logo

|

Home >

hindu-hub >

temples

திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கவண்ணர், மலைக்கொழுந்தீஸ்வரர், திருபுவனசுந்தரர், மாணிக்கநாகர், ஆதித்த பட்டாரகர்

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி , சுகந்த குழலேஸ்வரி, இரத்தினாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம் என்னும் பாவநாச தீர்த்தம்: - இது கோயிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளம். பதும தீர்த்தம் என்னும் இலக்குமி தீர்த்தம் - கோயிலுக்கு ஈசான மூலையில் அமைந்துள்ளது. மது தீர்த்தம்: தேவர்கள் செய்தது. குமார தீர்த்தம்: கோயிலுக்கு வடபுறத்தில் உள்ளது. இவை தவிர சூரியபுஷ்கரணி, சந்திரபுஷ்கரணி, கல்யாண தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.

வழிபட்டோர்:முருகன், திருமால், திருமகள், பிரமன், இரதி, இந்திராதி தேவர்கள், அக்கினி, அகத்தியர், நைமிசா முனிவர், அப்பர், சேக்கிழார்,நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.

Sthala Puranam

erumbiyur temple

  • புராணப்படி இதற்கு பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினகூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம், குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.
  • இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.
  • கரன் என்ற அசுரனை அழிக்கத் தேவர்கள் வழிகேட்டுப் பிரமனை அனுகினர். அவர் சொல்லியவண்ணம் இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங்கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட, சுவாமி புற்றாக மாறி, எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். அவர்கள் மேலேறுவதற்கு வசதியாகச் சாய்ந்தும் பூசையை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
  • ஆதிசேடனுக்கும் வாயு தேவனுக்கும் இடையே யார் வலிமை மிக்கவர் என்ற போட்டியில் ஆதிசேடன் கைலாய மலைக்கு சென்று அதனைச் சுற்றிக்கொள்ள வாயுதேவன் பலமான காற்றை வீசி அவ்விடத்தில் இருந்து அகற்ற முயன்றார். பலத்த காற்றின் துன்பம் தாளாமல் எல்லோரும் அவதிக்குள்ளாக, தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். கைலாய மலையை விட்டு விடுமாறு அவர் ஆதிசேடனிடம் பணித்தார். அதற்கு இணங்கிய ஆதிசேடன் தன் தலையைத் தூக்கினார். அந்த சமயத்தில் வாயு தேவன் மிக பலமாகக் காற்றை வீசித் தாக்க அம்மலையில் சில சிகரங்கள் தென்னகத்தே வந்து விழுந்தன அவற்றில் ஒன்று எறும்பியூர் மலை. இதனால் இம்மலைக்குத் தென் கயிலாயம், ரத்ன கூடம் என்ற பெயர்கள் வந்தது.
  • பிரம்மா இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். அந்தத் தீர்த்தம் இப்போது பிரம்ம தீர்த்தம் பாவனாச தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
  • அகத்தியர் லோபாமுத்திரையுடன் வழிபட்டு எறும்பியூர் ஈசன் திருவருளால் முருகப்பெருமானிடம் ஞானோபதேசம் கிடைக்கும் என்று வரம் பெற்ற தலம்.
  • எறும்பியூர்த் தலபுராணம் உள்ளது.

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  அப்பர்      -   1. விரும்பி யூறு விடேல்மட (5.74),                                 2. பன்னியசெந் தமிழறியேன் (6.91); பாடல்கள்   :  அப்பர்      -      கொடுங்கோளூர் (6.70.5);               சேக்கிழார்   -      சிலந்திக்கு அருளும் (12.21.302) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                       ஏறு உயர்த்தார் (12.28.348) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.  

