logo

|

Home >

articles >

saiva-siddhanta-paripashai

சைவ சித்தாந்த பரிபாஷை - சூரிய சிவாசாரியார்

சிவமயம்

ஶ்ரீ சூரிய சிவாசாரியாராலியற்றப் பெற்ற

சைவ சித்தாந்த பரிபாஷை

(தமிழ் மொழி பெயர்ப்பு)


[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு - (1982)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]


நூன்முகம்

      “உலகம் தோன்றி நின்று மறைதல் கண்கூடாகக் காணப்படுதலின், இம்முத்தொழில்களைச் செய்யுன் வினை முதலாகிய கடவுளும், தோன்றி நின்று மறைதலால் பயன் பெறும் உயிரும், தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் முதற் காரணமாகிய மாயையும், அந்த மாயையிலிருந்து பலவேறு விதமான காரியங்கள் தோன்றுதற்குக் காரணமான கன்மமும், அக்கன்மம் பலவேறு வகைப்படுதற்குக் காரணமான ஆணவமலமும், அந்த ஆணவமலம் பக்குவமாதற் பொருட்டு மாயா காரியங்களைத் தோற்றுவித்து, அவற்றுடன் உயிர்களைக் கூட்டுவித்து அவற்றிலழுந்தி அனுபவிக்கச் செய்யும் திருவருளாகிய திரோதான சத்தியும், அவ்வனுபவத்தால் பக்குவமடைந்த உயிர்களுக்கு மலசத்தி நீங்கும் படிக்கும் சிவனோடு பிரிப்பின்றி நிற்கும் உயிரின் உண்மை நிலை விளங்கும் படிக்குஞ் செய்யும் அனுக்கிரகமும் என்னும் இவை சைவசித்தாந்த நூல்களிற்றான் கூறப்படுகின்றன. ஏனைய சமயநூல்களில் கூறப்படவில்லை.

 

      பிறநூல்களில் முடிவாகக் கூறப்பட்ட பொருள்களைப் பூருவபக்கமாகக் கூறி அவற்றிற் கூறப்படாத பொருளை முடிவாகக் கூறுதலானும், சைவநூல்களில் முடிவாகக் கூறப்பட்ட பொருள் பிற நூல்களில் அநுவதித்துப் பூருவ பக்கம் பண்ணப்படாமைமானும், சைவ சாத்திரங்கள் சித்தாந்தம் எனப்பட்டன. இத்துணைப் பெருமை வாய்ந்த சைவ சித்தாந்த சாத்திரங்களிற் கூறப்படும் பதி-பசு-பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையை உணர்த்தும் பிரமாணங்களையும், அந்த முப்பொருள்களையும், அவற்றின் உபயோகத்தையும் பல நூல்களின் கருத்தைத் திரட்டித் தொகுத்து மிக நுட்பமாகவும், ஆயுந்தோறும் ஆயுந்தோறும் இன்பம் பெருகுதற்கேதுவாகவும், சைவ சித்தாந்த பரிபாஷை என்னும் பெயருடன் ஒரு அருமை வாய்ந்த நூலை ஶ்ரீ சூரிய சிவாசாரியர் இயற்றி வைத்தனர்.

 

      இந்நூல் உபோத்காத பரிச்சேதம், பிரமாண பரிச்சேதம், பதி பரிச்சேதம், பசு பரிச்சேதம், பாச பரிச்சேதம், விநியோக பரிச்சேதம் என்னும் ஆறு பரிச்சேதங்களை உடையது. ஒவ்வொரு பரிச்சேதத்திற் கூறப்படும் அருமையான விடயங்கள் விடய அட்டவணையிற் காட்டப்பட்டிருக்கின்றன. இந்நூலாசிரியர் வழுவூரை வாசத்தானமாக உடையவர் என்பது மங்கலவாழ்த்தால் அறியக்கிடக்கின்றது.”

 

      மேலே கொடுத்துள்ளது தேவகோட்டைச் சிவகாம சித்தாந்த பரிபாலன சங்கத்தாரால் 1928-ம் ஆண்டு (விபவ-சித்திரை) வெளியீடப்பட்ட சைவ சித்தாந்த பரிபாஷை என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் உள்ள முகவுரைப் பகுதியாகும். சூரிய சிவாசாரியார் வடமொழியில் இயற்றிய இந்த நூலை தேவகோட்டை சங்கத்தார் முதலில் வடமொழியிலும், பிறகு தமிழ் மொழி பெயர்ப்பும் வெளியிட்டனர். இந்த தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் ஒரு பிரதியினை மிகவும் சிதிலமடைந்த நிலையில், தூத்துக்குடி சித்தாந்த போதகாசிரியர் திரு. த.சி.ச. இராமர்சங்கு பாண்டியன், பி.ஏ., அவர்கள் எம்மிடமளித்து, இந்த நூலை எமது சிவஞான பூஜா மலரில் ஆண்டுதோறும் ஒவ்வொரு பகுதியாக வெளியிட்டு விட்டால் நூல் பாதுகாக்கப்பட்டதாக ஆகும் என்றும், இந்நூலை இதுகாறும் படிக்காதவர்களும் இதனைப் படித்தறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்கள். நூல் முழுமையும் படித்துப் பார்த்து, இது சித்தாந்தச் சார்புடைய சிறந்ததொரு நூலாகையால், சைவப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் இதனை எமது சிவஞான பூஜா மலரில் ஆண்டுதோறும் பகுதி பகுதியாக வெளியிடுவது என்று முடிவு செய்தோம்.

 

      ஆயினும், எமக்குக் கிடைத்த பிரதி, தேவகோட்டை சிவகாம சித்தாந்த பரிபாலன சங்கத்தாரால் வெளியிடப்பட்டதாகலின், அவர்களது ஒப்புதல் பெற்றே இப்பணியில் முயல வேண்டும் என்ற கருத்துடன், சங்கத்தின் தலைவர், “தருமபுர ஆதின வித்வான், திருவண்ணாமலை ஆதின விரிவுரையரசு, மதுரை ஆதினச் சித்தாந்த சைவ வித்தகர், சித்தாந்தப் புலவர் மாமணி, பெரும்புலவர், பாலகவி” திரு. வயிநாகரம் வே, இராமநாதன் செட்டியார் (தத்புருஷ தேசிகர்) அவர்களுக்கு எழுதினோம். 1981-வது ஆண்டு எம்மால் வெளியிடப்பட்ட சிவஞான பூஜாமலர் பிரதியினையும் அனுப்பினோம். அவர்களும் மனமுவந்து தமது ஒப்புதலை ‘ஆசிச்செய்தி’ வடிவமாக வழங்கியருளினார்கள். அவர்களது ஆசியுரையினைக் கீழே காண்க.


ஶ்ரீ சூரிய சிவாசாரியாரால் இயற்றப்பெற்ற

(தமிழ் மொழி பெயர்ப்பு)

முதலாவது *உபோத்காத பரிச்சேதம்

விடய அட்டவணை

[* உபோத்காதம் – முன்னுரை. பரிச்சேதம் – பிரிவு]

1.     மங்கலஞ் செய்தல்.

2.     நூலாசிரியரின் பிரதிஞ்ஞை.

3.     காமிகாகமத்தின் முதற்சூத்திரத்துக்குப்பொருள் கூறல்.

4.     மலத்தின் பரிபாகத்திற்காகவே, பரமசிவன் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்கின்றான்.

5.     பரமசிவனே வழிபடத்தக்கவன்.

6.     தீக்ஷையுடையோரே பரமசிவனை வழிபடுதற்குரியர்.

7.     ஆசிரியத்தன்மை சித்தாந்த சாத்திரங்களாலுண்டாம் ஞானத்தால் சித்திக்கத் தக்கது.

8.     பதி, பசு, பாசங்கள் என்னும் பொருள்கள் சித்தாந்த சாத்திரங்களைத் தவிர வேறு சாத்திரங்களில் சொல்லப்படாமையும், அதற்குக் காரணமும்.

9.     வேதங்கள், ஈசுவரனால் இயற்றப் பெற்றமை பற்றியே எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்றன. நித்தியமாயிருக்கின்றமை பற்றி அறிவிக்குமென்றல் பொருந்தாது.

10.    வேதங்கள் மாறுபட்ட பல சமயிகளின் ஐயத்துக்கிடமாய் இருப்பன.

11.    சிவாகமங்கள் ஐயத்தை நீக்கித் தெளிவித்து வேத சாரமாய் விளங்குவன.

12.    ஆசிரியத் தன்மைக்கு அதிகாரமிருத்தல் பற்றிப் பந்தத் தன்மை நிகழுமே என்னும் வினாவிற்கு விடை.

13.    ஆசிரியனுக்குப் பதியோடு சமத்தன்மை உண்டென்பதை விளக்கல்.

14.    பதியுடன் சமத்தன்மையிருத்தலால் ஆசிரியன் ஈசுவரனால் ஏன் ஏவப்படுகிறானென்னும் வினாவுக்கு விடை.

15.    ஆசிரியத்தன்மை அபரமோக்ஷம்.

16.    நிருவாண தீக்ஷையுடையவனே சாதகன். அவன் சித்தாந்த சாத்திரங்களை அறிதற்குரியவன்.

17.    சமயதீக்ஷை பெறுதற்குரியார் இவரெனல்.

18.    விசேடதீக்ஷை பெறுதற்குரியார் இவரெனல்.

19.    நிருவானதீக்ஷை பெறுதற்குரியார் இவரெனல்.

20.    சமயதீக்ஷை பெற்றவனுக்குப் பசுத்தன்மை நீங்கவில்லையாயினும், விசேட தீக்ஷை பெற்றவனுக்குப் பசுத்தன்மை நீங்கினமையால், சித்தாந்த சாத்திரத்தைக் கேட்பதற்கு உரிமையில்லை என்பது எவ்வாறு கூடுமென்னும் வினாவிற்கு விடை.

21.    நிருவான தீக்ஷையினாலேயே பாசமனைத்தும் நீங்கினமையால் ஆசாரியாபிஷேகம் வேண்டாமே என்னும் வினாவிற்கு விடை.

 

நூல்

முதலாவது உபோத்காத பரிச்சேதம்

      வழுவூரையும், அவ்வூரின்கண் விளங்கும் நின்மலமான பொற்றாமரையையும், அவ்வூரின்கண் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிக்கும் இளங்கொம்பனௌயாளம்மையையும் திருவீரட்டநாதரையும் வணங்குகின்றேன்.

 

      எந்தத் திருவீரட்டநாதருடைய சந்நிதியானது, எல்லாவுயிர்களுக்கும் எவ்விடத்தும் எக்காலத்தும் எல்லாப் புருடார்த்தங்களையும் கொடுத்தருளுகின்றதோ, அந்தப் பரஞ்சோதி ரூபமான திருவீரட்டநாதருக்கு வணக்கஞ் செய்கின்றேன்.

 

      எந்தப் புருடன் சமயம் விசேடம் முதலிய தீக்ஷைகளைப் பெற்றுச் சைவசாத்திரங்களைச் சிரமமின்றிப் படிக்க விரும்புகின்றானோ, அந்தப் புருடனுக்கு உபகாரமாக என்னால் இந்தச் சைவ சித்தாந்தப் பரிபாஷையானது யுத்தியுடன் சுருக்கிக் கூறப்படுகின்றது. (பரிபாஷை – குழுஉக்குறி. அஃதாவது ஒவ்வொரு கூட்டத்தார் வழங்குஞ் சொல்.)

 

      அநாதியே மலமில்லாதவனாயும் எல்லாவற்றையும் அறிபவனாயும் எல்லாவற்றையுஞ் செய்பவனாயுமிருக்கிற பரமசிவன், ஆணவமலம் கன்மமலம் மாயா மலங்களால் அநாதியே எல்லாவற்றையும் அறியுந்தன்மையும், எல்லாவற்றையுஞ் செய்யுந்தன்மையும் தடுக்கப்பட்டுள்ள உயிர்வர்க்கங்களுக்கு, அந்தப் பாசங்களின் சேர்க்கையை நீக்குகின்றானென்பது ஶ்ரீ காமிக ஆகமத்தின் முதற்சூத்திரத்தின் பொருளாகும்.

 

      இதன் கருத்தாவது, எல்லாப் பொருள்களையும் தடையின்றி இயல்பாகவே அறிகின்ற ஞானக்கிரியா சத்திகளை உடையவனாயிருத்தலால் பதியென் நின்ற பரமசிவன். அநாதியே (இயல்பாகவே) பாசத்தின் சேர்க்கையால் தன்னைப்போலாகாது வேறுபாட்டையடைந்து (அஃதாவது எல்லப் பொருள்களையும் அறியமுடியாத தன்மையை அடைந்து) பசுரூபர்களான ஆன்மாக்களிடத்துக் கருணையுடையனாய், அவ்வான்மாக்களுக்கு ஞானக்கிரியைகளைத் தடுத்தலால் பாசங்களென்று வழங்கப்படும் ஆணவமலம் கன்மமலம் மாயா மலங்களை நீக்கித் தன்னுடைய * தர்மம் போன்ற முற்றுணர்வு முதலிய குணங்கள் விளங்கித் தோன்றச் செய்தலென்னும் அனுக்கிரகத்தைச் செய்கின்றான் என்பதாம்.

 

[* சார்ந்த தன்வண்ணமாந் தன்மையுடைய உயிர்கள் எக்காலத்தும் சிவனோடு பிரிப்பின்றி நிற்றல்பற்றித் தன்னுடைய தருமத்தையுடையது உயிரெனக் கூறப்பட்டது.]

 

      ஆன்மாக்களுடைய ஞானக்கிரியைகளை மறைக்கும் அநாதியாயுள்ள மலத்தின் அதிகாரமானது எதுவரையும் நிவிர்த்தி அடையவில்லையோ, அதுவரையும் பதியினுடைய அனுக்கிரக ரூபமான முத்தி பசுக்களுக்கு நிகழ்கிறதில்லை.

 

      மிருகேந்திரத்திலும் இவ்வாறே மலத்தினுடைய அதிகாரமும், திரோதான சத்தியினுடைய அதிகாரமும் நீங்குங் காலத்தில் அவற்றின் சத்திகளும் நீங்குதலால், உயிர்களுக்கெல்லாம் உறவினனாய் விளங்கும் பரமசிவன், அவ்வாறு சத்தி நீங்கப்பெற்று ஆன்மாவிற்கு முற்றுணர்வு முதலிய குணங்கள் விளங்கித் தோன்றச் செய்கின்றான் என்று கூறப்பட்டிருத்தல் காண்க.

 

      கண்ணினிடத்துள்ள படல முதலியனபோல் மலம் திரவியமாதலால் வைத்தியனுடைய தொழிலால் படலம் நீங்குமாறுபோலப் பரமசிவனுடைய தொழிலால் மலம் நீங்கவேண்டுமாதலால், படலத்தின் நீக்கம் அதன் பக்குவத்தை எதிர்பார்ப்பது போல், மல சத்தி திரோதான சத்திகளின் நீக்கமானது ஒருவிதமான பரிணாமமென்னும் மல பரிபாகத்தை எதிர்பார்க்கின்றது. மலத்தின் பரிபாகத்தைச் செய்வதற்காகவே பிரபுவான சிவபெருமான். ஆன்மாக்களறியாத வண்ணம் மறைந்து நின்றுகொண்டு, †“கலப்பில்லாதது பரிணமிக்காது” என்னும் நியாயத்தால் மாயா காரியமான தனுகரணபுவனபோகங்களின் சேர்க்கையைக் காரணமாகக் கொண்ட அநாதி கன்மானுபவ ரூபமான சம்சாரத்தை ஆன்மாக்களுக்குக் கூட்டுவிக்கின்றான். (இக்கூட்டத்தால் மலம் பரிபாகமடைகின்றது). [† மோரின் கலப்பின்றி, பால் தயிராகப் பரிணமித்தல் இல்லை.] இவ்வாறு சம்சாரத்தை ஆன்மாக்களுக்குக் கூட்டுவிப்பதே படைத்தல், காத்தல், அழித்தலென்னும் தொழில்களை அனுசரித்த திரோதானம் என்னுந் தொழிலாகப் பரமசிவனுக்குக் கூறப்படுகின்றது. ஆகவே, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்னும் ஐந்தொழில் புரியுங் கருணைக்கடலான பரமசிவனே கருணைக்கடலாயிருத்தலால் வழிபடத் தகுத்தவனென்பது பரமாசிரியர்களுடைய உபதேசக் கிரமமென்க.

 

      அந்தப் பரமசிவனை வழிபடுகின்றவனாயிருக்குந் தன்மை யாதெனில், தீக்ஷையினால் சுத்திபெற்ற ஆன்மாக்கள் அந்த வழிபாடு என்னுந் தொழிலுக்குப் பற்றுக்கோடாயிருத்தலேயாம். (அஃதாவது தீக்ஷையினால் சுத்தி பெற்றிருத்தனே பரமசிவனை வழிபடுதற்கு உரிய தன்மை என்பதாம்.)

 

      எதனாலெனின், தீக்ஷையால் சுத்திபெற்ற ஆன்மாவிடத்திற்றான் சமத்தன்மை நிகழ்தலாலென்க, இது பற்றியே நிருவாண தீக்ஷை பெற்ற சாதகர்கள் ஆசிரியத் தன்மை சித்தித்தற்பொருட்டுச் சித்தாந்த சாத்திரங்களையே ஆசிரியன் முகமாய் அறிகின்றனர். ஆசிரியத்தன்மை என்னும் அதிகாரம் ஞானம் ஒன்றினால் மாத்திரம் சித்திக்கத்தகுந்தது. ஞானமும் உபயோகத்தோடு கூடிய மூன்று பொருள்களை விடயமாகக்கொண்டு உபயோகப்படுகின்றது. அந்த மூன்று பொருள்கள், பதி, பசு, பாசங்களென்று அறியத்தகுந்தன. (ஆகவே, பதிஞானம், பசுஞானம், பாசஞானமென ஞானம் மூவகையாமாறு காண்க) அந்தப்பதி பசு பாசங்கள், சரியை கிரியை முதலியவற்றில் * உபயோகப்படுவனவாக காமிக முதலிய சித்தாந்த சாத்திரங்களில் இவ்வாறு கூறப்படவில்லை. [*வழிபடப்படுதல், வழிபடுதல், வழிபடுதற்குக் கருவியாதல் என்னும் இந்த முறையில் சரியை முதலியவற்றோடு பதி பசு பாசங்கட்கு உபயோகங்கங் காண்க.] எதனாலெனின், ஏனைய சாத்திரங்களனைத்தும் முற்றுணர்வில்லாத உயிர்களால் செய்யப்பட்டிருக்கின்றமையால் எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்யா வகையாலென்க. அஃதாவது, சித்தாந்தமென்னுஞ் சிவாகமங்களை அருளிச் செய்த பரமசிவனுக்கு முற்றுணர்வு உடைமையானது அநாதியே பாசமின்மையால் நிச்சயிக்கப்படுகிறது. ஏனைய சாத்திரங்களைச் செய்தவர்களான மகரிஷிகள் பாசத்தால் தடுக்கப்பட்ட ஞானக் கிரியைகளையுடையராயிருத்தலால் அவர்களிடத்து முற்றுணர்வுடைமை பொருந்துகிறதில்லை. அன்றி, இவர்களுடைய அறிவானது துணையை விரும்புகின்றமைபற்றி ஏகதேசமாகப் பொருள்களையறியுந் தன்மை உடையது இவர்களும் பதிக்குக் கூறப்பட்ட (முற்று உணர்வுத் தன்மையென்னும்) சத்தியுடன் கூடினவர்களாயிருந்தால் பதி சம்பந்தமான சைவ சமயத்தையே சார்ந்திருப்பார்கள். ஆகையால் அந்தப் பதியால் சுதந்திரமாய்ச் செய்யப்பட்ட சாத்திரமானது எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்வதுபற்றி சாதகர்களால் ஆசாரிய அபிஷேகத்தின் பொருட்டு அவசியம் அறியத்தக்கது. இந்தச் சிவசாத்திரங்களை அறியாதவர்களுக்கு முற்றுணர்வுத் தன்மை நிகழ்கிறதில்லையாகையால் அவர்கள் பிறருக்கு எவ்வாறு அனுக்கிரகஞ் செய்ய முடியும்? (முடியாது).

 

      அவ்வாறாயின், மறைகள் நித்தியங்களாயிருத்தலால் எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்யும் தன்மை அந்த மறைகளுக்கே உரியதாகும்; அவ்வாறன்றி ஈசுவரனால் செய்யப்பட்ட ஆகமங்களுக்கு எல்லாப் பொருள்களையும் விளக்குந் தன்மை உண்டென்பது எவ்வாறு கூடுமெனின், இந்தக் கேள்வி பொருந்தாது எதனாலெனின், ஈசுவரனால் கூறப்பட்டது பற்றியே மறைகளுக்கும் எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்யும் தன்மை உள்ளதே ஒழிய நித்தியமாயிருக்கின்றமையால் அத்தன்மை உள்ளதென்று கூறவில்லை யாதலாலென்க.

 

      அவ்வாறாயின், மறைகள் சிவாகமங்களென்னும் இவ்விரண்டில் ஒன்று பயனற்றதாகுமேயெனில், அஃதான்று, மிகவும் நுட்பமான பொருள்களையுடைய மறையானது ஒன்றோடொன்று மாறுபட்ட பல சமயிகளின் ஐயத்துக்கு இடமாயிருத்தலால் அந்த மறையின் சொற்களின் பொருள்களை விளக்கஞ் செய்விக்கும் சிவாகமங்கள் பலருக்கும் உபயோகமாகும். ஆதலால் இரண்டும் பயனுடையனவே என்று அறிந்து கொள்க. இவ்வாறே மறைகளின் சாரம் சிவாகமம் என்று நூல்களிலுங் கூறப்பட்டிருத்தல் காண்க.

 

      அவ்வாறாயின், இந்த ஆசாரியத் தன்மையானது (தீக்ஷை செய்தல் முதலிய அதிகாரமிருப்பது பற்றி) கட்டுப்படுத்துதல் என்னும் பாசமாகுமேயெனில், ஆகாது எதனாலெனின், எல்லாப் பாசங்களுடைய நீக்கத்தின் பின்னர் உண்டாகின்ற ஆசாரியத்தன்மையில் முற்றுணர்வுடைமை என்னும் சர்வஞ்ஞத்தன்மையுடன் விரோதமில்லாத அதிகார மல மாத்திரம் எஞ்சியிருத்தல் பற்றி இந்த ஆசாரியத்தன்மையானது அபரமோக்ஷமாயறியப் படுகின்றமையாலென்க. அங்ஙனமாயினும், ஆசாரியனுக்குத் தேகமிருத்தலால் பசுவோடு சமத்தன்மை நிகழுமெனில், ஆசாரியனுடைய தேகமானது சுத்தமாயையிலிருந்து உண்டானமயால் அந்தத் தேகம் அறிவை உண்டுபண்ணுமேயன்றி மோகத்தை உண்டுபண்ணாது. ஆதலால் பசுவோடு சமத்தன்மை நிகழாதென்க. பசுவினுடைய தேகமோவெனில், அறிவை உண்டு பண்ணாது மோகத்தையே உண்டுபண்ணும். எதனாலெனின், மோகத்தைச் செய்யும் அசுத்தி மாயையிலிருந்து உண்டானமையாலென்க.

 

      அங்ஙனமாயினும், ஆசாரியனுக்குப் பதியான பரம சிவனோடு சமத்தன்மை உண்டென்பது எவ்வாறு கூடுமெனில், கூறுகிறோம். அந்தப் பதியான பரமசிவன் தனக்கு அந்தரங்கமாயுள்ள தன்னுடைய சத்தி ரூபமான சரீரமிருப்பினும், பசுக்களுக்கு அனுக்கிரகஞ் செய்தற்பொருட்டு வெளிப் படையாயுள்ள சுத்த மாயா சம்பந்தமான வேறு சரீரத்தை விரும்புகிறான். அந்தச் சரீரம் கன்ம மற்றவனாயும், அதுபற்றி அசுத்தி மாயைக்கு மேற்பட்டவனாயுமிருக்கும் சுத்த போகத்திற்குரிய ஒருவனைச் சார்ந்தே இருக்கின்றது எவனைச் சார்ந்திருக்கின்றதோ அவனே ஆசாரியனாவன். ஆதலால் பதிக்கும் ஆசாரியனுக்கும் ஒரேவிதமான சரீர சம்பந்தம் இருத்தல் பற்றியும் ஒரேவிதமான தொழிலுடைமை பற்றியும் சமத்தன்மை உண்டென்பது நன்கறியத் தகுந்ததாகும். ஆதலினாற்றான் உலகத்தில் சிவனே குரு, குருவே சிவன் என அவ்விருவருக்கும் ஒற்றுமை கூறப்படுகின்றது.

      அவ்வாறாயின், ஆசாரியனுக்கும் பசுக்களுக்குக் கூறப்படுவது போல் பதியால் ஏவப்படும் தன்மை உண்டென்று நூல்களிற் கூறப்படுவது எவ்வாறு பொருந்துமெனில், அஃதுண்மையே. ஆயினும் குருவானவன் பசுக்கலைப்போல் துன்பமான போகங்களைத் தருங்காரியங்களில் ஈசுவரனால் ஏவப்படுகிறானில்லை. வேறேவ்விதமெனில், அந்த குருவானவன் பரமேசுவரனால் மிகத் தீவிரமான சத்திநிபாதத்தை அனுசரித்து நான்காவது தீக்ஷையாகிய ஆசாரியாபிஷேகத்தால் அனுக்கிரகஞ் செய்யப் பெற்றிருத்தலால் அனேகமாய்த் தனக்குச் சமானமாயிருத்தல் பற்றித் தனக்கு உரிமையான சுத்த போகத்திற்கு மாறு பாடில்லாத பிறருக்குப் பயன்றருந் தொழில்களிற்றான் ஏவப்படுகின்றான் என்றறிருந்து கொள்க. இவ்விதமான ஏவப்படுத் தன்மையானது பரமோக்ஷத்திற்கு மாறுபாடாகாது. எதனாலெனின், ஆசாரியத் தன்மையானது அதிகாரத்தினிறுதியில் சரீர நாசத்திற்குப் பின்னரே பூரணமான பரமோக்ஷத்தை அடையச் செய்கிறபடியாலென்க. இதுபற்றியே, ஆசாரியத்தன்மை அபரமோக்ஷமென்பது சித்தாந்தம்.

 

      எந்தத் சாதகத்தன்மையால் புருடர்கள் சித்தாந்த சாத்திரங்களைக் கேட்க அதிகாரமடைகின்றனரோ அந்தச் சாதகத்தன்மை எதுவெனில், கூறுகின்றோம். எந்தப் புருடனுக்கு மிகுதியான சத்திநிபாதம் நிகழ்ந்து அத்துவாக்களாறையும் சுத்தி செய்தலுடன் கூடிய மூன்றாவதான நிருவாண தீக்ஷை நிகழ்கின்றதோ அந்தப் புருடனே சாதகனாவன். அவனாற்றான் சித்தாந்த சாத்திரங்கள் அறியத்தகுந்தனவாகும்.

 

      அந்தத் சாதகத்தன்மை எவ்வாறுண்டாகுமெனில், யாதாவதொரு காலத்தில் பல பிறப்புக்களில் நிகழ்ந்த வாசனாவயத்தால் புண்ணிய காரியங்களைச் செய்கின்றவனாயும், யாதாவதொரு ஆச்சிரமத்தில் வசிப்பவனாயுமிருக்கும் யாதாவதொரு ஆன்மாவுக்கு யாதாவதொரு புண்ணிய நிகழ்ச்சியால் அநாதியாகவே அறிவை மறைத்திருக்கும் மலம் சிறிது பரிபாகமடையும் அடையவே மிகச் சிறிதான சத்திநிபாதம் நிகழும், நிகழவே, அந்தச் சத்தி நிபாதத்தை அனுசரித்ததாயும் சிவபெருமானிடத்துப் பக்தி சிரத்தை முதலியவற்றின் விளக்கத்தை உடையதாயும் சஞ்சித கன்மத்திற்குப் பரிபாகத்தை உண்டுபண்ணுவதாயும், சாஸ்திர விதிப்பிரகாரம் சிரஸில் சிவஹஸ்தத்தை வைத்தல் ரூபமாயுமுள்ள சமயமென்னும் யாதொரு தீக்ஷையானது, குருவழிபாடு கணபதி பூஜை சூரியபூஜை முதலியவை சித்திபதின் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ, அது, முதலாவதான தீக்ஷையாகும்.

 

      பின்னர், சமயதீக்ஷைபெற்ற ஆன்மாவுக்குச் சிறிது மலபரிபாகம் உண்டாகும். உண்டாகவே, சிறிது (மந்த) சத்திநிபாதம் நிகழும். அந்தச் சத்திநிபாதத்தை அனுசரித்தாயும், பத்தி முதிர்ச்சியுடன் கூடினதாயும் கன்ம முதலிய பாசங்களின் நாசத்தைச் செய்கிறதாயும், பிறப்பினாலுண்டான ஜாதி நசித்து வாகீசுவரி கர்ப்பத்தில் பிறத்தல் ரூபமாயும் உள்ள யாதொரு தீக்ஷையானது, மந்திரோபதேசத்தைப் பெறுதல் சிவலிங்க பூஜை செய்தல் முதலியவற்றில் உரிமை சித்திப்பதன் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ, அந்தத் தீக்ஷை இரண்டாவதான விசேட தீக்ஷையாகும்.

 

      பின்னர், தீவிர மலபரிபாகம் உண்டாகும். உண்டாகவே, தீவிரமான சத்திநிபாதம் நிகழும். அந்தச் சத்திநிபாதத்தை அனுசரித்ததாயும், முற்றுணர்வுத்தன்மை முதலிய ஆறு குணங்களும் விளங்கும்படிச் செய்வதாயும், கலை முதலிய ஆறத்துவாக்களின் சுத்தியால் மலம், மாயை, கன்மமென்னும் மூன்று பாசங்களுக்கும் நாசட்தைச் செய்வதாயுமுள்ள யாதொரு நிருவாண தீக்ஷையானது, நித்திய முதலிய சகல சிவதருமங்களையும் அனுட்டிப்பதின் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ, அது மூன்றாவதான தீக்ஷையாகும்.

