இறைவர் திருப்பெயர்: மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்.
இறைவியார் திருப்பெயர்: தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.
தீர்த்தம் : பரம தீர்த்தம், கோயிலுள் உள்ள கிணறும், கோயிலுக்குப் பின்னால் உள்ள குளமுமே.
வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், அகத்தியர், காகபுஜண்டரிஷி ஆகியோர்.
Sthala Puranam
கோயில் உள்ள பகுதி 'திருச்சோபுரம்' என்றும், பக்கத்தில் உள்ள பகுதி 'தியாகவல்லி' என்றும் சொல்லப்படுகிறது.
திருமுறைப் பெயர் 'சோபுரம்' என்பது. 'சோழபுரம்' என்பது மருவி 'சோபுரம்' என்றாயிற்று என்றும்; திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இங்குத் திருப்பணி செய்த காரணத்தால் 'தியாகவல்லி' என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இப்பகுதி ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்ததாம். இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி ' என்பவர் இம்மேட்டைக் கண்டு, மணலில் புதைந்திருந்த கோயிலின் விமானக்கலசம் மட்டும் மேலே தெரிய; அவர் உடனே அப்போது கடலூரிலிருந்த சேஷாசல நாயுடு, இராமாநுஜலு நாயுடு, ஆயிரங்காத்த முதலியார், நஞ்சலிங்க செட்டியார் ஆகியோரை அணுகி; செய்தி சொல்லி, அவர்களின் ஆதரவோடு, மணல் மேட்டைத் தோண்டிக் கோயிலை கண்டுபிடித்துக் கட்டுவித்தார் என்றொரு செய்தி சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக; இன்னும் அம்பாள் கோயில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டுப் புதைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் இக்கோயிலுக்கு 'தம்பிரான் கண்ட கோயில்' என்ற பெயரும் மக்களால் வழங்கப்படுகிறது.
"கடலுக்கு மேற்கில், தொண்டமாநத்தத்திற்கு கிழக்கில் பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றுக்கு வடக்கில் உள்ள நிலங்கள் இக்கோயிலுக்குரிய பட்டா நிலங்களாக இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரியதாக ஆண்டுதோறும் கோயிலுக்கு ரூ.600/- (ரூபாய் அறுநூறு மட்டும்) தருவதாகவும் தெரிகிறது."
இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருந்து 'காகபுஜண்டரிஷி' இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வெங்கண்ஆனை யீருரிவை (1.51); பாடல்கள் : சம்பந்தர் - வரந்தையான் சோபுரத்தான் (1.61.3); சுந்தரர் - சுற்றுமூர் சுழியல் (7.31.2); சேக்கிழார் - அரசிலியை அமர்ந்து அருளும் (12.28.1135) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோற்பருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர்.
கோயில் குருக்கள் குடும்பத்தினரின் நன்முயற்சியால்தான் இக்கோயில் செம்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு. துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26 - 08 - 1912-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.
சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும்; தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றன.
Contact Address