logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி


கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு 

இராமநாதபுர சமஸ்தானம்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னுச்சாமித்தேவரர்களுடைய புத்திரர் 
ம-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத்தேவரவர்கள் விரும்பியவண்ணம்

மதுராபுரிவாசியாகிய இ.இராமசுவாமிப்பிள்ளை என்று
விளங்குகின்ற ஞானசம்பந்தப்பிள்ளையால்
அகப்பட்டபிரதிகள்கொண்டு பரிசோதித்து
சென்னை: இந்து தியாலஜிகல் யந்திரசாலையிலும்
சித்தாந்த வித்தியாநுபாலனயந்திரசாலையிலும்
பதிப்பிக்கப்பட்டது
----

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி.

காப்பு.

பருத்துடையவளங்காட்டுமிளங்காட்டு 
      நகர்ப்பதிற்றுப்பத்தந்தாதித்,
திருதொடையலெம்பெருமான் 
      சேவடியிற்சூட்டவருள்செழிந்துநல்கு, 
முருத்தெழுந்துமும்மலக்கந்தினைப்
      பிடுங்கியுயிர்ப்போதக்க வளமாந்திக், 
கருத்துடையசிவானந்தக்களி
      மிகுத்துத்திரியுமதகளபந் தானே.

1


நூல்.

உலகமெங்குமொருவடிவாகிநின்<
றிலகுபேரொளிபோலுமிலங்கெழி
லலகிலாவளமாரிளங்காட்டகங்
குலவுகோயில்குடிகொண்டவெந்தையே.

2

கொண்டன்மேனிக்குழகனுநான்முகப்
புண்டரீகப்புலவனுநாடொணா
மண்டுதீப்பிழம்பாகியவயங்கினா
னண்டர்சூழிளங்காட்டுறையண்ணலே.

3

அண்ணிக்குங்கரும்பாகியமுதமாய்க்
கண்ணுக்குண்மணியாய்க்கனிதேறலாய்
வண்ணச்சீரிளங்காட்டிறைவான்பொரு
ளுண்ணப்புக்கவென்னெஞ்சையுருக்குமே.

4

உருகிமொண்டுகொண்டுண்டுகளித்துளம்
பெருகிவாழ்ந்திடப்பெற்றனன்பூம்பொழி
லருகுசூழிளங்காட்டிலளியராய்ப்
பருகுவார்க்கினிக்கும்பசந்தேறலே.

5

தேறலேனைத்தெருட்டிச்சிவமனுக்
கூறியாளக்குருவுருக்கொண்டவ
னாறுபூம்பொழினல்லிளங்காட்டுறை
பாறுநச்சும்படைமழுவாளனே.

6

நேயமாகிநினைதொறுநெஞ்சக
மாய்விலாவின்பவாரியின்மூழ்குமால்
வாய்மையாளர்வளரிளங்காட்டுறை
பாய்விடைப்பரமேட்டிபொற்பாதமே.

7

பாதலம்பகிரண்டப்பரப்பெலொஞ்
சோதிவண்ணச்சுடரொளியாமென
நீதியாலுணர்வாரகநீங்கலான்
காதலிப்பவர்வாழிளங்காடனே.

8

காடுகொண்டசடைமுடிக்கண்ணுத
றோடுகொண்டகடுக்கைத்தொடையலா
னேடுகொண்டபொழிலினங்காட்டினான்
வீடுகொண்டனன்மீட்டெனதுள்ளமே.

9

உள்ளத்துள்ளமுதூறியுணர்தொறுந்
தெள்ளத்தேறித்தெளிந்தசிவானந்த
வெள்ளத்தேதுளைவார்க்குவிளங்குவான்
கள்ளத்தார்க்கரியானிளங்காடனே.

10

இளமையுமனைவாழ்க்கையினின்பமும்
வளமையும்பொருளாகமனங்கொள்வீ
ரளியில்காலனணுகுமன்றென்செய்வீர்
களவிலாவிளங்காடனைவாழ்த்துமே.

11

வேறு
வாழ்த்துகிலேன்றிருப்புகழை
      மனங்கொளேன்றிருவடியைத்
தாழ்த்துகிலேன்சென்னியினைத்த
      மியினைக்கருக்குழியில்
வீழ்த்துவையோபேரறிவை
      விளக்குவையோவறியகிலே
னூழ்த்தமலர்ப்பொழில்புடை
      சூழிளங்காட்டிலுறைவானே.

12

உறைவானையெவ்விடத்து
      முயிர்க்குயிராயங்கங்கே
நிறைவானையசைவின்றி-
      நிற்பானையேனோர்க்கு
மறைவானையிளங்காட்டில-
      மர்ந்திருந்தவான்பொருளை
யிறையானையெம்மானையெப்-
      பொழுதுமறவேனே.

13

மறவாதபெருங்கவலை-
      மறிகடலிலகப்பட்டுத்
துறவாததுயர்த்திரையாற்றொடக்-
      குண்டுமெலிகின்றேன்
பிறவாதவரமருளிப்-
      பேறளிப்பதெந்நாளோ
வறவாணர்புகழ்ந்தேத்து-
      மிளங்காட்டிலம்மானே.

14

அம்மானேயிளங்காட்டிலாண்டகையேயெனையாண்ட
பெம்மானேயருட்கருணைப்பெருமானேயிமையோர்க
டம்மானேயென்றுநாத்தழும்பேறவுளங்குழைய
விம்மாநெக்குருகுவாரெமையாளும்வித்தகரே.

15

வித்தகமாநடுக்கடலில்விடமெழலுநடுநடுங்கி
நத்தனயன்முதலானோரோட்டெடுப்பநலிவகற்றி
மத்தமிடற்றிளங்காட்டுவான்பொருளையன்றியுமோர்
கத்தனுளனென்பாரையாங்காணக்கடவோமே.

16

கடக்களிற்றினுரிபோர்த்த-
      விளங்காட்டுக்கண்ணுதலோன்
விடச்செருக்கும்புரச்செருக்கு-
      மிக்கசலந்தரன்செருக்கு
முடைத்தருளியருளானேலும்-
      பர்களும்பூவலயத்
திடத்துறையுமாந்தர்களு-
      மெவ்வண்ணமுய்வாரே.

17

உய்யலாநெறிகோடியுலவாதவிடும்பையினான்
மையலாம்பரசமயப்படுகுழியின்மாள்வேனைத்
தையலாளொடும்போந்துதண்டலைசூழிளங்காட்டி
லையர்தாம்வெளியேநின்றாடல்கொண்டதற்புதமே.

18

அற்புதமாமிளங்காட்டிலாண்டகையைமதியாமே
புற்புதம்போற்பிறந்திறக்கும்புல்லியரைத்துணைகொண்டே
வற்புதவஞ்சிறுவிதிசெய்மகச்சாலைச்சிறப்பெல்லாங்
கற்பொடிபோற்சிந்தியவாகாண்மினோநமரங்காள்.

19

காளையராயுலகனைத்துங்கவிகைநிழற்கீழடக்கித்
தாளையொன்னார்முடிவருடத்தருக்கெய்தியிருந்தோரு
மீளையராயிம்மையேயிரந்துழலக்காண்கையினா
லாளுடையானிளங்காட்டைவிரைந்தடைவாரறிவினரே

20

அறிவுருவாயகண்டிதமாயானந்தமயமாகிக்
குறியிறந்தபரம்பொருளோர்குறியுருவங்கொண்டருளிச்
செறிபொழில்சூழிளங்காட்டிற்றிகழ்ந்திருந்துமுணரார்கள்
வறிதேபொற்கொழுக்கொண்டுவரகினுக்கேருழுவாரே.

21

வேறு.

வாரார்களபக்குவிமுலையார்மையற்கலவிநலம்வேட்டும்
பேராவிடராலிதுகாறும்பேதுற்றுழன்றேனெனையாள்வாய்
நீரார்கழனிபுடையுடுத்தநிகழ்சீரிளசைப்பதியுடையாய்
போரார்கணிச்சிப்படையேந்திப்பொதுவிற்குனிக்கும்பெருமானே.

22

பெருகிக்கிடந்தநிராலம்பப்பேரானந்தப்பெருங்கடலுட்
பருகித்துளைந்துதிளைத்தாடிப்பதைப்பற்றிருக்கவரமளித்தான்
கருவிப்புயல்சூழ்மணிமாடங்கவினுமிளசைக்கடிநகர்வா
யருவிப்பனைக்கைமதவேழத்துரிபோர்த்தாடுமம்மானே.

23

ஆடுங்கறங்கின்யோனிதொறுமலமந்தழுங்கிப்பிறந்திறந்து
வீடுஞ்சிறியேன்றனக்குனதுவிரைத்தாமரைத்தாளருள்வாயோ
தேடும்பிரமன்றிருமாலுந்தெருமந்தேங்கத்தழற்பிழம்பாய்
நீடும்பொருலேயிளசையில்வாழ்நிருத்தாபுரத்தையெரித்தோனே.

24

எரித்தானெனதுவல்வினையினிருள்சேர்பிறவிப்பெருங்காட்டைத்
தெரித்தான்மூன்றுபொருளுண்மைதெரித்துப்பாசமிரண்டினையு
மிரித்தானென்னைத்தன்னுள்ளேயிருத்தியென்பாற்சுகவடிவாய்த்
தரித்தானிளசைப்பதிவாழுந்தக்கோனெவர்க்குமிக்கோனே.