 

Specialities

  • தற்போது மக்கள் வழக்கில் 'திருவெறும்பூர் ' என்று வழங்குகிறது.
  • இக்கோயில் மலைமீது உள்ளது. மலை 150 அடி உயரமானது. திருக்கோயிலை அடைய 125 படிகள். மலைக்கோயில் பரப்பளவு 3500 சதுர மீட்டர்.
  • கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமலையாழ்வார்' என்றும், 'திருவெறும்பியூர் உடைய நாயனார்' என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.
  • நவக்கிரக சந்நிதியில் சூரியம் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது.
  • கருவறை கல்லாலான கட்டிடம்.
  • மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத்திருமேனி வடபால் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக (தலபுராணம் தொடர்புடையது) உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன.
  • கைலாசநாதர் கோயில் இக்கோயிலின் வடபுறத்தில் பாறையில் அமைந்துள்ளது.
  • வைகாசி விசாகத்தை ஒட்டிப் பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. புனர்பூச நட்சத்திரத்தில் திருநாள் தொடங்கி, சுவாதி நட்சத்திரத்தில் தேர்த் திருவிழாவும், பத்தாம் நாளான வைகாசி விசாகத்தன்று பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்த வாரியும் பன்னிரண்டாம் நாளன்று பிரம்ம தீர்த்தத்தில் தெப்போற்சவமும் நடைபெறுகிறது.
  • கோயிலின் உட்பிரகாரத்தில் மடைப்பள்ளிக்கு அருகில் ஒரு சுரங்கம் உள்ளது.
  • வெளிமதிலின் நீளம் 243 அடி, அகலம் 144 அடி.
  • அடிவாரத்தில் நெற்களஞ்சியம் உள்ளது.
  • சுமார் 49 கல்வெட்டுக்கள் உள்ளன.
  • கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் உள்ளன.  கோயில் திருச்சுற்றில் மதிற் சுவரில் தூண்களில் முதல் ஆதித்த சோழன், கண்டராதித்த சோழன், சுந்தர சோழன், முதல் ராஜராஜன் மற்றும் பிற மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
  • கல்வெட்டுகள் எறும்பியூர் ஈசனை - திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலை மேல் மகாதேவர், திருமலை மேல் ஈசர், ஆதித்த பட்டாரகர் என்று குறிப்பிடுகின்றன.
  • ஆதித்த சோழன் கல்வெட்டு ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கைலாய மகாதேவர் என்று ஊரையும் இறைவரையும் குறிப்பிடுகிறது.
  • திருவெறும்பியூர் ஆழ்வாருக்கு சிறுதவூருடைய வேளான் வீரநாராயணன் ஆகிய செம்பியன் வேதி வேளான் விமானம் எழுப்பியுள்ளார்.
  • செம்பியன் வேதிவேளான் திருவெறும்பூர் கோயிலுக்கு உடுக்கை மற்றும் தாளத்துடன் திருப்பதிகம் பாட நால்வரை நியமனம் செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
  • இராசகேசரிவர்மன் மூன்றாம் ஆட்சி ஆண்டு செதுக்கப்பட்ட இன்னொரு கல்வெட்டின் படி செம்பியன் வேதி வேளான் ஸ்ரீ கண்ட சதுர்வேதி மங்கலத்து சபைக்கும் எறும்பியூர் சபைக்கும் தன் நிலத்தை அளித்து அதில் வந்த வருவாயை இக்கோயிலில் திருப்பதிகம் பாடுபவர்களுக்கு ஊதியமாக அளித்தார் எனத் தெரிகிறது.
  • இராசகேசரிவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் உள்ள கல்வெட்டு செம்பியன் வேதி வேளான்  பெருங்குறிச் சபையினரிடம் நிலத்தை விற்று அதில் வந்த வருவாயை 15 அந்தணர்களுக்கு உணவு வழங்க நிவந்தம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
