மண்ணால் நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தாலேயே தோண்டின இடத்தை மூடிப் பூர்த்திசெய்து, நம: என்னும் பதத்தை உறுதியிலுடைய சிரோமந்திரத்தால் நதி, ஏரி, தடாகமென்னும் இவற்றில் எதில் ஸ்நானஞ் செய்யவேண்டுமோ அவற்றின்கரையில், முன்னெடுத்த மண்ணைச் சுத்தமானவிடத்தில் வைக்கவேண்டும். நதிமுதலியவற்றில் ஸ்நானஞ் செய்யுங்கால் தெற்குக்கரையில் ஸ்நானஞ்செய்தல் உத்தமம். பின்னர் ஹும்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் முன்வைத்திருந்த மண்ணை அப்யுக்ஷணம் செய்து (நீர் தெளித்து), நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய சிரோமந்திரத்தால் அந்த மண்ணிலிருக்கும் வேர் முதலியவற்றைக்களைந்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அந்தமண்ணை மூன்று பாகமாகப் பிரித்து, நாபி முதல் பாதம் வரையுள்ள அங்கங்களை ஒருபாகத்தால் சுத்திசெய்து, இரண்டாவது பாகத்தை ஏழுமுறை அஸ்திரமந்திரத்தால் ஜபித்து, அந்த இரண்டாவது பாகத்தை அஸ்திர தேவதையினுடைய ஒளிகளின் சேர்க்கையால் பிரகாசத்துடன் கூடினதாகப் பவனைசெய்து, அதே பாகத்தால் எல்லா அங்ககளினும் பூசிக்கொண்டு, நீரினுள்ளே சென்று அஸ்திரமந்திரத்தால் நீரைக் கலக்கிக் கட்டைவிரல்களால் காதுகளையும் சுட்டுவிரல்களால் கண்களையும், நடுவிரல்களால் மூக்குகளையும் நன்றாக முடிக்கொண்டு, மூலமந்திரத்துடன் பிரணவத்தை உச்சரித்து இருதயத்தில் பிரகாசிக்கின்ற அஸ்திரமந்திரத்தையுடைய தேகத்தை, அஸ்திர மந்திரத்தினுடைய பிரகாசத்தின் ஸமூகம்போல் பொன்வர்ணங்களாகப் பாவனைசெய்து, நீரில் மூழ்கிச் சக்திக்குத் தக்கவாறு நீரினுள் இருக்க வேண்டும்.

அல்லது மண்ணை இரண்டுபாகமாகப் பிரித்து, அஸ்திரமந்திரத்தால் ஜபிக்கப் பெற்ற ஒரு பாகத்தை எல்லா எங்களிலும் பூசிக்கொண்டு மூழ்கவேண்டும். இது அழுக்கு நிவிர்த்திக்குரிய ஸ்நானம்.

அல்லது பின்னர்க் கூறப்போகும் விதியோடுகூடிய ஸ்நானத்திற்காகவே மண்ணைக் கொண்டுவருதலென்பதும், கஸ்தூரிமஞ்சள், நெல்லிக்கனி முதலியவற்றை அரைத்து அதனாற்றான் அழுக்கு நிவிர்த்திக்குரிய ஸ்நானம் செய்யவேண்டுமென்பதும் மூன்றாவது பக்ஷம்.

அழுக்கு நிவிர்த்தியைக் கூறுமிவ்விடத்தில் சரீரசம்பந்தமான சுக்கிலம், மலம், மூத்திரம், என்னுமிவற்றிற்கும், மூக்கு, முகம், கண், காது, நகம், கால் முதலிய அங்கங்களிலுண்டான சரீரசம்பந்தமான அழுக்குகளுக்கும், சௌசமுதல் அழுக்கு நிவர்த்திக்குரிய ஸ்நானமீறாகவுள்ள கிரியைகளுள் அடங்கிய மண், பல்லுக் குச்சு, கஸ்தூரிமஞ்சள், நெல்லிக்கனி முதலியவற்றின்சம்பந்தத்தாலும், நீராலும் சுத்தி ஏற்படும்.

வாக்கின்கண் உள்ள அழுக்கிற்கு ஸ்நானகாலத்தில் பிரணவ முதலியவற்றின் ஜெபத்தால் சுத்தி ஏற்படும்.

மனத்தின்கணுள்ள அழுக்கிற்கு அஸ்திரமந்திர தியானத்துடன் கூடிய ஸ்நான முதலியவற்றால் சுத்தி ஏற்படும்.

பின்னர் நீரிலிருந்து எழுந்து சூரியனைப்பார்த்து அஸ்திரமந்திரத்தால் சிரசில் நீரைப் புரோக்ஷணஞ் செய்து கரைக்குவந்து மந்திரத்தால் ஆசமனஞ்செய்து, விரக்தனாக இல்லையாயின் வைதிக சந்தியைச் செய்து சுருக்கமாகச் சைவசந்தியையுஞ் செய்யப்படும். விரக்தனான பிராமணரும் நான்காவது வருணத்தவரும் சைவசந்தி மாத்திரந்தான் செய்யவேண்டும்.

 

அஸ்திர சந்தியின் முறை

அஸ்திர மந்திரத்தால் விரல்களின் நுனிகளைக்கொண்டு நீர்த்துளிகளை சிரசில் மூன்றுமுறை புரோக்ஷணஞ் செய்து, "சிவாஸ்திராயவித்மஹே, காலாநலாய தீமஹீ, தந்நச்சஸ்திரப் பிரசோதயாத்" என்ற அஸ்திர காயத்திரியால் சூரியமண்டலத்திலிருக்கும் அஸ்திரதேவதையின் பொருட்டு மூன்று முறை அருக்கியங் கொடுத்துச் கொடுததுச் சத்திக்குத் தக்கவாறு அஸ்திரகாயத்திரியை ஜபிக்கவேண்டும். அல்லது இருதய கமலத்தில் பிரகாசிப்பதாக அஸ்திர மந்திரத்தை தியானஞ் செய்ய வேண்டும்.

 

விதிஸ்நாநம்

பின்னர் விதி ஸ்நாநத்திற்காக விந்துத் தானத்திலிருந்து கங்கை முதலிய தீர்த்தங்களுள் யாதானுமோர் தீர்த்தத்தை அங்குசமுத்திரையினால் வெளஷட் என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தை உச்சரித்து இழுத்து, உத்பவ முத்திரையால் நமோந்தமான இருதய மந்திரத்தை உச்சரித்து முன்னர் ஸ்தாபித்து, அந்தத் தீர்த்தத்தால் நதி தடாகம் முதலியவற்றை நிறைந்திருப்பதாகப் பாவிக்கவேண்டும்.

பின்னர் விதிஸ்நாநத்திற்காக வைக்கப்பட்ட மூன்றாவது பாகமாகிய மண்ணை எடுத்து நாபியளவுள்ள நீரிலிறங்கி நதியாயின் பிரவாகத்திற்கு எதிர் முகமாகவும், தடாகம் முதலியவற்றில் கிழக்கு அல்லது வடக்கு முகமாகவும் நின்று கொண்டு மீன், தவளை முதலியன வசித்தாலுண்டாம குற்ற நிவிர்த்தியின்பொருட்டுக் கையளவில் சதுரச்சிரமாகச் சிவ தீர்த்தத்தைத் தனக்கு முன்பாகக் கற்பிக்க வேண்டும்.

 

சிவதீர்த்தங் கற்பிக்குமுறை

மண்ணை இடது கையில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய இவற்றில் மூன்று பாகமாகப் பிரித்து வைத்துக் கிழக்குத் திக்கிலுள்ள மண்ணை ஏழுமுறை அஸ்திரமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்து, தெற்குத் திக்கிலுள்ள மண்ணை எட்டு முறை ஜெபிக்கப்பட்ட பஞ்சபிரம மந்திரங்களினாலாவது கவசத்தை இறுதியிலுடைய அங்கமந்திரங்களாலாவது அபிமந்திரணஞ் செய்து, வடக்குத் திக்கிலுள்ள மண்ணைப் பத்துமுறை ஜெபிக்கப்பட்ட அஸ்திரமந்திரத்தாலாவது சிவமந்திரத்தாலாவது அபிமந்திரணஞ் செய்த, அஸ்திரமந்திரத்தால் ஜெபிக்கப்பட்ட மண்ணை ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்துடன் நாராசமுத்திரையால் கிழக்கு முதலிய எல்லாத் திக்குக்களிலும் போடவேண்டும். திக்குவிக்கினங்களுக்கதிபனான இந்திர திக்கிலுள்ள மண்ணை, இவ்வாறு போடுவதால் எல்லாத்திக்குக்களிலுமுள்ள எல்லா விக்கினங்களும் நாசமடைகின்றன.

பின்னர், சிவமந்திரத்தால் ஜபிக்கப்பட்ட மண்ணின்பாதியை மூலமந்திரத்தால் நீரில், சிவதீர்த்தமாதற் பொருட்டுப்போட்டு, மற்றொரு பாகத்தைத் தீர்த்தமனைத்துஞ் சிவதீர்த்தத்திற்குச் சமானமாதற்பொருட்டு மூலமந்திரத்தை உச்சரித்துக் கையினாற் சுழற்றி நாலுபக்கத்திலும் வீசவேண்டும். இவ்வாறு கையின்கண் வடக்குத் திக்கில் வைக்கப்பட்ட மண்ணின்பாகம் அமிர்தமயமாய் இருந்து கொண்டு சிவமந்திரத்துடன் நீரில் கரைக்கப்படுவதால் அந்தத் தீர்த்தமானது அமிர்தமயமாகவாகின்றது. இவ்வாறு சிவதீர்த்தமாகச் செய்து சாத்திர விதிப்படி ஸ்நானஞ் செய்யவேண்டும். இந்த விதி ஸ்நானத்திற்காக வைக்கப்பட்ட பிரமாங்கத்தால் செபிக்கப்பெற்ற மண்ணின் பாகத்தை ஸ்நானத்திற்கு முன் எல்லா அங்கங்களிலும் பூசிக்கொள்ளல் வேண்டும். தெற்குத்திக்கில் ஸ்தாபிக்கப் பெற்ற மண்ணின் பாகத்தைத் பூசிக்கொள்ளுதலினால் எல்லாப் பாவங்களும் நாசமடைகின்றன.

ஆகையால் ஷண்முகீகரண முத்திரையால் காது முதலிய இந்திரியங்களின் துவாரங்களை மூடிக்கொண்டு சிவதீர்த்தத்துள் மூழ்கிச் சிவமந்திரத்தைத் தியானஞ் செய்துகொண்டு நீரின் மத்தியில் சக்திக்குத் தக்கவாறு இருக்கவேண்டும். எல்லா அங்கங்களும் மூழ்கும் வண்ணம் நீரின் மத்தியில் ஸ்நானஞ் செய்வது உத்தமம். சரீரத்தில் பாதிமூழ்கும்படி ஸ்நானங் செய்வது மத்திமம். முகத்தை மாத்திரம் கழுவுவது அதமம்.

பின்னர் ஜலத்தினின்றுமெழுந்து இடது வலது கைகளைச் சந்திர சூரியர்களாகவாவது, சத்தி சிவங்களாகவாவது பாவனை செய்து அவ்விரு கைகளாலும் செய்யப்பட்ட கும்பமுத்திரையால் நீரைஎடுத்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சம்கிதாமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்து சிரசில் தெளித்துக்கொண்டு திக்குக்களிலுள்ள விக்கினங்கள் நாசமடைவதற்காக ஹும்பட்என்றும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் நீரைத்திக்குக்களிலும் உபதிக்குக்களிலும்விட்டு அந்தத்தீர்த்தத்தில் சிவ தீர்த்தஞ் சித்திப்பதற்காகச் சிறிது ஜலத்தை விட்டுப் பின்னர்ச் சிவதீர்த்தத்தின் எல்லையில் சம்மாரமுத்திரையால் கையிலுள்ள எஞ்சிய ஜலத்தைவிட்டு சிவதீர்த்தத்தை உபசம்மாரம் செய்யவேண்டும்.

மேலே கூறியவாறு நதி முதலியவற்றில் சென்று ஸ்நானம் செய்யச் சக்தியில்லையாயின், வீட்டில் கோமயத்தால் மெழுகப்பெற்ற சுத்தமானவிடத்தில் பீடத்தில் இருந்துகொண்டு சிவ மந்திரத்தினுச்சாரணத்தால் பரிசுத்தமான குளிர்ந்த ஜலம் நிரம்பப்பெற்ற ஒன்பது அல்லது எட்டு அல்லது ஐந்து குடங்களால் ஸ்நானஞ் செய்யவேண்டும்.

அரசர்கள், பெண்கள் குழந்தைகள், நோயாளிகள், தேசாந்திரஞ் சென்றவர்கள் ஆகிய இவர்கள் குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானஞ் செய்வதற்குச் சத்தி இல்லையாயின், காய்ச்சப் பெற்ற நீரில் ஸ்நானஞ்செய்யலாம்.

சிரசு மூழ்கும்படி ஸ்நானஞ் செய்யச் சக்தி இல்லையாயின் கழுத்துவரை முழுகி ஸ்நானஞ் செய்யலாம்.

பரமசிவனுக்கு அபிஷேககாலத்தில் எவ்வித உபசாரம் விதிக்கப்பட்டிருக்கின்றதோ, அவ்விதமே அரசர்களுக்கும் விதிக்கப்பட்டிருப்பதால், அரசர்கள் சிவ பூஜை செய்வதற்காகச் சொர்ணமயமான பீடத்திலிருந்து கொண்டு சங்கம் வாத்தியம் முதலிய மங்கல கோஷம் முழங்கச் சுவர்ணகும்பங்களால் கொண்டு வரப்பட்ட ஜலத்தால் ஸ்நானஞ் செய்யவேண்டும்.

பின்னர் சுத்தமாயும் மிருதுவாயுமுள்ள ஆடையால் சரீரத்தைத் துடைத்து வெண்மையான இரண்டு ஆடைகளைத் தரித்து ஆசமனம் சகளீகரணம், விபூதிஸ்நானம், திரிபுண்டரதாரணம் என்னுமிவற்றையுஞ் செய்து முடித்துச் சந்தியாதிட்டான தேவதையை வணங்க வேண்டும்.

 

சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை

சங்கிதாமந்திரங்களாலாவது, காயத்திரியாலாவது மூன்று முறை பிராணாயாமஞ் செய்து, ஹெளம் நேத்திராப்பியாம் நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கட்டை விரல்களால் கண்களில் திவ்விய முத்திரையை நியாசஞ் செய்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுள்ள மூலமந்திரத்தால் ஜலத்தை நிரீக்ஷணஞ் செய்து (பார்த்து), அதேமந்திரத்தால் தாடனஞ்செய்து (அடித்து), வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அப்பியுக்ஷணஞ் செய்து (தெளித்து), அந்தப் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தால் அங்குசமுத்திரை செய்து, விந்துத்தானத்திலிருந்து கங்கை முதலிய நதிகளுள் யாதானுமோர் தீர்த்தத்தை அகருஷணஞ் செய்து (இழுத்து), உத்பவ முத்திரை செய்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தால் அந்தத் தீர்த்தத்தை ஜலத்தில் விட்டதாகப் பாவனை செய்து, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்து, ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணம் செய்து நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து, வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சத்திமந்திரத்தால் தேனு முத்திரை செய்து, அந்தத் தீர்த்தத்தை அமிர்தமயமாகச் செய்யவேண்டும். பின்னர், சந்தியாதிட்டான தேவதையைத் தியானஞ் செய்யவேண்டும்.

சந்தியானது பிராஹ்மீ, வைஷணவீ, ரௌத்திரீ என மூன்று வகைப்படும். அவற்றுள்,

 

பிராஹ்மீ தேவதை

இரத்தமாலை இரத்த வஸ்திரங்களை யுடையவளாயும், சிவந்த வர்ணமுடையவளாயும், சிவந்த அலங்காரத்தால் சோபிக்கப்பட்டவளாயும், அன்ன ஆசனத்திலுட்கார்ந்திருப்பவளாயும், யக்ஞ சூத்திரம் சடைகளைத் தரித்திருப்பவளாயும், நான்குகைகளும், நான்கு முகமும் உடையவளாயும், எட்டுக் கண்களால் அலங்காக்கப் பெற்றவளாயும், உருத்திராட்ச மாலையும், சுருக்கும் வலது கையிலும், தண்டும் கமண்டலமும் இடது கையிலும் தரித்துக் கொண்டிருப்பவளாகவும், பிரமாவைத் தேவதையாக வுடையவளாகவும், பிராஹ்மீயென்னும் பெயருடைய பிராதச் சந்தியா தேவதையானது இருக்கும்.

இந்தப் பிராஹ்மி சந்தி மூன்று வகைப்படும். அவற்றுள், பிராதக் காலத்தில் சில நக்ஷத்திரங்கள் மாத்திரம் இருக்கும் பொழுது சுபாலை என்னும் பெயருடன் ஒரு சந்தியிருக்கும். இது முத்தியைக் கொடுக்கிறதாயும், சாமர்த்திய முடையதாயுமிருக்கும். மற்றொருசந்தி பிராதக்காலத்தில் நக்ஷத்திரங்களில்லாத பொழுது மத்திமாவென்னும் பெயருடன் புத்திமுத்திகளைக் கொடுகிக்றதாயும், ஞானசத்தி சொரூபமாயும், பாலப்பருவத்தை யுடையதாயுமிருக்கும். மற்றொரு சந்தி சூரியனுடைய பாதி மண்டலம் கண்ணுக்குப் புலப்படும் பொழுது பிரௌடாவென்னும் பெயருடன் புத்தியைக் கொடுக்கிறதாயும் கிரியாசத்தி சொரூபமாயும், பாலப்பருவத்தையுடையதாயுமிருக்கும்.

 

வைஷ்ணவீ தேவதை

சுவர்ணத் தாமரையில் உட்கார்ந்துதிருப்பவளாயும், வெண்மையான வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளாயும், வனமாலை உபவீதங்கள் தரிக்கப்பட்டு இரண்டு கண்களும், ஒரு முகமும், நான்கு கைகளும் உடையவளாயும், கதை, தாமரைகளை வலது கையிலும், சங்கம் சங்கரங்களை இடது கையிலும் தரித்திருப்பவளாயும், பிராஹ்மி சந்திக்கும் ரௌத்திரி சந்திக்கும் நடுவேயிருக்கும் இந்த வைஷ்ணவீ சந்தி தேவதையானது இரண்டாவது யாமத்தினுடைய நாலாவது பாகத்தில் மூன்று விதமாக இருக்கும். அவற்றுள், முதலாவது சந்தி தேவதையானது முத்தியைக் கொடுக்கிறதாயும் சிறிது தோன்றிய யௌவனத்துடனுமிருக்கும். இரண்டாவது சந்தி தேவதையானது மத்திமமான தருணத்துடுன் புத்தி முத்திகளைக் கொடுக்கிறதாய் வாகீசுவரி சொரூபமாயிருக்கும், வாகீசுவரி - சரஸ்வதி. மூன்றாவது சந்தி தேவதையானது சுவாலை என்னும் பெயருடன் முத்தியைக் கொடுக்கிறதாய் பிரௌடமான யௌவனத்துடனிருக்கும்.

 

ரௌத்திரி தேவதை

ரிஷபத்தில் தாமரையை ஆசனமாகவுடையவளாயும், மூன்று கண்களையும், சிரசில், சந்திரனையும், புலித் தோலாடையையும், மேகம்போல் கருமை நிறமான வடிவத்தையும், வலது கையில் திரிசூலம் அக்ஷமாலையினையும் இடதுகையில் அபயத்தையும் சக்தியையும் உடையவளாயுமிருப்பள். இது சாயுங்காலத்து அதிட்டான தேவதையெனப்படும். இந்த ரௌத்திரி சந்தி முன்போல் மூன்றுவகைப்படும். அவற்றுள் முதலாவது சந்தி தேவதையானது சூரியனுடைய கிரணங்கள் இருக்குங் காலத்தில் நான்கு பங்கங்களிலும் சிவந்ததாயும், சிறிது நழுவின யௌவனத்துடனம், தன்னைத் தியானஞ் செய்வோருக்கு முத்தியைக்கொடுப்பதாயும், வாமையென்னும் பெயருடனிருக்கும். இரண்டாவது சந்தி தேவதை பாதிச் சூரியனிருக்கும்பொழுது பாதி நழுவின யௌவனமுடையதாயும், போகமோக்ஷங்களைக் கொடுப்பதாயும், சேஷ்டையென்னும் பெயருடனிருக்கும். மூன்றாவது சந்தி தேவதை சூரியன் அஸ்தமனமான பொழுது யௌவனம் நீங்கினதாயும், போகத்தைக் கொடுக்கிறதாயும், ரௌத்திரியென்னும் பெயருடனிருக்கும்.

இவ்வாறு எல்லாவற்றிற்கும் சாக்ஷியாகவும், பூசிக்கப்படுவதால் விருப்பத்தை நிறைவேற்றுவதாயுமுள்ள ஒன்பது விதமான சந்திகள் சிவசாத்திரத்தில் சிவனால் கூறப்பட்டன.

பிராஹ்மிதேவதை இருதயதாமரையிலும், வைஷ்ணவீ தேவதை, விந்துத்தானத்து நடுவிலும், ரௌத்திரி தேவதை பிரமரந்திலும் இருப்பனவாகத் தத்தமக்குரிய காலங்களில் இந்தத் தேவதைகளைத் தியானிக்கவேண்டும்.

சமயதீக்ஷையுடையாருக்குப் பிராதக்கால சந்தியும், விசேடதீக்ஷையுடையாருக்குப் பிராதக்கால சந்தி மத்தியான சந்திகளும், நிருவாண தீக்ஷையுடையாருக்குப் பிராதக்காலம் மத்தியானம் சாயுங்காலமென்னும் மூன்று சந்திகளும் உரியன.

எவன் சப்தகலாப் பிராசாத மந்திரங்களில் சமர்த்தனான பண்டிதனாக விருக்கின்றானோ, அவன் விந்துவுடன் கூடி சமனை முதலிய மூன்று தானங்களில் இருப்பனவாயும், தாமரை நூல்போல் சூக்குமையாயும், செம்மை, வெண்மை, கருமை என்னும் மூவகை வர்ணங்களை யுடையனவாயும், கிரியாசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி, என்னும் மூன்று சத்திகளைப் பெயராக வுடையனவாயும், உள்ள மூன்று சந்தியா தேவதைகளைப் பிராசாதமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தியானஞ் செய்யவேண்டும்.

எவன் துவாதச கலாப் பிராசாத மந்திரங்களில் புத்தியை நிலைக்கச் செய்கின்றானோ, அவன் யாதொரு சந்தியானது இரவில் எல்லவற்றினும் மேம்பட்டதாக விளங்குகின்றதோ, அந்த நான்காவது சந்தி தேவதையை நாபி முதல் துவாதசாந்த மீறாகவும், துவாதசாந்த முதல் நாபி ஈறாகவும், போக்குவரவு உடையதாய் ரூபமற்றதாகவாவது, கருமை நிறங்கொண்டதாகவாவது தியானிக்க வேண்டும்.

ஞானிகள், சந்திரனுடைய ஒளியானது சந்திரனைப் பற்றியிருப்பது போல், யாதொரு மேம்பட்ட சந்திதேவதையானது துவாதசாந்தத்திலிருக்கும் பரமசிவனைப் பற்றியிருக்கின்றதோ, அத்தகைய மேன்மை வாய்ந்த சிவஞான சொரூபமான சந்தி தேவதையை தியானிக்க வேண்டும்.

உண்மையில் சிவ சத்தி சொரூபமான சந்தியா தேவதையொன்றுதான். அதுவே காலம், அதிகாரி, என்னுமிவற்றின் பேதத்தால் மூன்று வகையாகப் பிரிந்தன. இவ்வாறு செய்யும் சந்தி தேவதையின் தியானமே சந்தியாவந்தனமெனக் கூறப்படும். பிரதானமான இந்தச் சந்தியாவந்தனத்திற்கு மார்ஜனம் முதுலியன அங்கங்களாகும். இவ்வாறு சந்தி தேவதையை உபாசித்த புருடர் சிவபூஜையைத் தொடங்கல் வேண்டும்.

 

சிவபூஜையின் முறை

பின்னர், கட்டை விரலை இசானராகவும், அணிவிரலை அமிர்தகலையாகவும் தியானஞ்செய்து, கட்டைவிரலுடன் கூடின அணிவிரலால் கண்களையும், மூக்குகளையும், காதுகளையும், தோள்களையும், இருதயத்தையும், தொப்புளையும், சிரசையும் முறையே சூரியன் சந்தோஷமடையட்டும், விஷ்ணு சந்தோஷமடையட்டும் என்பது முதலாகப்பாவனை செய்துகொண்டே தொடல் வேண்டும்.

அவ்வாறு செய்யுங்காலத்துச் சிவ தேஜசின் சேர்க்கையோடு கூடிய அணி விரலினின்றும் உண்டான அமிர்தப் பிரவாகத்தால் திருப்தியடைந்த கண் முதலியவற்றிற்கு அதிஷ்டான தேவதைகளான சூரியன் முதல் விஷ்ணுவீறாகவுள்ள தேவர்கள், பூசிப்பவனுக்குப் பூசை செய்வதில் சாமர்த்தியத்தை விருத்தி பண்ணுகிறவர்களாக ஆகின்றனர்.

 

ஆசமன விதி

பின்னர், சரீரத்திலுள்ள முப்பத்தைந்து தத்துவங்களின் சுத்தியின் பொருட்டுச் சிந்மாத்திர ஆசமனஞ் செய்யவேண்டும். செய்யுங்காலத்துச் சுவர்ணநிறமுடையவராயும், பத்மம், அக்ஷமாலை, சுருக்கு, குண்டிகை, என்னுமிவைகளைத் தரித்திருக்கின்ற நான்கு கைகளையுடையவராயும், நான்கு முகங்களையுடையவராயும் ஆன்மதத்துவருபமாயுமுள்ள பிரமாவைத் தியானஞ் செய்கிறேனென்று ஆன்மதத்துவத்தின் தியானத்தைச் செய்து, ஹாம் ஆத்மதத்துவாயஸ்வதா என்று முதலாவது ஆசமனஞ் செய்ய வேண்டும். இதனால் தன் சரீரத்தில் பிருதிவி முதல் மாயையீறாகவுள்ள முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தியடைந்ததாகப்பாவிக்க வேண்டும்.

பின்னர், நீலநிறமுடையவராயும், சக்கரம், பாணம், தாமரை, சின்முத்திரை, சங்கம், வில்லு, கமண்டலம், அபயமுத்திரை என்னும் இவைகளையுடைய எட்டுக்கைகளையுடையவராயும், ஒரு முகத்தையுடையவராயும் உள்ள விஷ்ணுவை வித்யாதத்துவ ரூபமாகத் தியானஞ் செய்கிறேனென்று வித்தியாதத்துவத் தியானத்தைச் செய்து, ஹிம் வித்தியா தத்துவாய ஸ்வதா என்று இரண்டாவது ஆசமனஞ் செய்யவேண்டும். இதனால் சுத்த வித்தை, ஈசுவரம், சதாசிவம் என்னும் மூன்று தத்துவங்களும் சுத்தியடைந்ததாக பாவிக்கவேண்டும்.

பின்னர், படிக நிறமுடையவராயும், பத்மம், அக்ஷமாலை, சூலம், கமண்டலமென்னும் இவற்றைத் தரிக்கின்ற நான்கு கைகளையுடையவராயும், ஐந்து முகங்களையுடையவராயும், உள்ள உருத்திரனைச் சிவதத்துவ ரூபமாகத் தியானம் செய்கிறேனென்று சிவதத்துவத்தின் தியானத்தைச் செய்து, ஹ§ம் சிவதத்துவாயஸ்வதாயென்று ஆசமனஞ் செய்யவேண்டும். இதனால் சத்திதத்தவம் சுத்தியடைந்ததாகப் பாவிக்கவேண்டும்.

பின்னர், அஸ்திரமந்திரத்தால் உதட்டை இருமுறை துடைத்து, ஹிருதயமந்திரத்தால் நேத்திரம் முதலியவற்றைத் தொடல்வேண்டும். மற்ற அந்தந்தத் தேவதைகளின் தியானங்களை முன்போல் செய்ய வேண்டும். ஆசமனமுறை முடிந்தது.

 

சிவபூஜையின் சுருக்கம்

சிவபெருமானைப் பத்மாசனத்திலெழுந்தருளச் செய்து அபிஷேகஞ் செய்து, ஆசனத்தையும், மூர்த்தியையும், வித்தியாதேகத்தையும் பூசிக்கவேண்டும். பின்னர்ப் பரமசிவனை ஆவாகனஞ் செய்து ஸ்தாபனம் சன்னிதானம் முதலியவற்றால் பூசித்து மனத்தால் அபிஷேகஞ்செய்வித்து வஸ்திரம் உபவீதங்களைத் தரிக்க வேண்டும். பின்னர்ச்சந்தனம், புஷ்பம், ஆபரணங்களால் அலங்கரித்துத் தூபதீபம் சமர்ப்பித்து அதன் பின்னர் ஆவரணபூசை செய்து நைவேத்தியம், முகவாசம், தாம்பூலம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்துத் தூபம் ஆராத்திரிகஞ்செய்து, பவித்திரஞ்சமர்ப்பிக்கவேண்டும். பின்னர் வெண்மையான விபூதியைத் தரித்துக் கண்ணாடி முதலியவற்றால் உபசாரஞ்செய்து, அதன் பின்னர் பலிகொடுத்து பாத்திய முதலியவற்றாலும் சந்தனம் புஷ்பங்களாலும் உபசாரஞ் செய்யவேண்டும். பின்னர் செபம், தோத்திரம் நமஸ்காரம், பிரதக்ஷிணங்களைச்செய்து அட்டபுட்பங்களாலருச்சித்து விசேஷ அர்க்கியத்தால் பூஜைசெய்ய வேண்டும். பின்னர் ஆவரண தேவதைகளுடன் சிவபெருமானைப் பராங்முகார்க்கியத்தால் எழுந்தருளச்செய்து உரிய காலத்தில் மனத்தின்கண் சிவபெருமானை இருத்தி நிவேதனஞ் செய்த அன்னத்தை உட்கொள்ளல் வேண்டும். இவ்வாறு சிவபூஜா முறையில் சுருக்கம் அறிந்து கொள்க.

சிவபூஜையின் விரி

 

ஆசமனம்

ஹீம் சிரசே நம: என்று சொல்லிக்கொண்டு முழங்கால்வரை கால்களையும் மணிக்கட்டுவரை கைகளையுஞ் சுத்தஞ் செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாகக் குக்குடாசனத்திலிருந்து கொண்டு இருகைகளையும் முழங்கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு இருகைகளிலுள்ள கட்டைவிரல் முதலிய விரல்களில் ஹாம்ஹிருதய யாயநம: ஹீம் சிரசேநம: ஹ¨ம் சிகாயைநம: ஹைம் கவசாயநம: ஹெளம் நேத்திரத்திரயாய நம: ஹ: அஸ்திராயபட் என்று நியாசஞ்செய்து கொண்டு, வலதுகையைப் பசுவின் காதுபோல் செய்து அதனால் உழுந்து அமிழ்ந்துமளவான நீரையெடுத்து அந்த நீரைப்பார்த்துக் கட்டைவிரல் சுண்டுவிரல்களை நீக்கிச் சுக்கிலபக்ஷமாயின் சந்திரரூபமாயும், கிருஷ்ணபக்ஷமாயின் சூரிய ரூபமாயும் அந்த நீரைப் பாவனை செய்து உட்கொண்டு, அதனால் நாக்கின் நுனியிலிருக்கும் சரஸ்வதி திருப்தி யடைந்தவளாகவும், தன்னுடைய சூக்கும தேகம் சுத்தியடையந்ததாகவும் பாவனை செய்து, ஒவ்வொரு ஆசமனத்துக்கும் இடையே கையைச் சுத்தி செய்து சுவதா என்னும் பதத்தை இறுதியிலுள்ள மூலமந்திரத்தை உச்சரித்து பிரமதீர்த்தத்தால் மூன்று முறை ஆசமனஞ் செய்யவேண்டும். அதனால் தன்னுடைய முகம் சுத்தியடைந்ததாகவும், உதட்டிலிருக்கின்ற பிரணவதேவதை சுத்தியடைந்ததாகவும் பாவனை செய்துகொண்டு பின்னர்க் கட்டைவிரலின் அடியால் உதடுகளை இருமுறை துடைத்தல் வேண்டும்.

 

விபூதியின் வகை

கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும்.

வனத்தில் உள்ள உலர்ந்த சாணத்தை யெடுத்துச் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப்பெற்ற விபூதி அனுகற்பமெனப்படும்.

வனத்திலுள்ள வீட்டிலாவது பசுக்கட்டுமிடத்திலாவது செங்கற்சூளையிலாவது உள்ள காட்டுத் தீ முதலியவற்றால் தகனஞ் செய்யப்பட்ட விபூதியையெடுத்து வஸ்திரத்தால் சுத்தி செய்து கோசலத்தால் பிண்டஞ்செய்து மீண்டும் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து மூலமந்திரத்தால் சுத்தி செய்யப்பெற்ற விபூதி உபகற்பமெனப்படும்.

மந்திரம் முதலியவையின்றிப் பிராமணராலாவது, பெண்கள் சூத்திரர் முதலியவர்களாலாவது, சுத்தமானவிடத்திலுள்ள கோமயத்தை எடுத்துச் சேகரிக்கப்படடதும், வேதாத்தியயனத்துடன் அக்கினி காரியஞ் செய்கிறவர்களுடைய வீட்டிலுள்ள அடுப்பு முதலியவற்றினின்று எடுக்கப்பட்டதும் அகற்பமெனப்படும்.

இவற்றுள் அகற்பமான விபூதியாயின் அதனை எடுத்து அஸ்திர மந்திரத்தால் திக்குபந்தனஞ் செய்து ஹோம் ஈசான மூர்த்தாய நம:, ஹேம் தத்புருஷவக்திராய நம:, ஹ§ம் அகோரஹிருதயாய நம:, ஹிம் வாமதேவகுஹ்யாய நம:, ஹம் சத்தியோசாத மூர்த்தயே நம:, ஹாம் ஹிருதயாய நம:, ஹீம் சிரஸே நம:, ஹ¨ம் சிகாயை நம:, ஹைம் கவசாய நம:, ஹெளம் நேத்திராய நம:, ஹ: அஸ்திராய நம:, ஹ்லாம் நிவிருத்திகலாயை நம:, ஹ்வீம் பிரதிஷ்டா கலாயை நம:, ஹ்ரூம் வித்தியாகலாயை நம:, ஹ்யைம் சாந்திகலாயை நம:, ஹெளம் சாந்தியதீத கலாயயை நம: என்று பஞ்சப்பிரம்மஷடங்க மந்திரங்களாலும், கலாமந்திரங்களாலும் சுத்தி செய்யவேண்டும்.

விபூதிதரிக்கும் முறை உத்தூளனம் திரிபுண்டாமென இரண்டு வகைப்படும்.

உத்தூளனமும், அழுக்கு நிவிர்த்திக்குரிய ஸ்னான ரூபம் விதிஸ்னான ரூபமென இரண்டு வகைப்படும். நீரால் ஸ்னானஞ் செய்தவர்களுக்கு இந்த இருவித விபூதிஸ்னானங்களிலும் அதிகாரமுண்டு.

 

ஸ்னானமுறை

நீரில் மூழ்கி ஸ்னானஞ்செய்யமுடியாத சமயங்களில் கழுத்து வரையாயவது, இடுப்பு வரையாவது, முழங்கால் வரையாவது நீரால் சுத்தஞ் செய்து, ஈச வஸ்திரத்தால் சுத்தம் செய்யப்படாத அங்கங்களைத் துடைத்து, வேறு வஸ்திரந்தரித்து ஆசமனஞ் செய்து பின்னர் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வலது கால் கட்டை விரலிலிருந்து உண்டான அக்கினியால் தேகத்திலுள்ள வெளி அழுக்கு மாத்திரம் நீங்கினதாகப் பாவித்து அக்கினியின் சம்பந்தத்தால் கலங்கின விந்துத் தானத்திலுள்ள சத்தி மண்டலத்தினின்றும் பெருகுகின்ற மிகுந்த அமிர்ததாசையால் சரீரம் நனைந்ததாகப் பாவிக்கவேண்டும். பின்னர் மனத்தால் மூலமந்திரத்தை நாதாந்தமாக உச்சரித்து அதன் சம்பந்தத்தால் கலங்கின சத்திமண்டலத்திலுள்ள அமிருததாசையால் தன்னுடைய சரீரம் அபிஷேகஞ் செய்யப்பட்டதாகப் பாவிக்க வேண்டும். இந்த மானதஸ்னானத்தை எப்பொழுதெல்லாம் தன்னை அசுத்தனாக நினைக்கின்றானோ அப்பொழுதுதெல்லாம் செய்ய வேண்டும்.

அல்லது விந்துத் தானத்திலிருக்கும் அந்தச் சத்தியைப் பச ரூபமாகத் தியானஞ் செய்து அதனுடைய வாலினின்றுண்டான ஒளி ரூபமான அமிர்தப் பிரவாகத்தால் சரீரம் நனைந்ததாகப் பாவிக்கவேண்டும். இது பாவனாஸ்னானம்.

அல்லது கங்கை, யமுனை முதலிய திவ்விய தீர்த்தங்களாலாவது சரீரத்தை புரோக்ஷித்துக் கொள்ளல் வேண்டும்.

அல்லது அந்த «க்ஷத்திரங்களிலுள்ள மண்ணினாலாவது மண்ணின் தூளியினாலாவது, பஞ்சப்பிரம்மம்ஷடங்கம் மூலம் ஆகியமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு சரீரத்தைப் பூசிக்கொள்ளல் வேண்டும்.

இவற்றுள் யாதானுமொன்றைச் செய்து பஞ்சப் பிரம்ம மந்திரம் ஷடங்கமந்திரம் மூலமந்திரமென்னும் இவற்றை ஒருமுறை அல்ல மூன்று முறை ஜெபிக்கவேண்டும். பின்னர் முன்போல் இரண்டுமுறை ஆசமனஞ் செய்து வெளிக்கரணம் உட்கரணங்களால் நேரிட்ட அசுத்தத்தைப் போக்கும் விபூதிஸ்னானத்தை செய்ய வேண்டும்.

 

விபூதிஸ்நான முறை

பசு, பிராமணர், தேவதை, அக்கினி, குரு, வித்தியாபீட மென்னும் இவற்றின் சன்னிதியை நீக்கி, மிலேச்சர், சண்டாளன் செய்நன்றி மறந்தவன் ஆகிய இவர்களுடைய பார்வையில் இராமல், நடைபாதையாகவில்லாத சுத்தமான இடத்தில் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு பிராமணர் முதலிய நான்கு வருணத்தவரும் முறையே ஒரு பலம், ஒன்றரைப் பலம், இரண்டு பலம், இரண்டரைப் பலம் அளவுள்ளதாகவாவது ஒரு பிடியினளவாகவாவது கற்ப அநுகற்பரூபமான விபூதியை எடுத்து நிருதிதிக்கில் இராக்ஷத பாகத்தை எறிந்துவிட்டு அகற்பமான விபூதியாயின் முதலாவது திக்கு பந்தனஞ் செய்து பஞ்சப்பிரம்ம ஷடங்க மந்திரங்களால் சுத்தி செய்க. நான்கு விதமான விபூதியையும் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் ஏழு முறை அபிமந்திரணஞ்செய்க. இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட விபூதியால் விரக்தனாயிருந்தால் பாதமுதல் சிரசு வரையும், விரக்தனாக இல்லையாயின் சிரசு முதல் பாதம் வரையும் வலது கைக்கட்டை விரல் விரல் சுட்டு விரல்களின் நுனியால் எடுக்கப்பட்ட சிறிது விபூதியால் கைகால்கள் தவிர கைக்கு எட்டக் கூடிய ஏனைய அங்களில் பரிசித்து உத்தூளனஞ் செய்க. இது விபூதிஸ்நானத்தில் அழுக்கு நீக்கத்திற்குரிய ஸ்னானமெனப்படும். பின்னர் ஷடங்க மந்திரங்களால் செபிக்கப்பெற்ற விபூதியால் ஈசான முதலிய பஞ்சப்பிரம்ம மந்திரங்களை உச்சரித்து சிரசு, முகம், இருதயம், குய்யம், பாதம் ஆகிய இந்த அங்கங்களிலும், சத்தியோஜாதமந்திரத்தால் தோள்களிலும் ஏனைய அங்கங்களிலும், வலது கையாலும், வலது கைக்கு எட்டாத அங்கங்களில் இடது கையாலும் உத்தூளனஞ் செய்க. எஞ்சியுள்ள விபூதியை கும்ப முத்திரை செய்து மூலமந்திரத்தால் சிரவில் அபிஷேகம் செய்க.

இவ்வாறு பிராமணர் எல்லா அங்களிலும் உத்தூளனஞ் செய்ய வேண்டும். க்ஷத்தியர் முதலியோர் லலாடத்தில் முறையே நான்கு நுனியையுடைய சதுரச்சிரமாகவும், மூன்று நுனியையுடைய திரிகோணமாகவும், வட்டமாகவும் உத்தூளனஞ் செய்துகொண்டு கழுத்துக்குக் கீழும் நாபிக்கு மேலும் உத்தூளனஞ் செய்யவேண்டும்.

சூத்திரர் உத்தூளனமின்றி பின்னர்க் கூறப்படும் திரிபுண்டாரூபமான விபூதிஸ்நானத்தைச் செய்யவேண்டும். இந்தவிதி தபசியல்லாத சூத்திர சாரியாருக்குரியது. இதுபற்றியே ஞானரத்தினாவளியில் தபசியாயின் முறைப்படி விபூதியை எடுத்து அதனால் விபூதிஸ்நானஞ் செய்ய வேண்டுமென்பதை ஆதியாகவுடைய வாக்கியங்களால் அழுக்கு நீக்கத்திற்குரிய ஸ்னானம் விதிஸ்னானம் ஆகிய இரண்டின் ரூபமான உத்தூளனங்களில் அதிகாரி விசேடத்தைக் குறிப்பிட்டு தபசிகளுக்கு உத்தூளன ஸ்நானம் சொல்லப்பட்டிருத்தலால் உத்தூளனமல்லாத திரிபுண்டா ஸ்னானமானது தபசியல்லாத சூத்திரருக்குரியதாகும்.

இவ்வாறே க்ஷத்திரியரும் வைசியரும் தபசிகளாயில்லையாயின் திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்னானத்தையே செய்யவேண்டும்.

பிராமணர் முதலிய நான்கு வருணத்தவரும் உத்தூளனஸ்நானஞ் செய்ய முடியாத சமயங்களில் திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்நானத்தையே செய்யவேண்டும்.

திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்நானத்தை மட்டும் கருதியே சில ஆகமங்களில் பிராமணர் முதலிய நான்கு வருணத்தவர்களுக்கும் முறையே ஒரு பலம் அரைப்பலம், கல்ப் பலம் அரைக்கால்ப் பலமென்று விபூதியின் அளவு கூறப்பட்டிருக்கின்றது.

இந்த விபூதிஸ்நானத்தை தீக்ஷையையுடைய கிரகஸ்தன் மூன்று சந்திகளிலும் நீரோடு கலந்து செய்யவேண்டும். பெண்களும், சன்னியாசிகளும் நீரின்றியும், விரதத்தையுடையவரும், வானப்பிரஸ்தரும், கன்னிகையும், தீக்ஷையில்லாதவரும், மத்தியானத்திற்கு முன் நீரோடு கலந்தும் மத்தியானத்திற்குப் பின் நீரோடு கலப்பின்றியும் விபூதியைத் தரிக்க வேண்டும்.

இவ்வாறு விபூதிஸ்நானம் செய்து வேறு ஆடை தரித்துக் கொண்டாவது தரிக்காமலாவது ஆசமனஞ் செய்யவேண்டும்.

 

திரிபுண்டர முறை

திரிபுண்டரத்தை நான்கு வருணத்தவரும் முறையே ஏழு, ஐந்து, நான்கு, மூன்றங்குலப் பிரமாணமாகத் தரிக்கவேண்டுமென்றும், அல்லது அனைவரும் லலாடம், இருதயம், கை ஆகிய இவைகளில்நான்கு அங்குல அளவாகவும், ஏனைய அவயவங்களில் ஓரங்குல அளவாகவும், தரிக்கவேண்டுமென்றும் பல ஆகமங்களில் கூறப்பட்டிருத்தலால், அவற்றுள் முன்னோரனுட்டித்து வந்த ஒரு முறையைக் கொண்டு லலாட முதலிய தானங்களில் சுட்டுவிரல், நடுவிரல், அணிவிரல், என்னுமிவைகளால் திரிபுண்டரதாரணஞ் செய்ய வேண்டும்.

லலாடத்தில் நடு விரல் அணிவிரல் கட்டைவிரலென்னும் இவைகளாலாவது திரிபுண்டரஞ் செய்யவேண்டும்.

திரிபுண்டரமானது நெருக்கமான மூன்று ரேகையுடன் கூடினதாயும், வேறு வேறாயும் எவ்வாறு சித்திக்குமோ அவ்வாறு திரிபுண்டரத்தைத் தரிக்கவேண்டும்.

திரிபுண்டரதாரணமும், விபூதி ஸ்நானமும், செய்யுங்காலத்து மூன்று முகமும், மூன்று கையும், மூன்று காலும், மூன்று நேத்திரமும் விபூதிப்பூச்சும் சிவந்த புஷபங்களால் அலங்காரமும் உடையவராயும், தாண்டவம் செய்பவராயும் அச்சஞ் செய்பவராயுமுள்ள விபூதி தேவரைத் தியானஞ் செய்து கொள்ளல்வேண்டும்.

திரிபுண்டர ஸ்தானத்தில் அவரவர் குல முறைப்படி அனுட்டித்து வந்த நான்கு கோணமுள்ளவாகவாவது பாதிச் சந்திர ரூபமாகவாவது மேல் நோக்கிய தீபரூபமாகவாவது வேறுவிதமான திரிபுண்டரத்தையாவது தரிக்க வேண்டும்.

எல்லாப் புண்டரமும் தனி விபூதியினாலாவது, சந்தனஞ் சேர்ந்த விபூதியினாலவது, நீரால் நனைத்துத் தரிக்கப்படல் வேண்டும்.

லலாடத்தில் எவ்வாறு புண்டரம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வாறே லலாடம் இருதயம் தோள்கள் நாபி என்னும் இந்த ஐந்து தானங்களிலும் தரிப்பதென்னும் பக்ஷத்தில் முறையே சிவன், மகேசுவரன், உருத்திரன், விட்டுணு, பிரமன் ஆகிய இந்த ஐந்து தேவதைகளையுடையதாயும், லலாடம், கழுத்து, தோளிரண்டு, புயமிரண்டு, முழங்கை இரண்டு, மணிக்கட்டு இரண்டு, மார்பு, வயிறு நாபி, பக்கமிரண்டு பிருஷ்டம் என்னும் இந்தப் பதினாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் சிவன், மகேசுவரன் முதலிய ஐவர்களையும், வாமை முதலிய ஒன்பது சக்திகளையும், அசுவினி தேவரிருவரையும் உடையதாகவும், சிரசு, லலாடம், கண்ணிரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, முகம், கழுத்து, தோளிரண்ட, முழங்கை இரண்டு, மணிக்கட்டு இரண்டு, இருதயம் பக்க இரண்டு, நாபி குய்யம் இரண்டு, இடுப்பின் மேல்பாகம் இரண்டு, துடை இரண்டு, முழங்கால் இரண்டு, கரண்டைக்காலிரண்டு, பாதம் இரண்டு ஆகிய இந்த முப்பத்திரண்டு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் அட்ட மூர்த்திகளையும், அட்ட வித்தியேசுவரர்ளையும் அட்டதிக்குப் பாலகர்களையும், அட்ட வசுக்களையும் உடையதாகவும், மேற்கூறிய முப்பத்திரண்டுடன் இருகைகளின் விரல்கள் இரண்டாகவும், இருகால்களின் விரல்கள் இரண்டாகவும் நான்கு சேர்த்து முப்பத்தாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில், சிவம், சக்தி, மகேசுவரம், சதாசிவம், சுத்தவித்தைமாயை, கலை, வித்தை, அராகம், காலம், நியதி புருடன், பிரகிருதி, அகங்காரம், புத்தி, மனம், புரோததிரம், துவக்கு, சச்சு, சிங்குவை, மூக்கு, வாக்கு, பாதம், கை, பாயு, உபத்தம், சத்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், ஆகாயம் வாயு, அக்கினி, அப்பு, பிருதிவி என்னும் இந்த முப்பத்தாறு தத்துவங்களின் அதிதேவதைகளையுடையதாகவும், இடம் காலமென்னுமிவற்றிற்குத் தக்கவாறு செய்யவேண்டும்.

முப்பத்தாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் சிவம் முதல் ஆகாசமீறான தத்துவங்களை வட்டமான சொரூபமுடையனவாயும், படிகம், சூரியகாந்தம், சந்திரகாந்தம், பசுவின்பால், பவளம், இராஜபனை, மை, இந்திராயுதம், இந்திரகோபமென்னும்பட்டுப்பூச்சி, மேகம், பத்மராகம், பவளம், இந்திரநீலம், குங்குமம், ஜபாகுசுமம் இந்திராயுதம், சூரியன், சுவர்ணம், அருகு, மஞ்சள், அறளி, காளமேகம், நீலரத்தினம், நல்முத்து, இரத்தினம், சுவர்ணம், படிகம், என்னுமிந்த வர்ணங்களையுடையனவாகவும், வாயுவை கருமையும், நான்கு கோணமுமுடையதாகவும், அக்கினியை வட்டமும் மூன்று கோணமுமுடையதாகவும் ஜலத்தை வெண்மையும் பாதிச் சந்திராகாரமுடையதாகவும், பிருதிவியை பொன்மையும் நான்கு கோணமுடையதாகவும் பாவனை செய்து ஹாம் சிவதத்துவரூபாயசிவாய நம: என்பது முதலாக ஒவ்வொரு தத்துவ மந்திரங்களால் அந்தந்தத் தானங்களில் புண்டரங்களைத் தரித்துக் கொள்ளல்வேண்டும். இவ்வாறு வேறு பக்ஷங்களிலும் ஊகித்துக்கொள்க.

அவரவர்களின் முன்னோர்களனுட்டித்து வந்தமுறையாகத் தொன்றுதொட்டு நிகழப்பெற்றதாயும் பல திவ்வியாகமங்கள், ஸ்மிருதி, புராணம் என்னுமிவைகளில் கூறப்பட்டதாயுமுள்ள தானம், எண்ணிக்கை, விபூதி, சந்தன முதலிய திரவியவேறுபாடு, தேவதை வேறுபாடு என்னுமிவைகளுடன் கூடினவைகளாகப் புரண்டரங்களைத் தரித்தல் வேண்டும். விபூதிதாரண முறை முடிந்தது.

 

உருத்திராக்கதாரண விதி

உருத்திராக்கதாரணமும் விபூதிதாரணம் போலச் சிவ பூசையில் எப்பொழுதுந் தரிக்கவேண்டும். பிராமணர் முதலிய ஜாதியார் முறையே வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என்னும் வர்ணங்களையுடைய உருத்திராக்கங்களைத் தரிக்கவேண்டும். சொல்லப்பெற்ற வர்ணங்களையுடைய உருத்திராக்கங்கள் கிடையாவிடில் பிராமணர் நான்கு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். க்ஷத்திரியர் செம்மை முதலிய மூன்று வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். வைசியர் பொன்மை முதலிய இரண்டு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந்தரிக்கலாம். சூத்திரர் கருமை வர்ணமுடைய உருத்திராக்கத்தையே தரிக்கவேண்டும். அல்லது அனைவரும் எல்லாவகையான உருத்திராக்கங்களையுந் தரிக்கலாம்.

சிரசு, கழுத்து, காது, புயம், மணிக்கட்டு, மார்பு என்னுமிந்தத் தானங்களில் அங்கங்களினளவுக்கு உரியதான எண்ணிக்கையுடன் கூடிய உரத்திராக்கத்தைத் தரிக்க வேண்டும்.

அல்லது சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, காதுகளில் தனித்தனி ஆறு, கைகளில் தனித்தனி பதினாறு, மணிக்கட்டுகளில் தனித்தனி பன்னிரண்டு, மார்பில் நூற்றெட்டு இவ்வாறு இருநூற்று நாற்பத்தெட்டு உருத்திராக்கங்களைத் தரிக்கலாம். சிகையில் ஒன்று சேர்த்துத் தரிக்கலாம்.

சிகையில் ஒன்று, சிரசில் முப்பத்தாறு, மார்பில் ஐம்பது, பூணூலில் நுற்றெட்டு, கழுத்து, காது, புயம், மணிக்கட்டு என்னுமிவைகளில் முன்போல் முறையே முப்பத்திரண்டு, பண்ணிரண்டு, முப்பத்திரண்ட, இருபத்து நான்கு ஆக நூறு. இவ்வாறு இருநூற்றுத்தொண்ணூற்றைந்து உருத்திராக்கங்கள் தரிக்கலாம்.

சிரசில் நூற்றெட்டு, நாபிவரை நூற்றெட்டெண்ணுடைய மூன்று மாலைகள், கழுத்து, காது, மார்பு, புயம், மணிக்கட்டு என்னுமிவைகளில் முன்போல் நூற்றைம்பது, இவ்வாறு ஐந்நூற்று எண்பத்திரண்டு உருத்திராக்கங்கள் தரிக்கலாம்.

அல்லது கிடைத்ததற்குத் தக்கவாறு தரிக்கலாம். வைரம், மாணிக்கம், வைடூரியம், பவளம், நல்முத்து என்னும் பஞ்சரத்தினங்களுடன் கூடிய உருத்திராக்க தாரணமானது சுரம், பைசாசம், மேகம், குட்டம், பகந்தரம், குழந்தையை அபகரித்ததாலுண்டான தோஷமாகிய அபஸ்மாரமென்னுமிவைகளை நிவிருத்தி செய்யும்.

மகுடம், குண்டலம், காதணி, கேயூரம், கடகம், ஒட்டியாணம் என்னுமிவைகளில் உருத்திராக்கத்தைத் தரித்தால் அபமிருத்துவை நாசஞ்செய்யும். மற்ற இடங்களில் தரித்தால் ஆயுள் சம்பத்து கீர்த்தி என்னுமிவைகளை விருத்திசெய்யும். சிகையில் தரித்தால் கோடி மடங்கு பலன் உண்டு. காதுகள், கழுத்து, புயம் என்னுமிவைகளில் தரித்தால் முறையே ஒன்றற்கொண்டு பன்மடங்கதிகமான பலத்தைச் செய்யும். கைகளில் தரித்தால் அளவற்ற பலத்தைச் செய்யும்.

ஒரு முகமுடைய உருத்திராக்கத்தைச் சிகையில் மறைத்துத்தரித்தால் பிராமணக்கொலை செய்ததோஷமும், ஆயுதம், அக்கினி, திருடர், மழை என்னுமிவைகளாலுண்டான பெரிதான அச்சங்களும் நீங்கும்; ஆயுள்கீர்த்தி, சம்பத்து என்னுமிவைகளை விருத்திபண்ணும். போக மோக்ஷங்களைக்கொடுக்கும்; எல்லாச் சித்திகளும் உண்டாகும்.

இரண்டு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் பசுக்கொலையாலுண்டான தோஷத்தை நீக்கும்.

மூன்று முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் பெண்ணைக்கொன்றதனாலுண்டான தோஷத்தை நீக்கும்.

நான்கு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் புணருவதற்கு உரிமையில்லாத பெண்களைப் புணர்ந்த தோஷமும், தின்னுதற்கு உரிமையில்லாத பண்டங்களைத் தின்னுதலா லுண்டான தோஷமும் முதலிய தோஷங்களை நீக்கும்.

ஐந்து முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் எல்லாப் பாவங்களையும் நீக்கும்.

ஆறு முகமுடைய உருத்திராக்கத்தை வலது கையில் தரித்தால் கர்ப்பத்தைக் கெடுத்ததோஷத்தை நீக்கும்.

ஏழு முகமுடைய உருத்ரி£க்கத்தைத் தரித்தால் சுவர்ணத்தைத் திருடியதாலுண்டாம் தோஷத்தையும், பசுவைக் கொன்றதனாலுண்டாம் தோஷத்தையும் நீக்கும், விடத்தையும் போக்கும்.

எட்டு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் குருபத்தினியைப் புணர்ந்ததனாலுண்டான தோஷத்தையும், வஞ்சகமாக தொழில் செய்ததனாலுண்டான தோஷத்¬யும் நீக்கும்.

ஒன்பது முகமுடைய உருத்திராக்கத்தை இடது கையில் தரித்தால் ஒரு லக்ஷங்கோடி மகாபாதகங்களை நீக்கும்.

பத்து முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால், பீடை, பிசாசம், வேதாளம், பிரமராக்ஷஸம், சர்ப்பம், சிங்கம், புலி என்னுமிவைகளாலுண்டான அச்சத்தை நீக்கும்.

பதினொரு முகமுடைய உருத்திராக்கத்தைச் சிகையில் தரித்தால் ஆயிரம் அசுவமேதயாகம், நூறுவாஜபேயம், இலக்ஷங்கோடி தானம் என்னுமிவைகளாலுண்டாம் பலத்தைக் கொடுக்கும்.

பன்னிரு முகமுடைய உருத்திராக்கத்தைக் கழுத்தில் தரித்தால் மிகுந்த தக்ஷிணையுடன் செய்த கோமேதம் அசுவமேத மென்னும் இவைகளாலுண்டாம் பலனைக் கொடுக்கும்; ஐசுவரியத்தை விருத்தி செய்யும்; இகத்தில் பற்களையுடை மிருகங்கள், கொம்புள்ள மிருகங்கள், திருடர், அக்கினி என்னுமிவைகளாலுண்டாகும் அச்சத்தைப் போக்கும்; எல்லாப் பாவங்களையும் நாசஞ் செய்யும்.

பதின்மூன்று முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் சமானமில்லாத போகத்தைக் கொடுக்கும்; இரசவாதம், தாதுவாதம், குளிகை முதலிய சித்திகளை உண்டு பண்ணும்; தந்தை, தாய், சகோதரர், பெண்கள் ஆகிய இவர்களைக்கொன்ற தோஷம் நீங்கும்.

பதினான்கு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் எல்லாக்காரிய சித்திகளையும் உண்டுபண்ணும்; எல்லா வியாதிகளையும் பாவங்களையும் போக்கும்; ஞானயோகசித்திகளை உண்டு பண்ணும்.

மரணஜனன சூதகங்கள், பெண்ணின் சேர்க்கை, மலஜலங்கழித்தல், புலால், பூண்டு, தேத்தாங்கொட்டை, முருங்கைக்கீரை, நறுவிலி என்னுமிவைகளை உண்ணுதலென்னுமிவற்றில் சிரசு, புயம், கழுத்து, காது என்னுமிவைகளைத் தவிர ஏனைய அங்கங்களில் உருத்திராக்கங்கள் தா¤க்கலாகாது.

உருத்திராக்கத்தைக் கற்பசூத்திரத்தில் கூறியவாறு தானஞ் செய்யின் எல்லா வேதங்களையும், புராணங்களையும், அத்தியயனஞ் செய்ததனாலுண்டாம் பலனையும், எல்லா யாகங்களையும் தானங்களையும் செய்ததனாலுண்டாம் பலனையும், எல்லாத் தீர்த்தங்களினுஞ் சென்று ஆடினதாலுண்டாம் பலனையும் கொடுக்கும்; எல்லா ரோகங்களையும் போக்கும்; நூறு இலிங்கங்களைத் தாபித்ததாலுண்டாம் பலனையும், நூறு இலிங்கங்களைத் தானஞ்செய்ததாலுண்டாம் பலனையும், ஆயிரம் சாளக்கிராமத்தைத் தானஞ்செய்ததாலுண்டாம் பலனையும், ஆயிரம் கன்னியாதானத்தின் பலனையும் கொடுக்கும்; புத்திரமித்திரருடன் கூடின சகல ஐசுவரிய போகங்களையும் கொடுக்கும்; சிவசாயுச்சியத்தையுங்கொடுக்கும்.

இதுபோல் இந்தத்தானங்களை எந்தச் சிவபக்தன் ஏற்றுக்கொள்ளுகின்றானோ, அந்தச் சிவபக்தனுக்கும் இவ்வளவு பலன்களும் உண்டு.

பௌர்ணமி, இமாவாசை, சங்கிராந்தி, (உபராகம்) கிரகணம், ஜன்ம நக்ஷத்திரம் முதலிய புண்ணிய தினங்களில் உருத்திராக்க தாரணஞ்செய்யின் எல்லாப் பாவங்களையும் விலக்கும்.

பூஜாகாலத்தில் உருத்திராக்கத்தைச் சிரசில் ஈசான மந்திரத்தாலும், காதுகளில் தத்புருட மந்திரத்தாலும், கழுத்து முதலிய தானங்களில் அகோர மந்திரத்தாலும், மார்பில் வியோமவியாபி மந்திரத்தாலும் தரிக்கவேண்டும். உருத்திராக்கதாரண முறை முடிந்தது.

 

சகளீகரண முறை

பின்னர் காநியாச அங்கநியாசரூபமான சகளீகரணம் மூன்று வகைப்படும். அவை வருமாறு : - சிருட்டிநியாசரூபம், திதி நியாசரூபம், சங்கார நியாசரூபமென மூவகைப்பட்டு முறையே கிரகஸ்தர்களுக்கும், பிரமசாரிகளுக்கும், வானபிரஸ்த சன்னியாசிகளுக்கும் உரியனவாகும். இவற்றுள், சிருட்டி நியாச ரூபமான முறையைக் கூறுதும்.

 

கரநியாசம்

இடதுகையையும் இடதுகையின் பின்பக்கத்தையும் மணிக்கட்டு முதற்கொண்டு வலதுகையினால் ஹ: அஸ்திராயபட் என்ற மந்திரத்தை உச்சரித்துத் துடைத்து, இருகைகளிலும் சந்தனமிட்டு அஸ்திர மந்திரத்தால் இருமுறை துடைத்து அதே மந்திரத்தால் வலதுகையையும் அதன் பின் பக்கத்தையும் இடதுகையால் ஒருமுறை துடைத்து இருகைகளையும் மணிக்கட்டுவரை அஸ்திர மந்திரத்தின் தேஜஸால் வியாபிக்கப்பட்டனவாகப் பாவித்து இருகைகளையும் சம்புடம்போல் மூடி, இரண்ட கட்டைவிரல்களில் மத்தியில் அமிர்தமயமான சத்திமண்டலத்தைத் தியானித்து ஹாம் சக்தயேவெளஷட் என்னும் மந்திரத்தை உச்சரித்து அந்த அமிர்தத்தால் இருகைகளையும் நனைத்து, சேர்க்கப்பட்ட இரு கட்டைவிரல்களின் அடிகளையுடையசம்புடம் போன்ற இருகைகளிலும் ஓம்ஹாம் சிவாசனாய நம: என்று நியாசஞ் செய்து, கையின் மத்தியில் ஓம்ஹாம் ஹம்ஹாம் சிவமூர்த்தயே நம: என்ற மந்திரத்தை உச்சரித்து, பிரகாசரூபமாயும், அலையாத மின்னலுக்குச் சமானமாயும், வெண்மை நிறமுடையதாயுமிருக்கும் பரமசிவனுடைய சூக்குமமூர்த்தியை நியாசஞ்செய்து ஹோம் ஈசானமூர்த்தாய நம: எனற மந்திரத்தால் இரண்டு கட்டைவிரல்களிலும் சுட்டு விரல்களால் நியாசஞ்செய்து, சுட்டுவிரல் முதல் சுண்டுவிரல் வரையுள்ள விரல்களில் கட்டை விரல்களால் ஹேம் தத்புருஷவக் திராய நம: என்பது முதலிய நான்கு மந்திரங்களால் நியாசஞ் செய்து, ஹாம்ஹெளம் வித்தியாதேஹாய நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கட்டைவிரைல் அணிவிரல்களால் இரண்டு கைகளிலும் முப்பத்தெட்டுக கலைகளின் சொரூபமாயும் சதாசிவ சொரூபமாயுமிருக்கும் தூலமான வித்தியாதேகத்தை நியாசஞ்செய்து, நேத்திரேபியோ நம: என்னும் மந்திரத்தால் கைகளில் நேத்திரத்தை நியாசஞ்செய்து ஹாம்ஹெளம் சிவாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து, கட்டைவிரல் அணிவிரல்களால் சதாசிவ தேகத்திற்கு வியாபகமான சிவனை ஆவாகனஞ் செய்யவேண்டும். பின்னர் சுண்டுவிரல் முதலிய விரல்களில் ஹாம்ஹிருதயாய நம: என்பது முதலிய ஐந்து மந்திரங்களை நேத்திர மந்திரத்தை நீக்கி முறையே நியாசஞ்செய்து, இடது வலது கைகளை ஒன்றை ஒன்றினால் கவசாய நம: என்று மூடி இரண்டு கைகளையுஞ் சேர்த்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் பரமீகரணஞ் செய்யவேண்டும்.

பரமீகரணமாவது நியாசஞ் செய்யப்பட்ட இருதயம், சிரசு, சிகை முதலியவைகளும், வேறு வேறு வர்ணமான கலைகளும், ஆவாகனஞ் செய்யப்பட்ட பரமசிவனுடைய மிகவெண்மையான தேஜசுடன் அந்தந்த வர்ணங்களோடு கலப்பதாகப் பாவித்தல்.

 

அங்கநியாசம்

வலது கைக்கட்டைவிரல் அணிவிரல்களால் ஹாம்சிவாசனாய நம: என்று உச்சரித்துக்கொண்டு, தேகத்தின் மத்தியிலாவது அல்லது இருதயத்திலாவது மூலாதாரத்திலிந்துண்டாண வெண்மையான சிவாசன பத்மத்தை நியாசஞ செய்து ஓம் ஹாம் ஹம்ஹாம் சிவமூர்த்தயே நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கிழங்கிருக்கும் நாபி முதலாகாவாவது இருதயமுதலாகவாவது புருவ நடுவரை தேஜஸ் சொரூபமான சிவனுடைய சூக்குமமூர்த்தியை நியாசஞ்செய்து, நான்கு விரல்களையும் மடக்கி முஷ்டி செய்து கட்டைவிரலால் ஈசானமூர்த்தாய நம: என்னும் மந்திரத்தை சிரசில் நியாசஞ்செய்து, கட்டை விரலுடன் கூடின சுட்டுவிரல் முதலிய விரல்களால் முகம், இருதயம், குய்யம், பாதம் என்னுமிவைகளில் தத்புருஷ முதலிய மந்திரங்களை முறையே நியாசஞ்செய்து புருவ நடுமுதல் பிரமரந்திரமீறாக ஹாம்ஹெளம் வித்தியா தேஹாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து வித்தியாதேகத்தை நியாசஞ்செய்து, நேத்திர மந்திரத்தை நேத்திரங்களில் மத்தியிலுள்ள மூன்று விரல்களால் நியாசஞ்செய்து அந்த வித்தியாதேகத்தில் கட்டைவிரல் அணிவிரல்களால் ஹாம்ஹெளம் சிவாய நம: என்று உச்சரித்துப் பரமசிவனை ஆவாகனஞ் செய்ய வேண்டும்.

பின்னர் இருதயம், சிரசு, சிகையென்னுமிவைகளில் கட்டை விரல்களுடன் கூடின சுண்டுவிரல், அணிவிரல், நடுவிரல்களால் இருதய சிரசு சிகாமந்திரங்களை நியாசஞ்செய்து, கழுத்துமுதல் மார்பு நடுவரை மறைத்தல் ரூபமாக கவசமந்திரத்தைச் சுட்டு விரல்களால் நியாசஞ்செய்து, கைகளில் அஸ்திரமந்திரத்தை அணிவிரல் கட்டை விரல்களால் மூன்று முறை நியாசஞ் செய்ய வேண்டும். எல்லா மந்திரங்களும் நம: என்னும் பதத்தை இறுதியிலுடையனவாக இருத்தல் வேண்டும். அஸ்திரமந்திரம் மாத்திரம் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடையதாக இருத்தல் வேண்டும்.

பின்னர் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியினுடைய அஸ்திர மந்திரத்தால் மூன்று முறை தாளஞ்செய்து திக்குபந்தனஞ்செய் கவசமந்திரத்தால் சுற்றி வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் மகாமுத்திரையைக் காண்பிக்கவேண்டும்.

மகாமுத்திரையாவது சிரசு முதல் பாதம் ஈறாக இருகைகளாலும் பரிசித்தல்.

பின்னர் தன்னைச் சிவனுக்குச் சமானமாகப் பாவித்துக்கொள்ளல் வேண்டும். இவ்வாறு அங்க நியாசஞ்செய்து, பட்டம், தலைப்பாகை, கவசம், கைகளில் அஸ்திரம் என்னுமிவைகளைத் தரித்து யுத்தவீரன்போல் துஷ்டர்களால் தீண்டத்தகாதவனாக ஆகின்றான். சகளீகரணம் முடிந்தது.

 

சாமான்னியார்க்கிய பூஜை

பின்னர் சாமான்னியார்க்கிய பாத்திரத்தை அஸ்திரமந்திரத்தால் சுத்திசெய்து விந்துஸ்தானத்திலிருந்து பெருகுகின்ற அமிர்தமாகப் பாவிக்கப்பட்ட சுத்தஜலத்தால் ஹாம் இருதயாய வெளஷடு என்னும் மந்திரத்தை உச்சரித்துப் பூர்த்திசெய்து ஹாம் இருதயாய நம: என்னும் மந்திரத்தால் ஏழுமுறை அபிமந்திணஞ் செய்து, கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து சந்தனமிட்டு புஷ்பத்தாலருச்சித்து தேனுமுத்திரை காட்டல் வேண்டும். இந்த சாமான்னியார்க்கிய ஜலமானது சிபெருமானல்லாத ஏனைய துவாரபாலர் முதலியோருக்கு உபயோகம்.

 

துவாரபாலர் பூஜை

பின்னர் தன்னை அஸ்திரங்களாற் செய்யப்பட்ட கூட்டின் மத்தியில் இருக்கிறவனாகப் பாவனைசெய்து பிருதிவிமுதல் மாயையீறாகவுள்ள முப்பத்தொரு தத்துவங்களையும் கடந்தவனாகப் பாவித்து சிவபூஜைக்குரிய விடத்தை நான்கு கோணமுடைய சதுரமாகவும், சிவந்தவர்ணமான சுத்தவித்தியா சொரூபமாகவும், பாவனை செய்து போக மோக்ஷங்களில் விருப்பமுள்ளவன் கிழக்கு வாசலில் துவாரபாலர்களை அருச்சிக்க வேண்டும். கீர்த்தி, விஜயம், சௌபாக்கியம் என்னுமிவைகளில் இச்சையுள்ளவன் தெற்கு வாயிலிலும், மோக்ஷத்தில் மாத்திரம் இச்சையுள்ளவன் மேற்கு வாயிலிலும் துவாரபாலரை அருச்சிக்கவேண்டும். வடக்கு வாயிலில் துவாரபாலரை அருச்சிக்கக் கூடாது. சாமான்னியார்க்கிய ஜலத்தால் அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வாயிலைப் புரோக்ஷித்து வாயிலுக்கு வெளியிலிருக்கும் துவாரபாலரை அருச்சிக்க வேண்டும்.

துவாரபாலராவர், கணபதி முதலியோர்கள். துவாரத்தின் மேலிருக்கும் உதும்பரத்தின் மகத்திலுள்ள வலது இடது பக்கங்களிலும் நடுவிலும், கணபதி, சரஸ்வதி, மகாலக்ஷிமியாகிய இவர்கள் இருப்பார்கள். இடது பக்கம் வலது பக்கமென்பது ஈசுவரனை நோக்கியாவது ஈசுவரனைப் பூசிப்பதற்காக துவாரத்திற் செல்லும் பூசகரை நோக்கியாவது கொள்ளல் வேண்டும். துவாரத்திற்கு வெளியில் தென்பக்கத்தில் நந்தியும் தென்பக்கத்திலேயே நந்திக்கு வலதுபக்கத்தில் கங்கையும், இடது பக்கத்தில் மகா காளரும் மகாகாளருக்கு இடது பக்கமான தென்பக்கத்தில் யமுனையும் இருக்கின்றனர்.

ஹாம் கணபதயே நம: கருமைவர்ணமும், தந்தம், அக்ஷமாலை, பாசம், அங்குசம் என்னுமிவைகளும், துதிக்கையில் மாதுளம்பழமும் உடைய கணபதியைப் பூசிக்கிறேன்.

ஹாம் சரஸ்வத்யை நம: வெண்மை வர்ணமும், அக்ஷமாலை, புஸ்தகம் என்னுமிவைகளும், வீணாகானஞ்செய்து கொண்டிருத்தலும் உடைய சரஸ்வதியைப் பூசிக்கிறேன்.

ஹாம் மகாலக்ஷிமியை நம: வில்வப்பழம், தாமரை, அபயம், வரம் என்னுமிவைகளைத் தரிக்கிறவளாயும், இருபக்கங்களிலுமுள்ள இரண்டுயானைகளின் துதிக்கைகளால் தாங்கப்பட்ட சுவர்ணகும்பத்திலுள்ள அமிர்ததாரைகளால் அபிஷேகஞ் செய்யப்படுகிறவளாயுமிருக்கும் மகாலக்ஷிமியைப் பூஜிக்கின்றேன்.

ஹாம் நந்திகே நம: சிவந்த ஜடாமகுடத்தையும், திரிசூலம், அக்ஷமாலை, அச்சமுறுத்தும் முத்திரை மழு என்னுமிவைகளையும் தரித்துக்கொண்டிருப்பவராயும், பெரிதான தேகத்தையுடையவராயுள்ள நந்தியைப் பூஜிக்கின்றேன்.

ஹாம் கங்காயை நம: வெண்மை வர்ணமும் மீன்வாகனமும் உடையவளாயும், அமிருதகலசம், சாமாமென்னு மிவைகளைத் தரிக்கிறவளாயுமிருக்கும் கங்கையைப் பூசிக்கின்றேன்.

ஹாம் மகாகாளாய நம: கருமை வர்ணமுடையவராயும், கோரமான பல்லும், மேடுபள்ளமான புருவ நெறிசல்களால் பயங்கரமான ரூபமும் பெரிதான தேகமும் உடையவராயும், சூலம், கபாலம், பரசு, சுட்டுவிரலால் அச்சமுறுத்தும் முத்திரை என்னுமிவைகளைத் தரித்துக்கொண்டிருக்கிறவராயுமுள்ள மகாகாளரைப் பூசிக்கின்றேன்.

ஹாம் யமுனாயை நம: கருமை வர்ணமும், ஆமை வாகனமும் உடையவளாயும், சாமரம், அமிருதகலசம் என்னுமிவைகளைத் தரிக்கிறவளாயுமிருக்கும் யமுனையைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு அந்தந்தத் தானங்களில் பூசிக்கவேண்டும்.

கங்கை யமுனையல்லாத ஏனைய துவாரபாலரனைவரும் மூன்று நேத்திரங்களையுடையவராவர். எல்லாத் துவாரபாலர்களும், துவாரத்திற்குச் சமானமான முகத்தையுடையவராவர்.

கதவு திறப்பதற்குரிய பிரார்த்தனைச் சுலேகங்களைச் சொல்லிக்கொண்டு அஸ்திரமந்திரத்தால் கதவைத்திறந்து ஹெளம் சிவாய நம: என்று நேத்திரங்களில் நியாசங் செய்து, திவ்விய மான தியானதிருஷ்டியால் தேவலோகத்திலிருக்கும் விக்கினங்கள் நடுங்கினவாகவும், சுட்டுவிரல் கட்டைவிரல்களால் போடப்பட்ட புஷ்பத்தால் ஆகாயத்திலிருக்கும் விக்கினங்கள் நடுங்கினவாகவும், வலதுகால் பின்பக்கத்தால் தட்டுதலால் பூமியிலிருக்கும் விக்கினங்கள் நடுங்கினவாகவுஞ் செய்து அஸ்திராயஹும்பட்என்னும் மந்திரத்தால் மூன்றுவிதமான விக்கினங்களையும் தரத்தல் வேண்டும்.

பின்னர் துவாரத்தின் வலது கொடுங்கையைத் தொடாமல் இடது கொடுங்கையைச் சார்ந்து வலது காலால் சிவபூஜாகிருகத்தில் பிரவேசித்து ஹாம் அஸ்திராய நம: அக்கினியின் வர்ணம் போன்ற வர்ணமுடையவரும், நான்குமுகமும், சத்தி, சூலம், அபயம், வரம் என்னுமிவற்றுடன் கூடிய நான்குகைகளும் உடையவரும், ஜடாமகுடத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், பாதிச்சந்திரனைச் சிரோபூஷணமாகவுடையவரும், எல்லா விக்கினங்களையும் நீக்குகின்றவருமான அஸ்திரதேவரைப் பூஜிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டு கொடுங்கைக்கு நடுவே சிவபூஜாகிருகத்திற்கு எதிர்முகமாகவிருக்கும் அஸ்திரராஜனை அவருக்கு எதிர்முகமாகத் திரும்பியிருந்துகொண்டு சந்தோஷத்துடன் பூஜிக்கவேண்டும்.

வாஸ்து அதிபனான பிரமாவை அவருக்கு எதிர்முகமாகத் திரும்பியிருந்துகொண்டு பூசிக்க வேண்டும்.

பிரமாவை பூசிக்கும் முறையாவது - ஹாம் பிரம்மணே நம: சுவர்ண வர்ண முடையவவரும், மீசையுடன் கூடிய நான்குமுகமுடையவரும், தொந்தியுடையவரும், தண்டம், அக்ஷமாலை, சுருக்கு, கமண்டலம் என்னுமிவைகளைத் தரித்திருப்பவருமான வாஸ்து பிரமாவைப் பூஜிக்கிறேனென்று சொல்லிக்கொண்டு கொடுங்கையின் நடுவிலேயே பிரமாவைப் பூசிக்க வேண்டும்.

பின்னர் துவாரத்தின் மத்தியில் வலதுபக்கதில் ஹாம் நந்தி கேசுவராய நம: சிவந்த வர்ணமும், மூன்றுகண்களும், சந்திரகலையாலலங்கரிப்பட்ட ஜடாமகுடமும், மான், பரசு, நமஸ்காரமுத்திரை என்னுமிவற்றுடன் கூடிய நான்கு கைகளும், கையினடியிற் பிரம்பும், இடுப்பில் கத்தியும் உடையவராயும், விபூதி ருத்திராக்ஷங்கள் தரித்திருப்பவராயும், குரங்கின் முகம்போன்ற முகமுடையவராயிருக்கும் நந்திகேசுவரரைப் பூசிக்கிறேனென்று சொல்லிக்கொண்டு துவாரத்தின் மத்தியில் தெற்குப் பக்கத்தில் நந்திகேசுவரரைப் பூசிக்க வேண்டும்.

ஹாம் ஸ§ம் சுயசாயை நம: கருமைவர்ணமுடையவளாயும், நீலோத்பல புஷ்பத்தால்அலங்கரிக்கப்பட்ட வலது கையையுடையவளாயுமிருக்கும் சுயசாதேவியைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டு துவாரத்தின் மத்தியில் சுயசாதேவியைப் பூசிக்க வேண்டும்.

பின்னர் பரமசிவனைப் பிரதக்ஷிணஞ் செய்து நிருதிகோணத்தில் பிரமாவைப் பூசிக்க வேண்டும். துவாரபாலர் முதலியவருக்குப் பூஜையைச் செய்யுமிடத்தில் ஆசனங்கொடுத்தல், ஆவாகனஞ்செய்தல், ஸ்தாபனஞ்செய்தல், சன்னிதானஞ்செய்தல், சன்னிரோ தனஞ்செய்தல், பாத்தியம் ஆசமனம் அர்க்கியம் கந்தம், புஷ்பம், தூபம், தீபம், என்னுமிவைகளைக் கொடுத்தல் முடிவாகவாவது, அல்லது நைவேத்தியம், தாம்பூலம் சமர்ப்பித்தல் முடிவாகவாவது ஒவ்வொருவருக்கும் தனித்தனி செய்யவேண்டும். அவ்வாறு செய்யமுடியவில்லையாயின் எல்லாத் துவாரபாலரின் பொருட்டும் நமஸ்காரமென்று சொல்லிக்கொண்ட சந்தனம் புஷ்பங்களால் ஒருசேரப் பூசிக்கவேண்டும்.

பின்னர் ஓ துவாரபாலர்களே மிகுந்த முயற்சியுடன் விக்கினங்களின் சமூகத்தை விலக்கிச் சிவபெருமானுடைய வாயிலை இரக்ஷியுங்கள். இது பரமேசுவரனுடைய ஆக்ஞையென்று தெரிவிக்க வேண்டும்.

இந்தத் துவாரபால பூஜையானது ஆத்மார்த்த பூஜையில் செய்யவேண்டுமென்று சில ஆகமங்களும், செய்ய வேண்டாமென்று சில ஆகமங்களும் கூறுவதால் செய்தலும் கூடும். செய்யாதிருத்தலும் கூடும். செய்தல் செய்யாமைபற்றிக் குற்றமில்லை. செய்தால் குணமுண்டென்பது தாற்பரியம். எதுபோலுமெனில், சோடசிக்கிரகம் நியாயம் போலுமென்க.

சோடசிக்கிரக நியாயமாவது பூருவமீமாம்சையில் அதிராத்திரத்தில் சோடசிக்கிரகணஞ் செய்யக்கூடாதென்றும், செய்ய வேண்டுமென்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாக்கியங்கள் ஒரே விஷயத்தில் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுவதால் சில சமயங்களில் செய்யலாமென்றும், சில சமயங்களில் செய்யாமலிருக்கலாமென்றும், செய்தமையால் குணமுண்டென்றும், செய்யாமையால் குற்றமில்லையென்றும் கொள்ளப்படுமாறுபோல, இவ்விடத்திலும் ஆத்மார்த்த பூஜையில் துவாரபாலர் பூஜைசெய்யின் குணமும், செய்யவில்லையாயின் குற்றமுமின்மையும் உண்டென அறிந்து கொள்க.

பின்னர் பூஜைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் பரமசிவனுடைய சன்னிதானத்தில் வைத்து அவருடைய வலதுபாகத்திலாவது, ஆக்கிநேயபாகத்திலாவது வடக்கு முகமாக இருந்துகொண்டு ருசிராஸனமாவது சுவஸ்திகாசமானமாவது, அல்லது தனக்குப் பழக்கமான எந்த ஆசனமாவது செய்து ஆன்ம சுத்தி, தான சுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐவகைச் சுத்திகளுள், முதலாவது ஆன்மசுத்தியைச் செய்ய வேண்டும்.

சுவஸ்திகாசனமானது துடைக்கும் முழங்காலுக்கும் நடுவே இரண்டுள்- ளங்காலையுஞ் செலுத்தி இறுமாந்திருப்பது.

உயரே இருக்கும் உதும்பரத்தில் கணபதி முதலாயினாரைப் பூஜை செய்ய வேண்டுமென்ற இந்த முறையானது சொல்லப்பட்ட இலக்கணங்கள் வாய்ந்த சிவ பூஜாக்கிரகம் இருப்பின் அதில் ஆன்ம சுத்திக்கு முன்னரே செய்ய வேண்டும்.