25

கோனேயென்னைவலிந்தடிமைகொண்டமுதலேபெருங்கருணைத்
தேனேயிளசைப்பதிவாழுஞ்சிவனேயடியார்தமக்கருளு
வானேதேவரான்கன்றுபோலத்திரியவரமளித்தா
யானேறுயர்த்தாயிதற்கெவனோவடியேனுதவுங்கைம்மாறே.

26

மாறாக்கருணைச்சிவானந்தவாழ்வையிந்தாவெனக்காட்டி
யேறாக்குழிநின்றெடுத்தேற்றியென்போலுருக்கொண்டெய்திடவுந்
தேறாப்புலையேனினியுன்றன்றிருத்தாள்சேர்வதெவ்வாறோ
நீறாப்பொலிந்ததிருமேனிநித்தாவிளசைப்பதியானே.

27

பதிக்கப்பெற்றேனுளத்தையவன்பாதாம்புயத்திலெஞ்ஞான்றுந்
துதிக்கப்பெற்றேனஞ்செழுத்துஞ்சூழப்பெற்றேனிளசைநகர்
மதிக்கப்பெற்றேனவனன்றிமற்றோர்தெய்வமிலையென்றே
யுதிக்கப்பெற்றேன்சிவஞானமின்னும்பெறும்பேறொன்றுளதோ.

28

ஒன்றிக்கிடந்துபதைப்பறநின்றுணர்வார்தமக்கேயல்லாமற்
கொன்றைச்சடிலத்திருமவுலிக்குழகனிளசைக்கடிநகரான்
மன்றற்கமலச்சேவடிகள்வற்றிப்புற்றாய்மரமாகி
நின்றற்புதமாந்தவஞ்செயினுங்காண்பார்க்கெளிதோநெறிதேர்ந்தே.

29

தேராமூடரொடும்பழகித்தெளியும்பகுதியுணராமே
காரானுகைக்குமறக்கடவுள்கத்துக்குணவாயிருந்தாய்நீ
வாராய்மனமேயினியேனுமன்றற்பொழில்சூழிளங்காட்டிற்
போரானேற்றுப்பெருந்தகைதன்பொற்றாளிறுகப்பற்றாயே.

30

பற்றிகிடந்தபசுபாசப்பரப்பைக்கடந்தபரவெளியின்
முற்றிக்கிடந்தசிவானந்தமுழுத்தேனுகர்வார்க்ககவிளக்காஞ்
சுற்றிக்கிடந்தமலர்ப்பொதும்பர்துனிக்குநறுந்தேன்வழிந்தொழுகி
வற்றிக்கிடந்தமடுநிறைக்குமிளசைப்பதியான்மலர்ப்பதமே.

31

வேறு.

பதராகியபல்சமயக்குழிவீழ்ந்
ததராமெனநம்பியகந்தையினான்
மதராதெனையாண்டருள்வாயிளசைப்
புதராலறியப்படுபுண்ணியனே.

32

புண்ணாகியுலைந்துபுழுங்கிமன
மெண்ணாதனயாவையுமெண்ணியெணி
மண்ணாயழியாதுவரந்தருவா
யண்ணாவிளசைப்பதியாண்டகையே.

33

ஆண்டானலிபெண்ணெனவாயிளசை
யாண்டானெயின்மூன்றையுமட்டருளு
மாண்டானெனநின்றவனாதியருக்
காண்டானவையாவுமமைத்தவனே.

34

தவமேதுபுரிந்தனனோதமியே
னுவமானமிலாயுகளப்பதமு
நவமாரிளசைக்கடிமாநகர்வாழ்
புவனேசவெனுச்சிபொறித்திடவே.

35

பொறியாகியவைம்புலவேடர்களாற்
பிறியாவிடர்மூழ்குபுபேதுறுவேன்
சிறியேனுனசேவடிசேருவேனோ
வறிவேயிளசைப்பதியுற்புதனே.

36

நேர்ந்தார்புரநீற்றியநீறுடையான்
பேர்ந்தார்தலைமாலைபிறங்கியிட
வார்ந்தாடுசடைப்பெருமானிடமாஞ்
சார்ந்தார்பிரியாவிளசைப்பதியே.

37

பதியாமிளசைப்பதியாள்பவனுக்
கதிகாபுரியம்பலமாலவன
மதுராபுரியேடகமாதைநணா
முதுகுன்றுதிருக்குடமூக்கிவையே.

38

வையந்தொறுமோடிவருத்தமுறா
துய்யும்படிகண்டனனோருறுதி
கையொன்றிளசைக்கடிமாநகர்வாழ்
செய்யன்கழற்சேவடிசேர்வதுவே.

39

சேரும்படியெப்படிதிட்பமுட
னாருந்தெளியாதவரும்பொருளை
யேரொன்றிளசைப்பதியெம்பெருமான்
பாருந்திசையும்பரவும்மனமே.

40

மனமும்முரையும்மதியுஞ்செயலு
மெனதுந்தனதும்மிடருந்நலனுஞ்
சினமுங்கெடவோர்மொழிசெப்பியவா
கனமொன்றிளசைப்பதிகாவலனே.

41

வேறு.

வலந்தருகாமனைமாட்டியகண்ணா
லனந்தருசீரிளசைப்பதிநாத
னுலந்தவர்வெண்டலையொண்கயிலேந்தி
யிலந்தொறும்வெண்பலியேற்றமையென்னே.

42

என்னையெடுத்துவிழுங்கியெனெக்கே
தன்னையளித்தருடத்துவநாதன்
மின்னிளசைப்பதிமேவியிடத்தே
கன்னியைவைத்தகருத்திதுவென்னே.

43

கருத்தையொருக்கிநினைப்பவர்கட்கே
தரித்துவெளிப்படுசாலிளசைக்கோன்
புரத்திடையன்று பொருக்கெனவாங்கே
சிரித்தெரிவைத்தசெயற்கையிதென்னே.

44

செயற்கையனைத்துமறச்சிறியேனுக்
கியற்கையளித்தருள்சீரிளசைச்கோன்
வியத்தருகோசிகமாதிவெறுத்துக்
கயத்துரிபோர்த்தகணக்கிதுவென்னே.

45

கணக்குவழக்கொடுகத்துமதத்தார்
பிணக்கையறுத்தபிரானிளசைக்கோ
னிணத்தொகைமல்கியநெட்டுடலென்பை
மணத்தொடையாகமலைந்தமையென்னே.

46

தமைத்தெளிவுற்றதவத்தினர்தம்பா
லிமைப்புவிழிப்பறவாழிளசைக்கோ
னமைத்திடுமச்சுதனாரணனேடக்
கமைக்கனலாய்நிமிர்காட்சியிதென்னே.

47

என்னைமுழுக்கவிழந்தவிடத்தே
தன்னைவிளக்கியசாலிளசைக்கோன்
மன்னமுதத்தினைவானவருண்ண
வுன்னுவிடத்தினையுண்டமையென்னே.

48

உண்டிலையென்றுமுணர்ச்சிகழன்றோர்
கண்டுதொழுங்கவினாரிளசைக்கோன்
றண்பெறுகுங்குமசந்தம்வெறுத்து
வெண்பொடிபூசியவித்தகமென்னே.

49

வித்தகலோகமனைத்தினும்வேறா
யத்துவிதப்பொருளாமிளசைக்கோன்
மத்தமனச்சிறியேன்பிறவாமைச்
சித்தியளித்தசிறப்பிதுவென்னே.

50

என்னதியானெனுமிந்தமயக்கைத்
தன்னருளாலொழிக்கும்மிளசைக்கோன்
கன்னிகுயத்தொடுகைவளைகட்கே
கொன்னுறுமேனிகுழைந்தமையென்னே.

51

வேறு.

என்னினிச்செய்யவல்லாரெறுழ்வலித்தடந்தோள்கொட்டிக்
கொன்னுறுபாசந்தண்டங்குடங்கையிலேந்திநக்குப்
பின்னிறுமிருள்போற்கூற்றங்குறுகுவான்பெட்டகாலைத்
தன்னைநேரிளசைக்கோமான்றாளிணையிறைஞ்சாதோரோ.

52

சாவோரீஇப்பன்னாளிந்தததரணியாண்டிடினுமாள
மேவொணாதிற்றைஞான்றேவிளியினும்விளிகயாக்கை
காவொடுகழனிசூழுங்கடிநகரிளசைக்கோமான்
சேவடிவழுத்தப்பேற்றொமினிப்பெறுஞ்செல்வம்யாதோ.

53

யாதுமோரறிவிலாதவெளியனேன்கருவில்வீழ்ந்து
பேதுறாதெளிவந்தாண்டகருணையின்பெருமையென்னே
தாதுறுநறவமாந்தித்தனைமறந்தறுகான்மூசும்
போதலர்சோலைவேலிப்பூம்புனலிளசையானே.

54

யாம்பரம்பரமென்றுன்னியிருவரும்பொருதஞாட்பின்
மேம்படக்கிளைத்தசெந்தீவெற்பெனவடிவங்காட்டிப்
பூம்பொழிலிளசைக்கோமான்பொள்ளெனத்தோன்றிலானே
னாம்பிறரவரையன்றோதேவெனநம்புமாறே.