  • இராசகேசரிவர்மனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் உள்ள கல்வெட்டு ஸ்ரீ கண்ட சதுர் வேதி மங்கலம் பெருங்குறிச் சபையிடம் விலைக்கு வாங்கிய நிலத்தை செம்பியன் வேதி வேளான் திருவெறும்பூர் திருக்கோயிலில் திருப்பதிகம் பாடும் ஓதுவார்களுக்கு வீடு கட்டிக் கொள்ள மடைவிளாகமாகக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது.
  • இராசகேசரிவர்மனின் ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கோயில் நிலங்களை சாகுபடி செய்வதற்காக மதகோடு கூடிய வாய்க்கால் ஒன்றை வெட்டிக்கொள்ள நிலம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கிறது.
  • ஒரு கல்வெட்டு திருவெறும்பூர் ஆழ்வார் கோயிலுக்கு மெய்க்காப்பாளன் ஒருவனை நியமித்து ஊதியம் அளித்த செய்தியினைத் தெரிவிக்கிறது.
  • முதலாம் ஆதித்த சோழன் திருவெறும்பியூர் கோயிலின் கருவறையை கற்றளியாகக் கட்டியுள்ளார்.
  • நறுங்குழல் நாயகி சன்னதி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் கற்கோயிலாக எடுக்கப்பட்டிருக்கலாம்.
  • திருக்கோயிலில் உள்ள சித்திர கூடம் பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் எடுக்கப்பட்டது ஆகும்.
  •  திருக்கோயில் கோபுரம் 30 அடி உயரம் கொண்டது. இதன் அடித்தளம் கற்களாலும் மேற்பகுதி சுதையாலும் கட்டப்பெற்று சால சிகர கோபுரம் என்ற அமைப்பினை உடையது.
  • தென் கயிலாயத்து மகாதேவருக்கு உச்சி போதில் நீராட்ட திருவரங்கம் தேவரடியார் சேந்தன் செய்ய வாய் மணி காவேரியில் இருந்து நீர் எடுத்து வரவும், விளக்கு எரிக்கவும் 15 களஞ்சு பொன் வைத்து அதன் வட்டியால் மேற்குறித்த செயல்கள் நிறைவேற வழி செய்துள்ளார்.
  • கண்டராதித்த சோழன் ஆட்சிக் காலத்தில் பெருங்குறிச் சபையைச் சார்ந்த வேங்கை இளைய உருத்திர குமார கருமவித்தன் தன்னுடைய நான்கரை வேலி மற்றும் அரை மா நிலத்தைத் தானமாகக் கொடுத்து அதன் மூலம் வரும் வருவாயில் மூன்று சிவாச்சாரியார்களுக்கும் இரண்டு வேதம் ஓதும் அந்தணர்களுக்கு திருவெறும்பூர் ஆழ்வார் கோயிலில் அமைந்துள்ள சத்திரத்தில் உணவு அளிக்க வேண்டும் என நிவந்தம் செய்துள்ளார்.
  • கண்டராதித்த சோழன் காலத்துக் கல்வெட்டில் திருப்பெயர் பாலாசிரியன் மாதவன் சுப்ரமணியன் தன்னுடைய நான்கு மா நிலத்தின் வரி வருவாய் மலை மேல் உள்ள திருவெறும்பியூர் ஆழ்வார் கோயிலுக்குத் தானமாக வழங்கியதையும் அந்த தானத்தை ஸ்ரீ கண்ட சதுர்வேதி மண்டலத்தின் பெருங்குறிச்சபை கூடும் இடமாகிய கோவில் திருச்சித்திர கூடத்தில் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
  • கண்டராதித்த சோழன் காலத்திய மற்றொரு கல்வெட்டு வலவூர் மாப்பான் காரிநக்கன் என்பவர் தன் ஆறு மா நிலத்தைத் திருவெறும்பூர் மலையில் வீற்றிருக்கும் ஆழ்வாருக்கு வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவளிக்க தானமாக கொடுத்ததாகவும் அந்த தானத்தைத் திருச்சித்திர கூடத்தில் வழங்கியதாகவும் குறிப்பிடுகிறது.
  • சுந்தர சோழன் காலத்தில் கல்வெட்டு ஒன்று ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்தின் பெருங்குறிச்சபை தீர்மானத்தின் படி "திருக்கோயில் நிலங்களுக்கு வரிகள் விதிக்கக்கூடாது; இதனை மீறி யாராவது வரிகள் வசூலித்தாலோ அல்லது அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டாலோ அவர்கள் இவ் ஊரின் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவர்" என்னும் கட்டளையைத் தெரிவிக்கிறது.
  • இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய மண்டலத்தில் உள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் திருவெறும்பூர் திருக்கோயிலுக்கு விளக்கு வைக்கும் பீடம் ஒன்றினைத் தானம் வழங்கியதைக் கல்வெட்டு கூறுகிறது.
  • இராசராசனின் ஏழாம் ஆட்சி ஆண்டில் இலாடராயர் புகழ்விபரவர் காந்தன் வீரசோழன் என்பவர் இங்குள்ள சத்திரத்தில் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவளிக்க ஒரு நிவந்தத்தை ஏற்படுத்தி உள்ளார்.
  • இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருவெறும்பூர் திருக்கோயிலில் அமைக்கப்பட்ட கணபதி சந்நிதிக்கு விளக்கு ஏற்ற 34 ஆடுகளை நிவந்தமாக கொடுத்ததைக் கூறுகிறது.
  • இராசராசனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டு இராசராசன் திருத்தலப்பயணம் மேற்கொண்டு திரு எறும்பியூர் ஈசனை வழிபட வந்த போது தன் முன்னோர் காலங்களில் வழங்கப்பெற்ற நிவந்தங்களை ஊரில் உள்ள சபையினர் சரிவரப் பராமரிக்கின்றனரா என்று அறிய 'காளி ஆதித்தன்' என்ற தணிக்கை அதிகாரியை நியமித்து உத்தரவிட்டதாகக் கூறுகிறது.
  • முதலாம் இராசேந்திரன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் திருவெறும்பூர் உடைய மகாதேவருக்கு எட்டு காசுகளை இவ்வூர் ஆளும் கணத்தார் விளக்கெரிக்க தானமாக கொடுத்திருந்ததைக் கல்வெட்டு கூறுகிறது.
  • இராசேந்திரனின் ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்த உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளான் என்பவர் பெண்ணைத் திருக்கோயில் திருப்பணிக்கு நியமித்து விளக்கு எரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
  • விக்கிரமசோழனின் கல்வெட்டு கோயிலுக்குத் தல வழிபாடு செய்ய வந்து செல்லும் ஐந்து பேர்களுக்கு தினமும் உணவளிக்க நிலதானம் செய்த விவரத்தைத் தெரிவிக்கிறது
  • இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் தென் களவழி நாட்டில் உள்ள எருமைக்குளம் என்னும் சிற்றுரை இவ்வூர்ப் பிள்ளையார் பகவதி ஆழ்வாருக்கு எடுக்கப்படும் விழாவிற்கு கொடையாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
  • ஆற்காடு நவாப் ஆட்சி காலத்தில் மாலிக்காபூர், சந்தா சாகிப் போன்ற இஸ்லாமிய படையெடுப்புகளால் திருக்கோயில் மூர்த்தங்கள் சிதைக்கப்பட்டன. (அம்மன் சன்னதியின் முகமண்டபத்தில் சிதைந்த நிலையில் உள்ள அம்மன் சிலை போன்றவை இத்தாக்குதல்களைக் காட்டுகின்றன.) பின்னர் நன்மக்களால் திருப்பணி செய்ய பெற்று சீர் பெற்றன.
  • கி. பி. 1752-ல் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது.
  • மலையின் வடபுறத்தில் இடிந்து கிடக்கும் இடம் முன்பு நூற்றுக்கால் மண்டபமாக இருந்தது. அவ்விடத்திலிருந்த கருங்கற்களும் தூண்களும் கல்லணை முதலிய கட்டிடங்களுக்காக எடுத்துச்செல்லப்பட்டன.
முந்தைய தலம்<திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

 அடுத்த தலம்>திருநெடுங்களம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன. தொடர்பு : 09842957568

Related Content

திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

திருஆனைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் வரலாறு

திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) மகுடேஸ்வரர் திருக்கோயில் வ