logo

|

Home >

devotees >

kungkuliyak-kalaya-nayanar-puranam

குங்குலியக் கலய நாயனார் புராணம்

Kungkuliyak Kalaya Nayanar Puranam


யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந்
    திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே
தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு
    சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர்
ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே
    நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப்
பாலமுத முண்டாரு மரசு மெய்திப்
    பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே.

சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வறுமை மிகுதியினாலே நிலங்களை விற்றும், அடிமைகளை விற்றும், செலவழித்தார். இப்படி எல்லாம் செலவானமையால், அவருடைய மக்களும் சுற்றத்தவர்களும் வருந்தினார்கள்.

ஒருநாள் அவர்மனைவியார், அரிசி முதலியன வாங்குதற்கு ஒன்றும் இல்லாமையால் இரண்டுநாளாகப் பட்டினியிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, தம்முடைய தாலியை அக்கணவர் கையிலே கொடுத்து, "இதற்கு நெல் வாங்கிக் கொண்டு வாரும்" என்றார். குங்குலியக்கலயநாயனார் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு, நெல்லுக் கொள்ளும்படி போனார். போம்பொழுது வழியிலே ஒருவணிகன் குங்குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக்கண்டு, மனமகிழ்ந்து "சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டேன். இதினும் பார்க்க மேலாகிய பேறு உண்டோ" என்று சொல்லி, தம்முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்குங்குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக்கொண்டு அங்கே இருந்தார். அவர் அங்கே இருக்க, வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும், பசியினாலே வாடி, அன்று ராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யும் பொழுது; கருணாகரராகிய கடவுள் அவ்வீடு முழுவதிலும், பொற்குவியலும் நெற்குவியலும் அரிசிக்குவியலும் பிறவளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள்செய்து, அம்மனைவியாருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அநுக்கிரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து, அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக்கலயநாயனாருக்குத் திருவமுது பாகம் பண்ணப் பிரயத்தனஞ்செய்தார். கிருபாநிதியாகிய பரமசிவன் குங்குலியக் கலயநாயனாருக்குத் தோன்றி, "நீ மிகப் பசி கொண்டிருக்கின்றாய். உன்வீட்டுக்குப் போய்ப் பாலும் அன்னமும் உண்டு துன்பத்தை ஒழி" என்று திருவாய்மலர்ந்தருளினார். குங்குலியக் கலயநாயனார் அதைக் கேட்டுக் கைகூப்பி வணங்கி அவருடைய ஆஞ்ஞையை மறுத்து இருத்தற்கு அஞ்சி, அதனைச் சிரசின் மேலே வகித்து திருக்கோயிலினின்றும் நீங்கிப் போய்த் தம்முடைய வீட்டினுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அவ்வீடெங்கும் நிறைந்திருக்கின்ற நிதிக்குவைகளைக் கண்டு, மனைவியாரை நோக்கி "இந்தச் சம்பத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன" என்று கேட்க; அவர் "எம்பெருமானுடைய திருவருளினால் வந்தன" என்றார். அதுகேட்ட நாயனார் "ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் ஆட்கொள்ளும் பொருட்டு நமது கடவுளுடைய கருணை இருந்தபடி இப்படியோ" என்று கடவுளை வணங்கினார். மனைவியார் விரைவிலே கணவரையும் சிவனடியார்களையும் விதிப்படி தூப தீபங்களால் ஆராதனை செய்து, திருவமுது செய்வித்தார். குங்குலியக்கலயநாயனார் பரமசிவனுடைய திருவருளினாலே பெருஞ்செல்வமுடையவராகி, சிவனடியார்களைத் தயிர் நெய் பாலோடு திருவமுது செய்வித்து வந்தார்.

இப்படி நடக்குங்காலத்திலே, திருப்பனந்தாளென்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற சிவலிங்கம் சாய்ந்திருக்கின்றமையால், அதனை நிமிரப்பண்ணிக் கும்பிடுதற்கு விரும்பி, இராசாவானவர் தம்முடைய யானைகளெல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தார். இழுப்பித்தும், அது நிமிராமையால் அகோராத்திரம் தீராத கவலையுற்றிருந்தார். குங்குலியக்கலய நாயனார் அந்தச் சமாசாரத்தைக் கேள்வியுற்று சுவாமி தரிசனஞ்செய்யும்பொருட்டுத் திருப்பனந்தாளை அடைந்தார். அங்கே சிவலிங்கத்தை நிமிரப்பண்ணவேண்டுமென்கின்ற ஆசையாய் இராஜாவருத்தமுறுதலையும், சேனைகள் யானைகளோடு சிவலிங்கத்தை இழுத்துத் தங்கள் கருத்து முற்றாமையால் பூமியின்மேலே வலி குறைந்து விழுந்து இளைத்தலையும் கண்டு, மனசிலே துன்பங்கொண்டு, "அடியேனும் இளைப்பைத் தருகின்ற இந்தத் திருப்பணியைச் செய்ய வேண்டும்" என்று விரும்பி, சிவலிங்கத்திலே கட்டப்பட்ட கயிற்றைத் தம்முடைய கழுத்திலே கட்டிக்கொண்டு இழுத்தார். உடனே சிவலிங்கம் நிமிர்ந்தது. அப்படி நிமிர்ந்தது அவர் புறத்திலே கட்டி இழுத்து அக்கயிற்றினாலே அன்று; அகத்திலே கட்டியிழுத்த அன்புக்கயிற்றினாலேயாம். அது கண்டு இராஜாவும் சேனைகளும் மிகுந்த களிப்பையடைந்தார்கள். இராஜா குங்குலியக்கலயநாயனாரை நமஸ்கரித்து வியந்து ஸ்தோத்திரம் பண்ணி, சுவாமிக்கு வேண்டிய திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டு தம்முடைய நகரத்துக்குப் போய்விட்டார்.

