logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalinga atikal part-VI section II (verses 3872 - 4614)


திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் அருட்பா - இரண்டாம் பகுதி பாடல்கள் (3872 - 4614)

 

  • உள்ளுறை
39பொதுநடம் புரிகின்ற பொருள்203872 - 3891
40.ஆனந்தானுபவம்123892 - 3903
41.பரசிவ நிலை103904 - 3913
42.பேரானந்தப் பெருநிலை103914 - 3923
43.திருவடி நிலை103924 - 3933
44.காட்சிக் களிப்பு103934 - 3943
45.கண்கொளாக் காட்சி103944 - 3953
46.இறை திருக்காட்சி303954 - 3983
47.உளம் புகுந்த திறம் வியத்தல்103984 - 3993
48.வரம்பில் வியப்பு103994 - 4003
49.கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்104004 - 4013
50.ஆண்டருளிய அருமையை வியத்தல்104014 - 4023
51.இறைவனை ஏத்தும் இன்பம்104024 - 4033
52.பாமாலை ஏற்றல்124034 - 4045
53.உத்தர ஞான சிதம்பரமாலை114046 - 4056
54.செய்பணி வினவல்104057 - 4068
55.ஆன்ம தரிசனம்104069 - 4078
56.சுத்த சன்மார்க்க வேண்டுகோள்114079 - 4089
57.அருள் விளக்க மாலை1004090 - 4189
58.நற்றாய் கூறல்104190 - 4199
59.பாங்கி தலைவி பெற்றி கூறல்104200 - 4209
60.தலைவி வருந்தல்244210 - 4233
61.ஞான சிதம்பர வெண்பா94234 - 4242
62.சிவபதி விளக்கம்104243 - 4252
63.ஞானோபதேசம்104253 - 4262
64.ஆரமுதப்பேறு134263 - 4275
65.உபதேச வினா114276 - 4286<
66.நெஞ்சொடு நேர்தல்104287 - 4296
67.அஞ்சாதே நெஞ்சே234297 - 4319
68.ஆடிய பாதம்174320 - 4336
69.அபயம் அபயம்164337 - 4352
70.அம்பலவாணர் வருகை1054353 - 4457
71.அம்பலவாணர் ஆடவருகை124458 - 4469
72.அம்பலவாணர் அனையவருகை124470 - 4481
73.வருவார் அழைத்துவாடி54482 - 4486
74.என்ன புண்ணியம் செய்தேனோ94487 - 4495
75.இவர்க்கும் எனக்கும்54496 - 4500
76.இது நல்ல தருணம்64501 - 4506
77.ஆனந்தப் பரிவு114507 - 4517
78.ஞான மருந்து344518 - 4551
79.சிவசிவ ஜோதி334552 - 4584
80.ஜோதியுள் ஜோதி304585 - 4614

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

  • 1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
  •  

திருச்சிற்றம்பலம்


 

ஆறாம் அருட்பா - இரண்டாம் பகுதி

39. பொதுநடம் புரிகின்ற பொருள் 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3872

அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம் 

அளித்தெனை வளர்த்திட அருளாம் 
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த 

தெய்வமே சத்தியச் சிவமே 
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல் 

ஏற்றிய இன்பமே எல்லாப் 
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

1
3873

சித்தெலாம் வல்ல சித்தனே ஞான 

சிதம்பர ஜோதியே சிறியேன் 
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த 

கடவுளே கருணையங் கடலே 
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன் 

தனக்கறி வித்ததோர் தயையே 
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும் 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

2
3874

கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக் 

கற்பங்கள் கணக்கில கடப்ப 
நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா 

நித்திய நிற்குண(258) நிறைவே 
அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும் 

அருட்பெருங் கடல்எனும் அரசே 
புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

3
 (258). நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க. 
3875

தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே 

சத்திய சாத்தியக் கனலே 
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே 

உலகெலாந் தழைக்கமெய் உளத்தே 
நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே 

நல்கிய ஞானபோ னகமே 
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

4
3876

அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில் 

அறிவென அறிகின்ற அறிவே 
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த 

துரியநல் நிலத்திலே துலங்கும் 
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச் 

செல்வமே சித்தெலாம் புரியும் 
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

5
 (259). சற்புதர் - நல்லறிவுடையவர். 
3877

தத்துவ பதியே தத்துவம் கடந்த 

தனித்ததோர் சத்திய பதியே 
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர் 

தமக்குளே சார்ந்தநற் சார்பே 
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் 

பெறல்அரி தாகிய(260) பேறே 
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

6
 (260). பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு. 
3878

மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த 

விளைவெலாம் காட்டிமெய் வேத 
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும் 

நோக்கமே ஆக்கமும் திறலும் 
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும் 

நாயகக் கருணைநற் றாயே 
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

7
3879

அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே 

அரும்பெருஞ் சோதியே சுடரே 
மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே 

மருந்தெலாம் பொருந்திய மணியே 
உலப்பறு கருணைச் செல்வமே எல்லா 

உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே 
புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

8
3880

பரம்பர நிறைவே பராபர வெளியே 

பரமசிற் சுகந்தரும் பதியே 
வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில் 

வயங்கிய பெருஞ்சுடர் மணியே 
கரம்பெறு கனியே கனிவுறு சுவையே 

கருதிய கருத்துறு களிப்பே 
புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

9
3881

வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி 

மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே 
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே 

கருணைவான் அமுதத்தெண் கடலே(261) 
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி 

ஆனந்த மாம்அனு பவமே 
பொற்புறு பதியே அற்புத நிதியே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

10
 (261). தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா. 
3882

தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம் 

தரவல்ல சம்புவே சமயப் 
புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த 

புண்ணியர் நண்ணிய புகலே 
வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா 

வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே 
பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப் 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

11
3883

மூவிரு முடிபின் முடிந்ததோர்(262) முடிபே 

முடிபெலாம் கடந்ததோர் முதலே 
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச் 

சத்தியத் தனிநடு நிலையே 
மேவிய நடுவில் விளங்கிய விளைவே 

விளைவெலாம் தருகின்ற வெளியே 
பூவியல் அளித்த புனிதசற் குருவே 

பொதுநடம் புரிகின்ற பொருளே

12
 (262). முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா. 
3884

வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும் 

விளம்பிய அனுபவ விளைவும் 
போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள் 

போனது மாய்ஒளிர் புலமே 
ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ் 

விருநிலத் தியல்அருள் ஒளியால் 
பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

13
3885

அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை 

அருள்வடி வெடுத்தெழுந் தருளி 
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி 

நிலைஎலாம் அளித்தமா நிதியே 
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம் 

வயங்கநல் வரந்தந்த வாழ்வே 
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

14
3886

என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென் 

இதயத்தில் இருக்கின்ற குருவே 
அன்புடை அரசே அப்பனே என்றன் 

அம்மையே அருட்பெருஞ் சோதி 
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே 

என்னுயிர் நாதனே என்னைப் 
பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

15
3887

சத்திய பதியே சத்திய நிதியே 

சத்திய ஞானமே வேத 
நித்திய நிலையே நித்திய நிறைவே 

நித்திய வாழ்வருள் நெறியே 
சித்திஇன் புருவே சித்தியின் கருவே 

சித்தியிற் சித்தியே எனது 
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப் 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

16
3888

சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே 

சிவபத அனுபவச் சிவமே 
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே 

மதிநிறை அமுதநல் வாய்ப்பே 
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே 

சாமியே தந்தையே தாயே 
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

17
3889

கலைவளர் கலையே கலையினுட் கலையே 

கலைஎலாம் தரும்ஒரு கருவே 
நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும் 

நித்திய வானமே ஞான 
மலைவளர் மருந்தே மருந்துறு பலனே 

மாபலம் தருகின்ற வாழ்வே 
புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

18
3890

மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான 

விளக்கமே விளக்கத்தின் வியப்பே 
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த 

கருணையே கரிசிலாக் களிப்பே 
ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும் 

அற்புதக் காட்சியே எனது 
பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப் 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

19
3891

காரண அருவே காரிய உருவே 

காரண காரியம் காட்டி 
ஆரண முடியும் ஆகம முடியும் 

அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே 
நாரண தலமே(263) நாரண வலமே 

நாரணா காரத்தின் ஞாங்கர்ப் 
பூரண ஒளிசெய் பூரண சிவமே 

பொதுநடம் புரிகின்ற பொருளே.

20
 (263). தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா. 

40. ஆனந்தானுபவம்

நேரிசை வெண்பா 

3892கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம் 
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே 
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264) 
வாணா நினக்கடிமை வாய்த்து.
1
 (264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா. 
3893காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச் 
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச் 
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும் 
ஏகா நினக்கடிமை ஏற்று.
2
3894மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம் 
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை 
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந் 
தாய்க்குத் தனிஇயற்கை தான்.
3
3895கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப் 
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம் 
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய் 
எந்தாய் கருணை இது.
4
3896கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம் 
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன் 
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும் 
அழியாச்சிற் றம்பலத்தே யான்.
5
3897பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம் 
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின் 
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை 
நாடுகின்றேன் சிற்சபையை நான்.
6
3898எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் 
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச் 
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என் 
குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
7
3899கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும் 
கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய 
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில் 
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
8
 (265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா. 
3900கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம் 
உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே 
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம் 
தனைஉவந்து கொண்டான் தனை.
9
 (266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா. 
3901தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம் 
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது 
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள் 
மணவாளன் பாத மலர்.
10
3902திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக் 
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின் 
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ் 
மாப்பிள்ளை பாத மலர்.
11
3903என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின் 
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச் 
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை 
மாலைஇட்டான் பாதமலர்.
12

41. பரசிவ நிலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

3904.

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் 

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் 
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் 

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் 
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம் 

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் 
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

1
3905

எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம் 

என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம் 
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம் 

நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம் 
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம் 

காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம் 
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2
3906

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் 

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம் 
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் 

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம் 
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம் 

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம் 
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம் 

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

3
3907

என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் 

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் 
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் 

பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம் 
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம் 

அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம் 
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

4
3908

எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம் 

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம் 
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம் 

நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம் 
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம் 

பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம் 
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

5
3909

இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம் 

இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் 
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம் 

எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம் 
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர் 

பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம் 
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

6
 267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு. 
3910

சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம் 

சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம் 
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம் 

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் 
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம் 

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம் 
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

7
3911

தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம் 

துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம் 
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் 

மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம் 
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம் 

ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம் 
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

8
3912

எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம் 

எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம் 
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம் 

அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம் 
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம் 

ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம் 
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

9
3913

சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம் 

சத்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம் 
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா 

நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் 
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப் 

பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம் 
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

10

42. பேரானந்தப் பெருநிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

3914.

அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் 

ஆனந்த போகமே அமுதே 
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே 

மன்னும்என் ஆருயிர்த் துணையே 
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே 

தூயவே தாந்தத்தின் பயனே 
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

1
3915

திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும் 

தெய்வமே மெய்ப்பொருட் சிவமே 
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே 

ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே 
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே 

உவந்தர சளிக்கின்ற அரசே 
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

2
3916

துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் 

சோதியுட் சோதியே எனது 
மதிவளர் மருந்தே மந்திர மணியே 

மன்னிய பெருங்குண மலையே 
கதிதரு துரியத் தனிவெளி நடுவே 

கலந்தர சாள்கின்ற களிப்பே 
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

3
3917

சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ் 

செல்வமே என்பெருஞ் சிறப்பே 
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே 

நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே 
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத் 

திருந்தர சளிக்கின்ற பதியே 
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

4
3918

உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

ஒள்ளிய தெள்ளிய ஒளியே 
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே 

மந்திரத் தாற்பெற்ற மணியே 
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில் 

நிறைந்தர சாள்கின்ற நிதியே 
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

5
3919

மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

மெய்யறி வானந்த விளக்கே 
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே 

கதிர்நடு வளர்கின்ற கலையே 
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப் 

பால்அர சாள்கின்ற அரசே 
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

6 <
3920

இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

இன்பமே என்னுடை அன்பே 
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும் 

திகழுறத் திகழ்கின்ற சிவமே 
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல் 

வெளிஅர சாள்கின்ற பதியே 
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

7
3921

அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

அரும்பெருஞ் சோதியே எனது 
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப் 

புறம்விடா தாண்டமெய்ப் பொருளே 
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில் 

மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே 
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

8
3922

வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

மாபெருங் கருணைஎம் பதியே 
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா 

உலகமும் நிறைந்தபே ரொளியே 
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால் 

வயங்கும்ஓர் வெளிநடு மணியே 
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

9
3923

தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே 
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே 

நண்புகொண் டருளிய நண்பே 
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து 

வயங்கிய தனிநிலை வாழ்வே 
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே.

10

43. திருவடி நிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

3924.

உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் 

உவப்பிலா அண்டத்தின் பகுதி 
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த 

அவைஎலாம் புறத்திறைச் சார்பில் 
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் 

றிருந்தென விருந்தன மிடைந்தே 
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் 

தென்பர்வான் திருவடி நிலையே.

1
3925

தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா 

யேச்சுரன் சதாசிவன் விந்து 
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி 

நவில்பர சிவம்எனும் இவர்கள் 
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் 

இடதுகாற் கடைவிரல் நகத்தின் 
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற் 

கண்டனன் திருவடி நிலையே.

2
3926

அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் 

அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் 
படர்தரு விந்து பிரணவப் பிரமம் 

பரைபரம் பரன்எனும் இவர்கள் 
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் 

துணையடிப் பாதுகைப் புறத்தே 
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே 

ஏத்துவன் திருவடி நிலையே.

3
3927

இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் 

பிரமன்ஈ சானனே முதலாம் 
மகத்துழல் சமய வானவர் மன்றின் 

மலரடிப் பாதுகைப் புறத்தும் 
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய 

புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல் 
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் 

தெரிந்தனன் திருவடி நிலையே.

4
3928

பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம் 

போந்தவான் முடியதாங் கதன்மேல் 
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா 

வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல் 
என்வணச் சோதிக் கொடிபர நாதாந் 

தத்திலே இலங்கிய ததன்மேல் 
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத் 

தழுவினன் திருவடி நிலையே.

5
3929

மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான் 

மற்றவற் றுட்புறங் கீழ்மேல் 
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின் 

அமைந்தன சத்திகள் அவற்றின் 
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும் 

கருதுரு முதலிய விளங்க 
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று 

நவின்றனர் திருவடி நிலையே.

