இறைவர் திருப்பெயர்: அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.
இறைவியார் திருப்பெயர்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
தல மரம்:
மாமரம், பாதிரி
தீர்த்தம் : காசிக் கங்கை, காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்தீர்த்தம்.
வழிபட்டோர்:சுந்தரர் - எற்றான் மறக்கேன், மாணிக்கவாசகர், சேக்கிழார் முதலியோர்

- பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்டவெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய நகரமே தற்போதுள்ள அவிநாசியாகும்.
- அவிநாசி - விநாசம் இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி, இறைவன் பெயரே இன்று ஊர்ப்பெயராயிற்று.
- சிவபிரான் அக்னித் தாண்டவம் செய்தபோது தேவர்கள் அஞ்சி நடுங்கி இங்கு வந்து புகுந்தொளிந்த காரணத்தால் புக்கொளியூர் எனப் பெயர் பெற்றது.
- இதற்குத் தட்சிண காசி, தட்சிண வாரணாசி என்ற பெயர்களும் உள்ளன.
- பிரம்மா 100 ஆண்டுகளும், ஐராவதம் 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாக கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
- வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் சிவ வழிபாடு செய்தால் நீங்கியது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார்.
- சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இத்தலம் சென்ற போது, ஒரு வீட்டில் மங்களவாத்திய கோஷமும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. இருமறை சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடச் சென்ற போது ஒருவனை முதலை விழுங்கிற்றென்றும், மற்றவனுக்கு உபநயன சடங்கு வாத்திய கோஷத்தோடு நடக்கிறதென்றும், எதிர் வீட்டில் மாண்ட சிறுவனின் தாய், தன் மகனும் உயிரோடிருந்தல் அவனுக்கும் உபநயனம் சிறப்பாக நடைபெறும் என நினைத்து அழுகிறாள் என்றும்,அங்குள்ள முதியோர் கூறக் கேட்டார்.இறந்த சிறுவனின் தாய் தந்தையர் சுந்தரரை விழுந்து வணங்கினர். இரக்கம் மிக்க சுந்தரர் மடுவிற்குச் சென்று, அதில் முதலையை வரவழைத்து, வளர்ச்சி பெற்ற மறைச்சிறுவனை அது தரும்படியாகக் காலனுக்குக் கட்டளையிடுமாறு அவிநாசியப்பனுக்கு பதிகம் பாடி வேண்டுகோள் விடுத்தார்.உடனே முதலை மறைச்சிறுவனை மடுக்கரையிற் சேர்த்தது. அவனுக்கும் அப்பொழுதே உபநயனம் செய்து வைத்தார்.
- இத்தலத்துத் தலபுராணம் இளையான்கவிராயரால் இயற்றப் பட்டது
திருமுறை பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. எற்றான் மறக்கேன் (7.92); பாடல்கள் : மாணிக்கவாசகர் - நரியைக் குதிரைப் பரியாக்கி (8.50.7) ஆனந்தமாலை; சேக்கிழார் - மைந்தன் தன்னை (12.72.9 & 13) வெள்ளானைச் சருக்கம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையிலிருந்து 40 கி. மீ; திருப்பூரிலிருந்து 14 கி. மீ; திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி. மீ; கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.
தொடர்பு :
04296-273113, 09443139503.