 

      இந்த நிருவாணதீக்ஷையுடையவனே சித்தாந்த சாத்திரப்பொருள்களை அறியச் சமர்த்தனாகின்றான். எதனாலெனின், அவனே பசுத்தன்மை நீங்கினவனாய் சிவத்தன்மையின் விளக்கத்திற்கு உரியவனாகின்றானாதலாலென்க. முதலாவதும் இரண்டாவதுமான சமய விசேட தீக்ஷைகளைப் பெற்றவர் சித்தாந்த சாத்திரப் பொருள்களின் அறிவிற்கு உரியராகின்றனரில்லை. எதனாலெனின், அந்தத் தீக்ஷைகளை உடையார்க்குப் பசுத்தன்மை நீங்காமையாலென்க.

 

      அவ்வாறாயின், சமயதீக்ஷை பெற்றவனுக்கு முன்பிறப்பு ரூபமான சாதிச் சேர்க்கையிருத்தலால் பசுத்தன்மை நீங்காமை பற்றிச் சித்தாந்த சாத்திரங்களைக் கேட்பதில் அதிகாரமில்லை என்பது கூடும். விசேட தீக்ஷைபெற்ற புத்திரனுக்கு வாகீசுவரீ கர்பத்திலிருந்து பிறப்புண்டானமையின் சித்தாந்த சாத்திரங்களைக் கேட்பதில் அதிகாரமில்லை என்பது எவ்வாறு கூடுமெனின், அஃதுண்மையே. வாகீசுவரீ கர்ப்பத்திலிருந்து உண்டாகும் பிறப்பு ரூபமான பிறவி மாத்திரம் சிவத்தன்மையை விளக்குகிறதில்லை வேறு என்னையோவெனில், பசுத்தன்மை என்னும் மலத்தின் பரிபாக விசேடத்தால் சாதிக்கத் தகுந்ததாயும், வேறு காலத்தில் நிகழக்கூடியதாயுமுள்ள சமஸ்கார விசேடமும் சேர்ந்து தான் சிவத்தன்மையை விளக்குவதாகும் எதுபோலுமெனின், அந்தணப்பெண் வயிற்றுப் பிறந்த அந்தணனொருவனுக்கு அப்பெண்ணினிடத்துண்டான பிறப்பு மாத்திரத்தால் மறைகளோதுதற்குத் தகுதியான அந்தணத்தன்மை சித்திக்காமல் வயதின் முதிர்ச்சியால் அடையத்தகுந்த உபநயன முதலிய சம்ஸ்காரங்களுஞ் சேர்ந்து மறைகளோதுதற்குத் தகுதியான அந்தணத் தன்மை சித்திப்பது போலுமென்க. இவ்வாறே விசேட தீக்ஷையால் வாகீசுவரீ கர்ப்பத்தில் பிறப்படைந்த புருடனிடத்தில் நீண்டகாலமாய்ச் சிவத்தன்மை விளங்கவொட்டாது செய்யும் மலத்தின் தன்மையை விலக்கிச் செய்யப்படும் நிருவாண தீக்ஷையானது, சித்தாந்த சாத்திர ஞானத்துக்கு உரிமையான சாதகத்தன்மையைத் தருமென அறிந்து கொள்க.

 

      அவ்வாறாயின், இத்தன்மையினையுடைய சாதகனுக்கு மலம் மாயை முதலிய எல்லாப் பாசங்களும் நிருவாண தீக்ஷையினாலேயே ஒழிவடைகிற படியால் ஆசாரியத்தன்மை பயனற்றதாகுமேயெனில், ஆகாது தீக்ஷைபெற்ற ஆன்மா அந்தந்தச் சமயத்தில் பாசமற்றவனாயிருப்பினும், தீக்ஷைக்குப்பின் செய்யக்கூடிய அபிஷேகத்தினாற்றான் அந்த ஆன்மாவிற்குச் சிவத்தன்மையின் விளக்கம் நிகழ்கின்றது. அந்த அபிஷேகமும் சிவபூஜையோடு இடையறாத சித்தாந்த சாத்திரங்களின் பயிற்சியினாற்றான் முடிவையடைகிறது. எது போலுமெனில், உலக்த்தில் ஒருவனுடைய நோயானது வைத்திய சாத்திரங்களின் பயிற்சிமாத்திரத்தால் நிவிருத்தியடையாமல் அச்சாத்திரப் பயிற்சியோடு பத்தியத்துடன் கூடிய மருந்தை உட்கொண்டே நிவிருத்தி யடைகிறது போலுமென்க இவ்வாறே சாதகனாலடையத்தகுந்த பரமோக்ஷட்த்திற்கு வழியாயுள்ள அபரமோக்ஷரூபமான அபிஷேகமானது ஆசாரியத்தன்மைக்கு உரியதாகும்.

 

      ஶ்ரீ சூரிய சிவாசாரியார் இயற்றிய சைவ சித்தாந்த பரிபாஷை தமிழ் மொழி பெயர்ப்பு நூலில் முதலாவது உபோத்காத பரிச்சேதம் முற்றிற்று.

 

இரண்டாவது *பிரமாண பரிச்சேதம்.

      [* பிரமாணம் – அறிவை உண்டுபண்ணுங்கருவி]

சித்தாந்த சாத்திரங்களான சிவாக மங்கள், சரியை கிரியை யோகம் ஞானமென்னும் நான்கு பாதங்களை உடையனவாம். அந்த நான்கு பாதங்களுள் முதன்மையானது ஞானபாதமேயாகும். அந்த ஞானபாதத்தில் சைவ சம்பந்தமான பொருள்கள் நிரூபணஞ் செய்யப்படுகின்றன. ஏனைய யோகபாதம் கிரியாபாதம் சரியா பாதங்களில் சைவ சம்பந்தமான பொருள்கள் பலனைத் தருமுறையிலும் பலனை அடையும் முறையிலும் உபயோகப் படுகின்றன.

 

      சைவ சம்பந்தமான பொருள்களாவன:- பதி பசு பாசங்களென்னும் வேறுபாடுடைய மூன்று பொருள்களாகும். இம்மூன்றைத்தவிர வேறு பொருள்களிருப்பினும் விசாரிக்குமிடத்து அவையனைத்தும் இம் மூன்றிலடங்கு வனவாகும்.

 

      அவ்வாறயின், பதிமுதலிய பொருள்களுண்டென்பதில் பிரமாண மென்னையோ வெனில், சித்தாந்தங்களான சிவாகமங்களே பிரமாணமென்று நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது என்க. சைவர்கள், பிரத்தியக்ஷம் அனுமானம் ஆகமமென்னும் மூன்று பிரமாணங்களை ஒத்துக்கொண்டிருக்கவும், சித்தாந்தமென்னும் ஆகமப்பிரமாணத்திற்கு மாத்திரம் பிரமாணத் தன்மை கூறியது எவ்வாறு பொருந்துமெனில், அஃதுண்மையே, பிரத்தியக்ஷம் அனுமானம் ஆகமமென மூன்று பிரமாணங்களிருப்பினும், அவற்றுள், பிரத்தியக்ஷம் அனுமானம் இரண்டும் ஆகமப்பிரமாணத்தைத்தழுவியே உண்டாகின்றபடியால், அந்த ஆகமப்பிரமாணமே முதன்மையாயிருத்தல் பற்றி அதற்கு மாத்திரம் பிரமாணத்தன்மை கூறப்பட்டதென்க.

 

      அஃதெவ்வாறெனில், “இந்தப் பொருள்கள் ஆப்தர்களிடமிருந்து கேட்கத்தகுந்தன. பின்னர் யுத்திகளால் சிந்தனை செய்யத்தகுந்தன. மலபரிபாகத்தை விட்டுப்பிரியாத சத்திநி பாதத்தினால் பரம்பொருளை நாடும் மனமுடையவர்களால் யோகத்தின் வழியாய் தெளியத்தகுந்தன” இவ்வாறு இரத்தினத் திரயத்தில் † ஶ்ரீ கண்டாசாரியர் கூறியுள்ளார். [† சுலோகம் க.] ஆதலின், சித்தாந்த சாத்திரங்களுக்கே ஆப்தவக்கியத்தன்மை யிருக்கிறபடியால் அதுவே முதன்மையான பிரமாணமாகு மென்க.

 

      ஆப்தனென்பவன் உண்மையான எல்லாப்பொருள்களையும் உபதேசிப்பவனாவன். இந்த ஆப்தத்தன்மை நித்தியனான பரமசிவனிடத்திலும் அவனால் அனுக்கிரகஞ் செய்யப்பெற்ற வேறு புருடர்களிடத்திலும் இருக்கின்றது.

 

      வாக்க்கியமாவது, தகுதியான பொருள் விசேடங்களை அறிவிப்பதில் நோக்கமுடைய வினைகளை முடித்துக்காட்டும் சொற்கூட்டங்களேயாம். அந்தச் சொற்கள் எவையெனில், அனாதியே மலமற்றவராயிருக்கிறார் பரமேசுவரன் என்னும் தொடர்புடைய காமிகாகமத்தின் முதற்சூத்திர முதலியனவேயாகும்.

 

      இவ்வாறாதலின், அநேக வாக்கியார்த்தங்களின் வரிசைகளால் மிகவும் ஆப்தனான பரமசிவனால் செய்யப்பட்ட காமிக முதலிய ஆகமங்களுக்கே பிரமாணத்தன்மை சித்தித்ததென்க. ஆதலினாற்றான் செல்லுகிறது என்னும் பொருளான கோ என்னுஞ்சொல் இடுகுறிப்பெயராய் பசுவையும், சேற்றில் முளைத்தது என்னும் பொருளைத்தரும் பங்கஜமென்னுஞ் சொல் இடுகுறிப்பெயராயும் காரணப்பெயராயும் தாமரையையும் உணர்த்துமாறு போல, பூர்வபக்கமான ஏனைய சாத்திரங்களை அங்கமாகக்கொண்டு அங்கியாக விளங்கும் இந்தச் சித்தாந்த சாத்திரங்கள் இடுகுறியினாலும் காரணத்தினாலும் சித்தாந்த மென்னுஞ் சொல்லுக்குப் பொருளாய் விளங்குந்தன்மை உலகத்தில் பிரசித்தமாயிருக்கின்றது. (அஃதாவது சித்தாந்த மென்னுஞ் சொல் இடுகுறியாலும் முடிந்தமுடிபு என்னும் காரணத்தாலும் சைவ சாத்திரங்களை உணர்த்து மென்க.) இந்தச் சித்தாந்த சாத்திரங்களையே சிவதேஜசுடன் கூடி ஐம்பொருளிகளை யடக்கிய மகான்கள் கேட்கிறார்கள். இந்த மகான்களான ஆசாரியர்களிடமிருந்தே நெறிதவறாமல் கேட்கப்பட்ட பதார்த்தங்கள் விஷயத்தில் சாதகாசிரியர்களுக்கு ஆழ்ந்த நிச்சயம் உண்டாவதன் பொருட்டுத்தகுதியானயுத்திகளால் தொடர்ந்த சிந்தனை செய்தல் நேரிடும். அதுவே மனனமென்று கூறப்படும். அந்த மனனமே இலிங்கபராமரிசமென்னும் அனுமானமாகும். (இலிங்கபராமரிச மெனினும் குறி ஆராய்ச்சி யெனினு மொக்கும்).

 

      இலிங்கமாவது, மறைந்திருக்கும் பொருளின் அறிவை உண்டுபண்ணும் பொருளாகும். அஃதாவது அடுக்களையிலிருக்கும் அக்கினியை அறிவிக்கும் அடையாளமாகிய புகைபோல்வன.

 

      பராமரிசமாவது, துணிபொருளோடு இன்றியமையாது நீங்காமலிருக்குந்தன்மையை உடையதாக முன்னரே அறியப்பட்ட ஏதுவைக்கொண்டு துணிபொருளைச் சோதித்தல்.

      இந்தச் சோதனையானது யுத்தி என்றும் உபபத்திஎன்றுங் கூறப்படும் பொருத்தமான தருக்கத்தினால் நிச்சயிக்கப்படுகிறது. அஃதாவ்து, அடுக்களையில் தீயிருக்கின்ற தென்று ஒருவன் சொல்லவே தெருவிற்செல்லும் புருடன் தீயுடன் இன்றியமையாத புகையை அடுக்களையிற் பார்த்து தீயில்லாவிடில் புகையுமிராது என்னும் யுத்திரூபமானதருக்கத்தால் தீயை நிச்சயித்தலாம்.

 

      அவ்வாறாயின், சத்தத்தைக்கேட்ட பின்னுண்டான அறிவு ஐயத்திற்கு இடமாகவே யிருக்குமாதலின், கேட்டபின்னர் மனனம் எவ்வாறு சம்பவிக்குமெனில், அவ்வாறன்று. வேறென்னையோவெனில், ஆசிரியனுடைய சொல்லில் நம்பிக்கை யிருக்குமாயின் கேட்பவனுக்குக் கேட்ட பொருளில் மனனம் நிச்சயமாயுண்டாகு மென்க.

 

      ஆயின், கேட்பதற்கும் மனனஞ்செய்வதற்கும் வேறுபாடெவ்வாறெனில், அவ்விரண்டற்கும் ஒரு பொருளே விடயமாகயிருந்தபோதிலும் கால வேறுபாட்டால் புருடனுடைய புத்திவிருத்திக்கு வேறுபாடுண்டாகு மென்க இந்த முறையினால் அனுமானமானது சத்தப்பிரமாணத்திற்குப் பின்னுண்டாவது பற்றிச் சத்தப்பிரமாணத்தைத் தழுவி உண்டாகிற தென்பது நிச்சயஞ் செய்யப்பட்டது.

 

      இனி, சத்தப் பிரமாணம் அநுமானப் பிரமாணமென்னும் இரண்டு பிரமாணங்களால் சித்தித்தபொருள் காட்சிப்பட்டாலன்றி ஒரு பொழுதும் சாதகனுக்கு அமைதி சம்பவியாது. எதனாலெனின், பரோக்ஷ ஞானமானது (பிரத்தியக்ஷமற்றஞானமானது) இச்சிக்கப்பட்ட பொருளை அடைதற்குக் காரணமாகாமையாலென்க. ஆகையால் கேட்டுச் சிந்திக்கப்பட்ட பொருளினுடைய அபரோக்ஷஞானம் (காட்சியறிவு) உண்டாகும் பொருட்டு நீர்ப்பிரவாகம்போல் தியானம் உண்டாகிறது. எதனாலெனின், அவ்வித சிந்தனையின்றிப் பொருளின் சம்பந்தம் உண்டாகாதாகையா லென்க. இவ்வாறு தியானத்தின் மிகுதியால் அடையப்பட்ட பொருளின் காட்சியே பிரத்தியக்ஷ மென்று கூறப்படுகின்றது. அந்தப் பிரத்தியக்ஷப் பிரமாணமும் முன்னர்க் கூறப்பட்ட சத்தப்பிரமாணம் அனுமானப் பிரமாணமென்னும் இரண்டற்குப் பின்னுண்டாகின்றமையால் சத்தப் பிரமாணத்தைத் தொடர்ந்து நிகழ்கிறதென்பது விளக்கமாயிற்று.

 

      இனி, இம்மூன்று பிரமாணங்களுக்கும் † பொது விலக்கணம் சிறப்பிலக் கணங்களென்னும் இரண்டிலக்கணங்களும் காட்டப்படுகின்றன.

      [† பிரமாண இலக்கணம் பொது. ஒவ்வொன்றின் தனியிலக்கணம் சிறப்பு.]

 

      அவ்விரண்டனுள், எல்லா அறிபவரிடத்துஞ் சமவாய சம்பந்தத்தி லிருப்பதாயும் பொருள்களை யறிவதாயுமுள்ள அறிவே பிரமாணத்தின் பொதுவிலக்கண மாகும். அந்த இலக்கணம் தீக்ஷையினால் பாசங்கள் நீங்கப்பெற்ற ஆன்மசிற் சத்தியில் நிகழ்கின்றது. பாசச்சேர்க்கையுடைய பசுசைதன்னியத்தில் நிகழ்கிறதில்லை. எதனாலெனின், பசுசைதன்னியமானது மாயையிலிருந்து தோன்றிய கலை முதலியவற்றால் விளக்கஞ் செய்யப்பெற்றிருத்தலின் முற்றும் மயக்கரூபமாயிருக்கு மாதலாலென்க. உண்மையான பொருளின் தோற்றத்துக்குக் கூறப்பட்ட உண்மையறிவுத் தன்மையானது சந்தேகத்தோற்றம் விபரீதத் தோற்றங்களில் உண்டாகிறதில்லை. ஆகவே, உண்மை யறிவுக்குப் பற்றுக்கோடாயிருப்பது ஆன்மா. உண்மையறிவிற்கு விடயமாயிருப்பது பொருள். இந்த முறையில் நம்மால் கூறப்பட்ட பிரமாண இலக்கணம் சுத்தான்மசைதன்னியத்தில் நிகழ்கிறபடியால் அந்தச் சுத்தான்ம சைதன்னியத்திற்கே பிரமாணத்தன்மை உண்டென்பது கண்டு கொள்க. (சைதன்னியம் -அறிவு.)

 

      அவ்வாறாயின், பசு சைதன்னியத்திற்கும் சிற்சில ஆகமங்களில் பிரமாணத்தன்மை உண்டென்பது கூறப்பட்டிருக்கின்றதேயெனில், அஃதுண்மையே, சிவாகமங்களென்னுஞ் சித்தாந்த சாத்திரம் எல்லாப்பொருள்களையும் அறிவிப்பது ஆதலால் நியாய சாத்திரத்தை அனுசரித்து லெளகிகப் பிரமாணமாக அவ்வாறு கூறப்பட்டதென்றறிந்துகொள்க.

 

      ஆயின், இங்கே கூறப்பட்ட இந்த இலக்கணத்தால் பொருள்களை அறியும் பிரமதியான * அறிவே பிரமாணமெனக் கூறப்பட்டதாகின்றதேயெனில், அவ்வாறன்று. [* பயன் கரணமாகின்றதே யென்பது.] “சத்தியைத்தவிர கரணம் வேறில்லை” என்னும் ஆகமத்தால் அறியத்தகுந்த பொருள்களிலும் செய்யத்தகுந்த பொருள்களிலும் சத்தியே ஆன்மாவிற்கு நெருங்கின சாதனமாக நிச்சயிக்கப்படுகிறது. ஆயின், கருத்தாவிற்கும் சாதனத்துக்கும் பயன் ஏதேனும் கூறவேண்டியது இன்றியமையாதது. அப்பயன் எதுவெனில், கூறுகிறோம். பாசம்வித்து (பிறபொருளையறியும் அறிவு) ரூபமான அந்தச் சத்தியானது சுவசம்வித்து (தன்னையறியும் அறிவு) ரூபமான கருத்தாவினிடத்தில் தாதான்மியமாயிருக்கிறதென்பது மகான்களின் கொள்கை. பாசம்வித்தாயிருக்குந்தன்மையாவது விடயங்களில் எதிர்முகமாய் நின்று அந்த விடயங்களை ஆன்மாவிற்கு விளங்கும்படி செய்தல். (அதாவது பொருள்களைப்பற்றி நிகழும் அறிவு என்ற படியாம்.) இந்த அறிவை ஆன்மாவினுடைய சத்தியைவிட வேறு பொருளாகக்கூறுமிடத்து அது கருத்தாவினது தருமமாகாதென்க. இந்தச் சத்தியானது வியாபகமாகையால், பொருளினிடத்தும் கருத்தாவினிடத்தும் நிகழுமுறையில் இரண்டுவிதமாக விளங்குகின்றது. ஆகவே அவற்றுள், பொருளினிடத்து விளங்குஞ் சத்தியே கரணத்தன்மையை யடைகின்றது. கருத்தாவினிடத்துத்தாதான்மியமாய்ப் பொருளின் அறிவைத் தொடர்ந்து இதனை அறிகின்றேனென நிகழுஞ் சத்தியே பயனாகும். (அஃதாவது பொருள்களை அறியுங்கால் அவ்வறிவுகரணமும், அந்தப் பொருள்களின் அறிவு தன்னிடத்து நிகழுங்கால் அவ்வறிவு பயனுமாம் என்றவாறாம்.) ஆதலின் ஒரு சத்திக்கே விடயபேதம் பற்றிக் கரணமாயிருக்குந் தன்மையும் பயனாயிருக்குந்தன்மையும் உளவாதல்பற்றிக் குற்றமில்லையென்க.

 

      அவ்வாறாயின், ஆன்மாவும் சத்தியினுடைய சமவாய சம்பந்தத்துடன் கூடியிருத்தலால், சத்திக்குக் கரணமாயிருக்குந்தன்மையும் பயனாயிருக்குந் தன்மையும் இருப்பதுபோல, ஆன்மாவிற்கும் அநேகத்தன்மை நிகழுமேயெனில், நிகழாது. எதனாலெனின், ஆன்மாவானது தன்னிடத்திலேயே நிலைத்திருத்தலால், விடயத்திற்கு எதிர்முகமாகி அந்த விடயத்தை விளக்குஞ்செய்யாமைலென்க. (இதன்கருத்தாவது, சித்திக்கு வியாபாரபேதமேயன்றி ஆன்மாவிற்கு வியாபார பேதமில்லை. ஆதலால் வியாபார பேதத்தால் சத்தி பலதிறப்படுதல்போல ஆன்மா பலதிறப்படுதலில்லை யென்று கூறியவாறாம்.)

 

      இவ்வாறன்றி, பிரமாணத்துக்குப் பயனாயிருக்குந்தன்மை விடயங்களின் வியாபாரங்களுக்கே உண்டென்று கூறுதலும் ஒன்று; அசேதனப் பொருள்களுக்குச்சேதனப் பொருளால் ஏவத்தகுந்தன்மை இன்றியமையாதிருத்தலாலென்க.

 

      அவ்வாறாயின், சைதன்னியமானது ஞானக்கிரியா ரூபமாயிருக்கிறது என்னும் மிருகேந்திர சுருதியால் ஞானக்கிரியா ரூபமான சத்திக்குக் கிரியாம்சத்தில் கரணத்தன்மை உண்டென்பது பொருந்தும், ஞானாம்சத்தில் எவ்வாறு பொருந்துமெனில், கூறுகிறோம். விடயத் தோற்றத்தைத் தடுக்கும் தடையின் நாசத்தால் நிகழக்கூடிய விடய அறிவின் வியாபாரத்திற்கு அனுகூலமான தகுதியின் விசேடத்தைச் செய்தலே பயன் என்று சொல்லுகிறோம். (அஃதாவது, தடையை நீக்குதல் கிரியாம்சத்தாலும் விடயத்தோற்றம் ஞானாம்சத்தாலும் நிகழ்தலின், இரண்டம்சங்களுங் கரணமெனவே பட்டு நீக்குதலும் அறிதலும் பயன் என்றவாறாம்.)

 

      இனி, * பிரமைக்குக் கரணம் பிரமாணம் என பிரமாண இலக்கணங்கூறுவதில் குற்றமென்னையெனில், நிருவாண தீக்கைபெற்றுச் சித்தாந்த சாத்திரம் பயிலும் சாதகனுடைய அறிவிற்கு ஏது சப்தம் முதலியன கரணமாயிருத்தலின் பிரமாணத்த்ற்குக் கூறிய இலக்கணத்திற்கு அந்த ஏது முதலியவற்றில் † அதிவியாத்திக்குற்றம் நிகழும். ஆதலால் சுத்தான்மாவினிடத்துச் சமவாயசம்பந்த த்திலிருக்கும் சிற் சத்தியே பிரமாணமென்பது சித்தித்தது.

 

      [* பிரமை – உண்மையறிவு, கரணம் – சாதனம்.

      † அதிவியாத்தி – ஒன்றற்குக்கூறிய இலக்கணம் மற்றொன்றிலும் இருப்பது.]

      இவ்விதமான பிரமாணம், காட்சி அனுமானம் சப்தம் என்னும் வேறுபாட்டால் மூன்று வகைப்படுகின்றது. அம்மூன்றனுள், காட்சியாவது வேறொன்றையும் விரும்பாது எல்லாப் பொருள்களையும் விளக்கஞ்செய்வது. அது முத்தான்மாவினுடைய அறிவாகும். அந்த முத்தான்மாவினுடைய அறிவானது சிவசத்தியால் மலசத்தியின் தடைமுற்றும் நாசஞ்செய்யப்பட்டமையால் மேலுங் கீழுமுள்ள எல்லாப்பொருள்களையும் அறிவதில் கலை முதலிய பிற பொருள்களின் துணைகள் ஒன்றையும் விரும்புகிறதில்லை. எதனாலெனின், கலை முதலியன மோகத்தை உண்டு பண்ணுவனவாகையால் அறிவினுடைய ஏகதேச பாகத்தை விளக்கஞ்செய்வதில் மாத்திரம் சாமர்த்தியம் உடையனவாக இருக்கிறபடியாலென்க.

 

      அவ்வாறாயின், * நாதமுதலியவற்றை விரும்பும் அபரமுத்தனுடைய அறிவில் இங்கே கூறப்பட்ட காட்சி இலக்கண மின்மையால் இலக்கியத்தின் ஏகதேசத்தில் இலக்கண மின்மை என்னும் அவ்வியாத்திக்குற்றம் நிகழ்கிறதேயெனில், நிகழாது. எதனாலெனில், பசுக்களுக்கு அனுக்கிரகஞ்செய்வதின் பொருட்டு அபரமுத்தனிடத்துக் கலை முதலிய பொருள்களின் ஒடுக்கதிற்குப் பின்னர்த் தொடரும் நாதமுதலிய துணைபந்தமாகாது ஆதலாலென்க.

 

      அவ்வாறாயினும், அசுத்தமாயை போலச் சுத்தமாயையும் பாசமென்று ஆகமங்கள் கூறுகின்றன. கூறவே, அந்தச் சுத்த மாயையின் காரியமான் நாதத்திற்குப் பந்தத்தன்மை இல்லையென்றால் ஆன்மாவிற்குச் சம்சார நிலையில் அசுத்தமாயா காரியங்களைப் பிரோகஞ்செய்யுஞ் சுத்தமாயை உபசாரமாகப் பாசமென்று கூறப்பட்டது. எதுபோலுமெனின், பரமசிவனுடைய சிற்சத்தியான திரோதான சத்தியை உபசாரமாகப் பாசமென்று கூறுவதுபோலுமென்க. ஆயினும், தீக்ஷிதனான ஆன்மாவினறிவில் முத்திநிலையில் அசுத்தமாயை ஒடுங்கியிருக்கின்றமையால் சுத்தபோகத்தைக் கொடுக்கும் பகவதியான சுத்தமாயைக்குப் பந்தத்தைச் செய்யுந்தன்மை உண்டென்பதற்கு இடமில்லை. அவ்வாறயின் மலநீக்கமுடைமையால் பிரத்தியக்ஷமாகச் சித்தித்த முத்தான்மாவினுடைய அறிவிற்குச் சுத்தமாயையின் காரியமான நாதத்தைத் துணையாகக்கருதுவது எதற்காகவெனில், கூறிகிறோம்.

 

      [* நாதமுதலியன – சுத்தமாயாகாரியமாகிய சிவதத்துவங்கள்.]

      பிரத்தியக்ஷய பிரமாணம் சவிகற்பம் நிருவிகற்பமென இருவகைப்படும். அவ்விரண்டனுள், நிருவிகற்பப்பிரத்தியக்ஷமாவது, உண்மையான சுத்தப்பொருளை விளக்கஞ் செய்வது. அஃதுயாதெனில், பரமுத்தனுடைய அறிவேயாம். அந்தப் பரமுத்தனுடைய அறிவோ, நிரதிகார தீக்ஷையினால் சகல உலகவியவகாரங்களும் நீக்கப்பட்டிருத்தலால், பெயர் ஜாதி முதலியவற்றின் சேர்க்கைரூபமான விகற்பக்கூட்டத்தை விட்டு எல்லாப் பொருள்களையுந் தனது சொரூபமாகவே விளங்கச்செய்கிறது. எதனாலெனின், இயல்பாகவே சித்தித்துள்ள சொரூப விளக்கமுடைய அந்தப்பரமுத்தனுடைய அறிவில் கற்பிதமான பெயர் முதலியவற்றின் சேர்க்கைக்குரிய தோற்றம் நிகழாதாகையாலென்க.

 

      சவிகற்பப் பிரத்தியக்ஷமாவது, விசேடணத்துடன் கூடிய பொருளைத் தோற்றுவிக்கும் அறிவு. அது யாதெனில், அபரமுத்தனுடைய அறிவாகும். அந்த அறிவானது சாதி ரச தீக்ஷைபால் சித்திக்கப்பட்ட நிர்மலத் தன்மையுடையதாயிருத்த நின், நம்மால் இந்தப்பசு அனுக்கிரகஞ்செய்யத்தகுந்தது என்னும் வியவகாரத்தை மேற்கொண்டு பசுத்தன்மையைச் செய்யும் மலத்தின் பரிபாகத்திற்குத் தக்கவாறு நிகழும் தீக்ஷையின் வேறுபாட்டிற் கேற்பச் சேர்க்கத்தகுந்த இடவேறுபாடு முதலியவையாயும் பெயர் சாதிமுதலிய பிரதானங்களையுடையன வாயுமிருக்கும் அநேக விகற்பங்களை விடயங்களாகவுடையது. எதனாலெனின், உலக காரியமானது அதிகாரத்தை அங்கமாக உடையதாதலாலென்க.