6
3930

தொகையள விவைஎன் றறிவரும் பகுதித் 

தொல்லையின் எல்லையும் அவற்றின் 
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே 

மன்னிஎங் கணும்இரு பாற்குத் 
தகையுறு முதலா வணங்கடை யாகத் 

தயங்கமற் றதுவது கருவிச் 
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும் 

என்பரால் திருவடி நிலையே.

7
3931

மன்றஓங் கியமா மாயையின் பேத 

வகைதொகை விரிஎன மலிந்த 
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா 

உற்றன மற்றவை எல்லாம் 
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க 

நின்றசத் திகளொடு சத்தர் 
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில் 

என்பரால் திருவடி நிலையே.

8
3932

பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப் 

பெரியஓங் காரமே முதலா 
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம் 

என்றவற் றவண்அவண் இசைந்த 
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து 

மன்அதி காரம்ஐந் தியற்றத் 
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும் 

என்பரால் திருவடி நிலையே.

9
3933

பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப் 

பதிவரை நிறுவிஆங் கதன்மேல் 
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட 

வெறுவெளி எனஉல குணர்ந்த 
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர் 

திருவுருக் கொண்டுபொற் பொதுவில் 
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற 

என்பரால் திருவடி நிலையே.

10

44. காட்சிக் களிப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

3934.

அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை 

அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில் 
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச் 

சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப் 
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட 

பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை 
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

1
3935

பாலானைத் தேனானைப் பழத்தி னானைப் 

பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக் 
காலானைக் கலைசாகாத் தலையி னானைக் 

கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா 
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை 

மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி 
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

2
3936

உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண 

உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக் 
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக் 

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத் 
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத் 

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி 
எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

3
3937

உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை 

உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை 
மறவானை அறவாழி வழங்கி னானை 

வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந் 
திறவானை என்னளவில் திறந்து காட்டிச் 

சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை 
இறவானைப் பிறவானை இயற்கை யானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

4
3938

அகத்தானைப் புறத்தானை அணுவா னானை 

அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை 
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை 

மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற 
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத் 

தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை 
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும் 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

5
3939

செய்யானைக் கரியானைப் பசுமை யானைத் 

திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை 
மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா 

வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக் 
கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட 

கையானை என்னைஎன்றும் கையா தானை 
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை 

ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

6
3940

மருந்தானை மணியானை வழுத்தா நின்ற 

மந்திரங்க ளானானை வான நாட்டு 
விருந்தானை உறவானை நண்பி னானை 

மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப் 
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப் 

பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும் 
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

7
3941

ஆன்றானை அறிவானை அழிவி லானை 

அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி 
மூன்றானை இரண்டானை ஒன்றானானை 

முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில் 
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச் 

சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை 
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

8
3942

தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால் 

சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை 
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை 

வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை 
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை 

மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் 
ஈய்ந்தானை(268) ஆய்ந்தவர்தம் இதயத் தானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

9
 (268). ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க. 
3943

நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை 

நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி 
நின்றானைப் பொன்றாத நிலையி னானை 

நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம் 
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை 

ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல் 
என்றானை என்றும்உள இயற்கை யானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

10

45. கண்கொளாக் காட்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

3944.

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங் 

காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத் 
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத் 

தன்னருளும் தன்பொருளும் தானே என்பால் 
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும் 

குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை 
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே 

ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

1
3945

விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம் 

விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்(269) 
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச் 

சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம் 
தரித்தானைத் தானேநா னாகி என்றும் 

தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம் 
எரித்தானை என்உயிருக் கின்பா னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

2
 (269). விரைத்தானை மெய்யே என்னை - பி. இரா.பதிப்பு. 
3946

நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே 

நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி 
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத் 

துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க 
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள் 

உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள 
எட்டானை என்னளவில் எட்டி னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

3
3947

சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத் 

துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக் 
காற்றானை வெளியானைக் கனலா னானைக் 

கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத் 
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச் 

சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம் 
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

4
 (270). சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே. 
3948

சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு 

செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில் 
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற 

ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம் 
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப் 

பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை 
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

5
3949

முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே 

முளைத்தானை மூவாத முதலா னானைக் 
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக் 

காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம் 
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை 

வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும் 
இளையானை மூத்தானை மூப்பி லானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

6
3950

புயலானை மழையானை அதிர்ப்பி னானைப் 

போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச் 
செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத் 

திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே 
அயலானை உறவானை அன்பு ளானை 

அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி 
இயலானை எழிலானைப் பொழிலா னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

7
3951

தாயானைத் தந்தைஎனக் காயி னானைச் 

சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே 
மேயானைக் கண்காண விளங்கி னானை 

மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன 
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை 

வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி 
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

8
3952

தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத் 

தானேதா னானானைத் தமிய னேனைக் 
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக் 

குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி 
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை 

அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால் 
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

9
3953

உடையானை அருட்சோதி உருவி னானை 

ஓவானை மூவானை உலவா இன்பக் 
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு 

கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை 
அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை 

அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின் 
இடையானை என்னாசை எல்லாந் தந்த 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

10

46. இறை திருக்காட்சி

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3954.

அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை 

அருட்பெருஞ் ஜோதியை அரசை 
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை 

வள்ளலை மாணிக்க மணியைப் 
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த 

புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத் 
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான 

தீபத்தைக் கண்டுகொண் டேனே.

1
3955

துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத் 

துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை 
என்பொலா மணியை என்சிகா மணியை 

என்னிரு கண்ணுள்மா மணியை 
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை 

அருட்பெருஞ் ஜோதியை அடியேன் 
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த 

எந்தையைக் கண்டுகொண் டேனே.

2
3956

சிதத்திலே(271) ஊறித் தெளிந்ததெள் ளமுதைச் 

சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப் 
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப் 

பரம்பர வாழ்வைஎம் பதியை 
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த 

மருந்தைமா மந்திரந் தன்னை 
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட 

இறைவனைக் கண்டுகொண் டேனே.

4
 (271). 271. சிதம் - ஞானம் 
3957

உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த 

ஒருபெரும் பதியைஎன் உவப்பைப் 
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது 

பொருளைஎன் புண்ணியப் பயனைக் 
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த 

குருவைஎண் குணப்பெருங் குன்றை 
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த 

வள்ளலைக் கண்டுகொண் டேனே.

4
3958

புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட 

பொற்சபை அப்பனை வேதம் 
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட 

ஜோதியைச் சோதியா தென்னை 
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து 

மன்னிய பதியைஎன் வாழ்வை 
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா 

இறைவனைக் கண்டுகொண் டேனே.

5
3959

பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய் 

பதியுமாம் ஒருபசு பதியை 
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி 

நல்கிய கருணைநா யகனை 
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த 

இறைவனை மறைமுடி இலங்கும் 
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத் 

தந்தையைக் கண்டுகொண் டேனே.

6
3960

பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் 

பிறங்கிய பொதுமையைப் பெரிய 
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த 

சாமியைத் தயாநிதி தன்னை 
வண்மையை அழியா வரத்தினை ஞான 

வாழ்வைஎன் மதியிலே விளங்கும் 
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள் 

ஒருவனைக் கண்டுகொண் டேனே.

7
3961

ஆதியை ஆதி அந்தமீ தெனஉள் 

அறிவித்த அறிவைஎன் அன்பைச் 
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச் 

சுத்தசன் மார்க்கத்தின் துணிபை 
நீதியை எல்லா நிலைகளும் கடந்த 

நிலையிலே நிறைந்தமா நிதியை 
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை 

ஒளிதனைக் கண்டுகொண் டேனே.

8
3962

என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி 

என்னைவாழ் விக்கின்ற பதியைப் 
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே 

பொருந்திய மருந்தையென் பொருளை 
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க 

வைத்தசன் மார்க்கசற் குருவைக் 
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் 

கோயிலில் கண்டுகொண் டேனே.

9
3963

புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில் 

போந்தருள் அளித்தசற் குருவைக் 
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த 

கருணையங் கடவுளைத் தனது 
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே 

தோளுறப் புனைந்தமெய்த் துணையைத் 
தன்னிக ரில்லாத் தலைவனை எனது 

தந்தையைக் கண்டுகொண் டேனே.

10
3964

ஏங்கலை மகனே தூங்கலை எனவந் 

தெடுத்தெனை அணைத்தஎன் தாயை 
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் 

உடையஎன் ஒருபெரும் பதியைப் 
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப் 

பரிசும்இங் களித்ததற் பரத்தைத் 
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத் 

தலைவனைக் கண்டுகொண் டேனே.

11
3965

துன்புறேல் மகனே தூங்கலை எனஎன் 

சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை 
அன்புளே கலந்த தந்தையை என்றன் 

ஆவியைப் பாவியேன் உளத்தை 
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி 

இனிதமர்ந் தருளிய இறையை 
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என் 

வள்ளலைக் கண்டுகொண் டேனே.

12
3966

நனவினும் எனது கனவினும் எனக்கே 

நண்ணிய தண்ணிய அமுதை 
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி 

வழங்கிய பெருந்தயா நிதியைச் 
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த 

சிவகுரு பதியைஎன் சிறப்பை 
உனலரும் பெரிய துரியமேல் வெளியில் 

ஒளிதனைக் கண்டுகொண் டேனே.

13
3967

கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக் 

கருதுகோற் றேன்நறுஞ் சுவையை 
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை 

ஆவியை ஆவியுட் கலந்த 
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப் 

பேசுதற் கரும்பெரும் பேற்றை 
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும் 

விளக்கினைக் கண்டுகொண் டேனே.

14
3968

களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக் 

களிப்பெலாம் அளித்தசர்க் கரையை 
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா 

துள்ளகத் தூறும்இன் அமுதை 
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள் 

மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக் 
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும் 

குருவையான் கண்டுகொண் டேனே.

15
3969

சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச் 

சிதம்பர நடம்புரி சிவத்தைப் 
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் 

பதிசிவ பதத்தைத்தற் பதத்தை 
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை 

யாவுமாய் அல்லவாம் பொருளைச் 
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச் 

சாமியைக் கண்டுகொண் டேனே.

16
3970

ஆரண முடிமேல் அமர்பிர மத்தை 

ஆகம முடிஅமர் பரத்தைக் 
காரண வரத்தைக் காரிய தரத்தைக் 

காரிய காரணக் கருவைத் 
தாரண நிலையைத் தத்துவ பதியைச் 

சத்திய நித்திய தலத்தைப் 
பூரண சுகத்தைப் பூரண சிவமாம் 

பொருளினைக் கண்டுகொண் டேனே.

17
3971

சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச் 

சுத்தசித் தாந்தரா சியத்தைத் 
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச் 

சமரச சத்தியப் பொருளைச் 
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில் 

தெளிந்தபே ரானந்தத் தெளிவை 
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின் 

மெய்மையைக் கண்டுகொண் டேனே.

18
3972

சமயமும் மதமும் கடந்ததோர் ஞான 

சபைநடம் புரிகின்ற தனியைத் 
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச் 

சத்துவ நித்தசற் குருவை 
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா 

ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை 
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார 

நீதியைக் கண்டுகொண் டேனே.

19
3973

அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும் 

அருட்பெருஞ் சோதியை உலகக் 
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும் 

காட்சியைக் கருணையங் கடலை 
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல 

ஒளியையும் உதவிய ஒளியைக் 
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக் 

கோயிலில் கண்டுகொண் டேனே.

20
3974

சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த 

சமரச சத்திய வெளியைச் 
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த் 

துலங்கிய ஜோதியைச் சோதிப் 
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த 

பரமசன் மார்க்கமெய்ப் பதியைச் 
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத் 

தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.

21
3975

அடிநடு முடியோர் அணுத்துணை யேனும் 

அறிந்திடப் படாதமெய் அறிவைப் 
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த 

பதியிலே விளங்குமெய்ப் பதியைக் 
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற் 

கடைக்கணித் தருளிய கருணைக் 
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக் 

கோயிலில் கண்டுகொண் டேனே.

22
3976

பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும் 

பற்றறத் தவிர்த்தருட் பரிசும் 
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு 

நல்கிய நண்பைநன் னாத 
இயமுற வெனது குளநடு நடஞ்செய் 

எந்தையை என்னுயிர்க் குயிரைப் 
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப் 

பொற்புறக் கண்டுகொண் டேனே.

23
3977

கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக் 

ககனத்தைக் காற்றினை அமுதை 
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா 

நின்மல நிற்குண நிறைவை 
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை 

வரவுபோக் கற்றசின் மயத்தை 
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை 

அன்பினிற் கண்டுகொண் டேனே.

24
3978

மும்மையை எல்லாம் உடையபே ரரசை 

முழுதொருங் குணர்த்திய உணர்வை 
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம் 

வியப்புற அளித்தமெய் விளைவைச் 
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால் 

சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை 
அம்மையைக் கருணை அப்பனை என்பே 

ரன்பனைக் கண்டுகொண் டேனே.

25
3979

கருத்தனை எனது கண்அனை யவனைக் 

கருணையா ரமுதெனக் களித்த 
ஒருத்தனை என்னை உடையநா யகனை 

உண்மைவே தாகம முடியின் 
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற் 

றம்பலத் தருள்நடம் புரியும் 
நிருத்தனை எனது நேயனை ஞான 

நிலையனைக் கண்டுகொண் டேனே.

26
3980

வித்தெலாம் அளித்த விமலனை எல்லா 

விளைவையும் விளைக்கவல் லவனை 
அத்தெலாங்(272) காட்டும் அரும்பெறல் மணியை 

ஆனந்தக் கூத்தனை அரசைச் 
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான 

சபைத்தனித் தலைவனைத் தவனைச் 
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந் 

தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.

27
 (272). அத்து - செந்நிறம். முதற்பதிப்பு. 
3981

உத்தர ஞான சித்திமா புரத்தின் 

ஓங்கிய ஒருபெரும் பதியை 
உத்தர ஞான சிதம்பர ஒளியை 

உண்மையை ஒருதனி உணர்வை 
உத்தர ஞான நடம்புரி கின்ற 

ஒருவனை உலகெலாம் வழுத்தும் 
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம் 

ஓதியைக் கண்டுகொண் டேனே.

28
3982

புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப் 

புணர்த்திய புனிதனை எல்லா 
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில் 

நிறுத்திய நிமலனை எனக்கு 
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா 

வாழ்க்கையில் வாழவைத் தவனைத் 
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத் 

தந்தையைக் கண்டுகொண் டேனே.

29
3983

பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த 

பரமனை என்னுளே பழுத்த 
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக் 

கடவுளைக் கண்ணினுள் மணியைப் 
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப் 

பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத் 
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத் 

தந்தையைக் கண்டுகொண் டேனே.