55

மாறிலாக்கருணைகாட்டும்வளரொனிநயனமூன்றுஞ்
சீறுமாடரவம்பூணுந்திருமுகப்பொலிவும்வெள்ளை
நீறுபூத்தலர்ந்தமெய்யுநெறிகுழலிமயவல்லி
கூறுமாயிளசைக்கோமானென்னுளங்குடிகொண்டானே.

56

கொண்டதோலெலும்புமச்சைகுருதிநீர்நரம்புமூளை
மண்டியகுரம்பைவாழ்க்கைவாழ்வினிப்போதும்போதும்
வண்டமிழிளசைவேந்தேவறியனேனுலந்துபோனேன்
றண்டிரைப்பரமானந்தசலதியிலழுத்திடாயே.

57

அழுதழுதலறியேங்கியகங்குழைந்துருகிநெக்குத்
தொழுதெழுமடியாருள்ளந்தொறுந்தொறுங்கோயில்கொண்டான்
பழுதுதீரிளசைவைப்பிற்பகிரண்டங்குலுங்கநின்று
கழுதினந்துணங்கையாடகடித்திடுங்கருணைவாழ்வே.

58

கருணையாலிளசைமேவுங்கடவுளேயடியனேனுக்
கிருவினைத்தொடக்கைநீக்கியிடையறாதுதவல்வேண்டு
முருவுயிருணர்வாயெங்குமொழிவறநிறைந்துமண்டிப்
பொருவில்பேரொளியாயோங்கும்பூரணானந்தவாழ்வே.

59

ஆனந்தமயமாய்நின்றவரும்பெருஞ்சோதிதானோ
ரானந்தவடிவங்காட்டியருளினாலிளசைமேவி
யானந்தமடியேற்கீந்தவருளினைநினைக்குந்தோறு
மானந்தமேலிட்டென்னையங்கமேயாக்கற்பாற்றே.

60

பாற்றிருநீறுபூத்தபவளவெற்பனையபச்சைக்
கோற்றொடிமணந்தமேனிக்குழகனேயிளசையானே
யூற்றமாமயராவன்பினுன்னடிநிழற்கீழ்த்துஞ்சும்
பேற்றினுக்கலந்துபோனேன்பிஞ்ஞகாவருள்செய்வாயே.

61

வேறு.

வாய்த்தவினையொத்துழிமலப்பிணியவிழ்த்து
மூர்த்திகொடுவந்தருளிமுத்திநலநல்கு
மாத்தனிளசைப்பதியினைந்தொழினடிக்குங்
கூத்துடையன்யாவனவன்யாங்கடொழுகோவே.

62

தொழாதுதிரியும்புலையர்சூழலிலுறாமே
வழாதநெறியீதெனவகுத்தருளியன்பர்
குழாமொடுமிணங்கிமகிழ்கூரவருள்செய்தாய்
விழாவணியறாமறுகுசூழிளசைவேந்தே.

63

வேந்தரெனமண்முழுதும்வெண்குடையுளாக்கி
யேந்தரியணைத்தவிசிருந்தரசுசெய்யும்
வாய்ந்தவளமொன்றெனமதித்திடுவாயோ
வாய்ந்தலிளசைப்பரமனாளுமடியாரே.

64

அடித்தலமுடித்தலமரிக்குயமனுக்குங்
கிடைப்பரியசோதிவடிவாகியகிரீசன்
மடற்பொதியவிழ்ந்தபொழில்சூழிளசைவந்தெ
னிடர்க்கடலகற்றிடவுஞற்றுதவமென்னே.

65

தவங்களொருசற்றுமிலிபுல்லியர்தநட்பே
யுவந்துதிரிகின்றபுலையேனுமுலவாத
பவங்களைவதெப்படிபகர்ந்திடுதியையா
நவங்கொளிளசைப்பதியினாளுமகிழ்வோனே.

66

மகிழ்ச்சிமிகுமன்பினனல்சேர்மெழுகுமான
நெகிழ்ச்சியுறநெக்குருகிநெஞ்சுகரைவெய்தி
முகிழ்த்தமலர்கொண்டுநினைமுப்பொழுதுமேத்த
விகழ்ச்சியறுசீரிளசையெந்தைவரநல்கே.

67

வரங்கள்பலவுஞ்சுரர்பதங்களுமயங்கா
வுரம்பெருகுசித்திகளும்வித்தைகளுமொக்கத்
திரண்டுவருமேயிளசைநாதனதிருத்தாள்
பரந்தமலரிட்டுவழிபட்டவர்கள்பாலே.

68

பார்ப்பதியணங்கினொருபாற்பதியுமெம்மான்
சூற்புயறவழ்ந்துலவுசோலைபுடைசூழ
மேற்படுவளம்பலவுமேவுமிளசைக்கோ
னேற்புடையதாளிணையிருப்பிடமெனெஞ்சே.

69

நெஞ்சுமுரையுஞ்செயலுநேர்ந்தபொறிதானோ
ரஞ்சுமுனசேவடியிலாக்கியெனையாள்வாய்
நஞ்செதிர்வுகண்டுளநடுங்கிமுறையோவென்
றஞ்சிவருவோர்க்கருளுமாரிளசைவாழ்வே.

70

வாழுநெறியாவையுமறந்துபுலையாகித்
தாழுநெறிகொண்டுதிரிகின்றதமியேனைச்
சூழும்வினைவல்லிருடொலைந்திடுவதெந்நா
ளாழுமகழ்சூழிளசையாளுடையகோவே.

71

வேறு
உடையநாயகன்றிருவடித்தொழும்புசெய்தும்பரார்தமக்கெட்டாச்
சடிலவான்முடியிளசையானளித்திடுந்தத்துவநெறிதேர்ந்தே
யடையவுந்தமக்குள்ளுறத்தாமவற்றுள்ளுளுமானந்த
மிடையறாமலேகண்டுகொண்டிருப்பவரெம்மையாளுடையாரே.

72

யாரும்யாவுமாஞ்சராசரத்தொகுதியிலிரண்டறக்கலந்தோங்கிப்
பாரும்விண்ணுமற்றனைத்துமாய்நிறைந்ததோர்படரொளிப்பரப்பூடே
காருலாம்பொழிலிளசையுமெம்பிரான்கருதரும்பல்கோடி
சூரியப்பிரகாசநேருருவமுந்தோன்றுமாகண்டேனே.

73

கண்டகண்டவெள்ளிடையெலாமிளசைவாழ்கருணையங்கடல்காள
முண்டகண்டமுநான்குதிண்டோளும்வேளுருவினையருவாக்க
விண்டகண்டழலுருவமுமுமையவண்மேவியவிடப்பாலுங்
கொண்டகண்டமாய்நின்றதோர்குறியன்றிப்பிறகுறிகாணேனே.

74

காணுமாறுமற்றரிதரிதாமெனக்கணிப்பிலாப்பலசாகைக்
கோணைமாமறையாவையுந்தனித்தனிகுழறுவதல்லாமன்
மாணுமாறிதுதானெனக்காட்டிடவல்லதேயிளங்காட்டிற்
பேணுநாயகனடியவர்க்கெளியவன்பெற்றயயைமுறையோடே.

75

முறைபிறழ்ந்திடாவடியவர்குழுமியமுதுநகரிளங்காட்டிற்
கறைவிளங்கியகண்டர்தமருளினாற்காண்பவர்தமக்கல்லா
லறைகழற்றிருமாலயன்முதலியோர்க்காயினுமெளிதாமோ
விறையுநீங்கிடாதிரண்டறக்கலந்துவாழின்பநிட்டையின்சீரே.

76

நிட்டையாவதுநெட்டுயிர்ப்பறவுடனிமிர்த்துவார்விழிமூடிப்
பட்டவாயினீர்வறந்திடவடதிசைப்பார்த்துறைந்திடும்யோகோ
சட்டகத்தினைப்பிரிதுளப்பதைப்பற்றுச்சாகிராதீதத்தே
சுட்டிறந்துநின்றிளசைநாயகன்கழல்சூழ்ந்திடுஞ்செயலன்றோ.

77

அன்றுதொட்டிதுகாறும்வல்வினையினாலலக்கழிந்துழல்பேயேன்
பொன்றிடாப்பரமானந்தவெள்ளமாய்ப்போக்கொடுவரவின்றி
யென்றுமோரியல்பாகியபராபரத்திரண்டறக்கலந்தொன்றாய்
நின்றுவாழ்ந்திடப்பெறுவனோவிளசைமாநெடுநகரமர்ந்தானே.

78

தானையாமெனக்குயவரியதளினைத்தரித்துமன்றிடையாடும்
வானுளோர்களுக்கறிவரும்பரம்பொருண்மண்ணிடையெளிவந்து
தேனுலாம்பொழிலிளசையிற்குடிகொண்டுசிறியனேன்பசுஞானக்
கூனைநீக்கிவந்தாண்டிடயான்முனங்குயிற்றியதவமென்னே.

79

என்னுடைப்பெருந்தன்மையும்யானுமிங்கெய்திடாவகையென்பாற்
றன்னுடைப்பெருந்தன்மையுந்தானுமாய்த்தணப்பறநடிக்கின்றான்
கொன்னுடைப்படைத்தண்டமொன்றெடுத்தெதிர்குறுகியசமன்வீர
முன்னுடைத்திடவுதைத்திடுமிளசைமாமுதுநகர்ப்பெருமானே.