 

      சவிகற்ப ஞானமானது நாதமுதலியவற்றின் சேர்க்கையின்றிச் சித்திக்காது. நாதமானது இந்தச்சொல்லுக்கு இதுதான் பொருள் என்னும் அறிவை மாத்திரம் உண்டுபண்ணுமேயன்றி சவிகற்ப ஞானத்திற்குச் சாதனமென்பது எவ்வாறு கூடுமெனில், இந்தச் சொல்லிற்கு இது பொருளென்னும் அறிவிற்கு விஷயமான பொருளிற்றான் சாதிமுதலிய விகற்பங்களின் அறிவு நிகழுமாகையால் கூடுமென்க.

 

      அவ்வாறாயின் நாதத்தைத் துணையாகக் கொண்டிருக்குந் தன்மை சவிகற்பஞானத்தன்மையென்று கூறப்பட்டதாயிற்று. இந்த இலக்கணமானது, சத்தப்பிரமாண † அனுமானப்பிரமாணங்களிடத்தும் சமமாயிருக்கின்றமையால் அவற்றின்றும் பிரத்தியக்ஷப் பிரமாணத்திற்கு விசேட மென்னையெனில், கூறுகிறோம். [† அனுமான மென்றது இவ்விடத்துப் பிறர் பொருட்டனுமானத்தை]

 

      நாத மென்பது பரநாதம் அபரநாதமென இருவகைப்படும். அவ்விரண்டனுள், பரநாதமானது பொதுவாயுள்ளது; புஅவன சம்பந்தமான தத்துவங்களுக்குப் பற்றுக்கோடாயிருப்பது. அபரநாதமானது சிறப்பாயுள்ளது; புரியட்டகதேகத்திற்குப் பற்றுக் கோடாயிருப்பது. முதலாவதான பரநாதம் வியாபகமானபடியால் பிரத்தியக்ஷப் பிரமாணத்திற்குத் துணையாயுள்ளது. இரண்டாவதான அபரநாதம் அளவுக்குட்பட்டிருத்தலால் சப்தானுமானங்களுக்குத் துணையாயுள்ளது.

 

      அவ்வாறாயின், அபரமுத்தனுக்குப் புரியட்டகதேகமின்மையால் அவனுடைய அறிவு, புத்திவிருத்தியின் சேர்க்கை யற்றிருத்தலால் அந்த அறிவிற்கு இங்கே கூறப்பட்ட விகற்பஞானம் எவ்வாறுண்டாகுமெனில், அங்ஙனமன்று. தீக்ஷைக்குப்பின் அசுத்தமாயாகாரியங்கள் இல்லையாயினும் சுத்தமாயா காரியங்களாகிய விரும்பப்பட்ட எல்லாத்தத்துவங்களும் உண்டென்று கேட்கப்படுகிறபடியால் அபரமுத்தனுக்கும் புரியட்டகதேகமுண்டென்க.

 

      இவ்வாறு பரமசிவசத்தியின் சகாயத்தால் மோகத்தைச் செய்யும் கலை முதலிய தத்துவங்களைத் துணையாகக்கொள்ளாததாயும், பசுப்பொருளை விடயமாகக்கொண்ட தாயுமுள்ள ஞானமேபிரத்தியக்ஷப்பிரமாணமென்று அதனிலக்கணஞ் சாதிக்கப்பட்டது. பெரியோர்களும் “ஆன்மாவானவன் ஆவரணம் (மறைப்பு) நீங்கப்பெற்றவனாய் சிவசூரியனுடைய சத்திரூபமான கிரணங்களால் உபகாரஞ்செய்யப்பெற்று ஞானக்கண்ணால் சத்தியுடன் கூடச் சிவனைப்பார்க்கின்றான்” என்ற கூறியிருக்கின்றமை காண்க.

 

      இனி அனுமானப்பிரமாணம் யாதெனில், கூறுகிறோம். சித்தாந்த சாத்திரங்களால் கேட்கப்பட்ட பொருள்களை அந்தச் சித்தாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட ஏதுக்களைக்கொண்டு நன்றாய் ஆராய்தல் அனுமானமாகும். அது சித்தாந்த சாத்திரத்தை முறையாகக் கேட்ட சாதகனுடைய அறிவேயாகும். ஆராயும் முறைவருமாறு:-

 

      “சிவாகமங்களுள் பதார்த்தங்கள் எனப்படுவனவற்றுள், பதிபசுபாசங்களென்று முறையாக மூன்று பதார்த்தங்கள் முக்கியமாகக் கூறப்படும். அம்மூன்றனுள், பதியாவது பரமசிவன். பசுக்களாவன ஆன்மாக்கள். பாசங்களாவன ஆணவம், திரோதனசத்தி, கன்மம், அசுத்தமாயை, சுத்தமாயை என்னும் ஐந்து பொருள்கள். இவ்வாறு கூறும் * தத்துவப் பிரகாசிகை முதலிய நூல்களிலுள்ள வாக்கியங்களை சாதகனானவன் முறையாக ஆசிரியன் முகமாகக் கற்ற்சுச் சிறிது காலத்தில் சிரவண பரிபாகம் நிகழ்ந்து கற்ற அவ்வாக்கியங்களின் பொருளின் நிச்சயம் அவனுக்கு உண்டாகும். உண்டாகவே, அப்பொருள்களின் அனுபவம் சித்திப்பதற்கு, யுத்திகளை அறிவிக்கும் வேறுவாக்கியங்களையும், தேகமுதலிய பொருள்கள் காரியத்தன்மையுடையன; இந்தக்காரியத்திற்கு உத்தமனான கருத்தாவை அனுமானத்தினால் நிச்சயக்கின்றோ மென்னும் பொருள் கொண்ட வாக்கியங்களையும், பூமிமுதலியன காரியமென்றும் அதற்குக்கருத்தா பரமசிவனென்றும் இந்தக்காரியத்தால் நித்தியதிருத்தனான கருத்தாவுக்கு உபயோகமில்லை; இந்தக்காரியங்கள் சடப்பொருளாதலால் அது தன் பொருட்டும் உபயோகமில்லை; கருத்தா கெளரவ குணமுடையவராதலால் உபயோகமற்ற காரியங்களைச் செய்ய மாட்டார்; இவ்வாறு கருத்தாவுக்கும் காரியப்பொருளுக்கும் அப்பொருளாலாகிய உபயோகம் இல்லையென்பது பெறப்படவே பாரிசேடப்பிரமாணத்தால் வேறொரு அறிவுடைப்பொருளுக்கு உபயோகமென்று சொல்லல் வேண்டும்; அப்பொருளே க்ஷேத்ரக்ஞனென்றும் ஆன்மாவென்றும் கூறப்படும் என்னும் பொருள் கொண்ட மிருகேந்திராகம வாக்கியங்களையும், உலகதர்மமான யாதொரு காரியத்தன்மை யென்னும் ஏதுவால் உலகத்திற்குக் கருத்தா அனுமானத்தால் நிச்சயிக்கப்படுகிறாரோ அந்தக்காரியத்தன்மை என்னும் ஏதுவினாலேயே உலகத்திற்கு முதற்காரணமாக மாயையும் உண்டென்று அனுமாஞ் செய்கிறோம்; நூல் முதலிய முதற்காரணமின்றி ஆடைமுதலிய காரியந்தோன்றாதாகையால் என்னும் பொருள் கொண்ட மிருகேந்திர வாக்கியங்களையும், அந்தக்குருவினிடமே அறிந்து, அவ்வாக்கியங்களாலறியப்பட்ட ஏதுக்களால் பக்கமான உலகத்தைச்சார்ந்திருக்கும் மூன்று பொருள்களையே நிச்சயிப்பதற்கு ஆராய்ச்சி செய்கின்றான். [* தத்துப்பிரகாசிகை ரு-வது சுலோகம்.]

 

      உபதேச மாத்திரத்தால் கேட்டி நிச்சயிக்கப்பட்ட பொருளை ஆராய்ச்சி செய்யாவிடில் உபதேசிக்கப்பட்ட அகப்பொருள் அனுபவத்திற்கு விஷயமாகாது. ஆகையால் ஆராய்ச்சியின்றி அனுபவம் அமையாதாகும்.

 

      கருத்தா, போகத்தை அனுபவிப்பது, (போக்தா) முதற்காரணம், என்னும் மூன்று பொருள்களையும் சாதிக்கும் அனுமானம் மூன்றினும் உலகமேபக்கமாகும். காரியத்தன்மை ஏதுவாகும். கருத்தாவுடன் கூடியிருக்குந்தன்மை போக்தாவுடன் கூடியிருக்குந் தன்மை முதற்காரணத்துடன் கூடியிருக்குந்தன்மை என்னும் இம்மூன்றும் துணியப்படும் பொருளாகும். (ஆகவே, உலகம் கருத்தாவுடன் கூடியது; காரியப்பொருளாகையால், கடம் போலுமெனவும், உலகம் போக்தாவுடன் கூடியது; காரியப் பொருளாகையால், கடம் போலுமெனவும், உலகம் முதற்காரணத்துடன் கூடியது; காரியப்பொருளாகையால்; கடம் போலுமெனவும், இவ்வாறு மூன்று வகையாக அனுமானங்கள் பிறந்தவாறு கண்டுகொள்க.)

 

      பக்கத்தன்மையாவது காட்சிக்குப் புலப்படாத துணிபொருள் ரூபமான தருமத்தை உடைத்தாயிருக்குந் தன்மை. இத்தன்மை முன்னர்க்கூறப்பட்ட பக்கமான உலகத்தில் இருக்கின்றமை காண்க. எவ்வாறெனின், உலகத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ளனவாய்க் கூறப்பட்ட துணிபொருள்களான கருத்தா, போக்தா, முதற்காரணமென்னுமிவை ஆராய்ச்சி செய்யுங்காலத்து உலகமாகிய பக்கத்தில் காட்சிக்குப் புலனாகாதவாறு காண்க.

 

      ஏதுத்தன்மையாவது, பக்கதருமத்தன்மை முதலியவற்றோடு கூடியிருக்குந்தன்மை. (பக்கதருமத்தன்மையாவது பக்கதிலிருக்குந் தன்மை. அஃதாவது மலையாகிய பக்கத்தில் இருக்குந் தன்மையுடையது புகையாகிய ஏதுப்போலுமென்க.) காரியத்தன்மை என்னும் ஏதுவானது பக்கமான உலகத்திலிருத்தலால் நம்மால் கூறப்பட்ட இலக்கணம் பொருத்தமாகும். 

 

      துணிபொருட்டன்மையாவது, ஏதுவோடு உடனிகழ்ச்சியால் அறியப்படுந் தன்மை. இது கருத்தாவுடன் கூடியிருக்கின்றது என்பது முதலிய மூன்று துணிபொருள்களிலுமிருக்கிறது. எவ்வாறெனில், எது காரியப்பொருளோ அது கருத்தாவையுடையது என்னும் உடனிகழ்ச்சி ரூபமான இயல்பாகவே சித்தித்துள்ள சேர்க்கையையுடைய காரியத்தன்மை என்னும் ஏதுவால் அனுமானஞ் செய்யத் தகுந்ததாயிருக்குமாற்றால் என்க. (போக்தா, முதற்காரணமென்னுந் துணி பொருளிரண்டற்கும் இவ்வாறே கொள்க.)

 

      அவ்வாறாயின், எல்லா அனுமானங்களிலும் ஏதுவுக்குந் துணி பொருளுக்கும் உள்ள உடனிகழ்ச்சியறிவு சாதகமாயிருக்கின்றது. (அஃதாவது, ஓரிடத்தில் ஏதுவுக்குந் துணிபொருளுக்கும் சேர்க்கையறிவு சாதகமென்பதாம்.) அந்த அறிவு உதாரணத்தை எதிர் பார்த்தேயிருக்கின்றது. அவ்வித உதாரணமானது இங்கே கூறப்பட்ட மூன்றனுமானகளிலுமில்லை. கடமுதலியன உதாரணமாகாதோ எனில், ஆகாது. எதனாலெனின், பக்கமாகக் கூறப்பட்ட உலகின்கண் கட முதலியன அடங்கியிருத்தலால் என்க, ஆகையால் காரியத்தன்மை என்னும் ஏதுவைக்கொண்டு அனுமானம் எவ்வாறு நிகழுமெனில், சமாதானங் கூறுகிறோம்.

 

      உலகமானது, உலக சித்தமான பிரமாணத்திற்கு விடயமாயிருக்கும் உலகமென்றும், ஆகம சித்தமான பிரமாணத்திற்கு விடயமாயிருக்கும் உலகமென்றும் இருவகைப்படும். * அவற்றுள் முதலாவதான உலக சித்தப்பிரமாணத்தால் அறியப்படும் உலகம் உதாரணமாகும். இரண்டாவது ஆகம சித்தப்பிரமாணத்தால் அறியப்படும் உலகம் பக்கமாகும். ஆகவே உதாரணமில்லை என்னும் குற்றமின்மை காண்க. [* உலகப் பிரமாணத்தாலறியப்படும் உலகம், கடம் முதலியன. ஆகமப் பிரமாணத்தாலறியப்படும் உலகம், உடலும் நில முதலியனவும்.]

 

      அவ்வாறாயின் உலக சித்தப் பிரமாணத்தாலறியப்படும் பொருள் ஆகம சித்தமான பிரமாணத்தால் நீக்கப்படுகின்றமையால் † அந்த உலகப் பிரமாணத்தாலறியப்படும் பொருள் எவ்வாறு உதாரணமாகுமெனில், பொய்ப்பொருள் ரூபமான உதாரணத்தாலும் மெய்ப்பொருள் சித்திக்கலாம். எதுபோலுமெனின், இவள் மிக அழகுடையவள்; சொப்பனத்தில் காணப்பட்ட அழகுடைய சுந்தரியைப்போலும் என்ற விடத்து, பொய்ப்பொருளுக்கும் உதாரணத்தன்மை யுண்டென்பது காணப்படுதல் போலுமென்க. [† உலகப் பிரமாணத்தால் நித்தமென அறியப்படும் பொருள்கள் ஆகமப் பிரமாணத்தால் அநித்தமென நீக்கப்படுகின்றமை காண்க.]

 

      ஏதுவிற்கும் சாத்தியத்திற்கும் ஒரிடத்தில் இருப்பு என்னும் உடன்பாட்டு உடனிகழ்ச்சியைக் காட்டுதற்காகப் பக்கத்தின் ஏகதேச பாகத்துக்குச் சபக்கத்தன்மையைச் சாதிக்க முயன்று சிரமப்படுவதைவிட இவ்வனுமானத்தில் உலகத்துளடங்காது வேறானவையாயும் நித்தியமாயுமிருக்கும் மாயை ஆன்மா மகேசுரன் என்னும் மூன்றனுள் ஒரு பொருளைச் சாதிக்குங்கால் மற்றொரு பொருளை ‡ எதிர் மறைத் திருட்டாந்தமாகக் கூறதல் பொருத்தமாகும். [‡ உலகம் கருத்தாவுடன் கூடியது; காரியப்பொருளாகையால்; எது கருத்தாவுடன் கூடாததோ அது காரியப்பொருளாதலில்லை; மாயைபோலுமெனவும், உலக, போக்தாவுடன் கூடியது; காரியப் பொருளாகையால்; எது போக்தாவுடன் கூடாததோ அது காரியப் பொருளாதலில்லை; சிவன் போலுமெனவும், உலகம் முதற்காரணத்துடன் கூடியது; காரியப் பொருளாகையால்; எது முதற்காரணத்துடன் கூடாததோ அது காரியப் பொருளாதலுமில்லை, ஆன்மாப் போலு மெனவும், இவ்வாறு மூன்றனுமானங்களிலும் எதிர் மறை உதாரணங் கூறிக்கண்டு கொள்க.] ஆகையால் இந்த அனுமானங்கள் எதிர்மறை உடநிகழ்ச்சி உடையனவாகவே ஆகுமெனில், அஃதுண்மை தான். ஆயினும், கருத்தாவுடைமை போக்தாவுடைமை முதற்காரண முடைமை என்னும் இவற்றைப் பிரித்து, உலகம் கருத்தாவையுடையது; காரியப்பொருளாகையால், உலகம் போக்தாவை யுடையது; காரியப்பொருளாகையால்; உலகம் முதற்காரணத்தையுடையது; உலகம் முதற்காரணத்தையுடையது; காரியப்பொருளாகையால் என வேறு வேறாகச் சாதிக்கும் அனுமானத்தில் ஈசுவரன் ஆன்மா மாயை என்னுமிவற்றை ஒவ்வொன்றாகச் சாதிக்குங்கால் ஒவ்வொன்றும் எதிர்மறை உதாரணமாகும். மூன்றையுஞ் சேர்த்துச் சாதிக்கும் ஒரே அனுமானத்தில் இவற்றை எதிர்மறை உதாரணமாகக் கூற முடியாது. எவ்வாறெனில், உலகம் கருத்தா போக்தா முதற்காரணம் என்னும் மூன்றையும் உடையது; காரியப்பொருளாகையால் என்னும் அனுமானத்தில். எது காரியப்பொருளோ அது கருத்தா முதலிய மூன்றுடன் கூடியது; கடம் முதலியன போல என்னும் உடன்பாட்டு உடநிகழ்ச்சியை ஒத்துக்கொள்ளாவிடில் கூறப்பட்ட காரியத்தன்மை என்னும் ஏதுவானது உதாரணமற்றதாகும். இவ்வாறன்றி எது கருத்தா முதலியவற்றுடன் கூடாததோ அது காரியத்தன்மையுடன் கூடாதது. இதுபோலும் என எதிர்மறை உடநிகழ்ச்சியாக எடுத்துக்காட்டுதற்குத் துணிபொருளாகச் சித்திக்கப்பட்ட ஈசன் ஆன்மா மாயை என்னுமிவை உதாரணங்களாகாவாம். ஆகையால் மூன்றுஞ் சேர்ந்த ஒரே அனுமானத்தில் காரியத்தன்மை என்னும் ஏதுவானது உடன்பாட்டு உட நிகழ்ச்சி மாத்திரம் உடையதாயிருக் கின்றமையால் † கேவலான்னுவயியாகும்.                             [† கேவலான்னுவயி – உடன்பாட்டில் மாத்திரம் உடநிகழ்ச்சியுடையது.]

 

      இனி, மூன்று துணிபொருளகளையும் வேறு வேறாகப் பிரித்துச் செய்யும் அனுமானத்தில் உடன்பாடு எதிர்மறை என்னும் இரண்டினாலும் உதாரணங் கூறப்படும். அவை வருமாறு:- உலகம் கருத்தாவை யுடையது; காரியப் பொருளாகையால்; எது காரியப்பொருளோ அது கருத்தாவையுடையது கடம்போலும்; எது கருத்தாவையுடையதாகாதோ அது காரியத் தன்மையுடையதாகாது, ஆன்மாக்கள் அல்லது மாயைபோலு மெனவும், உலகம் போக்தாவையுடையது; காரியப்பொருளாகையால்; எது காரியப்பொருளோ அது போக்தாவையுடையது கடம்போலும்; எது போக்தாவையுடையதாகாதோ அது காரியத்தன்மையுடையதாகாது. ஈசுவரன் அல்லது மாயைபோலுமெனவும், உலகம் முதற்காரணத்தையுடையது; காரியப்பொருளாகையால்; எது காரியப்பொருளோ அது முதற்காரணத்தையுடையது சுவர் போலுன்; எது முதற்காரணமற்றதோ அது காரையப்பொருளாகாதது ஈசுவரன் அல்லது ஆன்மாப்போலுமெனவும், இவ்வாறு இந்த மூன்றனுமானங்களில் மூன்று ஏதுக்களும் உடன்பாட்டு உட நிகழ்ச்சியும் எதிர்மறை உடநிகழ்ச்சியும் உடையனவாகையால் அன்னுவய வெதிரேகியாகும். இந்த மூன்று ஏதுக்களும் உலக சம்பந்தமான பிரமாணங்களுக்கு விடயமான உலகமென்னும் கடத்தைப் பக்கத்துளடக்கி அக்கடத்தை உதாரணமாக ஒத்துக்கொள்ளாவிடில் எதிர்மறை உடநிகழ்ச்சி மாத்திரம் உடையனவாயிருத்தல் பற்றி கேவல வெதிரேகியாகும்.

 

      இவ்வாறு சாதிக்கப்படுபவை போல்வனவும், வேறு பிரமாணங்களால் மறுக்க முடியாதனவுமாய் உள்ள வேறு வேறு யுத்திகளால் அவரவர்கள் அறிவிற்குத்தக்கவாறு பதி பசு பாசமென்னும் முப்பொருள்களுளடங்கிய ஏனைய பொருள்களையும் புத்திமான்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். அவற்றுள் சிலவற்றைக் கூறுகிறோம்.

 

      பரமசிவன் சக்தியுடன் கூடினவர்: பொருளாயிருக்கின்றமையால்; இவ்விடத்துப் பொருளாயிருக்கின்றமை என்னும் ஏது உடன்பாட்டு உடநிகழ்ச்சி மாத்திரமுடைய கேவலான்னுவயி ஆகும். எதனாலெனில், எல்லாப் பொருள்களிலும் ஏது சாத்தியங்களிருக்கின்றமையாலென்க. இவ்வாறன்றி எது சத்தியுடன் கூடாததோ அது பொருளாயில்லாதது என எதிர்மறை உடநிகழ்ச்சியாக எடுத்துக் காட்டுதற்கு ஒன்றுங் கிடையாது.

 

      பரமசிவன் அனாதி முத்தன்; மூன்று காலங்களிலும் சுதந்திரனாயிருக்கின்றமையால்; இந்த ஏது எதிர்மறை உட நிகழ்ச்சி மாத்திரம் உடைய கேவல வெதிரேகி ஆகும். எதனாலெனில், பரமசிவனைத் தவிர வேறான எல்லாப் பொருள்களிலும் ஏது சாத்தியமின்மையாலென்க. இந்த அனுமானத்தில் எவன் அனாதி முத்தனாகவில்லையோ அவன் மூன்று காலங்களிலும் சுதந்திரத்தன்மை உடையவனல்லன்; ஆன்மாப்போலும் என்னும் எதிர்மறை உதாரண மாத்திரமே அன்றி உடன்பாட்டு உதாரணங் கிடையாது.

 

      பரமசிவன் சத்தி மாத்திரத்தைக் கரணமகவுடையவன்; சங்கற்ப மாத்திரத்தால் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்கின்றமையால்; இந்த ஏது உடன்பாட்டு உடநிகழ்ச்சியுடனும் எதிர்மறை உடநிகழ்ச்சியுடனும் கூடியிருத்தலால் அன்னுவயவெதிரேகியாகும். எவ்வாறெனில், எவன் சங்கற்ப மாத்திரத்தால் தொழிலையுடையவனோ அவன்சத்தி மாத்திரத்தைக் கரணமாகவுடையவன்; பரமுத்தன் போலும் என்னும் உடன்பாடு உதாரணமும், எவன் சத்தி மாத்திரத்தைக் கரணமாகவுடையவனாகனோ அவன் சனகற்ப மாத்திரத்தால் தொழிலைச் செய்யாதுவனாவன்; அபர முத்தன்போலும் என்னும் எதிர்மறை உதாரணமும் இருக்கின்றமை காண்க.

 

      பதியான பரமசிவன் எல்லாமறிந்தவன்; எல்லாவற்றிற்கும் கருத்தாவாயிருத்தலால்; இந்த ஏதுவும் உடன்பாட்டு உட நிகழ்ச்சி எதிர்மறை உட நிகழ்ச்சி என்னும் இரண்டுமுடைமையால் அன்னுவய வெதிரேகி ஆகும். எவ்வாறெனில், எவன் எல்லாவற்றிற்கும் கருத்தாவோ அவன் எல்லாவறிந்தவன்; முத்தான்மாப் போலும் என்னும் உடன்பாடு உதாரணமும், எவன் எல்லாம் அறிபவனாகவில்லையோ அவன் எல்லாவற்றிற்கும் கருத்தாவாதவில்லை; பெத்தான்மாப் போலும் என்னும் எதிர்மறை உதாரணமும் இருக்கின்றமை காண்க.

 

      உலகத்தைப் படைக்கும் பரமசிவன் நித்தியனாயும் வியாபகனாயுமுள்ளவன்; காலத்தினாலும் தேசத்தினாலும் பிரிக்கப்படாதவனாகையால்; இந்த ஏதுவும் உடன்பாடு எதிர்மறை என்னும் இரண்டு உட நிகழ்ச்சிகளையும் உடையதாகையால் அன்னுவய வெதிரேகியாகும். எவ்வாறெனில், ஏதுகாலத்தினாலும் தேசத்தினாலும் பிரிக்கப்படாததோ அது நித்தியமாயும் வியாபகமாயுமிருக்கும்; போகத்தை அனுபவிக்கும் ஆன்மாப்போலும் என்னும் உடன்பாட்டு உதாரணமும், ஏது நித்தியமும் வியாபகமு உடையதாகாதோ அது காலத்தானும் தேசத்தானும் பிரிக்கப்படுவதாகும்; அனுபவிக்கப்படும் பொருள்போலும் என்னும் எதிர்மறை உதாரணமும் இருக்கின்றமை காண்க.

 

      சிவசத்தியானது சித்து ரூபமாயுள்ளது; சித்தான பொருளின் தர்மமாகையால்; இந்த ஏதுவும் உடன்பாடு எதிர்மறை என்னும் இரண்டு உட நிகழ்ச்சிகளையும் உடையதாகையால் அன்னுவய வெதிரேகியாகும். எவ்வாறெனில், எது சித்துப் பொருளின் தருமமோ அது சித்து ரூபமான பொருள்; சித்துப் பொருளான ஆன்மாவின் தர்மமான அறிவுபோலுமென்னும் உடன்பாட்டு உதாரணமும், எது சித்துப்பொருளாதலில்லையோ அது சித்துபொருளின் தர்ம்மாதலில்லை; சடப்பொருளின் தர்மம்போலும் என்னும் எதிர்மறை உதாரணமும் இருக்கின்றமை காண்க.

      சிவசத்தியானது சிவனிடத்தில் சமவாய சம்பந்தத்தாலிருப்பது; சிவனைவிட வேறாயிருந்தும் அவனைவிட்டுப் பிரிக்கமுடியாதிருத்தலால்; இந்த ஏதுவும் இரண்டு உட நிகழ்ச்சிகளையும் உடையதாதலால் அன்னுவயவெதிரேகியாகும். எவ்வாறெனில், எது எந்தப் பொருளைவிட வேறாயிருந்தும் அந்தப் பொருளைவிட்டுப் பிரியாமல் ஒன்றாயிருக்கின்றதோ அது அந்தப் பொருளில் விட்டுப்பிரியாமையென்னும் சமவாய சம்பந்தத்தாலிருக்கின்றது; ஆன்மாவினிடத்து விட்டுப்பிரியாத சமவாய சம்பந்தத்திலிருக்கும் சிற்சத்திபோலுமென்னும் உடன்பாட்டு உதாரணமும், எது எதனிடத்தில் சமவாய சமபந்தத்தால் இருக்கிறதில்லையோ அது அதனினும் வேறாய் நின்று அதனுடன் விட்டுப் பிரியாமலிருப்பதில்லை; ஆன்மாவும்* சரீரமுதலியனவும் போலுமென்னும் எதிர்மறை உதாரணமும் இருக்கின்றமை காண்க. [* மரண காலத்தில் சரீரம் வேறாய்ப் பிரிந்திருக்கின்றமையால் என்க.]

 

      மகா மாயை பரமசிவனால் நேரே அதிட்டிக்கத் தகுந்தது; பரமசிவனுடைய திருமேனி முதலியவற்றின் தோற்றத்திற்கு முதற்காரணமாயிருத்தலால்; இந்த ஏது எதிர்மறை உடநிகழ்ச்சி மாத்திரம் உடையது ஆகையால் கேவல வெதிரேகியாகும். எதனாலெனின், எது பரமசிவனால் அதிட்டிக்கத் தகுந்ததில்லையோ அது அவனது சரீரத்தைத் தோற்றுவிப்பதில்லை. அசுத்தி மாயை போலும் என்னும் எதிர்மறை உதாரண மாத்திரமுடைமையாலென்க. இந்த அனுமானத்தில் உடன்பாட்டு உதாராணங் கிடையாது.

 

      ஆன்ம வர்க்கங்கள் சேதனங்கள்; ஞானக்கிரியா சத்தியுடன் கூடியிருத்தலால்; இந்த ஏது இரண்டு உட நிகழ்ச்சிகளையும் உடையதாயிருத்தலின் அன்னுவய வெதிரேகியாகும். எவ்வாறெனில், ஏது ஞானக்கிரியா சத்திகளை உடையதோ அது சேதனம். அஃதாவது அறிவுடைப் பொருள்; சிவன்போலு மென்னும் உடன்பாட்டு உதாரணமும், எது அறிவுடைப் பொருளாதலில்லையோ அது ஞானக்கிரியா சத்தியற்றது; மாயைபோலுமெனும் எதிர்மறை உதாரணமும் இருக்கின்றமை காணக.

 

      முத்தான்மா சிவனோடு சமத்தன்மை பெற்றவன்; சுத்த சைதன்னிய முடையவனாகையால்; இந்த ஏது எதிர்மறை உடநிகழ்ச்சி மாத்திரம் உடைமையால் கேவல வெதிரேகி ஆகும். எதனாலெனின், எவன் சுத்த சைதன்னிய மில்லாதவனோ அவன் சிவனோடு சமத்தன்மை அடையாதவன்; பெத்தான்மாப்போலும் என்னும் எதிர்மறை உதாரண மாத்திரம் உடைமையாலென்க.

 

      (1) பசுவானது பாசத்துடன் கூடியது; சேதனப் பொருளாயும் பரதந்திரமுடையதாயும் இருத்தலால்.

