|
372 |
பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மேய அழகார்
குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே. | 01 |
373 | விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி
வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே. | 02
|
374 | நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
குறைவில் லவனூர் குரங்காடு துறையே. | 03
|
375 | விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே. | 04
|
376 | நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
கூறான்நகர் போல்குரங் காடு துறையே. | 05
|
377 | நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத்
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே. | 06
|
378 | பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே. | 07
|
379 | வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்
கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே. | 08
|
380 | நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியான் நகர்போல் குரங்காடு துறையே. | 09
|
381 | துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்காடு துறையே. | 10
|
382 | நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர்,
தேவியார் - அழகுசடைமுடியம்மை.