logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruvilimilalai-thiruvirakam-tatanila-viyamalai

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை


1.20 திருவீழிமிழலை - திருவிராகம்    
        
பண் -  நட்டபாடை        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ    
    டடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின    
    விடம்அடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி    
    திடமலிதருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.    1.20.1
        
    தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது    
    வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்    
    உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு    
    திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.    1.20.2
        
    மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்    
    தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி    
    கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு    
    சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.    1.20.3
        
    மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய    
    பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன    
    இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி    
    தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.    1.20.4
        
    அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்    
    பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி    
    மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி    
    திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே.    1.20.5
        
    வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்    
    விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து    
    அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு    
    திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.    1.20.6
        
    நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல்    
    மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு    
    சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி    
    திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.     1.20.7
        
    அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது    
    கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்    
    வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய    
    சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.    1.20.8
        
    அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண1 னளவிட ஒழியவொர்    
    பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை    
    சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி    
    செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.    1.20.9
        
    இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்    
    திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய    
    புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி    
    திகழ்சுரர் தருநிகர்2 கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.    1.20.10
        
    சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு    
    தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்    
    மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்    
    இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.    1.20.11
        
    திருச்சிற்றம்பலம்.    
        
    பாடம்: 1. மகிழ்வண, 2. தருநிகழ்.    

 

Related Content

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - அரையார் விரிகோ

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட

திருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறைய