logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

நிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய "மதுரைக் கோவை"

நிம்பைச் சங்கர நாரணர்
இயற்றிய மதுரைக் கோவை




திருச்சிற்றம்பலம்


சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்
S. வையாபுரிப் பிள்ளை, B.A., B.L., பரிசோதித்தது 
உரிமை செய்யப்பட்டது-1934
விலை அணா 8

சிறப்புப்பாயிரம் 

தேவுக் கரசு திருவால வாய்க்கொரு தீபமென்னுங்
கோவுக் கருந்தமிழ்க் கோவைசெய் தான்கொண் டெழுமொருசொற்
காவிற் படிதடஞ் சூழ்நிம்பை காவலன் கற்றுணர்ந்தோர்
நாவுக் கினியனன் சொற்பாடற் சங்கர நாரணனே.

 


சிவமயம்
மதுரைக்கோவை

 

காப்பு

அடிக்குந் தொடைக்கு மடங்காத கோவை யலங்கலந்தை
முடிக்கும் படிவந்தென் முன்னின்ற வாசங்க முத்தமிழ்நூல்
வடிக்குங் கடவுள் மதுரேசர் கோபுர வாயினின்று
நடிக்குங் கடாசலந் தூக்கிய தாமரை நாண்மலரே.

[1]


வாழ்த்து
மறைவாழி யெங்கள் மதுரைப் பிரானடி வாழிசைவத்
துறைவாழி தானத் தொகையவர் வாழி துழனிவிழா
நறைவாழி யேடெதி ரு[ந்]நதி வாழியந் நாடளிக்கு
மிறைவாழி மூவ ரியல்வாழி வாழி யிருநிலமே.

[2]

குமரன் துணை: ஞானதேசிகன் துணை: வடிவே துணை.

நூல்
1. களவு

I. இயற்கைப் புணர்ச்சி.


காட்சி
கார்பூத்த சிந்துர வார்பிறை சூடுங் கமலம்பண்டு
பார்பூத்த மின்னொன்று பூத்ததுண் டோபணைத் துப்பெருத்து
வார்பூத்த கோல முலையுமை பாகர் மதுரைவையை
நீர்பூப்ப தன்றியுங் கண்டனங் காவி னிலைபெறவே.

[3]


ஐயம்
காழ்பட்ட கண்டர் கடம்பா டவிநின்ற கன்னியிடம்
ஊழ்பட்ட தெண்டிரை யோவரை யோபொன் னுலகுமற்றோ
வீழ்பட்ட தாமரை யோவிவர் தாமிங்கு மேவவங்குப்
பாழ்பட்ட தெவ்விட மவ்விடம் யாதென்று பார்த்திலமே.

[4]


தெளிதல்
ஆளிற் றமியரை யாளால வாய ரணிவரைமான்
றாளிற் புறநின்று தாழுநெஞ் சேகுழை தாவிவடி
வாளிற் சிறந்த விழியுந்தண் டாரு மதிப்பதொன்றோ
தோளிற் கரும்பருந் துங்கரும் பாகத் துணிவித்ததே.

[5]


வியத்தல்
புடைகொண்ட வல்குற் பாப்புஞ்சந் தாடுபொருப்புங்கண்டிங்
கிடைகண் டிலமென் றிரங்குநெஞ் சேவெள் ளெருக்கிதழித்
தொடைகொண்ட செஞ்சடை யார்சொக்கர்தாளைத் தொழுதுகற்பக்
கடைகண் டவனொன்று கண்டல்ல வோவொன்று காண்பதுவே.

[6]


புணர்ச்சி துணிதல்
சுணங்கா ரிளமுலைத் தோகைபங் காகிய சொக்கர்வெற்பி
லிணங்கா திதுநமக் கென்னுநெஞ் சேதிரு வென்பவர் தங்
கணங்காத லிக்குமிக் காரிகை பாலன்பு கந்திருவ
மணங்காண் மணங்க ளனைத்துமொவ் வாதிம் மணந்தனக்கே.

[7]


குறிப்பறிதல்
பெண்பாற் படும்வந்தி பிட்டா லகிலம் பிரம்புபட
மண்பாற் சுமந்துநிற் பார்மது ரேசர்முன் வாதுவென்ற
பண்பார்த்த சொல்லி பராமுகப் பார்வையிற் பார்த்தகடைக்
கண்பார்க் கிலைநெஞ்ச மேயதி லேயுண்டு காதலுமே.

[8]


கலந்துழிமகிழ்தல்
குலமுத் தமிழ்தெரி வார்சொக்கர் கூடலிற் கூடியிந்த
நலமிப் படிபின்னை யார்பெறு வாரின்ப நாயகியைப்
புலவிக் களவு படாப்பெரும் போக புரந்தரையைக்
கலவிக் கனியையின் கோது படாத கரும்பினையே.

[9]


தெய்வத்தை வியத்தல்
சேரித் தமருந் தனதாய வெள்ளமுஞ் சேரவிட்டிங்
காரித் தனிவந் தெதிர்ப்படு வாரால வாயற்கன்பு
பூரித்த நன்னெஞ்ச மேயெமக் காகவிப் பூங்கொடியைப்
பாரித்த தெய்வமன் றோதெய்வ மாகவும் பாவிப்பதே.

[10]


கிளவி விரும்பல்
கொல்லிற் சிறந்தறி யாதடு சூலத்தர் கூடலன்னார்
சொல்லிற் கவாநின்று சோருநெஞ் சேதுணைத்தோளொருகாற்
புல்லிக் குழைந்தது கண்டா லினிநம் புதுமொழியின்
வல்லிக் கிவனுள்ள மென்படு மோவென்று வஞ்சித்ததே.

[11]


இருவயி னொத்தல்
சினைச்சங் கிளமணற் குன்றேறி வையைத் திரைதவழ்ந்து
மணத்தண் டரளஞ் சொரிமது ரேசர் வரையிலிந்த
நனைக்கொந் தளவல்லி நன்பால் விழித்த நலத்தைநெஞ்சில்
நினைக்குந் தொறுமது செந்தமிழ்ப் பாடல்நினைவொக்குமே.

[12]


நன்னய முரைத்தல்
விள்ளா மயல்தந் திருப்பார் முகமதி வீதிபுக்குத்
துள்ளா மறியுந் துணைக்கண்கள் போற்சொக்கர் வெற்பினறுங்
கள்ளாசை வண்டினங் கானனங் காகமங் கட்டுரைக்கு
முள்ளாசை வெள்ளந் தரவல்ல தோவுங்க ளுற்பலமே.

[13]


பிரிவுணர்த்தல்
வயிர்போ யிரங்கு மனமே யிவர்தந்த வாழ்வுக்கிந்த
வுயிர்போ லுடலுமொன் றாகிலன் றோபிறை யூற்றமிர்தத்
தயிர்போதுந் தண்டு[றை]ற யாரால வாய்நமக் கானவின்பப்
பயிர்போல் வளர்ந்து வினைந்தனு ராகம் பயன்படுமே.

[14]


பருவர லறிதல்
கூராடல் முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
வேராட வானனம் வாடநிற் பீருமை மேவிநமக்
கோராவி யென்றிருந் தேனிரு வேமுள் ளளவுமினி
யீராவி யாமென வேயிங்ங னேதுன்ப மெய்துவதே.

[15]


பிரியே னென்றல்
கவளக் கடக்களிற் றார்கடம் பாடவிக் காவில்வளர்
பவளக் கொடிமடப் பாவைநல் லாயுன் பயோதரமுந்
துவளத் தனிமருங் கும்பிரி வேனென்று சோர்வதென்னோ
குவளைக்கு வாசம் பிரிந்ததெங் கேபண்டு கூறெமக்கே.

[16]


அருட்குண முரைத்தல்
துறந்தவர் நெஞ்சிற் றுறவா தவர்தமிழ்ச் சொக்கர்வெற்பில்
அறந்தரு தெய்வ மருளுநங் கேண்மை யகலிடத்துப்
பிறந்தவ ரோதவிர்ப் பார்தவிர்ப் பாரெனிற் [*1] பின்னுமஃதே
இறந்தது வோவணங் கேயிற வாதிங் கெழுமையுமே.

[17]


பிரியிற் றனதாற்றாமை கூறல்
கொல்லாது போலறங் கொல்வார் சமையக் குறும்பறுக்குஞ்
சொல்லா ரழகிய சொக்கர்தண் சாரல்மை தோய்ந்தகன்ற
கல்லார வாள்விழி யாலனங் காகமங் கட்டுரைக்க
வல்லா ருறவெங்ங னேமறப் பாயென் மடநெஞ்சமே.

[18]


[*2]இட மணித்தென்றல்
வாதுந் தமிழுந் தெரிவையை நாடர் மதுரைவண்டு
கோதும் புரிகுழற் கோமள மேபொற் குழையிணைக்குள்
காதுங் கயல்விழி யெத்தனை போதுங் கருதிலது
போதுந் தமிய னகர்க்குங்கள் சாரலும் பொற்குன்றுமே.
[*2]இடந்தலைப்பாடு

[19]


பிரிந்து வருகென்றல்
செகத்தா தரிக்குந் திருவால வாயர் சிலம்பைவிட்டுப்
புகத்தாளெழுந்தின்று போகநிற்பீரெப் பொழுதுமென்னெஞ்
சகத்தா மரையி லினிதிருப் பீரலல் காணுமிந்த
முகத்தா மரையழ கென்றொரு நாள்வந்துமுன்னிற்பதே.

[20]


உயிரென வியத்தல்
காவிக் கயர்வும் வெயரா னனமுங் கலந்தொருவர்
பாவிக் கரிய புளகித சோபையும் பையப்பைய
மேவித் தளரு நடையுமெல் லாம்வெள்ளி மன்றர்வெற்பில்
ஆவிக்கு முண்டுகொல் லோவிது காணு மதிசயமே.

[21]


அருமை யுரைத்தல்

பூவிற் புகுந்த மணம்போல வும்புதுப் பூங்கனியி
னாவிற் கினிமை புகுந்தது போலவு ஞாலமெண்ணுத்
தேவுக் கினிய திருவால வாயர் சிலம்பிலிளங்
காவிற் புகுந்திவ ரென்னகண் மாயங் கலந்ததுவே.

[22]

இயற்கைப் புணர்ச்சி முற்றும்.

II. இடந்தலைப்பாடு

தலைவன் தலைவியை நினைதல்
முற்றிற் புறங்கொழித் திட்டமுத் தார முகந்திழைத்த
சிற்றிற் புறநிற்ப ரோசெல்வ ரோவிசை தேக்கிவண்டு
சுற்றிப் பயில்கொன்றை யார்சொக்கர் மால்வரைத் தோகையன்னார்
வெற்றிச் சிலைமத வேளையென் போல விலையுங்கொண்டே.

[23]


தலைவி தலைவனை நினைதல்
காலையிற் காவியங் கண்ணிநண் பாளர் கடம்பவனத்
தாலையிற் பாகை யடுஞ்சொனல் லாய்விளை யாடுமந்தண்
சோலையிற் றேடுவ ரோமது மாலை தொடுத்தணியும்
வேலையிற் றேடுவ ரோதெரி யாதுநம் வெற்பர்வந்தே.

[24]


தந்த தெய்வந் தருமெனச் [*1] சேறல்
[*1. சென்றல்]
மைவந்த கண்டர் மதுரையஞ் சாரல் மயிலளிக்கு
கைவந்து வாடுமெ னன்னெஞ்ச மேயிற்றை நாளளவுங்
கைவந்த தெய்வந் தரவந்த காமக் கலவியந்தத்
தெய்வந் தருமின்ன முஞ்செல்லு வோமச் செழும்பொழிற்கே.

[25]


பொழில் கண்டு மகிழ்தல்
கலத்தற் கினியவு மாய்க்கலந் தாலொரு காலத்திலும்
புலத்தற் கரியவு மாகிய தாலன்பு பூண்டவர்பாற்
செலத்தக்க சோதித் திருவாலவாயர் சிலம்பினிகர்
சொலத்தக்க தோநெஞ்ச மேவல்லி போலுமிச் சோலையுமே.

[26]


தனிநிலை காண்டல்
இரவித்தொழுங்கதி ரெந்நாள்வருமென் றெதிர்கொண்டுதேன்
விரவித் தளையவிழ் தாமரை போல்விடங் கொப்புளிக்கு
மரவிற் றிகழ்சடை யாரால வாயெம்மொ டானவின்பம்
பரவித் தனிநின்ற வாதமி யேனுயிர்ப் பாவையின்றே.

[27]

மெய்தொட்டுப் பயிறல்
ஆமே முலையிணைக் கிந்தமுத் தாரமு மல்குலுக்கும்
போமே [*2] பருமம் பொறுக்கவென் றால்மண் புரக்கவைத்த
கோமே தகமுடி யார்சொக்க நாயகர் கூடலிவை
தாமே தமிய னிளைப்பாறு நீழலுந் தாழ்குழலே.
[*2. பருவம்]

[28]


பொய் பாராட்டல்
பருவத் தளவி விடுமிந்த்ர சாபமிப் பாவையிரு
புருவச் சிலைகண்டு நாணியன் றோமுப் புராதிபரை
வெருவச் சிலைதொட்டவெள்ளிமன் றாளர்தம்வெற்பிலென்று
முருவப் பிறந்து மிறந்து மொவ்வாம [*3] லொளிக்கின்றதே.
[*3. லொழிக்கின்றதே.]

[29]


இடம்பெற்றுத் தழாவுல்[*4]
வெல்லப் பிறந்தவை வேற்படை யேவிமென் காலிலின்னம்
புல்லக் கிடைக்குங்கொ லென்றயர் வேனைப் புகலறநீ
கொல்லத் துணிந்து குறையாவி யுங்கொள்ளை கொண்டனையே.
[*4. தளர்தல்]

[30]

கொடியிடம் புகுதல்
கடங்குதிக் குங்கனிற் றார்கடம் பாடவிக் காவல்கொண்ட
விடங்கொதிக் குங்கண்டர் வண்டமிழ்ச் சாரலில்வெண்டரள
வடங்கிடக் கும்முலை யார்மட னாணுக்கு மாதிமைக்கு
மிடங்கொடுப் பாரெவரோவுனைப் போல விளங்கொடியே.

[31]


கொடியிடம் புகுதற் கிரங்கல்
பிறைத்தாம நீள்முடி கன்றமெய் வேர்வு பெருகவன்று
குறைத்தாய வை[யை]க்கு மண்சுமப் பார்சொக்கர்கூட லிலிக்
கறைத்தாரை வேல்விழி யாலென்னை யாளுங் கரும்பையின்று
மறைத்தா யிளங்கொடி யேயுனக் கேனிந்த வன்கண்மையே.

[32]


கண்புதைத் திரங்கல்
கொலையிடட முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
முலையிட்ட முத்த முகிணகை யீர்நும் முரிபுருவச்
சிலையிட்ட காவலுக் குள்ளே கிடந்து தெளிவித்தெம்மை
நிலையிட் டவர்தம்மை யோமறைப் பீரென் னிலையுங்கண்டே.

[33]


நீடுதிளைந் திரங்கல்
காம்பாடு சோலைக் கடம்பா டவிக்கறைக் கண்டர்வெற்பி
னாம்பா தகமென்செய் தோநெஞ்ச மேநறைதேக்கெறியுந்
தேம்பா யளக நிழற்கே நிறையைத் திறைகவர்ந்த
பூம்பாவை நாணுமென் காதலுமாகப் பொருகின்றதே.

[34]


நாண்விட வருத்தல்
வாராசை கொண்ட வனமுலை பாகர் மதுரைவெற்ப 
ராராயும் பேரறி வுக்கடங் காம லளவிறந்த 
பேராசை வெள்ளந் தலைப்படும் போதொரு பெண்மடனா
ணோரா வெதிர்நிற்கு மோநெஞ்ச மேயென் னினைவதுவே.

[35]


வறிதுநகை தோற்றல்
தளைக்குஞ் செழுங்குன்றைபோதா திளம்பிறைத் தாமங்கொண்டு 
வளைக்குஞ் சடாடவி யார்சொக்க நாதர் மதுரையன்னார் 
இளைக்குந் துடியிடை யார்சிந்து ரானனத் தின்றவமே
முளைக்குஞ் சிறிய முறுவலென் னாக முடிவிக்குமே.

[36]


முறுவற் குறிப்பறிதல்
கவளக் கடகளிற் றார்கடம் பாடவிக் கன்றிளமாம்
பிளவைப் பொருத பிணைவிழி யாரருள் பெற்றுமின்ன 
மளவெத் தனையென் றறியவொண் ணாதின் னமுதரும்புந் 
தவளத் திருநகைக் கேயுள தாமொரு தண்ணளியே.

[37]


மருங்கணைதல்
மாகீத வண்டிளங் காளுமை பாகர் வளமதுரைப்
பாகீர் மொழிச்சின் மருங்குகண் டீர்முலைப் பாரங்கண்டீர்
எகீ ரமர்கின்றி லீர்மது வாசைக்கு மென்னுரைக்கு 
மாக ரு{லு}ழலுகின் றீரென்ன கேண்மையு மாவலுமே.

[38]


கூடுதலுறுதல்
* மடைக்கண்டாளஞ் சொரிவையை நாடெ{ட}ன்ன வையமொரு
குடைக்கண் டனிபுரப் பார்சொக்க நாயகர் கூடலன்னார்
கடைக்கண் கருணையுண் டாருமி லாதபொற் காவுமுண்டு
புடைக்குந் தருண வனமுலை யாமின்று புல்லுது{வ}மே. 
இடம் பெற்றுத் தழாஅற்குக் காட்டப்பெற்றுள்ளது.

[39]


கலந்துழி மகிழ்தல்
கொடும்போர் வரிசிலை யார்கூடல் மால்வரைக் கொம்பினங்கந்
தொடும்போது கன்று மெனவிருந் தேம்புல்லித் தோள்குழைவு
படும்போ தெறியும் புளகஞ்சற் றேய பனிமலர்க்கை
விடும்போ துயிர்விடும் போலுமென் னாக வியந்தனமே.

[40]


நலம்பா ராட்டல்
கண்ணுக் கனங்கன் கரும்பாகி யின்னிசை காதலித்தாற்
பண்ணுக் கொருவடி வாயுயி ராய்த்தம் பாப்படங்கா
மண்ணுக் கடங்கு புயத்தார் மதுரை மதுமலர்ப்பூம்
பெண்ணுக் *கருங்கவ மாய்நின்ற வாவென்பெருந்தவமே.

[41]


பயந்தோர்ப் பழிச்சல்
மல்லிற் றிகழ்புயத் தார்மது ரேசர் வரையிலிந்தக்
கொல்லித் தனியணங் கென்னநிற் பாவைக் கொழிக்குநறை
யல்லிக் கமலத் திருப்பா னிருக்கு மளவுமெம்மைப்
புல்லிக் கொளத்தரு வார்வாழி வாழி புகழொடுமே.

[42]

தீராத் தேற்றம்
வாளுற வானகண் ணாய்தமி யேன்சொல்லும் வாய்மையென்னுஞ்
சூளுற வாவ தறிந்திலை யேயலை தூற்றுகங்கை
யாளுற வாமுடி யாரால வாயிலெ னாதரவோர்
நாளுற வாகில் வரலெவற் கோபழி ஞாலத்திலே.

[43]


ஏற்புற வணிதல்
துடைத்தார் படைத்தளிப் பார்சொக்கர் தானைத்தொழுதுனைமுன்
கிடைத்தா ரமைத்த படியணிந் தேனிரு கெண்டையங்கட்
கடைத்தாரை கொண்டிது பாரணங் கேயன்று கைவருந்தப்
படைத்தார் தமக்கும் படைக்கவொண் ணாதென் படைப்பினையே.

[44]


விடுத்தல்
வாவிக் கயலுக ளு[ம்] மது ரேசர் வரையமுதே
யாவித் துணையென்னு மாயம் புகீரடியேனுமது
காவித் துணைவிழி யின்கடைப் பார்வையுங் கண்டுகண்டு
சேவித் துடன்வர வும் பெற்றி லேன் முன் செய் தீவினையே.

[45]


இன்னங் கூடுங்கொலென வரு[ந்]தல்
வாளக் கிரிபுரப் பார்மது ரேசர் வரையிலிந்தத்
தோளத் தனைய மிருதன பாரமுந் தோய்ந்திவர்வந்
தாளத் தவஞ்செய்த நெஞ்சமெஞ் சாதெம்மை யாளவின்ன
மீளத் தவஞ்செய்த தோதெரியாது விதிவசமே.

[46]


நீங்கற் கருமைகூறல்
மணக்கும் படிவருங் காலுளங்கூரு மகிழ்வுஞ்சற்றே
தணக்கும் பொழுது தளர்வுங்கண் டாற்பொற்றருவைமுட்டி
யணக்குந் தடம்பொழில் சூழால வாயரன் றாய்ந்துசங்கத்
திணக்குந் தமிழென்ன லாம்வல்லி யாடு மிளம்பொழிலே.

[47]

இடந்தலைப்பாடு முற்றும்

III. பாங்கற் கூட்டம்

தலைவன் பாங்கனை நினைதல்
வாமத் துமைநண்ப னார்மது ராபுரி வல்லிநண்பு
போமத் தனையென் றயருநெஞ் சேபுலம் பாகொணமக்
கேமத் துணையுயிர்ப் பாங்கனுண்டேயவ னின்பவெள்ளக்
காமக் கடலின் கரையிது காணென்று காட்டுவனே.

[48]


பாங்கன் வாட்டம் வினாதல்
களியுங் கழைமதத்தெட்டானை யாலையச் சொக்கர்வெற்பி
னெளியுஞ்சிலைத்தொழிற்போரண்ண வேநெஞ்சமாண்மையுங் கண்
ணளியம் பொறையு மழகுஞ்செங் கோன்மையு மாயொருவர்
தெளியும்பொருளைத் தெளிவிக்கு நீயென்கொல் தேம்புவதே.

[49]


உற்றதுரைத்தல்
உன்னெஞ் சறியுமென் கல்வியு மாண்மையு மூறுபட்ட
தென்னஞ் சறியுமற் றாரறி வாரற மென்றறியா
வன்னெஞ் சறைபுகு தார்சொக்க நாதர் மதுரையன்னார்
துன்னெஞ் சறியு மவர்கண்க ளாவெம்மைச் சாதித்ததே.

[50]


பாங்கன் கழறல்
இலங்காடல் வேற்படை யெத்தனை கோடி யெதிர்பொரினுங்
கலங்காத நீயுங் கலங்கினை யேகற்ப காலத்தினு
மலங்கார் வரிசிலை யார்சொக்க நாதர் மதுரையன்னார்
அலங்கார வார்குழைக் கும்புறம் போமிரண் டம்பினுக்கே.