சிவபூஜாக்கிரக இலக்கணங்கள் வருமாறு :- கிரகத்தினுடைய ஈசானத் திக்கில் கல், சுட்டசெங்கல், சுத்தமானகட்டை, மண் என்னுமிவற்றில் யாதாவதொன்றால், நான்கு சமசதுரமாகவாவது, நீண்டதாகவாவது, வட்டமாகவாவது எஜமானுடைய நடுவிரலில் மேலாக இருக்கும் ரேகைவரையுள்ள இருபத்து நாலங்குலம் உத்தமம். நடுரேகை வரையுள்ள இருபத்து நாலங்கும் மத்தியமம். அடிரேகை வரையுள்ள இருபத்து நாலங்குலம் மத்தியமம். அடிரேகை வரையுள்ள இருபத்து நாலங்குலம் அதமம். இவ்வாறு இருபத்து நாலங்குலங்கொண்ட கைமுழத்தில் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதின்மூன்று, பதினேழு, இருபது, இருபத்தொன்று, முப்பத்திரண்டு என்னுமிவற்றில் யாதானுமோரளவுகொண்டு இரண்டுமேடை அல்லது மூன்று மேடையுடையதாகப் பூஜாகிருகத்தைச் செய்து அதனை ஐந்தாகப் பிரித்து நடுவில் கல் சுண்ணாம்புகளால் செய்யப்படாது மண்ணினாலாவது, சுட்டசெங்கல்லினாலாவது, நான்கு மூலைகளிலும் தூண்களுடனாவது, தூண்களில்லாமலாவது, பதினாறு அல்லது பதினெட்டங்குலம் உயரமுடையதாக ஒரு திண்ணையைச் செய்து அத்திண்ணையின்மேல் மேற்குப்பாகத்தில் ஒரு சாண் அளவு அகலமுடையதாயும், ஐந்தங்குல உயரமுடையதாயும், கர்ப்பக்கிருத்தைச் செய்து, அதன் கிழக்குப் பாகத்தில் அதே அளவும் உயரமுடையதாக அர்த்தமண்டபத்தைச் செய்து, அதன் கிழக்குப் பாகத்தில் ஐந்துசாண் அளவு நீளமும், நான்குசாண் அளவு அகலமும், எட்டங்குல உயரமும் உடையதாக பேர மண்டபத்தைச் செய்ய வேண்டும். அவற்றுள் கர்ப்பக்கிருகத்தில் சுவர்ணம், வெள்ளி, செம்பு, மரம் என்னுமிவற்றுள் யாதாவதொன்றால் செய்யப்பட்ட சமசதுரமாய் நீண்டதாகவாவது வட்டமாகவாவதுள்ள பெட்டியைத் தாபிக்க வேண்டும்.

பேர மண்டபத்தில் இரண்டு கைமுழ அளவு நீண்டதாயும், ஒரு கைமுழ அளவு அகலமாயும், பன்னிரண்டங்குல உயரமாயும், அல்லது ஒரு கைமுழ அளவு உயரமாயும் உள்ள தாமரைப் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியை வைத்து, அப்பெட்டியின்மேல் அப்பெட்டிக்களவான ஆடையை விரித்து அதன் நடுவில், உயிருடன் கூடிய யானையின் தந்தத்தாற் செய்யப்பட்ட பீடத்தை வைத்து, அந்தப்பீடத்தின்மேல் சுவர்ணமுதலியவற்றால் செய்யப்பட்ட பத்மபீடத்தை மேற்கப்பாகத்தில் செய்யப்பட்ட பிரபாமண்டலத்துடன் கிழக்கு முகமாகத் தாபிக்க வேண்டும்.

பூஜாமண்டபமானது சிதறிய புஷ்பங்கள் தூபம், சந்தனம், மேல் கட்டி, முத்துமாலை, கொடி, விருதுக்கொடி, கண்ணாடி, உத்கிருஷ்டமான தீபங்கள், என்னுமிவைகளால் அலங்கரிக்கப்படல் வேண்டும். இத்தகைய பூஜாமண்டபம இல்லையாயின், சிவபூஜை செய்யக்கூடிய இடத்தையே மேலே கூறப்பட்ட பூஜாமண்டபமாக மனதில் பாவித்துக் கொள்ளல் வேண்டும். பின்னர் சிவபீடத்தின் பக்கத்தில் உட்கார்ந்து ஆத்மசுத்திக்கு முன்னராவது அல்லது பின்னராவது துவாரபால பூஜையைச் செய்ய வேண்டும்.

துவாரபால பூஜை முடிந்தது.

 

ஆன்ம சுத்தி

ஆன்மசுத்தியானது பூசிப்பவனான சீவனைச் சிவமாகப் பாவனைசெய்யும் சீவசுத்தி ரூபமாயும் பூசிப்பவனுடைய தேகத்தைச் சிவதேகமாகப் பாவிக்கும் தேகசுத்தி ரூபமாயும், இருவகைப்படும்.

அவற்றுள், சீவசுத்தி முறை வருமாறு :- மூன்று முறை பிராணாயாமஞ்செய்து தேகத்தினுள்ளிருக்கும் அசுத்தவாயுவை ரேசகரூபமான மூன்று பிராணாயாமத்தால் அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வெளியில் விட்டு, வெளியிலிருக்கும் வாயுவால் வயிற்றை நிரப்பி இருகால் கட்டைவிரல் முதற்கொண்டு மூலாதாரம் வரையிரண்டாகவும், மூலாதாரத்திற்மேல் பிரமரந்திரம் வரை ஒன்றாகவும் இருப்பதாயும், கீழே முகத்தையுடைய தாமரைகளின் மொட்டுக்களுடன் கூடினதாயும், சரீரத்தின் நடுவில் அதிசூக்குமாயும், மின்னற்கொடிபோல் பிரகாசிக்கிறதாயும், உள்ளே துவாரத்தையுடையதாயும், உள்ள சுழுமுனா நாடியைத் தியானித்து, அதன் நடுவில் ஹ§ம் என்னும் சிகாமந்திரத்தின் பீஜாக்கரத்தைப் பிரகாசிப்பதாகத் தியானஞ்செய்து, இருதயம், கழுத்து, அண்ணம், புருவநடு, பிரமரந்திரமென்னும் இவற்றில் கீழே முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் தாமரை மொட்டுக்களைப் பூரக கும்பகரேசகங்களால் விரியச் செய்யப்பட்டவையாயும், உயரே முத்தையுடையவையாயும் பாவித்து, மூலாதாரத்தில் தீபத்தின் ஜ்வாலைபோல் ஜொலிக்கின்ற ஹ¨ங்காரத்தை ஹும்பட்என்னும் மந்திரத்தின் பன்முறை உச்சாரணத்தினால் உயரே எழும்புவதாகத் தியானித்து அதனால் பிரமம் முதலிய ஐந்து முடிச்சுக்களின் ரூபமான தாமரைத் தண்டின் முடிச்சுக்களாகப் பாவனைசெய்து, ஹ¨ங்காரத்தைத் திருப்பி வாயுவை வெளியில் விடவேண்டும்.

மீண்டும் ஹ்ருங்காரத்தை மூலாதாரத்தில் தியானஞ்செய்து பூரகவாயுவினால் கொண்டவரப்பட்டதாயும், சரீரமுற்றும் வியாபகமான சைதன்னியத்தையுடையதாயும், இருதயகமலத்திலிருப்பதாயும், புரியட்டகரூபமான சூக்குமதேகத்துடன் கூடினதாயுமுள்ள சீவனைப் புரியட்டக தேகத்தினின்றும் பிரித்து பிரகாசிக்கின்ற நக்ஷத்திரத்தின் வடிவம்போல் வடிவத்தையுடையதாயும், மிகவும் சூக்குமமாயும், ஒன்றாயுமிருக்கும் சீவனை ஹாம் என்னும் இருதய பீஜாக்கரமாகிய சம்புடத்தில் வைத்து, ஹ¨ங்காரத்தை சிரசில் வைத்துக் கும்பகஞ்செய்து வாயுவை உயரே போக்கிச் சங்காரமுத்திரையால் அந்தச் சீவனை துவாதசார்ந்தம் வரை கொண்டுபோய் துவாதசாந்தத்தின் மேலிருக்கும் பரமசிவனிடத்தில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்தலால் சீவன் தூலசூக்குமருபமான அசுத்த தேக உபாதியினின்றும் விடுபட்டவனாய் சிவசாயுச்சியத்தாலடையப்பட்ட நின்மலமான ஞானக்கி£¤யாசத்திகளுடன் கூடிச் சுத்தனாக ஆகின்றான். அல்லது சீவனை துவாதசாந்தம் வரை கொண்டுபோய் பரமசிவனிடத்திற்சேர்க்க இயலாதவர் இருதய கமத்திலிருக்கும் சத்திமண்டலமாகிய சம்புடத்தில் வைத்துப் பூதசுத்திசெய்யுங்காலத்தில் செய்யப்படும் தேகதகனத்தால் கெடாது இரக்ஷிக்கவேண்டும். இவ்வாறு செய்யுங்கால் அடியிற்கண்டவாறு செய்தல் வேண்டும்.

இருதயகமலங்களின் கர்ணிகையின் மேல் ஹாம் சூரியமண்டலாய நம: ஹாம் சோமமண்டலான நம: ஹாம் அக்கினிமண்டலாய நம: ஹாம் சத்திமண்டலாய நம: என்று நியாசஞ் செய்து, ஹாம் ஹம் ஹாம் ஆத்மனே நம: என்ற மந்திரத்தை உச்சரித்து தேகத்தில் வியாபகமாயிருக்கும் சீவனை வியாபகம் ஒடுங்கியிருப்பதாயும், பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களின் சொரூபம்போல் சொரூபமுடையதாயும், தியானஞ்செய்து, அந்தச் சிவனை சத்தி மண்டலத்திற்குமேல் வைத்து, அதற்குமேல் சத்திமண்டலம், அக்கினிமண்டலம், சந்திரமண்டலம், சூரியமண்டலமென்னும் இவற்றை முறையே நியாசஞ்செய்து, மேலுங்கீழுமுள்ள இரண்டு சத்திமண்டங்களினின்றும் பெருகும் அமிர்தப்பிரவாகத்தால் நனைக்கப்பட்டதாகப் பாவனைசெய்யவேண்டும். இவ்வாறு சீவனுக்கு ர¬க்ஷயை மாத்திரம் செய்யவேண்டும். (சீவசத்தி என்பதற்கு இவ்விடத்தில் சீவர¬க்ஷ என்பது பொருள்.) தீக்ஷ£காலத்திலேயே சீவன் சுத்தனாயிருத்தலால் நாடோறுஞ்செய்யும் பூஜாசமயத்தில் சுத்திசெய்ய வேண்டுவதில்லை.

 

தேகசுத்தி

தேக சுத்தியானது சூக்கும தேகசுத்தி தூலதேகசுத்தியென இருவகைப்படும்.

சூக்குமதேகசுத்தியாவது :- சப்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னுமிவ்வெட்டின் ரூபமான சூக்கும சரீரசுத்தியின்பொருட்டு, இருதயம், கண்டம், அண்ணம், புருவநாடு, பிரமரந்திரமென்னும் இவற்றிலிருக்கும் பிரமன் முதலிய காரணபுருடர்களுள் பிரம்மணிசப்தஸ்பரிசௌ பிரவிலாபபயமி (பிரமாவினிடத்தில் சப்த பரிசம் என்னுமிவற்றை ஒடுங்கும்படி செய்கிறேன்.) ரசம் விஷ்ணௌ பிரவிலாபயாமி (இரதத்தை விஷ்ணுவினிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன். ரூபகந்தௌ ருத்திரேபிரவிலாபயாமி, (ரூபம் கந்தமென்னும்மிவற்றை உருத்திரனிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன்.) புத்யகங்காரௌத்வீச்வரே பிரவிலாபயாமி (புத்தி அகங்காரமென்னுமிவற்றை ஈசுவரனிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன்.) மனஸ்சதாசிவே பிரவிவிலாபயாமி (மனதைச் சதாசிவனிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன்.) என்று இவ்வாறு சொல்லிக்கொண்டு சூக்குமசரீரத்தின் அம்சங்களான சப்த முதலியவற்றைப் பிரமன் முதலியோரிடத்தில் ஒடுங்கும்படி செய்யவேண்டும்.

தூலதேகசுத்தியாவது :- தன்னுடைய சரீரத்தில் பாதம் முதல் துவாதசாந்தம் வரையுள்ள தானங்களில் இருக்கும் ஐந்து மகாபூதங்களைப் பின்னர்க் கூறப்படும் தானம், சொரூபம், வர்ணம் என்னுமிவற்றுடன் கூடினவையாகத் தியானஞ்செய்து ப்ருதிவீ மப்சு பிரவிலாபயாமி (பிருதிவியை அப்பில்லயிக்கச் செய்கின்றேன்.) அபோக்நௌ பிரவிலாபயாமி (அப்பை அக்னியில்லயிக்கச் செய்கின்றேன்.) அக்நிம் வாயௌ பிரவிலாபயாமி (அக்கினியை வாயுவில் லயிக்கச்செய்கின்றேன்.) வாயுமாகாசே பிரவிலாபயாமி (வாயுவை ஆகாயத்தில் லயிக்கச் செய்கின்றேன்.) ஆகாசம் பராசத்தௌ பிரவிலாபயாமி (ஆகாசத்தைப் பராசக்தியில் லயிக்கச் செய்கின்றேன்.) பராசத்திம் பரசிவே பிரவிலாபயாமி ( பராசக்தியைப் பரசிவத்தில் லயிக்கச் செய்கின்றேன்.) என்று சொல்லிக்கொண்ட அவ்வாறே பாவனை செய்யவேண்டும். இது தத்தமக்குக் காரணங்களான அப்பு முதலியவற்றில் பிருதிவி முதலியவற்றை லயிக்கச்செய்வதான பூதசுத்தியாகும்.

மற்றொன்றான தூலதேக சுத்தியோவெனின், அதனதன் குணங்களை லயிக்கச்செய்யும் ரூபமாயுள்ளது. இந்தச் தூலதேக சுத்தி தனித்தனி சுத்திசெய்தல் ரூபமாயும், ஒன்றாலொன்றைச் சுத்தி செய்தல் ரூபமாயும் இருவகைப்படும். அவற்றுள், தனித்தனி சுத்திசெய்தல் ரூபமானது குணங்களை லயிக்கச் செய்வதாகும். அது வருமாறு:-

பாதம் முதற்கொண்டு முழங்கால்வரை சதுரச்சிர அளவாயும், பொன் வர்ணமாயும், கடினசுபாவமாயும், வச்சிரத்தாலடையாளஞ் செய்யப்பட்டதாயும், பார்த்திவ பீஜமானலம் என்பதுடன் கூடின ஹாம் என்னும் இருதய பீஜத்துடன் கூடினதாயும், காரணேசுவரரான பிரமாவால் அதிட்டிக்கப் பட்டதாயும், நிவிருத்திகலாரூபமாயுமிருக்கும் பார்த்திவ மண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனை செய்து ஹ்லாம் நிவிருத்தி கலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு ஐந்து உத்காதங்களால் பிருதிவியினுடைய கந்தம், இரதம், உருவம், பரிசம், சத்தம் என்னுமிந்தக் குணங்களைத் துரத்த வேண்டும்.

பின்னர் முழங்கால் முதல் நாபிவரை பாதிச் சந்திரனுடைய சொரூபம் போல் சொரூபமுள்ளதாயும், வெண்மை வர்ணமுடையதாயும், நிகழ்ச்சி சுபாவமாயும், பதுமத்தாலடையாளஞ் செய்யப்பட்டதாயும், வம் என்னும் ஜலபீஜத்துடன் கூடின ஹீம் என்னும் சிரோபீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான விட்டுணுவாலதிட்டிக்கப் பட்டதாயும், பிரதிட்டாகலாரூபமாயுமிருக்கும் அப்புமண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனை செய்து ஹ்வீம் பிரதிட்டாகலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து நான்கு உத்காதங்களால் அப்புவினுடைய இரதம், உருவம், பரிசம், சத்தமென்னுங்குணங்களை நீக்கவேண்டும்.

பின்னர் நாபிமுதல் கண்டம்வரை மூன்று கோணமாயும், சிவந்த வர்ணமாயும், சுடும் சுபாவமாயும், சுவஸ்திகபந்தத்தால் அடையாளஞ் செய்யப்பெற்றதாயும், ரம் என்னும் அக்கினி பீஜத்துடன் கூடின ஹ¨ம் என்னும் சிகாபீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான உருத்திரரால் அதிட்டிக்கப்பட்டதாயும், வித்தியாகலாரூபமாயுமிருக்கும் அக்கினி மண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனைசெய்து ஹ¨ம் வித்தியாகலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து மூன்று உத்காதங்களால் அக்கினியினுடைய உருவம், பரிசம், சத்தமென்னுங் குணங்களை நீக்கவேண்டும்.

பின்னர் கண்டமுதல் புருவநடுவரை ஆறு கோணமாயும், கருமை வர்ணமாயும், சலனசுபவமாயும், ஆறு விந்துவால் அடையாளஞ் செய்யப்பட்டதாயும், யம் என்னும் வாயு பீஜத்துடன் கூடின ஹைம் என்னும் கவச பீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான மகேசுவரரால் அதிட்டிக்கப்பட்டதாயும், சாந்திகலாரூபமாயுமிருக்கும் வாயு மண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு பாவனைசெய்து ஹ்யைம் சாந்தி கலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து இரண்டு உத்காதங்களால் வாயுவினுடைய பரிசம், சத்தமென்னுங்குணங்களை நீக்க வேண்டும்.

பின்னர் புருவ நடுமுதல் துவாதசாந்தம் வரை வட்டமாயும், புகைவர்ணமாயும், வெளிசுபாவமாயும், விந்து சத்திகளாலடையாளஞ் செய்யப்பட்டதாயும், ஹம் என்னும் ஆகாச பீஜத்துடன் கூடின ஹ: என்னும் அஸ்திர பீஜத்தையுடையதாயும், காரணேஸ்வரரான சதாசிவனால திட்டிக்கப்பட்டதாயுமிருக்கும் ஆகாசமண்டலத்தைப் பாவனை செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனைசெய்து ஹெளம் சாந்தியதீத கலாயை ஹும்பட்என்னும் மந்திரத்தை உச்சரித்து ஒரு உத்காதத்தால் ஆகாசத்தினுடைய சத்தகுணத்தை நீக்கவேண்டும்.

இந்தப் பிருதிவி முதலிய மண்டலங்களை இருதயம், கண்டம், அண்ம், புருவநடு, பிரமரந்திரங்களில் இருப்பவையாகவாவது பாவனை செய்து சுத்திசெய்ய வேண்டும். இது தனித்தனி சுத்தி செய்யும் முறையாகும்.

இனி ஒன்றாலொன்றைச் சுத்திசெய்யும் முறை வருமாறு:-

பிருதிவி முதலிய எல்லா மண்டலங்களையும் சுத்தி செய்யுமிடத்து அவற்றைப் பாதமுதல் சிரசுவரையுமுள்ள அங்கங்களில் வியாபித்திருப்பதாகப் பாவனை செய்யதல் வேண்டும்.

பிருதிவியைச் சுத்திசெய்யுமிடத்து அதனுடைய ஐந்து குணங்களையும் நீக்கிய பின்னர் பிருதிவியைத் தனக்குவிரோதமான வாயுவினால் வெல்லப்பட்டதாயும், வாயுவின் சொரூபம் போல் சொரூபத்தை யுடையதாயும் அவ்வாறே வாயுவைச் சுத்திசெய்யுமிடத்து அதனைத் தனக்கு விரோதமான பிருதிவியினால் வெல்லப்பட்டதாயும், பிருதிவியின் சொரூபம் போல் சொரூபத்தையுடையதாயும் பாவனை செய்யவேண்டும்.

இவ்வாறே ஜலம் அக்கினி என்னுமிவற்றையும் அவ்வவற்றின் குணங்களை நீக்கியபின்னர் தமக்கு விரோதமான அக்கினி ஜலங்களால் வெல்லப்பட்வையாயும், அக்கினி ஜலமென்னுமிவற்றின் சொரூபத்தையுடையவையாயும் பாவனை செய்யவேண்டும்.

ஆகாசத்தின் குணத்தை நீக்கியபின்னர் ஆகாசத்தைத் தனது குணத்திற்கு விரோதமான நித்தியத்வம், வியாபகத்துவம், சுத்தத்துவ முதலிய குணங்களுடன் கூடின பராசத்தி சொரூபமான பரமாகாசத்தால் செல்லப்பட்டதாயும், அந்தப் பரமாகாயத்தின் சொரூபத்தையடைந்ததாயும், சுத்தமான படிகம்போல் நிர்மலமாயும் பாவனை செய்தல் வேண்டும்.

இவ்வாறு மகா பூதங்களைத் தனித்தனி சுத்திசெய்தலாலும், ஒன்றாலொன்றைச் சுத்தி செய்தலாலும் குணங்களின் குறைவால் பலவீனமான சத்தியையுடைய பூதங்களின் கூட்டரூபமான சரீரத்தின் மெலிவைப் பாவனை செய்து காலிலுள்ள கட்டை விரல்களினின்றும் கிளம்பினதாயும், சிவசத்தியாலதிட்டிக்கப்பட்ட தாயுமிருக்கும் காலாக்கினியால் ஹ: அஸ்திராய ஹும்பட்என்னும் மந்தித்தை உச்சரித்து சரீரத்தை எரிக்கப்பட்டதாயும், மீதமில்லாதயும், நிவிருத்தி முதலிய கலைகளை மாத்திரம் மீதமாக வுடையதாயும், அல்லது சரீரத்திலுள்ள தோஷம் மாத்திரம் கெடுக்கப்பட்டதாயுமாகவாவது பாவனை செய்து துவாத சாந்தத்தானத்திலிருக்கும் சத்திமண்டலத்திலிருக்கும் பெருகும் அமிர்தப் பிரவாகத்தால் சரீரத்தை நனைக்க வேண்டும்.

இவ்வாறு சரீரத்தை மெலிவடையும்படி செய்வதற்£க மேலே கூறியவாறு சக்திக்குத் தக்கபடி சரீரத்தை உண்டுபண்ணும் பூதங்களின் குணங்களை நீக்கித்தூல சரீரத்தை ஆலமரமாகத் தியானஞ் செய்யவேண்டும். எவ்வாறெனில், பிருதிவி முதலிய ஐந்து பூதங்களாகின்ற வித்துக்களுடன் கூடியதாயும், மாயையாகிய பூமியில் ஊன்றப்பட்டதாயும், தர்ம அதர்மமென்னும் வேருடன் கூடினதாயும், இந்திரியங்களென்னும் பக்கக்கிளைகளுடன் கூடினதாயும், சுத்த முதலிய விஷயங்களைப் பகுத்தறிதலென்னும் தளிர்களுடன் கூடினதாயும், மனத்தின் சங்கற்பக் கூட்டமென்னும் புட்பங்களையுடையதாயும், சுகதுக்கரூபமான பலத்தையுடையதாயும், புருடனாகிய பறவையால் அனுபவிக்கத் தகுந்ததாயும், மேலே வேரும் கீழே கிளையுமுடையதாயும் இருக்கின்ற ஆலவிருக்ஷமாகத் தியானஞ செய்துகொண்டு, பிராணயாமஞ் செய்து, ஆறுமாத்திரையையுடைய பூரகத்தின் முன் பகுதியால் ஹ்லாம் என்னும் மந்திரத்தை ஐந்து முறை உச்சரித்து இலை புஷ்பம் பழமென்னும் இவைகள் நீங்கினதாயும், அசவைற்றதாயும் பாவனை செய்து பூரகத்தின் பின் பகுதியால் ஹ்வீம் என்னும் மந்திரத்தை நான்கு முறை உச்சரித்து, பளபளப்பான பத்திரம் புஷ்பம் பழமென்னுமிவற்றுடன் கூடினதாகப் பாவனை செய்து, ஒரே உத்காதத்தில் ஹ்ரூம் என்னும் மந்திரத்தின் மூன்று உச்சாரணங்களுடன் பன்னிரண்டு மாத்திரையையுடைய கும்பகத்தால் இடது கால்கட்டை விரலினின்றும் உண்டான காலாக்கினியால் உலர்ந்ததாயும், எரிக்கப்பட்டதாயும் பாவனைசெய்து ஹெவம் என்னும் மந்திரத்தின் இரண்டு உச்சாரணங்களுடன் கூடின ரேசகத்தின் முன்பகுதியால் நீரானதாகவும், திக்குக்களில் சிதறினதாகவும் பாவித்து ரேசகத்தின் பின் பகுதியால் ஹெளம் என்னும் அக்ஷரத்தை ஒரு முறை உச்சரித்து படிகம்போல் நிர்மலமாயும், சுத்தமான ஆகாசம்போல் சொரூபத்தையுடையதாயும் சிந்தித்து, அமிர்தத்தால் நனைந்ததாகப் பாவிக்க வேண்டும்.

இவ்வாறு தேகதகனத்தைச் செய்து குறிக்கப்பட்ட எண்களையுடைய உத்காதங்களால் அவ்வவற்றின் குணங்கள் நீங்கும் வரையாவது அந்தந்தக் குணங்களை நீக்கும் பாவனையால் பிருதிவி முதலியவற்றை பந்தத்தினின்றும் நீங்கினவையாக அனுசந்தானஞ் செய்து, அந்தந்தத்தானங்களில் வாயுமனமென்னுமிவை நிலைக்கும் வரையாவது பூதசுத்தியைச் செய்யவேண்டும்.

உத்காதமென்பது, இதனால் நீக்கப்படுகிறது என்னும் பொருள் குறிப்பது. அது இவ்விடத்தில் பூதகுணங்களையும் அவற்றின் அசுத்தியையும் நீக்குங்கருவியைக் குறித்தது. அஃதாவது அந்தந்த கலாமந்திரங்களின் உச்சாரணத்தை முன்னிட்டு பூரகத்தைச் செய்து சுழுமுனா நாடி வழியாகப் பிராணவாயுவைத் துவாதசாந்தம் வரை உயரே சேர்க்கும் ரூபமான கிரியை.

இந்தக் கிரியையானது பூரகஞ்செய்தபின் கும்பகஞ்செய்யுங் காலத்தில் பிராண வாயுவை உயரே செல்லும்படி செய்து, பின்னர் அந்தப் பிராண வாயுவை வலது நாடி வழியாக ரேசகம் வரை திருப்புவது. இவ்வாறு ஒவ்வொரு உத்காதத்திலும் பூரகம் கும்பகம் ரேசகமென்னும் மூன்று பிராணாயாமங்கள் சம்பவிப்பதால் பிருதிவியில் ஐந்து உத்காதங்கள் சம்பவிப்பது பற்றிப் பதினைந்து பிராணாயாமங்கள் சம்பவிக்கின்றன. ஜலத்தில் நான்கு உத்காதங்களாதலின் பன்னிரண்டு பிராணாயாமங்களும், அக்கினியில் மூன்று உத்காதங்களாதலின் ஒன்பது பிராணாயாமங்களும், வாயுவில் இரண்டாதலின் ஆறு பிராணாயாமங்களும் ஆகாயத்தில் ஒன்றாதலின் மூன்று பிராணாயாமங்களும் சம்பவிக்கின்றன.

ரேசகமுதலிய ஒவ்வொரு பிராணாயாமத்திலும் பன்னிரண்டு மாத்திரையுடைய கால அளவுண்டு. ஆகையால் மூன்று பிராணாயாமங்கொண்ட ஒவ்வொரு உத்காதமும் முப்பத்தாறு மாத்திரையுடைய கால அளவுள்ளதாக ஆகின்றது. அல்லது தரிப்பதற்காக ஏற்பட்ட கும்பகப் பிராணாயாமத்திற்கு மாத்திரம் பன்னிரண்டு மாத்திரையான கால அளவின் நியமமுண்டு. பூரகம் ரேசகம் என்னுமிவற்றிற்கு இஷ்டம்போல் காலத்தைக் கொள்ளலாம்.

மாத்திரையாவது வேகமின்றியும் தாமதமின்றியும் இருமுழங்கால்களையும் கையாற் சுற்றி சுடக்கு விடும் நேரமாகும். இது ஒரு மாத்திரை யெனப்படும். மூன்று முறை சுற்றவேண்டுமென சித்தாந்த சேகரமுதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. அந்த மூன்று முறையுள் இவ்விடத்துக் கூறிய ஒரு முறை சுற்றுதல் அதமம். இரண்டு முறை சுற்றுதல் மத்திமம். மூன்று மறை சுற்றுதல் உத்தமம்.

இவ்வாறு கால அளவுடன் கூடின பிராணவாயுவைத் தொழிற்படுத்தும் ரூபமான உத்காதத்தைக் கொள்ளாது அவ்வவற்றின் குணங்களுக்குச் சமமான எண்ணையுடைய கலாமந்திரத்தை உச்சரித்தலால் அவ்வவற்றின் குணங்கள் நீங்கினதாகத் தியானிக்கும் ரூபமாகவாவது ஒரு முறை அந்தந்தக் கலாமந்திரத்தை உச்சரித்தலால் அந்தந்தக் கலை, தத்துவம், புவனம், வர்ணம், பதம், மந்திரமென்னும் இவற்றுடன் கூடின பிருகிவி மண்டலமுதலிய மண்டலங்களில் தன்னைக்குறித்துள்ள பிரதி பந்தத்தின் நிவிருத்தியை அனுசந்தானஞ் செய்தல் ரூபமான பாசச்சேத ரூபமாகவாவது பூதசுத்தியைச் செய்ய வேண்டும்.

 

பூதசுத்தி

பிருதிவி முதலிய மண்டலங்களை நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் ஐந்து கலாமயமாயும், சரீரத்தில் பாதமுதற்கொண்டும், முழங்கால் முதற் கொண்டும், நாபி முதற்கொண்டும், கண்டம் முதற்கொண்டும், புருவநாடு முதற்கொண்டும் இருப்பனவாயும், இருதயம், கண்டம், அண்ணம், புருவநடு, பிரமரந்திரமென்னும்இவற்றைச் சார்ந்திருப்பனவாயும், நூறுகோடி யோஜனை அளவு முதல் மேலும் மேலும் பதின்படங்கு அளவுள்ளனவாயும், நான்கு சதும், பாதிச்சந்திரன், மூன்று கோணம், அறுகோணம், வட்டமென்னுமிவற்றை வடிவமாகவுடையனவாயும், வச்சிரம், இரண்டு தாமரைகள், சுவஸ்திகம், அறுபுள்ளி, ஒரு புள்ளி என்னுமிவற்றை அடையாளமாகவுடையனவாயும், பொன்மை, செம்மை, வெண்மை, கருமை, புகைமை என்னும் நிறங்களையுடையனவாயும், கடினம், திரவகம், சூடு, அசைவு, இடைவெளி என்னுஞ் சுபாவத்தையுடையனவாயும், கந்தம் முதலிய ஐந்து, இரதமுதலிய நான்கு, உருவமுதலிய மூன்று, பரிச முதலிய இரண்டு, சப்தம் ஒன்று ஆகிய இந்தக் குணங்களையுடையனவாயும், பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னுமிவர்களாலதிட்டிடக்கப்பட்டனவாயும், விந்துவுடன் கூடின லகார, வகார, ரகார, யகார, ஹகார ரூபமான பிருதிவி முதலியவற்றின் பீசாக்கரத்துடன் கூடினவையாயும் பாவனை செய்யவேண்டும்.

அவற்றுள், நிவிருத்தி கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றும், நூற்றெட்டு புவனங்களும், ககாரமான ஒரு எழுத்தும், இருபத்தெட்டுப் பதங்களும், சத்தியோசாதம் இருதயமென்னும் இரண்டு மந்திரங்களும் இருக்கின்றன.

பிதிட்டாகலையில் அப்புமுதல் பிரகிருதி ஈறான இருபத்து மூன்று தத்துவங்களும், ஐந்பத்தாறு புவனங்களும், ககரமுதல் மகரமீறாக இருபத்து நான்கு எழுத்துக்களும், முப்பத்திரண்டு பதங்களும்,வாமதேவம் சிரசு என்னும் இரண்டு மந்திரங்களுமிருக்கின்றன.

வித்தியா கலையில் புருடன் முதல் மாயையீறான ஏழு தத்துவங்களும், இருபத்தேழு புவனங்களும், யகாரமுதல் ஹகாரமீறான ஏழு அக்கரங்களும், இருபத்தொரு பதங்களும், அகோரம் சிகை என்னுமிரண்டு மந்திரங்களும் இருக்கின்றன.

சாந்திகலையில் சுத்தவித்தை, மகேசுவரமென்னும் இரண்டு தத்துவங்களும், பதினெட்டு புவனங்களும், ஹகாரம் க்ஷகாரமென்னுமிரண்டு அக்கரங்களும், பன்னிரண்டு பதங்களும், தற்புருடம் கவசமென்னும் இரண்டு இந்திரங்களுமிருக்கின்றன.

சாந்தியதீ தகலையில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும், பதினைந்து புவனங்களும், உயிரெழுத்து பதினாறும், ஒரு பதமும், மூலம் ஈசானம் அஸ்திரமென்னும் மூன்று மந்திரங்களுமிருக்கின்றன.

இந்த முறையில் பதினொரு மந்திரங்கள் மந்திராத்துவாவெனப்படும். வியோம வியாபிமந்திரத்திலிருக்கும் தொண்ணூற்று நான்கு பதங்கள் பதாத்துவாவெனப்படும். ஐம்பது அக்கரங்கள் வர்ணாத்துவாவெனப்படும். இருநூற்று இருபத்து நான்கு புவனங்கள் புவனாத்து£வெனப்படும். முப்பத்தாறு தத்துவங்கள் தத்துவாத்துவாவெனப்படும். நிவிருத்தி முதலிய ஐந்து கலைகள் கலாத்துவாவெனப்படும். இவ்வாறு பிருதிவி முதலிய மண்டலங்களை எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவையாகப் பாவனை செய்ய வேண்டும்.

அல்லது சுருக்கமான முறையில் எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவையாகப் பாவனை செய்யவேண்டும். எவ்வாறெனில்,

சத்தியோஜாத முதலிய ஐந்து மந்திரங்கள் மந்திராத்துவாவெனப்படும், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதமென்னும் ஐந்து அவத்தைகள் பதாத்துவாவெனப்படும். பாத முதலாக வேனும் இருதயம் முதலாக வேனும் பிருதிவி மண்டலமுதலிய ஐந்ததானங்கள் புவனாத்துவாவெனப்படும். அகார முதலிய மூன்றெழுத்துக்களும் விந்தும் நாதமும் என்னும் இவையேனும் மூலமந்திரமான ஐந்தெழுத்துக்களேனும் வர்ணாத்துவாவெனப்படும். ஐந்து கலைகள் கலாத்துவாவெனப்படும். * இவ்வாறே எல்லா அத்துவாக்களிலும் பிருதிவி முதலிய மண்டலங்களை அடங்கினவையாகப் பாவித்து மேலே கூறியபடி வடிவம், நிறம், தொழில், அடையாளம், பீசாக்கரம் என்னும் இவற்றுடன் கூடினவையாகவாவது பாவனைசெய்து சோதனை செய்ய வேண்டும். ( * இந்தச் சுருக்கமுறையில் தத்துவாத்துவா கூறப்படவில்லை.)

இவ்வாறு பூதசுத்தியானது பிருதிவி முதலியவற்றை லயிக்கச்செய்தல் ரூபமாயும், அவற்றின் குணங்களை நீக்குதலால் தேகத்தைத் தகிக்கச் செய்தல் ரூபமாயும், தேகத்தின் வெளியிலுள்ள தோஷங்களையும் உள்ளேயுள்ள தோஷங்களையும் தகிக்கச் செய்தல் ரூபமாயும், அவ்வற்றின் குணங்களை நீக்காமல் தேகத்தைமாத்திரம் தகிக்கச் செய்தல் ரூபமாயும், தேகதகனமின்றியே அவ்வவற்றின் குணங்களை லயிக்கச் செய்தல் ரூபமாயும், பந்தத் தன்மையனைத்தும் நீங்கினதாக அனுசந்தானஞ் செய்தல் ரூபமான பாசநீக்கமாத்திர ரூபமாயும் இருக்கும்.

எல்லாவிதமான இந்தச் சுத்தியும் உத்காதத்துடன் கூடினதெனவும், கூடாததெனவும் இருதிறப்படும்.

அவ்வவற்றின் குணங்களை லயிக்கச் செய்வதானது தனித்தனி சோதன ரூபமாயும், ஒன்றாலொன்று சோதன ரூபமாயும் இருதிறப்படும்.

பூதங்களைச் சிந்தித்தலும் எல்லா அத்துவாக்களிலும் அடங்கினவை ரூபமாயும், வடிவமுதலியவற்றைச் சிந்தித்தல் ரூபமாயும் இருதிறப்படும்.

எல்லா அத்துவாக்களிலும் அடங்கியிருப்பதாகச் சிந்தித்தலும் பெருக்கம் சுருக்கம் என்றிருவகைப்படும்.

இவ்வாறு கூறப்பட்ட பூதசுத்திகளுள் தன்னுடைய பூர்வாசாரத்தையும், தேசத்தையும், காலத்தையும், அனுசரித்து யாதானுமோர் பூசுத்தியை அனுட்டிக்கவேண்டும். இவ்வாறு பூகசுத்தி ரூபமான தேகசுத்தி கூறப்பட்டது.

 

தத்துவ சுத்தி

பின்னர் தத்துசுத்தி ரூபமான தேகசுத்தியை செய்ய வேண்டும். அது வருமாறு :-

பிரகிருதி, அகங்காரம், புத்தி, மனம், சுரோத்திரம், துவக்கு, கண், நாக்கு, மூக்கு, வாக்கு, கை, கால், பாயு, உபத்தம், சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம், ஆகாயம், வாயு, அக்கினி, அப்பு, பிருதிவி என்னும் இந்தத் தத்துவங்களின் ரூபமாயும், அருவமாயும், அசுத்தமாயுமிருக்கும் ஆன்ம தத்துவ ரூபமாகத் தூலதேகத்தையும், மாயை, கலை, வித்தை, அராகம், காலம், நியதி, புருடனென்னும் தத்துவங்களின் ரூபமாயும், சுத்தாசுத்தமாயுமிருக்கும் வித்தியாதத்துவரூபமாகச் சூக்குமதேகத்தையும், சிவம், சத்தி, ஈசுவரம், சதாசிவம், சுத்தவித்தை என்னும் தத்துவங்களின் ரூபமாயும், சுத்தமாயுமிருக்கும் சிவதத்துவ ரூபமாகப் பரதேகத்தையும் பாவித்து தூலதேகத்தைச் சூக்கும தேகத்திலும், சூக்கும தேகத்தைப் பரதேகத்திலும் லயிக்கச் செய்தல் வேண்டும்.

கூறப்பட்ட சுத்திகளுள் யாதானுமொன்றை அனுட்டித்த பின்னர் ஹெளம் சாந்தியதீ தகலாயை நம: என்பது முதலிய மந்திரங்களால் சூக்குமமான ஐந்து கலைகளின் ரூபமாயிருக்கும் சுத்தமான சூக்கும சரீர சிருட்டியையும் ஐந்து கலாமந்திரங்களினாலேயே தூலமான ஐந்து கலைகளின் ரூபமாயிருக்கும் தூலதேகத்தின் சிருட்டியையும் அவ்வவற்றின் குணங்கள் நாசமடைந்த முறையில் பாவனை செய்து ஹாம் சத்தயே வெளஷட் என்னும் மந்திரத்தால் சக்தி மண்டலத்தினின்றும் பெருகின அமிர்ததாரையால் அவற்றை நனைக்க வேண்டும்.

பின்னர் இருதயத்திலிருக்கும் கமலத்தின் கர்ணிகையில் ஹாம் ஆதாரசக்தயே நம:, ஹாம் தர்மாய நம:, ஹாம் ஞானாய நம:, ஹாம் வைராக்கியாய நம:, ஹாம் ஐசுவரியாய நம:, ஹாம் பத்மாய நம: என்னும் மந்திரங்களால் நடுவிலும் ஆக்கினேய முதலிய நான்கு கோணங்களிலும், மறுபடியும் நடுவிலும், ஷடுத்தாசனத்தை நியாசஞ் செய்து அதில் தூல சூக்கும தேகரூபமாயும், பிரிவுபடாத கைகால் முதலியவற்றின்ரூபமாயுமிருக்கும் மூர்த்தியை ஹாம் ஹம் ஹாம் ஆத்ம மூர்த்தயே நம: என்னும் மந்திரத்தால் நியாசஞ் செய்து ஹெளம் வித்தியாதேகாய நம: என்னும் மந்திரத்தால் முப்பத்தெட்டுக் கலைகளின் ரூபமாயிருக்கும் சதாசிவ ரூபத்தைத் தியானித்து சிவாய நம: என்னும் மந்திரத்தால் துவாதசாந்தத்தி- லிருக்கும் பரமசிவ சாயுச்சியத்தையடைந்ததாயும், நிர்மலமான ஞானசத்தி, கிரியாசத்திகளையுடையதாயும், பதியினுடைய சரீர ரூபமாயுமிருக்கும் ஜீவான்மாவை சதாசிவ ரூபத்தில் ஆவாகனஞ் செய்து இருதய முதலிய தானங்களில் இருதய முதலிய மந்திரங்களை நியாசஞ் செய்து மூலமந்திரத்தால் பரமீகரணஞ் செய்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சத்தி மந்திரத்தால் துவாதசாந்தத்திலிருக்கும் சத்தி மண்டலத்தினின்றும் பெருகின அதிகமான அமிர்ததாரையால் அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

பின்னர் தண்டநியாசம், முண்டநியாசம், வக்திரநியாசம், கலாநியாசம், ஸ்ரீகண்ட நியாச முதலிய நியாசங்களைச் செய்ய வேண்டும்.

நியாசஞ் செய்யும் முறை வருமாறு :- சிவாசனத்தையும் அவ்வியக்தமான சிவ மூர்த்த்தியையும் இருதயத்தில் நியாசஞ் செய்ய வேண்டும். ஹோம் ஈசான மூர்த்தாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து முஷ்டியுடன் கூடின கட்டைவிரலின் நுனியால் சிரசில் நியாசஞ் செய்யவேண்டும். ஹேம் தத் புருஷவக்திராய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் சுட்டுவிரல்களால் முகத்தில் நியாசஞ் செய்யவேண்டும். ஹ§ம் அகோர ஹிருதயாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் நடுவிரல்களால் இருதயத்தில் நியாசஞ் செய்யவேண்டும். ஹிம் வாமதேவ குஹ்யாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் அணி விரல்களால் குஹ்யத்தில் நியாசஞ் செய்யவேண்டும். ஹம் சத்தியோசாத மூர்த்தயே நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் கடைவிரல்களால் காலில் நியாசஞ்செய்ய வேண்டும். ஹோம் ஈசானாய ஊர்த்துவ வக்திராய நம:, ஹேம் தத்புருஷாய பூர்வவக்திராய நம:, ஹ§ம் அகோராய தக்ஷிணவக்திராய நம:, ஹிம் வாமதேவாய உத்தரவக்திராய நம:, ஹம் சத்தியோசாதாய பச்சிம வத்திராய நம: என்று ஊர்த்துவம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் தானங்களிலுள்ள முகங்களில் முன்னர்க் கூறியவாறு அந்தந்த விரல்களால் நியாசஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறு தண்டநியாசம் வக்திரபங்கிநியாசங்களைச் செய்த பின்னர் கலைகளை சத்திகளுடன் கூடினவையாகவாவது சத்திகளுடன் கூடாதவையாகவாவது பின்னர்க் கூறப்படுந்தானங்களில் தீக்ஷை செய்யப்பெற்ற பிராமணர் நியாசஞ் செய்யவேண்டும். க்ஷத்திரியரும் வைசியரும் இந்த நியாசத்தை வேறுயுகத்தில் செய்யலாம். இவர்களைத்தவிர மற்றவர்கள் சத்திகளையே நியாசஞ் செய்ய வேண்டும்.

சத்தியோடுகூடிய கலாநியாசம் வருமாறு :-

ஹோம் சசின்யை நம: ஹோம் அங்கதாயை நம: ஹோம் இஷ்டதாயை நம: ஹோம் மரீச்யை நம: ஹோம் ச்வாலின்னியை நம: என்று உச்சரித்துக்கொண்டு ஊர்த்தவம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் திக்குக்களிலுள்ள முகங்களில் முஷ்டியுடன் கூடின கட்டைவிரலின் முத்திரையால் நியாசஞ் செய்ய வேண்டும்.

ஹேம் சாந்தியை நம:, ஹேம் வித்யாயை நம:, ஹேம் பிரதிஷ்டாயை நம:, ஹேம் நிவிர்த்தியை நம: என்று உச்சரித்துக்கொண்டு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு முகங்களில் கட்டைவிரல் சுட்டுவிரல்களால் நியாசஞ் செய்யவேண்டும்.

ஹ§ம் தமாயை நம:, ஹ§ம் மோஹாயை நம:, ஹ§ம் க்ஷ§தாயை நம:, ஹ§ம் நிஷ்டாயை நம:, ஹ§ம் மிருத்தியவே நம:, ஹ§ம் மாயாயை நம:, ஹ§ம் பயாயை நம:, ஹ§ம் ஜராயை நம: என்று சொல்லிக்கொண்டு கட்டைவிரல் நடுவிரல்களால் இருதயம், கழுத்து, இரண்டு தோள்வளைகள், தொப்புள், வயிறு, பிருஷ்டம், இரண்டு மார்புகள் என்னுமிவற்றில் நியாசஞ் செய்ய வேண்டும்.

ஹிம் ராஜாயை நம:, ஹிம் ரக்ஷ£யை நம:, ஹிம் ரத்தியை நம:, ஹிம் பாலியை நம:, ஹிம் காமாயை நம:, ஹிம் சம்யமாயை நம:, ஹிம் கிரியாயை நம:, ஹிம் புத்யை நம:, ஹிம் காரியை நம:, ஹிம் தாத்ரியை நம:, ஹிம் பிராம்மண்யை நம:, ஹிம் மோஹின்னியை நம:, ஹிம் மனோன்மன்னியை நம: என்று சொல்லிக்கொண்டு கட்டைவிரல் அணிவிரல்களால் மூலாதாரம், குஹ்யம், பீஜம், இரண்டு துடைகள், இரண்டு முழங்கால்கள், இடுப்புக்கு மேல்பக்கம் இரண்டு, இடுப்பு இரண்டு, இடது வலது பக்கம் இரண்டு என்னுமிவைகளில் நியாசஞ் செய்யவேண்டும்.

ஹம் சித்தியை நம:, ஹம் ருத்தியை நம:, ஹம் தூத்தியை நம:, ஹம் லக்ஷிமியை நம:, ஹம் மேதாயை நம:, ஹம் காந்தியை நம:, ஹம் ஸ்வதாயை நம:, ஹம் த்ருத்யை நம: என்று சொல்லிக்கொண்டு கட்டைவிரல் சுண்டுவிரல்களால் இரண்டு கால்கள், இரண்டு கைகள், மூக்கு, சிரசு, இரண்டு புஜங்கள் என்னுமிவைகளில் நியாசஞ் செய்யவேண்டும்.

நம: சுவாகா முதலிய ஆறுவகைகளுடன் கூடின அங்கநியாசத்தை செய்ய வேண்டும். எவனுக்கு அவகாசமிருக்கின்றதோ புத்திக்குக் கலக்கமும் ஏற்படவில்லையோ அவன் ஸ்ரீகண்ட முதலிய நியாசங்களையும், ஆறு அத்துவாக்களின் நியாசங்களையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆன்மசுத்தி தேகசுத்திகளை முன்னிட்டு நியாசஞ் செய்யப்பெற்ற மந்திரமயமான சரீரத்தையுடைய தனது சரீரத்தால் சிவரூபத்தையடையந்தவனாய் சிவனை அர்ச்சிப்பதற்கு யோக்கியனாகவாகிறான். தான் சிவனாகாமல் சிவனையருச்- சிக்கக்கூடாதென்று பெரியோர்கள் கூறுவதால் சிவசாமியத்தையடைவதற்காக மேலே கூறியவாறு யாவற்றையுஞ் செய்யவேண்டும்.

இவ்வாறு ஆன்மசுத்தி தேகசுத்திகளைச் செய்வதற்கு சத்தியில்லையாயின் நியாசமாத்திரமாவது செய்யவேண்டும். எல்லா நியாசங்களையும் செய்யமுடியாவிடினும், தண்டநியாசம் சடங்கநியாசங்களை செய்யவேண்டும். அவற்றினாலேயே தேகத்திற்கும் ஆன்மாவிற்கும் சுத்தி ஏற்படுதலாலும் அதனால் சிவரூபம் ஏற்படுதலாலும் சிவனையருச்சிப்பதற்கு உரியவனாகவாகின்றான். இவ்வாறு அங்கநியாசஞ்செய்தபின் அந்தரியாகஞ் செய்ய வேண்டும்.

 

அந்தரியாகம்

அஃதாவது இருதயத்துள் சிவனையருச்சிக்கத்தக்க திவ்ய இரத்தினமயமான மண்டபத்தை மனத்தால் கற்பித்து அம்மண்டபத்தில் சிவனையருச்சிப்பதற்கு உபயோகமான சகல திரவியங்களையும் மனத்தால் கொண்டுவைத்து அந்தத்திரவியங்களைச் சுத்திசெய்து துவாதசாந்தத்திலிருக்கும் சந்திரமண்டலத்திலிருந்து ஒழுகுகின்ற அமிருததாரையினால் அருக்கிய பாத்தித்தை நிரப்பி அதன் சுத்தியையுஞ் செய்து துவாரபால பூஜை செய்து பின்னர்க் கூறப்படுமுறையில் விநாயகர் குரு என்னுமிவர்களை நமஸ்கரித்தல் அனுக்ஞை பிரார்த்தனை என்னுமிவைகளை முன்னிட்டு நாபியிலிருக்கும் சொர்ணமயமான வருணத்தையுடைய கிழங்கிலிருந்து உண்டான நீலவர்ணமான தாமரைத் தண்டையும், மிகவும் வெண்மையான வருணத்தையுடைய எட்டுத் தளங்களையும் உடைய இருதயகமலத்தின் கர்ணிகையிலிருக்கும் குண்டலினி சத்தியாகிய பிந்துசொரூபமான பீடத்தில் கட்டைவிரல்களால் காதுகளை மூடுதலாலறியப்படும் நாதரூபமாயும், தீபத்தின் சிகையின் வடிவம்போல் வடிவத்தையுடையதாயும் இருப்பதாக லிங்கத்தைத் தியானித்து பின்னர்க் கூறப்படுமாறு பீடத்தில் ஆதாரசத்தி முதல் சிவசத்திஈறாக சிவாசனத்தை அருச்சித்து இலிங்கத்தில் சிவமூர்த்தியையும் வித்தியாதேகத்தையும் அருச்சித்து அதில் ஆவாகனமுதலிய கிரமமாகப் பரமசிவனைத்தியானித்து உள்ளே செய்யக்கூடிய சமஸ்காரங்களாலருச்சித்து துவாதசாந்தத்திலிருக்கும் மிகுதியான அமிருததாரையால் அபிஷேகஞ்செய்து ஆடையாபரண முதலியவற்றாலும் வைராக்கியமாகிய சந்தனத்தாலும் அலங்கரித்து கொல்லாமையாகிய புஷ்பத்தை அர்ப்பணஞ் செய்கிறேனென்று சொல்லிக்கொண்டு கொல்லாமை, இந்திரியநிக்கிரகம், பொறுமை, தானம், ஞானம், தபசு, சத்தியம், அன்பு என்னும் எட்டுப் புட்பங்களாலும் அருச்சிக்க வேண்டும்.

பின்னர் மனமென்னும் பாத்திரத்தில் பிராணனென்னும் அக்கினியையும், அகங்காரமென்னும் தூபச்சுவாலையையும் கற்பித்து தூபத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். சிவஞானத்தையே தீபமாகக் கற்பித்துச் சமர்ப்பிக்க வேண்டும். விடயங்களினின்றும் திருப்பப்பட்ட மனதை நைவேத்தியமாகப் பாவித்து சமர்ப்பிக்க வேண்டும். சுழுமுனையின் மார்க்கமாகப் பிராணனுடைய போக்குவரவை ஜபமாகப் பாவிக்கவேண்டும். பிருதிவி முதலிய ஐந்து மண்டலங்களின் தாரணையினால் ஸ்திரமாகச் செய்யப்பட்ட சதாசிவருடைய அவயவஙகளைத் தியானத்தால் செய்யப்பட்ட அந்தந்த அவயவத்திற்கு உரியதான ஆபரணங்களாலலங்கரிக்க வேண்டும். சிவனே நானென சிவசாமயத்தைப் பாவித்துச் சிவனிடம் தன்னை நிவேதனஞ் செய்யவேண்டும்.

அல்லது அபிஷேகஞ் செய்தபின்னர் கந்தம், சப்தம், பரிசம், உருவம், இரதமென்னும் தன்மாத்திரைகளை சந்தனம், புஷ்பம், தூபம் தீபம், வைவேத்தியங்களாகத் தியானித்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்கு முறை வருமாறு:-

முன்னர் மூலமந்திரத்தை உச்சரித்து ஹ்லாம் சத்தியோஜாதாயசிவாய கந்ததன்மாத்திராத்மகம் சந்தனம் சமர்ப்பயாமி, ஹெளம் ஈசானாயசிவாய சப்ததன்மாத்திராமகம் புஷ்பம் சமர்ப்பயாமி, ஹ்யைம் தத்புருஷாய சிவாய பரிசதன்மாதிராத் மகம் தூபம் சமர்ப்பயாமி, ஹ்ரூம் அகோராய சிவாய ரூபதன்மாத்திராத்மகம் தீபம் சமர்ப்பயாமி, ஹீம் வாமதேவாய சிவாய இரசதன் மாத்திராத்மகம் நைவேத்தியம் சமர்ப்பயாமி யென்று சொல்லிக்கொண்டு பாவனை செய்ய வேண்டும்.

பின்னர் கைகழுவுதல் முகவாசங்கொடுத்தல் என்பவற்றைப் பாவித்து சத்துவ இரஜஸ்தமோ குணாத்மகம் தாம்பூலம் சமர்ப்பயாமி என்று சொல்லிக்கொண்டு அவ்வாறே பாவனை செய்ய வேண்டும்.

பின்னர் ஆரத்தி செய்து, அதன் பின்னர் புத்தியிலிருக்கும் வாசனாரூபமான தருமாதி எட்டுக் குணங்களும் கண்ணாடி முதலிய எட்டு மங்கள திரவியமாயும், பலவிதமான மனோவிருத்திகளை நிருத்த ரூபமாயும், சத்தத்தை வாத்திய ரூபமாயும், தொனியைக் கான ரூபமாயும், சுழுமுனா நாடியைத் துவஜமாயும், பிராணன் முதலிய வாயுக்களைச் சாமரங்களாயும், அகங்காரத்தை யானையாயும், தேகத்தைத் தேராயும், மனதைக் கடிவாளமாயும், புத்தியைச் சாரதியாயும், ஏனையவெல்லாம் உபரணங்களாயும் என்னால் தயார் செய்யப்பட்டனவென்று தியானிக்க வேண்டும்.

இவ்வாறு தன்னைச் சார்ந்த புத்தி, மனம், பிராணன் முதலியவற்றைச் சிவபூஜைக்கு உபகரணங்களாகச் சமர்ப்பித்து பின்னர்க் கூறப்படுமாறு ஆவரணபூஜையையும் அப்பொழுது செய்யவேண்டும்.

அதன்பின்னர் பிரதக்ஷிண நமஸ்காரங்களால் சிவனை அனுக்கிரகஞ் செய்வதற்கு நோக்கமாக இருக்கும்படி செய்து அவருடைய ஆணையால் அக்கினி காரியத்தைச் செய்ய வேண்டும்.

 

அகத்து அக்கினி காரியம்

அஃதாவது நாபியில் மூன்று மேகலையையுடைய குண்டமும் அதில் இயல்பாகவே அக்கினி இருப்பதாகவும் பாவித்து அந்த அக்கினியை அஸ்திரமந்திரத்தால் சுவாலிக்கும்படி செய்து அந்த அக்கினியில் சிறிது தணலை இராக்ஷச அம்சமாகப் பாவித்து அதை நிருதி கோணத்தில் போட்டுவிட்டு, குண்டத்திலிருக்கும் அக்கினியை நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகள் செய்து, அந்த அக்கினியை சிவாக்கினையாகப் பாவிப்பதற்கு ரேசகவாயுவால் அந்த அக்கினியைச் சைதன்னிய சொரூபமாக இருதயத்தையடையும்படி செய்து, ஆங்கிருக்கும் ஞானாக்கினியுடன் சேர்த்து, சுழுமுனாநாடி வழியாகத் துவாதசாந்தத்தை யடையும்படி செய்து, ஆங்கிருக்கும் பரமசிவனுடன் சேர்த்து அவருடைய தேஜஸ் கூட்டத்தால் பொன்வருணமாகவும், எண்ணிறந்த சூரியனுக்குச் சமமான பிரபையையுடையதாகவும் பாவித்து ஞானக்கினி ரூபமான அதைத் திருப்பி நாபிகுண்டத்தில் தாபிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் வேறு சுத்தி இல்லாமலே சிவாக்கினியாக ஆகின்றது.

அவ்விடத்தில் சிவாக்கினியை சிவந்த வர்ணமுடையதாகவும், ஐந்து முகங்களையுடையதாகவும், பத்துக் கைகளையுடையதாகவும், சதாசிவத்திற்குச் சமமான ஆயுதத்தையுடையதாகவும், தியானித்து, அந்த அக்கினியின் ஹிருதய கமலத்தில் ஆசனம், மூர்த்தி, வித்தியாதேகங்களை நியாசஞ்செய்து, சிவனை ஆவாகனஞ் செய்து, சுழுமுனையாகிய சுருவத்தால், துவாதசாந்தத்திலிருக்கும் அமிருததாரையாகிய நெய்யை, மூலமந்திரத்தால் நூற்றெட்டு அல்லது இருபத்தெட்டு அல்லது எட்டு முறையாவது ஓமஞ் செய்து, சத்திமண்டலத்தினின்றும் பெருகின அமிருதமாகிய நெய்யால், பூரணமான நாபியிலிருக்கும் தாமரைக் கிழக்கின் அம்சத்தையுடைய தண்டாலும், இருதயகமலத்தாலும், வியாபிக்கப்பட்ட சுழுமுனாநாடியை உள்ளேயிருக்கும் சுருக்காகப் பாவித்து அதனால் ஹாம் சக்தயே வெளஷட் என்னும் மத்திரத்தையுச்சரித்துக் கொண்டு பூரணாகுதி செய்து, அதன் பின்னர் ஓமத்தால் திருப்தியடைந்த சிவபெருமானை நாடிவழியாக இருதயத்திலிருக்கும் தாமரையில் பூசிக்கப்பட்ட சிவனிடத்தில் சேர்த்து எட்டுப் புட்பத்தாலருச்சித்துப் பூசையை முடிக்க வேண்டும்.

அதன்பின்னர் புருவநடுவில் எல்லா அவயவங்களாலும் பரிபூரணராயும், சுத்தமான தீபத்தின் சொரூபத்தையுடையவராயுமிருக்கும் சிவனை சகளநிட்களரூபமாகத் தியானித்து, பூசித்து, பூசிக்கப்படுபவன் பூசிப்பவனென்று இருதன்மையால் வேறுபட்ட சிவனே நானென்னும் சிவோகம்பாவனையால் மனதை சமாதியினிறுத்த வேண்டும்.

 

தானசுத்தி

அஃதாவது இருதயத்தில் கைகளை உயரே மேல்நோக்கியவையாகச் செய்து, ஹ: அஸ்திராய ஹும்பட்என்னும் மந்திரத்தால் மூன்று தாளஞ்செய்து, நொடியில் பத்துத் திக்குக்களிலுமுள்ள விக்கினங்களை போக்கி, அஸ்திரமந்திரத்தால் சொலிக்கக்கூடிய அக்கினி வருணமான கோட்டையைச் செய்து, பின்னர் வெளியில் ஹைம் கவசாய நம: என்னும் மந்திரத்தால் வலதகை சுட்டுவிரலைச் சுற்றிக்கொண்டு மூன்று அகழிகளைச் செய்து, ஹாம் சக்தயே வெளஷட் என்னும் மந்திரத்தால் சத்திசம்பந்தமான தேஜசை மேலும் கீழும் பாவனை செய்து மஹா முத்திரையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு விக்கினங்களை நீக்குவதின் பொருட்டு தானசுத்தி செய்த பின்னர் திரவியசுத்தி செய்ய வேண்டும்.

 

திரவியம் சேகரிக்கும் முறை

அஃதாவது பின்னர்க் கூறப்படும் யாகத்திற்கு உபகரணங்களான எல்லாத் திரவியங்களையும் சிவனுடைய இடது பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆடையினால் பரிசுத்தமான சுத்தஜலத்தால் நிரம்பப் பெற்ற ஜலபாத்திரத்தை வலதுபக்கத்தில் வைத்துக்கொண்டு ஆத்மபூஜை ஆவரணபூஜைகள் செய்வதின் பொருட்டுச் சேகரித்துள்ள கந்தம், புஷ்பம் என்னுமிவைகளைச் சிவபிரானுக்காகச் சம்பாதிக்கப்பட்ட திரவியங்களுக்கு வேறாகவைத்துக் கொண்டு, அருக்கியபாத்திரம், பாத்தியபாத்திரம், ஆசமனீயபாத்திரங்களில் ஜலங்களைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

அருக்கியம் நான்கு வகைப்படும். அவையாவன :- சாமான்னியார்க்கியம், விசேஷார்க்கியம், நிரோதார்க்கியம், பராங்முகார்க்கியம் என்பன.

துவாரபாலர்கள், ஆவரணதேவர்கள், ஆகிய இவர்களுக்குச் சாமான்னியார்க்கிய ஜலத்தை உபயோகித்துக் கொள்ளல் வேண்டும். சிவபெருமானுக்கு அர்க்கியகாலங்களில் விசேஷார்க்கியத்தையும், நிரோதசமஸ்கார காலங்களில் நிரோதார்க்கியத்தையும், விசர்ச்சன காலத்தில் பராங்முகார்க்கியத்தையும் உபயோகித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நான்கு அர்க்கியங்களுக்கும் நான்கு பாத்திரங்கள் வேண்டும். அவை பத்து, அல்லது ஐந்து, அல்லது இரண்டரை, அல்லது சக்திக்குத் தகுந்தவாறு பலக்கணக்கான நிறையுடையவையாக இருக்க வேண்டும். சுவர்ணம், வெள்ளி, செம்பு, என்னுமிவற்றுள் யாதானுமோர் திரவியத்தால் செய்யப்பட்டிருத்தல் ++ வேண்டும். அவை ஐந்து விரற் கணு உயரமுள்ளவையாகவும், அதே அகலமுள்ளவையாகவும், வட்டமாகவாவது சதுரமாகவாவது இருக்க வேண்டும். வெளியில் எட்டுத் தளமுடைய தாமரையினால் அடையாளஞ் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு விரல் அளவுள்ள விளிம்பு உடையவையாகவும், விரலின் நான்கிலொரு பங்கு கனமுள்ளவையாகவுமிரக்க வேண்டும். கூறப்பட்ட அளவில் பாதி அளவுள்ளதாகவேனும், அதனினும் பாதி அளவுள்ளதாகவுமிருக்கலாம்.

( ++ சுவர்ண முதலியன கிடையாவிடில் பளிங்கு, தேங்காய்க்குடுக்கை, கொம்பு, சிலை, கட்டைகளாலாவது, புதிய மண்பாத்திரங்களினாலாவது புரசு, தாமரை, வாழை இலை முதலியவற்றாலாவது அருக்கியபாத்திரம் செய்து கொள்ளல் வேண்டுமென்று சில பாடபேத முண்டு.)

பாத்தியம், ஆசமனம், பஞ்சகவ்வியம், பஞ்சாமிருதம், கந்தம், தூபம், தீபம் என்னுமிவற்றிற்கான பாத்திரங்களும், மணி முதலியவைகளும், மேலே கூறப்பட்ட பத்துப் பலமுதலிய அளவுள்ளவையாகவே செய்யப்படல் வேண்டும். அவற்றுள் பாத்திய பாத்திரமானது ஆறங்குல அகலமுடையதாயும், நாலங்குல உயரமுடையதாயும், நாலங்குல அகலமுடைய காலுடன் கூடியதாயும், நாலங்குல அளவு மூக்குடையதாயும், ஓரங்குல அளவு விளிப்புடையதாயும் இருக்க வேண்டும். இந்தப் பிராணத்துள் பாதியாகவேனும் அதனினும் பாதியாகவேனுமிருக்கலாம்.

பாத்திய ஜலத்தை நிரப்பத்தக்க பாத்திரமானது எட்டங்குல உயரமுடையதாயும், பதினாறங்குல அகலமுடையதாயும், நாலங்குல உயரமும் எட்டங்குல அகலமுமுடைய பாதத்துடன் கூடியதாயும், ஓரங்குல விளிம்புடையதாயும், கூறப்பட்ட அளவில் பாதி அளவுடையதாகவேனும், அல்லது அதனினும் பாதி அளவுடையதாகவேனும், வட்டமான கைபிடிகளோடுகூடிய இரண்டுபக்கத்தையுடையதாயும் இருக்க வேண்டும்.

ஆசமன பாத்திரமானது பன்னிரண்டங்குல உயரமுடையதாயும், பன்னிரண்டங்குல அளவுள்ள வயிறையுடையதாயும், ஆறங்குல அகலமும் ஆறங்குல உயரமுமுள்ள காலுடன் கூடியதாயும், இரண்டங்குலம் அல்லது மூன்றங்குல உயரமுடைய கழுத்தையுடையதாயும், ஓரங்குலவிளிம்புடையதாயும், மூன்றங்குல அகலமான முகமுடையதாயும், இஷ்டமான அளவுடைய மொட்டின் வடிவான மூடியுடன் கூடியதாயும், நான்கு அங்குல அளவில் மூன்று வாய்ரூபமான, வால்நெல்லளவுள்ள துவாரத்துடன், அடிமுதற்கொண்டு முறையே குறைந்த அளவுள்ள மூக்குடையதாயுமிருக்க வேண்டும். இந்த அளவில் பாதி அளவுள்ளதாகவேனுமிருக்கலாம்

அல்லது பாத்தியபாத்திரம் ஆசமனபாத்திரங்கள் அர்க்கிய பாத்திரம்போல வட்டமாக இருக்க வேண்டும். ஆசமனபாத்திர ஜலத்தை விடக்கூடிய பாத்திரமும், பாத்தியஜலத்தை விடக்கூடிய பாத்திரம்போலிருக்க வேண்டும்.

அர்க்கியபாத்திரம் பாத்தியபாத்திரம் ஆசமனபாத்திரங்களை வைக்கத்தக்க தாங்கலான ஆதார இயந்திரங்கள் முக்காலி ரூபமாயும், மூன்று முகமுடையதாயும், மூன்று கால்களையுடையதாயும், எட்டங்குல உயரமுடையதாயும், பாதத்திற்குமேலும் வளையத்திற்குக் கீழுமான இடத்தில் சிங்கமுகமாக அடையாளமுடையதாயும் இருக்க வேண்டும்.

சுவர்ண முதலியவை கிடையாவிடில் பாத்திய முதலிய பாத்திரங்களையும் அர்க்கிய பாத்திரம் போலவே சிலை மரம் இலை முதலியவற்றால் செய்ய வேண்டும்.

அவற்றுள், சாமான்னியார்க்கியத்திற்கு எள்ளும் அரிசியும் திரவியங்களாகும். விசேஷார்க்கியத்திற்கு ஏலம், லவங்கம், கற்பூரம், திம்பு, சாதிக்காய், முறமென்னும் கந்ததிரவியம், நெல்லு, எள்ளு என்னுமிவைகளாவது அல்லது ஜலம், பால், தருப்பை நுனி, அரிசி, புஷ்பம், எள்ளு, வால்நெல்லு, கடுகு என்னுமிவைகளாவது, அல்லது தருப்பை, அறுகு, நெல், எள்ளு, பால், ஜலம், கடுகு என்னுமிவைகளாவது, அல்லது வால்நெல்லு, கடுகு இல்லாமல் தருப்பை முதலிய ஆறும், தருப்பை, கடுகு, ஜலம், எள்ளு என்னும் நான்கும், அறுகு, கற்பூரம், குங்குமமென்னும் மூன்றுமாவது திரவியங்களாகும்.

நிரோதார்க்கியத்திற்கு தருப்பை, அறுகு, வால்நெல்லு, அரிசி, கடுகு என்னும் ஐந்தும் திரவியங்களாகும்.

பராங்முகார்க்கியத்திற்கு மேற் கூறப்பட்ட ஐந்துடன் எள்ளுச் சேர்த்து ஆறும் திரவியங்களாகும்.

பாத்தியத்திற்கு அறுகு, சந்தனம், கடுகு, விலாமிச்சவேர், குருவேர், குங்குமம் என்னும் ஆறும் திரவியங்களாகும். குங்குமமின்றி ஐந்தும் திரவியங்களெனவும்படும். அல்லது அறுகு, கடுகு, சந்தனம், விலாமிச்சவேர் என்னும் நான்குமாவது, அல்லது குருவேர், சந்தனம், விலாமிச்சவேர் என்னும் மூன்றுமாவது திரவியங்களாகும்.

ஆசமனத்திற்கு ஏலம், லவங்கம், கற்பூரம், சாதி, கோட்டம், திம்பு, கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய், சந்தனம், விலாமச்சைவேர் என்னும் பதினொன்றுமாவது, ஏலம், லவங்கம், கற்பூரம், திம்பு, முறம், சாதிக்காய் என்னும் ஆறுமாவது, அல்லது ஏலம், லவங்கம், கற்பூரம், குருவேர், சாதிக்காய் என்னும் ஐந்துமாவது, அல்லது ஏலம், லவங்கம், கற்பூரமென்னும் மூன்றுமாவது திரவியங்களாகும்.

அர்க்கியத்திற்காக ஏற்பட்ட ஏலமுதலிய திரவியங்கள் உத்தமம் மத்திமம் முதலிய பேதங்களால எண்பது, நாற்பது இருபது, பத்து, ஐந்து நெல் அளவுள்ளவைகளாக இருக்க வேண்டும்.

திரவியஞ் சேகரிக்குமுறை முடிந்தது.

 

பாத்தியம் முதலியவற்றின் பூஜை

பின்னர் பாத்தியம், ஆசமனீயம் சாமான்னியார்க்கியம், விசேஷார்க்கியம், நிரோதார்க்கியம், பராங்முகார்க்கியம் என்னும் இவற்றின் பாத்திரங்களின், முக்காலிகளையும், ஈசுவரனுடைய சன்னிதியில் இடது பக்கம் முதல் முறையாக வைத்துக் கொண்டு முக்காலிகளின் பாதங்களில் பிரம, விட்டுணு, உருத்திரர்களையும், அதன் வளையங்களில் இடை என்னும் பெயருடைய ஆதாரசக்தியையும் அருச்சித்து பாத்திய முதலிய பாத்திரங்களை அஸ்திரமந்திரத்தால் சுத்தி செய்து முக்காலிகளில் வைத்துக்கொண்டு அஸ்திரமந்திரம் அல்லது வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தை உச்சரித்து, சுத்தஜலத்தால் பாத்திரங்களை நிரப்பி, கவசமந்திரத்தால் பாத்திய முதலியவற்றிற்குரிய திவியங்களை அந்தந்தப் பாத்திரங்களில் இடவேண்டும். திரவியங்கள் கிடையாவிடில் சுத்த ஜலத்தை மாத்திரம் நிரப்பவேண்டும்.

பின்னர் பாத்திய முதலிய பாத்திரங்களை விந்துத்தானம் வரை தூக்கி விந்துத்தானத்திலிருந்தும் பெருகும் அமிருததாரைமயமாயிருக்கிற கங்கை முதலிய எல்லாத் தீர்த்தஜலத்தாலும் நிரம்பப் பெற்றவையாகப் பாவித்து யந்திரங்களின்மேல் தாபிக்க வேண்டும்.

அல்லது விந்துத்தானத்திலிருந்து அங்குசமுத்திரையால் திவ்வியமான அமிருத சொரூபமாயிருக்கும் கங்கை முதலிய தீர்த்தத்தை இழுத்துச் சாங்காரமுத்திரையால் அத்தீர்த்தத்தையெடுத்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தை உச்சரித்து உத்பவமுத்திரையால் யந்திரங்களின் மத்தியிலிருக்கும் பாத்திய முதலிய பாத்திரங்களில் விட வேண்டும். பின்னர் விசேஷார்க்கிய ஜலத்தில் சிவன், ஆசனமூர்த்தி, பஞ்சப்பிரம்ம மந்திரங்கள், வித்தியாதேகம், நேத்திரமந்திரம், மூலமந்திரம், அங்கமந்திர மென்னுமிவற்றை நியாசஞ் செய்து மூலமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு கந்தம், புஷ்பம், அக்ஷதைகளால் பூஜித்து; பஞ்சப் பிரம்ம மந்திரம், அங்கமந்திரம், மூலமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்யவேண்டும். மேலே கூறியவாறு நியாசம் பூசைகளைச் செய்யாமலும் பஞ்சப்பிரம்ம மந்திரம், அங்கமந்திரம், மூலமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்யலாம்.

நிரோதார்க்கிய ஜலத்தைப் பஞ்சப்பிரம்ம மந்திரங்களாலும், பராங்முகார்க்கிய ஜலத்தை அங்கமந்திரங்களாலும், சாமான்னியார்க்கிய ஜலத்தை அஸ்திரமந்திரத்தாலும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

பாத்தியம் ஆசமனங்களைப் பஞ்சப்பிரம்ம மந்திரங்களாலாவது, அல்லது அங்கமந்திரங்களாலாவது, அஸ்திரமந்திரத்தாலாவது அபிமந்திரணஞ் செய்யலாம்.

பின்னர் அஸ்திரமந்திரத்தால் திக்குபந்தனஞ் செய்துகொண்டு கவசத்தால் அவகுண்டனஞ் செய்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சத்திமந்திரத்தால் தேனுமுத்திரை காட்டி அமிருதீகரணஞ் செய்யவேண்டும். பாத்தியமுதல் பராங்முகார்க்கியம் வரையும் முக்காலியை வைப்பதுமுதல் அமிருதீகரணம் வரையுமுள்ள ஒவ்வொன்றும் தனித்தனியாகவாவது அந்தந்தச் சமயத்தை அனுசா¤த்துச் சேர்த்தாவது செய்யப்படல் வேண்டும்.

பின்னர் பராங்முகார்க்கியத்தின் சமீபத்தில் சங்கிற்குப் பூஜை செய்ய வேண்டும். ஒருபடி ஜலம் கொள்ளும்படியாயும், அரைப்படி ஜலங்கொள்ளும்படியாயும், ஒரு உழக்கு ஜலம் கொள்ளும்படியாயும் உள்ள சங்குகள் உத்தமம், மத்திமம், அதமமென்னும் பேதத்தால் முத்திறப்படும். அவ்வாறே அடியும் முடியும் சமமாயுள்ள சங்கு ஆண் சொரூபமாயும், பின்பக்கம் பருத்திருப்பது பெண் சொரூபமாயும், நுனிபருத்திருப்பது அலிரூபமாயும் அறியப்படும்.

சங்கார்க்கியத்தின் அடியில் பூமியும், வளையத்தில் சூரியனும் வயிற்றில் விஷ்ணுவும், இருபக்கத்தில் சந்திரனும், தாரையில்அகோரமூர்த்தியும், முகத்தில் ஏழுதீர்த்தங்களும் இருக்கின்றன. ஆயினும், சங்கத்தின் அடிமுடிகளின் வெளிப்பங்கங்கள் எலும்புகள் போல் அசுத்தமாதலின், அவை சுவர்ணத்தினாலும் இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்படல் வேண்டும். இத்தகைய சங்கைச் சாம்பலினால் தேய்த்து அஸ்திரமந்திரத்தால் கழுவி பூசிக்கப்பட்ட முக்காலியில் வைத்து விசேஷார்க்கிய ஜலம்போல் பூஜைசெய்து தன்னுடைய சிரசில் அந்த ஜலத்தால் மூன்றுமுறை புரோக்ஷித்துக் கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு அநேகம் பாத்திரங்களைச் சம்பாதித்து அவற்றைப் பூஜை செய்ய முடியவில்லையாயின், நிரோதார்க்கியம் பராங்முகார்க்கியங்களை நிரோதாக்கிய ஜலத்தினாலேயே பூஜைசெய்யவேண்டும். விசேஷார்க்கிய ஜலத்தாலும் மூன்று அர்க்கிய பாத்திரங்களையும் பூசிக்கலாம்.

இவ்வாறு பாத்தியம் ஆசமனமென்னும் இரண்டனையும் விசேஷார்க்கியத்தாலேயே செய்யலாம். விசேஷார்க்கியத்திற்கும் வேறு பாத்திரம் கிடையாவிடில் சங்கின் ஜலத்தினால்லேயே பாத்தியம், ஆசமனம், விசேஷார்க்கியம், நிரோதார்க்கியம், பராங்முகார்க்கியம் என்னும் இவற்றைப் பூசிக்கலாம். சாமான்னியார்க்கியத்தை மாத்திரம் ஆவரண தேவதைகளின் பொருட்டு வேறு பாத்திரத்திற் பூசிக்க வேண்டும்.

இவ்வாறு பாத்திரங்களைச் சுருக்கிப் பூசிக்கக்கூடிய முறையில் எதன் ஜலத்தால் வேறு உபசாரம் செய்யப்படுகின்றதோ, அந்தப் பாத்திரத்தையே எடுத்துக்கொண்டு அதனுடைய சமஸ்காரங்களைச் செய்ய வேண்டும். பிறிதொன்றின் சமஸ்காரமும் **பரிதியில் யூபதருமம் போல் விரோதமின்றிச் செய்யப்படல் வேண்டும்.

( ** பதிரி என்பது யாகமேடை. யூபமென்பது யாகப்பசுவைக்கட்டும் தறி. இந்தத் தறிவை ஆடையால் முழுதும் மூடவேண்டும். இந்தத் தறியைத் தொட்டுக்கொண்டு கானஞ் செய்ய வேண்டும்மென்றவிடத்து ஒன்றுக்கொன்று முரணாதவாறு தொடுவதற்கான இடத்தை மாத்திரம் விலக்கி ஏனைய இடங்களை ஆடையால் மூடவேண்டுமென்று பொருள் கொள்ளல் வேண்டும். அவ்வாறே இவ்விடத்தில் ஒவ்வொரு அர்க்கியஜலமும் தத்தம் காரியங்களுக்காக ஏற்பட்டாலும் சுருக்கிச் செய்யும் முறையில் ஒரு பாத்திரத்தில் வேறு சமஸ்காரத்தைச் செய்யும்பொழுது அதற்குரிய பாகம் அதிலிருக்கின்றது என்தாம்.)

விசுவம், அயநம், கிரகணங்களில் சுருக்கிச் செய்யும் முறையைக் கொள்ளாது தனித்தனி செய்யும் விரிவான முறையைக் கொள்ள வேண்டும்.

பாத்திரமுதலியவற்றின் பூசை முடிந்தது.

 

பஞ்ச கவ்விய முறை

பின்னர் பஞ்சகவ்வியம் செய்யவேண்டும். அது செய்யும் முறையாவது, ஈசுவரனுடைய கிழக்குப் பாகத்திலாவது அல்லது ஈசானபாகத்திலாவது ஒன்று அல்லது இரண்டு கைமுழ அளவு நான்கு முக்குச்சதுரமாகக் கோமயத்தால் மெழுகி, கிழக்குநுனியாகவும் வடக்குநுனியாகவும் நான்கு நூல்களால் தனித்தனி ஒரு சாணளவுள்ள ஒன்பது கோஷ்டங்களைக்கீறி, ஒவ்வொரு கோஷ்டத்திலும், குருணியாவது, அதற்குப் பாதி அளவுள்ள நெல்லையாவது, அதனினும் பாதி அளவுள்ள அரிசியையாவது, அல்லது தருப்பையையாவது பரப்பி, வடக்கு முகமாக இருந்துகொண்ட நான்கு திக்கிலும் வடக்கு நுனியாகவும் கிழக்கு நுனியாகவுமுள்ள ஐந்து தருப்பைகளைப் பரப்பி, நான்கு பக்கங்களிலும் புஷ்பங்களால் அலங்காரஞ்செய்து, சிவதத்துவாய நம:, சதாசிவதத்துவாய நம:, வித்தியாதத்துவாய நம:, புருஷதத்துவாய நம:, காலதத்துவாய நம:, பிருதிவி தத்துவாய நம:, ஜல தத்துவாய நம:, வாயு தத்துவாய நம:, பிரகிருதி தத்துவாய நம: என்று சொல்லிக்கொண்டு, நடு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, ஆக்கினேயம், நிருதம், மாருதம், ஈசானம் என்னும் ஒன்பது கோஷ்டங்களைப் பூசித்து, சுவர்ணபாத்திரம், வெண்கலபாத்திரம், அல்லது உடையாததாயும் கருப்பு நிறமில்லாததாயுமுள்ள மண் பாத்திரங்களையாவது சுத்தஞ் செய்து ஒன்பது கோஷ்டங்களிலும் வைத்து, சுப்பிரதிஷ்டபாத்திராய நம:, சுசாந்தபாத்திராய நம:, தேஜோமயபாத்திராய நம:, ரத்தினோதகபாத்திராய நம:, அமிருதபாத்திராய நம:, வியக்தபாத்திராய நம:, சூரியபாத்திராய நம:, சம்யுக்தபாத்திராய நம:, அவ்வியக்தபாத்திராய நம: என்று சொல்லிக்கொண்டு, மேலே கூறியவாறு கோஷ்ட முறையாகப் பாத்திரங்களைப் பூசித்து, தாம்பிரவர்ணமான பசுவின் பாலை மூன்று உழக்கு அளவு நடுப்பாத்திரத்திலும், வெண்மைவர்ணமான பசுவின் தயிரை இரண்டு உழக்கு அளவு கிழக்குப் பாத்திரத்திலும், கபிலவர்ணமான பசுவின் நெய்யை ஒரு உழக்கு அளவு தெற்குப் பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் நீரை இரு அஞ்சலிகள் கொள்ளும் அளவு வடக்கு பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் சாணத்தை ஒரு உழக்கு அளவு எடுத்து ஐந்து உழக்கு நீர் சேர்த்து ஆடையினால் சுத்தி செய்து மேற்குப் பாத்திரத்திலும், விளாம்பழ அளவாவது அல்லது அதற்க் பாதி அளவாவது, அல்லது அதனினும் பாதி அளவாவது, அரிசி, நெல்லிக்கனி, மஞ்சளென்னுமிவைகளையரைத்து எடுத்து ஆக்கினேயம், நிருதம், வாயு என்னுமிந்த மூலைகளிலுள்ள பாத்திரங்களிலும், முப்பத்தாறு, அல்லது இருபத்தைந்து, அல்லது பன்னிரண்டு தருப்பைகளைச் சேர்த்து நீரில் போட்டு, முப்பத்தாறு முதலாகக் கூறப்பட்ட அளவில் பாதியாகிய வேறு தருப்பைகளால் செய்யப்பட்டதாயும், பிரதக்ஷிணமாக வாயுதிக்கில் நின்று சுற்றப்பட்டதாயும், ஒரு கையளவாகவாவது, அல்லது ஒரு ஒட்டையளவாகவாவது உள்ளதாயும், இரண்டங்குல அளவுள்ள முடிச்சுடனும், நான்கு அங்குல அளவுள்ள நுனியுடனும் கூடின கூர்ச்சத்தைச் செய்து, அதை ஒரு மரக்கால் அளவுள்ளதும், சந்தனம், அறுகு என்னுமிவற்றுடன் கூடினதுமான நீரில் போட்டுக் குசோதகஞ் செய்து, ஈசானகோண பாத்திரத்தில் இருதயமந்திரத்தால் அந்த நீரை விட்டு, பால்முதல் கோமயம் ஈறாகவுள்ள பஞ்சகவ்வியங்களை முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒருமுறை ஈசானாதி மந்திரங்களாலும், அரிசிமாவை இருதயமந்திரங்களாலும், நெல்லிமாவை சிரோமந்திரத்தாலும், மஞ்சளைக்கவச மந்திரத்தாலும், குசோதகத்தை ஆறுமுறை ஆவர்த்தி செய்த பஞ்சப் பிரம்மமந்திரத்தாலும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

அதன்பின்னர், கோமயத்தைக் கோசலத்திலும், அவ்விரடனையும் நெய்யிலும், அம்மூன்றனையும் தயிரிலும், அந்நான்கினையும் பாலிலும் இருதயமந்திரத்தால் சேர்த்து, அதிலேயே குசோதகத்தையும் மூலமந்திரத்தால் சேர்க்கவேண்டும். பின்னர் பஞ்சப்பிரம மந்திரம் ஷடங்கமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணமமும், கவசமந்திரத்தால் அவகுண்டனமுஞ் செய்து, தேனுமுத்திரை காட்டி, கந்தம் புஷ்பங்களால் பூசித்து, அஸ்திரமந்திரத்தால் தூபதீபங்காட்டி, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

பஞ்சகவ்வியமுறை முடிந்தது.

