இறைவர் திருப்பெயர்: | சிதம்பரேஸ்வரர், சிற்றம்பலநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சிவகாமசுந்தரி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கிய இப்பகுதி, தற்போது கோடாலம்பாக்கம் என்றாகி, அதுவும் மருவி கோட்லாம்பாக்கம் என்றாயிற்று.
கோடல் என்பது செங்காந்தள் மலரைக் குறிக்கும். எனவே இம்மலர்கள் நிறைந்த பகுதியாக இஃது முற்காலத்தில் இருந்திருக்கலாம்.
திருவதிகையை மிதிக்க அஞ்சிய சுந்தரர் சித்தவடம் என்னும் இப்பகுதியில் இருந்த ஒரு மடத்தில் இரவு தங்கினார். இம்மடம் கோயிலுக்கு மேற்கில் முற்காலத்தில்இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இரவு உறங்கும்போது இறைவன் முதியவராக வந்து சுந்தரரின் தலைமீது கால்படும்படி வைத்து உறங்குபவரைப் போல இருந்தார். விழித்த சுந்தரர், "ஐயா மறையவரே! என் தலைமீது உம் திருவடி படுமாறு வைத்துள்ளனையே" என்று கேட்க, அம்முதியவர், "திசைஅறியா வகை செய்தது என்னுடைய மூப்பு" என்றுரைத்தார். சுந்தரர் வேறு திசையில் தம் தலை வைத்துப் படுத்தார்; அங்கும் அவர் தலைமீது திருவடி படுமாறு இறைவன் செய்யவே, கோபமுற்ற சுந்தரர் "இங்கு என்னைப் பல்காலும் மிதித்தனை நீ யார்?" என்று கேட்க, இறைவன் "என்னை அறிந்திலையோ?!" என்று கூறி மறைந்தார். இறைவனின் அருஞ்செயலை அறிந்த சுந்தரர் மனம் வருந்தி "தம்மானை அறியாத சாதியார் உளரே" என்றெடுத்துப் பாடிப் பரவினார். இவ்வாறு சுந்தரருக்குத் திருவடி தீட்சை அருளிய தலம் இதுவாகும்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - ஒத்த வடத்திள (4-2-3) சுந்தரர் - தம்மானை அறியாத சாதியார் (7-38-1).
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பண்ருட்டியிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் திருக்கோவிலூர் சாலையில் புதுப்பேட்டை வந்து, விசாரித்து வீதியின் கோடியிலுள்ள சித்தவடம் கோயிலை அடையலாம்.