logo

|

Home >

devotees >

meykandar-varalaru

மெய்கண்டார் வரலாறு

சிவமயம்

    தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ளதான திருமுனைப்பாடி என்னும் 
நடுநாட்டிலே, திருப்பெண்ணாகடம் என்னும் திருப்பதியிலே, வேளாளர் குலத்திலே,  சிவபெருமானிடத்தும் 
சிவனடியாரிடத்தும் அன்புமிக்குடையவராய், அச்சுத- களப்பாளர் என்னும் திருப்பெயருடையவராய் 
ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கல்விச் செல்வத்தினாலும் பொருட்செல்வத்தினாலும் சிறந்து விளங்கியும், 
மகப்பேறு இல்லாத குறையுடையவராய் இருந்தார். அவர் ஒருநாள் திருத்துறையூருக்குப் போய் தம் 
குலகுருவாகிய சகல ஆகமப் பண்டிதர் என்னும் சிறப்புப் பெயர் உடைய அருள் நந்தி சிவாசாரியாரிடம் 
சென்று தமக்கு மகப்பேறு இல்லாத குறையைத் தெரிவித்தார்.

    அது கேட்ட அருள் நந்தி சிவாசாரியார், தம் வழிபடு கடவுளை வழிபாடு செய்து அதன் 
முடிவில் தேவாரத் திருமுறையை மலரிட்டு வணங்கி அதனிடத்தில் திருக்கயிறு சாத்தும்படி 
அச்சுத-களப்பாளருக்குச் சொல்லி அருளினார். அவ்வாறே அச்சுத-களப்பாளர் தேவார திருமுறையின் 
முன்னே எட்டு உறுப்புக்களும் நிலத்திலே தோயும்படி வணங்கி சிவபெருமானைத் துதித்து 
திருமுறைக்கண் கயிறு சாத்தினபொழுது திருஞான சம்பந்த அடிகள் பாடியருளிய திருவெண்காட்டுப் 
பதிகத்தில் இரண்டாவது பாட்டாகிய

    "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள 
    நினைவாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
    வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் 
    தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே"

என்னும் செய்யுள் காணப்பட்டது. பின்னர் சகலாகமப் பண்டிதர் பேருவகையுடன் அச்சுத காப்பாளருக்கு 
அச்செய்யுளின் பொருளைக் கூறி திருவெண்காட்டுத் திருப்பதியின் மேன்மையையும், அப்பதியில் உள்ள 
திருக்குளத்தில் முழுகி இறைவனை வழிபடும் முறைமையையும் அறிவுறுத்தி, திருவெண்காட்டுக்குப் 
போகும்படி ஆணை செய்தார்.

    அச்சுத-களப்பாளர் குருவின் ஆணையைத் தலைமேற்கொண்டு மனைவியாருடன் திருவெண்காட்டிற்குச் 
சென்று நாள்தோறும் சோமகுளம், சூரியகுளம், அக்கினிக்குளம் என்ற மூன்று குளங்களிலும் நீராடி 
சிவபெருமானையும் இறைவியையும் சிலகாலம் மெய்யன்புடன் வழிபட்டு வந்தார்.

    ஒரு நாள் இரவில், அச்சுத களப்பாளர் தூங்கும்போது இறைவன் அவர் கனவில் வந்து தோன்றி 
'அன்பனே! உனக்கு இப்பிறவியிலே மக்கட்பேறு அரிதாயினும் எமக்கு மிகவும் விருப்பம் 
உடையதாயும் மெய்யன்போடு தன்னை ஓதுவார்க்கு எல்லாப் பேறுகளையும் தருவதாயும் உள்ள 
தேவார திருப்பதிகத்தையே உண்மையாக நம்பி வந்து வழிபாடு செய்கின்றாய். ஆதலின், 
அத்தேவாரங்களைப் பாடிய ஞானசம்பந்தன் போலவே அத்தேவாரத் திருப்பதிகங்களின் 
மெய்ப்பொருளை விளக்கி, மெய்ந்நெறியாகிய சைவ சமயத்தையும் விளக்கி நிறுவ வல்ல 
நற்புதல்வன் ஒருவனை நாம் உனக்குத் தந்தோம்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    உடனே, அச்சுத களப்பாளர் விழித்தெழுந்து பெருமகிழ்வுற்று திருவெண்காட்டு இறைவர்
தமக்குத் திருவருள் புரிந்ததை நினைத்து, அவரை வணங்கித் துதித்து, நிகழ்ந்த செய்தியைத் தம் 
மனைவியாருக்குத் தெரிவித்து, அவரோடு தாமும் திருக்கோவில் சென்று இறைவனையும் 
இறைவியையும் மிக்க பேரன்போடு வழிபட்டு தமது இல்லத்திற்குத் திரும்பினார். இங்ஙனம், அவர் 
நாள்தோறும் தம் மனைவியாரோடு திருக்கோவில் சென்று நீராடி வழிபாடு செய்து வந்தார்.
சிலகாலம் சென்றபின் அவர் மனைவியார் திருவயிற்றில் சிவபிரான் திருவருளினால் கரு தோன்ற
பெரும்பேறு உளதாயிற்று.