 

பஞ்சாமிருதம்

பின்னர், பஞ்சாமிருதஞ் செய்ய வேண்டும். இதன் பூசையானது பஞ்சகவ்வியபூசைக்குக் கிழக்குப் பக்கத்தில் செய்யவேண்டும். பாத்திரபூசை முடிவாக எல்லாப் பூசைகளையும் முன்போல் செய்க. நடுமுதல் மேற்கு முடிவாகவுள்ள பாத்திரங்களில் பால், தயிர், நெய், தேன், சருக்கரை என்னுமிவற்றை தனித்தனி ஒருபடியாவது, அல்லது முக்காற்படியாவது, அல்லது அரைப்படியாவது வைத்து அக்கினிதிக்கு முதலிய கோணங்களில் சத்திக்குத் தக்கவாறு வாழை, பலா, மா என்னுமிவற்றின் பழங்களையும், ஈசான கோணத்தில் குசோதகம் போல் கந்தோதகத்தையும் வைத்து, அந்தந்தப் பாத்திரத்திலிருக்குக்கக் கூடியவற்றிற்கு முன்போல் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும். சருக்கரை கோமயம் போல் ஜலத்துடனேயிருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தல் மாத்திரம் கிடையாதென்பது ஒரு முறை. எல்லாவற்றையும் பஞ்சகவ்வியம் போல் சேர்க்கலாமென்பது மற்றொரு முறை.

எல்லாவற்றையும் சேர்க்கும் முறையாவது, பஞ்சகவ்வியத்துக்குப்போல் நெல் பரப்பிய தரையில் கிழக்கு முதலிய திக்குக்களிலும் நடுவிலும் ஐந்து கோஷ்டங்களையும், ஈசான திக்கில் எட்டுத்தளங்களையுடைய தாமரையையும் கீறி, சிவம், நியதி, காலம், வியக்தம் அவ்வியக்தம், சுமங்களை என்னும் பெயர்களால் நடு கிழக்கு முதலாக அந்த ஆறு கோஷ்டங்களையும் பூசித்து, அவற்றில் ஆறு பாத்திரங்களை அமிருதல், சோமம், வித்தை, இரத்தினோதகம், சுதாப்பிரீதம், சுரப்பிரீதம் என்னும் பெயர்களால் பூசித்து, மேலே கூறியபடி முறையே நடு முதலிய தானங்களிலிருக்கும் பாத்திரங்களில் பஞ்சாமிருதங்களையும், ஈசான கோணத்திலிருக்கும பாத்திரத்தில் தேங்காய் ஜலத்தையும் வைத்து, அவற்றைப் பஞ்சகவ்வியம் குசோதகத்திற்குப் போல் அபிமந்திரணஞ் செய்து, சருக்கரை முதலியவற்றைக் கோமய முதலியவற்றைப் போல் பாலில் சேர்த்துக் குசோதகத்தை எவ்வாறு பஞ்ச கவ்வியத்தில் சேர்த்தோமோ, அவ்வாறே தேங்காய் ஜலத்தையும் பஞ்சாமிருதத்தில் சேர்க்க வேண்டும்.

பின்னர், மிகுதியான வாழைப் பழத்தை மூலமந்திரத்தாலபி மந்திரித்து மூலமந்திரத்தால் பிசைதல் வேண்டும். பஞ்சகவ்வியத்திற்குச் செய்தது போல் கந்தம் புஷ்பம் முதலியவற்றால் உபசாரம் செய்யவேண்டும்.

பஞ்சகவ்வியத்திற்காகக் குறிக்கப்பட்ட திரவியங்களனைத்துங் கிடையாவிடில் தயிர் பால் என்னுமிவற்றுள் யாதானுமொன்றையும், கோமயம் கோசலமென்னுமிவற்றுள் யாதானுமொன்றையும் மற்றொன்றுக்குப் பிரதிநிதியாக வைத்துக்கொள்ளலாம். அஃதாவது ஒன்றை இரட்டித்து வைத்துக் கொள்ளலாமென்பது பொருள். பஞ்சாமிருதத்துள் சருக்கரைக்குப் பதிலாகக் கருப்பஞ்சாறை வைத்துக்கொள்ளலாம். பஞ்சகவ்வியம் பஞ்சாமிருதமென்னுமிரண்டினும் நெய்யை ஏனைய நான்கு திரவியங்களுக்குப் பதிலாக வைத்துக் கொள்ளலாம்.

பஞ்சகவ்வியத்திற்காகக் கூறப்பட்ட பாத்திர அளவில் திரவியங்கள் கிடையாவிடில் கோமயத்தைப்பாதி கட்டைவிரல் அளவாயும், கோசலம், நெய், தயிர், பால், குசோதகம் என்னுமிவற்றை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து என்று என்னும் பல அளவாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

பஞ்சாமிருதத்தில் பால் முதலியவற்றை ஈசுவரனுடைய லிங்கத்திற்கு அபிஷேகஞ்செய்யும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்ட நிறங்களையுடைய பசுக்கள் கிடையாவிடில் ஒருவித குற்றமுமில்லாததாயும், கன்றுடன் கூடினதாயும், நோயும் கருப்பமுமில்லாததாயுமுள்ள பசுவினுடைய பால் முதலியவற்றை எடுத்துக் கொள்ளல் வேண்டும். பாலானது கன்றினுடைய எச்சில் சம்பந்திக்காமல் கன்றுக்கு ஊட்டியபின் மடியை நீரால் சுத்தஞ் செய்து கறந்துகொள்ளப்பட வேண்டும். கடையாத தயிரும், பூமியில் விழாமல் ஆகாயத்திலிருக்கும் பொழுதே ஏந்திவைத்த கோமயமும், நெய்யும், வடிகட்டின கோஜலமும் என்னுமிவற்றை உபயோகிக்க வேண்டும்.

பஞ்சாமிருத முறை முடிந்தது.

 

ஸ்நபனோதகம்

அதன் முறையாவது, ஜலங்கொண்டுவரும் சுத்தமான குடத்தையெடுத்துக் கொண்டு சிவபெருமானிடத்தில் அனுமதி பெற்று புண்ணியப் பேற்றையுடையதாயும், நறுமணமுடையதாயும், நல்ல தீர்த்தமுடையதாயும், தேவர்களால் தோண்டப்பட்டதாயுமுள்ள நதியையாவது, தடாகத்தையாவது அடைந்து அந்தத் தீர்த்தத்தைப் பஞ்சப் பிரம்ம மந்திரங்களாலும் அங்கமந்திரங்களாலும் அபிமந்திரித்து, அஸ்திரமந்திரத்தால் குடத்தைச் சுத்தி செய்து, வடிகட்டி, இருதயமந்திரத்தால் தீர்த்தத்தை நிரப்பி எடுத்துக்கொண்டுவந்து ஈசுவரனுடைய வலது பக்கத்தில் வைத்து ஏலம், விலாமிச்சம்வேர், லவங்கம், கற்பூரம், பாதிரிப்பூஷ்பம், நீலோத்பலம், தாமரை, அலரி என்னுமிவற்றால் வாசனையுண்டாகும்படி செய்யவேண்டும்.

பஞ்சகவ்வியஞ் சேர்த்தல், பஞ்சாமிருதஞ் சேர்த்தல், ஸ்நபனோதகங் கொண்டுவரல் என்னுமிவற்றை, ஆத்மசுத்தி துவாரபால பூஜைகட்கு முன்னரே செய்ய வேண்டும். ஸ்நபனோதகம் சூரியனில்லாத சமயத்தில் எடுக்கக் கூடாது.

எவன் பூஜை செய்கின்றானோ அவனே புஷ்பங்களைக் கொய்தல் வேண்டும். தான் கொண்து கொள்ளமுடியாத விடத்தும் அல்லது சமயங்கிடையாதவிடத்தும் சந்தனமரைத்தல், நைவேத்தியம் பக்குவமாக்குதல் என்னுமிவற்றை நீராடினவராயும், சுத்தமான ஆடையையணிந்தவராயும், பவித்திரம் தரித்தவராயுமுள் பரிசாரகர்களால் செய்துகொள்கின்றோமோ, அவ்வாறே புஷ்பம் ஜலமென்னுமிவற்றையும் பவித்திரத்தைக் கையிலணிந்த பரிசாரகரைக்கொண்டு செய்துகொள்ளவேண்டும். இது எது போலுமெனின், யாகஞ் செய்யுங்கருத்தாவே தருப்பையையறுத்துக்கொண்டு வருதல் மாவைப்பிசைதல் செய்யவேண்டுமாயினும் தன்னால் முடியாத விடத்துப் பரிசாரகரைக் கொண்டு செய்து கொள்வது போலாம். இவ்வாறே பின்னர்க் கூறப்படும் பூசைக்கு வேண்டிய எல்லாச்சாமான்களையும் சமீபத்தில் வைத்துக்கொண்டு அவற்றின் சுத்தியைச் செய்துகொள்ளல் வேண்டும்.

ஸ்நபனோதக முறை முடிந்தது.

 

திரவியசுத்தி

அஃதாவது, கட்டைவிரல் அணிவிரல்களால் கண்களைத் தொட்டுக்கொண்டு மூலமந்திரத்தால் திரவியங்களைப் பார்த்து ஞானம் கிரியை இச்சை என்னும் மூன்றின் சொரூபமான சூரியன் அக்கினி சந்திரனென்னும் ரூபமான கண்களால் முறையே உலர்ந்தவையாயும், தகிக்கப்பட்டதாயும், அமிருதத்தால் நனைக்கப்பட்டவையாயும் பாவித்துக் கொள்ளல் வேண்டும்.

பின்னர், திரவியங்களுக்குச் சுத்தியுண்டாகும் பொருட்டு அஸ்திரமந்திரத்தை உச்சரித்துப் பதாகா முத்திரையினால் புரோக்ஷித்து, சிற்சத்தி வெளிப்படும் பொருட்டு அஸ்திரமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு நடுவிரலால் தாடனஞ் செய்ய வேண்டும். அதன் பின்னர் வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் எல்லாத்திரவியங்களையும் விசேஷார்க்கிய ஜலத்தாலாவது, சங்கு ஜலத்தாலாவது, தருப்பை புஷ்பம் என்னுமிவற்றைக் கொண்டு அப்பியுக்ஷணஞ் செய்து பிளக்கப்பட்ட கல்லிலிருந்து அக்கினி கிளம்புமாறு போல திரவிய சமூகத்திலிருந்து சித்தாகிய அக்கினியினுடைய தணல்கள் உண்டாகிறதாகத் தியானஞ் செய்துகொள்ளல் வேண்டும். இவ்வாறே நிரீக்ஷண முதலிய நான்கு சுத்திகளால் திரவிய சமூகமானது அசுத்தமான மாயாரூபம் நீங்கப்பெற்றுச் சுத்தமான சிற்சத்தி ரூபமாகவும், சிவ பூஜைக்குரியதாகவும் ஆகின்றது.

பின்னர் சத்தியோசாதமந்திரத்தால் சந்தனத்தையும், வாமதேவ மந்திரத்தால் வஸ்திரத்தையும், அகோர மந்திரத்தால் ஆபரணத்தையும், தற்புருஷமந்திரத்தால் நைவேத்தியத்தையும், ஈசானமந்திரத்தால் புஷ்பத்தையும், இருதயமந்திரத்தால் ஏனைய சிவபூஜா திரவியங்களையும் ஆவரண பூஜைக்குரிய திரவியங்களையும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

பின்னர், எல்லாத்திரவிய சமூகத்தையும் அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணஞ் செய்து கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து, வெளஷடு என்னும்பதத்தை இறுதியினுடைய சத்தி மந்திரத்தால் தேநு முத்திரை செய்துகொண்டு அமிருதீகாணஞ் செய்து சிவனுக்காகக் கற்பிக்கப்பட்ட இந்தத்திரவியங்களனைத்தும் சிவ சொரூபமேயென்று பாவனை செய்து, கந்தம், புஷ்பம், தூப தீபங்களால் இருதய மந்திரம் அஸ்திரமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

பின்னர் தன் சிரசில் அருக்கிய ஜலத்தின் திவலையை அஸ்திரமந்திரத்தால் தௌ¤த்துக் கொண்டு, தன்னுடைய ஆசனத்தில் சிவாசனாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்துப் புஷ்பத்தைச் சாத்தி, தன்னுடைய தேகத்தில் சிவமூர்த்தியை நியாசஞ்செய்து, நெற்றியில் சந்தனத்தைத் தரித்து, சிரசில் புஷ்பத்தைத் தரித்துக்கொண்டு, சுவாகா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் தன்னுடைய சிரசிலேயே அர்க்கியத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு ஆன்மாவினிடத்தில் பசுபுத்தியை நீக்கிவிட்டுச் சிவனைப்போல் நிர்மலமான ஞானக்கிரியா சத்தியையுடையவனாயும் சுத்தனாயுமிருக்கிறேன் நானென்று பாவனை செய்துகொண்டே தன்னைப் பூஜித்துக் கொள்ளல் வேண்டும்.

ஆன்மசுத்தியானது முன்னரே கூறப்பட்டதாயினும் பூஜைக்குக் கருத்தாவாக இருத்தலால் ஏனைய திரவியங்கள் போலவே ஆன்மாவும் பூஜைக்குச் சாதனமாய் விட்டமைபற்றி இவ்விடத்தும் ஆன்மாவிற்குக்கந்த முதலியவற்றால் உபசாம் கூறப்பட்டது.

திரவியசுத்தி முடிந்தது.

 

மந்திரசுத்தி

பற்கள் அண்ணம் உதடுகள் என்னுமிவற்றின் வியாபாரத்தாலுண்டான மாயாகரியமான அசுத்தத்தை நாசஞ்செய்யும் பொருட்டும், ஐசுவரியரூபமான அதிகார மலத்தால் பலத்தைக் கொடுக்கக் கூடிய சாமர்த்தியம் வாய்ந்த மந்திரங்கள் மறைக்கப்பட்டிருத்தலால், அந்த மந்திரங்களுக்கு அந்தச் சாமர்த்தியத்தை யுண்டபண்ணுதற் பொருட்டும், மந்திரங்களின் சுத்தியைச் செய்ய வேண்டும். அதன் முறை வருமாறு :-

இருதயத்தில் அஞ்சலிபந்தனஞ் செய்துகொண்டு விந்துஸ்தானம் முடியவும், பிரமரந்திரம் முடியவும், சிகை முடியவும் முறையே ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம் என்னும் சுரத்துடன் பிரணவத்தை ஆதியாகவுடையதாயும், நமோந்தமாயுமுள்ள மூலமந்திரத்தை மூன்றுமுறை மெல்ல உச்சரிக்க வேண்டும். பின்னர், பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் ஷடங்கமந்திரங்களையும் அவ்வாறே உச்சரிக்க வேண்டும். மந்திர சுத்தி முடிந்தது.

இவ்வாறு மந்திரசுத்தி செய்த பின்னர், பரிவாரதேவதைகளிருக்குமாயின்அந்தத் தேவதைகளையும் பூஜிக்கவேண்டும். சத்தியுடன் கூடின கேவலமான சிவபூஜையில் பரிவார தேவதைகள் எவ்வாறிருத்தல் கூடுமெனின், கூறுதும்.

 

பூஜையின் வகை

சூக்கும ஆகமத்தில் கூறப்பட்ட சுத்தம், கேவலம், மிச்சிரமென்னும் அசத்திகமாயும், சசத்திகமாயுமுள்ள சூரியன் முதல் சண்டேசுவர பூஜை முடிவான பூஜைகள், அம்சுமானாகமத்தில் கூறியவாறு கேவலம், சகசம், மிச்சிரமென்னும் பேதத்தால் தனித்தனி முத்திறப்படும். அம்சுமானாகமத்தில் கூறப்பட்ட கேவலமென்னும் பூஜையாவது பரிவார தேவதைகளில்லாத லிங்கபூஜையாகும். சகசமென்னும் பூஜையாவது ரிஷபம், கணபதி, கந்தர், பார்வதி என்னும் நால்வர்களுடன் கூடின லிங்கபூஜையாகும். மிச்சிரமென்னும் பூஜையாவது மகேசுவரர், நிருத்தமூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி என்னும் இவர்களுடன் கூடின லிங்கபூஜையாகும். இவ்வாறே கேவலசுத்தம், சகசசுத்தம், மிச்சிரசுத்தம், கேவலகேவலம், சகசகேவலம், மிச்சிரகேவலம், கேவலமிச்சிரம் சகசமிச்சிரம், மிச்சிரமிச்சிரம் எனப் பூஜைகள் ஒன்பது வகைப்படும்.

அவற்றுள் கேவலசுத்தமாவது - சிவபூஜை செய்வதற்கு முன்னர் சூரியபூஜையையும் அதன் பின்னர் சண்டேசுவரர் பூஜையையும் செய்து லிங்கத்தில் சத்தியின்றிச் சிவனைமாத்திரம் ஆவாகரனஞ் செய்து, பரிவார தேவதைகளில்லாத சிவனுடைய பூஜையாகும்.

சகசசுத்தமாவது - நான்கு பரிவாரங்களுடன் கூட முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.

மிச்சிரசுத்தமாவது - மகேசுவரர் முதலியவர்களுடன் கூட முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.

கேவல கேவலமாவது - முன்னரும் பின்னரும் சூரிய பூஜையையும் சண்டேசுவர புஜையையும் செய்யாதுவிட்டு லிங்கத்தில் சத்தியுடன் கூடச்சிவனை ஆவாகனஞ்செய்து பரிவார தேவதைகளின் பூஜையின்றிச் சிவனைப் பூஜித்தலாகும்.

சகசகேவலமாவது - நான்கு பரிவார தேவதைகளின் பூஜையுடன்முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.

மிச்சிரகேவலமாவது - மகேசுவரர் முதலானவருடன் கூட முன்னர்க் கூறியவாறு பூசித்தலாகும்.

கேவலமிச்சிரமாவது - முன்னரும் பின்னரும் சூரிய பூஜையையும், சண்டேசுவர பூஜையையும் முறையே செய்துகொண்டு சத்தியுடன் கூடவேனும் கூடாமலேனும் பரிவார தேவதைகளுடன் கூடாமல் லிங்கபூஜை செய்தலாகும்.

சகசமிச்சிரமாவது - அதே பூஜையை நான்கு பரிவாரங்களுடன் கூடச் செய்தலாகும்.

மிச்சிரமிச்சிரமாவது - மகேசுவரர் முதலானவருடன் பூஜித்தலாம்.

ஆகவே கேவல கேவலத்தில் பரிவாரங்களில்லையாயினும் சகசகேவலத்திலும், மிச்சிரகிவலத்திலும் பரிவாரங்களிருத்தலால் மந்திரசுத்தி செய்தபின்னர் கேவல பூஜையில் பரிவார பூஜையைக் கூறியது பொருத்தமாகுமென்க.

ஈசுவரனுக்குக் கிழக்குப் பாகத்தில் மேற்கு முகமாக இருக்கும்படி செய்து இடபத்தை அருச்சிக்க வேண்டும். தெற்கு, மேற்கு, வடக்குத் திக்குக்களில் முறையே கணபதி, சுப்பிரமணியர், பார்வதி, என்னுமிவர்களைக் கிழக்குமுகமாய் இருக்கும்படி செய்து அருச்சிக்கவேண்டும். பார்வதி தேவியைத் துர்க்கை ரூபமாக அருச்சிக்குங் காலத்தில் தெற்கு முகமாயிருக்கும்படி செய்து அருச்சிக்க வேண்டும்.

பௌராணிகர்கள் சூரியன், கணபதி, விட்டுணு, துர்க்கை என்னும் நால்வரையும் நான்கு பரிவாரங்களாகக் கூறுகின்றனர். ஆரோக்கிய முதலிய பலன்களில் விருப்பமிருப்பின் இடபம் முதலிய நால்வரையும் பூசிக்குங் காலத்தில் பரிவார தேவதைகளின் பூஜாநடுவில் சூரியன் முதலியோரையும் பூசிக்க வேண்டும்.

இடபத்தின் இடதுபக்கத்தில் சூரியனையும், ஈசுவரனுக்குத் தென் பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தியையும், மேற்குப் பக்கத்தில் சுப்பிரமணியரையும், சுப்பிரமணியருக்கு இடது பக்கத்தில் விட்டுணுவையும், ஈசுவரனுக்கு வடக்குப் பக்கத்தில் தேவியையும், தேவிக்குக் கிழக்குப் பக்கத்தில் நிருத்த மூர்த்தியையும் பூசிக்க வேண்டும். இவ்வாறே விருப்பத்தை நிறைவேற்றும் ஏனையபரிவார தேவதைகளின் இருப்பிடங்களை ஆகமங்களில் ஆங்காங்குக் கண்டு கொள்க.

பூஜையின் வகை முடிந்தது.

 

லிங்க சுத்தி

பின்னர் லிங்கசுத்தி செய்யவேண்டும். அதன் முறை வருமாறு:- கருப்பக் கிரகத்திலிருக்கும் ஈசுவரனிருக்கக்கூடிய பெட்டகத்தைத் திறந்து, அந்தப் பெட்டகத்திற்கு முன்னிருப்பவராயும், நான்கு கைகளையும் மூன்று கண்களையுமுடையவராயும், வரம், அபயம், குடை, சாமரமென்னுமிவற்றைக் கையிலுடையவராயுமுள்ள வீமருத்திரரை அருச்சித்துப் பின்னர், ஓ அரக்கரை சங்கரித்த ஈசா! ஈசுவரனுக்குப் பூஜை செய்யப் போகின்றேன்; சுத்தமான வாயிலின் இடது பக்கத்தில் தேவரீர் இருந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, பெட்டியின் மத்தியிலிருக்கும் ஈசுவரனை ஓங்கார ரூபியான ஓ தேவர்களுக்கும் தேவனான ஈசா! எல்லாவுலகங்களையுங் காப்பவரே! உமக்கு நமஸ்காரம்; தேவரீர் அபிஷேகங் கொண்டருளும் பொருட்டும், ஆன்மர¬க்ஷயின் பொருட்டும் எழுந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்து, லிங்கத்தை இரு கைகளாலும் எடுத்து ஆடையை விலக்கி, முன்னரே ஷடுத்தாசனத்தால் அருச்சிக்கப்பட்டதாயும், சுவர்ணம், வெள்ளி, வெண்கலம், அரக்கு, ஈயம், பாலுள்ள மரமென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்டதாயும், உபானம், பத்மம், ஜெகதி, கம்பம், கண்டம், கம்பம், ஜெகதி, பத்மம், வாஜினம் என்னுமிவற்றுடன் கூடினதாயும், வட்டமான வடிவத்தை யுடையதாயும், நடுவில் உயரமாயும், மேலே விரிக்கப்பட்ட ஆடையையுடையதாயுமிருக்கும் ஸ்னானவேதிகையில் எழுந்தருளச் செய்து, முந்தின தினத்தில் அருச்சித்த பூஜையை இருதய மந்திரத்தால் பூசித்து சிரசில் ஈசான முறையாக சுவாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தை உச்சரித்து, சாமான்னியார்க்கிய ஜலத்தால் அருக்சியங்கொடுத்து, தூப தீபம் சமர்ப்பித்து கட்டைவிரல் முதல் சுண்டு விரல் ஈறாகவுள்ள விரல்களால் ஈசான முதலிய ஐந்து மந்திரங்களை நியாசஞ்செய்து, சுண்டு விரல் அணி விரல்களின் மத்தியில் புஷ்பத்தை எடுத்துக் கட்டை விரல் சுட்டு விரல்களால் லிங்கத்தின் முடியிலிருக்கும் நின்மாலியத்தை இருதயமந்திரத்தால் எடுத்து, முன்னர் வைத்திருந்த புஷ்பத்தை லிங்கத்தின் முடியில் வைத்து, நின்மாலியத்தை இருதய மந்திரத்தால் ஈசான திக்கில் சுத்தமான பாத்திரத்தில் வைத்து விட்டு, அஸ்திரமந்திரத்தால் லிங்கத்தையும், பாசுபதாஸ்திரமந்திரத்தால் பீடத்தையும் சுத்தஞ்செய்து, சாமான்னியார்க்கிய ஜலத்தைக்கொண்டு சுவாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தால் அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தலினால் பூர்வபூஜையின் பூர்த்தியில் லிங்கத்திலும் பீடத்திலும் நியாசஞ் செய்யப்பட்ட மந்திரங்கள் பூர்த்தியடைந்த பின்னர் லிங்கம் பீடமென்னுமிவற்றில் சம்பந்தித்தனவாயும் பூஜைசெய்பவனுடைய போக மோக்ஷங்களைக் கெடுக்கக் கூடியனவாயுமுள்ள விக்கினங்கள் நீக்கப்பட்டவையாக ஆகின்றன.

இருதய மந்திரத்துடன் கூடிய நீரால் அபிஷேகஞ் செய்யப்பெற்ற லிங்கம் சுத்தமாயும் மீண்டும் மந்திரங்களை நியாசஞ் செய்தற்குரியதாகவும் ஆகின்றது.

லிங்கசுத்தி முடிந்தது.

 

அபிஷேக முறை

பின்னர், சிவசக்திப்பியாம் நம: என்று சொல்லிக்கொண்டு லிங்கமுத்திரையைக் காட்டி, ஆசனமூர்த்தி மூலமந்திரங்களாலாவது எட்டுப் புட்பங்களாலாவது பூஜித்து, தூப தீபஞ் சமர்ப்பித்து, சுவர்ணம், வெள்ளி, செம்பு, சங்கு, சிப்பி, பசுவின் கொம்பு என்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பெற்ற பாத்திரத்தை வைத்துக்கொண்டு, நாலங்குலப் பிரமாணம் நீண்டதாயும், பசுவின் கொம்பின் நுனியளவு பருமனாயுமிருக்கும் தாரையால் அபிஷேகஞ்செய்து, கை இயந்திரத்திலிருந்தும் உண்டான தைலத்தாலாவது, பசுவின் நெய்யாலாவது தைலக்காப்புச் செய்வித்து, மாப்பொடி முதலியவற்றால் சுத்திசெய்து, சிறிது சூடுள்ள நீராலபிஷேகஞ் செய்து, சிரசில் புஷ்பத்தை வைத்துப் பஞ்சகவ்வியம், கலவாத பஞ்சாமிருதம், பழச்சாறு, கலந்த பஞ்சாமிருதமென்னுமிவற்றை இடையிடையே முறையே சிரசு, சிகை, நேத்திரமென்னும் மந்திரங்களை யுச்சரித்துக்கொண்டு புஷ்பம், தூபம், தீபம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்தலுடன் அஸ்திர மந்திரத்தால் மணியடித்துக்கொண்டு அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறே பழ ஜலம் முதலியவற்றாலும் அபிஷேகஞ் செய்ய வேண்டும். பழ ஜலமாவது, தோலில்லாத பலா, தென்னை, தோலுடன் கூடின மாதுளம்பழம், கொய்யாப்பழம், சுரபுன்னை, எலுமிச்சம்பழம், நாரத்தம்பழம், மாம்பழம், வாழைப்பழம் என்னுமிவற்றுடன் கலந்த ஜலமாகும்.

பீஜோதகமாவது யவம், நீவாரம், நெல், பயறு, வெண்கடுகு, வாசனாதிரவியம், சுவர்ணம், சம்பாநெல்லு என்னுமிவற்றுடன் கூடின நீராகும்.

இவற்றாலபிஷேகஞ்செய்து மூலமந்திரத்திற்குரிய பீஜாக்கரத்தால் கந்தம், புஷ்பம், தூபம், தீபங்களைக்கொண்டு அருச்சிக்க வேண்டும்.

இரத்தினோதகமாவது, படிகம், நல்முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், புஷ்பராகம், கருடப்பச்சை, இந்திர நீலக்கல் என்னுமிவற்றுடன் கூடியநீர். இதனாலபிஷேகஞ் செய்து உயிரெழுத்து மெய்யெழுத்துக்களென்னும் மந்திரத்தால் கந்த முதலியவற்றைக் கொண்டு அருச்சிக்க வேண்டும்.

கந்தோதகமாவது, சந்தனம், அகில், கஸ்தூரி, குங்குமப்பூ, கற்பூரம், மனோசிலை, ஏலம், கீழாநெல்லி, தக்கோலம், லவங்கம், விலாமிச்சம்வேர் செண்பகமொட்டுப்பொடி என்னுமிவற்றுடன் கூடின நீராகும். இதனாலபிஷேகஞ்செய்து கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியமென்னுமிவற்றை நாமமந்திரத்தால் சமர்ப்பிக்க வேண்டும்.

புஷ்போதகமாவது, சண்பகம், மல்லிகை, தாழம்பூ, பாதிரி, முல்லை, சுரபுன்னை, நந்தியாவர்த்தம் ஜாதி (பிச்சி) மந்தாரம், அலரி, தாமரை, நீலோத்பலம், கிரிமல்லிகை என்னுமிவற்றுடன் கூடினதாயும், வெட்டிவேர் முதலிய வேருடன் கூடினதாயும் உள்ள நீராகும். இதனாலபிஷேகஞ் செய்து சிவமந்திரத்தால் கந்தம், புஷ்பம், தூபம், தீபம் என்னுமிவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் நாமமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சுத்தான்னத்தால் மெதுவாக அபிஷேகஞ்செய்து லிங்கத்தின் நாலுபக்கத்திலுமுள்ள அந்த அன்னத்தை லிங்கத்தின் சொரூபம் போல் செய்து கந்தம், புஷ்பம், தூபம், தீபம், பாயசம் என்னுமிவற்றையும், தாம்பூலம் முதலியவற்றையும் சமர்ப்பித்து, அந்த அன்னத்தை நீக்கிச் சுத்தஞ்செய்து, லிங்கத்தின் சிரசில் மூலபீஜாக்கரத்தை நியாசஞ்செய்து கந்தம், புஷ்பம், தூபம், தீபங்களைச் சமர்ப்பித்துப் பஞ்சப்பிரம்ம மந்திரங்களால் துடைத்துத் தேனுமுத்திரை செய்யவேண்டும். இந்த அன்னாபிஷேகமானது அபமிருத்துவை விலக்கும். இன்னும் ஆயுள், ஆரோக்கியம், அரசு, தேசம் என்னுமிவற்றின் விருத்தியையுஞ் செய்யும். எல்லாவசியத்தையும் உண்டுபண்ணும். சர்வ சாந்தியையுஞ் செய்யும்.

பின்னர் ஜலத்தால் பூஜை செயயவேண்டும். எவ்வாறெனில், நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திபெற்ற சுத்த ஜலத்தை சுவர்ணம், வெள்ளி, செம்பு, யாகத்திற்குரிய விருக்ஷங்கள் என்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நிரப்பி அந்த ஜலத்தின் மத்தியில் லிங்கத்தை வைத்து அருகு, எள்ளு, அக்ஷதைகளைச் சமர்ப்பித்து கந்தம், புஷ்பம், தூபம், தீபங்களுடன் அருச்சிக்க வேண்டும்.

பின்னர் லிங்கத்தை எடுத்துத் துடைத்து முன்போல் அபிஷேகவேதியில் வைத்து இளநீர் கருப்பஞ்சாறுகளால் இயன்ற வரை அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

 

அபிஷேக பலன்

சிவரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ளாரும் சிவபதத்தை யடைவர். கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம். பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும். தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும். தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்குவதுடன் அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும். கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய உலகத்தையடையலாம். பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீரை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தை யடையலாம். வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை யடையலாம். புஷ்பத்தோடு கூடிய நீரால் அபிஷேகஞ் செய்தால் சூரியலோகத்தையடையலாம். சுவர்ணத்தோடு கூடிய நீரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும், இரத்தினத்தோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும், தருப்பையோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும் அடையலாம்.

குறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் ஆடையால் பரிசுத்தமான சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும். இவ்வாறு செய்தாலும் எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை யடைதல் கூடும்.

 

தாராபிஷேக முறை

பின்னர் தாராபிஷேகஞ் செய்ய வேண்டும். அந்ததாரையானது ஆன்மார்த்த பூஜையில் பன்னிரண்டங்குலம் அகலமுள்ளதாயும், ஓரங்குல உயரமுள்ளதாயும், மூன்று நெல்லுக்கனமுள்ளதாயுமிருக்கவேண்டும். இவ்வாறு இருப்பது உத்தமம். ஏங்குல அகலமும், அரை அங்குல உயரமும், இரண்டு நெல்லுக்கனமுமிருப்பது மத்திமம். ஐந்தங்குல அகலமும், கால் அங்குல உயரமும், ஒரு நெல்லுக்கனமுமிருப்பது அதமம். அந்தத்தாரைவிழும் இடமானது சுவர்ணம், வெள்ளி, செம்பு என்னுமிவற்றிலொன்றால் வட்டமாகவேனும், நான்கு முக்குச்சதுரமாகவேனும் செய்திருக்க வேண்டும். நான்கு முக்குச் சதுரமாக இருக்கும் விஷயத்தில் நவகோஷ்டங்கற்பித்து நடுக்கோஷ்டத்தின் மத்தியில் ஒரு துவாரமும், நடுத்துவாரத்தைச் சுற்றி எட்டுத் துவாரங்களும், நடுக்கோஷ்டத்தின் ரேகையில் மகா திக்குகளான நான்கு திக்குகளில் நான்கு துவாரங்களும், கிழக்கு முதலுள்ள எட்டுக் கோஷ்டங்களில் தனித்தனி பன்னிரண்டு துவாரங்களுமிருக்க வேண்டும். ஆகவே உத்தம பாத்திரத்திற்கு நூற்று ஒன்பது துவாரமுண்டு.

மத்திம பாத்திரத்திற்கு நடுக்கோஷ்டத்தின் மத்தியில் ஒரு துவாரமும், அதைச்சுற்றி எட்டுத் துவாரங்களும் கிழக்கு முதலிய எட்டுக் கோஷ்டங்களில் தனித்தனி ஐந்தாக நாற்பது துவாரங்களும் ஆக நாற்பத்தொன்பது துவாரங்களுண்டு.

அதமபாத்திரத்திற்கு நடுக்கோஷ்டத்தின் மத்தியில் ஒரு துவாரமும், கிழக்கு முதலிய எட்டுக் கோஷ்டங்களில் தனித்தனி மும்மூன்று துவாரங்களும் ஆக இருபத்தைந்து துவாரங்களுண்டு.

பாத்திரம் வட்டமாயிருக்குமாயின் எட்டுத் தளமுடைய தாமரையை வரைந்து, கர்ணிகையின் நடுவிலும், அதைச் சுற்றியும் ஒன்பது துவாரங்களும், ஒவ்வொரு தளந்தோறும் பன்னிரண்டு துவாரங்களும், தளங்களுக்கு வெளியிலுள்ள வட்டத்திலிருக்கும் மகாதிக்குகளில் நான்கு துவாரங்களுமாக உத்தம பாத்திரத்திற்குத் துவாரங்கள் செய்யவேண்டும். எட்டுத் தளமுடைய தாமரை வரையப்பட்ட மத்திமபாத்திரம் அதம பாத்திரங்களுக்கோவெனில், நான்கு முக்குச் சதுரமான மத்திம அதம பாத்திரங்களுக்குக் கூறியவாறு செய்ய வேண்டும்.

இத்தகைய பாத்திரத்தைச் சிவலிங்கத்திற்குமேல் கையிற் பிடித்துக்கொண்டு சங்கு ஜலத்தால் நிரப்பி மூலமந்திரத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும்.

இவ்வாறே அபிஷேகத்திற்காக முன்னரே சேகரித்துள்ள பஞ்சகவ்வியம் நீங்கிய தைல முதலிய திரவியங்களை அஸ்திரமந்திரத்தால் புரோக்ஷித்து, கசவமந்திரத்தால் அவகுண்டனஞ்செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணஞ் செய்து இருதய பீஜாக்கரத்தால் அபிஷேக நிமித்தமாக உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு விரிவாக அபிஷேகஞ் செய்ய முடியவில்லையாயின் சுத்தஜலத்தால் அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

பின்னர் மூலமந்திரத்தால் மந்திர புஷ்பஞ்சமர்ப்பித்து மந்திரான்னத்தை நிவேதித்து சுத்தமாயும் மிருதுவாயுமுள்ள ஆடையால் மிருதுவாகத் துடைத்து பத்ம பீடத்திலெழுந்தருளச் செய்ய வேண்டும்.

 

அனுக்ஞை

பின்னர் எழுந்திருந்து சிவனைப் பிரதக்ஷிணஞ் செய்து, நிருதி திக்கிலிருக்கும் வாஸ்து பிர்மாவிற்கு வடக்கும், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்கு வாயு கோணமுமான இடத்தையடைந்து, அவ்விடத்தில் கருமை நிறமுடையவரும், கைகளில் தந்தம், அக்ஷமாலை, பாசம், ஈட்டி என்னுமிவற்றைத் தரித்திருப்பவரும், துதிக்கையில் மாதுளம்பழத்தைத் தரித்திருப்பவரும், தெற்கு முகமாக எழுந்தருளியிருப்பவருமான கணபதியை ஆவாகன முதலிய எல்லா உபசாரங்களாலும் பூஜித்து, கணபதியே யான் தொடங்கியிருக்கும் சிவ பூஜையை விக்கினமின்றி நிறைவேற்றித் தரவேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும். அதற்குக் கிழக்குப் பக்கமும், சிவனிருக்கும் இடத்துக்கு வடக்குத் திக்குமான இடத்தில் ஸ்ரீபலம், கமலம், அபயம் வரம் என்னுமிவற்றைத் தரித்திருப்பவளாயும், மூன்று கண்களையுடையவளாயும், சிவசத்தி ரூபமாயும், தெற்கு முகமாக உட்கார்ந்து கொண்டிருப்பவளாயுமுள்ள மகா லக்குமியையும் அவ்வாறே பூஜித்து தாயே சிவனை அருச்சிப்பதற்குரிய திவியங்களின் மிகுதியைச் செய்யவேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.

பின்னர் அதற்குக் கிழக்கும் சிவனிருக்குமிடத்திற்கு ஈசானமுமான இடத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகை, சுப்பிரமணியர், விட்டுணு, பிரமா என்னுமிவர்கள் ரூபமாயும், தௌ¤வான முகத்தையுடையவர்களாயும், யோக பட்டம் தரித்துக்கொண்டிருப்பவர்களாயும், **வியாக்கியானஞ் செய்யும் முத்திரையும், உரத்திராக்க மாலையும், இரு கைகளில் உடையவர்களாயும், வெண்மை நிறமுடையவர்களாயும், தெற்கு முகமாக உட்கார்ந்திருப்பவர்களாயும், உள்ள ஏழு ஆசிரியர்களையாவது, அல்லது சிவன் முதல் தன்னுடைய குரு வரையுமுள்ள எல்லா ஆசிரியர்களையுமாவது அவ்வாறே எல்லா உபசாரங்களாலும் பூஜித்து, சிவன் முதலிய ஆசிரியர்களே தேவரீர் அறிவித்த முறையை அனுசரித்துச் சிவ பூஜையைச் செய்யப் போகின்றேன். அடியேனுக்கு அனுமதி தரவேண்டு மென்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

( ** வியாக்கியானஞ் செய்யும் முத்திரையென்பது சின் முத்திரை. இது பாச மூன்றும் பசுவைவிட்டு நீங்குமென்றும், பாசத்தினின்று நீங்கிய பசுபதியை விட்டு நீங்காது. பதியினுள்ளடங்கியிருக்குமென்றும் உணர்த்துவது.)

குருவினுடைய ஸ்தானத்தில், ஸ்ரீகுரு பாதுகாப்பியாம் நம: என்று சொல்லிக்கொண்டு பாதுகைகளையாவது பூஜித்து கணபதி, இலக்குமி, குரு பாதுகைகளைப் பூஜித்தபின்னர் அனைவரையும் வந்தனஞ் செய்து பூமியில் வைக்கப்பட்ட முழங்கால்களையுடையவனாய் கைகளைக் குவித்து நமஸ்காரஞ் செய்து கொண்டு கணநாதா, தேவியே, குருபாதுகையே, ஜகத்குருவே! கிடைத்த திரவியங்களை வைத்துக் கொண்டு பூஜை செய்யும் அடியேனை தேவரீர் அனைவரும் அனுக்கிரகிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டு ஒரே காலத்தில் அனைவரையும் பிரார்த்திக்க வேண்டும்.

பின்னர் அந்தக் கணபதி முதலிய அனைவரும் அப்பா குழந்தாய் நீ சிவ பெருமானைப் பூஜை செய்வாயென்று அனுக்ஞை செய்ததாகப் பாவித்துக் கொண்டு, ஈசுவரனுக்கு அக்கினி திக்கிலாவது, அல்லது தெற்குத் திக்கிலாவது ருசிரம் முதலிய ஆசனத்திலமர்ந்து தனித்தனி பத்து மாத்திரையுள்ள பூரகம், கும்பம், ரேசகங்களுடன் மூன்று பிராணாயாமஞ் செய்து, தனக்கு விருப்பமான பலத்தைச் சிந்தித்துக் கொண்டு சத்திக்குத் தக்கவாறு சிவனுடைய பூஜையைச் செய்கிறேனென்று சங்கற்பஞ் செய்துகொண்டு பூசையைத் தொடங்கல் வேண்டும்.

அனுக்ஞை வகை முடிந்தது.

 

சிவாசன பூஜை

சிவ பூஜையில் முதலாவதாக சிவாசன பூஜையைச் செய்ய வேண்டும்.

சிவாசனமாவது கிழங்கு, தண்டு, முடிச்சு, இதழ்கள், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றால் வகுக்கப்பட்ட தாமரைப் பூவின் வடிவையுடையதாயும், பிருதிவிதத்துவ முதல் சுத்த வித்தை முடிவாக முப்பத்திரண்டு தத்துவம் முடிவான உயரமுடையதாயும், மேலிருக்கும் சதாசிவ மூர்த்தியுடன் கூட நிவிர்த்தி கலை முதல் சாந்திகலை ஈறான தத்துவம் வரை உயரமுள்ளதாயுமிருக்கும். அதற்கு மேல் சாந்திய தீதகலை அளவாக வித்தியா தேகம் இருக்கும். அதன் சொரூபத்தை அறிதற் பொருட்டு நிவர்த்தி முதலிய கலையின் அளவும், அக்கலையிலடங்கிய தத்துவங்களின் சொரூபமும் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

நிவிருத்தி கலையானது நூறு கோடி யோஜனை அளவுள்ள பிரமாண்ட ரூபமாயுள்ளது. அக்கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றுதானுண்டு அதற்குமேல் ஆயிரங் கோடி யோஜனையளவுள்ள பிரதிட்டாகலை இருக்கிக்கின்றது. அதில் அப்பு முதலிய நான்கு பூதங்களும், கந்தமுதலிய ஐந்து தன்மாத்திரைகளும், ஐந்து கன்மேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும், மனமும், அகங்காரமும், புத்தியும், பிரகிருதியுமாகிய இருபத்து மூன்று தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அயுதகோடி யோஜனை அளவுள்ள வித்தியா கலை இருக்கின்றது. அதில் புருடன், அராகம், நியதி, கலை, வித்தை, காலம், மாயை யென்னும் ஏழுதத்துவங்களுண்டு. அதற்கு மேல் லக்ஷங்கோடி யளவுள்ள சாந்தி கலை இருக்கின்றது. அதில் சுத்தவித்தை, மகேசுவரமென்றுமிரண்டு தத்துவங்களுண்டு. அதற்குமேல் பத்து லக்ஷங்கோடி அளவுள்ள சாந்திய தீதகலை இருக்கின்றது. அதில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அளத்தற்கு முடியாவண்ணம் சிவதத்துவமிருக்கின்றது.

நிவிர்த்தி கலை ரூபமான பிருதிவி தத்துவமானது தாமரைக் கிழங்கு அளவாக இருக்கின்றது. பிரதிட்டை வித்தையென்னும் இருகலைகளிலுமடங்கியுள்ள அப்பு முதல் காலமீறான இருபத்தொன்பது தத்துவங்கள் தாமரைத் தண்டாக இருக்கின்றன. அந்தத் தத்துவங்களிலிருக்கும் எழுபத்தைந்து புவனங்கள் முட்களாகும். அந்தப் புவனங்களிலடங்கியுள்ள உயிர்களின் ஐம்பது புத்தி தரமங்கள் தண்டிலடங்கியுள்ள நூல்களாகும். வித்தியா கலையில் காலத்திற்கு மேலிருக்கும் மாயாதத்துவம் தாமரைத் தண்டின் முடிச்சாகும். சாந்திகலையிலிருக்கும் சுத்த வித்தியா தத்துவம், இதழ், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றின் ரூபமாயிருக்குந் தாமரையாக இருக்கின்றது. சுத்த வித்தையின் மேலிருக்கும் மகேசுவர தத்துவமானது சிவனுடைய சூக்கும மூர்த்தியாயிருக்கின்றது. சாந்திய தீத கலையிலிருக்கும் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும் வித்தியாதேகமாயிருக்கின்றன.

தாமரைத் தண்டிலிருக்கும் புவனங்களாவன:-

அப்பு, அக்கினி, வாயு, ஆகாயம், அகங்காரம், புத்தி, பிரதிருதி என்னுமிவற்றில் தனித்தனி எட்டுப் புவனங்களாக ஐம்பத்தாறு புவனங்களும், புருட தத்துவத்தில் ஆறு புவனங்களும், அராகதத்துவத்தில் ஐந்து புவனங்களும், நியதி தத்துவத்தில இரண்டு புவனங்களும், கலையில் இரண்டு புவனங்களும், வித்தையில் இரண்டு புவனங்களும், காலத்தில் இரண்டு புவனங்களுமாகப் புருடன் முதல் காலமீறாக உள்ள தத்துவங்களில் அடங்கிய புவனங்கள் பத்தொன்பதும் ஆக எழுபத்தைந்து ஆகும். இவை முள்ளுகளாகும்.

தண்டிலடங்கியுள்ள நூல்களாகக் கூறப்பட்ட புத்தி தருமங்களாவன:- * தமசு, மோகம், +மகாமோகம், தாமிச்சிரம், அந்த தாமிச்சிரம் ஆகிய ஐந்து விபரியயங்களும், ஊகம், சப்தம், அத்தியயனம், துக்க நாசங்கள் மூன்று, சினேகிதனையடைதல், கொடை என்னும் சித்திகளெட்டும், அத்தியாத்மிகமான பிரகிருதி, உபாதானம், காலம், பாக்கியமென்னும் நான்கும், விஷயங்களின் ஒடுக்கத்தால் உண்டான வெளியிலுள்ள ஐந்தும் ஆகத்துஷ்டிகளொன்பதும், குருடு, ஊமை முதலிய இந்திரியங்களின் கேடுகள் பதினொன்றும், மேலே கூறப்பட்ட சித்திக்கும் துஷ்டிக்கும் கூறப்பட்ட கேடுகள் பதினேழும் ஆக ஐம்பது பாவங்களுமாம்.

( * தமசு - அஞ்ஞானம். மோகம் - அகங்காரம். + மகாமோகம் - விருப்பு. தாமிச்சிரம் - வெறுப்பு. அந்த தாமிச்சிரம் ஆசை. விருப்பு அகத்து நிகழ்வது. ஆசைபுறத்து நிகழ்வது. விபரியயம் - விபரீதஞானம்.)

கிழங்கு தண்டு முதலியவற்றின் அளவைப் பற்றிவேறு மதக்கொள்கையைக் கூறுகின்றார். நிவிர்த்தி கலாரூபமான பிருதிவிதத்துவம் முன்போல் நூறுகோடி யோஜனை அளவுள்ளது. அப்பு தத்துவம் பிருதிவி தத்துவத்தினின்றும் பத்து மடங்குயோசனை அளவுள்ளது. அக்கினி தத்துவம் அதினின்றும் பத்து மடங்கு யோஜனை அளவுள்ளது. வாயுதத்துவம் அதினின்றும் பத்துமடங்கு யோஜனை அளவுள்ளது. ஆகாய தத்துவம் அதினின்றும் பத்து மடங்கு யோஜனை அளவுள்ளது. ஆகாயத்தினின்றும் பத்து மடங்கு அகங்காரமும், அகங்காரத்தினின்றும் பத்து மடங்கு புத்தியும், புத்தியினின்றும் பத்து மடங்கு குணமும், இவ்வாறு ஒன்றுக்கொன்று பத்து மடங்கு அதிகமாகக் குணதத்துவம் வரை இருக்கின்றன. இதற்குமேல் மாயாதத்துவம் வரை ஒன்றினின்றும் ஒன்று நூறு மடங்கு யோசனை அதிகமாக இருக்கின்றன. அஃதாவது குணதத்துவத்தினின்றும் நூறு மடங்கு அதிகம் பிரகிருதி தத்துவம். பிரகிருதியினின்றும் நூறுமடங்கதிகம் அராகத்தத்துவம். அதனின்று நூறு மடங்கதிகம் நியதிதத்துவம். அதினின்று நூறு மடங்கதிகம் வித்தியாதத்தவம். அதினின்றும் நூறு மடங்கதிகம் கலை. அதினின்று நூறு மடங்கதிகம் காலம். அதினின்று நூறு மடங்கதிகம் மாயையென்பதாம்.

சுத்தவித்தை, ஈசுவரம், சதாசிவமென்னும் தத்துவங்கள் ஒன்றினின்றும் ஒன்று ஆயிரம் மடங்கதிகமான யோசனையுடையன. அஃதாவது, மாயையினின்றும் ஆயிரமடங்கு சுத்தவித்தை. அதினின்றும் ஆயிரமங்கதிகம் ஈசுவரம். அதினின்றும் ஆயிரமடங்கதிகம் சதாசிவ தத்துவமென்பதாம்.

சதாசிவ தத்துவத்தினின்றும் லக்ஷம் மடங்கதிகம் சத்திதத்துவம். சிவதத்தவமானது சத்திதத்துவத்தினின்றும் இவ்வளவதிகமென்று சொல்லவும் முடியாது நினைக்கவும் முடியாது.

இந்த மதமானது பிரகிருதிக்கு முன் குணதத்துவத்தை அங்கீகரித்துக் கொண்டு பிரகிருதிக்குப் பின் புருட தத்துவத்தை அங்கீகரியாமல் பிரவிர்த்தித்தது. இக்கருத்தையே சுருக்கமாக “க்ஷிமாதத் வம் சத” வென்னுஞ் சுலோகத்தாலும் கூறியுள்ளார்.

ஆகவே, தாமரைத் தண்டானது இவ்வளவு யோசனை அளவுள்ளதென்று கூறமுடியாது. ஆயினும் ஒருமுறையை யனுசரித்து யோசனைகளினளவைக் காட்டுகின்றோம்.

ஒன்று என்று ஆரம்பித்து மேல் மேல் பத்துப் பத்தாக விருத்தி பண்ணிக்கொண்டால் இருபதாவது தானமானது பரார்த்தமென்னும் அளவையுடைதாக ஆகின்றது. அந்தப் பரார்த்தம் எல்லாவற்றிற்கும் முடிவான எண்ணாகும். இருபது தானங்களுக்கும் பெயர்கள் வருமாறு:-

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், அயுதம், (பதினாயிரம்) இலட்சம், பிரயுதம், (பத்துலெட்சம்) கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகா பத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்யம், பரார்த்தம் என்பன. இந்த எண்களை ஏகம்பங்திசதே என்னுஞ் சுலோகத்தால் கூறியுள்ளார்.

ஆகவே நூறுகோடி யென்னுமெண்ணை ஒன்று என்னுந்தானத்தில் வைத்துக்கொண்டு அப்பு தத்துவ முதலிய தத்துவங்களின் எண்களை யெண்ண வேண்டும். நூறுகோடி யென்னுமெண் பத்மமெனக் கூறப்படும். ஆகவே, பத்மம் என்பது நூறுகோடி யென்னும் பொருளைத் தரும். எடுத்துக் கொண்ட பிருதிவி தத்துவம் ஒரு பத்மயோசனையளவுள்ளது. அப்புதத்துவம் பத்துப் பத்ம யோசனையளவுள்ளது. தேயுதத்தவம் நூறு பத்மயோசனையளவுள்ளது. வாயுதத்துவம் ஆயிரம் பத்மயோசனையளவுள்ளது. ஆகாய தத்துவம் அயுத பத்ம யோசனையளவுள்ளது. அகங்காரதத்துவம் இலட்சம் பத்ம யோசனையளவுள்ளது. புத்திதத்துவம் பிரயுத பத்மயோசனையளவுள்ளது. குணதத்துவம் கோடி பத்ம யோசனையளவுள்ளது. அதற்கு மேல் நூறு எண்களால் விருத்திப்படுவதால் கோடி முதலாக முறையே ஒன்றைவிட்டு அடுத்த ஒன்றைக் கொள்ளல் வேண்டும்.

எவ்வாறெனில்:- பிரகிருதி தத்துவம் பத்மயோசனையளவுள்ளது 1 அராக தத்துவம் நிகர்வயோசனையளவுள்ளது. நியதி தத்துவம் மகா பத்ம யோசனையளவுள்ளது. வித்தியாதத்துவம் மகா சங்க யோசனையளவுள்ளது. கலாதத்துவம் மகா சமுத்திர யோசனையளவுள்ளது. காலதத்துவம் பரார்த்த யோசனையளவுள்ளது.

(1 பத்மயோசனையைப் பிருதிவிக்குக் கொள்ளுங்கால் ஒன்றென்னுந்தானமாகவும், பிருகிருதிக்குக் கொள்ளுங்கால் பத்மமென்னுந் தானமாகவுங் கொள்க.)

ஆகவே, அப்பு முதல் காலமீறாகவுள்ள தத்துவக் கூட்டங்களின் ரூபமான தாமரைத்தண்டானது பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்மம் நிகர்வம், மகாபத்மம், மகாசங்கம், மகாசமுத்திரம், பரார்த்தமென்னும் பதின்மூன்று எண்களால் எண்ணத்தகுந்த யோசனையால் அளக்கப்பட்டதாக ஆகின்றது.

பரார்த்தத்திற்கு மேலும் எண் உண்டென்று சொல்லுமிடத்தில் பத்மத்தை முதலாவது தானமாகக் கொண்டு பத்திற் பெருக்காமல் கூறப்பட்ட தாமரை தண்டானது கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மத்தியம், பத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், கோடியால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மத்தால் விருத்தியடைந்த பரார்த்தமென்று இவ்வாறாக பதின்மூன்று எண்ணின கூட்டத்தால் அளக்கத் தகுந்த யோசனையுயாமுள்ளதாக ஆகின்றது.

நாளத்திலடங்கியுள்ள புவனங்களுக்கு ஆதாரங்களான கந்தமுதலிய தன்மாத்திரைகளைந்து; கன்மேந்திரியங்களைந்து; ஞானேந்திரியங்களைந்து, மனம் ஒன்று ஆகிய இவற்றிற்கு வேறு வேறளவு இல்லையென்னும் மதத்தில் அளவு கிடையாது. புவனங்களுக்கு ஆதாரமாயிருப்பது பற்றி அவற்றிற்கு அளவு உண்டென்னும் மதத்தையனுசரித்து அவற்றினளவைக் கூறுகின்றோம்.

ஒரு பத்மயோசனையளவுள்ள பிருதிவி தத்துவத்தினின்றும் அப்பு முதலிய பூதம் நான்கு, தன்மாத்திரையைந்து; கன்மேந்திரியமைந்து; ஞானேந்திரியமைந்து; மனமொன்று ஆகிய இருபது தத்துவங்களுக்கும் ஒன்றுக்கொன்று பத்து மடங்கு அதிகமான யோசனையுண்டு. அகங்காரம் புத்தியென்னுமிவற்றிற்கு நூறுமடங்கும், பிரகிருதிக்காயிரமடங்கும், புருடனுக்கு அயுத மடங்கும், நியதிகாலமென்னுமிவற்றிற்கு இலட்சமடங்கும், அராகம், வித்தை, கலையென்னும் மிவற்றிற்குப் பத்துலட்சமடங்கும், மாயைக்குக் கோடி மடங்கும், சுத்த வித்தைக்குப் பத்து கோடி மடங்கும் ஈசுவர தத்துவத்திற்கு நூறுகோடி மடங்கும், சதாசிவ தத்துவத்திற்கு ஆயிரங்கோடி மடங்கும், சத்தி தத்துவத்திற்கு அயுதங்கோடி மடங்கும் அதிகமான யோசனையுண்டு. சிவதத்துவத்திற்கு யோசனையினளவு கிடையாது. இந்த மதமானது புருடன் மாயையெனினுந் தத்துவங்களுக்கு நடுவிலிருக்கும் ஐந்து தத்துவங்களுக்கும் முற்பிற்பாடென்னும் முறையின் வேறுபாட்டையனுசரித்துப் பிரதிவிருத்தித்தது. இந்த மதத்தில் பிருதிவி முதல் மனமீறாக இருபத்தொரு தத்துவங்களும் ஒன்றுக்கொன்று பத்துப்பத்து மடங்கு அதிகமாயிருத்தலால் முறையே ஒன்று பத்து, நூறு, ஆயிரம், அயுதம், இலட்சம், ப்ரயுதம், கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்தியம், பரார்த்தம், பத்துப் பரார்த்தம் ஆகிய யோசனைகளையுடையன. அகங்காரம் புத்தியென்னுமிவை மேல் மேல் நூறு மடங்கதிகமாயிருத்தலால் முறையே ஆயிரத்தால் விருத்தியடைந்ததாயும் லக்ஷத்தால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனையையுடையன. பிரகிருதியானது ஆயிரமடங்கு அதிகமாயிருத்தலால் அற்புதத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தின் யோசனையையுடையது. புருடதத்துவம் அயுதமடங்கதிகமாயிருத்தலால் பிருந்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தின் யோசனையையுடையது. நியதி, காலமென்னுமிவை இலட்சமடங்கதிகமாயிருத்தலால் முறையே மகாசமுத்திரத்தால் விருத்தியடைந்ததாயும், ஆயிரம் பரார்த்தத்தால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனைகளையுடையன. அராகம், வித்தை, கலையென்னும் இவை மேல் மேல் பத்துலட்சமடங்கதிகமாயிருத்தலால் முறையே பத்ம பரார்த்தத்தால் பிருத்தியடைந்ததாயும், மகாசங்கபரார்த்தத்தால் விருத்தி அடைந்ததாயும், நூறு பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தினால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனைகளையுடையன. ஆகவே இந்தப்பட்சத்தில் ஜல முதல் கலை ஈறான தத்துவக்கூட்ட ரூபமாயுள்ள தாமரைத் தண்டானது பத்து முதல் நூறு பரார்த்தத்துடன் கூடிய பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம் வரையுள்ள இருபத்தொன்பது எண்களால் எண்ணத்தகுந்த யோசனைகளின் அளவையுடையதாக ஆகின்றது.

தத்துவங்களினுடைய யோசனைகளின் மிகுதியை யனுசரித்துப் பிரதிவிருத்தித்த இந்த இரண்டு பக்கங்களிலும் தண்டினின்று முடிச்சிற்கும், முடிச்சில் நின்று இதழிற்கும் மிகுந்த யோசனை து£ரங்கொள்ளப்படுகின்றது.

அது வருமாறு :- முதலாவது பக்கத்தில் தண்டிலடஙகியுள்ள தத்தவங்களுள் கால தத்துவம் பரார்த்த யோசனையுடையது. கலாதத்துவம் அதனுடைய அளவில் நூறில் ஒரு பங்குடையது. வித்தை, நியதியென்னுமிவற்றை முன்னிட்ட முன்தத்துவங்கள் அதினின்றும் முறையே நூறிலொருபங் களவுடையன. ஆகையால் தாமரைத் தண்டானது சிறிது அதிகமான ஒரு பரார்த்த யோசனையையுடையத. மாயாரூபமான முடிச்சு நூறால் விருத்தியடைந்த பரார்த்த யோசனையையுடையது. காலத்தினின்றும் நூறு மடங்கு யோசனை மாயைக்கிருதத்தலால் அவ்வாறு கூறப்பட்டது. பத்மம் இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்த யோசனையையுடையது. மாயையினின்று பத்ம ரூபமான சுத்தவித்தை ஆயிரமடங்கதிகமாயிருத்தலால் அவ்வாறு கூறப்பட்டது.

இவ்வாறே இரண்டாவது பக்கத்திலும் முடிச்சு பத்மமென்னும் இவற்றின் யோசனைகளின் விரிவுகொள்ளப்படும்.

இவ்வாறு கூறப்பட்ட கிழங்கு முதல் தண்டு முடிச்சு பத்மமென்னும் இவற்றிற்குண்டான அளவு உலக சம்பந்தமான தாமரையை யனுசரித்ததன்று. நாபியிலிருக்கும் கிழங்கு முதற்கொண்டு இருதய மீறாகவுள்ள இருதய கமலத்தின் சொரூபத்தை யனுசரித்தது. ஆகையால் சிவாசன பத்மத்தைப் பாவனை செய்யுங்கால் கலை என்னுமளவால் விருத்தியையுடைய பக்கத்தை யனுசரித்தலேயுத்தமம்.

இந்தப் பத்மம் அனந்தாசனம், சிங்காசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசனமென்னும் ஐந்தாசனங்களை யுட்கொண்டிருப்பது. பிருதிவி தத்துவத்தி லடங்கியுள்ள கிளங்கிற்றான் ஆதாரசத்தியிருக்கின்றது. ஜலம் முதல் காலமீறான தத்துவங்களடங்கியிருக்கும் தண்டே அத்தண்டிற்கு மேனியிருக்கும் தாமரை மொட்டுடன் கூடி, ஆதார சத்திரூபமான பால்ச் சமுத்திரத்திலிருந்துண்டானதாயும் படங்களிலிருக்கும் இரத்தினங்களுடன் கூடினதாயுமுள்ள பாம்பின் வடிவம்போல் வடிவத்தை யுடையவராயும் எட்டு வித்தியேசுவரர்களுக்குளடங்கியவராயும் இருக்கும். அநந்தர் உருத்திரரென்னுமிவர்களை யுடையதாய் அனந்தாசனமெனப்படும்.

தண்டை யெல்லையாகவுடையதாயும், ஜல தத்துவமுதல் குண தத்துவம் வரை தண்டைச் சுற்றியிருப்பதாயுமுள்ளது சிங்காசம். அதற்குமேல் முடிச்சுவரை யோகாசனம். அதற்குமேல் தளம் கேசரமென்னும் ரூபமாயுள்ளவை பத்மாசனம். கர்ணிகைவிமலாசனம். கர்ணிகையின் மேலிருக்கும் மூன்று குணங்களாகவாவது, மூன்று மண்டலங்களாகவாவது, மூன்று தத்துவங்களாகவாவது இருப்பது விமலாசனமென்றுங் கொள்ளலாம்.

ஆயிரம் படங்களால் அலங்கரிக்கப்பெற்ற அநந்தரைச்சர்ப்பமாகக் சொன்ன காரணத்தால் அவருடைய போகதண்டமே நீண்டிருக்கும் நாளமாகும். அவருடைய சுருங்கிய படமேமொட்டாகும். இரைத்ததவிரத் தாமரையென்பது வேறில்லையாயினும் அந்தப் படத்தையே விரிந்திருப்பதாகத் தியானஞ் செய்யுங்காலத்தில் எட்டுத்தளமுடைய பத்மரூபமாகத் தியானஞசெய்ய வேண்டும்மென்பது பற்றிப் பத்மாசனத்தைக் கூறியுள்ளார்.

அல்லது வட்டமான வடிவத்தையுடையதாயும், கோடிசூரியன்போல் பிரகாசமுடையதாயும், சிங்காசனத்தின் கீழிருக்கிறதாயும், அநந்தரென்னுஞ் சர்ப்பரூபமாயும், அளவற்ற தாமரை ரூபமாயும், தண்டினின்றும் வேறாகவாவது, அல்லது வட்டமாயும் ஒன்றன் மேலொன்றாயுமிருக்கும் அநந்தன், வாசுகி, தட்சகன் கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகனென்னும் எட்டுச் சர்ப்பரூபமாகவாவது அநந்தாசனத்தைப் பாவிக்க வேண்டும்.

அல்லது சிங்காசனத்திற்குக்கீழ் இடபம், சிங்கம், பூதம், யானை யென்னுமிவற்றின் சொரூபம்போல் சொரூபத்தையுடைய தரும முதலிய நான்கு கால்களையுடையதாயும், அதர்ம முதலிய நான்கு பலகைகளையுடையதாயுமிருக்கும் கட்டிலின்மேல், ஐந்து படங்களுடன், வாலுடனுங் கூடியிருப்பவரும், படத்தின் நடுவில் வெண்பட்டு, பலவிதமான ஆபரணங்கள், அணிந்தவரும் வரம், அபயமென்னும் இவற்றையுடைய இருகைகளையுடையவருமாயுள்ள புருடவடிவமான சர்ப்பராசனையுடையதாயும், அந்தச் சர்ப்பராசனைச் சுற்றிக் கிழக்கு முதலிய திக்குக்களில் அநந்தன் முதல் குளிகனீறாகவுள்ள சர்ப்பங்கள் ஒற்றைப் படங்களுடன் அஞ்சலிபந்தஞ் செய்துகொண்டும், சர்ப்பராசனைப் பார்த்துக்கொண்டும் இருப்பனவாயும், சர்ப்பராசனுடைய சிரசில் மலர்ந்த எததனங்களையுடைய அநந்த தாமரையிருப்பதாகவும் பாவனைசெய்ய வேண்டும். இவ்விடத்தில் முதலாவது பக்கத்தையே கைக்கொண்டு சிவாசனத்தை யருச்சிக்கும் முறைவருமாறு:-

 

சிவாசன பூஜை

ஹாம் ஆதாரசத்தயே நம: நூறுகோடி யோசனையளவுள்ள பிரமாண்டத்தின் ரூபமான பிருதிவி தத்துவத்தை யளவாகவுடைய சிவாசனபத்மத்தின் கிழங்கு ரூபமுடையதாயும், வெண்மை நிறமுடையதாயும், பாசம், அங்குசம், அபயம், வரமென்னுமிவற்றைத் தரித்திருக்கிறதாயுமுள்ள ஆதாரசத்தியைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அநந்தாசனாய நம: ஜலம் முதல் காலமீறாகவுள்ள தத்ததுவங்களினளவான தண்டு ரூபமாயும் மாயையென்னும் முடிச்சுடன் கூடினதாயும், பதினோராயிரங்கோடி யோசனையுயரமுள்ளதாகவாவது, அல்லது பத்து, நூறு, ஆயிரம், அயுதம், இலட்சம், ப்ரயுதம், கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்தியம், பரார்த்தம், நூறால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், அற்புதத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பிருந்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், மகாசமுத்திரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரம் பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மபரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், மகாசங்க பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், நூறு பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மபரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தமென்னும் இவை ரூபமான முப்பதெண்களால் விருத்தியடைந்த தாமரை யெண்ணின் கூட்டத்தால் எண்ணத்தகுந்த யோசனையுயர முடையதாகவாவது இருக்கின்றதாயும், அதன் மேல் ஆயிரம் படங்களின் கூட்டரூபமான தாமரை மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டதாயும், ஒரு முகமும் நான்கு கைகளும் இருதயத்தின் நமஸ்கார முத்திரையும் உடையவராயுமிருக்கும் அநந்தர் உருத்திரரின் ரூபமான அநந்தாசனத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சிவாசனபத்ம நாளகண்டகேப்பியோ நம: பிருதிவியாகிய சிழங்கிலிருந்து தோன்றின சிவாசன பத்மத்தின் தண்டின் அவயவங்களினின்று முண்டான ஜலம் முதல் காலமீறான தத்துவங்களைப் பற்றியிருக்கும் அமரேச, பிரபாச, நைமிச, புஷ்கரௌஷதி, டிண்டி, முண்டி, பார, பூதல, லகுளீ, அரிச்சந்திர, ஸ்ரீசைல, ஜப்யேசுவர, ஆம்ராதகேசுவர, மத்தியமேசுவர, மகாகாள, கேதார, பைரவ, கயா, குருச்சேத்திர, நாகல, நகல, விமலேசுவர, அட்டகாச, மகேந்திர, பீமேசுவர, அவிமுக்த, வஸ்திராபத, உருத்திரகோடி, மகாலய, கோகர்ண, பத்ரகர்ண, சுவர்னாச்ச, ஸ்தாணு, சகலண்ட, துவிரண்ட, மகாகோட, மண்டலேகவர, காளாஞ்சன, சங்குகர்ண, ஸ்தூலேசுவர, ஸ்தலேசுவர, பைசாச, இராட்சத, யாக்ஷ, கந்தருவ, ஐந்திர, சௌமிய, பிராஜாபத்ய, ப்ராஹ்ம, அகிருத, கிருத, பைரவ, ப்ராம்ம, வைஷ்ணவ, கௌமார, ஒளமம்;, ஸ்ரீகண்ட, வாமதேவ, பீம, உக்கர, பவ, ஈசான, ஏகவீர; பிரசண்ட, உமாபதி, அஜ அநந்த, ஏகசிவ, குரோத சண்ட, சோதி, சூலேச்வர, சம்வர்த்த, பஞ்சாந்தக, ஏகவீர, சிகேத என்னும் பெயாகளையுடைய எழுத்தைந்து புவன ரூபங்களான முட்களைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சூத்திரேப்யோ நம: ஐந்து விபரியயங்களும், எட்டுச் சித்திகளும், ஒன்பது துஷ்டிகளும், இருபத்தெட்டுச் அசத்திகளும் ஆகிய ஐம்பது பாவங்களின் ரூபமாயிருக்கும் சிவாசனபத்மத்தின் தண்டிலுள்ள நூல்களைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு அநந்தாசன ரூபமான நாளபூசை செய்த பின்னர் நாளத்தைச் சுற்றியிருக்கும் சிங்காசனத்தையும் யோகசனத்தையும் பூசிக்க வேண்டும்.

ஹாம் தருமாய நம: சிவாசனத்தின் அக்கினி திக்கிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கத்தின் வடிவம்போன்ற வடிவத்தையுடையதாயும், ஜலமுதல் குணமீறான தத்துவம் வரை உயரமுடையதாயும், அக்கினிதிக்கிற்கு எதிர்முகமாயும், பிளக்கப்பட்டவாயும் திரும்பப்பட்ட கழுத்தும் உடையனவாய் வாயு மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், கற்பூரம் போல் நிறத்தையுடையதாயுமிருக்கும் தருமத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் ஞானாய நம: சிவசிம்மாசனத்தினுடைய நிருதி மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போல் வடிவத்தையுடையதாயும், ஜல முதல் குணமீறாகவுள்ள தத்துவம் வரை உயரமும் நிருதி திக்கிற்கு எதிர்முகமும் பிளக்கப்பட்டவாயும் திரும்பபட்ட கழுத்தும் உடையதாயும், ஈசான மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், குங்குமம் போல் நிறமுடையதாயுமிருக்கும் ஞானத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் வைராக்கியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய வாயு மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போன்ற வடிவமும் ஜல முதல் குண தத்துவம் வரையுயரமும், வரயுதிக்கிற்கு எதிர்முகமும் பிளக்கப்பட்டவாயும், திரும்பப்பட்ட கழுத்தும் உடையதாயும், அக்கினி மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், சுவர்ணம் போல் நிறமுடையதாயுமிருக்கும் வைராக்கியத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் ஐசுவரியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய ஈசான மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போல் வடிவமும், ஈசான திக்கிற்கெதிர்முகமும், ஜல முதல் குணமீறாகவுள்ள தத்துவம் வரையுயரமும், பிளக்கப்பட்டவாயும், திரும்பப்பட்ட கழுத்தும் உடையதாய் நிருதி மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், மேகம்போல் நிறமுடையதாயுமிருக்கும் ஐசுவரியத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அதர்மாய நம: சிவசிம்மாசத்தினுடைய கிழக்குப் பலகை ரூபமாயும், வெண்மையும் கருமையுமான வர்ணமுடையதாயும், புருடனுடைய சொரூபம் போல் சொரூபத்தையுடையதாயும், தென்பக்கத்திற்றலையும் வடபக்கத்திற்காலும் உடையதாயும், கீழ்முகமாயுமிருக்கும் அதர்மத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அஞ்ஞானாய நம: சிவசிம்மானத்தினுடைய தெற்குப் பலகை ரூபமாயும், வெண்மையுஞ் செம்மையுமான வர்ணமுடையதாயும், புருடனைப் போல் வடிவமுடையதாயும், கிழக்கே தலையும், மேற்கே காலுமுடையதாயும், கீழமுகமாயுமிருக்கும் அஞ்ஞானத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அவைராக்கியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய மேற்குப் பலகை ரூபமாயும், செம்மையும் பொன்மையுமான வர்ணமும், புருடனுடைய வடிவமுமுடையதாயும், வடக்கே தலையும் தெற்கே காலுமுடையதாயும், கீழ்முகமாயுமிருக்கும் அவைராக்கியத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அநைசுவரியாய நம: சிவ சிம்மாசனத்தினுடைய வடக்குப் பலகை ரூபமாயும், பொன்மையுங் கருமையுமான வர்ணமும், புருடனுடைய வடிவமும் உடையதாயும், மேற்கே தலையும் கிழக்கே காலுமுடையதாயும், கீழ முகமாயுமிருக்கும் அநைசுவரியத்தைப் பூசிக்கின்றேன்.

பின்னர், ஹாம் சிவ சிம்மாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு எல்லாச்சிம்மாசனங்களையும் பூசித்து யோகாசனத்தையும் பூசிக்கவேண்டும்.

யோகாசனத்தை, வெண்மை, செம்மை, பொன்மை, கருமை யென்னும் வர்ணங்களையுடையனவாய் பூதகண ரூபங்களாயிருக்கும் கிருத, திரேதா, துவாபர, கலியென்னும் நான்கு யுகங்களை அக்கினி முதலிய திக்கிலிருக்கும் கால்களாகவும், படிகம், காளமேகம், மாதுளம்பழம், மைக் குழம்பு என்னும் இவற்றின் வர்ணங்களை யுடையனவாயிருக்கும் அவ்வியத்தம், நியதி, கலை, காலமென்னும் நான்கு தத்துவங்களையும் கிழக்கு முதலிய திக்கிலிருக்கும் பலகையாகவும் அருச்சித்து, ஹாம் “சிவயோகாசன மத்திய பலகரூபாய ஸ்ரீ மகாவிஷ்ணவே நம:” என்று சொல்லிக்கொண்டு, பலகையின் நடுவில் நீல வர்ணமும், மூன்று கண்களும், சங்கு, சக்கரம், வரம், அபயமென்னும் இவற்றைதயுடைய கைகளையுமுடையவராயிருக்கும் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும்.

பின்னர், இரஜோகுணாருணாய தமோகுணதூலபரிதாய மாயாரூபாய அதச்சதனாய நம: என்று சொல்லிக்கொண்டு, யோகாசனத்தின் மேல் மேகலைக்குக் கீழ் பாகத்தில் பரப்பப்பட்டதாயும் படுக்கை ரூபமாயுமிருக்கும் அதச்சதனத்தை நிறுதிமூலையிற் பூசிக்க வேண்டும்.

அதன் பின்னர் “ஹாம் சத்துவ குணதவளிதாய சுத்த மாயா ரூபோர்த்துவச்சதனாய நம:” என்று சொல்லிக்கொண்டு, மேகலைக்குமேல் படுக்கையின் உத்தரச் சதனரூபமாயிருக்கும் ஊர்த்துவச் சதனத்தை நிறுதி மூலையிற் பூசித்து, ஹாம் சிவயோகாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு, யோகாசனம் முழுமையும் பூசிக்க வேண்டும்.

யோகாசனம் விமலாசனங்களின்றி அநந்தாசனம் சிங்காசனம் பத்மாசனமென்னும் மூன்று ஆசனங்கள் தான் சிவாசனமென்னும் பக்ஷத்தில் சிங்காசனத்தையே மாயாக் கிரந்தி வரையுயரமுடையதாகப் பாவித்து, அதன் கால்களையும் பலகைகளையும் பூஜித்த பின்னர், அக்கினி முதலிய மூலைகளிலிருக்கும் அவ்வாசனப் பலகைகளைச் சேர்க்கக் கூடிய கீல் ரூபமாக கிருதயும் முதலிய நான்கு யுகங்களையும் பூசித்து, அதன் மத்தியில் பலகை ரூபமாகவே மகாவிஷ்ணுவையும் பூசித்து, அதச்சதனத்தையும் ஊர்த்துவச்சதனத்தையும் பூசிக்க வேண்டும்.

பின்னர் அநந்தரின் பணாமண்டலரூபமான தாமரை மொட்டை விரிந்ததாகப் பாவித்து அதனுடைய தளத்தையுங் கேசரத்தையும் பூசிக்க வேண்டும்.

ஹாம் சிவாசன பத்மதளேப்யோ நம:, அட்டவித்தியேசுவரர்களின் ரூபமாயும், வெண்மை வர்ணமுடையனவாயுமிருக்கும் சிவாசன பத்மத்தின் தளங்களைப் பூசிக்கின்றேன்.

ஹாம் கேசரேப்பியோ நம:, அடியில் சுவர்ண வர்ணங்களாயும், நடுவில் பவள வர்ணங்களாயும், நல்முத்தின் வடிவுகோல் வடிவமுடைய சிரசால் அலங்கரிக்கப்பட்டவையாயும், அறுபத்து நான்கு கலா ரூபங்களாகவாவது, அல்லது வாமை முதலிய சத்திகளுடன் கூடின அட்டருத்திரர்களின் ரூபங்களாகவாவது இருக்குங் கேசரங்களைப் பூசிக்கின்றேன்.

கேசரங்களை அட்டருத்திர ரூபமாக வைத்துக் கொள்ளும் பக்ஷத்தில் எட்டு எட்டுக் கேசரங்களை ஒவ்வொரு ருத்திர ரூபமாகப் பாவிக்க வேண்டும். அல்லது படங்கள் ரூபமான ஆயிரந்தளங்களுடன் கூடின அநந்த பத்மத்திற்கும் ஆயிரங்கேசரங்கள் இருக்கின்றனவாகையால் அவற்றை நூற்றிருபத்தைந்து நூற்றிருபத்தைந்தாக எட்டு பாகமாகப் பிரித்து வாமம் முதலிய அட்டருத்திரரூபமாகப் பூசிக்க வேண்டும். அல்லது கர்ணிகையுடன் கூடின எட்டுக் கேசரங்களையாவது அட்டருத்திர ரூபமாகப் பூசிக்கவேண்டும். இப்பொழுது கூறிய இந்த விதியை அட்டவித்தியேசுவரர்களின் ரூபமாகப் பூசிக்கவேண்டிய தளங்களிலும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

ஹாம் கர்ணிகாயை நம: பரிசுத்தமாயும், சத்தி சொரூபமாயும், சுவர்ணவர்ணமுடையதாயுமிருக்கும் சிவாசன பதமத்தின் கர்ணிகையைப் பூசிக்கின்றேன்.

ஹாம் பீஜேப்பியோ நம: வாமை முதலிய ஒன்பது சக்திகள் ரூபமாகவாவது, அல்லது ஐம்பது அக்கரங்கள் ரூபமாகவாவதிருக்கும் சிவாசன பத்மத்தின் கர்ணிகையிலுள்ள வித்துக்களைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிப் பூசித்துப் பின்னர் பத்மத்தை யெல்லா அவயவங்களுடன் கூடினதாகப் பாவனை செய்து, ஹாம் பத்மாசனாய நம: என்று சொல்லிப் பூசித்து, ஹாம் பத்ம முத்திராயை நம: என்று சொல்லிக்கொண்டு பத்ம முத்திரை காட்டவேண்டும்.

பின்னர், கிழக்கு முதல் பிரதக்ஷிணமாக எட்டு எட்டுக்கேசரங்களையும், வாமை முதலிய எட்டுச் சத்திகளையும், வாமாயை நம:, ஜியேஷ்டாயை நம:, ரௌத்திரியை நம:, காள்யை நம:, கலவிகரிண்யை நம:, பலவிகரிண்யை நம:, பலப்பிரமதினியை நம:, சர்வபூததமனியை நம: என்று சொல்லிக் கொண்டு, செம்மை வர்ணமுடையவர்களாயும், சாமரங்களைத் தரித்திருக்கிறவர்களாயும், சிவாசனத்தில் வைக்கப்பெற்ற ஒரு கையையுடையவர்களாயும் சிவனுக்கெதிர்முகமாக கேசரங்களிலிருக்கிறவர்களாயுமுள்ள வாமை முதலிய சத்திகளைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டு தனித்தனி பூசிக்க வேண்டும்.

மனோன்மனியை நம: படிக வா¢ணமுடையவளாயும், பாசம் அங்குசம் அபயம் வரமென்னும் இவற்றைத் தரிக்கிறவளாயும், சிவாசன பத்மத்தின் கர்ணிகையின் இசான திக்கின் மத்தியிலாவது அல்லது ஈசானதிக்கிலாவது இருக்கிறவளாயுமுள்ள மனோன்மனியைப் பூசிக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு மனோன்மனியைப் பூசிக்க வேண்டும்.

