logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thirukkalukkunram-thotutaiyanoru

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு


1.103 திருக்கழுக்குன்றம்     
        
பண் -  குறிஞ்சி        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ    
    ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்    
    நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்    
    காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.1
        
    கேணவல்லான் கேழல்வெண் கொம்பு குறளாமை    
    பூணவல்லான் புரிசடை மேலொர் புனல்கொன்றை    
    பேணவல்லான் பெண்மகள் தன்னை யொருபாகம்    
    காணவல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.2
        
    தேனகத்தார் வண்டது வுண்ட திகழ்கொன்றை    
    தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்    
    வானகத்தார் வையகத் தார்கள் தொழுதேத்தும்    
    கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.3
        
    துணையல்செய்தான் தூயவண் டியாழ்செய் சுடர்க்கொன்றை    
    பிணையல்செய்தான் பெண்ணின்நல் லாளை யொருபாகம்    
    இணையல்செய்யா இலங்கெயின் மூன்றும் எரியுண்ணக்    
    கணையல்செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.4
        
    பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற    
    மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை    
    மையுடைய மாமிடற் றண்ணல் மறிசேர்ந்த    
    கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.5
        
    வெள்ள மெல்லாம் விரிசடை மேலோர் விரிகொன்றை    
    கொள்ள வல்லான் குரைகழ லேத்துஞ் சிறுத்தொண்டர்1    
    உள்ள மெல்லாம் உள்கிநின் றாங்கே உடனாடும்    
    கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.6-7
        
    ஆதல் செய்தான் அரக்கர்தங் கோனை யருவரையின்    
    நோதல் செய்தான் நொடிவரை யின்கண்2 விரலூன்றிப்    
    பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோ டொருபாகம்    
    காதல் செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.8
        
    இடந்த பெம்மான் ஏனம தாயும் அனமாயும்    
    தொடர்ந்த பெம்மான் தூமதி சூடி வரையார்தம்    
    மடந்தை பெம்மான் வார்கழ லோச்சிக் காலனைக்    
    கடந்த பெம்மான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.9
        
    தேய நின்றான் திரிபுரங் கங்கை சடைமேலே    
    பாய நின்றான் பலர்புகழ்ந் தேத்த வுலகெல்லாம்    
    சாய நின்றான் வன்சமண் குண்டர் சாக்கீயர்    
    காய நின்றான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    1.103.10
        
    கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை    
    நண்ணியசீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை    
    பண்ணியல்பாற் பாடிய பத்தும் இவைவல்லார்    
    புண்ணியராய் விண்ணவ ரோடும் புகுவாரே.    1.103.11
        
        
    திருச்சிற்றம்பலம்.    
    * இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்துபோயிற்று.    
    பாடம்: 1. சிறுதொண்டர், 2. நொடியளவில்.    

 

Related Content