[51]


கழற்றெதிர் மறுத்தல்
தேனா ரிதழித் திருவால வாயர் சிலம்பிலொரு
வேனா யொருமயில் கைப்பட்ட பாவமொ ரேழைக்குநீ
தானாக வேணுந் தலைவனண் பாவுன் றனக்குநண்ப
னானாக வேணுமந் நாளல்ல வோவுன்னை நான்சொல்வதே.

[52]


பாங்கன் கவன்றுரைத்தல்
கூலத் திரைவையை மண்கூறு கொண்டொரு கூடைகட்டு
மாலக் களத்தர னாரால வாய ரடக்குமந்த
காலக் கடையன்ன கண்ணார் நெடுங்கடைக் கண்களென்னு
மோலக்கடல்கொண்டதோவண்ணலாண்மையு [*1] மொண்மையுமே. 
[*1. முண்மையுமே]

[53]


விதியொடு வெறுத்தல்
செறுக்கும் புரத்தர் திருவால வாய்நவ்வி செவ்விகண்டு
மறுக்குந் தகையறி யாநெஞ்ச மேபல வாசகத்தால்
ஒறுக்குந் துணையை வெறுத்தென் கோலோபயனூழ்வினையால்
வெறுக்குந் தகைமை விதியன்றி யாரை வெறுப்பதுவே.

[54]


பாங்கன் நொந்து கூறல்
வார்க்கோல நீல முலைத்தழும் பாளர் மதுரையினம்
போர்க்கோல வார்சிலை யண்ணலுக் கோவொரு பூங்கொடித
னீர்க்கோல மேகக் குழற்காடு கண்டு நிறையழியும்
யார்க்கோ வறிவு படுமறி வாளிக் கிதுவரிலே.

[55]


இடமும் வடிவும் வினாதல்
எங்கே யிருப்பதுன் வல்லிக்கென் [*1] னாம்வடி வெய்துமிடம்
பங்கே ருகமலர் மானிகை யோவிண் பரப்படங்காக்
கொங்கே[ர்] நெடுஞ்சடை யார்சொக்க நாயகர் கூடல்வெற்பா
அங்கே செலவு [*2] மவருளப் பாடொன் றறியவுமே. 
[*1. னாமழை செய்துமிடம். *2. மவாருளப்பாடெண்]

[56]


இடமும் வடிவு முரைத்தல்
காளக் களத்தர் கடம்பா டவியிடங் கட்கடைகள்
வாளைப் பொருது குழைகிழித் தோடு மருங்கறியேன்
பாளைக் கமுகிளஞ் சோலைநிற் பார்தம் பணிவினவில்
வேளைப் பணிகொண்டு நிற்பதல் லாதொரு வேலையின்றே.

[57]


பாங்கன் வற்புறுத்தல்
விண்ணும் [*3] பவன நிலையுஞ்செந் தீயும் விரிபுனலு
மண்ணுங் கரந்துநிற் பார்மது ரேசர் மணிவரைமைக்
கண்ணுங் குழைய முறவாடு கண்ணியைக் கண்டுனைநான்
நண்ணுந் தனையுமன் றோவண்ண லேயிங்ங னைவதுவே.
[*3. பவனி]

[58]


பாங்கன் குறிவழிச் சேறல்
மண்ணின் புறம்புரப் பார்சொக்க நாதர் மதுரைவெற்பை
நண்ணும் பொழுதெங்ஙன் காண்குவ மோநம்மை நம்புமண்ண
லெண்ணின் புறஞ்சென்ற கல்விபல் கோடி யிரண்டுகயற்
கண்ணின் கடையிற் கடத்திநிற் பாரையக் காவகத்தே.

[59]


பாங்கன் தலைவியைக் காணுங்கொலென வருந்தல்.
இந்நேரங் காவி னிடைபுகு மோவங் கெழுந்தருளு
மந்நேர மாவ தறியும தோவால வாயர்வெற்பின்
முன்னே யியங்கு முளரியங் கோதை முகம்புகுந்து
தன்னே ரறியு முயிரென் கொலோசென்று சாதிப்பதே.

[60]


இணையுருக்கண்டவன் துணைவனுக்கிரங்கல்.
கல்லார நீழற் கடம்பா டவியிளங் காவிடத்து
நில்லாது நீரிங்கு வந்துநின் றாலெ னினைவறிய
வல்லா னொருவன் வினையே னிடமும் வடிவுஞ்சொன்ன
தெல்லா மறிந்தெங்ங னேயும்மை நாடு மிளங்கொடியே.

[61]


பாங்கன் தலைவியைக் காண்டல்.
சொல்லித் தகரத்தர் சொக்கர்தண் சாரலெந் [*1] தோன்ற னெஞ்சைச்
செல்வித் தவரிவர் தாமல்ல வோசென்ற நெஞ்சுருகப்
புல்வித்த காவுமிக் காவல்ல வோவென் புகல்வதவர்
கல்விப் பரப்பிவர் கண்ணிரு கோடியிற் கண்டனமே.
[*1. தோன்ற நெஞ்சைச்]

[62]


பாங்கன் தலைவியை வியத்தல்.
செண்டாடல் வெற்பர் திருவால வாயெழிற் செவ்விவிண்ட
தண்டா மரையிற் றிருவறி வேனண்ணல் தண்டலையிற்
கண்டாசை பூணக் கொழுங்காவி யங்கட் கடைகொடுத்த
வண்டாடு கோதைக் கெவர்நிக ராக மதிப்பதுவே.

[63]


பாங்கன் தலைவனை வியத்தல்.
கோணாத [*^2] நாணிடும் வெஞ்சிலை யார்சொக்கர் கூடனெடுந்
தூணார் புயத்தண்ண லாண்மைநன் றேபுடை தூர்த்தடங்காப்
பூணார வெற்பைக் கடந்தாலு மந்தப் பொருப்பிருக்குங்
காணா வெளியை யொருவனெவ் வாறு கடந்தனனே.
[*2. னாணிடும்]

[64]


இகழ்ந்ததற் கிரங்கல்
அகழும் புரிசையுஞ் சூழால வாய ரணிவரைநாம்
இகழுந் தகைமைய தோவண்ண வாண்மை யிமையவரும்
புகழுந் திருவனை யார்கண்க ளாலிடும் பூசல்வெள்ளம்
திகழும் பரிசல்கண் டாலென் படாதொரு சிந்தையின்றே.

[65]


பாங்கன் தலைவியைக் கண்டமை செப்பல்
கழைகிழிக் குங்களிற் றார்கடம் பாடவிக் கண்ணுதனாட்
டிழைகிழிக் குங்கொலை வேலண்ண லேவண் டிரைக்குமலர்
மழைகிழிக் கும்பொங்கர் நின்றுன தாவி மறுக்கங்கண்ட
குழைகிழிக் குங்கண்ணிக் கார்நிக ராமென்று கூறுவதே.

[66]


தலைவன் தலைவியை வியத்தல்
துளிகொண் டொழுகு மதுமாலை யஞ்சடைச் சொக்கர்வெற்பிற்
கிளிகண்ட சொல்லியை நீகண்ட போதெழு தீதவண்டு
களிகொண்ட வாச மலர்ப்புய லூடலர் காவியிற்றண்
ணளிகண் டனையென்கி லோவமை யாதுன் னதிசயமே.

[67]


தலைவன் குறிவழிச் செல்லத் துணிதல்
சினவிற் கரத்தர் திருவால வாயர் சிலம்பிற்கஞ்ச
மனையிற் புகுந்தெனி னும்நண்ப னெயிந்த மாயஞ்செய்த
வினையிற் புருவத் திருப்பாவை செவ்வியை மேவுதற்கே
நினைவிற்கு முன்செலு மேபுல்லு மேயன்பு [நேர்] நெஞ்சமே.

[68]


தலைவன் தலைவியை முகம்புகுதல்
மந்தார மாலை மதுரேசர் வெற்பிலென் மையனெஞ்சு
பந்தாட வந்துற வாடநிற் பீர்முகம் பார்த்தொருவர்
சிந்தா குலமு மயர்வுங்கண் டாலொரு தீங்கிளவி
தந்தாள வேணு மதுகாணும் பெண்மையுஞ் சாயலுமே.

[69]


கலந்துழி மகிழ்தல்
தாழுஞ் சுருளிரு ளோதியங் காவிலுஞ் சந்த்ரகலை
வாழுங் குவளை யிலும்பெரி தாய்மது ரேசர்வெற்பிற்
சூழுங் கலாப மயிலனை யாரல்குல் தோய்ந்தலைந்து
வீழுங் கலாபமன் றோவின்ப வாரி விளைவித்ததே.

[70]


நலம் பாராட்டல்
வம்புங் குவடும் பொருமிரு கோல வரையும்வஞ்சிக்
கொம்பும் படவர வும்புகழ் வேன்சொக்கர் கூடலளி
பம்புங் குழலி யனுராக போகத்திற் பார்க்குமிரண்
டம்புந் தருவிர கோவடங் காதென் [*1] னறிவினுக்கே. 
[*1. றறிவினுக்கே]

[71]


பாங்கியொடு வருகென்றல்
குனிவரும் பான்மதி யார்சொக்க நாயகர் கூடற்செந்தேன்
கனிவரு காமக் களிமயி லேயிளங் காவிடைநீர்
தனிவருந் தோறுந் தரியாத வாவி தரிப்பதற்கிங்
கினிவரும் போது பிரியாது வாரு மிருவருமே.

[72]


ஆயத் துய்த்தல்
கந்துங் கழையும் பொருதிரு பாலுங் கடைக்கணங்கி
சிந்துங் களிற்றர் திருவால வாயர் சிலம்பில்வண்டு
கொந்துங் குழலுஞ் சுழலணங் கேமலர் கொய்துமது
பந்துங் கழங்கும் பயிலாய வெள்ளம் பயிலுகவே.

[73]


தலைவி பாங்கியை யறிவித்தல்
விண்ணோக் கினுந்தெரி யாதபொன் மேனியிம் மேனியென்று
மண்ணோக்கி யேத்திநிற் பார்மது ரேசர் வரையினின்ற
பண்ணோக்கு மின்சொற் பரிபுரப் பாவை பணிந்தகடைக்
கண்ணோக்கினின்றுகண் டேன்வளர் காதற் கரும்பினையே.

[74]


பாங்கற் கூட்டம் முற்றும்.

IV. மதியுடன் படுத்தல் 

பாங்கிமை நினைதல்
வம்பே ரளக முலையுமை பாகர் மதுரையன்னார்
தம்பே ரளியை விரும்புநெஞ் சேமுகத் தாமரையில்
அம்பேர் விழிகொண் டவர்மலர்க் காவி லறிவுறுத்த
கொம்பேகங் காதற் கொடிபடர்ந் தேறுங் கொழுகொம்புமே.

[75]


புனங்கண்டு மகிழ்தல்
கூனும் பிறைமுடி யார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
யானுங் தனியு மிருந்தழி யாமலென் னெஞ்சும்வண்டுங்
கானுஞ் சுழலுஞ் சுருளிரு ளோதியைக் காணவைத்த
மானுந் தினையும் புனமுமன் றோவெம்மை வாழ்வித்ததே.

[76]


கிள்ளை வாழ்த்து
தேன்வாழு மாலைத் திருவால வாயர் சிலம்பிலிந்தக்
கான்வாழ வாழும் புனத்தய லேவந்து கைகலந்து
யான்வாழ் வதுபொருட் டாவிள மானையிங் கெய்துவித்த
மான்வாழி கின்னை யினம்வாழி யேனலும் வாழியவே.

[77]


புளத்திடைக் கண்டு மகிழ்தல்
தினைக்காவ விந்தத் திருவைவைப் பாரந்தச் செங்கமல
மனைக்கா ருளரென் றறிந்தல்ல வோவருன் மாரிவெள்ளச்
சுனைக்காவி யங்கண்ணி தோய்வா ரழகிய சொக்கர்வெற்பில்
வினைக்கா னவரறி விப்படி யோமுன் விதித்ததுவே. 
[இச்செய்யுள் இலக்கண விளக்கவுரையில் இத்துறைக்கே காட்டப்பெற்றுள்ளது.]

[78]


குறைகூறத் துணிதல்
தோயவெள் ளந்துளும் புஞ்சடை யார்சொக்கர்தொண்டர் பண்டைக்
காயவெள் ளங்கழற் றுங்கழலாளர் கடம்பவனத் 
தாயவெள் ளஞ்சென் றணுகுமுன் னேயவ ராருயிர்க்கென் 
னேயவெள் ளஞ்சொல்லி நிற்பதன் றோபின் னிலையெமக்கே.

[79]



ஊர் வினாதல்
சோருந் திருநதி சூடுஞ் சடாடவிச் சொக்கர்வெற்பில்
வாருங் குவடும் பொருமுலை யீர்வந்து வந்துநின்று
தேரும் பரியுந் தியங்காம லுங்கள் திருமுன்றிலு
மூரும் பகரு மினிவினை யேனெஞ் சொருப்படவே.

[80]


வழி வினாதல்
சுழியா மணிகொழிக் கும்வையை நாயகர் சொக்கர்வெற்பில்
வழியா தெனவறி யேன்மட வீர்கனி வாய்திறந்து
மொழியா லுரைக்க முடியா தெனில்முகம் பார்த்துமது
விழியா லுரைத்தரு ளீருது போதும் வினையனுக்கே.

[81]


பேர் வினாதல்
கோட்டைப் புறங்கண்டு வில்வேள் மகுடங் குலைத்திடையை
வாட்டப் புகுதும் வனமுலை யீர்கொன்றை மாலைதும்பை
சூட்டப் பொலிந்த சுடர்ச்சொக்கர் மால்வரைத் தொல்லைநும்பேர்
கேட்டெத் தனையிரந் தேனுரை யீருங்கன் கேண்மைநன்றே.

[82]


வேழம் வினாதல்
தகர்த்தடங் காதசெஞ் சாலிவண் கூடலஞ் சொக்கர்வையை
நீர்க்கடங் காத கயல்விழி யீருங்க ணீலமணி
வார்க்கடங் காத வனமுலை போலென் வரிசிலையின்
போர்க்கடங் காவிபம் வந்ததுண் டோநும் புனத்தயலே.

[83]


கலை வினாதல்
அருங்கலைச் சங்கத் தமிழால வாய ரணிவரையின்
மருங்கலைக் குங்கொங்கை வல்லிநல் லீருங்கள் வார்குழையை
யொருங்கலைக் குங்கண்கள் மான்பிணை யோவென வோடியொரு
கருங்கலைக் கன்று புகுந்ததுண் டோவிக் கடிபுனத்தே.

[84]


மொழிபெறாது வருந்தல்
கொன்னாடர் முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
மின்னா தரிக்கு மருங்குனல் வீரிந்த வேதனைய
மென்னா தரவு நிலையுங்கண் டீர்நெஞ் சிளகியொன்று
சொன்னா லினிச்சிந்து மோவுங்கள் வாயிற் றுவர்முத்தமே.

[85]


இடை வினாதல்
மன்றுகண் டாடு மதுரேசர் வெற்பில் வளருமுலைக்
குன்றுகண் டாமிடை கண்டிலம் யாம்பொற் குழைகுதித்துச்
சென்றுகண் டாருளங் கொண்டாளு மைக்கட் டிருவனையீர்
ஒன்றுகண் டாலொன் றிலையென்ப தோவுங்க ளூதியமே.

[86]


மனம் வினாதல்
*கனம்வந் திறைஞ்சுங் கடம்பா டவியர் கருணையென்னத்
தனம்வந் தரும்புஞ் சரிகுழ லீரென் சரத்தொடுமா
னினம்வந்த தோவந்த மான்பிணை தேடி யிளைத்துமற்றென்
மனம்வந்த தோவுரை யீருங்கள் காவல் மலிபுனத்தே. 
[*இச் செய்யுள் இலக்கணவிளக்க வுரையில் மானொடு
மனம்வினாதற்குக் காட்டப்பெற்றுள்ளது.]

[87]


தோழி வினாவெதிர் மறுத்தல்
விழிக்கஞ் சனமல்ல மைக்காவி யோதியின் மேல்முடித்துக்
கழிக்குந் தொடையல்ல கைவளை யோவல்ல கங்கைவெள்ளஞ்
சுழிக்குஞ் சடாதரர் சொக்கர்வெற் பாளர் சுழித்துமதங்
கொழிக்குங் கடாசல மெங்களுக் காவதென் கூறுவதே.

[88]


நகைத்துரை
கனங்காவல் கொண்ட கடம்பாடவிக்கறைக் கண்டர்வெற்பில்
அனங்காள் பிணையிங்கு வந்ததென் பீரலல் காணுமிந்தப்
புனங்காவ லோவெமக் கித்தழை யாலெய்து போம்பிணைமா
னினங்காவ லோவண்ண லேயெங்கள் காவ லியம்புகவே.

[89]


குறையுறவுணர்தல் / கையுறை காட்டல்
மழையா தரிக்க வளர்பொங்கர் சூழ்மது ரேசரிளங்
கழையா தரித்தபொற்[றோ]றாளுமை பாகர் கடம்பவனத்
துழையா தரிக்குந் தடங்கணல் வீரினி யோவிடுந்தண்
டழையாகு மிந்தத் தழையிது வேபதஞ் சாத்துதற்கே.

[90]


கருத்தறிவித்தல்
முருந்துண்ட மூரலம் பானல்பொ னாக முழுதுமன்று
விருந்துண் டழைப்பவர் வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பில்
அருந்தொண்டைவாய்மட வீர்வண்டல் மாளிகைக்காமவிருந்
திருந்துண்டு போமென்கி வீரிது வோவுங்க ளில்லறமே.

[91]


குறை கூறல்
அகம்பார்த்த வேல்விழி யீர்கழங் காடுகைக் காகமுத்தந்
தரம்பார்க்க வோவண்டல் தானிழைக் கோசரணென்பவர்க்கு
வரம்பார்த்த சொக்கர் மதுரேசர் வெற்பிலென் மாதவத்தால்
நிரம்பாப் பணியுமக் கேததற் கேசென்று நேர்படவே.

[92]

மதியுடன் படுத்தல் முற்றும்.

V. குறையுறவுணர்தல் 

தோழி ஐயுறுதல்
மலைபெற்ற செஞ்சிலை யார்மது ரேசர் வரையில்வஞ்சக்
கொலைகற்ற விற்புரு வக்கொடி யீர்குறை கோடியென்பர்
கலைகெட்ட தென்ப ரிடைதெரி யாதென்பர் கட்டுரைக
ணிலைபட்ட தொன்றல வானினை வேதிவர் நெஞ்சினுக்கே.

[93]


இருவரு முளவழி யவன்வர வுணர்தல்
கலையென் றனரொரு காலொரு கால்வெங் கடங்கொழிக்கு
மலையென் றனர்மனம் வந்ததென் றார்மது ரேசர்வெற்பா
முலையென் றனர்சொன்ன தெல்லா மறைத்து முடிவிலிடை
யிலையென் றனர்வெளிக் கேநல்ல மாய மிவர்கற்றதே.

[94]


நாற்றம்
[*1] கங்கைச் சடிலர் மதுரா [*2] புரேசர் கடம்பவனத்
தெங்கட் குனதன்றி யெங்குள [*3] தோவிவட் காரமும்பூந்
தொங்கற் புதுமண முந்திருப் பாவைபொற் றோளுமிரு
கொங்கைக் குவடு மளகா டவியுங் குடிகொண்டதே. 
[*1 இது முதல் 'வன்னந்தரு' (செய். 101) என்பதன் இறுதி
யாகவுள்ள செய்யுட்கள் இலக்கண விளக்கவுரையில் (பக். 417)
எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன.]
[*2. புரீசர். 3. தோவிள.]

[95]


தோற்றம்
தோளிற் குழைவுங் களபா சலந்தரு [*3]சோபையுமை
வாளிற் [*4] புகுந்த விரகுங்கண் டாற்சந்த்ர வட்டங்கொண்ட
கோளிற் றிகழ்குடை யார்கூடல் வாழுங் கொடியிடைக்கு
நாளிற் [*5]சிறந்து சிறந்தொரு கோடி நலந்தருமே.
[*3. சோபையும் வை.; 4. சிறந்த விழியுங் கண்டாற் சசி வட்டமென்னுங். 
5. புதுமை.]

[96]


ஒழுக்கம்
கந்தா டியகளிற் றார்கடம் பாடவிக் [*6] காவிடையே
வந்தா [*7] ரொழுக்க வழக்கென்சொல் வேன்வண்ட லாடலும்பூஞ்
சந்தாடு சோலை மணியூச லாடலுந் தண்டரளப்
பந்தா டலுமறந் [*8] தார்நினைந் தாரென் பயில்வதற்கே.
[* 6.காவின் மின்போல். 7. ளொழுக்க.
8. தாளென்னபாவம் பலித்ததுவோ.]

[97]


உன்டி 
பெருந்தா மரைப்பதம் போற்றிநிற் பார்பிற விப்பிணிக்கு
மருந்தா கியபெரு [*9] மாள்மது ரேசர் வரையிலிந்தக்
கருந்தாரை வேற்கண்ணிக் கென்னகண் மாயங் [*10] கவந்த தண்ட
ரருந்தா வமுதளுந் தப்புகுந் தாலு மருந் திலளே. 
[* 9. மான்மது. 10. கவந்ததென்று மருந்தா ரமுதருந்.]

[98]


செய்வினை மறைத்தல்
யாமேயு மின்றி யினவாய வெள்ளமு மின்றியிவர்
தாமே புரியுந் தவமென் கொலோதண் டரளமணி
வாமே [*1] கலைத்தம் பிரான்மதுராபுரி வையைசுற்றும் 
பூமேவு சோலையுஞ் செய்குன்று மாகப் [*2] பொலிந்துநின்றே 
[*1: கலைப்பங்கர் வாழ்மதுராபுரி] [*2: புகுந்துநின்றே]

[99]


செலவு
கரிக்கும்ப கம்பக் கடாசலத் தார்கடம் பாடவிமான்
பரிக்கும் [*3] பரிபுர மார்ப்பமுன் னோடும் பதமலர்கள்
விரிக்குந் தவிசுங் கொடுங்காள கூட விடவரவந்
தரிக்குந் திருவி னுடலுங்கன் றாநடை தந்தனவே. 
[*3: சிலம்பு சிலம்பு பொற்பாதம் பதுமமலர் - விரிக்குந் தவிசின் 
மெலநடந்தாலு மெலிவதாரத் - தரிக்குந் திருவுடலுங் 
குன்றவே நடைதந்ததுவே]

[100]


பயில்வு
வன்னந் தருமவு லிச்சொக்க நாதர் மதுரையிள
வன்னந் தனிநடை [*4] கற்பநிற் பாடன் னமுதச்செவ்வாய்
இன்னந் துணைமுலைப் பால்மணம் போயின தில்லையிவள்
தன்னந் [*5] தனி [யே] துயில்கற்ற வாவென்பர் தாயருமே. 
[*4: கற்பலின்றாடன்; *5: தனிபயிலக்கற்றவாறென்கொல் சாற்றுவதே]

[101]


தலைவன்குறிப்பறிதல்
மகங்கண்ட வாசவன் பொற்புண்ட ரீகமலர்கொண்டெண்ணி
யுகங்கண் டிடையை வணங்கிநிற் பார்தென்ன ரோடுறவாய்ச்
செகங்கண்ட நீதித் திருவால வாயர் சிலம்பில்வல்லி
முகங்கண்ட போது முடிவென்கொல் வேனண்ணல் மோகத்தையே.