பின்னர் அதிபதியுடன் கூடின சூரியன் சந்திரன் அக்கினி சத்தியாகிய இம்மண்டலங்களை மேல் மேல் பூசிக்க வேண்டும். எவ்வாறெனில் :-

ஹாம் சூரியமண்டலாய நம:, கோடி சூரியனுடைய காந்திபோல் காந்தியையுடையதாயும், சிவனுடைய பத்மாசனத்தின் தளத்தின் நுனியை வியாபித்துக் கொண்டிருக்கிறதாயும் உள்ள சூரியமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சூரியமண்டலாதிபதயே பிர்மணே நம: ஐந்து முகத்தையும், நான்கு கைகளையும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களையும், உருக்கி சுவர்ணத்தின் காந்தியையும் உடையவராயும், நமஸ்கார முத்திரையுடன் கூடினவராயும், சிருட்டிக்குக் காரணபூதராயும், ஆன்மதத்துவ ரூபியாயும், சூரியமண்டலத்திற்கு அதிபதியாயுமுள்ள பிரமாவைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சோமமண்டலாய நம: சிவாசனப்த்மத்தின் கேசரங்களினுடைய நுனியை வியாபிக்கிறதாயும், கோடி சந்திரனுடைய குளிர்ச்சியையுடையதாயும் உள்ள சோமமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சோமமண்டலாதிபதயே விஷ்ணவே நம: மேகம் போல் கருமை வர்ணமுடையவராயும், சங்கு சக்கரம் நமஸ்கார முத்திரைகளுடன் கூடின நான்கு கைகளையுடையவராயும், திதிக்கும் காரணராயும், சோமமண்டலத்திற்கதிபதியாயுமுள்ள விஷ்ணுவைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அக்கினிமண்டலாய நம: சிவாசனபத்மத்தின் கர்ணிகையின் நுனியை வியாபித்துக்கொண்டிருக்கும் அக்கினிமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் அக்கினிமண்டலாதிபதயே ருத்திராய நம: இரத்தினவா¢ணமுடையவராயும், சூலம் அக்கினி நமஸ்கார முத்திகளுடன் கூடின நான்கு கைகளையுடையவராயும், ஒடுக்கத்திற்குக் காரணராயும், சிவதத்துவ ரூபியாயும், அக்கினி மண்டலத்திற்கதிபதியாயுமுள்ள உருத்திரரைப் பூசிக்கின்றேன்.

விமலாசனமானது கர்ணிகையினும் வேறு என்னும் பட்சத்தில் அக்கினிதிக்கு முதற்கொண்டு ஈசானதிக்கு முடிய முக்குணங்களையும், தெற்கு முதற்கொண்டு வடக்கு முடிய சூர்யசோம அக்கினி ஆகிய இவற்றின் மூன்று மண்டலங்களையும், திருதி முதற்கொண்டு வாயு மூலை முடிய சிவதத்துவம், வித்தியாதத்தும், ஆன்மதத்துவ மென்னும் மூன்று தத்துவங்களையும் பூசித்து, ஹாம் விமலாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு விமலாசனம் முழுமையும் பூசிக்க வேண்டும்.

அதன் பின்னர் விமலாசனத்தின் நடுவில், ஹாம் சத்திமண்டலாய நம: வெண்மை வர்ணமுடையதாயும், மூன்று மண்டலங்களையும் வியாபிக்கிறதாயுமுள்ள இச்சாசத்தி ரூபமான சத்தி மண்டலத்தைப் பூசிக்கின்றேன்.

ஹாம் சத்தி மண்டலாதிபதயே மகேசுவராய நம: படிக வர்ணமுடையவராயும், எட்டுக் கைகளையுடையவராயும், கத்தி, திரிசூலம், பாணம், அச்சமாலை, கமணடலம், அபயம், வரம், தாமரையென்னும் இவற்றைத் தரிக்கிறவராயும், சத்திமண்டலத்திற்கு அதிபதியாயுமிருக்கும் மகேசுவரனைப் பூசிக்கின்றேன்.

பின்னர் எல்லாச் சிவாசனங்களையும் தியானஞ் செய்து ஹாம் சிவாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு, அந்தச் சத்திமண்டலத்திற்கு மேல் ஞான சத்தி சொரூபமான சிவாசனத்தைப் பூசிக்க வேண்டும்.

இந்த ஆசன முறையில் ஆர்மார்த்த பூசையில் ஆதார சத்தியைப் பிரமாவின் பாகமான பத்ம பீடத்திற் பூசித்து அநந்தர் முதற்கொண்டு சத்திமண்டலம் முடிய லிங்க வேதிகையில் மேலும் மேலும் லிங்கத்தின நாவிவரை பூசிக்கவேண்டும்.

இவ்வாறு தனித்தனி சிவாசனத்தின் அவயவங்களைப் பூசிப்பதற்குச் சத்தியில்லையாயின், சாங்கோபாங்கமாக சிவாசனத்தைப் பாவனை செய்து ஹாம் சிவாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு பூசை செய்ய வேண்டும். இது அநேக ஆசனங்களையுடைய சிவாசனத்தையருச்சிக்கும் முறையாகும்.

இவ்வாறன்றி ஆவாகனஞ் செய்யும் பொழுது பத்மாசனத்தையும், அபிடேக காலத்தில் அநந்தாசனத்தையும், அருச்சிக்குங் காலத்தில் விமலாசனத்தையும், நைவேத்திய காலத்தில் யோகாசனத்தையும், ஆடை சாத்துதல் முதலிய ஏனைய உபசார காலங்களில் சிங்காசனத்தையும் பூசிக்க வேண்டும். அல்லது அபிடேக காலத்தில் சிங்காசனத்தையும், ஆடை சாத்துங்காலத்தில் அநந்தாசனத்தையும், ஆபரணம் சந்தனம் புஷ்பம் அணியுங் காலத்தில் பத்மாசனத்தையும், நைவேத்திய காலத்தில் விமலாசனத்தையும், ஏனைய உபசார காலங்களில் யோகாசனத்தையும் பூசிக்க வேண்டும்.

இவ்வாறு சிவாசனத்தைப் பூசித்து ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று சொல்லிக்கொண்டு இலிங்கத்தின் நாபியில் மகேசுவர தத்துவ ரூபமாயும், நிலையுடைய மின்னலின் காந்திபோல் காந்தியையுடையதாயும், தண்டாகாரமாயும், வேறுபடாத அவயவங்களை யுடையதாயுமுள்ள சிவனுடைய மூர்த்தியைப் பூசித்து, இலிங்கம் பெரிதாயிருந்தால் ஹோம் ஈசான மூர்த்தனே நம: என்பது முதலிய மந்திரங்களால் தண்டபங்கி நியாசம்முண்டபங்கி நியாசம் கலாபங்கி நியாசங்களோடு சிரசு முதல் பாதம் வரை ஈசான முதலிய மந்திரங்களை நியாசஞ் செய்து சத்தியோடு கூடியதாகவாவது கூடாததாகவாவது அந்த அந்த அந்தத்தானங்களில் முப்பத்தெட்டுக் கலைகளையும் நியாசஞ் செய்யவேண்டும். சூத்திரர் சசினி முதலிய சத்திகளையே நியாசஞ் செய்யவேண்டும். பின்னர் ஸ்ரீ கண்ட முதலிய நியாசங்களையும் செய்யவேண்டும். இவ்வாறு சதாசிவதேகஞ் சித்திக்கும் பொருட்டு நியாசங்களைச் செய்து ஹாம் ஹெளம் வித்தியாதேகாய நம: என்று சொல்லிக் கொண்டு பிரிக்கப்பட்ட அவயவங்களோடு கூடிய வித்தியா தேகத்தையுடைய சதாசிவத்தைப் பூசித்து அவருடைய சொரூபத்தை விரிவாய்த் தியானஞ் செய்ய வேண்டும்.

 

சதாசிவத்தியானம்

ஈசுவரனுடைய சமீபத்திலிருக்கிறதாயும், நிலைத்த மின்னற் பிரகாசத்தையுடையதாயும், பிரிவுபடாத அவயவத்தை யுடையதாயுமிருக்கின்ற மூர்த்தியுடன் பிரகாசிக்கும் மேல்ப் பாகத்தையுடையதாயும், பூமிமுதல் சுத்தவித்தைஈறான தத்துவங்களாகிய கிழங்கு தண்டு தளங்களையுடையதாயும், கர்ணிகை கேசரங்களுடன் கூடினதாயும், சூரிய பிம்பம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டதாயும், பலவிதமான கூடாரங்களையுடைய அநேககோடி யோசனையின் உயரம்போல் பிரகாசிக்கிறதாயுமுள்ள பத்மத்தின் மேலிருக்கிறவராயும், மகாபத்ம கோடி யோசனையால் அளவிடப்பட்டவராயும், பத்மாசனத்தில் இருப்பவராயும் சதாசிவத்தைத் தியானஞ் செய்ய வேண்டும். அலலது,

கிழங்காகிய பிருதிவிதத்துவம் முதற்கொண்டு தேஜோமூர்த்தியாகிய மகேசுவர தத்துவம் வரையுள்ள பதினேழுதானங்களில் கூடாங்கோடி என்பது முதலிய வாக்கியங்களாற் பெறப்படும் ஆயிரலக்ஷம் பரார்த்த எண்ணால் அளவிடப்பட்ட மிகுந்த யோசனைகளால் எண்ணத்தகுந்த அளவையுடைய சிறப்புற்ற தாமரையின்மேல் யோகபீடத்தில் வீற்றிருப்பவராகச் சதாசிவமூர்த்தியைத் தியானஞ் செய்ய வேண்டும்.

“கூடாங்ககோடீ கடகநடநடீ நாட்ய நவ்யாந்நபாந த்யாநா பித்யாந காநீநக” என்னும் வாக்கியங்கள் இருப்தெட்டு அக்கரங்களை யுடையன. சோதிட சாத்திர முறையில் இவை இருபத்தெட்டுத் தானங்களாகும். இருபதாவது தானம் பரார்த்தமாகையால் மேன் மேல் பத்துமடங்கதிகமாகக் கொள்ளின் இருபத்தெட்டாவது தானம் ஆயிரலக்ஷம் பரார்த்தமாகுமாறு காண்க.

அல்லது பத்துப் பிரயுத பரார்த்தத்தின் யோசனையுடையதாயும், கணக்குக்கடங்காத பரார்த்த யோசனையுடையதாயுமிருக்கும் உயரமுடையவராயும், தாமரையிலிருப்பவராயும் சதாசிவத்தை தியானிக்க வேண்டும்.

இன்னும் கந்தத்தில் பத்மயோசனையும், நாளத்தில் முறையே பத்து மடங்கதிகமாயும், இன்னுமிதுபோல் இரண்டு மூன்று தானங்களில் நூறுமுதல் பத்து லக்ஷம் வரையுள்ள எண்களால் விருத்தியடைந்ததாயும், கிரந்தியில் கோடியெண்ணும், பத்ம முதலியவற்றில் பத்துக் கோடியும் ஆகிய இந்த எண்களையுடைய யோசனைகளால் மகிமைபெற்றதாயுமுள்ள பெரிதான யோகபீடத்தில் இருக்கிறவராயும், அதன்மேல் நூறுகோடி யோசனைகளின் சமூகத்தால் பிரசித்தமான மகேசுவர தத்துவமளவாக உண்டான சரீரங்களால் பிரகாசிக்கிறவராயும், அதற்கு மேலும் அதனுடைய ஆயிரங்கோடியினாலும், அயுதகோடியினாலும் விருத்தியடைந்தவராயும் சதாசிவத்தைத் தியானம் செய்ய வேண்டும்.

இன்னும் ஐந்து முகமும் பத்துக்கைகளும் ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களும், வலதுகையில் சூலம், வச்சிரம், கத்தி, பரசு, அபயமுத்திரைகளும், இடதுகையில் நாகம், பாசம், மணி, அக்கினி, ஈட்டிகளும், அல்லது வரம், கட்வாங்கம், லேம், அபயம், சத்தியென்னுமைந்து முடையவராயும், மாதுளம்பழம், உடுக்கை, சா¢ப்பம், நீலோற்பலம், அக்ஷமாலிகை யென்னும் இவற்றையுடையவராயும் சதாசிவத்தைத் தியானிக்க வேண்டும்.

இந்தச் சதாசிவதேவருடைய ஊர்த்துவமுகமானது சிசுத்தன்மையுடன் கூடினதாயும், அழகாயும், தௌ¤வாயும், மேல் நோக்கியதாயும், படிகத்தின் பிரபையையுடையதாயும், நிர்மலமாயுமிருக்கும்.

கிழக்கு முகமானது உருக்கின தங்கத்தின் காந்தியையுடையதாயும், கெம்பீரமுடையதாயும், சுமுகமாயும், இளமையான காலைப் பருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.

தெற்கு முகமானது கருமை வர்ணமுடையதாயும், புருவநெரித்தலுடன் கூடினதாயும், பயங்கரமாயும், செம்மையும் வட்டமுமான மூன்று கண்களையுடையதாயும், கோரப்பற்களால் பயங்கரமாயும், ஒருவராலும் அதிக்கிரமிக்க முடியாததாயும், உதடு துடித்துக்கொண்டிருப்பதாயும், சந்திரனைச் சிரோபூஷணமாக வைத்துக்கொண்டிரத்தலால் பிரகாசிக்கும் கேசத்தையுடையதாயும், பூரணமான காளைப்பருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.

வடக்கு முகமானது புதிதான பவளத்தின் பிரபையையுடையதாயும் நெற்றியில் திலகத்தை யணிந்துகொண்டிருப்பதாயும், கருமையான சுருண்ட கூந்தல்களால் பிரகாசிப்பதாயும், யாவரையும் கவரக்கூடியதாயும், மூன்று நேத்திரங்களுடன் கூடினதாயும்; சந்திராபரணத்தால் பிரகாசிக்கிறதாயும், பார்வதியினுடைய முகம்போன்றிருப்பதாயும், விளையாட்டுடன் கூடின கொடிபோன்ற புருவத்துடன் கூடினதாயுமிருக்கும்.

மேற்கு முகமானது சந்திரனுக்குச் சமானமாயும், இராஜலட்சணங்களுடன் கூடினதாயும், சந்திரனைச் சிரோபூஷணமாக அணிந்திருத்தலால் விரும்பத்தக்கதாயும், தியானத்தால் அசைவற்ற கண்களையுடையதாயுமிருக்கும்.

இவ்வாறு தியானித்த பின்னர் இன்னுமொரு விதமாகத் தியானிக்க வேண்டும். அது வருமாறு :- இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி ரூபமாகப பிரகாசிக்கும் மூன்று கண்களையுடையவராயும், ஞானமாகிய சந்திரகலையைச் சிரோபூஷணமாக உடையவராயும், பத்துத் திக்குகளில் கைகளையுடையவராயும், பஞ்சப்பிரம மந்திர வடிவமான முகத்தையுடையவராயும் ஐந்து சாதாக்கிய ரூபமான முகத்தையுடையவராயும், மகிமை பொருந்திய பஞ்சாக்கரங்களின் சொரூபமான முகம் தோள்கள் துடைகளையுடையவராயும், எல்லாத்தந்திர ரூபராயும், வர்ணம் பஞ்சப்பிரமம் கலைகளின் ரூபராயும், முழங்கால்வரை நிவிருத்திகலையினாலும், நாபிவரை பிரதிட்டாகலையினாலும், கண்டம்வரை வித்தியாகலையினாலும், லலாடம்வரை சாந்திகலையினாலும், அதற்குமேல் சாந்தியதீத கலையினாலும் இவ்வாறு ஐந்து கலாரூபமுடையவராயும் தியானிக்கவேண்டும்.

நிவிருத்திகலையானது நான்கு நகமுடையதாயும், மின்னல் வர்ணமுடையதாயும், வச்சிரத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயுமிருக்கும்.

பிரதிட்டாகலையானது ஒருமுகத்துடன் கூடினதாயும், சந்திரனுடைய காந்தியையுடையதாயும், தாமரைப் புஷ்பத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயுமிருக்கும்.

வித்தியாகலையானது அக்கினிபோன்ற வர்ணமுடையதாயும், மூன்று முகமுடையதாயும், சத்தியினால் பிரகாசிக்குங் கையையுடையதாயுமிருக்கும்.

சாந்திகலையானது கொடியைத் தரித்துக்கொண்டிருப்பதாயும், கருமை வர்ணமுடையதாயும், நான்கு முகத்துடன் கூடினதாயுமிருக்கும்.

சாந்தியதீதகலையானது சந்திரனுடைய பிரபைபோல் பிரபையையுடையதாயும், பாசத்தைத் தரித்துக் கொண்டிருப்பதாயும், ஐந்து முகங்களுடன் கூடினதாயுமிருக்கும்.

எல்லாக்கலைகளும் பத்மம் அக்கமாலைகளாலும், அபயத்தாலும் பிரகாசிக்கின்றவையாயும், நான்கு கைகயையும், மூன்று கண்களையும், பருத்தும், உன்னதமுமான தனங்களையும் உடையனவாயுமிருக்கும்.

இந்தக் கலைகளில் ஐந்து அத்துவாக்களும் அடங்கியிருக்கின்றனவாகையால் சதாசிவர் ஆறு அத்துவாக்களின் சொரூபமாக ஆகின்றார்.

ஆறத்துவாக்களாவன:- மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்பன. இருநூற்றிருபத்துநாலு புவனங்களும் புவனாத்துவா வெனப்படும். இப்புவனங்கள் ஈசுவரனுக்கு உரோம ரூபமாயிருக்கின்றன. ஐம்பது ருத்திரர்களின் ரூபமாயிருக்கும் வர்ணங்கள் வர்ணாத்துவா வெனப்படும். இந்த வர்ணங்கள் ஈசுவரனுடைய தோல் ரூபமாக இருக்கின்றன. மந்திராத்துவாவானது ஈசுவரனுக்கு இரத்தரூபமாக இருக்கின்றது. பதாத்துவாவானது ஈசுவரனுக்கு நரம்பாயும் ஊனாயுமிருக்கின்றது. முப்பதாறு தத்துவங்களே தத்துவாத்துவாவெனப்படும். இது ஈசுவரனுக்குச் சுக்கிலம், மச்சை, எலும்புகளின் ரூபமாக விருக்கின்றது.

இவ்வாறு கூறினமையால் ஈசுவரனுடை சரீரம் இரத்தம் எலும்பு முதலியவற்றால் செய்யப்பட்டதெனக் கருதக்கூடாது. ஈசுவரனுடைய தேகத்தில் எலும்பு இரத்தம் ஊன்கள் சிறிதுங்கியா. கண்ணாடியில் பிரதிபிம்பம்போலும், ஆகாசத்தில் இந்திரதனுசுபோலும், ஈசுவரனுடைய சரீரமிருக்கின்றது. சதாசிவருடைய இந்தச் சரீரமானது சோதிசொரூபமாகச் சித்தித்துள்ளது. ஆயினும் இவ்வாறு கூறியது கலைகளின் உள்ளடங்கிய அத்துவாக்களின் *கற்பனையாகும்.

( *கற்பனை - தியானத்தின் பொருட்டுக் கொள்ளப்பட்ட தடத்தடிவம்)

பஞ்சப்பிரம மந்திரங்களுள் ஈசானத்தால் சிரசையும், தர்ப்புருடத்தால் நான்கு முகங்களையும், அகோரத்தால் இருதயம் முதலியவற்றையும், வாமதேவத்தால் குய்யம் முதலியவற்றையும், சத்தியோசாதத்தால் ஈசுவரனுடைய பாதமுதலியவற்றையும் தியானிக்க வேண்டும்.

இந்த ஐந்து முகங்களும் பத்துக் கைகளால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், கட்கம், கேடகம், தனுசு, பாணம், கமண்டலம், அக்ஷமாலை, வரம், அபயம், சூலம், தாமரைப்பூ வென்னுமிவற்றைப் பத்துக் கைகளிலுமுடையனவாகவும் தியானிக்க வேண்டும். ஐந்து முகங்களுள் அகோரமுகம் பயங்கரமாக இருக்கும். ஏனைய முகங்கள் சுமுகமாயிருக்கும். இவ்வாறு பஞ்சப்பிரம மந்திரவடிவமாயிருக்கும் ஈசுவரனுடைய தன்மையைத் தியானித்து அந்தந்தப் பிரமத்தின் கலைகளுடைய பேதத்தால் தியானஞ்செய்து அங்கங்களையும் கற்பிக்க வேண்டும். அது வருமாறு:-

ஈசான மந்திரத்தின் ஐந்து கலைகளும் ஐந்து சிரசுகளாகவும், தத்புருட மந்திரத்தின் நான்கு கலைகளும் நான்கு முகங்களாகவும், அகோரத்தின் எட்டுக்கலைகளும் இருதயம், கழுத்து, தோள்கள், நாபி, வயிறு, பிருஷ்டம், மார்புகளாகவும், வாமதேவத்தின் பதின்மூன்று கலைகளும் குய்யம், துடைகள், முழங்கால்கள், கரண்டைக்கால்கள், இடுப்பின் மேற்பாகங்கள், இடுப்புகள், இருபக்கங்களாகவும், சத்தியோசாதத்தின் எட்டுக்கலைகளும் கால்கள், கைகள், மூக்கு, சிரசு, புயங்களாகவுமிருக்கின்றன.

முப்பத்தெட்டுக் கலைகளின் திட்டான தேவர்கள் மூன்று கண்களும், நான்கு முகங்களும், வரம், அபயம், பரசு, மான் என்னும் இவற்றையுடைய தாமரைபோன்ற கைகளும் உடையவர்களாயும், அந்தந்தப் பிரமத்திற்குச் சமானமான வடிவம் வர்ணம் ஆயுதங்களையுடையவர்களாயு மிருக்கின்றனர். இவர்களுடைய இடது பக்கங்களில் பாசம், ஈட்டி, அபயம், வரமென்னு மிவற்றையும், சிரித்த முகத்தையுமுடைய சசினி முதலிய சத்திகளைத் தியானிக்கவேண்டும். அக்கரரூபர்களாயும், சத்தியுடன் கூடினவர்களாயும், இருக்கின்ற ஸ்ரீ கண்டர் முதலிய ருத்திரர்களை ஈசுவரனுடைய அவயவங்களாக நியாசஞ் செய்யும் வழியாய்த் தியானிக்க வேண்டும்.

அன்றியும் குங்குமம் சுவர்ணங்களின் காந்தியோடு கூடிய இடது வலது பக்கங்களையுடையவர்களாயும், பாசம், அங்குசம், அக்ஷமாலை, வரமுத்திரை களையுடையவர்களாயும், தாமரைபோன்ற தௌ¤வான முகங்களையுடையவர்களாயும், அனைவருடைய விருப்பங்களையும் பூர்த்திசெய்கிறவர்களாயும், அர்த்தனாரீசுவர வடிவமுடையவர்களாயும், சத்தியுடன் கூடினவர்களாயுமிருப்பவர்களாக உருத்திரர்களைத் தியானிக்க வேண்டும்.

அன்றியும் காமிகாகமம் இருகால்களாகவும், யோகஜம்கணுக்கால்களாகவும், சிந்தியம் கால்விரல்களாகவும், காரணம் முஷ்டிகளாகவும், அஜிதம் இரண்டு முழங்கால் களாகவும், தீப்தம் இரண்டு துடைகளாகவும், சூக்குமம் குய்யமும் பீஜங்களுமாகவும் சகஸ்ரம் இடுப்பாகவும், அம்சுமான் பிருஷ்டபாகமாகவும், சுப்ரபேதம் தொப்புளாகவும், விஜயம் வயிறாகவு நிசுவாசம் இருதயமாகவும், சுவாயம்புவம் ஸ்தனங்களாகவும், அநலம் மூன்று கண்களாகவும், வீரம் கழுத்தாகவும், இரௌரவம் இரண்டு காதுகளாகவும், மகுடம் கிரீடமாகவும், விமல கைகளாகவும், சந்திரஞானம் மார்பாகவும், விம்பம் முகமாகவும், புரோத்கீதம் நாக்காகவும், லளித்ம் இரகன்னமாகவும், சித்தம் பலகைபோன்ற நெற்றியாகவும், சந்தானம் இரண்டுகுண்டலமாகவும், சர்வோக்தம் பூணூலாகவும், பாரமேஸ்வரம் மாலையாகவும், கிரணம் இரத்தினமயமான ஆபரணமாகவும், வாதுளம் ஆடையாகவும் இவ்வாறு ஈசுவரனுடைய தந்திரரூபமான சரீரத்தைத் தியானஞ்செய்ய வேண்டும். இந்தத் தியானம் மனிதருக்குச் சிவஞானத்தைத்தரும்; சிவதருமத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணும்.

ஈசுவரனுடைய நான்கு பக்கங்களிலும் பிரகாசிக்குஞ் சோதியையுடையதாயும், சுத்தமாயும், மின்னற் கூட்டம் போலிருக்கிறதாயுமுள்ள ஊர்த்துவமுகத்தைச் சிவசாதாக்கியமாக அறிந்து கொள்க. ஈசுவரனுடைய ஜோதிஸ்தம்பலிங்க ரூபமான வடக்கு முகத்தை அமூர்த்தி சாதாக்கியமாக அறிந்துகொள்க. ஜோதிலிங்கத்தினுடைய ஒரு பாகத்திலிருந்துண்டானதாயும், ஒரு முகமும் மூன்று கண்களும் உடையதாயுமுள்ள மேற்கு முகத்தை மூர்த்தி சாதாக்கியமாக அறிந்து கொள்க. சூலம், பரசு, வச்சிரம், அபயமென்னுமிவற்றை வலது கைகளிலும், பாசம், அக்கினி, கண்டை, வரமென்னுமிவற்றை இடது கைகளிலும் தரித்திருக்கிறதாயும், நான்கு முகங்களோடு பிரகாசிக்கிறதாயும், இலிங்கத்தின் நடுவிலுண்டானதாயுமுள்ள தெற்குமுகத்தை கருத்திரு சாதாக்கியமாக அறிந்து கொள்க. ஐந்து முகங்களும் பத்துக்கைகளு முடையதாயும், பீடத்தோடு கூடிய லிங்கத்தில் இலிங்கதிலுண்டானதாயுமுள்ள கிழக்கு முகத்தை கரும சாதாக்கியமாக அறிந்து கொள்க. இவ்வாறு அறிந்து பஞ்ச சாதாக்கிய ரூபமாகத் தியானஞ்செய்ய வேண்டும்.

பஞ்சப்பிரம மந்திரங்களை ஊர்த்துவம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் இடங்களிலுள்ள முகபத்மங்களாக ஈசான மந்திர முதற்கொண்டு முறையே தியானஞ்செய்ய வேண்டும்.

இருதய மந்திரத்தை இருதயத்தில் வெண்மையாகவும், சிரோமந்திரத்தைச் சிரசில் பொன்மையாகவும், சிகாமந்திரத்தை சிகையில் செய்மையாகவும், கசவமந்திரத்தை இருபக்கங்களிலும் வெண்மையாகவும், நேத்திரமந்திரத்தைநேத்திரத்தில் கருமையாகவும், அஸ்திரமந்திரத்தை கையில் கருமையாகவும் தியானிக்க வேண்டும்.

அங்கமந்திரங்களுக்கு அதிஷ்டான தேவர்களைச் சாந்தமான பார்வையை யுடையவர்களாயும், பயங்கரமான வடிவங்களையும், நான்கு கைகளையும், மூன்று கண்களையும், வரம் அபயம் கபாலம் சூலம் சடாமகுடங்களையும், உடையவர்களாயும் தியானிக்க வேண்டும்.

திரிசூலம் மூன்று குணங்களையும், பரசு சத்தியத்தையும், கட்கம் பிரதாபத்தையும், வச்சிரம் பேதிக்கப்படாத சத்தியையும், அக்கினி சங்காரஞ் செய்யுஞ் சத்தியையும், நாகம் கெம்பீரத்தையும் பாசம் மலமாயா கன்மங்களையும், கண்டை நாதத்தையும், அபயம் இரக்ஷித்தலையும், அங்குசம் அடக்குதலையும் அறிவிக்கும்.

இன்னும் திரிசூலம் இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்திகளாகவும், அவைகளே சுத்ததத்துவத்தில் பிரவிருத்தியை யுண்டு பண்ணுங்கால் கட்வாங்கமாகவும், ஜகத்பீஜமான மகாமாயையில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் மாதுளம் பழமாகவும், கலக்கத்துடன் கூடின மாயாதத்துவத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் உடுக்கையாகவும், கலை முதலிய காரியக்கூட்டத்தில் பிரவிருத்தியை யுண்டுபண்ணுங்கால் கத்தியாகவும், மனதைப் பிரவிருத்திக்கச் செய்யுங்கால் நீலோற்பலமாகவும், இந்திரியங்களைப் பிரவிருத்திக்கச் செய்யுங்கால் அக்ஷமாலையாகவும், துட்டர்களைச் சங்கரிக்குங்கால் சத்தியாயுதமாகவும், போகத்தைக் கொடுக்குங்கால் வரமாகவும், மோக்ஷத்தைக் கொடுக்குங்கால் அபயமாகவுங் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு ஆயுதங்களைத் தரித்திருக்கிறவராயும், கோடி சந்திரனுடைய குளிர்ச்சிபோல் குளிர்ச்சியையுடையவராயும், முப்பத்திரண்டிலக்கணங்களோடு கூடினவராயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவராயும், பத்து அங்குல அளவான சடாமகுடத்தையுடையவராயும், வலது இடது பக்கங்களில் மூன்று அங்குலமுள்ள பாதிச்சந்திரனையும் திவலைவடிவினையுடைய கங்கையையும் உடையவராயும், சத்தியோசாதமிறுதியாகவுள்ள ஈசான முதலிய முகங்களில் திரிபுண்டரம் அருத்தசந்திரன் பூயந்திரம் தீபம் சந்திரன் என்னுமிவற்றின் வடிவம்போன்ற வடிவமுடையவராயும், புண்டரங்களை முறையே தரித்துக்கொண்டிருப்பவராயும் சதாசிவத்தைத் தியானிக்க வேண்டும்.

சதாசிவருடைய இடது பக்கத்தில் திவ்வியமான உருவத்தையுடையவளாயும், செல்வரத்தைக்குச் சமானமானவளாயும், சுத்தமான ஆடையால் அலங்கரிக்கப்பெற்றவளாயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளாயும், பருத்த துடைகளையும் தனங்களையும், பிருஷ்டபாகங்களையும் உடையவளாயும், ஆயிரம் இதழ்களையுடைய தாமரை நீலோற்பலம் வரம் அபயமென்னுமிவற்றைத் தரிக்கிறவளாயுமுள்ள மனோன்மனியைத் தியானிக்க வேண்டும்.

அதன் பின்னர் இத்தகைய மனோன்மனியுடன் கூடினவராகச் சதாசிவரை இலிங்கத்தில் பாவனை செய்து, இவ்வாறு பாவனை செய்தபின்னர் லிங்கமென்னும் புத்தியை விலக்கிக் கொள்ளல் வேண்டும். மூன்று நேத்திரங்களிலும் ஹெளம் நேத்திரேப்ய: என்ற முறையாக நியாசஞ் செய்து இருதய பத்மத்தில் எக்காலத்தும் பரமசிவனை யாவாகனஞ் செய்ய வேண்டும்.

 

ஆவாஹன முறை

இன்னவிதமாயிருப்பவரென்று மனத்தால் அநுமானஞ் செய்வதற்கு முடியாதவராயும், இன்னவிதமா யிருப்பவரென்று நிச்சயிக்க முடியாதவராயும், சமானமில்லாதவராயும், நோயற்றவராயும், சூக்குமராயும், எல்லாவற்றிலும், நிறைந்தவராயும், நித்தியராயும்சலனமற்றவராயும், குறைவற்றவராயும், பிரபுவாயுமிருக்கும் உம்மை, உம்மால் ஆணை செய்யப்பட்டவனாய் மந்திரத்தால் நமஸ்கரிக்கிறேனென்று தெரிவித்துக்கொண்டு, சரீரத்தை நிமிர்ந்ததாகவைத்து, மனம் கண் என்னுமிவற்றின் வியாபாரத்தைத் தடுத்து, இடையென்னும் நாடியால் வாயுவைப் பூரகஞ் செய்து கும்பித்து, இருதயத்தில் புஷ்பங்களால் நிரம்பப்பெற்ற கைகளால் அஞ்சலிசெய்து, திடமாக ஆவாகனமுத்திரை செய்து, தன்னுடைய சரீரத்துள் மூலாதாரத்திலிருக்கும் மந்திரமயமான பரமசிவனுடைய சோதியை ஆகர்ஷணஞ் செய்து, மூலாதாரம் முதற்கொண்டு விளங்கும் ஹகாரத்தைக் கடந்து, இருதயம் வரை கொண்டுபோய், இருதயம் கழுத்து காலு முதலிய தானங்களிலிருக்கும் பிருதுவி முதலிய பாசக் கூட்டங்களையும் பிரமன் முதலிய காரணேச்வரர்களுடன் கூடின ஒளகாரம் முதலிய பன்னிருகலைகளையும், முறையே அவ்வவற்றின் அநுசந்தாநத்தால் கடந்து, துவாதசாந்தம் வரையுச்சரித்துக்கொண்டு புஷ்பாஞ்சலியையும் துவாதசாந்தம் வரை கொண்டுபோய், மந்திரரூபமான சோதியை துவாதசாந்தத்திலிருக்கும் பரமசிவனுடன் சேர்த்து, இடைவிடாது அமிர்தத்தைப் பெருக்கும் விந்து ரூபமான சோதியை அங்கிருந்துங் கொண்டு வந்து புருவமத்தியிலிருக்கும் சிவ மண்டபத்தில் சிரமபரிகாரஞ் செய்ததாகப் பாவித்து, ஆயிரஞ்சரற்கால சந்திரன்போலும் பாவித்து, இருதயத்தில் அஞ்சலியைத் தரித்துக் கொண்டு, பிங்கலை நாடியால் வாயுவை ரேசகஞ் செய்து, வாயுவுடன் பரமசிவனுடைய சோதியை புஷ்பாஞ்சலியின் நடுவேயடைந்ததாகப் பாவனை செய்து, ஹாம் ஹெளம் சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு சதாசிவருடைய சிரமரந்திரத்தில் அந்தப் புஷ்பாஞ்சலியைச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்ட விடயங்களை நன்கு விளக்கும் பொருட்டு மூலமந்திரங்களையும் அவற்றின் பீஜமாகிய ஹகாரத்தையும் அவற்றின் கலைகளையும், பன்னிருதானங்களையும் காட்டுகின்றார்.

சரீரத்தின் நடுத்தானமான மூலாதாரமுதற்கொண்டு பிரமரந்திரம் வ¬ நான்கு சாண் பிரமாணமுள்ள ஒருதானம் உள்ளிருக்கும். அதன் மேல் ஒரு சாண் அளவுள்ளது சிகையின்றானம் மூலாதாரம் பிரமரந்திரம் கிகையென்னும் அம்மூன்றனுள், மூலாதாரத்திலிருக்கும நான்குதளமுள்ள தாமரையின் கர்ணிகையில் பிராசாத மந்திரம் உண்டாகின்றது. அது முதற்கொண்டு நாபி வரை தாமரை நூல்போல் சூக்குமமாயும் மின்னல்போல் காந்தியையுடையதாயும் ஹகாரமிருக்கும். நாபிக்கு மேல் பன்னிரண்டங்குலம் வரை மின்னல் போல் காந்தியையுடையதான ஒளகாரத்துடன் கூடிய ஹகாரமிருக்கும். அதற்குமேல் ஐந்து அல்லது நான்கு அங்குல அளவில் இருதயகமலமிருக்கின்றது. அந்த இருதயகமல முதல் சிகையின் நுனிவரை பன்னிரண்டு கலைகளின் தானங்களிருக்கின்றன.

இருதயகமலத்தில் நான்கு அங்குல அளவாயும், மூன்று மாத்திரையை யுடையதாயும், சொலிக்கின்ற அக்கினித்தணல்களின் காந்தியையுடையதாயும் ஒளகாரமிருக்கும். அது நிவிருத்தி கலையுடனும் பிருதிவிதத்துவ முதல் பிரகிருதிதத்துவம் ஈறாகவுள்ள இருபத்துநான்கு தத்துவங்களுடனும் கூடின பிரமனால் அதிட்டிக்கப்பட்டது.

அதற்குமேல் கழுத்தில் எட்டங்குல அளவாயும், பதினாறு தளங்களையுடைய பத்மத்தை வியாபிக்கிறதாயுமிருக்கிற ஊகாரம், இரண்டு மாத்திரையை யுடையதாயும், ஒரே காலத்திலுதயமான சந்திர சூரியர்களின் காந்தியை யுடையதாயுமிருக்கும் அது பிரதிட்டா கலையுடனும் புருடன்முதல் காலமீறாகவுள்ள ஆறுதத்துவங்களுடனுங் கூடினவிட்டுணு வாலதிட்டிக்கப்பட்டது.

அதற்குமேல் நாக்கினடியில் நான்கு அங்குல அளவான நான்து தளங்களையுடைய பத்மத்தை வியாபிக்கிறதாயுள்ள மகாரம், ஒரு மாத்திரையையும் மின்னலின் பிரபையையும் உடையதாயிருக்கும். அது வித்யாகலையுடனும் மாயாதத்துவத்துடனுங் கூடின ருத்திர ராலதிட்டிக்கப்பட்டது.

அதற்கு மேல் புருவமத்தியில் இரண்டங்குல அளவுள்ள இரண்டுதளமுடைய பத்மத்தை வியாபிக்கிறதாயும் வட்டமாயுமிருக்கும் விந்து, அரைமாத்திரையையும் மின்னல் வர்ணம்போல் வர்ணத்தையும் உடையது. அது சாந்திகலையுடனும் சுத்தவித்தை ஈச்வரமென்னும் தத்துவங்களுடனுங் கூடின மகேஸ்வரராலதிட்டிக்கப்பட்டது.

அதற்குமேல் நெற்றியின் நடுவில் பாதிவடிவை யுடையதாயும், உயரே நுனியையுடையதாயும், கால் மாத்திரையை யுடையதாயும், சந்திரன்போல் வர்ணத்தை யுடையதாயும் அர்த்த சந்திரனிருக்கும்.

அதற்குமேல் லலாடத்தில் உயரே நுனியையுடையதாயும், திரிகோணம் போல் வடிவையுடையதாயும், எட்டில் ஒரு பாகமுள்ள மாத்திரையையுடையதாயும், புகை நிறமுடையதாயும் நிரோதியிருக்கும்.

அதற்கு மேல் சிரசில் தண்டவடிவாயும், இருபக்கங்களிலும் இரண்டு விந்துக்களுடன் கூடிக்கொண்டும், பதினாறிலொருபாகமுள்ள மாத்திரையை யுடையதாயும், இரத்தினம் போல் வர்ணத்தையுடையதாயும் நாதமிருக்கும்.

அதற்குமேல் பிரமரந்திரத்தில் நாதாந்திமிருக்கின்றது. அது தென்பக்கத்தில் கலப்பையின் வடிவுபோல் வடிவையுடையதாயும், தென்பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடினதாயும், முப்பத்திரண்டிலொரு பாகமுள்ள மாத்திரையை யுடையதாயும், மின்னல் வர்ணமுடையதாயுமிருக்கும்.

இவ்வாறு விந்துத்தானமான புருவமத்தியிலிருந்து பதினொரு அங்குல அளவிலிருக்கும் பிரமரந்திரம் வரையுள்ள தானங்களிலிருக்கும் அர்த்தசநதிரன், நிரோதி, நாதம், நாதாந்தமென்னும் இந்நான்கிற்கும் சாந்தியதீதைகலையுடனும் சதாசிவ தத்துவத்துடனுங் கூடின சதாசிவனே அதிஷ்டாதாவாகும்.

பிரமரந்திரத்துக்கு மேல் ஒரு அங்குல அளவில் சத்தியிருக்கும். அது எவ்விடத்தும் கலப்பைபோல் வடிவையுடையதாயும், இடது பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடினதாயும், அறுபத்து நான்கில் ஒரு பாகமுள்ள மாத்திரையையுடையதாயும் இருக்கும்.

அதற்குமேல் மூன்றங்குல அளவில் வியாபினியிருக்கும். அது திரிசூலம் போல் வடிவையுடையதாயும், தென்பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடினதாயும், நூற்றிருபத்தெட்டிலொரு பாகமுள்ள மாத்திரையையுடையதாயுமிருக்கும்.

அதற்கு மேல் நான்கு அங்குல அளவில் சமனையிருக்கும். அது இரண்டு விந்துக்களின் மத்தியிலிருக்கின்ற இரண்டு குறுகிய ரேகைகளின் நடுவிலிருக்கும். ஒரு அழகிய ரேகையையுடையதாயும், இருநூற்றைம்பத்தாறி லொருபாகமுள்ள மாத்திரையை யுடையதாயுமிருக்கும்.

அதற்கு மேல் நான்கு அங்குல அளவில் உன்மனியிருக்கும். அது விந்துவை யதிஷ்டிப்பதாயும், அந்த விந்துவுக்கு மேல நீண்டதாயும், தண்ட சொரூபம் போல் ரேகையையுடையதாயும், மனம் போலணுவளவான மாத்திரையுடன் கூடினதாயுமிருக்கும்.

பிரமரந்திரத்துக்கு மேல் ஒன்று, மூன்று, நான்கு ஆகிய அங்குலங்களின் முறையால் பன்னிரண்டங்குலம் வரை சிகையில் மேல் மேலிருக்கின்ற சத்தி, வியாபினி, சமனை, உன்மனியாகி இவை நூறுகோடி சூரியனுடைய காந்திபோல் காந்தியை யுடையனவாயும், அனாகதசிவனால் அதிட்டிக்கப்பட்டவையாயுமிருக்கும். அந்த நாக்கும் சேர்ந்து பரமாகாசமெனக் கூறப்படும்.

இவ்வாறு ஒளகாரம் நான்கு அங்குலமுடையதாயும், ஊகாரம் எட்டங்குல முடையதாயும், மகாரம் நான்கு அங்குலமுடையதாயும், விந்து இரண்டங்குலமுடையதாயும், அர்த்தசந்திரன், நிரோதி, நாதம், நாதாந்தமாகிய இவைகள் பதினொரு அங்குலமுடையனவாயும், சத்தி வியாபினி சமனை உன்மனையாகிய இவை பன்னிரண்டங்குலமுடையனவாயும் இருக்கின்றன.

பன்னிரு கலைகளும் வியாபித்திருக்குந் தானமானது நாற்பத்தொரு அங்குலமுடையது. ஆகையால் மூலாதாரமுதல் துவாதசாந்தம் வரை கூறப்பட்ட அளவையுடைய அந்த அந்தத் தானங்களில் ஹகாரத்தையும், ஒளகாரத்துடன் கூடிய ஹகாரத்தையும், ஒளகாரத்தையும், ஊகாரத்தையும், மகாரத்தையும், வட்டமான வடிவத்தையுடைய விந்துவையும், உயரே நுனியையுடையதாயும், பாதிவட்டமாயுமிருக்கும் வடிவையுடைய அர்த்தசந்திரனையும், உயரே திரிகோணத்தின் வடிவம் போல் வடிவத்தையுடைய நிரோதியையும், இரண்டு விந்துக்களின் நடுவையடைந்த தண்டாகாரமாயிருக்கும் நாதத்தையும், தென்பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடியதாயும், உயரே நுனியையுடையதாயும், தென்முகத்தில் கலப்பையின் வடிவுபோல் வடிவையுடையதாயும் இருக்கும் நாதாந்தத்தையும், இடது பக்கத்திலிருக்கும் விந்துவுடன் கூடியதாயும், உயரே நுனியையும், எல்லா முகத்திலும் கலப்பையின் வடிவு போல் வடிவத்தையும் உடையதாயும், சத்தியையும், தென்பக்கத்திலிருக்கிறதாயும், விந்துவுடன் உயரே நுனியையுடைய திரிசூலத்தின் வடிவுபோல் வடிவையுடையதாயும் வியாபினியையும், இரண்டு விந்துக்களின் நடுவையடைந்த குறுகிய இரண்டு ரேகைகளின் நடுவிலிருக்கும் அழகான ரேகையின் வடிவுபோல் வடிவையுடையதாய்ச் சமனையையும், விந்துவை அதிட்டித்து உயரே நுனியையுடைத்தான அழகான ரேகையின் வடிவுபோல் வடிவையுடையதாய் உன்மனையையும், இருதயம் முதலிய தானங்களிலிருக்கும் கலைகள் தத்துவங்கள் காரணேசுவரர்களுடன் கூட முறையே தியானித்ததை நீக்கிக்கொண்டும், தியானிக்க வேண்டியதைத் தியானித்துக் கொண்டும், பின்னர் பரமாகாசமாகிய நதியினின்றும் முண்டானதாயும், கோடி சூரியனுக்குச் சமானமான பிரபையுடன் கூடினதாயும், கோடி சந்திரன்போல் குளிர்ச்சியையுடையதாயும், முப்பத்தெட்டுக் கலைகளின் சொரூபமான கேசரங்களால் பிரகாசிக்கிறதாயும், பிரணமாகிய கர்ணிகையையுடையதாயும், பஞ்சாக்கரங்களென்னும் வித்துக்களால் நிரம்பப் பெற்றதாயும், பரமாந்தமென்னுந் தேனையுடையதாயும், முத்தர்களென்னும் வண்டுகளால் மொய்க்கப்பட்டதாயும், ஆயிரந்தளங்களையுடையதாயுமுள்ள சிற்சத்தி ரூபமான தாமரையின் நடுவையடைந்தவராயும், சரற்காலத்திலுதித்த அநேககோடி சந்திரர்களுடைய காந்தியையுடையவராயும், ஆநந்தக் கடலாயும், நிஷ்களராயுமிருக்கும் பரமசிவனை மனதில் இருத்த வேண்டும்.

இந்தப் பாவனையைச் செய்து மனதில் இருக்கும் பரமசிவனை மூலமந்திரத்தால் கொண்டுவந்து, இருதய மந்திரத்தாலாவாகன முத்திரை செய்து சதாசிவருடைய இருதய பத்மத்தில் சேர்த்து ஸ்தாபனமுத்திரையால் அவ்விருதய பத்மத்தில் ஸ்தாபனஞ்செய்து சன்னிதான முத்திரையால் தனக்கெதிர் முகமாகச் செய்து, ஓ மகாதேவ! ளும்முடைய வரவு நல்வரவாகுக எனத் தெரிவித்து, குழந்தாய்! நல்வரவென்று சுவாமி திருவுள்ளம் பற்றினதாகப் பாவித்து, சுவாகதார்க்கியங்கொடுத்து சன்னிரோத முத்திரையால் சன்னிரோதஞ் செய்து, எல்லா உலகங்களையுங் காத்தருளுகின்ற சுவாமின்! பூசை முடியும் வரை தேவரீர் கருணையுடன் இந்த லிங்கத்தில் சான்னித்தியம் செய்யவேண்டுமென்று இருதயத்தில் அஞ்சலிபந்தனத்துடன் பிராத்தித்து, சிவபெருமான் அவ்வாறே யங்கீகரித்ததாகவும் பாவித்து, நிரோதாக்கியங் கொடுத்து, காலகண்டி முத்திரை செய்து, ஹும்பட்என்னும் பதத்தை யிறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் விக்கினங்களை விலக்கி, கவசமந்திரத்தால் சிவபெருமானை யவகுண்டனஞ் செய்து, இருதயம், சிரசு, சிகை, கவசமென்னுமிவற்றை இருதய முதலிய மந்திரங்களால் ஈசுவரனுடைய இருதய முதலிய தானங்களில் நியாசஞ்செய்து, இருதய முதலியவற்றில் செய்யப்படும் அங்கநியாச ரூபமான சகளீகரணஞ் செய்த பின்னர், புஷ்பத்தைத் திருமுடியிலேற்றி மூலமந்திரத்தால் பரமீகரணஞ் செய்து தேனு முத்திரையால் அமிருதீகரணஞ் செய்யவேண்டும்.

இவ்விடத்தில் ஆவாகனமாவது சிவபெருமானைச் சதாசிவ தேகத்தில் சேர்த்தல்.

ஸ்¢தாபனமாவது சதாசிவருடைய இருதய பத்மத்தில் சிவபெருமானையிருத்துதல்.

சன்னிதானமாவது:- சிவபெருமானைத் தனக்கெதிர் முகமாகச் செய்தல்.

சன்னிரோதனமாவது:- பூசை முடியும் வரை சாந்தித்தியஞ் செய்யும் வண்ணம் பிரார்த்தித்தல்.

அவகுண்டனமாவது:- பத்தர்களுக்கு அறிவிப்பதற்காகவும், விக்கினங்கள் அணுகாமையின் பொருட்டும், கவசத்தால் மூடுதல்.

சகளீகரணமாவது:- இருதய முதலிய ஐந்து அங்கங்களில் நியாசஞ் செய்தல்.

பரமீகரணமாவது:- வெண்மை பொன்மை செம்மை கருமை செம்மையென்னும் வர்ணங்களையுடைய இருதய முதலியவற்றைச் சிவனுடைய ஒரே வர்ணமாகப் பாவித்தல்.

அமிருதீகரணமாவது:- விக்கிரகத்தையும், சிவபெருமானையும் அபின்னமாகப் பாவித்தல்.

சிவபெருமானோ உலகத்தை வியாபித்திருப்பவர். அவ்வாறிருக்கவும் நமக்கு விருப்பமான இடத்தில் அவரைச் சேர்த்தல் ரூபமான ஆவாகனமெவ்வாறு கூடுமெனில், இந்தக் கேள்வி பொருந்தாது. நினைக்க முடியாததாயும், அற்புதமாயுமுள்ள அனேக சத்திகளையுடைய சிவபெருமானுக்கு * வியாபகத்துவமும் ++அவ்வியாபகத்துவமுமிருப்பது பற்றிப் பிறிதொரு இடத்தில் சேர்த்தல் ரூபமான ஆவாகனம் பொருந்துமென்க.

( * வியாபகத்துவம் - எல்லாப் பொருள்களோடும் கலந்திருக்குந் தன்மை. ++அவ்வியாபகத்துவம் - எல்லப்பொருகளையும் கடந்திருக்குந் தன்மை.)

அல்லது வியாபகமாயிருக்குஞ் சிவனுக்குச் சரீரத்தையுபாதியாகக் கொண்டு அவ்வியாபகத் தன்மை யிருக்கின்றவாறு போல, மந்திர தேசஸையுபாதியாகக் கொண்டு விருப்பமான இடத்தில் சேர்த்தல் ரூபமான ஆவாகனமானது ஈசுவரனுக்கு எப்பொழுதும் விரோதமாகாதென்க.

அன்றியும் கட்டையில் வியாபித்திருக்கும் அக்கியானது கடைதற்றொழிலால் ஓரிடத்தில் வெளிபட்டுத் தோன்றுமாறு போல எங்கும் வியாபகமாயிருக்குஞ் சிவபெருமான் விரப்பமான விடத்தில் சேர்க்கும் பாவனை ரூபமான கிரியையால் சிவலிங்கமாகக் கொள்ளப்பட்ட விடத்து வெளிப்பட்டுத் தோன்றுதலே ஆவாகனமாகும என்க.

எவ்விடத்தும் அழிவற்ற சிதானந்த ரூபமாய்ப்பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஈசுவரனுக்கு வெளிப்படுத்துதல் என்பது எவ்வாறு பொருந்துமெனின், கூறுதும். தணல்கள் தானாகவே பிரகாசமுடையனவாயினும், சாம்பல் பூத்து இருப்பின் ஊதுதலாகிய செய்கையால் அந்தப் பிரகாசம் வெளிப்பட்டுத் தோன்றுமாறு போலச், சிவபெருமான் தானாகவே பிரகாசமுடையராயிருப்பினும் பூசிப்பவனுடைய மனம் வேறிடங்களில் வியாபித்திருத்தல் பற்றி அவனைக் குறித்து மறைந்திருக்கின்றார். ஆகையால் ஒரு வழிப்பட்ட மனதால் செய்யப்பட்ட ஆவாகனக் கிரியையால் விருப்பமான லிங்கமுதலியவற்றில் பூசை முடியும் வரை செய்யவேண்டிய உபசாரங்களைச் சமர்ப்பிக்கும் பொருட்டு அநுசந்தானத்தை யாரம்பஞ் செய்தலே வெளிப்படுத்தலாகும்.

அல்லது சிவபுராணத்திற் கூறிவாறு சதாசிவருடைய இருதய பத்மத்தில் பார்வதிதேவியாருடன் கூடினவராயும், சிதானந்த மயராயுமிருக்கும் பரமசிவனுடைய திவ்வியவிக்கிரகத்தின் தோற்றத்தைப் பாவித்தலே ஆவாகனமாகும். சிவபுராணத்துக் கூறியமுறை வருமாறு:-

இலிங்கத்தில் சதாசிவரைத் தியானித்து சலனமற்ற மனதுடன் தன்னுடைய சரீரத்திற் செய்தவாறு போல முப்பத்தெட்டுக் கலைகளின் நியாசத்தைச் செய்து, கந்தம் புஷ்பங்களாலருச்சித்து, இலிங்கமென்னும் புத்தியை விலக்கி, அந்தச் சதாசிவமூர்த்தியில், எல்லாவற்றிற்கும் முக்கிய காரணராயும், சதாசிவருடைய பிராணஸ்தானமாயும், சரீரத்துடன் கூடியவராயும், அம்பிகையுடன் கூடினவராயும், சிவபெருமானைத் தியானிக்கவேண்டும்.

தியானிக்கும் முறையாவது:- பிரமன், விட்டுணு, உருத்திரர் முதலிய தேவர்களும், அஞ்சத்தக்க தபசுகளைச் செய்து இப்பொழுதும் எவருடைய தெரிசனத்தை விரும்புகின்றார்களோ, எல்லாப் பூதங்களும் இந்திரியங்களும் பிரமன் உருத்திரன் இந்திரன் முதலியோரும் உலகமனைத்தும் எவரிடத்தினின்றும் தோன்றுகின்றனவோ, எல்லாக்கரணங்களையும் எவர் சிருட்டிக்கின்றாரோ, எல்லாக்காரணங்களுக்கும் மேலான காரணமான தன்னை எவர் சிந்திக்கிறாரோ, அத்தகைமையினை யுடையவராயும், எப்பொழுதும் ஒன்றிலிருந்தும் உண்டாகாதவராயும், எல்லாச் செல்வங்களானும் பூரணராயும், இயல்பாகவே யெல்லாவற்றிற்கும் ஈசுவரராயும், முத்தியில் விருப்பமுள்ள அனைவராலும் சிந்திக்கத் தக்கவராயும், மங்களத்திற்குக் காரணராயும், ஆகாசத்தின் நடுவையடைந்தவராயும், எல்லாவற்றிற்கும் மேலே இருக்கின்றவராயும், எல்லாவற்றிற்கும் இருப்பிடமானவராயும், எக்காலத்துமுள்ளவராயும், ஆறத்துவாக்கள் ரூபமாயிருக்கும் இவ்வுலகத்திற்கு நாயகராயும், மேலான கணங்களுக்கும் மேலானவராயும், தனக்குமே லொன்றில்லாதவராயும், சமுத்திரம்போல் அளவற்ற பெருமையையுடையவராயும், எல்லாவற்றையும் விடயங்களாகவுடையதாயும் பயனுடையதாயும் சுத்தமாயுமிருக்கும் அறிவை வியாபகமாகச் செய்கிறவராயும், ஆன்மசத்தியாகிய அமிர்தத்தைப் பருகுவதனால் உண்டாகும் மகிட்சியையுடையவராயும், அளவில்லாத ஆனந்தமென்னுந் தேனுக்கு வண்டாயிருப்பவராயும், எல்லா உலகத்தையும் ஒன்றாகச் செய்வதில் சமர்த்தராயும், உதாரத்தன்மை வீரத்தன்மை கெம்பீரத்தன்மை இனிமையென்னும் இவற்றிற்குச் சமுத்திரம் போன்றவராயும், ஒன்றோடும் உவமிக்கப்படாதவராயும், அரசர்களுக்கெல்லாம் அரசராயும், மகேசுவரராயும், மாயாகாரிய மானசரீரமில்லாதவராயும், மன்மதனுடைய அழகைவென்ற அழகினையுடையவராயும், உறைந்திருக்கும் நெய்போல் சச்சிதானந்த வடிவத்தை யுடையவராயும், எல்லா இலக்கணங்களுடன் கூடினவராயும், எல்லா அவயவங்காலும் அழகாயிருப்பவராயும், செம்மையான முகங் கைகால்களையுடையவராயும், முல்லை மலர்போல் வெளுப்பான புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவராயும், சுத்தமான படிகத்திற்கு ஒப்பானவராயும், மலர்ந்த தாமரை போலும் மூன்று கண்களையுடையவராயும், நான்கு கைகளையுடையவராயும், கெம்பீரமான அங்கங்களையுடையவராயும், அழகிய சந்திரகலையையும் வரதம் அபயம் மான் டங்கம் என்னுமிவற்றையுந் தரிப்பவராயும், பாவங்களையபகரிப்பவராயும், உவமான வருக்கங்களனைத்திற்கும் எட்டாதவராயு மிருப்பவராகச் சிவபெருமானைத் தியானிக்க வேண்டும்.

பின்னர் அவருடைய இடது பக்கத்தில் மகேசுவரியாயும், மலர்ந்த நீலோற்பலத்தின் இதழ்கள் போற் காந்தியும், அகலமும், நீட்சியுமுடைய கண்களையுடையவளாயும், பூரண சந்திரன்போல் காந்தியுள்ள முகத்தையுடையவளாயும், கருமையாயும், சுருளாயும் இருக்கும் கூந்தலையுடையவளாயும், நீலோற்பல தளத்தின் காந்திபோல் காந்தியை யுடையவளாயும், பாதிச் சந்திரனை சிரசில் ஆபரணமாகத் தரித்திருப்பவளாயும், மிகவும் வட்டமாயும், திண்ணியதாயும், நிமிர்ந்ததாயும், பளபளப்பாயும், பருமனாயுமுள்ள ஸ்தனங்களை யுடையவளாயும், சிறிய இடையையும், பெரிய பிருஷ்டபாகங்களையுமுடையவளாயும், பொன்னிறமும், மென்மையுமுடைய ஆடையையுடையவளாயும், எல்லா ஆபரணங்களையும் அணிந்திருப்பவளாயும், இரத்தின மயமான பொட்டிட்டிருப்பவளாயும், பலவிதவர்ணங்களுள்ள புட்பங்களை சிரசில் அணிந்திருக்கின்றமையால் அழகுடையவளாயும், உத்தமப் பெண்களுக்குரிய இலக்கணங்களையுடையவளாயும், சிறிது நாணத்தால் குனிந்த முகத்தையுடையவளாயும், மலர்ந்த சுவர்ணமயமான தாமரையை வலது கையில் தரித்திருப்பவளாயும், மற்றொரு கையைத் தண்டம் போல் வைத்துக் கொண்டு ஆசனத்திலிருப்பவளாயும், போக மோக்ஷங்களைத் தருபவளாயும், சச்சிதானந்த வடிவத்தையுடையவளாயும், சதாசிவன் ஈசுவரன் உருத்திரன் விட்டுணு பிரமன் ஆகிய இவர்கட்கு அன்னையாயும், பார்வதி இலக்குமி முதலிய எல்லா சத்திக் கூட்டங்கட்கும் நாயகியாயுமுள்ள தேவியையும் தியானிக்கவேண்டும். இவ்வாறு ஈசுவரனையும் ஈசுவரியையும் பதினாறு வயதுள்ளவர்களாகத் தியானித்து உபசார வகைகளால் அன்புடன் முறையே பூசிக்க வேண்டும்.

இவ்வாறு சதாசிவருடைய இருதய கமலத்தில் சாம்பசிவனுடைய சொரூபம் தோன்றுகிறதாகப் பாவிக்கும் பட்சத்தில் சாம்பசிவனை சதாசிவருடைய இருதய கமலத்தில் இருத்துதலானது தனக்கு எதிர்முகமாகச் செய்தலாகும். ஆகையால் இவையாவும் பொருத்தமாக ஆகின்றன. சரீரம் சரீரிகளுக்குள்ள அபேத ஞானரூபமான அமிர்தீகரணமானது சாம்பசிவனுடைய சொரூபம் சதாசிவருடைய இருதயகமலத்தில் தோன்றுகிறதென்னும் முறையிற்றான் பொருந்துகின்றது.

தனக்கு விருப்பமான லிங்கமுதலியவற்றில் சதாசிவசொரூபமானது ஆவாகனஞ் செய்யப்பட்டிருக்கும் பொழுது பூசைக்காகத் தோன்றவேண்டுமென்று பிரார்த்திக்கின்ற அர்ச்சகரை அநுக்கிரகஞ் செய்தற் பொருட்டுச் சிவனினும் வேறுபடாத சச்சிதானந்த சொரூபமே நினைக்க முடியாததாயும், அற்புதமாயுமிருக்கும் தன்னுடைய சத்திமகிமையினால், நீர்த்துளியானது ஆலங்கட்டி ரூபமாயும் நல்முத்துரூபமாயும் தோன்றுமாறு போல, எல்லா அவயவங்களாலும் பூரணரான சாம்பசிவனுடைய சொரூபமாகத் தோன்றுகிறதென்பது சிவபுராணம் முதலியவற்றின் கொள்கை.

இவ்வாறு சிதானந்த ரூபமான பரமசிவனுடைய சொரூபத்தின் காந்தியால் வெண்மையாயிருத்தல் பற்றியே பலவிதமான வர்ணங்களையுடைய முப்பத்தெட்டுக் கலைகளின் ரூபமாயிருக்கும் சதாசிவ வடிவத்திற்குப் படிக வர்ணத்தின் பாவனையானது பொருந்துகின்ற.

சதாசிவருடைய தற்புருட முதலிய முகங்களின் பொன்மை கருமை வெண்மை செம்மை முதலிய வர்ணங்களோவெனின், கிழக்கு முதலிய திக்குகட்கு நாயகர்களான இந்திரன் யமன் வருணன் குபேரன் முதலியோருடைய தத்தங்காரியங்கட்கு உபயோகங்களான பொன்மை கருமை வெண்மை செம்மை முதலிய வர்ணங்களை நிலைபேறுடையதாகச் செய்தற்பொருட்டு, அந்தந்த வர்ணங்களையொப்பாகச் செய்யப்பட்டன.

இவ்வாறு பரமசிவனை யாவாகனஞ் செய்யும்பொழுது ஊர்த்துவ முகமாயிருக்கிற சதாசிவருடைய ஈசான முகத்தைத் தற்புருஷ முகம்போலவே விசர்ஜன பரியந்தம் கிழக்கு முகமாகவே பாவனை செய்தல் வேண்டும்.

ஆவாகன முதற்கொண்டு அமிருதீகரண மீறான சம்ஸ்காரங்கள் சாம்பசிவ சொரூபம் விளங்கித் தோன்றுதலென்னும் பக்ஷத்தில் சதாசிவருடைய மூர்த்தியின் மத்தியிலேயே செய்ய வேண்டும். அவ்விடத்திலேயே பரமசிவனுக்கும் அம்பிகைக்கும் பாத்தியம் முதலிய உபசாரங்களும் பதார்த்தங்கள் கிட்டினதற்குத் தக்கவாறு தனித்தனி செய்ய வேண்டும். சதாசிவ மூர்த்தியில் பரமசிவனுடைய சைதன்னியத்தை மாத்திரம் ஆவாகனம் செய்யும் பக்ஷத்தில் ஆவாஹனம் செய்தபின்னர், பாத்தியம் முதலியன செய்ய வேண்டும்.

மனோன்மனி மூர்த்தியில் அம்பிகையையும் ஆவாகன முதலியவற்றால் சம்ஸ்காரஞ் செய்து பாத்தியம் முதலிய உபசாரங்களைச் செய்ய வேண்டும்.

சதாசிவத்தியானம் முடிந்தது.

 

பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை

இடது கையால் முக்காலியுடன் கூடப் பாத்திய பாத்திரம் ஆசமனீய பாத்திரம், அர்க்கியபாத்திரம் என்னுமிவற்றை உயரே தூக்கிவைத்துக்கொண்டு, பாத்தியத்தை ஈசுவரதத்துவம் முடியவும், ஆசமனத்தைச் சதாசிவதத்துவம் முடியவும், அர்க்கியத்தை சிவதத்துவம் முடியவும் தியானித்து, பாத்தியம் முதலியன ஈசுவர, சதாசிவதத்துவங்களை அர்ச்சகருக்குச் சேர்க்கிறதாகவும் பாவித்து, மூலாதாரத்திலிருந்துண்டான பிராசாத முதலிய மந்திரங்களைப் பாத்திய முதலியவற்றின் முறையால் புருவநடு, பிரமமரந்திரம், துவாதசாந்தம் என்னும் தானங்கள் வரை இயங்கிக்கொண்டிருப்பனவாகப் பாவித்து, ஹாம் ஹெளம் சிவாய என்னும் மந்திரத்தின் முறையாக, நம:, ஸ்வாஹா, ஸ்வதா என்னும் பதங்களை இறுதியாக இருக்கும்படி உச்சரித்துச் சத்தியோஜாத முதலிய மந்திரங்களின் முறையால் உயரே தூக்கினதாயும், புஷ்பத்துடன் கூடினதாயுமிருக்கும் வலது கைக்கட்டை விரல், நடுவிரல், அணிவிரல்களின் நுனியால் வலது திருவடி இடது திருவடிகளில் பாத்தியத்தையும், முகங்களில் தற்புருஷ முதலிய மந்திரங்களால் ஆசமனத்தையும், சிரசுகளில் ஈசானமுதலிய மந்திரங்களால் அர்க்கியத்தையும் சமா¢ப்பிக்க வேண்டும்.

நறுமணம் உள்ள புஷ்பத்தை ஞான சொரூபமாயும், சிவசாயுஜ்யத்திற்குக் காரணமாயும் தியானித்துத் துவாதசாந்தத்தானத்திற்கு மேலிருக்கும் சிவன் வரை மந்திரம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பாவித்து, வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மந்திரத்தால் சிரசுகளில் ஈசான முதலியவற்றின் முறையால் சமர்ப்பிக்க வேண்டும். அம்பிகைக்கும் பாத்திய முதலியவற்றை அந்தந்தச் சமயங்களில் பதார்த்தங்கள் கிடைத்ததற்குத் தக்கவாறு சமர்ப்பிக்க வேண்டும். சந்தனம் முதலியவற்றைச் சமர்ப்பிக்குமிடத்தும் இவ்வாறு செய்யவேண்டும். அம்பிகைக்குச் சமர்ப்பிக்கும் பொழுது சிவாயை நம: சிவாயை ஸ்வாஹா சிவாயை ஸ்வதா என்னும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

பின்னர், ஸ்வாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் தூப தீபங்களையும், முன்னர்க் கூறிய முறையில் ஆசமனம், அர்க்கியங்களையும், பார்வதி பரமேசுவரர்களின் பொருட்டுச் சமர்ப்பித்து, அஸ்திர மந்திரத்தை உச்சரித்து ஆடையுடன் பீடத்தின் கீழ்ப் பாகத்தை இடது கையால் தொட்டுக்கொண்டே வலது கையால் புஷ்பத்தை எடுத்து, அந்தப் புஷ்பத்தால் முன்னர் அர்ச்சிக்கப்பட்ட புஷ்பத்தை நீக்கி, வலது கையிலுள்ள அந்தப் புஷ்பத்தையும் நீக்கி, முன்னர்க் கூறியபடி தைலக்காப்பு முதலிய எல்லாவற்றையும் மனத்தால் பாவித்து, ஹாம் சிவதத்துவாய நம: என்று சொல்லிக்கொண்டு, அர்க்கிய ஜலத்தின் திவலையால் அபிஷேகஞ் செய்து, முன்போல் பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியங்களைச் சமர்ப்பித்து, ஸ்வாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் இரண்டு ஆடைகளையும் இரண்டு பூணூல்களையும் அணிந்து, ஆசமனம் சமர்ப்பித்து, ஹாம் ஆத்மதத்துவாதி பதயே சிவாய நம:, ஹாம் வித்யாதத்துவாதிபதயே சிவாயநம:, ஹாம் சிவதத்துவாதிபதயே சிவாயநம: என்று உச்சரித்துக்கொண்டு மூன்று புஷ்பாஞ்சலிகளையும், சிவாயை நம: என்று சொல்லிக்கொண்டு அம்பிகையின் பொருட்டுப் புஷ்பாஞ்சலியையுஞ் சமர்ப்பித்து, சேகரிக்கப்பட்டனவாயும், மனத்தாற் பாவிக்கப்பட்டனவாயுமுள்ள சுவர்ணமயமான ஆடையாலும், கடகம், கிரீடம், காதணி, தோளணி என்னும் ஆபரணங்களாலும், நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரங்களால் அலங்கரித்துச் சந்தனம் புஷ்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பாத்தியம் முதலியவற்றின் முறை முடிந்தது.

 

சந்தனம் சோ¢க்கும் முறை

சந்தனமானது பனினீர் சேர்த்து அரைக்கப்பட்டதாயும், கோரோசனை, குங்குமப்பூ, சந்தனம், ஏலம், பச்சைக்கற்பூரம், கருமை அகில், கோஷ்டம், கஸ்தூரியென்னுமிவை சமனிடையாகச் சேர்க்கப்பட்டவையாயும் இருக்க வேண்டும். அல்லது சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, விலாமிச்சைவேர் என்னும் இவை சமனிடையுள்ளனவாயிருத்தல் வேண்டும். அல்லது, சமனிடையாகவேனும், சமனிடையிற் பாதியாகவேனும், அந்தப் பாதியிற் பாதியாகவேனும் உள்ள பச்சைக்கற்பூரத்துடன் கூடின சந்தனம், அகில், கோஷ்டம், குங்குமபூ என்னும் இவற்றை உடையதாக இருக்க வேண்டும். அல்லது சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ என்னமிவை சமனிடையுடையனவாயிருக்கவேண்டும். அல்லது சந்தனம், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ என்னுமிவை சமனிடையுடையனவாயிருக்க வேண்டும். அல்லது ஒரு பலச் சந்தனத்திற்கு ஏற்றவாறு பச்சைக்கற்பூரம் முதலியவை சேர்க்கப்பட்ட சந்தனக் குழம்பாவது, அல்லது தனிச் சந்தனக் குழம்பாவது; அல்லது தனி வில்வக்கட்டையின் குழம்பாவது, அல்லத தனிக்கொன்றை மரக்கட்டையின் குழம்பாவது இருக்கவேண்டும். இவை யாவும் சிவபெருமானுக்கு மிக்க விருப்பத்தை யுண்டுபண்ணும்.

தனி ஜலத்தால் அரைக்கப்பட்ட தேவதாருவின் சந்தனம் கற்பகாலம் வரை சிவலோகத்திலிருக்கச் செய்யும். தனி வில்வக்கட்டையால் உண்டான சந்தனம் இம்மையிற் பெரிதான ஐசுவரியத்தைத் தந்து மறுமையிற் சிவலோகத்தையடையச் செய்யும். தனிக் கொன்றை மரக்கட்டையால் உண்டான சந்தனம் இம்மையில் நீண்ட ஆயுளைத் தந்து மறுமையிற் கணபதியுலகத்தையடையச் செய்யும். இத்தகைய சந்தனங்கள் சாதாரண சந்தனத்தினும் இரட்டிப்பான பலன்களைத் தரும். வெள்ளை அகிற்கட்டைச் சந்தனமானது சாதாரண சந்தனத்தினும் ஆறு மடங்கு அதிகமான பலனைத்தரும். கருமையான அகிற்கட்டைச் சந்தனமானது வெள்ளைஅகிற்கட்டைச் சந்தனத்தினும் இரட்டிப்பான பலன்றரும். குங்கும மரக்கட்டைச் சந்தனமானது கருமையான அகிற்கட்டைச் சந்தனத்தினும் நான்கு மடங்கு அதிகமான பலனைத் தரும். முன்னர்க் கூறியவாறு பச்சைக்கற்பூரம் முதலியவற்றுடன் கூடிய சந்தனம் மிகவும் விசேடத்தை யுண்டுபண்ணும். இத்தகைய வாசனைப் பொருள்களோடு சோ¢க்கப்பெற்ற சந்தனத்தை முன் சொல்லிய இலக்கணம் அமைந்த அர்க்கிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, உபயோகிப்பதற்குரிய ஈசுவரனுடைய லலாட முதலிய அங்கங்களைப் பாவனைசெய்து, இலிங்கத்திற்கும் பீடத்திற்கும் அமைந்ததாகவாவது, அல்லது இலிங்கத்திற்கு அமைந்ததாகவாவது கிடைத்த சந்தனத்தை இருதய மந்திரத்தாற் சமர்ப்பிக்க வேண்டும்.

 

புஷ்பவகை

பின்னர், இருபது அங்குல அகலமுள்ளதாயும், எட்டு அங்குல உயர முள்ளதாயும், எட்டங்குல உயரமும் அகலமும் உடைய கால்களை யுடையதாயும், இருபக்கங்களினும் எட்டங்குல நாளத்தையுடையதாயும், நாளமும் பாதமுமில்லாத முடியுடன் கூடினதாயுமாவது, அல்லது இந்த அளவில் பாதியையுடையதாகவாவதுள்ள சுவர்ணம், இலை என்னுமிவற்றுள் யாதானுமொன்றாற் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டவையாயும், மொட்டு கீழே விழப்பெற்றலும், சிதறிப்போனதும், நுகரப்பெற்றதும், துஷ்டஜந்துக்களி அங்களாற் பரிசிக்கப்பெற்றதும், எட்டுக்காற் பூச்சியின் நூலால் சுற்றப்பெற்றதும், பழையதும், ஆடையிற்கொண்டு வரப்பெற்றதுமாகிய இவை முதலிய குற்றங்களில்லாதனவாயும், நன்றாய்ச் சுத்தஞ் செய்யப்பட்டனவாயும், இலைப்பிடிப்பு நீக்கப்பட்டனவாயுமுள்ள உயர்ந்த புஷ்பங்களால் மூலமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டும், மிருக முத்திரை செய்துகொண்டும் அர்ச்சிக்கவேண்டும். அவை வருமாறு :- தும்பைப்பூ, சுரபுன்னை, மந்தாரம், நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், அலரி, எருக்கு, மகிழம், மருதூணி, வெள்ளைலொத்தி, நூறு இதழுடையதாமரை, ஊமத்தை, பலாசம், பாடலம், சண்பகம், கொன்றை, கர்ணிகாரம், கும்மட்டி, மாதுளை, மருதம், மயிற்கொன்றை, தேவதாரு, பச்சிலைமரம், முன்னை, மருக்கொழுந்து, அசோகம், பத்ரா, அபராஜிதம், ஆயிரம் இதழுடைய தாமரை, செங்கழுநீர், செந்தாமரை, நீலோற்பலம், குசும்பம், குங்குமமரம், மலைமல்லி, தருப்பை, நாயுருவி, கையாந்தரை, கமுகு, சரளம், மலையத்தி, கடம்பம், மா, இலுப்பை, நாகம், ஹேமாகுலி, குன்றிச்செடி, நிலப்பனை, வேஜிகை, ஜாதிமல்லி, பட்டி, மாலதி, ரித்தி, நொச்சி, விஷ்ணுகிராந்தி, வாழை, நன்னாரி, தேவதாளம், த்விகண்டி, கிரந்தபர்ணி என்னும் இவற்றின் பூக்களாகும்.

இப்பூக்களுள் வெண்மையான பூக்கள் சாத்துவிக பூக்களாகும். அவை முத்தியைக் கொடுக்கும். செம்மையான பூக்கள் இராசதபூக்களாகும். அவை போகத்தைக் கொடுக்கும். பொன்மையான பூக்கள் போக மோக்ஷங்களையும், எல்லாக்காரியங்களின் சித்தியையுங் கொடுக்கும். புத்திரர் பௌத்திரர்களின் விருத்தியையுஞ் செய்யும். நீலோற்பலத்தினும் வேறாயும், கருமை வர்ணமுடையனவாயும் உள்ள புஷ்பங்கள் தாமத புஷ்பங்களாகும். இவற்றை உபயோகிக்கக்கூடாது. கருமையாயிருப்பினும் பச்சிலைப் புஷ்பங்கள் கூரண்டவிஷ்ணுகிராந்தி யென்னுமிவற்றைப் விஷேட விதியிருத்தலால் பூஜைக்கு உபயோகிக்கலாம். இவை திடத்தைக் கொடுக்கும். எல்லாவர்ணங்களுமுடைய பூக்களால் பூஜைசெய்துவது உத்தமம். கருமை வர்ணமான புஷ்பங்களின்றிப் பூஜைசெய்வது மத்திமம். வெண்மை, செம்மை முதலிய இருவர்ணங்களையுடைய புஷ்பங்களாற் பூசிப்பது அதமம். ஒரே வர்ணமுடைய புஷ்பங்களாற் பூசிப்பது அதமாதமம். ஒவ்வொரு வர்ணமுடைய புஷ்பங்களாற் தனித்தனி கட்டப்பெற்ற மாலைகள் உத்மம். அநேக வர்ணமுடைய புஷ்பங்களாற் கட்டப்பட்ட மாலைகள் மத்திமம். இலையும், பூவும் கலந்து கட்டப்பட்ட மாலைகள் அதமம்.

எருக்கு, அலரி, வில்வம், கந்தபத்ரிகா, வெண்தாமரை, நூறு இதழுடைய தாமரை, ஆயிரம் இதழுடைய தாமரை, கொக்குமந்தாரை, ஊமத்தை, தும்பை, நாயுருவி, தருப்பை, வன்னி, கொன்றை, சங்கம், கண்டங்கத்திரி, சதாபத்ரா, மிளகுச்செடி, நொச்சிச்செடி, வெள்ளெருக்கு, பெருந்தும்பை, நீலோற்பலம் என்னுமிவை முறையே ஒன்றற்கொன்று ஆயிரமடங்கு அதிகமான பலனைத்தருவனவாம். அவற்றுள் எருக்கம்பூ பத்துச் சுவர்ணத்தைத் தானம் செய்ததோடொக்கும். நீலோற்பலம் ஆயிரம் சுவர்ண புஷ்பத்தால் அர்ச்சனை செய்ததோடொக்கும். துளசி, கருந்துளசி, இந்திரவல்லி, விஷ்ணுக்கிராந்தி, நன்னாரி, குங்குமம், கரும்பு என்னும் இவற்றின் பூக்கள் எருக்கம் பூவுக்குச் சமமாகும். நந்தியாவர்த்தம், விஜயம், நூறு இதழுடைய தாமரை, மந்தாரம், மா, இலுப்பை, வெள்ளைவிஷ்ணுகிராந்தி, சிறுசண்பகம், கதலி, நன்னாரி என்னுமிவற்றின் பூக்கள் அலரிப்பூவுக்கொப்பாகும். ரித்தி என்னும் ஓஷதி, சகதேவி, நாகதந்தி, செண்பகமென்னுமிவற்றின் பூக்கள் வில்வ தளத்திற்கு ஒக்கும், பாதிரிப்பூவும், மகிழம்பூவும், தாமரைப்பூவுக்கொக்கும். ஜாதி, மல்லிகை, இலுப்பை, சங்கம், நாகம், சூரியாவர்த்தம், சிங்ககேசரம், மகாபத்திரம் என்னுமிவை முதலியவற்றின் புஷ்பங்கள் நாயுருவியின் பூவுக்கொப்பாகும். செவ்வரத்தம், கடம்பு, புன்னாகம் என்னுமிவற்றின் பூக்கள் தும்பைப் பூவுக்கொக்கும். அசோகம், வெள்ளைமந்தாரம் என்னும் இவற்றின் பூக்களும், ஏழுநாட்களில் விருத்தியடைந்த வால்நெல், கோதுமை, நீவாரம், நெல், மூங்கிலரிசி, மஞ்சாடி, பயறு, மொச்சை, விலாமிச்சை, உளுந்து என்னுமிவற்றின் முளைகளும் கொன்றைப் பூவுக்கொப்பாகும்.

வைரம், பத்மராகம், மரகதம், நல்முத்து, இந்திரநீலம், மகாநீலம், சூரியகாந்தம், சந்திரகாந்தம் ஆகிய இரத்தின புஷ்பங்களும், ஆயிரம் சுவர்ண புஷ்பங்களும் அலரி, நீலோற்பலமென்னும் புஷ்பங்களுக் கொக்கும். நீலோற்பலம் எல்லாப் பூக்களினும் சிறந்ததென்பது எல்லா ஆகமங்களின்றுணிபு. சில ஆகமத்தில் அலரி சிறந்ததென்றும், வேறுசில ஆகமத்தில் கொக்குமந்தாரை சிறந்ததென்றும், இன்னுமோராகமத்தில் மலைப்பூ எல்லாவற்றினும் சிறந்ததென்றும் கூறப்பட்டிருக்கின்றன. சிலர், எல்லாப் பூக்களினும் தாமரைப்பூவே சிறந்ததெனக் கூறுகின்றனர். ஆனால், காலவிசேடத்தை யநுசரித்துப் புஷ்பவிசேடத்துக்குப் பெருமையுண்டு எவ்வாறெனில், கூறுதும்:-

கடம்பம், செண்பகம், செங்கழுநீர், புன்னாகம், தருப்பை, கண்டங்கத்தரி யென்னும் இந்தப் புஷ்பங்களால் வசந்தருதுவாகிய சித்திரை, வைகாசியில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அசுவமேதயாகஞ் செய்த பலனைத்தரும். பாடலிப் புஷ்பம், மல்லிகைப் புஷ்பம், நூறு இதழ்களையுடைய தாமரைப் புஷ்பம் என்னுமிவற்றால் கிரீஷ்மருதுவாகிய ஆனி, ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அக்கினிஷ்டோமம் செய்த பலனைத்தரும். தாமரை, மல்லிகை யென்னும் இவற்றின் புஷ்பங்களால் வருஷருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அசுவமேதயாகஞ் செய்த பலனைத்தரும். ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் என்னுமிவற்றின் புஷ்பங்களால் சரத்ருதுவாகிய ஐப்பதி, கார்த்திகை மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் சத்திரயாகஞ் செய்த பலனைத்தரும். அலரி, சுஜாதம், நீலோற்பலம் என்னுமிவற்றின் புஷ்பங்களால் ஹேமந்தருதுவான மார்கழி, தை மாதங்களிற் சிவபெருமானைஅருச்சனை செய்யின் நூறுயாகஞ்செய்த பலனைத்தரும். கர்ணிகாரப் புஷ்பத்தால் சிசிரருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் எல்லா யாகங்களுஞ் செய்த பலனைத் தரும்.

அவ்வாறே, ஆனி முதலிய பன்னிரண்டு மாதங்களிலும் முறையே எருக்கு, வில்வம், நாயுருவி, தும்பை, நீலோற்பலம், தாமரை, கொன்றை, கண்டங்கத்தரி, வியாக்கிரம், வன்னி, சண்பகம், பாடலம் என்னுமிவற்றின் பூக்கள் சிறந்தனவாகும்.

அவ்வாறே, நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், வெள்ளெருக்கு, வெண்டாமரை, புரசு, புன்னாகம், சிறு சண்பகம், பட்டி, சிவந்த அகஸ்தியம், மகிழம், ரித்தி என்னும் ஓஷதி, திவிகண்டி, வேஜிகை, பாடலம், அசோகம், கதலி, சங்கினியென்னுமிவற்றின் புஷ்பங்கள் பிராதக்கால பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.

தும்பை, அலரி, கொன்றை, ஊமத்தம், வியாக்கிரம், கண்டங்கத்தரி, பாடலம், தாமரை, நீலோற்பலம், செண்பகம், குரண்டமென்னும் இவற்றின் பூக்கள் உச்சிக் காலத்துப் பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.

சண்பகம், ஊமத்தம், சிறுசண்பகம், மல்லிகை, வேஜிகம், பலகர்ணி, சகபத்ரை, பத்ராமுஸலீ, பச்சிலை, வன்னி, சங்கம் என்னுமிவற்றின் பூக்களும், வாசனையுள்ள பத்திரங்களும் சாயங்கால பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.

ஜாதி, நீலோற்பலம், கடம்பம், ரோஜா, தாழை, கமுகு, புன்னாகம், தந்தி என்னும் இவற்றின் பூக்களும், ஊமத்தையின் புஷ்பமும், குருவேரும், வில்வமுமாகிய அவை அர்த்த ராத்திரி பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.

