logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruccivapuram-thiruvirakam-puvamvali-kanalpunal

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்


1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்    
        
பண் -  நட்டபாடை        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை     
          திரிகுணம் அமர்நெறி    
    திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும்     
          உயிரவை யவைதம    
    பவமலி தொழிலது நினைவொடு பதுமநன்     
          மலரது மருவிய    
    சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில     
          னினில்நிலை பெறுவரே.    1.21.1
        
    மலைபல வளர்தரு புவியிடை மறைதரு     
          வழிமலி மனிதர்கள்    
    நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு     
          வகைநினை வொடுமிகும்    
    அலைகடல் நடுஅறி துயிலமர் அரியுரு     
          வியல்பர னுறைபதி    
    சிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு     
          மகளொடு திகழ்வரே.    1.21.2
        
    பழுதில கடல்புடை தழுவிய படிமுத     
          லியவுல குகள்மலி    
    குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி     
          தருமுயி ரவையவை    
    முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு     
          வியல்பர னுறைபதி    
    செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர்     
          புகழ்மிகு முலகிலே.     1.21.3
        
    நறைமலி தருமள றொடுமுகை நகுமலர்     
          புகைமிகு வளரொளி    
    நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும்     
          வழிபடும் அடியவர்    
    குறைவில பதம்அணை தரஅருள் குணமுடை     
          யிறையுறை வனபதி    
    சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர்     
          செயமகள் தலைவரே.    1.21.4
        
    சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு     
          வகைவளி நிறுவிய    
    மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள்     
          நியதமும் உணர்பவர்    
    தனதெழி லுருவது கொடுஅடை தகுபர     
          னுறைவது நகர்மதிள்    
    கனமரு வியசிவ புரம்நினைப வர்கலை     
          மகள்தர நிகழ்வரே.    1.21.5
        
    சுருதிகள் பலநல முதல்கலை துகளறு     
          வகைபயில் வொடுமிகு    
    உருவிய லுலகவை புகழ்தர வழியொழு     
          குமெயுறு பொறியொழி    
    அருதவ1 முயல்பவர் தனதடி யடைவகை     
          நினையர னுறைபதி    
    திருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன்     
          நிலனிடை நிகழுமே.    1.21.6
        
    கதமிகு கருவுரு வொடுவுகி ரிட2வட     
          வரைகண கணவென    
    மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக     
          ழெயிறதன் நுதிமிசை    
    இதமமர் புவியது நிறுவிய எழிலரி     
          வழிபட அருள்செய்த    
    பதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர்     
          நிலவுவர் படியிலே.     1.21.7
        
    அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில்     
          வருவலி கொடுசிவன்    
    இசைகயி லையையெழு தருவகை யிருபது     
          கரமவை நிறுவிய    
    நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி     
          கொளுமவ னுறைபதி    
    திசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில     
          னினில்நிகழ் வுடையரே.    1.21.8
        
    அடல்மலி படையரி அயனொடும் அறிவரி     
          யதொரழல் மலிதரு    
    சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு     
          துதியது செயவெதிர்    
    விடமலி களநுத லமர்கண துடையுரு     
          வெளிபடு மவன்நகர்    
    திடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர்     
          வழிபுவி திகழுமே.    1.21.9
        
    குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு     
          வியபொருள் களுமில    
    திணமெனு மவரொடு செதுமதி மிகுசம     
          ணருமலி தமதுகை    
    உணலுடை யவருணர் வருபர னுறைதரு     
          பதியுல கினில்நல    
    கணமரு வியசிவ புரம்நினை பவரெழி     
          லுருவுடை யவர்களே.    1.21.10
        
    திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி     
          யிணைபணி சிரபுர    
    நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி     
          யொருபதும் நவில்பவர்    
    நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில     
          கொடைமிகு சயமகள்    
    புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர்     
          தரநலம் மிகுவரே.    1.21.11
        
        
    திருச்சிற்றம்பலம்.    
        
    பாடம்: 1. தருதவ, 2. வுகிரிடை.    

 

Related Content

திருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறைய

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தட

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமறைக்காடு - திருவிராகம் - சில