30

47. உளம் புகுந்த திறம் வியத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

3984.

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் 

மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே 
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே 

திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும் 
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே 

நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என் 
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன் 

உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.

1
3985

படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப் 

பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே 
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும் 

அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த 
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும் 

மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக் 
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர் 

கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.

2
3986

உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும் 

ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய் 
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும் 

வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த 
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின் 

வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம் 
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

3
3987

தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த் 

தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு 
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே 

விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த 
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது 

நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய் 
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன் 

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

4
3988

இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் 

இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய் 
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய் 

மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த 
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் 

நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே 
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

5
3989

உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய் 

உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய் 
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த 

வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே 
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே 

சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய் 
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன் 

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

6
3990

மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய் 

வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய் 
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில் 

மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே 
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய் 

இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக் 
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

7
3991

சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும் 

செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய் 
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப் 

பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே 
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது 

சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே 
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

8
3992

பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம் 

பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும் 
உற்றறிதற்(273) கரியஒரு பெருவெளிமேல் வெளியில் 

ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள் 
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே 

பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்(274) அரசே 
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன் 

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

9
 (273). உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா. 
(274). பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
 
3993

கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல் 

காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து 
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த 

உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில் 
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள் 

மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே 
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

10

48. வரம்பில் வியப்பு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

3994.

பொன்புனை புயனும் அயனும்மற் றவரும் 

புகலரும் பெரியஓர் நிலையில் 
இன்புரு வாகி அருளொடும் விளங்கி 

இயற்றலே ஆதிஐந் தொழிலும் 
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத் 

தனிஅர சியற்றும்ஓர் தலைவன் 
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால் 

அவன்தனை மறுப்பவர் யாரே.

1
3995

மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள் 

மன்னுருத் திரர்களே முதலா 
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங் 

குறுபெருந் தொழில்பல இயற்றி 
இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி 

இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன் 
அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ 

அவன்தனை மறுப்பவர் யாரே.

2
3996

தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித் 

தனித்தனி மறைகள்ஆ கமங்கள் 
உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா 

ஒருதனிப் பெரும்பதி உவந்தே 
புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் 

பொறுத்தருட் பூரண வடிவாய் 
என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ 

எந்தையைத் தடுப்பவர் யாரே.

3
3997

பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப் 

பாலதோ பால்உறா அதுவோ 
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி 

இயற்கையோ ஆதியின் இயல்போ 
மேல்வகை யாதோ எனமறை முடிகள் 

விளம்பிட விளங்கும்ஓர் தலைவன் 
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான் 

வள்ளலைத் தடுப்பவர் யாரே.

4
3998

வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா 

வருபர உணர்ச்சியும் மாட்டாப் 
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப் 

பராபர உணர்ச்சியும் பற்றா 
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர் 

உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன் 
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான் 

கடவுளைத் தடுப்பவர் யாரே.

5
3999

படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும் 

பரம்பர ஒளிஎலாம் அணுவில் 
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக் 

கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம் 
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த 

அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன் 
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான் 

கடவுளைத் தடுப்பவர் யாரே.

6
4000

அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட 

அடுக்கெலாம் அம்மஓர் அணுவின் 
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப் 

பேசநின் றோங்கிய பெரியோன் 
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக் 

கருணையா ரமுதளித் துளமாம் 
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ 

வள்ளலைத் தடுப்பவர் யாரே.

7
4001

உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் 

உளவுயிர் முழுவதும் ஒருங்கே 
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும் 

குறைபடாப் பெருங்கொடைத் தலைவன் 
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக் 

கருத்தெலாம் இனிதுதந் தருளித் 
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான் 

தந்தையைத் தடுப்பவர் யாரே.

8
4002

அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா 

தையகோ ஐயகோ அறிவின் 
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம் 

வாய்குழைந் துரைத்துரைத் துரையும் 
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர் 

மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன் 
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன் 

திருவுளம் தடுப்பவர் யாரே.

9
4003

கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க் 

கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க் 
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த 

கொள்கையாய்க் கொள்கையோ டளவா 
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால் 

அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன் 
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன் 

வண்மையைத் தடுப்பவர் யாரே.

10

49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4004.

அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன் 

அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத் 
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம் 

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை 
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த 

வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக் 
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

1
4005

திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத் 

திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா 
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை 

உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை 
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை 

நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது 
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

2
4006

பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப் 

பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத் 
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம் 

செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை 
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை 

ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை 
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

3
4007

மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை 

வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத் 
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச் 

சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை 
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை 

விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக் 
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

4
4008

மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள் 

வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை 
ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும் 

அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத் 
தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான 

சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக் 
காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

5
4009

ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும் 

அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை 
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க 

விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும் 
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச் 

சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக் 
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

6
4010

திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச் 

சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும் 
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும் 

அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும் 
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம் 

பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம் 
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

7
4011

கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும் 

கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில் 
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி 

உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித் 
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த 

தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும் 
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

8
4012

நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும் 

நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும் 
ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம் 

ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும் 
வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற 

வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக் 
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

9
4013

மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல 

வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத் 
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த 

தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப் 
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் 

புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக் 
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.

10

50. ஆண்டருளிய அருமையை வியத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4014.அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ 
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ 
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ 
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே.
1
4015அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ 
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ 
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ 
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே.
2
4016

எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ 

என்னுயிர்க் கின்பமே என்கோ 
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ 

சோதியுட் சோதியே என்கோ 
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ 

தனிப்பெருந் தலைவனே என்கோ 
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங் 

கென்னைஆண் டருளிய நினையே.

3
4017

அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ 

அம்பலத் தெம்பிரான் என்கோ 
நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ 

நீடும்என் நேயனே என்கோ 
பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ 

பெரியரிற் பெரியனே என்கோ 
இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங் 

கென்னைஆண் டருளிய நினையே.

4
4018

அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ 

அன்பிலே நிறைஅமு தென்கோ 
சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ 

திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ 
மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ 

மன்னும்என் வாழ்முதல் என்கோ 
இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி 

என்னைஆண் டருளிய நினையே.

5
4019

மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ 

மயக்கநீத் தருள்மருந் தென்கோ 
பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ 

பதச்சுவை அனுபவம் என்கோ 
சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ 

திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ 
இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங் 

கென்னைஆண் டருளிய நினையே.

6
4020

அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ 

அறிவிலே அறிவறி வென்கோ 
இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ 

என்னுயிர்த் துணைப்பதி என்கோ 
வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ 

மன்னும்அம் பலத்தர சென்கோ 
என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி 

என்னைஆண் டருளிய நினையே.

7
4021

தடையிலா தெடுத்த அருளமு தென்கோ 

சர்க்கரைக் கட்டியே என்கோ 
அடைவுறு வயிரக் கட்டியே என்கோ 

அம்பலத் தாணிப்பொன் என்கோ 
உடைய மாணிக்கப் பெருமலை என்கோ 

உள்ளொளிக் குள்ளொளி என்கோ 
இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே 

என்னைஆண் டருளிய நினையே.

8
4022

மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ 

மன்னும்ஆ கமப்பொருள் என்கோ 
குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ 

குணப்பெருங் குன்றமே என்கோ 
பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ 

பெரியஅம் பலத்தர சென்கோ 
இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங் 

கென்னைஆண் டருளிய நினையே.

9
4023

என்உளம் பிரியாப் பேர்ஒளி என்கோ 

என்உயிர்த் தந்தையே என்கோ 
என்உயிர்த் தாயே இன்பமே என்கோ 

என்உயிர்த் தலைவனே என்கோ 
என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ 

என்னுடை நண்பனே என்கோ 
என்ஒரு(275) வாழ்வின் தனிமுதல் என்கோ 

என்னைஆண் டருளிய நினையே.

10
 (275).என்பெரு - பி. இரா. பதிப்பு. 

51. இறைவனை ஏத்தும் இன்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4024.

கருணைமா நிதியே என்னிரு கண்ணே 

கடவுளே கடவுளே என்கோ 
தருணவான் அமுதே என்பெருந் தாயே 

தந்தையே தந்தையே என்கோ 
தெருள்நிறை மதியே என்குரு பதியே 

தெய்வமே தெய்வமே என்கோ 
அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி 

ஆண்டவ நின்றனை அறிந்தே.

1
4025

ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ 

ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர் 
வெட்டியே என்கோ வெட்டியில்(276) எனக்கு 

விளங்குறக் கிடைத்தஓர் வயிரப் 
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே 

பெரியவர் வைத்ததோர் தங்கக் 
கட்டியே என்கோ அம்பலத் தாடும் 

கருணையங் கடவுள்நின் றனையே.

2
 (276) கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு. 
4026

துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ 

சோதியுட் சோதியே என்கோ 
அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ 

அம்மையே அப்பனே என்கோ 
இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ 

என்உயிர்க் கின்அமு தென்கோ 
என்பொலா மணியே என்கணே என்கோ 

என்னுயிர் நாதநின் றனையே.

3
4027

கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த 

கணவனே கணவனே என்கோ 
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே 

ஒருதனிப் பெரியனே என்கோ 
திருத்தனே எனது செல்வமே எல்லாம் 

செயவல்ல சித்தனே என்கோ 
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ 

நிறைஅருட் சோதிநின் றனையே.

4
4028

தாயனே எனது தாதையே ஒருமைத் 

தலைவனே தலைவனே என்கோ 
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த 

பெருந்தகைப் பெரும்பதி என்கோ 
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ 

சித்தெலாம் வல்லசித் தென்கோ 
தூயனே எனது நேயனே என்கோ 

சோதியுட் சோதிநின் றனையே.

5
4029

அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும் 

ஆனந்தத் தனிமலர் என்கோ 
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ 

கடையனேன் உடையநெஞ் சகமாம் 
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி 

இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ 
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ 

சோதியுட் சோதிநின் றனையே.

6
4030

தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த 

சர்க்கரை அமுதமே என்கோ 
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த 

முகநகைக் கணவனே என்கோ 
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து 

புணர்ந்தஓர் பூவையே என்கோ 
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த 

அம்பலத் தாடிநின் றனையே.

7
4031

தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த 

தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ 
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந் 

தனில்உறும் அனுபவம் என்கோ 
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள் 

ஓங்கிய ஒருமையே என்கோ 
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ 

திருச்சிற்றம் பலத்தவ நினையே.

8
4032

யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில் 

ஓங்கிய காட்சியே என்கோ 
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள் 

இசைந்தபே ரின்பமே என்கோ 
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச் 

சார்ந்தசற் குருமணி என்கோ 
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா 

மன்றிலே நடிக்கின்றோய் நினையே.

9
4033

இரவிலா தியம்பும் பகலிலா திருந்த 

இயற்கையுள் இயற்கையே என்கோ 
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்(277) 

வயங்கிய வான்பொருள் என்கோ 
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே 

செய்ததோர் சித்தனே என்கோ 
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி 

களித்தளித் தருளிய நினையே.

10
 (277) நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. 

52. பாமாலை ஏற்றல்

நேரிசை வெண்பா 

4034.நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித் 
தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த 
சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த 
நல்லான்தன் தாட்கே நயந்து.
1
4035சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும் 
வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ 
காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச் 
சேமநட ராஜன் தெரிந்து.
2
4036ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம் 
வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார 
விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த 
எந்தைநட ராஜன் இசைந்து.
3
4037இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க 
என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு 
நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார் 
ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
4
4038என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என் 
தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக் 
காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச் 
சாலையிலே வாஎன்றான் தான்.
5
4039என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப் 
பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில் 
நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய் 
வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
6
4040முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம் 
அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம் 
பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத் 
தாரா வரங்களெலாம் தந்து.
7
4041பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே 
என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில் 
வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ 
தெல்லாம் திருவருட்சீ ரே.
8
4042பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம் 
தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன் 
இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான 
மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
9
4043நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும் 
ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய் 
புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால் 
எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
10
4044எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க 
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற 
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த 
தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
11
4045ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும் 
தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி 
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம் 
கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
12

53. உத்தரஞானசிதம்பர மாலை

கட்டளைக் கலித்துறை 

4046.அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன் 
மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே 
பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும் 
தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
1
4047இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல 
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை 
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில் 
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
2
4048உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே 
இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும் 
கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த் 
திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
3
4049பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல் 
தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே 
உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த 
சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
4
4050ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு 
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு 
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல் 
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
5
4051எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல 
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த 
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும் 
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
6
4052குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம் 
பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக் 
கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற 
திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
7
4053கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார் 
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல 
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும் 
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
8
4054காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம் 
வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால் 
கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று 
சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
9
4055சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது 
கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார் 
நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே 
செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
10
4056ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே 
மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின் 
மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன் 
தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
11

54. செய்பணி வினவல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4057.அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத் 
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன் 
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே.
1
4058ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே 
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் 
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
2
4059அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச் 
சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன் 
நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
3
4060பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச் 
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன் 
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
4
4061ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத் 
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன் 
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
5
4062இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித் 
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன் 
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
6
4063மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச் 
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் 
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
7
4064ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித் 
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன் 
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
8
4065ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச் 
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் 
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
9
4066மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே 
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன் 
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
10
4067. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... 
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... 
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன் 
ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
11
4068பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து 
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் 
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே.278
12
4067, 4068.இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் 
இருப்பதாகக் கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார். 
பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.
13

55. ஆன்ம தரிசனம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4069.

திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன் 

திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான் 
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி 

உளஎலாம் ஆங்கவன் தனக்கே 
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு 

செயலிலேன் எனநினைத் திருந்தேன் 
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே 

அடிக்கடி உரைப்பதென் நினக்கே.

1
4070

நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன் 

நினைப்பற நின்றபோ தெல்லாம் 
எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன் 

என்செயல் என்னஓர் செயலும் 
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் 

சிவன்செய லாம்எனப் புரிந்தேன் 
அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே 

அடிக்கடி உரைப்பதென் நினக்கே.

2
4071

களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே 

களித்தனன் கண்கள்நீர் ததும்பித் 
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே 

துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத் 
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே 

தெளித்தனன் செய்கைவே றறியேன் 
ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் 

உரைப்பதென் அடிக்கடி உனக்கே.