[102]


தலைவிகுறிப்பறிதல்
கனத்தே யணவுங் கடம்பா டவியர் கவுரிசெம்பொற் 
றனத்தே கடைக்கண் டரவிருப் பார்தடஞ் சாரவினம்
புனத்தே குரிசில் தலைப்படும் போது பொருமிவல்லி 
மனத்தே துளும்பும் விரகெங்ங னேசொல்ல வாய்திறந்தே

[103]


இருவர் குறிப்பு முணர்தல்
மங்கைப் பருவத் திவள்காவ லேனவிவ் வள்ளலிரு
துங்கக் களபப் புயாசலத் தேயலை தூற்றுபுனற் 
கங்கைச் சடிலர் கடம்பா டவியிலிக் கன்னியிரு
கொங்கைக் குவட்டிடை யேயவர் தேடிய குஞ்சரமே.

[104]


குறையுற வுணர்தல் முற்றும்.

VI. முன்னுற வுணர்தல்

தோழி தலைவியை வாட்டம் வினாதல்
கனையா வரிவண் டரைகொன்றை யார்பொற் கடம்பவனத்
தெனையாளு மீச ரியல்வரை வாய்நில வீன்றமணிப்
புனையா வரிப்பந்தும் பொன்னூச லும்புரிந் தாடிமற்றோர் 
சுனையாடி யோதிரு வேதிரு மேனி துவண்டதுவே.

[105]


முன்னுறவுணர்தல் முற்றும்.

VII. நாண நாட்டம்

பிறைதொழு கென்றல்
கூனார் பிறைச்சொக்கர் வண்டமிழ்ச் சாரற் குவிந்தகொண்ட
றானா யிருண்ட சரிகுழ லாயன்று தாய்முகம்பார்த் 
தானா தழுது விளையாட நீநின் றழைத்தகன்று
மானா கிலுந்தரு மேவணங் காயிந்த வான்பிறையே.

[106]


வேறுபடுத்திக் கூறல்
செவ்விக் கமல வெயருமைக் காவிச் சிவப்புமிந்தக்
கொவ்வைக் கனியில் வெளுப்புமல் லாலியற் கூடல்வந்த
நவ்விக் கரத்தர் திருவால வாயின்று நானகன்ற
பவ்வத் திருவென்ன வாமணங் கேநின் படிவத்தையே.

[107]


வேறுப[பா]டென்னெனக் கூறல்
பருவஞ் சிறிது முலையரும் பான பருவமிரு
புருவங் கடந்து [*1] குழைமறி யாவிழி பூணலருக்
கருவந் தருபர னாரால வாயினி லன்னமின்று
னுருவந் திரிந்து பலவித மான துரையெமக்கே. 
[*1. குழையறிவாவிழி.]

[108]


நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்[த]து மறைத்தல்
சூடும் பிறைமதி யாகநின் றாடிய சொக்கரியல்
கூடும் பொதிய மலையிடை யேகுழற் பந்திமட்டு
நீடுங் கயற்கணல் லாய்தமி யேனின்னை நீங்கியங்ங
னாடுஞ் சுனைதந்த திந்தமெய்பூணு மவசங்களே.

[109]


சுனைவியந்துரைத்தல்
அலைந்து சரிந்த குழலுமைக் காவி யயர்வுஞ்சற்றே
கலைந்துநெகிழ்ந்த [*2] துகிலுந்தந் தாலும்விற் காமனங்கந்
தொலைந்தரு வஞ்செய்கண் ணார்சொக்கர் மால்வரைத் தொண்டைநிறங்
குலைந்து வருந்தித ழுந்தரு மோநின் கொழுஞ்சுனையே. 
[*2. நுயிலுகந்.]

[110]


நாண நாட்டம் முற்றும்.

VIII. நடுங்க நாட்டம் 

கோடுங் குடரும் குருதியு மாயலை குங்குமநீ
சாடுங் கடமலை யொன்றுகண் டேனய லேயிருவர்
தேடுங் கடவுள் திருவால வாய்தனிற் சென்றுவஞ்சி
சூடுஞ் சுடரிலை வேல்துரந் தானொரு தோன்றலுண்டே.

[111]


நடுங்க நாட்டம் முற்றும்.

IX. மடற்பகுதி 
 

தலைவன் முகம்புகுதல்

நறைக்கா வணமல ரோதிநல் விருமை நாளுமொரு
குறைக்கா விரந்து வருந்தல்கண் டாற்சொக்கர் கூடல்மண
வறைக்காகு மீதிது முன்றிலுக் காமென் றமைத்தசிற்றி
லிறைக்கா வணநிழல் [*1] நில்லென்கி லீர்புரிந் தின்னமுமே.

[112]

தழைக் கையுறை மாட்டல்

மழையுங் கொடியு மிகல்மது ரேசர் வரையில்வண்டும்
உழையும் பிணங்குந் தடங்கணல் லீர்நெஞ் சுருகிநின்று
குழையுந் தமியினைப் போற்சந்த னாடவி கொய்துவந்த
தழையும் பிழைசெய்த தோவிது காலஞ் சருகெழவே.

[113]


தழை தகாதென்றல்

மாந்தழை மேனி யுமைபாகர் சொக்கர் மதுரையன்னாட்
காந்தழை யிதென் றறிந்திலை யேயின காரவண்ட
லேந்திழை யாக முலையார் வடிவுக் கிணங்குவதிப்
பூந்தழை யோவண்ண லேவெளிதோ வண்டர் பொற்றழையே.

[114]


முத்தக் கையுறை காட்டல்

மாகந் திறையிட்ட வெண்பிறை யாளர் மதுரையிலென்
னாகந் திறையிட் டடி மைநிற் பேனன காடவிக்கு
மேகந் திறையிட்ட முத்தன்று காணுமிவ் வெண்முத்தமென்
மோகந் திறையிட்ட தாலணி வீரு[ம்]முகிண்முலைக்கே.

[115]


முத்தக் கையுறை மறுத்தல்

மைத்தா மரைக்கண் ணுமைபாகர் சொக்கர் மதுரையிலுன்
கைத்தா மரைமுத்த மாரறி வார்நறை கான்றமலர்க்
கொத்தா *ரளக முகிண்முலை யார்பொற் குமுதநல்கு
முத்தாரங் கண்டிலை யோவடல் வாகை முடிமன்னனே.

[116]


மாணிக்கக் கையுறை காட்டல்

இழைக்காய் வளரு மிளமுலைக் காம்வளை யேந்துபசுங் 
கழைக்கா மலதுங்கள் மேகலைக் காம்வெயில் கான்றமணிக் 
குழைக்கா டாவணி வார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
மழைக்கா ரளகநல் லீர்குழைக் காமிந்த மாணிக்கமே.

[117]


மாணிக்கக் கையுறை யேலாதென மறுத்தல்

குலவிக் குறுநகை யாடுமப் போது கொழிக்குமந்த 
நிலவிற் கிளவெயி லொக்கும தோவுமை நேமிமுலை 
கலவிக் கினிய கடம்பா டவிக்கறைக் கண்டர்வெற்பா 
நலவித் தகனல்லை யோமணி யோவணி நல்குவதே.

[118]


காவியம்போது கையுறை காட்டல்

அக்கு வளைக்குந் தொடையால வாயரன் றாடல்மதன்
இக்கு வளைக்க வெரிவளைப் பார்வரை யீன்றதனை
மைக்குவ ளைக்கண் மடந்தைநல் லீருங்கள் வார்குழற்கென்
கைக்குவளைக்கொழும் போதணியீர்கண் [*1]களிப்பதற்கே.
[*1கழிப்பதற்கே]

[119]


இல்லையென்று மறுத்தல்

இக்காலை தோறுங் கொழும்பா கொழுகி யிருகரையுஞ்
செய்க்கால் பெருகுந் திருவால வாயர் சிலம்பில்வல்லி 
மைக்காவி யன்றித் தொடைக்காவி யந்திரு மார்பமற்றோர் 
கைக்காவி யென்பது கண்டறி யோமொரு காலத்துமே.

[120]


படைத்துமொழிக் கிளவி

கருங்குஞ் சாமுரித் தோர்கடம் பாடவிக் காமர்வெற்பைப்
பொருங்குங் குமந்திகழ் தோளண்ண லேபுடை போயடங்கா 
நெருங்கும் பணைமுலைக் காற்றாத நுண்ணிடை நேரிழைக்கோர்
மருங்குந் தரவல்லை யோமணி மாலிகை வாங்குதற்கே.

[121]


அறியே னென்றல்

சுருப்பார வார மறாமது ராபுரிச் சொக்கர்வெற்பில்
மருப்பாயு மாலிகைத் தோளண்ண லேவண்ட *லாட்டயர்ந்து
திருப்பாவை கோடி யிருப்பா ரெனுமித் தெரிவையரில் 
விருப்பா யவரெவ ரோதிரு மேனி மெலிவதற்கே.

[122]


அறியே னென்றவர் கறி[ய]வுரைத்தல்

செல்லாறு சோலைத் திருவால வாயர் சிலம்பில்வல்லி
நல்லா யுனையன்றி யாரறி வார்நளி னாரவிந்தைக் 
கல்லார மைக்கண் கடைக்கே கிடக்குமென் காதலென்பால் 
நில்லாது சென்றவர் பின்னே யலம்வரு நெஞ்சமுமே.

[123]


பெருமையிற் பெயர்த்தல் 

மல்லற் பழன வயல்மது ரேசர் வரையிலுவம் 
புல்லப் பொருத புயத்தண்ண லேமுறை பூண்டதங்க 
ளில்லத் தவரன்றி யென்போல் பவரு மினையவெல்லாஞ் 
சொல்லச் சிறியளன் றேயெம்மை யாளுஞ் சுரிகுழலே.

[124]


குலமுறை கிளத்தல்

உலம்பார்த்த தோளண்ணல் நீயர சாள்வ தொருகுலமெங் 
குலம்பார்க்கி லென்ன குலமுரைப் போங்குறு மூரல்கொண்டு 
வலம்பார்த்த செஞ்சிலை யார்சொக்க நாதர் மதுரையிலிச் 
சிலம்பார்க்குஞ் சீறடி வல்லி யெவ்வாறுனைத் தீண்டுவதே.

[125]


குலமுறை கிளத்தற் கெதிர்மொழி கொடுத்தல் 

உண்ணா வுவரி யமுதுமுத் தாரமு மும்பருக்கு 
மண்ணாளும் வேந்தர்க்கும் வீறல்ல வோமது ரேசர்வெற்பிற் 
பண்ணாகி வண்டமி ழின்பய னாகுமிப் பாவையுமோர்
பெண்ணா ரமுதல்ல வோபிறப் போவின்று பேசுவதே.

[126]


உலகுரைத் தொழித்தல்

கடம்பா[ர்]த்த வெங்களிற் றார்கடம் பாடவிக் கானல்முத்த
வடம்பா[ர்]த்த மாலிகைத் தோளண்ண லேகடல்மத்திட்ட நாள்
விடம்பா[ர்]த்த கண்ணியு நீயுமெங் கேளிர் விரும்புவதோ 
ரிடம்பா[ர்]த்த பின்பல்ல வோகொண்ட காத லிணங்குவதே.

[127]


வரைவு மறுத்தல்

கரும்பயர்க் குங்கனி வாய்வல்லி பால்வைத்த காதலுக்குப்
பெரும்பணைத் தோளி வரைவுநன் றேயிளம் பேடணைத்துச்
சுரும்பாற் றுந்தொங்க வார்மது ராபுரிச் சொக்கர்வெற்பிற் 
பொரும்படைக் கின்றரும் பும்பனை யாமுன் புனைந்துரையே.

[128]


அருமையி னகற்சி
மின்னங் கொடியை யருக்க லார்பெற்ற மெல்லியலா 
ரென்னம்பி யென்னை யிரந்துநின் றாயிமை யோர்பரவு 
மன்னஞ் சலிபுரி வார்மது ரேசர் வளைத்தெடுத்த 
பொன்னஞ் சிலைவெற்ப னேதமி யேனென் புகலுவதே.

[129]


தலைவன் ஆற்றாதுரைத்தல்
மலயுஞ் சிலைகுனிப் பார்மது ரேசர் வரையிலிந்த 
வலையுங் குழவியு மஞ்சலென் னாள்விர காலைத்தால்
விலையுந் தளர்ந்தொரு பாவிநெஞ் சேசென்று நின்றுநின்றீங்
குலையுந் தயாவுனக் கெத்தனை நாளென் றுணர்கிலமே.

[130]


அவளறிவுறுத்துப் பின்வாவென்றல்
கானேர் சடையர் கடம்பா டவியிடைக் கங்குல்வந்து
போநோ நீவரு நேரம்வந் தாலென் பொலன்கொடியைத்
தேனே திரைபெற்ற தெள்ளமு தேயென்று சென்றிரந்து
நானே தொடுத்தணி வேனண்ண லேயுன் னறுந்தழையே.

[131]


நின்குறை நீயே கூறென்றல்
தேன்போது மாலைத் திருவால வாயர் திசையளக்குங்
கான்போ தணிகடம் பாடவி யார்பொற் கரத்திருக்கு 
மான்போலுங் கண்ணி மனம்போல நின்றொரு வார்த்தை சொல
நான்போது மோநண்ப னேயுனைப் போலநலம்புனைந்தே.

[132]


தலைவனைப் பேதைமை யூட்டல்
காதமை சங்கக் குழையாளர் சொக்கர் கடம்பவனத்
தேதமை வாயென் றறிசிலை யேயுன தெண்ணிறந்த
சூதமை கல்விப் பரப்பிது வோமுன் றுணிந்ததெல்லாம்
பே[தை]தமை யோவண்ண லேயினியானென் கொல் பேசுவதே.

[133]


இளமைத்தன்மை கூறல்
நீரிற் குளிப்பித்து வண்டலம் பாவையை நீர்புகுந்து
வாரித் தருகில தென்றழு வாள்மது ரேசர்வெற்பில்
வேரித் தொடையண்ணல் நீகொண்ட காம விரகுக்கிவ
ளாரித் தரமுமுண் டோ கொண்ட காத லறிபவரே.

[134]


இளையவ ளென்றவட் கெதிர்மொழி கூறல்
துளவுக் கிணங்கு முகில்தொழு வார்சொக்கர் சூடுமதிப்
பிளவுக் கிணங்குந் திருநுத லாயிவன் பெண்பருவத்
தளவுக் கிளையவ ளானாலு மால மளந்தவிழிக்
களவுக் கிளமையுண் டோவென்கோ னீசொன்ன கட்டுரையே.

[135]


விளைவில ளென்றல்
நீயழிப் பாய்கட லேமணற் பாவையை நின்னையுமென்
றாயழிப் பாளென்று தான்முனி வாளன்பர் தங்கள்வினைத்
தீயழிப் பார்தந் திருவால வாயுறை செம்மலுற
வாயளிப் பாளிவ ளோகொண்ட காதல் வருந்துயரே.

[136]


மூதறிவுடைமை கூறல்
தன்சிற்றில் வாசலுமூதலு மாகத் தவிக்குமிந்த 
நெஞ்சிற் கிடக்கு நினைவறி வாளை நினையுமெழுத் 
தஞ்சிற் றெளிபா னாராவ வாயி வளவறநீ
வஞ்சித் தனையணங் கேயறி யாளென்ற வாசகமே.

[137]

என்னை மறைப்பி னெண்ணிய தரிதென நகுதல்
தூர்க்குந் தாள வயல்மது ராபுரிச் சொக்கர்வெற்ப 
[*1]ரேற்குங் கலவி யெனைமறைத் தார்சங் கெடுத்துதறி
யார்க்கும் படுதிரை முத்தறி யார்தர மாய்ந்தறிந்து 
சேர்க்கும் பொழுதினல் லாலிணங் காது தெரியலுக்கே.
[*1 ரேற்றுங்]

[138]


நகையாற்றாமை கூறல்
மறையால் வடித்த தமிழ்மைந்த னேடெதிர் வையையந்தண்
டுறையாளர் சொக்கர் வரையணங் கேயுன் றுணைவிமைக்கட்
கறையாடல் வேலின் கடையா லெறிந்து கவர்ந்துகொண்ட 
குறையா வியுமுன் குறுநகைக் கேகொள்ளை கொண்டனையே.

[139]


அஞ்சியச்சுறுத்தல்
காலம்பொல் லாதினிக் கங்குல்பொல் லாதுவிற் கானவர்தஞ் 
சீலம்பொல் லாதையர் செய்கைபொல் லாது திரிபுரத்தை
மாலம்பொல் லாதெரிப் பார்சொக்க நாதர் மதுரையிலிக்
கோலம்பொல் லாதண்ணலேகுறு காகொளெங் கோப்புனமே.

[140]


தலிவி[யை] நொந்து கூறல்
காலந் தெரிந்து மிளங்கா விடைசென்று கண்டுமிவர் 
சீலந் தெரிந்தும் பயனென் கொலோதிரை சிந்துவையை
கூலம் படச்சமப் பார்சொக்க நாயகர் கூடவிலென்
போலந் தரம்படு வாருள ரோமயல் பூண்டவரே.

[141]


மடற்றிறம் நினைதல்
சேதித்த போந்தை மடல்மாவை மேல்கொண்டு சென்றவரூர்
வீதித் தலைபுக்கு மீட்கைநன் றேகொள்ளை வேரிவண்டு
கோதிக்கமழ்கொன்றை யார்சொக்க நாயகர் கூடல்வஞ்ச
நீதிக் கயல்விழி யார்கவர்ந் தேகிய நெஞ்சினையே.

[142]


மடவேற்றையுலகின்வைத் துரைத்தல்
தொடியுங் குழையும் பணியணி வார்தமிழ்ச் சொக்கர்புயம்
படியும் படியி லிளைஞரெல் லாமெம் பரனணியும்
பொடியுந் திருத்தொங்க லுஞ்சங்க மேனிப் புதுநிறத்தோன்
கொடியுங் கிடைத்தல்ல வோபிழைத் தார்மயல் கொண்டபின்பே.

[143]


தலைவன் மடலேறுவே னென்றல்
செய்ப்பட்ட காவித் திருவால வாயர் சிலம்பில்வெறும்
பொய்ப்பட்ட நுண்ணிடைப் பூந்திருவேயொருபூங்கிழிபோர்
மைப்பட்ட கோல மதர்விழி யார்தம் வடிவொடுமென்
கைபட்ட போதவர் கற்பென தாமென்று காண்குவனே.

[144]


தன்னொடு மவளோடுஞ் சாற்றி வெளிப்படக்கூறல்
வன்னத் தருமவு லிச்சொக்க நாதர் மதுரைசுற்றும்
பன்னைப் பொதும்பர் விரகறி யாது புகுந்தழிய
மென்னைக் கிழியி லெழுதாதென் பேரு மெழுதிமற்றுன்
மின்னைத் தனியெழு திப்புகு வேனுங்கள்*ன் வீதியிலே.

[145]


தோழி எழுதவரிதென்றல்
விண்ணிற் றிரிநதி வீறாளும் வேணியர் வெள்ளிமன்றி
லுண்ணிற் பவர்பொற் கயிலைவெற் பாசரு ளோதிமொழிப்
பண்ணிற் சுவையு மெழுதிமுத் தோலையைப் பாயுமிரு
கண்ணிற் களவு மெழுதுவை யாகிலுன் கல்வி நன்றே.

[146]


எழுத வெளிதென்றல்
சினைத்தா ரிதழித் திருவால வாயர் சிலம்பில்வண்டு
கனைத்தா தரிக்குங் கனங்குழ லாயின்றுன் கன்னிகள்ள
வினைத்தா[ரை]ர வேல்விழி யாலென்னை யாளும் விரகொருகால்
நினைத்தா லெழுத வரிய[தொ]தென் றோவிந்த நெஞ்சினுக்கே.

[147]


அருட்குணங் கூறி மறுத்தல்
எழுதா மறையை யெழுதவென் றாலு மிடங்கொடுத்து
முழுதாளு மொன்றை முனியும தோநிண முக்கலகை
தொழுதாடு மூவிலை வேற்சொக்கர் மால்வரைத் [*1]தோன்றலென்னைப்*
பழுதாக வெண்ணினை யோயிது வோவுன் பயனறிவே.
[*தோன்றலென்னப்]

[148]


தோழி மடல் விலக்கல்
மானின்ற செங்கை மதுரேசர் சுந்தர மாறர்வெற்பிற்
கானின்ற கூந்தற் கயல்விழி யாளிதங் கண்டிங்ஙனே 
நீ நின்ற சோகமு முன்னா தரவு நிலையுஞ்சொல்லி
யானின்று வந்தல்ல வோநண்ப னேமட லேறுவதே.

[149]


மடற்பகுதி முற்றும்.

X. குறை நயப்பு 
 

தலைவனைக் கண்டமை கூறல்
மழைக்கோல மாட மதுரா புரேசர் வயிரமணிக்
குழைக்கோல வல்லிக் கிடங்கொடுப் பார்பொற் குலகிரியி
லுழைக்கோல நீல விழியா யொருவர்கை யோடுணங்குந்
தழைக்கோ லமுமவர் கோலமுங் காணத் தகாதெனக்கே.

[150]


மறுத்த லரிதென்றல்
தனைப்பார்ப்ப ருள்ளந் தளர்வர்தள் ளாடுவர் தண்டிவரால்
சினைப்பா[ர்]த்த வாவித் திருவால வாயர் சிலம்பில்வஞ்சி
யுனைப்பார்ப்ப தன்றி யினிவினை யேனென் னுரைப்பதுவே. 
[*1 லலகோட வற்குற்]

[151]


மறைந்தவ ளருகல்
சங்கத் தமிழுந் தமிழே டெதிர்சென்ற [*1]தண்டுறையுந் 
திங்கட் கலையமு தந்தரு பேருந் திசையெறியுங்
கங்கைச் சடிலர் கடம்பா டவிநின்ற காட்சியும்போல் 
மங்கைப் பருவநல் வாயுள தேயொரு மாநகரே.
<[*1தண்டுழையுந்]

[152]


தோழி புலந்து கூறல்
வெற்புஞ் சிலைகொண்ட வெள்ளிமன் றாளர் வியன்கிரியென் 
சொற்புன் கிழமை பொறுத்தணங்கேயுங்கள் தொல்குலத்தின் 
பொற்பும் புகழு மடனாணு மில்லறம் பூண்டுவிடாக்
கற்புந் தரமு நிலைபெறு மாறு கருதுகவே.