கடம்பம், ஊமத்தை, ஜாதியென்னுமிவற்றை இரவிற்றான் சமர்ப்பிக்க வேண்டும்.

குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை அல்லது நீர்த்திப்பிலி, குமுழம், பருத்தி, வேம்பு, பூசுணி, இலவு, சிந்தித, வோட, மலைஆல், பொன்னாங்காணி, விளா, புளி யென்னுமிவற்றின் பூக்கள் விலக்கத் தக்கவையாகும்.

தாழம்பூவை விலக்கிய விலக்கானது அர்த்தராத்திரியிற்றவிர ஏனைய காலங்களிற்றான் உபயோகம். அஃதாவது, அர்த்தராத்தியில் மாத்திரம் தாழம்பூவை உபயோகிக்கலாம் என்பதாம்.

கடம்பப்பூவைப் பகற்காலத்துபயோகிக்கக் கூடாது. கிரிகர்ணிகையை விலக்கிய விலக்கானது நீலகிரிகர்ணிகையில் உபயோகம். அஃதாவது, நீலகிரிகர்ணிகை அருச்சனைக்கு ஆகாதென்பதாம், பலாசம் கூடாதென்ற விலக்கை முள்ளுள்ள பலாசத்திற்கு மட்டுங்கொள்ளல் வேண்டும். இவ்வாறே ஜவாபுஷ்பம் (செவ்வரத்தம்பூ) மகிழம்பூ என்னுமிவை சில ஆகமங்களில் விதிக்கப்பட்டும், சில ஆகமங்களில் விலக்கப்பட்டு மிருக்கின்றன.

கூடும் கூடாதென்ற இவற்றின் முடிவைப் பலத்தின் பேதத்தை யநுசரித்த பூஜையின் பேதத்தாலும், அவரவர்களின் முன்னோர் அநுட்டித்து வந்த ஆகமத்தை யநுசரிக்கும் பூஜையின் பேதத்தாலும், பூஜிக்கப்படும் மூர்த்தியின் பேதத்தாலும் நிர்ணயித்துக் கொள்க.

விலக்கப்பட்ட பூக்களை மண்டபத்தை யலங்கரிப்பதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

 

பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு

வில்வம், துளசி, கருந்துளசி, தருப்பை, அறுகு, நாயுருவி, அலரி, நந்தியாவர்த்தம், வன்னி, சிறுகுறுஞ்சிக்கத்தாளை, தாதகியென்று சொல்லக்கூடிய வாசனையுள்ள ஒருவித செடியின் இலை, விஷ்ணுக்கிராந்தி, தேவதாருவின் இலை, மகாபத்திர விருக்ஷத்தின் இலை, ஜாதி, நாவல், இலந்தை, உதும்பரம், மா, புரசு, தத்கோலம், சிற்றேலம், இருவகைக் கிரிகர்ணிகை, உத்திரவர்ணி, ரோஜா, குருவேர், ஊமத்தை, மருவகம், இருவிதத்தும்பை, நொச்சி, கங்கங்குப்பி, நெரிஞ்சில், மகிழம், கொன்றை யென்னும் இவற்றின் பத்திரங்களே யாகும்.

பூக்களுள் நீலோற்பலம் போல், பத்திரங்களுள் வில்வம் மிகவுஞ் சிறந்தது. இருவகைத் துளசிகளுஞ் சிறந்தனவாகும். எந்த மரங்களின் பூக்கள் மிகவுஞ் சிறந்தனவாகக் கூறப்பட்டிருக்கின்றனவோ, அந்த மரங்களின் இலைகளும் மிகவுஞ் சிறந்த பத்திரங்களாகும்.

தாமரை, நீலோற்பலம், கிரிமல்லிகை, சண்பகம், ஜாதி, அலரி, நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், வில்வம், இருவகை முள்ளுள்ள கத்திரி, பாதிரி, ஐவகை வில்வம், இருவகைத் துளசி, அறுகு, அகஸ்திய விருக்ஷம், கந்தபத்திரம் என்னுமிவற்றின் பத்திர புஷ்பங்களுள் தனக்கு விருப்பமான பத்திர புஷ்பங்களும், சுவர்ணத்தாற் செய்யப்பட்ட பத்திர புஷ்பங்களும் மிகவுஞ் சிறந்தனவாகும்.

அஞ்சலியுள் நிறைந்துள்ள சுவர்ண புஷ்பங்களால் வித்தியா தேகத்தை வகிக்கும் சிவபெருமானை ஆவாஹனம் செய்தலும், நூற்றெட்டு அல்லது எண்பத்தொன்று அல்லது ஐம்பது அல்லது இருபத்தைந்து சுவர்ண புஷ்பங்களால் தினமும் அருச்சித்தலும் மிகவுஞ் சிறந்தனவாய் எண்ணிறந்த பலனைத்தரும். சுவர்ண புஷ்பம் செய்து பூசிக்க முடியவில்லையாயின், சுவர்ணத்துண்டுகளாலாவது, வெள்ளிப் புஷ்பங்களாலாவது பூசிக்கலாம். சுவர்ணபுஷ்பத்திற்கு நிர்மாலிய தோஷங்கிடையாது. அது ஒரு வருடத்திற்கு மேற்றான் நிர்மாலியமாகும். அப்பொழுதும் பஞ்சகவ்வியத்தாற் சுத்திசெய்து பின்னரும் அருச்சிக்கலாம்.

இவ்வாறே நலோற்பலம், புரசு, கொக்குமந்தாரை, அலரி, கிரிமல்லிகை, வில்வம், துளசியென்னுமிவற்றிற்கும் நிர்மாலிய தோஷங்கிடையாது. கூறப்பட்ட பூக்களும், பத்திரங்களும் தன்னுடைய தோட்டத்திலுண்டானவையானால் உத்தமம். வனத்திலுண்டானவையும், அந்நியருடை தோட்டத்திலுண்டானவையும், பூசைசெய்யுஞ் சமயத்தில் பிறரிடத்தில் யாசிக்கப்பெற்றவையுமான பூக்களும், பத்திரங்களும் முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்தவையாகும். கோயில் முதலியவற்றைச் சேர்ந்த தோட்டங்களில் உண்டான பூக்களும், பத்திரங்களும் ஆர்மார்த்தபூஜைக்குக் கூடாவாம். பூக்கள் கிடையாவிடில் எந்தப் பூக்கள் பரமசிவனுக்கு உரியனவோ, அந்தப் பூக்களின் பத்திரங்களால் அருச்சிக்க வேண்டும். பத்திரங்களும் கிடையாவிடில் அவற்றின் பழங்களால் அருச்சிக்க வேண்டும். பழவகைகளுள் கொய்யா, எலுமிச்சை, வாழை, மாதுளை யென்னுமிவற்றின் பழங்கள் அருச்சினைக்கு மிகச் சிறந்தவையாகும். பழங்களுங் கிடையாவிடில் எள்ளு, அரிசி, கடுகு என்னுமிவற்றால் அருச்சிக்கவேண்டும். கருப்பு எள்ளுக்களால் சிவனையருச்சித்தால் அது எல்லாப் பாவங்களையும் போக்கும்.

 

அர்ச்சனையின் முறை

இவ்வாறு மூலமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு புஷ்பம் முதலியவற்றால் அருச்சித்து ஹாம் சிவாசனாயக நம:, ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தயே நம:, ஹாம் ஹெளம் சிவாய நம:, ஹோம் ஈசானமூர்த்தநே நம:, ஹேம் த்புருஷவக்தராய நம:, ஹ§ம் அகோர ஹிருதயாய நம:, ஹிம் வாமதேவகுஹ்யாய நம:, ஹம்ஸத்யோஜாத மூத்தயே நம: என்று உச்சரித்துக்கொண்டு ஆசனம், மூர்த்தி, மூலமந்திரங்களானும், பஞ்சப்பிரம மந்திரங்களானும் எட்டுப் புஷ்பங்களானுமர்ச்சித்து, ஹாம் ஹிருதயாய நம: என்பது முதலிய அங்கமந்திரங்களானும் அர்ச்சிக்க வேண்டும். பின்னர், ஆயிர நாமங்களாலாவது, நூறு நாமங்களாலாவது அர்ச்சிக்க வேண்டும்.

அதற்குக் காலங் கிடைக்கவில்லையாயின், சர்வாயக்ஷிதிமூர்த்தயே நம:, பவாயஜல மூர்த்தயே நம:, ருத்ராய தேஜோமூர்த்தயே நம:, உக்ராயவாயு மூர்த்தயே நம:, பீமாய ஆகாசமூர்த்தயே நம:, பசுபதயே யஜமானமூர்த்தயே நம:, ஈசானாய சூர்யமூர்த்தயே நம:, மஹாதேவாய சோமமூர்த்தயே நம: என்னும் எட்டு நாமங்களாலாவது சிவாய நம:, மகேசுவராய நம:, ருத்ராய நம:, விஷ்ணவே நம:, பிதாமஹாய நம:, ஸம்ஸாரவைத்யாய நம:, ஸர்வஞ்ஞாய நம:, பரமாத்மநே நம: என்னும் எட்டு நாமங்களாலாவது அர்க்சிக்க வேண்டும்.

அல்லது, பிரவே நம:, சம்பவே நம:, உமாபதயே நம: என்ற மூன்று நாமங்களாலாது அர்ச்சிக்க வேண்டும். அல்லது, நமோ நீலகண்டாய நம: என்று ஒரு புஷ்பத்தாலாவது அர்ச்சித்து சக்திக்குத் தக்கவாறு புஷ்பமாலைகளால் அலங்கரிக்க வேண்டும்.

 

அலங்காரம்

நூறு எண் முதலிய சுவர்ணபுஷ்பங்களால் செய்யப்பெற்ற மாலைகளும், ஆயிரம் முதலிய நீலோற்பல மலர்களாற் செய்யப்பெற்ற மாலைகளும், அலரி, வெண்டாமரை, விஜயம், அசிதம், பாடலம், புன்னாகம், வெள்ளைமந்தாரம், நாககேசரம், சண்பகமென்னும் இவற்றின் பூக்களாற் செய்யப்பெற்ற மாலைகளும் சிறந்தனவாகும். இடையிடையே பலவித நிறங்களையுடைய புஷ்பங்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளைப் பார்வதி தேவியாருடைய ஆசனத்தின் இருபக்கங்களிலும் நிறையக் கட்ட வேண்டும். இலிங்கத்தின் சிரசில் இரத்தினம், சுவர்ணங்களாலாவது, பூக்களாலாவது செய்யப்பெற்ற ஒன்று அல்லது, இரண்டு, மூன்று, நான்கு வரிசைகளையுடைய இண்டையென்னும் பெயருடைய வட்டமான மாலையைக் கையால் சமா¢ப்பிக்க வேண்டும். இவ்வாறு புஷ்போபசாரம் செய்த பின்னர் தூபதீபபோபசாரம் செய்ய வேண்டும்.

 

தூபோபசாரமுறை

சுவர்ணம், வெள்ளி, செம்பு, பித்தளையென்னுமிவற்றுள் யாதானுமொன்றாற் செய்யப்பெற்றதாயும், நான்கங்குலம் நீண்டதாயும், அதிற் பாதியளவு உயர்ந்ததாயும், எட்டங்குலம், விளிம்பையுடையதாயும், பின்பக்கத்தில் பத்மதளத்தால் அடையாளஞ் செய்யப்பட்ட இரண்டங்குலமுள்ள கழுத்தும், இரண்ங்குல உயரமுமுடையதாயும், நன்றாய் வட்டமாயும், குளம்பின் வடிவுபோல் வடிவையுடையதாயுமிருக்கிற பாதத்தையுடையதாயும், இரண்டங்குல அகலத்தையுடையதாயும், முன்னர்க் கூறப்பட்ட இலக்கணத்தையுடைய காலுடன் கூடியதாயுமுள்ள முகநாளத்துடன் கூடியதாயும், அநேக துவாரங்களையுடையதாகவாவது, ஒரு துவாரத்தை யுடையதாகவாவதுள்ள தாமரை மொட்டுப் போன்ற சொரூபத்தையுடைய மூடியுடன் கூடினதாயுமுள்ள தூப பாத்திரத்தைச் சுத்தமான தணலுடன் கூடிய அக்கினியால் நிரப்பி அவ்வக்கினியில் தூபப் பொருளையிட்டு தூபபாத்திரத்தை மூடி, நிரீக்ஷண முதலிய நான்கு சுத்திகள் செய்து, சந்தனம் புஷ்பங்களாலருச்சித்துத் தூப முத்திரை காட்டித் தூப பாத்திரத்தை வலது கையால் ஏந்திக்கொண்டு இடதுகையில் சுத்தமான வெண்கலத்தாற் செய்யப்பெற்றதாயும், நான்கு அல்லது, ஐந்து, ஆறு, அங்குலம் உயரமுள்ளதாயும், அவ்வளவு அகலமுள்ளதாயும், அந்த அளவுள்ள நாக்கையுடையதாயும், அதனினு மூன்று மடங்கு அகலமும், அரையங்குல அளவு உதடுமுடையதாயும், பக்கப்பட்டிகையுடன் கூடினதாயும், ஒன்று அல்லது, இரண்டு, இரண்டரையங்குலமுள்ள சிகரத்தையுடையதாயும், பாதியங்குல அளவுள்ள கழுத்தை யுடையதாயும், மூன்று அங்குல அகலத்தை யுடையதாயும், மூன்று அல்லது, நான்கு, ஐந்து, ஆறு அங்குலம் நீளமுள்ள நாளத்தையுடையதாயும், மேலே சூலம், பத்மம், ரிஷபம், சங்கம், சக்கரமென்னுமிவற்றுள் யாதானுமொரு அடையாளத்துடன் கூடிய மணியை அடித்துக்கொண்டே ஈசுவரனுடைய நாசியின் சமீபத்தில் ஓம் ஹாம் ஹெளம்சிவாய தூபம் ஸ்வாஹா என்று சொல்லிக்கொண்டு தூபத்தைச் சமர்ப்பித்துப் பின்னர் தூபபாத்திரைத்தை உயரே தூக்கிச் சுற்றிக் கிரீடத்தில் பக்கங்களில் இரண்டு விந்துக்களுடன் கூடித் தண்டாகாரமாயிருக்கிற நாதத்தையும், முகத்திலிருக்கும் விந்து தேகத்தில் ஹகாரத்தையும், கைகளில் ஒளகாரத்தையும், கால்களில் ஊகாரத்தையும் தூப பாத்திரத்தைச் சுற்றுவதால் பாவித்துக் கொள்ளளல் வேண்டுல்.

 

தூபத்திரவியங்கள்

தூபத்திரவியம் வருமாறு:- பச்சைக்கற்பூரம், அகில், சந்தனம், தக்கோலம், ஜாதிக்காய், இலவங்கம், குந்துருக்கம்பிசின், ஜடாமாஞ்சை, முஸ்தா என்னும் கோரைக்கிழங்கு என்னும் இவற்றின் சூர்ணத்தாற் செய்யப்பெற்ற தூபத் திரவியத்திற்குயக்ஷகர்த்தமம் என்பது பெயர்.

சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், ஏலம், இலவங்கம், இலவங்கத்தின் தோல், அதன் இலை, அதன் புஷ்பம் குந்துருக்கம்பிசின், ஜடாமாஞ்சை யென்னுமிவற்றின் சூர்ணமானது பிராஜாபத்தியம் எனப்பெயருடையது.

சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, இலவங்கப்பட்டை, குந்துருக்கும்பிசின், சர்க்கரை, கோரைக்கிழங்கு என்னுமிவற்றின் சூர்ணம் விஜயமெனப்படும்.

பச்சைக்கற்பூரம், கறுப்பு அகிற்கட்டை, குருவேர், குங்குமப்பூ, குந்துருக்கம், துருஷ்கம் என்னும் கஸ்தூரி, தாமரைத்தண்டு, சந்தனப்பொடி யென்னுமிவற்றின் சூர்ணம்முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டுப் பாகமான தேனுடன் சேர்க்கப்பட்டுச் சீதாம்சு எனப்படும்.

சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குந்துருக்கம்பிசின், கீழாநெல்லி, குங்கிலியம், கோரைக்கிழங்கு என்னுமிவற்றின் சூர்ணமானது கலியாணமெனப் பெயருடையதாகும்.

சந்தனம், அகில், கஸ்தூரி, கோரைக்கிழங்கு, குந்துருக்கம்பிசின் என்னுமிவற்றின் சூர்ணம் அமிர்தமெனப்படும்.

தக்கோலம், கமுகம்பூ, பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய், இலவங்கமென்னுமிவற்றின் சூர்ணம் சுகந்தமெனப்படும்.

இவ்வாறு, வெவ்வேறு வகையான பெயரால் சிரசித்தமான தூபத்திரவியங்கள் பலவுள.

இவ்வாறு சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கீழாநெல்லி, குங்கிலிய மென்னுமிவற்றுடன் நெய், தேன் கலந்த தூபத்திரவியங்களும், சந்தனம, அகில், பச்சைக்கற்பூரம், கீழாநெல்லி என்னுமிவற்றின் சூர்ணத்துடன் சர்க்கரை, நெய், தேன் என்னுமிவை கலந்த தூபத் திரவியங்களும், குங்குமத்தினின்றும் முறையே ஒன்று, நான்கு, ஆறு, எழு, பாகமுடைய பச்சைக்கற்பூரம், அகில், சந்தனம், பிசின்பொடியென்னுமிவையும், முறையே ஒன்று, இரண்டு, மூன்று, பங்குடைய அகில, பிசின், சந்தனம் என்னுமிவற்றின் பொடியுடன் சிறிதுதேனும், பச்சைக்கற்பூரமும் சேர்த்து ஒரு தூபத் திரவியமும் தூபத் திரவியங்களெனப்படும்.

அகில், சந்தனம், விலாமிச்சைவேர் என்னுமிவற்றுடன் தேனைச் சேர்த்தல் ஒரு தூபத்திரவியமாகும். நெய்யுடன் கூடின கீழாநெல்லி, சந்தனப்பொடி யென்னுமிவையும், நெய்யுடன்கூடின சர்க்கரை, வில்வஇலை யென்னுமிவற்றின் பொடியும், குங்கிலியப்பொடியும், ஒன்றுங்கலவாத குங்கிலியம், பிசின், சந்தனம், அகில், சௌகந்திகம் முதலிய வாசனைத்திரவியங்களுள் யாதானுமொன்றன் பொடியும் தூபத்திரவியமாகு மென்றறிந்து கொள்க.

அவற்றுள் ஒன்றுங்கலவாத தனிக்குங்கிலியத் தூபம் ஏழு பிறவிகளிற் செய்யப்பெற்ற பாவங்ளை போக்கும். சந்தன தூபம் எல்லாப் பாவங்களையும் போக்கும். சௌகந்திகதூபம் எல்லாக்காரியங்களையுஞ் சாதித்துத் தரும். கரிய அகிலின்தூபம் எல்லாப் பாவங்களையும் போக்கும். வெண்மையான அகிலின் தூபம் முத்தியைக் கொடுக்கும். அரக்கு, கஸ்தூரி யென்னுமிவை சேர்ந்த தூபம் நான்கு வேதங்களையும் அத்தியயனஞ் செய்யும் நல்ல பிராமணப் பிறவியைத்தரும். நெய் சேர்ந்த குங்கிலிய தூபத்தைப் பதினைந்து நாட்கள் சமர்ப்பித்தால் ஆயிரங்கோடி கற்பகாலம் சிவலோககத்திலுள்ள போகத்தையும், சக்கிரவர்த்தியின் பிறப்பையும் தரும். எருமை நெய்யால் செய்யப்பட்ட குங்கிலியதூபம் இரண்டாயிரம் வருஷம் பலனைத்தரும். பச்சிலை மரப்பொடியுடன் கூடின குங்கிலிய தூபம் சிவசாயுஜ்யத்தைக் கொடுக்கும். ஈசான முதலிய ஐந்து முகங்களினும் முறையே மல்லிகை, கரியஅகில், வெள்ளைஅகில், சௌகந்திகம், குங்கிலியம் என்னுமிவற்றின் தூபங்கள் சிறந்தனவாகும். இவ்வாறு தூபோபசாரம் சமா¢ப்பித்து பின்னர்த் தீபோபசாரம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

தீபோபசாரம்

தீபோபசார பாத்திரமானது தூபபாத்திரத்திற்குக் கூறப்பட்டவாறு பாதம் நாளம் என்னும் இவற்றுடன் கூடினதாயும், மூன்றங்குல அளவுள்ளதாயும், யானையின் அதரத்தின் சொரூபம்போல் சொரூபத்தையுடையதாயு மிருக்கவேண்டும். திரியானது கற்பூரத்தாலாவது, ஆடையின் துண்டினாலாவது, நூலினாலாவது, பஞ்சினாலாவது செய்யப்பட்டிருத்தல் வேண்டும். திரியை நான்கு அங்குல நீளமுள்ளதாயும், நான்கு மூன்று இரண்டு ஒன்று என்னும் இந்த அங்குலமுள்ள சுடருக்குரிமையான அகலத்தை யுடையதாயுஞ் செய்யவேண்டும். திரி ஆடையின் துண்டால் (கிளிவால்) செய்யப்படின் சத்திக்குத் தக்கவாறு உத்தமம், மத்திமம், அதமமென்னும், முறையில் கற்பூரம், அகில் சந்தனமென்னும் இவற்றின் பொடியால் நிரம்பப் பெற்றதாகச் செய்யப்படல் வேண்டும். தீபத்திற்குக் கபில வருணமுடைய பசுவின் நெய் உத்தமம். ஏனை பசுக்களின் நெய் மத்திமம். ஆட்டு நெய்யும் எள் நெய்யும் அதமம். ஒட்டகை எருமை என்னுமிவற்றின் நெய்யும் மரம், விரை முதலியவற்றினின்று முண்டான நெய்யும் விலக்கப்படல் வேண்டும். இது ஒரு பக்கம்.

இன்னுமொரு பக்கம் வருமாறு:- எல்லாப் பசுக்களின் நெய்யும் உத்தமம். ஆட்டு நெய்யும் எருமை நெய்யும் மத்திமம், தீநாற்றமுடைய வேம்பு, புங்கம், ஆமணக்கு என்னுமிவற்றின் நெய்யை விலக்க வேண்டும். எண்ணெயனைத்துமே அதமம்.

மேலே கூறப்பட்டவாறு இலக்கணம் வாய்ந்த பாத்திரத்தில் திரியைச் சேர்த்துத் தீபத்தையேற்றி, அந்தத் தீபத்தை நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திசெய்து, புட்பங்களால் அருச்சித்து, தீபமுத்திரை காட்டி, தீபத்தை உயரே தூக்கிப் பிடித்துக் கொண்டு மணியடித்துக் கொண்டே ஹாம் ஹெளம் சிவாய தீபம் சுவாகா என்று சொல்லிக்கொண்டு, நேத்திரங்களில் சமர்ப்பித்து, தூபத்தைப்போல் இந்தத் தீபத்தையும் கிரீட முதற்கொண்டு பாதம் முடிய அந்தந்த வர்ணங்களின் நியாஸபாவனையுடன் சுற்றவேண்டும். பின்னர் சிவபெருமான் பொருட்டு ஆசமனீயம் அருக்கியங்களைக் கொடுத்து அவர் திருப்தியடைந்ததாகப் பாவித்து, ஓ எம்பெருமானே! போகாங்களைப் பூசிக்கின்றேன் ஆணை செய்ய வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டு ஆவரண பூஜையைச் செய்ய வேண்டும்.

 

ஆவரணபூஜை

ஆவரணபூஜை வருமாறு:- பஞ்சப்பிரமம், சடங்கங்களை முதலாவரணத்திலும், வித்தியேசுவரர்களை இரண்டாவது ஆவரணத்திலும் கணநாதர்களை மூன்றாவது ஆவரணத்திலும், உலக பாலகர்களை நான்காவது ஆவரணத்திலும், அவர்களுடைய ஆயுங்களை ஐந்தாவது ஆவரணத்திலும், இவ்வாறு ஐந்து ஆவரணங்களிலும் பூஜிக்க வேண்டும்.

சிவாசனபத்மத்தின் கர்ணிகையில் சிவனையருச்சித்து, அந்தப் பத்மதளத்தின் மூலங்களிலும், நடுவிலும், தளத்தின் துனிக்கும் நடுவிற்கும் நடுவிலும், தளத்தின் நுனியிலும், தளத்தின்கீழ் பாகத்திலும், ஐந்து ஆவரணங்களையும் பூஜிக்க வேண்டும்.

அல்லது சிவாசனபத்மதளத்தின் மூலரூபமான இலிங்கத்தின் மூலபாகங்களிலும், சிவாசனபத்மதளத்தின் நுனிரூபமான பீடத்தின் மேற்பாகமென்னும் நுனிகளிலும், பீடத்தின் கண்டத்திலும், பீடத்தின் அடியிலும், பிரமபாகமாகி பத்மபீடத்திலுமாக ஐந்து ஆவரணங்களை யருச்சிக்க வேண்டும்.

 

முதலாவது ஆவரணபூஜை

ஹோம் ஈசானமூர்த்தநே நம: படிகத்தின் வருணத்தையுடையவரும், கையில் திரிசூலம் அபயமென்னும் இவற்றையுடையவரும், பார்வதியுடன் கூடினவருமான ஈசானரைப் பூஜிக்கின்றேன்.

ஹேம் தற்புருஷவக்திராய நம: சுவர்ணத்தின் வருணத்தையுடையவரும், பீதாம்பரம் உபவீதமென்னு மிவற்றையுடையவரும், மாதுளங்கம் அக்கமாலை யென்னும் இவற்றைத் தரிப்பவரும், கௌரிதேவியுடன் கூடினவருமாகிய தற்புருஷரைப் பூசிக்கின்றேன்.

ஹ§ம் அகோர ஹிருதயாய நம: மேகத்தின் வருணத்தையுடையவரும், செம்மையான மீசையையும் தலைமயிரையும் உடையவரும், கோரப்பற்களால் பயங்கரமான முகத்தையுடையவரும், சர்ப்பம் தேள் கபாலம் (மண்டையோடு) என்னுமிவற்றாலாகிய மாலையை யணிந்தவரும், இடதுகை நான்கிலும் கட்வாங்கம் கபாலம் கேடகம் பாசமென்னுமிவற்றையும், வலதுகை நான்கிலும், திரிசூலம் பரசு கட்கம் தண்டமென்னுமிவற்றையும் உடையவரும், கங்கையுடன் கூடினவருமான அகோரரைப் பூசிக்கின்றேன்.

ஹிம் வாமதேவகுஹ்யாய நம: செம்மை வருணமுடையவரும், செம்மையான ஆடை மாலை உபவீதங்களையுடையவரும், கட்கம் கேடகம் என்னுமிவற்றைத் தரிப்பவரும் கணாம்பிகையுடன் கூடினவருமான வாமதேவரைப் பூசிக்கின்றேன்.

ஹம் சத்தியோசாத மூர்த்தயே நம: வெண்மை வருணமுடையவரும், வெண்மையானமாலை கந்தம் ஆபரணம் தலைப்பாகை ஆடையென்னுமிவற்றைத் தரிப்பவரும், வரம் அபயங்ளைக் கைகளிலுடையவரும், அம்பிகையுடன் கூடினவருமான சத்தியோசாதரைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு முறையே ஈசானன் இந்திரன் யமன் குபேரன் வருணனென்னும் இவர்களுடைய திக்குக்களில், ஈசானமுதலிய மந்திரங்களை, அநதந்தப் பூசாசமயத்தில் சிரசு முகம் இருதயம் குஹ்யம் பாதமென்னும் அந்தந்தத் தானங்களினின்றும் அங்குச முத்திரையாலிழுத்து, அவற்றைத் திக்குகளிலிருக்கும் ஈசான முதலியவற்றோடு அபின்னமாகப் பாவித்துப் பூசிக்க வேண்டும். ஒரு தீபத்திலிருந்து ஏற்றப்பட்ட பிறிதொரு தீபம் அபின்னமாதல் போலுமென்க.

ஈசான முதலிய ஐந்தையும், சூலம் டங்கம் வரம் அபயமென்னும் இவற்றையுடைய அழகான நான்கு கைகளையுடையனவாகவாவது தியானிக்க வேண்டும். இவ்வாறே வேறு ஆகமங்ளிற் கூறப்படும் பஞ்சப்பிரமங்களின் தியானங்களைப் பார்த்து அவ்வாறும் அநுட்டிக்கலாம்.

ஹாம் ஹிருதயாய நம:, ஹீம்சிரசே நம:, ஹ¨ம்சிகாயை நம:, ஹைம்கவசாய நம:, ஹெளம்நேத்ரத்திரயாய நம:, ஹ: அஸ்திராய நம: என்று சொல்லிக்கொண்டும், சந்திரன் சுவர்ணம் குங்குமம் வண்டு மின்னல் அக்கினி என்னுமிவற்றின் வருணங்களையுடைவர்களாயும், பத்மாசனத்திலிருப்பவர்களாயும், பாதிச் சந்திரனையும் சடாமகுடத்தையும் தரிப்பவர்களாயும், நான்கு முகங்களையுடையவர்களாயும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களையுடையவர்களாயும் கபாலம் சூலம் வரம் அபயமென்னுமிவற்றைக் கையில் உடையவர்களாயும், சாமினீ நீலினீ சக்கிரிணீ சங்கினீ கிட்கினீ கங்கினீ யென்னும் சத்திகளுடன் கூடினவர்களாயுமிருக்கும் இருதயம் சிரசு சிகை கவசம் நேத்திரம் அஸ்திரமாகிய இவற்றிற்கு அதிட்டான தேவர்களைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டும், இருதயம், சிகை, கவசமென்னுமிவற்றை அந்த அந்தத் தானங்களினின்றும் அங்குச முத்திரையால் இழுத்து, அக்கினி நிருவிவாயு என்னும் இந்தத் திக்குகளிலிருக்கும் தளங்களில் இருதயம் சிகை, கவசமென்னுமிவற்றையும், கிழக்கு முதலிய நான்கு தளங்களின் நுனிகளில் அஸ்திரத்தையும் பூஜிக்கவேண்டும்.

பஞ்சப்பிரமங்களுள் ஈசானத்தை ஈசான தளத்திலும், அங்கங்களுள் நேத்திரம் சிரசு என்னுமிவற்றை அந்த ஈசான தளத்து வடக்கில் முறையே மேல் மேலாகவும் பூஜிக்க வேண்டும்.

அல்லது கர்ணிகையில் ஈசுவரனுக்கு முன்னர் ஈசானத்தையும் நேத்திரத்தையும் பூஜிக்கவேண்டும்.

அல்லது நேத்திரத்தை அஸ்திரத்தைப்போல் திக்குக்களிலாவது பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு முதலாவது ஆவரணத்தைப் பூஜித்துப் பின்னர் இரண்டாவது ஆவரண பூஜையைச் செய்ய வேண்டும்.

 

இரண்டாவது ஆவரண பூசை

அநந்தாய பூமிசகிதாய நம:, சூக்ஷ¨மாய சுவாக சகிதாய நம:, சிவோத்தமாய ஸ்வதாசகிதாய நம:, ஏகநேத்திராய க்ஷ£ந்தி சகிதாய நம:, ஏகருத்திராய புஷ்டிசகிதாய நம:, திரிமூர்த்தயே ஸ்ரீசகிதாய நம:, ஸ்ரீகண்டாய கீர்த்தி சகிதாய நம:, சிகண்டினேமேதா சகிதாய நம: என்று சொல்லிக்கொண்டும், சுவர்ணம், அக்கினி, மேகம், வண்டு, பாணம், பனி, பவளம், படிகம் என்னுமிவற்றின் வர்ணங்களையுடையவர்களாயும், வரதம், அபயம், ஞாமுத்திரை, உருத்திராக்கமாலை என்னுமிவற்றைத் தரிப்பவர்களாயும், மூன்று கண்களையுடையவர்களாயும், சிவஞானத்தை வெளிப்படுத்துகிறவர்களாயும், தத்தம் சத்திகளுடன் கூடினவர்களாயும், இருக்கும் வித்தியேசுவரர்களைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டும், கிழக்குமுதலாகவும் ஈசான முதலாகவும் முறையே திக்கு உபதிக்குக்களிலாவது, கிழக்கு முதுற்கொண்டு ஈசான கோணம் வரையுள்ள இடங்களிலாவது பூசிக்க வேண்டும்.

 

மூன்றாவது ஆவரண பூசை

குண்ட சகிதாய நந்திகேசுவராய நம: செம்மை வருணத்தையுடையவராயும், திரிசூலம், அக்கமாலை, வரம், அபயம் என்னுமிவற்றைக் கையிலுடையவராயும், குண்டலினியுடன் கூடினவராயும் இருக்கும் நந்தியைப் பூசிக்கின்றேன்.

பத்மினீ சகிதாய மகாகாளாய நம: பொன்மையும் கருமையும் கலந்த நிறமுடையவராயும், செம்மையான மீசையையும் தலைமயிரையுமுடையவராயும், சூலங் கபாலம் கட்கம் கேடம் என்னுமிவற்றைத் தரிப்பவராயும், பத்தினியுடன் கூடினவராயுமிருக்கும் மகாகாளரைப் பூசிக்கின்றேன்.

ஹ்ராதினீசகிதாய ப்ருங்கிணே நம: வெண்மை வர்ணத்தையுடையவராயும், தசையற்ற வடிவத்தையுடையவராயும், தண்டம் அக்ஷமாலை சிகை என்னுமிவற்றைத் தரிப்பவராயும், சிவனைப் பார்ப்பதில் ஆசையுடையவராயும், ஹ்ராதினியுடன் கூடினவராயுமுள்ள பிருங்கியைப் பூசிக்கின்றேன்.

பிருங்கிணீசகிதாய கணபதயே நம: இரத்தினத்தின் நிறத்தையுடையவரும், பாசம் அங்குசம் தந்தம் பக்குவமான மாம்பழம் என்னுமிவற்றைத் தரிப்பவரும், பிருங்கிணியுடன் கூடினவருமாகிய கணபதியைப் பூசிக்கின்றேன்.

பத்ராசகிதாய விருஷாய நம: படிகத்தின் வருணத்தையுடையவரும், தருமத்தின் சொரூபத்தையுடையவரும், சிவத்தியானம் செய்பவரும், பத்திரையுடன் கூடினவருமாகிய இடபதேவரைப் பூசிக்கின்றேன்.

தேவயானீசகிதாய ஸ்கந்தாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், குழந்தை வடிவத்தையுடையவரும், சத்தி கோழி வரம் அபயம் என்னும் இவற்றைக் கையிலுடையவரும், தேவயானையுடன் கூடினவருமாகிய கந்தரைப் பூசிக்கின்றேன்.

அம்பிகாயை நம: கருமை வர்ண முடையவளாயும், சிம்மவாகனத்தை யுடையவளாயும், சூலம் கண்ணாடி என்னுமிவற்றை இரண்டு கையிலுடையவளாயும் இருக்கும் பார்வதியைப் பூசிக்கின்றேன்.

உரூ பிணீசகிதாய சண்டேசுவராய நம: மேகம்போலும் வருணத்தையுடையவராயும், நான்கு முகங்களையுடையவராயும், கமண்டலம் அக்கமாலை சூலம் பரசு என்னுமவற்றைத் தரிப்பவராயும், சர்ப்பத்தாலாகிய கங்கணத்தையுமுபவீதத்தையுமுடையவராயும், ரூபிணியுடன் கூடினவராயுமுள்ள சண்டேசுவரரைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு கிழக்கு முதல் ஈசான கோணம் முடிய அருச்சிக்க வேண்டும்.

அல்லது இடபம், நந்தி, கணேசர், மகாகாளர், கந்தர், பிருங்கி, பார்வதி, சண்டேசுவரர் என்னும் இம்முறையில் கிழக்கு முதலாகவாவது, அல்லது நந்தி, கணபதி, மகாகாளர், பிருங்கி, ரிஷபம், கந்தர் கௌரி சண்டேசுவரர் என்னும் இம்முறையில் கிழக்கு முதலாகவாவது பூசிக்க வேண்டும்.

அல்லது கௌரி, சண்டேசுவரர், நந்தி, மகாகாளர், கணேசர், ரிஷபம், பிருங்கி, கந்தர் என்னும் இம்முறையிலாவது, அல்லது கௌ£¤, சண்டேசுவரர், மகாகாளர், ரிஷபம், கணேசர், கந்தர், நந்தி, பிருங்கி என்னும் இம்முறையிலாவது வடக்கு முதலாகப் பூசிக்க வேண்டும்.

அல்லது பார்வதி, ரிஷபம், கணபதி, நந்தி, மகாகாளர், பிருங்கி, சண்டேசுவரர், கந்தர் என்னும் இம்முறையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்குத் திக்குக்களிலும், நிருதி வாயு ஈசானம் முதலிய உபதிக்குக்களிலும் பூசிக்கவேண்டும். இவர்களைத் தியானஞ் செய்யும் முறைகள் ஒவ்வொரு ஆகமங்களிலுங்கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை அவ்விடங்களிற் காண்க.

இவ்வாறு மூன்றாவது ஆவரணத்தில் கணநாதர்கள் பூசையைச் செய்து நான்காவது ஆவரண தேவதைகளாகிய உலகபாலகர்களின் பூசையைச் செய்யவேண்டும்.

 

நான்காவது ஆவரண பூசை

இந்திராய சசீசகிதாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், அயிராவதத்தில் ஏறியிருப்பவரும், வச்சிரம் அங்குசம் வரம் அபயமென்னுமிவற்றைக் கையிலுடையவரும், இந்திராணியுடன் கூடியவருமான இந்திரனைப் பூசிக்கின்றேன்.

அக்னயே சுவாகாசகிதாய நம: செம்மை வர்ணத்தையுடையவரும், கமண்டலம் அக்கமாலை சத்தி வரமென்னுமிவற்றைத் தரிப்பவரும், ஆட்டை வாகனமாகவுடையவரும், சுவாகாதேவியினுடன் கூடியவருமாகிய அக்கினி தேவரைப் பூசிக்கின்றேன்.

யமாய காலகண்டீ சகிதாய நம: கருமை வர்ணத்தையுடையவரும், தண்டம் பாசம் வரம் அபயம் என்னுமிவற்றைத் தரிப்பவரும், எருமைக் கடாவில் ஏறியிருப்பவரும் காலகண்டியுடன் கூடினவருமாகிய யமனைப் பூசிக்கின்றேன்.

நைருதாயதாகினீ சகிதாயநம: செம்மை வர்ணத்தையுடைய வரும், கட்கம் கேடம் வரம் அபயமென்னுமிவற்றைத் தரிப்பவரும், பூதத்தில் ஏறியிருப்பவரும், தாகினியுடன் கூடினவருமாகிய நிருருதியைப் பூசிக்கின்றேன்.

வருணாய போகினீசகிதாய நம: சந்திரன் போலும் வர்ணத்தையுடையவரும், பாசம் கமலம் வரம் அபயம் என்னுமிவற்றைக் கையில் உடையவரும், மீன்வாகனத்தில் ஏறியிருப்பவரும், போகினியுடன் கூடினவருமாகிய வருணனைப் பூசிக்கின்றேன்.

வாயவே கோராசகிதாய நம: புகை நிறத்தையுடையவரும், துவசம் கமலம் வரம் அபயமென்னு மிவற்றைக்கையில் தரிப்பவரும், மான்மேல் ஏறியிருப்பவரும், கோரையுடன் கூடினவருமாகிய வாயுதேவரைப் பூசிக்கின்றேன்.

குபேராய கம்பீரிணீ சகிதாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், கதை நிதி வரம் அபயமென்னும் இவற்றைக் கையிலுடையவரும், குறுகிய வடிவத்தையுடையவரும், மனுடன் மேல் ஏறியிருப்பவரும், கம்பீரிணியுடன் கூடினவருமான குபேரனைப் பூசிக்கின்றேன்.

ஈசானாய ஹர்ஷிணீ சகிதாய நம: சந்திரன் போலும் வருணத்தையுடையவரும், சூலம் பாசம் வரம் அபயமென்னும் இவற்றைக் கையிலுடையவரும், மூன்று கண்களையுடையவரும், இடபத்தில் ஏறியிருப்பவரும், ஹர்ஷிணியுடன் கூடினவருமாகிய ஈசானரைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு கிழக்கு முதலாகத் தொடங்கிப் பூசிக்க வேண்டும்.

பிரமணே சாவித்தி£¦ சகிதாய நம: சுவர்ண வருணத்தையுடையவரும், நான்கு முகங்களையுடையவரும், கமண்டலம் அக்கமாலை சுருக்கு தண்டம் என்னுமிவற்றைக் கையில் தரிப்பவரும், அன்னத்தில் ஏறியிருப்பவரும், சாவித்திரியுடன் கூடினவருமான பிரமாவைப் பூசிக்கின்றேன்.

விஷ்ணவே இலக்குசகிதாய நம: மின்னல் வருணத்தையுடையவரும், ஆயிரம் படங்களாலலங்கரிக்கப்பட்ட அநந்தருடைய வடிவத்தை யுடையவரும், சங்கம், சக்கரம் கதை தாமரை யென்னுமிவற்றைக் கையில் தரிப்பவரும், ஆமையில் ஏறியிருப்பவரும், இலக்குமியுடன் கூடினவருமான விட்டுணுவைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு கிழக்குத் திக்கிற்கும் ஈசான திக்கிற்குமிடைய பிரமாவையும், நிருருதிதிக்கிற்கும் மேற்குத் திக்கிற்கும் இடையே விட்டுணுவையும் பூசிக்க வேண்டும். அல்லது யமனுக்கு வடக்குப் பாகத்திலும், குபேரனுக்குத் தெற்குப் பாகத்திலும் அவ்விருவரையும் பூசிக்கவேண்டும்.

 

ஐந்தாவது ஆவரண பூசை

பின்னர் ஐந்தாவது ஆவரணத்தில் உலகபாலகர்களுடைய ஆயுதங்களை அருச்சிக்கும் முறை வருமாறு:-

பிரசன்னாத்ம சக்தி சகிதாய வச்சிராய நம: பலவித வருணங்களையுடையதும், திடமாயும் கடினமாயுமுள்ள வடிவத்தையுடையதும், வச்சிரத்தைச் சிரசில் உடையதும், பிரகாசத்தையுடையதும், பிரசன்னை என்னும் தனது சத்தியுடன் கூடினதுமான வச்சித்தைப் பூசிக்கின்றேன்.

சக்தயே நம: செம்மை வருணமுடையதும், வரம் அபயமென்னுமிவற்றைக் கையிலுடையதும், சத்தியைச் சிரசில் தரித்திருப்பதும், பெண்வடிவத்தையுடையதுமான சத்தியைப் பூசிக்கின்றேன்.

கோபாத்மசக்திசகிதாய தண்டாய நம: கருமை நிறத்தையுடையதும், வரம் அபயமென்னு மிவற்றைக்கையில் உடையதும், செம்மையான கண்களையுடையதும், சிரசில் தண்டத்தை யுடையதும், கோபையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான தண்டத்தை பூசிக்கின்றேன்.

குணாத்மசக்தி சகிதாய கட்காய நம: கருமை வருணத்தை யுடையதும், பரம் அபயமென்னும் இவற்றைக் கையிலுடையதும், கோபக்கண்ணையுடையதும், கட்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிரசையுடையதும், குணையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான கட்கத்தைப் பூசிக்கின்றேன்.

கோமளாத்மசக்தி சகிதாய பாசாய நம: பலாசம்பூவின் நிறத்தையுடையதும், நாபிக்குக் கீழ் பாம்பின்வடிவமும் நாபிக்கு மேல் புருடவடிவமும் உடையதும், ஏழு படங்களுடன் கூடிய சிரசையுடையதும், கோமளையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான பாசத்தைப் பூசிக்கின்றேன்.

விஷாத்மசக்தி சகிதாய துவஜாய நம: பொன்மை நிறமடையதும், வரம் அபயமென்னுமிவற்றைக் கையில் உடையதும், பிளந்த வாயையுடையதும், சிரசில் துவஜத்தையுடையதும், விஷையென்னும் தனது சத்தியுடன் கூடினதுமான துவஜத்தைப் பூஜிக்கின்றேன்.

கதாயை நம: பொன்மை நிறமுடையதும், பெண்வடிவம்போல் வடிவத்தையுடையதும், சிரசில் கதையையுடையதுமான கதையைப் பூசிக்கின்றேன்.

விகிருதாத்மசக்தி சகதாய சூலாய நம: கருமை நிறமுடையதும், திரிசூலத்தாலடையாளஞ் செய்யப்பட்ட சிரசையுடையது அஞ்சலியையுடையதும், விகிருதை யென்னும் தனது சத்தியை யுடையதுமான திரிசூலத்தைப் பூசிக்கின்றேன்.

மகாத்மசக்தி சகிதாய பத்மாய நம: சங்கத்தின் நிறம்போல் நிறத்தையுடையதும், சிரசில் தாமரைமொட்டையுடையதும், மகதி யென்னும் சத்தியுடன் கூடினதமான பத்மத்தைப் பூசிக்கின்றேன்.

மங்களாத்ம சக்தி சகிதாய சக்ராய நம: கருமை நிறத்தையுடையதும், நூறு ஆரைக்கால்களுடன் கூடிய சக்ரத்தால் அடையாளஞ் செய்யப்பட்ட சிரசையுடையதும், மங்களை யென்னும் தனது சக்கியுடன் கூடினதுமான சக்கரத்தைப் பூசிக்கின்றேன்.

இவ்வாறு சொல்லிக்கொண்டு பூசிக்க வேண்டும்.

இந்த எல்லா ஆவரண தேவர்களையும் தியானஞ் செய்யும் பொழுது சிவனுக்கு எதிர்முகமாக இருப்பவர்களாயும், சிவனையும் அம்பிகையையும் பக்தியினால் பார்த்துக்கொண்டு இருப்பவர்களாகவும், தத்தம் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களாவும் தியானிக்க வேண்டும்.

அல்லது இரண்டு கைகளையும் நான்கு கைகளையும் உடையவர்களாகவும், அஞ்சலிபந்தனம் செய்து கொண்டு இருப்பவர்களாகவுமாவது தியானிக்க வேண்டும்.

இவ்வாறு பஞ்சாவரண பூசை செய்யச் சக்தியில்லையாயின், பஞ்சப்பிரம்ம சடங்கரூபமான ஒரு ஆவரணதேவர்களின் பூசையே போதுமானது. அந்தப் பஞ்சப்பிரம்ம சடங்கதேவர்களுக்கு ஆவாகனம், ஸ்தாபனம், சன்னிதானம், சன்னிரோதனம், பாத்தியம், ஆசமனம், அருக்கியம், புஷ்பம் சமர்ப்பித்தல் என்னும் எட்டுச் சமஸ்காரங்கள் செய்யப்படல் வேண்டும்.

அல்லது ஆவாகன முதலிய எட்டுச் சமஸ்காரங்களையும் ஒர சேரப்பாவனை செய்து, அருக்கியத்தை மாத்திரம் தனித்தனி கொடுத்துக் கிரியையைப் பூர்த்திசெய்து வைப்பதற்காகப் பஞ்சப் பிரமங்களுக்கு அந்த அந்த அருக்கியத்தின் முடிவில் முறையே, சுரபி, தாமரை, திரிசூலம், மகரம், சுருக்கு என்னும் முத்திரைகளைக்காட்டி அங்கங்களுக்கு நமஸ்கார முத்திரையைக் காட்ட வேண்டும்.

பஞ்சப்பிரமங்களையும் சடங்கங்களையும் பூசைசெய்யச் சத்தியில்லையாயின், தனிமையாகப் பஞ்சப் பிரமங்களை மாத்திரமாவது, அங்கங்களை மாத்திரமாவது பூசிக்க வேண்டும்.

அல்லது அந்த அந்தத்தானத்தில் வாமை முதலிய சக்திகளைக் கிழக்கு முதலிய திக்குக்களில் அருச்சித்து, சதாசிவருடைய மடியில் இடது பக்கத்திலிருக்கும் மனோன்மனியையும் இருச்சிக்க வேண்டும்.

இவ்வாறு ஆவரணபூசை செய்தபின்னர், சிவனை அஷ்டபுஷ்பத்தாலருச்சித்து, ஆசமனம் அருக்கியங்ளைக் கொடுத்து, மூலமந்திரத்தால் புஷ்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சிவனுக்கு ஆவரண தேவதைகள் இருத்தலால் உண்டாம் சோபை சித்திப்பதின் பொருட்டுப் பஞ்சப்பிரம்ம சடங்கங்களைச் சிவனிலும் வேறாகப் பாவித்து அருச்சித்தலாலுண்டான பூசையின் தாமததோஷத்தைப் போக்குதற்பொருட்டு, சரற்காலத்திலுண்டான அனேககோடி சந்திரர்களுக்குச் சமானமாயும், அமிர்தத்தைப் பெருக்குகின்ற தாயுமிருக்கின்ற பரமசிவனுடைய கிரணக் கூட்டங்களில் மூழ்கியிருத்தலால், எல்லா ஆவரண தேவர்களையும் பரமசிவனுடைய வர்ணத்தை யடைந்தவர்களாயும், பரமசிவனிலும் வேறாக இல்லாதவர்களாயும் பாவிக்க வேண்டும்.

பின்னர் சிவனிடத்தில், தேனுமுத்திரையையும் மகாமுத்திரையையுங் காட்டி, கந்தம் புஷ்பங்களைக் கொண்டு அஸ்திரமந்திரத்தால் மணியையருச்சித்து, ஆவரண தேவர்களுடன் கூடினவரான பரமசிவனுக்குத் தூபதீபங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சில ஆகமங்களில் ஆன்மார்த்த பூசையில் போகாங்க பூசை செய்யக் கூடாதென்று விலக்கப்பட்டிருக்கின்றமையால் இவ்விடத்துக் கூறியவாறு ஆவரண பூசையைச் செய்தலும் கூடும்; செய்யாது விடுதலும் கூடும்.

 

நைவேத்தியஞ் செய்யும் முறை

நைவேத்தியத்திற்கு விரீகியென்னும் செந்நெல்லரிசி, சாலியென்னும் சம்பாநெல்லரிசி, பிரியங்கு என்னும் தானியத்தினரிசி, நீவாரமென்னும் வனநெல்லினரிசி, கோதுமையினரிசி, மூங்கிலரிசி, வால்நெல்லரிசி யென்னுமிவை மேலானவையாம். அவற்றுள், செந்நெல் அரிசி அதமம். சம்பாநெல்லரிசி மத்திமம். ஏனைய அரிசிகள் உத்தமம். அவற்றுள்ளும் பிரியங்குவின் அரிசியும், நீவாரமென்னும் வனநெல்லரிசியும், கோதுமையரிசியும், மூங்கிலரிசியும் முறையே நூறு, ஆயிரம், இலட்சம், அநந்தமென்னும் பலன்களை யுடையனவாய் ஒன்றுக்கொன்று மேலானவையாம்.

அல்லது சம்பாநெல்லரிசி உத்தமம். வால்நெல்லரிசியும் மூங்கிலரிசியும் மத்திமம். செந்நெல்லரிசி அதமம் என்றறிந்து கொள்க.

சாலியென்பது வெண்மையான அரிசியையுடைய நெல். ஏனைய நெற்களனைத்தும் விரீகியெனப்படும்.

ஆர்மார்த்த பூசையில் ஒரு உழக்கு முதற்கொண்டு எட்டு மரக்கால்வரை ஒன்றுக்கொன்று மேலானதாகும்.

இருநூற்றிருபத்தைந்து எண்ணுள்ள நெற்கள் சுத்தியெனப்படும். இரண்டு சுத்திகள் தலமெனப்படும். இரண்டு தலங்கள் பிரகுஞ்சமெனப்படும். இரண்டு பிரகுஞ்சங்கள் பிரசுருதி யெனப்படும். இரண்டு பிரசுருதிகள் உழக்கு எனப்படும். இரண்டு உழக்கு அஞ்சலியெனப்படும். இரண்டு அஞ்சலிகள் படியெனப்படும். இரண்டு படிகள் பாத்திரமெனப்படும். இரண்டு பாத்திரங்கள் மரக்காலெனப்படும். இரண்டு மரக்கால்கள் சிவமெனப்படும். இரண்டு சிவங்கள் துரோணமெனப்படும்.

அல்லது இரண்டு குஞ்சங்கள் சேர்ந்தது மாஷம். இருபது மாஷங்கள் சேர்ந்தது ஒரு நிஷ்கம். எட்டு நிஷ்கங்கள் சேர்ந்தது ஒரு பலம். நான்கு பலங்கள் சேர்ந்தது ஒரு பாதம். நான்கு பாதங்கள் சேர்ந்தது ஒரு பிரஸ்தம். நான்கு பிரஸ்தஞ் சேர்ந்தது ஒரு மரக்கால். நான்கு மரக்கால் சேர்ந்தது ஒரு துரோணம் எனப்படும்.

நான்கு துரோண அளவுள்ளவையாயும், நைவேத்தியத்திற்காகச் சேகரிக்கப்பட்டவையாயும், உரோமம், புழு முதலியன இல்லாதவையாயும், உமி முளை முதலியவற்றின் துண்டுகள் இல்லாதவையாயும், குறுணைகளாக இல்லாதவையாயும், மிகவும் சுத்தமாயுமுள்ள அரிசியை, நல்ல நிறமும் மணமும் சுவையும் உடையதாயும், வடிகட்டினதாயும் உள்ள நீரினால் அடிக்கடி தேய்த்துச் சடங்கமந்திரங்களால் ஆறுமுறை கழுவி மணல்களும் கற்களுமின்றிச் சுத்திசெய்து பானையில் வைத்து, வைக்கப்பட்ட அரிசியின் மேல் அரிசியளவில் பாதி ஜலத்தை நிரப்பி, சாணத்தால் மெழுகப்பட்டதாயும், புரோக்ஷிக்கப்பட்டதாயும், பக்ஷிகளின் பார்வைக்கும் நீசர்களின் பாவைக்கும் அகப்படாததாயுமுள்ள சமையற்கட்டில், இருதயமந்திரத்தா லருச்சிக்கப்பட்ட அடுப்பில், வாமதேமந்திரத்தால் பானையை யெடுத்து இருதயமந்திரத்தால் ஏற்றி, அகோரமந்திரத்தால் அக்கினியை வைத்து வாயினால் சுவாலை செய்து, பக்குவம் ஆகாததாயும், அதிகமான பக்குவத்துடன் கூடினதாயும் இல்லாமல் சாவதானத்துடன் அன்னத்தைச் சமையல் செய்தல் வேண்டும். சத்த அன்னம் செய்யும் முறையிவ்வாறாகும்.

அரிசியினும் இரண்டு மடங்கு அதிகமான பாலுடனும், அரிசிக்குப் பாதியளவுள்ள பயறுடனுமாவது, அல்லது அரிசியின் மூன்று மடங்கு அதிகமான பாலுடனும், அரிசியின் நான்கின் ஒரு பங்கு அளவுள்ள பயறுடனுமாவது, அவற்றிற்கு ஏற்றவாறு சருக்கரை வாழைப்பழமென்னும் இவற்றுடன் கூடினதாய்பாயச அன்னத்தைச் செய்ய வேண்டும்.

அரிசியின் நான்கின் ஒரு பங்கு அளவுள்ள எள்ளும், அந்த எள்ளின் அளவில் பாதி, அல்லது நான்கில் ஒரு பங்கு அளவுள்ள நெய்யுங் கூடினதாய் எள்ளன்னத்தைச் செய்ய வேண்டும்.

அல்லது அரிசிக்குப் பாதியளவு பயறின் குறுணையும், எள்ளுப்பொடியும், சிறிது உப்பும் சேர்ந்ததாய் எள்ளன்னத்தைச் செய்ய வேண்டும்.

அரிசியின் பாதியளவுள்ள பாலுடனும், சருக்கரையுடனும், அவற்றின் பாதியளவுள்ள நெய்யுடனும் கூடினதாய்ச் சருக்கரை யன்னத்தைச் செய்ய வேண்டும்.

அல்லது அரிசியினும் இரண்டு மடங்கு அதிகமான பாலுடனும், அரிசியின் பாதியளவுள்ள சருக்கரையுடனும், சருக்கரையின் பாதியளவுள்ள நெய்யுடனும் கூடியிருப்பது சருக்கரையன்னமென அறிந்து கொள்க.

அல்லது அரிசியின் மூன்று பங்கு அதிகமான பாலுடனும், அரிசியின் மூன்றிலொரு பங்கு அளவுள்ள பயறுடனும், அரிசியின் நான்கிலொரு பங்குள்ள சருக்கரையுடனும், வாழைப்பழத்துடனுங் கூடியிருப்பது சருக்கரையன்னமாகும்.

அரிசியின் நான்கின் ஒரு பங்காவது, அல்லது மூன்றிலொரு பங்காவது, அல்லது சமமாகவாவது உள்ள பயறுடனும், தேங்காயுடனும் கூடினதாகவாவது, அல்லது தேங்காய் இல்லாததாகவாவது செய்யப்படுவது பயறன்ன மெனப்படும்.

சுத்தான்னம், பாயசான்னம், எள்ளன்னம், சருக்கரையன்னம், பயறன்னமென்னும் இவற்றிற்கு முறையே மேலும் மேலும் ஒன்றற்கொன்று ஆயிரமடங்கதிகமான பலன்களுண்டு. இவ்வாறே தயிரன்னம் தேனன்னங்களும் மேலானவையாகும்.

இவற்றுள் எல்லாவற்றையுமேனும், அல்லது சத்திக்குத் தகுந்தவாறு யாதானு மொன்றையேனும் அமைத்துக் கொள்ளலாம்.

நைவேத்தியத்தின் எட்டு அல்லது பதினாறிலொரு பங்குள்ள பயறு துவரை உளுந்து காறாமணி மொச்சை கொள்ளு என்னுமிவற்றுள் யாதானுமொன்றால் (சுண்டல்) செய்யபடல் வேண்டும். பயறு முதலியவற்றைச் சக்திக்குத் தகுந்தவாறு தோலற்றதாகவே கொள்ளல் வேண்டும்.

பிரஸ்த அளவுள்ள நைவேத்தியத்திற்கு * வியஞ்சனத் திரவியங்களாக இரண்ட அல்லது ஒரு பலமுள்ள வாழைக்காய், பலாக்காய், பூசுணிக்காய், வெள்ளரிக்காய், பாவற்காய், இருவகைக் கண்டங்கத்திரிக்காய், புலங்காய், மாங்காய், தேங்காய்யென்னு மிவற்றையாவது, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு என்னுமிவற்றையாவது, அல்லது நல்ல சுவையும் வாசனையுமுடைய பொருள்களையாவது, உலந்ததாகவேனும் ஈரமுள்ளதாகவேனுங் கொண்டு, இவற்றுடன் உப்பி மிளகு சீரகம் ஏலமென்னுமிவற்றைப் பொடி செய்து அந்தப் பொடியுடன் சருக்கரை முதலியவற்றையுஞ் சேர்த்துக் கலந்து நெய்யினால் வறுக்க வேண்டும்.

( * வியஞ்சனம் - கறி)

புளிப்பாயும் கெட்டியாயுமிருக்கிற மோருடன் உப்பு மிளகு சீரகம் கொள்ளு கடுகு என்னும் இவற்றின் பொடிகளையும் சருக்கரையும் கலந்து குழம்பாகச் செய்து கொள்ளல் வேண்டும்.

இன்னும் உளுந்து பயறு கோதுமை அரிசிமா என்னுமிவற்றால் செய்யப்பட்டவையாயும், பூரணமான சருக்கரையுடன் கூடினவையாயும், பச்சைக்கற்பூரம் ஏலம் என்னுமிவற்றின் பொடிகளால் வாசனையுள்ளவையாயும் இருக்கும் அநேக அப்பம் வடைகளையும் பானகம் முதலியவற்றையும் செய்து கொள்ளல் வேண்டும்.

நைவேத்தியம் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவில் பதினாறில் ஒரு பங்கு, அல்லது முப்பத்திரண்டிலொரு பங்கு, அல்லது அறுபத்து நான்கிலொரு பங்கு நெய்யிருக்க வேண்டும். எட்டிலொரு பங்கு ஆடைத்தயிர் இருக்க வேண்டும். எல்லாப் பொருள்களிலும் பால் நெய் தயிர் என்னுமிவை பசுவினின்று முண்டானவையாவே இருக்கவேண்டும்.

நைவேத்தியம் சமர்ப்பித்தற்குரிய பாத்திரங்கள் சுவர்ணம் அல்லது வெள்ளி, அல்லது செம்பு, அல்லது சுத்த வெண்கலம் என்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்து கொள்ளப்படல் வேண்டும். இந்தப் பாத்திரங்கள் நாற்பத்தெட்டு அங்குல அகலத்தையும், ஒரு அங்குல உயரத்தையும், இரண்டங்குல கனமுள்ள விளிம்பையும் உடைத்தாயிருப்பின் உத்தமம். முப்பத்தாறங்குலம் முதற்கொண்டு பன்னிரண்டங்குலம் வரை அகலமுள்ள பாத்திரங்கள் மத்திமம். ஒன்பது ** யவம் முதற்கொண்டு ஒரு யவம் வரையுள்ள அளவு உடைய விளிம்பையும், விளிம்பின் அளவான++வேத்திரத்தையும் உடையதாகவாவது, வேத்திரம் இல்லாததாகவாவது, ஒன்பது அங்குல அகலத்தையுடையதும், அதற்குப் பாதி அகலத்தையுடையதுமான பாத்திரங்கள் மிகவும் அதமங்களாகும். எல்லாப் பாத்ரிங்களையும் காலில்லாதவையாகவும் வட்ட சொரூபத்துடன் கூடினவையாகவும் செய்ய வேண்டும். பாத்திரங்களுக்கு ஆதாரமான முக்காலிகள் பூசிக்கப்படும் இலிங்கத்தின் பீடம் எவ்வளவு உயரமிருக்குமோ அவ்வளவு உயரமிருக்க வேண்டும். எல்லாவித நைவேத்தியங்களும் சிவதீக்ஷையினால் சுத்தர்களாயும், சுத்தமான ஆடையையுடையவர்களாயும், விபூதி உருத்திராக்கங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாயும், பவித்திரத்தைக் கையில் அணிந்தவர்களாயுமுள்ள பரிசாரகர்களால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

( ** யவம் - வால்நெல், ++வேத்திரம் - பிரம்புபோலுங்கம்பி.)

அவ்வாறே அலங்கரிக்கப்பட்டவர்களான பெண்களாலாவது நைவேத்தியத்தைச் செய்துகொள்ளுமிடத்தில் அரிசியைக் கழுவுதல் முதலிய கிரியைகளுக்குச் செபிக்க வேண்டிய மந்திரங்களைத் திரவிய சுத்தி செய்யுங்காலத்தில் அரச்சகர் ஜபிக்கவேண்டும்.

நைவேத்தியம் பக்குவம் ஆகாமலிருப்பினும், அதிகமான பக்குவத்தையடைந்திருப்பினும், சமையல் செய்து அதிக நேரமானதால் குளிர்ந்திருப்பினும், யாராவது நைவேத்தியத்தைத் தாண்டினும், அந்த நைவேத்தியத்தை விலக்கி வேறு நைவேத்தியம் செய்யப்படல் வேண்டும்.

 

நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை

ஈசுவரனுக்குப் பாத்தியம் ஆசமனீயம் அருக்கியமென்னு மிவற்றைக்கொடுத்து, அவருக்கு முன்னர்க் கோமயத்தால் சதுரச் சதுரமாக ஒரு மண்டலமிட்டு, மாப்பொடிகளால் கோலமிட்டு, சுத்தான்னம் பாயசான்ன முதலியவற்றால் நிரம்பப் பெற்ற பாத்திரங்களும், வாழைப்பழம் தேங்காய் மாம்பழம் பலாப்பழம் திரா¬க்ஷப்பழம் பேரிச்சைப்பழம் முதலிய பழங்களாலும், லட்டு, கஸ்தூரி சேர்ந்த பிட்டு மோதகம் அப்பம் என்னுமிவற்றாலும், வாழை பலா என்னும் இவற்றாலாய கறிகளாலும், இஞ்சி வெள்ளரிக்காய்களாலும், மாங்கய் ஊறுகாய் நாரத்தங்காய் ஊறுகாய்களாலும், தோல் நீக்கப்பட்ட பயறால் செய்யப்பட்ட பருப்புகளாலும் நிரம்பப்பெற்ற பாத்திரங்களும், மண்டலாகாரமாக முறையாக அலங்காரமாய் வைக்கப்பட்டு, இவற்றின் நடுவில் பால் தயிர்களும் புது நெய்யும் பெய்து, சருக்கரை தயிர் பால் பழமென்னுமிவற்றின் ரசங்களாற் செய்யப்பட்ட பருகுதற்குரிய பலவிதமான பொருள்களும், நாவாலிழுத்தற்குரிய பொருள்களும், உரிஞ்சுதற்குரியபொருள்களும், ஆகிய இவற்றாலும், பால் தயிர் வெண்ணெய் நெய்யென்னு மிவற்றாலும், ஏலம் சண்பகமொட்டு பச்சைக்கற்பூரம் கஸ்தூரி விலாமிச்சவேர் பாடலபுஷ்பம் முதலியவற்றால் வாசனை செய்யப்பட்டவையாயும், மிகவும் குளிர்ந்ததாயுமுள்ள ஸ்நபனகலசங்ஙஙகளினின்றுங் கொண்டுவரப்பட்ட ஒரு மரக்கால் பாதி அல்லது கால் மரக்கால் அளவுள்ள ஜலத்தாலும் நிரம்பப்பெற்ற பாத்திரங்களை நான்கு பக்கத்திலும் அலங்காரமாக வைத்து, இவ்வாறு சிவனுடையதும், அம்பிகையுடையதும், சதாசிவர் மனோன்மனி பரிவாரதேவர்கள் ஆவரண தேவர்களென்னும் இவர்களுடையதுமான நைவேத்திய பாத்திரங்களை வைத்து, அவற்றிற்கு மேல் பத்திரத்தைக் கிள்ளி வைத்து இருதயமந்திரத்தால் புரோக்ஷித்து மூன்றுதாளங்கள்¢திக்குபந்தனம் அவகுண்டனம் தேனுமுத்திரை யென்னுமிவற்றைச் செய்து, அன்னமுத்திரை பர்வதமுத்திரைகளைக்காட்டி, முன்னர் வைக்கப்பட்ட பத்திரத்தை எடுத்து அஸ்திரமந்திரத்தால் பரிஷேசனம் (நீர்க்கோட்டை) செய்து, இருதயமந்திரத்தால் தனித்தனி ஆபோசனங்கொடுத்து, புஷ்பத்துடன் கூடிய மிருகமுத்திரையால் முதலாவது கணபதிக்கு நிவேதனம் செய்து, பின்னர் அந்தப்புஷ்பத்தை நீக்கிவிட்டுக்கைகளைச் சுத்தஞ் செய்து ஹாம் ஹெளம் சிவாயஸ்வதாவென்று சொல்லிக் கொண்டு, ஐந்து அல்லது மூன்று அல்லது ஒருமுறை நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கிற அபிநயத்துடனும் புஷ்பத்துடனும் கூடிய மிருக முத்திரையால் சிவனுக்கு நிவேதனத்தைச் செய்து, பின்னர் அம்பிகை முதலிய ஒவ்வொருவருக்கும் முறையே தனித்தனி நிவேதனத்தைச் செய்ய வேண்டும்.

தனித்தனி பாத்திரமில்லையாயின், எல்லாப்பரிவார தேவர்களுக்கும் ஆவரண தேவர்களுக்கும் ஒரே பாத்திரத்தில் நைவேத்தியத்தைக் கொண்டுவந்து தனித்தனி நிவேதனத்தைச் செய்ய வேண்டும்.

பின்னர், பரமசிவனுக்கு வாசனையுள்ள சலத்தைச் சமர்ப்பித்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் புஷ்பத்தைச் சமர்ப்பித்து, எல்லாத்திரவிய சமூகத்தையும் பூரணமானதாகப் பாவித்து, ஸ்வதா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் ஆசமனங்கொடுத்து, ஈசுவரனுடைய வலது இடது திருக்கரங்களில் பூசிக்கொள்வதற்காக கற்பூரம் முதலியன சேர்ந்த சந்தனம் சமர்ப்பித்து, கை வாய் கால்கள் சுத்தி செய்தல் முதலியவற்றைப் பாவிக்க வேண்டும்.

முன்னரே ஈசானதிக்கில் வைக்கப்பட்ட சந்தனம் புஷ்பங்களென்னும் நிர்மாலியங்களுடன் எல்ல நிர்மாலியங்களையும் எடுத்துச் சதாசிவர் நிர்மாலியத்தை மாத்திரம் ஈசானதிக்கில் சண்டேசுவரரின் பொருட்டு நிவேதனத்தைச் செய்ய வேண்டும்.

 

நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை

சதாசிவர் எந்த முகத்தினால் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுகறாரெனின், மேல் நோக்யி ஊர்த்துவ முகத்தால் ஏற்றுக்கொள்ளுகிறாரென்க. சர்வஞானோத்திரத்தில் “தின்னக் கூடிய பொருள்களையும் உண்ணக்கூடிய அன்னத்தையும், பருகக்கூடியதையும், இன்னும் அநேகவிதமான நாவாலுண்ணக்கூடியது உரிஞ்சக்கூடியதுகளையும், சதாசிவருடைய ஊர்த்துவ முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருக்கின்றமை காண்க.

துவிசதியென்னும் நூலில் “ஓ சப்ரமண்யரே! பக்ஷியம் போஜ்யம் பேயம் லேகியம் சோஷியம் என்னுமிவ்வைந்தினையும் இருதய மந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு ஊர்த்துவ முகத்தில் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருத்தலாம், ஊர்த்துவ முகத்தால் சதாசிவர் ஏற்றுக்கொள்ளுகிறாரென்பது செவ்வனே விளங்குகின்றது.

“எல்லா முகங்களிலும் நைவேத்தியஞ் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஊர்த்துவ முகத்திலாவது சமர்ப்பிக்கலாம்” என்னும் ஆகமவிதியால் ஐந்து முகங்களிலும் தனித்தனி நைவேத்தியம் சமாப்பிக்கலாமென்பது நன்கு விளங்குதலால், சதாசிவர் ஐந்து முகங்களாலும் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளுகிறாரென்று பிறிதொரு பக்கமுமுண்டு.

ஊர்த்துவமுகத்தில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்குமிடத்தில் அந்த முகமானது தெற்கு முகமாயிருப்பதாகப் பூசைசெய்யும் பொழுது தியானஞ்செய்து கொள்ளல் வேண்டும். ஈசுவரனுடைய தெற்கு முகமிருக்கும் இடத்தில் பூசகன் வடக்கு முகமாக இருக்கவேண்டு மென்று நியமமிருத்தலால் அவ்வாறு செய்ய வேண்டுமென்க. அந்த நியமம் வருமாறு:- “ஸ்தண்டிலலிங்கம் சரலிங்கங்களில் பூசகனுக்கு எதிர்முகமாகப் பரமசிவனிருக்னிறார். கும்பம் முதலியவற்றில் மேற்கு முகமாகவும் ஸ்திரலிங்கத்தில் வாயிலுக்கு நேர் முகமாகவும் இருக்கின்றார்” என்பதாம்.

இதனால் ஆத்மார்த்த பூசைக்குரிய சரலிங்கத்தில் பூசிக்குமிடத்தில் பூசகனுக்கு எதிர்முகமாக ஈசுவரர் இருப்பரென்பது பெறப்படுதலின் அவ்வாறு கூறப்பட்டது. ஆகவே, ஆன்மார்த்த பூசையில் பூசகனுக்கு எதிர்முகமாகச் சிவன் இருப்பன் என்பது சித்திப்பின் பொருட்டு இருதயம் குஹ்யம் பாதமென்னும் அவயங்களும் தென்பக்கமாகவே இருக்குமென்பது பெறப்பட்டது.

கிழக்குத் திக்காகிய ஈசுவரனுக்கு முன்னரும், ஈசுவரனுடைய சத்தியிருக்கக்கூடிய வடக்குத் திக்கிலும், ஈசுவரனுடைய பிருஷ்டமிருக்கும் திக்கான மேற்கிலும் பூசகனிருந்து பூசிக்கக் கூடாது; ஈசுவரனது பலது பக்கத்திலமர்ந்து பூசிக்க வேண்டும் என்று ஆகமங்களில் கூறப்பட்டிருத்தலால், ஈசுவரனுக்கு முன்னரிருந்து பூசை செய்யக்கூடாதென்பது விளங்கும். ஆகையால், இவ்விடத்தில் ஊர்த்துவ முகத்திற்கு நைவேத்தியஞ் சமர்ப்பிக்குங்கால் எதிர்முகமாக இருந்து சமர்ப்பித்தல் எவ்வாறு கூடுமெனின், கூறப்பட்டவிலக்கு, கிழக்குமுகமாக இருக்கும் ஸ்திரலிங்கத்திற்குக் கூறியதென அறிந்துகொள்க. எதனாலெனின், “ஸ்தண்டிலலிங்கத்திலும் சரலிங்கத்திலும் பூசகனுக்கு எதிர்முகமாகச் சிவன் இருக்கின்றான்” என்ற விசேடவிதி காணப்படுதலாலென்க.

“அக்கினி அல்லது நிருருதிதிக்கில் இருந்துகொண்டு ஈசுவரனைப் பூசிக்க வேண்டும்” என்னும் விதியிருத்தலால் பூசகனுக்கு எதிர்முகமாகச் சிவபெருமான் இருப்பரென்பது பெறப்படவில்லையேயெனின், அவ்விதியும் ஸ்திரலிங்க சம்பந்தமென அறிந்து கொள்க.

ஸ்திரலிங்கம் அனைவருக்கும் உரிமையானமையாலும், உலகமனைத்திற்கும் அனுக்கிரம் செய்கின்றமையாலும், நான்கு திக்குக்களிலும் ஈசுவரனது விருப்பப்படி முகங்கள் இருக்கின்றமையால் எந்தத்திக்கில் வாயிலிருக்கின்றதோ அந்தத் திக்கை ஈசுவரமுடைய நேர்முகமாகக் கொள்ள வேண்டும். ஊர்த்துவமுகமும் இருதயம் பாதமென்னும் இவைகளுடன் வாயிலுக்கு நேர்முகமாக இருக்கின்றது. “துவாரத்திற்கு எதிர்முகமாக ஊர்த்துவ முகத்தைச் செய்யவேண்டும்.” “எந்தத்திக்கில் துவாரமிருக்கின்றதோ அந்தத் திக்கைக் கிழக்காக வைத்துக்கொள்ளல் வேண்டும்” என்னும் இவ்விரண்டு பிரமாணங்களாலும் வாயிலுக்கு எதிர் முகமாக ஊர்த்துவ முகம் இருக்கின்றதென்பது வலியுறுத்தப்பட்டது.

அல்லது ஊர்த்வமுகமொன்றே இருதயம் குஹ்யம் பாதமென்னுமிவற்றுடன் வாயிலுக்கு எதிர்முகமாக இருக்கின்றது; தற்புருடம் முதலிய முகங்கள் கிழக்கு முதலிய திக்குக்களிலேயே இருக்கின்றன; துவாரத்தின் பேதத்தால் அவை பேதத்தையடையா என்று கொள்க. “ஊர்த்துவ முகத்திற்கு எந்தத்திக்கு மிருக்கலாம். தற்புருடம் முதலிய முகங்கள் கிழக்கு முதலிய திக்குக்களில் இருப்பதை விடுகிறதில்லை” என்னும் வசனத்தால் தற்புருடம் முதலிய கிழக்கு முதலிய திக்குக்களிலேயே இருக்கின்றனவென்பது பெறப்பட்டது. கூறப்பட்ட இரண்டு பக்கங்களும் காமிகத்திற் கூறப்பட்டவையே. இதுபற்றியே காமிகத்தில் மேற்குத் துவாரத்தை யருச்சிக்கும்பொழுது “துவாரத்திற்கு எதிர்முகமாக ஊர்த்துவ முகத்தைச் செய்யவேண்டும்” என்று ஆரம்பித்து, தற்புருடமுகத்தைக் கிழக்குத் திக்கிலாவது மேற்குத்திக்கிலாவது சிந்திக்கலாமென்றும், அகோர முகத்தைத் தெற்குத் திக்கிலாவது வடக்குத் திக்கிலாவது, சிந்திக்கலாமென்றும், வாமதேவமுகத்தை வடக்குத்திக்கிலாவது தெற்குத் திக்கிலாவது சிந்திக்கலாமென்றும், சத்தியோசாத முகத்தை மேற்குத்திக்கிலாவது சிழக்குத் திக்கிலாவது சிந்திக்கலாமென்றும் கூறப்பட்டிருக்கின்றது.

அந்தக் காமிகத்திலேயே தெற்குத் துவாரத்தை யருச்சிக்குங்கால் அகோரம் அல்லது தற்புருடத்தைத் தெற்குத் திக்கிலும், அகோரம் அல்லது சத்தியோசாதத்தை மேற்குத் திக்கிலும், சத்தியோசாதம் அல்லது வாமதேவத்தை வடக்குத் திக்கிலும், வாமதேவம் அல்லது தற்புருடத்தைக் கிழக்குத் திக்கிலும் அருச்சிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது.

எல்லாத் திரலிங்கங்களையும் வடக்கு முகமாக இருந்து பூசிக்க வேண்டும். இதற்கு பிரமாணம் “லிங்கமாவது பிரதிமையாவது இன்னும் மற்றவையாவது எந்தத் திக்கு முகமாகச் செய்யப்படுகின்றனவோ அந்தத் திக்கில் பூசகன் வடக்கு முகமாயிருந்து கொண்டு சிவனைப் பூசிக்க வேண்டும்;” என்னு மிவ்வசனமேயாம்.

இவ்விடத்தில் முக்கியமான கிழக்கு முகமாக இருக்கும் லிங்கத்தைப் பூசிக்கும் பொழுது முக்கியமான ஆக்கினேய திக்கிலிருக்கும் பூசகனுக்கு முக்கியமாகவே வடக்கு முகமாக இருத்தல் பொருந்துகின்றது. (மேற்கு முகமாயிருக்கும்) ஈசுவரனுக்கு இடது பக்கத்தில் நிருதிதிக்கில் அம்பிகை அமர்ந்திருப்பின், அவ்விடத்தில் பூசகனிருந்தால், அம்பிகை இருக்கக்கூடிய பாகமான வடக்குத்திக்கில் இருக்கக்கூடாதென்னும் விலக்கிற்கு பிரோதமாகுமேயெனின், ஆகாது. எவ்வாறெனில், கூறுதும்:- காமிகத்தில் பச்சிமத்துவாரார்ச்சன படலத்தில் இடது அல்லது வலது பக்கத்தில் ஈசுவரனுடைய பார்வையையும், இரண்டு கைகளையும், ஒரு முகத்தையுமுடைய மனோன்மனியை ஸ்தாபிக்க வேண்டுமென்று மேற்கு முகமான லிங்க பூசாவிதியில் வலது பக்கத்திலும் தேவி இருக்கலாமென்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றமையால் நிருருதி திக்கிலிருக்கும் பூசகன் ஈசுவரருடைய வலது பக்கத்திலமர்ந்திருக்கும் ஈசுவரியினுடைய பாவனையைச் செய்ய வேண்டும். ஆகையால் விரோதமில்லையென்க.

இவ்வாறே சுவாமி தெற்கு முகமாக இருக்கும்பொழுது அந்தத் திக்குமுக்கியமல்லாத கிழக்காகும். அப்பொழுது நிருருதி திக்கு ஆக்கினேய திக்காகும். கிழக்கு வடக்காகும். அகையால் நிருதி திக்கில் பூசகன் கிழக்கு முகமாக இருந்துகொண்டு பூசிப்பது, ஆக்கினேயதிக்கில் வடக்கு முகமாக இருந்து கொண்டு பூசிப்பதாக ஆகும்.

இவ்வாறே சுவாமி வடக்குமுகமாக இருக்கும்பொழுது அந்தவடக்கே கிழக்காகும். ஈசானமே ஆக்கினேயமாகும். மேற்கே வடக்காகும். ஆகையால் பூசகன் ஈசானத்தில் மேற்கு முகமாயிருந்துகொண்டு பூசிப்பது ஆக்கினேயதிக்கில் வடக்கு முகமாக இருந்துகொண்டு பூசிப்பதாக ஆகும்.

இவ்வாறாதலின் பூசகருக்கு எதிர்முகமாக இருப்பதென்னும் நியமமானது (ஆத்மார்த்த பூசையில்) முரண்படுகிறதில்லை. எல்லா ஆர்மார்த்த பூசாப் பிரகரணத்திலும் “வடக்குமுகமாக ருசிராதி ஆசனத்தில் அமர்ந்திருக்கவேண்டும்” என்று விதித்திருக்கின்றமையால் பூசகன் வடக்கு முகமாக இருக்க வேண்டும்.

இவ்விடத்தில் ஒரு விசேடம் வருமாறு:- பாவத்தை நீக்குதற்குப் பிரியமுள்ளவர்களும், முத்தியை அடைதற்குப் பிரியமுள்ளவர்களும், முகங்களுக்குரிய திக்குக்களை அநுசரித்து அகோர முகத்தைத் தனக்கு எதிர்முகமாக இருப்பதாகத் தியானிக்க வேண்டும். “ஈசுவரனுக்கு முன்னர் இருக்கக் கூடாது. பின்பக்கத்திலும் இருக்கக் கூடாது. சத்தியின்பக்கத்திலும் இருக்கக்கூடாது. பாவநீக்கம் மோக்ஷம் என்னுமிவை உண்டாதற் பொருட்டுத் தென்பக்கத்திலிருந்துகொண்டு ஈசுவரனை யருச்சிக்க வேண்டும். பனிகாற்று குளிரென்னுமிவை தாமரையை எவ்வாறு பொசுக்கின்றதோ, அவ்வாறே அகோரமுகம் மிகவுஞ் சாந்தமாயிருப்பினும் பாவக்கூட்டங்களைக் கெடுக்கும். யானை பெரிதாயினும் மாவுத்தனுக்கு எவ்வாறு கட்டுப்படுகின்றதோ, அவ்வாறே பாவங்கள் பெரியனவாயினும் அகோரமுகத்திற்குக் கட்டுப்படகின்றன. ஆகையால் ஆப்தனாகிய ஈசுவரனுடைய வாக்கியத்திற்குக் கட்டுப்பட்டு வடக்கு முகமாக இருந்துகொண்டு பூசைசெய்ய வேண்டும்” என்னுமிந்த வாக்கியங்களால் அகோரமுகத்திற்கு எல்லாப் பாவங்களையும் போக்கும் பெருமை காணப்படுதலால் அந்த முகம் மிகவும் மேலானது.

அன்றியும் வாயுசம்கிதையில் “சம்சார முதலிய பாசங்களினின்றும் அச்சமடைந்த யாவரும், இந்தப் பிறவியில் பிறப்பில்லாத இந்த அகோர முகத்தையே தியானஞ்செய்து ஆன்மா¬க்ஷயின் பொருட்டு உருத்திரருடைய அந்தத் தெற்கு முகத்தைச் சரணமடைகின்றனர்” என்னும் பொருளையுடைய சுலோகத்தால் தெற்கு முகம் முத்தியைக் கொடுக்கக்கூடியதென்று பாராட்டப் பெற்றிருக்கின்றது.

போகம் மோக்ஷங்களை விரும்புகின்றவர்கள் துவாரத்திற்கு எதிர்முகமாக இருப்பது சாதகருக்கு எதிர்முகமாக இருப்பதென்னும் இவ்விரண்டனுள் சாதகருக்கு எதிர்முகமாக இருப்பதென்னும் பக்கத்தை அனுசரித்துத் தற்புருட முகத்தைத் தனக்கு எதிர்முகமாக இருப்பதாகத் தியானிக்க வேண்டும்.