      [(1) இந்த ஏது இரண்டனுள் பரதந்திரம் உடையதாயிருத்தலால் என்பது மாத்திரங் கூறில்மாயை முதலியன பரதந்திரமுடையனவாயிருந்து பாசத்தொடு கூடாமையின் அவற்றில் பிறழ்ச்சிககுற்றம் நிகழும். அதனை நீக்குதற்காக சேதனப் பொருளாயுமென்பது வேண்டப்பட்டது. இனி, சேதனப்பொருளாயிருத்தல் என்பதுமாத்திரங்கூறில் பாசத்துடன் கூடாத சிவனடித்தில் சேதனத்தன்மையிருத்தலால் அதில் பிறழ்ச்சிக்குற்றம் நிகழும். ஆதலின் இரண்டு ஏதுக்களும் வேண்டப்பட்டன. இந்த ஏது ஏதுபாசத்துடன் கூடாததோ அது சேதனத்துடன் கூடிப் பரதந்திரமாயிராது; பரமசிவன் போலும் என்னும் எதிர்மறை உடநிகழ்ச்சிமாத்திரம் உடைமையால் கேவலவெதிரேகியாம்.]

 

      (2) விஞ்ஞான கேவலர் மலமாத்திர முடையவர்; பசுதன்மையுடன் கூடினவராயும் ஞான முதலியவற்றால் கன்மம் நசித்தவராயும் இருத்தலால்.

      [(2) இந்த அனுமானத்தில் ஞானமுதலியவற்றால் கன்மம் நசித்தவர் என்பது மாத்திரம் ஏதுவாகக்கூறின், மலமில்லாத முத்தான்மாவிடத்தில் ஞானத்தால் கன்மம் நசித்திருத்தலால் அவனிடத்தில் பிறழ்ச்சிக்குற்றம் நிகழும். பசுத்தன்மையுடன் கூடினவரென்பது மாத்திரம் கூறில், மலம் மாத்திரமின்றி மலம் கன்மம் மாயை மூன்றுமுடைய சகலரிடத்தும் பசுத்தன்மை இருக்கின்றமையால் அவரிடத்தில் பிறழ்ச்சிக்குற்றம் நிகழும். ஆதலின் இரண்டு ஏதுக்களும் வேண்டப்பட்டன. இந்த ஏது, எவர் மலமாத்திரம் உடையவராகாரோ அவர் பசுத்தன்மையுடன் கூடி ஞான முதலியவற்றால் கன்மம் நசித்தவராக ஆகார், பிரளயகேவலர் போலும் என்னும் எதிர்மறை உடநிகழ்ச்சி மாத்திரமுடைமையால் கேவலவெதிரேகியாகும்.]

 

      (3) பிரளய கேவலர் மலகன்மமுடையவர்; பிரளயகாலத்தில் நீக்கப்பட்ட கலை முதலியவற்றை யுடையராயிருத்தலால்.

 

      [(3) இந்த அனுமானத்தில் எவர்மல கன்மங்களில்லாதவரோ அவர் பிரளயத்தில் நீக்கப்பட்ட கலைமுதலியவற்றையுடையவராகார், விஞ்ஞானகேவலர்போலும் என்னும் எதிர்மறை உடநிகழ்ச்சி மாத்திரம் இருத்தலால் இந்த ஏதுகேவலவெதிரேகியாகும்.]

 

      (4) சகலர் மலம் கன்மம் மாயை என்னும் மூன்று முடையவர்; சுகதுக்க விடயமான அறிவுடன் கூடி இருத்தலால்.

 

      [(4) எவர் மலகன்ம மாயை இல்லாதவரோ அவர் சுக துக்க விடயமான அறிவில்லாதவர்; பரமுத்தர் போலும் என்னும் எதிர்மறை உடநிகழ்ச்சி மாத்திரம் உடைமையால் இந்த ஏது கேவல வெதிரேகியாகும்.]

 

      (5) பாசங்கள் சடப்பொருள்கள்; பரிணமிக்கும் பொருள்களாகையால்.

      [(5) எது பரிணாமமுடையதோ அது சடப்பொருள்; மண்போலும் என்னும் உடன்பாட்டு உட நிகழ்ச்சியும், எது சடத்தன்மையற்றதோ அது பரிணாமமற்றது; சிற்சத்திபோலும் என்னும் எதிர்மறை உட நிகழ்ச்சியும் உடைமையால் இந்த எது அன்னுவய வெதிரேகியாகும்.]

 

      (6) மலம், கன்மம் மாயை முதலிய பாசங்களுக்கு மூலகாரணமாயிருப்பது; அறிவை மறைக்கிறபடியால்.

      [(6) எது பாசத்துக்கு மூல காரணமாயில்லையோ அது அறிவை மறைக்கிறதில்லை; சிற்சத்திபோலும் என்னும் எதிர்மறை உட நிகழ்ச்சி மாத்திரமுடைமையால் இந்த ஏது கேவல வெதிரேகி ஆகும்.]

 

      (7) மலசத்திகள் அநித்தங்கள்; சடமாயும் அநேகமாயும் இருத்தலால்.

      [(7) எது சடமாயும் அநேகமாயும் இருக்கிறதோ அது அநித்தம்; கடம்போலுமென்னும் உடன்பாட்டு உட நிகழ்ச்சியும், எது அநித்தமில்லாததோ அது சடமாயும் அநேகமாயுமிராதது; சிவன் போலும் என்னும் எதிர்மறை உட நிகழ்ச்சியும் இருத்தலால் இந்த ஏது அன்னுவய வெதிரேகி ஆகும். இந்த ஏது இரண்டனுள் அநேகமாயிருத்தலால் என்பது மாத்திரங் கூறின் அநித்தமாயில்லாது நித்தமாயிருக்கும் ஆன்மாக்கள் அநேகமாயிருத்தலின் அவற்றில் பிறழ்ச்சிக் குற்றம் நிகழும். சடமாகையாலென்பது மாத்திரங்கூறில் அநித்தமில்லாது நித்தமாயுள்ள மலம் சடமாகையால் அதில் பிறழ்ச்சிக் குற்றம் நிகழும். ஆதலின் இரண்டு ஏதுக்களும் வேண்டப்பட்டன.]

 

      (8) ஆன்மாவுக்கும் மலத்துக்கும் உள்ள சம்பந்தம் அனாதி; அதற்குக் காரணம் அறியப்படாமையால்.

      [(8) எதற்குக் காரணம் அறியப்படவில்லையோ அது அனாதி; சிவனுக்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தம் போலும் என்னும் உடன்பாட்டு உட நிகழ்ச்சியும், எது அனாதி இல்லாமல் ஆதியுடன் கூடியதோ அது காரணத்துடன் கூடியது; கட முதலியவற்றின் சையோகம்போலுமென்னும் எதிர்மறை உட நிகழ்ச்சியும் உடைமையால் இந்த ஏது அன்னுவய வெதிரேகியாகும்.]

 

      (9) கன்மங்கள் போக்கியங்கள்; புத்தியிலிருக்கின்றமையால்.

      [(9) எது புத்தியிலிருப்பதோ அது போக்கியப் பொருள்; சித்தி முதலியன போலும் என்னும் உடன்பாட்டு உட நிகழ்ச்சியும்,எ து போக்கியப்பொருளாகவில்லையோ அது புத்தியிலிருப்பதில்லை; மாயைபோலுமென்னும் எதிர்மறை உட நிகழ்ச்சியும் உடைமையால் இந்த ஏது அன்னுவய வெதிரேகியாகும்.]

 

      (10) மாயை நித்தமாயுள்ளது; மேலான முதற்காரணமாதலால் மகாமாயை போலும்.

      [(10) எது மேலான முதற்காரணமோ அது நித்தப்பொருள், மகாமாயைபோலும் என்னும் உடன்பாட்டு உட நிகழ்ச்சியும், எது நித்தப் பொருளாதலில்லையோ அது மேலான முதற்காரணமாதலில்லை; மண்நூல் முதலியனபோலும் என்னும் எதிர்மறை உடநிகழ்ச்சியும் உடைமையால் இந்த ஏது அன்னுவயவெதிரேகியாகும்.]

 

      (11) கலை முதலியன மோகத்தைச் செய்வன; அசுத்தி மாயா காரியமாகையால்.

      [(11) எது மோகத்தை உண்டுபண்ணவில்லையோ அது அசுத்தமாயாகாரியமாதலில்லை, ஞானத்தை உண்டுபண்ணும் விந்துவின் காரியம் போலும் என்னும் எதிர்மறை உட நிகழ்சிமாத்திர முடைமையால் இந்த ஏதுகேவல வெதிரேகியாகும்.]

 

      (12) எல்லாக் காரியப்பொருள்களும் உள்பொருள்களே; ஒடுங்குங்காலத்திலும் விளங்குங் காலத்திலும் சத்தி ரூபமாயும் விளக்க ரூபமாயும் முதற்காரணத்தைச் சார்ந்து இருக்கின்றமையால்.

      [(12) எது ஒடுங்குங்காலத்திலும் விளங்குங்காலத்திலும் சத்திரூபமாயும் விளக்கரூபமாயும் முதற்காரணத்தைச் சார்ந்திருக்கின்றதோ அது உள்பொருள்; ஆபரணமுதலியன போலு மென்னும் உடன்பாட்டு உட நிகழ்ச்சியும், எது உள்பொருளாதலில்லையோ அது மேற்கூறிய இரண்டு வகையாலும் முதற்காரணத்தைப்பற்றி இராதது  ; ஆகாயப்பூப்போலும் என்னும் எதிர்மறை உடநிகழ்ச்சியு முடைமையால் இந்த ஏது அன்னுவய வெதிரேதகி ஆகும்.]

 

இன்னும் இவைபோலும் அனுமானங்களால் இங்கே கூறப்படாத பொருள்களையும் நிச்சயித்துக்கொள்க.

      அவ்வாறாயின், இங்கே கூறப்பட்ட அனுமானங்களில் ஏதுப்பொருளும் துணி பொருளுமாகிய இரண்டிலும் ஆசிரியனிடமிருந்தே கேட்டு நிச்சயிக்கப்பட்டிருத்தல் சமானமாகையால் ஏதுவிற்கும் துணிபொருளிற்குமுள்ள விசேடமென்னையெனில், ஏதுப்பொருள் மனனஞ் செய்தலால் முன்னர் நிச்சயஞ் செய்யப்பட்டு தியானத்திற்கு விடயமாயிருத்தலே விசேசமென்க.

 

      ஆனால் துணி பொருளினுடைய ஆராய்ச்சியே அனுமானம் எனக்கொள்ளின், அவ்வனுமானத்திற்குப் பயனாக* [*அனுமிதி – ஆராய்ச்சியாற் றோன்றும் ஞானம்.] அனுமிதியொன்று கூறவேண்டுமேயெனில் அவ்வாறு கூறத் தகுந்ததில்லை. இந்தத் துணி பொருளின் ஆராய்ச்சியைப் பிரமாண ரூபமாகக கொண்டோமேயன்றி † [† பிரமை – உண்மை அனுபவம். அஃதாவது நிச்சயமான அறிவு.] பிரமைக்குக் கரணமாய்க் கொள்ளவில்லையென்க. ஆயினும் ஏதுவுடன் கூடியதாக ஆராய்ச்சி செய்யப்படும் துணிபொருளினிடத்து நிகழக்கூடிய தியானத்திற்கு உபயோகமான ஒரு பரிபாகஞ் சிறிது காலத்தில் இந்த ஆராய்ச்சியாலுண்டாகிறது. அந்தப் பரிபாகமே இந்த ஆராய்ச்சிக்குப் பயனாகும். அப்பொழுது துணிபொருளும் சித்திக்கப்பட்டதாகும். எதனாலெனில், சித்திக்கப்படாத பொருளினிடத்துத் தியானம் நிகழாதாகையாலென்க.

 

      அவ்வாறாயின், பொருள் துணியப்பட வேண்டின், அகப்பொருள் ஐயத்துக்கு விடயமாயிருத்தல் வேண்டும். ஐயமில்லாவிடின் அந்தப் பொருளைச் சாதிப்பதற்கு ஏதுவைத் தேடவேண்டுவதில்லை. எவ்வாறெனின், உலகத்தில் அக்கினியின்கண் ஐயம் நிகழ்ந்தாற்றான் அந்த அக்கினிக்குக் காரணமாக புகை வேண்டப்படுகின்றது. அது போல இவ்விடத்தும் பதி ஒருவன் உண்டென்று ஆசிரியனிடமிருந்து கேட்ட பின்னர் பதி விஷயத்தில் ஐயமில்லாவிடின், உலகம் காரியப் பொருளா யிருத்தலால் என்னும் ஏதுவைக்கொண்டு கருத்தாவான பதியினிடத்துச் செய்யும் ஆராய்ச்சியானது பயனற்றதாகும்.

 

      ஆசிரிய வாக்கியத்தில் ஐயம் நிகழ்ந்துதான் பதியைப் பற்றிய ஆராய்ச்சி நிகழுமாயின், உலகத்திலுள்ள ஏனையர்களோடு ஆசாரியரும் ஒப்பாவரென்னில், சமாதானங் கூறுகிறோம். மலபரிபாகமுள்ள சீடர்களுக்கு அவரவருடைய ஆசிரியர் சொற்களில் நம்பிக்கை இல்லை என்றல் கூடாது. ஆயினும், நம்மால் உபதேசிக்கப்பட்ட பொருள் நம்மால் கூறப்பட்ட யுத்திகளால் தக்கவாறு ஆராய்ச்சி செய்யப்படட்டும் என அந்த ஆசிரியராலேயே ஏவப்பட்டு, கேட்ட பொருளில் ஐயமில்லாவிடினும் உடனே அனுபவத்துக்கு வராமையின் அனுபவம் வருதற் பொருட்டுச் சாதகர்கள் அனுமானஞ் செய்கின்றனர்.

 

      இவ்வாறு கேள்வியால் நிச்சயிக்கப்பட்ட பொருளை யுத்திகளால் ஆராய்ச்சி செய்தல் அனுமானம் என அனுமானப் பிரமாணம் கூறப்பட்டது.

 

      இனி, சத்தப்பிரமாணமாவது, ஆசாரியனால் உபதேசிக்கப்பட்ட மேன்மைபொருந்திய ஆகம வாக்கியங்களின் பொருளை விடயமாகக்கொண்ட சாதகனுடைய அறிவே யாகும். அஃதாவது, முற்றுப்பெற்ற நிருவாண தீக்கையினையுடையதாயும், எல்லாப் பொருள்களையும் அறியவேண்டுமென்ற ஆசை மாத்திரம் எஞ்சி யிருப்பதாயுமுள்ள சாதகனுடைய அறிவே யாகும்.    

 

      சித்தாந்தப்பொருளைக் கேட்டற்பொருட்டுத் தன்னை யடைந்த சாதகனுக்கு, ஆசிரியன் பரமசிவனுடைய ஆணையால் தன்னுடைய முகத்திலிருந்து தோன்றிய பரநாதரூபமான ஆகம வாக்கியத்தைக் காதுகளின் வழியாய் உள்ளே செல்லாச் செய்யுமுறையில், சாதகன் உடலினுள்ளிருக்கும் பரநாதரூபமான விந்துவென்னும் அக்கரரூபமான வாக்கியத்தை எழுப்புகின்றான். பின்னர் அந்தச் சாதகனும் தன்னுடைய வாக்கியத்தை அந்த ஆகம வாக்கியத்தோடு அப்பியாசத்தின் மகிமையால் ஒன்றாகச் செய்து அந்த ஆகம வாக்கியங்களால் கூறப்பட்ட பொருள்களில் முரையாகத் தன்னுடைய அறிவை ஏறினதாகச் செய்கிறான். இவ்வாறு அந்த ஆகமவாக்கியத்தில் ஏறின ஆன்ம அறிவே சத்தப் பிரமாணமென்றும் சிரவணமென்றுங் கூறப்படுகின்றது.

 

      அவ்வாறாயின், இங்கே கூறப்பட்ட சத்தப்பிரமண இலக்கணமே அனுமானப் பிரமாண இலக்கணமாக இருத்தலின் இந்த இலக்கணத்திற்கு அனுமானத்தில்* அதிவியாத்திக் குற்றம் நிகழுமெனில், நிகழாது. எவ்வாறெனில், அனுமானஞ்செய்யும் ஆன்ம அறிவிற்கு ஏதுவைப் பற்றி யிருக்குந்தன்மை இருத்தலால் அவ்வறிவு வாக்கியத்தை மாத்திரம் பற்றி யிருக்கவில்லை. (அதாவது வாக்கியத்தையும் ஏதுவையும் பற்றியிருக்குமென்பதாம்) சத்தப்பிரமாணம், வாக்கியத்தை மாத்திரம் பற்றியிருப்பது ஆதலால் அதிவியாத்தியின்மை காண்க.    [* ஆகம வாக்கியத்தோடு கலந்த ஆன்ம அறிவே அனுமானமாதலால் அதிவியாத்தி]

 

      ஆகமங்களிலேயே ஏதுவைப்பற்றிக் கூறுதலுங் காணப்படுகின்றமையால் உபதேசம் பெற்ற ஆன்ம அறிவினிடத்தில் ஏதுவைப்பற்றியிருக்குந் தன்மை இல்லை என்றல் எவ்வாறு கூடுமெனில், அஃதுண்மையே அனுமானஞ் செய்யும் ஆன்ம அறிவு வாக்கியத்தைப்பற்றியும், வாக்கியத்தை உபதேசமாகக் கேட்ட ஆன்ம அறிவு, ஏதுவைப்பற்றியும் இருக்கின்றன. இவ்வாறு அனுமானத்திலும் ஆகமத்திலும் இரண்டுமிருப்பினும் உபதேசத்தில் வாக்கியத்திற்குப் பிரதானத் தன்மையும் அனுமானத்தில் ஏதுவிற்குப் பிரதானத் தன்மையும் இருக்கின்றன. இந்தப் பிரதானத்தன்மையே சத்தப்பிரமாணத்திற்கும் அனுமானப் பிரமாணத்திற்கு முள்ள வேறுபாடாகும். ஆகவே வாக்கியப் பொருளின் நிச்சயத்தை மாத்திரம் பயனாகக் கொண்டுள்ளதாயும், உபதேசிக்கப்பட்டதாயுமுள்ள ஆன்ம அறிவிற்குத்தான் இந்தச் சத்தப்பிரமாண இலக்கணங் கூறப்பட்டது.

 

      இதுவரையுங் கூறியவாற்றால், புத்தியைப் பற்றுக்கோடாகச் சார்ந்திருக்கும் ஏதுவும் வாக்கியமும் அறிவிற்கு விடயமாயிருக்குமெனப் பெரும்பான்மையாய்க் கூறப்பட்டதாயிற்று. ஆகவே, இந்த ஏது வாக்கியங்களை விடயமாகக் கொண்ட அறிவை அனுமானப் பிரமாணஞ் சத்தப்பிரமாணமென்னும் இரண்டிலும் நினைவு ரூபமாகக் கொள்ளத் தகுந்தது எனில், அது பொருந்தாது. எதனாலெனின், எக்காலத்தும் எவ்விடத்தும் இந்த அறிவு அனுபவ ரூபமாக இருத்தலாலென்க. அனுபவ ரூபமாயிருப்பதென்பது எவ்வாறு பெறப்படுமெனில், புத்தி தத்துவத்தைப் பற்றுக்கோடாகச் சார்ந்திருக்கும் முன்னுள்ள அநேக வாசனாப் பிரபஞ்சங்களை நாசஞ் செய்வதில் சமர்த்த மாயிருக்கும் பரநாதத்தினுடைய சேர்க்கையால் மேன்மையடைந்த அபரநாதத்துடன் கூடியிருத்தலால் பெறப்படுமென்க. (பரநாதம் – குருவுபதேசம். அபரநாதம் – சீடனறிவு.)

 

      அவ்வாறாயின், ஆப்த வாக்கியம் பிரமாணமென்று முன்னர்க் கூறி, இப்பொழுது ஆன்மாவின் அறிவு பிரமாணமென்று கூறுதல் முரணாகுமேயெனில், அஃதுண்மையே. உலகத்தில் பிரமாணமென்பது உபகாரஞ் செய்யப்படுவது, உபகாரஞ் செய்வது என இருவகைப்படும். அவ்விரண்டனுள், உபகாரஞ் செய்யப்படுவது, நீக்கத்தக்க பாசத்தையுடையது ஆகையால் அனுக்கிரகஞ் செய்யப்படும் ஆன்மாவின் அறிவாகும். உபகாரஞ் செய்வது, அந்தப் பாசங்களை நீக்குவதில் முயற்சியுடன் கூடியிருத்தலால் அனுக்கிரகஞ் செய்யும் ஈசுவரனுடைய அறிவாகும்.

 

      ஆகவே, அனுக்கிரகஞ் செய்யும் ஈசுவரனுடைய அறிவே சுத்த அறிவு ஆதலின் அதற்கே பிரமாணத் தன்மை உண்டென்பது சித்திக்கும். சித்திக்குவே, அந்த அறிவால் அதிட்டிக்கத் தகுந்த ஆகம வாக்கியத்திற்கும் அந்த அறிவுடன் அபேதமாக உபசாரத்தால் முன்னர்ப் பிரமாணத் தன்மை உண்டென்பது காட்டப்பட்டது. இப்பொழுது அந்த ஈசுவர சைதன்னியத்தைச் சிந்தனை செய்தலால் கேட்டல் ரூபமான சாதகனுடைய அறிவு பிரமாணஞ்மெனக் கூறப்பட்டது. ஆதலின் முரணின்மை காண்க.

 

      இந்தச் சிரவணமென்னும் கேட்டலானது அநேகம் பொருள்களைத் தரத்தக்க அநேக வாக்கியங்களை முறையாக உடையதாயிருத்தலின், சிறிதுகாலஞ்சென்றே அந்தச்சிரவணம் சித்தியடைகின்றது. சிரவணத்தின் சித்தி நிகழ்ந்த பின்னரே மனனம் – சிந்தித்தல், சாத்தியப் பொருள்களின் தோற்ற மிகுதியால் மனனத்தின் சித்தி நீண்டநாட் சென்றுண்டாகும். அவ்வாறுண்டான அந்த மனனத்தின் சித்திக்குப் பின்னர் தியானம் உண்டாகும். தியானமாவது, மனனத்தால் சித்தித்த ஒரு பொருளைப் பற்றிய ஆன்ம அறிவின் தோற்றமாகும். இவ்விதமான தியானமே அறியப்படும் பொருள், அறியும் பொருள் என்னுமிரண்டின் சேர்க்கையுடன் கூடியிருத்தலால் யோகமென்று கூறப்படுகின்றது.

 

      அந்த யோகம் சாலம்பமென்றும், நிராலம்பமென்றும் இரு வகைப்படும். அவற்றுள், முதலாவதான சாலம்ப யோகமாவது, சவிகற்பப் பிரத்தியக்ஷத்திற்குக் காரணமான சகளமூர்த்திகளின் தியானமாகும். இரண்டாவதான நிராலம்பயோகமாவது, நிருவிகற்பப் பிரத்தியக்ஷத்திற்குக் காரணமாகிய நிட்கள சொரூபத்தியானமாகும். ஆனால் இந்தத் தியானத்தை வேறான பிரமாணமாகக் கூறுவதுதான் பொருத்தமாகும். ஆயினும், இந்தத்தியானம் பிரத்தியக்ஷத்தோடு நெருங்கியிருத்தலால் அதனுள் அடங்குமென்றறிந்த ஆசிரியர்கள் இந்தத் தியானத்தை வேறு பிரமாணமாகக் கூறினாரில்லை. ஆதலினாற்றான் தியானம் செய்பவர்களுக்கும் ஆசிரியத்தன்மை உண்டென்பது நூல்களிற் காணப்படுகின்றது.

 

      அவ்வாறாயின் சத்தியென்பது ஒன்றாகையால், அது பிரத்தியக்ஷ அனுமாங்களுக்குக் காரணமாக ஆகம அறிவென்றும், அந்த ஆகம அறிவை யடுத்து நிகழும் பிரத்தியக்ஷ அறிவு அனுமான அறிவென்றும் பலவாக எவ்வாறு இருக்கெமெனின், கூறுகிறோம். அந்த அறிவாகிய சத்தியை இயல்பாகவே மறைப்பது நீகாரமென்னும் மலம், அந்த மறைப்பைத் தடுக்கும் பரிபாகமும் அநேகவிதமாயுள்ளதென்று நூலக்ளிற் கூறப்பட்டிருக்கின்றது. அந்தப் பரிபாகத்தை அனுசரித்து அந்தக்கரண விருத்திகளும் அநேகவிதங்களாயிருக்கின்றன. ஆதலால் அந்த அந்த அந்தக் கரணத்தால் வரையப்பட்ட சிற்சத்தியானது அநேக விதமாய் இருக்கும். ஆதலின் குற்றமொன்றுமில்லை யென்க.

 

      அவ்வாறாயின், மலபரிபாகம் நிகழாத அறிவினின்றும் மலபரிபாகம் நிகழ்ந்த அறிவிற்கு விசேடமென்னை யெனில், மலபரிபாகம் நிகழ்ந்து நிவிருத்திக்கு நேர்முகமாயிருக்கும் அறிவிற்கு, மலபரிபாகம் நிகழாது பிரவிருத்திக்கு நேர்முகமான அறிவுக்குப் போல ஐயரூபம் விபரீதரூபம் நினைவுரூபமாயிருக்குந்தன்மை இல்லாமை விசேடமென்க. ஆதலினாற்றான் பசுத்தன்மையுடைய ஆன்மாவின் பிரத்தியக்ஷ முதலியன பிரமாணமில்லையென்பது பெரியோர் கொள்கை.

 

      ஆயின், பசுத்தன்மையுடைய ஆன்மாவின் பிரத்தியக்ஷ முதலியவற்றிலும் ஐய முதலியவற்றின் வேறாக உண்மை அனுபவமென்னும் ஞானமிருக்கிறதே; அந்த அறிவிற்குப் பிரமாணத்தன்மையில்லை யென்பது எவ்வாறு கூடுமெனின், இவ்விஷயத்தில் புத்திமான்கள் அறியத்தகுந்ததைக் கூறுகிறோம்.

 

      பசுத்தன்மையுடைய ஆன்மாவின் பிரத்தியக்ஷ முதலிய பிரமாணங்களுள் பிரத்தியக்ஷமாவது, அந்தக்கரணங்களோடு கூடிய அறிவு, கண் முதலிய இந்திரியங்களின் வழிமாத்திரத்தால் வெளியிலுள்ள பொருள்களை அறிதலாம். வெளியிலிள்ள பொருள்களாவன, பிருதிவி முதலிய ஐந்து மகா பூதங்களின் பரிணாமமாய் சரமும் அசரமுமான பொருள்களாம். இப்பொருள்களிடத்துச் சிற்றறிவுடையவர்கட்கு ஒரே தன்மையான அறிவு உண்டாவதில்லை. எவ்வாறெனில்.

 

      எல்லாப் பொருள்களும் நித்தமென்று பூர்வமீமாம்சகர் கூறுகின்றனர். எல்லாப்பொருள்களும் அநித்தமென்று உத்தரமீமாம்சகர் கூறுகின்றனர். சில பொருள்கள் நித்தம் சில பொருள்கள் அநித்தமென்று நையாயிகர் கூறுகின்றனர். எல்லாப் பொருள்களும் நித்தமாயும் அநித்தமாயும் இருக்கின்றன வென்று சைனர்களும் ஆருகதர்களும் கூறுகின்றனர். எல்லாப்பொருள்களும் க்ஷணிகமென்று பெளத்தர் கூறுகின்றனர். இவைபோல இன்னும் அநேகவாதிகள் உலகப்பொருள்களை அநேகவிதமாக எண்ணுகின்றனர். பொருள்களை யறியுமுறையில் இந்த வாதிகளுடைய கருவிகள் மயக்கத்தை உண்டுபண்ணக்கூடியனவாயிருக்கின்றன. எதனாலெனில், ஒன்றுக்கொன்று மாறுபடுவவானபொருள்களை அறிவிப்பதனாலென்க.

 

      இந்த வாதிகளுடைய சாத்திரங்களில் காணப்படும் நித்தியத்தன்மை முதலிய ஏதுக்களால் அனுமானஞ் செய்யப்பட்ட உலக தர்மங்களும், கருத்தாவோடு கூடாமலிருக்குந் தன்மை; அவித்தையைக் கருத்தாவாகவுடையதாயிருக்குந் தன்மை; பரமாணுவின் காரியமாயிருக்குந் தன்மை; இன்னவிதமென்று கூறமுடியாத அநிர்வசனமாயிருக்குந் தன்மை; வாசனாரூபமான அபிப்பிராயத்தாலுண்டாயிருக்குந் தன்மை முதலியனவாய் ஒன்றுக்கொன்று மாறுபடுவனவேயாகும். இவ்வாறே அவர்களால் நிச்சயிக்கப்பட்ட பொருள்களை யறிவிக்கின்ற அவர்களுடைய சாத்திரங்களும் மாறுபடுவனவேயாகும்.     

 

      ஆகையால், பிரத்தியக்ஷம் அனுமானம் சத்தம் என்று கொள்ளப்பட்டனவாயும், இம்மூன்றனுள் அடஙகக்கூடிய உவமானம் அருத்தாபத்தி முதலியனவாயும், மோகத்தைச் செய்வதாபொருளைத் துணையாய் விரும்புகின்றவஆயும், அதுபற்றி சொப்பனத்துக்கு நிகராயும் உள்ள பசுத்தன்மையுடைய ஆன்மாக்களின் பொய்யான அறிவிற்குப் பிரமாணத்தன்மை உண்டென்று கூறுதல் கூடாது.

 

      அவ்வாறாயின், சுத்தமான இந்திரியங்களை யுடையசாதகனது அறிவிற்கு வெளிப்பொருள்களை யறியும் விஷயத்தில் பிரத்தியக்ஷத்தன்மை உண்டென்பது ஒத்துக்கொள்ளக் கூடாதோவெனின், இந்தக்கேள்வி பயனற்றது. எதனாலெனில், கூறுகிறோம். அந்தச்சுத்த இந்திரியமானது, சிரவணகாலத்தில் மோகத்தை யுண்டுபண்ணிய இந்திரியங்களை வெற்றிகொள்ளுதல் மாத்திரத்தாலேயே பயன் பெற்றமையால், அந்தச் சுத்த இந்திரியத்திற்கு வெளிப்பொருள்களை விளக்கஞ்செய்வதில் சாமர்த்தியங் கிடையாது.