[153]


தலைவன் மடலேறுவ ளென்றல்
கிளிக்கே மதுரந் தருமின்சொ லாய்கொண்ட கேண்மையினி 
[*1]யொளிக்கே னெனுந்தர மல்லகண்டாய்கொன்றையூறுசெந்தேன்
துளிக்கே யலம்புஞ் சடைச்சொக்கர் மால்வரைத் தோன்றல்கையில் 
வெளிக்கே வருவை கிழிக்கே தெரியநம் வீதியிலே. 
[*1 மொழிக்கே]

[154]


தலைவி [*1]நேர்தல் 
தொல்லைத் தனிமர பும்பெரு நாணமுஞ் சோர்வுபடா
தெல்லைப் படுநமக் கென்றுகண் டாய்தரை யேழுங்கொண்டு
மல்லை பொருபுயத் தார்சொக்க நாதர் மதுரைவெற்பில் 
முல்லைக் குழலி யெனைய லாக மொழிந்தனையே.
[*1 நோதல்]

[155]


குறைநயப்பு முற்றும்.

XI. தழை யேற்பித்தல். 
 

தோழி தழை யேற்றல்
மருப்பார் சடைமுடி யார்மது ரேசர் வடித்ததமிழ்ப்
பொருப்பா வுனக்கினி யாவரொப் பார்புதுப் பூங்கமலத்
திருப்பாவை செவ்வியும் யான்செய்குற் றேவலுஞ்சேரநிற்கச்
சுருப்பார வண்டழை யின்றல்லவோ வந்து சோபித்ததே.

[156]


கூறுவன [வ]றியாது வந்தேனெனத் தழையேற்பித்தல்
விண்டார் புரஞ்செற்ற வெள்ளிமன் றாளர் வியன்கிரியிற்
றண்டா மரைத்திரு வேயென்சொல் வேன்சரு காயுணங்கும்
வண்டார் தழையு மவர்நின்ற சோகமும் வாசகமுங்
கண்டா லதற்கு மறுமொழி யாதொன்றுங் காண்கிலனே.

[157]


கைம்மாறு செய்ய வேண்டுமெனத் தழையேற்பித்தல்
வெறிக்குங் குமப்புய வெள்ளிமன் றாளர் வியன்கிரிமான்
மறிக்குங் கிளிக்கும் புனம்புக்க நாள்மதி யாதுநம்மைக்
குறிக்குங் கடகரிக் கோடுபுய்த் தாளக் குறித்தகையா
னெறிக்குந் தழையல்ல வோவணங் கேயென் னினைவதுவே.

[158]


தலைவியைத் தழை யேற்பித்தல்
கழைக்குந் தறிக்கு மடங்கா திருகவு ளுங்கரடங்
கொழிக்குங் கடாசலத் தார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
மழைக்கொந் தளக மயிலேயுன் கோல வனப்பனைத்துந்
தழைக்குந் தழையித் தழையிது வாடுந் தழையல்லவே.

[159]


தழைவியந் துரைத்தல்
ஆயுந் தமிழறி வாரால வாய ரணிவரைத்தேன்
பாயுந் தழைபட்ட பாடுகண் டால்மடப் பாவைகொங்கை
தோயும் பொழுதுன் றிருமார்பு மின்பத் துறைதெளிந்த
நீயும் புயமுமங் கேதுப டாது நெடுந்தகையே.

[160]


தழையேற்பித்தல் முற்றும்.

XII. பகற்குறி.
 

பகற்குறியிடங் கூறல்
மால்விரிக் கும்புக ழார்மது ரேசர் வடித்ததமிழ்
நூல்விரிக் குஞ்செம்மல் யாம்விளை யாடிட நொந்துவளை
சூல்விரிக் குந்தர ளக்குவை தோறுஞ் சொரியுநிலாக்
கால்விரிக் கும்பக லேவண்ட றாமலர்க் காவகமே.

[161]


குறியிடத்துக் கொண்டு சேறல்
சுனைபார்த்த நீலமுஞ் செங்கழு நீருஞ் சொருகிமுல்லை
நனைபார்த் துதறு நறுங்குழ லா[ய்]மட நாரைநந்தின்
சினைபார்க்கும் வாவித் திருவால வாயர் சிலம்பில்வண்டல்
மனைபார்த் திழைக்கவு நீர்விளை யாடவும் வந்தருளே.

[162]


குறியிடத்துய்த்து நீங்கல்
யாய்க்கோலங் கொண்டழும் புல்வா யிளங்கன்றின் [*1] யாய்ப்புலியார் 
தீக்கோல மேனித் திருவால வாயர் சிலம்பின்மின்னே
சாய்க்கோல வல்லிக்கு நீமணக் கோலந் தரித்திருநான்
போய்க்கோல நாண்மலர் கொய்திங்ங னேவரும் போதளவே.
[*1 யாய்ப்புலியூர்த்]

[163]


இடத்துய்த்து நீங்குந் தோழி தலைவனோடு கூறல்
எறிக்கும் படையண்ண லேவிடுப் பாய்விரைந் தெங்களைநீ
குறிக்குங் குறிவழி வந்தனம் யாஞ்சொக்கர் கூடல்வெற்பி
னெறிக்குங் கருங்குழல் வண்டலம் பாவையை நீர்முகந்து
தெறிக்குந் திவலை *கெடுத்தழி யாமுன்னஞ் செல்வதற்கே.
[*1 கொடுத்தழி]

[164]


பகற்குறி யெதிர்ப்பாடு
தேமென் குதலைத் திருவே யுமைப்பெற்ற தெண்டிரையிப்
பூமென் றழையிவர் பொங்கர்மற் றோவன்பு பூண்டடிமை
யாமென் பவர்க்குற வாரால வாய ரணிசிலம்பி
னாமென் பரிபுரத் தாமரை நோவ நடந்தனமே.

[165]


கலந்துழி மகிழ்தல்
கவட்டா யிரம்பொங்கர் சூழ்கடம் பாடவிக் காவலர்விற்
குவட்டா டகப்பொருப் பார்சொக்க நாயகர் கூடல்வெற்பின்
றெவிட்டா வமுதத் திருவனை யார்முலைச் செப்பிணையின்
சுவட்டா நிறையத் தவஞ்செய்த வாவென் றுணைப்புயமே.

[166]


தலம் பாராட்டல்
மயல்புக்க நெஞ்சுக் கயல்புக்க [*1]வாறு மதுரைப்பிரா
னியல்புக்க வெற்பி லெதிர்ப்பட்ட நாளென்னை யீடழிக்குஞ்
செயல்புக்க கண்ணி யனகா டவிகண்டு தேம்பிநெடும்
புயல்புக் கொளித்த துயர்சக்ர வாளப் பொருப்பெங்குமே.
[*1 வாளு]

[167]


ஆயத் துய்த்தல்
மஞ்சுக் கிணங்கும் பொழில்மது ரேசர் வரைபுகுது
மஞ்சொற் குதலை யயில்விழி யீரெமை யாளவந்த
பஞ்சுக் கிணங்கு மடிக்கே கிடந்து பரதவிக்கு
நெஞ்சுக் கொருநிலை சொல்லியன் றோவின்று நீர்சொல்வதே.

[168]


மறைந்தவற் காண்டல்
விரிந்திருக் காய்நின்ற வெள்ளிமன் றாளர்பொன் வெற்பிலெம்மைப்
பிரிந்திருப் பாரையும் போலிங்ங னேமுகம் பின்புரிந்து
புரிந்திருப் பாருமிப் பொற்றேரு மின்னமிப் [*1]பூம்புனமுந்
தெரிந்தொருக் கால்வரு மோதெரி யாதுமுன் செய்தவமே.
[*1 பூம்புனமத்]

[169]


தோழி கையுறை காட்டல்
மகம்பார்த் தயரும் வலாரிபொற் காமலர் மாலையிதென்
முகம்பார்த்து வாங்கி முடித்தருள் வாய்முடி மாறனுமாய்ச்
செகம்பார்த்த நீதித் திருவால வாயர் சிலம்பிடையஞ்
சுகம்பார்க்கு மின்சொ[ன]ல் லாய்புறந் தாழுஞ் சுரிகுழற்கே.

[170]


விருந்து விலக்கல்
திரைப்பால் வளைமூக் கெறிந்த நிலாமுத்தஞ் சிந்தியிரு
கரைப்பாயும் வையையந் தண்டுறை யார்கடம் பாடவிச்செம்
மரைப்பாலுந் தேனும்பசுந்தினை மாவு மகிழ்ந்துதழைப்
புரைப்பா னுகர்ந்தண்ண லேதங்கி யேகுள பொன்னகர்க்கே.

[171]


விருந்திறை விரும்பல்
பெருந்தாரை நெஞ்சன்றி யன்புசெய் வார்பிற விப்பிணிக்கு 
மருந்தா கியமது ரைப்பெரு மாள்செம்பொன் மால்வரையிற்
பொருந்தாரை வேற்கணல் வீர்கொடுப் பீரெனிற் புக்கிருந்தங்
கருந்தா தவருமுண் டோவுங்கண் மாளிகை யாரமுதே.

[171]


பகற்குறி முற்றும்.

XIII. பகற்குறிப் பிழைப்பு. 
 

பொழுதுநீட வருந்திக் கூறல்
பொன்னந் திகிரிப் பொருப்புமண் ணேழும் புரக்கவைத்த
சொன்னந் தருமவு லிச்சொக்கர் மால்வரைத் தோகைநல்லாய்
தன்னந் தனிக்கு மெனதாவி நின்று தவிப்பதற்கு
மின்னந் தலைவர் வருகில ராகிலிங் கென்செய்வதே.

[173]


தோழி கழறல்
துறக்கத் தவர்தொழு வார்மது ராபுரிச் சொக்கர்வெற்பி
லறக்கற் பனையவ ரோகடப் பாருன் னளவிலன்பு
சிறக்கத் தருநெஞ் சொழியநண் பாளர் திருவுளத்தே
மறக்கக் கொடுத்தனை யோவணங் கேயொரு வன்னெஞ்சமே.

[174]


தலைவியொடு பாங்கி தலைவன் வந்தமை கூறல்
கார்மணி நீழற் கடம்பா டவிக்கறைக் கண்டர்கொன்றைத்
தார்மணி மார்ப[த்] தடங்கிரி வாயிடை சாய்த்தடங்கா
வார்மணி யார வனமுலை யாய்நம் மவுணர்வருந்
தேர்மணி யோசை சிலம்புநஞ் சாரற் சிலம்பெங்குமே.

[175]


தலைவி பொறுத்தமை கூறல்
தானுந் தனிமையு மாகியிவ் வாறொரு தஞ்சமற்றென்
மானுந் தளர மறந்தனை யேபிறை வாயமுதுங்
கானுங் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானவண்டுந்
தேனுந் தருந்தொங்க லாயிது போலுமுன் சிந்தனையே.

[176]


வரைவுகடாதல்
வனக்கொன்றை யஞ்சடையார் மதுரேசர் வளைத்தசெம்பொற்
கனக்குன் றிரண்டன்ன தோளண்ண லேயுன் கரும்பனையாள்
தனக்குங் குடிமை யழகழி யாதுங்கள் சார்பினின்ற
வெனக்கும் பழுது படாதினி நீயெண்ணி லெண்ணநன்றே.

[177]


பகற்குறிப்புப் பிழைப்பு முற்றும்.

XIV. செறிப்பறிவுறுத்தல். 
 

செவிலி மையந் தலைவற் குணர்த்தல்
நாவிக் கருங்குழல் வாசங்கண் டோவல்லி நாணயனக்
காவிக் கடையின் விரகுகண் டோநஞ்ச யோனிமுதல்
சேவிக்கு நாதர் திருவால வாயர் சிலம்பிலினி
மேவித் தனிவிளை யாடலென் றாளன்னை வேலவனே.

[178]


தினைவிளைத்தமை கூறல்
மாலாற் புரப்பதை மாற்றிவிண் ணேழுமண் ணேழுமொரு
கோலாற் றனிபுரப் பார்சொக்க நாயகர் கூடலிளஞ்
சூலாய்ப் பசுங்கதி ராயண்ண லேகுரல் தூங்கியநீ[ள்]
காலாய்க் கிடக்கவுங் காலங்கண் டாயெங் கருந்தினையே.

[179]


களவொழுக்கத்தை வேங்கை நீக்கிற்றெனத்
தோழி தலைவற் குரைத்தல்

குழைபூட் டியகுறுங் கட்செவி யார்தமிழ்க் கூடல்வெற்பை
விழைபூட் டியதிருத் தோளண்ண லேகொலை வேங்கைவந்து
மழைபூட் டியகொடுங் கண்ணியு மாக வளைந்துகொண்டா 
லிழைபூட் டியகன்று மாவெங்ங[னே]யிங் கிடைநிற்பதே.

[180]


சிறைப்புறமாகத் தலைவி யிரங்கல்.
தாங்கத் தலைதள ருங்குலை வாழையின் றாறுசெந்நெல்
தூங்கத் தலைமணக் குங்கூடல் நாயகர் சொக்கர்வெற்பில்
வேங்கைக் கொழுஞ்சினை நீமுகை யாகப்பின் வெற்பரெம்மை
நீங்கப் பருவமு மாயல ராகி நிறைவதற்கே.

[181]


தோழி சிறைப்புறமாக வருந்திக்கூறல்.
உணங்கிச் சருகு படுந்தழை யாகிலு மோலவண்டு
பிணங்கிச் சுழலுமிச் சந்தனச் சோலை பிணங்கசுரர்
வணங்கிச் சரணம் புகுமது ரேசர் மலையவெற்பி
லிணங்கப் பிரியு மனமெமக் காகு மிளங்கொடியே.

[182]


தினைகொய்தமை கூறிவருந்தல்
நையுஞ் சிறுமருங் கிற்றிருப் பாவையு நானுமன்றே
கொய்யுந் தினையென் றறிந்தில மேயிளங் கூன்பிறையு
மையுந் தவழு மதில்மது ரேசர் வரையினியில்நான்
செய்யும் பரிசெது வோவிது வோமுன்செய் தீவினையே.

[183]


புனம்விட் டகல்வோர் புலம்பிக் கூறல்
கோடும் பிறைமவு லிச்சொக்க நாயகர் கூடல்வெற்பி
னீடுந் தனிநெஞ்சு நின்றுரு காமல்முன் னின்றதினை
தேடும் பசுங்கிளி காளெமைத் தேடித் திகைத்துநொந்து
வாடும் புரவலற் குத்துணை யாக வரவிடுமே.

[184]


இறைவனிலைக் கிரங்கல்
அனமென் சொலுங்கிள்ளை யென்சொலு மோவது இன்றிகல்வி
யினமென் [*1]சொலும்பிக னென் சொலுமோபுன வேற்றிருண்ட
கனமென் களத்தா னார்கடம் பாடவிக் காவுடுத்த
புனமென் சொலுமறி யேன்வந்து வாடும் புரவலற்கே.
[*1 சொலுமிக]

[185]


தலைவற் கிடங்கூறிற்றிலமென வருந்தல்
என்னேநங் கேள்வற் கிடமுஞ்செல் காலமு மின்னதென்று
முன்னே யறிய மொழிந்தில மேசங்க முத்தமிழுஞ்
சொன்னே *ர {*ய}முதுந் தெரிசொக்கர் கூடலிற் றோயவரு
மன்னோ மும்வெற்றி தணுங்கண் டாலெங்ங னாகுவரே.

[186]


வறும்புனத் தழுங்கல்
மருவிற் பொலிகொன்றை போலமண் ணேழு மதுரையுந்த
மிருபொற் [*1] புயம்பரிப் பார்சொக்க நாத ரியல்வளர்க்கு
மருவிச் சிலம்பு மிதணும்பொன் னூசலு மாயிருந்துந்
திருவைப் புறந்தந்த தாமரை போலுந் தினைப்புனமே. 
[*1 பரம்புயப்]

[187]


மனமழிந்திரங்கல்
அலையுந் திருநதி யுஞ்சந்த்ர ரேகையு மாடரவு
மிலையுஞ் சடைமுடி வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பில் 
வலையுங் கணியுமில் லாமலென் னேயொரு மாலுமெண்ணெண்
கலையுங் கவர்ந்தன ரோவஞ்ச ரோசிலைக் கானவரே.

[188]


பதிநோக்கி வருந்தல்
வானா டருமறி யாமது ரேசரை வந்திறைஞ்சா
தானாடும் பேரின்ப வீடல்ல வோசந் ததமுமொரு
வேனாக நின்று மறுகியுள் ளாசைகொண் டீடழிந்து
தேனார் குதலையின் சொல்லிசிற் றூர்செலச் சிந்திப்பதே.

[189]


செறிப்பறிவுறுத்தல் முற்றும்.

XV. இரவிற்குறி. 
 

இரவிற்குறி வேண்டல்
கொங்கைத் துணைகொண் டனங்காபி ஷேகங் குறைபடுத்து
மங்கைப் பருவ மடந்தைநல் லாய்மது ரேசர்வெற்பிற்
கங்குற் பொழுது புயலள காடவிக் காடுபுக்க
கொங்கற் கொடிநெடுந் தேரையெவ் வாறின்று தூண்டுவதே.

[190]


ஆற்றது தீமையால் இரவுக்குறி மறுத்தல்
கடங்கொழிக் குங்கைப் பொருப்பொரு பாலொரு பாலடங்கா
விடங்கொழிக் கும்பைப் பணியொரு பால்முத்த வெள்ளைநிலா
வடங்கொழிக் கும்புயத் தார்மது ரேசர் வரையிலிந்தத்
தடங்கொழிக் கும்பகை வெள்ளமெவ் வாறண்ணல் சாதிப்பதே.

[191]


ஆறெளிதென்றல்
குலவும் பொருபரித் தேர்ச்சொக்க நாயகர் கூடலினா
லுலவுங் கருங்கங் குலுஞ்சரி சாரலு முங்கணகை
நிலவுங் கருணை விழிவேலு நீர்தந்த நெஞ்சும்பெற்றாற்
பலவெம் பகையுமொரு பொருளோ மடப் பாவையின்றே.

[192]


நினக் கேதமுறத் தலைவி யிறந்து[படு]மென்றல்
வாருக் கிணங்கு முலையுமை பாகர் மதுரையிலுன்
போருக் கடுகளி றஞ்சுமென் றாலும் பொருவரிய
தாருக் கிணங்கும் புயபூ [*1] தரர்தடஞ்* சாரனின்ற
சூருக் கிவளஞ்சு மஞ்சமென் னோவந்து சூழுமென்றே.
[*1 தரர்கடஞ்]

[193]


தலைவ னாற்றாதுரைத்தல்
வரிக்குங் குமமுலை தோயாத காதல் மதனவிடாய்
பரிக்குஞ் சலம்புரி பாவிநெஞ் சேயிளம் பானிலவங்
குரிக்குஞ் சடாடவி யார்சொக்க நாயகர் கூடலினான்
தரிக்குந் தகைமைய தோமடப் பாவை தருமயலே.

[194]


தோழி யுடம்படுதல்
சுணங்குங் கிணங்கு முலையிட மாகிய சொக்கர்வெற்பி
னிணங்கக்குஞ் செஞ்சுடர் வேலண்ண லேநிரை வெங்களிற்றின்
கணங்கெட் டிரிய வரிதிரி சாரலிக் கங்குல்வந்தால்
அணங்குக் கிணங்குவ தோவறி யேனு னவமதியே.

[195]


தோழி தலைவியோடு இரவுக்குறி வேண்டல்
வள்ளத் தமுதனை யாய்சிலை யாளி வடித்தமயல்
வெள்ளத் தளவின்மை யேதுசொல் வேன்கொள்ளை வேரிவண்டு
கொள்ளக் கமழ்கொன்றை யார்கூடல் வாய்நெஞ்சு கொண்டொருவர்
உள்ளப் பவனி வருங்கங்குல் தானொன் றுரைத்திலரே.

[196]


வருந்தொழிற் கருமைநினைந்து தலைவிவருந்தல்
மஞ்சுங் கடகரி யுந்தெரி யாமல் வயவரிதன்
னெஞ்சுங் கலையுங் கருங்கங்குல் வாய்நெடும் போர்மறலி
யஞ்சுஞ் சரணத்த னாரால வாயி லரும்புமதிப்
பிஞ்சும் பொருநுத லாயன்ப ரோவரும் பேறெமக்கே.

[197]


தலைவி இரவுக்குறி தேர்தல்
மறியாளர் செங்கை மழுவாளர் சொக்கர் மதுரைவெற்பர்
குறியா நெடுங்கங்குல் வந்துநின் றாலவர் கொள்கையொன்று
மறியாக் களவில்லை நீயறி யாத வறிவுமில்லைச்
சிறியா ளொருதமியே னணங்கே யென்கொல் செப்புவதே.

[198]


தலைவி இரவிற்குறி நேர்ந்தமை தோழி தலைவற் குரைத்தல்
கணைக்கோ டுலவுங் கடம்பா டவியர் கனகவெற்பி
லிணைக்கோடு சீறு மிளமுலை யாளென ரென்ற தந்திப்
பணைக்கோடு பாயும் புயகே சரியெனைப் பார்த்துரைத்த
துணைக்கோல வாய்மை மறுத்துள தோவொன்று சொல்லுவதே.

[199]


இரவிற் குறியிடம் வினாதல்
மற்குன் றடுபுயத் தார்மது ரேசர் வரையிலிரு
பொற்குன் றடுமுலைப் பூவைநல் லாய்விண் புகுந்தடங்காக்
கற்குன் றருகுங்கள் சீறூர் வருகருங் கங்குல்வந்து
நிற்கின்ற சூழலில் நீர்விளை யாடு நிலையதுவே.

[200]


இரவிற் குறியிடங் கூறல்
மண்ணும் புனலு மறாமுடி மாதர் மதுரைவெற்பி
லெண்ணும் பிரிவோ டிரவுநின் றாடிட மெக்கலையு
நண்ணுங் குருசி ல்ருகுசென் றார்தனி நன்னெஞ்சமுங்
கண்ணுங் கவரும் புதுமலர்ச் சோலையுங் கைதையுமே.