பிரசன்னத்வம் யதீசஸ்ய என்னும் சுலோகத்தால் ஈசானம் முத்திக்கேது வென்றும், தற்புருடம் திதிக்கேது வென்றும், அகோரம் நாசத்திற்கேது வென்றும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகையால் தற்புருடம் திதிக்கு ஏதுவென்பது சித்திக்கின்றமைபற்றி, போக மோக்ஷங்களை விரும்புகின்றவர்கள் அந்த முகத்தைத் தியானிக்க வேண்டுமென்க. எவ்வாற்றானும் ஊர்த்துவமும் தெற்குமுகமாகவே இருக்கும் என்பது பெறப்பட்டது.

ஆகையால் ஆத்மார்த்தபூசையில் ஈசுவரனுக்கு எதிர்முகமாகச் செய்யப்படும் ஆவாகனம் முதலியன தௌ¤வாகச் சித்திக்கின்றன. இன்றேல் பரார்த்த பூசையில் ஈசுவரனுடைய ஊர்த்துவ முகம் மேல்முகமாக இருக்கின்றதென்பது எவ்வாறு விலக்கப்படுகின்றதோ, அவ்வாறே இவ்விடத்தும் விலக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டுச் சமாதானம் சொல்ல வேண்டியதாக வரும்.

பரார்த்த பூசையில் ஈசுவரன் உலகமனைத்திற்கும் அநுக்கிரகஞ் செய்கின்றான். அப்பொழுது பூசகனுக்கு எதிர்முகமாக இருக்க வேண்டுமென்பது நியதமன்றெனக்கருதி, துவாரத்திற்கு எதிர் முகமாக இருப்பதாகவே வைத்துக்கொண்டு அப்பிரதானமாகத் தனக்கு எதிர் முகமாக இருப்பதாய் மிகவும் சிரமப்பட்டு நிச்சயம் செய்துகொண்டோம்.

சாதகனுக்கு அநுக்கிரகம் செய்வதற்காக ஏற்பட்டுள்ள இந்த ஆத்மார்த்த பூசையில் “ஸ்தண்டிலலிங்கத்திலும் சரலிங்கத்திலும் ஈசுவரர் சாதகருக்கு எதிர்முகமாக இருக்கின்றார்” என்னும் வசனத்தால் சாதகருக்கு எதிர்முகமாக இருப்பதென்பது செவ்வனே விளங்கும்பொழுது எதன் பொருட்டு இதற்கு மாறாக சாதகருக்கு எதிர்முகமாக இல்லையென்று கொள்ள வேண்டுமென்பது சிலர் கொள்கை.

வேறுசிலர் ஆத்மார்த்த பூசையில் ஊர்த்துவமுகமும், இருதயம் குஹ்யம் பாதமென்னும் இவற்றுடன் தற்புருடமுகமும் கிழக்கு முகமாகவே இருக்கின்றன. அம்சுமான முதலிய ஆகமங்களில் ஆர்மார்த்த பூசாப்பிரகரணத்திற்றான “ஈசுவரனுடைய முன் பக்கத்திலும் பின்பக்கத்திலும் சத்தியின் பக்கத்திலும் இருக்கக் கூடாது” என்னும் வசனம் படிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் இவ்விதி பரார்த்த பூசாசம்பந்தமென்று சொல்ல முடியாது. “பூசைசெய்யுங்கால் ஈசுவரர் பூசகருக்கு எதிர்முகமாக இருக்கிறார்” என்னும் வசனமானது தீக்ஷ£ப்பிரகரணத்தில் படிக்கப்பட்டிருக்கின்றமையால் நித்திய பூசை செய்யும்பொழுது பூசகருக்கு எதிர்முகமாக இருக்கிறாரென்பது பெறப்படுகிறதில்லை. தீக்ஷையில் ஆர்மார்த்தலிங்க பூசைக்குச் சம்பந்தமில்லாமையால் “சரலிங்கத்தில் சாதகருக்கு எதிர்முகமாக இருக்கிறார்” என்னும் வசனம், நித்திய பூசாசம்பந்தமென்று சொல்லக் கூடாது. தீக்ஷையிலும் ஆத்மார்த்த லிங்கத்தைப் பூசிப்பதில் குற்றமில்லாமையாலென்க. ஆகையால் ஒருவித குற்றமுமில்லாமை பற்றிக் கிழக்குத் திக்கிலும் ஈசுவரன் முன்னரும் இருக்கக் கூடாதென்ற வசனத்தால் நித்தியம் நைமித்திகம் காமியமென்னுமிவற்றில் எப்பொழுதும் ஈசுவரர் கிழக்கு முகமாக இருக்கிறாரென்பது சித்தித்தது. இதற்குப் பிரமாணம் “ஓ லெக்ஷ§மீ! கலாசரீரியான ஈசுவரர் மேற்கே பிருஷ்டத்தையுடையவராக இருக்கின்றார்” என்னும் இலக்ஷ§மீ கேசவசம்வாதமாகும்.

அன்றியும் முகபிம்பமென்னும் ஆகமத்தில் “தீக்ஷை முதலியவற்றில் கடத்திலிருக்கும் ஈசுவரனை மேற்கு முகமாகத் தியானிக்க வேண்டும்; ஈசானம் தற்புருடமென்னுமிவற்றை நித்திய பூசையில் கிழக்கு முகமாகத் தியானிக்க வேண்டும்” என்றும், பிருகத் பார்க்கவ முதலியவற்றில் “முகம் இருதயம் என்னும் இவற்றையுடைய சிவனை எப்பொழுதும் கிழக்கு முகமாகத் தியானிக்க வேண்டும்; தீக்ஷை முதலியவற்றில் கலசத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும் பொழுது அவரை மேற்கு முகமாகத் தியானிக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகவே இவ்விரண்டு பிரமாணங்களிலுள்ள நித்ய, எப்பொழுதும், என்னும் இரண்டு சொற்களாலும் விசேடமான தீக்ஷை முதலியவற்றைத் தவிர ஏனைய நித்திய நைமித்திக காமிகங்களிலும், ஈசானம் தற்புருடமென்னுமிவை கிழக்கு முகமாக இருக்கின்றன என்பது பெறப்படுதலால், துவாரத்திற்கு எதிர்முகமாக இருக்கும் ஸ்திரலிங்கத்துக்கின்றி ஆன்மார்த்த லிங்கத்தைக் குறித்ததே அந்த விதியென்பது வலியுறுத்தப்படுதலால், நித்திய நைமித்திக காமியரூபமான ஆன்மார்த்த பூசையில் ஈசுவரர் கிழக்கு முகமாக இருக்கின்றாரென்பது இயல்பாகவே சித்தித்தது.

தீக்ஷை முதலிய நைமித்திகங்களில் விசேட வசனங்களிருத்தலால் தெற்கு முகமாக இருக்கிறாரென்பது முதலியன அதற்கு அபவாத சாஸ்திரமாகும். அன்றியும் ஈசானம் தற்புருடமாகிய இரண்டனுள் தற்புருட முகத்தினாலேயே சதாசிவர் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றனர்.

“துவாரம் மேற்கு முகமாயிருப்பினும் நைவேத்தியத்தைக் கிழக்கு முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்னும் சூக்கும ஆகம வசனத்தால் ஈசானமுகம் சிரோரூபமாக இருப்பதால் அந்த முகத்தில் நைவேத்தியஞ் சமர்ப்பிப்பது உலகவிரோதமாகையால் தற்புருட முகத்தால் நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளுகிறாரென்பது ஒரு பக்கம். ஆனால் தற்புருட முகத்தினாற்றான் ஏற்றுக்கொள்ளுகிறாரென்று வலியுறுத்தக் கூடாது.

“பக்ஷியம் போஜ்யம் அன்னம்பாநீய மென்னுமிவற்றை ஊர்த்துவ முகத்திற் கொடுக்க வேண்டும்” என்று முன்னர்க் கூறப்பட்ட இதனோடு மாறுபட்ட வாக்கியங்களாலும் “ஓ சுப்பிரமண்யரே ஆகுதியை ஊர்த்துவ முகத்திற் கொடுக்க வேண்டும்” என்பதனாலும், ஊர்த்துவ முகத்தாலும் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறாரென்பது பெறப்படுகின்றமை காண்க.

அன்றியும் “ஐந்து முகங்களிலும் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்” என்னும் வாக்கியங்களாலும், “பின்னர் ஐந்து முகங்களிலும் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றுள் ஈசானத்திற்குச் சுத்த அன்னமும், தற்புருடத்திற்குச் சர்க்கரையன்னமும், அகோரத்திற்கு எள்ளன்னமும், வாமதேவத்திற்குப் பயறன்னமும், சத்தியோசாதத்திற்குப் பாயசமும், தத்தம் பெயரை உச்சரித்துக்கொண்டு அந்தந்தத் திக்கில் ஈசுவரனுக்கு முன்னர்ச் சமர்ப்பிக்க வேண்டும்” என்னும் வாக்கியங்களாலும், “குறிக்கப்பட்ட ஐந்து அன்னங்களும் கிடையாவிடில் சுத்தான்னத்தை நிவேதனஞ் செய்யலாம்” என்னும் வாக்கியங்களாலும் ஐந்து முகங்களாலும் ஈசுவரர் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுகிறாரென்பது பெறப்படுகின்றது.

ஆகமங்களுக்கு முற்றும் பிராமாண்யத் ஒப்புக்கொள்ளுமிடத்தில் அவற்றுள் ஒர விதியையனுட்டிக்கலாம் ஒரு விதியை யனுட்டிக்கக் கூடாதென்று சொல்லுதல் கூடாது. ஆகையால் அந்தந்த ஆகம வசனங்களால் பெறப்பட்ட மூன்று மூன்று பக்கங்களும் (அதாவது தற்புருடத்தில் சமர்ப்பிக்கலாமென்பதும், ஈசானம் தற்புருடம் இரண்டிலும் சமர்ப்பிக்கலாமென்பதும், ஐந்து முகங்களிலும் சமர்ப்பிக்கலாமென்பது மெனவரும் மூன்று பக்கங்களும்) வேறு வேறாகவே யிருக்கின்றனவென்று சொலலுவதுதான் பொருத்தம். இது நிற்க.

நைவேத்திய முத்திரையினால் சிவனிடத்தில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கும் பூசகன் சிவனுடைய கையில் சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது அவர் முகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமா? எனில், கூறுதும், இவ்விடத்தும் வேறு வேறாகவே விதியிருக்கின்றது. எவ்வாறெனில், “கோஸ்தனி முத்திரையால் அமிருதீகரணஞ் செய்த பின்னர் நிவேதனஞ் செய்து அதன்பின்னர் புஷ்பத்தைக் கீழே போடவேண்டும். பின்னர் வலதுகையில் சுத்தமான நீரைச் சமர்ப்பித்தல் வேண்டும்” என்னும் விதிப்படி வலது கையில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கலாமென்று காணப்படுதலாலும், “சேகரித்து வைத்திருக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஊர்த்துவ முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; ஓ சுப்பிரமண்ணியரே! ஊர்த்துவ முகத்தில் ஆகுதியைக் கொடுக்க வேண்டும்” என்னும் விதிப்படி முகத்தில் நைவேத்தியத்தைச் சமர்ப்பிக்கலாம் என்று காணப்படுதலாலும் இரண்டு பக்கங்களுமுண்டு.

இருதயம் முதலியவற்றுடன் கூடின தற்புருட முகத்தில நிவேதனஞ் செய்ய வேண்டிய பொருள்களுள் திரவகப் பொருள் நீங்கிய ஏனைய பக்ஷியம், போஜ்யம் யாவற்றையும் அபயமுத்திரையில்லாத இடதுகையில் சமா¢ப்பிக்க வேண்டும்.

ஏனைய முகங்களில் நிவேதனஞ் செய்யவேண்டிய பானகம் முதலிய திரவகத் திரவியமனைத்தையும் அக்கினி ஹோத்திரத்திற்குச் செய்யப்படும ஆகுதிபோல் சூக்குமாச ரூபமாகப் பாத்திரங்களினின்று வெளிக்கிளம்பும்படி செய்து அந்தந்த முகம்வரை நைவேத்தியமுத்திரையால் கொண்டு போனதாகப் பாவித்து நேர்முகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகவே கையிலும் நைவேத்தியத்தைச் சமாப்பிக்கலாமென்பது பெறப்படுதலால் ஈசுவரனுடைய கையைச் சுத்தஞ் செய்வது என்பது என்னும் கிரியைக்குப் பயனில்லையென்பது இல்லை. பூசகனுடைய கையினால் ஈசுவரனுடைய முகத்தில் நைவேத்தியத்தைக் கொடுக்காமையால் பூசகனுடைய கைக்கு நிர்மாலியத்தால் ஏற்பட்ட கலப்புத் தோஷம் கிடையாது.

நைவேத்தியஞ்சமர்ப்பிக்குமுறையும் ஏற்றுக்கொள்ளு
முறையும் முடிந்தன
- - -

 

முகவாசம்

பின்னர் முகவாசமென்னும் தாம்பூலமாத்திரை, தாம்பூல மென்னுமிவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். உண்டபின்வாய் வாசனையடையும் பொருட்டு வாயில் எதனைஉபயோகித்துக்கொள்கின்றோமோ அதுதான் முகவாசமாகும். அது ஏலம், லவங்கம், தத்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றைப் பொடியாக்கிப் பனி நீரால் உருண்டையாகச் செய்து வைத்துக் கொள்ளப்படுவதாகும். ஏலம், லவங்கம், தக்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றின் பொடிகளுடன், சிறிது தேனும் சருக்கரையும் கலந்து முகவாசம் செய்வது உத்தமம். இது ஐந்து வாசனைத் திரவியங்கள் சேர்ந்தது. இதற்குப் பஞ்சசௌகந்திகமென்பது பெயர். ஒன்றும் சேராமல் தனிப்பச்சைக்கருப்பூரம், சாதிக்காய், லவங்கம், தக்கோலமென்னும் இவற்றின் பொடிகள் மத்திமம், பிரஸ்தம் அளவுள்ள நைவேத்தியத்திற்கு வெட்டப்பட்ட மிருவான பாக்குத் துண்டுகளும், அடியும் நுனியும் கிள்ளப்பட்ட வெற்றிலை நாற்பத்தாறும், அல்லது பாக்கை நோக்க நான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு மடங்கு அதிகமானவெள்ளை வெற்றிலைகளும், சுண்ணமும், அகிய எல்லாவற்றையும் பச்சைக்கருப்பூரம் முதலியன, நன்றாய்ப் பக்குவமான தேங்காய், குமட்டி மாதுளம்பழம் என்னுமிவற்றுடன் கூட நிவேதனம் செய்யவேண்டும்.

 

தீபஞ் சமா¢ப்பித்தல்

பின்னர் மூலமந்திரத்தால் விசேஷார்க்கியங் கொடுத்த ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, அல்லது ஒன்பது வட்டத்துடன் கூடிய புஷ்பதீபத்தைச் சமர்ப்பித்து, மூன்று அல்லது ஐந்து ஒட்டைப்பிரமாணமுள்ள நாகதீபம், சக்கரதீபம், பத்மதீபம், புருஷமிருகதீபம், கஜாரூட தேவேந்திர தீபம் என்னும் தீபபாத்திரங்களில் ஏற்றப்பட்ட தீபங்களையும் சத்திக்குத் தக்கவாறு சமர்ப்பித்துப் பின்னர் ஆரத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

 

ஆரத்தி சமா¢ப்பிக்கும் முறை

சுவர்ணம் வெள்ளி செம்பு வெண்கலமென்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்யப்பட்டதாயும், இருபத்துநான்கு அங்குல அளவுள்ளதாயும், அல்லது அதற்குப் பாதியளவுள்ள தாயும், குறித்த அளவில் மூனறிலொரு பங்கு அளவுள்ளதும், ஐந்திலொரு பங்கு உயரமுடையதும், இரண்டு வால் நெல்லளவு உயரமுடைய பட்டிகையையுடையதுமான கர்ணிகையினால் சோபிக்கப்பட்டதாயும், அந்தக் கர்ணிகைக்கு வெளியில் எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு பக்கங்களிலும் கர்ணிகை அளவான ஓஷ்டத்துடன் கூடினதாயும், நன்றாய் வட்டமான வடிவத்தையுடையதாயுமுள்ள பாத்திரத்தில், கர்ணிகையில் நடுவிலும் நான்கு பக்கங்களிலும் மாவினாலாவது இயல்பாகவாவது செய்யப்பட்ட தீபாசனங்களில் கருப்பூரம் முதலியவற்றாலாகிய திரியை வைத்து, ஒன்பது அல்லது ஐந்து தீபங்களும் அல்லது நடுவில் ஒரு தீபமும் ஏற்றி முக்காலியில் வைத்து, நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்தி செய்து, ஒன்பது தீபங்கள் ஏற்றியிருப்பின் நடுவில் சூரியனையும், நான்குதிக்குக்களில் குரு சுக்கிரன் புதன் சந்திரனென்னுமிவர்களையும், உபதிக்குக்களில் செவ்வாய் சனி இராகு கேது என்னுமிவர்களையும் ஐந்து தீபங்கள் ஏற்றியிருப்பின் நடுவில் அக்கினியையும், நான்கு திக்குக்களில் ஆகாசம் வாயு ஜலம் பிருதுவி யென்னுமிவற்றையும், ஒரு தீபம் ஏற்றியிருப்பின் அக்கினியையும் அருச்சிக்க வேண்டும்.

அல்லது ஒன்பது ஐந்து ஒன்று ஆகிய தீபங்களில் முறையே வாமை முதலிய ஒன்பது சத்திகளையும் பஞ்சப்பிரமமந்திரர்களையும் சிவனையும் அருச்சிக்க வேண்டும்.

இவ்வாறு சந்தனம் புஷ்பம் தூபம் தீபமென்னுமிவைகளால் அருச்சித்து அஸ்திர மந்திரத்தால் திக்குபந்தனம் செய்து தேனுமுத்திரை காட்டி இருகைகளாலும் எடுத்து ஈசுவரனுடைய சிரசு இருதயம் பாதமென்னுமிவைகளில் மூன்று முறை சுற்றிப் பூமியில் வைக்க வேண்டும்.

 

கருப்பூரதீபஞ் சமா¢ப்பிக்கும் மறை

சுவா¢ண முதலியவற்றால் செய்யப்பட்டவையாயும், வட்டமான வடிவம் அல்லது நான்கு முக்குச் சதுரமான வடிவத்தையுடையவையாயும், மொட்டை நுனியிலுடைய தண்டுடன் கூடினவையாயும், இயல்பாகவேனும் மாவினாலேனும் செய்யப்பட்ட தீபாசனங்களுடன் கூடினவையாயும், தீபாசனங்களில் வைக்கப்பட்ட கற்பூரத்திலாவது திரிகளிலாவது ஏற்றப்பட்ட தீபத்தையுடையவையாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரங்களுடன் நீராசனத்தையும் நிரீக்ஷண முதலியவற்றால் சுத்திசெய்து, ஆராத்திரிகம் போலவே இவற்றையும் சுற்றிச் சமர்ப்பித்துப் பூமியில் வைத்து அஸ்திர மந்திரத்தால் பூர்த்தி செய்ய வேண்டும்.

கருப்பூர நீராசன பாத்திரம் மூன்று வகைப்படும். ஒருசாண் அளவுள்ள அகலத்தையுடையதாயும், இரண்டு வால் நெல்லின் கனமுள்ளதாயும், எட்டங்குல அளவுள்ள நாளத்தையுடையதாயும், நாளத்தையொத்த முகுளத்தையுடையதாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரம் உத்தமம். இதன் மத்தியில் ஒரு தீபாசனமும், நை¢து சுற்றுக்களிலும் மறையே ஒன்பது, பதினைந்து, இருபத்தொன்று, இருபத்தேழு, முப்பத்துமூன்று தீபாசனங்களுமாக நூற்றாறு தீபாசனங்கள் இருக்க வேண்டும். அல்லது ஐந்து சுற்றுக்களிலும் முறையே எட்டு, பதினான்கு, இருபது, இருபத்தாறு, முப்பத்திரண்டு தீபாசனங்களாக நூற்றொரு தீபாசனங்களிருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதும் உத்தம பாத்திரமாகும்.

உத்தம பாத்திரத்திற்குக் கூறிய அளவில் பாதியளவு மத்திம பாத்திரத்திற்கு இருக்க வேண்டும். இந்த மத்திம பாத்திரத்தின் நடுவில் ஒரு தீபாசனமும் நான்கு சுற்றிலும் முறையே எட்டு, பதின்மூன்று, பதினெட்டு, இருபத்துமூன்று தீபாசனங்களுமாக அறுபத்து மூன்று தீபாசனங்களிருக்க வேண்டும்.

மத்திம பாத்திரத்தின் அளவில் பாதியளவு அதமபாத்திரத்திற்கு இருக்க வேண்டும். இந்த அதமபாத்திரத்திற்கு நடுவில் ஒன்றும், மூன்று சுற்றுக்களிலும் முறையே ஆறு, பத்து, பதினான்கு தீபாசனங்களும் ஆக முப்பத்தொரு தீபாசனங்களிருக்க வேண்டும்.

கருப்பூர நீராசனதீபம் சமர்ப்பித்த பின்னர் கண்ணாடி, குடை, சாமரம், விசிறி, பனையோலை விசிறி என்னுமிவற்றை முறையே ஈசான முதலிய மந்திரங்களால் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் அந்தத் தினத்தில் மனம் வாக்குக் காயங்களால் செய்யப்பட்ட குற்றங்கள் நீங்குதற் பொருட்டும், சிவசாயுச்சியத்தைப் பெறுதற்பொருட்டும், அறுகு தருப்பை அக்ஷதை வில்வம் ஆகிய இவற்றுடன் கூடின புஷ்பாஞ்சலியை, ஹாம் ஹெளம் சிவதத்வாதிபதயே சிவாய நம: ஹாம் ஹெளம் வித்தியா தத்வாதிபதயே சிவாய நம: ஹாம் ஹெளம் ஆத்மதத்வாதிபதயே சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு மூன்றுமுறை சமர்ப்பிக்க வேண்டும். மோக்ஷத்தையடைய விரும்புகிறவன் ஆத்மதத்துவம் முதலியவற்றின் முறையாக உச்சரித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சர்வ தத்வாதிபதயே சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு ஒரே முறை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், பூசையினால் திருப்தியையடைந்தவராயும், தனக்கு எதிர்முகமாய் அஞ்சலியுடனிருக்கும் எல்லா ஆவரண தேவர்களாலும் வணங்கப்படுபவராயும், பூசாமண்டபத்தின் துவாரத்திற்கு வெளியிலிருக்கும் பிரமன் விட்டுணு இந்திரன் சந்திரன் சூரியனாகிய இவர்களால் தோத்திரம் செய்யப்படபவராயும், கரையற்ற கருணைக் கடலாயும், பத்தர்களுக்கு விருப்பங்களனைத்தையும் கொடுக்கிறவராயும், சிவபெருமானைத் தியானஞ் செய்து, பூசையின் பலன் சித்திப்பதின்பொருட்டுச் சத்திக்குத்தக்கவாறு மகிமைவாய்ந்த பஞ்சாக்கரத்தைச் செபிக்க வேண்டும்.

 

பஞ்சாக்கர செபமுறை

பஞ்சாக்கரத்தைக் குருவின் உபதேசத்தை யநுசரித்து மிகவும் சாவதானத்துடன் போற்றிக் கொள்ளல் வேண்டும். சிவாசன பத்மத்திற்குத் தெற்குத் தளத்தில் அகோரமூர்த்திக்குத் தெற்குப் பக்கத்தில் உரக்கினதங்கத்தின் காந்திபோல் காந்தியையுடையவளாயும், பருத்தும் நிமிர்ந்து மிருக்கின்ற தனங்களையுடையவளாயும், நான்கு கைகளையும் மூன்று கண்களையும் சிரசில் இளம் பிறையையும் உடையவளாயும், தாமரை புஷ்பத்தையும் நீலோற்பல புஷ்பத்தையும் தரிப்பவளாயும், பிரசன்னதை யுடையவளாயும், வரம் அபயங்ளோடு கூடிய கைகளையுடையவளாயும், எல்லா இலக்கணங்களுமுடையவளாயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளாயும், வெண்டாமரை யாசனத்தில் வீற்றிருப்பவளாயும், கருமை நிறத்தையும் நௌ¤தலையுமுடைய கூந்தல்களை யுடையவளாயும் இருக்கும் ஸ்ரீமத் பஞ்சாக்கரதேவியை மனத்தால் ஆவாகனம் முதலியவற்றாலும், சந்தன புஷ்பங்களாலும், தூபதீபங்களாலும், நைவேத்தியத்தாலும் பூசிக்க வேண்டும். பின்னர், சுகாசனத்திலிருந்து கொண்டு நேத்திர ர¬க்ஷசெய்து வடக்கு முகமாக இருந்து மூக்கின் நுனியில் கண்களை வைத்துக்கொண்டும், மௌனமாயும் இருந்து, ஆத்மர¬க்ஷ செய்து கொள்ளல் வேண்டும். பின்னர் எல்லாத் திக்குக்களையும், பெருகுகின்ற அமிருதக் கூட்டத்தால் நனைக்கப்பட்டவையாயும், மேலும் கீழும் சந்திரமண்டலத்துடன் கூடினவையாயும் தியானிக்க வேண்டும். தன்னுடைய தேகத்தைச் சந்திரனாகிய சம்புடத்தின் மத்தியிலிருக்கிறதாயும், அமிருததாரைகளால் நனைக்கப்பட்டதாயும், சத்திமண்டலத்தினின்றும் பெருகுகின்ற அமிருததாரைகளால் அமிருதரூபமானதாயும் பாவிக்க வேண்டும். இது ஆத்மர¬க்ஷயாகும். இதனைத் தேவர்காளாலும் பேதிக்க முடியாது. அவ்வாறு ஆத்மர¬க்ஷ செய்த பின்னர் மந்திரர¬க்ஷ செய்ய வேண்டும்.

மந்திரர¬க்ஷ செய்யும் முறைவருமாறு:- வயிற்றிலிருந்து வாயுவை அஸ்திரமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு வலது நாடி வழியாக ரேசகஞ் செய்து, வெளியிலிருக்கும் நல்ல வாயுவால் இடது நாடி வழியாக வயிற்றை நிரப்ப வேண்டும். அபான வாயுவை மேலேயிழுத்து பிராணாபான வாயுக்களை யடக்கிக் கும்பகத்தால் ஒரேமனதுடன் சுழுமுனா நாடியில் வாயுவைச் சேர்க்க வேண்டும். இருதயத்தில் சுழுமுனையின் மத்தியிலிருக்கிறதாயும், சிவனுடன் சிவனுடன் கூடினதாயும், மந்திர மாதாவாயுமிருக்கிற சிற்சத்தியினிடத்தில் மந்திரத்தைச் சேர்க்க வேண்டும். மணிபோலும் மந்திரங்களையும் பிரபைபோலும் மந்திரதேவதையையும் போக்குவரத்துக்களால் தியானித்துக்கொண்டு மந்திர அக்கரங்களைச் செபிக்க வேண்டும். அந்த மந்திர தேவதையினிடத்துப் பற்றுவைத்திருக்கின்ற சித்தத்தையுடையவனாய், பொருள் சொல் என்னுமிவற்றின் சம்பந்தத்துடன் செபிக்க வேண்டும். இதுதான் மந்திர ர¬க்ஷ எனப்படும். இந்தர¬க்ஷ தேவர்களாலும் செய்யப்பட்டதாக ஆகும். இவ்வாறு அறிந்து முயற்சியுடன் செபத்தை நன்றாய்ச் செய்ய வேண்டும்.

செபிக்கும் முறையாவது:- நாபி முதல் துவாத சாந்தம் வரை சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய இவர்கள் ரூபமாக இருப்பவளாயும், ஆனந்த ரூபியாயும், சுழுமுனா நாடியில் உள்ளிருப்பவளாயுமுள்ள பராசக்தியை ஆதாரசக்கரம் முதல் வாயுவினால் பிரகாசிக்கச் செய்து, இருதயம் கண்டம் தாலு புருவநடு பிரமரந்திரம் ஆகிய தானங்களில், பிரமன் விட்டுணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னுமிவர்களை முறையே தியானித்து நீக்கிக்கொண்டு, மின்னற்கொடிக்குச் சமானமாயும், அஸ்திரமந்திரத்தின் அம்சமாயுமிருக்கிற மந்திரத்தை நாதத்தை முடிவாக உடையதாயிருக்கும்படி உச்சரித்துக் கொண்டு, மீண்டும் மூலாதாரத்திலிருக்கும் அந்த மந்திரத்தைப் போக்குவரத்துடன் நூற்றெட்டு முறை செபிக்க வேண்டும்.

அல்லது இருபத்தெட்டு, அல்லது எட்டு முறையாவது குருவால் உபதேசிக்கப்பட்டவாறு செபிக்க வேண்டும். இவ்வாறு செபிப்பவன் சிவசாயுச்சியத்தை யடைவன்.

செபமானது உள்ளிருக்கும் அகாரம் முதற்கொண்டு க்ஷகாரம் முடிவாகவுள்ள அக்கரமாலையினாலாவது, வெளியிலிருக்கும் உரத்திராக்க மாலையினாலாவது செய்யப்படல் வேண்டும்.

அகாரமுதல் க்ஷகாரம் முடிவாகவுள்ள அக்கரமாலையினாற் செய்யப்படும் செபமுறை வருமாறு:- பிரமரந்திரத்தில் வெண்மையான எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு முக்கு யந்திர வடிவாயும், மேற்பாகத்தைப் பற்றுக் கோடாக உடையதாயும் இருக்கிற தாமரைப் புஷ்பத்தைத் தியானிக்க வேண்டும். ஆகாய பீசாக்கரம் அதன் கர்ணிகையாகவும், பதினான்கு உயிரெழுத்துக்களும் விசர்க்கமும் விரையாகவும், நெடில் குறில் என்று எண்ணப்பட்டுவருகின்ற பதினாறு உயிரெழுத்துக்களும் கேசரங்களாகவும், கவர்க்கம் முதல் பவர்க்கம் வரை ஐந்து வர்க்கங்களிலுள்ள இருபத்தைந்து அக்கரங்களும் தளங்களாகவும், அமிருத பீசாக்கரம் நான்கு முக்கு யந்திரத்தின் திக்குக்களாகவும், ஏழாவது அக்கரம் உபதிக்குக்களாகவும், இவ்வாறு அக்கர ரூபமாகத் தாமரையைச் சிந்திக்க வேண்டும். சிந்தித்த மாத்திரத்தினாலேயே எல்லா நோய்களும் அபமிருத்துக்களும் நீங்கும்.

பின்னர் இடைகலை பிங்கலைகளின் வழியாக வெளியே செல்லாத வாயுவினால் மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை சிகையுடன் விருத்தி செய்து, அந்த அக்கினி சிகை, குண்டலினி சத்தியுடன் சுழுமுனா நாடி வழியாகப் பிரமரந்திரம் வரை சென்று, அங்கிருக்கும் அக்கர ரூபமான தாமரையோடு சம்பந்தித்து, அந்தத் தாமரையினின்றும் பெருகின க்ஷகார முதல் அகாரமீறான அக்கர வரிசை ரூபமாகவுள்ள அமிருத தாரைகளைப் பிரமரந்திரம் முதல் மூலாதாரம் வரை வியாபித்துக்கொண்டிருப்பதாகப் பாவிக்க வேண்டும்.

மூலாதாரத்திலிருக்கும் அக்கினிக்குச் சமமாகப் பிரகாசிக்கும் சுழுமுனா நாடியின் வழியாகப் பிரமரந்திரம் வரை சென்ற குண்டலினி சத்தியையே, அக்கர ரூபமான தாமரையினின்றும் பெருகின அமிருத தாரையுடன் சமரசத்தை யடைந்து அமிருதம் போலிருக்கிறதாயும், பரமானந்த ரூபமாயுமுள்ள அக்கர சத்தியாகத் தியானிக்க வேண்டும். இவ்வாறே முதலாவது செல்லுங்காலத்தில் பிரகாச ரூபமாயும், எதிர்த்து வருங்காலத்து அமிருதம் போலிருக்கிறதாயும், நடுவில் ஆனந்தசிற்கனமாயும் அறிகிறோம் என்று பெரியோரும் கூறுகின்றனர்.

பிரமரந்திரத்திலிருக்கும் அக்கரரூபமான தாமரை முதல் அகாரம் முதலிய முறையாக மூலாதாரம் வரை வியாபித்துக் கொண்டிருக்கிற அக்கர ரூபமான சத்தியில் அகாரம் முதற்கொண்டு எட்டு அக்கரங்களால் ஒரு வருக்கமும், ளகாரம் முதல் எட்டு அக்கரங்களால் ஒரு வருக்கமும், ககாரம் முதல் ஐந்து ஐந்து வருக்கங்ககளால் ஏழுவருக்கங்களும், ஆக ஒன்பது வருக்கங்களும், முறையே சூரியன் சந்திரன், புதன், குரு சுக்கிரன், செவ்வாய், சனி, இராகு,கேதுக்களின் இரத்தின ரூபங்களாக இருக்கின்றன.

அவர்களின் இரத்தினங்களாவன - மாணிக்கம் வைடூரியம் புஷ்பராகம் வைரம் பவளம் நல்முத்து இந்திரநீலம் கோமேதகம் மரகதம் என்னும் இவை. இவற்றால் செய்யப்பட்ட அக்கமாலை மேலானது. இது நவக்கிரகரூபமான எல்லா எழுத்துக்களாலும் பூரணமாயிருக்கின்றது. இந்த அக்கமாலையை இருதய கமலத்தின் நடுவில் நின்றும் வந்ததாகிய தீபாகாரமான பரமேசுவரனுடைய பிரபா ரூபமாகிய சத்தங்களுடன் பராசத்தியினின்றும் தோன்றினதாகப் பாவிக்க வேண்டும்.

மூல மந்திரத்தை நவரத்தின மயமான கற்பகக் கொடியின் நுனியிலிருக்கும் புஷ்பத்தினின்றும் தோன்றினதாகப் பாவித்து, க்ஷகாரத்தை மேருவாகச் செய்து, ளகாரம் முதலிய அக்கரங்களின் முறையாக அக்கமாலையில் மூலமந்திரத்தின் போக்குவரத்துக்களைப் பாவிக்க வேண்டும்.

மந்திரத்தை யுச்சரிக்குங் காலத்தில் மந்திரங்கள் மேல்நோக்கிச் செல்லுவதாகப் பாவிக்கும் முறையில் மந்திரத்தின் சிரசில் ளகாரம் முதலிய அக்கரங்களை விசர்க்கத்துடன் கூடியவையாக நியாசஞ்செய்து, மந்திரம் மீண்டும் வருவதாகப் பாவிக்குங்காலத்தில் அகாரம் முதலிய அக்கரங்களை விந்துவை இறுதியிலுடையவையாக நியாசஞ் செய்து செபிக்க வேண்டும். இவ்வாறு செய்யின் மந்திரம் நூறு முறை செபிக்கப்பட்டதாக ஆகும்.

பின்னர், பதினாறு உயிரெழுத்துக்களை ஒன்றாகவும், ககரமுதல் மகரம் வரையுள்ள அக்கரங்கள் ஐந்தாகவும், யகர முதலிய நான்கு அக்கரங்கள் ஒன்றாகவும் யகர முதலிய நான்கு அக்கரங்கள் ஒன்றாகவும், ஆக எட்டு வருக்கங்களையும் மந்திரத்தின் சிரசில் நியாசஞ் செய்து எட்டு முறை மந்திரத்தைச் செபிக்க வேண்டும். இவ்வாறு செபிக்கும் பொழுது மந்திரம் நூற்றெட்டு முறை செபிக்கப்பட்டதாக ஆகும்.

செபத்தைத் தொடங்குங் காலத்தில் இரத்தினத்துடன் பிரபை சமரசமாயிருக்குமாறு போல, மூல மந்திரத்துடன் பரதேவதை சமரசமாயிருப்பதாகவும், மூலமந்திமாகிய நகார முதலிய அக்கரங்களை, பொன்மை கருமை புகைமை பொன்மை செம்மையாகிய வர்ணங்களையுடையவர்களாகவும், பரதேவதையின் வடிவத்துடன் சமரசமான வடிவத்தோடு இருப்பவர்களாகவும் உள்ள பிரமன் விட்டுணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவனென்னும் இவர்களாகவும் பாவிக்க வேண்டும்.

இருதயம் கண்டம் தாலு புருவநடு பிரமரந்திரமென்னுமிவற்றில் முறையே நகார முதலிய அக்கரங்களுடன் பிரமன் முதலாயினாரைத் தியானித்து நீக்க வேண்டும். இப்பொருள்களனைத்தும் முன்னர்க் கூறப்பட்ட சுலோகங்களில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு உள்ளேயிருக்கும் அக்கமாலையினால் செபிப்பதற்குச் சத்தியில்லாதவன் முன்னர்க் கூறிய முறையே செப ஆரம்ப காலத்தில் மந்திரத்தைப் பராசக்தியிலிருப்பதாகப் பாவித்து, மந்திரத்துடன் சேர்க்கப்பட்ட அகார முதலிய அக்கரங்களை விலக்கி, தனிமந்திரத்தை உருத்திராக்கம் முதலியவற்றால் செய்யப்பட்ட வெளியிலிருக்கும் அக்கமாலையினால் எண்ணிக்கொண்டு செபஞ் செய்ய வேண்டும்.

செபஞ் செய்யும் முறையாவது:- செபமாலைக்குரிய உருத்திராக்கம் நெல்லிக்கனி இலந்தைப்பழம் கடலையென்னுமிவற்றின் அளவினையுடையதாய், முறையே உத்தமம் மத்திமம் அதமமெனப்படும். முகமற்றதும் மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்று ஒன்று என்னும் முகத்தையுடையனவுமான மணிகள் செபமாலைக்கு ஆகும். ஏனைய முகமணிகள் செபமாலைக்காகா. செபமாலையை நூற்றெட்டு மணி அல்லது ஐம்பத்துநான்கு மணி அல்லது இருபத்தேழு மணிகளால் சுவர்ணக் கொடியிலேனும், வெள்ளிக்கொடியிலேனும், வெண்பட்டு இழையினாலாகிய கயிற்றிலேனும், முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்த மேருவுடன் கூடினதாய்க் கோக்கப்படல் வேண்டும். அந்தந்த வருணங்களுக்குரிய உருத்திராக்கங்களால் செய்யப்பட்டதாயும், சத்தியோசாத முதலிய மந்திரங்களைத் தனித்தனி நூறு முறை செபித்துக் கழுவுதல், குச்சிப்புல்லால் அழுக்கை நீக்குதல், தூபங்காட்டல், சந்தனம் பூசுதல், மந்திரஞ் செபித்தல் என்னும் ஐந்து சமஸ்காரங்களையுஞ் செய்து ஈசானம் அல்லது அகோர மந்திரத்தால் செபிக்கப்பட்ட மேருவையுடையதாயும், சிவபூசை செய்யும் முறைப்படி ஆவாகன முதலிவற்றால் பூசிக்கப்பட்டதாயும், ஜபத்தை ஆரம்பஞ் செய்யும் பொழுதே ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷிக்கப்பட்டதாயும், இருதய மந்திரத்தை உச்சரித்து சந்தனம் புஷ்பம் மாலாமுத்திரையென்னும் இவற்றாற் பூசிக்கப்பட்டதாயும் உள்ள அக்கமாலையை, வலது கையில் ஆடையால் மறைத்து, வாசிக செபத்தில் நடு விரலில் வைத்துக்கொண்டு சுட்டு விரல் கட்டைவிரல்களால் தள்ளல்வேண்டும். மௌ¢ளச் செபிப்பதான உபாம்சு என்னும் செபத்தில் அணிவிரல் வைத்துக்கொண்டு நடுவிரல் கட்டைவிரல்களால் தள்ளல்வேண்டும். மானசமென்னும் செபத்தில் கடைவிரலில் வைத்துக்கொண்டு அணிவிரல் கட்டைவிரல்களால் தள்ளல்வேண்டும். போகத்தில் இச்சையுள்ளவன் கீழ்நோக்கியும், மோக்ஷத்தில் இச்சையுள்ளவன் மேல் நோக்கியும் தள்ளல் வேண்டும். செபிக்குங் காலத்து மேருவைத் தாண்டக் கூடாது. மேரு மணி கைப்பட்டவுடன் திரும்ப மறுத்துவாங்கி மேலே கூறியவாறு கையில் ஏறிட்டுச் செபிக்கவேண்டம். மேருவைத் தாண்டினால் அந்தக் குற்றம் நீங்குதற்பொருட்டு அகோர மந்திரத்தை ஆயிரம் முறை செபிக்க வேண்டும். அந்தக் குற்றம் உண்டாகாதவாறு மேரு மணியைப் பெரிதாயிருக்கும்படி செய்துகொள்ளல் வேண்டும். அக்கமாலை சோர்வினால் காலில் விழுந்தால் அகோர மந்திரத்தை ஆயிர முறையும், பூமியில் விழுந்தால் அந்த மந்திரத்தை முப்பது முறையும், ஆடையில் விழுந்தால் அந்த மந்திரத்தை நூறு முறையும் செபிக்க வேண்டும். செபத்தை ஆரம்பஞ் செய்யும் பொழுது வலதுகைக் கடைவிரல்களில் நடுவில் ஒரு புஷ்பத்தை வைத்துக் கொண்டு செபித்தல் வேண்டும்.

உருத்திராக்கமாலையை வைத்துக்கொண்டு செபம் செய்யும் பொழுது அந்த மாலையைச் சிரமமின்றித் தாங்துற் பொருட்டு வல கையில் வைக்கப்பட்டிருக்கும் புஷ்பத்தை இடது கையில் வைத்துக் கொண்டு செபஞ் செய்ய வேண்டும். மிக மந்தமாகவும் மிக வேகவமாகவும் செபஞ் செய்தல் கூடாது. மிகவும் சாவதானத்துடன் செபத்தைப் பூர்த்தி செய்து, இடது கையில் அஸ்திரம் கவசம் இருதயமென்னும் மந்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாக நியாசஞ் செய்து, அதன் பின்னர்ச் செபத்தை ஆரம்பஞ் செய்யும் பொழுது தரிக்கப்பட்ட புஷ்பத்தை வைத்து, மீண்டும் இருதயம் கவசம் அஸ்திர மந்திரங்களால் சம்புடமாகச் செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணமும், கவசமந்திரத்தால் அவகுண்டனமும் செய்து, வலது கையில் மீண்டும் அந்தப் புஷ்பத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இருதயத்தில் வைத்து, பூரணசந்திரனுக்குச் சமமான செபம் அந்தப் புஷ்பத்துள் இருப்பதாகத் தியானம் செய்து பூமியில் வலது முழங்காலை ஊன்றிக்கொண்டு.

ஹாம், குஹ்யாதிகுஹ்யகோப்தா த்வம் கிருஹாணா ஸ்மத்க்ருதம் ஜபம்II ஸித்திர்பவது மே யேந த்வத்ப்ரசாதாத் த்வயி ஸ்திதேII

ஹாம், ஹெளம் சிவாய ஸ்வாகா, ஸ்ரீ பரமசிவஜபம் த்வயி நிக்ஷிபாமி என்று சொல்லிக்கொண்டு செபத்தைச் சுளுகத்திலிருக்கும் அருக்கிய சலத்தால் அக்ஷதை தருப்பை புஷ்பமென்னுமிவற்றுடன் சிவனுடைய வரத ஹஸ்தத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தன்னாற்செய்யப்பட்ட புத்தி முத்திகளைத் தாக்கூடிய செபம் தன்£ல் இவ்வளவு செய்யப்பட்டது என்பதுபோன்ற வியந்து சொல்லும் சொற்களாலும், ஜலங்கழித்தலாலும், கன்மம் செய்யாமையாலும், செபகருமத்திற்குக் கேடு ஏற்படுமோவென்னும் சந்தேகம் நிகழுமாதலால், செபத்தை இரக்ஷிப்பதின் பொருட்டு, செபத்தைச் சிவபெருமானுடைய திருக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட குஹ்யாதி என்றற்றொடக்கத்துச் சுலோகத்தின் பொருள் வருமாறு:- குஹ்யம் அதிகுஹ்ய முதலிய மந்தித் தத்துவங்களனைததையும் காப்பவர் நீரே; ஆகையால் தேவரீர் அனைத்தையும் காக்கின்றமைபற்றி என்னுடைய செபத்தையும் ஏற்றருளல் வேண்டும். எந்தச் செபமானது உம்மிடத்தில் இருக்கின்றதோ அந்தச் செபத்தைக் கொண்டு உம்முடைய பிரசாதத்தால் எங்களுக்குப் போகமோக்ஷங்கள் சித்திக்கவே செய்யும். ஆகையால் அடியேனிடத்திற் கிருபைவைத்துச் செபத்தை ஏற்றருளல் வேண்டுமென்பதாம்.

பின்னர் ஹாம் யத்கிஞ்சித் கர்மஹே தேவஸ§கிருதம் சைவது துஷ்கிருதம்I தன்மே சிவபதஸ்தஸ்ய புங்க்ஷ¢வ க்ஷபய சங்கரII ஹாம், ஹெளம், சிவாய ஸ்வாஹா, பரமசிவாயமே சுகிருதம் துஷ்கிருதஞ்ச நிவேதயாமி என்று சொல்லிக்கொண்டு, புண்ணிய பாவரூபமான எல்லாக் கன்மங்களையும் முன்னர்க் கூறிவாறு சுளுகத்திலிருக்கும் நீரினால் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தச் சுலோகத்தின் பொருள் - ஹே சங்கரனே! சிவபதத்திலிருக்கும் என்னுடைய புண்ணியரூபமான கன்மத்தைக் காப்பாற்றும்; பாவரூபமான கன்மத்தை நாசஞ்செய்யு மென்பதாம்.

மோக்ஷத்தை யடையவொட்டாது செய்யும் விக்கினத்தை நீக்குதற் பொருட்டும், போகத்தையடைவதின் பொருட்டும், புண்ணியத்தைச் சிவனுடைய திருக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டம். பாவத்தைச் சமர்ப்பித்தல் எதன் பொருட்டென்னில், அது நாசமடைதற் பொருட்டென்க. ஆகையால் சுலோகத்தில் காப்பாற்றும் நாசஞ்செய்யுமென்பதற்கு புண்ணித்தைக் காப்பாற்றும், பாவத்தை நீக்கும் என்று பொருள் செய்து கொள்ளல் வேண்டும்.

போகத்தில் ஆசையற்ற முமூக்ஷ§வானவன் மோக்ஷத்திற்குள்ள விக்கினங்கள் நாசமடைதற் பொருட்டுள்ள புண்ணியத்தை மாத்திரம் காப்பாற்றுமென்று பிரார்த்தித்துக் கொள்ளல் வேண்டும். போகத்தின் பொருட்டுள்ள புண்ணியங்கள் இடையில் வந்தனவாயும் மனுடபோகம் முதற்கொண்டு இரணியகருப்பருடைய ஆனந்த மீறாக உள்ள போகங்களைத் தரக்கூடியனவாயும் உள்ளன. இவை சிவபூசையில் அங்கபலனாயிருத்தல் பற்றி, (அஃதாவது பிரதான பலனாக இல்லாமையால்) விடயங்களில் வெறுப்படைந்த கேவல முமூக்ஷ§வைக் குறித்து “பரமாத்மாவை நோக்க இந்தப் போகங்கள் நரகத்திற்கொப்பாகும்” என்று கூறும் புராண வசனப்படி, போகத்தைத் தரும் புண்ணியங்கள் நரகத்தைத் தருவனவாய் இருந்துகொண்டு பாபரூபமாயிருத்தலால், அந்தப் பாவம் நசிக்கும் பொருட்டே ஈசுவரனிடத்தில் புண்ணியத்தை மாத்திரம் காப்பாற்றுமென்னும் இந்தப் பிரார்த்தனை முமூக்ஷ§க்கு ஏற்பட்டுள்ளது. காப்பது என்னும் பொருளைத்தரக்கூடிய புஜிதாதுவானது, கிரியையின் பலனைப் பிறன் அடைதலென்னும் பொருளைத் தரக்கூடிய பரஸ்மைபதமாயிருத்தலால், அனுபவியும் என்னும் பொருளைத்தரக்கூடிய புங்க்தியென்று பரஸ்மைபதத்திற்குரிய பிரத்தியயங்களுடன் இருக்க வேண்டும். ஆயினும் மந்திர ரூபமான இந்தச் சுலோகத்தில் வைதிகமந்திரங்களில் கிரியையின் பலனை, தான் அடைதலென்னும் பொருளைத்தரக்கூடிய ஆத்மநே பதமான “ரக்ஷஸ்வ” என்னும் பிரயோகம் இலௌகிக விருத்தமாயிருப்பினும், வ்யத்யயோபகுலமென்ற சூத்திரத்தை அனுசரித்து சந்தஸில் ஆத்மனேபதமாக வருமாறுபோல இவ்விடத்தில் வேதத்திற்குச் சமானமான மந்திர சுலோகத்திற்கு ஒருவித குற்றமுமில்லாமை காண்க.

அல்லது புஜிதா துவையுடைய புங்க்க்ஷ¢வ என்னும் பதத்திற்கு இரக்ஷிக்கவேண்டும் என்னும் பொருள் கொள்ளாமல் அநுபவியும் என்னும் பொருளையே கொள்ளல் வேண்டும். இவ்வாறு கொண்டால் ஆத்மனேபதமாக ஆகும்.

புண்ணியம் என்னுஞ் சொல்லால், தனித்த முத்தியை விரும்பும் பூசகனுடைய போகத்தின் பொருட்டுள்ள விருப்பமில்லாத புண்ணியத்தையே கொள்ளல்வேண்டும். முத்தியின் பொருட்டுள்ள புண்ணியத்தைக் கொள்ளக்கூடாது.

அரசனுக்கு அரசபோகம் சுவாதீனமாயிருக்குமாறு போல முமூக்ஷ§க்களால் சமர்ப்பிக்கப்பட்ட போகமானது பரமசிவனுக்குச் சுவாதீனமாயிருக்கின்றது. இவ்வாறன்றிப் பரமசிவனே யனுபவிக்கிறான் என்பது கருத்தன்று. சுவாதீனமாவது, பூசகனிடத்தில் அன்புள்ள சுற்றத்தார்கள் அல்லது நண்பர்கள் ஆகிய இவர்களிடத்துப் போகத்தைச் சேர்த்தலாம். முமூக்ஷ§வால் விரும்பப்படாத புண்ணியத்தைச் சிவன் அந்த முமூக்ஷ§வினுடைய சுற்றத்தார் நண்பரென்னும் இவர்களின் பொருட்டுக் கொடுக்கிறாரென்பது சுருதியில் பிரசித்தமாயிருக்கின்றது. முமூக்ஷ§வினுடைய பாவங்களை அவனுடைய சத்துருக்களுக்குக் கொடுக்கிறாரென்பதும் பிரசித்தமாயிருக்கின்றது. ஆயினும் அட்டமூர்த்தியான சிவனுடைய எல்லா ரூபத்தையும் பூசகன் தியானித்துக்கொண்டிருக்கின்றான். ஒன்றையும் பகைக்கவில்லை. ஆகையால் தன்னாற் செய்யப்பட்ட பாவங்கள் தன்னிடத்தில் பலனையுண்டுபண்ணாது நசிக்க வேண்ட மென்பதையே பிராத்திப்பது பொருத்தமென்றெண்ணி அந்தப் பிரார்த்தனை மந்திரத்திற் சேர்க்கப்பட்டது.

பின்னர், சிவோ தாதா சிவோ போக்தா சிவஸ்ஸர்வமிதம் ஜகத், சிவோ யஜதி சர்வத்ர யச்சிவஸ்ஸோஹமேவது.

ஹாம், ஹெளம், சிவாய சுவாகா பரமசிவமா த்மானம் துப்யம் நிவேதயாமி யென்று சொல்லிக்கொண்டு, முனர்க்கூறியவாறு சுளுகோதகத்தினால தன்னைச் சமர்ப்பிக்க வேண்டும். $$இந்த மந்திரசுலோகத்தில் ஸோஹம் என்னும் ஓர் பாகத்தால் தனக்கும் சிவனுக்குமுள்ள சரீரசரீரிபாவம் நிச்சயம் செய்யப்படுகின்றது. சிவன் எல்லாவற்றையும் நியமனஞ் செய்கின்றமையால் சரீரி. பூசகன் சிவனால் நியமிக்கப்படுபவனாயிருக்கின்றமையால் சரீரம். அகவே சரீரசரீரி பாவத்தில் ஸோஹம் என்பது ஓரிடத்திலிருப்பதாக வந்திருக்கின்றது. எதுபோலுமெனின் தர்மக்ஞஸ் ஸ§ந்தரோ ராஜா என்னுமிடத்தில், தர்மத்திற்குக் குணத்தன்மையும், சுந்தரனான அரசனுக்குக் குணித் தன்மையும் ஏற்பட்டு முதல் வேற்றுமைவந்து ஓரிடத்திருத்தலென்னும் சாமானாதி கரண்யம் சம்பவிக்குமாறு போலுமென்க. ஸோஹமேவது என்பதிலுள்ள ஏவ என்பது ##அயோகவியவச்சேதமாகும்.

($$ இந்த மந்திர சுலோகத்தின் பொருள்:- பலன் தருபவன் சிவனே பலனையனுபவிப்பவன் சிவனே. எல்லாச் செகத்துக்களும் சிவனே. பூசிப்பவன் சிவனே. இவ்வாறு சிவன் எல்லாமாயிருத்தலால் நான் சிவமாயிருக்கின்றேனென்பதாம். இன்னும் விரிவாக இதன் பொருள் நூலாசிரியரால் பின்னர்க் கூறப்படுகின்றது. ## அயோகவியவச்சேத மென்னும் வடமொழியானது, தமிழில் இயையின்மை நிக்குதலென்று மொழிபெயர்த்து வழங்கப்படும். சங்கம் வெளுப்புத்தான் என்றவிடத்து, தான் என்னும் ஏவகாரம் சங்கத்திற்கு வெளுப்பு இயல்பு என்பதைக்காட்டுமாறுபோல, சிவன் நான்தான் என்னுமிடத்து, தான் என்னும் ஏவகாரம் சிவன் நானாயிருப்பது இயல்பு என்பதைக் காட்டும்.)

இவ்விடத்தில் சிவ என்னும் சொல்லால் ஆணவம் மாயை கன்மமென்னும் மூன்று மலங்களோடும் சம்பந்தப்படாதவராயும், மேலான மங்கலத்தை யுண்டுபண்ணுகிறவராயும் இருக்கும் பரமசிவன் குறிக்கப்படுகின்றார் “அநாதியான மலசம்பந்தம் இவரிடத்தில் இயல்பாகவே யில்லாமையால் சிவசப்தத்தின் உண்மையான பொருளையறிந்த பெரியோர்களால் இவர் சிவனெனக் கூறப்படுகிறார்” என்னும் பொருளையுடைய சுலோகத்தால் பிரசித்தராயிருக்கிற பரமசிவன் குறிக்கப்படுகிறார் என அறிந்து கொள்க.

அல்லது, நித்திரையென்னும் பொருளையுணர்த்தும் சீங் என்னுந்தாதுவுடன் உணாதியானவன் பிரத்யயத்தை இறுதியிலுடைய தாய்ஹ்ரஸ்வத்துடன் நிபாதத்தால் மங்களகுணங்களின் சமூகமானது இவரிடத்தில் சமரசமாயிருக்கின்ற தென்னும் சொற்புணர்ச்சி யிலக்கணத்தை யநுசரித்து, ஒன்றுக்கொன்று சேரதனவாயுள்ள உதாரத்தன்மை, மிகுந்த மதுரத்தன்மை, விசேடமாயறியுந் தன்மை, நிரதிசயத்தன்மை, பொறுக்குந் தன்மை முதலிய நற்குணங்களின் பற்றுக்கோட்டிற்கு உபயோகியான எல்லா மங்களகுணங்களுக்கும் சமுத்திரம் போன்றவரென்னும் பொருளை வைத்துக்கொள்ளலாம்.

உலகத்திலுள்ள அசுபங்களுள் ஒன்றேனும் இவரிடத்தில் கிடையாது. பரமாத்மாவான இவர் மங்கள சொரூபராயிருக்கின்றமையால் எல்லாக் கலியாண குணங்களும் இவரிடத்திலிருக்கின்றன.

அன்றியும், பச்யக என்னும் பதமும், ஹிம்சியென்னும் பதமும், எழுத்துநிலை மாறுதலென்னும் விதிப்படி, கச்யப; சிம்ஹ: என முறையே ஆகுமாறுபோல, இச்சையென்னும் பொருளைத் தரும் வசதாதுவானது அக்கரங்களின் மாறுதலால் சிவ என்று ஆனதாக அறிந்து கொள்க.

வசதாதுவிற்கு இச்சையென்பது பொருளாகும். அந்தத் தாதுவுடன் பிரத்தியஞ் சேர்ந்து வஷ்டியென்றாகி, எல்லாவுயிர்களுடைய மங்களத்தை யிச்சிக்கிறார் என்னும் சொற்புணர்ச்சியிலக்கணத்தால், எல்லாவுயிர்களுக்கும் மங்களத்தைக் கோருகிறார் என்னும் பொருள் பெறப்படுகின்றது.

“எல்லாக் காரியங்களையுஞ் செய்வதில் நித்தியமாக விருத்தியை யுண்டுபண்ணுகின்றமையால் ஈசுவரன் சிவன் என எல்லோராலுங் கூறப்படுகின்றார்” என்னும் பொருளைத்தரும் சுலோகங்களால் உயிர்களுடைய மங்களத்தைக் கருதிக் கொண்டு எல்லாக் காரியங்களையுஞ் செய்கிறாரெனப் பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

அன்றியும், மங்களமென்னும் பொருளைத் தரக்கூடிய சிவசப்தத்துடன், “தத்கரோதிததாசஷ்டே” (அதைச் செய்கிறார் அதைச் சொல்லுகிறார்) என்னும் பொருள் கொண்ட விதியால், அதைச்செய்கிறார் என்னுமர்த்தத்தில் ணிச்பிரத்தியயத்தைச் சேர்த்து, பசாத்யச் பிரத்தியயத்தையுஞ் சேர்த்து “ணேரனிடி” என்னும் சூத்திரவிதியால் ணிச்பிரத்தியயத்தை லோபஞ்செய்யின், “சிவம் கரோதிசர்வேஷாம்” என்னுஞ் சொற்புணர்ச்சியால் எல்லாவுயிர்களுக்கும் இதத்தைச் செய்கிறவர் என்னும் பொருளும் பெறப்படும்.

“எல்லாத் தேவர்களும் அரக்கரும் என்னிடம் விரோதபாவத்தைப் பாராட்டாது சமமாகவே யிருக்கின்றனர். அதற்குக் காரணம் யாதெனின், யான் எல்லாவுயிர்களுக்கும் மங்களத்தைச் செய்பவனாக இருப்பதேயாம். ஆகையால் எனக்குச் சிவத்தன்மை சித்தித்தது” என்னும் பொருளையுடைய சுலோகத்தால் பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

அல்லது, சிவசப்தம் உணாதிப் பிரகரணத்தில் படிக்கப்பட்டிருப்பது கொண்டு, செல்லுகிறது என்னும் பொருளைத் தரக்கூடிய ச்யைங் தாதுவுடன் வன்பிரத்தியயம் வந்து ஐகாரயகாரங்கள்லோபமாகி ச்யாய்யதே ப்ராப்யதே யென்னுஞ் சொற்புணர்ச்சி யிலக்கணத்தால் போகமோக்ஷங்களை விருப்புகிறவரால் பூசிக்கத் தகுந்தவரென்னும் பொருளையுங் கொள்ளலாம்.

“எவன் சிவபூஜை செய்கின்றானோ அவனுடைய வீட்டுவாசலில் மதமுடைய யானைளும், வாயுவேகத்தையொத்த வேகத்தையுடைய குதிரைகளும், பூரண சந்திரனையொத்த முகத்தையுடைய பெண்களும் இருக்கின்றனர். ஆகையால் அனைவரையுந் தள்ளிவிட்டு மங்களத்தைச் செய்கின்றவராயும், மேலானவராயும் தேதேனாயுமுள்ள சிவனொருவனே தியானஞ் செய்யப்படுபவன்” என்று கூறி அதர்வணவேதம் முடிவடைந்திருக்கின்றது. இதினாலும் பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

“இரண்டு அக்கரங்களையுடைய யாதொரு சொல்லான துவாக்கினாற் சொல்லப்பட்டு ஒரே முறையில் உயிர்களுடைய பாவங்களைப் போக்குகின்றதோ, அத்தகைய பரிசுத்தமான கீர்த்தியையுடையதாயும், கடக்கமுடியாத ஆணையை யுடையதாயுமிருக்கின்ற சிவசப்தத்திற்குரிய சிவனைச் சிவபாவனையின்றி நீர் வெறுக்கின்றீர்” என்பதனால், எல்லாப்பாவங்களையும் போக்குதற் பொருட்டுப்படிக்கப்பட்ட சிவசப்தத்திற்கு வாச்சியரானவர் எவரோ, அத்தகைய பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

இவ்வாறு சிவசப்தத்தை யாராய்ந்துவிட்டு, இனி, சிவோதாதா என்றற்றொடக்கத்துச் சுலோகத்தின் பொருளையாராயத் தொடங்குகின்றார்.

“சிவோயஜதசர்வத்ர.” இதன் பொருள் - எல்லாவுலகங்களிலும் சிவனே தருமங்களுக்கு அதிகாரியாயிருக்குந் தன்மையுடனிருக்கின்றார். கன்மத்திற்கு வசப்பட்ட எல்லா ஜீவர்களுடைய பொரூபமான அவரே எல்லாவற்றையும் அடக்குபவர் என்பதாம்.

“சிவஸ்ஸர்வமிதம்ஜகத.” இதன்பொருள் - பூதபௌதிகரூபமான சடப் பிரபஞ்சங்களனைத்தின் சொரூபமான அவர், அவற்றை நியமனஞ் செய்பவராக இருக்கின்றார் என்பதாம்.

“போக்தா.” இதன்பொருள் - தன்னையடைந்தவர்களைக் காப்பவர் என்பதாம்.

“தாதா.” இதன்பொருள் - தன்னையடைந்தவர்களுக்கு மறதியி£ல் மகாபாவங்களாகிய விக்கினங்கள் ஏற்படின் அவற்றை நீக்குபவர் என்பதாம். சோதநேயென்னும் பொருளைத்தரும் தைப் என்னுந் தாதுவால் இப்பொருள் கிடைத்தது.

இந்த விசேடணங்களனைத்தும் சிவனிடத்தில் தன்னைத்தெரிவித்தலாகிய ஆத்மநிவேதனஞ் செய்யும் பொழுது அதற்கு அங்கமாக உபயோகப்படுகின்றன. எவ்வாறெனில், கட்டுப்படுபவனான பூசகனுக்கும் கட்டுப்டுத்தும் சிவனுக்கும் இன்றியமையாத நியம்ய நியாமகபாவரூபமான சரீரசரீரி பாவத்தால், சிவனைக் குறித்து நான் உன்னைச் சேர்ந்தவனாயிருக்கின்றேனென்னும் பூசகனுடைய அநுசந்தானமே ஆத்ம நிவேதனமாகும்.

“ஸோஹமேவ” என்றவிடத்தில், ஸோஹமென்பது, ஸ: அஹமெனப் பிரிக்கப்பட்டு, ஸ: என்னும் தத்சப்தத்தால் குறிக்கப்பட்ட சிவனிடத்தில், அஹம் சப்தத்தால் குறிக்கப்பட்ட தனக்குள்ள சரீரத்தன்மையும், அயோகவியவச்சேதத்தைப் போதிக்கும் ஏவகாரத்தால் கிடைத்த அதன் நிச்சயமும் அநுசந்தானவிடயரூபமான சுவாத்மநிவேதனத்தை நிர்ணயஞ் செய்கின்றன.

தன்னைத் தெரிவித்தலாகிய ஆத்மநிவேதனத்திற்கு ஐந்து அங்கள் உண்டு. அவையாவன:- அநுகூலஞ்செய்ய வேண்டுமென்றெண்ணுதல், பிரதிகூலத்தை நீக்குதல், தன்னைக்காப்பாற்றுவாரென்று நம்பிக்கை வைத்தல், காப்பவராயிருக்க வேண்டுமென்று பிரா£¢த்தித்தல், கார்ப்பண்ணியம் என்பன.

அவற்றுள், எல்லாவுயிர்களுக்கும் அநுகூலத்தைச் செய்வதும், பிரதிகூலத்தை விலக்குவதுமாகிய இரண்டு அங்கங்களையும், பூசகனைக் குறித்து எல்லா ஜீவவர்க்கங்களும், காப்பவரான சிவனுடைய சரீரம் என்பது விளக்குகின்றது. ஆகையால் பூசகன் எல்லாவுர்களிடத்தும் அரசனுடைய சரீரத்தில் வேலைக்காரன் போல் அநுகூலஞ்செய்து கொண்டிருக்க வேண்டும்; பிரதிகூலத்தை விலக்கவும் வேண்டுமெனப் பெறப்படுகின்றது. இதுபற்றியே வாயுசம்ஹிதையில் சிவனுடைய எட்டு மூர்த்திகளையும் நிரூபணஞ் செய்யும் சிரகரணத்தில், “பரமாத்மாவான சிவனுக்கு ஆன்மா எட்டாவது மூர்த்தியாகும். ஏனைய மூர்த்திகளை அந்த எட்டாவது மூர்த்தி வியாபித்திருக்கும். ஆகையால் உலகம் சிவசொரூபமாயிருக்கின்றது. சிவனை ஆராதித்தலானது எல்லாவுயிர்களுக்கும் உபகாரத்தைச் செய்ததாகவும் ஆகுமெனப் பெரியோர் கூறுகின்றனர். யாதானுமோருயிர்க்குக் கேடு செய்தால், அது அட்டமூர்த்தியான சிவனுக்குச் செய்ததாக ஆகும். இவ்விடயத்தில் சந்தேகமில்லை” யெனக் கூறப்பட்டிருக்கின்றது.

தன்னைக் காப்பாற்றுவாரென்று நம்பிக்கை வைத்தலாகிய மூன்றாவது அங்கமானது சுலோகத்திலுள்ள எல்லா விசேடணங்களாலும் நிரூபணஞ் செய்யப்பட்டது. எவ்வாறெனின், அஹமேவ என்னும் வாக்கியத்தால் குறிக்கப்பட்டதானாகிய சரீரமென்னும் பொருளானது, தன்னைக் காப்பாற்றுவாரென் றுண்டாகும் உறுதியை நிரூபணஞ் செய்கின்றது. எவன் தான் தன்னுடைய சரீரத்தைக் காப்பாற்றுமாட்டான். சிவசப்தத்தால் கூறப்பட்ட உறுதிக்கு விரோதிகளான விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்குக் காரணமான மலமில்லாமையும், உயிர்கள் அடைதற்குரிய எல்லாக் கல்யாண குணங்களானும் பிரகாசிக்கும் தன்மையும், எல்லாயுயிர்களுடைய நன்மையைக் கருதுந் தன்மையும், எல்லாவுயிர்களுக்கும் நன்மையைச் செய்யுந்தன்மையும், நன்மைக்கு விரோதியான எல்லாப் பாவங்களையும் நீக்குவதான சிவசப்தத்தின் வாச்சியத் தன்மையும் ஆகியயிவையனைத்தும் காப்பாற்றுவாரென் றுண்டாகும் உறுதியை நிரூபணஞ் செய்கின்றன.

“சிவோயஜதி ஸர்வத்ர சிவஸ்ஸர்வமிதம் ஜகத்” என்னும் இரண்டு விசேடணங்களாலும் கூறப்பட்ட சேதனா சேதன ரூபமான எல்லாப் பிரபஞ்சங்களையும் அடக்குவதான சர்வேசுவரத் சர்வேசுவரத் தன்மையும், காப்பாற்றுவாரென்றுண்டாகும் உறுதியை குறின்றது. எவ்வாறெனின், சர்வேசுவரர் தமது பத்தர்களின்விருப்பத்தை நிறைவேற்றுவதில் சமர்த்தராகயிருக்கின்றாரென்னுங் காரணத்தால் நம்பிக்கை செய்யப்படுதற்கு உரியவராக இருக்கின்றவா றுபற்றியென்க.

காப்பது என்னும் பொருளைத் தரும் புஜிதாதுவும், சுத்தி செய்தல் என்னும் பொருளைத் தரும் தைப்தாதுவும், அவர் இயல்பு என்னும் பொருளைத் தந்து, போக்தா தாதா என்னும் இரண்டு விசேடணங்களாக இருத்தலால், பத்தர்களைக்காப்பாற்றும் இயல்பும், பத்தர்களுக்கு மறதியாலுண்டான மகாபாதக முதலிய எல்லாப் பாவங்களையும் நீக்கும் இயல்பும் ஆகிய இவ்விரண்டும், தன்னைக் காப்பாற் றுவாரென்றுண்டாகும் நம்பிக்கையை நிரூபணஞ் செய்கின்றனவென்பது வெளிப்படை.

காப்பவரா யிருக்குந் தன்மையைப் பிரார்த்தித்த லென்னும் நான்காவது அங்கத்தையும் போக்தருத் தன்மையே நிரூபணஞ் செய்கின்றது. இயல்பாகவே காக்குந் தன்மை யுடையராயிருக்கும் பொழுது, தேவரீர் காப்பவராக இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கப்பட்டும் ஏன் காக்கமாட்டார்.

கார்ப்பண்யமென்னும் ஐந்தாவது அங்கமானது, பிறிதொரு தேவதைகளை விரும்பாமையாகும். ஏனையதேவர்களுக்கு நியமிக்குந் தன்மையும், பூசகனுக்கு நியமிக்கப்படுந் தன்மையும் இல்லாமை, து என்பதால் கூறப்பட்டது. ஆகையால் பிறிதொரு தேவதைகளை விரும்பாமை நிரூபணஞ் செய்யப்பட்டமை காண்க.

இவ்வாறு மூன்று சுளுகோதகங்களால் ஜபக்கிரியையினையும் ஆன்மாவையுஞ் சமர்ப்பித்த பின்னர், பஞ்சப் பிரமஷடங்க மந்திரங்களையும் மூலமந்திர ஜபத்தினளவில் பத்திலொருபங்கு ஜபித்து, அட்டபுஷ்பங்களாலும் மூன்று புஷ்பாஞ்சலிகளாலும் சிவனையருச்சித்து, சந்நிதியில் அஞ்சலிபந்தனத்துடன் தோத்திரஞ் செய்ய வேண்டும். பஞ்சாவரண தேவர்களின் தோத்திரங்கள் சுருதி ஸ்மிருதி புராணம் ஆகமமென்னுமிவற்றில் கூறப்பட்ட தோத்திரங்கள், பூருவாசிரியர்களால் செய்யப்பட்ட தோத்திரங்கள் என்னுமிவற்றுள் சத்திக்குத் தக்கவாறு யாதானுமொன்றால் தோத்திரஞ் செய்ய வேண்டும். தன்னால் செய்யப்பட்ட தோத்திரம் வேதத்திற்குச் சமமென்பது பௌராணிகரது கொள்கை.

 

பிரதக்ஷிணஞ் செய்யும் முறை

இவ்வாறு தோத்திரஞ் செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து, மூன்று முறை பிரதக்ஷிணஞ் செய்து ஐந்து முறை நமஸ்கரித்து, மீண்டும் பிரதக்ஷிணஞ் செய்யவேண்டும். பூசைக்குப் பலன் சித்திப்பதன் பொருட்டுப் பிரதக்ஷிணம் இன்றியமையாதது. பிரதக்ஷிணம் நான்கு அங்கங்களுடனிருக்கும். அவை வருமாறு:-

(அ) அடிமேல் அடி வைத்துச் செல்லுதல்.

(ஆ) இருகைகளையுங் கோர்த்துக் கொள்ளுதல்.

(இ) வாயால் தோத்திரஞ் செய்தல்.

(ஈ) மனத்தால் சிவபெருமானைத் தியானித்தல் என்பனவாம்.

பூரண கருப்பத்தையுடையவளாயும் சமீபத்தில் பிரசவிக்கக் கூடியவளாயுமுள்ள ஒருபெண், எண்ணெய் நிரம்பிய குடத்தையேந்தி மெல்ல நகர்ந்து செல்லுமாறுபோலப் பிதக்ஷிணஞ்செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பிரதக்ஷிணம் மூன்று வகைப்படும். அவையாவன:- சவ்யம், அபசவ்யம், சவ்யாபசவ்யம் என்பன. அவற்றுள்,

சவ்யமாவது - வலது பக்கமுதலாகச் சுற்றுதல்.

அபசவ்யமாவது - இடது பக்கம் முதலாகச் சுற்றுதல்.

சவ்யாபசவ்யமாவது - +இருபக்கமுங் கலந்து சுற்றுதல்.

(+ இருபக்கமுங்கலந்து கூற்றுதலாவது - இடது பக்கமாகச் சென்று சண்டேசுவரர் வரைபோய் மீண்டு வலது பக்கமாகச் சென்று கோமுகை வரைபோய் மீளுதல்)

இந்த மூன்று பிரதக்ஷிணங்களும் கிழக்குத் திக்கிலிருந்து ஆரம்பித்து அந்தக் கிழக்குத் திக்கில் வந்து பூர்த்தியாக வேண்டும். சவ்யாபசவ்யமான பிரதக்ஷிணமானது சோமசூத்திரத் தானமாகிய கோமுகி முதற்கொண்டு தொடங்கி அந்தத் கோமுகி வரையாவது செய்யப்படல் வேண்டும். இந்தமூன்று பிரதக்ஷிணங்களுள் சவ்யமான பிரதக்ஷிணத்தைப் பிரமசாரிகள் செய்யவேண்டும். அபசவ்யமான பிரதக்ஷிணத்தை யதிகள் செய்ய வேண்டும். யதிகள் - சந்நியாசிகள். கிருகத்தரும் வானப்பிரத்தரும் சவ்யாபசவ்யமான பிரதக்ஷிணத்தைச் செய்ய வேண்டும். இது ஒரு பக்கம்.

இனி, சவ்யமான பிரதக்ஷிணம் அனைவருக்கும்பொது. அபசவ்யம் சந்நியாசிகளுக்கு மாத்திரம் உரித்தது. சவ்யாபசவ்யம் தீக்ஷையுடையவர்களுக்குரித் தென்பது மற்றொரு பக்கம்.

 

நமஸ்காரஞ் செய்யுமுறை

நமஸ்காரமாவது அட்டாங்கம், பஞ்சாங்கம், திரியங்கம், ஏகாங்கமென நான்கு வகைப்படும். அவற்றுள், அட்டாங்கமானது தண்டமென்றும், தனியென்றும் இருவகைப்படும். அவற்றுள்,

தண்டமென்னும் அட்டாங்க நமஸ்காரமாவது - கால்களிரண்டும், கைகளிரண்டு, மார்பு, சிரசு ஒன்று, வாக்கொன்று மனமொன்று ஆகிய எட்டுறுப்புக்களாலுஞ் செய்யப்படுவது. இது ஒருபக்கம்.

கால்கள், கைகள், மார்புகள், சிரசு, வாக்கு, மனம், புத்தி, பார்வை, யென்னும் இவற்றால் செய்யப்படுவதென்பது மற்றொரு பக்கம். மனத்தால் நமஸ்கரித்தலாவது வேறிடத்தில் மனத்தைச் செலுத்தாது ஒரே மனதுடன் நமஸ்கரித்தலாம். புத்தி என்னுஞ் சப்தத்தால் சிவனுடைய மகிமையான தோத்திரத்தை அநுசந்தானஞ் செய்வதென்பது றிக்கப்படுகிறது. ஆகவே மனம் புத்தியென்னுமிரண்டு பதங்களுக்கும் வேற்றுமை, ஒரே மனதாயிருத்தலும் அநுசந்தானஞ் செய்தலுமேயாம்.

கால்கள், முழங்கால்கள், கைகள், மார்பு, சிரசு, மனம், வாக்கு, பார்வையென்னும் இவற்றால் செய்யப்படுவதென்பது பிறிதொரு பக்கம்.

கால்கள், புயங்கள், சித்தம், மார்பு, சிரசு, மனம், வாக்கு, பார்வையென்னுமிவற்றால் செய்யப்படுவதென்பது வேறொரு பக்கம். இவ்வாறு தண்ட அட்டாங்கம் நான்கு வகைப்படுமாறு அறிந்து கொள்க.

தனி அட்டாங்க நமஸ்காரமாவது - சிரசு ஒன்று, கைகளிரண்டு, காதுகளிரண்டு, மோவாய் ஒன்று, புயமிரண்டு என்னுமிவற்றால் பூமியைப் பொருந்தச் செய்யப்படுவதாகும்.

பஞ்சாங்க நமஸ்காரமாவது - சிரசு ஒன்று, கைகளிரண்டு, முழங்கால்களிரண்டு என்னுமிவற்றால் பூமியைப் பொருந்தச் செய்யப்படுவது.

சிரசு ஒன்று, கைகளிரண்டு, புயமிரண்டு என்னுமிவை முழங்காலில் பொருந்தச் செய்யப்படுவது பஞ்சாங்கமென்பது மற்றொருபக்கம்.

திரியங்க நமஸ்காரமாவது - இரண்டு கைகளையும் சிரசில் குவித்துக்கொண்டு செய்யப்படுவதாகும்.

ஏகாங்க நமஸ்காரமாவது - சிரசால் வணங்கப்படுவதாகும். இடம், காலம், சத்தியென்னுமிவற்றை யநுசரித்து இந்த நமஸ்காரங்களைச் செய்ய வேண்டும்.

 

அக்கினிகாரியஞ் செய்யுமுறை

இவ்வாறு பரமேசுவரனைத் தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரமுதலியவற்றால் திப்தியடையும்படி செய்து, ஓ சுவாமின்! யான் அக்கினி காரியஞ் செய்கின்றேன் என்று தெரிவித்துப் பரமசிவனிடமிருந்து ஆணையைப்பெற்றுச், சாமான்யார்க்கிய பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அக்கினியிருக்கும் ஓமகுண்டத்திற்குச் சென்று, நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகளால் சுத்தமாயும், ஒருமுழ அளவுள்ளதாயும், மண், மணலென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்டதாயுமிருக்கும் இடத்தில் அரணிக்கட்டை, சூரியகாந்தமென்னுமிவற்றால் செய்யப்பட்டதாகவாவது, அக்கினிகாரியஞ் செய்பவர் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவாவது உள்ள அக்கினியை சுவலிக்கும்படி செய்து, ஹும்பட்என்னும் பதத்தை யிறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் இராக்கதபாகமான அக்கினியை நிருதிகோணத்தில் போட்டுவிட்டு, மூலமந்திரத்தால் அக்கினியை நிரீக்ஷணஞ்செய்து, ஹும்பட்என்னும் பதத்தை யிறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷணம் தாடனம் என்னுமிவற்றைச் செய்து, வெளஷடு என்னும் பதத்தையிறுதியிலுடைய கவசமந்திரத்தால் அப்யுக்ஷணஞ் செய்து, ஹாம், ஹம், ஹாம் வஹ்நிமூர்த்தயே நம: என்று சொல்லிக்கொண்டு, சங்கார முத்திரையால் அக்கினி சைதன்யத்தைப் பூரகவாயுவினால் இருதயகமலத்திலிருக்கும் அக்கினியுடன் சேர்த்து, அதனுடன் கூடவே சுழுமுனாநாடியின் வழயாகத்துவாத சாந்தத்திற்குக் கொண்டுபோய், பரமசிவனுடன் கலந்ததாகச் செய்து, ரேசகவாயுவால் பிங்கலைநாடி வழியாக வெளியே கொண்டு வந்து, ஹாம் ஹ்ரூம், வஹ்நிசைதன்யாய நம: என்று சொல்லிக்கொண்டு, உத்பவமுத்திரை செய்து, அந்த அக்கினி சைதன்யத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும் அக்கினியில் சேர்க்க வேண்டும்.

பின்னர், நம: என்னும் பதத்தை யிறுதியிலுடைய சத்யோஜாத முதலிய ஐந்து மந்திரங்களால் அக்கினியைப் பூஜித்து, வெளஷடு என்னும் பதத்தை யிறுதியிலுடைய சத்திமந்திரத்தால் தேனுமுத்திரைசெய்து, அமிருதீகரணஞ் செய்து, கவசமந்திரத்தால் அவகுண்டனஞ்செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணஞ் செய்து, இருதயமந்திரத்தால் அருச்சித்து, பரமேசுவரனுடைய வீரியமென்று பானைசெய்து, வாகீசுவரரையும் வாகீசுவரியையும், சமானர்களாயும், ஈசானதிக்கிலிருப்பவர்களாயுந் தியானித்து வாகீசுவரியின் கருப்பநாடியில் வாகீசுவரரால் அவருக்கெதிர் முகமாக அவருடைய வீரியமானது விடப்படுகிறதாகப் பாவிக்க வேண்டும்.

பின்னர், ஸ்வாஹா என்னும் பதத்தையிறுதியிலுடைய மூலமந்திரத்தால் ஐந்து ஆகுதிகளைக் கொடுத்து, ஹாம், சிவாக்னிஸ்த் வம்ஹ§தாசன என்று நாமகரணஞ்செய்து, (அதாவது, அக்கினியே நீ சிவாக்கினியாகின்றாயென்று பெயரிட்டு) கருப்பாதான முதலிய ஐந்து சமஸ்காரங்களால் சுத்திசெய்யப்பட்டதாக அக்கினியைப் பாவித்து, தந்தை தாயார்களாகிய வாகீசுவரர் வாகீசுவரிகளை இருதயமந்திரத்தால் அருச்சித்து அனுப்பிவிட்டு, சாமான்யார்க்கிய ஜலத்தால், வெளஷட் என்னும் பதத்தை யிறுதியிலுடைய கவசமந்திரத்தை யுச்சரித்துக் குண்டத்தையும் மேகலையையும் சம்புரோக்ஷணஞ் செய்து, மேகலைகளில் கிழக்கு நுனியாகவும் வடக்கு நுனியாகவும் பத்துத் தருப்பைகளை கவசமந்திரத்தால் பரப்பி, மேகலையினுடைய கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு ஆகிய திக்குகளி பிரமன், விட்டுணு, உருத்திரர் அனந்தராகிய இவர்களையருச்சித்து, குழந்தையாகிய அக்கினியைக் காப்பாற்றும்படி தெரிவித்து, ஐந்து முகமும், சிவந்த திருமேனியும், ஏழுநாக்குகளும், பத்துக் கைகளும், மூன்று கண்களும், எல்லா ஆபரணங்களுமாகிய இவற்றையுடையவராயும், சிவந்த ஆடையயைத்தரித்திருப்பவராயும், தாமரையின் மேலிருப்பவராயும், பத்மாசனத்துடனும் பத்து ஆயுதங்களுடனும் இருப்பவராயும் சிவாக்கினிதேவரைத் தியானித்து, சிவாக்கினியினுடைய மேல்முகத்தில் கனகை பகுரூபை, அதிரக்தையென்னும் மூன்று நாக்குகளையும், கிழக்கு முதலிய திக்குக்களிலிருக்கும் முகங்களில் சுப்ரபை, கிருஷ்ணை, இரக்தை, இரண்யையென்னும் நான்கு நாக்குக்களையும் தியானிக்கவேண்டும்.