குங்குலியக்கலயநாயனார் சிலநாள் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே இருந்து, பின் தமது வாசஸ்தானமாகிய திருக்கடவூருக்குப் போய், தாஞ்செய்யுந் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தார். இருக்குநாளிலே, அந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளிவந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசநாயனாரையும் எதிர்கொண்டு, தமது வீட்டுக்கு, அழைத்துக்கொண்டுபோய், திருவமுது செய்வித்து அவர்களுடைய திருவருளையும், பரமசிவனுடைய திருவருளையும் பெற்றார். பின்னுஞ் சிலகாலம் அன்பு மேன்மேலும் பெருகப் பல திருப்பணிகளையும் செய்து கொண்டிருந்து சிவபதமடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

 


குங்குலியக்கலயநாயனார் புராண சூசனம்

சிவசந்நிதானத்திலே தூபம் இடுதல்

திருக்கோயில்களிலே சிவசந்நிதானத்தில் மெய்யன்போடு சுகந்ததூபம் இடுதல் சிவபுண்ணியமாம். அது "பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி - யரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து - விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல்லார்க்குக் - கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தான் அறிக. தூபம் ஐவகைப்படும்; அவற்றை "ஐவகைய தூபங்களாவனதாங் குந்துருகந் - துய்யபெருங் கருப்பூரந் துன்னியகா ரகில்வெண்மை - யெய்தியசந் தனமினிய குக்குலுவு மெனவறிக - நெய்யதனாற் றிருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே!" என்னும் சிவதருமோத்தரச் செய்யுளிற் காண்க.

இச்சிவபுண்ணியத்தினால் மிகச் சிறப்புற்றவர் இக்குங்குலியக்கலய நாயனார் என்பது இவர் தமக்குச் செல்வம் உள்ள பொழுதன்றி மிகுத்த வறுமை எய்தியபொழுதும் இத்திருத்தொண்டைத் தவறாது செய்தமையாலே தெளியப்படும். இவர் தமது மனைவியார் இரண்டுநாள் போசனம் இன்றி வருந்தும் புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, நெல்லுக் கொள்ளும் பொருட்டுத் தம்மிடத்திலே தந்த தாலியைக் கொண்டு போம்பொழுது, குங்குலியப் பொதியைக் கண்டு, தம்மையும் தமது மனைவி முதலியோரையும் வருத்தும் பெரும்பசியைச் சிறிதும் நோக்காமல், அத்தாலியைக் கொடுத்துக் குங்குலியப் பொதியை வாங்கி, பெருமகிழ்ச்சி உற்றமையே இவர் இப்புண்ணியத்தை இடையறாத மெய்யன்போடு செய்தனர் என்பதற்குச் சான்றாம். அக்குங்குலியப் பொதி சிவபெருமானது பண்டாரத்திற் சேர்ந்தவுடன், அதனால் இவருக்கு உளதாகிய ஆனந்தம் முன்னை நிகழ்ச்சிகளை மறப்பித்து மேன்மேலும் வளர்ந்த பெரும் வியப்பை "ஒருவர்தம் பண்டாரத்தி - லடைவுற வொடுக்கி யெல்லா மயர்த்தெழு மன்பு பொங்கச் - சடையவர் மலர்த்தாள் போற்றி யிருந்தனர் தமக்கொப் பில்லார்" என்பதனாற் காண்க. இன்னும், இவரது மெய்யன்பின் முதிர்ச்சி, திருப்பனந்தாளிலே இராஜா யானைகள் எல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தும் நிமிராத சிவலிங்கம் இவரால் நிமிர்ந்தமையானும் தெளியப்படும். இத்துணைச் சிறப்பினதாகிய மெய்யன்பினாலன்றோ, சமயகுரவர்களாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் என்பவர்கட்குத் திருவமுது செய்வித்த பெரும்பேறும் பெற்றனர்.

திருச்சிற்றம்பலம்

See Also: 
1. குங்குலியக் கலய நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. kuNgiliyak kalayanAyanAr purANam in English prose 
3. Kungkuliya-k-Kalaya Nayanar Puranam in English Poetry 

 


Related Content