1. மறைகள் நிந்தனை, சைவ நிந்தனை, பொறா மனமும்
2. தறுகன் ஐம்புலன்களுக்கு, ஏவல் செய்யுறாச் சதுரும்
3. பிறவி தீதெனாப், பேதையர் தம்மொடு பிணக்கும்
4. உறுதி நல்லறஞ், செய்பவர் தங்களோடு உறவும்
5. யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்
6. மாதவத்தினோர் ஒறுப்பினும், வணங்கிடும் மகிழ்வும்
7. ஓது நல்லுபதேச மெய் உறுதியும்
8. அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக்கொளும் தெளிவும்
9. மனமும்,வாக்கும், நின் அன்பர்பால் ஒருப்படு செயலும்
10. கனவிலும் உனது அன்பருக்கு அடிமையாங் கருத்தும்
11. நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
12. புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொழிவும்
13. தீமையாம் புறச் சமயங்கள் ஒழித்திடும் திறனும்
14. வாய்மையாகவே பிறர் பொருள் விழைவுறா வளனும்
15. ஏமுறும் பர தார நச்சிடாத நன் நோன்பும்
16. தூய்மை நெஞ்சில் யான், எனது எனும் செருக்குறாத் துறவும்
துறக்கமீ துறையினும், நரகில் தோய்கினும்
இறக்கினும், பிறக்கினும், இன்பம் துய்க்கினும்
பிறைக்கொழுந் தணிசடைப் பெரும் இவ்வரம்
மறுத்திடாது எனக்கு நீ வழங்கல் வேண்டுமால்
என்று நந்தியெம்பெருமான் திருவையாறு என்ற தலத்தில் ஐயாற்றெம்பெருமானிடம் நாம் உய்வடைவதற்காக வேண்டிப் பெற்ற பதினாறு பேறுகள் ( 16 செல்வங்கள்) ஆகும்.
திருவையாற்றுப் புராணம்