|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவைகாவூர்
இறைவர் திருப்பெயர் : வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர்.
இறைவியார் திருப்பெயர் : சர்வஜனரக்ஷகி, வளைக்கைநாயகி.
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : எமதீர்த்தம்,
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - கோழைமிட றாககவி.
தல வரலாறு
சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தின்மேல் ஏறியிருந்த வேடன் இரவெல்லாம் வில்வத்தைப் பறித்துப்போட்ட வண்ணம் தூங்காமல் இருக்க, காலையில் இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த அற்புதத் தலம்.
இங்கே நந்தி வாயிலை (கிழக்கு) நோக்கி திரும்பியிருப்பதைக் காணலாம். இத்தல வரலாறாகிய வேடன் நிகழ்ச்சி தொடர்பாக - அதாவது வேடனைப் பிடிக்க எமன்வர, நந்தியும், துவாரபாலகர்களும், ஏனையோரும் தடுக்க, மீறி வருமவனைத் தடுத்து விரட்ட இவ்வாறு திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயிலில் துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள் இல்லை எனப்படுகிறது.
சிறப்புக்கள்
சிவராத்திரிக்கு சிறப்புடைய தலம்.
இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.
உள்கோபுர வாயிலில் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் முருகன் வீற்றிருக்கும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது.
துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன.
மூலவர் சுயம்பு மூர்த்தி .
இத்தலத்தில் சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சுவாமிமலையிலிருந்து 'நாகுகுடி' செல்லும் கிளைப்பாதையில் 'நாகுகுடி' சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாகத் திருவைகாவூருக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன.
|