80

பெருமதிக்கெலாம்புகழ்ந்திடுமிளசையம்பெரும்பதிதனின்மேய
திருமதிக்கொழுந்திலகியசடைமுடிச்சிற்பராவெஞ்ஞான்று
மொருமதிப்படநிலைபெறாதநுதினமுழிதருகறங்கேய்ப்பத்
திரியும்வன்மனக்குரங்கினைநிலைபெறத்திருத்துவதெவ்வாறே.

81

வேறு.
எவ்வமுகந்தையுமிழிவுமானமு
மவ்வியநெஞ்சமுமனைத்துநீங்குமா
னவ்வியங்கரத்தவனிளசைநாயகன்
செவ்வியபொலங்கழல்சிந்தைசெய்யினே.

82

செய்யவன்கருகியதிருமிடற்றினான்
வையகமளந்தவன்வழுத்துதாளினான்
மெய்யடியவர்புகழிளசைமேவிய
வையனைமறக்கிலென்னாவியுய்யுமே.

83

உய்வகைநாடுநருறுதியோர்ந்திடிற்
சைவநேர்சமயமுஞ்சங்கரர்க்குநேர்
தெய்வமுமிளசையிற்சிறந்தபாக்கமு
மெவ்வுலகத்தினுமில்லையில்லையே.

84

இல்லெனிலுண்டுளதென்னிலில்லையா
மல்லதங்குருவெனிலருவுமாகுமாற்
செவ்வியல்சோலைசூழிளசைச்செம்மலான்
பல்குசீர்யாவரேநவிற்றற்பாலரே.

85

பாலனைக்கூற்றுவன்பற்றிக்கோடலே
மேல்கொடுவருதலுமுதையில்வீட்டினான்
சோலையின்மதிதவழிளசைத்தோன்றலா
னேலுமெய்யடியவர்க்கெளியனல்லனே.

86

அல்விளக்காகியவாக்கைதன்னைநா
னெல்லிளக்காயிடக்காண்பதெந்தநாள்
சொல்விளக்கியபுகழ்த்தொண்டைநாட்டுக்கோர்
நல்விளக்காகியவிளசைநாதனே.

87

நாதனுமென்னுடைநட்புமொக்கலுந்
தாதையுந்தாயருமகவுந்தாரமும்
யாதுமாயிருந்தெனையெளிவந்தாண்டனன்
மேதகுவளம்பயிலிளசைவேந்தனே.

88

வேந்தராய்க்கவிஞராய்விச்சைகற்றுணர்
மாந்தராயறிஞராய்வாழவேண்டுவீர்
பூந்தராய்க்கவுணியன்போற்றுமெந்தையைச்
சாந்தராயிளசையிற்சார்ந்துகண்ணுமே.

89

கண்ணுதன்மதிமுடிக்கமலக்காலனைக்
கண்ணுதன்மதிமுடிக்கமலக்காலனை
யண்ணலாம்பொதுவிளங்காட்டினானையா
மண்ணலாம்பொதுவிளங்காட்டினானையே.

90

காட்டினானுலகெலாங்கனவுபோன்மென
வாட்டினான்பிறவிவேர்வாட்டிச்சென்னிமேற்
சூட்டினான்றிருவடிதொலைவிலானந்த
மூட்டினாளிலசையிலுறையுமன்னனே.

91

வேறு.
மன்னுமோர்கணப்போதாயினுநிலையாமதித்திடற்கரியலிவ்வுடம்பை,
யென்னதென்றெண்ணியிதற்கெனத்தொடங்கியினிலாக்களவுபொய்காம, 
முன்னியமதமாற்சரியமாங்காரமுலப்பிலாவெகுளியுற்றந்தோ, 
பன்னெடுங்காலமழுங்குமாறெவனோபசும்பொழிலிளசைநாயகனே.

92

நாயினுக்கிரையோநரியினுக்கிரையோநகுநடைக்குழிவிழிப்பிறழ்பற், 
பேயினுக்கிரையோகழுகினுக்கிரையோ பெரிதுநாறியபுழுக்குரம்பை, 
யீயினுக்கிரையோயாதினுக்கிரையோ யான்சுமந்துழன்றிடப்பணித்தாய், 
தாயினுக்கழகோகுழவியைவருத்தல்சாற்றிடாயிளசைவானவனே.

93

வானறல்வளிதீமண்ணெனுமிவற்றால்வனைந்ததோற்குழிசியைக்குருதி
யூனொடுபிசைந்துவைத்தபாழ்ஞ்சுவரை யொன்பதுவாயினுமலமே
தான்வழிந்தொழுகும்விடக்கினைத்துயரந் தனக்கொருகொள்கலந்தன்னை
யானிதைச்சுமந்துதிரிவதுமுறையோ விளசையம்பதியமைந்தவனே.

94

அமையுமிவ்வுடலேபொருளெனவோம்பி யடியவர்யாரையும்பணிகொண்
டிமையளவேனுநன்னெறிதேராதிதற்குமேற்கதியிலையென்றே
தமையுணர்ந்தவர்போனாடகநடித்துத் தழற்படுநரகினுக்கிரையாய்ச்
சுமையெடுதலுத்தேனிளசைவாழ்முதலேதுடைத்திடாதிருப்பதெற்றினுக்கே.

95

எத்தனையுடலமும்மையிலெடுத்தே மெத்தனையினியெடுப்பனவு
மத்தனையன்றோவிவ்வுடற்பயனென் றறிந்திடாதிதனையேபொருளாக்
கத்தியுமிதற்கோரூறுவந்துற்றாற் கலுழ்ந்துவெந்துயர்க்கடல்குளித்தும்
பித்தரின்மயங்கித்திரிவதென்னேயோ பேசிடாயகத்தியீச்சுரனே

96

அகத்தியீச்சுரனைக் காட்டிவீடளிக்கு மறிவினைத்தஞ்சமாமுடலென்
றிகத்திலேயின்பந்துய்த்திடவறியா ரேவல்கொள்வோர்க்குநற்கரணம்
புகப்பெறுநரிநாய்கழுகுக்குப்போகம் புழுவுக்குபுவனமற்றதுபோற்
சகத்திடைத்தமக்குத்தனுவெனுமிதனைத் தாமெனவிழையுமாறென்னே.

97

என்பினைநரம்பைமூளையைமயிரை யிறைச்சியைக்குருதிசுக்கிலத்தைப்
பின்புறுந்துவக்கைவேறுவேறாகப் பிரித்துப்பைமறியெனநோக்கி
யன்புறுமறிவாற்பௌதிகமெனநீத் தாண்டமாவிளசைநாயகன்ற
னின்பவாரிதியிற்றுளைந்திடப்பெறாதார்க்கிறப்பதும்பிறப்பதுமியல்பே.

98

இயலிசையுணர்ந்துமாசறத்தெளிந்தும் யாவரும்புகழ்ந்திடப்பெற்று
மயலறுபொன்போற்சுவைபெறப்பேசிமன்பதைப்பரப்பெலாம்வசித்துங்
கயல்விழிமடவார்புணர்ச்சியைவெறுத்துங்காற்றினைச்சருகினைநுகர்ந்தும்
பயில்வுறும்பவவேரறுங்கொலோவிளசைப் பராபரனருள்பெறாதவர்க்கே.

99

தவறுமிக்கிழைத்தாற்கழுத்தினிலிறைவன் சாற்றொணாப்புழுத்தலைநாயை
யவமுறப்பிணித்தான்முகஞ்சுழிந்தழுங்கியருவருத்தரையனையிரந்து
நவில்பிணிப்பகற்றவிழைவரேயல்லா னன்கெனமதிப்பரோவதுவே
யுவமையென்றுணர்ந்தோருடலையோம்புவரோவிளசைவாழொருவனைமறந்தே.

100

மறந்தருநெடுவேன்மைந்தனைப்பயந்துமகிழ்பிரதானநாயகிபாற்
சிறந்துவாழிளங்காட்டகத்தீயீச்சுரன்றாள் சேர்ந்துநின்றொன்றுபட்டதுவா 
யுறங்கியெங்கெழிலென்ஞாயிறென்றிறுமாந்துறையுமெய்யடியவர்தமது
நிறைந்தபல்கீர்த்தியிடைவெளியின்றி நிரந்தனவுலகமெங்கணுமே

101


ஆகச்செய்யுள் 101.

மெய்கண்டதேவர்திருவடிவாழ்க
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
------------


கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமாகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச்செய்த பிரபந்தத்திரட்டு

2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி.

காப்பு

பாமாலைக் குறுமணமாம் புகழ்க்குளந்தாபுரிப் பதிற்றுப்பத்தந்தாதித்
தேமாலையெம்பெருமான்றிருவடியிற் புனையவருள்செழித்துநல்கு
மாமாயைத்தொடரறுத்துப்பசுபோதக்க வளமுண்டுமதமேல்கொண்டு
காமாதித்தறிபிடுங்கிவினைக்கடலை யுழக்கிவருகளபந்தானே.

1

நூல்.

சீருங்கல்வியுஞ்செல்வஞானமும்
பாரும்விண்ணும்பரிக்குமிறைமையுஞ்
சாருந்தென்குளந்தாபுரிமேவிய
காருண்கண்டனைக்கைதொழுவார்கட்கே.

1

கட்டறுத்துக்கரிசறுமானந்த
நிட்டையீதெனக்காட்டிமுன்னிற்குமாற்
சிட்டர்சூழுந்திருக்குளத்தூரினு
ளட்டமூர்த்தியுமாகியவண்ணலே.