[201]


தாய் துயிலறிதல்
வல்லையஞ் சாத முலையுமை பாகர் மதுரையிலோ
ரெல்லையஞ் சாத களிமத யானை யிருளிடையே
கொல்லையஞ் சாரல் கடந்தணங் கேருங் குரம்பைமுன்றில்
முல்லையஞ் சாது பரிந்திடி போல முழங்கிநின்றே.

[202]


தோழி தலைவன் வந்தமை கூறல்
தொங்கற் சடாடவி யார்மது ராபுரிச் சொக்கர்வெற்பி
லங்கட் கயலம் புயத்திரு வேவண் டலையொழிவாய்
வங்கக் கடலும் வளர்தாரு வுங்கண் வளருமிந்தக்
கங்குற் பொழுது துயிலெழுந் தாலுங் களிமயிலே.

[203]


இரவிற் குறியிடத்துத் தலைவியைக் கொண்டுசேறல்
காமே தகுதடஞ் சூழ்கடம் பாடவிக் காவலர்நாட்
டாமே யினியணங் கேயின்ப வாரிநம் மன்பர்கங்குல்
தாமே வாவு மவற்கெதி ரேயிளந் தண்டலைவாய்
நாமே செலவுந் தவந்தந்த வரவிற்றை நாணமக்கே.

[204]


குறியிடத்து நீங்கல்
கொத்தலர் கொன்றையந் தார்ச்சொக்க நாயகர் கூடல்வெற்பிற்
புத்தலர் கொய்து வருவலின் னேயிமைப் போதளவுந்
தொத்தலர் மாலைச் சுரிகுழ லாயன் றுணைமுலைமே
னித்தில மாலை நிலவினில் லா[ய்]புன்னை நீழலிலே.

[205]


குறியெதிர்ப்பாடு
திரிபுரத் தாடற் றிருவால வாயர் சிலம்பிலின்பஞ்
சொரிபுரத் தாம வனமுலை யீர்கங்குல் தோடவிழ்க்கு
மரிபுரத் தாமரை யோவரை யாமத்தென் னாவிதந்த
பரிபுரத் தாமரை யோவினிப் பாவி பணிவதுவே.

[206]


கலந்துழி மகிழ்தல்
மல்லுங் குழைபுயத் தார்மது ரேசர் வரையில்வல்லிப்
புல்லும் புளகமு மானன சோபையும் புல்லப்புல்லக்
கல்லுங் குழையு நயமுமெய் யாத கலவியுநான்
சொல்லுந் தரமல்ல வேயெளி தோவது சொல்லுதற்கே.

[207]


நலம் பாராட்டல்
மண்ணிற் பரக்கும் புகழ்மது ரேசர் வரையினகை
வெண்ணித் திலத்தில் மகிழ்ந்தன மேரின்ப வீடளிக்கும்
பண்ணிற் கனிந்த குதலையஞ் சீறடிப் பாவைகடைக்
கண்ணிற் கிடக்கு மொருகோடி நேயமுங் காதலுமே.

[208]


விடுத்தல்
துறக்குந் தகைஞர் தொழுமது ராபுரி[ச்] சொக்கர்வெற்பின்
மறக்கும் படியல்ல நீ[ர்]தந்த காதல் மருங்கிறுக்கும்
நிறக்குங் குமமுலை யீர்தலை நாளையில் நீர்பிறந்த
சிறக்குஞ் சரோருகந் தேடுமுன் னேசெல்லுஞ் செல்லுமின்றே.

[209]


வரைவுகடாதல்
புனங்காவல் போனது கங்குலென் றாலெங்கள் பொன்னகர்யாய்
மனங்காவல் போலல்ல வேயையர் காவல் வணங்கலர்பாற்
சினங்காலும் வேற்கைத் திருவால வாயர் சிலம்பமற்றுன்
றனங்காவல் கொண்டிவள் போற்றனங் காவல் சமையினன்றே.

[210]


ஊர்புகு குறி கூறென்றல்
சிங்க முழக்குஞ் சிலநெறி நீநிகர் சென்றுபுக்கா[ற்]
சங்க முழக்குந் தடஞ்சிலம் பாசல ராசிபுக்க
வங்க முழக்கைத் திருமது ரேசர் வரையிலெங்கள்
அங்க முழக்கு மிடர்க்கது காணின் றருமருந்தே.

[211]


அவனளி சிறத்தல்
காதள வானகண் ணாயவர் பால்வைத்த காதனெடும்
போதள வாக விரித்துரைத் தாலும் பொருப்பரசின்
சூதள வாமுலை தோய்வா ரழகிய சொக்கர்வெற்பி
லேதள வாமறி யேனறி யேனிதற் கென்சொல்வதே.

[212]


இரவிற்குறி முற்றும்.

XVI. இரவிற்குறிப் பிழைப்பு. 
 

அல்லகுறி தோழி தலைவிக் குரைத்தல்
ஓடைக் குவளையங் கண்ணியென் னோவென் றுணர்கிலமண்
கூடைச் சடாதரர் கூடலங் கானலிற் குன்றெழுந்த
வாடைக் கொசியு மிளமடற் றாழை வனத்தொதுங்கும் 
பேடைக் குருகொன்று துஞ்சிலகா ணும்பெருங்கங்குலே.

[213]


அல்லகுறி தலைவன் சிறைப்புறமாகத் தலைவி கூறல்
வளைக்கும் பிறையர் மதுரேசர் தாளை வணங்கலர்போ
லிளைக்குஞ் சிறிய மருங்குனல் லாய்சங் கெறிதரளம்
விளைக்குங் கருங்கழிப் புன்னையங் கானலில் வெள்ளிவந்து 
முளைக்குந் தனையுமென் கண்ணும்புள் வாயு முகிழ்த்திலவே.

[214]


காவல் கடுகுதல்
வாயுறங் காகலை சூழ்மது ரேசரை வாழ்த்தவர்போற்
பேயுறங் காத பெரு[ங்]கங்குல் வாயெனைப் பெற்றெடுத்த
தாயுறங் காளிந்த வூருறங் காதலை சாய்த்தொருகா
னீயுறங் கா[ய்]துடி யேயென் கொலாமன்பர் நெஞ்சுமின்றே.

[215]


காட்சியாசையினிற் களம்புக்குக் கலங்கல்
போரம் பழிய விருகுழை யோடிப் பொருதெனக்கு
வாரந் தருகண் மடமயி லேவணங் காதவர்க்குக் 
கோரந் தருமழு வார்சொக்க நாயகர் கூடலிற்கல்
லாரந் தருவதுண் டோகழிக் கான லலைக்கண்டலே.

[216]


தலைவி புறம்போதல் கண்டு செவிலி மையுறுதல்
வாம்பாய் பரிநெடுந் தேர்ச்சொக்க நாதர் மதுரைநறுந்
தேம்பாய் கமலத் திருவணை யாள்துயில் சேரவிந்தப்
பூம்பா யலுமென் புணர்முலைப் பாயலும் போலமற்று
மாம்பா யலுமுள தோவென்ன மாய மறிகிலமே.

[217]


செவிலி தோழியை முனிதல்
ஊரார வாரந் தவிராத கங்குலி லூடுறுவத்
தேரார வார மனையுள தாம்புணர்ச் செப்பைவென்ற
வாராரா வார முலையுமைப் பாகர் மதுரையிலிப்
பேரார வாரம் பெருகவென் றோமகப் பெற்றதுவே.

[218]


அய்யச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்[யெ]யன மாற்றி மெய்வழிக் கொடுத்தல்
தீயாடு செங்கைத் திருவால வாயர் சிலம்பின்முன்றிற்
போயாட வும்பக லஞ்சிநிற் பாடன்னைப் போக்கிநெடும்
பேயாடுங் கங்குற் கடைகடந் தாளென்று பெற்றெடுத்த
தாயா னவளுரைத் தாலினி யேனொரு சான்றிதற்கே.

[219]


செவிலியைத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி தலைவிக் குரைத்தல்
கடித்தா தவிழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிலோர்
வடித்தாரை வேலண்ணல் வந்ததுண் டோவென்பன் வாய்மடிப்பன்
அடித்தா மரையின் சுவடிதன் றோவென்ப ளன்னைகள்ளம்
பிடித்தா ளெனவணங் கேகிவந் தாடன் பிணைவிழியே.

[220]


இரவு வாரலென்றல்
நிறங்கடை வேலண்ண லேகங்குல் வய்வந்து நீநின்றெங்கள்
புறங்கடை பற்றிப் பொலிவழிந் தாலுமைப் பூதமுத
லறங்கடை நின்ற பிரானால வாயிலெம் மன்னைநெஞ்சின்
மறங்கடை நின்றுகொண் டாலென்செய் வேனிவ் வாவினுக்கே.

[221]


பகல் வார லென்றல்
எழுங்காள கூட விடங்கால நின்றெதி ரேன்றமர்புக்
குழுங்கால கண்டவை வேலண்ண லேயுள மொன்றுபட்டுத்
தொழுங்காத லர்க்குற வார்கடம் பாடவிச் சொக்கர்வெற்பிற்
கொழுங்கா விரவி யெழுங்கால் வருவது கொள்கையன்றே.

[222]


இரவும் பகலும் வாரலென்றல்
ஒருபோ தலரொரு போதையர் காவல்மற் றுன்வரவுக்
கிருபோதும் போதல்ல காணண்ண லேகல் லிபங்குழையக்
குருபோத ராயிருப் பார்கூட னாயகர் கொண்டவிடந்
தருபோர யில்விழி யாளெங்ங னேவுயிர் தாங்குவதே.

[223]


தோழி தலைவனை நொந்துகூறல்
எவர்க்கா யினுநல் லறிவொரு கோடி யெடுத்துரைக்கு
மவர்க்கா ரறிவு சொலத்தகு வாரவர் தாம்வணங்குங்
கவர்க்கால மூவிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்
துவர்க் காமவல்லி துயரறியா ரென்கொல் சொல்லுவதே.

[224]


இரவிற் குறிப்பிழைப்பு முற்றும்.

XVII. ஒருவழித் தணத்தல். 
 

அலரறிவுறுத்தல்
மலர்மாலை யம்புயத் தார்மது ரேசர் வரையிலெங்கள்
குலமாலை வல்லி குவிமுலை மேல்வஞ்சிக் கொம்பனையார்
சிலமாலை முத்த மணிவதல் லாது தெரிந்துதெரிந்
தலர்மாலி கைபுனைந் தாலண்ண லேயென்கொ லாவதுவே.

[225]


ஒருவழித் தணப்பு கூறல்
கூடிற் பெருகுங் குவிமுலை போல்வசைக் குன்றகன்று
நீடிச் சுருங்கு மருங்குலைப் போற்பிறை நீரரவஞ்
சூடிச் சிறந்த முடிச்சொக்கர் மால்வரைத் தோன்றலினி
நாடித் தெரிவை பழிபிறங் காம னயந்தருளே.

[226]


பிரிந்தவழிக் கலங்கல்
மாகந் தரிக்கும் பிறைமுடி யாளர் வளர்மதுரைப்
போகந் தரிக்கும் புணர்முலை யாயுயிர் போய்விடவெற்
றாகந் தரித்திருந் தாலுநண் பாள ரறமறந்த
சோகந் தரித்[தெ]தங்ங னேயிருப் பாரொரு தோகையரே.

[227]


ஆடிட மறந்தமை கூறல்
கோட்டும் புதிய வரிமணற் பாவையைக் கோலஞ் செய்யச்
சூட்டுந் தொடைகொண்டு வந்துநிற் பார்சொக்கர் கூடல்வெற்பிற்
பூட்டுந் தரள வடமும்பொன் னாணும் பொறாதிடையை
வாட்டுந் துணைமுலை யாய்மலர்க் காவு மறந்தனரே.

[228]


பெற்றவழி மகிழ்தல்
கொன்றைச் சடாடவி யார்சொக்க நாயகர் கூடல்வெற்பி
லன்றைத் தலையளி செய்தகன் றார்குங்கு மாசலமு
மன்றற் றொடையு நிரம்பிய வாசம் வழங்குமிளந்
தென்றற் கொழுங்கன்றுக் கென்னகைம் மாறுகொல் செய்வதுவே.

[229]


தற்காட் டுறுத்தல்
[*1]காளக் கவிக்கருள் வார்கடம் பாடவிக் காவிலெம்மை
யாளத் தகுநண்பர்க் கார்சொல்லு வார்குழைக் கப்புறம்போய்
மீளப் பிறழுங் கடற்கே பிறந்து [*2] விரைகளபத் 
தாளச் சயிலத்தின் முத்தின் சலாபந் தலைப்பட்டதே. 
[*1 தாளக் ] [*2 விரைகளப்பத்]

[230]


பலவகையொடு புலம்பல்
கழிக்கான லங்கம்புள் கான்கண்டல் காள்வண்டு *காள்*{கால்}வருடச்
சுழிக்கா லமருங் கருநெய்தல் காள்முடி சூடித்தென்னர்
வழிக்கா யாகிருப் பார்சொக்க நாதர் மதுரையிற்பெண்
பழிக்கார் பரமறி யேனென்செய் தார்சென்ற பாதகரே.

[231]


மதியொடு புலம்பல்
நிலையா [*1]வுயிர்கொண்டு நீத்தகன் றாரை நினைந்துநினைந்
துலையா தவர்வர நாளுரை யாயும்ப ருண்ணவுண்ணத்
தொலையாத வாரமு தாமது ராபுரிச்சொக் கர்செம்பொற்
சிலையாளர் கண்மணி யேயவர் சூடுஞ் சிகாமணியே. 
[*1 யுயிர்கொண்டு]

[232]


கடலொடு புலம்பல்
மறங்காலுங் கூரிலை வாய்மழு வாளர் மதுரைநகர்ப் 
புறக்காவல் சூழும் புரிகட லேயொரு போதுகண்க
ளுறங்கா துழன்றொரு பெண்பாவி யிங்ங னுயிரழிவ 
தறங்காவ லோவுரை யாய்நெடுங் கால மகன்றவர்க்கே.

[233]


கடலொடு முனிதல்
சுழித்தாரை யங்கங்கை யார்சொக்கர் தாளைத் தொழாரெனவென்
விழித்தாரை வெள்ளஞ் சொரிதல்கண் டாயன்பர் மீண்டுசென்ற
வழித்தாரை யுஞ்சுவ டுந்தெரி யாது மறுதிரைகொண்
டழித்தாய் கடலுன்னை யோதிரு [*1]மாலுக் கணையென்பதே.
[*1 மாலக்]

[234]


கானலொடு புலம்பல்
தேக்கும் [பெ]பரும்பழி வெள்ளமுங் காதற் றிரைக்கடலுங்
கோக்கும் புறவெள்ளத் தார்பிழைப் பார்வெண் குடைநிழல்மண்
காக்குஞ் சடையர் கடம்பா டவிருறைக் கானல்முத்தம்
பூக்குந் தடம்புன்னை சூழ்கழிக் கானற் புளினங்களே.

[235]


புள்ளொடு புலம்பல்
உள்ளே நிரம்பி வரம்பழி காத லொருவருக்கும்
விள்ளே னெனவிருந் தேனிது நாள்வண்டு வீழவண்டு
கள்ளே கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிற்கம் 
புள்ளே யினியடங் காதடங் காதென் பொருமலுமே.

[236]


தன்படர் பிறர்மேற் சாற்றல்
அலராகி யாவி தளர்ந்துதள் ளாடி யலைந்துகண்ணீர்
புலராது மெய்பசந் தாய்நெய்த லேபொய் புரிந்தநெஞ்சிற்
கலரா னவரறி யாக்கடம் பாடவிக் கானலிலன்
பிலரா யகன்றன ரோவுன்னை யாளு மிறைவருமே.

[237]


இவற்றோடு தலைவற் குரைத்தது
குனியார் வளர்பிறை [சேர்]சொக்க நாயகர் கூடல்சுற்றும்
பனியார் மலர்ப்பொழில் காளளி காள்பெரும் பாவிபெறுந்
தனியாக நெஞ்ச மழிந்தறை போகத் தவிப்பதெல்லாம்
இனியா கிலுமுறை யீரெம்மை யாளு மிறைவருக்கே.

[238]


உரைத்திலையென நெஞ்சொடு நொந்து கூறல்
ஆயுஞ்சொல் லாள ரபிஷேகச் சொக்க ரடையலர்போற்
றேயும்பொய் யாவியின் செய்தியெல் லாமென் செயலறிவாள்
போயுஞ்சொல் லாள்செல்லும் பூவைசொல் லாதன்பு பூண்டநெஞ்சே
நீயுஞ்சொல் லாதுவந் தாயினி யார்சொல்லி நிற்பவரே.

[239]


கூடலிழைத்தல்
ஆருங் கருத்தறி வாரில்லை யேயுன்னை யன்றியன்பர்
சேருங் கருத்துள தோவுரை யாயிடை தேயவிம்மி
வாருஞ் செறுத்த முலையுமை பாகர் மதுரைபெற்ற
பேருந் தரித்தனை யேமட மாதர் பெருந்தவமே.

[240]


தோழியொடு புலம்பல்
எனக்குந் தலையெழுத் திப்படி யாலெனக் கேற்றநெஞ்சு
தனக்குங் கருணை சிறிதில்லை யாற்புரஞ் சாய்த்தசெங்கைக்
கனக்குன்ற வில்லி கடம்பா டவியிவை கண்டுமுள்ளன்
புனக்குஞ் சிறிதில்லை யாலுன்னை யோவென் னுயிரென்பதே.

[241]


தோழி யாற்றுவித்தல்
கவரோல முத்தலைச் சூலா யுதர்கடம் பாடவியிற்
றுவரோ டிணங்கிதழ் வாயணங் கேயுனைத் தோய்ந்தவன்றே
யுவரோத ஞாலஞ் சிறிதாக வுள்ளன் புடையநண்ப
ரவரோ பிரிந்திருப் பாரவர்க் கோநெஞ் சழிவதுவே.

[242]


ஆற்றாமை யுறுப்பு முதலியவற்றாற் கூறல்
மல்லார் புயத்தர் மதுரா புரிநண்பர் மாவின்பின்னே
செல்லா மறுகுமென் சிந்தனை போலெனைத் தேற்றுமிந்தச்
சொல்லா லமைந்துயிர் கொண்டிருந் தாலுந் துணைக்கைவளை
நில்லா ததற்கென்செய் வேனணங்கேயென்கொ னீசொல்வதே.

[243]


மாலைப்பொழுது கண்டிரங்கல்
மைம்மாலை வேல்விழி யீரன் பிலாத மவுணரொரு
கைம்மா றிதற்கினி யென்செய்வ ரோவறு கால்வருடுஞ்
செய்ம்மாலை மார்பர் [*1] திருவால வாயிலென் றீவினைபோ
லிம்மாலையும்பொரு தென்செய்ய வோவந் தெதிர்ப்பட்டதே. 
[*1. திருமாலை.]

[244]


இரவீ னீட்டம்
கற்றைச் சடிலர் கடம்பா டவியிலிக் கங்குலைநா
னற்றைப் படுகங்கு வென்றிருந் தேனென் னளவிலிந்த
வொற்றைத் திகிரியஞ் செல்வனெங் கேபுக் கொளித்தனனோ
விற்றைப் படுங்கங்கு லோகஞ்ச மோனிக் கிடுங்கங்குலே.

[245]


தோழியோடு வீட்டுயிர்த் தழுங்கல்
ஆயந் துயரி னியல்பறி யாளென் னியலறிந்த
நீயுங் கவலுமென் னெஞ்சறி யாய்கங்கை நீர்பெருகித்
தோயுஞ் சடாடவி யார்சொக்கர் தாளைத் தொழாதவர்போன்
மாயும் படியன்றி யாரறி வாரென் மயல்வெள்ளமே.

[246]


நொந்து தோழி மொழிதல்
மூளுங் கொடுங்கனல் வெண்ணகை யால்முப் பாமுங்கண்ணால்
வேளும் படவென்ற வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பி
னாளுங் கலவி யனுராக போக நலந்தருவார்
சூளுந் தெரிந்தன மாலினி யேதென்று சொல்லுவதே.

[247]


ஒருவழித்தணத்தல் முற்றும்.

XVIII. வெறியாட்டு. 
 

செவிலி தலைவி மெலிவுகண்டு ஐயுற்று மொழிதல்
விழியும் பசந்து கழைத்தோ ளிணையு மெலிந்துதளர்ந்
தழியுந் தனிநெஞ்ச மாகிநின் றாள்வையை யாறுசென்ற
வழியுந் தமிழ்மணக் கும்மது ரேசர் வரையிலின்னம்
பழியுந் தரவொழி யாதென்செய் தாள்குலப் பாவையின்றே.

[248]


கட்டுவிச்சியை வினாதல்
முலையோ பசலைமற் றோவறி யேன்றான் முகிழ்ந்ததின்றென்
சிலையோ வெனும்புரு வத்திருப் பாவைக்குச் செங்களப
மலையோ வெனுமுலை யாரொரு பாகர் மதுரையிலுன்
கலையோ தெளிந்ததம் மேவந்த மாயமென் கட்டுரையே.

[249]


கட்டுவிச்சி கூறல்
பீலிச் சுமடு சடைக்கா டணிந்துதிர் பிட்டருந்திக்
கூலிக்கு மண்சுமப் பார்சொக்க நாயகர் கூடல்வெற்பி
லாலிக்கு மஞ்ஞையுஞ் செயவா ரணமு மயிலுமுறச்
சாலிக்கு ணின்று சுழலுமென் னோகுறி சாற்றுவதே.

[250]


வெறியாடுசென்றல்
செறியால கண்டர் திருவால வாயர் [*1]சிலம்பில்வினை
வறியாள் துயருக் கருமருந் தாவ தளவறியா
மறியா ருயிரிவ ளுக்குயி ராய[வ]ரமுருகன்
வெறியா டுவதன்றி வேறுமுண் டோசில மெய்மருந்தே. 
[*1 சிலம்பில்வழை]

[251]


வெறியாட்டிடத்து வெருவிக் கூறல்
சூராடல் மூவிலை வேற்சொக்கர் கூடவந் தொன்மரபுக்
கேரா வெறியென்னை யேற்குமென் றாளென் னிடரிதனாற்
றீரா தெனிலய லாரென்சொ லாரின்று தீருமென்றாற்
கூராடல் வேலவர் கொள்கையென் னாமென்று கூறுவதே.

[252]


தலைவி தோழிக் கறத்தொடு நிற்றல்
துதிக்குஞ் சதுமறை யார்சொக்கர் மால்வரைத் தோகைமுன்னா
மதிக்கும் புனத்தில் வழங்கிய நான்மதம் பாயவந்து
சதிக்குங் கடகரி கையற்ற சோரித் தடவருவி
குதிக்கும் புனலிற் குளித்தளித் தானொரு கோளரியே.