    அஃதறிந்த அச்சுத-களப்பாளர் சிவபிரான் தமக்கு அருள்செய்த திருவருளைப் புகழ்ந்து,
துதித்து பத்துத் திங்களிலும் செய்ய வேண்டிய சடங்குகளை சிவாகம நெறிப்படி செய்து வந்தார்.
தென்னாடு செய்த தவவலியால் சைவ சமயம் சிறந்து விளங்குமாறு நற்கோள்கள் அமைந்த நல்ல 
வேளையிலே அவருக்கு நற்புதல்வர் ஒருவர் தோன்றி அருளினார்.

    அச்சுத களப்பாளர் பெருமகிழ்வுற்று குழந்தைக்கு சிவாகம நெறிமுறைப்படி செய்ய
வேண்டிய பிறப்புக்குறிப்பு எழுதுதல் முதலிய சடங்குகளைச் செய்து அப்புதல்வருக்குத் 
திருவெண்காடர் என்னும் திருப்பெயர் இட்டருளினார். பின்பு, அவர் தம் மனைவியாரோடு 
அருமைக் குழந்தையோடும் திருவெண்காட்டு இறைவனையும் இறைவியையும் வழிபட்டு 
விடைபெற்றுக் கொண்டு தமது உறைவிடமாகிய திருப்பெண்ணாகடத்தை அடைந்தனர்.
அச்செய்தி அறிந்த அவ்வூரில் உள்ளோர் அச்சுத-களப்பாளர் மனைக்கு வந்து, இறைவன் 
திருவருளால் தோன்றி அருளிய குழந்தையைப் பார்த்து ஆசிர்வதித்து உவகையுடன் சென்றனர் .
அத்திருப்புதல்வர் வளர்பிறைபோல வளர்ந்துவரும் நாளில் திருவெண்ணெய் நல்லூரில் இருந்த 
அவர் நன்மாமனார் திருப்பெண்ணாகடம் வந்து குழந்தையைப் பார்த்து பெருமகிழ்வுற்று அவரைத் 
தம் இல்லத்திற்குக் கொண்டுபோய் அன்போடு வளர்ப்பாராயினர்.

    அவர் இங்ஙனம் வளர்ந்து இரண்டாண்டு நிறைவுற்றபோது முற்பிறவியிலேயே சரியை, 
கிரியை, யோகம், ஞானம் முடிக்கப்பெற்ற சாமு சித்தராதலின், சிவபிரானை உள்ளவாறு உணரும் 
மெய்யுணர்வு கைவரப்பெற்றவராய் விளங்கியருளினார். அப்பொழுது சிவபிரான்
எழுந்தருளியிருக்கும் திருக்கயிலையில் காவல்பூண்ட திருநந்தி தேவர் மரபில் சனற்குமாரர்
மாமுனிவருடைய மெய்யறிவுப் புதல்வராகிய சத்திய ஞான தெரிசனிகளிடம் அருள்விளக்கம் பெற்ற 
பரஞ்சோதி மாமுனிவர் என்பார் பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்திய மாமுனிவரைக் 
காணும் பொருட்டு பொதிகை நோக்கி வெளி வழியே (ஆகாய மார்க்கம்) செல்லும்பொழுது 
திருவெண்ணெய் நல்லூரில் அருள் ஒளிப் பிழம்பாய் விளங்கிய மெய்கண்ட தேவரைப் பார்த்து 
நிலத்திறங்கி, அவருக்கு சிவஞானத்தைக் கொடுத்தருளி, 'இதனை தமிழுலகம் உணர்ந்து உய்யும் 
பொருட்டு ஏது திருட்டாந்தங்களினால் விளங்க உரைக்க' என்று திருவாய் மலர்ந்தருளி தம் குருவாகிய
சத்திய ஞான தெரிசனிகள்பால் தாம் கேட்டவாறே அவருக்கு சைவ சித்தாந்த மெய்ப்பொருளை 
உள்ளவாறு உணர்த்தி 'மெய்கண்டார்' என்ற திருப்பெயரையும் சூட்டி
அவரைவிட்டு நீங்கி மீண்டும் வெளி வழியேறிச் சென்றார்.