3
4072உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் 
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் 
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென் குறிப்பினில் குறித்ததொன் றிலையே 
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
4
4073களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன் 
உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன் 
கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே 
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
5
4074திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும் சிறிதும்நான் விழைந்திலேன் இந்த 
உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன் உலகுறு மாயைக் 
கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ கடவுளே எனத்துயர்ந் திருந்தேன் 
அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான் அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
6
4075சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் 
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் 
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன் 
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
7
4076பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ 
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச் 
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன் 
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
8
4077ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும் 
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ இயல்அருட் சித்திகள் எனைவந் 
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன் 
உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
9
4078கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையில் கலந்தே 
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற் றோங்குதல் என்றுவந் துறுமோ 
வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன் 
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
10

56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4079

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் 
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே 

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் 
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் 

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் 
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் 

தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

1
4080

ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும் 
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் 

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் 
எய்யாத(279) அருட்சோதி என்கையுறல் வேண்டும் 

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும் 
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும் 

நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.

2
 (279). எய்யாத - அறியாத. முதற்பதிப்பு. 
4081

அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும் 
கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும் 

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும் 
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும் 

பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும் 
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும் 

உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.

3
4082

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும் 
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும் 

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும் 
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் 

ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும் 
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் 

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.

4
4083

அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும் 
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் 

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும் 
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும் 

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும் 
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும் 

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

5
4084

அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அண்டம்எலாம் பிண்டம்எலாம் கண்டுகொளல் வேண்டும் 
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும் 

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் 
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம் 

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும் 
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும் 

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

6
4085

அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும் 
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே 

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும் 
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும் 

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும் 
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும் 

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.

7
4086

அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும் 
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும் 

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் 
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே 

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் 
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் 

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.

8
4087

அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும் 
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும் 

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும் 
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும் 

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும் 
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும் 

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.

9
4088

அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும் 
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான 

மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும் 
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந் 

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும் 
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும் 

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

10
4089

அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும் 
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும் 

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும் 
கமையாதி(280) அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம் 

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும் 
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும் 

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.

11
 (280). கமை - பொறுமை. முதற்பதிப்பு. 

57. அருள் விளக்க மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4090

அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே 

அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே 
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே 

என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே 
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே 

மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா 

தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.

1
4091

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த 

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே 
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே 

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே 
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே 

மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே 
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

2
4092

இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே 

ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே 
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே 

அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே 
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே 

இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே 
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே 

தூயதிரு அடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.

3
4093

ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே 

உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே 
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே 

பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே 
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே 

நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே 
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே 

களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.

4
4094

மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து 

வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே 
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச் 

சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே 
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே 

அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே 
இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே 

என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.

5
4095

கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே 

காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே 
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை 

சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா 
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி 

என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே 
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே 

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

6
4096

கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து 

கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் 
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே 

மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே 
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித் 

திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே 
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே 

மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.

7
4097

கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில் 

கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே 
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே 

மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே 
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே 

மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே 
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே 

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

8
4098

அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 

அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும் 
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும் 

காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க 
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே 

விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம் 
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும் 

தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.

9
4099

நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி 

நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி 
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி 

வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி 
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி 

இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி 
எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் 

என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.

10
4100

நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா 

ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள் 
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி 

எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச் 
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச் 

சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே 
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் 

நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.

11
4101

தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது 

தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே 
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன் 

நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார் 
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும் 

அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே 
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே 

யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.

12
4102

உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ 

டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும் 
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே 

ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி 
எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி 

இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே 
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே 

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

13
4103

நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே 

நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா 
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே 

பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே 
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா 

கோவேஎன் கணவாஎன் குரவாஎன்(281) குணவா 
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும் 

நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.

14
 (281). எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. 
4104

கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே 

கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா 
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே 

மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே 
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே 

நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில் 
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே 

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

15
4105

கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே 

கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே 
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை 

வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே 
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே 

என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே 
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே 

தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.

16
4106

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் 

சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே 
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின் 

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி 
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி 

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே 
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே 

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.

17
4107

மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே 

மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே 
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே 

விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே 
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங் 

கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால் 
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே 

நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.

18
4108

கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் 

கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே 
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே 

பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே 
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம 

வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப் 
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது 

பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.

19
4109

உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே 

உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே 
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே 

பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே 
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே 

மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே 
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே 

சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.

20
4110

நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் 

ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே 
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும் 

ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே 
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் 

தேகமும்உள் உயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே 
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில் 

வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.

21
4111

எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே 

எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே 
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே 

சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே 
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள் 

மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே 
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே 

தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.

22
4112

சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் 

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே 
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம் 

ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே 
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் 

ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே 
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் 

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே

23
4113

அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி 

அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே 
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல் 

பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே 
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப் 

பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே 
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே 

ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

24
4114

அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் 

அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத் 
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் 

தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே 
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே 

மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே 
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

25
4115

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் 

பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும் 
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும் 

இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே 
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே 

மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே 
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும் 

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

26
4116

பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும் 

படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே 
உற்றொளிகொண் டோ ங்கிஎங்கும் தன்மயமாய் ஞான 

உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே 
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே 

சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே 
முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே 

முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.

27
4117

ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே 

அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ் 
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க் 

காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே 
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் 

செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே 
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில் 

விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.

28
4118

வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும் 

வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால் 
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே 

ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே 
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும் 

சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே 
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில் 

புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

29
4119

பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும் 

பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித் 
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே 

தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே 
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம் 

விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே 
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும் 

துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

30
4120

மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே 

வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி 
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே 

அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே 
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம் 

தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே 
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும் 

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

31
4121

சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும் 

தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே 
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய் 

நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே 
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும் 

விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே 
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில் 

தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

32
4122

சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும் 

தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே 
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும் 

உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே 
தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும் 

துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே 
போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும் 

பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

33
4123

நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும் 

நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி 
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க 

இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே 
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம் 

குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே 
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும் 

பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

34
4124

மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள் 

வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம் 
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள் 

பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே 
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம் 

சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே 
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே 

ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

35
4125

விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள் 

விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக் 
களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான் 

காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே 
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும் 

ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே 
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே 

மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.

36
4126

தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே 

சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே 
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே 

பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே 
விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும் 

மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே 
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே 

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.

37
4127

வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள் 

மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே 
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம் 

ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே 
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச் 

சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே 
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே 

விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.

38
4128

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே 

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

39
4129

காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் 

கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச் 
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த் 

தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய் 
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய் 

மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே 
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே 

ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

40
4130

திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும் 

சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய் 
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே 

மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப் 
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே 

படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே 
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில் 

ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

41
4131

கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும் 

கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில் 
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே 

தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப் 
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம் 

படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே 
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய் 

ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.

42
4132

தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் 

திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே 
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி 

உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே 
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப் 

பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே 
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில் 

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.

43
4133

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்(282) தில்லைத் 

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது 
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் 

வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே 
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே 

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே 
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும் 

சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

44
 (282). தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க. 
4134

ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே 

உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன் 
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே 

தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே 
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே 

சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே 
ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில் 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

45
4135

தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத் 

தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே 
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே 

பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே 
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால் 

இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே 
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில் 

கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

46
4136

ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர் 

உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது 
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம் 

பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே 
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச் 

செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே 
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில் 

காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

47
4137

இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே 

இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே 
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப் 

போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே 
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி 

மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே 
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

48
4138

நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி 

நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே 
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே 

ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே 
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் 

வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே 
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத் 

திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

49
4139

நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி 

நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே 
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும் 

கிளர்ந்தொளிகொண் டோ ங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே 
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே 

பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே 
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த 

ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

50
4140

நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே 

நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்(283) மலர்க்கால் 
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித் 

தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே 
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே 

எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே 
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே 

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

51
 (283). முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க., மடிமேல் - பி. இரா., ஆ. பா. 
4141

மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய 

முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே 
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன் 

அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே 
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப் 

பரநாத நாட்டரசு பாலித்த பதியே 
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே 

என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.

52
4142

இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே 

இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித் 
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத் 

தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே 
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே 

இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே 
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும் 

முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.

53
4143

கையாத தீங்கனியே கயக்காத அமுதே 

கரையாத கற்கண்டே புரையாத கரும்பே 
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே 

போகாத புனலேஉள் வேகாத காலே 
கொய்யாத நறுமலரே கோவாத மணியே 

குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே 
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே 

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

54
4144

எண்ணாத மந்திரமே எழுதாத மறையே 

ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே 
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே 

பாராத பார்வையிலே பதியாத பதிப்பே 
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே 

நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே 
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 

அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.

55
4145

சாகாத கல்வியிலே தலையான நிலையே 

சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே 
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே 

ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே 
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும் 

குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே 
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில் 

மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

56
4146

சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித் 

தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய் 
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி 

நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே 
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே 

சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே 
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில் 

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

57
4147

நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி 

நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித் 
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித் 

தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே 
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி 

வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத் 
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில் 

திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

58
4148

திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத் 

தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி 
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து 

நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே 
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே 

வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே 
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப் 

பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

59
4149

என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே 

இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே 
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே 

தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே 
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த 

மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே 
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே 

மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

60
4150

மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் 

வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப் 
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப் 

பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே 
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே 

ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே 
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே 

மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.

61
4151

நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும் 

நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும் 
புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன் 

பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித் 
தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும் 

தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே 
இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில் 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

62
4152

விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன் 

மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி 
முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே 

மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பேர் ஒளியே 
எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே 

எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே 
மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

63
4153

கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன் 

கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி 
மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி 

மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே 
புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப் 

பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே 
விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே 

விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.

64
4154

மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும் 

மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும் 
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப் 

பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த 
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே 

வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே 
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில் 

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

65
4155

என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே 

எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித் 
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத் 

தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே 
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே 

ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே 
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே 

புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.

66
4156

தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் 

தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற 
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற 

முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும் 
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி 

இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே 
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே 

இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.

67
4157

பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே 

பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும் 
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும் 

மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற 
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய் 

ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க் 
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே 

கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.

68
4158

வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே 

மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே 
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே 

வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே 
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து 

கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே 
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

69
4159

கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது 

குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே 
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் 

வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே 
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா 

நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே 
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் 

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.

70
4160

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் 

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் 
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக 

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே 
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் 

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே 
மயர்ப்பறுமெய்த்(284) தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

71
 (284). மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு. 
4161

வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும் 

மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில் 
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக 

அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே 
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான் 

ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே 
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில் 

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

72
4162

கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும் 

குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது 
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம் 

பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே 
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே 

நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண 
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

73
4163

தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் 

சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி 
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி 

நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே 
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில் 

ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே 
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.

74
4164

அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் 

அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித் 
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச் 

செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே 
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே 

போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே 
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில் 

வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.

75
4165

வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் 

மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது 
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த 

பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே 
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் 

செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே 
அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

76
4166

ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை 

அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து 
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி 

நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து 
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய 

மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே 
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

77
4167

பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே 

பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே 
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய 

வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே 
மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே 

விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே 
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே 

ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

78
4168

மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும் 

விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும் 
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக 

எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே 
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா 

ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே 
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும் 

பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.

79
4169

அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 

அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் 
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 

கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே 
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன 

வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக் 
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே 

குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.

80
4170

சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம் 

தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் 
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி 

எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள் 
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா 

தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச் 
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே 

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

81
4171

பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப் 

புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச் 
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச் 

செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க 
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும் 

ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே 
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே 

நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.

82
4172

உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும் 

ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் 
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய 

பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே 
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே 

நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான் 
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

83
4173

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் 

கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் 
கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும் 

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் 
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே 

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே 
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில் 

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

84
4174

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா 

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே 
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ 

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே 
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே 

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே 
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற 

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

85
4175

எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே 

என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே 
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ 

திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே 
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி 

அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே 
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் 

ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

86
4176

இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம் 

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார் 
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார் 

மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக 
செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே 

திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே 
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

87
4177

தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம் 

சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல் 
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும் 

உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய் 
ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே 

ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே 
ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

88
4178

நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள் 

நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம் 
வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து 

வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே 
தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற 

சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால் 
தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே 

சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

89
4179

தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் 

சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை 
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில் 

இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும் 
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா 

தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான் 
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே 

சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

90
4180

ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே 

அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி 
வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி 

வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே 
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே 

சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே 
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும் 

ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

91
4181

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே 

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே 
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் 

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச் 
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே 

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே 
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும் 

மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

92
4182

சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும் 

சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே 
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே 

துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே 
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே 

நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே 
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில் 

பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.

93
4183

ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த 

அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே 
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம் 

மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம் 
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை 

தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம் 
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன் 

நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.

94
4184

கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே 

கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே 
இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும் 

இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே 
மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே 

வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே 
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில் 

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.

95
4185

அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி 

அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து 
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக் 

கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே 
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே 

மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே 
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில் 

பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

96
4186

எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர் 

ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே 
மெய்த்துணையாம் திருவருட்பேர் அமுதம்மிக அளித்து 

வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து 
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும் 

துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில் 
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே 

சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

97
4187

இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை 

எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி 
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே 

அதிசயிக்கத் திருஅமுதும் அளித்தபெரும் பதியே 
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர் 

திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே 
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும் 

பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.