பின்னர், ஹாம், அக்னயே நம: என்று சொல்லிக்கொண்டு பூசைசெய்து, ஹாம், ஹ்ரூம், அக்னயேஸ்வாஹா என்று சொல்லிக்கொண்டு ஐந்து திலாகுதிகளைச் செய்து, ஓ அக்கினியே! நீ ஈசுவரனுடைய பரிசுத்மான தேஜசாயிருப்பது கொண்டு உன்னுடைய இருதய கமலத்தில் தாபித்துத் திருப்தி செய்கிறேன் என்று அக்கினியினிடந்தெரிவித்து, அக்கினியினுடைய இருதயகமலத்தில் ஆசனமூர்த்தியையும் சதாசிவரையும் ஆவாகனஞ்செய்து, எல்லாவுபசாரங்களாலும் பூசித்து, சதாசிவருடைய முகத்தை அக்கினியின் முகமாயிருப்பதாகப் பாவித்து, ஸ்வாஹா என்னும் பதத்தை யிறுதியிலுடைய மூலமந்திரத்தால் சமித்து, அன்னம், நெய், பொரி, கடுகு, எள்ளு என்னுமிவற்றால், நூறு அல்லது ஐம்பது முறையாவது, அல்லது சத்திக்குத்தக்கவாறாக ஆவது ஓமஞ்செய்து, பிரமாங்கங்களுக்கு தசாம்ச ஓமஞ்செய்து ஹெளம், சிவாய வெளஷட் என்று சொல்லிக்கொண்டு, மேல்முகத்தில் பூரணாகுதி கொடுத்து, சுவாஹா என்னும் பதத்தையிறுதியிலுடைய மூலமந்திரத்தால் மூன்று கவள அளவுள்ள அன்னத்தை ஓமஞ்செய்து, பிரமாங்கங்களுக்குத் தனித்தனி ஆகுதிகொடுத்து, ஆசமனங்கொடுத்து, சந்தனந் தாம்பூலஞ் சமர்ப்பித்து, பஸ்மம் பாத்தியம் அட்டபுஷ்ப மென்னுமிவற்றால் பூசிக்க வேண்டும்.

நெய் முதலியன கிடையாவிடில் பத்திரம் புஷ்பமென்னுமிவற்றாலாவது ஓமஞ்செய்ய வேண்டும்.

பின்னர், தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரங்களால் திருப்தியை யுண்டுபண்ணி பராங்முகார்க்கியங்கொடுத்து சிவனை அக்கினியினின்றும் எழுந்தருளச் செய்து லிங்கத்தில் இருக்கும் சிவனிடம் சேர்க்க வேண்டும்.

பின்னர், மேகலையில் பரப்பியிருந்த தருப்பைகளை யெடுத்து நுனி நடு அடியென்னுமிவற்றை நெய்யால் நனைத்து ஒரு தருப்பையை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனையவற்றை நுனியை முதலாகக்கொண்டு தகனஞ்செய்ய வேண்டும். அந்த ஒரு தருப்பையினையும் அக்கினியில் போட்டு அதன் பஸ்மத்தால் நெற்றியில் பொட்டிடல் வேண்டும். அந்தப் பஸ்மத்தைத் தரித்தலானது, ஆயுள் சம்பத்துக் கீர்த்தியென்னுமிவற்றை விருத்திபண்ணும்; வெற்றி ஆரோக்கியமென்னு மிவற்றையுந் தரும்.

பின்னர், அதன் தென்பக்கத்தில் சதுரச்ரமான மண்டலமிட்டு மண்டலத்திற்குக் கீழ்பக்கத்தில் கிழக்கு முதல் வடக்கு ஈறாகவுள்ள மகா திக்குக்களில் உருத்திரர், மாதிரு, கணங்கள், யக்ஷர் என்னுமிவர்களையும், ஈசானமுதலிய கோணங்களில் கிரகங்கள், அசுரர், இராக்ஷதர், நாகங்களென்னுமிவர்களையும், மண்டலத்தின் மத்தியிலுள்ள ஈசானம், அக்கினி நிருருதியாகிய மூலைகளில் நக்ஷத்திரங்கள், இராசிகள், விசுவதேவர்களாகிய இவர்களையும், வாயு திக்கிற்கும் மேற்குத்திக்கிற்கும் இடையே «க்ஷத்திர பாலரையும் அருச்சித்து அருக்கியங்கொடுத்து, ஜலங்கலந்த அன்னத்தால் உருத்திரர் முதலாயினாரின் பொருட்டுப் பலிகொடுத்து, ஆசமனமுங்கொடுக்க வேண்டும்.

உருத்திரர் முதலாயினாரை யருச்சிக்கும் பொழுது நம: என்னும் பதத்தை யிறுதியிலுடையதாக அவரவரின் பெயரையுடைய மந்திரங்களிருக்க வேண்டும். பலிகொடுக்கும் பொழுது அந்த மந்திரங்களை சுவாஹாந்தமாக உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது «க்ஷத்திரபாலருக்கு ஒருமை வசனமாயும், ஏனையோருக்குப் பன்மைவசனமாயும் மந்திரத்தை உபயோகப்படுத்த வேண்டும்.

பின்னர், கீழ்பாகத்தில் சதுரச்ர மண்டமிட்டு அதில் இந்திரன் முதல் விட்டுணுஈறாகவுள்ள உலகபாலகர்களுக்குப் பலிகொடுக்க வேண்டும்.

பின்னர், மண்டபத்தினுடைய வெளியங்கணத்தில் கோமயத்தால் மண்டலமிட்டு அதில், வாயசாதிப்யச் சமயபேதிப்யஸ் ஸ்வாஹா அக்ன்யாதிப்யஸ் ஸ்வாஹா, சர்வேப்யோக்ரக வாஸ்து தேவேப்யஸ் ஸ்வாஹா என்று சொல்லிக்கொண்டு வாயசாதிகளுக்கும், அக்கினியாதிகளுக்கும், கிரகங்களுக்கும், வாஸ்து தேவர்களுக்கும் தனித்தனி பலிகொடுத்து, நாய், பூதம், பதிதன் பிரேத ரூபமாயிருக்கும் உயிர்களாகிய இவர்களின் பொருட்டும் ஒரு பலி கொடுக்க வேண்டும்.

அல்ல சுரக்கமாகவே அனைவரையும் உத்தேசித்து, ஓ உருத்திரத்தானத்தில் வசிப்பவர்களாயும், பயங்கரமான செயல்களையுடையவர்களாயும் உள்ள உருத்திரர்களே! சௌம்யத்தானத்தில் வசிப்பவர்களாயும், சௌமியர்களாயுமிருக்கும் ஓ சௌமியர்களே! உருத்திரரூபிகளான ஓ அன்னைமார்கள்! திக்கு உபதிக்குகளிலிருக்கும் விக்கினரூபிகளான ஓ கணநாதர்களே! நீவிரனைவரும் திருப்தியுடன் கூடின மனமுடையவர்களாய் இப்பலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். சித்தியை எனக்கு விரைவில் தரவேண்டும், அச்சத்தில் நின்றுங்காக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ஒரு பலிபோட வேண்டும்.

இந்தப் பலிகாரியமனைத்தும் அக்கினிகாரியஞ் செய்வதற்கு அதிகாரம் உள்ளவனாற்றான் செய்யப்படல் வேண்டும். ஏனையோர் செய்யக்கூடாது. அக்கினிகாரியஞ் செய்தற்கு அதிகாரியாயிருப்பினும், ஓமத்திற்கு வேண்டுந்திரவியங்கள் பூரணமாயில்லாமலிருந்தாலும், அல்லது அக்கினிகாரியஞ் செய்தற்குச் சத்தியில்லாமலிருந்தாலும், அப்பொழுது ஓமமந்திரங்களை ஓமத்திற்குரிய எண்ணில் நின்றும் பத்துமடங்கு அதிகமாக ஆவர்த்தி செய்து செபிக்க வேண்டும். இவ்வாறு அக்கினி காரியத்தைச் செய்துவிட்டுப் பின்னர்ச் சிவஞானபூசை செய்ய வேண்டும்.

 

சிவாகம பூசை செய்யும் முறை

காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களே சிவஞானங்களெனப்படும். அவற்றுள்,

காமிகம், மூன்று பேதத்துடன் பரார்த்தங்கிரந்தங்களையுடையது,

யோகஜம், ஐந்து பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது,

சிந்தியம், ஆறு பேதத்தடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது,

காரணம், ஏழு பேதத்துடன் கோடி கிரந்தங்களையுடையது,

அஜிதம், நான்கு பேதத்துடன் லக்ஷஙகிரந்தங்களையுடையது,

தீப்தம், ஒன்பது பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது,

சூக்குமம், ஒரு பேதத்துடன் பத்மமென்னுங் கிரந்தங்களையுடையது,

சகஸ்கரம், பத்துப் பேதத்துடன் சங்கமென்னுங்கிரந்தங்களையுடையது,

அம்சுமான், பன்னிரண்டு பேதத்துடன் ஐந்து லக்ஷங்கிரந்தங்களையுடையது,

சுப்ரபேதம், ஒரு பேதத்துடன் மூன்றுகோடி கிரந்தங்களையுடையது,

விஜயம், எட்டுப் பேதத்துடன் மூன்றுகோடி கிரந்தங்களையுயைடது,

நிசுவாசம், எட்டுப் பேதத்துடன் கோடி கிரந்தங்களையுடையது,

சுவாயம்புவம், மூன்று பேதத்துடன் ஒன்றரைக்கோடி கிரந்தங்களையுடையது,

அனலம், ஒரு பேதத்தையும் முப்பதாயிரங்கிரந்தங்களையுமுடையது,

வீரம், பதின்மூன்று பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,

ரௌரவம், ஆறு பேதங்களையும் எண்பதுபோடி கிரந்தங்களையுமுடையது,

மகுடம், இரண்டு பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,

விமலம், பதினாறு பேதங்களையும் மூன்று லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,

சந்திரஞானம், பதினான்கு பேதங்களையும் மூன்று கோடிகிரந்தங்களையுமுடையது,

பிம்பம், பதினைந்து பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,

புரோத்கீதம், பதினாறு பேதங்களையும் மூன்றுலக்ஷங் கிரந்தங்களையுமுடையது,

லளிதம், மூன்று பேதங்களையும் எண்ணாயிரங் கிரந்தங்களையுமுடையது,

சித்தம், நான்கு பேதங்களையும் ஒன்றரைக்கோடி கிரந்தங்களையுமுடையது,

சந்தானம், ஏழு பேதங்களையும் ஆறாயிரங்கிரந்தங்களையுமுடையது,

சா¢வோக்தம், ஐந்து பேதங்களையும் இரண்டு லக்ஷங் கிரந்தங்களையுமுடையது,

பாரமேசுவரம், ஏழு பேதங்களையும் பன்னிரண்டு லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,

கிரணம், ஒன்பது பேதங்களையும் ஐந்துகோடி கிரந்தங்களையுமுடையது,

வாதுளம், பன்னிரண்டு பேதங்களையும் லக்ஷங்கிரந்தங்களையுமுடையது,

இவ்வாறு திவ்யாகமங்களுள் மூலாகமங்கள் இருபத்தெட்டுள்ளன. இந்த ஆகமங்களின் சுலோக எண் பரார்த்தம், பத்மம், சங்கமென்னும் எண்களுடன் தொண்ணூற்றொன்பது கோடியே முப்பத்து மூன்று லக்ஷத்து நாற்பத்து நாலாயிரமாகும். மூலாகமங்களின் பேதங்களான உபாகமங்கள் இருநூற்றேழு ஆகும். இத்தகைய தியாகமங்கள் எல்லாவற்றையுமாவது, அல்லது கிடைத்ததற்குத் தக்கவாறு சிலவற்றையாவது, ஒன்றையாவது, அந்த ஒன்றிலும் தன் பூசைக்கு உபயோகமான சம்ஹிதையை மாத்திரமாவது, இலக்கணம் வாய்ந்த புத்தகங்களில் நன்றாக எழுதல் வேண்டும்.

புத்தகங்களுள், இருபத்திரண்டங்குல நீளமும், நான்கு அங்குல அகலமும் உடைய ஏடுகள் புத்தகம் இலக்குமிபத்திரமெனப்படும். இருபத்தொரு அங்குல நீளமும், மூன்று அங்குல அகலமும் உடைய ஏடுள்ள புத்தகம் ஸ்ரீரக்ஷமெனப்படும். இருபது அங்குல நீளமும், ஒரு வால் நெல்லளவு குறைந்த மூன்று அங்குல அகலமும் உடைய ஏடுள்ள புத்தகம் சந்திரகாந்தமெனப்படும். இந்த மூன்றும் உத்தமங்கள்.

பதினெட்டங்குல நீளமும், இரண்டரையங்குல அகலமும் உடையது நளினமெனப்படும். பதினேழு அங்குல நீளமும், மூன்று வால் நெல்லளவு அதிகமான இரண்டங்குல அகலமும் உடையது ஸ்ரீநிவாஸமெனப்படும். பதினாறங்குல நீளமும், இரண்டு வால் நெல்லளவு அதிகமான இரண்டங்குல அகலமும் உடைய ஸ்ரீபத்ரமெனப்படும். இம்மூன்றும் மத்திமங்களெனப்படும்.

பதினைந்தங்குல நீளமும் ஒரு வால் நெல்லளவு அதிகமான இரண்டங்குல அகலமும் உடையது இலக்ஷ¢மீநிவாசமெனப்படும். பதினான்கு அங்குல நீளமும் இரண்டங்குல அகலமும் உடையது உமாபத்ர மெனப்படும். பதின்மூன்றங்குலம் நீளமும் ஒருவால் நெல்லளவு குறைந்த இரண்டங்குல அகலமும் உடையது வீரபத்ர மெனப்படும். இம்மூன்றும் அதமங்களெனப்படும்.

இத்தகைய ஏடுகளுள் தனக்குக் கிடைக்கக் கூடிய ஏட்டைக் கொண்டு அதனுடைய நான்கு பாகத்தின் மத்தியிலாவது மூன்று பாகத்தின் மத்தியிலாவது துவாரமிட்டு வால் நெல்லின் நடுவின் அளவுகொண்ட நூற்கயிற்றால் கட்டிக்கொள்ள வேண்டும்.

இந்தச் சிவஞான புத்தகங்களைப் பூசிக்ம் பொருட்டுச் சிவனுடைய தெற்கு அல்லது மேற்கு அல்லது வாயுபாகமாகிய திக்கில் முப்பத்துமூன்று கைமுழம் முதல் மூன்று முழம் வரையில் யாதானுமோரளவு கொண்ட வித்தியாகோச கிருகத்தைச் செய்து வாசனையுள்ள சந்தனம் முதலியவற்றால் பூசப்பட்ட சுவரையுடைய அந்த வித்தியாகோசத்தின் நடுவில், யானைத்தந்த முதலியவற்றால் செய்யப்பட்டதாயும் சுவர்ணரேகை முதலியவற்றால் சித்திரவேலை செய்யப்பட்டதாயுமுள்ள வித்தியாசிங்காசனத்தை வைத்து, அந்த ஆசனத்தில் வெண்பட்டு முதலியவற்றை விரித்து, அதன் நடுவில் சுவர்ணம், வெள்ளி, செம்பு, வெண்கலம், பித்தளையாகிய உலோகம், கட்டை மூங்கிலென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பெற்ற வித்தியாரத்தி நகரண்ட ரூபமான பெட்டியை வைத்து அந்தப் பெட்டியில் புத்தகங்களை வைக்கவேண்டும்.

பின்னர், எல்லாச் சிவாகமங்களின் பொருட்டு நமஸ்காரமென்னும் பொருளில், ஸர்வேப்யச் சிவக்ஞானேப்யோ நம: என்று சொல்லிக்கொண்டு, சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியமென்னுமிவற்றால் அந்தப் புத்தகங்களைப் பூசித்து எல்லா ஞானங்களையுங் கொடுக்கிறவராயும், அஞ்ஞானம் அனைத்தையும் நாசஞ் செய்பவராயும், வித்தியாபீடத்தில் வீற்றிருப்பவராயுமுள்ள சம்புவை மனம் வாக்குக்காயங்களால் வணங்குகின்றேன் என்று தோத்திரஞ்செய்து நமஸ்காரஞ் செய்ய வேண்டும்.

புத்தகங்கிடையாவிடில் சதுரச்ரமான மண்டலத்தில் அஷ்டதளபத்மத்தையும், அந்தப் பத்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும்படியாகப் பதினெட்டுத்தளமுள்ள பத்மத்தையும் வரைந்து, கர்ணிகையில் ஹெளம் சிவாய நம:, ஹாம் வாகீசாய நம: என்று சொல்லிக்கொண்ட வாகீசுவரருடன் கூடச் சிவனைப் பூசித்துக், கிழக்கு முதலிய பத்துத் திக்குக்களில், காமிகம் மதல் சுப்ரபேதமீறானவையாயும், பிறரையதிட்டிக்காது சிவனால் நேரே செய்யப்பெற்றமையால் சைவமென்ற பெயரை யுடையவையாயுமுள்ள பத்துத் திவ்யாகமங்களைப் பூசித்து, பதினெட்டுத் தளங்களில் விஜயம் முதல் வாதுளம் ஈறாகவுள்ளவையாயும், அநாதிருத்திரர் முதலாயினாரை யதிட்டித்துச் சிவனால் செய்யப்பெற்றமையால் ரௌத்திரமென்னும் பெயரையுடையவையாயுமுள்ள பதினெட்டு ஆகமங்களைப் பூசிக்க வேண்டும்.

 

குருபூசை

பின்னர், தமது பீடத்திலிருக்கும் குருவையடைந்து அவருடைய பாதங்களைச் சுத்திசெய்து பரமசிவன் என்னும் புத்தியுடன் சந்தனம் முதலியவற்றால் பூசித்து, மூன்று புஷ்பாஞ்சலிகள் செய்து, சாஷ்டாங்கமாக மூன்றுமுறை நமஸ்கரித்து எழுந்து, பூமியில் முழங்கால்களை வைக்கொண்டும் இருகைகளைக் குவித்துக்கொண்டும் குற்றங்களைப் பொறுத்தருளர் வேண்டுமெனப்பிரார்த்திக்க வேண்டும். “தேனில் விருப்பமுள்ள வண்டானது சோலையில் ஒரு புஷ்பத்தினின்றும் நீங்கிப் பிறிதொரு புஷ்பத்திற்குச் செல்லுமாறுபோல, ஞானத்தில் விருப்பமுள்ள சீடன் ஒரு குருவினிடத்தினின்றும் நீங்கி மற்றொரு குருவினிடத்துச் செல்வன்” என்னும் சாத்திரத்தை யநுசரித்து, அதிகமான ஞானத்தையடைதற் பொருட்டு வேறு குருவையடைந்தவிடத்தும் முந்தின குருவையும் முன்போலவே ஆதரித்துப் பூசிக்க வேண்டும்.

 

பிரார்த்தனை

பின்னர், சிவபெருமானிடத்திற்குவந்து அட்ட புஷ்பங்களால் சிவனைப் பூசித்து, விசேடார்க்கியங்கொடுத்து, நமஸ்கரித்து விருப்பமான பிரார்த்தனையைச் செய்து, ஓ பிரபோ! யான் அறியாமையால் குறைவாகவோ அதிகமாகவோ கிரியைகளைச் செய்திருப்பினும், அவற்றைத் தேவரீர் ஏற்றுக் கிரியை பூர்த்தியானதாகவே அருள்புரிய வேண்டும்.

ஓ பக்தர்களிடத்து அன்புள்ளவதே! என்னால் இரவும் பகலும் அநேக அபராதங்கள் செய்யப்படுகின்றன. எனை அடிமையாகப் பாவித்து அவற்றைப் பொறுத்தருளல் வேண்டும்.

ஓ சுவாமின்! சிறியனாகவும், அடிமையாகவும், அழுக்கடைந்த புத்தியையுடையவனாகவுமிருக்கிற யான் ஏதே பத்தியினால் தேவரீரைச் சிரமப்டுத்தி விட்டேன்; அதனைப் பொறுத்தருளல் வேண்டும் என்றிவ்வாறு விஞ்ஞாபனஞ் செய்ய வேண்டும்.

 

பூசையைப் பூர்த்திசெய்யும் முறை

பின்னா¢, சத்தியோஜாதம் முதலாக முறையே ஐந்து சிரசுகளிலும் சிவனையருச்சித்து, அஸ்திரம் முதல் இருதயம் ஈறாகவுள்ள அங்கங்களையும் எதிர் முறையாகப் பூசித்து, விருப்பப்படி முன்போல் ஊர்த்துவமுகமாக இருப்பீராகவென்று பிரார்த்தித்து ஹாம், ஹெளம், சிவாய ஸாங்காய பராங் முகார்க்கியம் ஸ்வாஹா என்று பராங்முகார்க்கியங் கொடுத்து, கொ¢ப்பக்கிருகத்திலிருக்கும் ஆவரணரூபமான சத்தியோஜாதம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்களையும், அஸ்திரம் முதலிய அங்கமந்திரங்களையும், ஈசுவரனுடைய அங்கங்களில் சேர்க்க வேண்டும். ஏனைய ஆவரணதேவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங் கொடுக்க வேண்டும்.

பின்னர், ஹும்பட்என்னும் பதத்தையிறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் இருகைகளிலுள்ள கட்டைவிரல் சுட்டுவிரல்களின் நுனிகளால் புஷ்பத்தை உயரே எறிந்துகொண்டு நாராசமுத்திரையால் வித்தியேசுவரர் முதலியோரை யெழுந்தருளச் செய்து, ஹாம், ஹம், ஹாம், சிவமூர்த்தயே நம: என்று சொல்லிக் கொண்டு, திவ்யமுத்திரையினால் சிவனுடைய இருதயத்தானத்தில் சேர்த்து, அவர்களைச் சிவனிடத்தில லயமடைந்தவர்களாகப் பாவிக்க வேண்டும்.

பின்னர், குருகிரகம், வித்தியாபீடம், சப்தகுருக்கள், மகாலக்குமி, கணபதி, துவாரபாலர் ஆகிய இவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங்கொடுத்து அவரவர் மந்திரத்தால் அவர்களை அனுப்புதல் வேண்டும்.

பின்னர், பரிவார தேவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங் கொடுத்துத் தனித்தனி புஷ்பத்துடன் கூடிய ஆடைகளால் அவர்களைமூடி அஸ்திரமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு பெட்டியின் பக்கங்களில் வைக்க வேண்டும்.

பின்னர், சிவமந்திரத்தை யுச்சரித்து, பத்மபீடத்தினின்றும் லிங்கத்தையெடுத்து, வெண்பட்டு முதலியவற்றால் மூடி, பெட்டியின் நடுவில் வைத்து, பீமருத்திரத்தைத் தியானித்து, காக்க வென்ற சிவாஞ்ஞையைத் தெரிவித்து பெட்டியை மூட வேண்டும்.

பின்னர் மிச்ரபூசை செய்ய வேண்டும். அதாவது, முதலாவது சண்டேசுவரபூசை செய்யாமல், சிவனைப் பெட்டியிலெழுந்தருளச் செய்த பின்னர், ஆவாகனம் முதலிய எல்லாவுபசாரங்களுடன் சண்டேசுவர பூசையைச் செய்ய வேண்டும்.

 

பூசைசெய்தற்குரிய காலம்

இவ்வாறு விடியுங்காலம், உச்சிக்காலம், சாயங்காலம், நடுராத்திரியென்னும் இக்காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல் மூன்று காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல் இரண்டு காலங்களிலாவது, அல்லது விடியுங்காலத்திலாவது மூன்று நாழிகை வரை பூசை செய்யவேண்டும்.

சங்கிராந்தி கிரகணம், அட்டமி, சதுர்த்தசியாகிய இக்காலங்கள் நீங்கிய ஏனைய நாட்களில் போகத்தை விரும்புகிறவன் இரவில் பூசை செய்யக்கூடாது. அவன் மூன்று கால பூசை செய்பவனாயின், அத்தமன முதல் மூன்று நாழிகைக்குள் சாயங்கால பூசையை முடித்துக்கொள்ளல் வேண்டும். முத்தியை விரும்புகிறவனுக்குக் கால நியமம் கிடையாது. அல்லது போகத்தை விரும்புகிறவனுக்குங் கால நியமங்கிடையாதென்றே கூறலாம். தனக்கு அமைந்த காலத்தில் கூடுமான நேரம் வரை பூசை செய்யலாம். “சத்திக்குத் தக்கவாறு ஆத்மார்த்த பூசைசெய்யவேண்டும்” என்று ஆகமங் கூறுவதால் மேலே குறிக்கப்பட்டவாறு செய்யலாமென்பது கொள்ளக்கிடக்கின்றது.

 

உபசாரம்

இவ்வாறு விரிவாக உபசாங்களனைத்தையும் செய்ய இயலவில்லையாயின், பதினாறு அல்லது ஐந்து உபசாங்களையாவது செய்யவேண்டும்.

பதினாறு உபசாரங்களாவன:- ஆவாகனம், ஆசனம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனம், அபிஷேகம், ஆடைதரித்தல், உபவீதந்தரித்தல், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், முகவாசம், தோத்திரத்துடன் கூடின நமஸ்காரம், பிரதக்ஷிணத்துடன் கூடின அனுப்புதல் என்பன.

அல்லது ஆசனம், ஆவாகனம், பாத்தியம், ஆசமனம், அர்க்கியம், அபிஷேகம், ஆடைதரித்தல், சந்தனம், புஷ்பம், நைவேத்தியம், தாம்பூலம், தூபம், தீபம், ஆரத்தி, பஸ்மம், சுளுகோதகம் என்னும் இவற்றைப் பதினாறு உபசாரமாகக் கொள்ளலாம்.

ஆவாகனம், ஆசனம், பாத்தியம், ஆசமனம், அ£¢க்கியம், அபிஷேகம், ஆடை, சந்தனம், புஷ்பம், நைவேத்தியம் எனப்பத்து உபசாரங்களைக் கொள்ளுதலுமுண்டு.

ஐந்து உபசாரங்களாவன:- சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் என்பன.

பிருதிவி முதலிய ஐந்து பூதங்களின் சம்பந்தமான உபசாரங்களை ஐந்து உபசாரமெனக்கூறுதலுமுண்டு. அவை வருமாறு:-

பிருதிவி சம்பந்தமான உபசாரமாவது:- சந்தனம், புஷ்பம், கிழங்கு, வேர், பழமென்னுமிவயாம்.

அப்பு சம்பந்தமான உபசாரமாவது:- ஜலம், பால், ஆடை, தயிர், கோஜல மென்னுமிவையாம்.

அக்கினி சம்பந்தமான உபசாரமாவது:- சுவர்ணம், இரத்தினம், தீபம், ஆபரணம் முதலியன.

வாயு சம்பந்தமான உபசாரமாவது:- சாமரம், தூபம், விசிறி, ஓலை விசிறியென்னுமிவையாம்.

ஆகாச சம்பந்தமான உபசாரமாவது:- கானஞ்செய்தற்குரிய வாத்தியம், புல்லாங்குழல், வீணை முதலியனவும், வேதகோஷமுமாம்.

இவ்வாறு ஐந்து உபசாரங்கள் சாத்திரத்தை யறிந்தவர்ளால் விரிவாகக் கூறப்பட்டிருக்கவும் சந்தனம் முதல் நைவேத்தியம் ஈறாகவுள்ளவற்றை ஐந்து உபசாரங்களாகக் கூறிய கருத்தென்னை யெனின், விரிவாகக் கூறப்பட்ட அவ்வுபசாரங்களைச் செய்ய முடியாதவர்கட்கு சந்தனம் முதல் நைவேத்தியம் ஈறாகவுள்ள இவையே அவையாக ஆகின்றனவென்பது கருத்தென்க.

வெளியே செல்லும் காற்று உள்ளே செல்லும் காற்று என்னும் இவற்றைச் சந்திர சூரியர்களுடைய கதியாகப் பாவித்து அடக்கி யெவ்வாறு ஆவாகனம் செய்கின்றோமோ அவ்வாறே வாயுக்களை அடக்கிக்கொண்டு எல்லாவுபசாரங்களையும் சிவனுக்குச் செய்ய வேண்டுமென்று ஆகமங்களில் பிரசித்தமாகக் காணப்படுகின்றது. உபசாரங்களில் மாத்திரைகளைக் கணித்துக் காலநியமங்கொள்ளும்படியும் ஆகமங்களில் கூறப்பட்டிருக்கின்றது. அவை வருமாறு:-

ஆவாகனத்தில் பன்னிரண்டு மாத்திரைகள். பாத்தியத்தில் ஐந்து மாத்திரைகள், ஆசமனத்தில் மூன்று மாத்திரைகள், அருக்கியத்தில் ஒரு மாத்திரை, சந்தனத்தில் ஆறு மாத்திரைகள், தூபத்தில் பன்னிரண்டு மாத்திரைகள், தீபத்தில் ஆறு மாத்திரைகள், நைவேத்தியத்தில் இருபத்து நான்கு மாத்திரைகள், ஆரத்தியில் ஏழு மாத்திரைகள், நீராசனத்தில் பதினாறு மாத்திரைகள். பஸ்மத்தில் ஏழு மாத்திரைகள், குடையில் ஐந்து மாத்திரைகள், சாமரத்தில் பத்து மாத்திரைகள், விசிறியில் மூன்று மாத்திரைகள்.

இவ்வாறு சந்திர சூரியர்களுடைய போக்கு வரவாகப் பாவிக்கப்பட்ட நிசுவாச உசுவாசங்களை அடக்கிக்கொண்டு செய்யப்படும் உபசாரங்களிலுள்ள அந்தந்த மந்திரங்களை மனத்தினாலேயே செபிக்க வேண்டும். மந்திரங்களாவன:- பிராசாதம் சிவமந்திரம், பஞ்சப்பிரமம், ஷடங்கம் என்னும் இவையாம். இவற்றை அந்த அந்த உபசாரங்களில் முறைப்படி உபயோகிக்க வேண்டும்.

ஆவாகனம், பாத்தியம், ஆடைதரித்தல், சந்தனம், பூசுதல், ஆபரணமணிதல், கண்ணாடி, குடை, சாமரம், ஓலை விசிறி, செபம், தோத்திரம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களிலும் விசேடமாய் விதிக்கப்படாத ஏனைய உபசாரங்களிலும் மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது, மந்திரங்களின் முடிவில் நம: என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். அருக்கியம், அபிஷேகம், தூபம், தீபம், நைவேத்தியம், நீர், முகவாசம், நீராசனம், பவித்ரம், செபத்தைச் சமர்ப்பித்தல், பூசையைச் சமர்ப்பித்தல், ஆன்மாவைச் சமர்ப்பித்தல், ஓமம் ஆகிய உபசாரங்களில் மந்திரங்களின் முடிவில் சுவாஹா என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். துடைத்தல், நனைத்தல், புஷ்பம் சாத்துதல், பூரணாகுதி ஆகிய உபசாரங்களில் மந்திரங்களின் முடிவில் வெளஷட் என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். அழுக்கை நீக்குதற்குரிய அபிஷேகம், சுத்தி செய்தல், பாசச் சேதம், புரோக்ஷணம், தாடனம், பேதனம், விக்கினங்களைப் போக்குதல், ஆகிய உபசாரங்களில் மந்திரங்களின் முடிவில் ஹும்பட்என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். இரட்சையில் பட் என்னும் பதத்தையும், ஆசமனத்தில் ஸ்வதா என்னும் பதத்தையும் மந்திரத்தின் முடிவில் உபயோகிக்க வேண்டும்.

 

அஷ்ட புஷ்ப அர்ச்சனை

இவ்வாறு கூறப்பட்ட நியமங்களுடன் ஐந்து உபசாரங்களையும் செய்ய முடியாதவன் அட்ட புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். அது வருமாறு, - சுத்தமான மனதுடன் ஒரு புஷ்பத்தை ஆசன நிமித்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இன்னுமொரு புஷ்பத்தை இருதயத்தால் மூர்த்தியைத் தியானிக்கும் நிமித்தமாகச் சமா¢ப்பிக்க வேண்டும். பின்னர் ஐந்து புஷ்பங்களை ஐந்து அங்கங்களையும் தியானிக்கும் நிமித்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும். சிவனைத்தியானிக்கும் நிமித்தமாக ஒரு புஷ்பத்தைச் சமா¢ப்பிக்க வேண்டும். சிரசு முதலிய பஞ்சப்பிரமங்களே ஐந்து அங்களாகும். அல்லது நேத்திரம் நீங்கிய இருதயம் முதலியவற்றை ஐந்து அங்கங்களாகவும் கொள்ளலாம். இந்த எட்டுப் புஷ்பங்களும் அனைவருக்கும் பொதுவாகும். எல்லா ஆச்ரமங்களிலுள்ளவருக்கும் எல்லாச் சித்திகளையும் கொடுக்கும். எல்லாச்சாதியாருக்கும் பொது. இந்த அஷ்ட புஷ்பங்காளல் ஒரு காலமாவது, இரண்டு காலமாவது, மூன்று காலமாவது, பூசை செய்ய வேண்டும். பிராதக்காலத்திலும், உச்சிக்காலத்திலும், அஸ்தமன காலத்திலும் மிருந்த பக்தியுடன் அட்ட புஷ்பத்தால் பூசிக்க வேண்டும்.

தரித்திரர்கள், ஆதரிப்போரில்லாதவர்கள், பாலர்கள், பெண்கள், அறிவில்லாதவர்கள், அரசர்கள், நோயாளிகள், ஆன்மாவைத்தியானத்தில் அர்ப்பணம் செய்தவர்கள், சிவாத்திரத்தில் அன்புடையவர்கள், பலவிதசித்திகளை உடையவர்கள், போகத்தில் விருப்பமுடையவர்கள், வைராக்கியமுடையவர்கள் என்னும் இவர்களுக்கு அஷ்டபுஷ்பத்தால் அருச்சித்தல் விதிக்கப்பட்டிருக்கிறதென்று காலோத்தர ஆகமத்தில் கூறப்படுதலால், இத்ததையார் அஷ்டபுஷ்பங்களால் சிவனை அருச்சிக்கலாம்.

அரசருக்கும், சிவ சாத்திரத்தில் அன்புடையாருக்கும் அஷ்டபுஷ்ப அ£¢ச்சனையை விதித்தநோக்காவது:- உலகபரிபாலனம் செய்வதால் அநேகம் சிவாலயங்களிலும், பக்கதர்களுடைய இல்லங்களிலும் சிவபூசை நடப்பது கொண்டு அநேக புண்ணியங்கள் ஏற்படுவதுபற்றி அரசருக்கும், சிவசாத்திரதிற்கு வியாக்கியானம் செய்தலானும், அதனைக் கற்றலாலும் முறைப்படி அநேககாலம் பூசை செய்யததாலுண்டாம் மிகுந்த புண்ணியம் ஏற்படுவது பற்றிச் சிவசாத்திரத்தில் அன்புடையாருக்கும் அவகாசமில்லாத காலத்தில் அஷ்டபுஷ்பத்தால் அருச்சித்தல் விதிக்கப்பட்டதென்க.

 

கபில பூசை

இவ்வாறு சிவபூசையை முடித்துவிட்டுக் கபில பூசையைச் செய்ய வேண்டும். அது வருமாறு:- நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனஸ் என்னும் பெயரையுடைய பொன்மை வர்ணமான பசுவை “பஞ்சகோத்ர ரூபாயை கபிலாயை நம:” என்று சொல்லிக்கொண்டு சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து, ஓ உலகத்துக்கு அன்னையாயும், தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பவளாயும் இருக்கும் தேனுவே! என்னால் கொடுக்கப்பெற்ற இந்தக் கவளத்தை ஏற்றுக்கொண்டு என்னுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயென்று சொல்லிக்கொண்டு கவளத்தைக் கொடுத்து, பின்னர் வசிட்டர், விசுவாமித்திரர், ஜஹ்னு மகரிஷி என்னும் இவர்களால் போற்றப்பட்ட கபிலநிறத்தையுடைய தேனுவே! என்னால் செய்யப்பட்ட பாவங்களைப் போக்கவேண்டும் என்று பிரார்த்தித்து, என்னுடைய முன்பக்கம் பின்பக்கம் ஹிருதயம் என்னும் இவற்றில் எப்பொழுதும் பசுக்களிருக்கின்றன; யானும் பசுக்களின் மத்தியில் வசிக்கின்றேன் என்று ஜபிக்க வேண்டும். இவ்வாறு எந்த மனிதன் சுத்தனாய் முக்காலங்களிலும் நியமத்துடன் ஜபிக்கின்றானோ அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டுச் சிவலோகத்தை அடைகின்றான்.

 

பரார்த்தாலய தரிசம்

இவ்வாறு கபில பூசை முடிந்த பின்னர் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும். தரிசிக்கும் முறைவருமாறு:-

ஆலயத்துக்கு அருகே சென்று கோபுரத்துவாரத்திற்கு வெளியிலாவது, பலிபீடத்திற்கு வெளியிலாவது, தூலலிங்க சொரூபமான விமானத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் பத்திரலிங்கமாகிய பலிபீடம், கொடிமரம், இடபம் என்னும் இவற்றிற்கு நமஸ்காரத்தைச் செய்து, “ஆலயத்திற்குள் செல்லுதலாலும், சிவபெருமானைத் தரிசித்தலாலும், அவரை அருச்சித்தலாலும் உண்டாகும் பலனை அடையும் பொருட்டுத் தேவரீர் பிரசன்னராயிருந்து, நும்முடைய பாதகமலங்களில் பணிந்த எனக்கு உத்தரவு தந்தருள வேண்டுமென்று” இடபதேவரைப் பிரார்த்தித்துப் பலிபீடத்தின் முன்னர் சாஷ்டாங்கமாகச் சிவனை நமஸ்கரிக்க வேண்டும். தேகத்தை ஆடையால் மறைத்துக் கொண்டு நமஸ்காரஞ் செய்தலாகாது. சிவபெருமானுக்கு நேரிலும், பின்பக்கத்திலும்; இடப்பக்கத்திலும், கருப்பக்கிருகத்திலும் நமஸ்காரம் செய்தல் கூடாது.

மேற்கு முகமாகவும், வடக்கு முகமாகவும் சிவலிங்கமிருக்குமாயின் இடது பக்கத்தில் நமஸ்கரிக்கலாம்.

நமஸ்காரம் செய்தபின்னர், சிவபெருமானுடைய சந்நிதியில் அஞ்சலியோடு கூடிய புஷ்பத்தைத் சொரிய வேண்டும். அதன் பின்னர் பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். கருப்பக் கிருகத்தில் அருச்சகரும், + அந்தர் மண்டலத்தில் தீக்ஷை பெற்றவரும், $அந்தர்ஹாரம் முதலியவற்றில் அனைவரும் பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். அந்தர் ஹாரத்தில் பிரதக்ஷிணம் செய்யின் ஒரு மடங்கும், *மத்திய ஹாரத்தில் பிரதக்ஷிணம் செய்யின் மூன்று மடங்கும் ++மரியாதையில் பிரதக்ஷிணம் செய்யின் நான்கு மடங்கும், $$மகாமரியாதையில் பிரதக்ஷிணம் செய்யின் ஐந்து மடங்கும்; ஊரின் எல்லையில் பிரதக்ஷிணம் செய்யின் ஆறு மடங்கும் பலனுண்டு. இவ்வாறு பலன், காலம், அதிகாரம் என்னும் இவற்றிற்கு உரிமையான இடத்தில் இருபத்தொன்று, பதினைந்துஅ ஏழு, ஐந்து, மூன்று என்னும் இவற்றில் யாதானும் ஓர் எண்ணையுடைய பிரதக்ஷிணங்களைச் செய்தல் வேண்டும்; மிகவும் அவகாசம் கிடையாவிடில் ஒரு பிரதக்ஷிணத்தையாவது செய்தல் வேண்டும்.

(+ அந்தர் மண்டலம் - இரண்டாவது பிரகாரம், $ அந்தர் ஹாரம் - மூன்றாவது பிரகாரம், *மத்தியகாரம் - மதிலையொட்டி உள்ளருக்கும் வீதி, ++மரியாதை - மதிலையொட்டி வெளியிலிருக்கும் வீதி, $$ மகாமரியாதை - இரத வீதி.)

பிரதக்ஷிணம் செய்யும்பொழுது கர்ப்பக்கிருகம், அந்தர் மண்டலம் என்னும் இவற்றிலிருக்கும் சோமசூத்திரமாகிய அபிஷேகதீர்த்தம் செல்லும் வழியைத் தாண்டுதல் கூடாது. அதனைத் தாண்டாதிருத்தற் பொருட்டுக் கருப்பக் கிருகத்தில் சோமசூத்திரம் முதற்கொண்டு வலது, இடது பக்கமாகவே பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். அதற்கு வெளியிலுள்ள அந்தர் மண்டலத்திலும் வலது, இடது பக்கமாகவே பிரதக்ஷிணம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் பிரதக்ஷிணத்தைக் கிழக்குத் திக்கைமுதலாகவேனும், அல்லது சோமசூத்திரத்தை முதலாகவேனும் கொண்டு செய்தல் வேண்டும் என்று முன்னரே கூறப்பட்டிருக்கின்றது.

பிரதோஷ காலத்தில் பிரதக்ஷிணம் செய்யும் முறை வருமாறு:-

முதலாவது இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடது பக்கமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துச், சென்ற வழியே திரும்பிவந்து மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் வலமாகச் சென்று சோம சூத்திரத்தைக் கடவாது சென்றவழியே திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பி இடபதேவரைத் தரிசியாது சோமசூத்திரம் வரை சென்று, அங்கு நின்றும் திரும்பி இடபதேவரைத் தரிசியாது இடது பக்கமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துத் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் பிரதக்ஷிணத்தில் இடபதேவரை நான்கு முறையும் சண்டேசுவரரை மூன்றுமுறையும், சோமசூத்திரத்தை இரண்டு முறையும் தரிசித்ததாக ஆகின்றது.

விமானத்திற்கு வெளிப்பக்கத்தில் நாளமாகிய கோமுகியிலிருந்து விமானத்தினுடைய நீளத்தின் அளவாகவேனும், அதில் பாதி அளவாகவேனும் சோமசூத்திரத்தைச் செய்ய வேண்டும். அதைத் தாண்டினால் குற்றமுண்டாம். சோமசூத்திரத்துக்கு வெளியில் தாண்டினால் குற்றமில்லை. சோமசூத்திரத்தை இன்றியமையாது தாண்டும்படி நேரிட்டால் புல் முதலியவற்றால் அதனை மறைத்துக்கொண்டு தாண்டல் வேண்டும். இக்கருத்தை “புல், விறகு, இலை, கல், மண்கட்டி ஆகிய இவற்றால் மறைத்துச் சோமசூத்திரத்தைத் தாண்டல் வேண்டு”மென்ற வாக்கியம் வலியுறுத்துமாறு காண்க.

*இரண்டு சோமசூத்திரங்களும், விட்டுணு ஆலயமும், எந்த ஆலயத்தில் இருக்கின்றனவே, அந்த ஆலயத்தில் இடது பக்கமாகப் பிரதக்ஷிணம் செய்தல் கூடாதென்றும், வலது பக்கமாகப் பிரதக்ஷிணம் செய்தல் வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருத்தலால் சில இடங்களில் இடது பக்கமாகச் செய்யும் அபசவ்யப் பிரதக்ஷிணத்திற்கு விலக்குக் காணப்படுகின்றமை அறிக.

( * இரண்டு சோமசூத்திரங்கள் - சுவாமி கோவிலும், அம்மன் கோவிலும் ஒன்றாயிருக்கும் ஆலயத்தில் இருப்பன.)

பின்னர், துவாரபாலர், நந்திகேசுவரராகிய இவர்களை நமஸ்காரம் செய்து, அவ்வவர்களுடைய அநுமதியினால் உள்ளே புகுந்து, விநாயகருக்கு அஞ்சலி புஷ்பம் சொரிந்து சிரசில் குட்டிக் கொண்டு கீழேவிழுந்து சிரசு பூமியிற்படும்படி நமஸ்காரம் செய்து, மண்டபத்துள் புகுந்து சிவபெருமானை நமஸ்கரித்து, சிரசு அல்லது இருதயத்தில் இருகைகளையும் குவித்துக் கொண்டு அந்தந்த அதிகாரிகளுக்குரிய முறைப்படி வேதம், ஆகமம், புராணம், கவியம், திராவிடம் என்னும் இவற்றின் சம்பந்தமான தோத்திரங்களால் தோத்திரம் செய்தல் வேண்டும்.

ஆசாரியன் ஒருவனே கருப்பக்கிருகத்துட் புகுந்து சிவபெருமானைத் தரிசிக்கலாம். ஏனைய பிராமணர்கள் அர்த்த மண்டபத்தில் நின்று தான் தரிசித்தல் வேண்டும். க்ஷத்திரியர் அர்த்த மண்டபத்து வாயிலின் முன்னின்று தரிசித்தல் வேண்டும். வைசியர் இடபத்தின் முன்னின்று தரிசித்தல் வேண்டும். சூத்திரர் இடபத்தின் பின்னின்று தரிசித்தல் வேண்டும்.

வைசியரும் சூத்திரரும் முறையே இடபத்தின் முன்னும் பின்னுமாகக் கோமயத்தால் சதுரச்ரமாக மண்டலஞ் செய்து அம்மண்டலத்தில் அஞ்சலி புஷ்பத்தைச் சொரில் வேண்டும்.

இவ்வாறு நிருத்தமூர்த்தி முதலியோர்க்கும் அஞ்சலி புஷ்பம் சொரிந்து நமஸ்காரத்தைச் செய்து, பின்னர் சண்டேசுவரரை நமஸ்கரித்தல் வேண்டும்.

இவ்வாறு பலிபீடம் முதல் சண்டேசுவரர் ஈறாகவுள்ள மூர்த்திகளுக்கு நமஸ்காரம் சமர்ப்பித்த பின்னர், ஆலயத்தில் நேரிட்ட அபராதங்களை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமானுடைய சந்நிதியிலிருந்து சக்திக்குத் தக்கவாறு சிவமூலமந்திரத்தைச் செபித்து, பின்னர் சிவபெருமானுக்குத் தனது முதுகைக் காட்டாமல் வெளியில் வரல் வேண்டும்.

சிவாலயத்தில் நேரக்கூடிய அபராதங்கள் வருமாறு:- ஆலயத்துக்குள் வாகனத்தில் ஏறிச் செல்லல், பாதர¬க்ஷயுடன் சஞ்சரித்தல், கோபுரப்பிரதிமையின் நிழலைத் தாண்டுதல், நிருமாலியத்தைத் தீண்டுதல், நிருமாலியத்தைத் தாண்டுதல், சிவபெருமானும் பலிபீடத்திற்கும் நடுவே செல்லுதல், பெண்களைத் தீண்டுதல், அவர்களை ஆசையுடன் உற்றுப் பார்த்தல், பயனின்றிச் சிரித்தல், கானம்செய்தல், பயனில்லாத வார்த்தைகளைப் பேசுதல், உத்தரீயத்துடன் பிரதக்ஷிணம் நமஸ்காரங்களைச் செய்தல், ஒருகையால் நமஸ்கரித்தல், இடது பக்கதில் நமஸ்கா¤த்தல், அகாலத்தில் நமஸ்கரித்தல் முதலிய. இவ்வபராதங்களைப் பொறுத்தருளும்படி சிவபெருமானிடம் பிரார்த்தித்துக்கொண்டு வெளியில் செல்லல் வேண்டும்.

சிவபெருமானைத் தரிசிப்பவன், பூமி பொன் முதலாகப் பத்திரபுஷ்பம் ஈறாகவுள்ள திரவியங்களைக் கொடுத்தாவது, அசுத்தத்தைப் போக்கிச் சுத்தம் செய்தல் முதலிய காயத்தொண்டேனும் வாக்குச் சகாயம் என்னும் வாக்குத் தொண்டேனும் செய்தாவது தரிசித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் சிவபெருமானைத் தரிசிக்க முடியாவிடில் அட்டமி முதலிய விசேஷ தினங்களிலாவது தரிசித்தல் வேண்டும். அட்டமியில் தரிசித்தால் எட்டுத் தினங்களிலும், ## பர்வாக்களில் தரிசித்தால் ஒரு பக்ஷத்திலும், சங்கராந்தியில் தரிசித்தால் ஒரு மாதத்திலும் செய்த பாவங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் தரிசித்தால் மனம், வாக்குக், காயங்களால் ஈட்டப்பட்ட கொடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். நிசுவம், அயநம், கிரஹணம், மகோத்ஸவம் முதலிய தினங்களில் தரிசித்தால் சிவ பதங்கிடைக்கும்.

( ## பருவாக்கள் - கிருஷ்ணபக்ஷத்து அஷ்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி, மாசப்பிறப்பு என்ப.)

 

சித்தாந்த சாத்திரபடனம்

இவ்வாறு சிவதரிசனம் செய்த பின்னர் இல்லத்தை அடைந்து காலத்துக்குத் தக்கவாறு சிறிது நேரமேனும் சித்தாந்தசாத்திரத்தைத் தீக்ஷை பெற்றவருடன், தீக்ஷையில்லாதார் பார்வையின்றி கேட்டல், படித்தல்களைச் செய்தல் வேண்டும். “ஓ சிரேட்டமான முகத்தையுடையவளே! திருடருக்குத் தெரிவிக்காமல் பொருளை எவ்வாறு காக்கின்றோமோ, அவ்வாறே அபத்தர்களுக்குத் தெரிவிக்காமல் அந்த ஞானத்தைக் காத்தல் வேண்டும்” என்னும் வசனத்தால் தீக்ஷை பெறாதவருடைய சம்பந்தத்தை நீக்குதல் வேண்டும் என்பதை அறிந்து கொள்க.

பின்னர், உச்சிப்பொழுதில் விரிவாகவேனும், சுருக்கமாகவேனும், அல்லது அஷ்டபுஷ்பமாத்திரத்தாலேனும் சிவபூசை செய்தல் வேண்டும்.

யாதானும் அசௌகரியத்தால் ஆன்மார்த்தமான தன்னுடைய இலிங்கத்தைப் பூசை செய்யமுடியவில்லையாயின், தனக்குச்சமமான அந்நியனால் பூசிக்கப்படும் இலிங்கத்தில் அஷ்டபுஷ்பத்தினால் மாத்திரம் சுருக்கமாகப் பூசை செய்தல் வேண்டும்.

பிரணவம், மாதிருகை யென்னும் உயிரெழுத்து மெய்யெழுத்துக்கள், மாயை, வியோம வியாபி, சடக்ஷரம், பிராசாதம், அகோரம் ஆகிய ஏழு மந்திரங்களும் பூசைக்குப் பொதுவான மந்திரங்களாகும்.

இவ்வாறு சக்திக்குத் தக்கவாறு சிவபெருமானை அர்ச்சித்து உரியகாலத்தில் உண்ணுதற்காகப் பாகம் செய்யப்பட்டிருக்கும் அன்னத்தில் மேலிருக்கும் அன்னத்தை எடுத்துப் பாதியை சிவபிரானுக்கு நிவேதனம் செய்து, பிறிதொரு பாதியைக் கொண்டு அதிகார முறைப்படி வைதிக சைவ ஓமங்களைச் செய்தல் வேண்டும். வைதிக ஓமமாவது - வைசுவதேவம். சைவ ஓமமாவது - சுல்லிஹோமம். சுல்லி என்பது அடுப்பு.

 

சுல்லி ஓமம் செய்யும் முறை

அடுப்பை நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திசெய்து, அடுப்பிலிருக்கும் அக்கினியை பூரகம், கும்பம் என்னும் இவற்றால் விந்துத்தானம், நாபித்தானங்களில் சேர்த்துப் பவுதிகமான அக்கினியையும், விந்து சம்பந்தமான அக்கினியையும், ஜாடராக்கினியையும் ரேசகத்தால் வெளியே கொண்டுவந்து, பிங்கலை நாடியினால் சுல்லி காக்கினியில் வைத்து, அதன் பின்னர் அக்னயே நம:, சோமாய நம:, சூர்யாய நம:, பிரஹஸ்பதயே நம:, பிரஜாபதயே நம:, சர்வேப்யோ தேவேப்யோ நம:, சர்வேப்யோ விச்வேப்யோ நம:, அக்னயேஸ்விஷ்டகிருதே நம: என்று சொல்லிக் கொண்டு அக்கினியில் அக்கினிதிக்கு முதல் கிழக்கு ஈறாக அக்கினி முதலாயினாரைப் பூசித்து ஸ்வாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய அந்த அந்த மந்திரங்களால் ஓமம் செய்து அந்தத் தேவர்களனைவரையும் அனுப்புதல் வேண்டும்.

 

நிர்மால்ய போஜன ஆராய்ச்சி

பின்னர், சிவபெருமானுக்கு நிவேதனஞ் செய்யப்பெற்ற அன்னத்தையாவது, எஞ்சியிருக்கும் அன்னத்தையாவது உண்ணுதல் வேண்டும்.

“என்னால் அனுபவிக்கப்பட்ட நிர்மால்யம், பாதஜலம், புஷ்பம், பத்ரம் என்னும் இவற்றை எவன் ஆதரவுடன் அநுபவிக்கின்றானோ, அவன் முறை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இவற்றை அடைகின்றான்” என்னும் வாக்கியங்களால் சிவனுக்கு நிவேதனம் செய்யப்பெற்ற அன்னத்தை உண்ணுதலால் உண்டாம் பயன் மிகமேலானதென்பது காணப்படுகின்றது.

“சிவபெருமானுடைய நிர்மால்யத்தைத் தரித்தலும், உண்ணுதலும் ஆகாது” என்று கூறும் வாக்கியங்களால் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்பதும் காணப்படுகின்றது.

ஆகவே சில இடங்களில் சிவ நிர்மால்யத்தைக் கொள்ளலாமென்று விதியும், சில இடங்களில் கொள்ளக்கூடாதென்று விலக்கும் காணப்படுதலால், சிவதீக்ஷையுடையார் சிவநிர்மால்யத்தை உட்கொள்ளலாமென்றும், சிவதீக்ஷை இல்லாதார் அதனை உட்கொள்ளலாகாதென்றும், விதி, விலக்குகளுக்கு முரணாதவாறு நிர்ணயம் செய்து கொள்ளல் வேண்டும்.

சிவதீக்ஷை இல்லாதார் சிவநிர்மால்யத்தை அநுபவித்தலால் அவருக்கு உண்டாம் துன்பம் சிவபுராணத்தில் கூறப்படுகின்றது. அது வருமாறு:- “நிர்மால்யம் என்பதற்கு மலமற்றதாயிருப்பது கொண்டு சுத்தமாயிருப்பது என்பது பொருள். அது பற்றியே அது ஒருவராலும் நிந்திக்கப்படாதது. சுத்தமான அந்த நிர்மால்யத்தைச் சிவபாவனை அற்றவராயும், அசுத்தராயும் உள்ளவர் ஒருபொழுதும் அநுபவித்தல் கூடாது. சுவையின் விருப்பத்தால் அநுபவிப்பின் ரௌரவம் என்னும் பெயா¢கொண்ட கொடிய நரகத்தை அடைவான்” என்பதாம்.

ஆகையால் சிவதீக்ஷையில்லாதார் சிவநிர்மால்யத்தை உநுபவித்தல் கூடாதென்பதும், சிவதீக்ஷை உடையார் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்பதும் செவ்வனே விளங்குகின்றதென்பது சிலர் கொள்கை.

காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரங்களில் சிவதீக்ஷை பெற்றவருக்கே சமயாசாரங்கள் விதிக்கப்படுதலாலும், அந்தச் சித்தாந்த சாத்திரங்களில் சிவநிர்மால்யத்தை அநுபவித்தலாகாது; நிந்தித்தலும் ஆகாது; தவறி அநுபவிப்பின் அகோர மந்திரத்தைப் பதினாயிரம் முறை செபிக்க வேண்டும் என்று கூறப்படுதலால் விலக்கும், பிராயச்சித்தமும் காணப்படுதலாலும், காமிகம் முதலியவற்றால் தீக்ஷைபெற்றவர் அநுபவித்தல் கூடாதென்பது “தின்னக்கூடிய பொருள்கள் என்னும் இவற்றைச் சிவனுக்கு நிவேதித்து, அவற்றைச் சிவபெருமானிடம் அடிமைப்பாவனையுடன் உண்ணுதல் வேண்டும்” என்னும் பொருள் கொண்ட வாக்கியங்களும், இன்னும் இதுபோன்ற புராணவசனங்களும் காணப்படுதலால் வைதிக, பௌராணிக, பாசுபதம் முதலியவற்றில் விதிக்கப்பட்ட சிவசமஸ்காரத்தால் எவர்கள் தீக்ஷை பெற்றவர்களோ அவர்களே சிவநிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பதும் சிலர் கொள்கை.

அதே காமிகாகமத்திலேயே அசுத்தமான ஆன்மாவையுடைய எவன் அசுத்தத்துடன் ஆசையினால் என்னால் அநுபவிக்கப்பெற்ற பரமசுத்தமான நிர்மால்யத்தை அநுபவிக்கின்றானோ, அவன் இரசத்தை உண்டவன் எவ்வாறு நாசமடைவானோ அவ்வாறே நாசமடைவான் என்றும், என்னுடைய அடையாளங்களான விபூதி, உருத்திராக்க முதலியவற்றைத் தரித்து என்னையே சரணமாக எவர் அடைந்திருக்கின்றனரோ அவரே என்னுடைய நிர்மால்யத்தை அநுபவிக்கலாம்; ஏனையோர், அநுபவித்தல் கூடாது என்றும் கூறப்பட்டிருத்தலாலும், வாதுளாகமம் முதலியவற்றில் ஆயிரம் உபவாசங்களின் பலன்களும், அநேகம் பிராஜாபத்தியங்களின் பலன்களும், சிவப்பிரசாதத்தின் பலத்தின் கோடியில் ஒரு அம்சத்திற்குக் கூடச் சமானமாகாது என்று கூறப்பட்டிருத்தலாலும், சித்தாந்த முறைப்படி தீக்ஷை பெற்றவருக்கும் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்பது பெறப்படுகின்றது.

சிவ நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்றும், அநுபவித்தல் பிராயச்சித்தம் செய்தல் வேண்டும் என்றுங் கூறப்பட்ட வசனங்களுக்குக் கருத்தென்னையெனின், கூறுதும்,

சிவநிர்மால்யமானது தேவஸ்வம் என்றும், தேவதாத்திரவியம் என்றும், நைவேத்தியம் என்றும், நிவேதிதம் என்றும், சண்டதிரவியம் என்றும், நிர்மால்யம் என்றும் ஆறுவகைப்படும். அவற்றுள் தேவஸ்வம் என்பது சிவசம்பந்தமான கிராமம் பூமிமுதலியன தேவதாத்திரவியம் என்பது சிவசம்பந்தமான வஸ்திரம் சுவர்ணம் வெள்ளி இரத்தினம் முதலியன. நைவேத்தியம் என்பது சிவபெருமானுக்காகச் சங்கற்பிக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படாத அன்னம், பலம், புஷ்பம் முதலியன. நிவேதிதம் என்பது சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட அன்னம், பழம் முதலியன. சண்டதிரவியம் என்பது சணடேசுவரருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியம் புஷ்பம் முதலியன நிர்மால்யம் என்பது வெளியே போடப்பட்ட நிர்மால்யங்கள்.

இந்த ஆறனுள், நிவேதிதம் நீங்கிய ஐந்தையும் அனைவரும் அநுபவித்தல் கூடாது. நிவேதிதத்தைச் சிவதீக்ஷை உடையார் அநுபவிக்கலாம். ஏனையோர் அநுபவித்தல் கூடாது. அநுபவித்தால் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்பதே அந்த விலக்கு வாக்கியங்களுக்கும், பிராயச்சித்தவாக்கியங்களுக்கும் கருத்தாகும்.

இது எவ்வாறு பெறப்படுகின்றதெனின், காமிகாகமத்தில் முதலாவது நிர்மால்யத்தின் ஆறு பேதங்களைக் கூறி, பின்னர் அவற்றை அநுபவித்தலால் உண்டாங் கேட்டையும் கூறி, அதன்பின்னர் தவறி அநுபவித்தால் பிராயச்சித்தமும் கூறிவிட்டு, அதன் பின்னரே சிவபெருமானுடைய நிவேதிதம் என்னும் நிர்மால்யத்தைச் சிவதீக்ஷையுடையார் அநுபவித்தற்கு அநுமதிகொடுத்தற் பொருட்டு, அசுத்தான்மாவான எவன் அசுத்தத்துடன் ஆசையினால் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கின்றானோ அவன் நாசத்தை அடைவான் என்ற வசனம் படிக்கப்பட்டிருத்தலால் பெறப்படுகின்றதென்க.

ஆகவே, சிவநிர்மால்ய அநுபவவிலக்கு சித்தாந்த முறைப்படி தீக்ஷைபெறாதவர்களுக்கென்பதும், அந்த முறைப்படி தீக்ஷைபெற்றவர்கள் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பதும் சிலர் கொள்கை.

சுப்ரபேதாகமத்தில் சிவபெருமானுடைய நிர்மால்யத்தை மனிதன் அனுபவித்தல் கூடாது; பசுக்களிடத்திலும், யானைகளிடத்திலும் செலவிடல் வேண்டும்; அல்லது நீரிலாவது போடுதல் வேண்டும்; அல்லது தகனம் செய்தல் வேண்டும்; அல்லது பூமியிலாவது புதைத்தல் வேண்டுமென்று கூறப்பட்டிருத்தலால், மானுடப்பிறவியில் உதித்த அனைவரும் சிவ நிர்மால்யத்தை அநுபவித்தல் ஆகாதென்பதும், நிலம் நீர் அக்கினி பசு யானை என்னும் இவற்றிற் செலவிடல் வேண்டும் என்பதும் பெறப்படுதலால், சிவதீக்ஷை பெற்றவரும் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்பது செவ்வனே விளங்குகின்றது.

சிவதீக்ஷை பெற்றவர் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடுமென்ற விதியின் கருத்து, சிவலிங்கம் அல்லாத ஏனைய சகளமூர்த்திகளுக்கு நிவேதனம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பதேயாம். இதற்குப் பிரமாணம், சிவன்கோவிலுக் குள்ளிருக்கும் நடேசர் முதலிய சகளமூர்த்திகளுக்குச் சண்டாதிகாரம் கிடையாது என்னும் வாக்கியமேயாகும். இதனால் சண்டாதிகாரமுடைய சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென விலக்கியதாகும்.

காரணாகமத்திலும் சகளநிர்மாலியத்தை அனைவரும் அநுபவிக்கலாமென்று கூறப்பட்டிருக்கின்றது. அவ்விடத்து அனைவரும், என்னும் பதத்தால் சிவதீக்ஷை பெற்ற எல்லாப் பரிசாரகரையும் பொருளாகக் கொள்ளல் வேண்டும். எதனாலெனின், சுப்ரபேதாகமத்தில் சதாசிவ நிர்மாலியத்தை மனிதர் அநுபவித்தல் கூடாதெனக்கூறி அதன் பின்னர் சகளநிர்மால்யத்தைப் பரிசாரகர் அநுபவித்தல் வேண்டும்; ஏனையோர் அநுபவித்தால் அவர்கள் தோஷத்தைச் செய்தவராவர் என்று கூறப்பட்டிருத்தலால் என்க.

ஆகையால் சிவலிங்க நிர்மால்யத்தை அனுபவித்தல் கூடாதென்பதும், சகளமூர்த்திகளின் நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடுமென்பதும் சிலர் கொள்கை.

சதாசிவ நிர்மால்யங்களுள்ளும் மனிதர் முதலியோரால் பிரதிட்டை செய்யப்பெற்ற இலிங்கத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட நிர்மால்யங்களைத்தான் அநுபவித்தல் கூடாது; சரலிங்கம் முதலியவற்றில் அர்ப்பணம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாம்; பாணலிங்கம், சரலிங்கம், உலோகலிங்கம், இரத்தினலிங்கம், சுயம்புலிங்கம், பிரதிமை (சகளமூர்த்தி) என்னும் இவற்றில் சண்டாதிகாரம் கிடையாதென்று ஒரு நூலிலும், மற்றொரு நூலில் சுயம்புலிங்கம், பாணலிங்கம், இரத்தினலிங்கம், இரசலிங்கம், சித்தர் பிரதிட்டை செய்த லிங்கம் ஆகிய இவற்றில் சண்டாதிகாரம் கிடையாது என்றும் கூறப்பட்டிருத்தலால், சரலிங்கம் முதலியவற்றில் அர்ப்பணம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பது பெறப்படுகின்றது. ஆகையால் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்ற விலக்கு எல்லாச் சிவநிர்மால்யங்களிலும் செல்லாதென்பது சிலர் கொள்கை.

வைதிகம், பௌராணிகம், வாமம், தக்ஷிணம் ஆகிய தந்திரங்களின்படி பூஜை செய்யும் முறையிற்றான் சண்டேசுவரருக்கு அதிகாரம் கிடையாது; காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரங்களின் முறைப்படி செய்யப்படும் பூசையில் சண்டேசுவரருக்கு அதிகாரமுண்டு, திரலிங்கம், சரலிங்கம், இரத்தின லிங்கம், மண்லிங்கம், மரலிங்கம், கல்லிங்கம், உலோகலிங்கம், சித்திரவிங்கம், பாணலிங்கம் ஆகிய இவற்றில் சித்தாந்த முறைப்படி சண்டருக்கு அதிகாரமுண்டு; மற்ற வாமம் தக்ஷிணம் முதலிய தந்திரங்களின் அதிகாரம் கிடையாது என்று ஒரு நூலிலும், அவ்வியக்தலிங்கம், வியக்தலிங்கம், மண்டலம், தண்டிலலிங்கம், அக்கினிலிங்கம், சரலிங்கம், ஸ்திரலிங்கம், இரத்னலிங்கம், உருத்திராக்கமணி லிங்கம், சித்திரலிங்கம், சந்தனலிங்கம், அன்னலிங்கம், மண்லிங்கம், விபூதிலிங்கம், பழலிங்கம், புஷ்பலிங்கம் என்னும் இவற்றில் சண்டேசுவருக்கு நிச்சயமாகப் பூசை உண்டு என்று காலோத்தரம் முதலிய ஆகமங்களிலும் விசேஷமாகக் கூறப்படுதலால் சரலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்பெற்ற நைவேத்தியத்தை அனுபவிக்கலாமென்றும், திரலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்பெற்ற நைவேத்தியத்தை அனுபவித்தல் கூடாதென்றும் நிர்ணயித்தல் கூடாது.

சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடுமென்று, கூடாதென்றும் கூறப்பட்ட விதிவிலக்குகளுக்கு அன்னத்தை அநுபவித்தல் கூடாதென்றும். தாம்பூலம், பஸ்மம், தைலம், சந்தனம், புஷ்பம் என்னும் இவற்றையும், அபூபம், பழம் முதலிய தின்னுதற்குரிய வற்றையும் அனுபவித்தல் கூடுமென்றும் நிர்ணயம் செய்து கொள்ளல் வேண்டும். தாம்பூலம் முதலியவற்றிற்கு நிர்மால்யத்தன்மை இல்லை யென்பதற்குப் பிரமாணமும் இருக்கின்றது. ஆகையால் அன்னத்தைத்தான் அநுபவித்தல் கூடாது. தாம்பூலம் முதலியவற்றை அநுபவித்தல் கூடும் என்பது சிலர் கொள்கை.

காமிகாகமத்தில், “தனது இஷ்டலிங்கத்திற்கு எதைச் சமர்ப்பித்தோமோ அதை அன்னத்தைப் போலவே சகோதரர், சகோதரிகள், புதல்வர் ஆகிய இவர்களின் பொருட்டு ஐயமின்றிக் கொடுத்தல் வேண்டும்” எனவும், காரணாகமத்தில், “படிகலிங்கம், பாணலிங்கம் என்னும் இவை பிரதிட்டை செய்யப்பட்டனவாய் திரமாயிருப்பினும், பிரதிட்டை செய்யப்படாத சரமாயிருப்பினும் இவற்றின் நைவேத்தியம் நிர்மால்யமாகாது; பாலர், யௌவனப் பெண்கள் ஆகிய இவர்கள் உட்கொண்டால் தைரியத்தைக் கொடுக்கும்” எனவும் கூறப்பட்டிருத்தலால்¢ இந்த இரண்டு ஆகமங்களாலும் சிவநிர்மால்யத்திற்கு விலக்குக் கிடையாதென்பது பெறப்படுதலால், சரலிங்கம் முதலியவற்றிற்கு நிவேதிக்கப்பட்ட அன்னமும் அநுபவிக்கத்தக்கதாகும். ஆயினும், சகோதரர், புதல்வர் முதலியோருக்குக் கொடுக்க வேண்டுமென்னும் கூற்றால் பூசகர் அநுபவித்தல் கூடாதெனவே பெறப்படுகின்றது என்பதும், தாம்பூலம் பஸ்மம் முதலியவற்றை அநுபவிக்கலாம் என்னும் கூற்று மனிதர் முதலியோரால் பிரதிட்டை செய்யப்பெறற திரலிங்க விஷயமாகும் என்பதும் சிலர் கொள்கை.

காமிகாகமத்தில் “நிவேதனம் செய்வதற்காகச் கங்கற்பித்து வைக்கப்பட்டிருக்கும் நைவேத்தியத்தை சிவன் பொருட்டு என்று சொல்லிக்கொண்டு ஊர்த்வமுகத்தில் எனக்கு நிவேதனம் செய்து நிவேதிக்கப்பட்ட உச்சிஷ்டத்தை எவன் தினமும் அனுபவிக்கின்றானோ, அவன் எனக்குச் சமானனாவன்; என்னுடைய உச்சிஷ்டத்திற்கு அத்தகைய சக்தி உண்டு” என்று கூறப்பட்டிருத்தலால் நிவேதனம் செய்பவருக்குச் சிவபெருமானுடைய உச்சிஷ்டத்தை உண்ணலாம் என்று விதிக்கப்பட்டிருப்பதுகொண்டு பூசகரும் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பது பெறப்படுகின்றது. பூசகர் அநுபவித்தல் ஆகாதென்று கூறியதற்கு, சங்காரருத்திரர் முதலியோரின் பொருட்டு நிவேதனம் செய்யப்பட்டதை உண்ணலாகாதென்பது கருத்து.(இங்கே ஆராய்ச்சி செய்யப்படுவது கங்காரருத்திரருக்கு மேற்பட்ட சதாசிவ நிர்மால்ய விஷயம் என்பது அறிந்து கொள்க.) ஆகையால் பூசகரும் சிவார்ப்பண புத்தியுடன் சிவநிர்மால்யத்தை அனுபவிக்கலாம் என்பது சிலர் கொள்கை.

சதாசிவ மூர்த்தியினிடத்தில் பரமசிவனை ஆவாகனம் செய்தல், ஆவாகனம் செய்து பூசை செய்தல் ஆகிய இவற்றை நிரூபணம் செய்து, இறுதியில் சிவநிர்மால்யத்தை அனுபவித்தல் ஆகாதென்னும் விலக்குத் திவ்யாகமங்களில் மிகுதியும் காணப்படுதலால், அநேகவிதி விலக்குகளுடன் கூடிய எல்லாவித நிர்மால்யங்களும் விலக்கத்தக்கவை யென்பதே பொருந்தும். “சிவநிர்மால்யத்தை அநுபவித்தலால் உண்டாம் தோஷங்களோ பலவுள; அவற்றை அநுபவித்தலால் உண்டாம் பயன்களோ பலவுள; இவ்வாறு தோஷமும், பயனும் ஒன்றாக வரும் இடங்களில் பயனை விலக்குதல் வேண்டும். விலக்குதலைக் கூறும் நூலால் உண்டாம் தோஷமன்றோ மிவலிமையுடையது. விதிவிலக்குகள் ஒன்றாகவரும் இடங்களில் விலக்கையே கொள்ளல் வேண்டும்” என்று பிரமாணவாக்கியம் காணப்படுகின்றமையால் என்க.

காமிகாகமத்தில் “பத்திரம், புஷ்பம், பலம், சலம், அன்னம், பாத்தியம், ஒளஷதம் என்னும் இவற்றைச் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யாது புசிக்கலாகாது” என்று கூறப்படுதலால் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம் முதலியவற்றை அநுபவித்தல் கூடுமெனக் கொள்ளலாமே எனின், அவ்வாறன்று. வேறென்னையெனின், அதிதிகளுக்குப் பூசை செய்யாது அன்னத்தை எவ்வாறு உட்கொள்ளலாகாதோ, அவ்வாறே சிவபெருமானுக்குப் பூசை செய்யாது உண்ணுதல் கூடாதென்னும் கருத்துக்கொண்டு சிவபெருமானுக்கு நிவேதனம் செய்தபின்னர் எஞ்சியிருக்கும் அன்னத்தை உண்ணுதல் வேண்டும் என்பதே அதன் கருத்தாகும். சித்தாந்த சேகரத்திலும், “அன்னம், ஒளஷதம், சலம், பத்திரம், புஷ்பம், பலம் முதலியவற்றைச் சிவபெருமானுக்கு நிவேதித்து அதன் பின்னர் எஞ்சியிருப்பதை உட்கொள்ளல் வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கவே கூடாதென்பது சிலா¢ கொள்கை.

ஆகவே சிவநிர்மால்யத்தைப் பற்றிய விதிவாக்கியங்களையும், விலக்குவாக்கியங்களையும் ஆராயுமிடத்து ஒன்பது பக்கங்கள் உண்டாகின்றன. அவற்றுள்,

முதலாவது பக்கம்:- சிவசமஸ்கார ரூபமான தீக்ஷைபெற்றவரே சிவநிர்மாலியத்தை அனுபவித்தல் கூடும்; ஏனையோர் அநுபவித்தல் கூடாதென்பது.

இரண்டாவது பக்கம்:- சிவசமஸ்காரத்தினுள்ளும் வைதிகமுறையாகத் தீக்ஷைபெற்ற அதிவருணாச்சிரமிகளே அனுபவித்தல் கூடும்; காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரப்படி தீக்ஷைபெற்றவர்க்கு அநுபவித்தல் கூடாதென்று விலக்கும், அநுபவித்தால் பிராயச்சித்தமும் காணப்படுதலால் சித்தாந்த முறைப்படி தீக்ஷைபெற்றவர் அநுபவித்தல் கூடாதென்பது.

மூன்றாவது பக்கம்:- கூறப்பட்ட விலக்கும், பிராயச்சித்தமும், நைவேத்தியமல்லாத ஐந்துவித நி£¢மாலிய விஷயம். நிவேதனம் செய்யப்பெற்றதைச் சிவதீக்ஷையுடையார் கொள்ளலாம் என்பது.

நான்காவது பக்கம்:- சிவலிங்க நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்பதும், சகள மூர்த்திகளின் நிர்மால்யத்தை அநுபவிக்கலாம் என்பதும்.

ஐந்தாவது பக்கம்:- எல்லாச் சிவலிங்கங்களுக்கும் நிவேதனமான நிர்மால்யத்தை விலக்குதல் கூடாது; மனிதர் முதலாயினோரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திரலிங்கத்திற்கு நிவேத்திக்கப்பட்ட நிர்மாலியத்தைத்தான் அநுபவித்தல் கூடாது; சரலிங்கத்திற்குச் சண்டாதிகாரம் கிடையாமையால் சரலிங்க முதலியவற்றிற்கு நிவேதிக்கப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாம் என்பது.

ஆறாவது பக்கம்:- நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்றும், கூடும் என்றும் கூறப்பட்ட காமிகாகம வசனங்களுக்கு முறையே திரலிங்க சரலிங்கம் விஷயமென்று நிர்ணயித்தல் கூடாது; காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரப்படி சரலிங்க பூசையிலும் சண்டாதிகாரம் இருக்கின்றமையால். ஆதலின் அந்த விலக்கு அன்னத்தையே குறிக்கும். விதியானது பலம், தாம்பூலம், அபூபம் முதலிய நிர்மால்யங்களைக் குறிக்கும். எதனாலெனின், அன்னத்தினும் வேறான அபூபம் முதலியவற்றை அநுபவித்தல் கூடும் என்ற விசேஷவசனம் இருப்பதால் என்பது.

ஏழாவது பக்கம்:- சரலிங்கம் முதலியவற்றிற்கு நிவேதனம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும்; ஆனால் அதனைச் சகோதரர் முதலியவருக்கே கொடுத்தல் வேண்டும்; பூசகர் அநுபவித்தல் கூடாது என்பது.

எட்டாவது பக்கம்:- சிவார்ப்பண புத்தியுடன் பூசகரும் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்பது.

ஒன்பதாவது பக்கம்:- பலனைக்கூறும் வாக்கியம், விலக்கைக் கூறும் வாக்கியம் ஆகிய இரண்டனுள், விலக்கைக் கூறும் வாக்கியத்திற்கு வலிமையுண்டு. ஆகையால் எல்லாச் சிவநிர்மாலியங்களையும் அநுபவித்தல் கூடாது என்பது.

இவற்றுள், ஒன்பதாவது பக்கம் சிறிதும் பொருந்தாது. எதனாலெனின், சிவநிர்மால்யத்தை அநுபவித்தலால் பெரும் பலன்கள் உண்டு என்று கூடும் அநேக திவ்யாகமங்களுக்கும், புராணங்களுக்கும் அப்பிராமாணியம் நேரிடுமாகையால் என்க. இருடிகளின் வாக்கியங்களிலேயே ஒரு அக்கரங் கூட அப்பிராமாணியத்தைச் சகிக்காமலிருக்கும் பொழுது, அனைவருக்கும் முதல்வனான சிவபெருமானுடைய வாக்கியங்கள் எவ்வாறு அப்பிராமாணியத்தைச் சகிக்கும்.

வாயு விரைவில் செல்லக்கூடிய தேவதை என்னும் வாக்கியமானது, எவ்வாறு தன்னுடைய பொருளில் பயன்படாமல், விதிவாக்கியத்துடன் கலந்து, வாயுவை தேவதையாகக் கொண்ட யாகம் விரைவாகப் பலத்தைத் தரும் என்னும் பொருளைத் தருகின்றதோ, அவ்வாறே இவ்விடத்தும் சிவ நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்னும் வாக்கியங்கள், அர்த்தவாத வாக்கியங்களாகும். ஆகையால், விதிவாக்கியத்துடன் கலந்து சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் வேண்டும் என்னும் பொருளைத் தருகின்றனவென்று பிராமாணியமாகக் கொளளலாமோ எனின், அவ்வாறு அர்த்தவாத வாக்கியமாகக் கொண்டு பிராமாணியமாகக் கொள்ளுதலுங்கூட கொடிய தீங்குக்கு ஏதுவாகுமென எல்லாத் திவ்யாகமங்களும் முறையிடுகின்றன.

அன்றியும், நிர்மால்யத்தை அநுபவித்தலால் மிகுந்த தோஷங்களும், மிகுந்த பலன்களும் கூறப்பட்டிருக்கின்றமையால், பலனைக்கூறும் வாக்கியங்களை விலக்குதல் வேண்டும்; தோஷமே வலிமையுடையது என்னும் கொள்கையினை உடைய ஒன்பதாவது பக்கத்தினர்க்கு நியாயமான விறுகூறுதும்.

விதி, விலக்கு இரண்டும் தனித்தனி தன்னைக்கெடுக்காத வெவ்வேறிடங்களில் பிராமாண்யத்துடன் இருந்துகொண்டு, ஒரே இடத்தில ஒரே சமயத்தில் அவ்விரண்டும் சேர்ந்து வரும் பொழுது விலக்கிற்கு வலிமையுண்டு. அஃதாவது துவாதசியில் நெல்லிக்கனியை அனுபவித்தலால் மிகுந்த நலம் உண்டாம் என ஒரு வாக்கியம் இருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமையில் நெல்லிக்கனியை அநுபவித்தல் கூடாதென்று ஒரு வாக்கியமிருக்கின்றது. ஆகவே, துவாதசியில் நெல்லிக்கனிக்குப் பெருமை கூறிய வாக்கியமானது, ஞாயிற்றுக் கிழமையல்லாத துவாதசிகளில் வலிமை பெறும். ஞாயிற்றுக் கிழமையில் நெல்லிக்கனியை விலக்கிய வாக்கியமானது, துவாதசியுடன் கூடாத ஞாயிற்றுக் கிழமைகளில் வலிமை பெறும். துவாதசியும், ஞாயிற்றுக்கிழமையும் கூடின தினத்தில் நெல்லிக்கனியை விலக்குதல் வேண்டும் என்று விலக்கு வசனத்திற்கு வலிமை கொள்ளுதல் வேண்டும். இவ்வாறின்றி எல்லாவிடங்களிலும் விதிவாக்கியங்களுக்கு அப்பிராமாணியத்தையும், விலக்கு வாக்கியங்களுக்குப் பிராமாணியத்தையும் கொள்ளுதல் பிராமாணிகர்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஆகையால் விதிவிலக்கு வாக்கியங்களுக்கு நிர்ணயத்தைக் காட்டுவது தான் முறையாகும்.

மேலே கூறியவாறு சைவர்கள் அனைவரும் மகிழும்படியான நிர்மால்ய விஷய நிர்ணயத்தை ஒரு ஆகமங்களுடனும் கூட முரணாதவாறு காட்டுதும்.

சைவர்களுடைய போசனம் மூன்று வகைப்படும். அவற்றுள் சிவ பூஜையின் முடிவில் வெளிக்குண்டத்தில் சிவாக்கினிகாரியம் செய்த பின்னர், அகத்துச் செய்யும் சிவாக்கினி காரியம் ஆன்மபோசனம் என்னும் பாவனையுடன் செய்யப்படுவது முதலாவது போசனம்.

நிவேதனம் செய்யும்பொழுது நைவேத்தியங்களின் உருவம் மாத்திரம் அர்ப்பணம் செய்யப்படுகின்றது. இது நிவேதனத்தின் ஆரம்பம். ஆன்ம போசனமானது நைவேத்தியத்தின் சுவையைச் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வது ரூபமாயிருக்கின்றது. ஆகையால், ஆன்மபோஜனத்தினாற்றான் நைவேத்தியத்தின் அர்ப்பணம் பூர்த்தியாகின்றது என்னும் பாவனையுடன் செய்யப்படுவது இரண்டாவது போசனம்.

முதலாவது நிவேதனம் செய்யும்பொழுதே யாகத்திற் கொடுக்கப்பட்ட பரஸ்வத் முதலிய ஹவிசு சூக்குமரூபமாகத் தேவர்களால் உண்ணப்படுமாறு போலச் சிவபெருமானும் சுவையுடன் கூடவே சூக்கும ரூபமாக நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டார்; சிவபெருமானுடைய உச்சிஷ்ட போசனத்தை உண்ணுதல் சிவனுக்கு அடிமையான தனது கடமை என்னும் பாவனையுடன் செய்யப்படுவது மூன்றாவது போசனம்.

