logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruviyalur-kuravankamal-narumenkulal

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்


1.13 திருவியலூர்    
        
பண் -  நட்டபாடை        
        
திருச்சிற்றம்பலம்        
        
    குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவப்    
    பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்    
    அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்    
    விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.    1.13.1
        
    ஏறார்தரும் ஒருவன்பல வுருவன்னிலை யானான்    
    ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்1    
    மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்    
    வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.    1.13.2
        
    செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்    
    பெய்ம்மின்பலி யெனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்    
    உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட வுரைமேல்    
    விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.    1.13.3
        
    அடைவாகிய அடியார்தொழ அலரோன்தலை யதனில்    
    மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாம்    
    கடையார்தர அகிலார்கழை முத்தந்நிரை சிந்தி    
    மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.    1.13.4
        
    எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்    1.13.5
    பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்    
    கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்    
    விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.    
        
    வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்    
    திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை    
    அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்    
    விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.    1.13.6
        
    மானார்அர வுடையான்இர வுடையான் பகல்நட்டம்    
    ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்    
    தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்    
    மேனாடிய2 விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.    1.13.7
                
    பொருவா ரெனக்கெதிரா ரெனப்பொருப்பை யெடுத்தான்றன்    
    கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து    
    சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்    
    விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.    1.13.8
        
    வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்    
    அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்    
    உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு வுருவம்    
    விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.    1.13.9
        
    தடுக்கால்உடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்    
    பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்    
    கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த    
    விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.    1.13.10
        
    விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்    1.13.11
    தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்    
    துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவ ரென்றும்    
    விளங்கும்புக ழதனோடுயர் விண்ணும்முடை யாரே.    
        
        
    திருச்சிற்றம்பலம்    
        
    பாடம்: 1. புலியுடையான், 2. மேனாடியர்.    

 

Related Content

Thiruviyalur Uyyavandha Dheva Nayanar