98
4188

குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக் 

கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து 
மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து 

மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித் 
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும் 

தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே 
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

99
4189

தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத் 

தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே 
மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி 

வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து 
நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய் 

நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி 
அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

100

58. நற்றாய் கூறல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4190.

காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ 

கண்டுகொள் கணவனே என்றாள் 
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும் 

உவந்திலேன் உண்மையீ தென்றாள் 
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த 

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள் 
மாதய வுடைய வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

1
4191

மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான் 

மறப்பனோ கனவினும் என்றாள் 
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ 

உயிர்தரி யாதெனக் கென்றாள் 
கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக் 

கடலமு தளித்தருள் என்றாள் 
வயங்குசிற் சபையில் வரதனே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

2
4192

அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே 

அன்பினால் அணைத்தருள் என்றாள் 
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம் 

படமுடி யாதெனக் கென்றாள் 
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது 

திருவுளம் அறியுமே என்றாள் 
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

3
4193

பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப் 

புணர்ந்திட விரும்பினேன் என்றாள் 
காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக் 

கருத்தெனக் கில்லைகாண் என்றாள் 
சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ 

சற்றுநான் தரித்திடேன் என்றாள் 
மாமிகு கருணை வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

4
4194

அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க 

ஆசைமேற் பொங்கிய தென்றாள் 
தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும் 

தலைவனே தாழ்த்திடேல் என்றாள் 
தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால் 

சொலமுடி யாதெனக் கென்றாள் 
மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

5
4195

தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத் 

தருகநற் றருணம்ஈ தென்றாள் 
கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை 

குறையுமோ குறைந்திடா தென்றாள் 
நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு 

ஞாயமோ நண்பனே என்றாள் 
வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

6
4196

பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன் 

பொங்கிய தாசைமேல் என்றாள் 
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ 

என்னள வன்றுகாண் என்றாள் 
கொன்செயும் உலகர் என்னையும் உனது 

குறிப்பையும் குறித்திலார் என்றாள் 
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

7
4197

மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு 

மேவிலை என்னையோ என்றாள் 
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல் 

நல்லவர்க் கடுப்பதோ என்றாள் 
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற 

வைத்தல்உன் மரபல என்றாள் 
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

8
4198

ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி 

ஒன்றுற ஒன்றினேன் என்றாள் 
நன்றிலேன் எனினும் நின்திரு வடியை 

நம்பினேன் நயந்தருள் என்றாள் 
குன்றிலே இருத்தற் குரியநான் துயரக் 

குழியிலே இருந்திடேன் என்றாள் 
மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

9
4199

ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான் 

அன்பினால் கூடினன் என்றாள் 
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக் 

கூடுதல் கூடுமோ என்றாள் 
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப் 

பரிசெலாம் புரிந்தனன் என்றாள் 
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே.

10

59. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4200.

அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான் 

அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த 

ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும் 
எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல் 

இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே 
சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

1
4201

அங்கலிட்ட(285) களத்தழகர் அம்பலவர் திருத்தோள் 

ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே 
பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார் 

பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள் 
எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி 

இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே 
தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

2
 (285). அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப் 
பொருள்கொள்க - முதற்பதிப்பு. இருள் - நஞ்சு.
 
4202

பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும் 

பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள் 
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால் 

எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம் 
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள் 

மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள் 
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

3
4203

புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார் 

புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார் 
கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால் 

கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும் 
நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை 

நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ 
வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும் 

வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.

4
4204

தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும் 

தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார் 
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள் 

இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே 
ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே 

ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது 
சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.

5
4205

அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர் 

அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே 
என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள் 

இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை 
முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் 

முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல் 
மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும் 

வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.

6
4206

கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது 

கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள் 
இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை 

இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள் 
வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது 

மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும் 
விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள் 

மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.

7
4207

ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை 

உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது 
பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும் 

பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ 
நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள் 

நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில் 
நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும் 

நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.

8
4208

என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க 

இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித் 
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும் 

தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள் 
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில் 

அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள் 
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும் 

மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.

9
4209

அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர் 

அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால் 
தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான் 

சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க 
எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால் 

இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம் 
செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும் 

சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.

10

60. தலைவி வருந்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4210.

பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ 

பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ 
இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ 

என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் 
சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள் 

தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள் 
நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார் 

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

1
4211

அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல் 

அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி 
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள் 

வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள் 
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம் 

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

2
4212

கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும் 

கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி 
எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள் 

பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள் 
மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார் 

வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.

3
4213

எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால் 

எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ 
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி 

களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே 
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார் 

சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.

4
4214

இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் 

ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ 
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள் 

நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள் 
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார் 

அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.

5
4215

வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா 

வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி 
எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த 

அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள் 
நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார் 

நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

6
4216

அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்தேன் 

அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி 
என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள் 

துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள் 
நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார் 

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

7
4217

பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் 

புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி 
இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ 

எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள் 

புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள் 
மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார் 

வள்ளல்நட ராயர்திரு உள்ளமறிந் திலனே.

8
4218

கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம் 

கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி 
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே 

இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி 

வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள் 
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார் 

பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.

9
4219

மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் 

வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி 
ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா 

தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழிமுகம் புலர்ந்தாள் 

எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள் 
நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார் 

நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.

10
4220

கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும் 

கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி 
இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே 

புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள் 
சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே 

துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.

11
4221

மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே 

வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ 
இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள் 

மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள் 
அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார் 

அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

12
4222

கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே 

கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ 
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி 

உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள் 
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார் 

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

13
4223

காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது 

கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி 
ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி 

கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே 
நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார் 

நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

14
4224

கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது 

கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ 
எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை 

நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள் 
பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே 

பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.

15
4225

கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால் 

கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி 
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன் 

மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள் 
விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார் 

விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.

16
4226

மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது 

வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ 
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி 

புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி 
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார் 

பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.

17
4227

தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது 

தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி 
ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த 

கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள் 
சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார் 

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

18
4228

தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர் 

தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி 
இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள் 

பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள் 
கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார் 

கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

19
4229

அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம் 

அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ 
இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள் 

களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள் 
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான் 

வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.

20
4230

மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர் 

மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி 
எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார் 

குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள் 
மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார் 

வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.

21
4231

பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப் 

பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ 
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள் 

மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள் 
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார் 

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

22
4232

மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது 

வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ 
இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள் 

முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள் 
ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார் 

ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

23
4233

கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக் 

கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ 
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள் 

நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள் 
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார் 

திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

24

61. ஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும்

நேரிசை வெண்பா

4234.அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால் 
தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை 
யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே 
ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
1
4235நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர் 
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே 
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி 
மன்றொன்று வானை மகிழ்ந்து.
2
4236ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர் 
ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை 
அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு) 
என்றே எனக்குநினக் கும்.
3
4237கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையான் கால்மலர்க்குக் 
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணீர்கொண் - டுய்த்தலைமேல் 
காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக் 
காணாயே நெஞ்சே களித்து.
4
4238கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று) 
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம் 
அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும் 
பொதுவாய் நடிக்கின்ற போது.
5
4239அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு) 
அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே 
நலமே வதிலேநின் னாவூர் திருவம் 
பலமேவக் காட்டும் பரிசு.
6
4240நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன் 
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது 
பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ 
பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
7
4241நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின் 
அடிப்பாவை யும்(286)வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய 
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும் 
இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
8
 (286). அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா., 
4242பூமி பொருந்து புரத்தே(287) நமதுசிவ 
காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி 
அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில் 
களித்தான் அவன்றான் களித்து.
9
 (287). பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம். பூமி - பார், பொருந்து - வதி. 

62. சிவபதி விளக்கம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

4243.உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே 
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே 
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே 
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
1
4244ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே 
வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே 
வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே 
அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.
2
4245அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே 
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே 
படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே 
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே.
3
4246சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே 
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே 
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே 
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
4
4247திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே 
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே 
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே 
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
5
4248நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே 
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே 
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே 
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
6
4249தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே 
நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே 
துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே 
சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.
7
4250நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே 
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே 
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே 
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
8
4251அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே 
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே 
மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே 
பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
9
4252நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே 
மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே 
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே 
பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.
10

63. ஞானோபதேசம்

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம் 

4253.கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே 
விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே 
தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே 
உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
1
4254வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே 
வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே 
அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே 
ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
2
4255அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே 
என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே 
இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே 
உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
3
4256தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே 
அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே 
இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே 
உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
4
4257துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே 
அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே 
இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே 
ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
5
4258என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே 
நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே 
மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே 
ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
6
4259திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே 
கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே 
மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம் 
உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
7
4260தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே 
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங் 
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே 
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
8
4261பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே 
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய் 
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம் 
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
9
4262நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே 
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே 
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய் 
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
10

64. ஆரமுதப் பேறு

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம் 

4263.விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே 
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே 
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய் 
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
1
4264விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே 
தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே 
கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே 
அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
2
4265துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே 
செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா 
எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும் 
அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
3
4266மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே 
கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே 
செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய் 
ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
4
4267பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே 
குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே 
செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர் 
அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
5
4268முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே 
சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே 
பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே 
அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
6
4269தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே 
மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே 
பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே 
அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
7
4270ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே 
வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே 
தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே 
அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
8
4271மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே 
தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே 
பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே 
அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
9
4272முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே 
இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே 
பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ் 
அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
10
4273பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே 
சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய் 
தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல் 
லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
11
4274தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம் 
தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே 
வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய் 
ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
12
4275பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே 
செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே 
கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய் 
அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே.
13

65. உபதேச வினா

கலித்தாழிசை 

4276.

வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் 

மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும் 
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி 

நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.

1
4277

தொம்பத உருவொடு தத்பத வெளியில் 

தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும் 
எம்பதமாகி இசைவாயோ தோழி 

இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.

2
4278

சின்மய வெளியிடைத் தன்மய மாகித் 

திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும் 
என்மய மாகி இருப்பாயோ தோழி 

இச்சை மயமாய் இருப்பாயோ(288) தோழி.

3
 (288). மயமாய்ப் பொருப்பாயோ - ஆ. பா. பதிப்பு. 
4279

நவநிலை மேற்பர நாதத் தலத்தே 

ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும் 
மவுனத் திருவீதி வருவாயோ தோழி 

வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.

4
4280

ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில் 

அதுவது வாநடம் நான்காணல் வேண்டும் 
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி 

ஏறி இழிந்திங் கிறப்பாயோ(289) தோழி.

5
 (289). இழிந்திங் கிருப்பாயோ - முதற்பதிப்பு. 
4281

வகார வெளியில் சிகார உருவாய் 

மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும் 
விகார உலகை வெறுப்பாயோ தோழி 

வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.

6
4282

நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு 

நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும் 
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி 

துட்டநெறியில் கெடுவாயோ தோழி.

7
4283

அறிவில் அறிவை அறியும் பொதுவில் 

ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும் 
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி 

செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.

8
4284

என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் 

இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும் 
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி 

நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.

9
4285

துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில் 

ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும் 
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி 

காணாது போய்ப்பழி(290) பூண்பாயோ தோழி.

10
 (290) பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., 
4286

தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில் 

சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும் 
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி 

குறியா துலகில் வெறிப்பாயோ தோழி

11

66. நெஞ்சொடு நேர்தல்

கலித்தாழிசை 

4287.அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே(291) 
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே 
தொடங்குநாள் நல்லதன் றோ.
1
 (291) காணவே - பி. இரா., பதிப்பு 
4288வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே 
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே 
நல்லநாள் எண்ணிய நாள்.
2
4289காலங் கடந்த கடவுளைக் காணற்குக் 
காலங் கருதுவ தேன் - நெஞ்சே 
காலங் கருதுவ தேன்.
3
4290ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக் 
காலங் கருதுவ தேன் - நெஞ்சே 
காலங் கருதுவ தேன்.
4
4291தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே 
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே 
தடையாதும் இல்லைகண் டாய்.
5
4292கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப் 
பையுள்(292) உனக்கென்னை யோ - நெஞ்சே 
பையுள் உனக்கென்னை யோ.
6
 (292). பையுள் - வருத்தம். முதற்பதிப்பு. 
4293என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே 
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே 
உன்னுவ தென்னைகண் டாய்.
7
4294நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே 
ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே 
ஏன்பற்று வாயென்ப தார்.
8
4295தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத் 
தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே 
தத்துவ முன்னுவ தேன்.
9
4296ஒக்க அமுதத்தை உண்டோ ம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே 
விக்கல் வராதுகண் டாய்.
10

67. அஞ்சாதே நெஞ்சே

சிந்து

 

 பல்லவி  
4297.அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே 
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
 1
 கண்ணிகள்  
4298வஞ்சமி லார்நாம்(293) வருந்திடில் அப்போதே 
அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே1
 (293). வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா. பதிப்பு.  
4299துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை 
அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே2
4300மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை 
அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே3
4301இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம் 
அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே4
4302சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட 
அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே5
4303சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை 
ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே6
4304தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட 
ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே7
4305வன்பர் மனத்தை மதியா தவர்நம 
தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே8
4306தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு 
அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே9
4307நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம 
தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே10
4308தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார் 
அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே11
4309பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத் 
தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே12
4310காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை 
ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே13
4311நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை 
ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே14
4312இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே 
ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே15
4313உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய 
அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே16
4314வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே 
ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே17
4315எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற 
அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே18
4316நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான 
அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே19
4317செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற 
அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே20
4318விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும் 
அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே21
4319செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற 
அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே22
 அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே 
அஞ்சா தே நெஞ்சே
அஞ்சா தே 