2

அண்ணலைக்குளத்தூரினமுதினைக்
கண்ணினுண்மணியைக்கனிதேறலை
யெண்ணியெண்ணியிராப்பகலேத்தநான்
பண்ணுமெய்த்தவமென்கொலிப்பாரிலே.

3

3 பாரும்விண்ணும்பவனனுமங்கியு
நீரும்வேரறநீக்கிப்பரத்தினி
லாருமன்பர்க்ககவிளக்காயினான்
யாருமேத்துங்குளந்தையிலீசனே..

4

ஈசனேகுளத்தூருமென்னெஞ்சமும்
வாசமாகமகிழ்ந்தருள்சோதியே
நீசனேனுக்கும்வேண்டுநிரந்தரம்
பாசமுன்றன்பதாம்புயத்தாகவே.

5

ஆகமங்களருமறையாவையு
மேகமாய்த்துதித்தேத்துமறிவரும்
யோகமூர்த்தியென்பார்குளத்தூரினு
ணாகரேத்தநடிக்கும்பிரானையே.

6

பிரானென்றுன்னிப்பெருங்குளத்தூருறை
புராணன்றன்னடிபோற்றவறிகிலார்
தராதலத்துடல்பெற்றதவப்பயன்
விராவலின்றிவிளிதருமுமரே.

7

மருவுமைம்புலவஞ்சார்தங்களாற்
றெருமருஞ்சிறியேனையஞ்சேலெனா
வருளும்வார்த்தைக்கலந்தனனையனே
யொருகுளந்தையுறையுமெய்ச்சோதியே.

8

சோமசேகரன்றொல்குளத்தூருறை
சோமநாதனெவர்க்குந்தொடர்வருஞ்
சோமலோகன்றுணையடிபோற்றினச்
சோமனாதுதுரக்குந்திருக்கையே.

9

திருக்குளந்தைவருஞ்செயலார்கடைத்
திருக்குளந்தையலையிடஞ்சேர்த்தக
திருக்குளந்தைவிழியவன்சேர்விடந்
திருக்குளந்தைதெரிசித்தயாங்களே.

10

வேறு.
யாதுமறிவொன்றில்லாதவெனையும்பொருளாத்தடுத்தாண்ட
மாதுபாகன்றிருக்குளத்தூர்வரதன்கருணைப்பெருக்கத்தை
யோதியோதியுன்னுதொறுமுள்ளமுருகுமயிர்சிலிர்க்குங்
காதல்பெருகும்புளகிக்குங்கண்ணீர்ததும்புங்கடியேற்கே.

11

கடியாரிதழிச்சடைமுடியுங்கண்கண்மூன்றுங்குறுநகையும்
வடியார்சூலத்தனிப்படையும்வரைநேர்புயங்களொருநான்கும்
பொடியார்நுதலுந்திருமுகத்தின்பொலிவுங்காட்டியுளம்புகுந்தர
னடியார்வழுத்தத்திருக்குளத்தூரமருங்கருணைப்பெருமானே.

12

மானேர்நோக்கின்மடநல்லார்மாயவாழ்வின்மதிமயங்கி
யானாவிடும்பைக்கடலழுந்துமடியேன்றனக்கோர்புணையாகு
மூனேயுயிரேயுணர்வேயென்றொக்கக்கலந்துசிவானந்தத்
தேனேயான திருக்குளத்தூரிறைவன்கமலச்சேவடியே.

13

சேவார்பெருமான்றிருக்குளத்தூர்சேரப்பெற்றேன்றிருப்புகழை
நாவால்வாழ்த்தக்கைகுவிக்கமனத்தானினைக்கநறுந்தேனார்
பூவானீராலனுதினமும்போற்றப்பெற்றேனாங்கவனு
மாவாவெனவந்தாண்டருளப்பெற்றேன்பிறவியற்றேனே.

14

அற்றார்க்கற்றபரம்பொருளையமலானந்தப்பெருவாழ்வைச்
செற்றார்புரங்கடீமூளச்செய்தகுளத்தூர்ப்பெம்மானைச்
சற்றாகிலுநீநினைந்தறியாய்சழங்கன்மனனேயமன்றூதர்
பற்றாநிற்கவரின்வறிதுபரிவாயேதுபுரிவாயே.

15

வாய்மையொழுக்கந்தவஞ்சீலம்வணக்கம்பொறுமையறிவடக்கந்
தூய்மைதவறாமெய்யடியார்தொழும்புக்கிரங்கியேனோர்க்குச்
சேய்மையவனாய்த்திருக்குளத்தூர்வரைப்பின்வைகுஞ்சிவபெருமா
னாய்மேற்றலிசிட்டாங்கெனையுநயந்துவந்தாட்கொண்டானே.

16

கொண்டான்பிரமன்முடைத்தலையைக்குடங்கைத்தலத்துக்குறுமூரல்
லிண்டானவுணர்புரமூன்றுமொருங்குவேவநுதல்விழியாற்
கண்டான்காமனுடல்பொடியாக்கடிபூம்பொழில்சூழ்குளத்தூரிற்
றண்டாதுறையும்பெருங்கருணைத்தகைசேர்ஞானப்பெருவாழ்வே.

17

வேலையலைபோற்பிறந்திறந்துமெலியாவண்ணஞ்சிவஞான
நூலையுணர்ந்துமனோலயமாய்நுவலற்கரியபரானந்தப்
பாலைநுகர்ந்துவாதனையுங்கழன்றுவாழப்பணிப்பதென்றோ
சோலைபுடைசூழ்திருக்குளத்தூர்ச்சோதிப்பொருளாந்தொல்லோனே.

18

தொல்லைநாளேநமைவணங்காத்துட்டனிவனென்றுன்னாது
வல்லையணைந்தாட்கொள்ளாயேன்மற்றோர்துணைவேறெனக்குளதோ
வல்லைநிகருங்கருஞ்சுரிமென்கூந்தல்முதவல்லியெனு
முல்லைநகைவாணுதல்பாகாமுறைதேர்குளத்தூருறை‍வோனே.

19

உறையுளாகத்திருக்குளத்தூருறையும்பெருமான்பதாம்புயத்தை
யிறையும்வழுவாதகங்குழையவேத்திப்பரசுமடியவர்க்கு
முறையேதொண்டுசெய்திருக்குமுடியாப்பேறுதனைப்பெற்றுக்
குறையாவின்பப்பெருங்கடலிற்குளித்தேனென்றுங்களித்தேனே.

20

களிறானவைந்தும்வயமாவடக்கியொருபாலிருந்துதனிவாய்
வளியூடெழுப்பியிடைபிங்கலைக்கண்மருவாதவண்ணமொருவித்
தெளிவானகுண்டலிநிசத்தியோடுசெறியிந்துவட்டமதுவுண்
டொளியாயுறங்கவருளுங்குளந்தையுடையான்கடைக்கணருளே.

21

அருமேனிகொண்டுமுருமேனிகொண்டுமருள்கூரிரண்டுமருவுந்
திருமேனிகொண்டுமலநோய்துரந்துசிறியேங்களுய்யுமுறையாற்
கருமேனிநீத்தகருணைப்பெருக்கையளவிட்டியாவரறிவார்
செருமேனிமிர்ந்தமதனற்கடந்ததிருவார்குளந்தைமுதலே.

22

முதிரும்பல்கோடிசமயப்பிணக்கர்முறைகெட்டுழன்றுமயலா
யதுதெய்வமென்றுமிதுதெய்வமென்றுமமைவுற்றிடாமலலைவார்
மதநம்பியானுமருளாமலுண்மைவழிகாட்டியாண்டுகொளுவாய்
கதமொன்றியானையுரிபோர்த்துகந்தகமலாகரத்துநிறைவே.

23

நிறைவாகியெங்குமசைவின்றியன்பர்நினைவூடெழுந்தமுதலே
மறைநான்குமின்னுமுறையிட்டுழன்றுமறியப்படாதவரதா
சிறைநீருடுத்தமதில்சூழ்குளந்தைநகர்வாழவந்தசிவமே
யிறைவாவரங்கடருசோமநாதவெனவேத்தெடுப்பதெனதே.

24

எனதல்லதொன்றையெனதென்றுகொண்டுமருளான்மயங்குமெளியே
னுனதன்பர்தங்கள்பணிசெய்துமெய்ம்மையுணருந்திறத்தையருள்வாய்
கனமொன்றுசோலைபுடைசுற்றுகின்றகவினார்குளந்தைநகராய் 
மனமொன்றுபட்டுநினைவோர்தமக்குவெளிநின்றஞானவடிவே.

25

வேலிற்றிகழ்ந்துகயலிற்பிறழ்ந்துவிடமொப்பவெப்பமருவிப்
பாலிற்றெளிந்துபிணையைத்துரத்தியரிசூழ்பரந்துபடைவேள்
கோலிற்பயின்றுகுமிழின்மறிந்துகுழையூடுசெல்லும்விழியார்
மாலிற்படாதுன்னடியேவழுத்தவருளாய்குளந்தையானே.

26

அருமந்ததேவர்பலர்கூடிவேலையமுதங்கடைந்தபொழுதின்
வெருவந்துவீயவதன்மேலெழுந்தவிடமுண்டுகந்தவிமலன்
பருவங்கள்கண்டுகுருமேனிகொண்டுகதியுய்க்குமாதிபகவன்
மருவுங்குளந்தைநகரம்வணங்கவெதுபோலுமுன்செய்தவமே.