[253]


வெறி விலக்கல்
மருமுகங் கொண்டதண் டார்ச்சொக்க நாதர் மதுரைவெற்ப
ரொருமுகங் கண்டு தெளிவதல் லால்வெற் புருவத்தொட்ட
பொருமுக வேலண்ண லோராறு செவ்வியம் பூங்கமலத்
திருமுகங் கண்டு தெளிவதுண் டோதுயர் சேயிழைக்கே.

[254]


தோழி செவிலிக் கறத்தொடு நிற்றல்
குருமலர்க் கோதைவென் வேற்சொக்க நாயகர் கூடற்செந்தேன்
றருமலர்க் காவி லிவளரு ளாண்மைத் தடங்கணல்லாய்
மருமலர்க் கோயிலவ் வண்டலம் பாவையை மற்றொருபாற்
றிருமணக் கோலம் புகுத்துநின் றானொரு செம்மலுண்டே.

[255]


செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல்
பொற்பா லிவளொரு பேதையென் றாலும் பொருவரிய
கற்பா லருந்ததி யுந்தர மோகட் செவிபுனைந்த
மற்பா வியபுயத் தார்மது ரேசர் வரையணங்கே
யிற்பா மரபின் மணிவிளக் காநமக் கெம்மனையே.

[256]


வெறியாட்டு முற்றும்.

XIX. வரைவு முடுக்கம். 
 

ஒருவழித் தணத்துவந்த தலைவனொடு தோழிபுலந்துகூறல்
காயுங் கவட்டிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்
தாயுங் கலவி யழுந்திய நாள்நெடுஞ் சுழன்றுபட்டுத்
தோயும் பருவக் கரும்பைநண் பாகழைத் தோளகன்று
போயுந் தரித்தனை யோதரி யாரன்பு பூண்டவரே.

[257]


அயன்மண முரைத்தல்
வாளைப் பொருகண்ணி தன்மணம் பேசி வரைபொருளு
நாளைத் தருகைக்கு நாளுமிட் டாரிசை நாவலர்க்கு
வேளைப் படுசொக்கர் வெள்ளிமன் றாளர்வெற் பானமற்றுன்
றோளைப் பிரிந்துயிர் வாழ்வதெவ் வாறிவள் சொல்லெமக்கே.

[258]


முலைவிலை கூறல்
கொலைக்குத் தலைப்படுஞ் சூலா யுத[ர்]சொக்கர் கூடலிலுன்
னிலைக்குத் தரமென்று சொல்வதல் லாது நிரைநிரைவண்
டலைக்கச் சுரிகுழல் வல்லிமுத் தார மலம்புமிள
முலைக்குத் தரமல்ல வேயண்ண லேநெடு மூதண்டமே.

[259]


தலைவ னாற்றாதுரைத்தல்
தோயந்துளும்புஞ் சடைச்சொக்கர் தாளைத் தொழாதவர்போல்
மாயம் புகுந்தடங் காமன மேயரை மாத்திரையிற்
காயந் தனதென்னு மாவியொப் பாகவிக் கன்னிதந்த
நேயந் தனதென்று நின்றயர்ந் தாயென் னினைவுனக்கே.

[260]


வரைவுமுடுக்கம் முற்றிற்று.

XX. உடன்போக் கொருப்படுத்தல் 
 

தோழி தலைவற்குத் தலைவி கருத்தறிவித்தல்
சுரும்பாடு கொன்றையந் தார்ச்சொக்கர் மால்வரைத் தோகைநெஞ்சந்
தரும்பா வனையென்ன தாமறி யேன்வண்டு தாதருந்த
வரும்பா யலில்வளர் வண்டலம் பாவையை மார்பிலணைத்
தரும்பா முலைகொடுத் தஞ்சன வார்புன லாட்டினளே.

[261]


தலைவன் அதரதியல்பு கூறி மறுத்தல்
வெல்லுங் [*1]கொடிவிடை வெள்ளிமன் றாளர்பொன் மேருவெற்பும்
வல்லும் பொருத வனமுலை யாய்கட வாரணமுங்
கல்லுங் குதிகொண் டுருகும்வெம் பாலைக் கடங்கடந்து
செல்லும் படிவல்ல தோதிருப் பாவைசெஞ் சீறடியே. 
[*1 கொடியிடை]

[262]


ஆதரங் கூறல்
கள்ளந் தருகயற் கண்ணிவெம் பாலை கடப்பதற்கு
னுள்ளங் கவலைப் படுவதென் னோபகை யோடவென்று
துள்ளம் பொருவிடை யார்சொக்கர் மால்வரைத் தோன்றலருள்
வெள்ளந் தலைப்படும் [*1] போதெளி தாமந்த வெஞ்சுரமே. 
[*1 போதென]

[263]


பிரியின் உயிர்வாழா ளென்றல்
குருக்குஞ் சிறுபிறை யார்சொக்க நாயகர் கூடலன்னார்
பெருக்கும் பழிபொறுத் தாற்றுமென் றாலுமுன் பிள்ளைவண்டா
மருக்குங் குமபுய முந்திரு மார்பு மறந்துயிர்கொண்
டிருக்குந் தகைமைய ளோவண்ண லேயென் னிளங்கொடியே.

[264]


உடன்போக்கைத் தோழி தலைவிக் கறிவித்தல்
ஆன்பா லருந்துங் கிளிகன்று தேடி யழுங்கவரி
மான்பாலு நாளை யருந்துமென் றார்வரி வண்டுமுரல்
கான்பாயு மாலைக் கடம்பா டவியிறைக் கானவெற்பில்
மீன்பாயும் வேல்விழி யாரன்பர் காதல் விளைவதுவே.

[265]


தலைவி வருந்திக் கூறல்
காம்போடு காம்பள விக்கடுங் கானங் கனல்கொளுந்தி
வேம்போ திடைநின்ற மானமும் பாலை விசைபரியின்
வாம்போர் வயவர் மதுரேசர் தாளை வணங்கலர்போற்
றாம்போ கவுநெஞ்[சு] சென்றதந் தோநந் தலைவருக்கே.

[266]


கற்புநிலை கூறி ஒருப்படுத்தல்
மற்புக் கலம்பெறு கோனாளர் சொக்கர் மதுரைவளை
விற்பக் கணிபுரு வத்திரு வேபெண் விரும்பியநாண்
பொற்புக் கயல்படும் பேருள ராகிலும் பூண்டதங்கள்
கற்புக் கயல்படும் பேருள ரோகுலக் கன்னியரே.

[267]


நாணழி[வு]க் கிரங்கல்
கொள்ளத் தகுமட நாண்குலப் பால்வருங் கோதையர்க்கு
மெள்ளக் களைய விதித்தில வேமெய் யுணர்ந்தவர்க்கு
வள்ளத் தமுதர் மதுரா புரிக்கற்பு வந்துவந்து
தள்ளத் தளர்ந்து தளர்ந்தழி யாநின்று சாதித்ததே.

[268]


தலைவி யுடன்போக் கொருப்பட்டுக் கூறல்
காமாரி வேரிக் கடம்பா டவிமலர்க் காவினறுந்
தேமாலை யோதிச் செழுந்திரு வேயித் தெரிவையர்முன்
னேமாறி வம்பல ருக்கிலக் காகி யிராமலின்று
போமா றொருப்பட்ட நெஞ்சல்ல வோமறம் பூண்டநெஞ்சே.

[269]


தலைவி போக்குடன்பட்டமை தலைவற் குரைத்தல்
மழுவிற் பொலிகரத் தார்சொக்க நாதர் மதுரைநன்னாட்
டெழுவிற்பொலிதிருத்தோளண்ணலே கொள்ளையிற்றுவண்டு
கொழுதிக் குழல்புறஞ் சோரமைமாரி கொழிப்பவென்னைத்
தழுவித் தழுவித்தழும்புகொண்டாள்மைத் தடங்கண்ணியே.

[270]


வண்டற் கையடை
தொழும்போ தருக்கருள்வார்சொக்கர்கூடற் சுழிக்கழிவாய்க்
கொழும்போ தவிழுந் தடங்கைதை காள்குட பாலிரவி
விழும்போது துண்ணென்று வண்டலம்பாவை விளித்துவிம்மி
யழும்போ தரவணைப் பீர[ளியால்]வந் தருகிருந்தே.

[271]


தோழி குறியிடங் கூறல்
மையுண்ட கண்டர் மதுரேசர் தாளிணை வந்திறைஞ்சார்
பொய்யுண்ட நெஞ்சிற் புகுமிருள் வாயிளம் பொங்கரிலுன்
மெய்யுண்ட நெஞ்சின் விரும்பிய காதல் விளைவதற்கு
நெய்யுண்ட கூரிலை வேலண்ண லேவந்து நின்றருளே.

[272]


தலைவியைத் தோழி குறியிடத்துக் கொண்டுசென்று
தலைவருக்குக் காட்டியுரைத்தல்
விள்ளாத காதலுன் மின்னனை யாளன்னை மெய்யுணர்ந்து
கொள்ளாது கங்குலில் வந்துநின் றாள்சொக்கர் கூடலிளம்
புள்ளார வாரந் தருமுன்ன மேயெம் புரவலனீ
துள்ளா நடவு பரிநெடுந் தேர்செலத் தூண்டுகவே.

[273]


தோழி தலைவியை ஓம்படுத்தல்
கங்குற் சுருளை நிகர்த்தற லோதி கலைநிரம்புந்
திங்கட் கதிரின் விரியுமந் நாளுந் திளத்துமையாள்
கொங்கைக் கிளகும் புயபூ தார்சொக்கர் கூடல்வெற்பா
மங்கைப் பருவ மெனவிரும் பாயிந்த வல்லியையே.

[274]


வழிப்படுத் துரைத்தல்
திருவே திரைபெற்ற தெள்ளமு தேயுமைச் செல்லவிட்டிங்
கொருவே னுயிர்தரித் தாற்றும தோவிறந் தோடிவரு
மருவே தனைதவிர்ப் பாரால வாயி லலாடக்கி
வருவே னொளித்தவெய் யோனலை யாள வருமுன்னமே.

[275]


உடன்போக் கொருப்படுத்தல் முற்றும்.

XXI. உடன்போக்கு. 
 

[சுரத்தி]டைக் கொண்டேகல்
களினக் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிளம்
புளினத் தனமென்னும் பூந்திரு வேநறும் போதவிழ்தேன்
றுளிநக் கொழுகும் பொழிலிருப் பாலுந் துயரகற்றி
நளினப் பரிபுரப் பாதங்கன் றாம னடந்தருளே.

[276]


உடன்போக்கு
தமர் வருவரென் றஞ்சிய தலைவியைத் தேற்றல்
விளையுங் கதிதந்த வெள்ளிமன் றானர் வியன்கிரிநாட்
டளையுங் கிளைவண் டலைகுழ லாயென் னடுசிலைக்கால்
வளையும் பொழுது புறஞ்சாய்வர் கோடி மறவர்மற்றுன்
கிளையும்பொரினுமஞ்சேனஞ்சுவேனொருகேண்மைகொண்டே.

[277]


சுரத்திடை நலம்பாராட்டல்
மல்லொன் றிருபுயத் தார்மது ரேசரை வாழ்த்தலர்போங்
கல்லென்ற பாலைக் கொடுமைகண் டாய்கனி வாயமுது
மெல்லென்ற கொங்கை யிளநீருந் தந்து விடாய்தணிய
நில்லென் றருளணங் கேயன காடவி நீழல்தந்தே.

[278]


கண்டோர் விருந்து விலக்கல்
மாதையும் பார்திரு மாதையும் பாரிந்த மாதினடிப்
போதையும் பார்சென்ற போதையும் பார்பொற் பொருப்பையும்பார்
சூதையும் பாரென் றெழுமுலை யாளன்பர் சொக்கர்வெற்பில்
யாதையும் பாரண்ண லேயெண்ண மேதெரிந் தேகுதற்கே.

[279]


தலைவன் தலைவிக்கு தகரணிமை கூறல்
குழைக்கா னிடையிடை யேயிரு பாலுங் குலைவிழும்நெற்
றழைக்கான மித்தனை யுங்கடந் தால்வண்டு கால்பரப்பித்
தழைக்கா னிசைக்குங் குழலணங் கேசொக்கர் சந்தனப்பூ
மழைக்கா ரணிபொங் கருந்தமிழ் நாடு மதுரையுமே.

[280]


தலைவன் தலைவிக்கு நகர்காட்டல்
தேம்பாய் கழனித் திருவால வாயர் சிலம்பிலினி
நாம்பாலை விட்டு நகர்புகுந் தேமண நாறுபச்சைக்
காம்பாடு தோளியுன் மங்கல நாணுங் களமுந்தந்த
பூம்பாளை வீசிளம் பூகா டவிநம் புறநகரே.

[281]


பதிவள முரைத்தல்
கொத்தம்புயமலர்க் கோதாயுன்பொன்னடிக் கொப்புளங்கொ
ளத்தஞ் செலமுன் விதித்தன வாயினு மாகமத்தின்
சுத்தம் பயில்சொக்கர் கூடலும் வீதியுந் தோரணமு
முத்தம் படுதிரு வாசலுங் காண முயன்றனமே.

[282]


உடன்போக்கு முற்றும்

XXII. தாயர் புலம்பல். 
 

செவிலி தோழியி வினாதல்
நற்றா[ய்] மனமுமென் னெஞ்சும்பின் னாக நடைபயிலும்
பொற்றா மரைமங்கை போனதெங் கேபிறைப் போதணிந்த
வற்றா நதிச்சடை யார்மது ரேசர் வரையில்வளை
விற்றா வியநுத லாயென்கொ னீகொண்ட வேதனையே.

[283]


தோழி யறத்தொடு நிற்றல்
மருளாத கற்பு மரபுமெண் ணாது மனம்பொருந்தப்
பொருளாசை யையர் புரிதல்கண் டாளன்பு பூண்டவருக்
கருளாளர் நம்பெரு மாளாவ வாய ரணிவரையிற்
சுருளா ரளகத் திருப்பாவை யென்கொல் துணிந்தனளே.

[284]


செவிலி தலைவி தொழி[ல்] நினைந்திரங்கல்
முகைத்தா மரைவிரிக் குங்கதி ரோனை முழுதுங்கண்டு
திகைத்தாடன் சீறடிக் குந்திகைத் தாணறுந் தேனொழுகும்
வகைத்தாம நீண்முடி யார்மது ரேசர் வரைவடவைத்
துகைத்தா ளலைப்பரப் புஞ்சுரம் போன கரிகுழலே.

[285]


செவிலி தலைவி பருவம் நினைந்திரங்கல்
துப்பிற் றிகழும் வரிமணற் பாவையைத் தோழியர்பா
லொப்பிக்க வாவென்றழைத்துநிற் பாள்கொல்லுலைமுகவாய்க்
கப்பித்த மூவிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்
தெப்பித் தெனவறி யேன்சுரம் போகவு மெண்ணினளே.

[286]


செவிலி நற்றாய்க் குரைத்தல்
முலைவாய் நழுவிற் றழுவியெ யாதழ மூண்டுநெஞ்சு
கலைவான் முதுக்குறை வேதுசொல் வேன்வெண் கதிர்பரப்பும்
மலைவாணர் மாறர் மதுரா புரிநம்மை வாடிநின்று
குலைவா யெனவி [ட்] டருந்ததி நாணக் குறித்தனளே.

[287]


நற்றாய் புலம்பல்
துஞ்சுந் துயிலொழிந் தன்னையெங் கேயென்று சொல்லிநினைந்
தஞ்சுஞ் சிறுகிளிக் கேதுசொல் வேனரும் பும்பிறையு
மஞ்சுந் தவழு மதில்மது ரேசர் வரையமுது
நஞ்சுந் தருமயற் கண்ணிவெம் பாலை நடந்தனையே.

[288]


செவிலி கற்புநிலை கூறித் தேற்றல்
சுழிக்கும் புனலி லெடுத்தளித் தானொரு தோன்றல்கைம்மா
றளிக்கும் புதுநினை வுக்கரு கான தருந்தமிழைக்
கொழிக்குந் திருநதி யார்கூடல் மாதுங்கள் கொள்கையெல்லா
மொழிக்கும் பரிசல்ல வோவல்லி போக வொருப்பட்டதே.

[289]


நற்றாய் மழைமுகிற் பரவல்
புயல்கா ளுமக்குப் பொறாமையுண் டாகிலும் பூங்குழல்கண்
டயல்காய்வ துங்க ளறிவல்ல வேயய னாரைத்தொண்டர்
செயல்காணுங் கூடற் றிருவால வாயர் சிலம்பிற்சென்று
கயல்காயுங் [*1] கண்ணி தனக்கிடு வீர்நிழற் காவணமே.
[*1. கண்களினக்கிடு]

[290]


நற்றாய் புட் பரவல்
மண்பா வியசடை யார்மது ராபுரி வள்ளலுமென்
பெண்பாவி யும்வர நீகரைந் தாலுனைப் பேணியுண
வுண்பா யெனமேம் பலிதரு வேன்பின்னை யுன்னிரண்டு
கண்பாவை யும்பெறு வாய்கிளை பேணுங் கருங்கொடியே.

[291]


நற்றாய் வேதியரை நிமித்தம் வினாதல்
ஆலைத் தடவயல் சூழால வாய ரடிதொழுமுக்
காலைக் கடனறி யந்தணர் காள்மை கலந்தகன்ற
வேலைத் தடங்கண்ணி யுஞ்சிலைக் காளையு மீளவந்து
மாலைப் புதுமணஞ் செய்வதுண் டோவென் வளமனைக்கே.

[292]


தாடத் துணிதல்
வடிக்கே வடிவு தருங்கணல் வாயுன் மயிலையொரு
கொடிக்கே தருவ னினிவருந் தேலுமை நோற்றுப்பெற்ற
கொடிக்கே யிணங்கும் புயபூ தரர்சொக்கர் தூண்டும்விடை
யடிக்கே யமைந்ததன் றோகட லாடை யகலிடமே.

[293]


தாயர் புலம்பல் முற்றும்.

XXIII. செவிலி கூற்று. 
 

கழையொடு வெறுத்தல்
கண்பெற்ற நெற்றிக் கடவுளல் லாதொரு காலமுநீ
பெண்பெற்ற பேறல்ல வேகழை யேவெண் பிறையொடந்தி
விண்பெற்ற செஞ்சடை வெள்ளிமன் றாளர் வியன்கிரியென்
பண்பெற்ற சொல்லி பதம்பெற்றபேறொன்றும் பார்த்திலையே.

[294]


குரவொடு வெறுத்தல்
வண்டோ லுறுத்த வுறங்கினை யோவென் மயில்வரவு
கண்டோ [ை] கயிலுட் [1] கரைந்தனை யோமழைக் கார்தவழ
விண்டோய் நெடுமதில் வெள்ளிமன்றாளர்பொன்வெற்பிலெது
கொண்டோ தடுக்கிலை நீவெறும் பாவை கொடுங்குரவே.
[*1. கரைந்திலவோ.]

[295]


சுவடு கண்டிரங்கல்.
அந்தச் சுவடண்ணல் விற்கோடி நாணிட்ட தம்புபட்ட
தந்தக் கடாசலம் பட்டதிங் கேமுத்தி தங்குமா
விந்தச் சரணத்தர் வெள்ளிமன் றாளர்தம் மேருவெற்பி
லிந்தச் சுவடென் மடந்தைகண் மாரி யிடைநின்றதே.

[296]


சுரத்தியல் கண்டு வருந்தல்
தீராக் கடுங்கனல் தன்னுரு மாறித் திரையடங்கப்
பாராய்ப் பரந்தவெம் பாலையி லேவெம் பராகமெழத்
தூராப் பகைதுரக் குஞ்சொக்கர் மால்வரைச் சூதளக்க
வாராத் தடங்கண்ணி யோவடித் தாமரை வைப்பதுவே.

[297]


செவிலி புணர்ந்துடன் வருவாரை வினாதல்
உனைப்போ லொருதிரு வந்திரு வேயுன் னுயிரனையான்
றனைப்போ லொருவனும் வந்ததுண் டோசினைச் சங்குளைந்து
மனைப்போத வீதி புகுமது ரேசர் வரையிலிந்த
நினைப்போ ருளஞ்சுடும் வெவ்வழற் பாலை நிலங்கடந்தே.

[298]


செவிலிதனக் கெதிர்வருவோர் கூறல்
எதிராய் வருந்திரு வேயிது நேர [*1]மிளங்களப
முதிரா முலைவல்லி யுஞ்சிலைக் காளையு மூரிமுன்னீர்
அதிரால காலமுண் பாரால வாய ரரசிருக்கும்
மதுரா புரியிளம் பூங்கா டவிசென்று வைகுவரே. 
[*1 மினங்களப ]

[299]


முனிவரை வினாதல்
கவளக் கடகளிற் றார்சொக்க நாதர் கடம்பவனத்
தவளப் பொடியணி யுந்தவத் தீர்தன் றனிமருங்குல்
துவளத் துவள விருதன பாரஞ் சுமந்துவரு
மவளைக் குருசில்பின் கண்டதுண்டோ விவ் வருஞ்சுரத்தே.

[300]


வேதியரை வினாதல்
மண்பா வியபுயத் தார்மது ரேசர் வடித்தமறைப்
பண்பாடு நீதிப் பனுவல்வல் லீர்பெற்ற பாவிநைய
வின்பாயும் வேலைய நீரழற் பாலையில் மெல்லடிப்பூம்
பெண்பாவை வந்ததுண் டோசிலைக் காளையைப் பின்பற்றியே.

[301]


உலகியல் கூறி மறுத்தல்.
வடித்தாரை வேல்விழி யாய்நறுங் காவி மலரெடுத்து 
முடித்தார தன்பயன் கொள்வதல் லால்மண் முழுதுங்கொண்ட
கொடித்தாம நீள்புயத் தார்சொக்கர் கூடற் சுனைகளும்பின்
பிடித்தா தரிப்பதுண் டோமக வாசை பெரும்பிழையே.

[302]


செவிலி கூற்று முற்றும்.

XXIV. மீட்சி. 
 

பின் சென்ற தலைவிவருத்தங் கண்டு தலைவன் மீட்சி கூறல்
தேடற் கரிய திருவேயுன் பூவையைத் தேடிநெஞ்சில்
வாடற் கவலை யொறுமறு காலும் வயப்புரவி
யாடற் கொடிநெடுந் தேரால வாய ரரசிருக்குங்
கூடற் றடம்பொழில் சூடுங்க ணாடு குறுகுவமே.

