இராமன் வனவாசத்தின்போது ஒருமுறை காட்டில் அமர்ந்திருந்தார். சீதை அவர் மடியில் படுத்திருந்தாள். இருவரும் அயர்ந்து உறங்கிவிட்டனர். அப்போது இந்திரனின் மகன் ஜயந்தன் கனமாக வந்து சீதையின் உடலைக் கொத்தினான். இரத்தம் சிந்தியது. கண்விழித்த இராமன் சினமுற்று புல்லைப் பறித்து மந்திரம் ஓதி அவன் மேல் ஏவினான். அது அவனைத் துரத்தியது. அவன் ராமனைச் சரணடையவே அந்த மந்திரம் சயந்தனின் கண்ணைப் பறித்தது. இந்த சயந்தன் தன் பாவம் போக தாழக்குடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். பின் சாபவிமோசனம் பெற்றான். அவன் வழிபட்ட சிவபெருமான், சயந்தீஸ்வரன் எனப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வீரகேரளன் என்ற அரசன் இருந்தான். அவன் வேணாட்டு மரபைச் சேர்ந்தவன். அவன் பலநாட்கள் குழந்தையின்றி வருந்தியபோது அகத்தியர் கனவில் தோன்றி தாழக்குடி ஊரில் குடிகொண்டிருக்கும் ஜெயந்தீஸ்வரனுக்கு கோயில் எடுக்கக்கூறினார். அவனும் அப்படியே செய்து குறை நீங்கினான். இங்கு ஒரு குளமும் வெட்டினான். இது ”வீரகேரளப்பேரேரி” என அழைக்கப்படுகிறது.
Specialities
இவ்வூரின் ஒருபக்கம் தாடகை மலை. இன்னொருபுறம் பழையாறும் ஓடுகிறது.
கருவறை மூலவரை அடுத்து இருக்கும் நடராஜரின் படிமம் ஒரே கல்லில் செய்யப்பட்டது.
கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் 6 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவை எல்லாமே தமிழில் அமைந்தவை. இவற்றில் பழைய கல்வெட்டு 1532 ஆம் ஆண்டினது. ஒன்று 18-ஆம் நூற்றாண்டினது. பிற 16ஆம் நூற்றாண்டினவை, இந்தக் கல்வெட்டுகள் கோயிலுக்கு நந்தவனத்திற்கு நிலம் கொடுத்ததும், பூஜை நடத்த பணம் கொடுத்ததும் ஆன செய்திகளைக் கூறுகின்றன. ஒரு கல்வெட்டு முன்மண்டப தெற்கு பக்கம் திருப்பணி நடந்ததைக் குறிப்பிடும். இது கி.பி.17-ஆம் நூற்றாண்டினது. ஒரு கல்வெட்டு மாலையில் நடந்த செண்பகராமன் பூஜை நடந்ததைக் கூறும். 1532-ஆம் ஆண்டு உதையமார்த்தாண்டவர்மா என்ற வேணாட்டு அரசன் கல்வெட்டு கோயில் பிரகாரத்தில் காணப்படுகிறது. இந்த அரசன் களக்காட்டு என்ற சோழகுலவல்லிபுரத்தில் இருந்தபோது இக்கோயில் ஸ்ரீபண்டாரகணக்கரை நியமித்திருக்கிறான்.
திருவிழா: பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா, 9-ஆம் நாள் தேர் திருவிழா. திருக்கல்யாண விழா, தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் கால்நாட்டுதல், சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல், கதிர் குளித்தல், மூன்று தாலிகளை அணிதல், பட்டணப் பிரதேசம் என அமைந்தது. ஐந்தாம் நாள் ஊர் மக்களுக்கு அன்னதானம் உண்டு.