68. ஆடிய பாதம்

சிந்து

 

 பல்லவி  
4320.ஆடிய பாதமன் றாடிய பாதம் 
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
 1
 கண்ணிகள்  
4321பாடிய வேதங்கள் தேடிய பாதம் 
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம் 
நாடிய மாதவர்(294) நேடிய பாதம் 
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்
ஆடிய1
 (294) மாதவன் - ஆ. பா. பாதிப்பு.  
4322தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம் 
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம் 
வாரா வரவாகி வந்தபொற் பாதம் 
வஞ்ச மனத்தில் வசியாத பாதம்.
ஆடிய2
4323ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம் 
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம் 
நாரா யணன்விழி நண்ணிய பாதம் 
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம்.
ஆடிய3
4324நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம் 
நாத முடிவில் நடிக்கின்ற பாதம் 
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம் 
மந்திர யந்திர தந்திர பாதம்.
ஆடிய4
4325எச்சம யத்தும் இலங்கிய பாதம் 
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம் 
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம் 
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்
ஆடிய5
4326தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் 
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம் 
மூவரும் காணா முழுமுதற் பாதம் 
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம்.
ஆடிய 6 
4327துரிய வெளிக்கே உரியபொற் பாதம் 
சுகமய மாகிய சுந்தரப் பாதம் 
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம் 
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம்.
ஆடிய7
4328சாகா வரந்தந்த தாரகப் பாதம் 
சச்சிதா னந்த சதோதய பாதம் 
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் 
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்.
ஆடிய8
4329ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம் 
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம் 
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் 
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்.
ஆடிய9
4330ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம் 
அபயர்(295) எல்லார்க்கும் அமுதான பாதம் 
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம் 
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம்.
ஆடிய10
 (295) ஐயர் - ச. மு. க. பதிப்பு.  
4331ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம் 
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம் 
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம் 
சத்திய ஞான தயாநிதி பாதம்.
ஆடிய11
4332தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம் 
தந்தையு மாகித் தயவுசெய் பாதம் 
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம் 
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம்.
ஆடிய12
4333எண்ணிய வாறே எனக்கருள் பாதம் 
இறவா நிலையில் இருத்திய பாதம் 
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம் 
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்.
ஆடிய13
4334ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம் 
ஆதி அனாதியும் ஆகிய பாதம் 
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம் 
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்.
ஆடிய14
4335அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம் 
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் 
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம் 
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம்.
ஆடிய15
4336நாரண னாதியர் நாடரும் பாதம் 
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம் 
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் 
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம்.
 16
 ஆடிய பாதமன் றாடிய பாதம் 
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
  

69. அபயம் அபயம்

சிந்து

 

 பல்லவி  
4337.அபயம் அபயம் அபயம். 1
 கண்ணிகள்  
4338உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச் 
சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே(296)
அபயம்1
 (296) பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.  
4339எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை 
அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே
அபயம்2
4340தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும் 
சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே
அபயம்3
4341ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே 
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே
அபயம்4
4342வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின் 
றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே
அபயம்5
4343நாரா யணனொடு நான்முக னாதியர் 
பாரா யணம்செயும் பதும பதத்திற்கே
அபயம்6
4344அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத் 
தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே
அபயம்7
4345குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம் 
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே
அபயம்8
4346செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும் 
நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே
அபயம்9
4347வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த 
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே
அபயம்10
4348எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம் 
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே
அபயம்11
4349மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப் 
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே
அபயம்12
4350நாத முடியில்/(297) நடம்புரிந் தன்பர்க்குப் 
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே
அபயம் 1313
 (297) முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.  
4351உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான 
சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே
அபயம்14
4352சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற 
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே
அபயம்15
 அபயம் அபயம் அபயம்.  

70. அம்பலவாணர் வருகை

சிந்து

 

 பல்லவி  
4353.வாரீர் சிதம்பர வல்லி சிவகாம 
வல்லி மணாளரே வாரீர் 
மணிமன்ற வாணரே வாரீர்.
 1
 கண்ணிகள்  
4354

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு 

அம்பல வாணரே வாரீர் 

அன்புடை யாளரே வாரீர்.

வாரீர்1
4355

அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய 

அந்தண ரேஇங்கு வாரீர் 

அம்பலத் தையரே வாரீர்.

வாரீர்2
4356

அன்புரு வானவர் இன்புற உள்ளே 

அறிவுரு வாயினீர் வாரீர் 

அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர்.

வாரீர்3
4357

அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும் 

அரும்பெருஞ் சித்தரே வாரீர் 

அற்புத ரேஇங்கு வாரீர்.

வாரீர்4
4358

அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன் 

அன்பனு மாயினீர் வாரீர் 

அங்கண ரேஇங்கு வாரீர்.

வாரீர்5
4359

அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய 

அம்பல வாணரே வாரீர் 

செம்பொரு ளாயினீர் வாரீர்.

வாரீர்6
4360

அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய் 

அன்பருக் கன்பரே வாரீர் 

இன்பம் தரஇங்கு வாரீர்.

வாரீர்7
4361

அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும் 

அடிக்கம லத்தீரே வாரீர் 

நடிக்கவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்8
4362

அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில் 

அளித்திட வல்லீரே வாரீர் 

களித்தென்னை ஆண்டீரே வாரீர்.

வாரீர்9
4363

அம்பர மானசி தம்பர நாடகம் 

ஆடவல் லீர்இங்கு வாரீர் 

பாடல்உ வந்தீரே(298) வாரீர்.

வாரீர்10
 (298) பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.  
4364

ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும் 

அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர் 

ஆனந்த நாடரே வாரீர்.

வாரீர்11
4365

ஆகம வேதம் அனேக முகங்கொண் 

டருச்சிக்கும் பாதரே வாரீர் 

ஆருயிர் நாதரே வாரீர்.

வாரீர்12
4366

ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல் 

ஆரிய ரேஇங்கு வாரீர் 

ஆனந்தக் கூத்தரே வாரீர்

. வாரீர்13
4367

ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல் 

ஆரிய ரேஇங்கு வாரீர் 

ஆனந்தக் கூத்தரே வாரீர்.

வாரீர்14
4368

ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற 

ஆனந்த ரேஇங்கு வாரீர் 

ஆடல்வல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்15
4369

ஆதர வாய்என் அறிவைத் தெளிவித் 

தமுதம் அளித்தீரே வாரீர் 

ஆடிய பாதரே வாரீர்.

வாரீர்16
4370

ஆதார மீதானத் தப்பாலும் காண்டற் 

கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர் 

கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர்.

வாரீர்17
4371

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் 

ஜோதிய ரேஇங்கு வாரீர் 

வேதிய ரேஇங்கு வாரீர்.

வாரீர்18
4372

ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன் 

பாடல்கொண் டீர்இங்கு வாரீர் 

கூடவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்19
4373

ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன் 

ஆண்டவ ரேஇங்கு வாரீர் 

தாண்டவ ரேஇங்கு வாரீர்.

வாரீர்20
4374

ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன் 

ஆணவம் போக்கினீர் வாரீர் 

காணவந் தேன்இங்கு வாரீர்.

வாரீர்21
4375

இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என் 

இறையவ ரேஇங்கு வாரீர் 

இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர்.

வாரீர்22
4376

இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய 

இதுதரு ணம்இங்கு வாரீர் 

இன்னமு தாயினீர் வாரீர்.

வாரீர்23
4377

இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள் 

இருக்கின்ற நாதரே வாரீர் 

இருக்கின் பொருளானீர் வாரீர்.

வாரீர்24
4378

இரவும் பகலும் இதயத்தி லூறி 

இனிக்கும் அமுதரே வாரீர் 

இனித்தரி யேன்இங்கு வாரீர்.

வாரீர்25
4379

இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று 

இதுதரு ணம்இங்கு வாரீர் 

இருமையும் ஆயினீர் வாரீர்.

வாரீர்26
4380

இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற் 

கிதுதரு ணம்இங்கு வாரீர் 

இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்

 27
4381

இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே 

இத்தரு ணம்இங்கு வாரீர் 

இதநடஞ் செய்கின்றீர் வாரீர்.

வாரீர்28
4382

இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம் 

இதுஎன் றளித்தீரே வாரீர் 

இதயத் திருந்தீரே வாரீர்.

வாரீர்29
4383

இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல் 

எங்கும் நிறைந்தீரே வாரீர் 

இந்தெழில் வண்ணரே வாரீர்.

வாரீர்30
4384

இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை 

ஏறவைத் தீர்இங்கு வாரீர் 

இறுதியி லீர்இங்கு வாரீர்.

வாரீர்31
4385

ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக் 

கின்பமும் ஆயினீர் வாரீர் 

அன்பருக் கன்பரே வாரீர்.

வாரீர்32
4386

ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென் 

இதயத்தில் ஏற்றினீர் வாரீர் 

உதயச் சுடரினீர் வாரீர்.

வாரீர்33
4387

ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை 

இன்புறச் செய்கின்றீர் வாரீர் 

வன்பர்க் கரியீரே வாரீர்.

வாரீர்34
4388

ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற் 

கெட்டா திருந்தீரே வாரீர் 

நட்டார்க் கெளியீரே வாரீர்.

வாரீர்35
4389

ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந 

டேசரே நீர்இங்கு வாரீர் 

நேசரே நீர்இங்கு வாரீர்.

வாரீர்36
4390

ஈசர் பலிக்குழல்(299) நேசர்என் றன்பர்கள் 

ஏசநின் றீர்இங்கு வாரீர் 

நாசமில் லீர்இங்கு வாரீர்.

வாரீர்37
 (299) ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,  
4391

ஈறறி யாமறை யோன்என் றறிஞர் 

இயம்பநின் றீர்இங்கு வாரீர் 

வயந்தரு வீர்இங்கு வாரீர்.

வாரீர்38
4392

ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக் 

கீதல்செய் வீர்இங்கு வாரீர் 

ஓதரி யீர்இங்கு வாரீர்.

வாரீர்39
4393

ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற் 

றீடணை யீர்இங்கு வாரீர் 

ஆடவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்40
4394

ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள் 

ஈண்டுகின் றீர்இங்கு வாரீர் 

ஆண்டவ ரேஇங்கு வாரீர்.

வாரீர்41
4395

உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக் 

குள்ள துரைசெய்தீர் வாரீர் 

வள்ளல் விரைந்திங்கு வாரீர்.

வாரீர்42
4396

உருவாய் அருவாய் உருவரு வாய்அவை 

ஒன்றுமல் லீர்இங்கு வாரீர் 

என்றும்நல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்43
4397

உறவும் பகையும் உடைய நடையில் 

உறவும்எண் ணேன்இங்கு வாரீர் 

பிறவுநண் ணேன்இங்கு வாரீர்.

வாரீர்44
4398

உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென் 

உள்ளத் திருந்தீரே வாரீர் 

விள்ளற் கரியீரே வாரீர்.

வாரீர்45
4399

உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும் 

உய்யவல் லேன்இங்கு வாரீர் 

செய்யவல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்46
4400

உடையவ ரார்இக் கடையவ னேனுக் 

குடையவ ரேஇங்கு வாரீர் 

சடையவ ரே(300) இங்கு வாரீர்.

வாரீர்47
 (300) தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.  
4401

உறங்கி இறங்கும் உலகவர் போலநான் 

உறங்கமாட் டேன்இங்கு வாரீர் 

இறங்கமாட் டேன்இங்கு வாரீர்.

வாரீர்48
4402

உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு 

துண்டி விரும்பினேன் வாரீர் 

உண்டி தரஇங்கு வாரீர்.

வாரீர்49
4403

உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற 

உத்தம ரேஇங்கு வாரீர் 

உற்ற துணையானீர் வாரீர்.

வாரீர்50
4404

உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக் 

குற்றவர் மற்றிலை வாரீர் 

உற்றறிந் தீர்இங்கு வாரீர்.

வாரீர்51
4405

ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு 

மோன நடேசரே வாரீர் 

ஞான நடேசரே வாரீர்.

வாரீர்52
4406

ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி 

வோருமில் லீர்இங்கு வாரீர் 

யாருமில் லீர்இங்கு வாரீர்.

வாரீர்53
4407

ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற 

வீறுடை யீர்இங்கு வாரீர் 

நீறுடை யீர்இங்கு வாரீர்.

வாரீர்54
4408

ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன் 

ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர் 

ஆன்றவ ரேஇங்கு வாரீர்.

வாரீர்55
4409

ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென 

ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் 

தேற்றம் அருள்செய்வீர் வாரீர்.

வாரீர்56
4410

ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள் 

பாடல்சொல் வீர்இங்கு வாரீர் 

ஆடல்நல் லீர்இங்கு வாரீர்.

வாரீர்57
4411

ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள் 

ஆக்க மடுத்தீரே வாரீர் 

தூக்கம் தவிர்த்தீரே வாரீர்.

வாரீர்58
4412

ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென் 

றோமை அறிவித்தீர் வாரீர் 

சேமஞ் செறிவித்தீர் வாரீர்.

வாரீர்59
4413

ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத 

யோகம் கொடுத்தீரே வாரீர் 

போகம் கொடுத்தீரே வாரீர்.

வாரீர்60
4414

ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை 

ஓதிய நாதரே வாரீர் 

ஆதிஅ னாதியீர் வாரீர்.

வாரீர்61
4415

என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி 

என்குறை என்முன்னீர் வாரீர் 

தன்குறை இல்லீரே வாரீர்.

வாரீர்62
4416

என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர் 

இன்னுயிர் ஆயினீர் வாரீர் 

என்னுயிர் நாதரே வாரீர்.

வாரீர்63
4417

என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய 

என்கண் ணனையீரே வாரீர் 

மின்கண் ணுதலீரே வாரீர்.

வாரீர்64
4418

எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும் 

எல்லாம்வல் லீர்இங்கு வாரீர் 

சொல்லா நிலையினீர் வாரீர்.

வாரீர்65
4419

எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல் 

எட்டும் படிசெய்தீர் வாரீர் 

எட்டுரு வாயினீர் வாரீர்301.

வாரீர்66
 (301) எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா.
எட்டுரு - அஷ்டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத `அஒ ஆகும்) 
அகர வடிவம். எட்டுரு - அரு. ச. மு. க
  
4420

என்று கண்டாய்இது(302) நன்றுகொண் டாளுக 

என்றுதந் தீர்இங்கு வாரீர் 

அன்றுவந் தீர்இன்று வாரீர்.

வாரீர்67
 (302) கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.  
4421

எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர் 

இச்சம யம்இங்கு வாரீர் 

மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்.

வாரீர்68
4422

என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை 

இன்பால் பெறுகென்றீர் வாரீர் 

தென்பால் முகங்கொண்டீர் வாரீர்.