    பின்பு, மெய்கண்ட தேவர் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள பொள்ளாப் பிள்ளையார் 
திருக்கோவில் சென்று அங்கு திருமுன்பு நிட்டைகூடி, சிவஞானப் பொருளை தமது உள்ளத்தில் 
உள்ளவாறு நினைந்துணர்ந்து இத்தமிழுலகம் உய்யுமாறு சிவஞானத்தை ஏது திருட்டாந்தங்களினால்
உரைத்தருளினார். மெய்யறிவு விளங்கப் பெற்ற ஞாயிறாய் விளங்கித் தம்மை அடைந்த தகுதி வாய்ந்த 
மாணவர்கள் பலருக்கும் சிவஞானத்தை விளக்கி அறிவுறுத்திக் கொண்டு இருப்பாராயினர்.

    அவர், இங்ஙனம் மாணவர்கட்கு சிவஞான நூற்பொருளை அறிவுறுத்திக் கொண்டு 
இருந்ததை திருத்துறையூரில் இருந்த குலகுருவாகிய அருள்நந்தி சிவாசாரியார் கேள்வியுற்று, தம் 
மாணவர் பலரோடும் திருவெண்ணெய் நல்லூருக்குப் புறப்பட்டு வந்தார். அவர் அங்கு வந்து 
சேர்ந்தபொழுது அங்குள்ள சைவ நன்மக்கள் பலர் அவரை எதிர்கொண்டு வணங்கி முகமன் 
கூறினார்கள். ஆனால் மெய்கண்ட தேவர் மட்டும் அவர்களுடன் வரவில்லை. அவர் 
திருவெண்ணெய் நல்லூருக்குள் வந்த பின்னராவது அவரை வந்து பார்க்கவும் இல்லை. 
அருள் நந்தி சிவாசாரியார் தம்மிடம் மெய்கண்ட தேவர் வராததை அறிந்து தாமே அவரைப் பார்த்துவர 
அவர் இருக்கை சென்றார். அவ்வாறு சென்ற பொழுது, மெய்கண்ட தேவர் தம் மாணவர்களுக்கு 
ஆணவ மல உண்மையைப்பற்றிக் கூறி விளக்கிக் கொண்டிருந்தாரேயன்றி, அருள்நந்தி
சிவாசாரியாரைக் கண்டு ஒன்றும் பேசவில்லை.

    தாம் அவர் இருப்பிடம் சென்றும் தம்மிடம் மெய்கண்ட தேவர் ஒன்றும் பேசாததைக் கண்டு 
உள்ளச் செருக்கோடு அருள்நந்தி 'ஆணவமலத்திற்கு தன் உண்மை நிலை என்ன?'  என்று வினவினார், 
அவ்வினாவிற்கு விடையாக, மெய்கண்டதேவர் தம்முன் நின்று கொண்டிருந்த அருள்-நந்தி 
சிவாசாரியாரையே தமது ஆள்காட்டி விரலால் சுட்டிக் காண்பித்தார். காட்டவும் சிவாசாரியார் 
தமது அறியாமை நீங்கி மெய்யறிவு விளங்கப் பெற்று மெய்கண்ட தேவர் திருவடிகளில் விழுந்து 
வணங்கி தமக்கு மெய்ப்பொருளை அறிவுறுத்த வேண்டும் என்று குறையிரந்தார். அவ்வாறு 
குறையிரந்த அருள்நந்தி சிவாசாரியாரது முதிர்ந்த அறிவு நிலையைக் கண்ட மெய்கண்டதேவர் 
அவருக்கு மெய்ப்பொருளை உள்ளவாறு உணர்த்தி தம் மாணவர் நாற்பத்தி ஒன்பது பேர்களுள் 
முதன்மையான மாணவராய் இருக்கும் பெருமையையும் நல்கினார்.