27

தவமேதுமின்றிமுழுமூடனாகிமயலாலுழுன்றுதரைமே
லவமேபுரிந்துகலரோடிணங்கியுடலோம்பிமாளுமடியா
னிவனாகுமென்றுபழியாதிரங்கியெனையாண்டுகோடல்கடனே
நவமார்குளைந்தைந்கராயரங்கினடமாடுமுக்கண்மணியே.

28

மணிகண்டனென்றுமுமைபங்கனென்றுமறையோதியென்றுமழுமா
னணிகொண்டசெங்கையிதழாளனென்றுமடியார்க்குநல்லனெனவும்
பணிகொண்டவேணிமுடியான்குளந்தைபதியாம்விருப்பனெனவுந்
தணிவொன்றுசிந்தையொடுபாடுமன்பர்சரணென்றலைக்குமலரே.

29

மலர்மங்கைகேள்வன்மலராசனத்தன்மருவும்பரோலமிடவு
மலரங்கையேந்திமுனிவோர்களெங்குமலமந்துநாடியிடவுங்
கலகங்கள்கொண்டுமறைநான்குநின்றுகதறித்திரிந்தலையவு
மிலமென்குளந்தைநகரானெனக்குமெளிவந்தவாறிதெவனோ.

30

வேறு.
எவ்வநோய்களுமிடும்பையுமகந்தையுமிழிபு
மெளவியப்புலைநெஞ்சமுமனைத்துநீங்கிடுமா
னவ்வியேந்தியநறுமலர்க்கையினான்கருணைப்
பெளவமானவன்குளந்தைமாநகர்பணிபவர்க்கே.

31

பவளக்காடுமொய்த்தனையசெவ்வேணியும்பதியுந்
தவளத்திங்களங்கீற்றுமெண்புயங்களுந்தறுகட்
கவளத்தோலுரிவீரமுங்காட்டியெம்பெருமான்
குவளைப்பொய்கைசூழ்குளந்தையிற்குடியிருந்தனனே.

32

குடியிருப்பதென்னெஞ்சகம்பூண்பதுகொடும்பாம்
படிமிதித்துநின்றாடிடஞ்சுடுவனமணியும்
பொடியுடுப்பதுதோலெனிற்குளந்தைமாபுரிவா
ழடிகளைத்தொழுந்தெய்வமென்றார்மதிப்பவரே.

33

மதியிலார்சிலரிரண்டுகாற்பசுக்களின்மனிதர்
துதிசெயாதிகழ்கின்றதாற்சிறுமையோதுதியாற்
கதியைவேண்டிமாலயன்முதற்கடவுளர்வழுத்திப்
பதியுமன்பினாற்பணிசெயுங்குளந்தையெம்பரற்கே.

34

பரந்துவானமுந்திசைகளுங்கணத்தினிற்படர்ந்து
கரந்துசெல்லுமென்னெஞ்சினைக்குவித்துநின்கழற்கீழ்
நிரந்தவன்பினாலிருத்திடநிறுத்துநாளுளதோ
விரந்தவன்பருக்கெளியனாங்குளந்தைவாழிறையே.

35

இறையுநீங்கிடாவானந்தவெள்ளமாமின்பத்
துறையிலேபடிந்தெனைமறந்ததீதமாந்தொன்மை
நிறைவுவேண்டினேனையனேநினைந்துவேண்டினர்க்குக்
குறைவிலாவரங்கொடுத்தருள்குளந்தைநாயகமே.

36

நாயினுக்குணவாகுமிவ்வுடம்பினைநானே
பேயெனச்சுமந்திதுவரையெய்த்தனன்பிரியா
நேயனேயினியாற்றிலன்குளந்தைவாழ்நிமலா
காய்களிற்றுரிப்போர்வையாயுனக்கடைக்கலமே

37

அடைக்கலம்புகுந்தேனுனக்கடியனேன்றன்னைப்
புடைத்துவெந்நரகிடைவையோபுனிதரானவர்க்குக்
கிடைக்குநின்னடிக்கீழிருத்திடுவையோவறியேன்
மடைக்கணித்திலஞ்சொரிதிருக்குளந்தைவாழ்முதலே.

38

வாழ்வைமெய்யெனநம்பிநின்னடியிணைமறந்து
தாழ்வுசெய்திடுஞ்சிறியனேனாயினுந்தக்கோய்
சூழிசூழ்திருக்குளந்தைவாழ்சோமநாயகனே
யாழ்வுறாதெடுத்தாள்வதுன்னருளினுக்கழகே.

39

அழிதகும்புலையுடற்பொறைதாங்கிநின்றலைவீர்
கெழுவுநன்னெறியுமக்கியானுணர்த்துவன்கேண்மின்
றொழுமினெம்பிரானடியிணையேத்துமின்சூழ்மி
னெழுமின்றென்குளத்தூரினைச்சேருமினினிதே.

40

வேறு

இனியவனுலகுக்கெல்லாமெம்மனோர்பிறவித்துன்பத்
துனிதவிர்த்தருளவேண்டித்தோளொருநான்குஞ்செவ்வாய்க்
கனிமொழியிடமுங்காளகண்டமுங்கண்கண்மூன்றுங்
குனிமதிக்கீற்றுங்காட்டிக்குளந்தையிற்குடிகொண்டானே.

41

கொண்டதுவிடாதுபற்றிக்குருமொழிதவாதுநின்று
தொண்டுசெய்யடியார்ஞானச்சுடரினைத்தீண்டுமுள்ளப்
புண்டரீகங்கள்கோயிலென்பராற்புடைசூழ்செல்வத்
தண்டலைக்குளந்தைவைப்பிற்றண்ணருளாளனார்க்கே.

42

ஆளரியேறேபோலவைம்புலக்கரிக்குழாத்தைக்
கோளறமுருக்கிஞானக்குரைகடல்படிந்துசெய்ய
தாளதாமரைக்கீழ்வைகத்தண்ணளிசுரந்தெனுள்ளே
வாளொளிமயமாய்நின்றான்குளந்தையின்மருவுந்தேவே

43

மருமலர்மாலைசூட்டேன்வாயினாற்றுதிக்கமாட்டே
னிருவினைப்பிணக்கைவீட்டேனிதயத்திலறிவைநாட்டேன்
பெருகுமெய்*தவங்களீட்டேன்பேயேனுய்யும்வண்ண
மருளுமாறெவனோசொல்லாயணிபொழிற்குளந்தையானே.

44

யாவனங்கங்கேயெள்ளுக் கெண்ணெய்போனிறந்துநின்றான்
யாவன்முக்குணங்கடம்மின் மூவரையீன்றபெம்மான்
யாவன்முத்தொழிலுமூவ ரியற்றிடப்பணிந்தானந்தத்
தேவனேயெமையாட்கொள்ளக்குளந்தையிற்சிறந்துளானே.

45

சிறந்ததோர்தெய்வமான்றிருக்குளத்தூரின்மன்னு
மறந்திகழ்விடையோனாதலாயவும்வேண்டுங்கொல்லோ
மறங்கிளர்புரமூன்றட்டஞான்றுமான்முதலாந்தேவர்
புறங்கிளர்கருவியாகிப்போந்தவாறறிந்துளார்க்கே.

46

அறிபறியாமைநீத்தவறினையறிந்துவஞ்சம்
பிறிவுறத்துரியாதீதப்பேரின்பநிலையினொன்றாய்ச்
செறி*புறும்வாழ்க்கையந்தோதிருக்குளத்தூரின்மன்னு
மிறைவனையிறையென்றுன்னாரெப்படியெய்துவாரே.

47

வாரறுத்தெழுந்துவீங்கிமதர்த்தடிகனத்துவெற்பைப்
போரினில்வென்றுமெள்ளப்புடைபரந்திறுமாந்தோங்கிச்
சீருறுகளபந்தோய்ந்தசெப்பிளங்கொங்கைபாகன்
சார்புகழ்குளந்தைவாணன்சரணமேசரணமாமே.

48

சரண்பிறிதில்லைநீயேதஞ்சமென்றடந்தோர்தம்மை
முரண்படாவுண்மைகாட்டிமுத்திதந்தளிக்கவல்லோ
னரண்பயில்குளத்தூர்மன்னுமண்ணலேயன்றிநீர்சூழ்
திரண்டசீருலகந்தன்னிற்றேரினும்யாருளாரே.

49

உள்ளதுமிலதுமாகுமுருவமுமருவுமாகுங்
கள்ளமும்வெளியுமாகுங்கருணையுமறமுமாகும்
பள்ளமுமேலுமெங்கும்படரொளிப்பிழம்பாய்நிற்கும்
வள்ளலுந்தானேயாகுங்குளந்தையின்மருவுந்தேவே.

50

வேறு.
மருவுமாணவக்குறும்பினைவேரறமாற்றியாநந்தத்தே
யொருமைபூண்டுநின்றிரண்டறக்கலந்துவாழுண்மையைப்பெறப்பெற்றேன்
கருவிமேகமொத்திலங்கியகந்தரக்கடிபொழிற்குளந்தைக்கோன்
றிருவடித்துணைநெக்குநெக்கேத்திடுஞ்செய்தவப்பயனாலே.

