logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-tirunallur-kottum-paraicirar

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்


 1.86 திருநல்லூர்    
        
பண் -  குறிஞ்சி        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி    
    நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை    
    முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு    
    பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.    1.86.1
        
    ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்    
    வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன    
    நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்    
    கூறும் மடியார்கட் கடையா குற்றமே.    1.86.2
        
    சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதாழ    
    ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை    
    நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்    
    பாடும் அடியார்கட் கடையா பாவமே.    1.86.3
        
    நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை    
    நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்    
    காத்த நெறியானைக் கைகூப் பித்தொழுது    
    தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.    1.86.4
        
    ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ    
    நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்    
    தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்    
    போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.    1.86.5
        
    கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச    
    நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்    
    செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்    
    சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே.    1.86.6
        
    எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்    
    நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்    
    தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல்    
    தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.    1.86.7
        
    காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்    
    நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை    
    ஏம1 மனத்தாரா யிகழா தெழுந் தொண்டர்    
    தீப மனத்தார்கள் அறியார் தீயவே.    1.86.8
        
    வண்ண மலரானும் வையம் அளந்தானும்    
    நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்    
    தண்ண2 மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த    
    எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.    1.86.9
        
    பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்    
    நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை    
    நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை    
    எச்சும் அடியார்கட் கில்லை இடர்தானே.    1.86.10
        
    தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்    
    நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை    
    வண்ணம் புனைமாலை வைக லேத்துவார்    1.86.11
    விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.    
        
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. ஏக, ஏவ, 2. தண்ணன்.    

 

Related Content

Honeyful Holy Feet

திருஅவளிவநல்லூரும் திருஅரதைப்பெரும்பாழியும் தேவாரம்

திருஞானசம்பந்தர் தேவாரம - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கைய

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பா

Lord Shiva Temples of Ernakulam District (KL)