logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thirumayilatuturai-karavinrinanma

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா


1.38 திருமயிலாடுதுறை    
        
பண் -  தக்கராகம்        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    கரவின் றிநன்மா மலர்கொண்டு1    
    இரவும் பகலுந் தொழுவார்கள்    
    சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்    
    வரமா மயிலா டுதுறையே.    1.38.1
        
    உரவெங் கரியின் னுரிபோர்த்த    
    பரமன் னுறையும் பதியென்பர்    
    குரவஞ் சுரபுன் னையும்வன்னி    
    மருவும் மயிலா டுதுறையே.    1.38.2
        
    ஊனத் திருள்நீங் கிடவேண்டில்    
    ஞானப் பொருள்கொண் டடிபேணுந்    
    தேனொத் தினியா னமருஞ்சேர்    
    வானம் மயிலா டுதுறையே.    1.38.3
        
    அஞ்சொண் புலனும் மவைசெற்ற    
    மஞ்சன் மயிலா டுதுறையை    
    நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்    
    துஞ்சும் பிணியா யினதானே.    1.38.4
        
    தணியார் மதிசெஞ் சடையான்றன்    
    அணியார்ந் தவருக் கருளென்றும்    
    பிணியா யினதீர்த் தருள்செய்யும்    
    மணியான் மயிலா டுதுறையே.    1.38.5
        
    தொண்ட ரிசைபா டியுங்கூடிக்    
    கண்டு துதிசெய் பவனூராம்    
    பண்டும் பலவே தியரோத    
    வண்டார் மயிலா டுதுறையே.    1.38.6
        
    அணங்கோ டொருபா கம்அமர்ந்து    
    இணங்கி யருள்செய் தவனூராம்    
    நுணங்கும் புரிநூ லர்கள்கூடி    
    வணங்கும் மயிலா டுதுறையே.    1.38.7
        
    சிரங்கை யினிலேந் தியிரந்த    
    பரங்கொள் பரமேட் டிவரையால்    
    அரங்கவ் வரக்கன் வலிசெற்ற    
    வரங்கொள் மயிலா டுதுறையே.    1.38.8
        
    ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்    
    கோலத் தயனும் மறியாத    
    சீலத் தவனூர் சிலர்கூடி    
    மாலைத் தீர்மயிலா டுதுறையே.    1.38.9
        
    நின்றுண் சமணும் நெடுந்தேரர்    
    ஒன்றும் மறியா மையுயர்ந்த    
    வென்றி யருளா னவனூராம்    
    மன்றன் மயிலா டுதுறையே.    1.38.10
        
    நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்    
    மயல்தீர் மயிலா டுதுறைமேல்    
    செயலா லுரைசெய் தனபத்தும்    
    உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.    1.38.11
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. மலர்கொண்டே.    

 

Related Content