இவற்றுள், முதலாவது போசனமானது சுப்ரபேதாகமத்தில் வன்னிகாரிய பலடத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:- அக்கினிகாரியம் செய் பின்னர் பிராணாக்கினியில் ஓமம் செய்தல் வேண்டும்.(இதுவே போசனஞ் செய்தல்) அக்கினிசாலைக்குப் பக்கத்திலாவது, அக்கினி சாலையிலாவது போசனம் செய்யக்கூடிய இடத்தைச் செய்து கொள்ளலாம். அல்லது கிருஹத்திலாவது செய்துகொள்ளல் வேண்டும். அந்த இடம் கோமயத்தால் மெழுகிச் சுத்தம் செய்து கோலமிட்டு, மேல் கட்டி தீபம் முதலியவற்றால் அலங்கரிக்கப்படல் வேண்டும். சொர்ணம் வெள்ளி பித்தளை வெண்கலம் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரத்தையாவது வாழை இலையையாவது போசன பாத்திரமாகக் கொண்டு அதற்குத்தக்காவறு சுத்தியையும் செய்து பாத்திரத்தில் யெல்லாப் பதார்த்தங்களையும் வைத்து தன்னுடைய ஆன்மாவில் இருக்கும் சிவனை அருசித்தல் வேண்டும். எவ்வாறெனில், ஆன்மா யஜமானனாகும். புத்தி அவன் பத்தினியாகும். கேச உரோமங்கள் தருப்பைகளாகும். நா முதலியன யாகபாத்திரமாகும். இருதய கமலம் வேதிகையாகும். இவ்வேதிகையிலிருக்கும் அக்கினியில் சிவபெருமானிருக்கின்றார். அவரைப் பூசித்தல் வேண்டும் என்க. உரோமமாகிய தருப்பைகளைப் பரப்பி சிவமந்திரத்துடன் பிரணவத்தை உச்சரித்து, நீரால் சுற்றி, பின்னர் சிவமந்திரத்தால் அப்யுக்ஷணம் செய்து, ஜலத்தில் சிவமந்திரத்தை செபித்து, பஞ்சப்பிரம ஷடங்கங்களையும் முறையே செபித்து, சிவபெருமானைத் தியானம் செய்து, சிவாய என்று சொல்லிக் கொண்டு ஹிருதய மந்திரத்தால் ஜலத்தைப் பருகி, பஞ்சப்பிரம்மமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு நடுவிரல், அணிவிரல், கட்டைவிரல்களால் அன்னத்தைச் சிறிது சிறிதாக எடுத்துச் சிவன்பொருட்டு ஓமஞ்செய்ய வேண்டும். அமிருதமந்திரம் முதலியவற்றால் ஜலத்தைப்பருகி, ஐந்து பிராணமந்திரங்களால் ஐந்து ஆகுதிகளையும் ஓமஞ்செய்தல் வேண்டும். பின்னர் பாத்திரத்தைத் தொட்டுக்கொண்டு உண்ணுதல் வேண்டும். பின்னர் சூரியனுக்கு எதிர்முகமாக இருந்துகொண்டு விதிப்படி ஆசமனம் செய்து சிவமந்திரத்தால் வயிற்றை இடது கையால் தொடுதல் வேண்டும். அதன் பின்னர் வலதுகைக் கட்டைவிரலால் வலதுகால் கட்டைவிரலில் சிவமந்திரத்தைத் தியானித்து ஹிருதய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஜலத்தை விடுதல் வேண்டும். இது தன்னுடைய பாதமூலத்தில் சமர்ப்பிக்கப்படும் சுளுகோதகம் எனப்படும். இவ்வாறு பிராணாக்கினி காரியமான நித்தியாக்கினி காரியமானது சொல்லப்பட்டது; இனிக்குண்டலக்ஷணத்தைக் சொல்லுகறேன் கேள் என்பதாம்.

இந்தப் போஜனமானது நிவேதனம் செய்யப்படாத அன்னத்தினாலேயே செய்யப்படல் வேண்டும். இதற்காகவே பாகம் செய்யப்பட்டதில் ஒருபாகம் நிவேதனத்திற்காகவும், மற்றொரு பாகம் ஹசிசுக்காகவும், பிறிதொருபாகம் பலிசமர்ப்பித்ற் பொருட்டும் பகுத்து, எஞ்சிய பாகத்தை ஆசிரியன் உண்ணுதல் வேண்டும் என்று ஆகமங்களில் பரார்த்தபூஜா விஷயத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இதனால் நிவேதிக்கப்படாத அன்னமும் உண்டென்பது தெரிகின்றமை காண்க.

அன்றியும் பாகம் செய்யப்பட்டவற்றில் பாதியையெடுத்து, எடுக்கப்பட்டதனுள் பாதியைச் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து, அதனுள் எஞ்சியிருக்கும் பாதியை அக்கினியில் ஓமம் செய்து; ஓமம் செய்யும் முறையைக் கூறுகின்றேன் என்று ஆத்மார்த்த பூசையில் சுல்லி ஓமப் பிரகரணத்துள்ள ஆகம வசனங்கள் கூறுகின்றன. இதனாலும் நிவேதனம் செய்யப்படாத அன்னம் உண்டென்பது விளங்குகின்றமை காண்க.

இனி இரண்டாவது போஜனமோவெனில், வாதுளாகமத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:- நைவேத்தியத்தின் உருவத்தைச் சமர்ப்பித்த பின்னர் சிவபெருமானிடத்தில் சுவையையும் சமா¢பித்தல் வேண்டும். இவ்விரண்டினையும் சமாப்பிக்காத நைவேத்தியம் பலனற்றது. அந்தந்தப் பிரசாதத்தின் அநுபவம் முடிவாக நைவேத்தியத்தின் அர்ப்பணம் பூர்த்தியாகின்றது. பிரசாதமாய் அநுபவிக்கப்படாத வைநேத்தியம், பயனற்றதென்பது முதலியனவாம். இந்த இரண்டாவது போஜனமானது நிவேதனத்திற்கு ஆரம்பித்து முடிவு பெறாத நிவேதனக் கிரியையினையுடைய அன்னத்தினாலேயே செய்யப்படல் வேண்டும். நிவேதனோபசார சமயத்தில் சிவபெருமானடைய சந்நிதியில் வைக்கப்பட்ட நைவேத்தியமானது, அப்பொழுது உருவம் மாத்திரம் சமர்ப்பிக்கப்படுதலால், ஆரம்பிக்கப்பட்ட நிவேதனக்கிரியையினை உடையதாய்ச் சுவையைச் சமா¢ப்பித்தல் முடிவாக அந்தக்கிரியையானது தொடர்ந்து பூர்த்தியாகின்றது. ஆ¬காயல் இதுவே ஆரம்பிக்கப்பட்டு முடிவுபெறாத நிவேதனக் கிரியையினை உடைய அன்னமாகும். இந்த அன்னத்தை, தேவர்கள், பிதுருககளை உத்தேசித்துக் கொடுக்கப்படும் அன்னத்தை அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். என்னும் புத்தியுடன் சமர்ப்பிக்குமாறு போல், பூசகரும் சிவனுக்குச் சமர்ப்பிக்கின்றேன் என்னும் புத்தியுடன் உண்ணுதல் வேண்டும்.

மூன்றாவது போஜனமானது காமிகம் முதலிய ஆகமங்களில் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:- என்னுடைய அடையாளங்களைத் தரிக்கிறவராயும், என்னையே தியானிப்பவராயும், என்னையே சரணமாக அடைந்தவராயுமுள்ளவருக்கே என்னுடைய நிர்மால்யம் உரிமையாகும்; ஏனையோருக்கு உரிமையாகாது. தின்னக் கூடியவையும், உரிஞ்சக்கூடியவையும், பருகக் கூடியவையும், கொடுக்கக்கூடிய மற்றவையும் ஆகிய இவற்றை எனக்கு நிவேதித்து இந்த எல்லாச் சிவநிர்மால்யங்களையும் தான் அடிமையென்னும் பாவனையுடன் புசித்தல் வேண்டும். எனக்கு அடிமை என்னும் புத்தியை உடைய பாசுபத நைவர்தான் இவற்றை அநுபவிக்கலாம். இவர்களுக்குத்தான் இதுமுத்தியைக் கொடுக்கும் என்பதாம். இதனால் இந்தப் போஜனமானது நிவேதனம் செய்யப்பெற்ற அன்னத்தினாலேயே செய்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றமை காண்க.

முத்தியை விரும்புவோரால் ஈசுவரனுக்கு முன்னர் நிவேதனோபசார சமயத்தில் யாதொரு பதார்த்தம் வைக்கப்பட்டதோ அது அப்பொழுதே சூக்கும ரூபமாகச் சுவையுடன் கூடவே சிவனால் அநுபவிக்கப்பட்ட தென்பது கொண்டு, இந்த அன்னம் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுடைய உச்சிட்டமான இந்த அன்னத்தைச் சிவபெருமானுக்கு அடிமையென்னும் புத்தியுடன் அநுபவித்தல் வேண்டும். எதுபோலுமெனின், பிராமணருக்கு அடிமைத் தொழிலைச் செய்யும் தாழ்ந்த ஜாதியார் அந்தப் பிராமணருடைய உச்சிட்டத்தைப் புசித்தல் போலுமென்க.

ஆகவே, சிவநிர்மால்ய விஷயத்தில் பொதுவாக எந்தெந்த விலக்கு வாக்கியங்கள் காணப்படுகின்றனவோ, அவையனைத்தும் சிவபெருமானுக்கு அடிமை என்னும் பாவனையில்லாத விலங்கிற்குச் சமானரான மனிதர்களைக் குறித்தனவென்பதும், சிவபெருமானுக்கு அடிமை என்னும் பாவனையை உடைய தீக்ஷைபெற்றவரைக் குறித்து எந்தெந்த விலக்கு வசனங்கள் காணப்படுகின்றனவோ, அவை அனைத்தும் நிவேதனம் செய்யப்படாத ஐந்துவித நிர்மால்யங்களைக் குறித்தனவென்பதும் இவ்வாறு இரண்டுவித நிர்ணயங்களும் பெரியோர்களால் காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் இரண்டாவது நிர்ணயமானது ஆறுவித நிர்மால்யங்களுள் நிவேதனஞ்செய்யப்பட்ட நிர்மால்யம் ஒன்றையே புசித்தல் வேண்டும் என்ற ஆகம வாக்கியங்களால் பிரசித்தமாய்க் காணப்படுகின்றது. முதலாவது நிர்ணயமானது சிவபுராணத்தில் மிகவிரிவாகக் காணப்படுகின்றது. எவ்வாறெனில்:- என்னுடைய நைவேத்தியமும், பாதஜலமும், புஷ்பமும், பத்திரமுமாகிய இவை ஏனையோர் அநுபவித்தற்கு உரிமையாகாவென்று ஈசுவரனால் சொல்லப்பட்டதாகச் சில மகரிஷிகள் கூறுகின்றனர்; அதன் பொருள் என்னை என்று ஜைமினி கேட்கும் பொழுது வியாசர் கூறுகின்றார்.

ஓ ஜைமினி மகரிஷியே! ஈசுவரனுடைய வாக்குக்கு அடங்காதவர்களாயும், வீரபத்திரரால் சபிக்கப்பட்டவர்களாயும், சிவபிரானிடத்துப் பக்தி இல்லாதவர்களாயும், சிவபெருமானினும் வேறான தேவர்களிடத்தில் பக்தி உள்ளவர்களாயும், தீக்ஷைபெறாதவர்களாயும், அசுத்தமான செயல்கள் உள்ளவர்களாயும், சம்புவினும் வேறான தேவர்களிடத்துச் சமபுத்தியுள்ளவர்களாயும் இருப்பவர்கள் சிவபெருமானுடைய நைவேத்தியம் முதலிய *நான்குவித பிரசாதங்களையும் அனுபவித்தல் கூடாதென்பதாம். தீக்ஷை பெறாதவராயும், பத்தியில்லாதவராயும், உள்ளவர்க்குச் சிவநிர்மால்யம் உரிமையாகா தென்பதற்கு முன்னர்க் காட்டப்பட்ட காமிகம் முதலிய ஆகமவசனங்கள் பிரசித்தமான பிரமாணமாகும். இது நிற்க.

( * நான்கு விதம் - நைவேத்தியம், நிவேதிதம், சண்டதிரவியம், நிர்மால்யம்)

சிவநிர்மால்யம் எல்லாப் பாவங்களையும், எல்லா வியாதிகளையும் போக்கக் கூடியது; எல்லா யாக பலன்களையும் தரக்கூடியது; எல்லாத் தீர்த்தங்களிலும் ஆடினதற்கு ஒக்கும்; புத்திமுத்திகளைத் தருவதில் முக்கிய சாதனமாகும். இவ்வாறு சிவசாத்திரத்தை அறிந்தவர்கள் மிகப் பாராட்டிக் கூறுகின்றனர். சிவபக்தியும், சிவ தீக்ஷையும் இல்லாதவர்கள் சிவநிர்மால்யத்தை அநுபவித்தலும், தொடுதலும் கூடாதென்றும் கூறகின்றனர். இது எவ்வாறு பொருந்தும்? எல்லாப் பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த சர்வப் பிராயச்சித்தம், சிவநாம சங்கீர்த்தனங்கள் போல் அனைவருக்கும் பொதுவாகவன்றோ இந்தச் சிவநிர்மால்யமும் இருத்தல் வேண்டும். அவ்வாறின்றிச் சிலர் நிர்மால்யத்தைத் தொடுதலும் கூடாதென்று எவ்வாறு கூறலாம்? ஆகையால் சிவநிர்மால்யம் தாழ்ந்தது என்னும் காரணங்கொண்ட அதனைத் தொடுதலும் கூடாதென்று விலக்கியதாக ஏன் கொள்ளுதல் கூடாது? அரதத்தாசாரியரும் சிவநிர்மால்யத்தை உயர்ந்த தென்றாவது தாழ்ந்ததென்றாவது சிறப்பித்துக் கூறாது பொதுவாகவே கூறியிருக்கின்றார். அவர் கூற்று வருமாறு:-

சிவநிர்மால்யத்தை உயர்ந்ததென்று கொண்டுதான் விலக்குகின்றனரோ, அல்லது தாழ்ந்ததென்று கொண்டுதான் விலக்குகின்றனரோ, இவ்விலக்கு எந்த வாசனையை உடையதென்றும், எந்தப் பிரயோசனத்தை உடையதென்றும் அறியோம். தீக்ஷிதருடையதும், பதிதனுடையதுமான அன்னத்தைப் புசிக்கலாகாதெனப் பொதுவாகவே முனிகள் கூறுகின்றனர். சண்டாளர், நாவிதர், பிணஞ்சுடுபவர், கற்விற்பவர் ஆகிய இவர்களையும், பசு, பிராமணர், அக்கினி, சிவதீக்ஷை பெற்றவர், பெண்கள் ஆகிய இவர்களையும் காரணமின்றித் தீண்டலாகாதென்று எந்த வாசனைகொண்டு நிஷேதிக்கப்பட்டிருக்கின்றது. தீண்டினால் எந்த வாசனைகொண்டு பிராயச்சித்தம் விதிக்கப்பட்டிருக்கின்றது. அக்கினிக்குச் சமானரான தீக்ஷிதரின் அன்னத்தை அனுபவித்தல் கூடாதென்றும், சோமலதையை விலைக்கு வாங்கியபின் அதே தீக்ஷிதரின் அன்னத்தை அநுபவித்தல் கூடும் என்றும், கூறப்பட்டிருக்கின்றன. சங்கின் எலும்பு சுத்தம் என்றும், மனிதன் எலும்பு அசுத்தம் என்றும், இவ்வாறு கூறுதற்கு ஆகமவாக்கியம் எவ்வாறு பிரமாணம் ஆகுமோ அவ்வாறே மேலே கூறப்பட்ட ஆகமவாக்கியங்கள் நமக்குப் பிரமாணமாகையால் தீக்ஷையுடையார் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடுமென்றாவது, அஃதில்லாதார் அநுபவித்தல் கூடாதென்றாவது சொல்லுதற்கு எமக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதாம்.

ஆகையால், அவர் கூற்றை ஆராய வேண்டுவது இன்றியமையாதது. அவ்வாராய்ச்சி வருமாறு:-

சிவ நிர்மால்யத்தை உயர்ந்ததென்று விலக்குகின்றனரா? தாழ்ந்ததென்று விலக்குகின்றனரா என்னும் கேள்விக்கு விடை கூறுதும். எந்தப் புராணம், ஆகமம் என்னும் இவற்றில் சிலருக்குச் சிவ நிர்மால்யபோசனம் விலக்கப் பெற்றிருக்கின்றதோ, அதே புராண ஆகமங்களில் மிகவும் போற்றத்தக்க குணங்களுடன் கூடியது சிவ நிர்மால்யம் என்று கூறப்பட்டிருத்தலால் அது எல்லாப் பாவங்களையும் போக்கக் கூடிய பெருமையினை உடையதென்பதில் ஒருவித விவாதமும் இல்லை. இவ்விஷயத்திற்கு ஆகமம், புராணம் முதலியவற்றில் கூறப்பட்ட வசனங்கள் வருமாறு:-

பாதஜலம் முதலாகிய நிர்மால்யங்களைப் பக்தியுடன் தரித்தல் வேண்டும். இவ்வாறு செய்கிறவர்களிடத்து மனம், வாக்கு, காயங்களால் உண்டான பாவங்கள் அணுகா. இவை மிகவும புனிதமுடையனவென்று தோத்திரம் செய்துகொண்டு பக்தியுடன் எந்த மனிதன் உண்ணுகின்றானோ அவன் பிரம்மக்ஞானம் உடையவனாய்ச் சுத்தான்மாவாக ஆவன். அவனுடைய பாவங்கள் விரைவில் நாசமடையும். என்னைப் பற்றுக்கோடாகச் சார்ந்தவர் என்னுடைய பிரசாதங்களான ஜலம், புஷ்பம், முதலியவற்றைத் தரித்தல் வேண்டும். நோயாளிகள், விடத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஆகிய இவர்கள் சிவ நிர்மால்யத்தை இன்றியமையாது தரித்தல் வேண்டும். தன்னுடைய இஷ்ட லிங்கத்திற்கு எது கொடுக்கப்பட்டதோ அதனை ஓமத்திற்குரிய அன்னத்தைப் போலவே உண்ணலாம். இதில் சந்தேகமில்லை. உண்டால், அது ஓ நாரதரே! ஆயிரம் ராஜசூய யாகம் செய்த பலனைக் கொடுக்கும். உலகத்திலுள்ள தீர்த்தங்களுள் மேலான பிருது தீர்த்தம், மகாதீர்த்தம், கங்கை, யமுனை, நர்மதா, சரயூ, கோதாவரி, ஆகிய உத்தம தீர்த்தங்களனைத்தும் சம்புவின் அபிஷேக ஜலத்தில் விளங்கிக் கொண்டிருக்கின்றன. சம்புவின் அபிஷேக ஜலம் எல்லாத் தீர்த்தங்களின் ரூபமாய் இருக்கின்றது. ஆகையால் அதனைப் பூஜிக்க வேண்டும். அக்கினிகாரியம் செய்யும் வைதிகர்களின் பொருட்டுப் பதினாயிரம் பசுக்களைத் தானம் செய்தபலனை என்னுடைய பாத ஜலத்தில் ஸ்நானம் செய்தவன் அடைவான் என்பதாம்.

வைத்திய சாஸ்திரத்திலும் சிவநிர்மால்யத்தின் பெருமை கூறப்பட்டிருக்கின்றது. அதுவருமாறு:- தேவர்களுக்கும் தேவனான சிவபெருமானுடைய நிர்மால்ய ஜலத்தை உண்டவனிடத்து க்ஷயம், குட்டம், சுரம், சுவாசம் ஆகிய நோய்கள் அனைத்தும் அணுகமாட்டா என்பதாம்.

இராமாயணத்திலும் சிவநிர்மாயத்தின் பெருமை கூறப்பட்டிருக்கின்றது. அதுவருமாறு:- தேவர்கள், இருடிகள், கந்தர்வர் ஆகிய இவர்கள் அப்பொழுது பூமியை அடைந்து சிவபெருமானுடைய திருமேனியில் நின்றும் விழுந்த தீர்த்தத்தை மிகவும் பரிசுத்தம் என்னும் காரண்ம் கொண்டு புரோக்ஷணஞ் செய்து கொண்டனர் என்பதாம்.

பாகவதத்திலும் சிவநிர்மால்யத்தின் பெருமை கூறப்பட்டிருக்கின்றது, அது வருமாறு:- உன்னினும் வேறான எந்தப் பிரமன் முதலாயினோர் மயானத்தில் சடைகளை விரித்துகொண்டு ஈசுவரனுடைய மாலை, விபூதி, கபாலம் என்னும் இவற்றில் வசிக்கும் பிசாசுகளுடன் ஈசுவரனுடைய பாதத்திலிருந்தும் வந்த ஜலத்தைச் சிரசுகளால் ஏந்துகின்றனரோ, அவர் ஒருகாலத்தும் சிவன் என்னும் பெயரினையுடைய அந்த மூர்த்தியை அமங்களமாக அறியமாட்டார் என்பதாம்.

இவ்வாறு மிகவும் பாராட்டப்படும் பரிசுத்தமான சிவ நிர்மால்யத்தைத் தொடக்கூடாதென்று விலக்கியது அதிகாரம் இல்லாதவரின் பொருட்டு என்பதாம். எதுபோலும் எனின், அதிகாரமில்லாதவர் சிவலிங்கத்தைத் தொடக்கூடாதென்று விலக்கியது போலுமென்க. சிவலிங்கம் கல்ரூபமாயினும், பிரதிஷ்டா சமஸ்காரத்தால் மாயாவிகாரமான அசுத்தரூபம் நீங்கிச்சித்து ரூபமாக ஆய்விட்டதென்பது கொண்டு, அந்த லிங்கத்தைத் தீக்ஷைபெறதார் தொடக்கூடாதவாறுபோலச் சிவநிர்மால்யமும் நிரீக்ஷணம் முதலிய சமஸ்காரங்களால் சுத்தி செய்யப்பட்டு அதன்பின்னர் சிவபெருமானும் தன்னால் ஏற்றுக் கொள்ளுற்கு உரிமையுடையதென்று ஏற்றுக்கொண்டு மிகச் சுத்தமாய் விட்டமையால் தீக்ஷைபெறாதவரால் தொடக்கூடாததாக ஆகின்றதென்க.

இக்கருத்துப் பற்றியே வாதுளோத்தரத்தில், “பிரதிட்டை செய்யப்பட்ட லிங்கதில் எவ்வாறு பூர்வபாவனை செய்யக்கூடாதோ, அவ்வாறே சிவப்பிரசாதத்தினிடத்தும் பூர்வ பாவனையை நீக்குதல் வேண்டும். இத்தகைய சிவநிர்மால்யத்தைத் தீக்ஷையினால் பாவங்களை நீக்கினவராயும், பாசநீக்கத்தை உடையவராயும் உள்ள சிவபக்தர்களுக்கே சிவலிங்கத்தைப்போல் தொடுதல் கூடும். சிவபெருமானது ஆணையால் உண்ணுதலும் கூடும். எதனாலெனில், அவர்கள், சிவதீக்ஷையினாலும் நாள்தோறும் செய்யப்படும் பூதசுத்தி, தண்ட, முண்ட, கலாநியாசமாகிய இவற்றின் பயிற்சியாலும் சிவலிங்கம் போலும் சிவநிர்மால்யம் போலும் மாயாகாரியமான சரீரம் இல்லாதவர்களாக ஆய்விட்டார்கள் ஆகையால்” என்று கூறப்பட்டிருக்கின்றது.

வாயுசம்ஹிதையில், என்னுடைய அஸ்தம், பாதம் என்னும் இவற்றிற்கு ஒப்பாக என்னுடைய சரீரத்தைத் தரிக்கிறவர்களாகிய உருத்திரர்களைப் பிராகிருதர் (மாயாசரீம் உடையவர்) எனக் கொண்டு அவமானம் செய்தல் கூடாதென்று கூறப்பட்டிருக்கின்றது.

மிகவும் சுத்தமான நிர்மால்யத்தைத் தீக்ஷையில்லாதாருக்குத் தொடுதற்கு அதிகாரம் இல்லை என்னும் கூற்றால், எல்லாப் பாவங்களையும் போக்கக்கூடிய குணம் நிர்மால்யத்துக்கு இருப்பின் சர்வப்பிராயச்சித்தம் போல் அனைவருக்கும் ஏன் பொதுவாகக் கூடாது என்று முன்னர்ச் செய்த சங்கையானது நீக்கப்பட்டது.

இதனால் தாழ்ந்ததாக ஆகாது. எதுபோலும் எனின், அகமருஷணம் முதலிய வைதிக சூக்தங்கள் பிரமஹத்தி முதலிய மகாபாவங்களைப் போக்கக்கூடிய தென்பது கொண்டு வேதத்தைக் கேட்பதற்குக் கூட அதிகாரமில்லாத சூத்திரர் முதலியோருக்குக் குறித்த வைதிக சூக்தங்கள் பொதுவாகமாட்டாது. இதனால் வைதிக சூக்தங்களுக்குக் கேடொன்றுமில்லை; பெருமையே ஏற்படுகின்றது போலுமென்க.

இக்கருத்தைப்பற்றி, புராணங்களில் காணப்படும் ஈசுவர வசனங்கள் வருமாறு:- அசுத்தான்மாவான எவன் சுத்தமின்றி ஆசையினால் என்னால் அனுபவிக்கப்பட்ட மிகப்பரிசுத்தமான அன்னத்தை உண்ணுகின்றானோ, அவன் சூத்திரர் வேதாத்தியயனம் செய்தால் நாசத்தை அடைவதுபோல் நாசத்தை அடைவான் என்பதாம். இது நிற்க.

மிகச்சுத்தமான இந்த நிர்மால்யம் சிவநாமம்போல் அனைவர்க்கும் பொதுவாக ஏன் இருத்தல் கூடாதென்று முன்னர்ச் செய்த ஆசங்கைக்கு விடைகூறுதும். சிவநாமமானது மிகவும் சுத்தமாயும், மாயாகாரியம் இல்லாததாயும் இருப்பினும், சிவபெருமானுடைய ஆணையினால் அனைவருக்கும் பொதுவாக ஆய்விட்டது. அதுபோல் வேதசம்பந்தமாயும், சீவரத்தினமாயுமுள்ள பஞ்சாக்கரமும் அனைவருக்கும் பொதுவாகும். இவ்வாறே வாயுசம்ஹிதையிலும் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:-

வெல்ல முடியாததாயும், கடக்கமுடியாததாயும், பாவங்களென்னும் இருட்கூட்டங்களால் மறைக்கப்பட்டதாயுமுள்ள கலியுகத்தில், ஜனங்கள் தருமத்தில் விருப்பமற்வர்களாவர். வருணாச்சிரமத்தின் ஆசாரமானது கெடும். கலப்புக்குற்றம் நேரும்.

அனைவருக்கும் தத்தம் அதிகாரத்தில் சந்தேகமும், நிச்சயமான பொருளில் விபரீதமும் குரு உபதேசமின்மையும், குருசீடர்களின் ஆசாரத்தில் பிறட்சியும் உண்டாகும். இவ்வாறிருக்கும் பொழுது தமது பக்தர்கள் எவ்வித உபாயத்தால் பந்தத்தில் நின்றும் விடுக்கப்படுவர் என்று சிவபெருமானை நோக்கி அம்பிகை கேட்டனள். அப்பொழுது சிவபெருமான் மிக மேலானதாயும், விரும்பத்தக்கதாயும், ஞான சாதனமாயும் இருக்கின்ற என்னுடைய பஞ்சாக்கரத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு எவர் பக்தியுடன் சிந்தனை செய்கின்றனரோ, அவர் கலியினாலுண்டான பந்தத்தில் நின்றும் விடுபடுகின்றனர். எவர் மனம் வாக்குக் காயங்களால் உண்டான நினைப்பதற்குக் கூட உரிமையில்லாத குற்றங்களால் பீடிக்கப்பட்டவராயும், செய்த நன்றியை மறப்பவராயும், கிருபையில்லாதவராயும், துஷ்டராயும், பாசத்தால் கட்டுண்டவராயும், மாறுபட்ட மனதை உடையவராயும் இருந்தபோதிலும், அவர் என்னை வணங்கிப் பஞ்சாக்கரத்தைச் சிந்தனை செய்வாரேயாயின் அவருக்கு சம்சாரத்தால் உண்டாம் அச்சம் கிடையாது. ஓ தேவி! இவ்வாறே நான் அடிக்கடி மண்ணுலகில் வைத்துக் கூறியிருக்கின்றேன். பதிதனும் கூட என்னைச்சார்ந்த இந்தப் பஞ்சாக்கரத்தைச் சிந்தனை செய்தால் பதிதத் தன்மையினின்றும் விடுபடுவான் என்று அருளிச் செய்தனர்.

மீண்டும், கன்மத்திற்கு உரியவனான பதிதத்தன்மையில்லாதவன் கன்மத்தைச் செய்தால் அந்தக் கன்மம் அவனுக்குப் பலனைக் கொடுக்கும். கன்மத்தைச் செய்தற்கு உரிமையற்றவன் அதனைச் செய்தால் நரகத்தையன்றோ அவன் அடைவான். இவ்வாறிருக்கப்பதிதன் இந்தப் பஞ்சாக்கர சிந்தனையால் எவ்வாறு பதிதத் தன்மையில் நின்றும் விடுபடுவான் என்று அம்பிகை கேட்டனள். பின்னர், சுந்தரி! நீ கூறியது உண்மை. இது இரகசியமான விஷயம்; இதனை ஒருவருக்கும் சொல்லுதல் கூடாதென்று நீண்டநாளாக மறைத்து வைத்திருந்தேன். ஆயினும், இப்பொழுது உனக்குச் சொல்லுகின்றேன்; கேட்பாயாக. அறியாமையால் தன்னுடைய கன்மத்தை விட்டவன் பஞ்சாக்கர செபம் அல்லாத ஏனைய கன்மங்களைச் செய்யின் நரகத்தை அடைவான். சந்தேகமில்லை என்று சிவபெருமான் அருளிச் செய்தனர்.(இதனால் பஞ்சாக்கர செபத்திற்குக் கன்மத்தை விட்டவனும் அதிகாரியாவன் என்பது அறிந்து கொள்க)

இவ்வாறு சிவனுடைய ஆணையினால் அனைவருக்கும் பொதுவாக பஞ்சாக்கரத்தைச் செய்தமையினாலேயே, வாயு ஸம்ஹிதையில், சிறிது அக்கரங்களை உடையதாயும், பொருள்கள் நிறைந்ததாயும், வேதத்தின் சாரமாயும், முத்தியைக் கொடுப்பதாயும், சந்தேகமற்றதாயுமுள்ள இச்தச் சிவசொரூபமான வாக்கியம், சிவனுடைய ஆணையினால் அனைவருக்கும் சித்தமாயுள்ள தென்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் சிவநாமத்தின் மகிமை கூறமுடியாத பெருமையினை உடையதாயிருப்பது கொண்டு அந்தச் சிவநாமத்தைப் பதிதன் சண்டாளன் முதலிய அனைவரும் கைக்கொள்ளலாம் என்பது பொருத்தமாகும். இவ்விடத்துச் சிவநாமத்தைப் பற்றி விரிவாகக் கூறியதை இம்மட்டில் நிறுத்தி எடுத்துக்கொண்ட விஷயத்தை அநுசரிப்பாம்.

சதாசிவருடைய நிர்மால்யத்தை மனிதர் உண்ணுதல் கூடாதென்று ஒருக்கத்தாரால் முன்னர்க் கூறப்பட்டதே? அதற்குப் பொருள் என்னையெனின், சண்டேசுவரருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிர்மால்யத்தை உண்ணுதல் கூடாதென்பதுதான் அதன் பொருளாகும்.

காமிகாகமத்தில் “நிர்மால்யத்தை எடுத்துச் சண்டேசுவரரின் பொருட்டு நிவேதனம் செய்தல் வேண்டும். மலமின்மையை அடைந்திருக்கும் காரணத்தால் நிர்மால்யம் எனப்பட்டது. சண்டேசுவரருக்கு நிவேதனம் செய்து ஆசமனம் கொடுத்த பின்னர் அந்த நிர்மால்யத்தை மிகவும் ஆழமுள்ள ஜலத்திலாவது, அக்கினியிலாவது, பசுவினிடத்திலாவது செலவிடல் வேண்டும்” என்று கூறப்பட்டிருத்தலால், சண்டேசுவரருக்குச் சமர்ப்பிக்கப்பட்டதை உண்ணுதல் ஆகாதென்பது பெறப்படுகின்றது. இன்னும் அவ்விடத்திலேயே சண்டேசுவரனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்னத்தை உண்டதனால் உண்டாம் பாவம் மிகவும் கடக்கமுடியாதது. எவ்வித பாடுபட்டாவது அதனை விலக்குதல் வேண்டும் என்றும், ஈசுவர சொத்துக்களையும் சண்டேசுவரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் பிறர் அனுபவித்தல் கூடாதென்றும் கூறப்பட்டிருக்கின்றன. இதனாலும் சண்டேசுவரருக்குச் சமர்ப்பிக்கப்பட்டதை ஒருவரும் அநுபவித்தல் கூடாதென்றும், ஜலம் முதலிய இடங்களிலேயே செலவிடல் வேண்டுமென்றும் விளங்குகின்றமை காண்க.

இவ்வாறாயின், எல்லாச் சிவலிங்க நிர்மால்யங்களையும் உண்ணுதல் கூடாதென்று கூறியதாக ஆகின்றது. எதனாலெனில், நாவால் இழுத்து உண்ணக் கூடிய லேகியம், உரிஞ்சக் கூடிய சோஷ்யம், அன்னம், பருகக்கூடிய பானம், தாம்பூலம், மாலை, சந்தனம் முதலிய எல்லா நிர்மால்யங்களையும் சிவனுடைய ஆணையினால் உமக்கு ஸமர்ப்பிக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு சண்டேசுவரருக்குச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருத்தலால் என்க. ஆகையால் எல்லாச்சிவ நிர்மால்யங்களையுமே அநுபவித்தல் கூடாதென்று சிலர் கூறுகின்றனர். அது பொருந்தாது. எவ்வாறெனின்,

காமிகாகமத்தில் பரார்த்த பூசாப்பிரகரணத்தில், “ஈசானத்தில் சண்டேசுவரரைச் சந்தனம், புஷ்பம் என்னும் இவற்றால் பூசித்தல் வேண்டும். அவருக்குச் சேகரிக்கப்பட்ட எல்லா நிர்மால்யங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்” என்று ஓர் பக்கத்தைக் கூறிவிட்டு அதன் பின்னர், ‘லிங்கத்தின் சிரசிலிருப்பதைச் சமர்ப்பித்தல் வேண்டும்’ என்றும், ‘பீடத்திலிருப்பதைச் சமர்ப்பித்தல் வேண்டும்’ என்றும், ‘ஈசான திக்கிலுள்ள பீடத்திலுள்ளதைச் சமா¢ப்பித்தல் வேண்டு’மென்றும் கூறப்பட்ட வசனங்களால், சந்தனம் புஷ்பங்களின் ஏகதேசத்தைச் சமாப்பிக்கலாமென்ற ஓர் பக்கம் பெறப்படுகின்றது. இதே நியாயத்தை அநுசரித்து நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தினும் ஏகதேசத்தை மாத்திரம் சமர்ப்பித்தல் வேண்டுமென்ற ஓர் பக்கத்தையும் அங்கீகரிக்கலாமென்பது பெறப்படுகின்றது.

இன்னுமோ£¤டத்திலும், “சிவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாலை, சந்தனம், அன்னம், பானம் முதலியன நிவேதனம் செய்யப்பட்டனவாகும். அவை யெல்லாப் பாவங்களையும் போக்கும். ஆறுவித நிர்மால்யங்களுள் நிவேதனம் ஒன்றுதான் உண்ணக் கூடியது” என்று கூறப்பட்டிருக்கின்றது. இதனால் சண்டேசுவரருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிர்மால்யத்தினும் வேறாக நிவேதனம் செய்யப்பட்டது இருக்கின்றது என்பதும், அது உண்ணக் கூடியதென்பதும் வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கின்றன.

ஆன்மார்த்த பூசையில் இந்தச் சங்கைக்கு இடங்கிடையாது. ஏதனாலெனின், காமிகத்தில் சிவபூசையை நிரூபணம் செய்தபின்னர், இறுதியில் சண்டேசுவர பூசையைச் செய்தல் வேண்டும் என்று ஆரம்பித்துப் பாணலிங்கம், உலோகலிங்கம், சரலிங்கம், சித்தர் பிரதிட்டை செய்த லிங்கம், சுயம்புலிங்கம் ஆகிய இவற்றில் சண்டாதிகாரம் கிடையாதென்று சண்டேசுவரருடைய பூசையை விலக்கியிருத்தலால் என்க.

அஜிதாகமத்திலும் ஆர்மார்த்த பூசாப்பிரகரணத்தில் துவாரபூசை, சண்டேச நிவேதனம், நாமமந்திர ஹவிசு, நித்தியோச்சவம் முதலியன கிடையாவென்று சண்டாதிகாரம் விலக்கப்பட்டிருக்கின்றது.

முன்னர் எடுத்துக் காட்டப்பட்ட காலோத்தராகமத்தை அநுசரித்து ஆன்மார்த்த பூசையில் சண்டேசுவர பூசையைச் செய்யினும் குற்றமில்லை. அம்சுமான் ஆகமத்தில் சண்டேசுவரார்ச்சன விதிபடலத்தில் கேவலம், சகஜம், சுவதந்திரம் என்று மூன்று விதமாகச் சண்டேசுவர பூசையைப் பிரித்து, அவற்றுள் ஆன்மார்த்தமாகச் செய்யப்படுவது கேவலம் எனப்படும்; இப்பூசையில் சண்டருக்காக மண்டலத்தில் சமர்ப்பித்தல் வேண்டும் என்றும், யாமாங்கமாகச் செய்யப்படுவது சகஜம் எனப்படும்; இப்பூசையில் சண்டரின் உருவம் பிரதிட்டை செய்யப்படும் என்றும்; கிராமாங்கமாக இருப்பின் ++சுதந்திரம் எனப்படும் என்றும்; இவ்வாறு சண்டேசுவர பூசையைக் கூற ஆரம்பித்து, ஆத்மார்த்த பூசையின் இறுதியிலுள் சண்டேசுவர பூசையில் அவருடைய மூலமந்திரத்தால் சந்தனம் முதலியவற்றைச் சமர்ப்பித்து அந்த மூலமந்திரத்தினாலேயே நைவேத்தியம், தாம்பூலம் முதலியவற்றையும் சமர்ப்பித்தல் வேண்டுமென்று சந்தனம் புஷ்பம் முதலியவற்றைச் சிவநிர்மால்யத்தின் வேறாகவே பிரித்துக்கூறி, அதன் பின்னர்க் கேவலபூசை இவ்வாறு கூறப்பட்டது; இனிச் சகஜ பூசையைக் கேள் என்று ஆரம்பித்து மண்டலத்திற்குள் அடங்கிய உள்மண்டலத்தில் சண்டேசுவரரைப் பிரதிட்டை செய்து நிர்மால்யத்தினாலேயே அர்ச்சித்தல் வேண்டும் என்னும் வசனத்தால் யாமாங்கமான சண்டேசுவர பூசையிலேயே நிர்மால்யத்தைச் சமர்ப்பித்தல் வேண்டுமெனக் கூறப்பட்டிருக்கின்றது.

(++ சுதந்திரம் - பரிவாரமாயின்றிப் பிரதானமாயிருப்பது.)

சித்தாந்த சாராவளியிலும் சண்டபூசாப் பிரகாணத்தில் கேவலபூசையாயின் விதிப்படி தாம்பூலத்துடன் நைவேத்தியத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும் என்றும், யாமாங்கமாயின் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டதை நிவேதனம் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

(ஆகையால் யாமாங்க சண்டபூசையிலேயே நிர்மால்ய சமர்ப்பணம் விதிக்கப்பட்டதுகொண்டு முன்னெடுத்துக் காட்டப்பட்ட காலோத்தர ஆகமத்தை அநுசரித்து ஆர்மார்த்த பூசையில் சண்டேசுவர பூசை செய்யினும் குற்றமில்லை.)

சதாசிவ நிர்மால்யத்தைச் சண்டேசுவரரின் பொருட்டுச் சமர்ப்பித்தல் வேண்டும் என்ற ஆன்மார்த்த பூசையில் அடங்கியுள்ள சூக்குமாகம வசனத்தை அநுசரித்துச் சண்டேசுவரரின் பொருட்டு நிர்மால்யத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும் என்னும் பக்கத்திலும் குற்றமில்லை. எதனாலெனின், பரார்த்த பூசைக்குக் கூறியவாறு ஈசுவரனுடைய நிர்மால்யத்தின் ஏகதேசத்தை மாத்திரம் சமர்ப்பிப்பதாக நேரிடுகின்றமையால் என்க.

ஸ்மிருதிகளிலும், விஷ்வக்ஸேனரின் பொருட்டு நிவேதிதமான பாகத்தில் நூறில் ஒரு பங்கை நிவேதனம் செய்தல் வேண்டும்; லிங்கத்தில் உள்ள பாதோதகம், பிரசாதம் முதலியவற்றைச் சண்டேசுவரருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும் என்று கூறப்பட்டிருத்தலால் நூறில் ஒரு பங்கு தான் சண்ட பாகம் என்பது நன்கு விளங்குகின்றது.

ஆகவே, சதாசிவ நிர்மால்யத்தை மனிதர் உண்ணுதல் கூடாது என்ற சுப்ரபேதாகம வசனத்திற்கு காமிகாகம வசனத்தை அநுசரித்துச் சண்டருக்குச் சமர்ப்பித்த சதாசிவ நிர்மால்யத்தைத்தான் மனிதர் உண்ணுதல் கூடாதென்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.

அல்லது சிவபெருமானிடத்தில் அடிமை என்னும் பாவனையற்ற மிருகத்திற்குச் சமானரான மனிதர் உண்ணுதல் கூடாதென்று அந்த வாக்கியத்திற்குப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

ஆகையால் பரார்த்த பூசையிலாவது, ஆன்மார்த்த பூசையிலாவது பிரார்த்தனையால் பூரணமான மகாநைவேத்தியத்தை நிவேதனம் செய்தபின்னர் அந்த நைவேத்தியம் அனைத்தையும், உண்ணுதற்கு உரியவர்களான தேவாலயத்தில் இருக்கின்ற பரிசாரகர்களும், பூசகருடைய கிருகத்தில் வசிக்கின்ற சிவதீக்ஷைபெற்ற ஏனையபக்தர்களும் உண்ணுதல் கூடும்; இவர்கட்குச் செலவிட்டவை போக எஞ்சியவற்றைச் சிவதீக்ஷை இல்லாத ஏனைய மனிதர்களிடத்துச் செலவிடுதல் கூடாது; பசு, யானை, ஆழமுள்ள நீர், அக்கினி, பூமி ஆகிய இவற்றில் செலவிடுதல் வேண்டும்.

எதுபோலுமெனின், அசுவமேதம் முதலிய யாகங்களில் எஞ்சிய அவிசுகளை ருத்விக்குகள் உண்ணுவதற்கு முடியவில்லையாயின், அதனை உபநயணம் செய்துகொள்ளுவதற்கு உரிமையில்லாத ஏனைய வருணத்தாரிடம் செலவு செய்யாது, உபநயனம் செய்யப்பட்ட பிராமணர் முதலியவர்களிடத்திலாவது, அக்கினியிலாவது செலவிடுதல் வேண்டும் என்றும், பிராமணர்களுடைய உச்சிட்டத்தை உண்ணுதற்குரிய தாழ்ந்த வருணத்தார் கிடையாதுவிடத்து அதனை நீரில் செலவிடுதல் வேண்டும்; அல்லது பூமியிலாவது புதைத்தல் வேண்டும் என்றும் கூறப்படுமாறு போலும் என்க.

இக்கருத்துப் பற்றிய அரதத்தாசாரியர் வாக்கியம் வருமாறு:- யாதொரு காரணத்தால் தேவரீர் தேவர்களுக்குள் பிராமணராக இருக்கின்றீரோ, அந்தக் காரணத்தால் உமக்கு நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை உண்ணுதல் கூடாதென்று கூறுகின்றனர். ஓ ஈசுவரரே! பிராமணருடைய உச்சிட்டம் விசேடமாயினும் பூமியில் புதைத்தல் வேண்டும்; அல்லது நீரிலாவது செலவிடுதல் வேண்டும் என்பதாம். இந்த வாக்கியத்திற்கு உச்சிட்டத்தை உண்ணுதற்குரிய அடிமைகள் இருக்குமிடத்தும் அதனைப் பூமியில் புதைத்தல் வேண்டும்; அல்லது நீரிலாவது அமிழ்த்துதல் வேண்டுமென்று பொருள் கொள்ளுதல் கூடாது. எதனாலெனின், உச்சிட்டமான அன்னம், ஜீரணமான ஆடை என்னும் இவற்றை அடிமைகளுக்குக் கொடுத்தல் வேண்டுமென்று விதியிருக்கின்றமையாலும், ஜீரணமான பாதர¬க்ஷ, குடை, ஆடை ஆகிய இவற்றை உபயோகித்தலும், உச்சிட்டத்தை உண்ணுதலும், ஏவல் செய்தலுமாகிய இவை சுகரூஷை செய்கின்றவனுடைய தர்மமாகக் கூறப்பட்டிருக்கின்றமையாலுமென்க. ஆகையால் அடிமையில்லாத பொழுதுதான் பூமியிலாவது, நீரிலாவது செலவிடல் வேண்டும் னெ¢று பொருள் கொள்ளுதல் பொருந்துமாறு காண்க.

சிவநிர்மால்யத்தை உண்ணுதற்கு உரியவனாயும், சிவனிடத்தில் தான் அடிமை என்னும் பாவனையையுடையவனாயும் இருப்பவன் கிடையாதவிடத்து, பிராகிருதருக்குக் கொடுத்தல் கூடாது; புதைத்தல் வேண்டும் என்று பொருள்கொள்ளும்படியாகக் கூறப்பட்ட அரதத்தாசாரியருடைய இந்த வாக்கியத்தால் முன்னர், அடிமைப்பாவனை யில்லாதவருக்குச் சிவநிர்மால்யம் பெருமை உடையதென்று கொண்டுதான் விலக்கப்பட்டதோ, அல்லது சிறுமையுடையதென்றுதான் விலக்கப்பட்டதோ என்று கூறிய வாக்கியத்திற்குப் பெருமையுடையதெனக் கொண்டே விலக்கப்பட்டதென்றும், சிறுமையுடையதெனக் கொண்டு விலக்கப்படவில்லை என்றும் பொருள் கொள்ளல் வேண்டுமெனப் புலப்படுகின்றது. அவ்வாறாயின் தனக்கு ஒன்றும் தெரியாதெனச் சமமாகக் கூறியதன் கருத்தென்னையெனின், சிவபெருமானுக்குப் பெருமை கூறுதற்கு முற்பட்டிருக்குமிடத்தில் நிர்மால்யத்திற்கும் பெருமை சொல்லல் வேண்டும் என்பது மிகைபடக் கூறுதலாகும் எனக் கருதி அவ்விடத்துப் பொதுவாக கூறினாரென்க. (சிவனுக்குப் பெருமை கூறவே சிவநிர்மால்யத்திற்குப் பெருமை தானாகவே சித்திக்கும் என்பது கருத்து.

தனது இஷ்டலிங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டதைச் சகோதரர் புத்திரர் முதலியோருக்குக் கொடுத்தல் வேண்டுமெனக் கூறியதன் கருத்தென்னையெனின், அக்கினிகாரிய ரூபமாகப் போசனம் செய்யும் சிவார்ச்சகர், அதனாலேயே தனது போசனம் பூரணமாய் விட்டமையால், அவர் எல்லாவற்றையும் உண்ணுதற்கு முடியாதென்னும் கருத்துப் பற்றியென்க. தீக்ஷையில்லாதவனுக்கு நிர்மால்யத்தைக் கொடுத்தல் கூடாதென்று விலக்கப்பட்டிருக்கின்றமையால், யாகம் முதலியவற்றில் எஞ்சிய அவிசை வீணாக்காதவாறுபோல், சிவநிர்மால்லத்திற்கும் வீணாதல் என்னும் தோஷம் வராதிருத்தற் பொருட்டு, அந்த நிர்மால்யத்தையும் (அர்ச்சகர்) உண்ணவே வேண்டும். தான் உண்டது போக எஞ்சியவற்றை எவருக்குக் கொடுத்தல் வேண்டும் என்னும் ஆசங்கைக்கு விடையாக அக்கினி காரியம் செய்தற்கு அதிகாரமில்லாத பெண்கள், குழந்தைகளாகிய இவர்களுக்குக் கொடுத்தல் வேண்டும் என்னும் கருத்துக்கொண்டு சகோதரர்கள், புத்திரர் ஆகிய இவர்களுக்குக் கொடுத்தல் வேண்டும் என்று கூறப்பட்டதாக அறிந்துகொள்க.

நிர்மால்யத்தைத் தாண்டினால் அகோரமந்திரத்தைப் பதினாயிரம் முறை பிராயச்சித்தமாகச் செபித்தல் வேண்டும்; தாண்டினதற்குக் கூறப்பட்ட பிராயச்சித்தம் தொடுதற்கும் உண்டு. அவ்வாறே விற்றலும் உண்ணுதலும் தாண்டினதை ஒக்கும். இவ்வாறு காமிகாகமத்திற் கூறப்பட்ட வசனத்தால் தீக்ஷைபெற்றவர் நிர்மால்யத்தைத் தாண்டுதலும் தொடுதலும் கூடாதென்றும், செய்யின் பிராயச்சித்தம் செய்தல் வேண்டும் என்றும் கொள்ளல் வேண்டும். நிர்மால்யத்தைத் தொட்டவனையும், அதனை உண்டவனையும் தொட்டால் முன்னர்க் கூறப்பட்ட பிராயச்சித்தத்தில் நான்கில் ஒரு பங்கு குறைவாகப் பிராயச்சித்தம் செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்தப் பிராயச்சித்த வசனங்களிலுள்ள நிர்மால்ய சப்தத்திற்கு வெளியே போடப்பட்ட நிர்மால்யத்தைப் பொருளாகக் கொள்ளல் வேண்டும். எதனாலெனில், இந்தப் பிராயச்சித்தப் பிரகரணத்தில் தேவஸ்வம், தேவதாத்திரவியம் என்பது முதலாக நிர்மால்யத்தை ஆறுவகையாகத் தொகை செய்து, வெளியே போடப்பட்ட நிர்மால்யத்திற்கு நிர்மால்யம் என்ற பெயரை விசேஷித்துக் கூறுகின்றார் ஆகையால் என்க.

அன்றியும், ஈசுவரனிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாயினும் பீடத்திலிப்பது நிர்மால்யம் ஆகாதென்னும் வசனத்தை அநுசரித்து ஈசுவரனிடத்தில் சமர்ப்பித்த பின்னரும் வெளியில் போடும் வரை தொடுதற்பிராயச்சித்தம் உண்டாகாதிருத்தற்பொருட்டு பிராயச்சித்தப் பிரகரணத்தில் தேவஸ்வம், தேவதாத்திரவியம் என்னும் பதங்களால் அவை நிர்மால்யம் ஆகாவெனக் கூறியதும் வெளியில் போடப்பட்டது தான் நிர்மால்யம் ஆகும் என்பதை விளக்கும்.

இவ்வாறன்றி, பிராயச்சித்தப் பிரகரணத்தில் அடங்கியுள்ள நிர்மால்ய சப்தங்களுக்கு தேவஸ்வம், தேவதாத்திரவியம் என்னும் இவற்றையும் பொருளாகக் கொள்ளின் அந்தச் சுலோகத்தில் வெளியிற் போடப்படுவதறகு நிர்மால்யம் என்னும் பெயரை விசேடித்துக் கூறியது வீணாகும்.

அன்றியும் எல்லாவற்றையும் நிர்மால்யமாகக் கொள்ளின், ஈசுவரனிடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் வெளியிற் போடும் வரை நிர்மால்யம் ஆகாதென்பதை, பீடத்திலிருப்பது நிர்மால்யம் ஆகாதென்னும் வசனத்தால் கூறியது பொருத்தமாகாது.

ஈசுவரனுடைய பூமி முதலியவற்றைத் தொடினும், தொட்டவனைத் தொடினும் தோஷமில்லையாகையால், தொடுதலுக்குக் கூறப்பட்ட பிராயச்சித்தப் பிரகரணத்தில் அடங்கியுள்ள நிர்மால்ய சப்தங்களுக்கு வெளியிற்போடப்பட்ட நிர்மால்யமென்றே பொருள் கொள்ளுதல் இன்றியமையாதது.

வெளியிற்போடப்படுபவை எவை எனில், மகாநைவேத்தியங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கும் பரிசாரகர்களுக்கும் கொடுத்த பின்னர், எஞ்சியவற்றைப் பசு, யானை, முதலியவற்றிற்காக வெளியிற்போடப்படுவனவும், நீர் முதலியவற்றில் எறியப்படுவனவும், பஹிர்ப்பலிக்காகக் கொடுக்கப்படுவனவும் ஆகிய இவையாம். இவை அனைத்தும் தூபத்தைச் சமா¢ப்பித்த பின்னர் அதனைத் தொடுதல் கூடாதவாறுபோல் தொடுதற்குத் தகுதியற்றவையாகும்.

இவ்வாறு நிர்மால்ய போசனம் முதலியவற்றிற்குண்டான பிராயச்சித்த வசனங்கள் வெளியில் போடப்பட்ட நிர்மால்யத்தை மாத்திரம் குறிக்குமென்று கூறின், ஈசுவரனுடைய நில முதலிய சொத்துக்களையும், ஆபரணங்களையும், நைவேத்தியங்களையும், சண்டருக்குச் சமர்ப்பிக்கப்பட்டவைகளையும் அனுபவித்தால் தோஷமும் அதற்குப் பிராயசித்தமும் கிடையாதென்று கொள்ளலாமோவெனின், அவ்வாறு கொள்ளுதல் கூடாது. அந்தப் பிராயசித்தப் பிரகரணத்திலேயே நிர்மால்யத்தை உண்ணுதல், வீணாக்குதல், பிறருக்குக் கொடுத்தல், விற்றல், தாண்டுதல், தொடுதல் என்னும் இவற்றிற்கும், நிர்மால்யத்தை உண்டவனைத் தொடுதல், தொட்டவனைத் தொடுதல், வீணாகச் செய்தவனைத் தொடுதல், தாண்டினவனைத் தொடுதல் என்னும் இவற்றிற்கும் பிராயச்சித்தம் கூறிய பின்னர், தேவாலயத்தில் உண்டான சுவர்ணம் முதலிய பொருள்களையும், ஈசுவரனுடைய கிராமம் முதலியவற்றில் உண்டான நெல் முதலியவற்றையும், யாதானும் ஒரு காரணத்தால் எடு உண்ணின், அவன் அறியாமையினையுடைய குருடனாய்ப் பாவங்களுக் குட்படுகிறான் என்று கூறப்பட்ட வசனத்தால் தேவசொத்து, தேவதாத்திரவியம், நைவேத்தியம், சண்டதிரவியம் என்னும் இவற்றை அநுபவித்தற்கும் கொடுத்தற்கும் திருட்டுப் பிராயச்சித்தத்தைத் தனிமையாகக் கூறியிருக்கின்றமையால் இவற்றை அநுபவித்தல் கூடாதென்றும், அநுபவித்தால் பிராயச்சித்தம் செய்தல் வேண்டு மென்றும் அறிந்து கொள்க.

சூக்குமாகமத்தில் நிர்மால்யம், நைவேத்தியம் என்னும் இவற்றைத் தாண்டினாலும் பிறருக்குக் கொடுத்தாலும் தோஷம் நேரிடும் என்றும், அதற்குப் பிராயச்சித்தமாக சாந்திராயண விரதத்தை அனுட்டித்தல் வேண்டும் என்றும், ஆகையால் தோஷம் நேரிடாதவண்ணம் பசு, யானை முதலியவற்றிகுக் கொடுத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விடத்து நிர்மால்ய சப்தத்தினும் வேறாக நைவேத்திய சப்தத்தைக் கொண்டிருக்கின்றபடியாலும், பிராயச்சித்தப் பிரகரணத்தில் அடங்கியுள்ள நிர்மால்ய சப்தங்கள் வெளியிற்போடப்பட்ட நிர்மால்யத்தை மாத்திரம் குறிக்கின்றன வென்பது நன்குவிளங்குகின்றது இவ்வாறன்றிப் பிராயச்சித்தப் பிரகரணத்தில் அடங்கியுள்ள நிர்மால்ய சப்தங்களுக்கு ஆறுவித நிர்மால்யங்களையும் பொருளாகக் கொள்ளின் நேவேத்தியமும் அவ்வாறனுள் அடங்கியிருக்கின்றமையால் நைவேத்திய பதத்தைச் சூக்குமாகமத்திற் கூறியது வீணாகும்.

காமிகாகமத்தில் ஈசுவரனுக்கு அபிஷேகம் செய்தலால் உண்டாம் ஜலம், பால் முதலியவற்றால் அர்ச்சகருடைய தேகம் நனைக்கப்படின் நாபிக்கு மேலாயின் ஸ்நானத்தையும், நாபிக்குக் கீழாயின் கழுவுதலையும் செய்தல் வேண்டும்; சரலிங்கத்திலும் இதே நியாயத்தை அநுசரித்தல் வேண்டுமென்றும் கூறப்பட்ட வசனங்களால், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தலால் உண்டாம் நீர்த்துளிகள் அசுத்தமெனக் கொள்ளலாமோவெனின், அவ்வாறு கொள்ளுதல் கூடாது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நீரின் மகிமை முன்னரே கூறப்பட்டிருக்கின்றமையால் என்க. ஆயின் ஸ்நானம் செய்தல் வேண்டும், கழுவுதல் வேண்டுமென்று கூறுவானேன் எனின், குருவுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்துவைக்கும் சீடன் தன்மேல் படிந்திருக்கும் எண்ணெய்த் துளியுடன் பின்னர்ச் சந்தனம் முதலியவற்றை அணிதலாகிய உபசாரங்களைச் செய்யாது எண்ணெய்த் துளிகள் அனைத்தையும் துடைத்துக்கொண்டே செய்யுமாறுபோல சிவபெருமானுக்குச் செய்யும் அபிஷேக உபசாரத்தில் நேர்ந்தனவாகிய தன்மேல் படிந்திருக்கும் நீர்த்துளிகளைச் சுத்தம் செய்து கொண்டு சந்தனம் முதலிய உபசாரங்களைச் செய்தல் வேண்டும் என்னும் கருத்துப்பற்றி அவ்வாறு கூறப்பட்டதென்க. இது போலவே ஏனைய வசனங்களிலுண்டாம் பூர்வபக்கங்கட்கும் பொருள் நிர்ணயம் செய்து கொள்ளுதல் வேண்டும்.

ஆகவே, அக்கினி காரியம் செய்வதென்னும் அறிவோடு உண்பவர்கள் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த பின்னர் எஞ்சியவற்றைப் புசித்தல் வேண்டும். அடிமை என்னும் பாவனையுடன் உண்பவர்கள் நிவேதனம் செய்யப்பட்டதைத்தான் உண்ணுதல் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

வாயுஸம்ஹிதையிலும் “பின்னர் ஈசுவரனிடத்து நிவேதனம் செய்யப்பட்ட சுத்தமான அன்னத்தையாவது எஞ்சியவற்றையாவது ஆன்ம சுத்தியின் பொருட்டுச் சிரத்தையுடன் உண்ணுதல் வேண்டும். ஆசையினால் சண்டருக்குச் சமர்ப்பிக்கப்பட்டதை ஒரு காலத்தும் உண்ணுதல் கூடாது. ஏனைய சந்தனம் முதலியவற்றினும் இதே நியாயத்தைக் கொள்ளுதல் வேண்டும். ஆயின் அறிவுடையவன் உண்ணும் பொழுது சிவமாயிருக்கின்றேன் என்னும் பாவனையைக் கொள்ளுதல் கூடாது” என்று கூறப்பட்டிருக்கின்றது.

ஆகையால் நிவேதனம் செய்யப்பட்டதை உண்பவன், தன்னுடை இருதய கமலத்தினுள்ளிருக்கும் அக்கினியின் நடுவில் சிவபெருமானைப் பாவித்துக்கொண்டு, தான் அக்கினி காரியஞ் செய்வதற்குக் கர்த்தாவாக யிருப்பவன் செய்யக்கூடிய சிவமாயிருக்கிறேன் என்னும் பாவனையைச் செய்தல் கூடாது; சிவபெருமானுக்கு அடிமை யென்னும் பாவனையையே செய்தல் வேண்டும். இவ்வாறே நிவேதிதத்தை உண்ணுகிறவர் நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தினாலேயே பிராணாகுதிகளையும் செய்தல் வேண்டும். “எவனொருவன் சிவனுடைய பிரசாதத்தி பிராணாக்கினி காரியம் செய்கின்றானோ அவன் ஒவ்வொரு அன்னந்தோறும் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவான்” என்னும் சிவபுராணமே இதற்குப் பிரமாணமாகும்.

நிர்மால்ய போஜன ஆராய்ச்சி முடிந்தது.
- - -

 

போஜன விதி

ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய அவரவர் சூத்திரத்திற் கூறப்பட்டவாறு ஸ்வாஹாந்தமான மந்திரங்களால் ஓமஞ் செய்து அக்கினி முதலாயினாரை அனுப்புதல் வேண்டும். இவ்வாறு அக்கினி காரியத்தைச் செய்து கை, கால்களைக் கழுவி ஆசமனம் செய்து ஈன சாதியர்களான தீக்ஷை பெறாதவர்களைத் தம்முடைய பந்திக்கு வரவொட்டாது விலக்கிக் கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடின சிவபக்தர்களுடன் போசனம் செய்யும் இடத்தை அடைந்து பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்து, சதுரச்ரமாயும், ஒரு கை முழ அளவுள்ளதாயும், ஆசாரியர், +புத்திரர், *சாதகர், சமயி ஆகிய இவர்களுக்கு முறையே நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆகிய எண்களையுடைய ரேகையினால் அடையாளம் செய்யப்பட்டதாயும் நான்கு பக்கத்திலும் விபூதியுடன் கூடினதாயுமுள்ள மண்டலத்தினால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சுவர்ணம் வெள்ளி செம்பு என்னும் உலோகங்களுள் யாதானும் ஒன்றாலாவது, அல்லது வெங்கலத்தாலாவது செய்யப்பட்டதாயும், ஏழுமுறை பஸ்மத்தால் சுத்தம் செய்யப்பட்டதாயும், அகோரமந்திரத்தால் அபிமந்திரணம் செய்யப்பட்டதாயுமுள்ள பாத்திரத்தை வைத்தல் வேண்டும்; குறித்த சுவர்ணம் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரம் கிடையாவிடில் வாழை, புரசு, தாமரை, மா, இலுப்பை என்னும் இவற்றின் இலைகளையாவது பாத்திரமாகச் செய்துகொள்ளல் வேண்டும். பின்னர் அந்தப் பாத்திரத்தில் நெய்யைத் தௌ¤த்து, கறி, அன்னம், பருப்பு என்னும் இவற்றைப்படைத்து, அன்னத்தில் இருமுறை நெய்யைப் பெய்து அஸ்திரமந்திரத்தால் புரோக்ஷித்து மூன்று அக்கரங்களையுடைய மிருத்யுஞ்சய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு “மிருத்யுஞ்ஜ்யாய வெளஷட்” என்னும் மந்திரத்தால் ஏழு முறை அபிமந்திரணம் செய்து வருணத்திற்குத் தக்கவாறு நீரால் சுற்றுதலாகிய பரிஷேசனம் முதலியவற்றைச் செய்து, அரைக்கவள அளவுள்ள அன்னத்தை, நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்களின் பொருட்டு “நாககூர்ம கிரிகர தேவதத்த தனஞ்சயேப்ய:, உபப்ராண வாயுப்யஸ் ஸ்வாஹா” என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய வலது பக்கத்தில் கோமயத்தால் பூசப்பட்ட மண்டலத்தில் கொடுத்தல் வேண்டும். பின்னர் வலது கைக்கட்டைவிரலால் ஜலத்தை வார்த்து நாகர் முதலாயினோர்க்குச் சுளுகோதகம் கொடுத்து, உழுந்து முழுகுவதான அளவுள்ள எஞ்சிய ஜலத்தை அமிருத மந்திரத்தால் உட்கொண்டு ஐந்து பிராணாகுதிகளையும் செய்தல் வேண்டும், அவ்வாறு செய்யப்பட்ட பிராணாகுதிகளால் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்னும் இவர்களும், இவர்களில் ஆவாகனம் செய்யப்பட்ட ஆன்மா, பூதங்கள், பாதாளத்தில் வசிப்பவர்கள், பிதுருக்கள், தேவர்கள் ஆகிய இவர்களும் திருப்தி அடைந்தவர்களாகவும் பாவித்தல் வேண்டும்.

( + புத்திரர் - விசேட தீக்ஷை பெற்றவர். * சாதகர் - நிருவாண தீக்ஷைபெற்றவர்.)

பின்னர் உண்டது போக எஞ்சிய உச்சிஷ்டான்னத்தை எடுத்து நரகத்தில் வசிப்பவரின் பொருட்டு “நரகவாஸிப்யஸ் ஸ்வாஹா” என்று சொல்லிக்கொண்டு பூமியிற்கொடுத்து உத்தரா போசனம் செய்து, அதன்பின்னர் ஆபோசனத்தில் எஞ்சிய ஜலத்தைக் கட்டைவிரலால் வார்த்து கை கழுவுதல் முதல் சுத்தாசமனம் ஈறாகவுள்ள கருமங்களனைத்தையும் செய்து உண்டதாலுண்டாம் தோஷம் நீங்கும்பொருட்டு வலதுகைக் கட்டைவிரல் ஜலத்தினால் வலது கால்க் கட்டைவிரல் நுனியிலிருக்கும் காலாக்னிருத்திரரை நனைத்தல் வேண்டும்.

நிவேதனம் செய்யப்படாத அன்னத்தை உண்பவர்களுக்கு உண்ணுஞ் சமயத்தில் செய்யவேண்டிய கிரியை அனைத்தும் முன்னரே சுப்ரபேதாகம வசனத்தை எடுத்துக்காட்டிக் கூறப்பட்டிருக்கின்றது.

நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை உண்பவர்களும், நிவேதனம் செய்யப்படாத அன்னத்தை உண்பவர்களும், உண்ணும் காலம் அல்லாத ஏனையகாலங்களில், உண்ணத்தக்க ஒளணதம், தாம்பூலம், பானீயம் முதலியவற்றையும், அணியத்தக்க சந்தனம் புஷ்பம் முதலியவற்றையும், இவையல்லாத ஏனையவற்றையும் மனத்தாலாவது சிவபெருமானுக்குச் சமர்ப்பித்த பின்னரே அனுபவித்தல் வேண்டும். இதற்குப் பிரமாணமாகக் காமிகாகமத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் வருமாறு:- “பத்திரம், புஷ்பம், பலம், ஜலம், அன்ம், பானம், ஒளஷதம் என்னும் இவற்றையும், ஏனையவற்றையும் பகவானுக்கு நிவேதனம் செய்யாது புசித்தல் கூடாது” என்பதாம். இக்கருத்துப் பற்றிக் கூறப்பட்ட வாதுளாகம வசனம் வருமாறு:- “தன்னுடைய அநுபவத்தின் பொருட்டு எந்த எந்தப் பொருள்கள் தனக்கு முன்னர் வைக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தையும் ஈசுவரருக்குச் சமர்ப்பித்தபின்னரே தான் அனுபவித்தல் வேண்டும்” என்பதாம்.

“அன்னம் முதலியன, ஒளஷதம், ஜலம், பத்திரம், புஷ்பம், பலம் முதலிய அநுபவிக்கக் கூடிய பொருள்கள் அனைத்தையும் புத்திமானாகயிருப்பவன் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து அதன் பின்னர் அனுபவித்தல் வேண்டும்” என்னும் வசனத்தால் ஒளஷதம் முதலியவற்றையும் நிவேதனம் செய்த பின்னரே அநுபவித்தல் வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கவும், அவற்றை மனத்தாலாவது ஈசுவரார்ப்பணம் செய்து அனுபவித்தல் வேண்டும் என்பது எவ்வாறு பொருந்தும் எனின், யாதானும் ஒரு காரியத்தின் பொருட்டு நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை உண்பவன், உண்ணும் நடுவில், உண்ணுதற்குரிய ஒளஷதம் முதலியவற்றைக் கொள்ளும்படியாக நேர்ந்தால் அப்பொழுது ஈசுவரனுக்கு மனத்தால் அர்ப்பணம் செய்த பின்னர் உண்ணுதல் வேண்டுமென்பது பொருளாதலின் பொருந்தும் என்க. போசனம் செய்யும் காலம் அல்லாத ஏனைய காலங்களில் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டவற்றையே சிவபக்தர் புசித்தல் வேண்டும்.

அன்றியும், சிவபக்தர்கள் யாதானும் ஓர் பலனைக் கருதி இலௌகிகமாகவாவது, வைதிகமாகவாவது உள்ளயாதானும் ஒரு கிரியையைச் செய்யின், அந்தக் கிரியை அனைத்தும் சிவாராதன ரூபம் என்னும் பாவனையுடன் செய்யப்படல் வேண்டும். அந்தக் கிரியைகளால் உண்டாம் சுகத்தையும் சிவனே அநுபவிக்கிறார் என்று தியானித்துக் கொண்டு சிவபெருமானிடத்துச் சமா¢ப்பித்து அதன் பின்னர் அவரால் அநுபவிக்கப்பட்ட சுகமே என்னால் அநுபவிக்கப்படுகிறதென்னும் பாவனையுடன் அநுபவித்தல் வேண்டும்.

இவ்வாறே தன்னுடைய முயற்சி இன்றி நேர்ந்த சப்தப் பரிசரூப ரச கந்தங்கனென்னும் விடயங்களையும், ஈசுவரனிடத்துச் சமர்ப்பித்து அவரது உச்சிட்டமென்னும் புத்தியுடன் தன்னுடைய இந்திரியங்களால் அநுபவித்தல் வேண்டும். அந்த அந்த விடய அநுபவங்களால் உண்டாகும் சுகத்தையும் அவருடைய உச்சிட்டம் என்னும் புத்தியுடனேயே அநுபவித்தல் வேண்டும். இதற்குப் பிரமாணமாக வாதுளாகமத்திற் கூறப்பட்ட வாக்கியங்கள் வருமாறு:- “எந்த எந்தக் கிரியைகள் செய்யக்கூடியனவாயும், நிகழக் கூடியனவாயும் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் சிவபெருமானிடத்துச் சமர்ப்பிக்கப்பட்ட புத்தியுடனேயே செய்தல் வேண்டும். இந்திரியங்களால் கொள்ளப்பட்ட எந்த எந்தச் சுகங்களுண்டோ, அவை அனைத்தையும் சிவபெருமானிடத்து அர்ப்பணம் செய்து அவருடைய பிரசாதமாக அதே இந்திரியங்களின் வழியாய் அநுபவித்தல் வேண்டும்” என்பதாம்.

ஆகையால் சிவபத்தர்கள் எக்காலத்தும் சிவனை மறவாது, ஞாபகமாய் இருத்தல் வேண்டும். இதற்குப் பிரமாணமாக பிருகத்காலோத்ர ஆகமத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் வருமாறு:- கூடுதல், பிரிதல், போதல், இருத்தல், தூங்குதல், விழித்தல், உண்ணுதல், புணர்தல் என்னும் இவற்றைச் செய்துகொண்டு எவன் இருக்கின்றானோ, அவன் சாவதானத்துடன் சிவபெருமானிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட மனதை உடையவனாக இருத்தல் வேண்டும். ஏனைய இடங்களில் மனதைச் செலுத்துதல் கூடாது என்பதாம்.

இவ்வாறு கிரியையைச் சமர்ப்பித்து அதனைச் செய்துகொண்டும், விடயங்களைச் சமர்ப்பித்து அதனை அனுபவித்துக்கொண்டும், அந்த அந்த இந்திரியங்களால் உண்டாகும் சுகத்தைச் சமர்ப்பித்து அதனை அனுபவித்துக் கொண்டும் எக்காலத்தும் சாவதானத்துடன் இருக்கும் சிவபக்தருக்கு முற்பிறவியிலுள்ள வாசனை நாசமடையுங் காலத்தில் சிற்சில சமயங்களில் மறதியால் விலக்கப்பட்ட கிரியைகளைச் செய்யவும், விலக்கப்பட்ட விடயங்களை அனுபவிக்கவும், விலக்கப்பட்ட சுகங்களை அனுபவிக்கவும் நேரிடினும், அவரைச் சிறிதேனும் பாவம் அணுகாது. அவர் எல்லாவற்றையும் சிவசமாராதன ரூபமென்று பாவிப்பதால் அவருடைய எல்லாக் கிரியைகளும் சிவபெருமானுடைய பிரீதியின் பொருட்டே ஆகின்றன.

ஆன்மபோகத்திற்காக நிருத்தனம் முதலியவைகளைப் பார்த்தல், உப்பரிகை, உத்தியானவனம், தடாகம் முதலியவற்றில் கீரீடை செய்தல் என்னும் கிரியைகளைச் செய்கின்றவன், அவற்றைச் செய்யும்பொழுது வாக்கு, கை, கால், குதம், உபத்தம் என்னும் கன்மேந்திரியங்களின் தொழில்களால் நேர்ந்தவையாயும், காது, மெய், கண், நாக்கு, மூக்கு என்னும் ஞானேந்திரியங்களால் உண்டான அந்தந்த விடயங்களால் நேர்ந்தவையாயும் உள்ள சுகங்களைச் சிவபெருமானிடத்துச் சமர்ப்பித்தற் பொருட்டு, தன்னைச் சார்ந்த காது முதலிய ஐந்து ஞானேந்தி£¤யங்களிலும், வாக்கு முதலிய ஐந்து கன்மேந்திரியங்களிலும், முறையே தனித்தனி அதிட்டித்திருக்கும் ஈசானம் முதலிய ஐந்து மூர்த்திகளின் காது முதலியவற்றைத் தன்னுடைய காது முதலியவற்றில் ஐக்கியம் அடைந்திருப்பதாக அநுசந்தானம் செய்துகொண்டு, அந்தந்த இந்திரியங்களின் தொழில்களால் உண்டாகக் கூடிய சுகம் முதலியவற்றை, ஈசானம் முதலிய மூர்த்திகளை அதிட்டிக்கும் சிவபெருமானால் அநுபவிக்கப்படுகின்றவையாகப் பாவித்துக்கொண்டு, அந்தச் சுகங்களையே சிவபெருமானுடைய உச்சிட்டமென்னும் புத்தியுடன் தான் அநுபவித்தல் வேண்டும்.

தனது முயற்சியின்றி நேரிட்ட விடயசுகஙகளின் அர்ப்பணத்தை அந்தந்த விடய சுகங்களை அநுபவிக்கும் சமயங்களில் சாவதானத்துடன் செய்வதற்கு முடியவில்லையாயின் காலையிலாவது, சிவபூஜையின் முடிவிலாவது, மூன்று காலங்களிலும் முயற்சியின்றி நேரிட்ட சப்த, பரிச, ரூப, ரச, கந்த ரூபமான விடயங்களின் அநுபவத்தால் உண்டாகும் சுகங்களைச் சிவனுக்கு அர்ப்பணஞ் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு ஒரே காலத்திலேயே அர்ப்பணஞ் செய்யலாம்.

இவ்வாறு செய்யப்படும் விடயார்பணத்தை ஈசுவரனுடைய இருதயம் முதலியவற்றிலாவது, தனது இருதயம் முதலிய தானங்களில் பாவிக்கப்பட்ட சாம்பசிவருடைய செவி முதலியவற்றிலாவது, இருதயம் முதலிய தானங்களில் பாவிக்கப்பட்ட சதாசிவருடைய முறையே ஈசானம் முதலிய முகங்களிலிருக்கும் செவிமுதலியவற்றிலாவது, தன்னுடைய செவி முதலியவற்றில் ஐக்கியத்துடன் கூடிய ஈசானம் முதலியவற்றின் செவி முதலியவற்றிலாவது செய்தல் வேண்டும்.

அர்ப்பணம் செய்யும்பொழுதெல்லாம் நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய சிவமந்திரத்தை உச்சரித்துக்கொண்டே செய்தல் வேண்டும். அந்த மந்திரத்தின் பொருள் வருமாறு:- இது சிவன் பொருட்டு; என்னுடைய தன்று என்பதாம். என்னுடைய தன்று என்னும் இந்தப் பொருளானது சீவனை குறிக்கக் கூடிய மகாரத்தின் ஆறாம் வேற்றுமையால் கிடைக்கின்றது. (மகாரத்திற்கு ‘என்’ என்பது பொருள்; அதில் ஆறாம் வேற்றுமை உருபுவா என்னுடையதென்றாகும். நகாரம் ‘அன்று’ என்பதை உணர்த்தும்) இது பரம இரகசியம்.

_______

 

முடிவுரை
<<>>

இவ்வாறு நாடோறும் பிராதக் காலத்தில் சிவசிந்தனை செய்து, தன்னால் இயன்றவாறு ஸ்நானம், விபூதி, உருத்திராக்கதாரணம், சந்திதேவதைகளை உபாசித்தல் என்னும் இவற்றைச் செய்து கொண்டும், மூன்று காலங்களிலாவது, இரண்டு காலங்களிலாவது, ஒரு காலத்திலாவது ++நாற்பது, அல்லது பதினாறு, பத்து, ஐந்து என்னும் உபசாரங்களாலாவது, அல்லது அஷ்டபுஷ்பங்களாலாவது சிவபெருமானைப் பூசித்துக்கொண்டும், அவகாசமிருந்தால் சிவசாத்திரங்களையும் பாராயணம் செய்துகொண்டும், சிவகதைகளையுங் கேட்டுக்கொண்டும், போஜன காலத்தில் சிவனுடைய அக்கினி காரியம் என்னும் புத்தியால் சிவனுக்கு நிவேதனஞ் செய்த பின்னர், நிவேதனம் செய்யப்படாது எஞ்சிய அன்னத்தையாவது, சிவனுக்கு அடிமை என்னும் புத்தியால் நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தையாவது உட்கொண்டும், ஏனைய தாம்பூலம், பானீயம், சந்தனம், புஷ்பம் முதலிய அநுபவித்தற்குரிய பொருள்களையும் சிவனிடம் சமர்ப்பிக்கப்பட்ட வையாகப் பாவனை செய்து அநுபவித்துக்கொண்டும், எல்லாக் கிரியைகளின் பல ரூபமான சுகங்களையும் சிவனால் அநுபவிக்கப்படுபவையாகப் பாவித்துக்கொண்டும், எல்லாவற்றையும் சிவரராதனம் என்னும் புத்தியுடன் செய்து கொண்டும், தன்னுடைய முயற்சியின்றி நேரிட்ட விடயங்களையும் அந்தந்த விடயங்கள் நேரிடும் சமயங்களிலாவது, ஒரே சமயத்திலாவது சிவனுக்கு அர்ப்பணம் செய்து கொண்டும், எல்லாச் சுகங்களையும் சிவனுடைய உச்சிட்டம் என்னும் புத்தியுடன் அநுபவித்துக் கொண்டும், இலௌதிக காரியங்களை விசாரிக்கும் காலங்களிலும், அளவில்லாத சிவநாமங்களை அநுசந்தானம் செய்தலால் அவற்றைப் பலனுடையனவாகச் செய்து கொண்டும், உள்ளே போக்குவரத்துக்களால் கிரீடை செய்துகொண்டிருக்கிறதாயும், அளவற்ற சோபையை உடையதாயும், அமிர்தசொரூபமாயும், ஆனந்தமயமாயுமிருக்கும் பஞ்சாக்கர தேவைதையை உ£¤ய சமயங்களில் சிந்தித்துக்கொண்டும், எல்லா உபநிடதங்களாலும் தேடப்படுகின்ற மலரடியை உடையவராயும், எல்லாத் தேவர்களுக்கும் சக்கிரவர்த்தியாயும், கரையற்ற கருணைக்கடலாயும், தன்னை அடைந்தவரைக் காப்பவராயும், தனது இருதய கமலம் என்னும் குகையில் உமாதேவியருடன் கிரீடை செய்பவராயும், ஆனந்தக் கூட்டமே வடிவமாக உடையவராயுமுள்ள சிவபெருமானை இடைவிடாது ஞானக்கண்ணால் பார்த்துக்கொண்டும், தமக்கு விருப்பத்தைத் தரும் சுற்றத்தாருடன் சுகமாயிருத்தல் வேண்டும்.

(++ நாற்பது இவையெனத்தொகுத்துக் கூறப்பட்ட இடங்காணப்படாமையால் மேலே கூறப்பட்டவற்றைக் கொண்டு ஒருவாறு தொகுத்துக் காட்டுதும்.

1. ஆசனம், 2. ஆவாகனம், 3. அர்க்கியம், 4. ஆசமனீயம், 5. பாத்தியம், 6. அபிஷேகம், 7. ஆடை, 8. உபவீதம், 9. சந்தனம், 10. புஷ்பம், 11. தூபம், 12. தீபம், 13. நைவேத்தியம், 14. முகவாசம், 15. அலங்காரதீபம், 16. நாகதீபம், 17. சக்கர தீபம், 18. பத்மதீபம், 19. புருஷமிருகதீபம், 20. கஜாரூட தேவேந்திர தீபம், 21 - 29. ஆராத்திரீகம், 30. பஸ்மம், 31. கற்பூர நீராஜனம், 32. கண்ணாடி, 33. குடை, 34. சாமரம், 35. விசிறி, 36. பனையோலை விசிறி, 37. தோத்திரத்துடன் கூடிய பிரதக்ஷிணம், 38. சுளுகோதகம், 39. நமஸ்காரம், 40. விசர்ஜனம்.)

வேலூரை வாஸஸ்தானமாக உடைய சின்னபொம்மராஜாவின் உதாரமான இருதயத்திலும், அவருடைய இல்லத்திலும் நீண்டநாளாக விருத்தியடைந்து கொண்டிருக்கிறதாயும், தேவராலும் புகழத்தக்கதாயும் உள்ள சிவபூஜாவிதியை சிவபெருமானுடைய ஆணையால் இவ்வாறு செய்து முடித்தேன்.

இராஜயோகத்தில் உண்மையான சாமர்த்தியத்தை உடையவரும், தடையறற ஆணைமுதலியவற்றின் வலிமையால் விருத்தி அடைந்த திவ்யதேஜஸை உடையவரும், மிகவும் கம்பீர புருஷருமாகிய ஸ்ரீ சின்னபொம்ம மகாராஜாவானவர் சிவபெருமானை அர்ச்சித்துக் கொண்டு அனைவருக்கும் மேலாக விளங்குகின்றார்.

 

வாழ்த்து

சுரகண்டேச மூர்த்தியானவர் இந்தச் சிவார்ச்சனா சந்திரிகையை ஆகாயத்தில் சந்திரனைப்போல் கற்பகாலம் வரை நின்று நிலவும்படி செய்தல் வேண்டும்.

எவரைப் பற்றுக்கோடாகச் சார்ந்த சந்திரன் நகம் என்னும் வியாசத்தால் அவருடைய மலரடிகளில் பிரகாசிக்கின்றானோ அத்தகைய சுரகண்டேசுவரருடைய மலரடிகளைத் தினந்தோறும் வணங்குகின்றேன்.

சிவார்ச்சனா சந்திரிகை முற்றுப் பெற்றது.
சிவபெருமான்றிருவடி வாழ்க.

* * *

 

Related Content

Atmarpana Stuti

Paramashiva pancharatnastutih-பஞ்ச ரத்னஸ்துதி

श्रीमदप्पयदीक्षितविरचितम् आर्याशतकम् - Srimad Appayya Diksh

ஆத்மார்பண ஸ்துதி - கருத்துரையுடன்

श्रीमदप्पय्यदीक्षितेन्द्र्कृतयः शिवार्चनाचन्द्रिका - Srimad