 

      அவ்வாறாயின், மோகத்தைக் கொடுக்கும் தேகம் இருக்கும் பொழுது ஞானத்தைக் கொடுக்குந்தேகம் உண்டாகாதேயெனில், சர்ப்பமானது தனது வெளித்தோலான சட்டையின் முதிர்ச்சிக் காலத்தில் அதனைத்தள்ளி விடுவது போல், ஆன்மாவிற்கும் வெளி இந்திரியங்களின் பரிபாக காலத்திலேயே சூக்குமமான உள்ளிந்திரியங்கள் உண்டாகலாமென்க.

 

      ஆகையால், நித்தியமாயும் மலவற்றதாய்ம் விசேடமற்றதாயும் எல்லா ஆன்மாக்களையும் அறிவதாயுமிருக்கும் ஈசுவரனுடைய அறிவும், அவனுடைய அனுக்கிரகத்தால் மலம் நீங்கப்பட்டதாயும் மலம் நீங்கப்படுகிறதாயுமிருக்கும் ஆன்மாவின் அறிவுமே நமக்குப் பிரமாணமென்று பிரமாண இலக்கணஞ்சித்தித்தமை காண்க.

இரண்டாவது பிரமாண பரிச்சேதம் முற்றிற்று.

 

 

மூன்றாவது பதி பரிச்சேதம்

      இனி, பிரமாண பரிச்சேதத்திற் கூறப்பட்ட அளவைகளால் அறியப்படும் பொருள்களான பதிபசு பாசங்கள் அறிவிக்கப்படுகின்றன. அப்பொருள்களுள் முதலாவதான பதிப்பொருள் சிவனென்று இப்பரிச்சேதத்தில் கூறப்படுகின்றது.

 

      சிவத்தன்மையாவது எல்லாப்பொருள்களையும் ஒரு சேர அறிந்து எல்லாச்செயல்களையும் ஒருசேரச்செய்யும் ஞான ரூபம் கிரியா ரூபமான சத்தியுடன் கூடியிருப்பதாகும். இவ்வித ஞானக்கிரியாசத்திகள் பசுவினிடத்தில் களிம்பால் செம்புபோல் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் பசுவினிடத்திலிருக்கும் ஞானக்கிரியாசத்திகள், (அநாதியே) களிம்பால் மறைக்கப்பெற்ற செம்புபோல் (அநாதியே) மலத்தால் மறைக்கப்பெற்றிருத்தலால் அந்தச்சத்திகள் இல்லை யென்பதற்கு ஒப்பாகு மாகையால் பசுவினிடத்தில் அதிவியாத்திக்குற்றம் நிகழாதென்க.

 

      இவ்வாறன்றிப் பதிக்கு வேறுவிதமான இலக்கணங் கூறுகின்றோம். அஃதாவது, இன்றியமையாத தருமமான சுதந்திரத்தன்மையே பதிக்கு இலக்கணம் என்பதாம். இந்தச் சுதந்திரத்தன்மை யென்னுமிலக்கணம் அனாதியே மலத்தின் சேர்க்கையுடைமை பற்றிச் சடம்போலும் உள்ள பசுவுக்கும் சடமாகவே இருக்கும் பாசத்திற்கும் இல்லாமையால் இந்த இலக்கணத்திற்கு அதிவியாத்திக்குற்றம் இல்லாமை காண்க.

 

      சுதந்திரத் தன்மையாவது, பிறபொருளால் தான் ஏவப்படாமலிருந்து எல்லாப்பொருளையும் தான் ஏவுதலாகும். இவ்வித சுதந்திரத்தன்மை, பசுபாசங்களை ஏவுகின்றவராயும் ஈசுவரத்தன்மை என்னும் சுவரூபவிளக்கலாபத்துடன் கூடியவராயுமிருக்கும் பதியினிடத்திற்றான் நிலைபெறும்.

 

      இத்தன்மையினையுடைய பதிபொருள் பரமசிவன் ஆன்மசிவனென்னும் இரண்டுவிதமான வேறுபாடுடையது. அந்த இரண்டு சிவன்களுள் முதன்மையான பரமசிவன் இயல்பாகவே சித்தித்துள்ள சுதந்திரத்தன்மையோடு கூடியிருக்கின்றான். அந்தப்பரமசிவனுக்கும் அனுக்கிரகஞ்செய்வதற்கு வேறு ஈசுவரனுண்டென்று கொண்டால் அவனுக்கும் மற்றொருவர் வேண்டுமென்றாகி அவ்வாறே மேலுஞ்சென்று வரம்பின்றி ஒடலென்னும் குற்றத்திற்கிடனாகும். ஆகையால் அந்தப் பரமசிவன் ஒருவனேயாவன். அந்தப் பரமசிவன் அனாதியாகவே சித்தித்த படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அனுக்கிரகித்தலென்னும் ஐந்து தொழில்களைச் செய்வதற்காக மந்திரமயமான ஈசான முதலிய ஐந்து வடிவமுடையவனாக ஆசிரியர்களால் தியானஞ்செய்யப்படுகின்றான்.

 

      அந்தப் பரமசிவனுடைய அனுக்கிரகத்தால் சுதந்திரத்தன்மை அடையப்பெற்றுள்ள ஆன்மசிவன் அநேகர். அவர்களுள், இலய அவத்தையடைந்த ஆன்மசிவன்கள் வெளியிலே செல்லும் விருத்தியின்றி அகத்தில் தன்னிடத்தில் ஒடுங்கி நிற்பவர்களாகையால் அவர்களுக்கு அதிகாரங்கிடையாது. ஆதலால் அவர்கள் விஷயத்தில் சரீரம் உண்டென்று கூறுவதில் பிரயோசனமில்லை. போகஅவத்தை அதிகாரஅவத்தை அடைந்தவர்கள் விந்து சம்பந்தமான தேகத்துடன் கூடியிருத்தலால் அவர்கள் விஷயத்திலும் வேறு சரீரம் உண்டென்று கூறவேண்டாம்.

 

      பரமசிவனது சரீரமாகக் கூறப்பட்ட அந்த ஐந்து மந்திரங்களும் பரமசிவனடத்தில் பிரிக்கமுடியாத சம்பந்தத்திலிருத்தலால் அவனது சத்திகளேயாகும். ஈசானமுதலிய பெயர்களுடன் கூறப்பட்ட அந்த மந்திரங்களாலேயே பரமசிவனுக்குச் சிரசு முதல் பாதமீறான அவயவமுடைய வடிவமானது கூறப்படுகின்றது. அஃதெவ்வாறெனில், பரமசிவன் நித்தியமாயும் மலமில்லாததாயும் இருக்கும் ‡ அதிசயமில்லாத அறிவுடன் கூடினவனாயிருக்கிறபடியால் விகாரமற்றவனாயிருக்கின்றான். [‡ அதிசயம் – புதிது புதிதான தோற்றம்.]  ஆதலால் நாசமுடையதாயும் மலமுடையதாயும் அதிசயத்துடன் கூடியதாயும் சடமாயும் உள்ல சரீரம் அவனுக்கு உண்டென்று கூறுதல் கூடாது. ஆகையால் அவன் சரீரமில்லாதவனாயிருந்த போதிலும் அவனிடத்தில்  விட்டுப்பிரியாமல் சமவேதமாயிருக்கும் சத்திரூபமான சோதியையே மகிமை பொருந்திய சரீரமாகப் பாவித்துச் சாதகர்கள் தங்கள் காரியத்தைச் சாதிக்கின்றனர். அவ்விதமான சரீரத்தைச் சாதகர்கள் பாவிக்கவில்லையாயின் அவர்களது காரியம் முடிவுபெறாது. ஆகையால் தங்கள் காரியசித்தியின் பொருட்டுச் சரீரமில்லாத பரமசிவனுக்குச் சரீரத்தைப்பாவிக்கின்றனர்.

 

      இந்தப் பரமசிவனது சத்தி உண்மையில் ஒன்றாயிருக்கும் அறியப்படும் பொருள்கள் செய்யப்படும் பொருள்கள் ரூபமான * உபாதிகளின் வேறுபாட்டால் அறிவு செயல் என்னும் வேறு பாட்டையடைகின்றது. [* உபாதி – பிரிப்பதற்குச் சாதனமாவது.] அடையவே, அந்த ஞானசத்திகிரியா சத்திகளும் உபாதி வேறுபாட்டால் பல வேறு பாட்டையடைந்தாலும், பிரதானமாக முதலாவதான ஞானசத்தியுடன் விட்டுப் பிரியாது இரண்டாவதான கிரியாசத்தியானது உலகத்தைப் படைத்தல் முதலிய ஐவகைத்தொழில் வேறுபாட்டால் ஐவகையான வேறுபாட்டை யடைகின்றது. அதுபற்றியே அந்தச் சத்தி வேறுபாடுகள் மந்திரங்களென்று கூறப்படுகின்றன. மந்திரமென்பது மனனம் திராணம் எனப் பிரிக்கப்படும். அவற்றுள் மனனமாவது எல்லாமறிதல். திராணமாவது சமுசாரியைக்காத்தல். எனவே மந்திரமென்பது எல்லாவற்றையு மறிந்து சமுசாரியைக்காத்தல் என்னும் பொருளைத்தரும்.

 

      இவ்விதமான ஐவகை மந்திரங்களை வடிவமாகவுடைய பரமசிவன் அனந்தர் முதலிய அதிகாரிகளுடன் நெருங்கி யிருத்தலினால் அதிகாரியெனக் கூறப்படுகிறார்.

      அதிகாரிகளாவார் யாவரெனில், எவர்கள் நேரேயாகவாவது பரம்பரையாகவாவது பரமசிவனிடமிருந்து சித்தாந்த சாத்திரங்களை அடையப்பெற்றவர்களாயும், முற்றுணர்வு முதலிய குணங்களையுடையவர்களாயும், மலபரிபாகம் நிறைந்திருந்தும் அதிகாரமலம் எஞ்சியிருத்தலால் பசுக்களுக்கு அனுக்கிரகஞ்செய்வதான அதிகாரத்தின் பொருட்டு அபிஷேகத்துடன் கூடிய தீக்ஷையை யுடையவர்களாயும் இருக்கிறார்களோ அவர்களே அதிகாரிகளாவர். இந்த அதிகாரிகளே அபரசிவனென்றும் ஆன்மசிவாசாரியகளென்றுங் கூறப்படுகின்றனர்.

 

      இவ்விதமான ஆன்மசிவன்களுள், சிருட்டியாரம்பத்தில் பரமசிவனால் நேரே அனுக்கிரகஞ்செய்யப்பட்டு விஞ்ஞானகேவல நிலையில் மந்திரமகேசுவரத் தன்மையில் ஏவப்பட்டவர்களாயும் மகேசுவரதத்துவத்தில் வாசஞ்செய்கிறவர்களாயும் உள்ள அனந்தர் முதலிய வித்தியேசுவரர் எண்மர் விளங்குகின்றனர். அவ்வாறே சுத்தவித்தியாதத்துவத்தில் மந்திரத்தன்மையில் ஏவப்பட்டவர்களாய் ஏழுகோடி ஆன்மசிவன்கள் விளங்குகின்றனர். அவ்வாறே பிரளயகேவல நிலையில் மலமற்றவர்களாய்ச் செய்யப்பட்டு மந்திரேசுவரத்தன்மையில் ஏவப்பட்டவர்களாய் மண்டலி முதலிய நூற்றுப்பதினெட்டு ஆன்மசிவன்கள் கலைமுஹ்டல் பிருதிவி ஈறான தத்துவவரிசைகளில் வசிக்கின்றனர். சகல நிலையில் பரம்பரையாக அனந்தர் வாயிலாய் அனுக்கிரகஞ்செய்யப்பட்டு ஶ்ரீகண்டர் முதலிய அளவில்லாத உருத்திரர்கள் பிரமாண்டங்களுக்கு அதிபதியாயிருக்குந் தன்மையில் ஏவப்பட்டிருக்கின்றனர். அவ்வாறே அந்த உருத்திரர்கள் வாயிலாய்ச் சிற்சில தேவர்களும் அந்தத் தேவர்கள் வாயிலாய்ச் சிற்சில மனுடர்களும் அனுக்கிரகஞ்செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு ஆசிரியர்களின் தொடர்ச்சியானது அதனை யறிவிக்கும் நூல்களால் அறியத்தகுந்தது.

 

      இந்த உருத்திரர்களனைவரும் சகலாவத்தையில் மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரமென்னும் நான்கு விதமான சத்திநிபாதத்தை அனுசரித்து அனுக்கிரகிக்கப் பெற்றிருக்கின்றனர். எதனாலெனின், திதிகாலத்திற்றான் அவர்களுக்கு மலபரிபாகம் நிகழ்கின்றமையாலென்க. இந்தத் திதிகாலத்தில் முத்திசாதனங்களைப் பூரணமாய் அடைந்தவர்களுக்கு முறையாகவே முத்தி நிகழ்கின்றது. திதியின் அந்தத்திலாவது பிரளயத்திலாவது அதிகாரிகளில்லாமையால் நிறைந்த மலபரிபாக முடையவர்களுக்கு உடனே முத்தி நிகழ்கின்றது. ஆதலால் அதிகாரம் பெற்ற எல்லா ஆன்மசிவன்களுக்கும் பதிபதார்த்தத்துள் அடக்கங் கூறப்படுகின்றது. எதனாலெனின், அந்த ஆன்மசிவன்கள் முற்றுணர் வுடைமை முதலியவற்றுடன் கூடியிருக்குங்காலத்துப் பதியுடன் சமானமாயிருத்தல் பற்றிப் பதியின்றொழிலைச் செய்தற்கு உரியராயிருத்தலாலென்க. (இதுவரையில் அதிகாரிகளாவார் இவரென்பது கூறப்பட்டது.)

 

      இனி, அதிகாரமாவது † பின்னர்க் [† பின்னர் – பசு பரிச்சேதத்தில்.] கூறப்படும் இலக்கணங்களையுடைய பசுக்களுள் பக்குவமலர் அபக்குவமல ரென்னும் இருகூட்டத்துக்கு முறையே சுத்தாசுத்தபோகங்கள் நிகழ்வதின் பொருட்டு விந்து மாயைகளால் உண்டுபண்ணப்பட்ட தனுகரணபுவன போகங்களுடன் சம்பந்தத்தை யுண்டுபண்ணுதல் சிருட்டி; அப்புவனங்களில் போகத்தைய நுபவிக்கச் செய்தல் திதி; பின்னர் இளைப்பாறுதலின் பொருட்டு அப்புவனங்களிலிருந்து ஆன்மாக்களை விலகச்செய்தல் சங்காரம்; அப்போகங்களுள் இது தள்ளத் தகுந்தது என்னும் அறிவு உண்டாகாமல் தடுத்தல் திரோதானம்; பின்னர் தள்ளத்தகுந்தது என்னும் அறிவையுண்டுபண்ணி அதன் வழியாய் சுதந்திரத்தன்மையக் கொடுப்பது அனுக்கிரகம்; இவ்வாறு சிருட்டிதிதி சங்காரம் திரோதானம் அனுக்கிரகம் என ஐவகைப்படும்.

 

      இந்த இன்றியமையாத அதிகாரமான ஐந்து தொழிகளும் அனாதியே முத்தனான பரமசிவனுக்கு சுத்தாத்துவா வாசிகளிடம் நேரே உண்டாகின்றன. அசுத்தாத்துவா வாசிகளிடம் அனந்தர் வாயிலாய் நிகழ்கின்றன. இவ்வாறு ஐந்தொழிலை புரிதல் தான் பரமசிவனுக்கு முதலாவதான அதிகார அவசரமெனப்படும்.

 

      இனி, இரண்டாவது போக அவசரமாகும் அஃதெவ்வாறெனில், எவர்கள் யாதாவதொருவிதமான தகுதியின் மிகுதியால் அதிகாரம் நீங்கினவர்களாய்ச் சத்திசம்பந்தமான போகத்தில் மாத்திரம் ஆசையுடையவர்களாய்ச் சத்திதத்துவ சதாசிவதத்துவங்களில் வாசஞ்செய்கின்றனரென்று ஆகமங்களில் கூறப்படுகின்றனரோ அவர்களே போகிகளெனப்படுவர். அவர்களிடத்து விளங்கித்தோன்றும் பரமசிவன் போகி என்று கூறப்படுகிறார்.

 

      மூன்றாவது இலய அவசரமாகும் இந்த இலயாவசரமே வெகுகாலமாய்ப் போகத்தைத்தண்டின் ஆன்மசிவன்களுக்குப் பாசநீக்கத்தின் மிகுதியால் மிகவும் பரிபூரணமான சொரூபத்தை விளக்கஞ்செய்வதால் பரமோக்ஷ மென்னும் சொல்லால் கூறப்படுகின்றது.

 

      இம்மூன்றனுள், அதிகாரஅவத்தை போகஅவத்தை என்னும் இரண்டற்கும், கீழுள்ள பசுத்தன்மையை நோக்கி மோக்ஷத்தன்மை யிருப்பினும், மேலுள்ள இலய அவத்தையை நோக்கிப் பந்தத்தன்மையே இருக்கின்றதென நிச்சயித்து ஆசிரியர்களும் இந்த இலயாவத்தையை யடையவேண்டுமென்ற தனது எண்ணம் நிறைவேறும் பொருட்டு ஈசுவரனை ஆராதிக்கின்றனர். ஆகவே, இலயாவத்தை அடைந்தவர்களுள் ஈசுவரன், முக்கிய திருட்டாந்தமாக வைத்து இலயி என்று கூறப்படுகின்றான்.

 

      இவ்வாறு ஆன்மசிவரூபமான உபாதி வேறுபாட்டால் உண்டான மூன்று விதமான வேறுபாட்டையுடைய பரமசிவன், நூல்களில் எதிர் நிரனிரையாக * சத்தன் உத்தியுத்தன் பிரவிருத்தன் என்றும், நிஷ்களன் சகளநிஷ்களன் சகளன் என்றும், சிவன் சதாசிவன் மகேசுவரனென்றும் வேறுவேறான சொற்களாற் கூறப்படுகின்றார். [* இலயத்தை முதலாகக்கொண்டு பொருள் கொள்ளல்.]

 

      அவ்வாறாயின், பரமசிவனுக்கு இலயி போகி அதிகாரி என்னும் வேறுபாடு அவனது பரிக்கிரக சத்திரூபமான விந்துவென்னும் உபாதி வேறுபாட்டால் நிகழ்கிறதென்று நூல்களில் கூறப்படவும், ஆன்ம சிவரூபமான உபாதி வேறுபாட்டால் நிகழ்கிறதென்று கூறுதல் எவ்வாறு பொருந்துமெனில், அஃதுண்மையே. ஈசுவரனுடைய பரிக்கிரக சத்தியாவது, பரை மகாமாயை விந்து குண்டலிநீ என்னும் பலவிதமான சொற்களால் கூறப்பட்டதாயும், சுத்தத்துவங்களுக்கு முதற்காரணமாயு மிருக்கும் சிவதத்துவமேயாம். அந்தச் சிவதத்துவத்தின் காரியமான சத்தி முதல் சுத்த வித்தை முடிவான நான்கு தத்துவங்களில் முறையே சூக்குமதூலபோகங்களின் அதிகாரத்திற்கு உரியரான சுத்தான்மாக்களிருக்கின்றனர். அந்தச் சுத்தான்மாக்களின் தனுகரணங்களும் அந்தச் சிவதத்துவத்திலிருந்து உண்டானவைகளேயாம். ஆகவே, அவ்வித விந்துவின் காரியங்களுக்கும் ஆன்ம சிவன்களுக்கும் அவயவ அலயவித்தன்மையுடன் கூடிய அபேதம் இருத்தலால் பரமசிவனது வேறுபாட்டிற்கு ஆன்ம சிவன்களை உபாதியாகக் கூறுவதில் ஒரு குற்றமுமில்லை யென்க.

 

      ஆகையால் தனது சத்தியால் எப்பொழுதும் அதிட்டிக்கத் தகுந்த விந்துவினுடைய கலக்கப்படாத பாகத்திலும் கலக்குண்ட சூக்குமபாகம் தூலபாகங்களிலும் முறையே இருப்பனவாக அறியப்பட்ட மூன்றுவிதமான ஆன்மவர்க்கங்களால் தனித்தனியே அறியப்பட்ட பரமசிவன் மூன்றுவிதமான வேறுபாட்டை அடைந்திருக்கின்றான். எதனாலெனில், நித்தியனாயும் வியாபகனாயுமிருக்கும் அந்தப்பரமசிவனுக்கு எவ்விடத்தும் எக்காலத்தும் வியாபகமிருத்தலால் என்க. (இலபமுதலிய அவத்தைகளிலிருக்கும் ஆன்மாக்களால் பரமசிவனும் இலயமுதலிய வேறுபாட்டை யடைந்திருக்கின்றான் என்பது இவ்வாறு நிச்சயிக்கப்பட்டமை காண்க.)

 

      அவ்வாறாயின், விந்து என்னும் சிவதத்துவமானது பரமசிவனை விட வேறான திரவியமாயிருத்தலால் அதனை அவனது சத்தியென்று எவ்வாறு கொள்ளலாமெனில், சமாதானங்கூறுகிறோம். கேட்பாயாக. கருத்தாவான பரமசிவன் தனக்குச் சாதனமாயுள்ளதாயும் தன்னிடத்தில் பிரிக்கமுடியாத சம்பந்தத்திலிருப்பதாயும் உள்ள சிற்சத்தியால், சுத்த உலகத்திற்கு முதற்காரணமாக அந்தச் சிவதத்துவத்தைக் கொள்கின்றார். ஆகையால் அவனது சத்தியால் கொள்ளப்பட்டதாயும் அந்தச் சத்தியால் வியாபிக்கப்பட்டதாயு மிருக்கும் அந்தச் சிவதத்துவத்தை உபசாரத்தால் சத்தியுடன் அபேதமாய் சத்தியென்று கூறுகிறோம். அல்லது அந்தச் சிவதத்துவமானது சத்திதத்துவமுதலிய காரிய சத்திகளின் கூட்டமாயிருத்தல் பற்றி அதனைச் சத்தியென்று கூறினதாகக் கொள்ளுதலுமொன்று.

 

      அந்தச் சிவதத்துவ ரூபமான விந்துவுக்குக் கருத்தாவின் அதிஷ்டானமின்றிக் காரியரூபமாகப்பரிணமித்தல் கூடாது. எதனாலெனின், அது முதற்காரணமாயிருத்தல் பற்றிச் சடமாயிருத்தலாலென்க.

 

      அந்தச் சிவதத்துவத்தின் காரியம் சொல் பொருள் என்னும் வேறுபாட்டால் இரண்டுவிதமாயிருக்கின்றது. அவற்றுள் முதலாவதான சொற்பிரபஞ் சமானது, நாதம் விந்து அக்கரம் என்னும் வேறுபாட்டால் மூன்றுவிதமாயிருக்கின்றது. இரண்டாவதான பொருட் பிரபஞ்சமானது, கலை தத்துவம் புவனம் என்னும் வேறுபாட்டால் மூன்றுவிதமாயிருக்கின்றது. அந்தச் சொல்லுக்கும் பொருளுக்கும் எக்காலத்தும் வேற்றுமை கிடையாது. எவ்வாறெனில், சிவசத்தியால் கலக்கஞ்செய்யப்பட்ட விந்துவிலிருந்து சாந்தி என்னும் பெயர்கொன்ட ஒரு கலையானது சந்திரகிரணத்தால் கலக்கப்பட்ட கடலிலிருந்து அலையுண்டாவது போலச் சூக்குமமாயுண்டாகின்றது. அந்தச் சாந்திகலையிலிருந்து வித்தை பிரதிட்டை நிவிருத்தி என்னும் மூன்றுகலைகள் ஒன்றன் பின்னொன்றாய்த் தூலரூபமாய்த் தொடர்ச்சியாயுண்டாகின்றன. அப்பொழுது அந்த விந்துவிலிருந்தே சத்தி என்னும் தத்துவமானது கருத்தாவின் உத்தியோகமாத்திரத்தால் சாந்தி கலைபோல் உண்டாகின்றது. அந்த விந்துவிலிருந்தே சதாசிவம் மகேசுவரம் சுத்தவித்தை என்னும் மூன்று தத்துவங்கள் கருத்தாவின் ஞானக்கிரியாசத்திகளின் சமமான வியாபாரத்தாலும் கிரியை அதிகமான வியாபாரத்தாலும் ஞானமதிகமான வியாபாரத்தாலும் முறையே தோன்றுகின்றன. ஆகவே தத்துவங்களுக்குக் கலைகளாதாரமாயிருத்தலால் அந்தக்கலைகள் தத்துவங்களுக்கு உபயோகம். அந்தத் தத்துவங்கள், புவனங்களுக்கு ஆதாரமாயிருத்தலாலும் சொல்லுக்குப் பற்றுக்கோடாயிருத்தலாலும் அவ்விரண்டற்கும் உபயோகம்.

 

      மேலான முதற்காரணமான அந்தவிந்துவுக்கே, கலை தத்துவம் என்னும் இரு காரியவர்க்கங்களை நோக்கிச் சாந்தியதீதகலை என்றும் சிவதத்துவமென்றும் இரண்டு பெயர்கள் நிகழ்ந்தன. அவற்றுள், சத்திதத்துவத்திற்குச் சாந்தியதீதகலையில் இருப்பும் சதாசிவதத்துவ முதல் சுத்தவித்தியாதத்துவம் ஈறான மூன்றுதத் துவங்களுக்கும் சாந்திகலையிலிருப்புமாகும். வித்தை முதலியகலைகள் மாயாசம்பந்தமான தத்துவங்களுக்குப் பற்றுக்கோடாயிருக்கின்றனவென்று பின்னர்க் கூறப்போகின்றோம்.

 

      ஆகையால் ஆகாய ரூபமான முதற்காரணமாயுள்ள அந்தச் சிவ தத்துவமென்னும் விந்துவில் எல்லாச் சொற்களுக்கும் காரணமாயும் மிகவும் சூக்குமமாயும் உள்ள நாதமென்பது வெளிப்படையாக விளக்கமின்றிச் சூக்குமமாக அடங்கியிருக்கிறதென்பது ஆசிரியர்களாலனுபவிக்கப்படுகிறது. ஆதலினாற்றான் அந்தச் சிவதத்துவத்திற்கு பரநாதம் என்னும் பெயர் நிகழ்ந்தது. அந்த விந்துவிலிருந்து சத்தி தத்துவம் உண்டாகுங் காலத்தில், எல்லாச் சொற்களின் கூட்ட ரூபமாயும் * ஸ்போட ரூபமாயும் [* ஸ்போடம் – பொருளை விளக்கும் ஒலி.] இருக்கும் இந்த நாதமானது சூக்குமமாய் விளக்கமடைகின்றது. இதுபற்றியே அந்தச் சத்தி தத்துவத்திற்குப்  பாவிந்து என்னும் பெயர் நிகழ்கிறது. பின்னர் இந்த ஒலி ரூபமான நாதமானது சாதாக்கிய தத்துவந் தோன்றுங்காலத்தில் மிக விளக்கமாய் தூலமாய் அனுபவிக்கப்படுகிறது. ஆகையினாலேயே இதற்கு அபரநாதமென்பது பெயர். பின்னர் இந்த அபரநாதத்திலிருந்து தத்துவங்களின் சேர்க்கையால் சொற்கூட்டமாகிற அக்கரவிந்து உண்டாகின்றது. இது அபரவிந்துவாகும். பின்னர் இந்த அபரவிந்துவிலிருந்து ஈசுவர தத்துவத்தைச் சார்ந்த சூக்கும எழுத்துக்களும் இந்தச் சூக்கும எழுத்துக்களிலிருந்து சுத்த வித்தியா தத்துவத்தைச்சார்ந்த தூல எழுத்துக்களும் முறையே உண்டாகின்றன.   

 

      இவ்வாறு சத்தி சாதாக்கியம் ஈசுவரம் சுத்தவித்தை என்னும் நான்கு தத்துவங்களை சார்ந்து உண்டாகின்ற நான்கு விதமான ஒலிகள் முறையே சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்னும் நான்கு விதமான சொற்களின் தொழில் ரூபமாய் ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் அவரவர் கன்மத்தை அனுசரித்து விளக்கமடைந்து எல்லாப் பொருள்களுக்கும் வாசகங்களாகச் சித்திக்கின்றனவென்று ஊகிக்கத் தகுந்தது.

 

      அந்தச் சத்தி தத்துவத்தில் சூக்கும போகத்தை அனுபவிப்பதின் பொருட்டு அனாசிருத முதலிய பதினைந்து புவனங்களும், சதாசிவ தத்துவத்தில் தூல போகத்தை அனுபவிப்பதின் பொருட்டு சதாசிவமென்னும் பெயருடைய ஒரு புவனமும், மகேசுவர தத்துவத்தில் சூக்கும போகத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் அனந்தம் முதலிய எட்டுப் புவனங்களும், சுத்த வித்தியா தத்துவத்தில் தூலபோகத்திற்காகவும் தூல அதிகாரத்திற்காகவும் மனோன்மனி முதலிய ஒன்பது புவனங்களும் இருக்கின்றன. இந்தப் புவனங்களையடைந்த மகாத்மாக்கள் தத்துவம் புவனமென்னு மிரண்டு ரூபங்களான சூக்கும தூல தேகமுடையவர்களாய் அத்தகைய மிக அழகு பொருந்திய மாலை சந்தனம் பெண் முதலியவைகளுடன் மிகவும் அதிகமான போகத்தையுடையவர்களாய் சிவானந்தானுபவத்துடனும் கூடி விளங்குகின்றார்களென்பது கூறவா வேண்டும்.

 

மூன்றாவது பதி பரிச்சேதம் முற்றிற்று.

