கோட்டாறு (நாகர்கோவில்) பழையாற்றின் கரையில் இருக்கும் இக்கோயில் சோழர்களின் கலைப்பாணிக்குச் சான்று. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறிய மாதிரி இது. இக்கோயில் இருக்கும் இடமும் இதன் பின்னணியும் தென்குமரி வரலாற்றில் முக்கியமானது.
கோயில் நுழைவுப்பகுதியில் ஓட்டுப்பணியாலான பெரிய திண்ணை. இது திருவிதாங்கூர் கால கட்டுமானம்.
முக மண்டபத்திற்குச் செல்லும் சோபனப்படி சோழர் வேலைப்பாடு உடையது. தூண்களிலும் இதைக் காணமுடியும்.
கல்வெட்டுகள் இக்கோயிலில் 19 கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் தமிழில் அமைந்தவை. கி.பி.11 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.15 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வெட்டப்பட்டவை. இவை இக்கோயிலுக்கு சோழர்கள் கொடுத்த நிபந்தம் பற்றி கூறும். இதன்மூலம் இக்கோயில் 1100 ஆண்டுகளுக்கு முன்பே வழிபாடு கோயிலாக இருந்தது என்று தெரிகிறது. பிற்காலச் சோழர்களின் நிலைப்படை நாஞ்சில் நாட்டில் இருந்தபோது கோயிலின் நிர்வாக நிலைப்படத் தலைவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. தேவஸ்தான நிர்வாகிகளையும், கோயில் பணியாளர்களையும் நியமிக்க நிலைப்படத்தலைவர்களின் அனுமதி தேவை என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. கி.பி.1252 ஆம் ஆண்டு கல்வெட்டு இக்கோயிலில் குன்றமெறிந்த பிள்ளையாருக்கு ஒதுக்கப்பட்ட நிபந்தம் பற்றிக் கூறும். இங்கு குன்றமெறிந்த பிள்ளையார் என்பது ஆறுமுக நயினாரை ஆகும். இதனால் இப்பரிவார தெய்வம் சோழர் காலத்தது எனக் கூறலாம். 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் கைக்கொட்டி பாடும் மண்டபத்தில் தேவாரப்பாடல்கள் பாடப்பட்டதைக் குறிப்பிடும். இக்கோயில் 11-ஆம் நூற்றாண்டில் இருந்தாலும் கோயிலின் முழுக்கட்டுமானம் கி.பி.1100ல் நடந்தது. முதல் குலோத்துங்கன் ஆணையின் பெயரில் இக்கோயில் கட்டுமானம் பொறுப்பை மழக்கரணர் என்னும் சோழர் படை அதிகாரியை வகித்திருக்கிறான்.
Contact Address
நாகர்கோவிலில் ஒரு பகுதியான ஒழுகினசேரி என்ற இடத்தில் உள்ளது.