logo

|

Home >

devotees >

references-to-mangaiyarkkaraciyar-in-thevaram-other-thirumurais

Om symbol

திருமுறைகளில் மங்கையர்க்கரசியார் புராணம் பற்றிய குறிப்புகள்

Om symbol

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 

மானின்நேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன் என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.                     3.39.01

நக்கமேகுவர் நாடுமோ ரூருமே 
 நாதன்மேனியின் மாசுண மூருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே 
 தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் தேவிக் கணியையே 
 மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
யக்கினாரமு துண்கல னோடுமே 
 யாலவாயர னாருமை யோடுமே.    3.115.06

மங்கையர்க்கரசிவளவர்கோன்பாவைவரிவளைக்கைம்மடமானி
பங்கயச்செல்விபாண்டிமாதேவிபணிசெய்துநாடொறும்பரவப்
பொங்கழலுருவன்பூதநாயகனால்வேதமும்பொருள்களும்அருளி
அங்கயற்கண்ணிதன்னொடும்அமர்ந்தஆலவாயாவதும்இதுவே.       3.120.1

செந்துவர்வாயாள்சேலனகண்ணாள்சிவன்திருநீற்றினைவளர்க்கும்
பந்தணைவிரலாள்பாண்டிமாதேவிபணிசெயப்பாரிடைநிலவுஞ்
சந்தமார்தரளம்பாம்புநீர்மத்தந்தண்ணெருக்கம்மலர்வன்னி
அந்திவான்மதிசேர்சடைமுடியண்ணல்ஆலவாயாவதும்இதுவே.            3.120.3

செய்யதாமரைமேல்அன்னமேயனையசேயிழைதிருநுதற்செல்வி
பையரவல்குற்பாண்டிமாதேவிநாடொறும்பணிந்தினிதேத்த
வெய்யவேற்சூலம்பாசம்அங்குசமான்விரிகதிர்மழுவுடன்தரித்த
ஐயனார்உமையோடின்புறுகின்றஆலவாயாவதும்இதுவே.                 3.120.5

முத்தின்தாழ்வடமுஞ்சந்தனக்குழம்பும்நீறுந்தன்மார்பினின்முயங்கப்
பத்தியார்கின்றபாண்டிமாதேவிபாங்கொடுபணிசெயநின்ற
சுத்தமார்பளிங்கின்பெருமலையுடனேசுடர்மரகதமடுத்தாற்போல்
அத்தனார்உமையோடின்புறுகின்றஆலவாயாவதும்இதுவே.        3.120.7

மண்ணெலாம்நிகழமன்னனாய்மன்னும்மணிமுடிச்சோழன்றன்மகளாம்
பண்ணினேர்மொழியாள்பாண்டிமாதேவிபாங்கினாற்பணிசெய்துபரவ
விண்ணுளார்இருவர்கீழொடுமேலும்அளப்பரிதாம்வகைநின்ற
அண்ணலார்உமையோடின்புறுகின்றஆலவாயாவதும்இதுவே.      3.120.9

பன்னலம்புணரும்பாண்டிமாதேவிகுலச்சிறையெனுமிவர்பணியும்
அந்நலம்பெறுசீர்ஆலவாயீசன்திருவடியாங்கவைபோற்றிக்
கன்னலம்பெரியகாழியுள்ஞானசம்பந்தன்செந்தமிழிவைகொண்
டின்னலம்பாடவல்லவர்இமையோர்ஏத்தவீற்றிருப்பவர்இனிதே.              3.120.11

 

சுந்தரர் தேவாரம்

மன்னியசீர்மறைநாவன்நின்றவூர்ப்பூசல்
     வரிவளையாள்மானிக்கும்நேசனுக்கும்அடியேன்
தென்னவனாய்உலகாண்டசெங்கணார்க்கடியேன்
     திருநீலகண்டத்துப்பாணனார்க்கடியேன்
என்னவனாம்அரனடியேஅடைந்திட்டசடையன்
     இசைஞானிகாதலன்திருநாவலூர்க்கோன்
அன்னவனாம்ஆரூரன்அடிமைகேட்டுவப்பார்
     ஆரூரில்அம்மானுக்கன்பராவாரே.                         7.39.11

 

பதினோறாம் திருமுறை

பூசல்அயில்தென்னனார்க்கனலாகப்பொறாமையினால்
வாசமலர்க்குழல்பாண்டிமாதேவியாம்மானிகண்டீர்
தேசம்விளங்கத்தமிழாகரர்க்கறிவித்தவரால்
நாசம்விளைத்தாள்அருகந்தருக்குத்தென்னாட்டகத்தே.                     11.79-நம்பி

 

 பெரியபுராணம்

மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் 
 வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் 
 பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே 
 இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரைப் 
 போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே.  1  

பூசுரர் சூளாமணியாம் புகலிவேந்தர் போனக 
 ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது 
 யாம் என்அறிந்து தென்னர் கோமான்
மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ 
 வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை
ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி 
 நிழல்கீழ் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்.  2  

வருநாள் என்றும் பிழையாத் தெய்வப் பொன்னி 
 வளம் பெருக்க வளவர் குலம்பெருக்கும்தங்கள்
திருநாடு போற் செழியர் தென்னர் நாடு 
 சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
ஒரு நாளும் தம் செயலில் வழுவாது 
 அன்பர்க்கு உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த 
 பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம்.  3 
 

See Also: 1. Life history of mangaiyarkkaraciyAr 

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

Related Content

63 Nayanmar Drama - மங்கையர்க்கரசியார் - நின்றசீர் நெடுமாறர்

The Puranam of Mangkaiyarkkarasiyar Nayanar

The History of Mangayarkarasi Nayanar