 

நான்காவது பசு பரிச்சேதம்

      பசுக்களான ஆன்மாக்கள் அநேகர்; சேதனர்; பாசத்தால் தடைப்பட்ட அறிவையுடையவர்; ஆதலினால் சுதந்திரத்தன்மை இல்லாதவர்; பதியின்றொழிலுக்கு விடயமாயுள்ளவர்; அதனால் பதியாலனுக்கிரகஞ் செய்யத் தகுந்தவர்; நித்தியர்; வியாபகர் என்னும் இவ்விதமான அநேக இலக்கணமுடையவராவர்.

 

      இந்த இலக்கணங்களையுடைய ஆன்மாக்கள் விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சகலர் என்னும் மூன்றுவிதமான வேறுபாட்டையுடையவர்களாய் விளங்குகின்றனர். அம்மூவர்களுக்கும் சுதந்திரத்தன்மையை இல்லை என்னும்படி செய்யக்கூடிய ஆணவமலம் கன்மமலம் மாயாமாமென்னும் பாசங்களுள், விஞ்ஞானாகலரிடத்தில் ஆணவமலம் ஒன்றும், பிரளயாகலரிடத்தில் ஆணவம் கன்மமிரண்டும், சகலரிடத்தில் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் இருக்கின்றன.

 

      அஃதெவ்வாறெனில், எந்த ஆன்மாக்கள், சாமானிய சாத்திரங்களால் அறியப்பட்ட ஞானம் யோகம் சன்னியாசம் முதலிய உபாயங்களினாலாவது போகானுபவத்தினாலாவது எல்லாக் கன்மங்களும் நாசமடையப்பெற்றவர்களாயும், அந்தக் கன்மங்களின் அனுபவத்திற்குச் சாதகமாயுள்ள மாயா காரியங்களான சூக்கும தூல தேகங்களின் சம்பந்தத்தை விட்டு மிகவும் விலகியிருக்கிறவர்களாயும், ஆணவமலமொன்று மாத்திரமுடைய கேவலர்களாயும், மலபரிபாகம் நிகழும் வரை பராபர மோக்ஷத்தையடையாமல் மாயைக்கு மேற்பட்ட சுத்த வித்தியா தத்துவத்தில் வசிப்பவர்களாயும் நூல்களில் கேட்கப்படுகிறனரோ அந்த ஆன்மாக்களே விஞ்ஞானாகலராவர். அவர்கள் ஆணவ மலமென்னும் ஒரு பாசத்தையுடையவர்கள். எதனாலெனின், அந்த மலத்தின் வேறான கன்மம் மாயையென்னும் இரண்டு பாசங்களுக்கும் மேற்பட்டவர்களாகையாலென்க.

 

      அவர்களுள், சிலர் சிருட்டியின் ஆரம்பத்தில் மலபரிபாகத்தின் வேற்றுமைக்குத் தக்கவாறு பதியால் நேரே அனுக்கிரகிக்கப்பட்டு மேலே கூறப்பட்ட சுத்த வித்தியா தத்துவத்தில் போகானுபவத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் முறையே மந்திரேசுவரர்களாகவும் மந்திர மகேசுவரர்களாகவும் ஏவப்படுகின்றனர்.

 

      வேறு சிலர், மலத்தின் பரிபாக மிகுதியால் போகத்தினிடத்தும் அதிகாரத்தினிடத்தும் ஆசையற்றவர்களாய் பதியால் மோக்ஷத்தையடைகின்றனர். எஞ்சிய ஆன்ம வர்க்கங்கள் மலபரிபாகம் நிகழும் வரை திடமான மலத்தடையால் ஒன்றுமறியாதவர்களாய் * கைவல்லியாவத்தையிலேயே இருக்கின்றனரென்று பெரியோர்கள் கூறுகின்றனர். [* கைவல்லியாவத்தை – விஞ்ஞான கேவலாவத்தை.]

 

      அவ்வாறாயின், விஞ்ஞான கேவலர்களிடத்தும் ஆன்மத்தன்மை யிருக்கின்றமையால் அந்த விஞ்ஞான கேவலர்கள் வியாபகமாயிருக்க வேண்டும். அவ்வாறன்றி விந்துவின் காரியமான சுத்தவித்தை ஈசுவர மென்னுந் தத்துவங்களில் அவர்களுக்கு இருப்புக் கூறப்படுகின்றது. அது எவ்வாறு பொருந்துமெனின், கன்மமலமில்லாதவர்களாதலால் மாயா காரியத்தைத் தாண்டினவர்களாயும் சிறிது காலத்துள் விந்துவின் காரியங்களான ஏனைய தத்துவங்களை அடைபவர்களாயும் இருக்கின்ற விஞ்ஞானகலர்களுக்கு ஏகதேசமான நடுப்பாகத்தில் இருப்புக்கூறியது உபசாரமேயாகும்.

 

      அற்றேல், ஆன்மாக்களுக்குக் கைவலயமே மேலான மோக்ஷமென்று எல்லா நூல்களாலும் நிச்சயிக்கப்பட்டிருக்கவும் அந்தக் கைவல்லியத் தன்மையில் பசுத்தன்மை நீங்கவில்லையென்பது எவ்வாறு பொருந்துமெனில், அவ்வாறன்று. அந்தக் கைவல்யரூபமான முத்தியானது சித்தாந்த சாத்திரங்களல்லாத வேறு சாத்திரங்களிற்றான் பிரசித்தமாயிருக்கின்றது. சித்தாந்த சாத்திரங்களில் தன் சொரூபத்தினுடைய விளக்கமே ஆன்மாக்களுக்கு முத்தியென்பது பிரசித்தம். அந்தச் சொரூபமானது சருவஞ்ஞத்துவ சருவ கருத்திருத்துவ ரூபமான சிவத்தன்மையென்பது மேலே கூறப்பட்டுள்ளது. இவ்விதமான சிவத்தன்மை யென்னும் தனது சொரூபத்தின் விளக்கம் கைவல்யாவத்தையிற் கிடையாது. எதனாலெனின், அந்தக் கைவல்யாவத்தையிலும் தனது சொரூபத்தை மறைக்கும் மலம் நசியாமையாலென்க. எப்பொழுது மலம் நசிக்குமோ அப்பொழுதே தனது சொரூபம் விளங்கும். பிற மதஸ்தர்களுடைய முத்தியில் சர்வக்ஞ்த் தன்மை முதலியவற்றின் விளக்கங் கேட்கப்படவில்லை.

 

      அஃதெவ்வாறெனில், வேதாந்த மதத்தில் சச்சிதானந்த ரூபமான ஆன்மாவைத் தவிர வேறுவிதமான பொருள்கள் ஒத்துக்கொள்ளப்படவில்லை. அறியப்படுவதற்கு விடயமின்மையால் அந்த ஆன்மாவிற்குத் தர்மி ரூபமான * சுவசம்வித்து, தர்மரூபமான ‡ பரசம்வித்து என்னும் வேறுபாடு பொருந்தாது. எல்லாத் தர்மிகளுடைய தருமங்களும் எல்லா விடத்திலும் தன்னைத் தவிர வேறு பொருள்களிலேயே பிர்காசிக்கின்றது. எதுபோலுமெனின், அக்கின்யென்னுந் தருமியினுடைய சூடு என்னுந் தருமமானது அந்த அக்கினியின் வேறான விறகு முதலியவற்றில் விளங்குவது போலுமென்க. [* சுவசம்வித்து – தன்னறிவு, அதாவது யானென்னும் அறிவு, ‡ பரசம்வித்து – பிற பொருளையறியும் எனதென்னும் அறிவு.]

 

      தரும ரூபமான அறிவின் றொழிற்பாட்டிற்கு உண்மையான விடயமில்லாவிடினும் பொய்யான விடயம் இருக்கின்றதென்மையாயின், பொய்யான விடயத்தையறியும் ஆன்ம அறிவிற்கும் பொய்த்தன்மை நிகழும். நிகழவே, அந்த அறிவிற்குப் பொருட்டன்மையில்லை யென்பது சித்திக்கும். அதுவே நமது கருத்தென்பையாயின், அது பொருந்தாது; ஆன்மாவின் தருமமான அறிவு பொய்யாகவே அந்தத் தருமத்திற்குத் தருமியான ஆன்மாவும் பொய்யெனப்படுமாகையாலென்க.

 

      தருமித் தன்மை தருமத் தன்மை யென்னும் இரண்டு தன்மைகள் ஆன்மாவினிடத்து நாங்கள் கொள்கிறதில்லையென்பையாயின், தரும தருமித்தன்மையில்லாத பொருள் ஒன்றுஞ் செய்யமாட்டாமையின், பகுத்துணர்த்தக்க அருத்தாபத்திப் பிரமாணத்தானும், உளதாந் தன்மை மாத்திரையால் ஒரு பொருள் சாதித்துப் பெறப்படமாட்டாமையானும் அக்கூற்றுப் பொருந்தாது. அஃதாவது – ஒரு காரியத்தைச் செய்தல் தரும தருமித்தன்மையில்லாத பொருளுக்குக்கூடாது ஆதலின் இரண்டு தன்மையுடைய பொருள் உண்டென்பது அருத்தாபத்திப் பிரமாணத்தால் சித்திக்குமெனக்கூறி, இதன்மேல் தருமியாகப் பொருளும் தருமமாக உளதாந் தன்மையும் இருக்கின்றனவென்பாரை மறுத்தற்பொருட்டு எல்லாப் பொருளுக்கும் பொதுத் தருமமான உளதாந்தன்மையைக் கொண்டு சிறப்பான ஒரு பொருள் சாதிக்கட்படமாட்டாதென்பது அறிவித்த்ற்கு இரண்டாவது ஏதுவுந் கூறப்பட்டவாறாமென்க.

 

      இனி, தன்னையறிபவன் வேறு இல்லாமையால் சாதிக்கப்படுந் தன்மையில்லையென்பையாயின், இது அழகாயிருக்கின்றது; உபாசிக்கப்படுந் தன்மையுண்டென்று கூறுஞ் சுருதி பயனற்றதாகுமாகையால்.

 

      ஒரு பொருளுக்கே உபாசிக்கபடுந் தன்மையும் உபாசிக்குந் தன்மையும் உண்டென்று கொள்வோமென்பையாயின், அது பொருந்தாது; அந்த இரண்டு தன்மைகளும் சம்பந்தமுடைய இரண்டு பொருள்களுக்கு உளவாவனவன்றி ஒரு பொருளுக்கு உளவாகாமையால்.

 

      ஒரு பொருளுக்கே இரண்டு தன்மைகள் உபாதியினால் சித்திக்குமென்று கருதுவையாயின், அந்த உபாதி சத்தா? அசத்தா? சத்தாயின் உபாதி ஒரு சத்தும் பொருள் ஒரு சத்துமென இரண்டு சத்துக்கள் உளவெனப்பட்டு ஒரு பொருளுண்டென்னும் அத்துவிதம் நிலையாது. அசத்தாயின் அந்த உபாதியை விலக்குதற்காகச் செய்யும் உபாசனையும் அசத்தாகும். அசத்தான கிரியையால் சத்தான பலன் அடையப்படுகிறதுமில்லை. ஆகையால் உபாசிக்கப்படுபவன் உபாசிப்பவன் என்னும் சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள வேறுபாட்டிற்குக் காரணமான ஒரு பொருளை உள்பொருளாகவே கொள்ளல் வேண்டும் அந்தப் பொருளே உபாசிக்கப்படுபவன் உபாசிப்பவன் என்னும் அறிவுடைப் பொருள்களின் அறிவால் அறியப்படும் பொருளாம். (அஃதாவது – மலமென்று மொருபொருளை உள்பொருளாகக்கொண்டாற்றான் மலத்தாற் கட்டுப்பட்ட சீவன் மல நிவிர்த்தியின் பொருட்டு உபாசிப்பவனாகவும், மத்தாற் கட்டுப்படாத சிவனே மலத்தை நீக்குதற்கு உரியனாதலின் உபாசிக்கப்படுபவனாகவும் ஆகுமென்பதாம்.)

 

      ஆகவே, அறிபவனாந் தன்மைச் சத்தி வடிவாய ஆன்மாவினியல்பை மலத்தோடு கூடியதாக முத்தியின்கணுடம் படாத பூர்வ பக்ஷியால் அந்த ஆன்ம சொரூபத்தை மறைக்கும் அநாதி மலமென்னும் பெயருடைய ஒரு பொருள் உண்டென எந்தக் காலத்திலாவது கேட்கப்பட்டிருக்கவேண்டுமென்பது சித்தாந்தைகளின் கருத்து.

 

      ஆகையால் இவ்வாறு வேதாந்திகள் கூறும் கைவல்யமானது (மலம் நீங்காமையால்) விஞ்ஞான கேவலத்தன்மை யென்பது நாட்டப்பட்டது.

 

      இனி, சாங்கிய மதத்திலும் வேதாந்தத்திற் போலவே முயற்சி விசேடத்தால் பெறப்பட்ட பிரகிருதி புருடவிவேக ஞானத்தால் கன்மம் நசிக்க பிரகிருதியினொடுக்க ரூபமான கேவலத்தன்மையே முத்தியாகக் கூறப்படும். மூலப்பிரகிருதியினொடுக்க ரூபமான இந்தக் கேவலத்தன்மையும் பசு நிலையேயாகும்; மூலப்பிரகிருதி யினொடுக்கத்தில் தான் மாத்திரமாய் நிலைத்திருக்கும் புருடனுக்கு ஒரு பொருளாவது விளங்குவதாக (சாங்கிய நூலில்) எவ்விடத்துங் கேட்கப்படாமையால்.

 

      ஆயின், சாங்கியர்களாலும் முற்றறிவுடைமை உடம்பொடு கூடிய கேவலத்தன்மையாகக் கொள்ளப்பட்டிருக்கின்ற தென்பையாயின், இதுவே எவ்விடத்தும் நிறைந்து அறிவு ரூபமாகையால் மேலான உறுதிப்பயனாதல் பற்றி இதனின் மேலான உறுதிப்பயனில்லாமையால் பின்னர் எந்தக்காரணத்தால் இது விடப்படுகிறது? சொல்வாயாக.

 

      துணையாகிய பிரகிருதி நீக்கத்தால் அந்த முற்றறிவு நீக்கப்படுகிறதென்பையாயின், அவ்வாறாயின் துணையின் அளவினதாக விளங்கும் அறிவு எல்லாப் பொருளையும் அறியமாட்டாதாம். ஆகவே, முற்றறிவை மறைப்பதாய் நிச்சயமாகப் பெறப்படும் (மலமென்னும்) பொருள் நீங்கவில்லையென எம்மாற் கருதப்பட்டதே நிலைபெற்றது.

 

      இவ்வாறே, கன்மநாசம் முத்தியெனக் கூறும் பிறமதவாதிகளின் கேவலமும் பசு நிலையே யென்பது சித்தித்தமை காண்க.

 

      இனி, பிரளய கேவலத்தன்மை எதுவெனில், கூறுதும், கருணைக்கடலான பரமசிவன் நீண்ட நாளாகச் சம்சாரத்திலாழ்ந்து வருத்தமடைந்த ஆன்மாக்களுக்கு இளைப்பு நீக்கத்தின் பொருடும், கன்மங்களின் தோற்றங்களால் சத்திதேய்ந்திருக்கும் மாயைக்குச் சத்தியை விருத்திசெய்வதின் பொருட்டும், அந்த மாயையினிடத்திலேயே எல்லாக்காரியங்களையும் ஒடுக்கிவைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறொடுக்கிவைத்திருக்குஞ் சமயத்தில் ஆணவமலம் கன்மலமென்னும் இருமலங்களும் கெடாமையினால் அவ்விருமலமுடையவராயும் போகத்திற்குச் சாதனமான கலை முதலியமாயா காரியங்கள் நீக்கப்பெற்றவர்களாயும் உள்ள ஆன்மாக்கள் திரும்பச் சிருட்டி தொடங்கும் வரை மாயையின் மத்தியத்தில் இருக்கின்றனர். அவர்களே பிரளய கேவலராவர். அவர்களுக்குக்கன்ம நாசமில்லாவிடினும் பிரளயத்தினாலேயே கலை முதலிய தத்துவங்கள் நாசமாயினமையால் பிரளய கேவலத்தன்மை நிகழ்ந்தது.

 

      இந்தப் பிரளய கேவலருள் எவருடைய மல கன்மங்கள் பரிபாகமடைந்திருக்கின்றனவோ அவர்கள் பரமேசுவரனால் நேராக அப்பொழுதே பரமோக்ஷத்தை யடைவிக்கப்படுகின்றனர். எதனாலெனின், அந்தப் பிரளய காலமானது அதிகாரத்திற்கு உரிமையற்றதாகையா லென்க.

 

      அவ்வாறாயின், அந்தப் பிரளயகாலத்தில் போக சாதனமின்மையால் போகமற்றவர்களான ஆன்மாக்களுக்குப் போகானுபத்தால் நிகழக்கூடிய மலபரிபாகம் எவ்வாறு நிகழுமெனில், இந்தக் கேள்வி பொருந்தாது. எவ்வாறெனிற் கூறுகிறோம். மாயாகாரியக்களின் சேர்க்கையாலுண்டான சுக முதலியவற்றின் அறிவுரூபமான போகமானது இந்தப்பிரளயத்துக்கு முன்னர் அனாதிமுதல் பரம்பரையில் நாசமாத்திரத்தினாலேயே * பயனடைந்திருக்கின்றமையா லென்க.     [* பயன் – மலபாகத்தை உண்டு பண்ணுதல்.]

 

      திரவிய நாசரூபமான பிரளயத்தில் மனமென்னுந் திரவியத்திற்கு ஆன்மாவென்னும் வேறு திரவியத்துடன் சேர்ந்திருத்தல் எவ்வாறு கூடுமெனின், பிரளயத்தில் மாயையென்ன்னுந் திரவியம் சத்திரூபமாயிருப்பது போல் ஆணவமலமும் சத்திரூபமாயிருக்கிறபடியால் கூடு மென்க.

 

      அன்றியும், பிரளயகாலத்திலுமிருக்கும் சிவசத்தியின் சேர்க்கையே மலபரிபாகத்திற்குக் காரணமாயிருக்கின்றது. அவ்வாறாயின், எல்லா ஆன்மாக்களிடத்தும் சிவசத்தியின் சேர்க்கை இருக்கின்றமையால் ஒரே காலத்தில் எல்லா ஆன்மாக்களுக்கும் மலபரிபாகம் நிகழவேண்டுமென்று கேட்கக்கூடாது; ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் மலசத்திகள் வெவ்வேறாய் இன்றியமையாதிருக்கின்றனவாகக் கேட்கப்படுதலா லென்க.

 

      இனி, கன்மங்களின் பாகமானது மலசத்தியின் பாகத்தினாற்றான் நிகழ்கின்றது. எதனாலெனின், மலமானது எல்லாப் பாசங்களுக்கும் மூலமாயிருத்தலா லென்க.

 

      சில விடங்களில் மலத்திற்குப் பரிபாகமில்லாவிடினும் சிவசத்தியினால் கன்மபரிபாகம் உண்டென்றறியத் தகுந்தது. எதனாலெனின், † கன்ம ஒப்பு நிகழ்கின்றமையா லென்க. [† சிவபுண்ணியத்தால் இருவினை யொப்பு நிகழ்ந்து அதனால் மலபரிபாகம் நிகழுமென்று கூறுமிடங்களை இவ்விடத்தி லெடுத்துக்காட்டியதென்க.]

 

      கன்மங்கள் பக்குவமடைந்திருந்த போதிலும் திதிகாலத்தில் அனுபத்தால் நசிக்கின்றன. அவ்வாறாயின், பிரளயத்தில் போகமின்மையால் போகானுபவத்தால் நிகழக்கூடிய கன்மங்களின் நாசம் எவ்வாறு நிகழுமெனின், அஃதுண்மையே, வேறுபாடுள்ளனவாயும் அளவில்லாதனவாயும் உள்ள கன்ம பரம்பரைகளுக்குப் பாகமானது முறையாகவும் ஒரேகாலத்திலுமாக இரண்டுவிதமாய் நிகழ்கின்றது. அவற்றுள், முறையே பாகமான கன்மங்கள் தேகத்துடன் கூடின அனுபவத்தால் நசிக்கின்றன. ஒரே காலத்தில் பாகமான ஏனையகன்மங்களனைத்தும் சிவானுக் கிரகவிசேடத்தாலேயே நசிக்கின்றன என்றறிந்து கொள்க.

 

      இனி, பரிபாக மடையாத மலகன்மமாயை களையுடைய சகலராயிருக்குந் தன்மை ஏதுவெனில், கூறுகிறோம். மேற்கூறியவாறு சிருட்டிகாலம் வரை ஒரு தொழிலுமில்லாமல் ஒடுங்கியிருக்கும் அவத்தையினால் இளைப்பாறு தலையடைந்தவர்களாயும் திரும்பவும் போகானுபவத்திற்கு உரிமையான நிலையையுடையவர்களாயும் உள்ள ஆன்மாக்களை அறிந்து, மிகவுங்கருணையுடன் கூடிய பரமசிவன் அனந்தேசுவரரிடம் வைக்கப்பட்ட தனது சத்தியால் பின்னர்க் கூறப்படும் மாயாதத்துவத்தைக் கலக்கஞ்செய்து அசுத்தாத்துவா சிருட்டியைத் தொடங்குகின்றார். அந்தச் சிருட்டியால் கலை முதலிய போகசாதனப் பொருட் கூட்டங்களையடைந்தவர்களான பசுக்கூட்டங்கள் சகலரெனப்படுகின்றனர். எதனாலெனின், அந்தப்பசுக்கள் அப்பொழுது மலம் கன்மம் மாயை என்னும் மூன்று பாசங்களையுடையராயிருத்தலா லென்க.

 

      இந்தச் சகலர் விஷயத்தில் சிருட்டியின் ஆரம்பத்தில் மண்டலிமுதலியோர்கள் மாயாகருப்பாதி காரத்தின் பொருட்டு அபர மந்திரேசுவரத் தன்மையில் பரமேசுவரனால் நேராகவே அனுக்கிரகஞ் செய்யப் பெற்றவர்களாயும், அனந்தேசுவரரால் ‡ ஆதிவாகிக தேகத்தை யடைந்தவர்களாயுமிருந்து சகலர்களாக அறியப்படுகின்றனர். ஆயினும் இவர்கள் பசுத்தன்மையுடன் கூடினவர்களாக எண்ணப்படுகிறார்களில்லை; ஆன்ம சிவன்களென்று முன்னரே கூறப்பட்டிருக்கின்றனராதலால். [‡ ஆதிவாகிக தேகம் – போகாநுபத்தால் கன்மங்களை நாசஞ்செய்யத்தக்க சூக்கும சரீரம்.]

 

      அவ்வாறாயின், அதிகாரிகளனைவருக்கும் விந்து சம்பந்தமான தேகச் சேர்க்கை முன்னர்க் கூறப்பட்டிருக்கவும் இப்பொழுது மாயாசம் பந்தமான தேகசேர்க்கையுங் கூறுதல் எவ்விதங் கூடுமெனில், இந்த மண்டலி முதலியோர்களுக்கு அனுக்கிரக காலத்திலேயே விந்து சம்பந்தமான தேகச் சேர்க்கை உண்டாகின்றதாக நிச்சயிக்கப்படுகிறது. அந்தத் தேகம் மிகவும் சூக்கும மாகையால் அது உள்ளேயிருந்தாலும், சகல பசுவர்க்கங்களுடைய அதிகாரத்திற்கு உரியதான தூலமான மாயாசம்பந்த தேகச் சேர்க்கையையும் பற்றுக்கோடாக விரும்புகின்றது. அந்த மாயா சம்பந்தமான தேகமானது மோகத்தை யுண்டுபண்ணக் கூடியதாயிருப்பினும் போதத்தையுண்டுபண்ணும் விந்துசம்பந்தமான தேகத்தின் சேர்க்கையிருத்தலால், மோகத்தையுண்டுபண்ணுந் தன்மையை விட்டுப் போதத்தையே யுண்டுபண்ணுவதாய் போதக தேகத்துடன் ஏகமாகவே விளங்குகின்றது. ஆதலால் மாயாசம்பந்தமான தேகமிருத்தல் பற்றி ஒரு விதமான குற்றமில்லாமை காண்க. இந்த நியாயமானது சகலத்தன்மையுடன் அனுக்கிரகஞ் செய்யப்பட்டவர்களுக்கும் அதிகாரஞ்செய்யுந் தகுதிவாய்ந்த மந்திரேசுவரர்களுக்கும் பொதுவாகும்.

 

      இன்னு மிந்தச் சகலர் விஷயத்தில் சிலர் பக்குவமடையாத மலத்தையுடையவர்களாயிருந்த போதிலும், பாவகன்மங்கள் நசித்து மிகப் புண்ணியகன்ம முடையவர்களாய், அளவில்லாத அறிவின் மேம்பாட்டிற்குக் காரணங்களான சரீரமுதலியவற்றோடு சேர்க்கப்பட்டவர்களாய், அங்குட்டமாத்திர முதல் காலாக்கினி முடிவான புவனங்களிலே அதிபதிகளாயிருந்து பசு சாத்திரங்களைச் செய்பவர்களாக ஸ்தாபனஞ் செய்யப்பட்டிருக்கின்றனர்.

 

      எஞ்சிய ஆன்மவர்க்கங்கள் மூன்று விதமான பாசங்களுடன் கூடியிருத்தலால் அவரவர்களுடைய கன்மங்களை அனுசரித்த சரீரங்களின் சேர்க்கையால் சில பொருள்களை அறியும் சிற்றறிவுடன் கூடினவர்களாய் அனேகவிதமான யோனிகளில் பிறந்து சுகசுக்கானுபவரூபமான போகங்களை அனுபவிக்கும்படி ஏவப்படுகின்றனர். இவர்களே சமுசாரிகளான சகலர்ளென்று கூறப்படுகின்றனர்.     [† பசு சாத்திரம் – தருக்கம் வியாகரணம் முதலாயின.]

 

நான்காவது பசு பரிச்சேதம் முற்றிற்று.

 

 

ஐந்தாவது பாச பரிச்சேதம்

      பாசங்களாவன எவை? எந்தப்பாசங்களுடைய கூட்டத்தால் எல்லா ஆன்மாக்களும் சம்சாரபந்தத்தை அனுபவிக்கின்றனரோ அந்தப்பாசங்கள் இனி, கூறப்படுகின்றன.

 

      பாசங்களாவன, அசேதனங்கள்; சேதனனால் ஏவத்தகுந்தவை; சேதனனுக்கு உபயோகமாயுள்ளன; அறிவைத் தடைசெய்வன; பரிணாம * மடைதற்கு உரிமையுடையன. இவ்வித இலக்கணமுடைய பாசங்கள், மலம் கன்மம் மாயை யென்னும் மூன்று விதமான வேறுபாட்ட்டுடன் கூடியிருக்கின்றன. [* பரிணாமம் – நிலை மாறுதல்.]

 

      அம்மூன்றனுள், முதலாவதான மலமானது மூலம் மிருத்தியு, நீகாரம், அஞ்சனம், பசுத்துவம், அவித்தை என்னும் அநேகஞ் சொற்களால் கூறத்தகுந்தது. நித்தியமாயுள்ளது. ஒவ்வொரு ஆன்மாக்கள்தோறும் அறிவை மறைக்கும் அதிகாரமுடைய அநேக சத்திகளையுடையது. இத்தகைய மலம் அனாதியாகவே பசுக்களுக்கு மேலான பந்தமெனக் கூறப்படுகின்றது. எதனாலெனின், மலமிருப்பின் ஏனைய பாசங்களிருத்தலாலும் மலமில்லையாயின் ஏனைய பாசங்களில்லாமையாலும் என்க.

 

      இவ்விதமான மலத்தால் மறைக்கப்பட்ட அறிவையுடைய பசுக்கள் ஒருவிதமான பொருளையும் அறிவதற்குச் சாமர்த்திய முடையனவாதலில்லை யென்று, பதியால், அந்த மலத்தின் தடையை ஏகதேசத்தில் விலக்குவதற்காக, மாயா காரியங்களான பொருள்களுடன் அந்தப் பசுக்கள் சேர்த்து வைக்கப்படுகின்றன.

 

      அந்த மாயா காரியமான கலை முதலிவற்ற்றால் ஆன்மாக்கள் ஏகதேசமான விளக்கத்தைச் செய்யும் அறிவையுடையனவாயிருப்பினும், ஒரு பொருளையாவது உள்ளவாறு அறிதலில்லை. ஆதலினாற்றான், மோகம், மதம், * அராகம், ‡ விஷாதம், † சோஷம், ¶ வைசித்திரியம், § ஹரிஷம் என்னும் வேறுவிதமான மலங்களுடன் சேர்க்கப்படுகிறான். அவற்றின் சேர்க்கையால் வருந்தத்தக்க கன்மங்களைச் சம்பாதிக்கின்றான். அந்தக் கன்மங்களின் பலனை அனுபவிப்பதின் பொருட்டு வேறு சரீரங்களுடன் சேர்க்கப்படுகின்றான். இவ்வாறு வித்திற்குக் காரணம் மரம், மரத்திற்குக் காரணம் வித்து என்னும் நியாயத்தால் தொடர்ச்சியாய் வருகின்ற கன்மக் கூட்டம் சரீரக் கூட்டங்களினின்றும் ஒரு சமயத்திலாவது விடுதலையடைகிறானில்லை. இதனால் எல்லாப் பாசங்களுக்கும் காரணமாயிருக்குந் தன்மை மலத்திற்குண்டென்பது விளக்கமாயினமை காண்க.     [* அராகம் – விருப்பு, ‡ விஷாதம் – துன்பம், † சோஷம் – வாட்டம், ¶ வைசித்திரியம் – வியப்பு, § ஹரிஷம் – சந்தோஷம்.]