51

செய்தவப்பயனில்லவர்காண்பரோதிருக்குளத்தூர்மன்னு
மைதழைத்தகண்டப்பிராணியற்கையுமற்றவனடியார்க்கு
மெய்தழைப்பவந்தருள்புரிமுறைமையுவிளங்கிழையுமைகாணக்
கைதழைத்தவம்பலத்தினின்றாடிடும்பெருங்கருணையுந்தானே.

52

தானலாதவிவ்வுடம்பினைத்தானெனத்தருக்கியிப்பிரபஞ்சத்
தீனவாழ்க்கையைவேட்டழிந்துழலுமிவ்வுயிருமற்றுனைப்போல
வானபேரறிவுடைத்தெனக்கூறுவதறிந்தவர்க்கடாதன்றே
பேனவார்திரைத்தடங்கள்சூழ்குளந்தையிலமர்ந்தருள்பெருமானே.

53

மானமாயுடல்பொருளெனுமிவற்றொடுமன்னுமாவியைக்கூட
ஞானதீக்கையினுனதெனக்கொடுப்பதுநயந்துணரிந்திருந்தேயுந்
தேனலர்ந்தபூம்பொழிற்குளத்தூருறைசெல்வனேயிவ்வான்மா
வீனநீங்குதன்வயத்தனாந்தன்மையனென்பர்கள்சாலாரே.

54

சாலவும்பெரியவனுநீயல்லதுசாற்றின்வேறிலையென்றுஞ்
சாலவுஞ்சிறியதுமுயிரென்றும்வேதாகமமுதலெல்லாஞ்
சாலவோதுவதறிந்துமொப்புரைப்பவர்தன்மையையென்சொல்வேன்
சாலமேழையுஞ்சாய்த்தவன்றொழருவந்தனிக்குளத்தூரானே.

55

குளந்தைமாநகரமர்ந்தருள்கொழித்திடுங்குழகனேயடியேனுக்
களந்தறிதிடாப்பரமதப்பிணக்கினிலகப்படாதிருண்மாயை
பிளந்தநின்னடியாரடித்தொழும்பினிற்பிறழ்ந்திடாதொருஞான்றும்
வளந்தரும்பவிமீதினிற்பிறந்திடாவரங்கடந்தருள்வாயே.

56

அருள்பழுத்ததென்குள்ந்தைமாநகருறையண்ணலுக்கிடமாகுந்
திருவல்லந்திருவேகம்பமிடைச்சுரந்திருக்கச்சூர்திருமுல்லை
மருகல்காளத்தியொறறியூர்வான்மியூர்மாகநல்வலிதாய
முருகன்பூண்டிபாசூர்திருக்கழுகுன்றமுதுகுன்றம்வேற்காடே

57

காளையாய்க்குளத்தூரமர்ந்தருளியகண்ணுதற்ப்பெருமாற்குத்
தோள்களாயிரந்திருமுடியயிரந்தொழில்களாயிரஞ்செய்ய
தாள்களாயிரம்விழிகளுமாயிரந்தானமாயிரம்பேரின்
கோள்களாயொரங்குணங்களாயிரமெனக்கூறுவருணர்ந்தோரே.

58

உணர்ந்துளோருளத்தகரபுண்டரீகமுந்துவாதசாந்தமுமும்பர்
வணங்குமாதித்தம்ண்டலநடுவுநான்மறைகளின்முடிவுஞ்சீ
ரிணங்குசோமலோகமுந்திருவம்பலத்திடமுந்தென்குளத்தூர்வாழ்
குணங்கடந்தவர்சிறப்பிடமாமெனக்கூறிடுமறைநூலே

59

மறையவன்றலைமலர்ந்தகைத்தலத்தினுமாயவன்விழிப்போதை
யறைகழற்பதாம்புயத்தினுங்கண்டவரஞ்சிறைச்சுரும்பார்த்து
நறவுவாய்மடுத்துறங்குதாமரையினல்லோதிமம்விளையாடுஞ்
சிறைசெய்நீர்க்குளத்தூர்பிரான்றனக்குமேற்றெய்வமுண்டென்னாரே

60

வேறு.
என்னேயடியேனிதுகாறுமெலிந்
தன்னோவெனநோவதறிந்திலையோ
பொன்னேமணியேகுளந்தாபிரிவாழ்
மன்னேயெனையாளமதித்திலையோ.

61

மதித்துன்னடியேமனநெக்குருகத்
துதிக்குஞ்சிறியேன்றுயர்தீர்த்திலையே
யெதிர்த்துன்றனையேயிகழ்வார்குளத்தூர்ப்
பதிக்கன்புடையாய்பரமாநுடரே.

62

பரமாநுடர்நின்றுபழித்திடவே
தரமானபிறப்பையெடுத்தன்னான்
வரனேகமலாகரமாநகர்வா
ழானேயினியென்றருள்கூடுவதே.

63

கூடாரெதிரேசிறுமைக்குடியாய்
வாடாமலரெனக்குவரந்தருவாய்
பீடார்புகழ்சேர்பெருந்தண்டகமா
நாடாள்கமலாகரநாயகனே.

64

கனலிற்படுபாந்தள்கடுத்திடநான்
றினமிப்படிநைவதுசி்த்தமதோ
வினியெத்திறமுன்னருளெய்துவனோ
புனிதக்கமலாகரபோதகனே.

65

தகுமோபிறிதுன்சரணேசரணம்
புகுதுஞ்சிறியேன்புனல்சூழுலகோர்
நகுமாறுதிரிந்துநடுங்குவது
மிகுசீர்க்கமலாகரவிண்ணவனே.

66

விண்ணாடருமெண்ணரும்வித்தகனே
பெண்ணாணவியானபெரும்பொருளே
கண்ணார்கமலாகரநாயகனே
யண்ணாவெனையாளுவதுன்கடனே.

67

கடலார்விமுண்டுகலங்கிமையோ
ரிடர்தீர்த்தவனென்றுனையேத்தினனா
னுடலால்வருதுன்பமொழித்தருள்வா
யடலார்கமலாகரவாண்டகையே.

68

கையுஞ்சிரமும்விழியுங்கழலு
மெய்யும்முனதாகவிதித்தருளாய்
செய்யுந்தடமுந்திருவும்புடைசூழ்ந்
துய்யுங்கமலாகரவுத்தமனே.

69

உத்திப்பணிபூண்டருளுத்தமனைப்
பத்திக்கெளிவெந்தபரம்பொருளை
முத்திக்கமலாகரமுன்னவனை
யெத்திக்கினுமேத்தியிறைஞ்சுதுமே.

70

வேறு.
இறைவனேகுளத்தூரிலிருந்தருளும்பெம்மானே
முறைபிறழானந்தமுத்திநெறிதந்தருளி
நிறைவுடையமெய்யடியார்நீடுபெருந்திருக்கூட்டத்
துறையுளெனைச்சேர்ந்தாயையென்சொல்லித்துதிப்பேனே.

71

துதிப்பதற்குவாயமைத்தாய்சூழ்வதற்குத்தாளமைத்தாய்
மதிப்பதற்குமனமைத்தாய்வணங்குதற்குத்தலையமைத்தாய்
கதிப்பதற்குநூலமைத்தாய்கடிக்குளத்தூரமந்தறிவி
லுதித்தவுனக்கடியேங்களுதவுவதென்கைம்மாறே.

72

மாறுபடாப்பெருங்கருணைவாரிதியாய்நிறைந்திருந்து
மாறுவகைச்சமயத்துமவ்வவர்கட்கவ்வவையா
நீறுபுனையடியார்க்குநின்மலப்பேரொளிமயமாந்
தேறுமவரகத்தினிற்குந்திருக்குளந்தைப்பதியானே.

73

பதிகடாறுஞ்சென்றேத்திப்பரகதிக்குவழிதேடேன்
மதியுடையநின்னடியார்வழித்தொண்டின்முறைநில்லேன்
றுதிபெருகுந்தென்குளத்தூர்ச்சுடர்க்கொழுந்தேயடியேனை
யதிகமாந்தொழும்பேற்றியாட்கொள்வதெவ்வாறே.

74

எவ்வாற்றானாய்ந்தாய்ந்துபார்த்திடினுமெயின்மூன்றிற்
றெவ்வாற்றுந்தொழில்கடந்துதிருக்குளத்தூரமர்ந்தருளி
யவ்வாற்றைமுடிக்கணிந்தவற்புதனேயல்லாம
லிவ்வாற்றானிதுதெய்வமெனப்பிறிதுகாணேனே.

75

காண்கின்றகண்ணொளியுங்கதிரொளியுமெனக்கலந்து
பூண்கின்றவதீதநிலைபுலையேற்குங்கிட்டுவதோ
பாண்கொண்டமதுரமொழிப்பரையமுதவல்லியொடு
மாண்பொன்றுதிருக்குளத்தூர்மன்னியசீர்மறைப்பொருளே.

76

பொருப்பரையனருந்தவத்தாற்புவிதழைப்பவீன்றெடுத்த
திருப்பரையினுடன்குளத்தூரமர்ந்தருளிச்செங்கரத்து
நெருப்பரையினக்குமணிநீள்சடைமேலறுகணியும்
விருப்பரையன்பால்வணங்கார்மெய்யுரையைவேண்டேனே.