    அருள்-நந்தி சிவாசாரியார் தாம் தம் ஆசிரியர்பால் கேட்ட மெய்ப்பொருளை விரித்து 
விளக்கி முதல்நூலாகிய சிவஞான சூத்திரத்திற்கு வழிநூலாக சிவஞான சித்தியார் என்ற நூலைச்          
செய்தருளினார். இன்னும் அவர் இருபாவிருபஃது என்ற நூலையும் செய்தருளினார். மெய்கண்ட தேவர் 
சிலகாலம் நிட்டை கூடியிருந்து ஐப்பசித் திங்களில் சுவாதி நாளில் எங்கும் நிறைந்துள்ள பெருஞ்சுடர் 
பிழம்பாகிய சிவபெருமானொடு இரண்டறக் கலந்து பேராப்பேரின்ப வாழ்வு நிலையை அடைந்தார்.

    ஸ்ரீமெய்கண்ட தேவநாயனார் அருளிச் செய்த சிவஞான போதம், சைவ சித்தாந்தச் 
செந்நெறியின் தலைமணி ஞான நூலாக விளங்கும் சிறப்புடையது.சுருங்கிய யாப்பில் 
பன்னிரெண்டே நூற்பாக்களில், சைவ சித்தாந்தத்தின்  கொள்கைகள் அனைத்தையும் 
நுட்பமாகவும், திட்பமாகவும் விளக்கும் மேன்மையுடையது. இத்தகு அருள் நூல் என்றும் 
நின்று நிலவுதல் வேண்டுமென்ற பெருங்கருணைத் திறத்தால், திருக்கயிலாய பரம்பரைத் 
தருமை ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த 
பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், 'சிவஞான போதம்' பன்னிரெண்டு நூற்பாக்களையும் 
அனைவருக்கும் பயன்படும் வண்ணம் கல்லில் வெட்டுவித்து, மெய்கண்டார் அவதரித்தருளிய 
பெண்ணாகடம் களப்பாளர் மேட்டில் திகழும் ஸ்ரீமெய்கண்டார் திருக்கோயிலில் அமைத்து உள்ளார்கள்.

    இந்த சிவஞான போதத்திற்கு மாதவச் சிவஞான முனிவர் சிற்றுரை ஒன்றும் 
பேருரை ஒன்றும் எழுதி உள்ளார்கள். பேருரையை சிவஞான மாபாடியம் என்று கூறுவர்.            
இவர் தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள விக்கிரமசிங்கபுரம் என்ற ஊரில் 
13ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அவர், திருவாவடுதுறை மடத்தின் குலதெய்வம் என்று 
போற்றப்பட்டார். அதுமட்டுமல்லாமல், அவர் சித்தாந்த சைவர்கள் ஒவ்வொருவருக்கும் 
குலவிளக்காய் விளங்கினார். அவர் 1785 ஆம் வருடம் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் 
திருவாவடுதுறையில் பரிபூரணம் அடைந்தார்கள்.

    சிவஞான போதத்தில் உள்ள எட்டாம் சூத்திரத்தின் விளக்கமே, மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும். உலகில் மிகச்சிறந்த உயரிய தத்துவம் “சைவ சித்தாந்தம்” 
என்பது சான்றோர்கள் கண்ட முடிவு. இவ்வளவு உயர்ந்த சைவ சித்தாந்த தத்துவத்தை மிகச் சுருங்கிய 
அளவிலான நாற்பதே வரிகளில் (216 வார்த்தைகளில்) மெய்கண்ட தேவநாயனார் அருளிச் செய்துள்ளார்.
அதை மக்கள் சிறு வயதிலேயே மனப்பாடம் செய்து கொள்ளுவார்களானால், பின்னால் அவர்கள் 
தத்துவ அறிவு விளக்கத்தை விரும்பும் பொழுது, இது மிகவும் உறுதுணையாக அமையும். 

            மெய்கண்டார் திருவடி வாழ்க 
 

Related Content

Meykandar - Life History