வாரீர்69
4423

எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம 

திச்சைகண் டீர்இங்கு வாரீர் 

அச்சம்த விர்த்தீரே வாரீர்.

வாரீர்70
4424

எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர் 

எண்ணம் எனக்கில்லை வாரீர் 

வண்ணம் அளிக்கின்றீர் வாரீர்.

வாரீர்71
4425

ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும் 

பாராய ணம்செய்வீர் வாரீர் 

ஊராயம் ஆயினீர் வாரீர்.

வாரீர்72
4426

ஏம மிகுந்திரு வாம சுகந்தரும் 

ஏம சபேசரே வாரீர் 

சோம சிகாமணி வாரீர்.

வாரீர்73
4427

ஏத மிலாப்பர நாத முடிப்பொருள் 

ஏதது சொல்லுவீர் வாரீர் 

ஈதல் உடையீரே வாரீர்.

வாரீர்74
4428

ஏக பராபர யோக வெளிக்கப்பால் 

ஏக வெளிநின்றீர் வாரீர் 

ஏகர் அனேகரே வாரீர்.

வாரீர்75
4429

ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல் 

ஏறவைத் தீர்இங்கு வாரீர் 

தேறவைத் தீர்இங்கு வாரீர்.

வாரீர்76

4430

ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென் 

றேகாந்தம் சொல்லினீர் வாரீர் 

தேகாந்தம் இல்லீரே வாரீர்.

வாரீர்77
4431

ஏகாத கல்விதான் சாகாத கல்வியென் 

றேகாத லாற்சொன்னீர் வாரீர் 

வேகாத காலினீர் வாரீர்.

வாரீர்78
4432

ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே 

ஏடாஎன் றீர்இங்கு வாரீர் 

ஈடாவார் இல்லீரே வாரீர்.

வாரீர்79
4433

ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் 

ஈசான மேலென்றீர் வாரீர் 

ஆசாதி இல்லீரே வாரீர்.

வாரீர்80
4434

ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின் 

றேன்என்பால் ஏனென்பீர் வாரீர் 

ஆனின்பால் ஆடுவீர் வாரீர்.

வாரீர்81
4435

ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத் 

தைந்துஞ் செயும்என்றீர் வாரீர் 

இந்து சிகாமணி வாரீர்.

வாரீர்82
4436

ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக 

ஐயம் தவிர்த்தீரே வாரீர் 

மெய்யம் பலத்தீரே வாரீர்.

வாரீர்83
4437

ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந் 

தையர் தொழநின்றீர் வாரீர் 

துய்யர் உளநின்றீர் வாரீர்.

வாரீர்84
4438

ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின் 

றைவணர் ஏத்துவீர் வாரீர் 

பொய்வணம் போக்குவீர் வாரீர்.

வாரீர்85
4439

ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும் 

ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர் 

நன்றேநின் றீர்இங்கு வாரீர்.

வாரீர்86
4440

ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான் 

ஒப்பாரி அல்லகாண் வாரீர் 

முப்பாழ் கடந்தீரே வாரீர்

. வாரீர்87
4441

ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர் 

ஒத்த இடங்காட்ட வாரீர்(303) 

சித்த சிகாமணி வாரீர்.

வாரீர்88
 (303) 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை 
வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ள மில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு 
மறப்பு அற்ற இடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,' என்பது ச. மு. க. குறிப்பு. 
இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
  
4442

ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன் 

ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர் 

எட்டுக் குணத்தீரே வாரீர்.

வாரீர்89
4443

ஒருமை நிலையில் இருமையும் தந்த 

ஒருமையி னீர்இங்கு வாரீர் 

பெருமையி னீர்இங்கு வாரீர்.

வாரீர்90
4444

ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர் 

உண்மைசொன் னேன்இங்கு வாரீர் 

பெண்மை(304) இடங்கொண்டீர் வாரீர்.

வாரீர்91
 (304) வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,  
4445

ஓங்கார நாடகம் பாங்காகச்(305) செய்கின்ற 

ஓங்கார நாடரே வாரீர் 

ஆங்கார நீக்கினீர் வாரீர்.

வாரீர்92
 (305) பாங்காரச் - பி. இரா.  
4446

ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி 

ஓங்கு நடேசரே வாரீர் 

பாங்குசெய் வீர்இங்கு வாரீர்.

வாரீர்93
4447

ஓசையின் உள்ளேஓர் ஆசை(306) உதிக்கமெல்(307) 

ஓசைசெய் வித்தீரே வாரீர் 

பாசம் அறுத்தீரே வாரீர்.

வாரீர்94
 (306) ஓசை - பிரதிபேதம். ஆ. பா.
307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
  
4448

ஓரா துலகினைப் பாரா திருநினக் 

கோரா வகைஎன்றீர் வாரீர் 

பேரா நிலைதந்தீர் வாரீர்.

வாரீர்95
4449

ஓடாது மாயையை நாடாது நன்னெறி 

ஊடா திருஎன்றீர் வாரீர் 

வாடா திருஎன்றீர் வாரீர்.

வாரீர்96
4450

ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள் 

ஓலக்கங் காட்டினீர் வாரீர் 

காலக் கணக்கில்லீர் வாரீர்.

வாரீர்97
4451

ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய் 

யூடத்தைக் காட்டினீர் வாரீர் 

வேடத்தைப் பூட்டினீர் வாரீர்.

வாரீர்98
4452

ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை 

ஓமத்தன்(308) ஆக்கினீர் வாரீர் 

சாமத்த(309) நீக்கினீர் வாரீர்.

வாரீர்99
 (308) ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க. 
சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
  
4453

ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன் 

ஊமென்று(310) காட்டினீர் வாரீர் 

நாமென்று நாட்டினீர் வாரீர்.

வாரீர்100
 (310) ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.  
4454

ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே 

செவ்வியன் ஆக்கினீர் வாரீர் 

ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர்.

வாரீர்101
4455

கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை 

கடல்பொங்கு கின்றது வாரீர் 

உடல்தங்கு கின்றது வாரீர்.

வாரீர்102
4456

கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென் 

கண்மணி யீர்இங்கு வாரீர் 

உண்மணி யீர்இங்கு வாரீர்.

வாரீர்103
4457

கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும் 

காரண ரேஇங்கு வாரீர் 

பூரண ரேஇங்கு வாரீர்.

 104
    
 

வாரீர் சிதம்பர வல்லி சிவகாம 

வல்லி மணாளரே வாரீர் 

மணிமன்ற வாணரே வாரீர். 

  

71. அம்பலவாணர் ஆடவருகை

சிந்து

 

 பல்லவி  
4458.

ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர் 

அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.

 1
 கண்ணிகள்  
4459

தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர் 

தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர் 
வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர் 

வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர் 
தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர் 

துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர் 
இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர். 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்

ஆடவா ரீர்1
4460

திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர் 

திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர் 
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர் 

பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர் 
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர் 

உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர் 
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்2
4461

வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர் 

வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர் 
மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர் 

மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர் 
கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர் 

கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர் 
ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்3
4462

இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர் 

என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர் 
கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர் 

குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர் 
நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர் 

நற்றாயில் இனியவரே ஆடவா ரீர் 
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்4
4463

ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர் 

ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர் 
ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர் 

உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர் 
காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர் 

கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர் 
ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்5
4464

சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர் 

சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர் 
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர் 

கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர் 
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர் 

சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர் 
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்6
4465

அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர் 

அகண்டபரி பூரணரே ஆடவா ரீர் 
பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர் 

பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர் 
கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர் 

கூத்தாட வல்லவரே ஆடவா ரீர் 
எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்7
4466

பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர் 

பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர் 
ஓதஉல வாதவரே ஆடவா ரீர் 

உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர் 
சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர் 

தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர் 
ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்8
4467

கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர் 

கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர் 
உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர் 

உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர் 
தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர் 

தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர் 
எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்9
4468

நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர் 

நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர் 
விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர் 

வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர் 
எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர் 

எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர். 
இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்10
4469

என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர் 

என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர் 
என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர் 

என்னுடைஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர் 
என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர் 

எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர் 
என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.

ஆடவா ரீர்11
 ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர் 
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
  

72. அம்பலவாணர் அணையவருகை

சிந்து

 

 பல்லவி  
4470.அணையவா ரீர் என்னை அணையவா ரீர் 
அணிவளர்(311)சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
 1
 (311) அணிகிளர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.  
 கண்ணிகள்  
4471

இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர் 

எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர் 
இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர் 

எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர் 
இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர் 

இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர் 
இயற்கைநிறை வானவரே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்1
4472

உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர் 

உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர் 
கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர் 

கண்ணனைய காதலரே அணையவா ரீர் 
அலகறியாப் பெருமையரே அணையவா ரீர் 

அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர் 
இலகுசபா பதியவரே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்2
4473

பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர் 

பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர் 
மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர் 

மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர் 
விதுவின்அமு தானவரே அணையவா ரீர் 

மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர் 
இதுதருணம் இறையவரே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்3
4474

வினைமாலை நீத்தவரே அணையவா ரீர் 

வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர் 
அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர் 

அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர் 
புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர் 

பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர் 
எனைமாலை யிட்டவரே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்4
4475

சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர் 

சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர் 
உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர் 

உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர் 
பொறுமைமிக உடையவரே அணையவா ரீர் 

பொய்யாத வாசகரே அணையவா ரீர் 
இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்5
4476

சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர் 

தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர் 
ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர் 

ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர் 
ஓதியுணர் வரியவரே அணையவா ரீர் 

உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர் 
ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்6
4477

அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர் 

அருட்சோதி வடிவினரே அணையவா ரீர் 
துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர் 

துரியநிறை பெரியவரே அணையவா ரீர் 
பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர் 

பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர் 
என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்7
4478

அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர் 

ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர் 
புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர் 

பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர் 
வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர் 

மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர் 
இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்8
4479

கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர் 

கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர் 
அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர் 

அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர் 
தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர் 

சத்தியரே நித்தியரே அணையவா ரீர் 
இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்9
4480

சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர் 

திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர் 
ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர் 

அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர் 
ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர் 

என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர் 
ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்10
4481

கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர் 

காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர் 
புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர் 

புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர் 
அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர் 

அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர் 
இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர் 

என்னுடைய நாயகரே அணையவா ரீர்.

அணையவா ரீர்11
 அணையவா ரீர்என்னை அணையவா ரீர் 
அணிவளர்(312) சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
  
 (312) அணிகிளர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.  

73. வருவார் அழைத்துவாடி

சிந்து

 

 பல்லவி  
4482.வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே 
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
 1
 பல்லவி எடுப்பு  
4483திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர் 
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்
வருவார்1
 கண்ணிகள்  
4484சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு 
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு 
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே 
இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே
வருவார்1
4485இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய 
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய 
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால் 
உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை(313)என்றுசொன்னால்
வருவார்2
 (313) உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.  
4486மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து 
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து 
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது 
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
வருவார்3
 வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே 
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
  

74. என்ன புண்ணியம் செய்தேனோ

சிந்து

 

 பல்லவி  
4487.

என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் 

என்ன புண்ணியம் செய்தே னோ.

 1
 பல்லவி எடுப்பு  
4488

மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச் 

சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே.

என்ன1
 கண்ணிகள்  

4489

பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும் 

போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய் 
அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை 

ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே.

என்ன1
4490

பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார் 

பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில் 
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை 

அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே.

என்ன2
4491

எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர் 

எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார் 
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை 

மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே.

என்ன3
4492

ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார் 

ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் 
ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ 

டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே.

என்ன4
4493

அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார் 

அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார் 
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச் 

சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே.

என்ன5
4494

ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற 

ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர் 
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக் 

காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே.

என்ன6
4495

பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும் 

பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர் 
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க 

வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.

என்ன7
 என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் 
என்ன புண்ணியம் செய்தே னோ.
  

75. இவர்க்கும் எனக்கும்

சிந்து

 

 பல்லவி  
4496.

இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது 

என்றும் தீரா வழக்குக் காண டி.

 1
 பல்லவி எடுப்பு  
4497

எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம் 

இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார்.

இவர்க்கும்1
 கண்ணிகள்  
4498

அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே 

யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை 
இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே 

இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே.

இவர்க்கும்1
4499

அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன் 

அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன் 
இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் 

இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன்.

இவர்க்கும்2
4500

சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு 

சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு 
என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு 

இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு.

 3
 

இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது 

என்றும் தீரா வழக்குக் காண டி. 

  

76. இது நல்ல தருணம்

சிந்து

 

 பல்லவி  
4501.

இதுநல்ல தருணம் - அருள்செய்ய 

இதுநல்ல தருணம்.

 1
 பல்லவி எடுப்பு  
4502

பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும் 

பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன்.

இதுநல்ல1
 கண்ணிகள்  
4503

மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது 

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது 
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது 

கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது.

இதுநல்ல1
4504

குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று 

குதித்த(314) மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று 
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது 

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது.

இதுநல்ல2
 (314) கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.  
4505

கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று 

கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று 
தாபமும் சோபமும் தான்தானே சென்றது 

தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது.

இதுநல்ல3
4506

கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது 

கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது 
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று 

பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.

 4
 

இதுநல்ல தருணம் - அருள்செய்ய 

இதுநல்ல தருணம்.

  

77. ஆனந்தப் பரிவு

தாழிசை

 

4507.நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம் 
ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
1
4508சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக 
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
2
4509துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற் 
கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
3
4510மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில் 
அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
4
4511துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க 
அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
5
4512பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற 
அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
6
4513பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர் 
ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
7
4514தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான 
அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
8
4515பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ 
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.
9
4516மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத 
அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன்அந்தோஅந்தோ
10
4517எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு 
அக்கரைசேர்த்தருளெனுமோர்சர்க்கரையும்எனக்களித்தான்அந்தோஅந்தோ(315).
11
 

(315) இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி 

இப்பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.

 

78. ஞான மருந்து

சிந்து

 

 பல்லவி  
4518.ஞான மருந்திம் மருந்து - சுகம் 
நல்கிய சிற்சபா நாத மருந்து.
 1
 கண்ணிகள்  
4519

அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை 

ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து 
பொருட்பெரும் போக மருந்து - என்னைப் 

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து.