[303]


மீண்ட தலைவிக்குத் தலைவன் வளநகர் காட்டல்
பூம்பாளை யுஞ்செழுங் காவியம் போதும் புனைதிருவே
மேம்பாடு பூணு மிளமரக் காவிது மீனவற்கு
வாம்பாய் பரியிடு வார்மது ரேசர் வரையிலிணைக் 
காம்பாடு தோளணங் கேயது போய்நுங் கடிநகரே.

[304]


மீண்ட தலைவி தன்வரவை யாயத்தார்க் குரையுமென
அந்தணர்க் குரைத்தல் 
செந்தே னலங்கற் றிருவால வாய்நகர் சென்றானார்
தந்தே சுரைக்குஞ் சதுமறை யீர்தந் தயாவடங்கப்
பைந்தே னலர்கொய்ய வுஞ்சுனை யாடல் பயிலவுநான்
வந்தே னெனவுரை யீரென தாய மடந்தையர்க்கே.

[305]


தலைவி மீண்டமை கண்டோர் தோழிக்குரைத்தல் 
செய்க்காவி நாறுந் திருவால வாயர் சிலம்பில்வல்லி
யெக்கால மிந்த வுவகைபெற் றாய்நெட் டிதழ்விரிந்த 
மைக்காவி யங்கண்ணி யுஞ்சிங்கக் காளையும் வந்துநகர்
புக்கா ரினியெய்து மோவொரு நாளிப் புதுவிருந்தே.

[306]


தோழி சுரத்தியல் வினாதல்
குழலாற் றருமின்சொற் கோமள மேயக் கொடுஞ்சாத்தின்
அழலாற்றி யேநடந் தாயரு[ள்] கூர்வெள்ளி யம்பலத்தே
சுழலாய்ப் பரிவுகொள்வார் சொக்கர்தாளைத் தொழார்புரம்போ
னிழலாற் றிடையிலை யேயிளைப் பாறவு நிற்கவுமே.

[307]


தலைவி தோழிக்குச் சுரத்தியல் புரைத்தல்
மண்ணளிக் கும்புயத் தார்மது ரேசர் வரையில்வண்டு
பண்ணளிக் குங்குழற் பாவைநல் லாய்கடற் பாரிலொரு
விண்ணளிக் குந்தரு நீழலொப் பான விடலைதருந்
தண்ணளிக் கெந்தத் தழற்சுர மாகிலுந் தண்ணெனுமே.

[308]


மீட்சி முற்றும்.
உடன்போக்கு முற்றும்.

XXV. வரைபொருட் பிரிவு. 
 

வரைபொருட்குப் பிரிகின்றமை தலைவன் 
தோழிக் குரைத்தல்
சீறுந் தழற்சுரஞ் சென்றணங் கேநுமர் சிந்தைசெய்து
கூறும் பொருளனைத் துங்கொணர் வேன்கொடிக் கூடைமண்ணு
மாறும் படச்சுமப் பார்மது ரேசர் வரையில்வல்லி
யாறும் பரிசுரைத் தாற்றுவிப் பாய்சென் றருகிருந்தே.

[309]


தோழி தலைவனை நீயே கூறென்றல்
குருநாண் மலர்த்தொடை யார்சொக்க நாயகர் கூடற்செம்பொன்
றருநா ணுமருவக் குந்திரு நாளத் தமனியங்கொண்
டொருநா ளெனினும் பிரியே னெனவு முரைத்தண்ணனீ
வருநாளுங் கூறிலன் றோதெளி வாளுன் மடமயிலே.

[310]


தலைவன் தோழியோ டாற்றுவித்தலரிதெனப் பிரிதல்
விரியுஞ் சடைமுடி வெள்ளிமன் றாளர்பொன் மேருவெற்பிற்
சரியுஞ் சுரிகுழற் றைபனல் வாய்மெய் தழுவியன்பு
புரியும் பொழுதுகை சற்றே நெகிழப் பொறாதவல்லி
பிரியும் பரிசுரைத் தாலெங்ங னேயுயிர் பேணுவதே.

[311]


தலைவன் வரைபொருட்குப் பிரிந்தமை
தோழி தலைவிக் குரைத்தல்
போகப் புளக முலைப்பொருப் பாளும் புரவலரின்
றேகத் துணிந்தகன் றாரணங் கேதிசை யெட்டுமெட்டி
மாகத் தளவும் புகழ்மது ரேசர் வரையினிமா
தாகத் தனந்தரு மாறு தனிநெறியே.

[312]


தலைவி புலம்பல்
வீறாக்கி நின்று வியனாடு வோர்வெள்ளி வெற்பிலிங்ங
னாறாத் துயர்கொண் டொழியுநெஞ் சேபொரு ளாதரிப்பார்
பேறாக் குவதன்றி யின்றுநண் பாளர் பிரிவுநம்பால்
மாறாக் கலவி தருவதென் றாலென் வருந்துவதே.

[313]


பருவங் கண்டிரங்கல்
தீவந்த செங்கைத் திருவால வாயர் சிலம்பிலிள
வேய்வந்த வெள்வளைத் தோளணங் கேகடல் வெள்ளமொண்டு
தோய்வந் ததிர முழங்கியந் நாள்வந்து சொன்னகொண்டல்
போய்வந்த தின்னமும் வந்திலர் காணம் புரவலரே.

[314]


தோழி தலைவன் வரவுரைத்தல்
வேர்வந் தணிந்த திருநீ றிலங்க வியனடஞ்செய்
வார்வந்து துங்க வனமுலைப் பாகர் மதுரைவெற்பிற்
கார்வந்த தென்று கலங்காகொ ளுன்னைக் கலந்தகன்றார்
தேர்வந் ததுதிரு வேயினி வேறென்கொல் சிந்தனையே.

[315]


தலைவி மணமுரசொலி கேட்டு வருந்தல்
வேலிக் கிடைமள்ளர் செஞ்சாலி முற்றி விளைவளவுஞ்
சூலிக் கெறிமது ரைச்சொக்கர் மால்வரைத் தும்பிவென்றும்
பாலிக்கும் வேலவர்க் கோவன்றி யேயையர் பாலவர்க்கோ
வாலிக்கு மிந்த முரசெவர்க் காகநின் றார்க்கின்றதே.

[316]


தோழி நிதிவரவுரைத்துத் தலைவியைத் தெளிவித்தல்.
முறைநின் றடுகரி முன்னின்ற காளைக்கு முன்றிலினின்
றறையுங் கடிமுர சாரணங் கேநச் சராவுமதிக்
குறையுந் திகழ்முடி யார்கூட னாயகர் கூடலர்தந்
திறையுங் கொணர்ந்துதந் தாரிது காணுன் றிருமணமே.

[317]


வரைபொருட் பிரிவு முற்றும்.

களவு முடிந்தது.

 

2. கற்பு.

I. மணவணி.
 

தகரணிமீ னேன்றல்

கடம்பா டவிச்சொக்கர் கன்னிநன் னாட்டன்ன கன்னிமண
முடம்பா டணிமுர சார்க்கின்ற தாலமு தூறுநிறை
குடம்பா ரியுமணி மாளிகை கோடியுங் கோவைமுத்த
வடம்பா டலம்பு நெடுந்தோ ரணநடும் வாசலிலே.

[318]



எரிவலஞ் செய்யு மியல்புகண்டு தோழி யுரைத்தல்

கொத்தார மாலை முடிச்சொக்க நாயகர் கூடல்சுற்று
மித்தா ரணியி லெவர்க்கெய்து மோதன் னிறைவன்மலர்க்
கைத்தா மரைமங்கை காட்டா மரைதொடுங் காட்சியிந்த
மைத்தா மரைமலர்க் குள்ளே குடிகொண்டு வாழுவதே.

[319]


உழையர் வாழ்த்து

விடம்பா வியகண்டர் வெள்ளிமன் றாளர் வியனடஞ்செய்
கடம்பா டவியுள்ள காலமெல் லாமெய்க் கலவியின்ப
முடம்பா மெனவு முயிரா மெனவு மொளிருமுத்த
வடம்பாய் முலைவல்லி யுஞ்சிலைக் காளையும் வாழியவே.

[320]


நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி கூறல்
தலைநா ளிவர்தந்த பேரின்ப வாரிக்குந் தண்ணளிக்கும்
விலைநா ணமருல கென்றிருந் தேன்சங்க மெய்த்தமிணூற்
கலைநா வலர்தம் பிரான்கடம் பாடவிக் கன்னிமண
முலைநாண் முயக்கின் விலைக்கினி யேது மொழிவதுவே.

[321]


மணவணி முற்றும்.

II. இல்லிருத்தல். 

மணமனைச் சென்ற செவிலிக்குத் தோழி கூறல்.
கொலைத்தலை மூவிலை வேற்சொக்க நாயகர் கூடல்முற்ற
முலைத்தலை வல்லிகற் பேதுசொல் வேன்கனல் முக்குளிக்கும்
உலைத்தலை வேல்விழி யாய்வடமீனு மொதுங்கும் வெய்யோன்
மலைத்தலை செல்லிற் கடைத்தலையா மண்ணல் வாரணமே.

[322]


மணமனைச் சென்ற செவிலி நற்றாய்க் குரைத்தல்.
காயுங் கனல்மழு வார்கடம் பாடவிக் கானவர்பொன்
மாயுந் துடியிடை வல்லிநல் லாயுன் வயிற்றுதித்த
யாயுந் துணைவனு மென்போல் பவரு மெழின்கரு
நீயுந் தலைவனும் யானுமிவ் வூரு நிகர்க்கு மன்றே.

[323]


இருவர் காதலு மருவுத லுரைத்தல்
அலைப்பட்ட வாருதி மந்தா கினியிரண் டன்றியொன்றாய்த்
தலைப்பட் டதுதரம் போதும தோசடைக் காடுசந்த்ர
கலைப்பட்ட நாதர் கடம்பா டவியிடைக் கைகலந்து
நிலைப்பட் டிவர்பெற்ற பேரின்ப வாரிக்கு நீணிலத்தே.

[324]


இல்லிருத்தல் முற்றும்.

III. மணஞ் சிறப்பு

கருப்பத் தமைதிகண்டு இறைமகிழ்தல்
மங்கைக் கழகு வளரா லிலையிடை வந்துகுலச்
சிங்கக் குழவி குடிகொண்ட தால்நறுந் தேனொழுகுந்
தொங்கற் சடாடவி யார்சொக்கர் தாளைத் தொழாரின்முகங்
கொங்கைக் களிறு கருகியுள் ளேபயங் கொண்டனவே.

[325]


வெள்ளணி வியந்து கூறல்
அணிபூத்த கூட [*1]லபிஷேகச் சொக்க ரரசிருக்கும்
பணிபூத்த [*2]பாருக் கொருவிளக் காகப் பசும்புனிற்றுப்
பிணிபூத்த சாய லொருபிடி நாகம் பிறங்குசெக்கர்
மணிபூத்த தந்த மணியுல கேழும் வயங்குவதே. 
[*1 வபிஷேபிகர்] [*2 தாருக்]

[326]


மணஞ்சிறப்பு முற்றும்.

IV. பரத்தையிற் பிரிவு

கண்டோர் கூறல்
துரக்கும் பரிநெடுந் தேர்ச்சொக்கர் கூடற் றொடுகடல்மண்
புரக்குந் தலைவர் புகுந்தன ராகம் பொருதுகரை
பரக்கும் புதுப்புனல் கண்டெதி ரேறு பனிக்கயல்போல்
வரக்குங் குமமுலை யாரணி கோலி வனைந்தனரே.

[327]


தோழி தலைவியைப் புகழ்தல்
விற்போர் வலவன் கொடுமைதன் னேவல் விடாமலொன்றாய்
நிற்போ மையுமறி யாதொளித் தான்வெள்ளை நீறணிந்து
மற்போ தருபுயத் தார்சொக்க நாதர் மதுரைவல்லி
கற்போ வவனளி யோபொறை யோகரை *காண்பரிதே*{காண்கரியே}

[328]


சுடரொடு புலம்பல்
சிலைநாடு தோளண்ண லோடுசெந் தீவலஞ் செய்யுமந்தத்
தலைநாளில் நீயொரு சான்றல்ல வோவெண் டரளநிலாக்
கலைநாண் மதியர் கடம்பா டவியிற் கலந்தகலப்
பொலநாண் மணிவிளக் கேவிலக் காது பொருந்தினையே.

[329]


இறைவன் பரத்தமைக் கிரங்கல்
நறுமாந் தழையென்ன மேனிமுத் தாநகை யென்னவனப்
புறுமாண் டகைசெய்த மாயமெல் லாமழு வோடுகொண்ட
சிறுமான் கரத்தர் திருவால வாயிற் றெளிந்துமெய்யென்
றிறுமாந் திருப்பவ ராரெனைப் போலவொ ரேழையரே.

[330]


கனவுகண் டழுங்கல்
தோடிற் பொலியு மதுமாலை யஞ்சடைச் சொக்கர்நன்னாட்
டேடிற் பொலிதொங்கல் மார்பமென் கோனல்க வின்றுதுயில்
கூடிக் கருணைசெய் தீர்விழி காள்பயங் கொள்ளுமுன்னே
யூடிக் கெடுத்துவிட் டேனிது வோமுன்னை யூழ்வினையே.

[331]


தோழி தலைவனை இயற்பழித்தல்
ஆகம் பராயிருப் பாரால வாயில்நம் மன்பரின்பம்
போகம் பொறாதளிக் குந்திரு மார்பம் புணரவென்று
தாகம் பொறாதிருப் பார்க்கரி தாகித் தனதளவும்
மோகம் பெறாதிருப் பார்க்கெளி தாய்வரமுன் னின்றதே.

[332]


தலைவி இயற்பட மொழிதல்
எண்ணுங் கனவு நனவுமொன் றாக விளமுலையுங்
கண்ணு மனமுங் கலந்தக லார்கற்ப காடவியு
மண்ணும் புகழும் பிரான்மது ராபுரி வல்லியவர்
நண்ணும் பழுதுள தோவவற் கேபழி நான்சொல்வதே.

[333]


தலைவன் தலைவியை நினைதல்
அனமா யிளமயி லாயரங் காடு மரிவையர்பொற்
றனமார் படங்கத் தழுவுநெஞ் சேசலங் கொண்டெழுந்த
கனமா களத்தர் கடம்பா டவிமனைக் கற்பொடுநம்
மனமா ளிகையிருப் பாரென்செய் வாரிந்த வஞ்சனைக்கே.

[334]


தலைவன் தோழியை வாயில் வேண்டல்
விள்ளா மயல்கொண் டளியாது நீயன்று மீட்டவென
துள்ளா ருயிர்க்குயிர் வேறுமுண் டோபிறை யோடலர்ந்த
கள்ளாவி யங்கொண்றை யார்கடம் பாடவிக் கன்னியினம்
புள்ளா ரலங்கலங் கோதையல் லாலொரு போதெமக்கே.

[335]


தோழி வாயின் மறுத்தல்
தெளியுங் கலவி யழுந்திய நானன்பு சென்றுநெஞ்சு
சுளியுங் கருங்கங்கு லும்பக லானது சூடரவும்
அளியுஞ் சுழல்கொன்றை யாரால வாயினம் மன்பர்க்கின்று
வெளியுங் கருங்கங்கு லாய்விட்ட வாமெள்ள மெள்ளவந்தே.

[336]


தோழி தலைவியை வாயி னேர்வித்தல்
வாட்[டாரை காலு] மகுடா டவித்தொங்கல் வாசமறாத்
தாட்டா மரைமலர் தானல்ல வோமதத் தாரையறாக்
கோட்டானை யாவயத் தார்கூடல் வாயுன் கொழுங்கடையிற்
றோட்டாழ் ந[டைகொண்டு மென்மெலவந்து] துவளுவதே.

[337]


தலைவி வாயினேர்தல்
வாதுக் கிணங்குந் தமிழ்வையை நாடர் மதுரைநண்பர்
சூதுக் கிணங்கும தோநெஞ்ச மேவிடந் தோய்ந்திரண்டு
காதுக் கிணங்கு விழிமாத ருண்டு களித்தவின்பக்
கோதுக்கு நாமிருந் தாவிது வோவந்து கூடுவதே.

[338]


தலைவி தலைவனோடு ஊடியுரைத்தல்
பொன்னிற் கலவி நிறுப்பா ரிளமுலைப் போகமுண்பார்க்
கென்னிற் கலவி யிணங்கு மதோமது ரேசரெங்கள்
கன்னித் துறைவர் கடம்பா டவிவள்ளல் காதலித்துன்
சென்னிக் கணிவதெல் லாமவர் தாமரைச் சீறடியே.

[339]

வாக்குந் துணிவு மளவும் பரவியல் வாணர்தெள்ளிக்
கோக்குந் தமிழ்புனை வார்கூட னாடர்பொற் குன்றிலின்பந்
தேக்கும் பருவ மறிந்திது காலந் தெளிவித்தெம்மைக்
காக்குங் கடவு ளழிக்குமென் றாலெவர் காப்பவரே.

[340]


கலந்துழி மகிழ்தல்
துன்றுங் குழலி யனுராக போகந் தொலைவறநா
மன்றுந் தெளிந்தன மேமன மேவெள்ளி யம்பலமுங்
குன்றும் புகுந்து குடியிருப் பார்தமிழ்க் கூடலின்ப
மின்றுந் தெளிந்தன மேயின்ன மேதென் றியம்புவதே.

[341]


விருந்தொடு வந்தமைகண்டு ஆறிய தலைவியைக் கண்டோர் கூறல்
மருந்தாய்ப் பிறவி தவிர்த்தபொற் றாளர் மதுரையிற்செம்
பருந்தார்க்கும் வேலன் வரவுகண்டாள்முகம் பார்த்தொருவ
ரிருந்தாற் றரியவெங் கோபா னலம்விருந் தென்னுமந்த
வருந்தாப் புனல்கண் டவிந்தது காணு மருந்துதிக்கே.

[342]


புதல்வனோடு வந்தமை தோழி தெளிவித்தல்
கோடாத கோல்கொண்டு மண்புரப் பார்நங் குலமணியைத்
தேடா வகலத் தணிதல்கண் டாய்செழுந் தீவடிவில்
வாடா தணிகொன்றை யார்சொக்க நாதர் மதுரையினீ
யூடா மருந்தல்ல வோவணங் கேயவ் வொளிமணியே.

[343]


தலைவனை முனிதல்
அலைப்பாவை யஞ்சடை யாரால வாயெம் மழகழிந்த
முலைப்பால் முடையுங் கலையுங்கண் டாய்கடை முன்னர்நின்று
கொலைப்பால் விழியின் கொழுங்கடை யானலங் கூறுவிக்கும்
விலைப்பா வையர்செல்வ மேதொடு மோவெங்கள் மேகலையே.

[344]


இன்னாத் தொலையச் சூளெடுத்தற்கண் தலைவிகூறல்
நொதுமலர் வாழ்வுக்கு நோற்பார் கலவிக்கு நோற்றுநிற்கு
மதுமற வாயிங் கெழுமையு நீகொன்றை யாடகப்பூ
மதுமலர் மார்பர் மதுரா புரியந்த வல்லிநல்லார்
புதுமண வாளவுன் பொய்ச்சூளி லென்னெஞ்சு புண்பட்டதே.

[345]


தலைவி பரத்தையை யானையாக விசேடித்தல்
அடுக்குந் தலைவற் கபாயமெண் ணாநிற்கு மன்புசென்று
கொடுக்கும் பொருளுக் கலம்பிற வாது கொழித்தளந்து
தொடுக்குந் தமிழறி வார்சொக்கர் கூடற் றெடுத்ததொடர்
விடுக்கும் பொழுதடங் காதண்ணல் மேல்கொண்ட வேழநன்றே.

[346]


தலைவி தலைவனோடு புலந்து கூறல்
வீதித் தலையில் வியனாடு வாரிட்ட வெம்பரிக்குப்
போதித்த தேசிகர் நாமல்ல வோவெறும் பொய்யடங்க
வோதித் தமிய னுலைமெழு காகு முபாயமண்ணல்
சாதித் ததுநன்று நின்றின்ன மேதுகொல் சாதிப்பதே.

[347]


தலைவி புலவி தீர்தல்
பொய்யைக் கலவியந் தேன்மாலை யாகப் புனைந்துவஞ்சஞ்
செய்யர் சமைந்தொரு செம்மனின் றால்வெண் டிரையலம்பும்
வையைத் தலைவர் மதுரா புரியிலம் மாயமெய்யா
நையப் படைத்தன னேயென்செய் தானந்த நான்முகனே.

[348]


பாலனைப் பழித்தல்
[*1]வலத்தியல் சூல மதுரேசர் கோயில் வலஞ்செயப்போய்ச்
சலத்தியல் செய்து வருங்களி றேவிலை சாற்றிவிற்கு
நலத்தியல் சேரிக்கு நல்விருந் தாவது நாளுமுங்கன்
குலத்தியல் பாயிருந் தாலுன்னை யோநொந்து கூறுவதே. 
[*1. இச்செய்யுள் இலக்கண விளக்கவுரையிற் காட்டப் பெற்றுளது. (பக். 500)]

[349]


புதல்வனை முனிதல்
கனக்குன்ற வில்லி கடம்பா டவிநின்று கண்பிசைந்து
சினக்குந் தொறுமழுந் தெள்ளமு தேசிந்தை சென்றுருகிற்
றனக்கென் றவரன்பை யாசைகொண் டாடுமுன் றந்தைக்கல்லா
லுனக்குங் களிதந்த தோவெங்கை மார்கொங்கை யூற்றின்பமே.

[350]


புதல்வனை வினாதல்
மின்பூட்டு செஞ்சடை வெள்ளிமன் றாளர் வியன்கிரியிற்
பொன்பூட்டி யுன்றந்தை மார்பையுந் தோளையும் புல்லிப்புல்லி
யன்பூட்டி விட்டதும் போதாம லுன்னையு மாதரித்தங்
கென்பூட்டி விட்டன ரோவன்னை மாரென் னிளங்களிறே.

[351]


புதல்வனை வற்புறுத்தல்.
கொங்கோல வண்டிமிர் தார்ச்சொக்க நாயகர் கூடலுங்கள்
செங்கோல் முறைமை முழுதுங்கொள் வாய்பொற் சிறுசதங்கை
பொங்கோடை வாரண மேயுந்தை போலவெம் போலொருவர்
தங்கோல முந்தனி யுங்கண்டு போகை தவிர்ந்தருளே.

[352]


செவ்வணி விடுத்தற்குத் தலைவி யிரங்கல்
வாருங் குவடு பொருமுலைப் பாகர் மதுரைநல்லார்
சேரும் பொதுமனை வாசலெல் லாமொரு செவ்வணிபூண்
டுருந் தெருவுஞ் சிறுநகை யாடி யொருத்திசென்று
தாருந் தலைவரை யென்கில்நன் றேநந் தலையெழுத்தே.

