logo

|

Home >

information-to-know >

veenai-thirumurai-musical-instruments

வீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Veenai - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

 

Instrument Reference
வீணை மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து 
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி 
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற 
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5 

கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6 

குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் 
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ் 
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் 
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6 

தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல 
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார் 
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார் 
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே. 1.73.8 

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர் 
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார் 
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே 
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 2.6.1 

மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறையி னானுறை யும்பு கலியை
நிறையி னாற்றொழ நேச மாகுமே. 2.25.6 

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் 
மற்றொருகை வீணை யேந்தி 
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா 
னிடம்போலு மிலைசூழ் கானில் 
ஓட்டந் தருமருவி வீழும் 
விசைகாட்ட முந்தூ ழோசைச் 
சேட்டார் மணிகள் அணியுந் 
திரைசேர்க்குந் திருந ணாவே. 2.72.2 

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல 
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் 
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி 
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள். 2.84.7 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே. 2.85.1 

அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
அரவணைத் துயின்றானுங்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
துன்பங்கள் களைவாரே. 2.106.9 

பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரங் கைதொழக்
கெடுமிடர் வினைதானே. 2.107.9 

பண்ணிற் பொலிந்த வீணையர் 
பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் 
உள்ள முருகி லுடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் 
சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 2.111.3 

கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக் 
கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா 
இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார் 
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 2.111.8 

கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே. 3.17.2 

இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழில் மேனி மேலெரி
முன்புடை யார்முத லேத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே. 3.21.6 

வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்
பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே. 3.56.7 

பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. 3.58.8 

பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்
எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே 3.61.4 

மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே. 3.74.4 

கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே. 3.106.5 

பரசு பாணியர் பாடல் வீணையர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரி வர்தன்மை 
யறிவா ரார். 3.112.1 

வெய்யவன்பல் உகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே அன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே ஆலவாயரன் கையது வீணையே. 3.115.7 

மடமான் மறிபொற் கலையும் 
மழுபாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோ ளுங் 
குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம் 
இருநில னேற்ற சுவடுந்
தடமார் கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை. 4.2.4 

பண்ணார்ந்த வீணை பயின்ற 
விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை 
பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிரப் பாடலோ 
டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் 
சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 4.6.6 

முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. 4.10.1 

தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே. 4.19.10 

அங்கையுள் அனலும் வைத்தார் 
அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் 
தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு 
திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
மாமறைக் காட னாரே. 4.33.6 

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் 
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் 
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் 
நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.9 

விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு 
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை 
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந் 
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.8 

பெருங்கடல் மூடிப் பிரளயங் 
கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும் 
இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர 
முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை 
நல்வீணை வாசிக்குமே. 4.112.7 

கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே. 5.5.6 

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி 
பக்க மேபகு வாயன பூதங்கள் 
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய் 
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1 

குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை 
விரவி னார்பண் கெழுமிய வீணையும் 
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் 
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே. 5.51.7 

கோணன் மாமதி சூடியோர் கோவணம் 
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை 
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங் 
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.1 

வேத னைமிகு வீணையின் மேவிய 
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம் 
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை 
நாத னைந்நினைந் தென்மனம் நையுமே. 5.61.4 

மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே. 5.90.1 

பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.10 

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத் 
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே 
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே. 6.2.11 

பாடுமே யொழியாமே நால்வே தமும் 
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள் 
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ் 
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங் 
கூடுமே குடமுழவம் வீணை தாளங் 
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத் 
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே 
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.5 

வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை 
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய் 
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே. 6.9.2 

வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.6 

விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத் 
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக 
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.9 

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே. 6.23.2 

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் 
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற் 
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை 
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் 
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் 
பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் 
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை 
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1 

பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.2 

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் 
அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த 
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு 
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே 
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக் 
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம் 
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே 
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.2 

குற்றாலங் கோகரணம் மேவி னானைக்
கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தாந்தன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை
யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்
பற்றாலின் கீழ்ங் கிருந்தான் தன்னைப்
பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றா டரவார்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 6.43.2

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.7 

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் 
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் 
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.6 

தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் 
தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.4 

தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக் 
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக் 
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை 
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை 
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை 
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை 
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.7 

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.7 

வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்
காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.7 

சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 6.96.10 

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு 
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு 
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு 
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு 
அரையுண்ட கோவண ஆடை யுண்டு 
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு 
இரையுண் டறியாத பாம்பு முண்டு 
இமையோர் பெருமா னிலாத தென்னே. 6.97.9 

கோணல்மாமதி சூடரோகொடு கொட்டிகாலர் கழலரோ 
வீணைதானவர் கருவியோ விடையேறுவேத முதல்வரோ 
நாணதாகவோர் நாகங்கொண்டரைக் கார்ப்பரோநல மார்தர 
ஆணையாகநம் மடிகளோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.5 

தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி 
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர் 
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால் 
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9 

கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே 
கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே 
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் 
பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார் 
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் 
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் 
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல் 
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.9 

விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7.46.4 

வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.6 

இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 8.திருவா.2.35 

இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால் 
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் 
துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் 
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் 
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் 
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே 
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 8.திருவா.371 

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே 
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே 
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே 
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே 
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே 
தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே 
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே 
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 8.திருவா.640 

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே 10.607 

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 10.2929 

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் 
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் 
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் 
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் 
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை 
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 
இடமாந் தடாரி படகம் - இடவிய 
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் 
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே 
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் 
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 

மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர் 
கான வீணையின் ஓசையும் காரெதிர் 
தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர் 
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம் 12.0014 

பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும் 
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும் 
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும் 
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் 12.0082 

வேத ஓசையும் வீணையின் ஓசையும் 
சோதி வானவர் தோத்திர ஓசையும் 
மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும் 
கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே 12.0087 

போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை 
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் 
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு 
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் 12.1054 

கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல 
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க 
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும் 
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலலாக 12.3098 
 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்