77

வேண்டாதகொடுந்தக்கன்வேள்வியகத்துடனிருக்க
மூண்டார்கள்பட்டதெல்லாந்தெரிந்துணர்ந்துமூதறிவோ
ராண்டானைத்திருக்குளத்தூரமர்ந்தருளியிருவருக்கு
நீண்டானையிகழ்வாரைநெஞ்சாலுமணுகாரே.

78

கார்கொண்டமணிமிடறுங்கருணைபொழிவிழிமூன்று
நீர்கொண்டசடைமுடியுநிலவொழுகுங்குறுநகையுஞ்
சீர்கொண்டமுகப்பொலிவுந்திருக்குளந்தைநகராள
னேர்கொண்டபதாம்புயமுமென்னுளம்விட்டகலாவே.

79

அகலாதசீர்க்குளந்தையணிமறுகிற்சோமேச
ரிகலார்வெள்விடையேறியிசைமுழங்கவிரவெல்லாம்
பகலாகவெழுந்தருளுந்திருவிழாப்பரிசுதனைத்
தகவாரத்தரிசித்தோர்தரையிலினிப்பிறவாரே.

80

வேறு.
பிறப்பதுமிருப்பதும்பெரிதுநோயினா
லிறப்பதுமேதொழிலென்னிலென்செய்வேன்
சிறப்புறுவளம்பயிறிருக்குளந்தையி
னறப்பெருஞ்செல்வியோடமர்ந்தவீசனே.

81

ஈசனேகுளந்தைவாழிறைவனேகொடும்
பாசமுந்தண்டமும்பற்றியந்தகன்
காய்சினத்துடன்வருங்காலைநீயலாற்
பேசிடினருந்துணைபிறிதொன்றில்லையே.

82

இல்லமுமக்களுமெழிலுஞ்சுற்றமுஞ்
செல்வமுங்கூடவந்திடுவதில்லையே
நல்லருட்குளந்தையினாதனைத்தொழு
தல்லலையறுத்திடுமறிவிலீர்களே.

83

களிம்புதோய்செம்பெனக்கலந்தமாசினிற்
பளிங்கெனக்கிடந்தவிப்பாவியேனினித்
தெளிந்திடத்திருவருள்செய்திடாய்மணி
விளிம்பிழைத்துயர்மதிற்குளந்தைவேந்தனே.

84

வேந்தராயுலகெலாமாளவேண்டினுஞ்
சாந்தராய்முத்தியைச்சாரவேண்டினு
மாந்தர்காள்குளந்தையிலிறையைவாழ்த்துமி
னோர்ந்துளோர்க்கிதுவலாலுறுதியில்லையே.

85

இல்லையென்றிழிப்பினுமிரந்துபின்செலும்
புல்லறிவாளர்காள்குளந்தைப்புண்ணியன்
மல்குறவிம்மையுமறுமையுந்தருஞ்
செல்வமென்றறிந்துமென்சேவியாததே.

86

தேமலர்ச்சந்திரதீர்த்தமாடிநஞ்
சோமநாதனுக்கலர்தூய்க்குளந்தையின்
யாமமாயினும்வதிந்திருக்கப்பெற்றவர்
காமனைக்காலனைக்காயவல்லரே.

87

வல்லுறழ்தடமுலையமுதவல்லியா
மெல்லியற்றேவியுந்தானுமேன்மைசேர்
செல்வமாக்குளந்தைபோலெனதுசிந்தையு
நல்லெழிற்கோயில்கொண்டருளுநாதனே.

880

நாதனேபோற்றிதென்குளந்தைநண்ணிய
போதனேபோற்றிமால்போதனாடொணாப்
பாதனேபோற்றிவெம்பவந்தொலைத்தருள்
வேதனேபோற்றியென்விமலபோற்றியே.

89

போற்றினோர்மலத்தொகையிரியப்புந்தியின்
மாற்றருமானந்தவாரிநல்குமா
லேற்றவன்குளந்தையினிளம்பிறைச்சடை
நாற்றியபிரான்பெயர்நமச்சிவாயவே.

90

வேறு.
வாயுரைமொழியார் பிறன்பொருள் 
      விழைவார் வஞ்சகநெஞ்சகம் பொதிவார், 
தீயனமகிழ்வார்நல்லனவிகழ்வார் 
      செருக்கினாற்றம்மையே மதிப்பார், 
பேயராமவர்பாலிரந்துசென்றுழலாப் 
      பெருவரமொன்றெனக்கருள்வா, 
யாயனேகுளந்தைத்திருநகரமர்ந்தவருட்
      பெருங்கருணைமா மலையே.

91

மலைதொறுந் திரிந்தும் வெண்பொடி 
      யணிந்து மந்திரமோதியுந் தீர்த்தத், 
தலைபுனல்குடைந்து மொழுக்கினிற்றவறா 
      தற்புததவம்பலபுரிந்துஞ், 
சிலைவரையாகவளைத்தருள் குளந்தைச் 
      சிவபிரான் முடிதவழொற்றைக், 
கலையவனடியார்தமையிகழ்ந்துரைப்பார் 
      கயவரிற்கயவ ராகுவரே.

92

ஆகுதிப்புகைபோ யமரரைவிளிக்கு-
      மந்தணர்குழாம்பயில்குளத்தூ,
ராகுவாகனனைக் குமரனைப்பயந்த- 
      வண்ணலா ரடியவர்க்கடியா,
ராகுமெய்த்தவத்தோரூழிபேர்ந்திடினுமசை-
      விலாநிலையராய்ப்பிறவி,
யாகுலந்தூர்ப்பார்யாரவர்பெருமையறிந்-
      தெடுத்தோதவல்லவரே.

93

வல்லையேன்மனமேமாயமாமுடல-
      வாழ்க்கையைக் கடந்துபேரின்ப, 
வெல்லையைத்தலைப்பட்டிருப்பதற்குறுதி 
      யியம்புவன்றிருக்குளத்தூர்வாழ், 
கொல்லைமான்மறிசேர்கையவனடியார் 
      குரைகழல்கொண்டுபூண்டுறைதி, 
முல்லைவாணகையார்மையலையறுக்க-
      முயலுதியிது வுனக்கறிவே.

94

அறிவிலாமாந்தர்நல்லனென்றுரைக்க-
      வல்லனென்றுரைக்க மற்றவராற், 
செறிபயனுளதோ நெஞ்சமேகுளத்தூர்ச்
      சிவபிரானொருவனேயகத்துப், 
பிறிவிலாத்துணையாயுடனிருந்தறிந்து 
      பெரும்பயனளிப்பவனவனே, 
நெறியினாலறியவேண்டுமென்றிதனை 
      நினைந்திடாய் நன்று நின்னறிவே.

95

நின்னையும்பொருளாய் மதிப்பரோபெரியோர்
      நெஞ்சமேதிருக்குளத்தூர்வாழ், 
சென்னியாறமைத்த புராணனைமறந்துஞ்
      சிந்தனைசெய்யுமாறறியாய், 
மன்னியவழுக்குங்குருதியுமெலும்பு
      மச்சையுமிறைச்சியுமயிருந், 
துன்னியமுடைத்தோன்மலப்பொதியிதனைச்
      சுகமெனவிரும்பிமேவினையே.

96

வினையினுக்கமைந்தபயன்வருமல்லான்-
      மிகைகுறையாகுமோ வறிதே, 
யினைவதாற்பயனின்றெனப்பிறரெவர்க்கு-
      மெடுத்தெடுத்தோது மாறறிவாய், 
தினையளவேனுநீதெளிந்திலையாற்
      றிண்ணியநெஞ்சமேசீசீ, 
யுனையுமோர்துணையாக் கொள்வரோகுளந்தை 
      யுத்தமன்கருணை பெற்றவரே.

97

பெற்றவர்பிறந்தாருடன்பிறந்தவர்கள் 
      பெயர்குலங்காணிசெல்வங்க, 
ளுற்றவரென்னுமயக்கிவையனைத்து
      முடம்பிதுகழிந்தபினுளவோ, 
பற்றிடுஞ்சிலநாள்வாழ்க்கையைநிலையாப்-
      பரிந்தனை போலுநீநெஞ்சே, 
யெற்றையுந்துணையாயிருப்பதுகுளத்தூ-
      ரெம்பிரான்றிருவடியன்றே.

98

அன்றுதொட்டிதுநாளளவுமாணவத்தானறி-
      விழந்தழுங்கியநெஞ்சே, 
யுன்றனக்குயிராயுடனிருந்துணர்த்து-
      முண்மையையின்னமுமுணரா, 
யென்றினித்தெளிவா யெதிர்ந்தவர்புரங்க
      ளெரியெழக்குறுநகைமுகிழ்த்த, 
கொன்றைவார்சடையான் றிருக்குளத்தூரிற்
      குலாவினோன் றிருவருள்கொண்டே.

99

கொண்டலுஞ்சமழ்ப்பக்கவிஞருக்குதவுங்-
      கொள்கையோர்குழாம்பயில்கீர்த்தித், 
தண்டகநாடுங்குளந்தையும்வாழ்க
      சாரமுதாம்பிகைவாழ்க, 
வண்டர்கோன்சோமநாயகன்வாழ்கவ-
      வன்றிருவடித்தொழிற்குரிய, 
தொண்டர்பார்மீதெண்செல்வராய்
      வாழ்ந்துதுதியொடும்பெறுகமெய்ச்சீரே.

100


ஆகச்செய்யுள் 101
குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி முடிந்தது.

மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.
 

 

Related Content