 

      இவ்வாறு மலத்தாற் கட்டுப்பட்ட அணுவானது சிறிது காலத்தில் மலபரிபாகத்தை அனுசரித்த தீக்கையினால், சோதிக்கப்படுந் தன்மையும், சோதனையாலுண்டாகும் சுத்திக்குப்பின்னர் சித்தாந்த சாத்திரத்தால் போதிக்கப்படுந் தன்மையும் என்னும் இரண்டுவிதமான நிலையை யடைகின்றான். ஆன்மாவுக்குச் சோதிக்கப்படுதல் போதிக்கப்படுதலென்னும் பரதந்திரத் தன்மையே, அனாதியாகாவே சித்தித்துள்ளதாயும் பாசங்களுக்கு மூலமாயுமுள்ள ஆணவமலம் உண்டென்பதையறியும்படி செய்கின்றது. மல சம்பந்தமில்லையாயின் அறிவு ரூபமான ஆன்மாவிற்கு வேறு அறிவுடைப்பொருளால் ஏவப்படுந் தன்மையுண்டென்பது பொருந்தாது.

 

      அவ்வாறாயின், வியாபகமாயுள்ள இந்த ஆன்மாவிற்கு மலமென்னும் வேறு திரவியத்தால் கூறப்படும் மறைப்பு எவ்வாறு கூடுமெனில், ஆன்மாவை மறைக்கும் மலத்திற்கும் வியாபகத் தன்மையுண்டென்று கொள்கின்றோனாதலால் இந்தக் கேல்வி கூடாதென்க.

 

      அன்றியும், மலத்தின் மறைப்பாவது, எரிதல் ரூபமான அக்கினியின் சத்தியைத் தடைசெய்யும் மணியின் சன்னிதிபோல ஆன்மசத்தியைத் தடைசெய்யும் மலத்தின் சன்னிதான விசேடமேயாகும். இவ்வளவேயன்றி ஆன்மாவுடன் மலத்திற்கு மிகுந்த சேர்க்கை கிடையாது. மிகுந்த சேர்க்கையைக் கொண்டால் அறிவுடைப் பொருளுக்குச் சடவியாபகத்தன்மை வர நேருமென்க ஆதலினாற்றான் இந்த மலம் ஒன்றாயிருந்தும் அநேக ஆன்மாக்களின் சத்தியைத் தடை செய்கின்றது.

 

      அவ்வாறாயின், நித்திய வியாபகமான மலத்திற்கு ஆன்ம அறிவுடன் எக்காலத்தும் சேர்க்கையிருத்தலால், ஒரு காலத்திலாவது ஆன்மாக்களுக்கு முத்தி நிகழ்தல் கூடாதெனில், இந்தக் கேள்வி வலிமையற்றது. எதனாலெனின், மலத்தின் சத்தியை அடக்குவது என்னும் விளையாட்டில் பரமசிவனது சத்தி எக்காலத்தும் நோக்கமாயிருத்தலாலென்க. பரமசிவனது சத்தி மலத்தினது சத்தியை யடக்குமென்றல் பொருந்தாதென்று கூறக்கூடாது; ஏனென்றால், அந்த மலசத்திகள் சடமாயும் அநேகமாயும் இருத்தல் பற்றி அநித்தியமாயும், வேறு வேறாயிருத்தல் பற்றி முறையாகவும் ஒரே காலத்திலும் பாகத்தை யடையக் கூடியனவாயும் இருக்கிறபடியால், விடசத்திகள் மந்திரத்தால் நாசமடைகின்றவாறு போல் சிவசத்தியால் மலசத்திகளின் நாசமும் பெரியோர்களாலனுபவிக்கப் படுகின்றது ஆதலால் என்க.

 

      இவ்வாறு சிவசத்தியானது மலசத்தியை நாசஞ்செய்வதேயன்றி அந்தப்பாசங்களுக்கு அனுக்கிரகஞ் செய்வதாகவும் ஆகின்றது. ஆதலால் பாசங்களுக்கு அனுக்கிரகஞ்செய்யும் சிவசத்தி, திரோதானசத்தி யென்னும் நான்காவது பாசமாகச் சாத்திரங்களில் முழங்கப்பட்டிருக்கின்றது.

 

      அவ்வாறாயின், பாசத்திற்கு அனுக்கிரகஞ் செய்வதான திரோதான சத்தி, பசுக்களிடமிருக்கும் மலசத்தியை எவ்வாறு நாசஞ்செய்யுமெனில், அஃதுண்மையே. பாசத்திற்கு அனுக்கிரகஞ் செய்வதென்பதும் பசுவின் அனுக்கிரகத்தின் பொருட்டேயாம்; ஆதலால் மலசத்தியை நாசஞ்செய்தல் கூடுமென்க. இது எதுபோலுமெனின், உலகத்தில் நோயாளிக்கு வைத்தியனாற் செய்யப்படும் உப்புமுதலிய மருந்துகளால் வருத்துதல் முடிவில் சுகத்தின் பொருட்டேயதல் போலு மென்க. ‡ [‡ இந்த உவமையில் மருந்துகளால் வருத்துதல் போலப் பாசங்களுக்கு அனுக்கிரகஞ்செய்தல். அஃதாவது பாசங்களுக்குச் சாமர்த்தியத்தை உண்டுபண்ணி உயிரை வருத்துதல்.]

 

      அன்றியும் இவ்விடத்தில் ஒரு இரகசியங் காணப்படுகின்றது. அஃதாவது, அந்தப் பரமேசுவர சத்தியானது, விகாரமற்றதாயும் உற்பத்தி நாசமற்றதாயும், எக்காலத்தும் விளங்குவதாயும், இடைவிடாத வியாபக முடையதாய் இருத்தலால் ஒவ்வொரு அவத்தைகளால் சுற்றிக்கொண்டிருக்கிற சடப்பொருள்களினும் சேதனப்பொருள் களினும் பொதுவாக அந்தந்தப் பொருள்களின் தருமத்தை அனுசரிக்கிற தாயுமிருக்கிறது. ஆகையால் எப்பொழுது எந்தப் பொருளினுடைய எந்தத்தருமமானது பிரவிருத்துக்கு உரியதாயிருக்கின்றதோ அதனைப் பிரவிருத்துக்கச் செய்கின்றது. எந்தத் தருமமானது நிவிருத்திக்கு உரியதாயிருக்கின்றதோ அப்பொழுது அதனை நிவிருத்திக்கச் செய்கின்றது; சர்வஞ்ஞனுக்கு எப்பொழுதும் நடுவு நிலையிலிரிருக்குந் தன்மையே நியாயமாதலா லென்க. ஆகவே, பரிபாகமடைவற்குமுன் பசுக்களின் அறிவை மறைத்தலென்னும் மலத்தின் தருமத்தை, மலபரிபாகம் நிகழ்ந்த பின்னர் பதியின் சத்தியானது நிவிருத்திக்கச் செய்கிறது என்று கொள்வதில் ஒருவிதமான குற்றமில்லாமை காண்க.

 

      அவ்வாறாயின், பதியினுடைய அறிவும் பசுவினுடைய அறிவைப்போல் பாசத்தால் ஏன் மறைக்கப்படுகிறதில்லை யெனில், இக்கேள்வி மிக ஆச்சரியமாயிருக்கிறது. இக்கேள்வி கேட்ட நீ செம்பிற்குக் களிம்பு ஏன் இருக்கின்றது படிகத்திற்கு ஏன் சுத்தி இருக்கின்றது என்றுங்கேட்பாய்போலும். ஆகையால் படிகம் போல் இயல்பாகவே நின்மலனாயிருப்பவன் பரமசிவன்; செம்பு போல் இயல்பாகவே மலமுடையவர்கள் ஆன்மாக்கள்; இயல்பாகவே அறிவில்லாதனவாயிருப்பன் பாசங்கள் என்பது சித்தாந்தக்கொள்கை என்க.

 

      இனிக் கன்மங்களாவன, தரும அதருமரூபங்களாயும், ஒன்றுக்கொன்று வேறுபாடுடையனவாயும், அனாதியாயுள்ளனவாயும், மாயையைப் பற்றுக்கோடாயுடையனவாயும், ஒவ்வொரு புருடர்கடோறும் இன்றியமையாதனவாயும், போக்கியங்களாயும் உள்ளனவாம். இக்கன்மங்கள், பீஜம் அதிருட்டம் சஹகாரி என்னும் சொற்களால் கூறப்படுகின்றன.

 

      இந்தக்கன்மங்கள், மாயையின் காரியத்தின் தொழிலால் உண்டாகிறபடியாலாவது, மாயையினாற்கட்டுப்பட்ட அறிவினையுடைய போக்தாவாகிய ஆன்மாவினுடைய போகக்கிரியையால் மிகவும் இச்சிக்கப்படுதலாலாவது, கருத்தாவின் றொழிலால் இச்சிக்கப்பட்டது கன்மம் என்னுமிலக்கணப்படி கன்மமென்னும் பெயர்பெற்றன.

 

      கன்மம் அனாதியாகையால் உற்பத்தி நாசம் இல்லாதது என்று கொள்ளக்கூடாது. எதனாலெனின், அளவில்லாத கன்ம பரம்பரைகள் பிரவாகரூபமாய் அனாதியாயிருத்தலா லென்க.

 

      இந்தக் கன்மங்கள் புத்தியின் குணமென்று நூல்களிற் கேட்கப்படுகிறபடியால் மாயையைப் பற்றுக்கோடாகவுடையனவென்று கூறியது எவ்வாறு பொருந்துமெனில், அஃதுண்மையே. மாயையானது மந்திரேசுவரரால் கலக்கஞ் செய்யப்பட்டு அந்த மாயையினிடமிருந்து நேராகவும் ஒன்றன்பின்னொன்றாய்த் தொடர்ந்தும் உண்டான கலைமுதல் பூமி முடிவான முப்பது தத்துவங்களுடன் கூடினதாய், சூக்கும தேகமென்று பின்னர்க் கூறப்படப்போகிறது. ஆகவே, அந்த மாயைக்குப் புத்தி தத்துவமானது நடு அவயவமாயிருந்து எல்லாப் பொருள்களின் அறிவிற்குப் பற்றுக்கோடாயிருத்தலாலும், சுகதுக்க முதலியவற்றின் ரூபமாயிருத்தலாலும், போக்கியமாயிருக்குந் தன்மையை அடைந்திருப்பதாலும், அந்தப் புத்திதத்துவத்திற்கே தரும முதலிய எண்குணமுடைமை பொருந்துகின்றது. ஆயினும், புத்திதத்துவத்திலிருக்கும் கன்மங்களை இலக்கணா * விருத்தியால் புத்தி தத்துவத்திற்குச் சமானமான தத்துவங்களின் கூட்டரூபமான மாயாதத்துவத்தில் இருப்பனவாகக்கொண்டு கன்மத்திற்கு மாயை பற்றுக்கோடாகக் கூறப்பட்டது.        [* இலக்கணா விருத்தி – ஆகுபெயர்.]

 

      இந்தக்கன்மங்களை ஆன்ம குணங்களாகக் கொள்வோமெனில், அது பொருந்தாது. எதனாலெனின், போக்கியப் பொருள்கள் சடத்தன்மையோடு விட்டுப் பிரியாமலிருத்தலால் அவற்றிற்குச் சேதனப்பொருளாகிய ஆன்மாவினோடு விட்டுப்பிரியாமலிருத்தல் கூடாதாகையா லென்க.    

 

      இந்தக்கனமங்களுக்குப் போக்கியத்தன்மையும் நான் சுகீ என்னும் பிரத்தியக்ஷத்தால் அனுபவிக்கப்படுகிறபடியால் நிகழ்ந்தது. கன்மங்களைப் பிரத்தியக்ஷத்தால் அனுபவிக்கின் அந்தக் கன்மங்களை அதிருஷ்டமென்று கூறியது எவ்வாறு பொருந்துமெனில், அந்தக்கன்மங்கள், சுகதுக்கமுதலிய பிரத்தியரூபமாயிருக்குங்கால் போக்கியமாயிருப்பவைபற்றி போக்தாவின் அறிவிற்கு விடயமாயிருந்தபோதிலும், அதின் வாசனாரூபங்களான தருமமுதலிய பாவகங்களாயிருக்குங்கால் சூக்குமமாயிருக்கின்றமை பற்றி அதிருஷ்டங்களென்று கொள்ளுதல் பொருந்து மென்க.

 

      அவ்வாறாயின், கன்மங்கள் மாயையின் குணங்களாகையால் அவற்றை மாயையினும் வேறான பாசமென்று கொள்ளுதல் எவ்வாறு பொருந்துமெனில், அஃதுண்மையே, புத்திக்குச் சமீபத்திலிருக்கும் அநேக அவத்தைகளையுடைய மாயையில் அநேக அவயவங்களையுடைய அநேக குணங்களிருக்கின்றன. அவையனைத்தும் மாயையினின்றும் வேறான பாசங்களாக எண்ணப்படவில்லை. எதனாலெனின், அவைகட்குப் பற்றுக்கோடானமாயையிலிருந்து பிரிக்கமுடியாதனவாய் இருக்கின்றமையா லென்க. குணத்திற்கும் குணிக்குமுள்ள சேர்க்கை சிறிது பேதத்தை உள்ளடக்கிய அபேதச்சேர்க்கையேயாகும். ஆகையால் மாயையாகிய குணியில் நின்றும் அதன் குணங்களான கலை முதலியத் தத்துவஙகள் வேறான பாசமாக ஒரிடத்திலும் எண்ணப்படுவதில்லை. அங்ஙனமாயினும், இந்தக்கன்மமென்னும் புத்தியின்குணமானது வேறான குணங்களுக்கு வித்தாயிருத்தல் பற்றிக் கலைமுதலிய ஏனைய குணங்களினும் வேறான பாசமாக எண்ணப்படுகிறது.

 

      வித்தாயிருக்குந் தன்மை கன்மத்திற்கு உண்டென்பது எவ்வாறு சித்திக்குமெனில், அனாதிகாலந்தொட்டு நீண்டகாலமாய் முதற்காரணமாயிருக்கும் மாயாதத்துவமென்னும் பூமியில் முதிர்ச்சியான எல்லாக்காரியங்களின் இரக்ஷித்தலுக்கு அடக்கமிருப்பினும், பின்னர் உண்டாகக்கூடிய காரியவர்க்கங்களின் இரக்ஷித்தலாகிய முளைக்குக் கன்மம் காரணமாயிருத்தல் பற்றி அந்தக்கன்மத்திற்கு வித்தாயிருக்குந்தன்மை உண்டென்பது சித்தித்தது என்க. (அஃதாவது மாயையிலிருந்து தனுகரண முதலியன தோன்றி அவற்றாற் செய்யப்படுங் கன்மத்தால் மேலும் மேலும் தனுகரண முதலியன தோன்றுதலின் கன்மம் வித்தெனப்பட்டது என்க.)

 

      ஆயின், பிரளயகாலத்தில் புத்தியின் காரியஙகளான கன்ம சக்திகள் போல வேறுகாரியங்களான தத்துவங்களின் சத்திகளும் இருக்கின்றன. இருப்பினும், அந்தத்  தத்துவ சத்திகளுக்குக் கன்மசத்திகளுக்குப் போல் பிரதானத் தன்மை கிடையாது. எதனாலெனின், எல்லாக்காரியப் பிரபஞ்சங்களில் தோற்றத்திற்கு வித்தாயிருக்குந் தன்மை வேறுபொருள்களுக்கின்றிக் கன்மத்திற்கு மாத்திரம் இன்றியமையாதிருத்தலா லென்க.

 

      இதுபற்றியே இந்தப் புத்தியினுடைய சத்திரூபமான கன்மம் எல்லாக்காரியங்களுக்கும் துணைக்காரணமென்று நூல்களிற் கூறப்பட்டிருக்கின்றது. பரமசிவனுக்கும் இந்தக் கன்மங்களின் உடன்பாடு எதிர்மறையை அனுசரித்துத்தான் தொழில் நிகழ்கின்றது. அஃதாவது, கன்மமிருப்பின் அதையனுசரித்து தொழிற்செய்கின்றான். கன்மமில்லையாயின் அதையனுசரித்து தொழிற்செய்கின்றானில்லை என்பதாம்.

 

      அவ்வாறாயின், சுத்தாத்துவாவில் கன்மம் வேண்டப்படுவதில்லையே எனின், இந்தக்கேள்வி கேட்கத் தகுந்ததில்லை. எதனாலெனின், சுத்தாத்துவாவின் றோற்றத்திற்குக் கன்மம் வேண்டப்படுகிறதில்லையாயினும், சுத்தாத்துவாவில் வசிக்கும் அதிகாரிகளின் தொழில் அசுத்தாத்துவானி தோற்றத்தைப் பயனாகக் கொண்டிருத்தலாலென்க.

 

      புரியட்டகம், ஆதிவாகிகமான சிறப்புத்தேகம், சூக்குமதேகம், என்னும் அநேகம் பெயர்களுடன் கூடிய மாயையானது, ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் இன்றியமையாததாய் சிருட்டியின் ஆரம்பத்தில் அனந்தேசுவரரால் மாயா தத்துவத்திலிருந்து உண்டுபண்ணப்பட்ட கலை முதல் பூமி ஈறான முப்பது தத்துவங்களின் கூட்டரூபமாய், பிரளயகாலவரையிலாவது முத்தியடையும் வரையிலாவது போகத்திற்குச் சாதனமாயிருந்து மாயைக்குக் கிழ்பட்ட எல்லாப் புவனங்களிலும் கன்மத்தை அனுசரித்துச் சுற்றுகின்றது,

 

      முன்னர், புவனங்களுக்குப் பற்றுக்கோடாயிருக்குந்தன்மை தத்துவங்களுக்கு கூறப்பட்டது. இப்பொழுது புவனங்களில் சஞ்சரிக்குந் தன்மை தத்துவங்களுக்குக் கூறப்படுகிறது. இது எவ்வாறு கூடுமெனில், அஃதுண்மையே. அந்த மாயையென்னும் தத்துவக் கூட்டத்தின் வரிசை சிறப்புப் பொது என்று இரண்டு விதமாயிருக்கின்றது. அவற்றுள், பொதுவாயுள்ளது ஒன்றாயும் மிக விரிவாயும் எல்லா ஆன்மாக்களினுடைய போக்கியமான புவனங்களுக்குப் பற்றுக்கோடாக முன் கூறப்பட்டதாயுமிருக்கிறது. அந்தப் பொதுவாயுள்ள மாயை வித்தியா கலைமுதல் கீழுள்ள விந்துகலை மூன்றில் நிலைபெற்றிருக்கின்றது. அஃதெவ்வாறெனில்,

 

      வித்தியா கலையில் குணம், புத்தி, அகங்காரம், மனம், செவி, தோல், கண், நா, நாசி, வாக்கு, பாதம், பாணி, ஆசனம், குறி, சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம், ஆகாயம், வாயு, தேயு, அப்பு என்னு இருபத்து மூன்று தத்துவங்கள், ஶ்ரீகண்ட முதல் அமரேசம் ஈறான ஐம்பத்தாறு புவனங்களுக்குப் பற்றுக்கோடாயிருக்கின்றன.

 

      நிவிருத்தி கலையில் மகாபூதம் ஐந்துனுள் ஒன்றான பிருதிவி தத்துவமொன்று, பிரமாண்டத்திற்கு உள்ளும் வெளியுமுள்ளவையான பத்திரகாளி முதல் காலாக்கினி உருத்திரம் ஈறான நூற்றெட்டுப் புவனங்களுக்குப் பற்றுக்கோடாயிருக்கின்றது.

 

      இப்புவனங்களுக்குள் ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் போகத்திற்குச் சாதனமாகக் கூறப்பட்டனவாயும், ஒடுங்குதல் விரிதலென்னும் தருமமுடையவாயும் உள்ள சிறப்புத் தத்துவ வரிசைகள் சூக்கும தேக ரூபங்களாய் இங்குமங்கும் சஞ்சரிசகின்றன. அந்தச் சிறப்புச் தத்துவ வரிசைகளுக்கு அந்தந்தப் புவனங்களால் உண்டான தூல தேகங்களின் சேர்க்கையினாற்றான் வேறு வேறு விதமான கன்ம மலங்களின் அனுபவத்திற்கு உரிய தன்மை நிகழ்கின்றது.

 

      இனி, இந்தத் தத்துவங்களின் றோற்றமும் தொழிலும் வருமாறு:-

      ஒன்றாயும் நித்தியமாயும் வியாபகமாயும் அநேக சத்திகளுடன் கூடினதாயும் இருக்கும் மாயையென்னும் பரம காரணமான தத்துவமானது, ஒரு காலத்தில் ‡ ஈசுவரனுடைய சத்தியால் கலக்கஞ் செய்யப்பட்டு, சிருட்டியாரம்பத்தில், கலை காலம் நியதி என்னும் மூன்று தத்துவங்களைத் தோற்றுவிக்கின்றது. அந்த மூன்றனுள், [‡ ஈசுவரன் என்பதற்கு இவ்விடத்தில் அநந்த தேவரென்று பொருள் கொள்க.]

 

      கலை என்னுந் தத்துவமானது, ஆன்மாவின் அறிவை மறைத்துக்கொண்டிருக்கும் மலத்தைச் சிறிது விலக்கி, அறிவைச் சிறிது விளங்கும்படி செய்கிறது. பின்னர் அந்த ஆன்மா, கலை என்னுந் துணையால் விளக்கஞ் செய்யப்பட்ட சொரூபமுடையவனாய்த் தனக்குத் தகுதியான தொழில்களில் தான் கருத்தாவாயிருக்குந் தன்மையையடைகிறான். அறிவுவிளங்குதற்குரிய ஆன்ம சொரூபமும் அறிவை விளங்கும்படி செய்யும் கலை என்னுந் தத்துவமும் ஆகிய இரண்டற்கும் ஒன்றற்கொன்று சம்பந்தமில்லையாயின் ஒரு விதமான பிரயோசனத்திற்கும் இடமில்லை. (அஃதாவது, கலை ஆன்மாவுடன் சேர்ந்தாற்றான் அறிவை விளங்கும்படி செய்யும், ஆன்மா கலையுடன் கூடினாற்றான் அறிவுவிளக்கத்தைப் பெறுமென்பதாம்.)

 

      அவ்வாறாயின், சுவசம்வித்ரூபனாயிருக்கும் (தானே பிரகாச ரூபனாயிருக்கும்) ஆன்மாவை நீகாரமென்னும் மலமானது தடை செய்கிறதில்லை. பாசம்வித்ரூபமான (பிறிதொன்றைப் பிரகாசப்படுத்தும்) ஆன்ம சத்தியைத்தான் தடை செய்கின்றது. அங்ஙனமாகவும் கலை என்னும் தத்துவம் ஆன்மாவிற்கு உபகாரஞ்செய்வதென்பது எவ்வாறு கூடுமெனில், ஒரு கருத்தாயிருந்தால் ஒரு சாதனமின்றி அந்தக் கருத்தாவுக்குத் தொழில் நிகழ்கிறதில்லை யாகையால் கலாதத்துவத்தால் விளக்கஞ்செய்யப்பட்ட அறிவு என்னும் சாதனத்தையுடைய ஆன்மாவே தனது போகங்களில் ஏவப்படுகிறானாதலின் கூடுமென்க.

 

      போகமாவது, புத்திதத்துவத்தினிடைய உபாஞ்சனமாம். அஃதாவது, சுகதுக்க முதலியவற்றில் இது சுகம் இது துக்கமென்னும் வேறு பாடின்றி, சுகதுக்க முதலிய ரூபமாகவேயிருக்கும் புத்திதத்துவமாம். இது * சம்வேதனமென்றுங் கூறப்படும். புத்தியினிடத்தில் சுகதுக்கரூபமான தோற்றத்தை உண்டு பண்ணுவதில் கலாதத்துவம் சமர்த்தமாகிறதில்லை. எதனாலெனின், இந்தக் கலாதத்துவமானது ஆன்மசத்தியை விளக்கஞ் செய்தல் மாத்திரத்தால் பயனடைந்தமையாலும் அந்த ஆன்ம சத்தியுடன் அபேதத்தை அடைந்திருத்தலாலு மென்க. [* சம்வேதம – அறிவு, அஃதாவது சுக அறிவு துக்க அறிவு.]

 

      ஆதலால் இந்தக்கலாதத்துவத்திலிருந்து வித்தையென்னும் மற்றொருதத்துவம் பிரகாசரூபமாய் புத்தியையடைந்த பொருள்களின் அனுபவத்திற்குச் சாதனமாய்த் தோன்றுகின்றது. இந்த வித்தை என்னுந் தத்துவமில்லாமல் ஆன்மசிற்சத்தியே புத்தியை விஷயமாய்க்கொண்ட அறிவை உண்டுபண்ணுவதில் சமர்த்தமாகுமெனில், அது கூடாது. எதனாலெனின், சிற்சத்தியானது எல்லாப்பொருள்களையும் அறிவதில் பொதுவாய்ச் சாதனமாயிருப்பதால் சிறப்பான விசேடமே விரும்பப்படுகிறபடியாலென்க. அவ்வாறில்லையாயின் எல்லாக்காரியங்களும் சிற்சத்தியால் நிகழுமாதலின் அநேக தத்துவங்களைக்கூறுதல் பயனற்றதாகும்.

 

      பின்னர் வித்தியா தத்துவத்தால் அறியப்பட்ட பொருள்களில் ஆன்மாவிற்கு ஆசையையுண்டுபண்ணும் ‡ அராகமென்னுந் தத்துவமானது இந்தக்கலையிலிருந்து தோன்றுகின்றது. [‡ “விச்சையின் அராகந்தோன்றி” என்பது சிவஞான சித்தித் திருவாக்கு. இன்னுருபை உவமை உருபாக வைத்து வித்தைபோல அராகமுங் கலையினின்றுந் தோன்று மென்பாரும் உளராதலின் இவ்விடத்து அவ்வாறு கூறப்பட்டதென்க.] எதனாலெனின் அறியப்பட்ட மாத்திரத்தில் பொருள் ஆசையின்றிப் போகத்திற்கு விடயமாகாதகையாலென்க. உலகத்தில் ஆசையற்ற ஒருவன் போகத்தில் பிரவிருத்துக்கின்றனில்லை. ஆகையால் இந்த அராகதத்துவமானது புருடனை போகத்தில் பிரவிருத்திக்கச் செய்வதன் பொருட்டு ஆசையை யுண்டுபண்ணுவதால் அராகமென்று கூறப்படுகிறது.

 

      ஆன்மாவிற்குப் புத்தியின் குணங்களே ஆசையை யுண்டு பண்ணூமாதலின், அராகமென்னுந் தத்துவம் வேண்டாமெனில், அது பொருந்தாது. எதனாலெனின், அந்தப் புத்திகுணங்கள் அகப்பொருளாயும் புறப்பொருளாயுமிருத்தல் பற்றி அதற்குப் போக்கியத்தன்மை நிச்சயிக்கப்பட்டிருத்தலா லென்க.

 

      புத்திகுணங்கள் போக்கியங்களாயிருந்தும் ஆசையையுண்டு பண்ணுமென்று கொள்ளின், உலகத்தில் வைராக்கியமுடையார் இல்லை யென்பது பெறப்படும். (போக்கியங்களிருந்தும் வைராக்கியமுடையார் காணப்படுதலின் போக்கியங்களுக்கு ஆசையை யுண்டுபண்ணுந்தன்மை இல்லையாகு மாகையால் ஆசை என்னுங் காரியத்திற்குக் காரணமாக அராகதத்துவம் இன்றியமையாது வேண்டப்படுமென்ற வாறாம்.)

 

      பின்னர் மாயையிலிருந்து நேரே உண்டான கஆல்மென்னுந் தத்துவம், ஆன்மாவினால் அறியப்படும் பொருள்களனைத்தையும் சென்றது நிகழ்கின்றது நிகழப்போகின்றது என்னும் மூன்றுவிதமான நிலைக்குட் படுத்தி அந்நிலைகளின் வழியாக நீண்டகாலம் குறுகினகாலமென்னும் அறிவையுஞ்செய்து எப்பொழுதும் எல்லா இடத்திலும் இந்த ஆன்மாவைச் சம்சாரியாகச் செய்கின்றது.

 

      இவ்வாறு கால தத்துவத்தால் ஏவப்பட்ட ஆன்மாவிற்குத் தன்னால் சம்பாதிக்கப்பட்ட கன்மங்களின் பலனை அனுபவிப்பதில் பிறழ்ச்சி நிகழாதிருத்தற் பொருட்டு நியதி என்னுந் தத்துவமும் உபயோகப்படுகின்றது. நியதிதத்துவத்தைக் கொள்ளவில்லையாயின் ஒருவன் செய்த கன்மத்தின் பலனை மற்றொருவன் அனுபவிக்க நேருமாதலின் போகானுபவ விஷயத்தில் சாங்கரீய தோஷமுண்டாகும் சாங்கரியம் – கலப்பு. ஆகையால் நியதிதத்துவம் இன்றியமையாது வேண்டப்படுவதேயாகும்.

 

      இவ்வாறு ஐந்து தத்துவங்களென்னும் சட்டையால் பூட்டப்பட்ட ஆன்மாவிற்குப் போகத்தை அனுபவிக்கும் போக்தாவாயிருக்குந் தன்மை நிகழ்கின்றமையால் அந்த ஆன்மா புருட தத்துவமென்னும் பெயரை யடைகின்றது.

 

      பின்னர் இந்தப் புருடனுக்குப் போக்கியமான பொருள்களை உண்டுபண்ணுதற் பொருட்டுக் கலையிலிருந்து பிரகிருதி என்னுந் தத்துவம் உண்டாகின்றது. இந்தப்பிரகிருதி தத்துவமே சம்சாரத்திற்கு மூல காரணமாயிருத்தலால், ஒரு புருடன் உத்தமமான தருமபத்தினியால் தழுவப்பட்டு அவளுடைய நீக்கத்தைச் சகியாதவாறு போல் இந்தப்பிரகிருதி தத்துவத்தால் கட்டப்பட்டு எக்காலத்தும் விட்டுநீங்கச் சம்மதிக்கின்றானில்லை.

