இறைவர் திருப்பெயர்: | மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பிரமராம்பிகை. |
தல மரம்: | மருத (அர்ஜுனம்) மரம், திரிபலா மரம். |
தீர்த்தம் : | பர்வத தீர்த்தம், பாலாழி முதலான பல தீர்த்தங்கள் உள்ளன. |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார் முதலியோர் |
ஸ்ரீ சைலத்தைப் பல நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை இத்தலத்தின் மகிமையைக் கூறும் நூல்களாகும்.
சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களைக் கொண்டு இப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார்.
நந்தியம்பெருமான் இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சிவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனை சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த நாகி ரெட்டி- கௌரம்மாள் இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள். ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் - சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர் ஒருநாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித் தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.
ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம் பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக " என்று அருளினார். வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம் எனப்படுகிறது.
ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சுடுமணி யுமிழ்நாகஞ் (1.118); அப்பர் - 1. கன்றினார் புரங்கள் (4.58); சுந்தரர் - 1. மானும்மரை இனமும்மயில் (7.79); பாடல்கள் : சம்பந்தர் - மலையினார் பருப்பதந் (1.76.1), அண்ணாமலை (2.39.2), பரிய மாசுணங் (2.95.6); அப்பர் - போகமார் (4.66.8), பொருப்பனை (5.17.9), நெருப்பி னாற் (5.30.7), தெய்வப் புனற்கெடில (6.07.6), பாரார் பரவும் (6.22.1), வேலைசேர் (6.23.7), திருமணியைத் (6.29.1), மண்ணிலங்கு (6.59.5), கார்மல்கு (6.82.5), உருத்திரனை (6.90.5), குராமலரோ (6.96.11); நக்கீரதேவ நாயனார் - மயலைத் தவிர்க்கநீ (11.10.25 & 35) கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார் - மணியார் (11.30.57 & 58) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - வையம் மகிழயாம் வாழ (11.34.34) திருத்தொண்டர் திருவந்தாதி, பதிகப் பெருவழி (11.35.2) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி; சேக்கிழார் - அங்கண் மா மலைமேல் (12.21.348) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், கூற்றுதைத்தார் (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், வட மாதிரத்துப் பருப் பதம் (12.29.198) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், கங்கை நீர்த் துறை ஆடிக் (12.30.4) திருமூல நாயனார் புராணம், திருப்புன வாயில் பதியில் (12.37.119) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
பன்னிரண்டு "ஜோதிர்லிங்கங்களுள்" இத்தலமும் ஒன்று. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களாவன 1. "சோமநாதம்" - குஜராத்திலும், 2. வைத்தியநாதம், 3. பீமசங்கரம், 4. நாகேசம், 5. த்ரயம்பகம், 6. குஸ்மேசம் முறையே - மகாராஷ்டிரத்திலும், 7. ஸ்ரீசைலம் - ஆந்திராவிலும், 8. ஓங்காரம், 9. உஜ்ஜையினி முறையே - மத்தியப் பிரதேசத்திலும், 10, விச்வேசம் (வாரணாசி), 11. கேதாரம் முறையே - உத்திரப் பிரதேசத்திலும், 12. இராமேசுவரம் - தமிழ்நாட்டிலும் உள்ளன.
சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார்.
சம்பந்தர், அப்பர் திருப்பதிகங்களில் இத்தலம் "திருப்பருப்பதம்" என்றும், சுந்தரர் திருப்பதிகத்தில் "சீபர்ப்பதம்" என்றும் குறிக்கப்படுகிறது.
தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும்.
இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருதமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகிறது. இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். ஏனையவை (1) திருவிடைமருதூர் - மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சுனம் என்பனவாகும்.
மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே (மற்றொரு தலமரமான) திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ்செய்ததால் இஃது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. [இங்கு கரவீரம் என்னும் பழமையான மரமும் உள்ளது.]
கோயில் அமைந்துள்ள இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது; இந்நதியைப் பாதாள கங்கை என்று கூறுகின்றனர்.
இத்தலத்திற்கு அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. இம்மலைப்பகுதியை "பூகயிலாயம்" என்று புகழ்வர் வீரசைவர்கள்.
இம்மலையில் எட்டு சிகரங்களும், ஒன்பது நந்திகளும் உள்ளன. அவை முறையே, சிகரங்களாவன - 1. வைடூரிய சிகரம், 2. பரவாளி சிகரம், 3. ரெளப்ய சிகரம், 4. மாணிக்கச் சிகரம், 5. மரகத சிகரம், 6. பிரம்ம சிகரம், 7. க்ஷேமா சிகரம், 8. வஜ்ர சிகரங்கள் ஆகும்; நந்திகளாவன - 1. பிரதம நந்தி, 2. நாக நந்தி, 3. விநாயக நந்தி, 4. கருட நந்தி, 5. சிவ நந்தி, 6. மகா நந்தி, 7. சூரிய நந்தி, 8. விஷ்ணு நந்தி, 9. சோம நந்தி என்பனவாகும். அவ்வாறே இங்கு 1. பிரமேஸ்வரம், 2. ஜனார்த்தனேஸ்வரம், 3. வருணேஸ்வரம், 4. ஹேமேஸ்வரம், 5. சப்தகோடீஸ்வரம், 6. மோக்ஷேஸ்வரம், 7. இந்திரேஸ்வரம், 8. அக்னேஸ்வரம், 9. குக்குடேஸ்வரம் என்று ஒன்பது கோயில்களும் உள்ளன.
இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன தரிசிக்கத்தக்கன.
இங்குள்ள கல்வெட்டுக்களால், அன்னதானத்திற்குக் கட்டளைகள் அமைத்தது, கோயிலில் திருப்பணிகள் செய்தது, தீர்த்தக்குளம் வெட்டியது, கோயில் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது முதலான பல செய்திகளை அறிய முடிகிறது.
இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.
கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான் என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள்.
பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது.
பின்னர் கடம்பர்கள் இதனைச் சிறிது காலம் ஆண்டனர். ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள் அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று. பிரதாப ருத்ரன் என்பவர் தன் மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத் துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின் பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம் அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப் படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன. அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன.
விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம் ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம் கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன.
கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள்.
ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை கி.பி. 1677 ல் சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது.ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார்.
ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான ( 2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத் தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள். இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர். 8 கி.மீ தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை ஆட்டி அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள்.
பாதாள கங்கையில் கலக்கும் பீமன்குள ஊற்றுக்கு அருகில் பீமேசுவர சுவாமி ஆலயம் உள்ளது. பாதாள கங்கையிலிருந்து பரிசிலில் கிருஷ்ணா நதியில் சென்று அக்க மகா தேவி தவம் செய்த குகையை அடையலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இஷ்ட காமேசுவரி ஆலயத்தையும் பக்தர்கள் பிரார்த்தனைத் தலமாக வழிபடுகிறார்கள். பரிசிலில் அக்கரை அடைந்தபின், தத்தாத்ரேயர் தவம் செய்த கதலீ வனத்தைக் காணலாம். தியானம் செய்வதற்கேற்ற அமைதியான இடம் இது.
நன்றி: திரு. சிவபாதசேகரன் அவர்கள், சென்னை
அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கு அருகில் உள்ளது. திருப்பதியிலிருந்து 500 கி. மீ. தொலைவாகும். சென்னையிலிருந்தும் ஸ்ரீசைலத்திற்கு பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :-08524 - 288881