ஞான1
4520

எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள் 

என்றும் விடாமல் இனிக்கு மருந்து 
சொல்லால் அளவா மருந்து - சுயஞ் 

ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து.

ஞான2
4521

காணாது காட்டு மருந்து - என்றன் 

கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து 
ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது 

வாகி மணிமன்றில் ஆடு மருந்து.

ஞான3
4522

சுத்தசன் மார்க்க மருந்து - அருட் 

சோதி மலையில் துலங்கு மருந்து 
சித்துரு வான மருந்து - என்னைச் 

சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து.

ஞான4
4523

அன்பர்க் கெளிய மருந்து - மற்றை 

ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து 
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை 

இன்ப நிலையில் இருத்து மருந்து.

ஞான5
4524

நாதாந்த நாட்டு மருந்து - பர 

ஞான வெளியில் நடிக்கு மருந்து 
போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள் 

பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து.

ஞான6
4525

ஆதி அனாதி மருந்து - திரு 

அம்பலத் தேநட மாடு மருந்து 
ஜோதி மயமா மருந்து - என்னைச் 

சோதியா தாண்ட துரிய மருந்து.

ஞான7
4526

ஆறந்தத் தோங்கு மருந்து - அதற் 

கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து 
ஊறந்த மில்லா மருந்து - எனக் 

குள்ளே கலந்த உறவா மருந்து.

ஞான8
4527

என்னுயிர்க் கன்பா மருந்து - கலந் 

தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து 
என்னுயிர் காக்கு மருந்து - என்றும் 

என்னுயி ராகிய இன்ப மருந்து.

ஞான9
4528

என்னறி வுட்கொள் மருந்து - என்றும் 

என்னறி வாகி இலங்கு மருந்து 
என்னறி வின்ப மருந்து - என்னுள் 

என்னறி வுக்கறி வென்னு மருந்து

ஞான10
4529

என்குரு வான மருந்து - என்றும் 

என்தெய்வ மாகி இருக்கு மருந்து 
என்அன்னை யென்னு மருந்து - என்றும் 

என்தந்தை யாகிய இன்ப மருந்து.

ஞான11
4530

என்பெரு வாழ்வா மருந்து - என்றும் 

என்செல்வ மாகி இருக்கு மருந்து 
என்னுயிர் நட்பா மருந்து - எனக் 

கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து.

ஞான12
4531

என்னிறை யான மருந்து - மகிழ்ந் 

தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து 
தன்னறி வாகு மருந்து - என்னைத் 

தந்த மருந்தென்றன் சொந்த மருந்து.

ஞான13
4532

உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன் 

உயிருக் கனாதி உறவா மருந்து 
தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச் 

சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து.

ஞான14
4533

மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா 

வேதா கமத்தும் விளங்கு மருந்து 
கைப்பொரு ளான மருந்து - மூன்று 

கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து.

ஞான15
4534

மதியில் விளைந்த மருந்து - யார்க்கும் 

மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து 
கதிதரும் இன்ப மருந்து - அருட் 

கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து.

ஞான16
4535

கற்பூர ஜோதி மருந்து - பசுங் 

கற்பூர நன்மணங் காட்டு மருந்து 
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற் 

போதம் தவிர்த்தசிற் போத மருந்து.

ஞான17
4536

மேலை வெளியா மருந்து - நான் 

வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து 
சாலை விளக்கு மருந்து - சுத்த 

சமரச சன்மார்க்க சங்க மருந்து.

ஞான18
4537

என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே 

இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து 
துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட் 

சோதியால் என்னைத் துலக்கு மருந்து.

ஞான19
4538

பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப் 

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து 
கையிற் கிடைத்த மருந்து - சிவ 

காமக் கொடியைக் கலந்த மருந்து.

ஞான20
4539

ஆணவம் தீர்க்கு மருந்து - பர 

மானந்தத் தாண்டவ மாடும் மருந்து 
மாணவ வண்ண மருந்து - என்னை 

வலிய அழைத்து வளர்க்கு மருந்து.

ஞான21
4540

வானடு வான மருந்து - என்னை 

மாமணி மேடைமேல் வைத்த மருந்து 
ஊனம் தவிர்த்த மருந்து - கலந் 

துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து.

ஞான22
4541

மலையிலக் கான மருந்து - என்றன் 

மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து 
கலைநலம் காட்டு மருந்து - எங்கும் 

கண்ணாகிக் காணும் கனத்த மருந்து.

ஞான23
4542

அற்புத ஜோதி மருந்து - எல்லாம் 

ஆகியன் றாகி அமர்ந்த மருந்து 
தற்பதம் தந்த மருந்து - எங்கும் 

தானேதா னாகித் தனித்த மருந்து.

ஞான24
4543

தன்னை அளித்த மருந்து - என்றும் 

சாகாத நல்வரம் தந்த மருந்து 
பொன்னடி ஈந்த மருந்து - அருட் 

போனகம் தந்த புனித மருந்து.

ஞான25
4544

கண்ணுக் கினிய மருந்து - என்றன் 

கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து 
எண்ணுக் கடங்கா மருந்து - என்னை 

ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து.

ஞான26
4545

சுட்டப் படாத மருந்து - என்றன் 

தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து 
எட்டுதற் கொண்ணா மருந்து - நான் 

எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து.

ஞான27
4546

உன்னற் கரிதா மருந்து - எனக் 

குள்ளும் புறத்தும் உலாவு மருந்து 
தன்னந் தனித்த மருந்து - சுத்தச் 

சாக்கிரா தீதச் சபேச மருந்து.

ஞான28
4547

ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த 

ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து 
அன்றிமூன் றான மருந்து - நான் 

காகிஐந் தாகி அமர்ந்த மருந்து.

ஞான29
4548

வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா 

வெளியும் கடந்து விளங்கு மருந்து 
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா 

ஒளியும்தா னாகிய உண்மை மருந்து.

ஞான30
4549

ஆறாறுக் கப்பால் மருந்து - அதற் 

கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து 
ஈறாதி இல்லா மருந்து - என்னை 

எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து.

ஞான31
4550

ஆரணத் தோங்கு மருந்து - அருள் 

ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து 
காரணம் காட்டு மருந்து - எல்லாம் 

கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து.

ஞான32
4551

மலமைந்து நீக்கு மருந்து - புவி 

வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து 
நலமிக் கருளு மருந்து - தானே 

நானாகித் தானாளு நாட்டு மருந்து.

 33
 

ஞான மருந்திம் மருந்து - சுகம் 

நல்கிய சிற்சபா நாத மருந்து. 

  

79. சிவசிவ ஜோதி

சிந்து

 

 பல்லவி  
4552.சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ 
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி 
சிவசிவ சிவசிவ ஜோதி.
 1
 கண்ணிகள்  
4553

சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட் 

சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி 
தற்பர தத்துவ ஜோதி - என்னைத் 

தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி.

சிவசிவ1
4554

சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம் 

செய்திட வல்ல சிதம்பர ஜோதி 
அத்துவி தானந்த ஜோதி - என்னை 

ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி.

சிவசிவ2
4555

சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட் 

செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி 
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத் 

தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி.

சிவசிவ3
4556

ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன் 

ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி 
ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா 

உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி.

சிவசிவ4
4557

மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக 

வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி 
துன்னிய வச்சிர ஜோதி - முத்து 

ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி.

சிவசிவ5
4558

பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில் 

பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி 
ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக் 

குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி.

சிவசிவ6
4559

ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத் 

தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி 
பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப் 

பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி.

சிவசிவ7
4560

மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை 

வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி 
இனமான உள்ளக ஜோதி - சற்றும் 

ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி.

சிவசிவ8
4561

முக்குண மும்மூன்றாம் ஜோதி - அவை 

முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி 
எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம் 

எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி.

சிவசிவ9
4562

பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப் 

பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி 
பகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும் 

விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி.

சிவசிவ10
4563

கால முதற்காட்டும் ஜோதி - கால 

காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி 
கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும் 

குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி.

சிவசிவ11
4564

தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத் 

தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி 
அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம் 

அருளில் விளங்க அமர்த்திய ஜோதி.

சிவசிவ12
4565

சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர் 

சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி 
முத்தர் அனுபவ ஜோதி - பர 

முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி.

சிவசிவ13
4566

ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக் 

கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி 
வீறும் பெருவெளி ஜோதி - மேலும் 

வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி.

சிவசிவ14
4567

பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட 

பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி 
வாரமுற் றோங்கிய ஜோதி - மன 

வாக்குக் கெட்டாததோர் மாமணி(316) ஜோதி.

சிவசிவ15
 (316) மாணிக்க - ச. மு. க. பதிப்பு.  
4568

ஒன்றான பூரண ஜோதி - அன்பில் 

ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி 
என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள் 

என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி.

சிவசிவ16
4569

மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த 

வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி 
துய்ய சிவானந்த ஜோதி - குரு 

துரியத் தலத்தே துலங்கிய ஜோதி.

சிவசிவ17
4570

சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த 

சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி 
உவமையில் லாப்பெருஞ் ஜோதி - என 

துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி.

சிவசிவ18
4571

என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே 

இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி 
அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை 

ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி.

சிவசிவ19
4572

சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான் 

செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி 
புத்தமு தாகிய ஜோதி - சுக 

பூரண மாய்ஒளிர் காரண ஜோதி.

சிவசிவ20
4573

தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால் 

சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி 
விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே 

வீதியும் வீடும் விளக்கிய ஜோதி.

சிவசிவ21
4574

சுகமய மாகிய ஜோதி - எல்லா 

ஜோதியு மான சொரூபஉட் ஜோதி 
அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி 

தானந்த ஜோதி சதானந்த ஜோதி.

சிவசிவ22
4575

நித்த பரானந்த ஜோதி - சுத்த 

நிரதிச யானந்த நித்திய ஜோதி 
அத்துவி தானந்த ஜோதி - எல்லா 

ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி.

சிவசிவ23
4576

பொய்யாத புண்ணிய ஜோதி - எல்லாப் 

பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி 
நையா தருள்செய்த ஜோதி - ஒரு 

நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஜோதி.

சிவசிவ24
4577

கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக் 

கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி 
எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான் 

எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி.

சிவசிவ25
4578

விந்து ஒளிநடு ஜோதி - பர 

விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி 
நம்துயர் தீர்த்தருள் ஜோதி - பர 

நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி.

சிவசிவ26
4579

தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத் 

தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி 
நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே 

நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி.

சிவசிவ27
4580

தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த 

சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி 
என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை 

ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி.

சிவசிவ28
4581

அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை 

ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி 
இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க் 

கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி.

சிவசிவ29
4582

காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக் 

காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி 
ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள் 

நானாகித் தானாகி நண்ணிய ஜோதி.

சிவசிவ30
4583

ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள் 

என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி 
சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத் 

தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி.

சிவசிவ31
4584

சுத்த சிவமய ஜோதி - என்னை 

ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி 
சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே 

தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி.

 32
 சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ 
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி 
சிவசிவ சிவசிவ ஜோதி.
  

80. ஜோதியுள் ஜோதி

சிந்து

 

 பல்லவி  
4585.ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த 
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி 
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
1 
 கண்ணிகள்  
4586

சிவமே பொருளென்று தேற்றி - என்னைச் 

சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச் 
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி1
4587

வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில் 

விளைவு பலபல வேறென்று காட்டிச் 
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி2
4588

சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு 

சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும் 
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி3
4589

தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த 

சமரச சத்திய சன்மார்க்க நீதிச் 
செங்கோல் அளித்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி4
4590

ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும் 

அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே 
தீபத்தை வைத்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி5
4591

மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும் 

விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான் 
செய்யென்று தந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி6
4592

என்பால் வருபவர்க் கின்றே - அருள் 

ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே(317) 
தென்பால் இருந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி7
 (317) ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.  
4593

துரியத் தலமூன்றின் மேலே - சுத்த 

துரியப் பதியில் அதுஅத னாலே 
தெரியத் தெரிவது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி8
4594

பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி 

பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே 
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி9
4595

தற்பர மேவடி வாகி - அது 

தன்னைக் கடந்து தனிஉரு வாகிச் 
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி10
4596

நவவெளி நால்வகை யாதி - ஒரு 

நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச் 
சிவவெளி யாம்இது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி11
4597

மேருவெற் புச்சியின் பாலே - நின்று 

விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே 
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி12
4598

ஆரண வீதிக் கடையும் - சுத்த 

ஆகம வீதிகள் அந்தக் கடையும் 
சேர நடுக்கடை பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி13
4599

பாடல் மறைகளோர் கோடி - அருட் 

பாத உருவ சொரூபங்கள் பாடி 
தேட இருந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி14
4600

நீடு சிவாகமங் கோடி - அருள் 

நேருறப் பாடியும் ஆடியும் ஓடித் 
தேட இருந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி15
4601

பத்தி நெறியில் செழித்தே - அன்பில் 

பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே 
தித்தித் திருப்பது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி16
4602

பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப் 

பிரம வெளியினில் பேரரு ளாலே 
சித்தாடு கின்றது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி17
4603

தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த 

சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோ ங்கும் 
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி18
4604

எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும் 

எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே 
செம்பொருள் என்பது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி19
4605

சைவ முதலாக நாட்டும் - பல 

சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும் 
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி20
4606

எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு 

தெல்லாம் இதிலோர் இறையள வென்னும் 
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி21
4607

எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே 

எல்லா உலகும் இயம்புதல் சும்மா 
செத்தாரை மீட்பது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி22
4608

பிறந்து பிறந்துழன் றேனை - என்றும் 

பிறவா திறவாப் பெருமைதந் தூனைச் 
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி23
4609

வருவித்த வண்ணமும் நானே - இந்த 

மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே 
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி24
4610

பாரிடம் வானிட மற்றும் - இடம் 

பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் 
சேரிட மாம்இது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி25
4611

உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே 

உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல் 
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி26
4612

உருவும் உணர்வும்செய் நன்றி - அறி 

உளமும் எனக்கே உதவிய தன்றித் 
திருவும் கொடுத்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி27
4613

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான் 

எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத் 
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி28
4614

பேருல கெல்லாம் மதிக்கத் - தன் 

பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே 
சீருறச் செய்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

ஜோதி29
 ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த 
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி 
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
  

திருச்சிற்றம்பலம் 

Related Content

Ramalingam Swamigal

Thiruvarutpa of ramalinga adikal (aka vallalar) - Part-II (v

Thiruvarutpayan of Umapathisivam - G U Pope

Thiruvarutpayan Of Umapathisivam - English Explanation By Mr

Thiruvasagam Part-1 - Romanized version