 

      இந்தப் பிரகிருதிக்கே சாத்துவிகம் இராசதம் தாமதமென்னும் மூன்று குணங்கள் பிரசித்தமாயுள்ளன. இந்த மூன்று குணங்களும் இந்தப்பிரகிருதியினிடத்தில் விளக்க மில்லாமலிருக்கின்றன. எதனாலெனின், இந்தக்குணங்களுக்குப் பற்றுக் கோடான பிரகிருதி தத்துவம் அவயவமின்றி யிருத்தலாலென்க. ஆதலினாற்றான் இந்தப்பிரகிருதிக்கு அவ்வியத்தமென்னும் பெயர் நிகழ்ந்தது.

 

      இந்த அவ்வியத்ததிலிருந்து பிரகாசம் பிரவிருத்தி நியமம் என்னு மிவற்றை ரூபமாகவுடையதாய்ம், மூன்றுகுண முடையதாயும், அந்த மூன்று குணங்களும் தனித்தனி † ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத சத்துவ முதலிய மூன்று பாகத்துடன் கூடியதாயும் உள்ள குணதத்துவந்தோன்றுகின்றது. [† சாத்துவிகத்தில் சாத்துவிதம் இராசதம் தாமதமும், இராசதத்தில் இராசதம் தாமதம் சாத்துவிகமும், தாமதத்தில் தாமதம் சாத்துவிகம் இராசதமுமாகவும் ஒவ்வொன்றும் பிரிக்கமுடியாத மூன்றுபாகமாயிருக்க்ய்ம்.] அந்தக் குணதத்துவத்திற்குப் புத்தி தத்துவத்தைப் போல் போக்கியப் பொருள்களை விளக்கஞ் செய்யுந் தன்மை கிடையாது. எதனாலெனின், அநதக்குண தத்துவமானது அவயவப்பகுப்புடன் கூடினதாயிருத போதிலும் பின்னர்க் கூறப்படும் எல்லாத் தத்துவக் கூட்டங்களையும் தனது நடுவிலுடையதாயிருத்தலால் பிரகிருதியினின்றும் விசேடமில்லாமையா லென்க. ஆகையால் இந்த மூன்று பகுப்பினையுடைய குணதத்துவத்திலிருந்து எல்லாக் காரியவரிசையும் மூன்று பகுப்பாகவே தோன்றுகின்றது. அஃதெவ்வாறெனில்,

 

      அந்தக்குணதத்துவத்திலிருந்து மகதத்துவமென்னும் மறுபெயருடையதயும், சூரியன் போலப் பிரகாசரூபமாயும், அத்தியவசாயமென்னும் நிச்சயத்திற்குத் தருமியாயும், மனத்துடன் கூடிய வெளிக் கருவிகளால் அறியப்பட்ட எல்லா வெளிப் பொருள் களினுடைய பிரதிபிம்பரூபமான அநேகம் பாவகங்கள் பிரத்தியயங்கள் என்னு மிவற்றின் கூட்டத்தாற் பூசப்பட்டதாயும், சாத்துவிகம் இராசதம் தாமதமென்னும் மூன்று விதமாய் வேறுபாடடைந்த சுகம் துக்கம் மோகம் என்னும் மூன்று விருத்திகளுக்குப் பற்றுக்கோடாயும் உள்ள புத்திதத்துவம் தோன்றுகின்றது. அந்தப் புத்திதத்துவத்தின் சம்பந்தத்தையுடைய புருடனே போகியென்று கூறப்படுகிறான். புத்தி தத்துவத்தின் சம்பந்தமாவது, சுகம் துக்கம் முதலியவற்றின் அறிவேயாகுமென்று முன்னரே கூறப்பட்டிருத்தல் காண்க. ஆதலினாற்றான் இந்தப் புத்திதத்துவத்திற்குப் போக்கியத்தன்மை உண்டென்பது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எதனாலெனில், இந்தப் புத்தி தத்துவமானது வித்தியா தத்துவத்தால் எப்பொழுதும் சுகதுக்க முதலிய ரூபமாய் அறியப்படுகின்றமையா லென்க.

 

      தரும முதலியவற்றிற்குப் புத்திகுணமாயிருக்குந்தன்மையைச் சாதித்ததனாலேயே சுக முதலியவற்றிற்கு ஆன்மகுணமாயிருக்குந்தன்மை இல்லை யென்பது சித்தித்தது. எதனாலெனின், சுக முதலியன பிரத்தியயரூபமாகவும், தரும முதலியன பாவகரூபமாகவும் புத்தியினிடத்திருத்தலா லென்க. தருமம் ஞானம் வைராக்கியம் ஐசுவரியம் அதருமம் அஞ்ஞானம் அவைராக்கியம் அனைசுவரியம் என்னும் பெயர் கொண்ட எட்டுக்குணங்கள் புத்தியினிடத்து வாசனாரூபங்களாய்ச் சூக்குமங்களாயிருக்கின்றன. அந்த எண்குணங்களும் அநுமானங்களால் அறியப்படுகின்றன. ஆதலாலும் தத்துவங்களின் பரிபாகத்தால் தோன்றுகின்றன வாதலாலும் பாவகங்களென்னும் பெயரையுடையன வாகின்றன. பின்னர்ச் சிறிது காலத்தில் பரிபாகமடைந்து தூலரூபங்களாய்ப் போக்கியமாயிருக்குந் தன்மையையடைந்த அந்தப்பாவகங்களே தூலமாயறியப் படுகின்றமை பற்றிப் பிரத்தியயங்களென்று கூறப்படுகின்றன.

 

      அந்தப் பிரத்தியயங்கள் எவையெனில், சித்தி துட்டி அசத்தி விபரியயம் என்னும் இவற்றின் வேறுபாட்டால் ஐம்பது பேதங்களாயுள்ளன. அவற்றுள் சித்தி என்பது எட்டுப் பேதமுடையது. துட்டி ஒன்பது பேதமுடையது. இந்தப் பதினேழு பேதங்களும் தரும முதலிய நான்கு குணங்களின் அவஸ்தா பேதங்களாயிருக்கின்றன. சத்துவகுணம் மிகுந்திருத்தலால் பிரகாச ரூபங்களாயிருத்தல் பற்றிச் சுகரூபப் பிரவிருத்திகளென்று கூறப்படுகின்றன.

 

      அசத்தி இருபத்தெட்டுப்பேத முடையது. அந்த இருபத்தெட்டும் அவைராக்கிய மயமாயிருக்கின்றன. இராசதகுணச்சேர்க்கை மேலிட்டுத் தொழிற் படுகின்றமைபற்றி இந்த இருபத்தெட்டும் துக்கரூபங்களாகின்றன.

 

      விபரியயம் ஐந்து பேதமுடையது.இந்த ஐந்தும் அதருமம் அஞ்ஞானம் அனைசுவரியமென்னும் மூன்றின் அவஸ்தா ரூபங்களாயிருக்கின்றன. ஆதலால் இவை தூலங்களாகும். தமோ குணத்தின் மிகுதியால் ஞானத்தைத் தடைசெய்தற்குக் காரணமாயிருத்தல் பற்றி மோகரூபங்களாயிருக்கின்றன.

 

      இந்தத்ரும முதலிய எட்டுப்பாவகங்களுள் தருமமும் அதருமமுமே பிரதானங்களாகும். எதனாலெனின், அந்த இரண்டுமே ஏனைய பாவகங்களுக்கு மூலமாயிருத்தாலென்க. ஆகையால் சுருதியில் விதிக்கப்பட்டதைச் செய்தமையாலும் விலக்கப்பட்டதைச் செய்தமையாலும் உண்டாகும் தரும அதரும ரூபமாகிய கன்மம் பாசமென்று கூறப்படுகின்றது.

 

      இவ்வாறு புத்தியானது சித்திமுதலிய பிரத்தியயங்களுக்குப் பற்றுக்கோடாயிருப்பது பற்றிப் போக்கியப் பொருளாயிருப்பினும் விஷயங்களின் நிச்சயத்திற்குக் காரணமாயிருப்பது பற்றிக் காணத்தன்மையுடனுங் கூடியிருக்கின்றது.

 

      பின்னர் இந்தப் புத்திதத்துவத்திலிருந்தே அகங்காரதத்துவந் தோன்றுகின்றது. இந்த அகங்காரதத்துவத்திற்கு தன்னைக் கருத்தாவாக நிச்சயித்தல் தருமமாகும். அன்றியும் இந்த அகங்காரமானது * சம்ரம்ப ரூப மாகையால், பிராணன் அபானன் முதலிய வாயுக்களின்றொழிலுக்கும், நான் கடத்தையறிகின்றேன் என்பது முதலிய வியவகாரங்களுக்கும் காரணமாயிருக்கின்றது [* சம்ரம்பம் – பிரயத்தனம்.] இந்த அகங்காரமானது சத்துவம் இரசஸ் தமஸ் என்னும் மூன்று விதமான குணவேறுபாட்டால் சாத்துவீக அகங்காரம் இராசத அகங்காரம் தாமத அகங்காரம் என மூன்றுவகைப் படுகின்றது. இம்மூன்றும் முறையே தைசத அகங்காரம் வைகாரிக அகங்காரம் பூதாதி யகங்காரமென்னும் பெயரையுடையனவகவும் அறியத்தகுந்தன.

 

      இம்மூன்றனுள், தைசத அகங்காரத்திலிருந்து பொருள்களைக் கவனித்தல் ரூபமாயும் சங்கற்பமென்னுந் தரும முடையதாயும் எக்காலத்தும் எவ்விடத்தும் விரைவிற் செல்லும் சுபாவமுடையதாயும் சுரோத்திர முதலிய கருவிகளை ஏவுகிறதாயுமுள்ள மனமெனனுந் தத்துவந் தோன்றித் தொழிற் செய்கின்றது.

 

      மனம் என்னும் தத்துவத்தின் றொழில் நிகழ்ந்த பின்னர்த்தான் புத்தி அகங்காரஙகளின் றொழில்கள் நிகழ்கின்றன. இந்த மனம் புத்தி அகங்காரம் என்னும் மூன்றும் வெளிக்கருவிகளொடுங்கினகாலத்தும் உள்ளே தொழிற் செய்கின்றமையால் இவை உட்கருவிகளாகும்.

 

      வெளிக்கருவிகள் ஞானம் கன்மம் என்னும் வேறுபாட்டால் இரண்டு விதங்களாகின்றன. அந்த இரண்டனுள், செவி தோல் கண் நா நாசி என்னும் இந்த ஐந்து தத்துவங்களும் முறையே மகாபூத குணங்களான சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்த மென்னும் இவற்றை அறிவதனால் ஞானக்கருவிகளென்று கூறப்படும். இந்த ஞானேந்திரியங்களும் தைசதாகங் காரத்திலிருந்தே தோன்றுகின்றன. எதனாலெனின், பொருள்களின் விளக்கத்தைச் செய்தலினாலென்க.

 

      பின்னர் வைகாரிக அகங்காரத்திலிர்ந்து சொல்லுதல் செல்லுதல் ஏற்றல் விடுதல் ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களுக்கு மிகவுஞ் சாதனமாயுள்ள வாக்கு பாதம் பாணி பாயு உபத்தமென்னும் கன்மேந்திரியங்கள் ஐந்துந் தோன்றுகின்றன.

 

      ஞானேந்திரியம் கன்மேந்திரிய மென்னும் இந்தப் பத்துக் கருவிகளும் வெளிப் பொருள்களின் சேர்க்கையினாலேயே தனித் தனியே தனது காரியத்தை நிகழ்த்துகிறமையால் வெளிக் கருவிகளேயாகும்.

 

      இந்தக் கருவிகள் பத்தும் வடிவுடைப் பொருள்களாகையால் பற்றுக்கோடின்றித் தொழிற் செய்ய முடியாவாம். ஆகையால் இந்தப் பத்துக்கருவிகளுக்கு உபகாரஞ் செய்வதன் பொருட்டுச் சத்த முதலிய ஒவ்வொரு குணங்களை அதிகமாகவுடையனவாயும் சத்த முதலிய குணங்களோடு பிரிக்க முடியாதிருத்தலால் குணங்களின் பெயருடன் கூடினவையாயும் உள்ள ஐந்து தன் மாத்திரைகள் பவுதிக அகங்காரத்திலிருந்து தோன்றுகின்றன.

 

      அந்தச் சத்த முதலிய தன்மாத்திரைகளிலிருந்து முறையே ஐந்து விதங்களாயும், தன் மாத்திரைகளின் குணம் போன்ற குண முடையனவாயும், இடங் கொடுத்தல் பொருள்களைச் சேர்த்தல் பாகஞ்செய்தல் பதஞ்செய்தல் தரித்தல் என்னும் தொழிலுடன் கூடினவையாயும் உள்ள ஆகாயம் காற்று அக்கினி நீர் மண் என்னும் பெயருடன் ஐந்து சூக்கும பூதங்கள் தோண்றுகின்றன.

 

      தன் மாத்திரை ஐந்தும் பூதனமந்துமாகிய இந்தப் பத்துத் தத்துவங்களும் ஞானேந்திரியம் கன்மேந்திரிய மென்னும் கருவிகளுக்குப் பற்றுக்கோடாயிருத்தல் பற்றிக் காரியமென்னும் பெயரையுடையனவாக ஆகின்றன.     

 

      இவ்வாறு விரிவாய்க் கூறப்பட்ட கலைமுதல் பிருதிவி இறுதியான முப்பது தத்துவங்களும் கூடிப் போகத்திற்குச் சாதனமாயிருத்தலால் புருடனுக்குச் சூக்கும தேகமாயிருக்கின்றன.

 

      இந்தத் தத்துவங்களுக்குப் பிரளய காலத்தில் ஒடுக்க முறையாக அதனதன் காரணத்தில் ஒடுக்கம் நிகழவே கைவல்லியம் நிகழ்கின்றது. இவ்வாறன்றி மலபரிபாகம் நிகழ்ந்த பின்னர் தீக்கையால் அந்தத்தத்துவங்களுக்கு ஒடுக்கம் செய்யப்படுமானால் அப்பொழுது சிவசாமிய மென்னும் முத்தியே நிகழ்கின்றது.

      இவ்வாறு பதிமுதலிய பதார்த்தங்கள் அதனதன் வேறு பாட்டுடன் விரிவாய் நிரூபணஞ் செய்யப்பட்டன.

ஐந்தாவது பாச பரிச்சேதம் முற்றிற்று.

 

ஆறாவது *விநியோக பரிச்சேதம்

 

      [* விநியோகம் – உபயோகம், அஃதாவது இன்னின்ன பதார்த்தத்திற்கு இன்னின்ன இடத்தில் உபயோகமெனக் கூறுவது.]

      இனி, இந்தப்பதி முதலிய பதார்த்தங்களுக்கு விநியோகம் சுருக்கமாய்க் கூறப்படுகின்றது. இந்தப்பதார்த்தங்களின் விநியோகங்களுக்குப் பயன் பரமோக்ஷம் அபரமோக்ஷமென்னும் வேறுபாடுடைய இருவகை மோக்ஷங்களேயாகும்.

 

      அவ்வாறாயின், எல்லாமறியுந்தன்மையே மோக்ஷமென்பது பெரியோர்களின் கொள்கை, அவ்வாறாகவும் எல்லாப்பதார்த்தங்களின் விநியோகத்தை விரும்புகின்றது மோக்ஷ மென்பது எவ்வாறு கூடுமெனில், அஃதுண்மையே. ஆயினும் ஞானம் என்பது பரஞானம் அபரஞானம் என இருவகைப்படும். அவ்விரண்டனுள் பரஞான மென்பது அறிவுரூபமாயுள்ளது. அது எல்லாப் பாசங்களினின்று விடுபட்டிருத்தலால் பரமென்று கூறப்பட்டது. அஃதாவது, வேறு பொருளின் துணையை விரும்பாது சுதந்திரமாய்ச் சுத்த சைதன்னிய ரூபமாயுள்ளது என்பதாம்.

 

      அபரஞானமென்பது ஆகமவடிவாயுள்ளது. அது, சிறிது பாசச் சேர்க்கையால் பரிக்கிரக சத்தியான சுத்தமாயை அசுத்தி மாயைகளின் காரியமான நாதமுதலியவற்றின் துணையை விரும்பினதாயும் அதிகாரத்துடன் கூடினதாயும் உள்ள ஞானவடிவமாகும்.

 

      ஆகவே, பரஞானத்துடன் கூடினவர்கள் பரமசிவனுடன் சாமியம் பெற்றுப் பரமுத்தராயிருக்கின்றனர். இவர்களுக்கு அடைய வேண்டுவதொன்றுமில்லை. எதனாலெனின், இவர்களால்டையப் பெற்ற நிலை எல்லாவற்றிற்கும் மேம்பட்ட நிலையாய் அதிசயமற்றதாகையால் அதற்கு மேல் அடைய வேண்டிய நிலையின்மையாலென்க.

 

      அபரஞானத்தை உடைய அதிகாரிகளான ஆசிரியர்கள் சித்தாந்த சாத்திரத்தால் விளங்கிய அறிவையுடையவர்களாகையால் அபரமுத்தர்களாவர். அவர்களே பரமோக்ஷமடைவதின் பொருட்டு ஆகமங்களில் கூறப்பட்ட கிரியை யோகம் சரியை என்னும் மூன்று பாதங்களில் அவரவர்களுக்குத் தக்கவாறு மூன்றுவிதமான பொருள்களைச் சீடர்களுடன் விநியோகஞ் செய்கின்றனர்.

 

      அஃதெவ்வாறெனில், கிரியா பாதத்தில் ஆசிரியன் மாத்திரத்தால் சாதிக்கத்தகுந்த தீக்ஷை என்னும் கிரியையில் அனுக்கிரகஞ் செய்வதில் கருத்தாவாயிருத்தல் பற்றிப் பரமசிவனுக்கு விநியோகம். அனுக்கிரகம் செய்யத் தகுதி பெற்றிருத்தல் பற்றிப் பசுவுக்கு விநியோகம். நிக்ரகம் செய்ய்த்தகுதி பெற்றிருத்தல் பற்றிப் பாசத்திற்கு விநியோகம்.

 

      யோகபாதத்தில் சாதகனுடன் கூடிய ஆசிரியனால் சாதிக்கத் தகுந்த சகளமூர்த்தியின் தியான முதலியவற்றில் தியானத்திற்கு விடயமாயிருத்தல் பற்றிப் பரமசிவனுக்கு விநியோகம். தியானத்தைச் செய்யும் கருத்தாவாயிருத்தல் பற்றிப் பசுவுக்கு விநியோகம். மறக்கத்தகுந்ததாயிருத்தல் பற்றிப் பாசத்திற்கு விநியோகம்.

 

      சரியாபாதத்தில் சாதகனுடன் கூடிய ஆசாரியனால் சாதிக்கத் தகுந்த ஆலயவழிபாடு முதலியவற்றில் வழிபாடு செய்யப்படுபவராயிருத்தல் பற்றிப் பரமசிவனுக்கு விநியோகம். பரமசிவனுக்கு வழிபாடு செய்வது பற்றி அடிமையான பசுவுக்கு விநியோக,. பசுவுக்கு வழிபடுவதற்குச் சாதனங்களாயும் பரமசிவனது திருவடியில் சம்ர்ப்பிக்கத் தகுந்தவையாயுமிருத்தல் பற்றிச் சடப்பொருள்களாகிய பாசத்திற்கு விநியோகம்.

 

      இந்த எல்லா இடங்களிலும் பதிக்கு ஆராதிக்கப்படுபவராயிருக்குந்தன்மை விசேடிக்கப்படுகிறது. அந்தப் பரமசிவனை ஆராதனஞ் செய்யாமலும், அதனால் அவர் வெளிப்பட்டு விளங்கித் தோன்றாமலுமிருந்தால், அவனது தியானம், பிரார்த்தனை, மூர்த்திகளிலாவாகன்ம், சன்னிதாபனம் முதலியவற்றையும் அவற்றிற்கு உட்பட்ட பசுபாசங்களை விடயமாகக் கொண்ட விநியோகங்களையும் விதித்த சாத்திரங்கள் பயனற்றனவாகும்.

 

      பரமசிவனை ஆராதிக்குமுறை எவ்வாறெனின், சிரத்தையுடன் சிவலிங்க முதலிய மூர்த்திகளில் பூர்வாகம் உத்தராங்கங்களுடன் கூட மனம் வாக்குக் காயங்களின் தொழில்களான தியானம் ஜெபம் முத்திரை விசேடங்களில் தனக்கு இஷ்டமாயும் சுத்தமாயுமுள்ள பொருளை அர்ப்பணஞ் செய்தலாம்,

 

      இவ்விதமான ஆராதனம் சுவார்த்த மென்றும் பரார்த்தமென்றும் இருவகைப்படும். அவ்விரண்டனுள், சாதகர் முதலியோரால் தனது இஷ்டம் நிறை வேறுதற் பொருட்டு ஆசாரியனுடைய கட்டளையால் சாலிங்க முதலியவற்றில் செய்யப்படும் ஆராதனம் சுவார்த்த மெனப்படும். எதனாலெனின், அந்த ஆராதனம், ஆராதிக்குங் கருத்தாவுக்கு மாத்திரம் பயனளிப்பதாயிருத்தலாலென்க. யாதொரு ஆராதனமானது அரசன் முதலிய உலகத்துலுள்ளாருடைய விருப்பம் நிறைவேறுதற் பொருட்டுச் சுதந்திரமாய் ஆசாரியனால் மாத்திரம் சுயம்பு முதலிய ஸ்திரலிங்கங்களில் செய்யப்படுகிறதோ, அந்த ஆராதனம் பரார்த்த மெனப்படும். எதனாலெனின், அந்த ஆராதனம் அதனைச் செய்யும் கருத்தாவுக்கும் பிறருக்கும் பயனளித்தலாலென்க.

 

      அவ்வாறாயின், ஆசாரியனும் சுவார்த்த ஆராதனம் இன்றியமையாது செய்ய வேண்டுமாகையால் அதனாலேயே பயன் சித்திக்கும் போது பரார்த்த ஆராதனத்தினாலும் ஆசாரியனுக்குப் பயன் சித்திக்குமென்பது எவ்வாறு கூடுமெனில், ஆசாரியனுக்குப் பரார்த்த ஆராதனமும் சுவார்த்த ஆராதனமேயாகும். சுவார்த்த ஆராதனஞ் செய்யாவிடில் குற்ற முண்டென்று கூறப்படுவது போல் பரார்த்த ஆராதனஞ் செய்யாவிடினும் குற்றமுண்டென்று கூறப்பட்டிருக்கிறபடியால் அதனாலும் பயன் சித்தித்தல் கூடுமென்க.

 

      உண்மையில் ஆசாரியர்களுக்கு சுவார்த்தமென்று சாத்திரங்களில் விதிக்கப்பட்ட அனைத்தும் பரார்த்தமேயாகும். எதனாலெனில், சித்திரூபமான பயனைத்தரும் ஆசாரியனுடைய ஒழுக்கமானது சாதகர் முதலியோருக்கு வழிகாட்டும் பொருட்டாகையாலென்க.

 

      அத்தகைய ஆசாரியர், சிவன் மந்திரேசுவர் உருத்திரர் தேவர் முனிவர் என்னும் வேறுபாட்டால் ஆறு வகையாயிருக்கின்றனர். ஆயினும் இந்த அறுவருள் பரம், மஹத், அந்தராளம், திவ்வியம், அதிவ்வியம், திவ்வியாதிவ்வியம் என்னும் ஆறு விதமான சம்பந்தத்தின் தாரதமமியத்தால் பின் பின்னுள்ளவர்கள் முன் முன்னுள்ளோரால் ஏவத்தகுந்தவராவர். அவ்வாறயினும், மனித ஆசிரியர் விசேடிக்கப்படுகின்றனர். எதனாலெனில், அவர்களிடத்தில் முற்பட்டவர்களுடைய ‡ சாந்நித்தியமிருத்தலாலென்க. [‡ சாந்நித்திய மென்பது இவ்விடத்தில் அதிட்டித்திருத்தல்.]

 

      மனிதர்களிலும் நான்கு வருணத்தார்க்கும் அந்தந்த வருணத்தவர் ஆசிரியராவர். ஏனையவர் ஆசிரியராகார். வேதங்கள் வேதாங்கங்கள் ஆகிய இவையனைத்தும் அத்தியயனம் செய்திருந்தும் வேதாந்த ஞானமில்லையாயின் சித்தாந்த சாத்திரத்தைக் கேட்கும் அதிகாரம் உண்டாவதில்லை. எதனாலெனில், சித்தாந்தமென்பது வேதாந்தத்தின் சாரமாயிருத்தலா லென்க.

 

      க்ஷத்திரியர் முதலியோர்களுக்கும் மலபரிபாகம் பூர்த்தியாயிருந்தால் அப்பொழுது அவர்கள் நிரதிகாரதீக்கையால் பரமோக்ஷம் அடைந்தவர்களாகின்றனர். அல்லது விசுவாமித்திரர் முதலியோர்போல் தபசின் மகிமையால் வேறு வருணத்துடன் சேர்க்கையை யடைந்தது ஆசாரிய அதிகாரத்தை யடைகின்றனர்.

 

      ஆசாரியத் தன்மையுடைய அதிகாரிகளும், உலகத்தைக் கட்டுப்படுத்துதற் பொருட்டுச் சுருதியில் விதிக்கப்பட்ட வருணாச்சிரம தருமங்களைத் தாண்டாமல் அனுட்டிக்கவே செய்கின்றனர்.

 

      நான்கு வருணங்களிலுதித்தவர்களான சாதகர்களுக்குத் தீக்ஷையால் பூர்வஜாதியின் நீக்கமிருந்தும் அவர்கள் உலகத்தில் கலப்புத்தோஷம் நிகழாதிருத்தற் பொருட்டு அவரவர்கள் பிறந்த ஜாதிக்கு உரிமையான தருமங்களைப் பயனைக் கருதாமல் அனுட்டிக்கவே செய்கின்றனர்.

 

      அவ்வாறாயின், சைவானுட்டான முடையோர்களுக்கு வைதிகானுட்டானம் கூடாதேயெனில், இந்தக்கேள்வி பொருதாது. எதனாலெனின், சைவத்திற்கு விரோதமில்லாத வைதிக தர்மத்தை நடத்துவதற்கு அதிகாரமுண்டென்று சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருத்தலா லென்க.

 

      வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் மிக விரோதங் கிடையாது. எதனாலெனின், வேதமும் பரமசிவனால் ஆக்கப்பட்டது; சிவாகமங்களும் பரமசிவனால் ஆக்கப்பட்டன வாகௌயாலென்க. யாதொரு விடயமானது சுத்தஜனம் அசுத்தஜன்ம் என்னுமிருவர்களுக்குப் பொதுவாய் வேதத்தில் ரகசியமாய்க் கூறப்பட்டிருக்கிறதோ அந்தவிடயமே ஆகமங்களிற் சுத்த ஜனங்களுக்கு மாத்திரம் விளக்கமாய்க் கூறப்படுகிறது. இது தான் வேத சிவாகமங்களின் விசேடம். அஃதாவது ஆன்மாக்களுடைய பசுத்தன்மையின் பாகத்திற்காக வேதத்தில் விதிக்கப்பட்ட கன்மங்கள் சித்தாந்திகளால் தள்ளத்தக்கனவாம். அவை எவையெனில், வேதத்தின் கன்ம காண்டத்தில் காமியகன்மங்களைக் கூறியிருத்தலும், உபாசனா காண்டத்தில் பஞ்சாக்கரத்துக்கு மாறாக வேறு வித்தைகளைக் கூறியிருத்தலும், ஞானகாண்டத்தில் பரமாத்மாவுக்கும் சீவாத்மாவுக்கும் ஐக்கியங் கூறியிருத்தலுமாகிய இவை சித்தாந்திகளால் தள்ளத்தக்கவை யென்க.

 

      சித்தாந்தத்திலுள்ள எல்லாவிடயங்களும் கிரகிக்கத்தகுந்தனவேயாகும். சாதகர் புத்திரர் சமயி என்னும் மூவர்களுக்கும் ஆசாரியத்தன்மையில் அதிகாரமுண்டாகும் வரை அவரவர்களுடைய ஆசாரத்தில் குறைவு உண்டு. ஆயினும், அவர்களுக்கு ஆசாரியத்துவ அதிகாரமுண்டாகாமலே பிரார்த்த தேகத்தின் நாசம் நிகழ்ந்தால், அப்பொழுது அம் மூவர்களுள் சாதகருக்குச் சிவபதமும், புத்திருக்கு மந்திரேசுவர பதமும், சமயிக்ஞ உருத்திரபதமு மென்னும் மூன்று தானங்கள் நிகழ்கின்றன. சாதகனுக்கும் புத்திரனுக்கும் சமமான பதச் சேர்க்கை கிடையாது. எதனாலெனில், சிவபதத்தில் புத்திரனுக்குப் போகாவத்தையும் சாதகனுக்கு இலயாவத்தையும் நிகழ்கின்றமையா லென்க.

 

      ஆகையால் சாமானிய விசேட சாத்திரங்களை நன்றாயறிந்தவர்களாயும், சமர்த்தர்களாயும் எல்லாச் சம்பத்தும் நிறைந்தவர்களாயும் உள்ள ஆதிசைவப் பிராமணோத்தமர்களுக்குத்தான் எல்லாப் பதார்த்தங்களின் விநியோகத்தைத் தரிப்பதின் பொருட்டுப் பரமசிவனுக்குப் பற்றுக்கோடாயிக்குந் தன்மைரூபமான ஆசாரியத்தன்மை நிச்சயமாயிருக்கின்றது.

 

      சித்தரான குருவினது காருணியம் பெற்ர சூரியப்பட்டர், புத்திமான்களுக்கு நன்றாய் அறிவுண்டாகும் பொருட்டுச் சித்தாந்தப் பொருள்களனைதையும் நன்றாயறியுமாறு கூறினார்.

ஆறாவது விநியோக பரிச்சேதம் முற்றிற்று.

சைவ சித்தாந்த பரிபாஷை முற்றிற்று.

Related Articles

அத்வைதம் சைவ சித்தாந்தத்தின்படி

Oct 29, 2023

சிவன் போகமோக்ஷப் பிரதாயகர்

Oct 30, 2023