[353]


செவ்வணி யியற் பழித்தல்
வடிபூத்த வேற்கணல் லீர்மட னாணை வனப்பழிக்கும்
படிபூத்த விற்பிறப் பேதுசொல் வேன்தொண்டர் பண்டைமுத்தி
யடிபூத் தருளும் பிரானால வாயி லரும்புமுல்லைக்
கொடிபூத்த தென்றொரு கொம்புசெம் போது கொடுவந்ததே.

[354]


பாணன் வரவு கண்டு தோழியுரைத்தல்
கனிப்பாட லின்னிசைப் பாணனங் காதற் கணவர்நண்பாற்
றனிப்பாயல் தந்த தறிந்தில னோபொற் றடங்கிரிவிற்
குளிப்பா ரரசிருக் குங்கூடல் மாநகர்க் கொம்பனையாய்
தொனிப்பாடல் கொண்டுதுயி லெடைபாடத் தொடங்கினனே.

[355]


பாணனை முனிதல்
மகிழ்வாச மாலைப் புனலூ ரனுக்குங்கள் வாசலன்றிப்
புகுவாச லில்லை யெனும்புலைப் பாண பொறியறுகாற்
றொருவா சிகைச்சொக்கர் பேரிசை யாழினைச் சூளுறநீ
தகுவா யலையிது காணுங்கள் வாழ்வுந் தலைமையுமே.

[356]


பாண னிரந்துகூறல்
நடைக்கரும் பென்று பலர்கூற வண்பொரு ணாடிநிற்குங்
கடைக்கரும் புஞ்செம்மல் காமிக்கு மோவண்டு கால்வருடத்
தொடைக்கரும் புங்கொன்றை யார்சொக்கர் கூடற் நுவளுநுண்ணூ
லிடைக்கரும் பேயடி யேனிசைப் பாணனிங் கென்செய்வதே.

[357]


தலைவி இற்பரத்தையைப் பழித்தல்
வண்டார் கழனி மதுரேசர் மாட மறுகிலெங்கைத்
தண்டாத வீறென தாமறி யேன்தழு வித்தழுவிக்
கொண்டாடு மின்பத் தரம்போ யலைந்தது கொங்கையெங்கை
யுண்டா மினியிவற் கும்பெற லாமென் றுலகையுமே.

[358]


இற்பரத்தை தலைவியை யிகழுதல்
கற்புக் கரசிவ னானாலு மின்பக் கலைதெரியும்
பொற்புக் கெனக்கெவர் போதுங்கொல் லோபொருப் போடிகவி
மற்புக் கணிபுயத் தார்சொக்க நாதர் மதுரைநன்னாட்
டிற்புக் கிருந்தவ ளோபழிப் பாளென் னெழினலமே.

[359]


சேரிப் பரத்தையர் புனலாடுமிடத்துக் கூறல்
அளகந் திருத்தி யிளகார வண்ட லணிந்துகொங்கைப்
புளகம் படுத்திப் பயனென்கொ லோமெய்ப் புலத்தமிழ்நூல்
குளகம் படப்புனை வார்சொக்கர் கூடற் கொடியிடைவந்
துளகம் படுத்துவ னாகில்வண் டார்புன லூரனையே.

[360]


இற்பரத்தை மேம்பாடு கூறல்
தூணுங் கழையுஞ் சுளியானை யாலையச் சொக்கர்வென்ற
பாணும் பனிமொழிப் பாவைநல் லார்தம் பரப்படங்கப்
பூணுங் கலவிப் புனலூர னென்னைப் புனல்விழியிற்
காணுந் தனையுமன் றோவெங்கை மார்தங்கள் காதலனே.

[361]


புனலாடிவந்த தலைவனோடு தலைவி யூடியுரைத்தல்
நாணத் தலையன்றி நீபுன லாட நயந்தநலம்
பூணத் தவம்புரி வாரெங்கை மார்புனல் பூத்தசெங்கட்
கோணச் சரவணி யார்கூட னாடவிக் கோலமுன்னைக்
காணத் தவஞ்செய்த வாதமி யேனிரு கண்களுமே.

[362]


தலைவி தலைவனோடு புலத்தல்
கோணும் பிறையர் திருவால வாய்நம்பர் கூடலெங்கை
நாணும் பெருமையும் நன்றுநன் றேயொரு நாளெனினும்
பேணுங் கொழுநரெம் மோடின்ப வாரி பெருகியொன்றாய்ப்
பூணுங் கலவி யிடைமதி யாது புகுந்தனனே.

[363]


புலவி நுணுக்கம்
கன்னாக மாகக் கருணைசெய் வார்பொற் கடம்பவன
மன்னா ரருளுக் கழியுநெஞ் சேகள பாசலமென்
பொன்னாகம் பூணத் தழுவுமப் போதும் புலப்பரென்றால்
என்னாகு மென்றறி யேனிவ ராசையு மின்பமுமே.

[364]


கலவி நலமுவத்தல்
நிலவித் திகழ்பிறை யுங்கங்கை மாதும் நிலைதளரக்
குலவிக் குலவி விறகுவிற் பார்தமிழ்க் கூடவன்னார்
புலவிக் கெனவு மளவு படாத புதுமைதருங்
கலவிக் களவுநெஞ் சேயெங்ங னேகரை காண்பதுவே.

[365]


பரத்தையிற் பிரிவு முற்றும்.

V. வினைமேற் பிரிவு.

வினைமேற் பிரிகின்றமை தலைவன் தோழிக்குரைத்தல்
காலைக் கடிமுர சொன்னார் முரசென்று காணிலிந்த
மாலைக் குடையை மதியென்ப ரோமது மாரியறாச்
சோலைப் புறம்பனை சூழ்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்
டோலைக் குழைபொருங்கண்ணியெண்ணாதனவொன்றிலையே.

[366]


வினைமேற் பிரிந்தமை தோழி தலைவிக் குரைத்தல்
குறைவந்த வையைக்கு மண்சுமப் பார்சொக்கர் கூடலந்திப்
பிறைவந் தரும்பு நுதற்றிரு வேயறம் பேணிமனு
முறைவந்த தங்க ளரசாளு நீதி முதன்னமக்கொன்னார்
திறைவந்த தில்லையென் றார்தெரி யாதன்பர் சிந்தனையே.

[367]


தலைவன் பிரித்தமை கேட்டுத் தலைவி புலம்பல்
சட்டுஞ் சிறிய குருகா கிலும்பிரி வென்றுநெஞ்சிற்
காட்டும் பொழுது பொறாதென்பரேசொக்கர் கூடலின்பம்
பூட்டுங் கலவி தருவார் பிரிவெனும் புன்சொலின்று
கேட்டும் பொறுத்தனை யேபாவி யாவிநின் கேண்மைநன்றே.

[368]


கூதிர்க்காலங் கண்டு வருந்தல்
சுழிக்கும் புனல்வையை சூழ்மது ராபுரிச் சொக்கரஞ்சும்
பழிக்கஞ் சலர்சென்ற நாட்டில்லை யோபகி ரண்டமுண்டு
தெழிக்குங் கடையுகக் காலவெங் கோபச்செந் தீயெழுந்து
கொழிக்கும்பொறியென்ன லாமிள வாடைக் கொடுந்துளியே.

[369]


பனிக்காலங் கண்டு வருந்தல்
துரகாது வாடிய மாறிநின் றாடிய சொக்கர்செம்பொற்
கரகால வேலன்ன கண்மடவா யென்ன காலவண்மை
யுரகா டவிமுடிப் பார்காவல் பூண்ட வொருவர்தந்த
விரகா னலம்வந்து வெம்பனி யாக வெளிப்பட்டதே.

[370]


இளவேனிற் காலங்கண்டு வருந்தல்
கந்தார வண்டிமிர் தார்க்கடம் பாடவிக் காவலர்நாட்
டுய்ந்தார் தனியிருந் தாற்றவல் லார்மல ரோடையும்பூஞ்
சந்தா டவியுந் தழையினஞ் சூகமுந் தைவந்ததோர்
மந்தா நிலமுங் கொணர்ந்திள வேனில் வழிப்பட்டதே.

[371]


கார்கண்டு வருந்தல்
அன்னம் பனிநடை யாயடி மாறிநின் றாடல்கண்டு
தென்னன் பரவுந் திருவால வாயர் திரையலம்பும்
பொன்னஞ் சடிலமு மைக்கான கண்டமும் போலெழுந்து
மின்னம் புயல்வந்த தன்பர்பொற் றேரின்ன மீண்டிலதே.

[372]


பருவ மன்றென்றல்
கறையிட்ட வேல்விழி யாய்பிரிந் தார்சொன்ன காலமுமன்
றுறையிட்ட காருமக் காரன்று காணுமை பாகர்தொல்லை
மறையிட்ட பாடல் மதுரேசர் சுந்தர மாறான்று
சிறையிட்ட நாண்முதற்றிங்கண்மும்மாரிதிளைப்பதுவே.

[373]


பாசறை யுருவெளி
சுற்றத் தொடுந்தொலை யத்தொலை யாரைத் தொலைத்தகள
முற்றத் தனிவந்து தோன்றுத லாலன்பர் மோகவெள்ளம்
வற்றக் கடை[க்]கணிப் பார்மது ராபுரி வாகைதருங்
கொற்றத் தனிக்கொடி யோவல வாநங் குலக்கொடியே.

[374]


விரைவது பயன்
கோடாப் புரவி யிரவிபொற் றேரொடு கூட்டிநமக்
கோடாப் புரவியைப் பூட்டினை யேபல வூழிசென்று
மாடாக் கடைமணி யார[ா]ல வாய்நண்ப வங்கிருந்து 
வாடாத் தளரு மடந்தைக்கென் னாமிந்த வஞ்சனையே.

[375]


தலைவன் தேர்வர வுரைத்தல்
தொடைமணி யார்முலையீரா றெதிர்கொள் ளுஞ்சொக்கர்வெள்ளை
விடைமணி யோசை யொலிப்பது போற்கடல் வேலிநிலங்
கடைமணி யோசை கறங்காது காப்பவர் கைக்களிற்றின்
புடைமணி யோசை யிருசெவித் தாரையும் பூரித்ததே.

[376]


மறவாமை கூறல்
மனைக்கற் பகவல்லி யேயொரு காலு மறந்தொருகா
னினைக்கைக் கிடமில்லை யில்லைகண் டாய்சினை நீலவண்டு
கனைக்கக் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கன்னிநெடும்
பனைக்கைக் கடாசலம் பூச லறாதடும் பாசறைக்கே.

[377]


வினைமேற் பிரிவு முற்றும்.

VI உற்றுழிப் பிரிவு

தலைவ னுற்றுழிப்பிரிந்தமை கூறல்
மருவா முயங்கி மயங்கிவற் றாவின்ப வாரிவெள்ளந்
தருவா ருனையும் பிரிந்தன ரால்முத் தமிழ்மதுரைத்
திருவால வாயர் திருப்பாத ராகிய தென்னர்தெவ்வைப்
பொருவார் புரிசையு நாடுமென் னாமின்று பூங்கொடியே.

[378]


பிரிவாற்றாமை கூறல்
காருட லாவள ருங்கடம் பாடவிக் காவலர்நாட்
டாருட லாவி யகன்றிருந் தாரச லக்கொடிபோ
லோருட லாகத் தவம்புரி யாத வுனக்குநெஞ்சே
யீருட லாயிருந் தாவிது வோவின்ன மெய்துவதே.

[379]


பருவங்கண் டிரங்கல்.
சிந்துஞ் சிறிய துளியரி தாமன்று சென்றவழி
வந்தும் புரவலர் வந்தில ரேமது மாரியும்பூங்
கொந்துந் தருங்கொன்றை யார்கூட னாயகர் கொற்கைமுத்துஞ்
சந்துந் தருமுலை யாயெங்ங னேவுயிர் தாங்குவதே.

[380]


உற்றுழிப் பிருவு முற்றும்.

VII. இணங்கலர்ப் பொருத்தல்.

இணங்கலர்ப் பொருத்தப் பிரிகின்றமை தலைவன் தோழிக்குரைத்தல்
போற்றா ரிருவர் பொருதடங் காதவெம் போர்தளரிவித்
தாற்றா விடிலுற வாட்சியென் னாம்வையை யாறடைக்க
மாற்றா வடிபடு வார்மது ரேசர்க்கு மாறுபட்ட
கூற்றா மதர்விழி யாய்குடை நீழற் குவலயத்தே.

[381]


தலைவன் பிரிந்தமை தோழி தலைவிக் குரைத்தல்
வணங்கா[ர்] வணங்க வனைகழற் கான மவுணர்தம்மி 
விணங்க ரிணங்கு பரிசகன் றார்தம்மை யேத்துமன்பர்
குணங்கா தலித்திருப் பார்சொக்க நாயகர் கூடல்வண்டின்
கணங்கா தலிக்குஞ் சுருளள காடவிக் காரிகையே.

[382]


பருவங்கண் டிரங்கல்
தேர்முந் துவதென்று நாமிங்ங னேதவஞ் செய்யவின்று
கார்முந் துவதென்ன கைதவ மோகழைக் கானலில்நெற்
றூர்முந்து தண்பணை சூழ்மது ராபுரிச் சொக்கர்கைவேற்
போர்முந்து வேல்விழி யாய்நன்று காணம் புரவலர்க்கே.

[383]


தலைவன் வந்தமை தோழி தலைவிக்குரைத்தல்
விருந்தாய்ப் பருமணற் சோறந்த நாளுண்டு வெந்துயர்க்கோர்
மருந்தாய்ப் புகுந்த மவுணர்வந் தார்கடல் வாரிவிட
மருந்தாக் களங்கறுப் பாரால வாயி லரிவையென்றுந்
திருந்தாய் பகைமன்னர் தம்மிலொன் றாய்வந்து சேவிக்கவே.

[384]


இணங்கலர்ப் பொருத்தல் முற்றும்.

VIII. பொருண்மேற் பிரிவு

தலைவன் பொருள்வயிற் பிரிகின்றமை தோழி தலைவிக் குரைத்தல்
கறங்காழி வையத் தளவு படாவின்பங் காணினுமில்
லறங்கா ணினுமெவர் காண்பவ ரோவிடங் காரடங்கா
மறங்காலும் வேற்படை யார்மது ராபுரி வண்பொருளின்
புறங்காணு நெஞ்சத் தவரன்றி வேறு பொலன்கொடியே.

[385]


தோழி செலவழங்குவித்தல்
பொறியா டரவம்பொறுத்த மண்ணேழும் பொருத்ததொங்கல்
வெறியாடு குங்குமத் தோளண்ண லேபுள்ளி வெள்ளைநிலா
மறியாடு செங்கை மதுரைப்பிரான் பொருள் வண்மையையன்
றறியாம் லோகொடுத் தாருடல் பாதியு மம்பிகைக்கே.

[386]


தலைவன் பொருள்வயிற் பிரிந்தமை தோழி தலைவிக்குரைத்தல்
தொடைக்கடங் காத புயத்தா ரழகிய சொக்கர்கைவேற்
கடைக்கடங் காத கயல்விழி யாயெதிர் கண்டவன்றே
யிடைக்கடங் காத தனந்தள ராம லிருக்கவுங்கள்
கொடைக்கடங் காத தனந்தன மாளங் குருசிலுக்கே.

[387]


மாலைப்பொழுது கண்டு வருந்தல்
திருந் தாத தொண்டு திருத்திய தேசிகத் தெள்ளமுதாய்க்
குருந்தாய நிழல் புகுந்திருப் பார்தமிழ்க் கூடல்விண்ணோர்
அருந்தா வமுதனை யாயன்பர் போகவு மாருயிர்கொண்
டிருந்தா ருயிருண்ண வோவந்தி மாலையெதிர்ப்பட்டதே.

[388]


பனிக்காலங் கண்டு வருந்தல்
துறப்பார் தொழுகழற் கால்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்
டறப்பா தகமென்செய் தோநெஞ்ச மேயறத்தோடுதம்மை
மறப்பார் மறப்பதை முன்னறி யாத மனத்தொடும்பெண்
பிறப்பா ரொருவர்க்கு மோபனிக் காலம் பெரும்பிழையே.

[389]


இரவினீட்டம்
மீளா விரவி தடந்தேரு மின்னமு மீண்டுசென்ற
கேளா மவர்வருங் காலமு மாய்நவ கீதம்வல்லாற்
காவாய் விறகுவிற் பாரால வாயி லதுவுமொரு
நாளாய் விடிவதுண் டோகங்குல் யாமம் நடந்தெமக்கே.

[390]


தலைவியைத் தோழி தெளித்தல்
வையும் புலவு மறாமழு வாளர் மதுரையில்நீ
நையுங் கவலைப் படுவதென் னோவொரு நாளிரவி
கொய்யுங் கலியுளை மான்றேர் திரிந்து குடக்கெழினும்
பொய்யும் புகல்வதுண் டோவணங் கேநம் புரவலரே.

[391]


தலைவியைத் தலைவன் சுரத்திடை நினைதல்
நனையா ரளக நறுங்காரு முத்த நகையுமொன்றும்
புனையாது சோபை தரும்புண்ட ரீகமும் பொற்புயத்திற்
கணையாழி மான்புரப் பார்கடம் பாடவிக் கள்விகொண்டு
நினையாமுன் னெஞ்சம் புகுந்தன ளாலென் னினைவதுவே.

[392]


தலைவன் சுரத்திடை நெஞ்சொடு கூறல்
மருட்பா லவரறி யாமது ரேசர் மனங்கவலா
வருட்பா லவரொரு நால்வருக் கோதிய வாகமத்தின்
பொருட்பா லறமுத லாகவெல் லாந்தரும் பொன்னைவிட்டுத்
தெருட்பால தோமன மேயிடை யேயொன்று தேடுவதே.

[393]


தலைவன் தலைவிவருத்தம் நினைந்து கூறல்.
ஆலைத் துழனி யறாவால வாய ரணிநகர்சூழ்
சோலைக் குருகிளஞ் சேவலெல் லாந்[தொக்கி]ருக் குங்கங்குல்
வேலைக் கலவி மறவாது சேக்கை விரும்பிச்செல்லு
மாலைப் பொழுதுகண் டாலுய்யு மோவென் மடமயிலே.

[394]


சாரொடு கூறல்
முளையிட்ட முத்த முகிணகை யார்திரு முன்பினந்தே
ருளையிட்ட வாம்பரி முன்செல்வை யோநறை யோதியர்க்கு
வளையிட்ட சொக்கர் மதுரேசர் சுந்தர மாறான்று
தளையிட் டவருன்னை விட்டில ராகிற் சலமுகிலே.

[395]


தோழி தலைவிக்குப் பொருள் வரவுரைத்தல்
இற்பா லறமுந் தொலையாத வின்பமு மெய்துவிக்கும்
பொற்பாய செவ்விப் பொருளுட னேபுலம் பூழிபட
மற்பா வியபுயத் தார்மது ரேசர் வடித்தசங்கச்
சொற்பா வலர்புகழ் தோன்றல் பொற்றேர்வந்து தோன்றியதே.

[396]


தலைவன் வருத்தந் தீர்த்து கூறல்
தோட்டுச் சுரிகுழ லாரின்ப வாரி துளும்புமுலை
மோட்டுத் தடம்படிந் தாடியுய்ந் தேனலை மோதுசடைக்
காட்டிற் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கன்னிப்பொருள்
வேட்டுச் சுடுசுரம் போய்வினை யேனுற்ற வெவ்வழற்கே.

[397]


பொருண்மேற் பிரிவு முற்றும்.

IX. ஓதற் பிரிவு

தலைவன் தோழிக் கோதற் பிரிவுணர்த்தல்
நாவித் தகர்சென் றிருந்தமை யாவிய னாடியன்று
பாவித்த சங்கப் பலகையின் கீழுழை பார்த்திரங்குங்
தரவித் தடங்கணல் லாய்கடம் பாடவிக் கண்ணுதல்போய்ச்
சேவித்து நிற்குந் தமிழ்க்கெதி ராயென்கொல் தேடுவதே.

[398]


தோழி தலைவன் பிரிந்தமை தலைவிக்குரைத்தல்
கொல்வாற் செயலறி யாக்கொடுஞ் சூலத்தர் கூடனல்லாய்
மல்லாற்கு[ந்] தோனண்ணவ் வாய்மைநன் றேமுத்தர் வாய்திறந்து
சொல்லாப் பொருளு மறமுமண் ணாளத் துணிபொருளு
மெல்லாப் பயனுந் தருங்கல்வி யாமென்ப தெண்ணினரே.

[399]


தலைவி பிரிவாற்றாமை கூறல்
மணந்தாழ் சடையர் மதுரா புரியின் மனக்கவலை
கொணர்ந்தாவி கொள்ளை கொளும்பிரிவேகுழை யக்குழையப்
புணர்ந்தா ருயிரிரு வர்க்குமொன் றாமென்று பொய்மொழிந்து
தணந்தா ரையுமறி யாயிருந் தாரையென் சாதிப்பதே.

[400]


தலைவன் வந்தமை தோழி தலைவிக்குரைத்தல்
வேய்வந்த தோளி தடாதகை சாபம் விடுத்தவளுக்
காய்வந் தரசிருப் பாரால வாய்முருந் தாயரும்புந்
தூய்வந்த மூரற் றுடியிடை யாயென்ன சோபனமோ
போய்வந்த துன்ற னிறைவர்பொற் றேரும் புரவியுமே.

[401]


கலந்துழி மகிழ்தல்: தலைவன் துறவு நினைதல்
வாழிப் புவனந் தொழுமது ரேசர் வரசரணச்
சூழிக் கமலந் தொழுநெஞ்ச மேயுயிர் தொக்கடங்கு
மூழிக் கடைசென்று மானந்த வாரமு தூறவின்ப
வாழிக்கு மான வருங்கல மாமிவ் வருந்ததியே.

[402]


காழிக் கவுணியக் கன்றுண்ட பான்முலைக் கண்ணியடிச்
சூழிக் கமலமுந் தாமணிந் தார்விண் சுருட்டுதிரை
யாழிக் கடலமைத் தாரால் வாயுறை யத்தர்மற்றை
வாழிக் கமல மெனக்களித் தாரடி மாறிவைத்தே.

[403]

 

ஓதற் பிரிவு முற்றும்.
கற்பு முற்றும்

மதுரைக்கோவை முற்றிற்று


This file was last updated on 10 december 2006. 
Feel free to send corrections and suggestions to the webmaster

 

 

Related Content

Discovery of the god to mortals

Madurai Chokkanathar Ulaa in English

Pantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சு

Thirukkovaiyar - Part - I

Thirukkovaiyar - Part-2